Month: August 2014

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் தம்மை குழந்தைகளாக வியாபித்தல்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் தம்மை குழந்தைகளாக வியாபித்தல்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் கம்சனை வதம் செய்துவிட்டு, கம்சனின் சகோதரர்கள் கொல்லப்பட்டதன் பின் கம்சனால் சிறைப்படுத்தப் பட்டிருந்த தம் தாய் தந்தையரான வசுதேவரையும் தேவகியையும் விடுவித்தார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் அவர்களின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்கள்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களின் மகனாகப் பிறந்த காரணத்தால் அவர்கள் மிகுந்த தொல்லைகளுக்கு உள்ளாக நேரிட்டது. ஏனெனில் தேவகியின் எட்டாவது குழந்தை கம்சனைக் கொல்லும் என்று வசுதேவர், தேவகியின் திருமண ஊர்வலத்தன்று ஆகாயத்திலிருந்து அசரீரி கூறிற்று. அதன் காரணமாகவே கம்சன் அவர்களைத் துன்புறுத்தினான்.

தேவகியும் வசுதேவரும் கிருஷ்ணர் முழுமுதற் கடவுள் என்பதை நன்கு அறிந்திருந்தார்கள். எனவே கிருஷ்ணர் அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்கினாலும் அவர்கள் அவரைத் தழுவிக் கொள்ளாமல் முழுமுதற் கடவுள் சொல்வதைக் கேட்பதற்கு ஆவலாய் நின்றிருந்தார்கள். வசுதேவரும் தேவகியும் மிகுந்த மரியாதையுடன் நின்று கொண்டிருந்ததைக் கண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவர்கள் தம்மையும் பலராமரையும் குழந்தைகளாகக் காணும்படி தம் யோகமாயையை வியாபிக்கச் செய்தார். அதன்பின் வசுதேவர் மற்றும் தேவகியுடன் மிகுந்த மரியாதையுடன் பேசலானார்:

அன்புள்ள தந்தையே, தாயே எங்கள் உயிரைப் பற்றி நீங்கள் இருவரும் மிகவும் கவலைப்பட்டிருந்தாலும், எங்களை உங்கள் குழந்தைகளாக, வளர்ந்து வரும் சிறுவர்களாக, இளைஞர்களாக நீங்கள் காணும் இன்பம் உங்களுக்கு இல்லாமல் போய்விட்டது. என்று கூறினார்.

வசுதேவரும் தேவகியும் தம் மகன்களான கிருஷ்ணர் மற்றும் பலராமரின் பாதுகாப்பில் மிகுந்த கவலை கொண்டிருந்தார்கள். அதன் காரணமாகவே கிருஷ்ணர் தோன்றியவுடன் அவரை நந்தமகாராஜாவின் இல்லத்திற்கு இடம் மாற்றினார்கள். பலராரும் தேவகியின் கர்ப்பத்திலிருந்து ரோகிணியின் கர்ப்பத்துக்கு மாற்றப்பட்டார். கிருஷ்ணரும் பலராமரும் பத்திரமாக இருக்க வேண்டுமென்று வசுதேவரும் தேவகியும் எண்ணியதால் அவர்களின் குழந்தைப் பருவ லீலைகளை உடனிருந்து கண்டு மகிழ முடியாமற் போயிற்று.

69-krsna-balaramacrop557x281

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் கூறினார்: துரதிஷ்ட வசமாக எங்கள் விதியின்படி, நாங்கள் எங்கள் பெற்றோர்களின் பார்வையில் பால்ய காலத்தை எங்கள் வீட்டில் கழித்து மகிழ முடியாமல் போயிற்று. அன்புள்ள தாய் தந்தையரே, பௌதிக இருப்பின் நன்மைகளைப் பெற்று அனுபவிக்கும் வாய்ப்பைத் தரும் இவ்வுடலை அளித்த பெற்றோர்களுக்கு ஒருவன் செலுத்த வேண்டிய நன்றிக் கடன் உண்டு. வேதக் கோட்பாட்டின்படி, மனித வாழ்வு ஒருவன் மதச் சடங்குகளை நிறைவேற்றவும், விருப்பங்களைப் பூர்த்தி செய்யவும், செல்வங்களைப் பெறவும் உதவுகிறது.

ஜட வாழ்விலிருந்து விடுதலை பெறுவதும் இம் மனித வாழ்வில் மட்டுமே சாத்தியமாகிறது. தாய் தந்தையரின் கூட்டுறவால் இவ்வுடல் உருப்பெறுகிறது. ஒவ்வொரு மனிதனும் தன் தாய் தந்தைக்குக் கடமைப்பட்டவன். அக்கடனை அவனால் தீர்க்க முடியாதென்பதையும் அவன் உணரவேண்டும். வளர்ந்த பின் தன் தாய் தந்தையருக்குத் திருப்தி தரும் வகையில் நடந்து கொள்ளாதவன், அல்லது அவர்களுக்குத் தேவையான பொருளுக்கு ஏற்பாடு செய்யாதவன் மரணத்துக்குப் பின் தன் சதையைத் தானே உண்ணும் தண்டனையைப் பெறுவது நிச்சயம்.

வயதான பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும், ஆன்மீக குருவுக்கும், பிராமணர்களுக்கும், தன்னைச் சார்ந்திருக்கும் பிறருக்கும் உதவக் கூடிய நிலையில் இருந்தும் உதவாமல் போனால் அவன் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாலும் மரித்தவனாகவே கருதப்படுகிறான். அன்புள்ள தாய் தந்தையரே, எங்கள் பாதுகாப்பில் எப்போதும் நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறீர்கள். ஆனால் துரதிஷ்ட வசமாக நாங்கள் உங்களுக்கு எவ்விதமான சேவையையும் செய்ய முடியாமற் போய்விட்டது. இன்றுவரை எங்கள் காலமெல்லாம் வீணாகிவிட்டது. எங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் நாங்கள் உங்களுக்குச் சேவை செய்ய இயலவில்லை. எனவே இந்தத் தவறுக்கு நீங்கள் எங்களை மன்னிக்க வேண்டும்.

இவ்வாறு முழுமுதற் கடவுள் அறியாத ஒரு குழந்தையைப் போல் இனிய சொற்களில் பேசுவதைக் கேட்ட வசுதேவரும் தேவகியும் குழந்தைப் பாசத்தால் உந்தப்பட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் கிருஷ்ணரையும் பலராமரையும் தழுவிக் கொண்டார்கள். கிருஷ்ணரின் சொற்களைக் கேட்டு ஆச்சரியத்தில் மூழ்கியவர்களாய் அவர்கள் பேசவோ, கிருஷ்ணருக்குப் பதில் கூறவோ இயலாமற் போனார்கள். அவர்கள் இருவரையும் அன்புடன் தழுவிக் கொண்டு இடைவிடாது கண்ணீர் விட்டபடி இருந்தார்கள்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – கம்சனின் எட்டு சகோதரர்கள் கொல்லப்படுதல்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – கம்சனின் எட்டு சகோதரர்கள் கொல்லப்படுதல்

கம்சனுக்கு எட்டு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களுள் மூத்தவர் கங்கர். எல்லோரும் கம்சனுக்கு இளையவர்கள். தம் மூத்த சகோதரனான கம்சன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கொல்லப் பட்டதை அறிந்ததும் அவர்கள் ஒன்று கூடிப் பெருங் கோபத்துடன் கிருஷ்ணரைத் தாக்கிக் கொல்ல விரைந்தார்கள். கம்சனும் அவனின் சகோதரர்களும் கிருஷ்ணரின் தாய் மாமன்மார் ஆவார்கள். அதாவது தேவகியின் சகோதரர்கள். எனவே கிருஷ்ணர் கொன்றது தனது தாய்மாமனான கம்சனை. இது வேதப் பண்பாடுகளுக்குப் புறம்பானது. கிருஷ்ணர் வேதக் கட்டளைகளுக்கு அப்பாற் பட்டவரென்றாலும், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டும் அவர் வேதக் கோட்பாடுகளை மீறுகிறார்.

கம்சனை வேறு யாராலும் கொல்ல முடியாதாகையால் கிருஷ்ணர் அவனைக் கொல்ல வேண்டியதாயிற்று. கம்சனின் எட்டு சகோதரர்களைப் பொறுத்தவரை பலராமர் அவர்களைக் கொன்றார். பலராமரின் தாயாகிய ரோகிணி வசுதேவரின் மனைவியானாலும் கம்சனின் சகோதரி அல்ல. பலராமர் கைக்கெட்டிய ஆயதத்தைக் கொண்டு, சிங்கம், மான் கூட்டத்தை கொல்வது போல் கம்சனின் சகோதரர்களை ஒருவர் பின் ஒருவராகக் கொன்றார். இவ்வாறு கிருஷ்ணரும் பலராமரும், பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷணர் உறுதி செய்ததுபோல், பக்தர்களைக் காத்து, தேவர்களின் பகைவர்களான துஷ்ட அரக்கர்களை அழித்து தர்மத்தை நிலை நிறுத்துவதற்காக முழுமுதற் கடவுள் அவதரிக்கிறார் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள்.

kamsan

உயர் நிலைக் கிரகங்களில் இருந்த தேவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரையும் பலராமரையும் பாராட்டி மலர் மாரி பொழிந்தார்கள். கம்சன் மற்றும் அவனின் எட்டு சகோதரர்களின் மனைவியர் தம் கணவர்களின் திடீர் மரணத்தால் துக்கமடைந்து, கண்ணீர் வடித்தார்கள். தங்கள் கணவர்களின் உடல்களைக் கைகளில் அணைத்தபடி உரக்கக் கதறி அழுதார்கள். இறந்த சடலங்களுடன் அவர்கள் இவ்வாறு பேசினார்கள்:

அண்பார்ந்த கணவரே, நீங்கள் அன்பு மிகுந்து உங்களைச் சார்ந்தவர்களுக்கு ஆதரவாயிருந்தீர்கள். இப்போது உங்கள் மரணத்துக்குப் பின் நாங்களும் இறந்தவர்களாகி விட்டோம். எங்கள் மங்கலம் பறிக்கப்பட்டு விட்டது. உங்களது மரணத்தால் தனுர் யாகம் போன்ற மங்கள காரியங்களெல்லாம் தடைப்பட்டிருக்கின்றன. அன்புள்ள கணவர்களே, குற்றம் அற்றவர்களிடம் நீங்கள் அநியாயமாக நடந்து கொண்டீர்கள், அதனால் கொல்லப்பட்டீர்கள். நல்லவர்களுக்குத் தொல்லை தருபவர்கள் தண்டிக்கப்படுவது இயற்கை விதி.

கிருஷ்ணர் முழுமுதற் கடவுளென்பது தெரிந்ததே. அவரே எல்லாவற்றின் உன்னத அதிகாரி, உன்னத அனுபவிப்பாளர். எனவே அவரது அதிகாரத்துக்குப் பணியாத எவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அப்படிப்பட்டவனுக்கு உங்களுக்கு நேர்ந்தது போல் மரணம் சம்பவிக்கும். என்று புலம்பினார்கள். தன் மாமிகளிடம் அனுதாபம் கொண்ட கிருஷ்ணர் இயன்றவரை அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினார். இறந்த அரச குமாரர்களுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சகோதரியின் மகனாகையால் ஈமச் சடங்குகளை அவரே நேரில் கவனித்தார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – கம்சன் வதம்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – கம்சன் வதம்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும்; மல்யுத்தக் களத்தினுள் மாபெரும் மல்லர்கள் யாவரையும் கொன்றபின் எஞ்சியிருந்த மல்லர்கள் உயிருக்குப் பயந்து கோதாவை விட்டு ஓடினார்கள். கிருஷ்ணரின் நண்பர்களான ஆயர் குலச் சிறுவர்கள் அவரையும் பலராமரையும் அணுகி மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களின் வெற்றியைப் பாராட்டினார்கள். அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சிப் பெருக்கால் கரவொலி எழுப்பினார்கள். அவர்களின் மகிழ்ச்சி கரை புரண்டோடியது. பிராமணர்கள் மனமுவந்து கிருஷ்ணரையும் பலராமரையும் புகழ்ந்து பேசினார்கள்.

கம்சன் மட்டும் வாளாவிருந்தான். அவன் கைதட்டவுமில்லை, கிருஷ்ணரையும் பலராமரையும் வாழ்த்தவுமில்லை. கிருஷ்ண பலராமரின் வெற்றியைப் பாராட்டும் வகையில் முரசுகள் ஒலித்ததை அவன் விரும்பவில்லை. மல்லர்கள் கொல்லப்பட்டதும் எஞ்சியவர்கள் உயிருக்குப் பயந்து ஓடியதும் அவனுக்கு மன வருத்த்தைத் தந்தது. அவன் உடனே முரசுகள் ஒலிக்கப் படுவதை நிறுத்தும்படி கட்டளையிட்டு, தன் நண்பர்களை நோக்கிப் பின் வருமாறு பேசினான்:

வசுதேவரின் இந்த இரு மகன்களும் உடனடியாக மதுராவிலிருந்து விரட்டப்பட வேண்டுமென்று நான் கட்டளையிடுகிறேன். அவர்களுடன் வந்திருக்கும் ஆயர்குலச் சிறுவர்களும் விரட்டப்பட்டு அவர்களின் உடமைகளெல்லாம் பறிக்கப்பட வேண்டும். நந்த மகராஜாவை அவரின் தந்திரமான நடத்தைக்காக உடனே கைது செய்து கொல்ல வேண்டும். அயோக்கியனான வசுதேவனும் உடனடியாகக் கொல்லப் படவேண்டும். என் விருப்பத்திற்கு எதிராக எப்போதும் என் எதிரிகளை ஆதரித்த என் தந்தையான உக்கிரசேனரும் உடனே கொல்லப்பட வேண்டும்.

OLYMPUS DIGITAL CAMERA

இவ்வாறு கம்சன் பேசியதும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மிகவும் கோபமடைந்து, கணப்பொழுதில் கம்சனின் காவலர்களைக் கடந்து கம்சனை அணுகினார். இதை எதிர்பார்த்திருந்த கம்சன் தன் வாளை உறையிலிருந்து எடுத்துக் கிருஷ்ணரை தாக்க முற்பட்டான். அவன் அப்படியும் இப்படியுமாக வாள் வீசியபோது மிகுந்த பலத்துடன் கிருஷ்ணர் அவனைப் பிடித்துக் கொண்டார். சிருஷ்டி முழுவதற்கும் துணையானவரும், தம் தொப்புளிலிருந்து பிரபஞ்சத்தை உண்டுபண்ணியவருமான முழுமுதற் கடவுள் கம்சனின் கிரீடத்தைக் கீழே தள்ளித் தரையில் உருளச் செய்தார்.

அதன்பின் கம்சனின் நீண்ட தலைமுடியைத் தம் கையில் பிடித்துக் கொண்டு, அவனை ஆசனத்திலிருந்து இழுத்து வந்து மல்யுத்த மேடையின் மீது எறிந்தார். அதன்பின் கிருஷ்ணர் உடனடியாகக் கம்சனின் மார்பின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு அவனை மீண்டும் மீண்டும் ஓங்கி அடித்தார். அவரின் முஷ்டியிலிருந்து புறப்பட்ட அடிகளைத் தாங்க மாட்டாமல் கம்சன் உயிர் நீத்தான்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – மல்யுத்தப் போட்டியில் பல மல்லர்களைக் கொல்லுதல்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – மல்யுத்தப் போட்டியில் பல மல்லர்களைக் கொல்லுதல்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குவாலயபீட யானையைக் கொன்றபின் பலராமருடனும் நண்பர்களுடனும் மல்யுத்தக் களத்தினுள் பிரவேசித்தபோது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் செய்த செயல்கள் பற்றி மக்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மல்யுத்தப் போட்டி தொடங்க இருப்பதை அறிவிக்கும் வாத்ய முழக்கங்கள் அவர்களின் செவிகளில் விழுந்தன. பிரசித்தி பெற்ற மல்யுத்த வீரனான சாணூரன் கிருஷ்ணரிடமும் பலராமரிடமும் பேசினான்:

அன்பான கிருஷ்ணா, பலராமா, உங்கள் முந்திய செயல்கள் பற்றி நாங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம். நீங்கள் பெரும் வீரர்கள். எனவே அரசர் உங்களை அழைத்துள்ளார். அரசரும் இங்கு கூடியுள்ளவர்களும் உங்களின் மல்யுத்த திறமைகளைக் கான ஆவலாயிருக்கிறார்கள். ஒரு குடிமகன் எப்போதும் அரசனின் மனதையறிந்து பணிவுடன் நடக்க வேண்டும்.

அவ்வாறு நடக்கும் குடிமகன் எல்லா நலன்களையும் பெறுவான். பணியாமல் நடப்பவன் அரசனின் கோபத்திற்கு ஆளாகித் துன்பம் அனுபவிக்கிறான். நீங்கள் ஆயர் குலச் சிறுவர்கள். பசுக்கள் மேய்க்கும்போது ஒருவரோடு ஒருவர் மல்யுத்தம் செய்து மகிழ்வதாகக் கேள்விப் பட்டிருக்கிறோம். எனவே எங்களுடன் நீங்கள் மல்யுத்தப் போட்டியயில் கலந்து கொண்டால் இங்குள்ள மக்களும் அரசனும் மகிழ்ச்சியடைவார்கள். என்று சாணூரன் கூறினான்.

சாணூரன் கூறியதன் நோக்கத்தைக் கிருஷ்ணர் புரிந்து கொண்டார். ஆனால் காலத்தையும் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு கிருஷ்ணர் பேசினார்: நீ போஜராஜனின் பிரஜை, காட்டில் வாழும் நாங்களும் அவர்களின் பிரஜைகளே. இயன்றவரை அரசனைத் திருப்திப் படுத்த முயல்கிறோம். மல்யுத்தத்திற்கு அவர் எங்களுக்கு வாய்ப்பளித்தது அவர் எங்களிடம் காட்டும் கருணையாகும். ஆனால் நாங்கள் சிறுவர்கள். சில வேளைகளில் விருந்தாவனத்தில் எங்கள் வயதினரான நண்பர்களுடன் நாங்கள் விளையாடியதுண்டு. ஒரே வயதும் பலமும் கொண்டவர்களோடு போட்டியிடுவதில் நன்மையுண்டு. ஆனால் உங்களைப் போன்ற மாமல்லர்களோடு நாங்கள் போட்டியிடுவது பார்ப்பவர்களுக்கு நன்றாயிருக்காது. அவர்களின் தர்மத்துக்கும் அது முரண்படுவதாகும். என்று கூறினார்.

krishna_and_balarama_overpower_the_wrestlers_hj51

பிரசித்தி பெற்றவர்களும் பலவான்களுமான அந்த மல்லர்கள் சிறுவர்களான பலராமரையும் கிருஷ்ணரையும் போட்டிக்கு அழைப்பது முறையல்லவென்பதைக் கிருஷ்ணர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலாக சாணூரன் கூறினான்: அன்பான கிருஷ்ணா, நீர் குழந்தையோ இளைஞனே அல்லவென்பதை நாங்கள் அறிவோம். நீரும் உமது மூத்த சகோதரனான பலராமரும் எல்லோரையும் விட உயர்ந்தவர்கள். குவாலயபீட என்ற யானையைக் கொன்றிருக்கிறீர்கள். மற்ற யானைகளிடம் சண்டையிட்டு அவற்றைத் தோற்கடிக்கக் கூடிய யானையை அதிசயிக்கத் தக்க வகையில் நீர் கொன்றீர். இதிலிருந்து நீர் பலம் மிக்கவரென்பது தெரியவருகிறது.

எனவே எங்களில் பலம் மிகுந்தவர்களுடன் யுத்தம் செய்யும் தகுதி உமக்கும் உமது மூத்த சகோதரனான பலராமருக்கும் உண்டு. நான் உம்முடனும் பலராமர் முஷ்டிகனுடனும் சண்டையிடலாம். என்று சாணூரன் கூறினான். கம்சனின் மல்லர்கள் தம் விருப்பத்தைத் தெரிவித்ததும், மது என்ற அரக்கனைக் கொன்றவராகிய முழுமுதற் கடவுள் சாணூரனை எதிர்த்தும், ரோகிணியின் மகனான பலராமர் முஷ்டிகனை எதிர்த்தும் மல்யுத்தம் செய்தார்கள். கிருஷ்ணரும் சாணூரனும், அதேபோல் பலராமரும் முஷ்டிகனும், கையோடு கை, காலோடு கால் பின்னிக் கொண்டு, வெற்றி பெறும் நோக்கத்தோடு ஒருவரை மற்றவர் அழுத்த முயற்சித்தார்கள்.

உள்ளங் கைகளையும் கால்களையும், தலைகளையும், மர்ர்புகளையும் பிணைத்துக் கொண்டு, ஒருவரையொருவர் அடித்துத் தள்ளியபோது சண்டையின் வேகம் அதிகரித்தது. ஒருவர் மற்றவரைப் பிடித்துத் தரையின் மீது வீழ்த்தினால், மற்றவர் பின்னிருந்து பிடித்து அழுத்த முயற்சித்தனர். படிப்படியாக யுத்தத்தின் வேகம் அதிகரித்தது. பிடிப்பதும், இழுப்பதும், தள்ளுவதுமாக கைகளையும் கால்களையும் பிணைத்துக் கொண்டு சண்டையிட்டார்கள். ஒருவரையொருவர் தோற்கடிக்க முயன்றபோது மல்யுத்தக் கலையின் நுணுக்கங்கள் அத்தனையும் அங்கு வெளிப்படுத்தப்பட்டன.

malyuththam

ஆனால் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குத் திருப்தியில்லை. ஏனெனில் கிருஷ்ணரையும் பலராமரையும் எதிர்த்து மலைபோன்ற உருவமும் பலமும் கொண்ட முஷ்டிகனும் சாணூரனும் போரிடுவது நியாயமல்லவென்று பலர் கருதினார்கள். கிருஷ்ணரிடமும் பலராமரிடமும் அனுதாபம் கொண்ட சிலர், இது அபாயகரமானது. அரசனின் முன்னிலையில் சமமில்லாதவர்களிடையே இப்படி ஒரு போட்டி நடக்கலாகாது, என்று பேசிக் கொண்டார்கள். பார்வையாளர்கள் உற்சாகமின்றி இருந்தார்கள். சபையிலிருந்தவர்கள் தமக்காக கவலைப் படுகிறார்கள் என்பதை அறிந்த பரமாத்மாவாகிய ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் யுத்தத்தைத் தொடராமல் உடனே மல்லர்களை கொல்வதென்று முடிவு செய்தார். கிருஷ்ணர் மற்றும் பலராமரின் பெற்றோர்களான நந்த மகாராஜா, யசோதை, வசுதேவர், தேவகி ஆகியோரும் தம் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படக் கூடாதென்று கவலையடைந்திருந்தார்கள்.

கிருஷ்ணர் மிகக் கடுமையாக சாணூரனை தன் முஷ்டியால் அடித்தார். சபையோர் ஆச்சரியப்படும் வகையில் அந்த மாபெரும் மல்லன் அதிர்ந்து போனான். கடைசி முறையாக சாணூரன் ஒரு பருந்து மற்றொன்றைத் தாக்குவது போல் கிருஷ்ணரைத் தாக்கினான். ஆனால் மலர்மாலையால் அடிபட்ட யானைபோல் கிருஷ்ணர் சிறிதும் பாதிக்கப் படாமல் இருந்தார். அவர் வேகமாகச் சாணூரனின் இரு கைகளையும் பற்றிக் கொண்டு அவனைச் சக்கரம் போல் சுழற்றியபோது, சாணூரன் உயிரிழந்தான். கிருஷ்ணர் அவனைத் தரையில் எறிந்தார். இந்திரனின் கொடியைப் போல் சாணூரன் வீழ்ந்தான்.

malyuththam1

அவன் அணிந்திருந்த ஆபரணங்கள் எல்லாம் அங்குமிங்குமாகச் சிதறின. முஷ்டிகனும் பலராமரை அடித்தபோது அவர் மிகுந்த பலத்துடன் பதிலடி கொடுத்தார். முஷ்டிகன் நடுக்கம் கொண்டு இரத்தமாகக் கக்கினான். மிகவும் துன்பப் பட்டவனாய் அவன் உயிரிழந்து புயலில் சரியும் மரம் போலக் கீழே விழுந்தான். மேலும் இரு மல்லர்கள் சண்டையிட முன் வந்தார்கள். பலராமர் அவனை உடனடியாகத் தனது இடது கையால் பிடித்து அனாயாசமாகக் கொன்றார். சாலன் என்ற மல்லன் முன்வந்த போது கிருஷ்ணர் அவனை உதைத்து, அவனின் தலையை உடைத்தார். தோசாலா என்ற மல்லன் சண்டையிட வந்தபோது அவனும் அதே முறையில் கொல்லப் பட்டான்.

இவ்வாறு மாபெரும் மல்லர்கள் யாவரும் கிருஷ்ணர் மற்றும் பலராமரால் கொல்லப்பட்டார்கள். எஞ்சியிருந்த மல்லர்கள் உயிருக்குப் பயந்து கோதாவை விட்டு ஓடினார்கள். கிருஷ்ணரின் நண்பர்களான ஆயர் குலச் சிறுவர்கள் அவரையும் பலராமரையும் அணுகி மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களின் வெற்றியைப் பாராட்டினார்கள். அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சிப் பெருக்கால் கரவொலி எழுப்பினார்கள். அவர்களின் மகிழ்ச்சி கரை புரண்டோடியது. பிராமணர்கள் மனமுவந்து கிருஷ்ணரையும் பலராமரையும் புகழ்ந்து பேசினார்கள்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – குவாலயபீட யானையைக் கொல்லல்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – குவாலயபீட யானையைக் கொல்லல்

கம்சன் தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தாலும் அதற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் பலராமரையும் கொல்வதுதான் கம்சனின் திட்டம். எனவே அவன் அடுத்தகட்ட நடவடிக்கையாக மல்யுத்தப் போட்டி ஒன்றிற்கான ஏற்பாட்டைச் செய்தான். மல்யுத்தக் களம் நேர்த்தியாகத் துப்பரவு செய்யப்பட்டு கொடிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. போட்டி நடக்கவிருந்ததைப் பறையடித்து அறிவித்தார்கள். அரசர்கள், பிராமணர்கள், சத்திரியர்கள் என்று பல் வேறான உயர் பிரிவினருக்குத் தனியான ஆசனங்கள் அமைக்கப் பட்டிருந்தன.

இறுதியில் கம்சன் வந்து சேர்ந்தான். அவனுடன் பல மந்திரிகளும், பிரதானிகளும், காரியஸ்தர்களும் வந்து அமர்ந்தார்கள். கம்சன் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்தான். எல்லா ஏற்பாடுகளும் நிறைவேறியபின் சபையின் முன் தம் திறமைகளைக் காட்ட வந்திருந்த மல்லர்கள் கோதாவுக்குள் இறங்கினார்கள். அவர்கள் பிரகாசமான ஆபரணங்களையும், ஆடைகளையும் அணிந்திருந்தார்கள். அவர்களுள் பிரசித்தி பெற்ற மல்லர்களான சாணூரன், முஷ்டிகன், சாலன், கூடன், தோசாலன் ஆகியவர்களும் இருந்தனர்.

kuvalayadipa

நந்தரின் தலைமையில் வந்திருந்த ஆயர் குல மக்களையெல்லாம் கம்சன் வரவேற்றான். அவர்களும் தாங்கள் கொண்டு வந்திருந்த பால் பண்டங்களைக் கம்சனுக்குப் பரிசாக அளித்துத் தத்தம் ஆசனங்களில் அமர்ந்தார்கள். காலையில் நீராடி, மற்றக் காலைக் கடன்களை முடித்துவிட்டுக் கிருஷ்ணரும் பலராமரும் தயாராக இருந்தபோது மல்யுத்தக் களத்தில் ஒலித்த பறைகளின் ஓசை அவர்களின் காதில் விழுந்தது. உடனே வேடிக்கை பார்க்க அவ்விடத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

மல்யுத்தக் களத்தை அவர்கள் அடைந்தபோது அங்குள்ள வாயிலில் குவாலயபீட என்ற மாபெரும் யானையொன்று நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டார்கள். பணியாட்கள் யானையைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். வழியை மறைக்கும்படியாக வேண்டுமென்றே காவலர்கள் யானையை நிறுத்தியிருந்ததைக் கிருஷ்ணர் கண்டார். காவலர்களின் நோக்கத்தை உணர்ந்த கிருஷ்ணர் யானையைத் தாக்குவதற்கு முன்பாகத் தம் உடைகளை இறுக்கிக் கொண்டார். பின், மேகம் போல் கர்ஜிக்கும் குரலில் யானையின் காவலனிடம் கிருஷ்ணர் பேசினார்: கயவனே, வழியை மறித்தால் உன்னையும் உன் யானையையும் யமலோகம் அனுப்புவேன்.

pbaaaa032_krishna_killing_the_elephant_kuvalayapida

கிருஷ்ணரால் அவமதிக்கப்பட்ட காவலன் கோபமடைந்து ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அவரைத் தாக்கும்படி யானையை ஏவினர். யானை கிருஷ்ணரை நோக்கி முன்னேறியது. அவரை நோக்கி விரைந்து வந்து துதிக்கையால் அவரைப் பிடிக்க முயற்சித்தது. ஆனால் கிருஷ்ணர் வெகு சாமர்த்தியமாக யானையின் பின்பக்கம் சென்று தப்பித்துக் கொண்டார். தன் துதிக்கைக்கு அப்பால் பார்க்க முடியாத யானையால் பின்பக்கம் ஒளிந்திருந்த கிருஷ்ணரைக் காணமுடியவில்லை. என்றாலும் அவரைப் பிடிக்கும் நோக்கத்துடன் துதிக்கையால் துளாவியது. மீண்டும் கிருஷ்ணர் விரைவாக இடம்மாறி யானையின் பிடியிலிருந்து தப்பினார். இம்முறை அவர் யானையின் வாலைப் பிடித்து இழுத்தார்.

மிகுந்த பலத்துடன் இழுத்ததால் கருடன் பாம்பை இழுத்துச் செல்வதுபோல் கிருஷ்ணர் யானையைச் சிறிது தூரம் இழுத்துச் சென்றார். கிருஷ்ணர் சிறு வயதில் கன்றுகளை வாலைப் பிடித்து இழுத்தது போல் யானையையும் வாலைப் பிடித்து அப்படியும் இப்படியுமாக இழுத்தார். அதன்பின் அவர் யானையின் முன்புறம் சென்று அதன் தாடையில் பலமாக அடித்தார். அடித்தபின் அவர் மீண்டும் யானையின் பார்வையிலிருந்து மறைந்து அதன் பின்புறமாகச் சென்று, கீழே குனிந்து, அதன் கால்களிடையே புகுந்து அதைத் தடுமாறி விழச் செய்தார்.

kuvalayadipa_elephant

அவ்வாறு செய்துவிட்டுக் கிருஷ்ணர் உடனே விலகிக் கொண்டார். அவர் கீழேயே இருப்பதாக எண்ணிய யானை அவரைக் கொல்லும் நோக்கத்துடன் கொம்பை அவர்மீது பாய்ச்சியதாக எண்ணிக்கொண்டு தரையில் ஆழமாகச் செலுத்தியது. யானை மிகவும் அலைக்களிந்து கோபமுற்றிருந்தாலும் அதன் பாகன் அதை மேலும் விரட்டினான். யானை மதம் கொண்டு கிருஷ்ணரை நோக்கி ஆவேசத்துடன் பாய்ந்தது.

கிருஷ்ணர் யானையின் துதிக்கையைப் பிடித்து இழுத்தார். யானையும் பாகனும் கீழே விழுந்தபோது கிருஷ்ணர் யானையின் மீது தாவிக் குதித்து ஏறி, யானையையும் பாகனையும் கொன்றார். யானையைக் கொன்ற பின் கிருஷ்ணர் அதன் தந்தத்தை எடுத்துத் தன் தோளின் மேல் வைத்துக் கொண்டார். வியர்வைத் துளிகளும் யானையின் இரத்தத் துளிகளும் அவரின் மேனியை அழகு செய்ய, கிருஷ்ணர் ஆனந்த மயமாகக் காட்சியளித்தார். அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் கிருஷ்ணரைப் புகழ்ந்து பாராட்டினார்கள்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – யாகமேடையில் வில்லை முறித்தல்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – யாகமேடையில் வில்லை முறித்தல்

கம்சன் தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். இந்த யாகத்தின் நோக்கத்தைக் குறிப்பால் உணர்த்துவதற்காக கம்சன் யாக பீடத்தினருகில் மாபெரும் வில் ஒன்றை வைத்திருந்தான். அந்த வில் மிகப் பெரிதாகவும், அதிசயமாகவும், வானவில்லைப் போன்றதாகவும் இருந்தது. யாகப் பிரதேசத்தினுள் அந்த வில் கம்சனால் நியமிக்கப்பட்ட காவலர்களின் பாதுகாப்பில் இருந்தது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் வில்லின் அருகில் சென்றபோது, காவலர்கள் அவர்களை எச்சரித்தார்கள். ஆனால் கிருஷ்ணர் அதைச் சட்டை செய்யவில்லை. அவர் பலவந்தமாக உள்ளே சென்று வில்லைத் தனது இடது கையில் எடுத்தார். அங்கு குழுமியிருந்த மக்களின் முன்பு கிருஷ்ணர் வில்லில் நாணை ஏற்றி, வில்லை வழைத்து இரு பகுதிகளாக, யானை கரும்பை ஒடிப்பது போல் ஒடித்தார். கிருஷ்ணரின் சக்தியை மக்கள் வியந்து பாராட்டினார்கள்.

yaagamedaiyil_vil_muriththal

வில் ஒடிந்த போது எழுந்த ஒலி பூமியிலும் ஆகாயத்திலும் எங்கும் எதிரொலித்தது. அந்த ஒலியைக் கம்சனும் கேட்டான். நடந்ததை அறிந்தபோது அவன் தன் உயிருக்காக அஞ்சினான். வில்லைக் காவல் காத்தவன் மிகுந்த கோபமடைந்து, கிருஷ்ணரைப் பிடிக்குமாறு ஏவலர்களுக்குக் கட்டளையிட்டபடி தானும் அவரை நோக்கிப் பாய்ந்தான். பிடியுங்கள், கொல்லுங்கள் என்று கத்தினான்.

கிருஷ்ணரையும் பலராமரையும் அவர்கள் சூழ்ந்து கொண்டார்கள். காவலர்களின் அபாயகரமான எண்ணங்களை உணர்ந்ததும் கிருஷ்ணரும் பலராமரும் மிகுந்த கோபம் கொண்டு, ஒடிந்த வில்லின் இரு பகுதிகளையும் கையில் ஏந்தியபடி காவலர்களின் தாக்குதலைச் சமாளித்தார்கள்.

இந்தக் குழப்பம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது காவலர்களுக்கு உதவியாக கம்சன் மேலும் சில படைவீரர்களை அனுப்பி வைத்தான். கிருஷ்ணரும் பலராமரும் அவர்கள் எல்லோரையும் போரில் கொன்றார்கள். இதன் பின் கிருஷ்ணரும் பலராமரும் யாகப் பகுதிக்குள் மேலும் பிரவேசிக்காமல் வாயிலின் வழியாகத் தம் இருப்பிடத்துக்குத் திரும்பினார்கள்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – கூனியாக இருந்த பெண்ணை அழகிய இளம் பெண்ணாக மாற்றுதல்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் பூ வியாபாரியின் இடத்தை விட்டுச் சென்றபின், கூனுடைய ஒரு இளம் பெண் சந்தனக் குழம்பு நிரம்பிய ஒரு கோப்பையைத் தெருவில் எடுத்துச் செல்வதைக் கண்டார்கள். ஆனந்தத்தின் இருப்பிடமான கிருஷ்ணர் அந்தக் கூனியிடம் ஹாஸ்யமாகப் பேசித் தம் நண்பர்களை மகிழ்விக்க விரும்பினார். கிருஷ்ணர் அவளிடம் கூறினார்: உயர்ந்த இளம் பெண்ணே நீ யார்? யாருக்காக இச் சந்தனத்தை எடுத்துச் செல்கிறாய்? இதை நீ எனக்குத் தருவது பொருந்துமென நான் எண்ணுகிறேன். அவ்வாறு செய்தால் நிச்சயமாக உனக்கு நண்மை உண்டாகும். எனக் கூறினார்.

முழுமுதற் கடவுளான கிருஷ்ணர் அக் கூனியைப் பற்றிய எல்லா விபரங்களையும் அறிந்திருந்தார். அவளை அவ்வாறு கேட்டபோது, ஒரு அசுரனுக்குச் சேவை செய்வதில் பயனில்லை என்பதைக் குறிப்பால் உணர்த்தினார். அதைவிட கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் சேவை செய்தால் பாவங்களெல்லாம் களையப் பெறலாம்.

அந்தப் பெண் கிருஷ்ணரிடம் கூறியதாவது: அன்புள்ள சியாம சுந்தரா, நான் கம்சனின் வேலைக்காரி. அவருக்கு நான் தினமும் சந்தனம் தயாரித்து அளித்து வருகிறேன். இவ்வளவு நேர்த்தியான சந்தனத்தை நான் கொடுப்பதால் கம்சன் என்னிடம் திருப்தி கொண்டிருக்கிறார். ஆனால் அந்தச் சந்தனத்தைப் பெறுவதற்கான தகுதியை உடையவர் சகோதரர்களான உங்களிருவரையும் தவிர வேறு யாரும் இருக்க முடியாதென்பதை நான் இப்போது உணர்கிறேன். என்று கூறினாள்.

கிருஷ்ணர் மற்றும் பலராமரின் அங்க லட்சணங்களாலும், புன்னகையாலும், கண் பார்வையாலும், மற்ற அம்சங்களாலும் கவரப்பட்ட அக்கூனிப் பெண் சந்தனக் குழம்பை எடுத்து அவர்களின் உடல்களின் மீது மிகுந்த பக்தியுடனும் திருப்தியுடனும் பூசத் தொடங்கினாள். கிருஷ்ணரும் பலராமரும் சந்தனம் பூசப்பட்டதும் மேலும் அழகாகக் காட்சியளித்தார்கள். இந்தத் தொண்டு கிருஷ்ணரை மிகவும் மகிழ்வித்தது. அவளுக்கு என்ன வெகுமதி அளிக்கலாமென்று கிருஷ்ணர் சிந்திக்கலானார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் கால் விரல்களால் கூனியின் பாதங்களை அழுத்தியபடி, கைவிரல்களால் அவளின் முகவாயைத் தாங்கிக் கொண்டு, ஒரே அசைவில் அவளின் கூனை நிமிர்த்தினார். அவள் கூன் நீங்கப் பெற்று நிமிர்ந்து நின்றபோது ஓர் அழகிய இளம் பெண்ணாகக் காட்சியளித்தாள். கூனியான அப்பெண்ணின் சேவையில் திருப்தியடைந்த கிருஷ்ணரின் கைகள் பட்ட உடனே அவள் பெண்களில் சிறந்த அழகியாக உருமாறினாள். அவளின் பக்தி கிருஷ்ணரைக் கவர்ந்தது. கிருஷ்ணருக்குச் சேவை செய்யும் பக்தன் உடனடியாக மிகவுயர்ந்த நிலையை அடைகிறானென்பதை இந்நிகழ்ச்சி நிரூபிக்கின்றது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – தையல்காரனுக்கு முக்தி வழங்குதல்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – தையல்காரனுக்கு முக்தி வழங்குதல்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கம்சனின் வேலையாளைச் சிரச்சேதம் செய்தபின் பலராமருடனும் அவர்களது கோபால நண்பர்களுடனும் மதுராவின் வீதிகளில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தனான தையல்காரன் ஒருவன் சில அழகிய ஆடைகளைத் தைத்துக் கொண்டு வந்தான். இவ்வாறு அழகாக உடுத்துக் கொண்ட கிருஷ்ணரும் பலராமரும் அழகிய வண்ண ஆடைகளைத் தரித்த யானைகளைப் போல் காட்சியளித்தார்கள்.

krishnabalaram-madhura2

தையல்காரனின் செயல் கிருஷ்ணருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவனுக்கு ஸாருப்ய முக்தி அளித்தார். அதாவது, அவன் உடலை நீத்தபின் வைகுண்டத்தில் நான்கு கைகளுடைய நாராயணரின் ரூபத்தைப் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பான். அவன் வாழ்நாள் முழுவதும் புலனின்பங்களை நன்கு அனுபவிப்பதற்குத் தேவையான செல்வத்தைப் பெறுவானென்றும் கிருஷ்ணர் வரம் அருளினார்.

இந் நிகழ்ச்சியின் மூலம், கிருஷ்ண உணர்வுள்ள பக்தர்கள் இகவுலக இன்பங்களிலோ, புலன் திருப்தியிலோ குறைந்தவர்களாக மாட்டார்களென்பதைக் கிருஷ்ணர் நிரூபித்துக் காட்டினார். இவ்வுலகில் அவர்கள், இகவுலக வாழ்வை நீத்தபின் வைகுண்ட லோகம் அல்லது கிருஷ்ணலோகம், அல்லது கோலோக விருந்தாவனத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

கம்சனின் வேலையாளை சிரச்சேதம் செய்தல்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் மதுரா நகரின் வீதிகளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு சலவைத் தொழிலாளியைக் கண்டார்கள். அவன் உடுப்புகளுக்குச் சாயம் போடுபவன். கிருஷ்ணர் அவனிடம் சில நேர்த்தியாகச் சாயம் போடப்பட்ட உடுப்புகளைக் கொடுத்தால் அவனுக்கு எல்லா நலன்களும் பெருகுமென்று அவனிடம் கூறினார். கிருஷ்ணரிடம் உடுப்புக்கள் இல்லையென்று இல்லை. அவருக்கு உடுப்புக்கள் தேவைப்படவுமில்லை. ஆனால் அவர் வேண்டுவதைக் தர எல்லோரும் தயாராக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துவதற்காகவே அவ்வாறு கேட்டார். கிருஷ்ணர் வேண்டுவதைத் தர எல்லோரும் முன் வர வேண்டும். அதுவே கிருஷ்ண உணர்வு.

துரதிஷ்ட வசமாக அவன் கம்சனின் வேலையாளாக இருந்ததால் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரின் வேண்டுகோளை அவன் புரிந்து கொள்ளவில்லை. இது சகவாச தோஷத்தால் ஏற்படுவது. அவனுக்கு எல்லா நலன்களையும் தருவதாக வாக்களித்த முழுமுதற் கடவுளுக்கு அவன் உடனே உடுப்பைக் கொடுத்திருக்கலாம். பாவாத்மாவான அந்த அரக்கன் மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக அவன் கோபம் கொண்டு அரசனுக்குரிய ஆடையை நீ எப்படிக் கேட்கலாம்? என்று கேட்டான். பின் அவன் கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் ஆலோசனை கூறினான்: சிறுவர்களே, இனி இவ்வாறு அரசனுக்குரிய ஆடையைக் கேட்கும் அகம்பாவச் செயலைச் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் அரசனின் ஆட்கள் உங்களைக் கைது செய்து தண்டனை வழங்குவார்கள். நீங்கள் மிகவும் துன்பப்பட நேரிடும். எனக்கு இந்த அனுபவம் உண்டு என்று கூறினான்.

இதைக் கேட்டதும் தேவகி நந்தனான கிருஷ்ணர், சலவையாளிடம் மிகுந்த கோபம் கொண்டு அவனைத் தம் கையால் ஓங்கி அடித்து, அவனைச் சிரச் சேதம் செய்தார். அவன் பூமியில் இறந்து விழுந்தான். கிருஷ்ணரின் ஒவ்வொரு அங்கமும் அவர் விரும்புவது போல் செயல் படக்கூடியதென்பதை இது நிரூபிக்கின்றது. வாளின் உதவியின்றி கையாலேயே அவனின் தலையை அவர் கொய்தார். அவர் எது செய்ய நினைத்தாலும் வெளிப் பொருட்களின் உதவியின்றிச் செய்யக் கூடியவர். இந்தக் கோர நிகழ்சி;சிக்குப் பின் அவனது நண்பர்கள் துணிகளைக் கீழே போட்டுவிட்டுக் கலைந்து சென்றார்கள். கிருஷ்ணரும் பலராமரும் அவற்றை எடுத்துத் தம் விருப்பம்போல் அணிந்து கொண்டு, மற்றவற்றைத் தம் கோபால நண்பர்களுக்கு வழங்கினார்கள். வேண்டாத உடுப்புக்களை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றார்கள்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – பூ வியாபாரிக்கு அனுக்கிரகம் அளித்தல்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – பூ வியாபாரிக்கு அனுக்கிரகம் அளித்தல்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் மதுராவின் வீதிகளில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது சுதாமா என்ற பெயருடைய பூக்கடைக் காரரிடம் சென்றார்கள். அவர்கள் கடையை அணுகியதும் பூ வியாபாரி வெளியே வந்து மிகுந்த பக்தியுடன் அவர்களின் காலில் விழுந்து வணங்கினார். பின், கிருஷ்ணரையும் பலராமரையும் தகுந்த ஆசனங்களில் இருக்கச் செய்து, உதவியாளர்களைப் பூவும் தாம்பூலமும் கொண்டு வரும்படி பணித்தார். வியாபாரியின் வரவேற்பால் கிருஷ்ணர் மிகவும் திருப்தி அடைந்தார்.

மிகுந்த பணிவுடன் பூ வியாபாரி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரார்த்தித்தார்: அன்பான பிரபுவே, நீர் என் இருப்பிடத்துக்கு வந்திருப்பதால் என் மூதாதையர்களும், வணக்கத்துக்குரிய பெரியவர்களும் முக்தி அடைந்தவர்களாக வேண்டும். இப் பிரபஞ்சத்தில் காரணங்களுக் கெல்லாம் காரணமானவர் நீரே. ஆனால் உமது பக்தர்களைப் பாதுகாத்து, அசுரர்களை அழித்து, இவ்வுலக வாசிகளுக்கு நன்மையளிப்பதற்காக உமது சக்திகளுடன் நீர் வந்திருக்கிறீர்.

OLYMPUS DIGITAL CAMERA

நண்பரென்ற முறையில் எல்லா உயிர் வாழிகளையும் சமமாக நோக்குகிறீர். நீர் பரமாத்மா. நண்பன் – பகைவன் என்ற வேறுபாடு உமக்கில்லை. என்றாலும் உமது பக்தர்களுக்குப் பக்தியில் சிறப்புப் பலன்களை நீர் வழங்குகிறீர். பிரபுவே, நான் என்ன செய்ய வேண்டும், கட்டளையிடும். நான் உமது நிரந்தர சேவகன். ஏதாவது செய்ய நீர் அனுமதித்தால் நான் தன்யனாவேன். இவ்வாறு சுதாமா பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரார்த்தித்தார்.

கிருஷ்ணரும் பலராமரும் தன் இருப்பிடத்தில் வரப்பெற்ற சுதாமா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதனால் தனக்கு மிகவும் பிடித்தமான மலர்களைக் கொண்டு மிக அழகாக இரண்டு மாலைகளைத் தொடுத்து அவர்களுக்கு அர்ப்பித்தார். அவருடைய உண்மையான பக்தித் தொண்டை கிருஷ்ணரும் பலராமரும் மெச்சினார்கள்.

pookkaaranukku-anukkiraham

சரணடையும் ஆத்மாக்களுக்குத் தாம் எப்போதும் வழங்கும் ஆசிகளைக் கிருஷ்ணர் சுதாமாவுக்கு வழங்கினார். சுதாமா, தாம் எப்போதும் கிருஷ்ணரின் நிரந்தர சேவகராக இருக்க வேண்டுமென்றும், அப்படிப்பட்ட பக்தித் தொண்டின் மூலம் பிற உயிர்களுக்கும் சேவை செய்ய வேண்டுமென்றும் பிரார்த்தித்தார். பூ வியாபாரியிடம் திருப்தியடைந்த கிருஷ்ணர், அவர் வேண்டிய வரங்களுக்கான ஆசிகளை நல்கியது மட்டுமன்றி அதற்கும் மேலாக எல்லா சுக போகங்களையும், நீண்ட ஆயுளையும் வழங்கினார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – அக்ரூரர் விருந்தாவனத்திலிருந்து திரும்பும்போது யமுனை நதியிலிருந்த விஷ்ணு லோகத்தைக் காணல்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – அக்ரூரர் விருந்தாவனத்திலிருந்து திரும்பும்போது யமுனை நதியிலிருந்த விஷ்ணு லோகத்தைக் காணல்

கம்சன் தனுர் யாகம் ஒன்றினைச் செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தான். அதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் பலராமரையும் மதுராவிற்கு அழைத்து வருமாறு அக்ரூரரை அனுப்பினான். கிருஷ்ணரும் பலராமரும் மதுராவிற்கு வந்தபின் அவர்களைக் கொல்வதென்று முடிவெடுத்தான். அக்ரூரர் கம்சனின் நம்பிக்கைக்குரிய நண்பனாக இருந்தார். அதேவேளை அவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மிக உயர்ந்த பக்தருமாவார். விருந்தாவனம் சென்ற அக்ரூரர் கிருஷ்ணரையும் பலராமரையும் மதுராவிற்கு கம்சனால் அழைக்கப்பட்டிருந்த செய்தியைக் கூறினார்.

கிருஷ்ணரும் பலராமரும் மதுராவிற்குச் செல்கிறார்கள் என்பதை அறிந்த கோபியர்கள் கவலையடைந்தார்கள். தம்மை விட்டுக் கிருஷ்ணர் பிரிவதை எண்ணி மிகவும் வருந்தினார்கள். கிருஷ்ண, பலராமர் ஆகியோருடன் மேலும் சில கோபாலர்களும் தனுர் யாகத்தைக் காண்பதற்காக மதுரா செல்லப் புறப்பட்டார்கள். சூரியன் உதயமானதும் அக்ரூரர் நீராடி முடித்து, தேரில் ஏறி, கிருஷ்ணருடனும் பலராமருடனும் மதுராவுக்குப் புறப்பட்டார். நந்த மகாராஜாவும் மற்ற ஆயர்களும் மாட்டு வண்டிகளில் தயிர், பால், நெய் போன்ற பால் பண்டங்களை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணர் மற்றும் பலராமர் சென்ற தேரைப் பின் தொடர்ந்து சென்றார்கள்.

OLYMPUS DIGITAL CAMERA

கோபியர்களெல்லாம் கிருஷ்ணரும் பலராமரும் வீற்றிருந்த தேரைச் சூழ்ந்து கொண்டு வழியை மறைக்க வேண்டாமென்று அவர்கள் கேட்டுக் கொண்டதையும் பொருட்படுத்தாமல், கண்களில் பரிதாபத்துடன் கிருஷ்ணரையும் பலராமரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கோபியரின் துயரம் கிருஷ்ணரை வெகுவாகப் பாதித்தது. ஆனால் மதுராவிற்குச் செல்வதை அவர் தன் முக்கிய கடமையாகக் கருதினார். ஏனெனில் கிருஷ்ணர் மதுரா சென்றால்தான் கம்சனை வதம் செய்ய முடியும். எனவே கிருஷ்ணர் கோபியருக்கு சமாதான வார்த்தைகள் கூறி, அவர்கள் வருந்தத் தேவையில்லை, தன் கடமையை முடித்துவிட்டு விரைவில் திரும்புவதாகவும் கூறினார். ஆனாலும் அவர்கள் வழியை விட்டு விலகுவதாகக் காணவில்லை.

என்றாலும் தேர் புறப்படத் தொடங்கி, மேற்கு நோக்கிச் சென்றது. தேரின் மேலிருந்த கொடி கண்ணுக்குத் தெரிந்த வரை அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அக்ரூரரும் பலராமரும் உடனிருக்க, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் யமுனை நதியின் கரையை நோக்கி மிகுந்த வேகத்துடன் தேரைச் செலுத்தினார். யமுனையில் நீராடிய மாத்திரத்தில் ஒருவன் தன் பாவச் சுமைகளைக் களையலாம்.

கிருஷ்ணரும் பலராமரும் நதியில் நீராடி முகம் கழுவிக் கொண்டார்கள். யமுனையின் பளிங்கு போன்ற தெளிவான நீரைச் சிறிது அருந்தி விட்டு, அவர்கள் இருவரும் மீண்டும் தேரில் அமர்ந்திருந்தார்கள். உயர்ந்த மரங்களின் நிழலில் தேர் நின்று கொண்டிருந்தது. பின்னர் அக்ரூரர் அவர்களிடம் அனுமதி பெற்று, யமுனையில் நீராடச் சென்றார். வேத முறையின் படி ஒருவன் நதியில் நீராடியபின் இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

akrurar

அக்ரூரர் இவ்வாறு நதியில் நின்ற போது அவர் திடீரென்று கிருஷ்ணரும் பலராமரும் நீரில் நின்று கொண்டிருக்கக் கண்டார். இது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில் கிருஷ்ணரும் பலராமரும் தேரில் உட்கார்ந்திருப்பதை அவர் நன்கறிவார். எனவே அவர் குழப்படடைந்து, அவ்விரு சிறுவர்களும் எற்கிருந்தார்களென்பதைப் பார்க்க நீரிலிருந்து வெளியேறினார். அவர்களிருவரும் முன்பு போலவே தேரில் அமர்ந்திருக்கக் கண்டு அவர் மேலும் ஆச்சரியமடைந்தார். அவர்களைத் தேரின் மேல் பார்த்தபோது, நீரில் அவர்களைக் கண்டது உண்மைதானா என்று அவர் எண்ணமிடலானார்.

எனவே அவர் மீண்டும் நதிக்குச் சென்றார். இம்முறை அவர் நதியில் கிருஷ்ணரையும் பலராமரையும் தவிர பல்வேறான தேவர்களையும், சித்தர்களையும், சாரணர்களையும், கந்தவர்களையும் கண்டார். அவர்கள் எல்லோரும் பிரபுவின் முன் நின்றிருந்தார்கள். பிரபு நீரில் படுத்திருந்தார். ஆயிரம் தலைகளைக் கொண்ட சேஷ நாகரையும் அக்ரூரர் கண்டார். சேஷ நாகப் பிரபு நீல நிற ஆடைகளை அணிந்திருந்தார். அவரின் கழுத்துக்கள் பால் வண்ணமாகக் காட்சியளித்தன. சேஷ நாகரின் வெள்ளைக் கழுத்துக்கள் பனி மூடிய மலைச் சிகரங்களைப் போலவும் தோன்றின. சேஷ நாகரின் வளைவான மடியின் மேல் கிருஷ்ணர் நான்கு கைகளுடன் நிதானமாக அமர்ந்திருப்பதை அக்ரூரர் கண்டார்.

பலராமர் சேஷ நாகராவும் கிருஷ்ணர் மகா விஷ்ணுவாகவும் உரு மாறி அக்ரூரருக்குக் காட்சியளித்தார்கள். புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் நான்கு கைகளுடன் மிக அழகாகப் புன்னகைத்திருப்பதை அக்ரூரர் கண்டார். பிரபுவின் தரிசனத்தால் எல்லோரும் மகிழ்ந்திருந்தார்கள். அவரும் மிகுந்த பிரியத்துடன் எல்லேரையும் நோக்கிக் கொண்டிருந்தார். விஷ்ணு மூத்திக்குரிய விசேஷ சின்னங்களான சங்கு, சக்கரம், கதை, தாமரை, ஆகியவற்றை நான்கு கைகளிலும் ஏந்தி அவர் மிக அழகாகக் காட்சியளித்தார். விஷ்ணுவுக்கு உரித்தான குறிகள் அவரின் மார்பில் விளங்கின.

akrura_worships_footsteps

பிரபுவின் நெருங்கிய தோழர்களும், நான்கு குமாரர்களுமான, சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகியோரும், சுனந்தர், நந்தர் போன்ற மற்றத் தோழர்களும், பிரம்மா, சிவன் போன்ற தேவர்களும் பிரபுவைச் சூழ்ந்திருப்பதை அக்ரூரர் கண்டார். மகா பண்டிதர்களான ஒன்பது மகரிஷிகளும் அங்கிருந்தார்கள். பிரகலாதர், நாரதர் போன்ற பெரும் பக்தர்கள் திறந்த உள்ளங்களுடனும், புனிதமான சொற்களாலும் பிரபுவைத் துதித்துக் கொண்டிருந்தார்கள். புருஷோத்தமரான முழுமுதற் கடவுளின் பரமான ரூபத்தைக் கண்டவுடன் அக்ரூரர் மகிழ்ச்சியில் திளைத்தவராய் பக்தி மேலீட்டால் உடல் முழுவதும் பரமாhனந்தம் பரவுவதை உணர்ந்தார். அவர் கண நேரம் திகைப்படைந்தாலும், உணர்வைத் தெளிவாக்கிக் கொண்டு பகவானின் முன் தலை வணங்கிக், கைகளைக் கூப்பியபடி, நெகிழ்ந்த குரலில் பிரார்த்திக்கலானார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – கேசி வதம்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – கேசி வதம்

பகவான் ஸ்ரீகிருஷ்ணரைக் கொல்வதற்காக கம்சன் தன் நண்பனான கேசி என்ற அரக்கனை விருந்தாவனம் செல்லுமாறு கட்டளையிட்டான். கம்சனின் கட்டளையைப் பெற்றதும் கேசி அசுரன் பயங்கரமான ஒரு குதிரையின் வடிவத்தை மேற்கொண்டு விருந்தவனப் பகுதிக்குள் நுழைந்தான். பிடரி மயிர் காற்றில் பறக்க, அவன் உரக்க கனைத்த ஒலி கேட்டு உலகமே நடுங்கியது. விருந்தாவன வாசிகள் பயந்து நடுங்கும்படி அவன் கனைத்து, வாலை ஆகாயத்தில் பெரும் மேகம் போல் சுழற்றியதைக் கிருஷ்ணர் கண்டார். குதிரை வடிவிலிருந்த அசுரன் தன்னை போருக்கு அழைக்கிறான் என்பதைக் கிருஷ்ணர் புரிந்து கொண்டார்.

அவர் அசுரனைப் போரிட அழைத்த போது அவன் சிங்கம் போல் கர்ஜித்தபடி அவரை நோக்கி முன்னேறினான். மிகுந்த வேகத்துடன் முன்னேறிய கேசி, தன் பலம் மிக்க, கற்களைப் போல் கடினமான கால்களால் கிருஷ்ணரை மிதித்துக் கொல்ல முயற்சித்தான். ஆனால் கிருஷ்ணர் உடனே அவனுடைய கால்களைப் பற்றிக் கொண்டு அவனைத் திகைக்கச் செய்தார். பின் கேசியினுடைய கால்களைப் பிடித்த படி அவனைச் சுழற்றினார். சில சுற்றுக்களக்குப் பின், கருடன் பெரிய பாம்பை எறிவது போல், கிருஷ்ணர் கேசியை நூறு கஜ தூரத்துக்கு அப்பால் எறிந்தார்.

OLYMPUS DIGITAL CAMERA

அவ்வாறு எறியப்பட்டதும் குதிரை வடிவில் இருந்த கேசி நினைவிழந்தான். என்றாலும் சிறிது நேரத்தில் மீண்டும் உணர்வு பெற்று, மிகுந்த கோபத்துடன், வாயைப் பிழந்தபடி கிருஷ்ணரை நோக்கி வேகமாகச் சென்று தாக்க முற்பட்டான். அவன் அருகில் வந்ததும் கிருஷ்ணர் தம் இடது கையை கேசியான குதிரையின் வாயில் திணித்தார். கிருஷ்ணரின் கை, காய்ச்சிய இரும்பு போல் சுடுவதை உணர்ந்த கேசி, வலியால் துடித்தான். அவனின் பற்கள் வெளிவந்தன.

அவனின் வாயினுள் இருந்த கிருஷ்ணரின் கை உருவத்தில் பெரிதாகியதால் அவனுக்குத் தொண்டை அடைத்து, மூச்சுத் திணறி, உடம்பெல்லாம் வியர்த்தது. கால்களை அங்கும் இங்கும் உதைத்தான். இறுதி மூச்சு வெளிப்பட்ட போது அவனின் குதிரை விழிகள் பிதுங்கி அவனின் உயிர் மூச்சு வெளியேறியது. குதிரை இறந்ததும் அதன் வாய் தளர்ந்ததால் கிருஷ்ணர் தன் கையை எளிதாக விடுவித்துக் கொண்டார். கேசி இவ்வாறு விரைவில் மரணமடைந்தது கண்டு கிருஷ்ணர் வியப்படையவில்லை. ஆனால் தேவர்கள் ஆச்சரியப்பட்டு, அவரை பாராட்டும் வகையில் ஆகாயத்திலிருந்து பூக்களைத் தூவினார்கள்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – வியோமாசுர வதம்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – வியோமாசுர வதம்

ஒரு நாள் காலையில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் அவரது நண்பர்களும் கோவர்த்தன கிரியின் உச்சியில் விளையாடுவதற்காகச் சென்றார்கள். கள்வர்களும் காவலர்களுமாக அவர்கள் நடித்து விளையாடினார்கள். சிலர் கள்வர்களாகவும் சிலர் ஆட்டுக் குட்டிகளாகவும் பங்கேற்றார்கள். இவ்வாறு அவர்கள் குழந்தைகளாக விளையாடி மகிழ்கையில் வியோமாசுரன் என்ற பெயருடைய ஒரு அரக்கன் அங்கு தோன்றினான். வியோமாசுரன் என்றால் ஆகாயத்தில் பறக்கும் அசுரன் என்று பொருள். அவன் மற்றொரு மாபெரும் அசுரனான மாயா என்பவனின் மகன். இவ்வரக்கர்கள் பல மாயச் செயல்களைப் புரியக் கூடியவர்கள்.

வியோமாசுரன் இடைச் சிறுவனாக உருவம் தாங்கி விளையாட்டில் காவலர்களாக நடித்த சிறுவர்களோடு கலந்து கொண்டு, ஆட்டுக் குட்டிகளாக நடித்த பல சிறுவர்களைக் கவர்ந்து சென்றான். ஒருவர் பின் ஒருவராகப் பல சிறுவர்களை அசுரன் கடத்திச் சென்று, அவர்களை மலைக் குகைகளினுள் பதுக்கி வைத்து, கற்களால் குகைகளின் வாய்களை மூடிவிட்டான். அசுரனின் தந்திரத்தைக் கிருஷ்ணர் அறிந்து கொண்டார்.

vyomasura-vatham

உடனே அவர், சிங்கம் ஆட்டுக் குட்டியைப் பிடிப்பது போல் அசுரனைப் பிடித்து விட்டார். அவரின் பிடியிலிருந்து தப்புவதற்காக அசுரன் ஒரு பெரிய மலையின் அளவிற்குத் தன் உருவத்தைப் பெரிதாக்கினான். ஆனாலும் கிருஷ்ணர் தன் பிடியைத் தளர்த்தவில்லை. மிகுந்த பலத்துடன் அசுரனைத் தரையில் வீழ்த்திக் கொன்றார். வியோமாசுரனைக் கொன்ற பின் கிருஷ்ணர், தம் நண்பர்களையெல்லாம் குகைகளில் இருந்து விடுவித்தார். அவரது வியத்தகு செயல்களுக்காக அவரின் நண்பர்களும் தேவர்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பாராட்டினார்கள். அதன் பின் கிருஷ்ணர், தன் நண்பர்களுடனும் பசுக்களுடனும் விருந்தாவனத்துக்குத் திரும்பிச் சென்றார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – அரிஷ்டாசுரன் வதம்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள் – அரிஷ்டாசுரன் வதம்

ஒரு நாள் அரிஷ்டாசுரன் என்ற அரக்கன் பெருத்த உடலும் கொம்புகளுமுடைய மிகப் பெரிய எருதின் வடிவில் விருந்தாவன கிராமத்தினுள் நுழைந்து, காலால் பூமியைக் கிளறியபடி குழப்பம் விளைவிக்கலானான். பெரும் பூகம்பம் ஏற்பட்டது போல் நிலம் அதிர்ந்தது. அவன் பயங்கரமாக உறுமிக் கொண்டு நதிக்கரையில் பூமியைக் கிளறிய பின் கிராமத்தினுள் நுழைந்தான். அவனின் உறுமல் மிகவும் பயங்கரமாக இருந்ததால் அதைக் கேட்ட கர்ப்பிணிப் பெண்கள் சிலருக்கும், சினையுற்றிருந்த பசுக்களுக்கும் கர்ப்ப சேதம் ஏற்பட்டது. எருதின் உடல் மிகப் பெரியதாகவும், பலமுள்ளதாகவும் இருந்ததால், மலையின் முகட்டில் மேகங்கள் சூழ்ந்திருப்பது போல் காணப்பட்டது. அரிஷ்டாசுரனின் பயங்கர உருவத்தைக் கண்டு ஆண், பெண், யாவரும் பெரும் அச்சம் கொண்டனர். பசுக்களும் மற்ற மிருகங்களும் கிராமத்தை விட்டு ஓடின.

நிலமை மிகவும் பயங்கரமாயிற்று. விருந்தாவன வாசிகள் எல்லோரும், கிருஷ்ணா, எங்களைக் காப்பாற்றும் என்று ஓலமிட்டனர். பசுக்களும் ஓடுவதைக் கண்ட கிருஷ்ணர், பயப்படாதீர்கள், என்று எல்லோருக்கும் அபயமளித்தார். அரிஷ்டாசுரனைக் கிருஷ்ணர் விளித்துக் கூறினார்: நீ மிகவும் இழிந்த பிராணி. கோகுல வாசிகளை ஏன் பயமுறுத்துகிறாய்? இதனால் உனக்கு ஏற்படும் நன்மை என்ன? என் அதிகாரத்திற்கு நீ சவால் விட எண்ணியிருந்தால் நான் உன்னோடு யுத்தம் செய்யத் தயார். இவ்வாறு கிருஷ்ணர் அசுரனுக்கு சவால் விட்டார்.

OLYMPUS DIGITAL CAMERA

கிருஷ்ணரின் சொற்களைக் கேட்ட அசுரன் மிகவும் கோபமுற்றான். கிருஷ்ணர் ஒரு நண்பனின் தோளில் கை வைத்தபடி எருதின் முன் வந்து நின்றார். எருது மிகுந்த கோபத்துடன் கிருஷ்ணரை நோக்கி முன்னோறியது. நிலத்தைத் தன் கால்களால் கிளறியபடி அரிஷ்டாசுரன் வாலை உயர்த்தினான். வாலின் நுனியின் மேல், மேகம் ஒன்று சுற்றி வருவது போல் தோன்றியது. அவனின் கண்கள் சிவந்து கோபத்தால் சுழன்றன. கிருஷ்ணரை நோக்கி கொம்புகளைக் குறி வைத்தபடி இந்திரனின் வஜ்ராயுதம் போல் அசுரன் அவரைத் தாக்கினான். ஆனால் கிருஷ்ணர் உடனே அசுரனின் கொம்புளைப் பிடித்து, பெரிய யானை ஒன்று சிறிய எதிரி யானையைத் தாக்குவது போல், அசுரனைத் தூக்கி எறிந்தார்.

அசுரன் மிகவும் களைப்படைந்தான். அவனுக்கு வியர்த்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நிலத்திலிருந்து எழுந்து, மிகுந்த கோபத்துடனும் பலத்துடனும் மீண்டும் கிருஷ்ணரைத் தாக்கினான். கிருஷ்ணரைத் தாக்க விரைந்த போது அவனுக்கு கடுமையாக மூச்சு வாங்கியது. மீண்டும் கிருஷ்ணர் அவனின் கொம்புகளைப் பிடித்து அவனைத் தரையில் எறிந்த போது, கொம்புகள் உடைந்தன. ஈரத்துணியைத் தரையில் துவைப்பது போல் கிருஷ்ணர் அசுரனைக் காலால் உதைத்தார். உதை பட்ட அரிஷ்டாசுரன், புரண்டு விழுந்ததும் அவனின் உடலில் இருந்து ரத்தம் வெளி;யேறி, கண்கள் பிதுங்கி அவன் மரணமடைந்தான். கிருஷ்ணரின் வியத்தகு சாதனையைப் பாராட்டி தேவர்கள் மலர்மாரி பொழிந்தார்கள்.