Category: Thirukural

திருக்குறள் தொகுப்பு

பொருளடக்கம்

அறத்துப்பால்

பாயிரவியல்


கடவுள் வாழ்த்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
1
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
2
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
3
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
4
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
5
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
6
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
7
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
8
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
9
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
10

வான்சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
11
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
12
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
13
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
14
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
15
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
16
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
17
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
18
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
19
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
20

நீத்தார் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.
21
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.
22
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.
23
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.
24
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.
25
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
26
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
27
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
28
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.
29
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
30

அறன்வலியுறுத்தல்

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
31
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.
32
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
33
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற.
34
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
35
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை.
36
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
37
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்.
38
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்
புறத்த புகழும் இல.
39
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.
40

இல்லறவியல்


இல்வாழ்க்கை

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
41
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
42
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
43
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
44
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
45
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்.
46
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
47
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
48
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
49
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
50

வாழ்க்கைத் துணைநலம்

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
51
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.
52
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.
53
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
54
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
55
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.
56
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை.
57
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
58
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
59
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
60

புதல்வரைப் பெறுதல்


பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
61
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
62
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
63
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
64
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
65
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
66
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
67
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
68
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
69
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
70

அன்புடைமை

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.
71
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
71
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
73
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.
74
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
75
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
76
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
77
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.
78
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.
79
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
80

விருந்தோம்பல்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
81
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டாற்பாற் றன்று.
82
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
83
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
84
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
85
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.
86
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
87
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
88
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.
89
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.
90

இனியவைகூறல்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
91
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
92
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
93
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
94
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
95
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
96
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
97
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
98
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
99
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
100

செய்ந்நன்றி அறிதல்


செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
101
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
102
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
103
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
104
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
105
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.
106
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
107
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.
108
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
109
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
110

நடுவு நிலைமை


தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
111
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.
112
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.
113
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.
114
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.
115
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.
116
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.
117
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.
118
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
119
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
120

அடக்கமுடைமை


அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
121
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
122
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
123
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
124
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
125
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.
126
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
127
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
128
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
129
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
130

ஒழுக்கமுடைமை


ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
131
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
132
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
133
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
134
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.
135
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.
136
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
137
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
138
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.
139
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்
140

பிறனில் விழையாமை


பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
141
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
142
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துஒழுகு வார்.
143
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.
144
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.
145
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
146
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
147
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
148
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
149
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
150

பொறையுடைமை


அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
151
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
152
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
153
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்.
154
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
155
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.
156
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.
157
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
158
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
159
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
160

அழுக்காறாமை


ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
161
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.
162
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
163
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
164
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது.
165
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
166
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
167
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
168
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
169
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.
170

வெஃகாமை


நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
171
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
172
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
173
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
174
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.
175
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.
176
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.
177
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
178
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.
179
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.
180

புறங்கூறாமை


அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.
181
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
182
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்.
183
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.
184
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.
185
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.
186
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
187
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
188
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.
189
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
190

பயனில சொல்லாமை


பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
191
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது.
192
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
193
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.
194
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.
195
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்.
196
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.
197
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
198
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
199
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
200

தீவினையச்சம்


தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
201
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
202
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
203
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு.
204
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.
205
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
206
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
207
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.
208
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
209
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
210

ஒப்புரவறிதல்


கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றுங் கொல்லோ உலகு.
211
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.
212
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
213
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
214
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
215
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.
216
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
217
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
218
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.
219
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.
220

ஈகை


வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.
221
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.
222
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள.
223
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.
224
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
225
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
226
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
227
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.
228
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
229
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.
230

புகழ்


ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
231
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.
232
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.
233
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.
234
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.
235
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
236
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.
237
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.
238
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.
239
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.
240

இல்லறவியல் முற்றிற்று

துறவறவியல்

அருளுடைமை

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
241
நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.
242
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.
243
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.
244
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி.
245
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.
246
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
247
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.
248
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.
249
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.
250

புலான்மறுத்தல்


தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
251
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
252
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
253
அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.
254
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
255
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
256
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.
257
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
258
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.
259
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்.
260

தவம்


உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.
261
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.
262
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.
263
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.
264
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
265
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
266
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
267
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.
268
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.
269
இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
270

கூடாவொழுக்கம்

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.
271
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.
272
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
273
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
274
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும்.
275
நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
276
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து.
277
மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர்.
278
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.
279
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
280

கள்ளாமை


எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
281
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
282
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
283
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.
284
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
285
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.
286
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.
287
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.
288
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.
289
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.
290

வாய்மை


வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
291
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.
292
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
293
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.
294
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.
295
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.
296
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.
297
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.
298
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.
299
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.
300

வெகுளாமை


செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.
301
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.
302
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
303
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
304
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
305
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
306
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
307
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
308
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
309
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
310

இன்னாசெய்யாமை


சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
311
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
312
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.
313
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
314
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.
315
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.
316
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை.
317
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்.
318
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.
319
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.
320

கொல்லாமை


அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
321
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.
322
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
323
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
324
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.
325
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.
326
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
327
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.
328
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.
329
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
330

நிலையாமை


நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.
331
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
332
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
333
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.
334
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்
335
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
336
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
337
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.
338
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
339
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.
340

துறவு


யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
341
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.
342
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
343
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.
344
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.
345
யான்எனது என்னும்செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.
346
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.
347
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.
348
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்.
349
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
350

மெய்யுணர்தல்


பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.
351
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.
352
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.
353
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு.
354
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
355
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி.
356
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
357
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
358
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.
359
காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
360

அவாவறுத்தல்


அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
361
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.
362
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.
363
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.
364
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.
365
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.
366
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.
367
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
368
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
369
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
370

துறவறவியல் முற்றிற்று.

ஊழியல்


ஊழ்


ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.
371
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.
372
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.
373
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
374
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.
375
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.
376
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.
377
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.
378
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.
379
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.
380

ஊழியல் முற்றிற்று
அறத்துப்பால் முற்றிற்று


பொருட்பால்


அரசியல்


இறைமாட்சி

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
381
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
382
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு.
383
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.
384
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
385
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்
386
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு.
387
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.
388
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
389
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி.
390

கல்வி

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
391
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
392
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
393
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
394
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.
395
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
396
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
397
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
398
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
399
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
400

கல்லாமை

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
401
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.
402
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.
403
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.
404
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
405
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.
406
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.
407
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
408
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.
409
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
410

கேள்வி


செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.
411
செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
412
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.
413
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
414
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.
415
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
416
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.
417
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
418
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.
419
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.
420

அறிவுடைமை

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.
421
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.
422
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
423
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.
424
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.
425
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.
426
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.
427
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
428
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.
429
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.
430

குற்றங்கடிதல்


செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.
431
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.
432
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.
433
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.
434
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
435
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.
436
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.
437
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.
438
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
439
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.
440

பெரியாரைத் துணைக்கோடல்


அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.
441
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
442
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
443
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை.
444
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.
445
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
446
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.
447
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.
448
முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.
449
பல்லார் பகைகொளவிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
450

சிற்றினஞ்சேராமை


சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
451
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.
452
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.
453
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.
454
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.
455
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.
456
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
457
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.
458
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.
459
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
460

தெரிந்துசெயல்வகை


அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.
461
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்
462
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.
463
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.
464
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.
465
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
466
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
467
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
468
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
469
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு.
470

வலியறிதல்

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
471
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
472
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
473
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
474
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
475
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.
476
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.
477
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.
478
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
479
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
480

காலமறிதல்


பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
481
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
482
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
483
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.
484
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
485
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து.
486
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
487
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
488
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.
489
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.
490

இடனறிதல்


தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது.
491
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.
492
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.
493
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்.
494
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற.
495
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.
496
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.
497
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.
498
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.
499
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.
500

தெரிந்துதெளிதல்


அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.
501
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.
502
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
503
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
504
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.
505
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.
506
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.
507
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.
508
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.
509
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.
510

தெரிந்துவினையாடல்


நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.
511
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.
512
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.
513
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.
514
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
515
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.
516
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
517
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.
518
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.
519
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.
520

சுற்றந்தழால்


பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.
521
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.
522
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
523
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.
524
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.
525
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.
526
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.
527
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
528
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.
529
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.
530

பொச்சாவாமை


இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
531
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
532
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.
533
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.
534
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.
535
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல்.
536
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.
537
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.
538
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
539
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
540

செங்கோன்மை


ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
541
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழுங் குடி.
542
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
543
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
544
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.
545
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
546
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
547
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
548
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.
549
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
550

கொடுங்கோன்மை


கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.
551
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு.
552
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.
553
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.
554
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை
555
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி.
556
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.
557
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.
558
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.
559
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.
560

வெருவந்தசெய்யாமை


தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
561
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்.
562
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
563
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
564
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.
565
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.
566
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்.
567
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு.
568
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.
569
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை.
570

கண்ணோட்டம்


கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு.
571
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.
572
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.
573
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.
574
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்
575
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.
576
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.
577
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.
578
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.
579
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
580

ஒற்றாடல்


ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.
581
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.
582
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்.
583
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.
584
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.
585
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று.
586
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.
587
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
588
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.
589
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.
590

ஊக்கமுடைமை


உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.
591
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
592
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.
593
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.
594
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
595
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
596
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.
597
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு.
598
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
599
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.
600

மடியின்மை

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.
601
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
602
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.
603
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.
604
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.
605
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.
606
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.
607
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.
608
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.
609
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.
610

ஆள்வினையுடைமை

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
611
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.
612
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.
613
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.
614
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.
615
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.
616
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.
617
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.
618
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
619
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
620

இடுக்கணழியாமை

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்.
621
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
622
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.
623
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.
624
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.
625
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.
626
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.
627
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.
628
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.
629
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.
630

அரசியல் முற்றிற்று

அமைச்சியல்


அமைச்சு

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.
631
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு.
632
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.
633
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு.
634
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை.
635
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.
636
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
637
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
638
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.
639
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர்.
640

சொல்வன்மை


நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.
641
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.
642
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.
643
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.
644
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
645
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.
646
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
647
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
648
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.
649
இணர்ஊழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.
650

வினைத்தூய்மை


துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.
651
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
652
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.
653
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
654
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.
655
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.
656
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.
657
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.
658
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.
659
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.
660

வினைத்திட்பம்


வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
661
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
662
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.
663
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
664
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.
665
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
666
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
667
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
668
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
669
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.
670

வினைசெயல்வகை


சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.
671
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
672
ஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.
673
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.
674
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.
675
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
676
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.
677
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
678
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
679
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.
680

தூது


அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.
681
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.
682
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.
683
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.
684
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.
685
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.
686
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.
687
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.
688
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்க ணவன்.
689
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.
690

மன்னரைச் சேர்ந்தொழுதல்


அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
691
மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்.
692
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.
693
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.
694
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.
695
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.
696
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.
697
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.
698
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.
699
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.
700

குறிப்பறிதல்


கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி.
701
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
702
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.
703
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு.
704
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.
705
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
706
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும்.
707
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின்.
708
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்.
709
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.
710

அவையறிதல்


அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
711
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.
712
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.
713
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.
714
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.
715
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.
716
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.
717
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.
718
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்.
719
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.
720

அவையஞ்சாமை

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.
721
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.
722
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.
723
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.
724
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.
725
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
726
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.
727
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.
728
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.
729
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.
730

அமைச்சியல் முற்றிற்று

அங்கவியல்


நாடு

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.
731
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.
732
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு.
733
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு.
734
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.
735
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை.
736
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
737
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.
738
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.
739
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.
740

அரண்


ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.
741
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.
742
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.
743
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.
744
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.
745
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.
746
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.
747
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.
748
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.
749
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.
750

பொருள்செயல்வகை


பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.
751
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
752
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
752
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
754
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
755
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
756
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
757
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.
758
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
759
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
760

படைமாட்சி


உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.
761
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.
762
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்.
763
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.
764
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.
765
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.
766
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.
767
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.
768
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.
769
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.
770

படைச்செருக்கு


என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர்.
771
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
772
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.
773
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
774
விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
775
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.
776
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
777
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர்.
778
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்.
779
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.
780

நட்பு


செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
781
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
782
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
783
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு.
784
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.
785
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு.
786
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
787
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.
788
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
789
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
790

நட்பாராய்தல்


நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
791
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.
792
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு.
793
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.
794
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல்.
795
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்.
796
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்.
797
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
798
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும்.
799
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
800

பழைமை


பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
801
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.
802
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.
803
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.
804
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
805
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
806
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.
807
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.
808
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.
809
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.
810

தீ நட்பு


பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது.
811
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்.
812
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
813
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.
814
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.
815
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.
816
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும்.
817
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்.
818
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
819
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.
820

கூடாநட்பு


சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
821
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.
822
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது.
823
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
824
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.
825
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
826
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
827
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
828
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று.
829
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல்.
830

பேதைமை


பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.
831
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.
832
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்
833
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
834
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.
835
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.
836
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.
837
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.
838
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.
839
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
840

புல்லறிவாண்மை


அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.
841
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.
842
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.
843
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.
844
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.
845
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.
846
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.
847
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.
848
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.
849
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.
850

இகல்


இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.
851
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.
852
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.
853
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.
854
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர்.
855
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.
856
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.
857
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.
858
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.
859
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.
860

பகைமாட்சி


வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
861
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு.
862
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.
863
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.
864
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது.
865
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.
866
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.
867
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து.
868
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.
869
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி.
870

பகைத்திறந்தெரிதல்


பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
871
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.
872
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.
873
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.
874
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
875
தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.
876
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.
877
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.
878
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.
879
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.
880

உட்பகை


நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.
881
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
882
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.
883
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்.
884
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.
885
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.
886
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.
887
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.
888
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு.
889
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.
890

பெரியாரைப் பிழையாமை


ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.
891
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.
892
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.
893
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.
894
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.
895
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.
896
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.
897
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.
898
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.
899
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.
900

பெண்வழிச்சேறல்


மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.
901
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.
902
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.
903
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.
904
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.
905
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.
906
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.
907
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.
908
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.
909
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.
910

வரைவின்மகளிர்


அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்.
911
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.
912
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று.
913
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.
914
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்.
915
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.
916
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.
917
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.
918
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.
919
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
920

கள்ளுண்ணாமை


உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.
921
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.
922
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
923
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
924
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.
925
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
926
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்
927
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
928
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
929
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
930

சூது


வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.
931
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு.
932
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.
933
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.
934
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.
935
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார்.
936
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.
937
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.
938
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின்.
939
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.
940

மருந்து


மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.
941
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.
942
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.
943
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
944
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.
945
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.
946
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
947
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
948
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
949
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால்நாற் கூற்றே மருந்து.
950

அங்கவியல் முற்றிற்று

ஒழிபியல்


குடிமை

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு.
951
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்.
952
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு.
953
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
954
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று.
955
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்தும்என் பார்.
956
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து.
957
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.
958
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
959
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.
960

மானம்


இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.
961
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.
962
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
963
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
964
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.
965
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.
966
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
967
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து.
968
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
969
இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.
970

பெருமை


ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல்.
971
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
972
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.
973
ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.
974
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.
975
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.
976
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.
977
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
978
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.
979
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
980

சான்றாண்மை


கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
981
குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.
982
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்.
983
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
984
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
985
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.
986
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
987
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
988
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.
989
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
990

பண்புடைமை


எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
991
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
992
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
993
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு.
994
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
995
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன்.
996
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர்.
997
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.
998
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
999
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று.
1000

நன்றியில்செல்வம்


வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.
1001
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு
1002
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.
1003
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.
1004
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.
1005
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.
1006
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.
1007
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
1008
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
1009
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.
1010

நாணுடைமை


கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.
1011
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.
1012
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.
1013
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.
1014
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.
1015
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.
1016
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.
1017
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.
1018
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.
1019
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.
1020

குடிசெயல்வகை


கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.
1021
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
1022
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
1023
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு.
1024
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.
1025
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்.
1026
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை.
1027
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும்.
1028
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு.
1029
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி.
1030

உழவு


சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
1031
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.
1032
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.
1033
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.
1034
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்.
1035
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.
1036
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.
1037
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.
1038
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.
1039
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.
1040

நல்குரவு


இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.
1041
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
1042
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.
1043
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.
1044
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.
1045
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.
1046
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.
1047
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.
1048
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.
1049
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.
1050

இரவு


இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.
1051
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.
1052
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.
1053
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.
1054
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.
1055
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.
1056
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.
1057
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.
1058
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.
1059
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.
1060

இரவச்சம்


கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.
1061
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
1062
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.
1063
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.
1064
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.
1065
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.
1066
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.
1067
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.
1068
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.
1069
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.
1070

கயமை


மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்.
1071
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர்.
1072
தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்.
1073
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.
1074
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது.
1075
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்.
1076
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு.
1077
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.
1078
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ்.
1079
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து.
1080

ஒழிபியல் முற்றிற்று
பொருட்பால் முற்றிற்று


காமத்துப்பால்

களவியல்


3.1.1

தகையணங்குறுத்தல்


அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.
1081
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.
1082
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு.
1083
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.
1084
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து.
1085
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்.
1086
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
1087
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.
1088
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து.
1089
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.
1090

குறிப்பறிதல்


இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.
1091
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.
1092
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.
1093
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.
1094
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்
1095
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.
1096
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
1097
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.
1098
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.
1099
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
1100

புணர்ச்சிமகிழ்தல்


கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
1101
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.
1102
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.
1103
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.
1104
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட் டார் கதுப்பினாள் தோள்.
1105
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.
1106
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.
1107
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.
1108
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.
1109
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.
1110

நலம்புனைந்துரைத்தல்


நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.
1111
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.
1112
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.
1113
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.
1114
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.
1115
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.
1116
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.
1117
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.
1118
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.
1119
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.
1120

காதற்சிறப்புரைத்தல்


பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.
1121
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.
1122
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.
1123
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.
1124
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.
1125
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர்.
1126
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.
1127
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.
1128
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்.
1129
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்.
1130

நாணுத்துறவுரைத்தல்


காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.
1131
நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து.
1132
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.
1133
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.
1134
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.
1135
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண்.
1136
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில்.
1137
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும்.
1138
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.
1139
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு.
1140

அலரறிவுறுத்தல்


அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.
1141
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.
1142
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.
1143
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.
1144
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.
1145
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.
1146
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.
1147
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.
1148
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.
1149
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.
1150

களவியல் முற்றிற்று

கற்பியல்


பிரிவாற்றாமை


செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.
1151
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.
1152
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.
1153
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.
1154
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.
1155
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.
1156
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.
1157
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.
1158
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.
1159
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.
1160

படர்மெலிந்திரங்கல்


மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.
1161
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.
1162
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.
1163
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.
1164
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்.
1165
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது.
1166
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன்.
1167
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை.
1168
<p style=”line-height: 150%”கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா.
1169
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண்.
1170

கண்விதுப்பழிதல்


கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.
1171
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.
1172
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.
1173
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.
1174
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.
1175
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.
1176
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.
1177
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.
1178
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.
1179
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.
1180

பசப்புறுபருவரல்


நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.
1181
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.
1182
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.
1183
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.
1184
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.
1185
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.
1186
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.
1187
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.
1188
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.
1189
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.
1190

தனிப்படர்மிகுதி


தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.
1191
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.
1192
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.
1193
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.
1194
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.
1195
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.
1196
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.
1197
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
1198
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.
1199
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.
1200

நினைந்தவர்புலம்பல்


உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது.
1201
எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.
1202
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்.
1203
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்.
1204
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல்.
1205
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான்
உற்றநாள் உள்ள உளேன்.
1206
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.
1207
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு.
1208
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து.
1209
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.
1210

கனவுநிலையுரைத்தல்


காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.
1211
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.
1212
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
1213
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.
1214
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.
1215
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.
1216
நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.
1217
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.
1218
நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.
1219
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.
1220

பொழுதுகண்டிரங்கல்


மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.
1221
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.
1222
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.
1223
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.
1224
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை.
1225
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.
1226
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்.
1227
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை.
1228
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.
1229
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்.
1230

உறுப்புநலனழிதல்

 

 

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண்.
1231
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண்.
1232
தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள்.
1233
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.
1234
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள்.
1235
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து.
1236
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து.
1237
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல்.
1238
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.
1239
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு.
1240

நெஞ்சொடுகிளத்தல்


நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
1241
காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.
1242
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.
1243
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.
1244
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.
1245
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.
1246
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.
1247
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.
1248
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.
1249
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.
1250

நிறையழிதல்


காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
1251
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்.
1252
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்.
1253
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.
1254
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று.
1255
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்.
1256
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின்.
1257
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை.
1258
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.
1259
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.
1260

அவர்வயின்விதும்பல்


வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.
1261
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.
1262
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.
1263
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.
1264
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.
1265
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.
1266
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.
1267
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.
1268
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
1269
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.
1270

குறிப்பறிவுறுத்தல்


கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.
1271
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.
1272
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.
1273
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
1274
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.
1275
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.
1276
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.
1277
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.
1278
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.
1279
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.
1280

புணர்ச்சிவிதும்பல்


உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
1281
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்.
1282
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.
1283
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.
1284
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.
1285
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.
1286
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.
1287
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு.
1288
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
1289
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று.
1290

நெஞ்சொடுபுலத்தல்


அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.
1291
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
1292
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.
12983
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.
1294
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
1295
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.
1296
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.
1297
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
1298
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.
1299
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.
1300

புலவி


புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது.
1301
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.
1302
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்.
1303
ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று.
1304
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து.
1305
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று.
1306
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று.
1307
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.
1308
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது.
1309
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா.
1310

புலவி நுணுக்கம்


பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.
1311
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.
1312
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.
1313
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.
1314
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.
1315
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.
1316
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.
1317
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.
1318
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.
1319
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.
1320

ஊடலுவகை

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.
1321
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.
1322
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.
1323
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.
1324
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.
1325
உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.
1326
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.
1327
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.
1328
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.
1329
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.
1330

கற்பியல் முற்றிற்று காமத்துப்பால் முற்றிற்று
திருக்குறள் முற்றிற்று

Glossary

Glossary

The glossary of this blog of Agaram-Thirukkural has been arranged in alphabetical order and shall be sorted ascending / descending order (columnwise) by clicking on the column header titles.

Click on the chapter number to view the Thirukkural meaning and explanations of the respective chapters.

in Englishin TamilChapter
Absence of Terrorismவெருவந்த செய்யாமை57
Acting After Due Considerationதெரிந்து செயல்வகை47
Agricultureஉழவு104
Assertion of the Strength of Virtueஅரண் வலியுறுத்தல்4
Avoiding Mean Associationsசிற்றினம் சேராமை46
Basenessகயமை108
Beauty’s Dartதகையணங்குறுத்தல்109
Being Led by Womenபெண்வழிச் சேரல்91
Benignityகண்ணோட்டம்58
Cherishing Guestsவிருந்தோம்பல்9
Cherishing One’s Kindredசுற்றந் தழால்53
Complainingsபடர்மெலிந் திரங்கல்117
Conduct in the Presence of the Kingமன்னரைச் சேர்ந்தொழுகல்70
Courtesyபண்புடைமை100
Declaration of Love’s Special Excellenceகாதற் சிறப்புரைத்தல்113
Desire for Reunionபுணர்ச்சி விதும்பல்129
Destinyஊழ்38
Detectivesஒற்றாடல்59
Domestic Lifeஇல்வாழ்க்கை5
Dread of Devil Deedsதீவினையச்சம்21
Energyஊக்கம் உடைமை60
Enmity Withinஉட்பகை89
Evil Friendshipதீ நட்பு82
Exploration with Oneselfநெஞ்சோடு புலத்தல்130
Eyes Consumed with Griefகண்விதுப்பழிதல்118
Familiarityபழைமை81
Feigned Angerபுலவி நுணுக்கம்132
Follyபேதைமை84
Friendshipநட்பு79
Gaming (Gambling)சூது94
Givingஈகை23
Greatnessபெருமை98
Hearingகேள்வி42
Helpless in Troubleஇடுக்கண் அழியாமை63
Honourமானம்97
Hostilityஇகல்86
Ignoranceகல்லாமை41
Impartialityநடுவு நிலைமை12
Inconsistent Conductகூடா ஒழுக்கம்28
Instabilityநிலையாமை34
Investigation in Forming Friendshipநட்பாராய்தல்80
Knowing the Fitting Timeகாலம் அறிதல்49
Knowing the Placeஇடன் அறிதல்50
Knowing the Quality of Hateபகைத்திறம் தெரிதல்88
Knowledge of the Trueமெய்யுணர்தல்36
Lamentations at Eventideபொழுதுகண்டு இரங்கல்123
Learningகல்வி40
Manly Effortஆள்வினை உடைமை62
Medicineமருந்து95
Mendicancyஇரவு106
Military Spiritபடைச் செருக்கு78
Modes of Actionவினைசெயல்வகை68
Mutual Desireஅவர்வயின் விதும்பல்127
Nobilityகுடிமை96
Not Backbitingபுறங்கூறாமை19
Not Covetingவெஃகாமை18
Not Coveting Another’s Wifeபிறனில் விழையாமை15
Not Doing Evilஇன்னா செய்யாமை32
Not Drinking Palm-Wineகள்ளுண்ணாமை93
Not Envyingஅழுக்காறாமை17
Not Killingகொல்லாமை33
Not Offending the Greatபெரியாரைப் பிழையாமை90
Not to Dread the Councilஅவை அஞ்சாமை73
Penanceதவம்27
Perfectnessசான்றாண்மை99
Petty Conceitபுல்லறிவாண்மை85
Poutingபுலவி131
Povertyநல்குரவு105
Power in Actionவினைத்திட்பம்67
Power in Speechசொல்வன்மை65
Purity in Actionவினைத்தூய்மை66
Recognition of the Signs (of Mutual Love)குறிப்பறிதல்110
Rejoicing in the Embraceபுணர்ச்சி மகிழ்தல்111
Renownபுகழ்24
Renunciationதுறவு35
Reserve Overcomeநிறையழிதல்126
Sad Memoriesநினைந்தவர் புலம்பல்121
Seeking the Aid of Great Menபெரியாரைத் துணைக்கோடல்45
Selection and Confidenceதெரிந்து தெளிதல்51
Selection and Employmentதெரிந்து வினையாடல்52
Separation Unendurableபிரிவாற்றாமை116
Shameநாணுடைமை102
Soliloquyநெஞ்சோடு கிளத்தல்125
The Abandonment of Reserveநாணுத் துறவுரைத்தல்114
The Absence of Fraudகள்ளாமை29
The Announcement of the Rumourஅலர் அறிவுறுத்தல்115
The Correction of Faultsகுற்றங்கடிதல்44
The Cruel Sceptreகொடுங்கோன்மை56
The Dread of Mendicancyஇரவச்சம்107
The Envoyதூது69
The Excellence of an Armyபடைமாட்சி77
The Excellence of Rainவான் சிறப்பு2
The Extirpation of Desireஅவா அறுத்தல்37
The Fortificationஅரண்75
The Goodness of the help to Domestic Lifeவாழ்க்கைத் துணைநலம்6
The Greatness of a Kingஇறைமாட்சி39
The Greatness of Asceticsநீத்தார் பெருமை3
The Knowledge of Benefits Conferred: Gratitudeசெய்ந்நன்றி அறிதல்11
The Knowledge of Indicationsகுறிப்பறிதல்71
The Knowledge of Powerவலியறிதல்48
The Knowledge of the Council Chamberஅவை அறிதல்72
The Knowledge of What is Benefitting a Man’s Positionஒப்புரவறிதல்22
The Landநாடு74
The Might of Hatredபகைமாட்சி87
The Not Being Angryவெகுளாமை31
The Not Speaking Profitless Wordsபயனில சொல்லாமை20
The obtaining of Sonsமக்கட்பேறு7
The Office of Minister of Stateஅமைச்சு64
The Pallid Hueபசப்புறு பருவரல்119
The Pleasure of Temporary Varianceஊடலுவகை133
The Possession of Benevolenceஅருளுடைமை25
The Possession of Decorumஒழுக்கமுடைமை14
The Possession of Kingஅறிவுடைமை43
The Possession of Loveஅன்புடைமை8
The Possession of Patience: Forbearanceபொறையுடைமை16
The Possession of Self-Restraintஅடக்கமுடைமை13
The Praise of Godகடவுள் வாழ்த்து1
The Praise of her Beautyநலம் புனைந்துரைத்தல்112
The Reading of the Signsகுறிப்பறிவுறுத்தல்128
The Renunciation of Fleshபுலால் மறுத்தல்26
The Right Sceptreசெங்கோன்மை55
The Solitary Anguishதனிப்படர் மிகுதி120
The Utterance of Pleasant Wordsஇனியவை கூறல்10
The Visions of the Nightகனவுநிலை உரைத்தல்122
The Way of Maintaining the Familyகுடிசெயல் வகை103
Unforgetfulnessபொச்சாவாமை54
Unreal Friendshipகூடா நட்பு83
Unsluggishnessமடி இன்மை61
Veracityவாய்மை30Wanton Womenவரைவின் மகளிர்92Wasting Awayஉறுப்புநலன் அழிதல்124Way of Accumulating Wealthபொருள் செயல் வகை76Wealth Without Benefactionநன்றியில் செல்வம்101
TAG CLOUD (in Alphabetical Order)

TAG CLOUD (in Alphabetical Order)

Absence of Terrorism Acting After Due Consideration Agriculture Assertion of the Strength of Virtue Avoiding Mean Associations Baseness Beauty’s Dart Being Led by Women Benignity Cherishing Guests Cherishing One’s Kindred Complainings Conduct in the Presence of the King Courtesy Declaration of Love’s Special Excellence Desire for Reunion Destiny Detectives Domestic Life Dread of Devil Deeds Energy Enmity Within Evil Friendship Exploration with Oneself Eyes Consumed with Grief Familiarity Feigned Anger Folly Friendship Gaming (Gambling) Giving Greatness Hearing Helpless in Trouble Honour Hostility IgnoranceImpartiality Inconsistent Conduct Instability Investigation in Forming Friendship Knowing the Fitting Time Knowing the Place Knowing the Quality of Hate Knowledge of the True Lamentations at Eventide Learning Manly Effort Medicine Mendicancy Military Spirit Modes of Action Mutual Desire Nobility Not Backbiting Not Coveting Not Coveting Another’s Wife Not Doing Evil Not Drinking Palm-Wine Not Envying Not Killing Not Offending the Great Not to Dread the Council Penance Perfectness Petty Conceit Pouting Poverty Power in Action Power in Speech Purity in Action Recognition of the Signs (of Mutual Love) Rejoicing in the Embrace Renown Renunciation Reserve Overcome Sad Memories Seeking the Aid of Great Men Selection and Confidence Selection and Employment Separation Unendurable Shame Soliloquy The Abandonment of Reserve The Absence of Fraud The Announcement of the Rumour The Correction of Faults The Cruel Sceptre The Dread of Mendicancy The Envoy The Excellence of an Army The Excellence of Rain The Extirpation of Desire The Fortification The Goodness of the help to Domestic Life The Greatness of a King The Greatness of Ascetics The Knowledge of Benefits Conferred: Gratitude The Knowledge of Indications The Knowledge of Power The Knowledge of the Council Chamber The Knowledge of What is Benefitting a Man’s Position The Land The Might of Hatred The Not Being Angry The Not Speaking Profitless Words The obtaining of Sons The Office of Minister of State The Pallid Hue The Pleasure of Temporary Variance The Possession of Benevolence The Possession of Decorum The Possession of King The Possession of Love The Possession of Patience: Forbearance The Possession of Self-Restraint The Praise of God The Praise of her Beauty The Reading of the Signs The Renunciation of Flesh The Right Sceptre The Solitary Anguish The Utterance of Pleasant Words The Visions of the Night The Way of Maintaining the Family Unforgetfulness Unreal Friendship Unsluggishness Veracity Wanton Women Wasting Away Way of Accumulating Wealth Wealth Without Benefaction
திருக்குறள் – ஒரு அறிமுகம்

திருக்குறள் – ஒரு அறிமுகம்

தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.

இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.

இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் அச்செய்திகள் வாயிலாக அறிகிறோம்.

pic_valluvar2

திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.

பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலநூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.

திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கிருஸ்துவ சகாப்தத்தின் முன் பகுதியைச் சேர்ந்ததாகப் பலர் கருதுவர்.

பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன.

1.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு
2.பதினென்கீழ்க்கணக்கு
3.ஐம்பெருங்காப்பியங்கள்
4.ஐஞ்சிறு காப்பியங்கள்

ஆகியவை அவை. அவற்றில் பதினென்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் “முப்பால்” என்னும் பெயரோடு இந்நூல் விளங்குகின்றது.

“அறம், பொருள், இன்பம்”, ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் “முப்பால்” எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் “இயல்” என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துபாடல்களைத் தன்னுள் அடக்கியது.

இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.

குறள் வெண்பாக்களால் ஆனமையால் “குறள்’ என்றும் “திருக்குறள்” என்றும் இது பெயர் பெற்றது.

“பாயிரம்” என்னும் பகுதியுடன் முதலில் “அறத்துப்பால்” வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , “கடவுள் வாழ்த்து” என்னும் அதிகாரம். தொடர்ந்து, “வான் சிறப்பு”, “நீத்தார் பெருமை”, “அறன் வலியுறுத்தல்”, ஆகிய அதிகாரங்கள்.

அடுத்துவரும் “இல்லறவியல்” என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது.

அடுத்து வரும் “பொருட்பாலி”ல் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.

கடைசிப்பாலாகிய “இன்பத்துப்பால்” அல்லது “காமத்துப்பாலி”ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள்.

திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.

pic_valluvar_kottam

“அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு….”

என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய “அ” வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,

“ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
கூடி முயங்கப்பெறின்”

என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய “ன்” னுடன் முடித்திருக்கிறார்.

வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.

பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப் படுவது திருக்குறள் முனுசாமியின் உரை.

தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு.

உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

“இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”

A Short Introduction to Thirukural: Written by Dr.S.Jayabarathi for Project Madurai, Original in Inaimathi/Anjal font – Converted to Unicode

http://www.tamilnation.org/literature/kural/

1330. ஊடுதல் காமத்திற்கு இன்பம்

1330. ஊடுதல் காமத்திற்கு இன்பம்

1330. Ooduthal Kaamaththirku Inbam

  • குறள் #
    1330
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    ஊடலுவகை (Oodaloovagai)
    The Pleasure of Temporary Variance
  • குறள்
    ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
    கூடி முயங்கப் பெறின்.
  • விளக்கம்
    காதலுக்கு இன்பமாவது ஊடுதல்; கூடித் தழுவப்பெறுதல் அவ்வூடலுக்கு இன்பம்.
  • Translation
    in English
    A ‘feigned aversion’ coy to pleasure gives a zest;
    The pleasure’s crowned when breast is clasped to breast.
  • Meaning
    Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike.
1329. ஊடுக மன்னோ ஒளியிழை

1329. ஊடுக மன்னோ ஒளியிழை

1329. Ooduga Manno Oliyizhai

  • குறள் #
    1329
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    ஊடலுவகை (Oodaloovagai)
    The Pleasure of Temporary Variance
  • குறள்
    ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
    நீடுக மன்னோ இரா.
  • விளக்கம்
    விளங்குகின்ற அணிகள் அணிந்தவள் ஊடுவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நாம் இரந்து நிற்க இரவு நீடித்தல் வேண்டும்.
  • Translation
    in English
    Let her, whose jewels brightly shine, aversion feign!
    That I may still plead on, O night, prolong thy reign!
  • Meaning
    May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!
1328. ஊடிப் பெறுகுவம் கொல்லோ

1328. ஊடிப் பெறுகுவம் கொல்லோ

1328. Oodip Perukuvam Kollo

  • குறள் #
    1328
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    ஊடலுவகை (Oodaloovagai)
    The Pleasure of Temporary Variance
  • குறள்
    ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
    கூடலில் தோன்றிய உப்பு.
  • விளக்கம்
    தலைவியின் நெற்றி வியர்க்குமாறு, அவளைக் கூடியதனால், பெற்ற இன்பத்தினை, மீண்டுமொருமுறை அவள் பிணங்குவதன் மூலம் பெறுவோமோ?
  • Translation
    in English
    And shall we ever more the sweetness know of that embrace
    With dewy brow; to which ‘feigned anger’ lent its piquant grace.
  • Meaning
    Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?
1327. ஊடலில் தோற்றவர் வென்றார்

1327. ஊடலில் தோற்றவர் வென்றார்

1327. Oodalil Thotravar Vendraar

  • குறள் #
    1327
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    ஊடலுவகை (Oodaloovagai)
    The Pleasure of Temporary Variance
  • குறள்
    ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
    கூடலிற் காணப் படும்.
  • விளக்கம்
    ஊடலில் தோற்றவர் வென்றவராவர்; முன்பு தோற்றதுபோல் காணப்பட்டாலும் அது வெற்றியென்பது சேர்க்கையில் அவரால் அறியப்படும்.
  • Translation
    in English
    In lovers’ quarrels, ’tis the one that first gives way,
    That in re-union’s joy is seen to win the day.
  • Meaning
    Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which follows).
1326. உணலினும் உண்டது அறல்இனிது

1326. உணலினும் உண்டது அறல்இனிது

1326. Unalinum Undathu Aralinithu

  • குறள் #
    1326
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    ஊடலுவகை (Oodaloovagai)
    The Pleasure of Temporary Variance
  • குறள்
    உணலினும் உண்டது அறல்இனிது காமம்
    புணர்தலின் ஊடல் இனிது.
  • விளக்கம்
    மேன்மேல் உண்ணுவதைவிட உண்ட உணவு செரித்தல் இன்பந்தருவதாகும்; அதுபோலக் காதலுக்குச் சேர்தலைவிட ஊடல் இன்பம் தருவதாகும்.
  • Translation
    in English
    ‘Tis sweeter to digest your food than ’tis to eat;
    In love, than union’s self is anger feigned more sweet.
  • Meaning
    To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse.
1325. தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார்

1325. தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார்

1325. Thavarilar Aayinum Thaamveezhvaar

  • குறள் #
    1325
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    ஊடலுவகை (Oodaloovagai)
    The Pleasure of Temporary Variance
  • குறள்
    தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
    அகறலின் ஆங்கொன் றுடைத்து.
  • விளக்கம்
    காதலர் தவறில்லாதவராயினும் அவரால் விரும்பப்படும் மகளிர் ஊடி, தம்மெல்லிய தோள்களால் தழுவப்பெறாத சமயத்திலும் ஓர் இன்பம் உண்டு.
  • Translation
    in English
    Though free from fault, from loved one’s tender arms
    To be estranged a while hath its own special charms.
  • Meaning
    Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love.
1324. புல்லி விடாஅப் புலவியுள்

1324. புல்லி விடாஅப் புலவியுள்

1324. Pulli Vidaaap Pulaviyul

  • குறள் #
    1324
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    ஊடலுவகை (Oodaloovagai)
    The Pleasure of Temporary Variance
  • குறள்
    புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
    உள்ளம் உடைக்கும் படை.
  • விளக்கம்
    காதலரைத் தழுவிப் பின் விடாமலிருப்பதற்க்குக் காரணமான பிணக்கத்துள்ளே என் மனத்தை உடைக்கும் ஆயுதம் தோன்றும்.
  • Translation
    in English
    ‘Within the anger feigned’ that close love’s tie doth bind,
    A weapon lurks, which quite breaks down my mind.
  • Meaning
    In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart.
1323. புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ

1323. புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ

1323. Pulaththalin Puththelnaadu Undo

  • குறள் #
    1323
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    ஊடலுவகை (Oodaloovagai)
    The Pleasure of Temporary Variance
  • குறள்
    புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
    நீரியைந் தன்னார் அகத்து.
  • விளக்கம்
    நிலத்தோடு நீர் சேர்ந்தாற்போல், ஒற்றுமையுடையவரிடத்துப் பிணங்குதலைவிட இன்பம் தேவருலகத்தில் உண்டோ?
  • Translation
    in English
    Is there a bliss in any world more utterly divine,
    Than ‘coyness’ gives, when hearts as earth and water join?
  • Meaning
    Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water?
1322. ஊடலின் தோன்றும் சிறுதுனி

1322. ஊடலின் தோன்றும் சிறுதுனி

1322. Oodalin Thondrum Siruthuni

  • குறள் #
    1322
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    ஊடலுவகை (Oodaloovagai)
    The Pleasure of Temporary Variance
  • குறள்
    ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
    வாடினும் பாடு பெறும்.
  • விளக்கம்
    ஊடற்காலத்தில் தோன்றும் சிறிய துன்பத்தால், அவர் செய்யும் கருணை குறைவுபட்டாலும் அது பெருமை அடையும்.
  • Translation
    in English
    My ‘anger feigned’ gives but a little pain;
    And when affection droops, it makes it bloom again.
  • Meaning
    His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike.
1321. இல்லை தவறவர்க்கு ஆயினும்

1321. இல்லை தவறவர்க்கு ஆயினும்

1321. Illai Thavaravarkku Aayinum

  • குறள் #
    1321
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    ஊடலுவகை (Oodaloovagai)
    The Pleasure of Temporary Variance
  • குறள்
    இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
    வல்லது அவர்அள஧க்கு மாறு.
  • விளக்கம்
    தலைவரிடத்தில் குற்றமில்லையாயினும், அவரோடு ஊடுதல் அவர் நம்மீது மிகுந்த அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.
  • Translation
    in English
    Although there be no fault in him, the sweetness of his love
    Hath power in me a fretful jealousy to move.
  • Meaning
    Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike.
1320. நினைத்திருந்து நோக்கினும் காயும்

1320. நினைத்திருந்து நோக்கினும் காயும்

1320. Ninaththirundhu Nokkinum Kaayum

  • குறள் #
    1320
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
    Feigned Anger
  • குறள்
    நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
    யாருள்ளி நோக்கினீர் என்று.
  • விளக்கம்
    தலைவியின் அழகையே நினைத்திருந்து பார்த்தாலும், ‘வேறு எப்பெண்களின் உறுப்பு அழகை நினைத்து அவற்றோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றீர்’ என்று சினம் கொள்வாள்.
  • Translation
    in English
    I silent sat, but thought the more, And gazed on her. Then she
    Cried out, ‘While thus you eye me o’er, Tell me whose form you see’.
  • Meaning
    Even when I look on her contemplating (her beauty), she is displeased and says, “With whose thought have you (thus) looked on my person?”
1319. தன்னை உணர்த்தினும் காயும்

1319. தன்னை உணர்த்தினும் காயும்

1319. Thannai Unarththinum Kaayum

  • குறள் #
    1319
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
    Feigned Anger
  • குறள்
    தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
    இந்நீரர் ஆகுதிர் என்று.
  • விளக்கம்
    தலைவியின் பிணக்கைத் தீர்த்தாலும், ‘பிற பெண்களிடத்தும் இவ்வாறு பிணக்குத் தீர்ப்பீர்’ என்று கோபிக்கிறாள்.
  • Translation
    in English
    I then began to soothe and coax, To calm her jealous mind;
    ‘I see’, quoth she, ‘to other folks How you are wondrous kind’
  • Meaning
    Even when I try to remove her dislike, she is displeased and says, “This is the way you behave towards (other women).”
1318. தும்முச் செறுப்ப அழுதாள்

1318. தும்முச் செறுப்ப அழுதாள்

1318. Thummuch Cheruppa Azhuthaal

  • குறள் #
    1318
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
    Feigned Anger
  • குறள்
    தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
    எம்மை மறைத்திரோ என்று.
  • விளக்கம்
    நான் தும்மலை அடக்கியபோது, ‘உமக்கு வேண்டியவர் நினைப்பதை எனக்கு மறைத்தீரோ’ என்று சொல்லி அழுதாள்.
  • Translation
    in English
    And so next time I checked my sneeze; She forthwith wept and cried,
    (That woman difficult to please), ‘Your thoughts from me you hide’.
  • Meaning
    When I suppressed my sneezing, she wept saying, “I suppose you (did so) to hide from me your own people’s remembrance of you”.
1317. வழுத்தினாள் தும்மினேன் ஆக

1317. வழுத்தினாள் தும்மினேன் ஆக

1317. Vazhuththinaal Thumminen Aaga

  • குறள் #
    1317
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
    Feigned Anger
  • குறள்
    வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
    யாருள்ளித் தும்மினீர் என்று.
  • விளக்கம்
    நான் தும்மினேன்; உடனே வாழ்த்தினாள்; பின்னர் ‘யார் நினைத்ததால் தும்மினீர்?’ என்று சொல்லி அழுதாள்.
  • Translation
    in English
    She hailed me when I sneezed one day; But straight with anger seized,
    She cried; ‘Who was the woman, pray, Thinking of whom you sneezed?’
  • Meaning
    When I sneezed she blessed me, but at once changed (her mind) and wept, asking, “At the thought of whom did you sneeze?”
1316. உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர்

1316. உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர்

1316. Ullinen Endrenmat Renmarantheer

  • குறள் #
    1316
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
    Feigned Anger
  • குறள்
    உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
    புல்லாள் புலத்தக் கனள்.
  • விளக்கம்
    ‘நினைத்தேன்’ என்று கூறினேன்; ‘என்னை இங்ஙனம் நினைக்கு முன் மறந்தீர்’ என்று சொல்லி என்னைத் தழுவாது பிணங்கினாள்.
  • Translation
    in English
    ‘Each day I called to mind your charms,’ ‘O, then, you had forgot,’
    She cried, and then her opened arms, Forthwith embraced me not.
  • Meaning
    When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began to feign dislike.
1315. இம்மைப் பிறப்பில் பிரியலம்

1315. இம்மைப் பிறப்பில் பிரியலம்

1315. Immaip Pirappil Piriyalam

  • குறள் #
    1315
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
    Feigned Anger
  • குறள்
    இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
    கண்நிறை நீர்கொண் டனள்.
  • விளக்கம்
    ‘இப்பிறப்பில் பிரிய மாட்டேன்’ என்று சொன்னபோது, ‘மறுபிறப்பிலே பிரிவேன்’ என்று பொருள் கொண்டு கண்கள் நிறைந்த நீரைக் கொண்டாள்.
  • Translation
    in English
    ‘While here I live, I leave you not,’ I said to calm her fears.
    She cried, ‘There, then, I read your thought’; And straight dissolved in tears.
  • Meaning
    When I said I would never part from her in this life her eyes were filled with tears.
1314. யாரினும் காதலம் என்றேனா

1314. யாரினும் காதலம் என்றேனா

1314. Yaarinum Kaathalam Endrenaa

  • குறள் #
    1314
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
    Feigned Anger
  • குறள்
    யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
    யாரினும் யாரினும் என்று.
  • விளக்கம்
    நான் எல்லோரையும் விட உன்னைக் காதலிக்கின்றேன் என்று சொன்ன பொது, காதலி ‘யாரினும் யாரினும்’ என்று சொல்லி என்னோடு பிணங்கினாள்.
  • Translation
    in English
    ‘I love you more than all beside,’ ‘T was thus I gently spoke;
    ‘What all, what all?’ she instant cried; And all her anger woke.
  • Meaning
    When I said I loved her more than any other woman, she said “more than others, yes, more than others,” and remained sulky.
1313. கோட்டுப்பூச் சூடினும் காயும்

1313. கோட்டுப்பூச் சூடினும் காயும்

1313. Kottuppooch Choodinum Kaayum

  • குறள் #
    1313
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
    Feigned Anger
  • குறள்
    கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
    காட்டிய சூடினீர் என்று.
  • விளக்கம்
    நான் கிளைகளில் மலர்ந்த மலர்களால் ஆன மாலையைச் சூடினாலும், ‘நீர் விரும்பும் ஒருத்திக்கு இதனைக் காட்டும் பொருட்டுச் சூடினீர்’ என்று கூறிக் கோபிப்பாள்.
  • Translation
    in English
    I wreathed with flowers one day my brow, The angry tempest lowers;
    She cries, ‘Pray, for what woman now Do you put on your flowers?’
  • Meaning
    Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman.
1312. ஊடி இருந்தேமாத் தும்மினார்

1312. ஊடி இருந்தேமாத் தும்மினார்

1312. Oodi Irunthemaath Thumminaar

  • குறள் #
    1312
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
    Feigned Anger
  • குறள்
    ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
    நீடுவாழ் கென்பாக் கறிந்து.
  • விளக்கம்
    யாம் ஊடியிருந்தபோது, நான் ஊடல் தீர்ந்து அவரை ‘நெடிது வாழ்க’ என்று வாழ்த்துவேன் என்று கருதி, அவர் தும்மினார்.
  • Translation
    in English
    One day we silent sulked; he sneezed: The reason well I knew;
    He thought that I, to speak well pleased, Would say, ‘Long life to you!’
  • Meaning
    When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life.
1311. பெண்ணியலார் எல்லாரும் கண்ணின்

1311. பெண்ணியலார் எல்லாரும் கண்ணின்

1311. Penniyalaar Ellaarum Kannin

  • குறள் #
    1311
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி நுணுக்கம் (Pulavi Nunukkam)
    Feigned Anger
  • குறள்
    பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
    நண்ணேன் பரத்தநின் மார்பு.
  • விளக்கம்
    பரத்தைமை உடையானே! பெண் தன்மையுடையவர் எல்லாரும் தமது கண்களால் பொதுவாக உன்னை அனுபவிப்பர்; ஆகையால், நான் உன் மார்பைச் சேரமாட்டேன்.
  • Translation
    in English
    From thy regard all womankind Enjoys an equal grace;
    O thou of wandering fickle mind, I shrink from thine embrace!
  • Meaning
    You are given to prostitution; all those who are born as womankind enjoy you with their eyes in an ordinary way. I will not embrace you.
1310. ஊடல் உணங்க விடுவாரோடு

1310. ஊடல் உணங்க விடுவாரோடு

1310. Oodal Unanga Viduvaarodu

  • குறள் #
    1310
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி (Pulavi)
    Pouting
  • குறள்
    ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
    கூடுவேம் என்பது அவா.
  • விளக்கம்
    நான் பிணங்கியிருக்க, அதைத் தீர்க்காது என்னை விட்டுச் செல்பவரோடு என்மனம் கூடுவேன் என்று கருதுவதற்குக் காரணம் ஆசையே.
  • Translation
    in English
    Of her who leaves me thus in variance languishing,
    To think within my heart with love is fond desire.
  • Meaning
    It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike.
1309. நீரும் நிழலது இனிதே

1309. நீரும் நிழலது இனிதே

1309. Neerum Nizhalathu Inithe

  • குறள் #
    1309
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி (Pulavi)
    Pouting
  • குறள்
    நீரும் நிழலது இனிதே புலவியும்
    வீழுநர் கண்ணே இனிது.
  • விளக்கம்
    நீரும் நிழலினிடத்தில் இருந்தால் குடிக்க இனியதாகும்; அது போல ஊடலும் அன்புடையவரிடத்தில் இனியதாகும்.
  • Translation
    in English
    Water is pleasant in the cooling shade;
    So coolness for a time with those we love.
  • Meaning
    Like water in the shade, dislike is delicious only in those who love.
1308. நோதல் எவன்மற்று நொந்தாரென்று

1308. நோதல் எவன்மற்று நொந்தாரென்று

1308. Nothal Evanmatru Nonthaarendru

  • குறள் #
    1308
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி (Pulavi)
    Pouting
  • குறள்
    நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
    காதலர் இல்லா வழி.
  • விளக்கம்
    இவர் வருந்தினாரென்று அத்துன்பத்தை அறியும் காதலியைப் பெறாதவருக்குப் பிணங்குதலால் பயனில்லை.
  • Translation
    in English
    What good can grieving do, when none who love
    Are there to know the grief thy soul endures?
  • Meaning
    What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?
1307. ஊடலின் உண்டாங்கோர் துன்பம்

1307. ஊடலின் உண்டாங்கோர் துன்பம்

1307. Oodalin Undaangor Thunbam

  • குறள் #
    1307
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி (Pulavi)
    Pouting
  • குறள்
    ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
    நீடுவ தன்றுகொல் என்று.
  • விளக்கம்
    தலைவி ஊடும்பொழுது, இனி இவளுடன் புணர்ச்சி நீட்டிக்காதோ என்ற ஏக்கம் உண்டாதலால், அவ்வூடற்கண்ணும் ஒரு துன்பம் உண்டு.
  • Translation
    in English
    A lovers’ quarrel brings its pain, when mind afraid
    Asks doubtful, ‘Will reunion sweet be long delayed?’
  • Meaning
    The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike.
1306. துனியும் புலவியும் இல்லாயின்

1306. துனியும் புலவியும் இல்லாயின்

1306. Thuniyum Pulaviyum Illaayin

  • குறள் #
    1306
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி (Pulavi)
    Pouting
  • குறள்
    துனியும் புலவியும் இல்லாயின் காமம்
    கனியும் கருக்காயும் அற்று.
  • விளக்கம்
    பெரும் பிணக்கும் சிறுபிணக்கும் இல்லையாயின் காதல் இன்பம், மிகப்பழுத்த கனியும் இளங்காயும் போலாகும்.
  • Translation
    in English
    Love without hatred is ripened fruit;
    Without some lesser strife, fruit immature.
  • Meaning
    Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit.
1305. நலத்தகை நல்லவர்க்கு ஏஎர்

1305. நலத்தகை நல்லவர்க்கு ஏஎர்

1305. Nalaththagai Nallavarkku Yeyar

  • குறள் #
    1305
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி (Pulavi)
    Pouting
  • குறள்
    நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
    பூஅன்ன கண்ணார் அகத்து.
  • விளக்கம்
    நற்குணங்களால் தகுதியுடைய தலைவர்க்கு அழகாவது, பூப்போன்ற கண்ணையுடைய பெண்ணின் மனத்திலுண்டாகும் பிணக்கமேயாகும்.
  • Translation
    in English
    Even to men of good and worthy mind, the petulance
    Of wives with flowery eyes lacks not a lovely grace.
  • Meaning
    An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands.
1304. ஊடி யவரை உணராமை

1304. ஊடி யவரை உணராமை

1304. Oodi Yavarai Unaraamai

  • குறள் #
    1304
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி (Pulavi)
    Pouting
  • குறள்
    ஊடி யவரை உணராமை வாடிய
    வள்ளி முதலரிந் தற்று.
  • விளக்கம்
    பிணங்கிய பெண்களைப் பிணக்கை நீக்கி கூடாதிருத்தல், வாடிய வள்ளிக்கொடியை அடியிலே அறுத்தார் போன்றது.
  • Translation
    in English
    To use no kind conciliating art when lover grieves,
    Is cutting out the root of tender winding plant that droops.
  • Meaning
    Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root.
1303. அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால்

1303. அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால்

1303. Alanthaarai Allalnoi Seithatraal

  • குறள் #
    1303
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி (Pulavi)
    Pouting
  • குறள்
    அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
    புலந்தாரைப் புல்லா விடல்.
  • விளக்கம்
    தம்மோடு பிணங்கிய பெண்களைப் பிணக்கினை நீக்கித் தழுவாதுவிடுதல், முன்பே துன்பமுற்று வருந்துகின்றவர்களுக்கு மேலும் துன்பம் இழைப்பது போலாகும்.
  • Translation
    in English
    ‘Tis heaping griefs on those whose hearts are grieved;
    To leave the grieving one without a fond embrace.
  • Meaning
    For men not to embrace those who have feigned dislike is like torturing those already in agony.
1302. உப்பமைந் தற்றால் புலவி

1302. உப்பமைந் தற்றால் புலவி

1302. Uppamaindh Thatraal Pulavi

  • குறள் #
    1302
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி (Pulavi)
    Pouting
  • குறள்
    உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
    மிக்கற்றால் நீள விடல்.
  • விளக்கம்
    பிணக்கம், உணவுக்குச் சுவைதரும் உப்புப் போன்றது; அதனை அளவுக்குமேல் அதிகரித்தல், உணவில் உப்புச் சிறிது மிகுந்தது போலாகும்.
  • Translation
    in English
    A cool reserve is like the salt that seasons well the mess,
    Too long maintained, ’tis like the salt’s excess.
  • Meaning
    A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much.
1301. புல்லா திராஅப் புலத்தை

1301. புல்லா திராஅப் புலத்தை

1301. Pullaa Thiraaap Pulaththai

  • குறள் #
    1301
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புலவி (Pulavi)
    Pouting
  • குறள்
    புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
    அல்லல்நோய் காண்கம் சிறிது.
  • விளக்கம்
    தலைவி! நீ காதலரோடு விரைவில் தழுவாது இருந்து பிணங்கு; அப்போது காதலை அடையும் துன்ப நோயினைச் சிறிது காண்போம்.
  • Translation
    in English
    Be still reserved, decline his profferred love;
    A little while his sore distress we ‘ll prove.
  • Meaning
    Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not.
1300. தஞ்சம் தமரல்லர் ஏதிலார்

1300. தஞ்சம் தமரல்லர் ஏதிலார்

1300. Thanjam Thamarallar Yethilaar

  • குறள் #
    1300
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
    Exploration with Oneself
  • குறள்
    தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
    நெஞ்சம் தமரல் வழி.
  • விளக்கம்
    ஒருவர்க்குத் தம்முடைய மனம் தம்மோடு இணங்காத போது, அயலவர் உறவினரல்லராதல் எளிதே.
  • Translation
    in English
    A trifle is unfriendliness by aliens shown,
    When our own heart itself is not our own!
  • Meaning
    It is hardly possible for strangers to behave like relations, when one’s own soul acts like a stranger.
1299. துன்பத்திற்கு யாரே துணையாவார்

1299. துன்பத்திற்கு யாரே துணையாவார்

1299. Thunbaththirku Yaare Thunaiyaavaar

  • குறள் #
    1299
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
    Exploration with Oneself
  • குறள்
    துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
    நெஞ்சந் துணையல் வழி.
  • விளக்கம்
    ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, அதை நீக்குதற்குத் தமது மனம் துணையாகாதபோது, வேறு துணையாவார் யார்?
  • Translation
    in English
    And who will aid me in my hour of grief,
    If my own heart comes not to my relief?
  • Meaning
    Who would help me out of one’s distress, when one’s own soul refuses help to one?
1298. எள்ளின் இளிவாம்என்று எண்ணி

1298. எள்ளின் இளிவாம்என்று எண்ணி

1298. Ellin Ilivaamendru Enni

  • குறள் #
    1298
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
    Exploration with Oneself
  • குறள்
    எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
    உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.
  • விளக்கம்
    உயிர்மேல் ஆசையுடைய என்மனம், காதலரை இழந்தால் தாழ்வு உண்டாகும் என்று கருதி, அவரது நல்ல திறங்களையே நினைக்கும்.
  • Translation
    in English
    If I contemn him, then disgrace awaits me evermore;
    My soul that seeks to live his virtues numbers o’er.
  • Meaning
    My soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him.
1297. நாணும் மறந்தேன் அவர்மறக்

1297. நாணும் மறந்தேன் அவர்மறக்

1297. Naanum Maranthen Avarmarak

  • குறள் #
    1297
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
    Exploration with Oneself
  • குறள்
    நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
    மாணா மடநெஞ்சிற் பட்டு.
  • விளக்கம்
    காதலரை மறக்கமுடியாத எனது இழிந்த அறிவில்லாத மனத்தோடு கூடி நாணத்தையும் மறந்துவிட்டேன்.
  • Translation
    in English
    Fall’n ‘neath the sway of this ignoble foolish heart,
    Which will not him forget, I have forgotten shame.
  • Meaning
    I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him.
1296. தனியே இருந்து நினைத்தக்கால்

1296. தனியே இருந்து நினைத்தக்கால்

1296. Thaniye Irundhu Ninaiththakkaal

  • குறள் #
    1296
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
    Exploration with Oneself
  • குறள்
    தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
    தினிய இருந்ததென் நெஞ்சு.
  • விளக்கம்
    காதலரைப் பிரிந்து அவரது கொடுமைகளை நினைத்தபோது என்னைத் தின்பதுபோல் வருத்துவதற்கென்றே என் மனம் இருந்தது.
  • Translation
    in English
    My heart consumes me when I ponder lone,
    And all my lover’s cruelty bemoan.
  • Meaning
    My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude.
1295. பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு

1295. பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு

1295. Peraaamai Anjum Perinpirivu

  • குறள் #
    1295
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
    Exploration with Oneself
  • குறள்
    பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
    அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
  • விளக்கம்
    தலைவரைக் காணாதபோது காணவில்லையே என்று எனது மனம் அஞ்சும்; கண்டால் அவரது பிரிவை எண்ணி அஞ்சும். இவ்வாறு என் மனம் நீங்காத துன்பமுடையது.
  • Translation
    in English
    I fear I shall not gain, I fear to lose him when I gain;
    And thus my heart endures unceasing pain.
  • Meaning
    My soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow.
1294. இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார்

1294. இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார்

1294. Inianna Ninnodu Soozhvaaryaar

  • குறள் #
    1294
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
    Exploration with Oneself
  • குறள்
    இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
    துனிசெய்து துவ்வாய்காண் மற்று.
  • விளக்கம்
    மனமே! காதலரோடு முதலில் ஊடி, பின் இன்பம் அனுபவிக்கக் கருதாய்; இனி அத்தகைய செயல் பற்றி உன்னோடு கலந்து ஆராய்பவர் யார்?
  • Translation
    in English
    ‘See, thou first show offended pride, and then submit,’ I bade;
    Henceforth such council who will share with thee my heart?
  • Meaning
    O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?
1293. கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ

1293. கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ

1293. Kettaarkku Nattaaril Enbatho

  • குறள் #
    1293
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
    Exploration with Oneself
  • குறள்
    கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
    பெட்டாங்கு அவர்பின் செலல்.
  • விளக்கம்
    மனமே! நீ விரும்பியபடி அவரிடம் செல்லுதல், உலகத்தில் கெட்டார்க்கு நண்பர் இல்லை என்ற நினைவினாலோ?
  • Translation
    in English
    ‘The ruined have no friends, ‘they say; and so, my heart,
    To follow him, at thy desire, from me thou dost depart.
  • Meaning
    O my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends?
1292. உறாஅ தவர்க்கண்ட கண்ணும்

1292. உறாஅ தவர்க்கண்ட கண்ணும்

1292. Uraaa Thavarkkanda Kannum

  • குறள் #
    1292
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
    Exploration with Oneself
  • குறள்
    உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
    செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
  • விளக்கம்
    மனமே! நம்மிடத்தில் அன்பில்லாதவரின் குணத்தை நன்றாக அறிந்த பின்னரும், யான் சென்றால் சினம் கொள்ள மாட்டார் என்று நினைத்து நீ அவரிடம் செல்கின்றாய்.
  • Translation
    in English
    ‘Tis plain, my heart, that he ‘s estranged from thee;
    Why go to him as though he were not enemy?
  • Meaning
    O my soul! although you have known him who does not love me, still do you go to him, saying “he will not be displeased.”
1291. அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும்

1291. அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும்

1291. Avarnenju Avarkkaathal Kandum

  • குறள் #
    1291
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நெஞ்சோடு புலத்தல் (Nenjodu Pulaththal)
    Exploration with Oneself
  • குறள்
    அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
    நீஎமக்கு ஆகா தது.
  • விளக்கம்
    மனமே! அவருடைய மனம் நம்மை நினையாதிருப்பதை அறிந்தும், நீ எமக்காக நில்லாமல் அவரையே நினைத்ததற்குக் காரணம் என்ன?
  • Translation
    in English
    You see his heart is his alone
    O heart, why not be all my own?
  • Meaning
    O my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me?
1290. கண்ணின் துனித்தே கலங்கினாள்

1290. கண்ணின் துனித்தே கலங்கினாள்

1290. Kannin Thuniththe Kalanginaal

  • குறள் #
    1290
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
    Desire for Reunion
  • குறள்
    கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
    என்னினும் தான்விதுப் புற்று.
  • விளக்கம்
    காதலி கண்ணினால் பிணக்கிக் கலங்கினாள்; பின்னர் அதனை மறந்து, என்னைவிட விரைவாகத் தழுவினாள்.
  • Translation
    in English
    Her eye, as I drew nigh one day, with anger shone:
    By love o’erpowered, her tenderness surpassed my own.
  • Meaning
    She once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own.
1289. மலரினும் மெல்லிது காமம்

1289. மலரினும் மெல்லிது காமம்

1289. Malarinum Mellithu Kaamam

  • குறள் #
    1289
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
    Desire for Reunion
  • குறள்
    மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
    செவ்வி தலைப்படு வார்.
  • விளக்கம்
    காதலின்பம் மலரைவிட மேல்லியதாயிருக்கும்; இவ்வாறிருப்பதை அறிந்து, அதன் நயத்தைப் பெறுகிறவர் உலகில் சிலரேயாவர்.
  • Translation
    in English
    Love is tender as an opening flower. In season due
    To gain its perfect bliss is rapture known to few.
  • Meaning
    Sexual delight is more delicate than a flower, and few are those who understand its real nature.
1288. இளித்தக்க இன்னா செயினும்

1288. இளித்தக்க இன்னா செயினும்

1288. Iliththakka Inna Seyinum

  • குறள் #
    1288
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
    Desire for Reunion
  • குறள்
    இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
    கள்ளற்றே கள்வநின் மார்பு.
  • விளக்கம்
    கள்வனே! உனது மார்பானது, உண்டுகளித்தவர்க்கு இழிவு வரத்தக்க துன்பத்தைக் கொடுத்தாலும் அவரால் விரும்பப்படும் கள்ளைப் போன்றதாகும்.
  • Translation
    in English
    Though shameful ill it works, dear is the palm-tree wine
    To drunkards; traitor, so to me that breast of thine!
  • Meaning
    O you rogue! your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasant disgrace.
1287. உய்த்தல் அறிந்து புனல்பாய்

1287. உய்த்தல் அறிந்து புனல்பாய்

1287. Uyiththal Arindhu Punalpaai

  • குறள் #
    1287
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
    Desire for Reunion
  • குறள்
    உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
    பொய்த்தல் அறிந்தென் புலந்து.
  • விளக்கம்
    தம்மை இழுத்துக் கொண்டு போகும் என்பதை அறிந்திருந்தும் ஓடுகின்ற நீரிலே குதித்தவரைப் போல, பிணக்கம் நிலையாதது என்று அறிந்தும் பிணங்குவது ஏன்?
  • Translation
    in English
    As those of rescue sure, who plunge into the stream,
    So did I anger feign, though it must falsehood seem?
  • Meaning
    Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?
1286. காணுங்கால் காணேன் தவறாய

1286. காணுங்கால் காணேன் தவறாய

1286. Kaanunkaal Kaanen Thavaraaya

  • குறள் #
    1286
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
    Desire for Reunion
  • குறள்
    காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
    காணேன் தவறல் லவை.
  • விளக்கம்
    கணவரைக் காணும்போது அவரிடத்தில் உள்ள குற்றங்களை நான் காண்பதில்லை. அவரைக் காணாதபோது, குற்றங்களல்லாதவற்றைக் காண்கின்றிலேன்.
  • Translation
    in English
    When him I see, to all his faults I ‘m blind;
    But when I see him not, nothing but faults I find.
  • Meaning
    When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults.
1285. எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல்

1285. எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல்

1285. Ezhuthunkaal Kolkaanaak Kannepol

  • குறள் #
    1285
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
    Desire for Reunion
  • குறள்
    எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
    பழிகாணேன் கண்ட இடத்து.
  • விளக்கம்
    மை தீட்டும்போது கோலைப் பார்க்க மாட்டாத கண்ணைப் போல், கணவரின் குற்றத்தை அவரைக் கண்டபோது காணமாட்டேன்.
  • Translation
    in English
    The eye sees not the rod that paints it; nor can I
    See any fault, when I behold my husband nigh.
  • Meaning
    Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband’s fault (just) when I meet him.
1284. ஊடற்கண் சென்றேன்மன் தோழி

1284. ஊடற்கண் சென்றேன்மன் தோழி

1284. Oodarkan Sendrenman Thozhi

  • குறள் #
    1284
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
    Desire for Reunion
  • குறள்
    ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
    கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.
  • விளக்கம்
    தோழியே, அவரோடு பிணங்க நினைத்துச் சென்றேன்; என் மனம் அதை மறந்து சேர்தலில் சென்றது.
  • Translation
    in English
    My friend, I went prepared to show a cool disdain;
    My heart, forgetting all, could not its love restrain.
  • Meaning
    O my friend! I was prepared to feign displeasure but my mind forgetting it was ready to embrace him.
1283. பேணாது பெட்பவே செய்யினும்

1283. பேணாது பெட்பவே செய்யினும்

1283. Penaathu Petpave Seiyinum

  • குறள் #
    1283
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
    Desire for Reunion
  • குறள்
    பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
    காணா தமையல கண்.
  • விளக்கம்
    கணவர் என்னைப் பேணாது அவமதித்துத் தாம் விரும்பியவற்றையே செய்தாலும், கணவரைப் பார்க்காமல் என் கண்களால் இருக்க முடியவில்லை.
  • Translation
    in English
    Although his will his only law, he lightly value me,
    My heart knows no repose unless my lord I see.
  • Meaning
    Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him.
1282. தினைத்துணையும் ஊடாமை வேண்டும்

1282. தினைத்துணையும் ஊடாமை வேண்டும்

1282. Thinaiththunaiyum Oodaamai Vendum

  • குறள் #
    1282
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
    Desire for Reunion
  • குறள்
    தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
    காமம் நிறைய வரின்.
  • விளக்கம்
    காதல் பனைமரத்தின் அளவுக்கு அதிகமாகத் தோன்றினாலும், தினையளவு போன்ற சிறிதளவும் ஊடல் கொள்ளாமல் இருப்பது விரும்பத்தக்கது.
  • Translation
    in English
    When as palmyra tall, fulness of perfect love we gain,
    Distrust can find no place small as the millet grain.
  • Meaning
    If women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as the millet.
1281. உள்ளக் களித்தலும் காண

1281. உள்ளக் களித்தலும் காண

1281. Ullak Kaliththalum Kaana

  • குறள் #
    1281
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    புணர்ச்சி விதும்பல் (Punarchchi Vithumbal)
    Desire for Reunion
  • குறள்
    உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
    கள்ளுக்கில் காமத்திற் குண்டு.
  • விளக்கம்
    நினைத்தவுடன் களித்தலும், கண்டவுடன் மகிழ்தலும், கள்ளினால் உண்டாவதில்லை; இவை காதலினால் உண்டாகும்.
  • Translation
    in English
    Gladness at the thought, rejoicing at the sight,
    Not palm-tree wine, but love, yields such delight.
  • Meaning
    To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust.
1280. பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப

1280. பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப

1280. Penninaal Penmai Udaiththenba

  • குறள் #
    1280
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
    The Reading of the Signs
  • குறள்
    பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
    காமநோய் சொல்லி இரவு.
  • விளக்கம்
    காதல் நோயைக் கண்களால் அறிவித்து வேண்டுதல், பெண் தன்மையிலும் சிறந்த பெண் தன்மையை உடையது என்று கூறுவர்.
  • Translation
    in English
    To show by eye the pain of love, and for relief to pray,
    Is womanhood’s most womanly device, men say.
  • Meaning
    To express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence.
1279. தொடிநோக்கி மென்தோளும் நோக்கி

1279. தொடிநோக்கி மென்தோளும் நோக்கி

1279. Thodinokki Mentholum Nokki

  • குறள் #
    1279
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
    The Reading of the Signs
  • குறள்
    தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
    அஃதாண் டவள்செய் தது.
  • விளக்கம்
    வளையல்களைப் பார்த்து, மெல்லிய தோள்களையும் பார்த்து, பாதங்களையும் பார்த்து அவள் அவ்விடத்தில் செய்தது உடன்போக்கைக் குறித்தது.
  • Translation
    in English
    She viewed her tender arms, she viewed the armlets from them slid;
    She viewed her feet: all this the lady did.
  • Meaning
    She looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there (significantly).
1278. நெருநற்றுச் சென்றார்எம் காதலர்

1278. நெருநற்றுச் சென்றார்எம் காதலர்

1278. Nerunatruch Chendraarem Kaathalar

  • குறள் #
    1278
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
    The Reading of the Signs
  • குறள்
    நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
    எழுநாளேம் மேனி பசந்து.
  • விளக்கம்
    எம் காதலர் நேற்றுத்தான் பிரிந்து சென்றார்; நாமும் உடம்பு பசலை அடைந்து ஏழு நாட்கள் ஆனதுபோல் ஆயினோம்.
  • Translation
    in English
    My loved one left me, was it yesterday?
    Days seven my pallid body wastes away!
  • Meaning
    It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow.
1277. தண்ணந் துறைவன் தணந்தமை

1277. தண்ணந் துறைவன் தணந்தமை

1277. Thannan Thuraivan Thananthamai

  • குறள் #
    1277
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
    The Reading of the Signs
  • குறள்
    தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
    முன்னம் உணர்ந்த வளை.
  • விளக்கம்
    குளிர்ந்த துறையையுடைய காதலர் நம்மை விட்டுப் பிரிய எண்ணியதை, நான் அறிவதன்முன் என் கைவளைகள் குறிப்பால் அறிந்தன.
  • Translation
    in English
    My severance from the lord of this cool shore,
    My very armlets told me long before.
  • Meaning
    My bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashore.
1276. பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல்

1276. பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல்

1276. Perithaatrip Petpak Kalaththal

  • குறள் #
    1276
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
    The Reading of the Signs
  • குறள்
    பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
    அன்பின்மை சூழ்வ துடைத்து.
  • விளக்கம்
    காதலர் மிக்க அன்பு செய்து நாம் விரும்பியவாறு கூடுவது, அவர் பிரிவினை மேற்கொண்டு அன்பு இன்றிச் செல்ல நினைக்கும் குறிப்பினை உடையது.
  • Translation
    in English
    While lovingly embracing me, his heart is only grieved:
    It makes me think that I again shall live of love bereaved.
  • Meaning
    The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love.
1275. செறிதொடி செய்திறந்த கள்ளம்

1275. செறிதொடி செய்திறந்த கள்ளம்

1275. Serithodi Seithirantha Kallam

  • குறள் #
    1275
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
    The Reading of the Signs
  • குறள்
    செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
    தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.
  • விளக்கம்
    செறிந்த வளையல் அணிந்த இவள் என்னிடம் மறைவாகச் செய்துவிட்டுச் சென்ற குறிப்பு, எனது மிகுந்த நோயைத் தீர்க்கும் மருந்து ஒன்றினை உடையது.
  • Translation
    in English
    The secret wiles of her with thronging armlets decked,
    Are medicines by which my raising grief is checked.
  • Meaning
    The well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow.
1274. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல்

1274. முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல்

1274. Mugaimokkul Ullathu Naatrampol

  • குறள் #
    1274
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
    The Reading of the Signs
  • குறள்
    முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
    நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
  • விளக்கம்
    மொட்டாக உள்ள மலரினுள் அடங்கிய நறுமணம் போல, இவளது புன்முறுவலின் தோற்றத்தில் தோன்றாது அடங்கியுள்ள குறிப்பு ஒன்று உண்டு.
  • Translation
    in English
    As fragrance in the opening bud, some secret lies
    Concealed in budding smile of this dear damsel’s eyes.
  • Meaning
    There is something in the unmatured smile of this maid like the fragrance that is contained in an unblossomed bud.
1273. மணியில் திகழ்தரு நூல்போல்

1273. மணியில் திகழ்தரு நூல்போல்

1273. Maniyil Thgazhtharu Noolpol

  • குறள் #
    1273
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
    The Reading of the Signs
  • குறள்
    மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
    அணியில் திகழ்வதொன்று உண்டு.
  • விளக்கம்
    மணியில் கோக்கப்பட்ட நூல் வெளியே தெரிவது போல, இவளது அழகில் தோன்றும் குறிப்பொன்று உண்டு.
  • Translation
    in English
    As through the crystal beads is seen the thread on which they ‘re strung
    So in her beauty gleams some thought cannot find a tongue.
  • Meaning
    There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems.
1272. கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட்

1272. கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட்

1272. Kanniraindha Kaarigaik Kaamperthot

  • குறள் #
    1272
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
    The Reading of the Signs
  • குறள்
    கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
    பெண்நிறைந்த நீர்மை பெரிது.
  • விளக்கம்
    கண் நிறைந்த அழகினையும், மூங்கில் போன்ற தொளினையுமுடைய காதலிக்கு, பெண்களிடம் நிறைந்துள்ள நல்ல குணங்கள் மிக உள்ளன.
  • Translation
    in English
    The simple one whose beauty fills mine eye, whose shoulders curve
    Like bambu stem, hath all a woman’s modest sweet reserve.
  • Meaning
    Unusually great is the female simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo.
1271. கரப்பினுங் கையிகந் தொல்லாநின்

1271. கரப்பினுங் கையிகந் தொல்லாநின்

1271. Karappinung Kaiyikand Thollaanin

  • குறள் #
    1271
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    குறிப்பறிவுறுத்தல் (Kuripparivuruththal)
    The Reading of the Signs
  • குறள்
    கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
    உரைக்கல் உறுவதொன் றுண்டு.
  • விளக்கம்
    நீ மறைக்க விரும்பினாலும் உன் மையுண்ட கண்கள் உன்னை மீறி எனக்குச் சொல்ல விரும்புவது ஒன்று உண்டு.
  • Translation
    in English
    Thou hid’st it, yet thine eye, disdaining all restraint,
    Something, I know not, what, would utter of complaint.
  • Meaning
    Though you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something.
1270. பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம்

1270. பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம்

1270. Perinennaam Petrakkaal Ennaaam

  • குறள் #
    1270
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
    Mutual Desire
  • குறள்
    பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
    உள்ளம் உடைந்துக்கக் கால்.
  • விளக்கம்
    பிரிவாற்றாமல் மனம் உடைந்து காதலி இறப்பாளாயின், பின் அவள் என்னைப் பெறுவதனால் என்ன பயன்? பெற்றால் தான் என்ன பயன்? தழுவினால் தான் என்ன பயன்?
  • Translation
    in English
    What’s my return, the meeting hour, the wished-for greeting worth,
    If she heart-broken lie, with all her life poured forth?
  • Meaning
    After (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me?
1269. ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண்

1269. ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண்

1269. Orunaal Ezhunaalpol Sellumsen

  • குறள் #
    1269
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
    Mutual Desire
  • குறள்
    ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
    வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.
  • விளக்கம்
    தூரதேசம் சென்ற காதலர் திரும்ப வரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு, ஒருநாள் கழிவது ஏழு நாள் கழிவது போலத் தோன்றும்.
  • Translation
    in English
    One day will seem like seven to those who watch and yearn
    For that glad day when wanderers from afar return.
  • Meaning
    To those who suffer waiting for the day of return of their distant lovers one day is as long as seven days.
1268. வினைகலந்து வென்றீக வேந்தன்

1268. வினைகலந்து வென்றீக வேந்தன்

1268. Vinaikalanthu Venreega Venthan

  • குறள் #
    1268
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
    Mutual Desire
  • குறள்
    வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
    மாலை அயர்கம் விருந்து.
  • விளக்கம்
    அரசன் போர் செய்து வெற்றி பெறுவானாக; நானும் என் காதலியை அடைந்து மாலைக் காலத்தில் விருந்து உண்பேனாக.
  • Translation
    in English
    O would my king would fight, o’ercome, devide the spoil;
    At home, to-night, the banquet spread should crown the toil.
  • Meaning
    Let the king fight and gain (victories); (but) let me be united to my wife and feast the evening.
1267. புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ

1267. புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ

1267. Pulappenkol Pulluven Kollo

  • குறள் #
    1267
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
    Mutual Desire
  • குறள்
    புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
    கண்அன்ன கேளிர் விரன்.
  • விளக்கம்
    கண்போற் சிறந்த காதலர் வந்தால், நான் அப்பொழுது பிணங்குவேனோ, தழுவுவேனோ; அல்லது இரண்டையும் கலந்து செய்வேனோ தெரியவில்லை.
  • Translation
    in English
    Shall I draw back, or yield myself, or shall both mingled be,
    When he returns, my spouse, dear as these eyes to me.
  • Meaning
    On the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both?
1266. வருகமன் கொண்கன் ஒருநாள்

1266. வருகமன் கொண்கன் ஒருநாள்

1266. Varukaman Konkan Orunaal

  • குறள் #
    1266
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
    Mutual Desire
  • குறள்
    வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
    பைதல்நோய் எல்லாம் கெட.
  • விளக்கம்
    என் கணவன் என்றேனும் ஒருநாள் வருவானாக; வந்தால் இத்துன்பம் தரும் நோயெல்லாம் கெடுமாறு இன்பம் அனுபவிப்பேன்.
  • Translation
    in English
    O let my spouse but come again to me one day!
    I’ll drink that nectar: wasting grief shall flee away.
  • Meaning
    May my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow.
1265. காண்கமன் கொண்கனைக் கண்ணாரக்

1265. காண்கமன் கொண்கனைக் கண்ணாரக்

1265. Kaankaman Konkanaik Kannaarak

  • குறள் #
    1265
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
    Mutual Desire
  • குறள்
    காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
    நீங்கும்என் மென்தோள் பசப்பு.
  • விளக்கம்
    நான் என் கணவரைக் கண்ணாரக் காண்பேனாக; அவ்வாறு கண்டால் என் மெல்லிய தோலின் மீதுள்ள பசலை நீங்கும்.
  • Translation
    in English
    O let me see my spouse again and sate these longing eyes!
    That instant from my wasted frame all pallor flies.
  • Meaning
    May I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders.
1264. கூடிய காமம் பிரிந்தார்

1264. கூடிய காமம் பிரிந்தார்

1264. Koodiya Kaamam Pirindhaar

  • குறள் #
    1264
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
    Mutual Desire
  • குறள்
    கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
    கோடுகொ டேறுமென் நெஞ்சு.
  • விளக்கம்
    பிரிந்தவர் காதலால் கூடும்படி வருவார் என்று நினைத்து எனது மனம் மரத்தின் கிளை மீது ஏறிப் பார்க்கின்றது.
  • Translation
    in English
    ‘He comes again, who left my side, and I shall taste love’s joy,’-
    My heart with rapture swells, when thoughts like these my mind employ.
  • Meaning
    My heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his love.
1263. உரன்நசைஇ உள்ளம் துணையாகச்

1263. உரன்நசைஇ உள்ளம் துணையாகச்

1263. Urannasaie ullam Thunaiyaagach

  • குறள் #
    1263
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
    Mutual Desire
  • குறள்
    உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
    வரல்நசைஇ இன்னும் உளேன்.
  • விளக்கம்
    இன்பத்தைத் விரும்பாது வெற்றியை விரும்பித் தமது ஊக்கத்தைத் துணைக்கொண்டு சென்றவர், மீண்டும் வருவதை விரும்பி நான் உயிரை வைத்துக் கொண்டிருக்கின்றேன்.
  • Translation
    in English
    On victory intent, His mind sole company he went;
    And I yet life sustain! And long to see his face again!
  • Meaning
    I still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guide.
1262. இலங்கிழாய் இன்று மறப்பின்என்

1262. இலங்கிழாய் இன்று மறப்பின்என்

1262. Ilankizhaai Indru Marappinen

  • குறள் #
    1262
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
    Mutual Desire
  • குறள்
    இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
    கலங்கழியும் காரிகை நீத்து.
  • விளக்கம்
    விளக்குகின்ற அணி அணிந்த தோழியே! இன்று என் காதலரை மறந்ததால், என் தோள்கள் அழகினை இழந்து மெலியும்; அதனால் வளையல்கள் கழன்று விடும்.
  • Translation
    in English
    O thou with gleaming jewels decked, could I forget for this one day,
    Henceforth these bracelets from my arms will slip, my beauty worn away.
  • Meaning
    O you bright-jewelled maid, if I forget (him) today, my shoulders will lose their beauty even in the other life and make my bracelets loose.
1261. வாளற்றுப் புற்கென்ற கண்ணும்

1261. வாளற்றுப் புற்கென்ற கண்ணும்

1261. Vaalatrup Purkendra Kannum

  • குறள் #
    1261
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    அவர்வயின் விதும்பல் (Avarvayin Vithumbal)
    Mutual Desire
  • குறள்
    வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
    நாளொற்றித் தேய்ந்த விரல்.
  • விளக்கம்
    காதலர் சென்ற நாட்களை உணர்த்தும் கோடுகளைத் தொட்டு எண்ணியமையால் என் விரல்கள் தேய்ந்தன. அவரது வருகையை எதிர்பார்த்து என் கண்களும் ஒளியிழந்து மங்கின.
  • Translation
    in English
    My eyes have lost their brightness, sight is dimmed; my fingers worn,
    With nothing on the wall the days since I was left forlorn.
  • Meaning
    My finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail.
1260. நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு

1260. நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு

1260. Ninantheeyil Ittanna Nenchinaarkku

  • குறள் #
    1260
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நிறையழிதல் (Niraiyazhithal)
    Reserve Overcome
  • குறள்
    நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
    புணர்ந்தூடி நிற்பேம் எனல்.
  • விளக்கம்
    கொழுப்பைத் தீயிலிட்டால் உருகுவது போன்ற நெஞ்சுடையவருக்கு, கூடி அதன்பின் ஓடி இருப்போம் என்னும் உறுதிப்பாடு உண்டோ?
  • Translation
    in English
    ‘We ‘ll stand aloof and then embrace’: is this for them to say,
    Whose hearts are as the fat that in the blaze dissolves away?
  • Meaning
    Is it possible for those whose hearts melt like fat in the fire to say they can feign a strong dislike and remain so?
1259. புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன்

1259. புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன்

1259. Pulappal Enachchendren Pullinen

  • குறள் #
    1259
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நிறையழிதல் (Niraiyazhithal)
    Reserve Overcome
  • குறள்
    புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
    கலத்தல் உறுவது கண்டு.
  • விளக்கம்
    அவரோடு பிணங்குவேன் என்று நினைத்துச் சென்றேன்; என் மனம் அவரோடு கலக்கத் தொடங்குவதை அறிந்து தழுவிக் கொண்டேன்.
  • Translation
    in English
    ‘I ‘ll shun his greeting’; saying thus with pride away I went:
    I held him in my arms, for straight I felt my heart relent.
  • Meaning
    I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him!
1258. பன்மாயக் கள்வன் பணிமொழி

1258. பன்மாயக் கள்வன் பணிமொழி

1258. Panmaayak Kalvan Panimozhi

  • குறள் #
    1258
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நிறையழிதல் (Niraiyazhithal)
    Reserve Overcome
  • குறள்
    பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
    பெண்மை உடைக்கும் படை.
  • விளக்கம்
    நமது மன அடக்கத்தை உடைக்கின்ற ஆயுதம், பல பொய் பேசவல்ல காதலனான கள்வனுடைய தாழ்ந்த சொற்களல்லவா?
  • Translation
    in English
    The words of that deceiver, versed in every wily art,
    Are instruments that break through every guard of woman’s heart!
  • Meaning
    Are not the enticing words of my trick-abounding roguish lover the weapon that breaks away my feminine firmness?
1257. நாணென ஒன்றோ அறியலம்

1257. நாணென ஒன்றோ அறியலம்

1257. Naanena Ondro Ariyalam

  • குறள் #
    1257
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நிறையழிதல் (Niraiyazhithal)
    Reserve Overcome
  • குறள்
    நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
    பேணியார் பெட்ப செயின்.
  • விளக்கம்
    நம்மால் விரும்பப்பட்டவர், காதலினால் நாம் விரும்பியவற்றைச் செய்வாரானால் நாணம் என்ற ஒன்றை அறிய மாட்டோம்.
  • Translation
    in English
    No sense of shame my gladdened mind shall prove,
    When he returns my longing heart to bless with love.
  • Meaning
    I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me).
1256. செற்றவர் பின்சேறல் வேண்டி

1256. செற்றவர் பின்சேறல் வேண்டி

1256. Setravar Pinseral Vendi

  • குறள் #
    1256
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நிறையழிதல் (Niraiyazhithal)
    Reserve Overcome
  • குறள்
    செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
    எற்றென்னை உற்ற துயர்.
  • விளக்கம்
    பிரிந்தவர் பின்னே செல்லும்படி செய்வதற்கு என்னை அடைந்த துன்பம் எத்தன்மை உடையது! இது மிகவும் இரங்கத்தக்கது.
  • Translation
    in English
    My grief how full of grace, I pray you see!
    It seeks to follow him that hateth me.
  • Meaning
    The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?
1255. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை

1255. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை

1255. Setraarpin Sellaap Perundhagaimai

  • குறள் #
    1255
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நிறையழிதல் (Niraiyazhithal)
    Reserve Overcome
  • குறள்
    செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
    உற்றார் அறிவதொன்று அன்று.
  • விளக்கம்
    பிரிந்தவர் பின்னே செல்லாது நிற்கும் பெருந்தன்மை, காதல் நோய் அடைந்தவரால் அறியப்படுவதொன்று அன்று.
  • Translation
    in English
    The dignity that seeks not him who acts as foe,
    Is the one thing that loving heart can never know.
  • Meaning
    The dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love.
1254. நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன்

1254. நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன்

1254. Niraiyudaiyen Enbenman Yaanoen

  • குறள் #
    1254
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நிறையழிதல் (Niraiyazhithal)
    Reserve Overcome
  • குறள்
    நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
    மறையிறந்து மன்று படும்.
  • விளக்கம்
    நான் அடக்கமுடையவள் என்று என்னை நினைத்திருந்தேன். எனது காதல் மறைத்தலைக் கடந்து பலருமறிய வெளிப்படுகின்றது.
  • Translation
    in English
    In womanly reserve I deemed myself beyond assail;
    But love will come abroad, and casts away the veil.
  • Meaning
    I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public.
1253. மறைப்பேன்மன் காமத்தை யானோ

1253. மறைப்பேன்மன் காமத்தை யானோ

1253. Maraippenman Kamaththai Yaano

  • குறள் #
    1253
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நிறையழிதல் (Niraiyazhithal)
    Reserve Overcome
  • குறள்
    மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
    தும்மல்போல் தோன்றி விடும்.
  • விளக்கம்
    நான் இந்தக் காதலை மறைக்க முயல்வேன்; ஆனால் அஃது என் எண்ணத்தின்படி அடங்கி நில்லாது தும்மல் போலத் தானே வெளிப்ப்பட்டு விடுகின்றது.
  • Translation
    in English
    I would my love conceal, but like a sneeze
    It shows itself, and gives no warning sign.
  • Meaning
    I would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze.
1252. காமம் எனவொன்றோ கண்ணின்றென்

1252. காமம் எனவொன்றோ கண்ணின்றென்

1252. Kaamam Enavendro Kanninren

  • குறள் #
    1252
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நிறையழிதல் (Niraiyazhithal)
    Reserve Overcome
  • குறள்
    காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
    யாமத்தும் ஆளும் தொழில்.
  • விளக்கம்
    காதல் என்று சொல்லப்பட்ட ஒன்று, இரக்கமில்லாதது; நடு இரவிலும் என் மனத்தைத் துன்பப்படுத்தலாகிய தொழிலை மேற்கொள்ளச் செய்கின்றது.
  • Translation
    in English
    What men call love is the one thing of merciless power;
    It gives my soul no rest, e’en in the midnight hour.
  • Meaning
    Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy.
1251. காமக் கணிச்சி உடைக்கும்

1251. காமக் கணிச்சி உடைக்கும்

1251. Kaamak Kanichchi Udaikkum

  • குறள் #
    1251
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நிறையழிதல் (Niraiyazhithal)
    Reserve Overcome
  • குறள்
    காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
    நாணுத்தாழ் வீழ்த்த கதவு.
  • விளக்கம்
    நாணம் என்னும் தாழ் இடப்பெற்ற மனஅடக்கம் என்னும் கதவை, காதல் என்னும் கோடரி உடைக்கும்.
  • Translation
    in English
    Of womanly reserve love’s axe breaks through the door,
    Barred by the bolt of shame before.
  • Meaning
    The axe of lust can break the door of chastity which is bolted with the bolt of modesty.
1250. துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து

1250. துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து

1250. Thunnaath Thuranthaarai Nenjaththu

  • குறள் #
    1250
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
    Soliloquy
  • குறள்
    துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
    இன்னும் இழத்தும் கவின்.
  • விளக்கம்
    கூடாமல் பிரிந்து சென்றவரை மனத்தில் வைத்திருப்போமானால் இன்னும் அழகை இழப்போம்.
  • Translation
    in English
    If I should keep in mind the man who utterly renounces me,
    My soul must suffer further loss of dignity.
  • Meaning
    If I retain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward) beauty that remains.
1249. உள்ளத்தார் காத லவரால்

1249. உள்ளத்தார் காத லவரால்

1249. Ullaththaar Kaatha Lavaraal

  • குறள் #
    1249
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
    Soliloquy
  • குறள்
    உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
    யாருழைச் சேறியென் நெஞ்சு.
  • விளக்கம்
    என் மனமே! காதலர் உன்னுள்ளே இருக்க, நீ அவரைத் தேடி எங்கே செல்கின்றாய்?
  • Translation
    in English
    My heart! my lover lives within my mind;
    Roaming, whom dost thou think to find?
  • Meaning
    O my soul! to whom would you repair, while the dear one is within yourself?
1248. பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப்

1248. பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப்

1248. Parindhavar Nalgaarendru Yengip

  • குறள் #
    1248
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
    Soliloquy
  • குறள்
    பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
    பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.
  • விளக்கம்
    எனது மனமே! அவர் இறக்கம் கொண்டு வந்து அருள் செய்யார் என்று நினைத்து, அவர் பின்னே ஏங்கிச் செல்கின்றாய்; நீ அறிவிலாதாய்.
  • Translation
    in English
    Thou art befooled, my heart, thou followest him who flees from thee;
    And still thou yearning criest: ‘He will nor pity show nor love to me.’
  • Meaning
    You are a fool, O my soul! to go after my departed one, while you mourn that he is not kind enough tofavour you.
1247. காமம் விடுஒன்றோ நாண்விடு

1247. காமம் விடுஒன்றோ நாண்விடு

1247. Kaamam Viduondro Naanvidu

  • குறள் #
    1247
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
    Soliloquy
  • குறள்
    காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
    யானோ பொறேன்இவ் விரண்டு.
  • விளக்கம்
    நல்ல மனமே! ஒன்று காமத்தை விட்டுவிடு; அல்லது நாணத்தை விட்டுவிடு; ஒன்றுக்கொன்று மாறுபட்ட இவ்விரண்டையும் நான் தாங்கமாட்டேன்.
  • Translation
    in English
    Or bid thy love, or bid thy shame depart;
    For me, I cannot bear them both, my worthy heart!
  • Meaning
    O my good soul, give up either lust or honour, as for me I can endure neither.
1246. கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற்

1246. கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற்

1246. Kalanthunarththum Kaathalark Kandaar

  • குறள் #
    1246
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
    Soliloquy
  • குறள்
    கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
    பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.
  • விளக்கம்
    மனமே! நம்மைச் சேர்ந்து ஊடலை நீக்குகின்ற காதலரைக் கண்டால் ஒருபோதும் வெறுக்காத நீ, இப்போது அவரைக் கொடியவர் என்று பொய்யாக வெறுக்கின்றாய்!
  • Translation
    in English
    My heart, false is the fire that burns; thou canst not wrath maintain,
    If thou thy love behold, embracing, soothing all thy pain.
  • Meaning
    O my soul! when you see the dear one who remove dislike by intercourse, you are displeased and continue to be so. Nay, your displeasure is (simply) false.
1245. செற்றார் எனக்கை விடல்உண்டோ

1245. செற்றார் எனக்கை விடல்உண்டோ

1245. Setraar Enakkai Vidalundo

  • குறள் #
    1245
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
    Soliloquy
  • குறள்
    செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
    உற்றால் உறாஅ தவர்.
  • விளக்கம்
    மனமே! நாம் விரும்ப, நம்மை விரும்பாத அவர், நம்மை வெறுத்தார் என்று, நாமும் அவரைக் கைவிட முடியுமோ?
  • Translation
    in English
    O heart, as a foe, can I abandon utterly
    Him who, though I long for him, longs not for me?
  • Meaning
    O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)?
1244. கண்ணும் கொளச்சேறி நெஞ்சே

1244. கண்ணும் கொளச்சேறி நெஞ்சே

1244. Kannum Kolachcheri Nenje

  • குறள் #
    1244
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
    Soliloquy
  • குறள்
    கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
    தின்னும் அவர்க்காணல் உற்று.
  • விளக்கம்
    மனமே! நீ அவரிடம் சென்றால் இக்கண்களையும் உடன் கொண்டு செல்; இக்கண்கள் அவரைக் காண விரும்பி எனைத் தின்பவை போல் வருத்துகின்றன.
  • Translation
    in English
    O rid me of these eyes, my heart; for they,
    Longing to see him, wear my life away.
  • Meaning
    O my soul! take my eyes also with you, (if not), these would eat me up (in their desire) to see him.
1243. இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே

1243. இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே

1243. Irunthulli Enbarithal Nenje

  • குறள் #
    1243
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
    Soliloquy
  • குறள்
    இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
    பைதல்நோய் செய்தார்கண் இல்.
  • விளக்கம்
    மனமே! நீ இருந்து நினைத்து வருந்துவது ஏன்? இம்மிகுந்த நோய் செய்தவரிடத்தில் நம்மை நினைத்து வருந்தும் நன்மை இல்லையே!
  • Translation
    in English
    What comes of sitting here in pining thought, O heart? He knows
    No pitying thought, the cause of all these wasting woes.
  • Meaning
    O my soul! why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow.
1242. காதல் அவரிலர் ஆகநீ

1242. காதல் அவரிலர் ஆகநீ

1242. Kaathal Avarilar Aaganee

  • குறள் #
    1242
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
    Soliloquy
  • குறள்
    காதல் அவரிலர் ஆகநீ நோவது
    பேதைமை வாழியென் நெஞ்சு.
  • விளக்கம்
    எனது மனமே! வாழ்வாயாக! அவர் ஆசையில்லாமளிருக்க, நீ அவரது வருகையை எதிர்பார்த்து வருந்துவது அறியாமை.
  • Translation
    in English
    Since he loves not, thy smart
    Is folly, fare thee well my heart!
  • Meaning
    May you live, O my soul! While he is without love, for you to suffer is (simple) folly.
1241. நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே

1241. நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே

1241. Ninaiththondru Sollaayo Nenje

  • குறள் #
    1241
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    நெஞ்சோடு கிளத்தல் (Nenchodu Kilaththal)
    Soliloquy
  • குறள்
    நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
    எவ்வநோய் தீர்க்கும் மருந்து.
  • விளக்கம்
    மனமே! என்னுடைய தீராத நோயைத் தீர்க்கும் மருந்து ஒன்றை, எத்தகைய தொன்றாயினும் அறிந்து சொல்லமாட்டாயோ?
  • Translation
    in English
    My heart, canst thou not thinking of some med’cine tell,
    Not any one, to drive away this grief incurable?
  • Meaning
    O my soul, will you not think and tell me some medicine be it what it may, that can cure this incurable malady?
1240. கண்ணின் பசப்போ பருவரல்

1240. கண்ணின் பசப்போ பருவரல்

1240. Kannin Pasappo Paruvaral

  • குறள் #
    1240
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
    Wasting Away
  • குறள்
    கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
    ஒண்ணுதல் செய்தது கண்டு.
  • விளக்கம்
    ஒளிபொருந்திய நெற்றியில் உண்டான நிற வேறுபாட்டைக் கண்டு கண்கள் பசப்புற்றுத் துன்பம் அடைந்தன.
  • Translation
    in English
    The dimness of her eye felt sorrow now,
    Beholding what was done by that bright brow.
  • Meaning
    Was it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad?
1239. முயக்கிடைத் தண்வளி போழப்

1239. முயக்கிடைத் தண்வளி போழப்

1239. Muyakkidaith Thanvali Pozhap

  • குறள் #
    1239
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
    Wasting Away
  • குறள்
    முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
    பேதை பெருமழைக் கண்.
  • விளக்கம்
    தழுவுதளுக்கிடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால், அவளது பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் வேறுபட்டன; இப்பொழுது அவை என்ன ஆயினவோ?
  • Translation
    in English
    As we embraced a breath of wind found entrance there;
    The maid’s large liquid eyes were dimmed with care.
  • Meaning
    When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow.
1238. முயங்கிய கைகளை ஊக்கப்

1238. முயங்கிய கைகளை ஊக்கப்

1238. Muyangiya Kaikalai Ookkap

  • குறள் #
    1238
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
    Wasting Away
  • குறள்
    முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
    பைந்தொடிப் பேதை நுதல்.
  • விளக்கம்
    தழுவிய கைகளைத் தளர்த்தியவுடன், பசுமையான பொன்வளை அணிந்த பெண்ணின் நெற்றி நிறம் வெளுத்தது; இப்பிரிவுக்கு அவள் என்ன ஆனாலோ? (இது தலைவன் கூற்று).
  • Translation
    in English
    One day the fervent pressure of embracing arms I checked,
    Grew wan the forehead of the maid with golden armlet decked.
  • Meaning
    When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow.
1237. பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்

1237. பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்

1237. Paaduperuthiyo Nenche Kodiyaarkken

  • குறள் #
    1237
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
    Wasting Away
  • குறள்
    பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட்
    பூசல் உரைத்து.
  • விளக்கம்
    மனமே! கொடியவர்க்கு என் வாடுகின்ற தோள்களினால் உண்டாகின்ற ஆரவாரத்தைச் சொல்லிப் பெருமை கொள்ள மாட்டாயோ?
  • Translation
    in English
    My heart! say ought of glory wilt thou gain,
    If to that cruel one thou of thy wasted arms complain?
  • Meaning
    Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?
1236. தொடியொடு தோள்நெகிழ நோவல்

1236. தொடியொடு தோள்நெகிழ நோவல்

1236. Thodiyodu Tholnegizha Noval

  • குறள் #
    1236
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
    Wasting Away
  • குறள்
    தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
    கொடியர் எனக்கூறல் நொந்து.
  • விளக்கம்
    ‘வளைகள் கழலும்படி தோள்கள் வாடியதைக் கண்டு நீ அவரைக் கொடியவர் என்று சொல்லாதே; நீ அவ்வாறு சொல்லக் கேட்டுப் பொறுக்காமல் வருந்துகின்றேன்’, எனத் தலைவி தோழிக்குச் சொன்னாள்.
  • Translation
    in English
    I grieve, ’tis pain to me to hear him cruel chid,
    Because the armlet from my wasted arm has slid.
  • Meaning
    I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened.
1235. கொடியார் கொடுமை உரைக்கும்

1235. கொடியார் கொடுமை உரைக்கும்

1235. Kodiyaar Kodumai Uraikkum

  • குறள் #
    1235
  • பால்
    இன்பத்துப்பால் (Inbaththuppaal) – Love
  • இயல்
    கற்பியல் (Karpiyal) – The Post-Marital Love
  • அதிகாரம்
    உறுப்புநலன் அழிதல் (Uruppunalan Azhithal)
    Wasting Away
  • குறள்
    கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
    தொல்கவின் வாடிய தோள்.
  • விளக்கம்
    வளையல்கள் கழன்று பழைய இயற்கையழகிழந்த இத்தோல்கள், கொடிய காதலரின் கொடுமையை எடுத்துரைக்கின்றன.
  • Translation
    in English
    These wasted arms, the bracelet with their wonted beauty gone,
    The cruelty declare of that most cruel one.
  • Meaning
    The (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty of the pitiless one.