Month: February 2014

சிறுவர் கதைகள் – குறையா நிறையா?

ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

“ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்”

அதன் எஜமானன் கூறினான்.

“பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்”

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது

சிறுவர் கதைகள் – நாம் செய்யும் காரியங்களும் பேசும்!

ஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய், மனவி, மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான். குயவனின் மனைவிக்கு அவளது மாமியாரைப் பிடிக்கவில்லை. அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பத் துணிந்தாள். குயவனை தினமும் நச்சரித்தாள். அவனது அம்மாவை பக்கத்தில் ஒரு வீட்டில் குடியமர்த்தும் படி சொன்னாள்.

வெகு நாட்கள் குயவன் அவள் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்தான்.

மனைவி விடாமல் நச்சரித்தாள். அவனது அம்மாவிற்குத் தனியாக இருந்தால் ஒரு குறையும் வராது என்றும், அவரது சாப்பாட்டுத் தேவையைத் தான் கவனித்துக் கொள்வதாகவும் சொன்னாள்.

ஒரு நாள் குடியானவனுக்கு நச்சரிப்புத் தாங்க முடியவில்லை. அம்மாவைப் இருபது அடி தள்ளியிருந்த ஒரு வீட்டில் குடியமர்த்தினான். மனைவி மாமியாரிடம் குயவன் செய்த தட்டு ஒன்றைக் கொடுத்து, வேளாவேளைக்குத் தன் வீட்டுக்குத் தட்டை எடுத்து வந்தால் அதில் உணவு நிரப்பித் தருவதாகவும், அதை மாமியார் அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம் என்றும் கூறினாள்.

மாமியாருக்கு இது அவமானமாகத் தோன்றினாலும், தன் மகனுக்காக வாயைத் திறக்காமல் மருமகள் சொன்ன வழியில் வாழ்ந்து வந்தாள்.

பேரனுக்குப் பாட்டி வீட்டை விட்டுப் போனது அறவே பிடிக்கவில்லை. அவன் அம்மாவுக்குத் தெரியாமல் சில சமயம் பாட்டி வீட்டிற்குச் சென்று விளையாடுவான்.

அவன் வளர வளர குயவன் மண்பாண்டம் செய்வதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். சில சமயம் குயவன் வேலை செய்யாத போது அவனது இயந்திரத்தை மகன் இயக்கிப் பார்க்க ஆரம்பித்தான். ஒரு நாள் மகனுக்கு அப்பாவைப் போலவே மண்பாண்டம் செய்ய வந்தது. மிகச் சிறு வயதிலேயே அவன் அப்பாவின் தொழிலைக் கற்றுக் கொண்டான்.

அவன் முதல் முதலில் தன் அம்மாவுக்கு அருமையான தட்டு ஒன்றைச் செய்தான். அதை அவன் அம்மாவிடம் கொடுத்த போது அவள் மகனின் திறமையை நினத்து பெருமைப் பட்டாள். தனக்கு அவன் முதலில் பொருள் செய்து கொடுத்ததை எண்ணி அளவில்லா மகிழ்ச்சி அடைந்தாள். தனது சிறிய மகனை இவ்வாறு கேட்டாள்: “மகனே! நீ செய்த தட்டு மிக அருமை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எத்தனையோ பாண்டங்கள் இருக்கும் போது ஏன் எனக்கு ஒரு தட்டைச் செய்து தர வேண்டும் என்று உனக்குத் தோன்றியது?”

மகன் குழந்தைத் தனமாகச் சொன்னான்: “அம்மா! ஒரு நாள் நான் அப்பாவைப் போலக் கல்யாணம் செய்து கொள்வேன். அப்போது நீ பாட்டியைப் போல பக்கத்து வீட்டுக்குப் போய் விடுவாய் அல்லவா. அப்போது உனக்கு என் மனைவி தினமும் சாப்பாடு கொடுக்க ஒரு தட்டு வேண்டுமல்லவா! அதைத்தான் உனக்கு நான் இப்போது செய்து கொடுத்தேன்”

குயவனின் மனைவிக்குத் தான் செய்த காரியத்தின் தீவிரம் புரிந்தது. மிகவும் வருந்தினாள். மாமியாரைத் தன் வீட்டுடன் வரவழைத்து மிகவும் அன்புடன் கவனித்துக் கொண்டாள்.

சிறுவர் கதைகள் – பிச்சைக்காரனும் தங்க நாணயமும்

ஒரு பிச்சைக்காரன் உணவுக்காக வீடு வீடாக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு, சிக்குப் பிடித்த தலைமுடியோடு இருந்தான். ஒரு பழைய கோணிப் பையே அவனுக்கு உடமையாக இருந்தது.

ஒவ்வொரு வீடாகப் போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் தனக்குள் அந்த வீட்டைப் பற்றி சொல்லிக் கொள்வான். ஒரு வீட்டின் முன்னே போய் சொன்ன வார்த்தைகள்; “வீடு மிகப் பெரியது. ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிறைய இருந்தும் திருப்தி இல்லை. அவர்கள் எப்போதும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். கடைசியில் அவர்கள் பேராசையால் எல்லாவற்றையும் இழப்பார்கள்…”

இன்னொரு வீட்டுக்குப் போனான். உணவு கிடைக்கவிலை. “இந்த வீட்டில் உள்ளவன் கோடீஸ்வரன். ஆனால் இருக்கிற பணத்தில் திருப்தியடையாமல் அவற்றை இரட்டை மடங்காக்க சூதாடினான். கடைசியில் எல்லாவற்றையும் இழந்தான். எனக்கோ கொஞ்சப் பணம் கிடைத்தால் போதும். திருப்தி கொள்வேன். அதிக ஆசைப் படமாட்டேன்!” என்று அந்த பிச்சைக்காரன் சொன்னதும் அதிர்ஷ்ட தேவதை அவன் முன்னே தோன்றியது.

“நான் உனக்கு உதவப் போகிறேன். நீ உன்னுடைய கோணிப்பையைப் பிடி. நான் அதனுள்ளே தங்க நாணயங்கள் போடுவேன். உனக்கு எவ்வளவு வேண்டுமோ பெற்றுக் கொள்”.

பிச்சைக்காரன் அதிர்ஷ்ட தேவதையைப் பார்த்தான். அதன் கரங்களில் தங்க நாணயங்கள் நிறைய இருந்தன. உடனே அவன் கோணிப்பையை விரித்தான். அப்போது அதிர்ஷ்ட தேவதை சொல்லியது: “கோணிப்பைக்குள் விழுகின்ற நாணயங்கள் தங்கமாக இருக்கும். அவை நிலத்தில் விழுந்தால் தூசியாகி விடும். இது எனது எச்சரிக்கை…”

பிச்சைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான். அதிர்ஷ்ட தேவதை மீண்டும் எச்சரித்தது. அதன் பிறகு பிச்சைக்காரனின் கோணிப்பைக்குள் தங்க நாணயங்களைக் கொட்டியது. கோணிப்பை நிரம்பியதும் தேவதை தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிறுத்தியது. “உன் கோணிப்பையில் இருக்கிற நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்கும். அது போதும்தானே?” என்றது அதிர்ஷ்ட தேவதை. “போதாது. இன்னும் வேண்டும்” என்றான் பிச்சைக்காரன்.

அதிர்ஷ்ட தேவதை மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்து விட்டு சொன்னது, “உன் கோணிப்பை இதற்கு மேல் தாங்காது”. பிச்சைக்காரன் சொன்னான்… “இன்னும் கொஞ்சம் வேண்டும்”…”. அதிர்ஷ்ட தேவதை மேலும் தங்க நாணயங்கள் சிலவற்றைக் கொடுத்துவிட்டு நிறுத்தியது.

“உன் கோணிப்பை கிழியப் போகிறது…”. பிச்சைக்காரன் மறுத்தான். “இல்லை… நீ இன்னும் கொஞ்சம் நாணய்ங்களைப் போடு! என் கோணிப்பை தாங்கும்…” மறு வினாடி கோணிப்பை கிழிந்தது. அதனுள் இருந்த நாணயங்கள் கீழே விழுந்து தூசியாகின. அதிர்ஷ்ட தேவதையும் மறைந்தது. பிச்சைக்காரன் திகைத்துப் போய் நின்றான்.

சிறுவர் கதைகள் – வல்லவர் யார் ?

கல்லில் சிலை வடிக்கும் சிற்பி ஒருவன் ஒரு தேவதையின் சிலையை வடித்துக் கொண்டிருந்தான். அற்புதமாக தத்ரூபமாகத் தோற்றமளித்த அந்தச் சிலை வடித்து முடித்த கணம் ஒரு மின்னல் நேரத்தில் உயிர் பெற்றது. தேவதை மகிழ்ச்சியுடன் சிற்பியின் கலைத் திறனைப் பாராட்டி வேண்டிய வரம் ஒன்று கேட்குமாறு சொன்னது.

சிற்பிக்கு வல்லவர்களுக்கு வல்லவனாக வேண்டும் என்ற வெகுநாள் ஆசை. அவன் அதை தேவதையிடம் சொன்னான். தேவதை அன்புடன் சிரித்துக் கொண்டே “சிற்பியே! நன்கு சிந்தித்துத்தான் கேட்கிறாயா?” என்று கேட்டது. சிற்பியும் மிகுந்த ஆவலுடன் “ஆம்!” என்றான்.

தேவதை “சரி! அடுத்த இரண்டு நாட்களுக்கு நீ யாரை அல்லது எதை வல்லவன் என்று நினைக்கிறாயோ அதுவாகவே மாறிவிடுவாய்” என்று வரம் அளித்து விட்டு அதே மின்னல் வேகத்தில் மறுபடியும் சிலை வடிவிற்குப் போய் விட்டது,

சிற்பி திடீரென்று நிகழ்ந்த இந்த நிகழ்வைப் பற்றி நம்புவதா வேண்டாமா என்று தீவிரமாகச் சிந்தித்துக்கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தான்.

சூரியன் உச்சிக்கு வந்து தகித்துக் கொண்டிருந்தது. சிலை வடிக்கும் கருங்கற்பாறை கொதித்தது. கல்லைக் கொத்தும் உளி கொதித்தது. சிற்பியின் உடலெல்லாம் வியர்த்து வழிந்தது. சிற்பி “இந்த சூரியன் மிகச் சக்தி படைத்தவனாக இருக்கிறானே. எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கிறானே! இவன்தான் மிக வல்லவனாக இருக்க வேண்டும்” என்று நினைத்தான். என்ன ஆச்சரியம்! உடனே அவன் தேவதை கொடுத்த வரத்தின் சக்தியால் சூரியனாகவே மாறிவிட்டான்.

சிறிது நேரம் உலகைச் சுற்றி வந்து தனது சக்தியால் ஆனந்தமாக கண்ணில் பட்ட எல்லாவற்றையும் தகிக்கச் செய்து மகிழ்ந்து கொண்டிருந்தான்.

ஒரு இடத்தில் மேகங்கள் சூழ்ந்திருந்தன. அவை சூரியனின் கதிர்களை மறைத்தன. ஆகவே அவை மறைத்த இடங்களை சூரியக் கதிர்கள் சென்றடைய முடியவில்லை. சூரியனாக இருந்த சிற்பி, தன் மிக உக்கிரமான கதிர்களை அந்த மேகங்கள் மேல் செலுத்திப் பார்த்தான். அந்தக் கருமேகக் கூட்டங்கள் அசைவதாக இல்லை. “என்ன… இந்த மேகக் கூட்டங்கள் சூரியனின் சக்திமிக்க கதிர்களையே மறைக்கும் வல்லமை படைத்தவையாக இருக்கின்றனவே” என்று நினைத்தவுடன் அவன் அந்தக் கருமேகங்களாக மாறிவிட்டான்.

சிறிது நேரம் மகிழ்ச்சியாக சூரியக் கதிர்களை மறைத்துக் கொண்டு ஆனந்தப் பட்டுக் கொண்டிருந்தான். அப்போது பலமாகக் காற்றடித்தது. அந்தக் காற்று மேகக் கூட்டங்களை இப்படியும் அப்படியுமாக அலைக்கழித்தது. சிற்பி எவ்வளவு முயன்றும் காற்றின் வேகத்திற்கு எதிராக எதையும் செய்ய முடியவில்லை. “சூரியனின் கதிர்களை மறைக்கும் மேகத்தையே செலுத்தும் காற்று எவ்வளவு வல்லமை படைத்ததாக இருக்க வேண்டும்” என்று நினைத்தான். அந்தக் கணமே அவன் காற்றாக மாறிவிட்டான்.

காற்று வடிவில் சிற்பி தென்றலாகவும், புயலாகவும் எண்ணப் படி மாறி மாறி உலகைக் கலக்கிக் கொண்டிருந்தான். மிகவும் வல்லமை படைத்தவனாகத் தன்னைப் பற்றி எண்ணி எண்ணி நினைத்த இடத்திற்கெல்லாம் சடுதியில் சென்று மகிச்சியில் திளைத்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு முறை அப்படிக் கடும் புயலாக மாறிச் சென்று கொண்டிருந்த வழியை மறித்துக் கொண்டு ஒரு நெடிதுயர்ந்த மலை நின்று கொண்டிருந்தது. எவ்வளவோ உக்கிரமாக முட்டி மோதிப் பார்த்தும் கடும் புயலாய் வடிவெடுத்திருந்த சிற்பியால் அந்த மலையைக் கடந்து செல்ல முடியவில்லை. “அட.. இந்த மலைக்குக் கடும் புயலையும் மிஞ்சும் சக்தி இருப்பது முன்னமேயே நமக்குத் தெரியாமல் போய் விட்டதே!” என்று நினைத்த மாத்திரம் அவன் ஒரு மலையாக மாறிவிட்டான்.

அப்போது மற்றொரு சிற்பி அந்த மலை மேல் மெதுவாக ஏறி வந்தான். அவன் ஒரு இடத்தில் உள்ள மலையின் பாறைகளைத் தேர்ந்தெடுத்து தன் உளியையும் சுத்தியலையும் கொண்டு பாறையைப் பிளந்து சிலை வடிக்க ஆரம்பித்தான். மலை வடிவில் இருந்த சிற்பி “சக்தி வாய்ந்த மலையின் பாறைகளையே பிளக்கும் சிற்பிதான் மலையை விட வல்லவன்” என்று நினைத்தான்.

தேவதையின் வரம் பாக்கியிருக்கிறதே! அதனால் அப்படி நினைத்த மாத்திரத்தில் பழைய படி அவன் தன் சுய உருவை அடைந்து விட்டான்.

சுய உருவிற்கே திடீரென்று திரும்பி விட்ட அவனுக்கு இப்போது மூளைக்குள் ஏதோ பொறி தட்டியது போல் இருந்தது. நிதானமாக அமர்ந்து, தன் அனுபவங்களை நினைத்துப் பார்த்தான்.

ஒவ்வோருவருக்கும் ஒரு தனித்துவமும் அதைச் சார்ந்து வல்லமைகளும் இருப்பதை அறிந்து கொண்டான். அனைவருக்கும் வல்லவனாக் விளங்க வேண்டும் என்ற நினைப்பைக் கை விட்டான். தன் வல்லமைகளைப் முடிந்த வரை பெருக்கிக் கொண்டு அவற்றின் மூலம் உலகிற்கு உப்பாக விளங்குவதே சிறந்தது என்று நினைக்க ஆரம்பித்தான்.

தேவதை அவன் முன் திரும்பவும் தோன்றி அவனுக்கு நிறையப் பரிசுகளை மிக மகிழ்ச்சியுடன் வழங்கியது.

சிறுவர் கதைகள் – எறும்பு, பூரான் வல்லவர் யார் ?

தரையில் எறும்பு மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பூரான் அதன் அருகே வந்தது.

“நண்பா! நான் வருவதைக் கூடக் கவனிக்காமல் எங்கே சென்று கொண்டிருக்கிறாய்?” என்று எறும்பிடம் கேட்டது.

எறும்பு “பூரான் நண்பா! உன்னைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் கடமையை நான் சரிவரச் செய்ய முடியாதே” என்று ஊர்ந்து கொண்டே சொன்னது.

“அப்படியென்ன முக்கியமான கடமை?” என்று பூரான் கேட்டது.

எறும்பும் ஊர்வதை நிறுத்தாமல் “மழைக்காலத்திற்குத் தேவையான உணவை வெயில் காலத்திலேயே தேடிச் சேர்த்து வைப்பது என் கடமை. உன்னிடம் பேசிக் கொண்டிருந்தால் என் கடமையைச் செய்ய முடியாது” என்று கூறிச் சென்று விட்டது.

பூரான், எறும்பு தன்னை ஏமாற்றி விட்டதாகக் கருதியது. எறும்பை மட்டம் தட்டியே தீர வேண்டும் என்று நினைத்துக் கொண்டது.

அடுத்த நாள் எறும்பு வரும் வழியில் நின்று அதை வழி மறித்தது. “எறும்பே, கடமையை சரிவரச் செய்வதால் மட்டும் நீ வல்லவனாக முடியாது!. உன்னால் என்னைப் போல வேகமாக ஊர்ந்து வர முடியுமா? அப்படி வந்தால் நீ என்னை விட வல்லவன் என்று ஒத்துக் கொள்கிறேன்” என்று கேட்டது.

அதற்கு எறும்பு “வீண் பேச்சு வேண்டாமே. நான் என் கடமைச் செய்ய விடேன்” என்று பணிவாகக் கேட்டது.

பூரான் “தப்பித்து ஓடப் பார்க்காதே!” என்று கேலி செய்தது.

அதற்கு எறும்பு மிக அமைதியுடன் “பூரானே. உன் அளவுக்கு வேகமாக என்னால் ஊர முடியாது. அந்த தைரியத்தில் நீ பேசுகிறாய். ஆனால், நான் செய்யும் சில காரியங்களை உன்னாலும் செய்ய முடியாது. அதனால் யார் வலியவன் என்ற பரிட்சையெல்லாம் வேண்டாம்” என்று திரும்பவும் கூறியது.
பூரானோ “அப்படி என்ன சாகசத்தை நீ கிழித்து விடப் போகிறாய். சாதூரியமாகப் பேசக் கற்று வைத்திருக்கிறாய்” என்று கூறியது.

எறும்பு பூரானை பதில் பேசாமல் ஒரு தண்ணீர் தொட்டியின் அருகில் அழைத்துச் சென்றது. பூரானை வேடிக்கை பார்க்கச் சொல்லி விட்டு கரையின் அருகில் இருந்த ஒரு துரும்பில் தொற்றிக்கொண்டு தண்ணிரில் விழுந்து அந்த துரும்பைப் பற்றிக் கொண்டு தண்ணீரில் மிதந்தது.

பூரானைப் பார்த்து “உன்னால் இப்படிச் செய்து காட்ட முடியுமா?” என்று கேட்டது.

பூரானுக்கு அப்போதுதான் எல்லோருக்கும் சில வல்லமைகளும் சில இயலாமைகளும் இயற்கையிலேயே உண்டு என்று புரிந்தது. எறும்பிடம் மன்னிப்புக் கேட்டது.

அன்றிலிருந்து பூரான் எறும்பின் கருத்துகளை மதித்து நடந்து அதற்குச் சிறந்த நண்பனாகத் திகழ்ந்து வந்தது.

சிறுவர் கதைகள் – குறை காண முடியாத பணியொன்று சொல்வீர்!

ஒரு ஊரில் ஒரு குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள். இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள். அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர்.

குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் “எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது?” என்று கேட்டான்.

குயவன் “அட போப்பா! எனக்குக் களிமண்ணில் வேலை.. நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக் கொண்டு … கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. உன்னைப் போல வெள்ளையும் சள்ளையுமாகவா இருக்க முடிகிறது? அலுப்புத் தட்டுகிறது போ!” என்று கொட்டாவி விட்டான்.

அதற்கு வைர வியாபாரி சொன்னான் “உனக்கு என்ன தெரியும் என் வேலையைப் பற்றி… நாளெல்லாம் வைரத்தைத் தீட்டுகிறேன் என்று எத்தனை முறை நான் என் கையை அறுத்து ரத்த காயப் படுத்திக் கொள்கிறேன் தெரியுமா உனக்கு? உன் வேலையில் இந்த ஆபத்தெல்லாம் கிடையாதே. வேலை செய்து கையெல்லாம் புண்ணாகிப் போனதுதான் மிச்சம். இன்றும் நாள் முழுவதும் இந்த வேலையைத்தான் ஆபத்து என்று தெரிந்தே செய்ய வேண்டும்…” என்று அலுத்துக் கொண்டே புண்ணாகிப் போன தன் கைகளைக் காட்டினான்.

எல்லோருக்கும் அவரவர் வேலையில் மகிழ்ச்சி இல்லையா? மகிழ்ச்சியான வேலைதான் எது? என்று இருவரும் சிந்தித்தார்கள். அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை.

ஊரில் எல்லோரும் மதித்து நடக்கும் சிந்தனையில் சிறந்த பெரியவர் ஒருவர் இருந்தார். இருவரும் அவரிடம் சென்று “ஐயா எங்கள் வேலையில் அலுப்பும் ஆபத்தும்தான் தெரிகிறது? எப்போதும் மகிழ்ச்சியாகச் செய்யக் கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்” என்று கேட்டார்கள்.

பெரியவர் புன்னகைத்துக் கொண்டே “உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்வதைத் தவிர வேறு வேலை ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார்.

அவர்கள் தத்தம் வேலைகளை மட்டுமே தமக்குச் செய்யத் தெரியும் என்று பதில் கூறினார்கள்.

“உலகிலே மண்பாண்டங்களும், தீட்டிய வைரங்களும் இயற்கையாகவே கிடைத்தால் என்ன நடக்கும்?” என்று அவர்களிடம் கேட்டார்.

“எங்கள் வேலைக்கே மதிப்பில்லாமல் போய்விடும்!” பயத்துடன் பதில் சொன்னார்கள்.

“அப்படியானால் உங்கள் வேலைக்கு என்ன மதிப்பு?” பெரியவர் கேட்டார்.

“களிமண்ணை பாண்டமாக உருவாக்குவதும், இயற்கையில் கிடைக்கும் வைரத்தை மின்னல் போல் பளபளக்கச் செய்வதும்தான்” என்று இருவரும் சொன்னார்கள்.

“உலகில் குறைகள் இருப்பதால்தான் உங்கள் இருவருக்கும் வேலை இருக்கிறது. அந்தக் குறைகளை நிறை செய்யும் திறமை உங்களுக்கு இருப்பதால் உங்களை மக்கள் மதிக்கிறார்கள். அந்தத் திறமை மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக இருப்பதால்தான் உங்களைத் தேடி வருகிறார்கள். நீங்கள் அதைப் பெரிதாக நினைக்காமல், குறைகளால் ஏற்படும் வருத்தங்களைப் பெரிதாக நினைக்கிறீர்கள். மகிழ்ச்சியும் மகிழ்ச்சியின்மையும் உங்கள் நோக்கிலேயே இருக்கிறது. செய்யும் வேலையில் இல்லை. குறைகளை அவற்றை நிறை செய்யும் வாய்ப்பாகப் பார்ப்பவன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான். குறையை அதில் உள்ள சிரமங்களாகப் பார்ப்பவன் வருத்தத்துடன் இருக்கிறான்” என்று முடித்தார்.

சிறுவர் கதைகள் – வேஷங்கள் நிலைப்பதில்லை

ஒரு ஏரியில் நிறைய மீன்களும் பாம்புகளும் வாழ்ந்து வந்தன. முதலில் நட்பு பாரட்டி இந்த இரண்டு இனங்களும் வாழ்ந்து வந்தன. பருவமழை பொய்த்து ஏரி வற்ற ஆரம்பித்ததும் இடத்துக்குச் சண்டை போட்டு ஏரியைப் பிரித்துக் கொண்டு வாழ்ந்தன. ஒரு இனம் வாழும் இடத்திற்கு மற்றொரு இனம் போகக் கூடாது. மீறினால் எதிரியின் கையில் சரியான உதை கிடைக்கும்

இதில் ஒரு விலாங்கு (eel) மட்டும் தந்திரமாக வேஷம் போட்டு ஏரி முழுவதும் சுற்றி வந்து கொண்டிருந்தது.

பாம்புகள் இடத்திற்குப் போகும் போது விலாங்கு தன் நீண்ட உடலையும் பாம்பு போன்ற தலையையும் வைத்து தான் ஒரு பாம்பு என்று காட்டிக் கொள்ளும்.

மீன்களின் இடத்திற்குப் போகும் போது உடலைச் சுருட்டி மீன் போன்ற துடுப்புகளையும் வாலையும் காட்டி தான் ஒரு மீன் என்று காட்டிக் கொள்ளும்.

இப்படி ஏமாற்றியே பொழுதை ஓட்டிக் கொண்டு இரண்டு இடங்களிலும் உணவு பெற்று ஏரி முழுவதும் சுற்றித் திரிந்து வந்தது விலாங்கு.

வெயில் காலம் அதிகமானது. ஏரி மேலும் வற்றியது. பாம்புக் கூட்டமும் மீன் கூட்டமும் தங்கள் இடங்களை நெருக்கியும் குறுக்கியும் அமைத்துக் கொண்டே வந்தன.

ஒரு நாள் இரண்டு கூட்டங்களும் ஒன்றன் இருப்பிடத்தை இன்னொன்று பார்த்துக் கொள்ளும் தூரத்தில் அமைக்கும் நிலை வந்தது.

அப்போது மீனாக விலாங்கு வேஷம் போட்டால் பாம்புகள் பார்த்து தாக்கின. பாம்பாக வேஷம் போட்டால் மீன்கள் கடித்துக் குதறின.

“நான் பாம்பும் அல்ல மீனும் அல்ல” விலாங்கு கதறீயது. நம்புவாரில்லை. விலாங்கு “முதலிலேயே உண்மையைச் சொல்லியிருக்கலாமோ” என்று நினைத்துக் கொண்டு செத்தே போனது.

சிறுவர் கதைகள் – நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது

ஒரு மீனவன் கடலோரத்தில் வாழ்ந்து வந்தான். வயதாக ஆக முதுமையால் வலுவிழந்த அவனால் கடலுக்குள் போய் மீன் பிடிக்க முடியவில்லை.ஆற்றோரத்திலேயே நாளெல்லாம் தவம் கிடந்து கிடைத்த மீனை சந்தையில் விற்று மிகச் சிரமத்துடன் வாழ்ந்து வந்தான்.

ஒரு நாள் அவன் அப்படி ஆற்றோரத்தில் வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்த போது அங்கு ஒரு அழகான பெரிய பறவை வந்தது. அது வெள்ளிச் சிறகுகளாலான இறக்கையைக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு கம்பீரத் தோற்றத்துடன் காட்சியளித்தது. அதுதான் தேவலோகப் பறவையான காஹா.

காஹா தாத்தாவைப் பார்த்து “ஏன் தாத்தா இந்த வெயிலில் காய்கிறாய். உனக்கு உதவ உன் வீட்டில் யாருமே இல்லையா?” என்று கேட்டது.”

ஒரு ஆத்மா கூட இல்லை” என்றான் மீனவன்.

“நீ இந்த வயதில் இவ்வளவு வேலை செய்யக் கூடாது. நான் இனி தினமும் உனக்கு ஒரு மீன் கொண்டு வந்து தருகிறேன். அதைக் கொண்டு பிழைத்துக் கொள்” என்று கனிவுடன் கூறி விட்டு பறந்து விட்டது.

அன்றிலிருந்து சொன்ன சொல் தவறாமல் காஹா யார் கண்ணிலும் படாமல் ஒரு பெரிய மீனை தாத்தாவின் வீட்டில் போட்டு விட்டு போய்விடும். அது வந்து போவது தாத்தாவுக்கு மட்டும்தான் தெரியும்.

அந்த மீனுக்குச் சந்தையில் மிகுந்த கிராக்கி இருந்ததால் மீனவன் அதை அதிக விலைக்கு விற்றுப் பணம் சேர்க்க ஆரம்பித்தான். வசதியாக வாழத் தொடங்கினான். சுற்றிலும் அழகிய தோட்டத்துடன் ஒரு பெரிய வீட்டைக் கட்டிக் கொண்டான். மனைவியை இழந்த அவன் இன்னோரு திருமணம் செய்யக் கூட நினைத்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

எது தவறினாலும் காஹா மட்டும் சொன்ன சொல் தவறவேயில்லை.

ஒரு நாள் தண்டோரா போட்டார்கள். காஹா என்ற ஒரு பறவை அந்த இடத்தில் சுற்றித் திரிவதாக அறிவதாகவும், அரசருக்கு அந்த பறவை தேவையென்றும் கூறிய தண்டோரா, பறவையைப் பற்றித் தகவல் தெரிவிப்பவர்களுக்கு கருவூலத்திலிருக்கும் பாதித் தங்கம் தர அரசர் தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள்.

“அரசனுக்கு காஹா ஏன் தேவை?” மீனவன் தண்டோராவிடம் கேட்டான்.”

அரசனுக்குக் கண் போய் விட்டது. அவர் காஹாவின் ரத்ததில் குளித்தால் அவருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைக்கும்” என்று கூறிய தண்டோரா. சட்டென்று “உனக்கு காஹாவைப் பற்றி தெரிந்திருக்கும் போலிருக்கிறதே?” என்று கேட்டான்.

இதை மீனவன் எதிர் பார்க்கவில்லை. காஹாவின் மேலிருந்த நன்றி உணர்ச்சிக்கும், அரசன் கொடுக்கப் போகும் வெகுமதி தங்கத்தைப் பற்றிக் கேட்டதால் எழுந்த பேராசைக்கும் நடுவே தத்தளிக்கத் தொடங்கிய அவன் மனம் ஒரு நிலையில்லை. “அது.. வந்து.. இல்லையில்லை.. எனக்குத் தெரியவே தெரியாது” என்று உளறினான்.

தண்டோராவுடன் வந்த காவலர்களுக்கு சந்தேகம் வந்ததால் மீனவனைப் பிடித்துச் சென்று அரசன் முன்னால் நிறுத்தி விட்டார்கள். பயந்து போன மீனவன், “காஹா பெரிய பறவை. அதை என் ஒருவனால் பிடிக்க முடியாது” என்று கூறினான்.

அரசன் பத்துக் காவலர்களை மீனவனுடன் அனுப்பினான். அவர்கள் மீனவன் வீட்டில் ஒளிந்து கொண்டார்கள்.அன்று வழக்கம் போல காஹா வந்தது.

மீனவன் “காஹா! உனக்கு இத்தனை நாளாக நான் நன்றி சொன்னதே இல்லை. இன்று ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. கொஞ்சம் உள்ளே வந்து விட்டுப் போயேன்” என்று கூறினான். காஹாவும் அவனை நம்பி உள்ளே வந்தது.ஒடிப் போய் அதன் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட மீனவன், ஒளிந்து கொண்டிருந்த காவலர்களைக் கூப்பிட்டான்.

அவர்கள் வருவதற்குள் சுதாரித்துக் கொண்ட காஹா காலைக் கட்டிக் கொண்டிருந்த மீனவனுடன் பறந்து உயர எழுந்து விட்டது. விழுந்தால் சிதறி விடுவோம் என்று பயந்த மீனவனால் கையை எடுக்க முடியவில்லை.

அன்றிலிருந்து காஹாவையோ மீனவனையோ யாருமே பார்க்க முடியவில்லை. நீங்கள் பார்த்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.

சிறுவர் கதைகள் – சமயோசிதம் தேவை

ஒரு பொற்கொல்லன். வசதியாக வாழ்ந்து வந்தான். அவனுக்குத் திருமண வயதில் அழகான மகள்.

அதே ஊரில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் சேட்டு ஒருவன் இருந்தான். இளைஞன். அவனுக்கு பொற்கொல்லன் மகளை மணம் முடிக்க ஆசை. கேட்ட போதெல்லாம் பொற்கொல்லனும் அவன் மகளும் தொடர்ந்து மறுத்து வந்தனர். பொற்கொல்லன் மகளுக்கு சேட்டு இளைஞனை அறவே பிடிக்காது.

ஒரு முறை நாட்டின் பொருளாதாரம் தீவிரமாகத் தேய ஆரம்பித்தது ( Downturn :o) ). பொற்கொல்லனின் வியாபாரம் நொடித்துப் போகும் நிலைக்கு வந்தது. ஏகப் பட்ட பொருள் இழப்பு. வியாபாரத்தை தொடரவும், வாழ்க்கைச் செலவுகளுக்கும் கடன் வாங்க வேண்டிய அவசியம் வந்தது.

பொற்கொல்லன் வேறு வழியில்லாமல் சேட்டு இளைஞனிடம் கடன் வாங்கப் போனான். சேட்டும் கேள்வி கேட்காமல் கடன் கொடுத்தான். அவனைப் பொறுத்த வரை வருங்கால மாமனாரல்லவா !

பொற்கொல்லனால் கடனைக் குறித்த நேரத்தில் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. சேட்டு இளைஞன் கடனைத் திரும்பக் கேட்காமல் பொற்கொல்லனிடம் அவன் மகளை மணம் முடித்துத் தருமாறு கேட்டான்.

பொற்கொல்லனும் அவன் மகளும் தீவிரமாக மறுத்தார்கள்.

சேட்டு ஊர் பெரியவர்களிடம் நியாயம் கேட்டான். அவர்களும், வசதியாக வாழும் சேட்டுக்கு மகளை மணம் முடித்துக் கொடுத்து விடும் படிதான் பொற்கொல்லனுக்கு அறிவுறுத்தினார்கள். பொற்கொல்லன் மறுத்து விட்டான்.

பணத்தை எப்படியாவது திருப்பித் தந்து விடுவதாகச் சொன்னான். எப்படி, எப்போது என்றுதான் அவனால் சொல்ல முடியவில்லை.

பிரச்சனையைத் தீர்க்க சேட்டு அனைவருக்கும் ஒரு யோசனை சொன்னான். அதன்படி, ஊரின் மத்தியில் உள்ள திடலில் சம்பந்தப் பட்ட அனைவரும் வாரக் கடைசியில் கூட வேண்டும். அந்தத் திடலில் கருங் கூழாங்கற்களும், வெண் கூழாங்கற்களும் நிறைந்திருக்கும். அந்தச் சமயம் சேட்டு திடலிலிருக்கும் கற்களிலிருந்து ஒரு கருங் கூழாங்கல்லையும் ஒரு வெண் கூழாங்கல்லையும் ஒரு சிறிய பைக்குள் போட்டுக் கொண்டு வருவான். பொற்கொல்லன் மகள் அவன் கொண்டுவரும் பைக்குள் கையை விட்டு, ஊரார் மத்தியில், ஒரு கல்லை எடுக்க வேண்டும். அவள் கையில் வெள்ளைக் கல் வந்தால் அவள் விருப்பம் போல் மணம் செய்து கொள்ளலாம். கருப்புக் கல் வந்தால் தன்னைத்தான் அவள் மணம் செய்து கொள்ளவேண்டும்.

இந்த யோசனையை பொற்கொல்லனும் அவன் மகளும் ஒத்துக் கொண்டால், கடனை ரத்து செய்து விடுவதாக சேட்டு ஊர் பெரியவர்களிடம் கூறினான்.
ஊரார் கட்டாயப் படுத்தியதன் காரணத்தால் வேண்டா வெறுப்பாக பொற்கொல்லனும் அவன் மகளும் இந்தத் திட்டத்திற்கு ஒத்துக் கொண்டார்கள்.

சேட்டு தந்திரமாக ஒரு காரியம் செய்தான். அவன் திடலுக்குக் கொண்டு செல்லும் பைக்குள், ரகசியமாகச் செய்வதாக நினைத்துக் கொண்டு, இரண்டு கருப்பு கூழாங்கற்களை வைத்துக் கட்டி விட்டான்.

ஆனால், உண்மையில், பொற்கொல்லன் மகளுக்கு வேண்டிய ஒரு சிறுவன் இந்தக் காரியத்தை சேட்டுக்குத் தெரியாமல் பார்த்து விட்டான். உடனே ஓடிப் போய் அவளிடம் போட்டுக் கொடுத்து விட்டான்.

பொற்கொல்லன் மகள் தீவிரமாக சிந்தித்துப் பார்த்தாள். அப்பாவும் அவளும் எடுத்திருந்த முந்தைய நிலைகளால் சேட்டின் மேல் இப்போது சந்தேகத்தைக் கிளப்பினால், வேண்டுமென்றே திருமணத்தைத் தவிர்ப்பதற்காக செய்வதாகத்தான் ஊரார் நினைக்கப் போகிறார்கள் என்று அவளுக்குத் துல்லியமாகப் புரிந்தது. முதலில் அப்படிச் செய்யத் தோன்றிய எண்ணத்தைக் கை விட்டு விட்டாள். அவள் சிறுவனை இந்த விபரம் மற்றவருக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ளும் படி அறிவுறுத்தி அனுப்பினாள்.

அடுத்த நாள் ஊரார் மத்தியில் அவள் தலைவிதி நிச்சயிக்கப் படப் போகிறது. என்ன செய்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை. இரவு முழுவதும் தூங்காமல் யோசித்து யோசித்து விடை எதுவும் கிடைக்காமல் அவதிப் பட்டுக்கொண்டிருந்தாள்.

அடுத்த நாள் திடலுக்குப் போகும் நேரம் வந்தது. அமைதியாக திடலுக்குப் போனாள். அங்கே அவளுக்கு தரையில் கிடந்த கறுப்பு வெள்ளைக் கூழாங்கற்களைப் பார்த்தவுடன் உற்சாகம் வந்து விட்டது.

சேட்டு கண்டிப்பாக தனக்குக்குத்தான் வெற்றி என்று நமட்டுச் சிரிப்புடன் பையைக் கொண்டு வந்து பொற்கொல்லன் மகளிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கித் திறந்து அதனுள் இருந்த ஒரு கல்லை எடுத்து அதன் வண்ணத்தை எவரும் கவனிக்கும் முன் கை தவறுவது போல திடலில் கிடக்கும் மற்ற கறுப்பு வெள்ளை கூழாங்கற்களுக்கு மத்தியில் நழுவ விட்டு விட்டாள். எதிர்பாராமல் நடந்ததாலும், அவள் நழுவ விட்ட கல் மற்ற கூழாங்கற்களுக்கு மத்தியில் சேர்ந்து விட்டதாலும், அந்தக் கல்லை சேட்டு உட்பட யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியல்லை.

திடுக்கிட்டுப் போன ஊர் பெரியவர்களிடம் அவள் அமைதியாகப் பேசினாள். பைக்குள் ஒரு வெள்ளைக் கல்லும் ஒரு கருப்புக் கல்லும் இருந்ததால், பைக்குள் மிச்சமிருக்கும் கல்லை ஊரார் பார்த்தால் அவள் எடுத்து நழுவ விட்ட கல்லின் வண்ணம் எதுவென்று தானாகத் தெரிந்துவிடும் என்று சொல்லி பையை அவர்களிடம் கொடுத்து விட்டாள்.

பைக்குள் இரண்டு கருப்புக் கற்களை வைத்த சேட்டுக்குத் “திருடனுக்குத் தேள் கொட்டியது போல” ஆகி விட்டது. சொல்லவும் முடியவில்லை, விழுங்கவும் முடியவில்லை. கடனை ரத்து செய்வதாக எழுதிக் கொடுத்து விட்டு தலையைத் தொங்க விட்டுக் கொண்டு போய் விட்டான்.

சிறுவர் கதைகள் – மெக்ஸிகோ தேசத்து மீனவன்

மெக்ஸிகோ தேசத்து ஏழை மீனவன் ஒருவன் கடற்கரையில் அவனது கட்டுமரத்தில் மேல் படுத்து பானகம் பருகிக் கொண்டும் பாட்டுப் பாடிக் கொண்டும் கவலையில்லாமல் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான். கடற்கரைக்கு வந்த துடிப்பான இளைஞன் ஒருவன் இதைக் கவனித்தான்.

கடற்கரையை விட்டுச் சென்ற இளைஞன் சில மணி நேரம் கழித்து மீண்டும் கடற்கரைக்கு வந்த போதும் மீனவனை அதே நிலையில் பார்த்தான். இளைஞனுக்குப் பொறுக்கவில்லை.

மீனவனிடம் சென்று “ஐயா! இப்படி வேலை செய்ய வேண்டிய காலத்தில் படுத்துப் பொழுதை வீணடிக்கிறீர்களே. இப்படி படுத்துக் கிடக்கும் நேரத்தில் கடலுக்குள் சென்று மீன் பிடித்தால் நாலு காசாவது கிடைக்குமே!” என்றான்.

அதற்கு மீனவன் “காசு கிடைச்சா…?” என்று ரஜினி பாணியில் கேட்டான்.

இளைஞன் “காசு சேர்த்தால் நீங்கள் இந்தக் கட்டுமரத்தை விற்றுவிட்டு ஒரு படகு வாங்கலாம். அதை எடுத்துக் கொண்டு கடலுக்குள் போனால் இன்னும் நிறைய மீன் பிடித்து வரலாம். ஒவ்வொரு நாளும் பணம் அதிகமாக சம்பாதிக்கலாம்” என்று சொன்னான்.

மீனவன் “அதிகம் சம்பாதிச்சா….?” என்று கேட்டான்.

இளைஞன் பொறுமையாக “ஐயா, நீஙகள் உங்களுக்கு நல்லதொரு வீடு கட்டிக் கொள்ளலாம். சிறிது சிறிதாகப் பொருள் சேர்த்து மீன் பிடி கப்பல் ஒன்றை வாங்கலாம். ஆழ்கடலுக்குள் சென்று பல வகை மீன்களைப் பிடித்து வரலாம். உள்நாட்டுச் சந்தை தவிர வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் நீங்கள் அவற்றை ஏற்றுமதி செய்யலாம்” என்று சொன்னான்.

மீனவன் “ஏற்றுமதி செஞ்சா…?” என்று திருப்பிக் கேட்டான்.

இளைஞனுக்கு மீனவனின் அறியாமை குறித்து சிறிது அதிருப்தி ஏற்பட்டாலும் பொறுமையை தக்க வைத்துக் கொண்டு “ஏற்றுமதி செய்தால் உங்களுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பெரிய மாளிகை போன்ற வீட்டைக் கட்டிக் கொள்ளலாம். படகு போன்ற கார் வாங்கலாம். மேலும் மீன்பிடி கப்பல்கள் வாங்கி மீன் பிடிக்க அனுப்பலாம். நாட்டிலேயே பெரிய மீன் தொழில் கழகம் ஒன்றை அமைக்கலாம். பேரும் புகழும் பெருந்தனமும் கிடைக்குமே” என்றான்.

மீனவன் மறுபடியும் “இதெல்லாம் கிடைச்சா…” என்றான்.

இளைஞன் “உங்களுக்கு அதற்குப் பின்னால் வேலை செய்ய வேண்டிய தேவையே இருக்காது. மகிழ்ச்சியாக நாளெல்லாம் உலகின் அழகான நீலக் கடல் சார்ந்த கடற்கரைகளில் மணலில் படுத்து பானகம் பருகிக் பாட்டுப் பாடிக் கொண்டே வாழ்க்கையை அனுபவிக்கலாம்” என்றான்.

“நான் இப்பவே அதைத்தானே நண்பா செய்து கொண்டிருக்கிறேன்” என்றான் மீனவன்.

மெக்ஸிகோ தேசத்து ஏழை மீனவன் ஒருவன் கடற்கரையில் அவனது கட்டுமரத்தில் மேல் படுத்து பானகம் பருகிக் கொண்டும் பாட்டுப் பாடிக் கொண்டும் கவலையில்லாமல் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான். கடற்கரைக்கு வந்த துடிப்பான இளைஞன் ஒருவன் இதைக் கவனித்தான்.

கடற்கரையை விட்டுச் சென்ற இளைஞன் சில மணி நேரம் கழித்து மீண்டும் கடற்கரைக்கு வந்த போதும் மீனவனை அதே நிலையில் பார்த்தான். இளைஞனுக்குப் பொறுக்கவில்லை.

மீனவனிடம் சென்று “ஐயா! இப்படி வேலை செய்ய வேண்டிய காலத்தில் படுத்துப் பொழுதை வீணடிக்கிறீர்களே. இப்படி படுத்துக் கிடக்கும் நேரத்தில் கடலுக்குள் சென்று மீன் பிடித்தால் நாலு காசாவது கிடைக்குமே!” என்றான்.

அதற்கு மீனவன் “காசு கிடைச்சா…?” என்று ரஜினி பாணியில் கேட்டான்.

இளைஞன் “காசு சேர்த்தால் நீங்கள் இந்தக் கட்டுமரத்தை விற்றுவிட்டு ஒரு படகு வாங்கலாம். அதை எடுத்துக் கொண்டு கடலுக்குள் போனால் இன்னும் நிறைய மீன் பிடித்து வரலாம். ஒவ்வொரு நாளும் பணம் அதிகமாக சம்பாதிக்கலாம்” என்று சொன்னான்.

மீனவன் “அதிகம் சம்பாதிச்சா….?” என்று கேட்டான்.

இளைஞன் பொறுமையாக “ஐயா, நீஙகள் உங்களுக்கு நல்லதொரு வீடு கட்டிக் கொள்ளலாம். சிறிது சிறிதாகப் பொருள் சேர்த்து மீன் பிடி கப்பல் ஒன்றை வாங்கலாம். ஆழ்கடலுக்குள் சென்று பல வகை மீன்களைப் பிடித்து வரலாம். உள்நாட்டுச் சந்தை தவிர வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் நீங்கள் அவற்றை ஏற்றுமதி செய்யலாம்” என்று சொன்னான்.

மீனவன் “ஏற்றுமதி செஞ்சா…?” என்று திருப்பிக் கேட்டான்.

இளைஞனுக்கு மீனவனின் அறியாமை குறித்து சிறிது அதிருப்தி ஏற்பட்டாலும் பொறுமையை தக்க வைத்துக் கொண்டு “ஏற்றுமதி செய்தால் உங்களுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பெரிய மாளிகை போன்ற வீட்டைக் கட்டிக் கொள்ளலாம். படகு போன்ற கார் வாங்கலாம். மேலும் மீன்பிடி கப்பல்கள் வாங்கி மீன் பிடிக்க அனுப்பலாம். நாட்டிலேயே பெரிய மீன் தொழில் கழகம் ஒன்றை அமைக்கலாம். பேரும் புகழும் பெருந்தனமும் கிடைக்குமே” என்றான்.

மீனவன் மறுபடியும் “இதெல்லாம் கிடைச்சா…” என்றான்.

இளைஞன் “உங்களுக்கு அதற்குப் பின்னால் வேலை செய்ய வேண்டிய தேவையே இருக்காது. மகிழ்ச்சியாக நாளெல்லாம் உலகின் அழகான நீலக் கடல் சார்ந்த கடற்கரைகளில் மணலில் படுத்து பானகம் பருகிக் பாட்டுப் பாடிக் கொண்டே வாழ்க்கையை அனுபவிக்கலாம்” என்றான்.

“நான் இப்பவே அதைத்தானே நண்பா செய்து கொண்டிருக்கிறேன்” என்றான் மீனவன்.

சிறுவர் கதைகள் – விருப்பப் பட்டியல்

பேரரசன் நெப்போலியன் பெருங் களிப்பில் இருந்தான். போரில் பெற்ற மாபெரும் வெற்றிதான் அதற்குக் காரணம். அந்த வெற்றிக்குப் பேருதவியாக இருந்த அவனது நான்கு தளபதிளையும் அழைத்து “உங்களுக்கு என்ன் வேண்டுமானாலும் கேளுங்கள்” என்று கூறினான்.

முதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன் “மன்னா! என்க்கு பாரிஸ் நகரத்தில் ஒரு வீடு கட்டிக் கொள்ள வெகுநாளாக ஆசை” என்றான்.

“உனக்கு பாரிஸ் நகரத்தில் பெரிய மாளிகையே கட்டித் தரச் சொல்கிறேன்” என்றான் நெப்போலியன்.

அடுத்தவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவன். தனக்கு சொந்தமாக ஒரு தங்கும் விடுதி (Hotel) நடத்த ஆசை என்று மன்னனிடம் கூறினான்.

மாமன்னன் நெப்போலியன் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்வதாகக் கூறினான்.

மூன்றாம் தளபதி போலந்துக் காரன். அவன் தனக்கு திராட்சை மது செய்யும் தோட்டமும், தொழிற்சாலையும் வேண்டும் என்று கேட்டான். அதற்கும் நெப்போலியன் அதே பதில்தான் சொன்னான்.

கடைசி தளபதி ஒரு யூதன். அவன் நெப்போலியனிடம் இரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும் என்று கேட்டான். அதற்கு மன்னன் நெப்போலியன் “உன் விடுப்பு நாளை முதல் தொடங்கும்” என்றான்.

அவன் பணித்தவுடன் வெளியே வந்த தளபதிகளில் முதல் மூவரும் யூதனைப் பார்த்து “சரியான முட்டாளாக இருக்கிறாயே! ஏதாவது விலை மதிப்புள்ளதாகக் கேட்காமல் விடுப்பைப் போய் கேட்டாயே?” என்று ஏளனம் செய்தார்கள்.

அதற்கு அவன் “நண்பர்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் மன்னன் ஏற்பாடு செய்து தருவதாகத்தான் கூறியிருக்கிறான். இன்னும் அவை உங்கள் கையில் கிடைக்கவில்லை. மன்னன் அவன் கொடுத்த வாக்குகளை நேரடியாகச் செயல் படுத்த அவனுக்கு நேரமிருக்கப் போவதில்லை. அவனது காரியதரிசியைத்தான் பணிக்கப் போகிறான். காரியதரிசியோ ஆயிரம் வேலை செய்பவன். அவனும் அவனுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத்தான் இந்த வேலைகளைக் கொடுப்பான். உங்களுக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கான வாக்குறுதிகளின் முக்கியத்துவம் இப்படி கீழே ஆணைகள் செல்லச் செல்ல கரைந்து கொண்டே போய் மறக்கப் படும் வாய்ப்புகள் அதிகம்” என்றான்.

மற்ற தளபதிகள் “அப்படி நடந்தால் மன்னனிடம் போய் முறையிடலாம்தானே” என்றார்கள்.

யூதத் தளபதி சொன்னான் “நண்பர்களே. மன்னனுக்கு இன்றைக்கு இருக்கும் வெற்றிக் களிப்பு வெகுநேரம் நிலைக்காது. போரில் பெற்ற வெற்றியின் மதிப்பு நாளடைவில் மற்ற பிரச்சினைகளுக்கு இடையே ஒளியிழந்து போகும். அதோடல்லாமல் இந்தக் கணத்தின் உங்கள் துறையின் வெற்றி மட்டுமே அவன் கண் முன் நிற்கிறது. நாளை உங்கள் துறையில் ஏதாவது தவறு நடந்தால் நீங்கள் தலை நிமிர்ந்து அவன் முன் நின்று உங்கள் பரிசை உரிமையுடன் நினைவுறுத்த இயலாது. ஆனால் நான் கேட்ட பரிசோ இப்போது என் கையில்”

இதைக் கேட்ட மற்றவர்கள் பேச்சடைத்துப் போனார்கள். யூதத் தளபதி தன் விடுமுறையைத் திட்டமிடக் கிளம்பினான்.

அரிதான இடத்தில் உடனே கிடைக்கக் கூடிய ஒரு ரூபாய் பின்னால் கிடைக்கப் போகும் நூறு ரூபாய்களை விட மேலானது.

சிறுவர் கதைகள் – கிணற்றைத்தானே விற்றேன்

(இது ஒரு பெர்ஷிய குட்டிக் கதை)

ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான்.

வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான்.

அப்போது விற்றவன் அங்கே நின்று கொண்டிருந்தான். விவசாயியை தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.

விவசாயிக்குக் கோபம் வந்தது. “எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே?” என்று விற்றவனை கோபத்துடன் கேட்டான்.

விற்றவன் “ஐயா! உமக்கு நான் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை அல்லவே!!” என்று தர்க்கம் செய்தான்.

விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் காஜியிடம் (நீதிபதியிடம்) சென்று முறையிட்டான்.

நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார். பின்னர் கிணற்றை விற்றவனிடம் “நீ கிணற்றை விற்றுவிட்ட படியால் அது உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில்தான் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டுமென்றால் விவசாயிக்கு அதற்கான வாடகையை தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால் கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேறு” என்று தீர்ப்புக் கூறினார்.

விற்றவன் தலையைக் குனிந்து கொண்டே, தனது தவற்றுக்கு மன்னிப்புக் கோரி விட்டு, விவசாயியை கிணற்றின் முழுப் பலனையும் அனுபவிக்கச் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான்.

சிறுவர் கதைகள் – தூங்குமூஞ்சி வாத்தியார்

ஒரு ஊரில் ஒரு வாத்தியார் இருந்தார். அவருக்கு மதிய உணவிற்குப் பிறகு சற்று நேரம் கண்ணயராமல் இருக்க முடியாது. மாணவர்களைப் பாடம் படிக்கச் சொல்லி ஏவி விட்டு அவர் வகுப்பறையிலேயே சற்று நேரம் தூங்குவது வழக்கம்.

மாணவர்கள் அவரைக் கேலி செய்வார்கள். ஏன் இப்படி வகுப்பில் தூங்குகிறீர்கள் என்று கேட்பார்கள்.

அதற்கு அவர் திறமையாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு, தான் தினமும் கனவுலகிற்குச் சென்று வருவதாகவும், அங்கே பல பண்டைய காலத்து ஞானிகளை சந்தித்து வருவதாகவும் கூறுவார்.

இந்தக் காலத்து மாணவர்கள் இதற்கெல்லாம சரிந்து விட மாட்டார்கள். அவருக்கே பாடம் கற்றுத் தர ஒரு திட்டம் போட்டார்கள்.

வாத்தியார் சற்றும் எதிர்பாரத ஒரு நாளன்று அவர் வகுப்புக்குள் நுழையும் நேரம் அனைத்து மாணவர்களும் தூங்குவது போல் படுத்துக் கிடந்தார்கள். திடுக்கிட்ட வாத்தியார் பிரம்பால் அனைவரையும் தட்டி எழுப்பித் திட்டினார். ஏன் வகுப்பில் தூங்கினீர்கள் என்று கேட்டார்.

மாணவர்கள் ஒரே குரலில் அவர் தினமும் செல்லும் கனவுலகிற்குத் தாங்களும் ஞானிகளைப் பார்க்கச் சென்று வந்ததாகக் கூறினார்கள்.

வாத்தியார் முகத்தில் ஈயாடவில்லை.

சிறுவர் கதைகள் – வழுக்கைக்கு மருந்து
சிறுவர் கதைகள் – வழுக்கைக்கு மருந்து

அரசனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. தலைமுடி கொட்டி வழுக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அரசனுக்கு தன் கம்பீரம் குறைந்து விடும் என்ற கவலை அதிகமாகிப் போய் ஒரு நாள் அரசவைத் தலைமை மருத்துவனிடம் நிவாரணம் கேட்டான்.

தலைமை மருத்துவன் “மன்னா! இதற்கு மருந்தே கிடையாது” என்று உண்மையைச் சொன்னான். அரசனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை. கோபமடைந்தான். ஆத்திரம் தலைக்கேறி தலைமை மருத்துவனை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான்.

ஊரில் இருக்கும் அனைத்து சிறந்த மருத்துவர்களையும் வரவழைத்தான். ஒரே வாரத்தில் தன் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு பிடிக்குமாறு பணித்தான்.

மருத்துவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். அரசனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்றுதான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு துடிப்பான இளைஞன் இருந்தான். பிரச்சினைக்குத் தன்னிடம் தீர்வு இருப்பதாகக் கூறினான். அனுபவம் முதிர்ந்த வயதான மருத்துவர்கள் கூட்டத்தில் இருந்தனர். அவனைப் பார்த்து சிரித்தனர். “வழுக்கைக்குத் தீர்வா? போய் வேறு வேலை இருந்தால் கவனியப்பா” என்று கூறினர்.

நாள் செல்லச் செல்ல அவர்களுக்கு அரசனிடமிருந்து தப்பிக்கும் வழி தெரியவில்லை.

அரசனை இந்த நிலையில் சந்தித்தால் கண்டிப்பாகத் தலைமை மருத்துவனுக்கு நேர்ந்த கதிதான் தமக்கும் நடக்கும் என்று எல்லோருக்கும் புரிந்தது. கதி கலங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது இளைய மருத்துவன் திரும்பவும் “என்னை நம்பினால் நம் எல்லோருக்கும் விடிவு நிச்சயம்” என்று கூறினான்.

வேறு வழியில்லாமல் அனைவரும் அவன் வழியில் செல்ல ஒத்துக் கொண்டார்கள். அவனோ, மருந்தை நேரடியாக அரசனிடம்தான் தருவேன், என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான்.

அடுத்த நாள் சபை கூடியது. மருத்துவர்கள் இளைய மருத்துவனைக் கூட்டிக் கொண்டு அரசவைக்கு வந்தார்கள்.

அவன் அரசனிடம் ஒரு குடுவையைக் கொடுத்தான். “மன்னா இதில் இருக்கும் மருந்தை தினமும் சிரசில் தேய்த்துக் கொண்டு வந்தால், ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்று போகும். இரண்டே மாதத்தில் முடியில்லாத இடத்திலெல்லாம் முடி வளர ஆரம்பிக்கும், ஆறே மாதத்தில் கருகருவென தலையெங்கும் தலைமுடி அழகாக வளர்ந்திருக்கும்” என்றான்.

மன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. “இப்போதே அந்தப்புரத்திற்குப் போய் தலையில் மருந்தைத் தடவிக் கொள்கிறேன்” என்று கிளம்பினான்.

அப்போது மருத்துவன் “மன்னா. இந்த மருந்து வேலை செய்ய வேண்டுமென்றால், அதைத் தலையில் தடவிக் கொள்ளும் போது மட்டும் நீங்கள் குரங்கை நினைக்கக் கூடாது!” என்றான்.

முட்டாள் மன்னன் சரியென்று சொன்னான். மந்திரியிடம் மருத்துவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து சிறப்பாக மரியாதை செய்து அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டு அந்தப்புரத்திற்கு வேகமாகச் சென்று விட்டான். மருத்துவர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊரை விட்டே ஓடி விட்டார்கள்.

அந்தப்புரத்திற்குச் சென்ற அரசன், அங்கு குடுவையைக் கையில் எடுத்து அதிலிருந்த மருந்தைத் தலையில் தேய்க்கப் போனான். அப்போது அவனுக்கு மருத்துவன் சொல்லிய பக்குவம் கவனத்திற்கு வந்தது. “குரங்கை நினைக்கக் கூடாது” என்று நினைத்தவுடன் குரங்கைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டான். என்ன முயற்சித்தும் அவன் நினைவிலிருந்து குரங்கை அகற்ற இயலவில்லை.

மன்னனுக்கு மருத்துவனின் தந்திரம் புரியவில்லை. சற்று நேரம் கழித்து முயற்சிப்போம் என்று வேறு வேலையில் ஈடுபட்டான்.

ஆனால் ஒவ்வொரு முறை அவன் மருந்தைக் கையில் எடுத்த போதும் மருத்துவனின் அறிவுரை மனதில் தோன்றி அவனுக்குக் குரங்கு பற்றிய யோசனை வந்து கொண்டே இருந்தது.

பல நாள் திரும்பத் திரும்ப முயற்சித்து விட்டு, இந்தச் சிரமத்திற்குப் பேசாமல் வழுக்கையாகவே இருந்து விடலாம் என்று தீர்மானித்து விட்டான்.

சிறுவர் கதைகள் – முடிவுகளில் கவனம் தேவை

சீனாவில் ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள்.

ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது.

பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.

வெகுநேரமாகியும் மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதும் நிற்கவில்லை. அவற்றின் உக்கிரம் வேறு அதிகரித்துக் கொண்டே போனது.

பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் ‘நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்’ என்று சொன்னான்.

மற்றவர்கள் இதனை ஆமோதித்தார்கள்.

இத்தனை பேரில் அந்தப் பாவியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று. அதன் படி அனைவரும் தத்தம் தொப்பிகளைக் கையில் பிடித்துக் கொண்டு தொப்பியை மழையில் நீட்டுவது என்று முடிவாயிற்று.

அனைவரும் தத்தம் தொப்பிகளை மழையில் நீட்டினர்.

பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் வெட்டியது. அதில் ஒரு விவசாயியின் தொப்பி மட்டும் எரிந்து சாம்பலாகியது.

மற்ற ஒன்பது விவசாயிகளும் “இவன்தான் பாவி. இவனை முதலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு” என்று கத்திக் கொண்டே அவன் மேல் பாய்ந்தனர்.

அந்த விவசாயி கெஞ்சிக் கதறி தான் அப்பாவி என்று மன்றாடினான். மற்றவர் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவனை பலவந்தமாகக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர்.

அவன் கதறிக் கொண்டே மழையில் ஒடினான்.

அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் தாக்கி இடி இடித்தது. ஒடிக்கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான். சற்று நேரத்தில் நிலைக்குத் திரும்பி மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தான்.

மண்டபத்தில் இடி விழுந்து நொறுங்கிக் கிடந்தது. ஒரு புண்ணியவானின் புண்ணிய பலத்தில் தப்பித்திருந்த ஒன்பது விவசாயிகளும் அவனை வெளியே தள்ளிப் பாதுகாப்பை இழந்து பரிதாபமாகக் கருகிச் செத்துப் போய் விட்டனர்.

சிறுவர் கதைகள் – ஞான பண்டிதர்

ஒரு கற்றறிந்த பண்டிதர். அவர் தமக்கு நிகர் யாருமில்லை என்ற கர்வ குணமுள்ளவர். படிப்பறிவில்லாதவர்களைக் கண்டால் அவருக்கு அறவே பிடிக்காது.

ஒரு நாள் அவர் ஓரு அகலமான ஆற்றைக் கடந்து அக்கரை செல்ல வேண்டியிருந்தது. பரிசலில் போவதைத் தவிர வேறு வழிகள் இல்லை.

பரிசல் ஓட்டுபவன் ஒரு பரம ஏழை. பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாயிருந்தான். அவன் படிப்பறிவில்லாதவன் என்பது அவன் பேச்சிலேயே தெரிந்தது.

பண்டிதருக்கு அவனை விட்டால் வேறு வழி தெரியாததால் “அக்கரையில் உள்ள ஊரில் விட்டு விடப்பா” என்று சொல்லிப் பரிசலில் ஏறிக்கொண்டார்.

பரிசலும் ஆற்றுக்குள் செல்ல ஆரம்பித்தது. பரிசல் ஓட்டுபவன் மௌனமாக பரிசலை செலுத்திக் கொண்டிருந்தான்.

பண்டிதருக்குச் சும்மாயிருக்க முடியவில்லை. பரிசல்காரனைப் பார்த்து “நீ வேதம் படித்திருக்கிறாயா?” என்று கேட்டார்.

“அப்படின்னா என்ன சாமி?” என்று பரிசல்காரன் திருப்பிக் கேட்டான்.

“வேதம் படிக்காதவன் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?” என்று பண்டிதர் கிண்டலாகக் கேட்டார்.

பின்னரும் சும்மாயிருக்காமல் “சரி உனக்கு கீதை தெரியுமா?” என்றார்.

பரிசல்காரன் விழித்தான்.

“என்னப்பா உன் வாழ்க்கை? கீதை கூடப் படிக்காமல் நீ என்னத்தைச் சாதிக்கப் போகிறாய்” என்று மறுபடியும் பரிகசித்தார்.

இன்னூம் கொஞ்சம் தூரம் பரிசல் ஆற்றில் சென்றது. உனக்கு “ராமாயணம், மஹாபாரதம் கதையாவது தெரியுமா?” என்று அவனை மறுபடியும் வம்புக்கு இழுத்தார்.

அவன் பொறுமையாக “சாமி, நமக்கு இந்தப் பரிசலை ஓட்டுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாதுங்க!” என்று பதில் சொன்னான்.

“இப்படிப் படிப்பறிவே இல்லாமல் இருக்கிறாயே. நீ வாழ்ந்து என்ன பயன்?” என்று அவனை இகழ்ந்தார்.

இதற்குள் பரிசல் ஆற்றின் நடுவே வந்து விட்டிருந்தது. ஆற்றின் வேகத்தில் பரிசல் திடிரென தத்தளிக்க ஆரம்பித்தது.

பரிசல்காரன் பண்டிதரைப் பார்த்து “சாமி! உங்களுக்கு நீச்சல் தெரியுமா?” என்று கேட்டான்.

பண்டிதர் “தெரியாதே! ஏனப்பா?” என்று கேட்டார்.

பரிசல்காரன் “ஏன் சாமி? இம்புட்டு படிச்சிருக்கிங்களே! உங்களுக்கு நீச்சல் தெரியலையே! இப்ப ஆத்துல வெள்ளம் வந்துருச்சே. பரிசல் தாங்காது. நீந்த முடியலைன்னா வாழ்க்கைக்கே ஆபத்தாச்சே!” என்று சொல்லிவிட்டு ஆற்றில் குதித்து நீந்திப் போய்விட்டான்.

சிறுவர் கதைகள் – இதெல்லாம் எதுக்கம்மா?

தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் ஒரு மாலைப் பொழுதில் உலாத்திக் கொண்டிருந்தன.

குட்டி ஒட்டகம் படு சுட்டி. சதா வாய் ஓயாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும். அன்றைக்கும் அப்படித்தான்.

“அம்மா! நமக்கு மட்டும் முதுகில் திமில் இருக்கே. ஏனம்மா?”

தாய் எப்போதும் பொறுமையாக பதில் சொல்லும்.

“நாமெல்லாம் இயல்பாகப் பாலைவனத்தில் வாழ்பவர்கள் இல்லையா! பாலைவனத்தில் தண்ணீர் பாலைவனச் சோலைகளில் மட்டும்தான் கிடைக்கும். தினம் தினம் கிடைக்காது. கிடைக்கும் தண்ணீரை முடிந்த மட்டும் நம் உடம்பில் சேமித்து வைத்துக் கொண்டு வேண்டும் போது உபயோகப் படுத்திக் கொண்டால் தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் பல நாள் சுற்றித் திரியவே நமக்கு இயற்கை திமிலைக் கொடுத்திருக்கு”

குட்டி திரும்பவும் கேட்டது. “அப்போ நமக்கு கண் இமை கெட்டியாக இருக்கே, மூக்கை மூடிக் கொள்ள மூடி இருக்கே? மத்த மிருகத்துக்கு அப்படி இல்லையே. அது ஏன்”

தாய் ஒட்டகம் வாயை அசை போட்டுக் கொண்டு சொன்னது.

“பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும், அப்போ சட்டுன்னு ஒதுங்க இடம் கிடைக்காது. கண்ணுக்கும் மூக்குக்கும் பாதுகாப்பா மூடி இல்லைன்னா கண்ணுலயும் மூக்குலையும் மணல் போயிடுமே. அதனால்தான் நமக்கெல்லாம் இப்படி மூடி இருக்கு”

குட்டி இப்போது அம்மாவின் கால் குளம்பைப் பார்த்துக் கேட்டது. “இவ்வளவு பெரிய குளம்பு நமக்கு எதுக்கு?”

“அது கண்ணு, மணல்ல நடக்கும் போது நம்ம கால் மணல்ல புதையாம நடக்கத்தான்”. பொறுமையாக பதில் சொன்னது அம்மா ஒட்டகம்.

“பல்லும் நாக்கும் இவ்வளவு கெட்டியா, தடியா இருக்கே. அது ஏன்?”. இது குட்டி யோசனையுடன் கேட்ட கேள்வி.

அம்மா ஒட்டகம் சொன்னது. “பாலைவனத்தில் செடி கொடியெல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும். அதையெல்லாம் கடித்துச் சவைத்துத் தின்ன வேண்டாமா?”

இப்போது குட்டி பட்டென்று கேட்டது. “அம்மா! இதையெல்லாம் வைத்துக் கொண்டு லண்டன் குளிரிலே இந்த மிருகக் காட்சி சாலையிலே நாம ரெண்டு பேரும் என்ன செஞ்சுகிட்டு இருக்கோம்?”

சிறுவர் கதைகள் – நாவினால் சுட்ட வடு

ஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும்.

கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.

நாளடைவில் அவனை சுற்று வட்டாரத்தில் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.

அவனுடைய அப்பா பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.

ஒவ்வொரு முறை ஆத்திரப் படும் போதும் சம்பந்தப் பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மர வேலியில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றி விடும் படி அறிவுரைத்தார்.

முதல் நாள் வேலியில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!

நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் வேலியில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.

அப்பாவிடம் போய் விபரத்தைச் சொன்னான். அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து வேலியில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க் அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.

எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் வேலியை பார்க்கப் போனார்கள். அப்பா வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி “கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான். ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்” என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.

மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி ஊர் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான்.

சிறுவர் கதைகள் – முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்

கடற்கரை ஓரம் இருந்த ஊரில் ஒரு கலங்கரை விளக்கு இருந்தது. அந்தக் கடற்கரை ஒரம் கப்பல் போக்குவரத்து அதிகம்.

பாறைகள் நிறைந்த கடல் பகுதியானதால் கப்பல்கள் பாறைப் பகுதியைத் தவிர்த்து பத்திரமாகச் செல்ல வகை செய்யும் வண்ணம் அந்தக் கலங்கரை விளக்கை அமைத்திருந்தார்கள். எண்ணையால் எரியும் விளக்கு அது.

கலங்கரை விளக்கை செயல்படுத்த ஒரு காப்பாளன் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான்.

வாராவாரம் கலங்கரை விளக்கிற்குத் தேவையான எண்ணையை கப்பல் நிறுவனங்கள் அவனுக்குத் தப்பாமல் அனுப்பிக் கொண்டிருந்தன.

காப்பாளனின் முக்கியமான வேலை கலங்கரை விளக்கைக் காப்பது மற்றும் விளக்கு அணையாமல் அதைச் செலுத்திக் கொண்டிருப்பது மட்டுமே.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது.

ஒரு கடுங் குளிர்கால இரவில் கலங்கரை விளக்கின் அலுவலகக் கதவை யாரோ தட்டினார்கள். காப்பாளன் கதவைத் திறந்து பார்த்தான். பக்கத்து ஊரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் குளிரில் நடுங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தார்.

“தம்பி! என் வீட்டில் விளக்கெரிக்கக் கூட எண்ணை இல்லை. குளிர் நடுக்குகிறது. நீ மிகவும் நல்லவனாகத் தெரிகிறாய். கொஞ்சம் எண்ணை கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன். சீக்கிரம் திருப்பிக் கொடுத்து விடுவேன்” என்று கெஞ்சினார்.

மனமிளகிய காப்பாளன் அவருக்குக் கொஞ்சம் எண்ணை கொடுத்தனுப்பினான்.

அடுத்த நாள் இரவு மறுபடியும் கதவில் “டக்… டக்”. கதவைத் திறந்தால் ஒரு வழிப்போக்கன். “அண்ணே! பக்கத்து ஊரில் உங்கள் உதவும் குணத்தைப் பற்றி ரொம்பவும் சிலாகித்துப் பேசினார்கள். நான் அவசரமாக ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். மிகவும் முக்கியமான வேலையாகப் போய்க் கொண்டிருக்கிறேன். இங்கே தங்க முடியாத நிலை. என் கை விளக்கில் எண்ணை தீர்ந்து விட்டது. பயணத்திற்கு எண்ணை கொடுத்து உதவினால் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்” என்று வெகு இளக்கமாகப் பேசினான்.

காப்பாளனும் வழிப்போக்கனுக்கு எண்ணை கொடுத்த்னுப்பினான்.

மூன்றாம் நாளும் இதே கதை தொடர்ந்தது. இப்போது கதவைத் தட்டியது ஒரு மூதாட்டி. “ராசா. நீ நல்லாயிருக்கணும். வீட்டில் பச்சைக் குழந்தைக்குப் பால் காய்ச்ச அவசரமாக அடுப்பு எரிக்கணும். வீட்டில் எண்ணை தீர்ந்து போய் விட்டதப்பா! எனக்கு உன்னை விட்டால் வழியில்லை என்று வந்து விட்டேன். நீதான் அவசரத்துக்குக் கடவுள் போல் கை கொடுத்து உதவணும்” என்றாள்.
அவளுக்கும் காப்பாளன் எண்ணை கொடுத்தான்.

வாரக் கடைசி. அடுத்த வாரத்திற்கான எண்ணையைக் கொண்டு வரும் வண்டி வர இரண்டு நாளாகும். காப்பாளன் வழக்கம் போல விளக்கிற்கு எண்ணை நிரப்ப பீப்பாயைத் திறந்து பார்த்தான். பீப்பாயில் இருந்த எண்ணை வாரக் கடைசி வரை விளக்கைச் செலுத்தப் போதாது என்று புரிந்தது.

இருந்த எண்ணையை விளக்கில் நிரப்பி அதை எரிய விட்டு விட்டு பதறிப் போய் ஊருக்குள் ஒடினான். மிக அவசரமாக விளக்கிற்கு எண்ணை தேவை. கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று கேட்டான். எல்லோரும் கை விரித்து விட்டார்கள்.

வாரக் கடைசியில் இரவில் எண்ணை தீர்ந்து போய் விளக்கு அணைந்து விட்டது. இரண்டு கப்பல்கள் அன்று இரவு கலங்கரை விளக்கு எரியாததால் வழி தவறிப் போய் பாறையில் மோதிச் சிதறி விட்டன.

மூன்று பேருக்கு உதவுவதற்காக தன் முதன்மைக் கடமையில் தவறிய காப்பாளன், முன்னூறு பேரின் உயிர் சேதத்திற்குக் காரணமானான்.

சிறுவர் கதைகள் – அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப் பட்டு நடந்தது.

ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.

யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.

யோகி பாம்பைப் பார்த்து “அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே” என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.

சிறுவர் கதைகள் – வித்தியாசமான உதவி

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு “யாராவது காப்பாற்றுங்கள்’ என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. “பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு” என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு “நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்” என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். “ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?” என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே “தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்” என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். “நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்” என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்

சிறுவர் கதைகள் – காக்கா உட்கார பனம் பழம் விழுந்தது

இரண்டு ஜப்பானியர்கள் நியுயார்க் சென்றார்கள். அங்கே நகரத்தைச் சுற்றிப் பார்க்க ரயில் நிலையம் சென்றார்கள். ஒரு பழக்கடையைப் பார்த்தார்கள். ஆப்பிள், ஆரஞ்சுப் பழங்கள் நிறைய இருந்த அந்தக் கடையில் அவர்கள் பார்த்திராத ஒரு பழமும் இருந்தது.

கடைக்காரரிடம் அந்தப் பழத்தைப் பற்றி கேட்டார்கள். அவரும் அதை வாழைப்பழம் என்று அடையாளம் சொல்லி அதை எப்படி உரித்துத் தின்பது என்றும் செய்து காண்பித்தார்.

நம் ஜப்பானிய நண்பர்கள் மகிழ்ச்சியுடன் ஆளுக்கு ஒரு பழம் வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறி அமர்ந்தார்கள். ரயில் புறப்பட்ட உடன் இருவரும் பழத்தை உரித்து உண்ணத் தொடங்கினார்கள்.

முதலாமவன் பழத்தை முதல் கடி கடிக்கும் போது ரயில் சரியாக ஒரு சுரங்கப் பாதைக்குள் நுழைந்தது. உடனே ரயில் பெட்டிக்குள் கும்மிருட்டு பரவியது.

அவன் உடனே இரண்டாமவனிடம் அவசரமாக கத்தினான். ‘நண்பா, அந்தப் பழத்தை சாப்பிடாதே. நான் ஒரே ஒரு கடி கடித்த உடனே குருடாகி விட்டென். அந்தப் பழத்தில் விஷம் இருக்கிறது. தயவு செய்து சாப்பிட்டு விடாதே’ என்றான் அவன்.

சிறுவர் கதைகள் – கை மேல் பலன் கிடைத்தது

அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படித்தான் ‘அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்’ என்று நம்பிக்கை ஊட்டினார்.

மன்னன் சேவகனை அழைத்தான். காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.

அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.

ஒரு நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். “அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.

இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு காக்காய் ‘வாக்கிங்’ போய் விட்டது.

மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து ‘இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு’ என்று உத்தரவிட்டான்.

சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும். மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது. ‘நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி’ என்று உறுமினான்.

சேவகன் சொன்னான். ‘மகா மன்னரே. இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா?’ என்றான்.

மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. சோதிடர் கூட ‘எஸ்கேஏஏஏஏ..ப்’ ஆகிவிட்டார் என்று கேள்வி!!!

சிறுவர் கதைகள் – பச்சோந்திக் கல்

நகரில் கப்பி ரோடு ஒன்று இருந்தது. அதன் மேல் வேகமாகப் போன வண்டியின் சக்கரம் ஒன்று ஒரு கப்பிக் கல்லை பெயர்த்து உருட்டி விட்டுப் போய் விட்டது. அந்தக் கப்பிக் கல் தனக்குள் சொல்லிக் கொண்டது. “என்னைப் போன்ற மற்றவர்களுடன் பிணைக்கப் பட்டு நான் இப்படி ஒரே இடத்தில் கிடப்பானேன்? நான் தனியாகவே வாழ்ந்து பார்க்கிறேன்!”
தெருவோடு போன ஒரு பையன் அந்தக் கல்லைத் தன் கையில் எடுத்துக் கொண்டான். கல் தனக்குள் எண்ணிக் கொண்டது. “நான் பிரயாணம் செய்ய விரும்பினேன். பிரயாணம் செய்கிறேன். தீவிரமாக எதையும் விரும்பினாலே போதும். விரும்பிய படி நடக்கும்!”

 

கல்லை ஒரு வீட்டை நோக்கி எறிந்தான் பையன். “ஹா! நான் பறக்க விரும்பினேன்; பறக்கிறேன். என் விருப்பம் போலத்தான் நடக்கிறது எல்லாம்”

 

ஒரு ஜன்னல் கண்ணாடியில் ‘டண்’ என்று கல் மோதி உடைத்துக் கொண்டு உள்ளே போனது, கண்ணாடி உடையும் போது அது சொல்லியது “போக்கிரி, நான் போகும் வழியில் விலகிக் கொள்ளாமல் நிற்கிறாயே?! என்னை மறிப்பவர்களை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. என் சௌகரியத்திற்காகத்தான் எல்லாம் இருக்கிறது. ஆகவே இனிமேல் கவனமாக இரு!”
வீட்டின் அறைக்குள் இருந்த ஒரு மெத்தையின் மேல் விழுந்தது கல். “இவ்வளவு நேரம் பிரயாணம் செய்ததில் அலுப்பாகி விட்டது. சற்று ஓய்வு தேவை என்று நினைத்த பட்சத்திலேயே படுக்கை கிடைத்து விட்டதே. ஆஹா!” என்று நினைத்துக் கொண்டது.

 

ஒரு வேலைக்க்காரன் அங்கே வந்தான். படுக்கையில் இருந்த கல்லைத் தூக்கி ஜன்னல் வழியே திரும்பவும் தெருவில் எறிந்து விட்டான்.

 

அப்போது கப்பிக் கல் தன்னுடன் பதிந்திருந்த ஏனைய கப்பிக் கற்களிடம் “சகோதரர்களே! சௌக்கியமா? நான் இப்போது பெரிய மனிதர்களைப் பார்க்க அவர் மாளிகைக்குப் போய் விட்டுத் திரும்புகிறேன். பெரிய மனிதர்களையும் பணக் காரர்களையும் எனக்குப் பிடிப்பதில்லை. என்னைப் போன்ற சாதாரண மக்களிடம்தான் எனக்கு உண்மையில் ரொம்பப் பிரியமும் மரியாதையும் இருக்கிறது. அதனால்தான் திரும்பி விட்டேன்” என்றது.

 

சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரக்கு ஏற்றி வந்த ஒரு வண்டியின் சக்கரம் தனியாகக் கிடந்த கல்லின் மேல் ஏறியது. “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!” என்று சொல்லிக் கொண்டே துண்டு துண்டாகச் சிதறிப் போனது அந்தப் பச்சோந்தி கப்பிக் கல்.

சிறுவர் கதைகள் – மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது

மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி “வீரனே எங்கு வந்தாய்?” என்று கேட்டார். “நான் போரில் பங்கேற்க வந்தேன்!” என்றான் அவன். “உனக்கு என்னப்பா தகுதியிருக்கிறது” என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் மூன்று அம்புகளையும் காட்டி, “இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால் கௌரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை படைத்தவன் நான்” என்றான்.

“எப்படி உன்னை நம்புவது?” என்றார் கடவுள். அவன் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு தூரத்தில் உள்ள மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்திக் காட்டுவதாகக் கூறினான். விளையாடிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த கிருஷ்ணர், “சரி செய் பார்க்கலாம்” என்றார். அவர் கடவுளல்லவா? அவனுக்குத் தெரியாமல் மரத்தின் ஐந்து இலைகளை முதலில் தன் காலடியின் கீழே மறைத்துக் கொண்டார்.

 

வீரன் நாண் ஏற்றி அம்பை எய்தான். அவன் சொன்னது போலவே மரத்தில் அனைத்து இலைகளும் ஒரே அம்பின் தாக்குதலில் கீழே விழுந்து விட்டன. அதோடில்லாமல் அம்பு திரும்பவும் வந்து ஐந்து முறை கிருஷ்ணரின் காலைத் துளைத்தது.

 

வீரன் கிருஷ்ணரைத் தெரிந்து கொண்டு வணங்கினான். கிருஷ்ணரும் அவனது திறமையைப் பாராட்டினார், “சரி, யாருக்காக போராடப் போவதாக உத்தேசம்?” என்று கிருஷ்ணர் கேட்டார். வீரன் “என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு ஆதரவாகவே போரிடுவேன்” என்றான். “இவன் போரிட்டால் இவன் பக்கம் உள்ள கட்சி ஜெயிக்க ஆரம்பிக்கும், உடனே இவன் எதிர் கட்சிக்குப் போய் விடுவான். பிறகு அது ஜெயிக்க ஆரம்பிக்கும். இது முடியவே முடியாதே. போருக்கு ஒரு முடிவு ஏற்படாமல் போய் விடுமே” என்று கிருஷ்ணர் யோசித்தார்.
“வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது” என்று அவனிடம் சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான். ‘இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும்” என்றார் கிருஷ்ணர். ‘யார் அவன். சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன்” என்றான் வீரன்.

 

கிருஷ்ணர் “வீரனே, போரின் முடிவுக்காக உழைக்க எண்ணாமல் உன் திறமைக்குச் சவாலாகப் போரில் பங்கேற்க விழையும் நீதான் அந்த ஆள்” என்று அவன் தலையைக் கேட்டு விட்டார். அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி, அவனுக்கு வரம் ஒன்று கொடுத்தார். அவன் “தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும்” என்று வரம் கேட்டான். வரத்தை அருளி விட்டு தலையை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர்.

 

நீதி: எந்தப் பக்கமும் சாயாமல் மதில் மேல் பூனையாக சுயநல சிந்தனையுடன் இருப்பவர்கள் எவ்வளவு திறமையிருந்தாலும் காரியத்திற்கு உதவ மாட்டார்கள்.
சிறுவர் கதைகள் – உலகத்திற்கு உப்பாய் இரு

ஒரு காலத்தில் இந்திரத்யும்னன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான். சொர்க்கபுரியின் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த அவனை ஒரு நாள் சொர்க்கத்தின் ‘தலை’ கூப்பிடுவதாக தேவதூதன் வந்து சொன்னான். மன்னன் சென்று என்னவென்று கேட்ட போது ‘உனக்கு சொர்க்க வாசம் முடிந்து விட்டது. பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாரக இரு’ என்று கட்டளை போட்டது ‘தலை’. ஏனென்று மன்னன் கேட்டான். ‘நீ செய்த நல்ல காரியங்களை நினைவில் வைத்திருக்க யாருமே இனிமேல் பூலோகத்தில் உயிருடன் இல்லை. இன்றுடன் அந்த கணக்குத் தீர்ந்து விடும். ஆகவே கிளம்பும் வழியைப் பார்’ என்று பதில் வந்தது. ‘இதற்குத் தீர்வே இல்லையா?’ என்று மன்னன் முறையிட்டான். ‘தலை’ முகவாயைச் சொறிந்து கொண்டு யோசித்தது. பிறகு ‘மன்னா, நீ கீழே போய் உனது நற்காரியங்களால் இன்னும் பலன் பெறும் ஒரு ஜீவனையாவது கண்டு பிடித்தால் உனக்கு சொர்க்கம் நீடிக்கப் படும்’ என்று சொன்னது.

மன்னனும் கிளம்பிப் பூலோகம் வந்தான். பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. அவன் வாழ்ந்த இடமே தலை கீழாக மாறிப் போயிருந்தது. மக்களில் யாரையும் அவனால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. மனதைத் தேற்றி நம்பிக்கையை ஏற்றிக் கொண்டு விடாமுயற்சியாகத் தேடி, இருப்பதிலேயே வயதான ஒரு மனிதரை சந்தித்தான். அவரிடம் ‘ஐயா! உமக்கு இந்திரத்யும்னன் என்று இந்தப் பகுதியை அரசாண்ட மன்னனைப் பற்றித் தெரியுமா?’ என்று ஆர்வத்துடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் கேட்டான். வயோதிகர் இடுங்கிய கண்களால் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி விட்டார். ‘வேண்டுமானால் என்னை விட வயதான ஆந்தை ஒன்று பக்கத்து மரப் பொந்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இரவில் அது விழித்த பின் அதனிடம் போய்க் கேள்’ என்று சொல்லி விட்டார்.

 

வேறு வழியில்லாமல் இரவு வரை கோவில் நிழலில் உட்கார்ந்திருந்து விட்டு இரவு ஆந்தையைப் பார்த்தான். தலையை முதுகுப் பக்கம் வைத்து ஒரு இரையைக் குறி வைத்துக் கொண்டிருந்த ஆந்தையிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். இரையைத் தப்ப விட்ட எரிச்சலில் ஆந்தை ‘எனக்குத் தெரியாது. இங்கே ஒரு கிழட்டு நாரை தினமும் காலைப் பொழுதில் திரியும். வேண்டுமானால் அதைக் கண்டு பிடித்துக் கேள்’ என்று சொல்லி விட்டுத் தன் வேலையைப் பார்க்கப் போய் விட்டது.

 

காலையில் அலைந்து திரிந்து நாரையைக் கண்டு பிடித்தான். அதனிடம் கேட்டபோது. ‘எனக்கு நினைவில்லை. ஆனால் பக்கத்து ஏரியில் ஒரு ஆமை கிடக்கிறது. அதற்கு நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது’ என்று நம்பிக்கையை வளர்த்தி விட்டது.

 

மன்னன் ஏரியைத் தேடி ஓடினான். அங்கே வயதான ஆமையைப் பார்த்தான். தள்ளாத வயதில் சிரமப் பட்டுக் கொண்டிருந்தது அந்த ஆமை. நம் மன்னன் அதனிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். ஆமை உடனே ‘ஆமாம். அவனால்தான் இந்த ஏரியும் இருக்கிறது, அதில் இருக்கும் உயிரினங்களும் நன்றியுடன் உயிர் வாழ்கின்றன’ என்று சொன்னது. அப்போது மன்னன் ‘நானேதான் அந்த இந்திரத்யும்னன்! எனக்கு இந்த ஏரியை ஏற்படுத்தியதாக நினைவில்லையே. நீ ஏதோ தப்பாகச் சொல்கிறாய்’ என்று நம்பிக்கை இழந்து போய் ஆமையிடம் சொன்னான்.
ஆமையும் ‘கதை அப்படியில்லையப்பா! நீ அரசாண்ட போது மக்களுக்குத் தினமும் ஏராளமான பசுக்களைத் தானமாக வழங்கினாய். மக்கள் அவற்றையெல்லாம் இந்தப் பகுதியிலுள்ள புல் தரையில் மேய விட்டார்கள். மாடுகள் தினமும் அலைந்து திரிந்து தன் குளம்புகளால் மண்ணைக் கிளப்பி விட்டதால் இந்தப் பகுதி நாளடைவில் பள்ளமாகப் போய் விட்டது. மழை பெய்து நீர் பிடித்ததால் ஏரியாக மாறிவிட்டது. இந்தப் பகுதியின் செழிப்பிற்கே இந்த ஏரிதான் காரணம் என்றும் ஆகி விட்டது. அதைக் கேட்டுத்தான் நான் இங்கே குடியேறினேன். இத்தனை நாள் நன்றியுடன் வாழ்ந்திருக்கிறேன். இன்னமும் பல உயிரினங்களும் வாழ்கின்றன. வாழப் போகின்றன’ என்றது.

 

தூரத்தில் சொர்க்கபுரியில் இருந்து மன்னனைக் கூட்டிப் போக விமானம் வருவது மன்னனுக்குத் தெரிந்தது.

நீதி: நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல தலைமுறைகளுக்கும் நீட்டித்திருக்கும் படியாக யோசித்துச் செய்வது நல்லது

சிறுவர் கதைகள் – கொடுத்துப் பெறுதல்

ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.

அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு “உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?” என்று கேட்டார்.

இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.

அப்பாஜி கதைகள் – தன்​னைப் ​போல்தான் வாழ்வார் உலகிலுள்​ளோர்களும்

தினசரி அதிகா​லையில் கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழிப்பதற்கு சவரத் ​தொழிலாளி ஒருவன் அரண்ம​ணைக்கு வருவது வழக்கம்.  தினசரி கா​லையில் முகத்​தை மழித்து முடி​யைத் திருத்துபவராதலால் அந்தத் ​தொழிலாளியிடம் ​வேடிக்​கையாக எ​தையாவது​ பேசுவது கிருஷ்ண​தேவராயரின் வழக்கம்.  அவனும் மன்னர் ​கேட்கும் ​கேள்விகளுக்கு இணக்கமாகப் பதிலு​ரைப்பான்.

ஒருநாள் அவன் கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழித்துக் ​கொண்டிருக்கும் ​போது,”நீ நாட்டு மக்களிடம் சகஜமாகப் பழகுபவனாயிற்​றே.  நமது நாட்டு மக்களின் வாழ்க்​கைத் தரம் எந்த நி​லையில் இருக்கிறது என்று உனக்குத்​ தெரிந்திருக்கு​மே என்றார்.  ”​

மேன்​மை தாங்கிய மகாராஜா அவர்க​ளே!  தங்களு​டைய ஆட்சியில் மக்கள் நன்கு சுபிட்சமாக இருக்கின்றனர்.  மக்களின் ஒவ்​வொருவர் இல்லத்தில் கு​றைந்தபட்சம் எலுமிச்சம்பழம் அளவிற்குத் தங்கம் இருக்கிறது.  அதனால் எவரும் கவ​லையில்லாமல் இருக்கின்றனர்” என்றார் சவரத்​தொழிலாளி.  சவரத்​ தொழிலாளி ​சென்ற பின்னர் எப்​போதும் ​போன்று மன்ன​ரைக் காண அப்பாஜி வந்தார்

அப்பாஜியிடம் சவரத் ​தொழிலாளி கூறிய​தை மன்னர் கூறினார்.  ”இவன் இப்படிக் கூற என்ன காரணம்?  இவன் ​சொன்னது ​போன்று எப்படி ​எல்லோரிடமும் எலுமிச்சம்பழ அளவில் ​பொன் இருக்கும்?  எலுமிச்சம்பழ அளவு ​பொன் என்பது சாதாரண மக்கள்​ வைத்திருக்க முடியாது!  ​பெரும் பணக்காரர்களிடத்தில் அல்லவா இருக்கும்.  ஆ​கையினால் இதுபற்றித் ​தெரிந்து ​கொள்ள ​வேண்டும்!” என்று வினவினார்.

”இதற்கு வி​ரைவில் வி​டை​யைக் கூறுகி​றேன்” என்று அப்பாஜி மன்னரிடம் கூறிவிட்டுச் ​சென்றுவிட்டார்.  மறுநாள் வழக்கம்​போல் சவரத் ​தொழிலாளி அரண்ம​னைக்கு வந்து கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழித்துக் ​கொண்டிருந்தான்.

அச்சமயம் அப்பாஜி, காவலர்க​ளை அ​ழைத்து ”சவரத் ​தொழிலாளியின் இல்லத்​தை ​சோத​னை ​செய்துவிட்டு வி​ரைவில் வாருங்கள்” என்று கட்ட​ளையிட்டார்.

காவலர்கள் சவரத் ​தொழிலாளியின் இல்லத்திற்குச் ​சென்று ​சோத​னை ​செய்த​போது, அடப்பப் பெட்டியில் எலுமிச்சம்பழ அளவுக்கு ​பொன் இருப்ப​தைக் கண்டு வந்து கூறினர். அத ​னை மன்னரிடம் ​கொடுத்துவிட்டு, மன்னர் ​பெருமா​னே! அடுத்த நாள் சவரத் ​தொழிலாளி வந்ததும், முதலில் ​கேட்டது ​போன்று ​கேளுங்கள். அவனிடமிருந்து ​வேறு விதமான பதில் கி​டைக்கும்” என்றார் அப்பாஜி.

வழக்கம் ​போல் கா​லை கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழிக்க சவரத் ​தொழிலாளி வந்தமர்ந்தான்.  வரும்​போ​தே அவனது முகம் வாடியிருந்தது.  அவன் தனது ​வே​லை​யை ஆரம்பிக்கும் சமயம்,

”இப்​​பொழுது குடிமக்கள் எவ்வாறு இருக்கிறார்கள்?  ஏதாவது மாறுதல் உண்டாகியிருக்கிறதா?”  என்று வினவினார் மன்னர்.

”​பெருமதிப்பிற்குரிய மகாராஜா அவர்க​ளே! அ​தை ஏன் ​கேட்கின்றீர்கள்?  எல்​லோரும் மனக்கலக்கத்துடன் இருக்கின்றனர். ​ கையில் இருக்கும் எலுமிச்சம் பழ அளவு தங்கத்​தை இழந்துவிட்டால் மக்கள் எப்படி மகிழ்ச்சியுடன் வாழ முடியும்?” என்று சவரத்​ தொழிலாளி கண்களில் நீர் மல்க ​தொண்​டை அ​டைக்கக் ​கூறினான்.

அச்சமயம் வந்த அப்பாஜி, ”மன்னர் ​பெருமா​னே!  இப்​போது வி​டை ​தெரிந்து விட்டதா?  உலகத்திலுள்ள ஒவ்​வொருவரும் தன்னு​டைய மன இயல்புக்கு ஏற்பதான் மற்றவர்களின் நி​லை​யை நிர்ணயிக்கின்றனர்.  தன்​னைப் ​போல்தான் பிறரும் இருப்பார்கள் என்று நி​னைக்கின்றனர்.

தான் நல்ல வருமானத்துடன் வாழ்ந்தால் மற்றவர்களும் அப்படித்தான் வாழ்வார்கள் என்றும், தான் கஷ்டநி​லையில் வாழ்ந்தால் மற்றவர்களும் கஷ்டத்துடன் தான் வாழ்கிறார்கள் என்று மனப்பக்குவத்தில் வாழ்கின்றனர்” என்றார் அப்பாஜி.  உட​னே காவல​னை அ​ழைத்து, ”கஜானாவில் பாதுகாப்புடன் இருக்கும் எலுமிச்சம்பழ அளவு ​பொன்​னைக் ​கொண்டு வந்து சவரத் ​தொழிலாளியிடம் ​கொடுங்கள்” என்று ஆ​ணையிட்டார் மன்னர். ​

கொண்டு ​கொடுத்த ​பொன்னுடன் சிறிது ​பொன்னும் பரிசாகச் சவரத் ​தொழிலாளிக்குக் ​கொடுத்தார்.  அவனும் மனம் மகிழ்ந்து பணிவுடன் வணங்கி இன்முகத்துடன் ​வாங்கிச் ​சென்றான்.  மனித இயல்​பை விளக்கிக் காட்டிய அப்பாஜியின் அறிவுத் திற​மை​யைப் பாராட்டினார் கிருஷ்ண​தேவராயர்.

அப்பாஜி கதைகள் – கவலையும் பலமும்

கிருஷ்ணதேவராயர் சில யானைகள் முன்னால் வர, பின்னால் ஒரு யானையின் மீது அமர்ந்து வீதி உலாச் சென்றார். ஒரு வீதியில் செல்லும்போது, எதிரில் வந்த இளைஞன் ஒருவன், முதலில் சென்ற யானையின் தந்தத்தைப் பிடித்துத் தள்ளினான். யானை சிறிது தூரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
அரசர் தம் மந்திரியான அப்பாஜியிடம் “இந்த இளைஞன் எவ்வளவு பலசாலியாக இருக்கிறான்?” என்றார்.
“அரசே! கவலையில்லாமல் வளர்ந்த பிள்ளை போலும்” என்று அப்பாஜி பதிலளித்தான். மறுநாளே அந்த இளைஞனைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தான். பின்பு அவனுடைய வீட்டைத் தேடிச் சென்றான்.
இளைஞனின் அம்மாவிடம் “அம்மா! ஒரே பிள்ளை என்று மிகுந்த செல்லம் கொடுக்கிறீர்கள். இப்படியே போனால் வளர்ந்த பிறகு பொறுப்பே இல்லாமல் இருப்பான். இனிமேல் அவனுக்கு அளிக்கும் உணவில் உப்பே போடாதீர்கள். ‘சம்பாதித்து வந்தால்தான் உப்பு போடுவேன்’ என்று சொன்னால், உங்கள் பிள்ளை பொறுப்பானவனாகிவிடுவான்.” என்று அப்பாஜி கூறியதும் அவ்வாறே செய்யலானாள்.
சில நாள்கள் சென்ற பின்பு, இராயர் முன்பு போலவே யானைப் படையுடன் நகர்வலம் சென்றார். யானையைக் கண்டதும் அந்த இளைஞன் தந்தத்தைப் பிடித்துத் தள்ள முயன்றான். அவனால் முடியவில்லை. அதற்குள் யானை அவனைக் கீழே தள்ளிவிட்டது.
“அரசே! பார்த்தீர்களா? சம்பாதிப்பது எப்படி என்ற கவலையால் இளைஞன் பலமிழந்தான். கவலையின்மையே பலத்தைத் தரும் என்பது புரிகிறதா?” என்றார் அப்பாஜி. அரசரும் ‘நன்றாகப் புரிந்தது’ என்றார்.

அப்பாஜி கதைகள் –  கிருஷ்ணதேவராயரிடம் அப்பாஜி மந்திரி ஆன கதை
அப்பாஜி கதைகள் – கிருஷ்ணதேவராயரிடம் அப்பாஜி மந்திரி ஆன கதை

விஜய நகர மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் அப்பாஜி என்று ஒரு மந்திரி இருந்தார். அவர் இதற்கு முன் கிருஷ்ணதேவராயருக்குக் கப்பம் கட்டும் ஒரு குறு நில மன்னரிடம் மந்திரியாக இருந்தார். அந்த மன்னர் ஏதோ காரணத்தால் வரிசையாக சில ஆண்டுகள் கப்பம் கட்ட இயலவில்லை. கிருஷ்ண தேவராயரின் கோபத்துக்கு அஞ்சினார். அவர் சர்வ சாதாரணமாக சம்பந்தப்பட்ட மன்னரை அழைத்து அவரைத் தனிமையில் வைத்து பிரம்பாலேயே அடிப்பார், பிறகு புண்மேல் உப்பு தடவச் செய்வார்.

அப்பாஜி அம்மன்னனை அழைத்துக் கொண்டு கிருஷ்ண தேவராயரைப் பார்க்க வந்தார். ஊருக்கு வெளியில் ஒரு சத்திரத்தில் மன்னனைத் தங்க வைத்தார். தான் தகவல் தெரிவிக்கும் வரை மன்னன் கிருஷ்ண தேவராயரின் முன்னால் வரக் கூடது என்றுக் கூறி விட்டு அவர் மட்டும் சென்று கிருஷ்ண தேவராயரை சென்று பார்த்தார். கிருஷ்ண தேவராயரும் அவரை வரவேற்று தன்னுடன் வைத்துக் கொண்டார்.

சில நாட்கள் கழிந்தன.கிருஷ்ண தேவராயரும் அப்பாஜியும் விஜய நகர சந்தை வீதியில் உலாவிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கிருஷ்ண தேவராயர் அப்பாஜியின் முகத்தைப் பார்க்காமல் அவரிடம் “ஆமாம், உங்கள் மன்னர் எங்கே? அவரை நான் பார்க்க வேண்டுமே” என்றார்.அப்பாஜியும் உரியன செய்வதாக வாக்களித்தார்.பிறகு தன் மன்னனிடம் ரகசியத் தூதனுப்பி தன் சொந்த நாடுக்கு உடனே விரைந்துச் செல்லுமாறுக் கூறினார். மன்னரும் ஓடி விட்டார்.

சில நாட்கள் கழித்து கிருஷ்ண தேவராயர் அப்பாஜியிடம் அவர் மன்னன் இன்னும் வராததற்கானக் காரணம் கேட்டார். அப்பாஜீ அவரிடம் நடந்ததைக் கூறினார்.கிருஷ்ண தேவராயர் ஆச்சரியத்துடன் அவரிடம் “நீங்கள் செய்தது உங்கள் மன்னனைக் காப்பாற்றி விட்டது. அவருக்குத் தக்கத் தண்டனை கொடுக்கவே எண்ணியிருந்தேன். ஆனால் இதை எப்படி உணர்ந்துக் கொண்டீர்கள்?” என்று கேட்டார்.அப்போது அப்பாஜீ “மகாராஜா, நீங்கள் என் மன்னனைப் பற்றிப் பேசும் போது உங்கள் பார்வைப் போன திசையைக் கவனித்தேன். அங்கு ஒரு கசாப்புக் கடையில் ஆடுகள் தோலுறிக்கப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்தவுடனேயே உங்களுக்கு எம் மன்னன் ஞாபகம் வந்தது. ஆகவே இது நல்லதுக்கல்ல என்று நான் உணர்ந்துக் கொண்டேன்” என்றார்.

அதன் பிறகு அப்பாஜி மகராஜாவிடம் மந்திரியாக இருந்தார். அது வேறு கதை, சோக முடிவுடன். அரசர்களுடன் நெருங்கி பழகுவது எப்போதுமே கத்திமுனையில் நடப்பது போலத்தான்.

அப்பாஜி கதைகள் – ஆறாவது முட்டாள்

அரசர் கிருஷ்ணதேவராயருக்கு அன்று விபரீதமான ஓர் ஆசை ஏற்பட்டது. அவர் அப்பாஜியிடம், “”அமைச்சரே, இன்று மாலை ஆறு மணிக்குள் நம் தலைநகரான விஜயநகரை நீர் நன்றாகச் சுற்றிப் பார்த்து, ஆறு முட்டாள்களின் விலாசத்தைக் குறித்துக் கொண்டு வாருங்கள்,” என்று ஆணையிட்டார்.

“”முட்டாள்களின் முகவரி எதற்கு?” என்று பணிவுடன் கேட்டார் அப்பாஜி.

“”வீணாக விளக்கம் கேட்க வேண்டாம். சொன்னதைச் செய்யும்!” என்று அரசர் கண்டிப்பாகக் கூறினார்.

அரசர் விருப்பப்படி முட்டாள்களைத் தேடி அலைந்தார் அப்பாஜி. அந்தி நேரத்திற்குள் ஆறு முட்டாள்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்கள் விலாசத்தைக் குறிக்க வேண்டுமே! எங்கே போவது? எப்படி முட்டாள்களைச் சந்திப்பது?

அப்பாஜி இரண்டு மணி நேரம் மாறு வேடமணிந்து முட்டாள்களைத் தேடினார். யாரையும் காணோம். நகர எல்லையை ஒட்டிய மரத்தின் நிழலில் சிறிது நேரம் நின்றார்.

அப்போது ஒருவன் கழுதை மீது ஏறி வந்தான். அவன் தலை மீது ஒரு புல்கட்டினைச் சுமந்து கொண்டிருந்தான்.

“”ஐயா, கழுதை மீது இருக்கும் நீர் ஏன் புல்கட்டினைச் சுமந்துக் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டார் அப்பாஜி.

“”உமக்கு அறிவு இருக்கா? என் கழுதைக்கு வயதாகிவிட்டது. ரொம்பவும் தளர்ந்து விட்டது; அதனால், என்னை மட்டுமே சுமக்க இயலும். இந்தப் புல்கட்டினையும் சேர்த்துச் சுமக்க இயலாது. ஆகவே, நான் புல்கட்டினைச் சுமந்து செல்கிறேன்,” என்றான்.

அப்பாஜிக்கு ஒரே மகிழ்ச்சி. தான் தேடி வந்த முட்டாள்களில் ஒருவன் அகப்பட்டுக் கொண்டானே! அவனிடம் சாமர்த்தியமாகப் பேசி அவனது விலாசத்தைக் கேட்டுக் குறித்துக் கொண்டார்.

சிறிது துõரம் சென்றதும் அருகில் உள்ள ஒரு மரத்தின் நுனி கிளையில் ஒருவன் உட்கார்ந்துக் கொண்டு மரத்தை வெட்டிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்த அப்பாஜி,

“”ஐயா! இப்படி உட்கார்ந்துக் கொண்டு வெட்டினால் நீங்கள் கீழே விழுந்து விடுவீர்கள்.
அந்த பக்கமா உட்கார்ந்து வெட்டுங்க,” என்றார்.

“”ஏன்யா… நான் என்ன மடயன்னு நெனச்சியா… நான் இப்படி உட்கார்ந்துகிட்டு மரத்தை வெட்டினா இந்த மரக்கிளை கீழே விழும். நீ உடனே துõக்கிகிட்டு ஓடலாம்னு பார்த்தியா? அதுக்காகத் தானே நான் இங்க உட்கார்ந்துகிட்டு வெட்டுறேன்,” என்றான்.

“”சே! உங்க புத்திசாலித்தனம் யாருக்கு வரும்… உங்க வீட்டு முகவரியை கொடுங்க…” என்று வாங்கிக் கொண்டார். அடுத்து பாட்டி ஒருத்தி அடுப்பை பற்றவைக்க மிகவும் போராடிக் கொண்டிருந்தார்.

“”பாட்டி என்ன பிரச்னை? என்றார் அப்பாஜி, “”அய்யா! இது நல்லா காய்ஞ்ச விறகு தான். மண்ணென்ணெய் இல்லை. தண்ணியும், மண்ணென்ணெயும் ஒரே மாதிரி தானே இருக்கு அதனால இந்த விறகுகள்ல நல்லா தண்ணிய ஊத்தி எரிய வைக்க முயற்சி செய்றேன் எரியவே மாட்டேங்குது,” என்றாள். சிரித்துக் கொண்டே அவளது முகவரியையும் குறித்துக் கொண்டார் அப்பாஜி.

அடுத்த முட்டாள் அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. இன்னும் மூன்று முட்டாளைத் தேடியாக வேண்டும்! ஒரு மணி நேரமே உள்ளது.

அலுத்துப் போய் ஆற்றங்கரைக்குச் சென்றார் அப்பாஜி. அங்கே ஒருவன் குளித்து முடித்துவிட்டு இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார். அப்பாஜி அவனிடம்,

“”தாங்கள் எதைத் தேடிக் கொண்டு அலைகிறீர்கள்?” என்று விசாரித்தார்.

அவன், “”ஐயா, நான் என் உடைகளையும் கொஞ்சம் பணத்தையும் ஓர் இடத்தில் வைத்துவிட்டுக் குளித்தேன். குளித்துவிட்டு வந்து பார்த்தால் பணத்தையும், உடைகளையும் காணோம்,” என்று கவலையுடன் கூறினான்.

“”ஏதாவது அடையாளம் வைத்து இருந்தாயா?”

“”ஆமாம், அடையாளத்தையும் காணோம்.”

“”என்ன அடையாளம்?”

“”வானத்தில் வெண்மேகம் ஒன்றிருந்தது. அதை அடையாளமாகக் கொண்டு அதன் அடியில் அவற்றை வைத்தேன்.”

அவனது முட்டாள்தனத்தைப் புரிந்து கொண்ட அப்பாஜி அவன் பெயரோடு விலாசத்தையும் குறித்துக் கொண்டார்.

மாலை ஆறு மணி அப்பாஜி அரசனிடம் விரைந்து சென்றார். நான்கு முட்டாள்களுடைய விலாசத்தையும் கொடுத்தார்.

கிருஷ்ணதேவராயர் அவற்றைப் பார்த்தார். முட்டாள்களின் விபரங்களை அறிந்து ரசித்து சிரித்த அரசன், “”அமைச்சரே, இன்னும் இரண்டு முட்டாள்களின் விலாசம் எங்கே?” என்று கேட்டார்.

அப்பாஜி, “”அரசே, ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் மந்திரி நாள் முழுவதும் முட்டாள்களைத் தேடிக் கொண்டு அலைந்தது முட்டாள்தனமல்லவா! ஆகவே, எனது விலாசத்தை ஐந்தாவதாக எழுதிக் கொள்ளுங்கள்,” என்று பணிவோடு வேண்டினார். அரசரும் அப்பாஜியின் முகவரியை எழுதிக் கொண்டார்.

பிறகு, “”அமைச்சரே, ஆறாவது முட்டாளின் விலாசம் எங்கே?” என்று அரசர் ஆர்வத்துடன் கேட்டார்.

“”அரசே, கோபித்துக் கொள்ளாதீர்கள்! உங்கள் விலாசம் உங்களுக்குத் தெரியாதா? ஒரு நாட்டின் அமைச்சருக்கு என்ன வேலை கொடுக்க வேண்டும் என்று ஒரு ஒழுங்கு கிடையாதா? நாம் அறிவாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களால் பல நன்மைகளைப் பெற வேண்டுமே தவிர, முட்டாள்களைத் தேடிக் கண்டு பிடித்து, அவர்களது தொடர்பால் நம்மையும் முட்டாளாக்கிக் கொள்ளக் கூடாதல்லவா!” என்று உருக்கமாகக் கூறினார்.

அரசனுக்குத் தான் செய்த தவறு புரிந்து விட்டது. தன் கையிலிருந்து நான்கு முட்டாள்களின் விலாசத்தையும் உடனே கிழித்து எறிந்தார். அப்பாஜியின் அறிவுக் கூர்மையையும் துணிச்சலையும் பாராட்டி அவருக்குப் பரிசு அளித்தார்.

முல்லாவின் கதைகள் – முல்லாவும் மூன்று அறிஞர்களும்

நம்ம முல்லா நஸ்ருதீன் இருந்த நாட்டில் நிறைய கல்வி கற்ற அறிஞர்கள் இருந்தார்கள், அவர்களோடு மற்ற நாட்டு அறிஞர்கள் போட்டி போடுவார்கள், அதனால் மக்களுக்கு நல்ல நல்ல விசயங்கள் தெரிய வரும். சில நேரங்களில் போட்டி கடுமையாக இருக்கும், வெற்றி பெற்றவருக்கு பட்டமும், பணமும் கிடைக்கும்.

ஒருமுறை மூன்று மெத்த படித்தவர்கள், எல்லாமே தெரிந்தவர்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டு, அடுத்தவர்கள் பதில் சொல்ல முடியாத அளவுக்கு கேள்வி கேட்பார்கள். அவர்கள் போட்டி அழைத்தாலே, ஏன் வீணாக அவமானப்பட வேண்டும் என்று நினைத்து நிறைய பேர் போட்டியை புறக்கணிப்பார்கள்.

அப்படி பட்ட அந்த மூன்று பேரும் நம்ம முல்லா இருந்த நாட்டிற்கு வந்து அரசனிடம் எங்களுடன் போட்டிப் போட உங்கள் நாட்டில் புத்திசாலிகள் இருந்தால் வரச் சொல்லுங்க என்றார். உடனே அரசர் தன்னுடைய அரண்மனை அறிஞர்களைப் பார்க்க அவர்களோ தலையை தொங்கப் போட்டு விட்டார்கள், யாரும் போட்டிப் போட விருப்பம் தெரிவிக்கவில்லை,

உடனே அந்த மூன்று பேரும், சப்தமாக சிரித்து, உங்கள் நாட்டில் அனைவரும் முட்டாள்களா? எங்களுடன் போட்டிப்போட யாருமே இல்லையா? ஹா ஹா, அப்படியே போட்டி போட்டு எங்களை வென்றால் நாங்கள் இந்த நாட்டுக்கு அடிமை, இல்லை என்றால் நீங்கள் அனைவரும் எங்களுக்கு அடிமை, போட்டிக்கு தயாரா? என்று கிண்டலாக கேட்க, அரசனுக்கு அவமானம் தாங்க முடியவில்லை.

நாளை நாட்டின் நடுவில் இருக்கும் ஒரு இடத்தில் போட்டி நடைபெறும், யார் வேண்டும் என்றாலும் கலந்துக் கொள்ளலாம், இந்த மூன்று பேரையும் வெற்றிக் கண்டால் நிறைய பரிசுகள் கிடைக்கும், இல்லை என்றால் கடுமையான தண்டனை என்று அறிவிப்பு செய்தார். அன்றைய இரவே புத்திசாலிகள் என்று சொல்லித் திரிந்த நிறைய பேர் ஊரை விட்டு போய் விட்டார்கள்.

அடுத்த நாள் காலையில் அங்கே நிறைய மக்கள் கூடி இருந்தார்கள், அவர்களோடு போட்டி போட்டு தோற்றவர்கள் தலை குனிந்து நின்றுக் கொண்டிருந்தார்கள். யாருமே அவர்களை வெற்றிக் கொள்ள முடியவில்லை என்ற ஆத்திரத்தில் அரசன் அமர்ந்திருந்தான்.

அந்த பக்கமாக நம்ம முல்லா பக்கத்து நாட்டில் வியாபாரம் செய்து முடித்து தன்னுடைய கழுதையுடன் ஊருக்கு வந்தார், என்னடா இங்கே இவ்வளவு கூட்டமாக இருக்கிறதே, என்று வேடிக்கை பார்த்தவருக்கு பயங்கர அதிர்ச்சி. அவரது மச்சான் வேறு கையை கட்டி தலை குனிந்து நின்றுக் கொண்டிருந்தான்.

மக்களிடம் என்ன ஏது என்று கேட்டு தெரிந்துக் கொண்டார், மச்சானின் தொந்தரவு இனி இருக்காது என்று நினைத்தார். சிறிது நேரத்திலேயே தன் நாட்டு மக்கள் யாருமே பதில் சொல்லவில்லை, அப்படி செய்தால் தன் நாட்டிற்கு பெருத்த அவமானம் ஆகுமே என்று நினைத்ததோடு இல்லாமல் இந்த அறிஞர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்.

தன்னுடைய கழுதையோடு கூட்டத்தின் நடுவே சென்று, அரசனை பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு, தான் போட்டியிடப் போவதாக சொன்னார்.

அரசனும் சரி என்றார், ஆனால் அந்த மூன்று பேரும் முல்லாவின் ஆடை, கழுதையோடு நின்ற நிலையை பார்த்து ஏளனமாக சிரித்து, உன்னிடம் நாங்கள் ஆளுக்கு ஒரு கேள்வி கேட்போம், நீ சொல்லும் பதிலை நாங்க சரி, தவறு என்று சொல்வோம், அப்படி நாங்க பதில் சொல்லவில்லை என்றால் உனக்கும் இந்த நாட்டுக்கும் அடிமை. நீ தோற்றால் இந்த நாடும், மற்றவர்களும், நீயும் வாழ்நாள் முழுவதும் எங்களுக்கு அடிமை.

முல்லா: அது எல்லாம் சரி, கேள்வியை கேளுங்கப்பா, சீக்கிரம் வீட்டுக்கு போகணும்?

முதல் அறிஞர் முல்லாவிடம், “இந்த உலகின் மைய இடம் எது?” என்று கேட்டார்.

அதற்கு முல்லா, “”என் கழுதை நிற்குமிடம் தான் உலகின் மையம்,” என்றார்.

அந்த அறிஞர், “அதை உண்மை என்று நிரூபியுங்கள் பார்க்கலாம்,” என்றார்.

உடனே முல்லா, “அது உங்க வேலை, நான் சொன்னது தவறு என்று நிரூபியுங்கள். உலகை அளந்து பாருங்கள். அப்போது என் கழுதை நிற்குமிடம் உலகின் மையம் என்று தெரியும்,” என்றார்.

முதல் அறிஞர் என்ன சொல்வது என்று தெரியாமல் பேசாமல் இருந்தார்.

அடுத்து இரண்டாம் அறிஞர், “ஆகாயத்தில் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன?” என்று கேட்டார்.

அதற்கு முல்லா, “என் கழுதையின் உடலில் எத்தனை உரோமங்கள் இருக்கின்றனவோ அத்தனை நட்சத்திரங்கள் ஆகாயத்தில் உள்ளன. வேண்டுமானால் எண்ணிப் பாருங்கள்,” என்றார்.

இரண்டாம் அறிஞர் பேசாமல் இருந்துவிட்டார்.

மூன்றாவது அறிஞர் முல்லாவிடம், “மக்கள் கடைபிடிப்பதற்காகச் சான்றோர்கள் வகுத்த நெறிகள் எவ்வளவு?” என்றார்.

அதற்கு முல்லா, “அறிஞர்களே உங்கள் மூவருடைய தாடியிலும் எவ்வளவு உரோமங்கள் உண்டோ அத்தனை நெறிகளைச் சான்றோர்கள் மக்களுக்காக வகுத்துள்ளனர்.

“இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள். உங்கள் மூவருடைய தாடியிலும் உள்ள உரோமங்களைப் பிடுங்கி எண்ணிக்கை சரியானது என்று நிரூபிக்கிறேன்,” என்றார்.

இவ்வாறு முல்லா கூறியதும், “வேண்டாம், வேண்டாம். நீங்கள் சொன்ன பதிலை ஒப்புக் கொள்கிறோம்” என்று கூறி அந்த அறிஞர்கள் தாங்கள் தோற்றுப் போனதை ஒப்புக் கொண்டு தங்கள் பரிசுகளை முல்லாவிடம் சமர்ப்பித்தனர், தங்களை அந்த நாட்டின் அடிமை என்று அறிவித்தார்கள்.

போட்டியில் வென்றதால் அரசன் முல்லாவை கட்டிப்பிடித்து, நன்றி சொன்னார். என்ன கேட்டாலும் கொடுக்கத் தயார் என்றார், உடனே “அந்த மூன்று அறிஞர்களையும் தங்கள் நாட்டிற்கு போக அனுமதிக்க வேண்டும், இனிமேல் அவர்கள் இது போல் போட்டியிட மாட்டார்கள்” என்றார்.

அந்த மூவரும் முல்லாவுக்கு நன்றி சொல்லி தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடி போனார்கள். முல்லாவின் புகழ் மேலும் பரவியது.

சிறுவர் கதைகள் – மந்திர புல்லாங்குழல்

ஆனைக்குடி என்ற ஊரில் அழகேசன் என்ற ஏழை இளைஞன் இருந்தார், அவர் பக்கத்து ஊரில் ஜம்பு என்ற ஜமிந்தாரிடம் வேலை பார்த்து வந்தார், கடுமையாக உழைத்தாலும் ஜமிந்தார் ஒன்றுமே கொடுக்க மாட்டார், சாப்பாடு மட்டுமே போடுவார். இருந்தாலும் தனக்கு வேலை கொடுத்த ஜமிந்தாருக்கு மிகவும் உண்மையாக உழைத்தார், ஜமிந்தார் கொடுப்பதில் தன் தாயாருக்கு பொருட்கள் வாங்கி கொடுத்து அனுப்புவார்.

இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வேலை செய்து, பின்னர் தன் தாயை பார்க்க போவதாக ஜமிந்தாரிடம் சொன்னார் அழகேசன். ஜமிந்தாருக்கு அவரை விட மனசு இல்லை, இருந்தாலும் போய் வா, இதோ இரண்டு ஆண்டுக்கான உன் கூலி என்று கூறி 5 செப்பு காசுகள் கொடுத்தார்.

அவரும் மனம் கோணாமல் தாயாரைப் பார்க்க போகிற மகிழ்ச்சியில் சந்தோசமாக வாங்கி, முதலாளிக்கு நன்றி சொல்லிட்டு ஊருக்கு கிளம்பினார். அதே நேரம் அந்த ஊரில் ஒரு பெரிய திருடன் ஒருவன், ஜம்பு ஜமிந்தாரின் வீட்டை ரொம்ப நாட்களாக நோட்டம் போட்டுட்டு வந்தான். அழகேசன் இருந்தவரை அவனால் திருட முடியவில்லை, அழகேசன் ஊருக்கு கிளம்புவதையும், அவர் சம்பளம் வாங்கி சென்றதையும் பார்த்தான், கண்டிப்பாக நிறைய தங்கம் கொண்டு செல்வார் என்று நினைத்தான், அதற்கு முன்னர் ஜமிந்தார் வெளியே சென்ற நேரம் பார்த்து அவரது வீட்டில் யாருக்கும் தெரியாமல் நுழைந்து, அங்கே பாதுகாப்பாக வைத்திருந்த தங்க காசுகள், நகைகள் மற்றும் அனைத்து ஆபரணங்களையும் கொள்ளை அடித்து, பெரிய மூட்டை கட்டினான்.

பேராசை யாரை விட்டது, இது போதாது என்று நினைத்து, அழகேசன் கையில் இருக்கும் பொருட்களையும் பிடுங்க திட்டமிட்டான், எப்படி அழகேசன் காட்டு வழியாகத் தான் நடந்து ஊருக்கு செல்வார், எனவே அங்கே அவரை அங்கேயே மடக்கி, இருப்பதை திருடலாம் என்று நினைத்தான். குறுக்கு பாதையில் ஓடி காட்டில் ஒளிந்துக் கொண்டான்.

அழகேசன் காட்டு வழியாக செல்லும் போது ஒரு இடத்தில் ஒரு குள்ளமான ஒருவர் கீழே விழுந்து கிடந்தார், அவரை ஓடி போய் தூக்கி, குடிக்க தண்ணீர் கொடுத்தார். சிறிது நேரத்தில் அந்த குள்ள மனிதர் கண் விழித்து பார்த்தார், அவரது தோற்றம் வேடிக்கையாக இருந்தது. நீண்ட வெண்ணிறத்தாடி, தலையில் கூம்பு வடிவில் தொப்பி.

“அய்யா, பெரியவரே! என்ன ஆச்சு, ஏன் மயங்கி கிடக்கிறீங்க”
“தம்பி, என்னை காப்பாற்றியதற்கு நன்றி, நான் பசியாலும், பட்டினியாலும் வாடுகிறேன், எனக்கு உன்னால் முடிந்த உதவியை செய்வாயாக”
“அ=ய்யா, நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த வருமானம் இதோ இருக்குது, இதில் 2 செப்பு காசுகள் நீங்க வைத்துக் கொள்ளுங்க”
‘தம்பி! உன் இரக்க குணம் என்னை மகிழ்ச்சி கொள்ளச் செய்யுது, கை மாறாக நான் உனக்கு உதவ இருக்கிறேன். எனக்கு சில மந்திர சக்திகள் இருக்குது, அதனை பயன்படுத்த மற்றவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறேன், உனக்கு என்ன வேண்டும் கேள், தருகிறேன்”

அழகேசனுக்கு ஆச்சரியம், நம்பமுடியவில்லை. என்னடா இது, நாம இவருக்கு உதவினால் அவர் நமக்கு உதவுகிறாராம், அதுவும் மந்திரசக்தியால், புரியவில்லையே என்று திகைத்தார்.

“தம்பி, சந்தேகம் வேண்டாம், உனக்கு உதவி செய்ய இருக்கிறேன், என்ன வேண்டும் கேள்”
“அய்யா, எனக்கு இசையில் மிக்க ஆர்வம் உண்டு, நான் ஊதினால் இனிமையான இசை வரக்கூடிய ஒரு புல்லாங்குழல் கொடுங்க, அதை கேட்டவர்களும் மெய் மறந்து போகும் அளவுக்கு இருக்க வேண்டும்”

உடனே குள்ள மனிதர் கண்ணை மூடி ஏதோ மந்திரம் சொல்ல, கையில் அழகான புல்லாங்குழல் வந்தது, அதை அழகேசனுக்கு கொடுத்து, ஆசிர்வாதம் செய்து, வேறு வழியில் சென்று விட்டார்.

அழகேசனும் மகிழ்ச்சியாக நடக்கத் தொடங்கினார், திடிரென்று அவர் முன்னால் பெரிய கத்தியோடு அந்த திருடன் வந்து நின்றான், மரியாதையாக உங்க முதலாளி கொடுத்த காசுகளை எனக்கு கொடு என்றான். அழகேசனுக்கு பயம், ஏன் வீணாக திருடனிடம் சண்டை போட்டு, உயிரை இழக்க வேண்டும், என்று நினைத்து, பையில் இருந்த 3 செப்பு காசுகளை கொடுத்தான். என்ன 3 செப்பு காசா, அவர் 5 அல்லவா கொடுத்தார், தங்கம் கிடையாதா, கஞ்சப்பயல், அதான் அவன் வீட்டில் நான் இத்தனை தங்கம் இருந்ததா, ஆமாம் மீதி 2 காசு எங்கே, அதையும் கொடு, இல்லை என்றால் கொன்று விடுவேன்”

“என்னிடம் 3 தான் இருக்குது, 2 ஒரு குள்ள மனிதருக்கு கொடுத்து விட்டேன்”
“நான், நம்ப மாட்டேன், எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்?”
அழகேசன் என்ன செய்வது என்று யோசித்தார், திருடனிடமிருந்து தப்பிக்க ஒரே ஒரு ஆயுதம், அந்த புல்லாங்குழல் தான், அதை உபயோகிக்கலாம் என்று முடிவு செய்து “மீதி 2 காசு, இதுக்குள்ளே இருக்குது, இரு, ஊதி எடுக்கிறேன்” என்று கூறி புல்லாங்குழலை இசைக்கத் தொடங்கினார்.

அதிலிருந்து அருமையான இனிய இசை கிளம்பியது, அனைத்து பறவைகளும் மெய் மறந்து கேட்டன, திருடன் சும்மாவா இருக்க முடியும், திருடனும் ஆகா, ஓகோ என்று தை தைக்கா என்று குதிக்கத் தொடங்கினான், அழகேசன் விடாமல் இசைக்க, திருடன் அங்கே இங்கே ஆடத் தொடங்கினான், கீழே விழுந்தான், முள் செடியில் மாட்டிக் கொண்டான், தொடர்ந்து ஆட உடம்பு எல்லாம் அடிப்பட்டு, ரத்தக்களரியாகி, “அய்யா, அய்யா, தயவு செய்து புல்லாங்குழல் இசைப்பதை நிறுத்துங்க, இல்லேன்னா, நான் செத்து போயிடுவேன், என்னால் வலி தாங்க முடியலை, ஆடாமலும் இருக்க முடியலை, நான் திருடியதை எல்லாம் உங்களுக்கே கொடுத்து விடுகிறேன்” என்றான்.

அழகேசனும் அவனிடமிருந்ததை எல்லாம் வாங்கி விட்டு, அவனை ஒரு மரத்தில் கட்டி வைத்து விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பினார்.

அங்கே ஜமிந்தார் “அய்யோ, எல்லாமே போயிட்டதே, நான் சம்பாதித்தது எல்லாமே களவு போயிட்டதே, நான் தவறாக சம்பாதித்தது முதல் எல்லாமே போயிட்டதே, இனிமேல் நான் என்ன செய்வேன்” என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

அழகேசன் அவரை பார்த்து “அய்யா அழ வேண்டாம், திருடன் திருடியதை எல்லாம் நான் வாங்கி வந்து விட்டேன், அவனன காட்டில் கட்டி வைத்திருக்கிறேன், உடனே ஊர்க்காவலர்கல் போய் பிடியுங்க, இதோ உங்க நகைகள், பணம், சரி பாருங்க” என்றார்.

ஜமிந்தாருக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை, இத்தனை நாள் கொடுமைப்படுத்தியும், நேர்மையாக நடந்து கொண்ட அழகேசன் மீது மரியாதை ஏற்ப்பட்டது, தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு, அழகேசனுக்கு அந்த ஊரிலேயே பங்களா ஒன்றையும், நிறைய நிலங்களையும் கொடுத்து உதவினார். அழகேசனும் தன் தாயாருடனும், அற்புத புல்லாங்குழலுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

சிறுவர் கதைகள் – பெரியவங்க சொன்னா கேட்கணும்

அந்தியூர் என்ற காட்டில் புறாக்கள் கூட்டமாக சேர்ந்து ஒரு ஆலமரத்தில் வாழ்ந்து வந்தன, அவற்றில் ஒரு வயதான புறாவும் உண்டு, புறாக்கள் எல்லாம் இரை தேடி வந்து மரத்தில் அமரும். அப்போ வயதான புறா தன் அனுபவங்களை கூறும், அப்போ நிறைய புறாக்கள் பழங்கதைகள் சொல்லி எங்களுக்கு ஏன் வீணாக அறிவுரை சொல்லுறீங்க, நாங்களே யோசிக்கும் அளவுக்கு எங்களுக்கும் அறிவு இருக்குது என்று உதாசினப்படுத்துவார்கள். சிலருக்கு உண்மையிலேயே ஆபத்து வந்தால் அப்போ அந்த வயதான புறா தான் நல்ல வழி காட்டும்.

ஒரு நாள் அனைத்து புறாக்களும் சேர்ந்து உணவு தேடி சென்றன. அப்போ ஓரிடத்தில் பறவைகளைப் பிடிக்க வேடன் ஒருவன் வலை விரித்திருந்தான், அதன் அடியில் பெரிய பெரிய நெல்மணிகளை கொட்டியிருந்தான்.

அப்போ புறாக்கள் அனைத்தும் அந்த நெல்மணிகளை சாப்பிட திட்டமிட்டன, ஆனால் வயதான புறா அது வேடம் விரித்த வலை, நாம் போய் நெல்லை சாப்பிட்டால் மாட்டிக் கொள்வோம், எனவே வேற இடத்தில் இரைத் தேடலாம் என்றது, ஆனால் மற்றவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. வலையில் மாட்டாமல் நெல்மணிகளை சாப்பிட போகிறோம் என்று கூறி வலையின் மீது சாமர்த்தியமாக அமர்ந்து சாப்பிட்டன, ஒரு புறாவும் வலையில் மாட்டவில்லை, அப்போ வயதான புறாவைப் பார்த்து கேலி செய்தன மற்ற புறாக்கள்.

திடிரென்று ஒரு குண்டு புறா நிலைத் தடுமாறி ஒரு புறா மேல் விழ, அனைத்தும் சரிந்து நிலை குலைய, அவற்றின் கால்கள் வலையின் பின்னிக் கொண்டன, அவ்வளவு தான் அனைத்து புறாக்களும் வலையில் மாட்டிக் கொண்டன.

அவ்வளவு தான் அனைத்தும் என்ன என்ன முயற்சியோ செய்தன, ஆனால் ஒன்றும் முடியவில்லை. வலையானது தரையோடு சேர்த்து அடிக்கப்படிருந்தது.

உடனே அனைத்துப் புறாக்களும் வயதான புறாவை பார்த்து மன்னிப்பு கேட்டு, தங்களை காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்றன.

வயதான புறா “என் ஒருவனால் உங்கள் அனைவரையும் விடுவிக்க முடியாது, அதற்கான சக்தியும் என்னிடம் இல்லை, ஆனால் என்னுடைய வயதான அனுபவத்தால் கிடைத்ததை வைத்து ஒரு வழி சொல்கிறேன், அதன்படி நடந்தால் தப்பிக்கலாம் என்றது.

மற்ற புறாக்கள் கண்டிப்பாக சொல்லுங்க, இதுவரை உங்கள் அனுபவங்களை உதாசினப்படுத்தியதற்கு மன்னியுங்க என்றன.

வயதான புறா “இன்னும் கொஞ்ச நேரத்தில் வேடன் வருவான், அவன் வரும் போது நீங்க யாரும் உயிரோடு இருப்பது போல் காட்டிக் கொள்ளக்கூடாது, மரணம் அடைந்த மாதிரி விழுந்து கிடக்க வேண்டும்.”

“அவனும் செத்துப் போன புறாக்கள் தானே என்று உங்களை தரையில் போடுவான், கடைசி புறாவை போடும் வரை அமைதி காக்க வேண்டும், கடைசி புறாவைப் போட்டதும், நான் வேகமாக வந்து வேடனை கொத்துவேன், அவன் நிலை குலைந்தவுடன் நீங்க அனைவரும் உடனே பறந்து தப்பிவிடுங்க”

அனைத்து புறாக்களும் வயதான புறாவை வணங்கி, அது சொன்னது போல் செத்துப் போனது போல் நடித்தன, அங்கே வந்த வேடனும் அனைத்தும் செத்து கிடப்பதைக் கண்டு, தண்ணீர் குடிக்காததால் ஒருவேளை அனைத்தும் இறந்து போயிருக்கும் என்று நினைத்து, ஒவ்வொரு புறாவையும் வலையில் விடுவித்து கீழே போட்டான். கடைசி புறாவையும் போட்டு நிமிர்ந்து நிற்கவும், நம்ம வயதான புறா வேகமாக பறந்து வந்து வேடனின் தலையில் கொத்தியது, திடிரென்று நடந்த இந்த சம்பவத்தால் வேடன் பயந்து கண்களை மூடிக் கொண்டு, தலையின் மேல் கைகளை வீசினான்.

அவ்வளவு தான் அந்த சந்தர்ப்பத்தில் அனைத்து புறாக்களும் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்பது போல் தப்பி பறந்தோடின.

பின்னர் அனைத்து புறாக்களும் ஆலமரத்தில் கூடி, வயதான புறாவை போற்றின, பெரியவங்க சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் இருக்கும், அவர்கள் சொல்வதை கேட்டு நடந்தால் துன்பமே வராது என்பதை புரிந்துக் கொண்டோம், இனிமேல் உங்கள் அறிவுரைப் படியே நடப்போம் என்று உறுதி கூறின. தினமும் வயதான புறாவின் அறிவுரைகள் கேட்டு நடந்து,. ஆபத்தில்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.

சிறுவர் கதைகள் – வரும்முன் காப்போம்

தேரிக்குடியிருப்பு என்ற ஊரின் எல்லையில் இருந்த காட்டில் பெரிய குளம் இருந்தது, அதனை ஒட்டி சிறிய நீரோடை ஓடிக் கொண்டிருக்கும்.

அந்த குளத்தில் நிறைய மீன்கள், நண்டுகள், மற்றும் அனைத்து நீர்வாழ் இனங்கள் வாழ்ந்து வந்தன. அவற்றில் ராமு, சோமு, தாமு என்ற மூன்று மீன்கள் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அந்த மூவரும் எங்கே சென்றாலும் ஒன்றாகவே போவார்கள். ஒரு பயமும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.

அவர்கள் மகிழ்ச்சியை கெடுக்கும் விதமாக ஒரு நாள் மாலையில் ஒரு இரண்டு மனிதர்கள் அங்கே வந்தார்கள், வேட்டையாடிய களைப்பு முகத்தில் தெரிந்தது, குளத்து நீரை அருந்தி விட்டு, குளத்தை நன்றாக ஆராய்ந்தார்கள், பின்னர் அவர்களில் ஒருவர் “இந்த குளத்தில் நிறைய மீன்கள் இருக்கிறதே, அதுவும் நன்றாக வளர்ந்து கொழு கொழு என்று இருக்கிறதே, நாம் வீணாக காடு மேடு என்று அலைந்து வேட்டையாட வேண்டாம், பேசாம இங்கே நாளை வந்து வலையை விரிப்போம், மாட்டிக் கொள்ளும் மீன்களை விற்று பணம் சம்பாதிக்கலாம்” என்றார். மற்றவரும் “ஆகா, அருமையான யோசனையாக இருக்கிறதே” என்றார்.

இவர்கள் பேசுவதை கேட்ட ராமு என்ற மீன் பெருங்கவலை அடைந்தது, உடனே தன் நண்பர்களான சோமு, தாமுவிடம் கூறியது. காட்டின் நடுவில் இருந்ததால் இதுவரை பெரிய ஆபத்து வந்தது இல்லை, குளத்தில் நடுவில் போய் இருந்தால் பறவைகள் கூட தங்களை ஒன்றும் செய்தது இல்லை, இன்றோ இந்த மனிதர்களால் பெரிய ஆபத்து வந்து விட்டதே என்ன செய்யலாம் என்று யோசித்தன.

ராமு எப்போவும் வரும்முன் காத்துக் கொள்ளும் மனம் படைத்த மீன், மற்ற மீன்களைப் பார்த்து, நாளை கண்டிப்பாக அவர்கள் இங்கே வருவார்கள், நாம் இன்று இரவே இக்குளத்தை விட்டு நீரோடையின் உதவியால் அருகில் இருக்கும் வேறு குளத்திற்கு போகலாம். சில காலம் போனபின்பு மீண்டும் இங்கே வரலாம் என்றது.

ராமுவின் நல்ல யோசனையை மற்ற இருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் சும்மா சொல்லிவிட்டு போயிருப்பார்கள், அவர்களாவது நம்மை பிடிப்பதாவது, நீ வீணாக பயப்படுகிறாய் என்றன.

ராமு எவ்வளவோ சொல்லிப் பார்த்தது, ஆனால் சோமு,தாமு இருவரும் கேட்கவில்லை. ராமு அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் இன்று இரவே அந்த குளத்தை விட்டு போவதாக சொல்லி விட்டு இரவே தப்பி வேற குளத்திற்கு போய் விட்டது.

மறு நாள் காலையில் சோமு, தாமு இருவரும் கூடி பேசினார்கள், மீன் பிடிப்பதாக சொன்னவர்களை காணவில்லை, சும்மா பேச்சு சொன்னதை நம்பி ராமு வேற குளத்திற்கு போனது முட்டாள்த்தனம் என்று கேலி செய்தன.

சிறிது நேரத்தில் வலை விரிப்பதாக சொன்ன இருவரும் பெரிய வலையை எடுத்து வந்து எங்கே வலை வீசுவது என்று பேசினார்கள். அவ்வளவு தான் அதைக் கேட்டு சோமு “அய்யோ கடவுளே!, ராமு அப்போவே சொன்னதே, இரவே தப்பியிருக்கலாமே” என்று புலம்பியது.

ஆனால் தாமு அந்த சூழ்நிலையிலும் கொஞ்சமும் பயப்படவில்லை, “ஏன் பயப்படுகிறாய், குளத்தில் எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன, நாம் மறைந்துக் கொள்ளலாம்” என்றது.

சோமு கொஞ்சம் கொழு கொழு மீன், அதற்கு பயம் வந்து விட்டது, அதற்குள் மீனவர்கள் வலை வீச, தாமூ ஓடி ஒளிந்துக் கொண்டது. சோமு மாட்டிக் கொண்டது, வலையில் இருந்து தன்னை விடுவிக்க படாத பாடு பட்டது, இறுதியில் சோமுவின் வால் பகுதியும் முதுகும் சேதமடைந்து, வலையில் இருந்து விடுபட்டு நீரோடையில் பாய்ந்து தப்பி விட்டது. உடல் எங்கும் ரத்தம், வரும் முன்னால் காக்காமல் வந்த போது காக்க நினைத்த தன் முட்டாள்தனத்தை நினைத்து வருந்தியது.

தாமு குளத்தின் உள்ளே இருந்த பாறையின் அடியில் ஒளிந்துக் கொண்டது, தான் வீரமாக தப்பியதை நினைத்து பெருமைப்பட்டது. அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. வந்த இருவரில் ஒருவர் நீண்ட கம்பை எடுத்து குளத்தின் அடியில் இருக்கும் பாறைகளில் செலுத்தி அசைத்தார், அவ்வாறு செய்கையில் ஒரு முறை அந்த கம்பானது தாமுவை தாக்கியது, தாமு தப்பிக்க நினைத்து அதிலிருந்து வெளியே வர, அங்கே இருந்த வலையில் மாட்டிக் கொண்டது.

சிறிது நேரத்தில் மீனவர்கள் வலையை வெளியே எடுத்து மாட்டிய அனைத்து மீன்களையும் தரையில் போட்டு கொன்றார்கள். அதில் தாமுவும் ஒரு மீன்.

வரும்முன் காப்போம் என்ற கொள்கை கொண்ட ராமு ஒரு ஆபத்தும் இல்லாமல் தப்பி, மகிழ்ச்சியாக வாழ்ந்தது, வந்த போது காப்போம் என்ற கொள்கை உடைய சோமு, உடல் எங்கும் காயப்பட்டு, மற்ற மீன்களுக்கு பயந்து பயந்து வாழ்ந்தது, வந்தப்பின்பு பார்ப்போம் என்ற கொள்கை உடைய தாமுவோ கொல்லப்பட்டு விட்டது.

குழந்தைகளே! இக்கதையானது நம் அனைவருக்கும் நல்ல பாடம். எந்த விசயத்தையும் வரும் முன்பே யோசிக்க வேண்டும், மழைக்காலம் என்றால் வெளியே செல்லும் போது கையில் குடை இருக்க வேண்டும். தேர்வு வருகிறது என்றால் ஒரு வாரத்திற்கு அனைத்துப் பாடங்களையும் படித்து முடிக்க வேண்டும். கடைசி நேரத்தில் படிக்கத் தொடங்கினால் அது பயன் அளிக்காது, எனவே நாம் எப்போவும் வரும்முன் காப்போம் என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும், பின்பற்றினால் கவலையின்றி வாழலாம்.

சிறுவர் கதைகள் – விக்கிரமாதித்தனும் இந்திரனும்

ஒரு முறை விசுவாமித்திர முனிவர் கடுமையான தவம் செய்து கொண்டிருந்தார். அவருடைய தவம் முற்றுப் பெற்றால் இந்திரனுடைய பதவிக்கே ஆபத்து வந்துவிடும். இதை இந்திரன் விரும்பவில்லை. தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினான்.

இதற்காகத் தனது சபையில் நடன மாதர்களாக உள்ள ரம்பை, ஊர்வசி இருவரையும் வரவழைத்தான். இருவரில் ஒருவரை அனுப்பி முனிவரின் தவத்தைக் கலைத்து வருமாறு செய்ய நினைத்தான்.

இருவரில் யாரை அனுப்புவது என்று இந்திரனுக்குப் புரியவில்லை. செய்தி அறிந்த இருவரும் தாங்களே செல்வதாகப் போட்டியிட்டனர்.

“”ஒருவர் மட்டும்தான் செல்ல வேண்டும். உங்களில் யாரை அனுப்பலாமென்று நீங்களே கூறி விடுங்கள்,” என்றான் இந்திரன்.

“”நடனக் கலையில் எனக்கு ஈடு இணை எவருமே கிடையாது. எனவே, நான் தான் பூலோகத்திற்குச் செல்வேன்,” என்று ரம்பை கூறினாள்.

“”ரம்பை நடனக்கலை ஒன்றில்தான் சிறந்தவள். நான் சகல கலைகளிலும் சிறந்தவள் என்பதைத் தாங்களே அறிவீர்கள். அவ்வாறு இருக்கையில் என்னை விடத் தகுதி பெற்றவர் வேறு எவர் இருக்கக்கூடும்,” என்றாள் ஊர்வசி.

இருவருடைய பேச்சையும் கேட்ட இந்திரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இருவரில் எவர் சிறந்தவர் என்று தீர்மானிக்க அவனால் முடியவில்லை.
இச்சமயத்தில் நாரதர் அவ்விடம் வந்தார். இந்திரன் அவரை வரவேற்று உபசரித்தான்.

“”இந்திரதேவா, ஏன் வருத்தமுற்று இருக்கிறாய்?” என்று கேட்டார் நாரதர்.

“”ஐயனே! விசுவாமித்திர முனிவர் கடும் தவம் இயற்றிக் கொண்டிருக்கிறார். அவரது தவத்தைக் கலைக்க எனது நடன மாதர்களில் ஒருவரை அனுப்ப நினைத்தேன். அதற்காக இவர்கள் இருவரையும் வரவழைத்தேன். ஆனால், இப்பொழுது இவர்களில் யாரைப் பூலோகத்திற்கு அனுப்புவது என்று புரியவில்லை…” என்றான் இந்திரன்.

“”இரண்டு பேரையும் உனது சபையில் நடனமாடச் செய்து சிறப்பாக எவள் நடனமாடுகிறாளோ அவளையே பூலோகத்திற்கு அனுப்பிவிடு…” என்றார் நாரத முனிவர்.

மறுநாள் இந்திர சபையில் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரின் நடன நிகழ்ச்சி நடந்தது. நடனத்தைக் காண தேவர்களும், சகல கலைகளையும் உணர்ந்த கலைவாணர்களும் சபையில் குழுமியிருந்தனர்.

நடனம் ஆரம்பம் ஆயிற்று. இருவரும் சளைக்காமல் ஆடினர்.

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவில்லை. இருவருமே சிறப்பாக நடனம் ஆடினர். ஒருவருடைய நடனத்திலும் குற்றம் குறை சொல்ல முடியவில்லை. இருவருமே சரிசமமாக ஆடினர். இருவருடைய நடனத்தில் எவருடைய நடனம் சிறந்தது என்று தீர்ப்புச் சொல்ல முடியாமல் அனைவரும் குழம்பினர்.

இச்சமயத்தில் நாரத முனிவர் எழுந்து, “”இந்திரனே, இங்குள்ள எவராலும் முடியாத காரியத்தைச் செய்யக்கூடிய ஒருவன் பூலோகத்தில் வசிக்கிறான். அவன் பெயர் விக்கிரமாதித்தன். உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை ஆண்டு சகல கலைகளையும் உணர்ந்தவன் விக்கிரமாதித்தன். சிறப்பாக நாட்டியக் கலையில் தேர்ச்சி பெற்றவன். அவனை இங்கு அழைத்து வரச் செய்தால் அவன் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரில் எவர் சிறந்தவர் என்பதைக் கூறி விடுவான்,” என்றார்.

உடனே இந்திரன் தனது தேரோட்டியான மாதிரியை அழைத்து, “”மாதிரி, உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்திற்குச் சென்று உடனே விக்கிரமாதித்தனை இங்கு அழைத்து வா!” என்றான்.

மாதிரிக்கு விக்கிரமாதித்தனை இந்திரலோகத்திற்கு அழைத்துவர விருப்பமில்லை. “ஒரு மானிடன் இந்திர லோகத்திற்கு வருவதா?’ என்று நினைத்தான்.

இதை அறிந்து கொண்ட நாரதமுனிவர், “”மாதிரி, விக்கிரமாதித்தனை அவ்வளவு சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதே! தேவர்களுக்கெல்லாம் மேலாக விளங்கக் கூடியவன். இங்கு எழுந்துள்ள சிக்கலான பிரச்னையைத் தீர்த்து வைக்கக் கூடியவன் அவன் ஒருவனே. எனவே, தாமதம் செய்யாமல் அவனை இங்கு அழைத்து வா,” என்றார்.

மாதிரியும் அரை மனதுடன் பூலோகத்திற்குச் சென்றான். விக்கிரமாதித்தனைக் கண்டு இந்திரன் அவனை அழைத்து வருமாறு கூறினான்.

விக்கிரமாதித்தன் நேரே காளிகோயிலுக்குச் சென்றான். காளியிடம் எலுமிச்சம் பழமும் திருநீறும் ஆசியும் பெற்று இந்திரலோகம் செல்லக் கிளம்பினான். தேவலோகத்திலிருந்து வந்த விமானத்தில் ஏறுவதற்காக விக்கிரமாதித்தன் தமது வலது காலை எடுத்து வைத்தான்.

இடது கால் தரையில் இருந்தது. அச்சமயத்தில் மாதிரி, “இந்த மானிடன் இந்திரலோகத்திற்கு வருவதா?’ என்ற எண்ணத்துடன் விமானத்தைத் திடீரென்று கிளப்பினான்.

இதை அறிந்து கொண்ட விக்கிரமாதித்தன் தமது வலது காலின் பெருவிரலைத் தேர்த் தட்டில் அழுத்தமாக ஊன்றினான். மாதிரி எவ்வளவு முயற்சி செய்தும் விமானத்தை அவனால் மேலே கிளப்ப முடியவில்லை.

உடனே மாதிரி விக்கிரமாதித்தனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். பின்னர் விமானம் தேவலோகம் நோக்கிச் சென்றது.

இந்திரன் விக்கிரமாதித்தனை எதிர் கொண்டழைத்தான். தங்க ஆசனம் கொடுத்து அமரச் செய்தான். பிறகு விக்கிரமாதித்தனிடம் எல்லாச் செய்தியையும் கூறி அவனிடம் ஒரு பாரிஜாத மாலையைக் கொடுத்தான்.

“”விக்கிரமாதித்தரே! ரம்பை, ஊர்வசி இருவரில் எவர் சிறப்பாக நடனமாடுகிறாரோ அவருக்கு இந்த மாலையை அணிவியுங்கள்,” என்றான் இந்திரன்.

போட்டி ஆரம்பமாகியது. இருவரும் முன் போலவே ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆடினர். விக்கிரமாதித்தனுக்கு யாரைத் தேர்ந்தெடுப்பது என்றே புரியவில்லை.

போட்டி முடிவுற்ற பிறகு, “”தேவேந்திரா, இருவரும் தனித்தனியாக ஆடினர். எனவே, இவர்களில் எவர் சிறப்பாக ஆடினர் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நாளைய தினம் இருவரையும் சேர்ந்தாற்போல் ஆடச் செய்யுங்கள். அதைப் பார்த்தப் பிறகு என்னுடைய தீர்ப்பை வழங்குகிறேன்,” என்றான் விக்கிரமாதித்தன்.

மறுநாள் காலையில் விக்கிரமாதித்தன் நந்தவனத்திற்குச் சென்றான். அங்கு மலர்களைப் பறித்தான். அவைகளை இரண்டு பூச்செண்டுகளாகக் கட்டினான். உள்ளே நிறைய வண்டுகளைத் திணித்து வைத்துக் கட்டினான்.

இரவு நடன நிகழ்ச்சி நடக்கும் போது, தான் தயாரித்து வைத்திருந்த பூச்செண்டுகளுடன் சபைக்குச் சென்றார். நடனம் ஆரம்பமாவதற்கு முன், “”வெறுங்கையுடன் ஆடினால் அழகாக இராது. இந்தப் பூச்செண்டுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினால் அழகாக இருக்கும்,” என்று கூறிய விக்கிரமாதித்தன் இருவரிடமும் ஆளுக்கொரு பூச்செண்டைக் கொடுத்தான்.

ரம்பையும், ஊர்வசியும் விக்கிரமாதித்தன் கொடுத்த பூச்செண்டுகளுடன் ஆட ஆரம்பித்தனர். நேரம் செல்லச் செல்ல ரம்பை தன்னை மறந்தாள். கையில் பிடித்திருந்த பூச்செண்டை அழுத்திப் பிடித்தவாறு வெறியுடன் ஆடிக் கொண்டிருந்தாள். பூச்செண்டை அவள் அழுத்திப் பிடித்ததால் அதற்குள்ளிருந்த வண்டுகள் அவள் கையைப் கொட்டத் தொடங்கின. வலி தாங்காத ரம்பை ஆட்டத்தை மறந்தாள். தாறுமாறாக, ஆட ஆரம்பித்தாள். தாளம் தவறி ஆட ஆரம்பித்தாள்.

ஆனால், ஊர்வசி நிதானமாக ஆடியதால் பூச்செண்டை மென்மையாகக் கையில் பிடித்துக் கொண்டிருந்தாள். இதனால் வண்டுகள் அவளை ஒன்றும் செய்யவில்லை. தாளத்துக்குத் தக்கவாறு அவள் ஆடினாள்.

இதிலிருந்து ஊர்வசியே சிறப்பாக நடனமாடினாள் என்று தீர்ப்பு வழங்கிய விக்கிரமாதித்தன், இந்திரன் அளித்த பாரிஜாத மாலையை அவளுக்கு அணிவித்தான்.

விக்கிரமாதித்தனின் தீர்ப்பைக் கண்டு வியந்த இந்திரன் அவரைப் பாராட்டினான். தான் இந்திரப் பட்டம் ஏறிய பொழுது பரமேசுவரனால் அவனுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக அளித்தான்.

அழகுமிகுந்த அந்த சிம்மாசனத்திற்கு முப்பத்தி இரண்டு படிகள் இருந்தன.
ஒவ்வொரு படியிலும் ஓர் அழகிய பதுமை இருந்தது. சிம்மாசனத்தில் ஏறுவதானால் ஒவ்வொரு பதுமையின் தலைமீது கால்வைத்துத் தான் ஏறவேண்டும்.

இந்த சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக அளித்த இந்திரன், “”இந்த சிம்மாசனத்தில் இருந்தவாறே ஆயிரம் ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்து வருவாயாக,” என்று வரமும் அளித்தான்.

ரத்தின மயமான அந்த சிம்மாசனத்துடன் விக்கிரமாதித்தன் உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை அடைந்தான்.

ஈசாப் நீதிக் கதைகள் – கெட்டிக்காரன் புளுகு

ஒரு நாள் காலையில் ஒரு மரத்தின் மீது சேவல் உட்கார்ந்து இருந்தது. காலை நேரம் ரம்மியமாக இருந்தபடியால் உற்சாகமாய் சேவல் கூவியது. பலதடவை கூவியது.

இதைக் கேட்ட நரி அங்கே வந்தது. நரிக்கு சரியான பசி இருந்தது. அந்த சேவலை பிடித்து சாப்பிட ஆசைப்பட்டது, ஆனால் சேவல் மரத்தின் மீது இருந்தபடியால் அதைப் பிடிக்க முடியவில்லை. இதற்காக ஒரு தந்திரம் செய்ய நினைத்தது. உடனே சேவலைப்பார்த்து,

“சகோதரனே!, வணக்கம். ஒரு நல்ல செய்தியை நீ கேள்விபட்டாயா? பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது. இனி ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. அன்பாய் நடந்துக் கொள்ள வேண்டும், சகோதர மனப்பான்மையை வளர்க்க வேண்டும். நீ கொஞ்சம் கீழே வாயேன். இந்த நல்ல செய்தியைப் பற்றி பேசுவோம்” என்றது
.
நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டது. அதை வெளியே காட்டவில்லை. தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது.

இதைக் கண்ட நரி, என்ன சகோதரா!, ரொம்ப அக்கறையாக எதையோ அடிக்கடி பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது? என்று கேட்டது.

அதற்கு சேவல்,

அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா என்பதைக் கவனிக்கிறேன்

அவ்வளவு தான் நரிக்கு உடல் நடுங்கி விட்டது, வேகவேகமாக “சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன்” என்று கூறி கிளம்பியது.

சேவல், “அருமை சகோதரா, போகாதே, நான் இதோ கீழே வருகிறேன். நாய்களைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது”

நரி “அந்த ஒப்பந்தைத்தைப் பற்றி அநேக பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள், அந்த நாய்களுக்கு தெரியாமல் இருந்தால், நான் என்ன கதி ஆவது? நான் போகிறேன்”.

இதை சொல்லி விட்டு நரி ஒரே ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மறைந்தது.

சேவல் “யாரிடம் ஏமாற்றப் பார்க்கிறாய், உன்னுடைய கெட்டிக்கார பொய்கள் என்னிடம் பலிக்காது” என்று கூறி சிரித்தது.

கெட்டிக்காரன் புளுகினாலும் அது புத்திச்சாலியிடம் வெளிபட்டு விடும்.

சிறுவர் கதைகள் – கூடல் குமரனும், கொடிய வேதாளமும்

கூடல் மாநகரத்தில் குமரன் என்ற இளைஞர் இருந்தார், அவரது பெற்றோருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை, அவரது தாயார் தினமும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு என்று தனக்கு ஒரு குழந்தை வரம் கொடுக்குமாறு வேண்டிக் கொள்வார். இவ்வாறாக நீண்ட நாட்களாக வேண்டியும் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை, ஒரு நாள் அவரது தாயார் அம்மனை வேண்டியும் குழந்தை கிடைக்கவில்லையே என்ற வெறுப்பில் வேண்டிக் கொண்டிருக்கும் போது “தாயே! குட்டையோ, நெட்டையோ எனக்கு ஒரு குழந்தையை கொடு தாயே!, எங்களுக்கும் வயதாகி வருகிறது, கருணை காட்டு தாயே!” வேண்ட, அதுவரை அமைதியாக இருந்த அம்மன், அப்படியே ஆகட்டும் என்று வரம் கொடுத்து விட்டார்.

அடுத்த ஆண்டே அழகான ஆண் குழந்தை பிறந்தது, அக்குழந்தைக்கு அவர்கள் குமரன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். குமரன் மற்ற குழந்தைகளை விட உயரம் ரொம்ப கம்மியாக இருந்தார், இருந்தாலும் பெற்றோர் அன்பும், பண்பும் காட்டி வளர்த்தார்கள். குமரன் படிப்பிலும், விளையாட்டிலும், குறும்புத்தனத்திலும் சிறந்து விளங்கினார், எல்லோரும் உலகமகா சேட்டைக்காரன் என்று அழைக்கும் அளவுக்கு பெயர் எடுத்தார்.

கூடல் மாநகரத்தில் ஆட்சி செய்து வந்த மன்னரும் ரொம்பவும் நல்லவர், மக்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த போது ஒரு நாள் வெளிதேசத்திலிருந்து பறந்து வந்தது ஒரு வேதாளம்.

வேதாளம் என்றால் அது டிராகன் மாதிரியே இருந்தது, 50 யானைகளை கொண்டு செய்த மாதிரியான உடம்பு, பறக்க இறக்கைகள், நீண்ட வால், கால் நகங்கள் பெரியதாக, பெரிய யானை தூக்கிச் செல்லும் அளவுக்கு பலம் படைத்ததாக இருந்தது. வாயைத் திறந்தால் நெருப்பை கக்கும் தன்மை கொண்டதாக இருந்தது.

அவ்வாறு வந்த வேதாளமானது முதலில் கூடல் மாநகரத்தை ஒட்டிய கிராமங்களின் வயல்வெளிகளையும், தோப்புகளையும் தன் நெருப்பால் பொசுக்கியது, மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகளை மொத்தம் மொத்தமாக தூக்கி சாப்பிட்டது.

மொத்த மாநகரமே நடுங்கியது, பாதிக்கப்பட்ட மக்கள் அரசரை கண்டு கதறி அழுதார்கள், தங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்கள். எதற்கும் அஞ்சாத அரசர், உடனே தன்னுடைய சேனாதிபதியை அழைத்து, உடனே ஆயிரம் வீரர்களை தயார் செய்து, அந்த வேதாளத்தை அழித்துவிட்டு வரச் சொன்னார். ஆயிரம் பேரும் மலையடிவாரத்தில் தங்கியிருந்த வேதாளத்தை கொன்று போட செல்லும் வழியிலேயே வேதாளத்தால் தாக்கப்பட்டு மலையின் மேல் சிறைவைக்கப்பட்டார்கள். மன்னரும் பெருங்கவலை அடைந்தார்.

உடனே மன்னர் உத்தரவின் படி ஊர் எங்கும் தண்டோரா போட்டு செய்தி சொல்லப்பட்டது, அதாவது “யார் அந்த கொடிய வேதாளத்தை உயிரோடோ அல்லது பிணமாகவோ கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு இராஜ்யத்தில் பாதியையும், தன் ஒரே மகளான இளவரசியையும் திருமணம் செய்து கொடுப்பதாக சொன்னார்”.

இச்செய்தியை கேட்டதும் வீரத்தீரம் மிக்க இளைஞர் பட்டாளம் கிளம்பியது, ஆனால் அதற்கு முன்பே கொடிய வேதாளம் அரசரின் அரண்மனைக்கு மேல் பறந்து வந்து அமர்ந்தது, உடனே ஊரே பயந்து நடுங்கியது, அரசரும் அசராமல் வெளியே வந்து அந்த கொடிய வேதாளத்த்துடன் மோத வந்தார்.

அப்போ அந்த வேதாளம் அனைவரையும் பார்த்து ஒரு பாட்டு பாடியது,

“வந்தேண்டா வேதாளம்
வரவேற்க தைரியமுண்டா
என்னை வெல்ல வழியுண்டு
வெல்லுவதும் எளிதில்லை
ஆயிரம் வாட்கள் கொண்டவனே
என்னை வெல்ல முடியும்,
இல்லாத பாலமேறி
என்னருகே வரமுடியும்
செய்யாத கோப்பையிலே
கொடுக்க வேண்டும் அமுதமே
அவ்வாறு செய்தால்
நானாவேன் உன் நண்பனாய்”

என்று உரக்கப்பாடி விட்டு பறந்து விட்டது.

வேதாளம் பாடிய பாட்டை அர்த்தம் தெரிந்துக் கொள்ள அனைவரும் முயன்றார்கள். அரசவை புலவர்களும் பலவகை அர்த்தங்கள் சொல்லி அரசருக்கு தலைவலியே வந்து விட்டது, ஆயிரம் வாட்களை ஒருவனால் எப்படி தூக்கிக் கொண்டு அத்தனை பெரிய வேதாளத்தை வெல்ல முடியும். இல்லாத பாலமேறுவதும், செய்யாத கோப்பை, அதிலும் அமுதம், ஒன்றுமே புரியாமல் விழித்தார்கள்.

நாடும், இளவரசியும் கிடைப்பார் என்ற குருட்டு தைரியத்தில் வேதாளம் தங்கியிருந்த மலையடிவாரத்தை நோக்கி சென்ற இளைஞர் பட்டாளம் வேதாளத்துடன் மோதி தோற்று அங்கே அடிமையாகி கிடந்தார்கள்.

அரசருக்கோ இனியும் வேதாளத்தை வெல்ல யாரும் வரமாட்டார்கள், இனிமேல் தானே முயற்சி செய்யவேண்டியது தான் என்ற நிலைக்கு வந்த போது, அரண்மனைக்கு நல்ல குட்டி குமரன் சென்றார்.

அரசரை பார்த்து “அரசே! நான் அந்த கொடிய வேதாளத்தை கொல்லப் போகிறேன், அதற்கு முன்பு எனக்கு உங்க ஆசிர்வாதம் தேவை” என்றார்.

அத்தனை வேதனையிலும் அவையில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்தார்கள், அவர்கள் குமரனின் சிறிய உருவத்தை பார்த்து கேலியாக சிரித்தார்கள், ஆனால் அரசரும் இளவரசியும் சிரிக்கவில்லை.

குமரனின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் பார்த்து வியந்தார்கள், இத்தகைய தன்மை கொண்டவர்களால் தான் செய்யக்கரிய செயல்களை செய்ய முடியும் என்று நம்பினார்கள். அரசரும் தன் ஆசனத்தை விட்டு கீழே இறங்கி வந்து குமரனை கட்டிப்பிடித்து தன்னுடைய வாளை குமரனிடம் கொடுத்தார். இளவரசியும் ஏதாவது கொடுக்க நினைத்து திடிரென்று தன்னுடைய தலைமுடியில் ஒன்றை பிடுங்கி கொடுத்தார், குமரன் வாளையும் இளவரசி அன்பாக கொடுத்த தலைமுடியையும் பத்திரமாக வைத்துக் கொண்டார்.

தைரியமாக வீட்டுக்கு சென்று அன்னையிடமும் அப்பாவிடமும் ஆசிர்வாதம் வாங்கினார், பெற்றோரும் தங்கள் பிள்ளையால் கண்டிப்பாக சாதிக்கமுடியும் என்று நம்பிக்கை ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைத்தார்கள்.

குமரன் தன்னுடைய குட்டிக்குதிரையில் ஏறி மலையடிவாரம் போகத் தொடங்கினார், போகிற வழியில் ஒரு மரத்தடியில் தங்கி இளைப்பாரலாம் என்று நினைத்து குதிரையை அங்கே நிறுத்தினார்.

அங்கே ஒரு பெரிய தேன்கூடு தரையில் கிடந்தது, தேனீக்கள் எல்லாம் அங்கே இங்கே என்று பறந்துக் கொண்டிருந்தது, அதைக் கண்டு இரக்கப்பட்ட குமரன், அந்த தேன்கூட்டை கையில் எடுத்து மரத்தின் மேல் வைத்தார், உடனே தேன் கூட்டிலிருந்து வெளியே வந்த இராணித்தேனி குமரனிடம் பேசியது “இரக்கக்குணம் படைத்த இளைஞரே! நாங்கள் நீண்ட நாட்களாக இங்கே தரையில் தான் கிடைக்கிறோம், ஆனாலும் யாருமே எங்களை மரத்தின் மேல் வைக்க நினைக்கவில்லை, அதற்கு பதில் துன்புறுத்தவே செய்தார்கள், பல வீரர்கள் எங்களைத் தாண்டி சென்று தான் வேதாளத்திடம் சரணடைந்து விட்டார்கள். ஆனால் நீங்களோ அவ்வாறாக இல்லை, எனவே உங்களுக்கு உதவ நாங்களும் தயார், எனவே எங்களை உங்களுடனே கொண்டு செல்லுங்க” என்றது.

குமரனும் மகிழ்ச்சியோடு தேன் கூட்டை தன் பையில் வைத்துக் கொண்டார். குமரன் வருவதை அறிந்த வேதாளம் குமரனின் உருவத்தை கண்டு கேலியாக சிரித்தது, என் கால் நகம் உயரம் கூட நீ இல்லை, எப்படி என்னை வெல்வாய் என்று கூறியது. குமரனும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது, அம்மனின் அருளும் இருக்கிறது, என்று கூறி சண்டைக்கு போனார். அப்போ ராணீத்தேனி “குமரன், ஆயிரம் வாட்கள் கொண்டு வெல்ல வேண்டும் என்றால் என்னிடம் இருக்கும் ஆயிரம் வீரத்தேனிகளை கொடுக்கிறேன், அவை உங்க வாள் மீது அமர்ந்துக் கொள்வார்கள், நீங்க வாளை தூக்கி வேதாளத்தின் முகத்தை பார்த்து வீசுங்க, மீதியை என் வீரர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றது.

குமரனும் தன் வாளை உயர்த்த, தேன் கூட்டிலிருந்து ஆயிரம் தேனீக்கள் வாளை சுற்றி அமர்ந்தது, உடனே குமரனும் தன் வாளை தூக்கி வேதாளத்தை நோக்கி வீசினார், உடனே ஆயிரம் தேனீக்களும் அந்த வாளை தூக்கிக் கொண்டு வேதாளத்தின் முகத்தை நோக்கி கொண்டு சென்று, அவை அனைத்தும் தனித்தனியாக பிரிந்து வேதாளத்தின் கண்களை குறிவைத்து கொட்டியது, ஆயிரம் தேனீக்கள் கொட்டியதால் கண் பார்வை தெரியாமல், கண்கள் வீங்கி, வலியில் வேதாளம் துடிதுடித்தது.

இனியும் குமரனும் மோதுவது சரியில்லை என்று பயந்த வேதாளம் தன் இருப்பிடத்தை நோக்கி பறந்து சென்று விட்டது. வேதாளத்தை கொட்டிய ஆயிரம் தேனிக்களும் வீரமரணம் அடைந்தது, அது குமரனுக்கு கஷ்டமாக இருந்தது, கண்களில் கண்ணீர் வந்துவிட்டது, உடனே ராணித்தேனி “குமரன், தேனீக்கள் வாழ்க்கையில் தினம் தினம் எங்களுக்கு வீரமரணம் உண்டு, கவலைப்பட வேண்டாம், அடுத்த காரியத்தை பற்றி சிந்திப்போம்” என்றது.

வேதாளம் இருந்த மலை உச்சிக்கும், குமரன் இருந்த இடத்திற்கும் இடையே பெரிய பாதாளம் இருந்தது, அதை எப்படி தாண்டுவது என்று தெரியாமல் குமரன் விழிக்க, ராணித்தேனீ “நண்பரே! உங்களிடம் நூல், கயிறு போன்று ஏதாவது இருக்கிறதா என்று கேட்டது”, உடனே குமரனுக்கு இளவரசி கொடுத்த தலைமுடி நினைவுக்கு வந்து, அதை எடுத்து ராணித்தேனியிடம் கொடுத்தார்.

ராணித்தேனீ தன் தளபதி தேனியை அழைத்து, இந்த தலைமுடியை மலை உச்சியில் கட்டி வருமாறு சொல்லி, மறுமுனையை குமரனை பிடிக்கச் சொன்னது, என்ன ஆச்சரியம், தளபதி தேனீ பறக்க பறக்க இளவரசியின் தலைமுடியானது நீண்டுக் கொண்டே சென்றது, இறுதியில் மலை உச்சியில் முடிச்சி போட்டு வர, குமரன் மறுமுனையை தன் குதிரையின் மீது கட்டி, பின்னர் அந்த தலைமுடியை பிடித்து தொங்கிக் கொண்டு, மலை உச்சியை அடைந்தார்.

ஒருவழியாக மலை உச்சியில் வேதாளம் இருந்த இடத்தை தேடி போன போது, வேதாளத்தின் கண்கள் எல்லாம் வீங்கி, கடுமையான வலிகள் துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த குமரனுக்கு கோபத்திற்கு பதில் வேதாளத்தின் மேல் இரக்கம் தோன்றியது. பாவம் வேதாளம் கெட்டக் குணம் என்றாலும் வலியால் துடிப்பதை பார்க்க மனசு இல்லாமல் எப்படி உதவுவது என்று யோசித்தார்.

உடனே ராணித்தேனீ, வேதாளத்தின் வலி நீங்கி மீண்டும் கண் பார்வை வர ஒரே ஒரு வழியுண்டு, நாங்க சேமித்து வைத்திருக்கும் தேனை குடித்தால் கண்பார்வை வரும்” என்றது.

உடனே குமரன் தேனை பிடித்து கொடுக்க பாத்திரம் போல் ஒன்றும் இல்லையே என்று யோசித்தார், தூரத்தில் வேதாளம் சாப்பிட்டு போட்ட பெரிய யானையின் மண்டையோடு கிடந்தது, அதை எடுத்து வந்து ராணித்தேனி கொடுத்த தேனை பிடித்து, வேதாளத்தின் மீது ஏறி, அதன் வாயில் தேனை ஊற்றினார்.

உடனே வேதாளத்தின் வலி நீங்கி கண் பார்வை வந்தது, நெருப்பாக இருந்த அதன் கண்கள் கருணை கொண்டதாக மாறியது.

குமரனை நோக்கி “அய்யா! நீங்க நம்பிக்கையுள்ள மாவீரர் மட்டுமல்லாது மிக்க இரக்கம் கொண்டவர், இனிமேல் நான் உங்கள் அடிமை. தேவலோகத்தை சேர்ந்த நான் முன்பு ஒரு காலத்தில் தவம் செய்த முனிவரை தொந்தரவு செய்ததால் சாபமிட்டு விட்டார், அதன் பரிகாரமாக உங்கள் வீரச்செயலாலும் அன்பாலும் என் சாபம் நீங்கும் என்றார். இன்று எனக்கு சாபவிமோசனம் கிடைத்து விட்டது, உங்களுக்கு நான் உதவப் போகிறேன்” என்று கூறியது.

கொஞ்ச நேரத்தில் அழகிய தேவதூதனாக மாறியது வேதாளம், அதே நேரம் குமரனும் அழகிய தோற்றத்துடன் ஆறடி உயரம் கொண்ட மாவீரராக மாறிவிட்டார். தேவதூதன் நிறைய பொக்கிஷங்களையும், தன்னால் உயிழந்த அனைத்து உயிர்களையும், ஆயிரம் தேனிக்களையும், சிறைபிடித்த வீரர்களையும் திருப்பி கொடுத்தார். உதவி தேவைப்படும் போது வந்து உதவுவதாக உறுதி கூறி விடைபெற்றார்.

குமரன் அனைவரோடு வெற்றிமகனாக கூடல் நகரம் திரும்பினார், ஊரே விழாக்கோலம் பூண்டது. அரசரும் இளவரசியும் குமரனை வரவேற்க நகரின் எல்லைக்கே வந்தார்கள். குமரனின் புதிய தோற்றத்தை கண்டு அவரது பெற்றோரும் மகிழ்ந்தார்கள், மக்கள் அனைவரும் வாழ்த்தி வரவேற்றார்கள்.

குமரனுக்கும் இளவரசிக்கும் திருமணம் ஆகி ஒரு குட்டி இளவரசியும் பிறந்தார், அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

மரியாதை இராமன் கதைகள் – நேர்மை கொண்ட உள்ளம்
மரியாதை இராமன் கதைகள் – நேர்மை கொண்ட உள்ளம்

மரியாதை ராமன் தெனாலி ராமன் போல் விகடகவி அல்ல, அவர் மிகவும் புத்திசாலி, இளம் வயதிலேயே பெரியவங்களுக்கு புலப்படாத நுணுக்கமான விசயங்களையும் எளிதில் விடுவிப்பார்.

மரியாதை ராமனின் தீர்ப்புகள் அனைத்தும் புகழ்பெற்ற கதைகளாக மக்களிடம் பேசப்பட்டு வருகிறது, அதில் ஒன்று இதோ.

மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார்.

ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கும் வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.

வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப்பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். அப்போ அவரது மனைவியார் “உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க” என்றார்.

ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊர் மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து
அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இருந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.

அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்யமுடியவில்லை, வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து, சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப்பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார்.

அப்படி காட்டுவழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கிடந்தது, அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்று தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிழையில் வைத்துவிட்டு வந்தார். அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை. அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டு விட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.

அப்போ ஊருக்குள் சென்ற போது அங்கே இருந்த கடையில் விசாரித்த போது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.

உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார், சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்த பணப்பையை வாங்கிக் கொண்டார், அதே நேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்து விட்டது, பணமும் சரியாக இருக்குது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும், சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.

கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து “நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை, மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்” என்று கத்தினான்.

பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே, இவரிடம் சன்மானம் வாங்குவதை விட பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.

சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார், பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல் நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சனையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.

சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர் மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும், பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.

ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும், அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான்.

ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துக் கொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் “சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போ பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது, ஆக இது சோமனின் பையே இல்லை, வேற யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லல, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊர் வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன் கோயில் செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம், ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்து வைத்துக் கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்”.

மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவிதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.

முல்லாவின் கதைகள் – குழப்பவாதிகள்

முல்லா நஸ்ருதீன் மன்னருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார், அது அரசுசவையில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை.

ஒருமுறை முல்லா ஒரு நண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பேச்சுவாக்கில் நாட்டில் உள்ள அறிஞர்கள் எல்லாம் குழப்பவாதிகள், எதையுமே உறுதியாக, தீர்மானமாகக் கூற இயலாதவர்கள் என்று சொன்னார்.

அதை அறிந்த முல்லாவின் எதிரிகள் மன்னரிடம் போய் “மன்னர் நீங்க அறிஞர்களை வைத்திருப்பதற்கு பதிலாக குழப்பவாதிகளை வைத்திருப்பதாகவும், சரியான முடிவு எடுக்கத் தெரியாமல் இருக்கும் அறிஞர்கள் பேச்சு கேட்பதாகவும் முல்லா சொல்லிக் கொண்டு திரிக்கிறார் என்று அரசரிடம் முல்லாவைப் பிடிக்காதவர்கள் கூறித் தூண்டி விட்டார்கள்.

உண்மை நிலையை அறிய விரும்பிய அரசர், முல்லாவை சபைக்கு வரவழைத்தார்.

அத்துடன், தத்துவ மேதைகள், மார்க்க ஞானிகள், சட்ட நிபுணர்கள், அறிவுசால் அமைச்சர்கள் அனைவரையுமே கூட்டினார். பிறகு முல்லாவை நோக்கி, ” இவர்கள் எலலாம் குழப்பவாதிகள் என்று கூறினீர்களாமே?…ஏன் அப்படிக் கூறினீர்கள் ? இவர்கள் குழப்பவாதிகள் என்று உம்மால் நிரூபிக்க முடியுமா?” என்று கேட்டார்.

இது என்னடா வம்பா போச்சு, சும்மா வாய் பேச்சுக்கு சொன்னதை வைத்து என்னை மாட்டி விடப் பார்க்கிறீங்களா, அப்போ நீங்க குழப்பவாதிகள் தான், அதை நிறுபித்தால் ஆச்சுது என்று நினைத்து “அரசே என்னால் நிறுபிக்க முடியும்” என்று கூறிய முல்லா, அனைவரிடமும் ஆளுக்கொரு தாளைக் கொடுத்தார்.

பின்னர் அவர்களிடம், ” அறிஞர் பெருமக்களே…நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்கப் போகிறேன். அதற்குரிய பதிலை, இந்தத் தாளில் நீங்கள் எழுதிக் கொடுக்கவேண்டும்” என்றார்.

பின்னர், அவர்களிடம் ஒரு தாளை கொடுத்தார், அதில் , ” ரொட்டி என்றால் என்ன? ” என்று கேட்டார்.

அனைவரும் பதிலைத் தாளில் எழுதி அரசரிடம் கொடுத்தார்கள். அரசர் படிக்க ஆரம்பித்தார்.

ஒருவர்- ரொட்டி என்பது சத்துள்ள பண்டம் என்று எழுதியிருந்தார்.

இரண்டாமவர் – ரொட்டி என்பது ஒரு உணவு என்று குறிப்பிட்டிருந்தார்.

மூன்றாமவர் – இறைவன் கொடுத்த கொடையே ரொட்டி.

நான்காமவர் – ரொட்டி என்பது வேகவைத்த மாவுப் பொருள்.

ஐந்தமவர் – ரொட்டி என்பது மாவும் நீரும் கலந்த கலப்பு.

ஆறாமவர் – அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப சுவையும் வடிவும் பெறுவது ரொட்டி

ஏழாமவர் – ரொட்டி என்பதற்கு சரியான பொருள் யாருக்குமே தெரியாது……என்று குறிப்பிட்டு எழுதியிருந்ததை அரசர் படித்தார்.

எல்லா பதில்களையும் அரசர் படித்து முடிக்கும்வரை பொறுமையுடம் காத்திருந்த முல்லா, ” அரசே ! …ரொட்டி என்பது என்ன? என்ற எனது சாதாரன கேள்விக்கு, இவர்கள் அனைவரும் பலவிதமான பதில்களைக் கொடுத்துள்ளார்கள்.

யாருடைய பதிலும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகவில்லை பார்த்தீர்களா?

இதனால்தான் நம் நாட்டில் உள்ள அறிஞர்கள் குழப்பவாதிகள் என்றேன்” என்றார்.

அரசர் முல்லாவில் அறிவாற்றலை வியந்து அவர்மீது இருந்த குற்றச் சாட்டினைத் தள்ளுபடி செய்தார். அரசவையில் கூடியிருந்த அனைவரும் முல்லாவின் திறமையை பாராட்டினார்கள்.

சிறுவர் கதைகள் – நேர்மையான பிச்சைக்காரர்

ஒரு மனிதன் தனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை எப்படி பயன்படுத்துகிறான் என்று அறிய ஒரு மன்னனுக்கு ஆவல் ஏற்பட்டது. அதை சோதிக்க நினைத்து ஒரு நாள் இரண்டு ரொட்டித் துண்டுகளை வரவழைத்து, விலையுயர்ந்த வைரக் கற்களை ஒன்றினுள் பதுக்கி வைத்தான்.

பிறகு இரண்டு ரொட்டித் துண்டுகளையும் பணியாளன் ஒருவனிடம் கொடுத்து, “”கவனமாகக் கேள், தகுதியுள்ள கண்ணியமான மனிதன் ஒருவனுக்கு இந்த கனமான ரொட்டியைக் கொடு. மற்றொரு சாதாரண ரொட்டியை ஒரு சாதாரணப் பிச்சைக்காரனுக்குக் கொடு,” என்று சொன்னான்.

நீண்ட மேலங்கி அணிந்து அடர்ந்த தாடியுடன் சாமியாரைப் போல் தோற்றமளித்த ஒரு நபருக்கு அந்தப் பணியாளன் வைரக் கற்கள் நிரம்பிய கனமான ரொட்டியை அளித்தான். பிறகு மற்றொன்றை ஒரு பிச்சைக்காரனுக்கு அளித்தான்.

இவற்றையெல்லாம் மன்னன் தன் அரண்மனை மேல் மாடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான். சாமியார் போன்ற தோற்றமளித்த நபர் தனக்குக் கிடைத்த ரொட்டியை உற்றுப் பார்த்தான்.

இது சரியாக பக்குவப்படுத்தப்படாததால் கொஞ்சம் கனமாக உள்ளது என்று எண்ணி தன் அருகில் வந்து கொண்டிருந்த பிச்சைக்காரனை அழைத்து, “”நண்பா, எனக்குக் கிடைத்த ரொட்டி கனமாக உள்ளது. எனக்கு அவ்வளவு பசியில்லை. ஆகையால் இதை நீ எடுத்துக் கொண்டு உன்னுடையதை எனக்குக் கொடு,” என்றான்.

உடனே இருவரும் தங்களுடைய ரொட்டிகளை மாற்றிக் கொண்டனர்.

இதைக் கண்ட மன்னன், “”ஆஹா! என்ன கடவுளின் உள்ளம்! ஒரு தவயோகிக்கு செல்வம் தேவை இல்லையாதலால் வைரக் கற்கள் உடைய ரொட்டி அவரிடம் தங்காமல் அந்த ஏழையிடம் சென்று விட்டது’ என்று நினைத்தான்.

உடனே அந்த சாமியாரையும், பிச்சைக்காரனையும் பின் தொடருமாறு தன் வேலையாட்களுக்கு உத்தரவிட்டான்.

அன்று மாலையே அவ்விருவரைப் பற்றிய தகவல்களும் மன்னனுக்குக் கிடைத்தன. சாமியார் போல் தோற்றமளித்தவர் தன் வீட்டுக்குச் சென்று பொய்த் தாடியையும், மேலங்கியையும் எடுத்துவிட்டு, ஆசைதீர ரொட்டியை உண்டு விட்டு, பிறகு பழையபடி தாடியை ஒட்ட வைத்துக் கொண்டு சாமியார் வேடத்தில் பிச்சை எடுக்க கிளம்பி விட்டதாக அறிந்தான்.

தன் வீட்டிற்குச் சென்ற பிச்சைக்காரன், தன் மனைவியுடன் ரொட்டியை உண்ணத் தொடங்கியதும் அதற்குள் இருந்த வைரக் கற்களைக் கண்டான்.

மகிழ்ச்சியில் துள்ளிய அவன் மனைவி அவற்றை தாங்களே எடுத்துக் கொள்ள விரும்பிய போது, அந்தப் பிச்சைக்காரன், “”இந்த வைரக் கற்களைக் கொண்டு கடவுள் என் மனசாட்சியை சோதிக்க விரும்புகிறார்.

இந்த ரொட்டியை அளித்த அரசுப் பணியாளரிடம் இதைப் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வைரக் கற்கள் உள்ளிருப்பது அவருக்குத் தெரியாது என்றால், அவருடைய பொருளை அவரிடமே சேர்க்க வேண்டும். ஆனால், தெரிந்தே இவ்வாறு கொடுத்தார் என்றால், இவை அந்தச் சாமியாரைச் சேர வேண்டும். அதுதான் நியாயம்,” என்று கூறினான்.

அந்தப் பிச்சைக்காரனின் நேர்மையையும், உயர்ந்த உள்ளத்தையும் அறிந்த மன்னன், அவனை அரண்மனைக்கு அழைத்து அந்த வைரக் கற்களை அவனுக்கே கொடுத்து மேலும் பல பரிசுகளும் வழங்கினான்.

கடவுளின் அருளால் வைரக் கற்கள் ஒரு போலிச் சாமியாரிடம் சிக்காமல், நேர்மையான ஒரு பிச்சைக்காரனை அடைந்ததை எண்ணி மகிழ்ந்தான் மன்னன். பிச்சைக்காரரும் அதை விற்று கிடைத்த பணத்தில் வியாபாரம் செய்து சந்தோசமாக வாழ்ந்தார்.

சிறுவர் கதைகள் – நாவடக்கம் இல்லாத அரசன்

சேர நாட்டின் மேற்குக் கரையோரமுள்ள நெய்தல் நாட்டின் மன்னன் மூவன். அந்நெய்தலின் உட்பகுதி நல்ல வளமான வயல்களை உடைய செழிப்புமிக்க நாடு.

இந்த அரசன் திறமையானவன், நற்குணங்கள் பல உடையவன். ஆனால், நாவடக்கம் இல்லாதவன். யாரையும் எடுத்தெறிந்து பேசிவிடுவான். தான் பேசிய பேச்சிற்கு வருத்தமும் தெரிவிக்கமாட்டான். அமைச்சர்களும் கூட இவனிடம் தங்கள் கருத்துக்களைச் சொல்ல அஞ்சினர்.

ஒரு சமயம் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் மூவனைப் பாடிப் பரிசு பெற்றுச் செல்ல வந்தார். இப்புலவர் குமணவள்ளலைப் பாடிப் பரிசுகள் பல பெற்றவர். அப்பரிசுகளை எல்லாம் ஏழைகளுக்கு கொடுத்ததால் மறுபடியும் ஏழ்மை நிலையை அடைந்தார்.

புலவர் பல நாட்கள் காத்துக்கிடந்த பின் ஒரு நாள் மூவனை அரசவையில் சந்தித்து பாடல் ஒன்றைப் பாடினார்.

“அரசே, நான் ஒரு புலவன். என் பெயர் பெருந்தலைச் சாத்தனார்.”

“உமது பெயருக்கும் உருவத்திற்கும் சிறிதும் பொருத்தம் இல்லையே!”

“ஏன் மன்னா அப்படிக் கூறுகிறீர்கள்?”

“பெருந்தலைச் சாத்தனார் என்கிறீர்கள். உமது தலை பெரியதாக இல்லையே… சிறியதாகத்தானே இருக்கிறது.”

“மன்னிக்க வேண்டும் மன்னா. பெருந்தலை என்பது எனது ஊரின் பெயர்!”

“ஓ, அப்படியா செய்தி!”

“நான் குமணவள்ளலைப் பாடிப் பல பரிசுகள் பெற்றவன்!”

“இப்போதும் அவனிடமே செல்ல வேண்டியதுதானே. உன் போன்ற புலவர்களுக்குக் கொடுத்துக் கொடுத்து அவன் போண்டியாகி இருப்பான்!”

“அரசே, பழம் பழுத்த மரங்களை நாடித்தானே பறவைகள் செல்லும். அதைப் போல மன்னர்களையும், வள்ளல்களையும் நாடி பாவலர்களாகிய நாங்கள் வருகிறோம்.”

“நீங்கள் பொய்யாக எதையும் புனைந்து பாடுவீர்கள். இல்லாததை இருப்பதாகக் கூறுவீர்கள். அதைக் கேட்டு சிலர் மகிழ்ந்துபோய் உங்களுக்குப் பரிசு கொடுக்கிறார்கள். அவர்கள் தற்புகழ்ச்சியை விரும்புபவர்கள். நீங்கள் பொய் சொல்லியே பிழைக்கும் ஒரு வஞ்சகக் கூட்டம்… யாரங்கே, இந்தப் புலவரை வெளியே அனுப்பு.”

“இல்லை, நானே சென்றுவிடுகிறேன்.”

புலவர் அவமானத்தால் முகம் சோர்ந்து சென்றதைக் கண்ட மூவன் சிரிசிரி என்று சிரித்தான்.

மூவன், சேரன் கணைக்கால் இரும்பொறைக்குக் கட்டுப்பட்ட ஒரு குறுநில மன்னன். மூன்று ஆண்டுகளாகவே மூவன் கப்பம் கட்டாததை அறிந்தான் இரும்பொறை.

“என்ன சொல்கிறான் மூவன் என்று அறிந்துவா!” எனத் துõதுவனை
அனுப்பினான்.

மூவன் அவைக்கு வந்த தூதுவன், மூவனை மரபுப்படி வணங்கி, “”மன்னன் கணைக்கால் இரும்பொறையின் துõதுவன் நான்,” என்றான்.

“கணைக்காலனுக்குக் கருவூலத்தில் பணத்தட்டுப்பாடு வந்ததும் என் நினைவு வந்துவிட்டதாக்கும்… இங்கே என்ன கொட்டியா கிடக்கிறது?”

“மன்னா, நான் உங்களிடம் யாசகம் ஒன்றும் கேட்க வரவில்லை. எங்கள் மன்னருக்கு மூன்று ஆண்டுகளாக நீங்கள் கட்ட வேண்டிய திறையைச் செலுத்தவில்லை.”

“தூதுவனே! நன்றாகக் கேட்டுக் கொள். எனது நெய்தல் நாடு இன்றிலிருந்து சுதந்திர பூமி. நாங்கள் இனி யாருக்கும் கப்பம் கட்டமாட்டோம்.”

“எமது அரசரின் பெருமையையும், வலிமையையும் தெரிந்தே நீங்கள் இப்படிப் பேசுவது மிகவும் வருந்தத்தக்கது.”

“உனது கணைக்காலனுக்கு நான்தான் காலன். என்னைப் போர்க்களத்தில் வந்து சந்திக்கும்படி கூறு.”

“உங்களால் எம் மன்னனை வெல்ல முடியும் என்று நீவிர் நினைப்பது உங்கள் இறுமாப்பு. எமது மன்னனின் வலிமை தெரியாமல் பேசுவது மிகவும் இரங்கத்தக்கது.”

“அடே தூதுவனே… இங்கே நிற்காதே, ஓடிவிடு. இல்லையெனில் உன் முன்பற்களைத் தட்டிவிடுவேன். எச்சரிக்கை!”

தூதுவன் கணைக்கால் இரும்பொறையிடம் வந்து நடந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறினான்.

“தூதுவன் ஒருவனின் பற்களைத் தட்டுவேன் என்று நாவடக்கம் இல்லாமல் சொன்ன அந்த மூவனைப் போர்க்களத்தில் சந்தித்தே தீருவேன்,” என்று முடிவு கட்டினான் இரும்பொறை.

“மன்னா, சிறு நரியை எதிர்க்கச் சிங்கம் செல்வதா? வேண்டாம். இது உங்கள் வீரத்திற்கு இழுக்கு. நாவடக்கமின்றிப் பேசிய அந்த மூவனை வென்று அவன் முன்பற்களை உங்களிடம் கொண்டு வந்து காணிக்கையாக்குகிறேன்.” தளபதி வீரமுழுக்கமிட்டான்.

“அதுவும் சரிதான். மூவன் இனி வாயைத் திறக்கும் போதெல்லாம் நாவடக்கம் வேண்டும் என்பதை உணர வேண்டும். அவன் முன்பற்களைக் கொண்டு வருவது தான் நன்று!”

“சரி மன்னா, அப்படியே செய்கிறேன்.”

“தளபதியாரே, மூவனின் முன்பற்களைப் பிடுங்கி நம் தொண்டிக் கோட்டையின் வாயிற் கதவுகளில் பொருத்தி, “யாகாவாராயினும் நாகாக்க. நாவைக் காக்காத மூவனின் பற்களைப் பாரீர்!’ என்று அதன் கீழ் எழுதி வையுங்கள்.”

“உத்தரவு மன்னா!”

கணைக்கால் இரும்பொறையின் படைவீரர்கள் அவனை விரட்டிப் பிடித்து தளபதியிடம் கொண்டு வந்தனர்.

நாவடக்கமின்றிப் பேசிய மூவனின் முன் பற்கள் தட்டப்பட்டன. மன்னன் கூறியவாறே அவை தொண்டிக் கோட்டையின் வாயிற் கதவில் பதிக்கப்பட்டன.

சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் மூவன் தன் செயலுக்காக வருந்தினான், தன் நாவடக்கமற்ற செயலால் தனக்கும் தன் நாட்டுக்கும் தீராத அவமானம் தேடியதை நினைத்து நினைத்து சேரநாட்டுச் சிறையிலிருந்தே உயிர்விட்டான்.

குழந்தைகளே! வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி பிறருடைய மனதைப் புண்படுத்தாமல் இருக்க மூவனுக்கு ஏற்பட்ட நிலை ஒரு நல்ல பாடம்.

சிறுவர் கதைகள் – முட்டாள்களுக்கு வீண் உபதேசம்

நல்வழிப்படுத்தவும்.

Saturday, April 08, 2006

கதை எண் 91 – முட்டாள்களுக்கு வீண் உபதேசம்

 

 

எருமைப்பட்டியில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் இரண்டு கழுதைகள் இருந்தன. அவை இரண்டும் ஒரு நாள் மிகவும் வருத்தத்துடன் பேசிக் கொண்டன.

“நாம் சுமந்து வரும் அழுக்கு துணிகள் மட்டும் சலவை செய்ததும் அழுக்கெல்லாம் போய் வெண்மையாக தெரிகின்றதே! ஆனால், நாம் மட்டும் ஏன் அந்த துணிகளைப் போன்று வெண்மையாக மாற முடியவில்லை?” என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டன.

அந்தப் பக்கமாக வந்த ஆடு கழுதைகளின் பேச்சை ஒட்டுக் கேட்டுவிட்டது.

கழுதைகளின் முட்டாள்தனமான பேச்சை கேட்டு அந்த ஆட்டிற்கு சிரிப்பே வந்துவிட்டது.

“கழுதைகளே! நலம்தானா? நீங்கள் இருவரும் உங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசுவதுபோல் தெரிகின்றதே…” என்று அவர்கள் வாயை கிளறியது.

“ஆடே! ஆடே நலம்தானே? எங்கள் சந்தேகத்தை தீர்க்க யாரும் வரவில்லையே என்று நினைத்தோம். நல்ல வேளை நீ வந்திருக்கிறாய்!” என்றவாறு கழுதைகள் இரண்டும் ஆட்டை நோக்கின.

“கழுதைகளே! நீங்கள் பேசிக் கொண்டிருந்ததை நானும் அறிவேன். உங்கள் சந்தேகம் என்னவென்று எனக்குப் புரிந்துவிட்டது. முட்டாள்தனமான உங்கள் சந்தேகத்தை எப்படிப் போக்குவதென்று எனக்குத் தெரியவில்லை…” என்று கூறியது ஆடு.

இதைக் கேட்ட கழுதைகளுக்கு கோபம் வந்துவிட்டது. “ஆடே எங்களைப் பார்த்து முட்டாள்கள் என்று கூறுகிறாயா? எங்கள் சந்தேகத்திற்கு உன்னால் விடை கூற முடிந்தால் கூறு… இல்லையேல் இந்த இடத்தை விட்டு ஓடு… அதை விட்டு விட்டு முட்டாள்தனமான சந்தேகம் எனக் கூறி எங்களை இன்சல்ட் பண்ணாதே,” என்று கோபமாக கூறின.

“கழுதைகளே! நீங்கள் என் மீது ஏன் இப்படி கோபப்படுகிறீர்கள்? துணிகளும் நீங்களும் ஒன்றா? அப்படியிருக்க முட்டாள்தனமான உங்கள் கேள்விக்கு என்னால் எப்படி பதில் கூற முடியும்? அப்படியே நான் பதில் கூறினால் நானும் உங்களோடு சேர்ந்து முட்டாளாகி விடுவேன்,” என்று கூறியது.

கழுதைகள் இரண்டும் பொறுமை இழந்தன. தங்களின் ஆத்திரத்தை எல்லாம் ஒன்று திரட்டி தங்கள் கால்களால் ஆட்டை எட்டி உதைத்தன.

கழுதைகள் இரண்டும் உதைத்த வேகத்தில் ஆடு எங்கோ சென்று விழுந்தது. வலி தாங்காமல் நொண்டி நொண்டி நடந்து சென்றது.

சிறுவர் கதைகள் – நாட்டுப்பற்று

முன்னொரு காலத்தில் மணிவர்மன் என்னும் மன்னர் மதுரையை சீரும் சிறப்புமாக ஆட்சிபுரிந்து வந்தார். அவனுடைய மனைவி ராணி பத்மாவதி மீது உயிரையே வைத்திருந்தார்.

அந்நாட்டு மக்கள் தங்கள் அரசனையும் அரசியையும் மிகவும் நேசித்தனர். எங்கும் பசுமையும் வளமையும் குடிகொண்ட அந்த நாட்டில் மக்களுக்கு எந்த ஒரு குறையும் வைக்காமல் மன்னன் ஆட்சி செய்து வந்தார்.

மக்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் அரசன், அரசி இருவருக்கும் மனதுக்குள் ஒரு பெரும் குறை இருந்தது. திருமணமாகி, பல ஆண்டுகள் ஆகியும் தங்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்பதுதான் அது.

எதிர்காலத்தில் தங்கள் நாட்டை ஆள ஒரு வாரிசு இல்லையே என மக்களும் மிகவும் கவலைப்பட்டார்கள். ராணி கலங்கும்போதெல்லாம் மன்னன் அவரை சமாதானம் செய்துவந்தார்.

ஒரு நாள் மதுரை மாநகருக்கு முனிவர் ஒருவர் விஜயம் செய்தார். மன்னரும் மகாராணியும் அவரை அன்போடு வரவேற்று உபசரித்தனர். முனிவரின் காலில் விழுந்து வணங்கி, தங்கள் குறையை அவரிடம் தெரிவித்தனர்.

முனிவர் மன்னரை நோக்கி, “”இந் நாட்டு மக்களில் யாராவது ஒரு தாய், தான் பெற்ற ஒரே குழந்தையை வைகை நதிக்கு அர்ப்பணித்தால் உனக்குக் குழந்தை பிறக்கும்” என்று கூறினார்.

அதைக் கேட்டதும் மன்னரும் ராணியும் அதிர்ச்சி அடைந்தனர். எந்த ஒரு தாயும் இதற்கு ஒத்துக்கொள்வது என்பது இயலாத காரியம் என்று நினைத்து இருவரும் தயங்கினர். முனிவரும் “இதைத் தவிர வேறு வழியில்லை’ என்று கூறி அங்கிருந்து சென்றார்.

மன்னர் அமைச்சரை நோக்கி, “”யாரேனும் ஒரு தாய், தான் பெற்ற ஒரே குழந்தையை வைகை நதிக்கு அர்ப்பணித்தால், நாட்டில் பாதி பரிசாக அளிக்கப்படும்” என்று முரசு அறிவிக்கச் சொன்னார்.

நாடெங்கும் முரசு அறிவிக்கப்பட்டது. ஆயினும் மக்களில் எந்தத் தாயும் தங்களுடைய குழந்தையை ஆற்றில் விடுவதற்கு முன்வரவில்லை.
நாட்கள் பல கடந்தன. அரசனும் அரசியும் மிகவும் சோர்ந்துபோயினர்.

அரசனின் உடல்நிலை இக் கவலையால் மிகவும் பாதிக்கப்பட்டது.

அரசனும் அரசியும் கவலைப்படுவதை அரசனின் மெய்க்காப்பாளன் வேலப்பனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவனுக்கு ஓர் ஆண்குழந்தை இருந்தது. பிறந்து ஒரு வருடமே ஆகியிருந்த அக் குழந்தையை வேலப்பனும் அவனது மனைவி ரத்னாவும் மிகவும் நேசித்தனர்.

சில நாள்கள் சென்றன. கவலையினால் மன்னர் நோயுற்று, படுத்த படுக்கையானார். அரசன் மீது மிகுந்த அன்பு வைத்திருந்த வேலப்பனால் இந்தத் துயரைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. ஒரு குழந்தையின்றி, மன்னர் படும் வேதனையைப் பார்க்கச் சகிக்காமல் ஒரு முடிவுக்கு வந்தான்.
வீட்டுக்குச் சென்று தன் மனைவி ரத்னாவை அழைத்தான்.

“குழந்தையில்லாத ஏக்கத்தில் நம் மன்னர் இறந்துவிட்டால், பின்னர் நம் நாடு, சரியான தலைமையில்லாமல் பகைவர்களின் கையில் சிக்கி, அடிமையாகிவிடும்” என்றான்.

“அதற்கு நாம் என்ன செய்வது?” என்றாள் ரத்னா.

“நம் நாட்டைக் காப்பாற்ற நாம் ஒரு தியாகம் செய்யவேண்டும். நமது குழந்தையை வைகை ஆற்றுக்கு அர்ப்பணிக்க வேண்டும்” என்றான்.

ரத்னா இதைக் கேட்டதும் அதிர்ச்சியில் மயங்கும் நிலைக்குச் சென்றாள். குழந்தையைப் பிரிவது – அதுவும் ஆற்றில் விடுவது என்பதை அவளால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. ஆயினும் குழந்தையை விட நாடும், மன்னரும் மிக முக்கியம் என்பதைப் பலவாறு தன் மனைவியிடம் எடுத்துச் சொன்னான் வேலப்பன்.

கணவனின் வார்த்தையை மீறாத அவன் மனைவியும் கண்ணீரோடு அதற்குச் சம்மதித்தாள். மறுநாள் குழந்தையை எடுத்துக்கொண்டு ஆற்றுக்கு வந்தாள். நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டு எந்தவிதச் சலனமும் இல்லாமல் வைகை ஓடிக்கொண்டிருந்தது.

ரத்னா ஆற்றில் இறங்கி, கண்ணீரோடு கடைசியாய்த் தன் மகனை முத்தமிட்டாள். ஒரு மூங்கில் தட்டில் குழந்தையைக் கிடத்தி, ஆற்றில் விட்டாள். பிறகு கதறி அழுதவாறே வீட்டுக்குச் சென்றாள்.

இச் செய்தி அரசனுக்கும் அரசிக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வேலப்பனையும் ரத்னாவையும் அழைத்து, கண்களில் நீர் மல்க நன்றி தெரிவித்தனர். அவர்கள் இருவரையும் புகழ்ந்து, “வேலப்பா, நீங்கள் இருவரும் செய்திருக்கும் தியாகத்துக்கு இந்த நாட்டையே பரிசாக உங்களுக்குக் கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாது. ஆயினும் நான் அறிவித்தபடி இந்த நாட்டில் பாதியை உங்களுக்குப் பரிசாகத் தருகிறேன்” என்றார் அரசர்.

வேலப்பன் மன்னரை வணங்கி, “பிரபு! தாங்கள் அளிக்கும் பரிசுக்காக நாங்கள் இதைச் செய்யவில்லை. தங்கள் மீதுள்ள அன்பினாலும் இந்த நாட்டின் மீது நாங்கள் வைத்திருக்கும் பாசத்துக்காகவும்தான் நாங்கள் இந்தக் காரியத்தைச் செய்தோம்” என்று கூறி, அரசன் அறிவித்த பரிசை ஏற்க மறுத்துவிட்டான்.

மன்னர் மிகவும் வற்புறுத்தியும் அவர்களிருவரும் பரிசை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. நாடே அவர்களின் தியாகத்தைப் போற்றிப் புகழ்ந்தது.

சில நாள்களில் அரசி தாய்மைப்பேறு அடைந்தார். மன்னரும் மக்களும் மிகவும் மகிழ்ந்தனர். மாதங்கள் உருண்டோடின. அரசிக்கு ஓர் அழகிய ஆண்குழந்தை பிறந்தது. செய்தியறிந்து நாடே திருவிழாக் கோலம் பூண்டது.
வேலப்பனும் ரத்னாவும் தங்கள் துக்கத்தை மறந்து, இந்த மகிழ்ச்சியில் பங்குகொண்டனர். அன்றிரவு ரத்னாவுக்குத் தன் குழந்தை ஞாபகம் வந்தது.

வைகைக் கரைக்குச் சென்றாள். குழந்தையைத் தான் விட்ட இடத்துக்குச் சென்று நின்றுகொண்டு, மகன் நினைவில் கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தாள்.

அப்போது..
திடீரென ஒருவர் ரத்னாவின் முன்னே குழந்தையோடு நிற்பது போலிருந்தது. கண்களைத் துடைத்துவிட்டு, ரத்னா உற்றுப்பார்த்தாள். மன்னருக்கு ஆசி வழங்கிய அதே முனிவர்தான். கையில் குழந்தையோடு நின்று கொண்டிருந்தார். அந்தக் குழந்தை, ரத்னாவின் குழந்தையேதான்.

ரத்னா வியப்புடனும் மகிழ்ச்சியுடனும் முனிவரைப் பார்த்தாள். குழந்தையை ரத்னாவிடம் கொடுத்த முனிவர், அவளைப் பார்த்து, “நீ குழந்தையை ஆற்றில் விட்டவுடன் நான்தான் எடுத்து வளர்த்து வருகிறேன். நீயும் உன் கணவனும் செய்த இந்த மாபெரும் தியாகத்தைப் பாராட்டுகிறேன். உங்கள் இருவருடைய நாட்டுப்பற்றை இந்த உலகம் உணரவே இதுபோல் செய்தேன். எதிர்காலத்தில் உன் மகன், இளவரசனுக்குத் துணையாக நின்று இந்த நாட்டைக் காப்பான்” என்று கூறி, ஆசி வழங்கினார்.

குழந்தையுடன் ரத்னா வீட்டுக்கு ஓடோடி வந்த மறுநிமிஷம், இச் செய்தி காட்டுத்தீ போல் பரவியது. அரசனும் அரசியும் ரத்னாவுக்கு மீண்டும் குழந்தை கிடைத்ததை அறிந்து மிகவும் மகிழ்ந்தனர். அக் குடும்பத்தை அழைத்து, அரசவையில் உரிய மரியாதை தந்து கவுரவித்தனர். அவர்களின் நாட்டுப்பற்றை நாடே கவுரவித்தது.

சிறுவர் கதைகள் – புத்திசாலி ராணுவவீரர்

அமெரிக்கா ஒரு காலத்தில் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. அமெரிக்க மக்கள், இங்கிலாந்து மக்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராட்டம் நடத்தினர். அது கி.பி., பதினெட்டாம் நுõற்றாண்டு.

அமெரிக்க ராணுவப் படை, இங்கிலாந்து ராணுவப் படையுடன் கடுமையாக மோதியது. போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வந்தது. ஆகவே, இரண்டு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்தனர்.

அச்சமயம் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளில் ஒருவரான இஸ்ரேல் பொட்னாம் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவரைச் சந்தித்தார். இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அமெரிக்க அதிகாரி, ஆங்கிலேயே அதிகாரியை மிகவும் திட்டி விட்டார். இதைக் கேட்ட ஆங்கில அதிகாரி கொதித்தெழுந்தார்.

“இவ்வளவு துõரம் நீ பேசிவிட்டாய் அல்லவா…? நாளை நீ என்னுடன் சண்டைக்கு வர வேண்டும். நீ உன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வா. நான் என் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வருகிறேன். இருவரும் துப்பாக்கியால் சண்டை போடுவோம். யார் வெல்கிறார்கள் என்று பார்க்கலாமா?” என்றார்.

இஸ்ரேல் பொட்னாம் இதைக் கேட்டு பதில் எதுவும் பேசவில்லை. அமைதியாக அங்கே கிடந்த மரப் பீப்பாய் ஒன்றின் மேல் உட்கார்ந்திருந்தார். போர்க்களத்தில் இந்த மரப் பீப்பாய்கள் அதிகமாகக் காணப்படும். காரணம், இம்மாதிரிப் பீப்பாய்களில் தான் போருக்குத் தேவையான வெடி மருந்துகள் நிரப்பி வைத்திருப்பர்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரி அதிகமான கோபம் அடைந்தார்.

“அப்படியானால் நீ ஒரு கோழை என்பதை வெளிப்படையாகவே ஒப்புக் கொள்ள வேண்டியதுதானே! மவுனம் ஏன்?” என்று சீண்டினார்.

“நான் உன்னைப் போன்ற கோழை இல்லை. வாய்ச் சொல்லில் வீரம் பேசவும் எனக்குத் தெரியாது. நான் செயல் வீரன். நீ உனக்குச் சாதகமான முறையில் துப்பாக்கிச் சண்டை செய்யலாம் என்று கூறினாய். உனக்குத் துப்பாக்கி சுடுவதில் நல்ல பயிற்சி உண்டு என்பது எனக்குத் தெரியும்.

“ஆகையினால் நீ துப்பாக்கிச் சண்டையைத் தேர்ந்தெடுத்தாய். என் விஷயம் அப்படி இல்லை. எனக்குத் துப்பாக்கி சுடுவதில் அத்தனை அனுபவமில்லை. யார் வீரன் என்பதை நிரூபிக்க ஒரு பொதுவான வழிமுறையை உன்னால் சொல்லத் தெரியவில்லையே!”

“ஏன், நீதான் செயல் வீரனாயிற்றே! பொதுவான ஒரு வழியைச் சொல்லேன் பார்க்கலாம்,” என்று குமுறினார் ஆங்கில அதிகாரி.

“சரி! நானே சொல்கிறேன். இங்கே இரண்டு பீப்பாய்கள் இருக்கின்றன. இந்தப் பீப்பாய்கள் எதற்காக உபயோகப்படுத்தப்படுகின்றன என்பதை நீயும் அறிவாய். வெடிமருந்து போட்டு வைக்க உபயோகப்படுத்தும் பீப்பாய்கள் இவை என்பதை நீ மறந்தாலும் நான் உனக்கு நினைவூட்டுகிறேன்.

“இப்போது இந்த இரண்டு பீப்பாய்களிலும் நான் ஒரு துளையை இடுகிறேன். நீ ஒரு பீப்பாயின் மேல் அமர்ந்து கொள். நான் ஒரு பீப்பாயின் மேல் அமர்ந்து கொள்கிறேன்.
இந்த இரண்டு பீப்பாய்களில் எதன் மீதாவது அமரவும் உனக்குச் சுதந்திரம் உண்டு.

“இதன் பிறகு நான் ஒரு வயரைச் செருகி வைப்பேன். அதன் முனையையும் பற்ற வைத்து விடுவேன். அது மெல்ல மெல்லக் கனிந்து பீப்பாய்க்குள் போகும். இவ்வாறு பற்ற வைத்த பின்னாலும் யார் ஒருவர் நீண்ட நேரம் வரை கீழே இறங்காமலேயே அந்தப் பீப்பாயின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர். சம்மதமா? அதற்கான தைரியம் உன்னிடமிருக்கிறதா?’ என்று கேட்டார் இஸ்ரேல் பொட்னாம்.

“சரி’ என்று வீராவேசமாக ஒப்புக் கொண்டார் ஆங்கிலேய அதிகாரி.

பொட்னாம் எழுந்தார். இரண்டு நீண்ட “ப்யூஸ்’ வயர்களை இணைத்து அதைப் பீப்பாய்க்குள் செலுத்தி விட்டு நுனியைப் பற்ற வைத்துவிட்டு அமைதியாகப் பீப்பாய் மேல் வந்து அமர்ந்தார். ஆங்கிலேய அதிகாரியும் ஒரு பீப்பாய் மேல் அமர்ந்திருந்தார்.

நெருப்பு சிறிது சிறிதாகக் கனிந்து பீப்பாயை நோக்கி வர ஆரம்பித்தது. அது பாதித் தொலைவில் வந்தவுடனேயே ஆங்கிலேய அதிகாரி நடுங்கினார்.

“இவன் நம்மைத் துண்டு துண்டாகச் சிதற வைக்கத் திட்டம் தீட்டித்தான் இம்மாதிரி ஏற்பாடு செய்திருக்கிறான்!’ என்று எண்ணினார். நெருப்பு மெல்ல மெல்ல ஊர்ந்து வந்து கொண்டிருந்தது.

“இது மிகவும் பைத்தியக்காரத்தனமான ஒன்று. இதனால் நாம் இருவருமே வெடித்துச் சிதறி இறந்து விடுவோம். இது பயத்துக்குரிய ஒன்று.’

இஸ்ரேல் பொட்னாம் பேசவில்லை. அவர் முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லை. பீப்பாயை விட்டு அவர் இறங்கவுமில்லை. இன்னும் நன்றாக வசதியாக அமர்ந்து கொண்டார் அவர். திரி எரிந்து பீப்பாய்க்கு வெகு அருகில் வந்து விட்டது.
இன்னும் முப்பது விநாடிகள் தாமதித்தால் நெருப்பு பீப்பாய்க்குள் போய்விடும். அப்படிப் போய் விட்டால்…?

நினைத்தால் கூடத் தப்பி ஓட முடியாது.

அதற்கு மேல் ஆங்கிலேய அதிகாரியால் அமைதியாக இருக்க முடியவில்லை.

பீப்பாயிலிருந்து துள்ளிக் குதித்து இறங்கினார். திடுதிடுவென அந்த இடத்தைவிட்டு ஓட ஆரம்பித்தார். பாதுகாப்பான இடத்தில் நின்று திரும்பிப் பார்த்தார். பீப்பாய்க்குள் நெருப்பு நுழைய ஒரு விநாடி இருந்தது. அப்போதும் பொட்னாம் பீப்பாயை விட்டு எழவில்லை.
ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார்.

“கோழை யார் என்பது புரிந்ததா?’ என்று சப்தமாகக் கேட்டார்.

அவர் அவ்வாறு கேட்டு முடித்தவுடன், பீப்பாய் வெடித்துத் துண்டு துண்டாகச் சிதறி விடும் என்று ஆங்கிலேய அதிகாரி எதிர்பார்த்தார். அவ்விதமான அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. பீப்பாய்க்குள்ளும் நெருப்புப் போய்விட்டது.

பொட்னாம் அமைதியாகவே இருந்தார். ஐந்து நிமிடங்களுக்குப் பின் முழுதாக இறங்கி வந்தார் பொட்னாம்.

“இந்தப் பீப்பாய்க்குள் இருப்பது வெடி மருந்து என்றுதானே நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். இல்லை, அது வெங்காயம். வெங்காயத்தைச் சமையல் அறையில் கொட்டிய பின் தான் வெடி மருந்து அதில் நிரப்பப்பட வேண்டும்!’ என்று அமைதியாகக் கூறினார்.

ஆங்கிலேய அதிகாரி மிகப் பெரிய அவமானத்தை அடைந்தார். அன்று இரவோடு இரவாக அந்த அதிகாரி அந்தப் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்று விட்டார். இந்த அமெரிக்கச் சுதந்திரப் போரில் ஈடுபட்ட அந்த அதிகாரி இஸ்ரேல் பொட்னாம் பின்னாளில் அமெரிக்காவின் ராணுவத் தளபதியானார்.
புத்தி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

சிறுவர் கதைகள் – கொக்குவுக்கு எத்தனை கால்

பண்ணையார் பரந்தாமன் அன்று வேட்டைக்குச் சென்று திரும்பினார். அவர் கையில் கொக்கு ஒன்று இருந்தது. தன் கையிலிருந்த கொக்கைச் சமையல்காரனிடம் தந்தார்.

“இன்று இரவு உணவிற்கு இதை அருமையாகச் சமைத்து வை. என் நண்பர்கள் சாப்பிட வருகிறார்கள்,” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

சமையல்காரன் அந்தக் கொக்கை உரித்து மசாலா போட்டுக் குழம்பு வைத்தான். கறிக் குழம்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது. ஆசையை அடக்க முடியாது அவன் கொக்கின் ஒரு காலை எடுத்து சாப்பிட்டு விட்டான்.

“முதலாளி கேட்கமாட்டார். கேட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம்’ என்று நினைத்தான் அவன்.

சாப்பாட்டு நேரம்—
முதலாளியும் அவர் நண்பர்கள் சிலரும் சாப்பிட அமர்ந்தனர். கறிக்குழம்பு பரிமாறப்பட்டது. கொக்கின் ஒரு காலைச் சுவைத்து உண்ட அவர், “”மிக நன்றாக உள்ளது. இன்னொரு காலை கொண்டு வா,” என்று கேட்டார்.

திகைத்த சமையல்காரனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. “கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி. எப்படி இன்னொரு காலைக் கொண்டு வர முடியும்?” என்று கேட்டான்.

நண்பர்கள் எதிரில் சமையல்காரனோடு வாதிட விரும்பாத முதலாளி, “ம்ம்ம்… நாளைக் காலையில் கொக்கிற்கு ஒரு காலா இரண்டு காலா என்று தெரிந்து கொள்ளலாம்,” என்று சொல்லிவிட்டு அந்தப் பிரச்னையை அதோடு விட்டு விட்டார்.

மறுநாள் பொழுது விடிந்தது. சமையல்காரனை அழைத்துக் கொண்டு முதலாளி வேட்டைக்குப் புறப்பட்டார். போகும் வழியில் வயல் வெளியில் ஏராளமான கொக்குகள் நின்றிருந்தன. “கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா? இப்பொழுது சொல்,” என்று கேட்டார் முதலாளி.

“ஐயா! அதோ பாருங்கள். எல்லாக் கொக்குகளும் ஒரே காலில்தான் நின்று கொண்டுள்ளன. ஆகவே, கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி,” என்றான் சமையல்காரன்.

முதலாளி, கொக்குக் கூட்டத்தை பார்த்து “ச்சூ’ என்று கூச்சல் போட்டு விரட்டினார்.

ஒரு காலில் நின்று கொண்டிருந்த கொக்குகள் அனைத்தும் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி எழுந்தபடி சிறிது துõரம் தாவிப் பின் பறந்து சென்றன.

“இப்பொழுது என்ன சொல்கிறாய்? கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா?” என்று மறுபடியும் கேட்டார் பண்ணையார்.

“ஐயா! நீங்கள் சாப்பிடும் போது இப்படிச் “ச்சூ’ என்று சத்தம் போட்டிருந்தால் அந்தக் கொக்கிற்கும் இன்னொரு கால் வந்திருக்குமே!” என்று சாமர்த்தியமாகச் சொன்னான் சமையல்காரன்.

அவனுடைய கெட்டிக்காரத்தனமான பேச்சைக் கேட்டு மகிழ்ந்த அவர், “இனி இப்படி நடந்து கொள்ளாதே… பொய் சொல்வது, ஏமாற்றுவது எனக்கு பிடிக்காத குணம். உனக்கு என்ன வேணுமோ அதை கேட்டு வாங்கிச் சாப்பிடு,” என்றார் முதலாளி.

“என்னை மன்னிச்சிடுங்க முதலாளி… இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன்!” என்றான் சமையல்காரன்.

சிறுவர் கதைகள் – புத்தி பலம்

புத்தூர் என்ற ஊரில் இளங்கோ என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் உடல் வலிமையே இல்லாதவன். ஆள் பார்ப்பதற்கு சுமாரான உடல் கட்டு கொண்டவனாக இருந்தாலும், அவனால் கடினமான வேலைகள் எதையும் செய்ய முடியாது. ஆனால், பிறரது பலத்தை தனக்குப் பயன்படுத்தி காரியம் சாதித்துக் கொள்வதில் அவனை மிஞ்ச யாராலும் முடியாது.

இளங்கோவுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்களும் இளங்கோவை போல் உடல் வலிமையற்றவர்கள் என்று நினைத்து விடக்கூடாது. அவர்கள் மிகவும் பலசாலி.

“தினமும் உடற்பயிற்சி செய்து உடலை பலப்படுத்தி என்ன பிரயோஜனம்? மூளையை பலப்படுத்துங்கள். அது தான் வாழ்க்கைக்கு உதவும்!” என்று சொல்லிச் சிரிப்பான்.

அதற்கு அந்த மூவரும், “இளங்கோ! உடலை பலப்படுத்தினால் போதும், மூளை தானே பலப்பட்டு விடும். மூளை வலிமையை விட உடல் வலிமையால் உலகத்தில் நிறைய சாதிக்க முடியும். ஹூம்… நோஞ்சான் பயலான உனக்கு உடலைப் பற்றி என்ன தெரியும்!” என்று சொல்லி சிரிப்பர்.

இப்படியாக அவர்கள் நல்ல நண்பர்களாகவே இருந்து கொண்டிருந்தனர்.

ஒரு நாள் இளங்கோ தனது மளிகைக் கடைக்குத் தேவையான சாமான்களை சந்தைக்குச் சென்று வாங்கி மூட்டை மூட்டையாகக் கட்டி சிறு வண்டியில் வைத்து மிகவும் சிரமத்துடன் இழுத்து வந்து கொண்டிருந்தான்.

வழியில் ஒரு பெரிய மேடு குறுக்கிட்டது. அவன் உடலில் பலம் இல்லாததால் அந்த மேட்டின் மேல் சரக்கு வண்டியை இழுக்க முடியாமல் மிகவும் திணறினான். யாராவது ஒருவர் உதவிக்கு வந்தால் வண்டியை எளிதாக மேட்டின் மேல் ஏற்றி விடலாம் என்று நினைத்த அவன், வண்டியை நிறுத்தி விட்டு யாராவது வருகிறார்களா என்று மேட்டின் மீது ஏறி நின்று பார்த்தான்.

அப்பொழுது—
எதிர் திசையில் இருந்து அவனது மூன்று பலசாலி நண்பர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த இளங்கோவுக்கு ஒரு யோசனை தோன்றியது.

“விடுவிடு’வென்று கீழே இறங்கி, தன்னிடம் இருந்த கயிற்றின் ஒரு முனையை வண்டியில் கட்டினான். கயிற்றின் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு மறுபடியும் மேட்டிற்கு ஓடி வந்தான்.

அதற்குள் நண்பர்கள் அவனை நெருங்கி வந்து விட்டனர். உடனே இளங்கோ கயிற்றின் முனையைப் பிடித்தபடியே அவர்களை நெருங்கினான்.

“எனதருமை நண்பர்களே! உங்களுக்கும் எனக்கும் ஒரு போட்டி!” என்றான் இளங்கோ.

“என்ன போட்டி நோஞ்சான்?” என்று கேட்டனர்.

“உங்களுக்கும், எனக்கும் கயிறு இழுக்கும் போட்டி. நீங்கள் மூன்று பேரும் இந்த முனையைப் பிடித்துக் கொண்டு இழுங்கள். நான் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு இழுக்கிறேன். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம்!” என்றான் இளங்கோ.

அதைக் கேட்டு அந்த மூன்று பலசாலி நண்பர்களும் “ஹா… ஹா… ஹா…!” என்று பலமான சிரிப்புச் சிரித்தனர்.

“நோஞ்சான் பயலான உனக்கும், பலசாலிகளான எங்களுக்கும் கயிறு இழுக்கும் போட்டியா? வெளியே சொன்னால் எங்களுக்குத்தான் அவமானம். போய் வேறு ஏதாவது வேலையிருந்தால் பார்!” என்றனர் அவர்கள்.

“இதோ பாருங்கள். ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள். எனக்குள் இருக்கும் பலம் உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உண்மையான பலசாலிகளாக இருந்தால் என்னோடு போட்டியிடுவீர்கள். நீங்களோ போலி. பலசாலிகள் போல வேஷம் போடுகிறீர்கள்!” என்று அவர்களைச் சீண்டிவிட்டான்.

“சுண்டைக்காய் பயலே! எங்கள் பலத்தையா போலி என்றாய். உனக்குப் பாடம் கற்பித்தால்தான் புத்தி வரும். பிடி மறுமுனையை ஒரே ஒரு இழுதான். நீ எங்கோ பறந்து சென்று மண்ணைக் கவ்வப் போகிறாய்!” என்று சொல்லிவிட்டு கயிற்றின் ஒரு முனையைப் பிடித்தனர்.

இளங்கோ மேடு ஏறிப் போய் மறுபடியும் இறக்கத்தில் இறங்கி வண்டியில் கட்டப்பட்டிருந்த கயிறை இறுக்கமாகப் பிடித்தான்.

“ம்! இழுக்கலாம்!” என்று கத்தினான்.

அந்த மூன்று நண்பர்களும் இளங்கோதான் கயிறு இழுப்பதாய் நினைத்துக் கொண்டு மிகச் சாதாரணமாய் இழுத்தனர். அவர்கள் நினைத்தது போல் அது அவ்வளவு சாதாரணமாய் இழுபடவில்லை.

திடீரென்று “இளங்கோவுக்கு பலம் இருக்கிறதோ’ என்ற சந்தேகம் அவர்களுக்கு உண்டாயிற்று. ஆகவே, கயிற்றை இறுக்கமாகப் பிடித்து இழுத்தனர். ஆனால், இழுப்பது மிகவும் கடினமாக இருந்தது.

மூன்று பேர் முகத்திலும் திகில் பரவியது. ஒரு நோஞ்சான் பயலிடம் தோற்றுப் போனால் அது எத்தனை அவமானம் என்று நினைத்த அவர்கள், தங்கள் பலங் கொண்ட மட்டும் கயிறை இழுத்தனர்.

எதிர்ப்பக்கமிருந்த இளங்கோ, தான் இழுப்பதை மெல்ல மெல்ல விட்டுக் கொண்டே இருந்தான்.

வண்டி இப்பொழுது மெல்ல மேட்டில் ஏறத் துவங்கியது.

இளங்கோ தான் மெல்ல பலத்தை இழந்து மேலே வருகிறான் என்று நினைத்த அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகியது. “இந்த நோஞ்சான் பயலுக்கு ஏது இவ்வளவு பலம்’ என்று நினைத்தவாறே மீண்டும் கயிறை வேகமாக இழுத்தனர்.

கடைசி நேர இழுவையில் சரக்கு வண்டி மேட்டின் மேலே ஏறிவிட்டது. அதைப் பார்த்துக் கொண்டு சிரித்தபடி வந்தான் இளங்கோ.

அவர்களுக்கு அப்பொழுதுதான் விஷயமே புரிந்தது. இவ்வளவு நேரம் நாம் இழுத்தது இளங்கோவின் வண்டியை என்று.

மூவர் முகத்திலும் அசடு வழிந்தது. இறக்கத்தில் இறங்கி அவர்களிடம் வந்த இளங்கோ, “”மூளை பலம் என்பது இது தான்,” என்று சொல்லி நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு, தனது வண்டியை சமதளத்தில் மிகவும் லாவகமாக இழுத்துக் கொண்டு போனான்.

சிறுவர் கதைகள் – தானத்தில் சிறந்தவர் கர்ணனே

ரொம்ப நாட்களாகவே பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.
அது, நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர்.

இருப்பினும் கர்ணனையே ஏன் எல்லாரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்பது தான் அது. இவர்கள் மனதில் உள்ள சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன் ஒரு நாள் பாண்டவர்களை அழைத்தார்.

தங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கினார். பின் பாண்டவர்களை நோக்கி, “இங்கே பாருங்கள்! இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்,” என்று கூறினார்.

பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர தருமர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார். ஆனால், நகர மக்களில் பெரும் பகுதியினருக்கு அவ்வாறு தானம் செய்தும் தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. அதற்கு மாறாக அவ்விரு மலைகளும் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருந்தன.

மாலைப் பொழுது வந்ததும் இனி தங்களால் முடியாது என்பதை உணர்ந்த தருமர், “எங்களால் முடியாது கண்ணா!” என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

உடனே கிருஷ்ணன் ஓர் ஆளை அனுப்பி கர்ணனை வரவழைத்தார்.

“கர்ணா! இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்க மலை. மற்றொன்று வெள்ளி மலை; இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப் பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? யோசித்துச் சொல்,” என்று கூறினார்.

உடனே கர்ணன், “இதில் யோசிக்க என்ன இருக்கிறது இப்போதே செய்து காட்டுகிறேன்,” என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, “இதோ பாருங்கள்! நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்,” என்று கூறி தனது தர்மத்தை முடித்து விட்டுக் கிளம்பினான்.

பாண்டவர்கள் அசந்து போயினர். அவர்களை ஒரு அர்த்தப் பார்வையுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன். தர்மருக்கும் பரந்த மனசு தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவரைக் காட்டிலும் தான தருமம் செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே என்பதை சொல்லாமல் பாண்டவர்களுக்கு உணர்த்திவிட்டார் கிருஷ்ணன்.

சிறுவர் கதைகள் – கஞ்ச மகா பிரபு

பட்டினப்பாக்கத்தில் ஜம்பு என்ற செல்வந்தர் இருந்தார். அவரிடம் ஏராளமான செல்வம் இருந்தது. இருப்பினும் சரியான கஞ்சன்.

எங்குச் சென்றாலம் அவர் நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட அழகான வண்டியில் அமர்ந்து செல்வார்.

ஒரு முறை, வெளியூர் சென்றிருந்த அவர் தன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வண்டிச் சக்கரத்தில் ஏதோ முறிவது போன்ற ஓசை கேட்டது.

கோபத்துடன் அவர் வண்டியோட்டியைப் பார்த்து, “டேய் வண்டியை நிறுத்து. சக்கரத்திற்கு என்ன ஆயிற்று பார்?” என்று கத்தினார்.

நடுக்கத்துடன் கீழே இறங்கிய வண்டியோட்டி சக்கரத்தைப் பார்த்தான். “ஐயா! சக்கரத்தில் உள்ள கடையாணி உடைந்துவிட்டது. அந்த ஆணியைச் சரி செய்தால்தான் வண்டியை ஓட்ட முடியும்,” என்றான்.

“முட்டாளே! புறப்படும்போதே இதைப் பார்த்திருக்க வேண்டாமா? பக்கத்தில் உள்ள ஊருக்கு வண்டியை இழுத்துச் செல். அங்கே கொல்லனிடம் காட்டி வண்டியைச் சரி செய். நேரத்தை வீணாக்காதே,” என்று வண்டியில் இருந்தபடியே கத்தினார் ஜம்பு.

குதிரைகளுடன் வண்டியை மெதுவாக இழுத்துச் சென்றான் அவன். சிறிது நேரத்தில் வண்டி கொல்லனின் உலைக்களத்தின் முன் நின்றது.

அவன் குரல் கொடுக்க வெளியே வந்த கொல்லன் வண்டியைப் பார்த்தான்.
கேசவனை பார்த்தக் கொல்லன், “உடைந்திருக்கும் கடையாணிக்குப் பதில் வேறொரு ஆணியை மாட்டினால் வண்டி பழையபடி ஓடும். ஒரு வெள்ளிப் பணம் கூலி ஆகும்,” என்றான்.

“என்ன ஒரு ஆணியை மாட்டக் கூலி ஒரு வெள்ளிப் பணமா? நீ கொல்லனா அல்லது கொள்ளைக்காரனா?” என்று கோபத்துடன் கேட்டார் ஜம்பு.

“எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் கேட்ட கூலி தருவதாக இருந்தால் சொல்லுங்கள். வண்டியைச் செப்பனிட்டுத் தருகிறேன். இல்லையேல் வேறு ஆளைப் பாருங்கள்,” என்றான் அவன்.

வேறு வழியில்லாத ஜம்பு, “சரி” என்றார்.

சிறிது இரும்புத்துண்டு ஒன்றை எடுத்தான் அவன். உலைக்களத்து நெருப்பில் அதைப் போட்டான். பழுக்கக் காய்ந்த அந்த இரும்புத்துண்டை கத்தியால் நன்கு அடித்தான். ஆணியாக மாறிய அதை சக்கரத்தில் மாட்டினான்.

“இனிமேல் வண்டி நன்றாக ஓடும். கூலியைத் தாருங்கள்,” என்றான் அவன்.
நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். ஒரு வெள்ளிப் பணத்தைத் தந்துவிட்டு புறப்பட்டார்.

வண்டி ஓடிக் கொண்டிருந்தது. “இந்தச் சிறிய வேலைக்கு ஒரு வெள்ளிப் பணம் கூலியா? இப்படிப் பொருள் ஈட்டினால் இவன் என்னை விடச் செல்வனாகி விடுவானே. இந்த வேலையை நான் கற்றுக் கொண்டால் நல்ல வருவாய் வருமே. நாள்தோறும் இங்கு வந்து இவன் எப்படி வேலை செய்கிறான் என்று பார்ப்பேன். எல்லா வேலைகளையும் கற்றுக் கொண்ட பிறகு இவனை இங்கிருந்து விரட்டி விடுவேன்’ என்று நினைத்தார் அவர்.

அதன்படி நாள்தோறும் அந்த உலைக்களத்திற்கு வந்தார். கொல்லன் எப்படி வேலை செய்கிறான் என்பதை கவனித்தபடி இருந்தார். சில நாட்கள் சென்றன. கொல்லனுடைய தொழிலில் தான் தேர்ச்சி பெற்றுவிட்டதாக நினைத்தார் அவர்.

கொல்லனைப் பார்த்து, “இனி உனக்கு இங்கு வேலை இல்லை. எங்காவது ஓடிப்போ. என்னைப் பற்றி உனக்குத் தெரியும். நீ மீண்டும் என் கண்ணில் பட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன்,” என்று மிரட்டினார்.

அவருக்கு அஞ்சிய அவன், “இனி நான் இங்கு வரமாட்டேன்,” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

மகிழ்ச்சியுடன் உலைக்களத்திற்குள் நுழைந்தார் அவர். வண்டியோட்டியைப் பார்த்து, “இன்று முதல் கொல்லன் தொழிலை நான் செய்யப் போகிறேன். நீ என் உதவியாளர்,” என்றார்.

“ஐயா! இந்தத் தொழிலில் எனக்கு ஏதும் தெரியாதே,” என்றான் அவன்.

“நான் என்ன சொல்கிறேனோ அதைச் செய். அது போதும். வெளியே நின்று யாராவது இங்கு வருகிறார்களா பார்?” என்றார் அவர்.

“ஐயா, பெரிய இரும்புத் துண்டைத் தூக்கிக் கொண்டு ஒரு ஆள் இங்கு வருகிறான்” என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.

“பக்கத்து ஊரில் வாழும் உழவன் நான். இந்த இரும்பில் எனக்கு ஒரு கலப்பை செய்ய வேண்டும்,” என்றான் அவன்.

அந்த இரும்புத் துண்டைத் துõக்கிப் பார்த்தார். அவர். மிகுந்த கனம் உடையதாக இருந்தது. அதை உருட்டி மேலும் கீழும் பார்த்தார்.

“நல்ல இரும்பு இது. இதில் உறுதியான, நீடித்து உழைக்கும் கலப்பை செய்ய முடியும்,” என்றார்.

பிறகு அந்த இரும்பைத் துõக்கி உலைக்களத்தில் போட்டார். சக்கரத்தைச் சுற்றச் சுற்ற தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இரும்புத் துண்டு பழுக்கக் காய்ந்தது.
உதவியாளைப் பார்த்து, “ஏய்! பழுக்கக் காய்ந்த இந்த இரும்புத் துண்டை, அந்த இரும்புக் கட்டையின் மேல் வை. இந்தப் பெரிய சுத்தியால் அதை அடித்துக் கூர்மையாக்கு. எவ்வளவு வலிமையாக அடிக்கிறாயோ அந்த அளவு கலப்பை உறுதியாக இருக்கும்,” என்றார்.

உதவியாளும் அவர் சொன்னது போலப் பெரிய சுத்தியால் ஓங்கி அடித்துக் கொண்டிருந்தான். சின்ன சுத்தியலுடன் அவரும் அவனுடன் சேர்ந்து இரும்புத் துண்டை அடித்தார்.

களைப்பு அடைந்த அவன் சுத்தியலால் அடிப்பதை நிறுத்தினான். “ஐயா! என்னால் முடியவில்லை,” என்றான்.

உழவனைப் பார்த்து அவர், “இன்னும் சிறிது நேரம் சுத்தியால் அடித்தால் போதும். அழகான கலப்பை கிடைக்கும் உதவி செய்,” என்றார்.

பெரிய சுத்தியலை எடுத்தான் உழவன். அதனால் இரும்புத் துண்டை ஓங்கி அடிக்கத் தொடங்கினான். களைப்பு அடைந்த அவனும் அடிப்பதை நிறுத்தினான்.

நீண்ட நேரம் சுத்தியால் வலிமையாக அடித்ததால் இரும்புத் துண்டு சிறியதாகிவிட்டது. அதை மேலும் கீழும் புரட்டிப் பார்த்தார்.
உதட்டைப் பிதுக்கிய அவர், “என்ன இரும்புத் துண்டைக் கொண்டு வந்திருக்கிறாய். மட்டமான இரும்பு. இதில் கலப்பை செய்ய முடியாது. வேண்டுமானால் ஒரு கோடரி செய்து தருகிறேன். பல பரம்பரைக்குத் தொடர்ந்து அது உழைக்கும். என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார்.

“சரி கோடரியே செய்து தாருங்கள், ” என்றான் அவன்.
மீண்டும் அந்த இரும்புத் துண்டை உலைக்களத்தில் போட்டுத் தீ மூட்டினார் அவர். பழுக்கக் காய்ந்த அந்த இரும்பை உதவியாளும் அவரும் சேர்ந்து சுத்தியலால் அடித்தனர்.

சிறிது நேரம் சென்றது. அடிப்பதை நிறுத்திய அவர் இரும்புத் துண்டைப் பார்த்தார்.

மிகவும் சிறியதாக இருந்தது அது. “இதில் கோடரி செய்ய முடியாது. கூர்மையான அழகான சுத்தி செய்து தருகிறேன். இது போன்று வேலைப்பாடு அமைந்த சுத்தி யாரிடமும் இருக்க முடியாது. என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார்.

“ஏதாவது செய்யுங்கள்,” என்று கடுப்புடன் சொன்னான் உழவன்.

பழையபடி அந்த இரும்பை நெருப்பில் போட்டு எடுத்து அவரும் உதவியாளும் அடித்தார்கள். அந்த இரும்பு மெல்லியதாக ஆகிவிட்டது. அதைப் பார்த்த அவர், “நீ கொண்டு வந்த இரும்பு மிக மோசம். அதில் ஒரு ஊசி தான் செய்ய முடியும். என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார்.

நடந்ததை எல்லாம் பார்த்து வெறுப்படைந்த உழவன், “எதையாவது செய்து தாருங்கள்,” என்றான்.

அந்த இரும்புத் துண்டை சுத்தியலால் தட்டி ஊசி போல ஆக்கினார் ஜம்பு. மகிழ்ச்சியுடன் அதைக் கையில் எடுத்த அவர், “இந்த ஊசி சாதாரண ஊசி அல்ல. அருமையான ஊசி. நீண்ட காலம் உழைக்கும் ஊசி. இதைப் போன்ற அழகான ஊசியை இதுவரை யாரும் உருவாக்கி இருக்க முடியாது,” என்று அதை உழவனிடம் தந்தார்.

“நான் இதற்காக அதிகக் கூலி கேட்கமாட்டேன். நான் உழைத்த உழைப்பு உனக்கே தெரியும். ஐந்து வெள்ளிப் பணம் கொடு. அது போதும்,” என்றார்.

“ஒரு காசுகூடப் பெறாத ஊசி இது. பெரிய இரும்புத் துண்டை வீணாக்கியதோடு ஐந்து வெள்ளிப் பணமா கேட்கிறாய்? அந்தப் பணத்திற்கு பத்துப் புதிய கலப்பைகளையே வாங்க முடியுமே. என்னை ஏமாற்றவா நினைக்கிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்,” என்று உள்ளத்திற்குள் கருவினான் அவன்.

“இப்பொழுது என்னிடம் வெள்ளிப் பணம் ஏதும் இல்லை. என் வீட்டில் ஏராளமாக நெல் உள்ளது. அங்கு வாருங்கள். பத்து வெள்ளிப் பணத்திற்கு உரிய நெல்லைத் தருகிறேன்,” என்றான் அவன்.

மகிழ்ச்சி அடைந்த அவர், “நீ முன்னால் செல். நான் வண்டியுடன் பின்னால் வருகிறேன்,” என்றார்.

உலைக்களத்தைப் பூட்டிவிட்டு வண்டியில் அமர்ந்தார் அவர். வண்டியோட்டி வண்டியை உழவனின் வீட்டின் முன் நிறுத்தினான்.

வண்டியோட்டியைப் பார்த்து, “நான் இந்தக் காலி சாக்கு மூட்டைகளுடன் உள்ளே செல்கிறேன். நீ இங்கிருந்தபடியே உள்ளிருந்து வரும் பேச்சுக் குரலைக் கவனி. சாக்கு மூட்டைகளில் எல்லாம் நெல்லை நிரப்பும் அவன் “போதுமா’ என்று கேட்பான். நீ உடனே, “போதாது, நானும் வேலை செய்திருக்கிறேன். என் பங்கையும் அவரிடம் தாருங்கள் என்று குரல் கொடு,” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அவரின் வருகைக்காக உழவனும் அவன் உறவினர்களும் கோபத்துடன் காத்திருந்தனர்.

அவர் உள்ளே நுழைந்ததும் எல்லாரும் அவரைப் பிடித்து இழுத்தனர். வலிமை கொண்ட அளவுக்கு அவரை உதைத்தனர்.

வலி பொறுக்க முடியாத அவர், “ஐயோ! என்னை விட்டு விடுங்கள் போதும்,” என்று அலறினார்.

வெளியே இருந்த வண்டியோட்டி, “போதாது! போதாது! என் பங்கையும் சேர்த்து அவரிடம் தாருங்கள்,” என்று உரத்த குரலில் கத்தினான்.

“கேட்டீர்களா? இன்னும் இவனை உதையுங்கள்,” என்றான் உழவன்.
எல்லாரும் சேர்ந்து அவரை மேலும் அடித்து உதைத்தனர்.

உடலெங்கும் காயத்துடன் பரிதாபமாக முனகியபடி வெளியே வந்தார் அவர்.
வண்டியோட்டி உதவி செய்யத் தடுமாறியபடி வண்டியில் அமர்ந்தார்.

“அய்யா! எங்கேய்யா, நம்ம மூட்டை, நான் போய் வாங்கி வரவா?”

“டேய்! வண்டியை விடு. சீக்கிரம் இங்கிருந்து புறப்பட வேண்டும். கொல்லனாக இருந்தால் இப்படி அடி உதை கிடைக்கும் என்பதை அறியாமல் போனேனே! என் வாழ்நாளிலேயே இப்படி வேதனைப்பட்டது கிடையாது. இனி இந்த வேலையே வேண்டாம்,” என்றுஅலறினார் செல்வந்தர்.

சிறுவர் கதைகள் – நயவஞ்சக நரி

ஒரு காட்டில் நரி ஒன்று இருந்தது. ஒரு முறை அதற்கு நிறைய உணவு ஒரே வேளையில் சாப்பிட வேண்டுமென்று விரும்பிற்று. அதற்கான தருணம் எப்போது வாய்க்கப் போகிறதோ என்று காத்துக் கொண்டிருந்தது.

மரத்தின் நடுவிலுள்ள பொந்து ஒன்றில் அது மிகவும் நல்லவனைப் போல வசிக்க ஆரம்பித்தது. மனதுக்குள் இந்த மரத்தின் கூடு கட்டி வரும் பறவைகள் குஞ்சு பொரித்தால் குஞ்சுகளை அப்படியே சாப்பிட்டு விடலாமே என்றெண்ணிற்று நரி.

அதன் எண்ணம் வீண் போகவில்லை. இரண்டு கழுகுகள் கணவன், மனைவியாக ஒரு நாள் அம்மரத்தடிக்கு வந்தன. மரப் பொந்தில் மிகவும் சாது மாதிரி படுத்துக் கிடக்கும் நரியைப் பார்த்தன.

“நரியாரே! நீ இம்மரப் பொந்தில் எவ்வளவு நாளாக இருக்கிறீர்?” என்று கேட்டது ஆண் கழுகு.

“கழுகாரா… வாங்க… கூட யாரு? மன்னியா?” என்று கேட்டது.

“ஆமாம்!” “நான் கேட்டதற்கு நீர் இன்னமும் பதில் சொல்லவில்லையே!” என்று கேட்டது.

“ஆமாம்…! இம்மரப் பொந்தில் பல வருஷங்களாக இருக்கிறேன்…! ஏன் கேட்கிறீர்?” என்று கேட்டது நரி.

“என் மனைவிக்கு பிரசவ காலம் நெருங்குகிறது. இம்மரத்தில் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கலாமா என்று ஒரு ஆசை!” என்றது ஆண் கழுகு.

“ரொம்ப ராசியான மரம் இது… முன்பு கூட ஒரு பருந்து இங்கு கூடு கட்டி, குஞ்சு பொரித்து, சுகமாக வாழ்ந்தது!” என்றது நரி.

“ஆபத்து ஏதாவது உண்டாகுமா?” என்று கவலையோடு கேட்டது பெண் கழுகு.

“நான் வயதானவன் இந்த பொந்தே கதி என்று கிடக்கிறேன். நீங்கள் பயப்படவே வேண்டாம். நாம் நல்ல நண்பர்களாக இருப்போம்!” என்றது நரி.

பிறகு மரத்தை அண்ணாந்து பார்த்து மூன்று கிளைகள் பிரியும் ஒரு இடத்தை சுட்டிக் காட்டி, “அங்கு கூடு கட்டிக் கொள்ளுங்கள். மிகவும் வசதியாக இருக்கும்!” என்றது.

ஆண் கழுகும், பெண் கழுகும் அங்கு சென்று கூடு கட்ட ஆரம்பித்தன. ஆண் கழுகு வெளியில் இரை தேடிச் செல்லும் பொழுது, “என் மனைவி மட்டும் கூட்டிலிருக்கிறாள். அவளால் பறக்க முடியவில்லை… இன்றோ, நாளையோ முட்டை இடப்போகிறாள்… கொஞ்சம் பார்த்துக் கொள்ளும் நரியாரே!” என்றது.

“கவலைப்படாமல் போய் வாரும் நண்பரே! நான் இங்கிருக்கும் வரை எந்த ஆபத்தும் அண்டாது!” என்றது நரி.

நமக்கு நல்ல நண்பன் கிடைத்தான் என்றெண்ணி இரை தேட பறந்து சென்றது ஆண் கழுகு.

பெண் கழுகு முட்டையிட்டு குஞ்சு பொரித்து அவை சுமாராக பெரிதானதும், எல்லாவற்றையும் சாப்பிட்டு விட வேண்டுமென்று நரி எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, மரத்தடியில் புதிதாக வந்த பன்றியும், அதன் கொழு கொழு குட்டிகளும் அதன் பார்வையில் பட்டது.

பன்றிக் குட்டிகளை சாப்பிட்டு பல நாள் பசியாறலாம் போலிருக்கிறதே என்றெண்ணிற்று நரி. மேலே கழுகு குஞ்சுகள், கீழே பன்றிக் குட்டிகள்… பேஷ் பேஷ்…

“நரியாரே இந்த மரத்தடியில் நானும் என் குட்டிகளும் தங்கலாமா?” என்று கேட்டது அம்மா பன்றி.

“பேஷாக தங்கலாம்!” என்றது நரி.

“எனக்கும், என் குட்டிக்கும் ஏதாவது ஆபத்து வருமா நரியாரே?” என்று கவலையோடு கேட்டது அம்மா பன்றி.

“நான் இருக்கும் இடத்துக்கு வந்துவிட்டாய் பன்றியே… கவலையே படாதே…! நான் வயதானவன். இந்த பொந்தே கதி என்று கிடப்பவன்…! எதிரிகள் எவரையும் மரத்தருகில் அண்டவே விடமாட்டேன்…! நானிருக்க பயமேன்?” என்றது நரி.

பன்றி தன் குட்டிகளுடன் மரத்தடியில் தங்கிக் கொண்டது. நாளடைவில் மரத்தின் மேலுள்ள கூட்டில் பெண் கழுகு முட்டையிட்டு குஞ்சு பொரித்தது. நான்கைந்து குஞ்சுகள் இருக்கும். கத்தியபடி இருந்தன. மரத்தடியில் பன்றிக் குட்டிகளும் “கர், கர்’ என்று உறுமியபடி உலாவிக் கொண்டிருந்தன.

வந்ததற்கு இப்போது பன்றிக் குட்டிகள் மிகவும் பருத்திருந்தன. அம்மா பன்றியும் தான். அவைகளை எப்படி சாப்பிடலாம் என்று யோசித்த நரி, ஆண் கழுகையும், பெண் கழுகையும் அழைத்தது.

“இதோ பாருங்கள்…! மரத்தடியில் இருக்கிறதே பன்றி அது சுத்த மோசம்… உங்கள் குஞ்சுகளை எப்பொழுது சாப்பிடலாமென்று தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது!” என்றது.

இரண்டு கழுகுகளும் இரை தேடக் கூட வெளியில் செல்லாமல், கூட்டிலுள்ள குஞ்சுகளை காவல் காக்கத் தொடங்கின. வெளியே எங்கேயும் போக பயந்தன.

மேலே ஒருமுறை பார்த்துவிட்டு குட்டிகளுடன் மேய்ந்து கொண்டிருந்த பன்றியிடம் வந்தது நரி.

“பன்றியே…! நீ உன் குட்டிகளை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலே இருக்கிற இரண்டு கழுகுகளும் மகா பொல்லாத கழுகுகள். அவை நீ இல்லாத சமயத்தில் உன் குட்டிகளைக் கொத்திக் கொன்று சாப்பிட்டுவிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன!” என்றது நரி.

பன்றி ஒரேயடியாக பயந்து போய்விட்டது. குட்டிகளை எல்லாம் தன் காலின் கீழ் அழைத்துக் கொண்டது. மரத்தடியிலேயே இருக்க வேண்டும். குட்டிகளை தனியாக விட்டு விட்டு போய் விடக்கூடாது.

கழுகுகள் சாப்பிடவா என் குட்டிகளை கண் போல வளர்க்கிறேன் என்றெண்ணியது பன்றி. அதன் பிரகாரமே இருக்கவும் ஆரம்பித்தது அம்மாப் பன்றி.

ஆண், பெண் கழுகுகளும், அம்மா பன்றியும், பன்றிக் குட்டிகளும் இரை தேடாததால் வாடி இளைத்து, சோர்ந்து, துவண்டு ஒரு நாள் எல்லாமே இறந்து போயின.

நரி விரும்பியதுபோல் நிறைய சாப்பிட கழுகுகளும், பன்றிகளும் அதன் தந்திரத்தால் கிடைத்துவிட்டன.

யார் யாரிடம் நட்பு கொள்ள வேண்டுமென்று யோசித்து நட்புக் கொள்ளாததால் கழுகுகளுக்கும், பன்றிகளுக்கும் நேர்ந்த பரிதாபமான முடிவைப் பார்த்தீர்களா, நல்லவர்களோடு மட்டுமே நட்பு கொள்ள வேண்டும்.

சிறுவர் கதைகள் – பூதம் சொன்ன கதை

முன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும் நல்லவன்; இரக்க குணமுடையவன். இளையவன் யாசகன் மிகவும் கெட்டவன்.

கொஞ்ச நாட்களில் பணக்காரர் இறக்கவே அண்ணனும், தம்பியும் வியாபாரத்தை கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரு முறை ஒரு கிராமத்திற்குப் போய் தமக்கு வரவேண்டிய ஆயிரம் பவுன்களை வசூலித்தனர்.

அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் ஊர் திரும்ப ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். படகுக்காரன் எங்கோ போயிருந்ததால் தம்பியிடம் பண மூட்டையைக் கொடுத்து விட்டுச் சற்று கண்மூடித் தூங்கினான் அண்ணன். இதற்குள் தம்பி அதே போல ஒரு பண மூட்டையில் கற்களை வைத்துக் கட்டி எடுத்து ஒளித்துக் கொண்டான்.

சற்று நேரத்திற்கெல்லாம் படகுக்காரன் வரவே தம்பி தன் அண்ணனை எழுப்பி அவரோடு படகில் ஏறி உட்கார்ந்தான். படகும் கிளம்பியது. படகு நடு ஆற்றில் போகும் போது தம்பி ஒரு மூட்டையை எடுத்து ஆற்றில் நழுவ விட்டு, “ஐயோ அண்ணா பண மூட்டை ஆற்றில் விழுந்துவிட்டதே,” எனக் கூறினான்.

“போனால் போகட்டும். அது நம் பணமாக இருந்தால் நமக்கே கிடைக்கும்,” எனக் கூறினான் அமுதன். தம்பியும் தான் தந்திரமாக ஆயிரம் பவுன்களை தட்டி விட்டதாக எண்ணி மகிழ்ந்தான். ஆனால், அவன் அவசரத்தில் ஆற்றில் போட்டது பண மூட்டையைதான். கற்களை வைத்துக் கட்டிய மூட்டைதான் அவனிடம் இருந்தது.

அந்த ஆற்றில் ஒரு பூதம் இருந்தது. தம்பி மூட்டையை ஆற்றில் போட்டதும் ஒரு மீனை உடனே விழுங்கச் சொல்லி கட்டளை இட்டது அது. மீனும் அப்பூதம் சொன்னபடி நடந்தது.

பூதம் தம்பி செய்த மோசடியை புரிந்து கொண்டது. எனவே, அந்தப் பண மூட்டையை எப்படியும் அண்ணனிடம் சேர்த்து விட எண்ணி மூட்டையை விழுங்கிய மீன் எங்கும் போகாதபடி காவல் காத்தது.

அண்ணனும், தம்பியும் காசிக்கு வந்து தம் வீட்டை அடைந்தனர். தம்பி வீட்டில் தனியாக ஓரிடத்திற்குப் போய் தன்னிடமிருந்து மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதில் கற்கள் இருப்பதைக் கண்டு, “ஐயோ! நான் அண்ணனை ஏமாற்ற எண்ணி நானே ஏமாந்தேனே…” என எண்ணி மனம் புழுங்கினான்.

அன்று சில மீனவர்கள் ஆற்றில் வலை போட்ட போது பூதம் மீனவராக மாறி அந்த மீனை எடுத்துக் கொண்டு அண்ணனின் வீட்டுக்குச் சென்றது. அண்ணன் அவன் கேட்டபடி ஒரு பவுனைக் கொடுத்து அந்த மீனை வாங்கிக் கொண்டார். அதனை அவர் தன் மனைவியிடம் கொடுக்கவே அவள் அதனை இரண்டாக நறுக்கினாள். அதன் வயிற்றிலிருந்து பணமூட்டை வெளியே விழுந்தது.

அதைக் கண்டு திகைத்தான் அமுதன். “இது நம் பணமே. இதனை நம்மிடம் கொடுக்கவே இந்த மீனவன் வந்திருக்கிறான். இவனுக்கு எப்படி இது தெரிந்தது?” என எண்ணி ஆச்சரியப்பட்டான்.

அப்போது, “அமுதா… நீ மிகவும் நல்லவன். இந்த ஊரில் உள்ள ஏழைகளுக்கு நிறைய உதவிகளைச் செய்கிறாய். ஒரு முறை நீங்கள் படகில் சென்றபோது உன் கையில் இருந்து நழுவிய உணவு பொட்டலத்தை உண்டேன்.

“அது எனக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தது. அதனால் தான் உன்னுடைய பணமூட்டையை உன் தம்பி வேண்டுமென்றே தூக்கி வீசிய போது அதை விழுங்கும்படி இந்த மீனுக்கு கட்டளை கொடுத்தேன். அந்த மீனையும் எடுத்துக் கொண்டு வந்தேன். நல்லவர்களுக்கு எல்லாமே நல்லதாய் தான் நடக்கும்…” என்று சொல்லி மறைந்தது.

அதை கேட்டு மகிழ்ந்தான் அமுதன். மறைக்காமல் அதில் பாதியான ஐநுõறு பவுன்களைக் தன் தம்பியிடம் கொடுத்தார். தம்பியும் தனது அண்ணனுடைய கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான்.

சிறுவர் கதைகள் – தொலைந்த மூக்கு

அண்ணன் தங்கை இருவருக்கும் எப்போதும் சண்டை தான். அண்ணன் பரத் மகா குறும்பன். இரண்டாம் வகுப்பில் படிக்கின்றான். தங்கை நந்தினி இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை.சின்னப் பெண். தாய் தந்தை இருவரும் பணி புரிகின்றார்கள். அப்பத்தாவும் தாத்தாவும் இவர்களுடன் இருக்கிறார்கள். பரத் , நந்தினி குடும்பம் இருப்பது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில். அந்த குடியிருப்பில் மொத்தம் 5 மாடி. மூன்றாவது மாடியில் இவர்கள் குடியிருக்கின்றார்கள்.

ஒரு சனிக்கிழமை காலை அப்பாவும் அம்மாவும் பணிக்கு சென்றபின்னர் பரத்தும் நந்தினியும் விளையாடிக் கொண்டு இருந்தனர். தாத்தா வெளியே தன் நண்பர்களைக் காண கிளம்பினார்

“பரத் தங்கையை சீண்டாமல் விளையாடு. சண்டை போட்டுக்க கூடாது சரியா? தாத்தா சீக்கிரம் வந்துவிடுகின்றேன்”

“சரிங்க தாத்தா” – இருவரும்.

விளையாட்டு சாமான்கள் எடுத்துக்கொண்டு இருவரும் மொட்டைமாடியில் விளையாடச் சென்றனர். நிழலாக இருந்த ஓரத்தில் விளையாடினர்.எந்த பொருள் பரத் எடுத்தாலும் உடனே நந்தினி அது வேண்டும் என்பாள். அப்போது திடீர் என்று பரத் “உஷ் உஷ்” என்று கத்தியபடி ஓடினான்.

“அண்ணா என்ன ஆச்சு?” பயத்துடன் அண்ணன் சட்டைக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள்..

“ஒரு பருந்து வந்தது பார்த்தியா?”

“இல்லையே”

“பெரிய பருந்து”

”அச்சோ அப்புறம்?. ஏன் விரட்டிக்கொண்டு ஓடினீர்கள்?”

“அழக்கூடாது சரியா. அந்த பருந்து உன் மூக்கை கடிச்சி எடுத்துக்கொண்டு போய் விட்டது. அது தான் துரத்திக்கொண்டு சென்றேன். அதற்குள் பறந்தே போய்விட்டது”..

இவன் சொல்லி முடிப்பதற்குள் நந்தினி அழ ஆரம்பித்துவிட்டாள்..”அம்மா என் மூக்கு..என் மூக்கு” என்று அழுதபடி படிக்கட்டுகளில் இறங்கி தன் வீட்டிற்கு சென்றாள். அவள் விட்ட சத்தத்திற்கு அந்த கட்டிடத்தில் உள்ள அனைவருமே பயந்துவிட்டனர். யார் என்ன சொல்லியும் அழுகை நின்ற பாடில்லை. அப்பத்தா அதெல்லாம் ஒன்றும் இல்லை.அண்ணன் விளையாடுகிறான் என்றாள். கேட்கவே இல்லையே. அழுதபடியே இருந்தாள்.கை கால் உதைத்தாள்.

தாத்தா அந்த சமயம் வீட்டிற்குள் வந்தார். “என்னாச்சு பாப்பாக்கு? ஏன் என் தங்கம் அழுகின்றது?”

தன் அழுகையை நிறுத்தி “தாத்தா, நானும் அண்ணனும் விளையாடிக் கொண்டு இருந்தோம்.ஒரு பெரிய பருந்து கறுப்பு நிறத்தில் வந்தது. என் மூக்கை…” மீண்டும் அழுகை…

“அழாமல் சொன்னால் தானே புரியும்…”

“என் மூக்கை கடிச்சி எடுத்துக்கொண்டு போய்விட்டது..ம்ம்ம்..ம்ம்ம்”
நிலைமையை புரிந்து கொண்டார் தாத்தா. “ஓ உன் மூக்கு தானா அது? ” என்றார்.
அமைதியானாள் நந்தினி. “நான் தெருவில் வந்த போது ஒரு பருந்து வந்து என்னிடம் பேசியது.ஒரு அழகான குட்டி பெண்ணின் மூக்கை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். பாவம் அவள் நல்ல பெண், சமத்து பெண், என்று சொல்லிவிட்டு மூக்கை என்னிடம் கொடுத்து விட்டு பறந்து சென்றது.”

“இதோ பத்திரமாக என் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன்.எங்கே கிட்டவா..கண்ணை மூடிக்கொள்..”

பாக்கெட்டில் இருந்து ஏதோ எடுப்பது போல் பாவனை செய்து அவள் முகத்தில் வைத்து அழுத்தினார்.

“ஆகா. மூக்கு ஒட்டியாச்சே..போய் கண்ணாடியில் பார்.” நந்தினி கண்ணாடியை நோக்கி ஓடினாள்..”படவா..குழந்தையை ஏன் இப்படி ஏமாற்றுகிறாய்” என்று செல்லமாக பரத் கன்னத்தை கிள்ளினார் தாத்தா..

“ஹைய்யா மூக்கு வந்துடுச்சே..ஜாலி..ஜாலி..அண்ணா மூக்கு வந்துடுச்சு…ஜாலி ஜாலி…” மீண்டும் மாடிக்கு சென்று விளையாட துவங்கினர் ஆனந்தமாக.

சிறுவர் கதைகள் – பட்டாணி

ஒரு நாள் ஒரு மூதாட்டி மண் அடுப்பில் வைத்து சமையல் செய்து கொண்டிருந்தாள். அவள் அடுப்பில் வைத்திருந்த தண்ணீர் கொதித்ததால் அதற்குள் சில காய்கறிகளை போட்டாள். அப்போது பட்டாணி அந்தப் சட்டியிலிருந்து வெளியே குதித்து வந்து, “என்னை வேக வைக்கவேண்டாம். என்னை சமைக்கவேண்டாம்” என்று கத்தியது.

“மூதாட்டியோ நீ மரியாதையாக பழையபடி சட்டிக்குள் போகிறாயா? இல்லை உன்னை நசுக்கட்டுமா?” என்றாள்.

ஆனால் மூதாட்டியின் உத்தரவை பட்டாணி கேட்கவில்லை. அங்கிருந்து வேகமாக ஓட்டம் பிடித்தது. அப்போது “நில் நில் ஓடாதே’ உன்னுடன் நானும் வருகிறேன்” என்று இன்னொரு குரல் கேட்டது. பட்டாணி திரும்பிப் பார்த்தது, அப்படிக் கத்தியது என்று சொன்னது எரிந்து கொண்டிருந்த ஒரு துண்டு நிலக்கரி.

“அடுப்பிற்குள் இருந்தால் எனக்கு மூச்சு முட்டுகிறது. அதனால் நானும் உன்னுடன் வெளியுலகைப் பார்க்க வருகிறேன்” என்றது, நிலக்கரி.

“என்ன வெளியுலகைப் பார்க்கப் போகிறாயா?. அப்படியென்றால் என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்”. என்றது கீழே கிடந்த வைக்கோல் ஒன்று.

“சரி, வா போகலாம்” என்று நிலக்கரியும் பட்டாணியும்? வைக்கோலை தங்களுடன் கூட்டு சேர்த்துக் கொண்டன.

மூன்றும் சேர்ந்து நடந்தபோது சாலையின் ஓரிடத்தில் விரிசல் விட்டிருந்தது. அந்த இடத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.

“இனி நாம் தொடர்ந்து செல்ல முடியாது. அதனால் நான் அடுப்பிற்கே போய் விடுகிறேன்” என்றது, நிலக்கரி.

“அப்படியென்றால் நானும் அடுப்பில் எரியும் சட்டிக்குள் போய் விடுவேன்” என்றது பட்டாணி.

“நண்பர்களே சோர்ந்து விடாதீர்கள். நான் இந்த பாலத்திற்கு (விரிசல்) இணைப்பாக இருக்கிறேன். நீங்கள் இருவரும் என்மீது ஏறி நடந்து மறுபக்கம் போய்விடலாம்” என்று நம்பிக்கைïட்டியது, வைக்கோல்.

முதலில் பட்டாணி, வைக்கோல் மீது ஏறி விரிசலின் மறுபக்கத்தை அடைந்தது. ஆனால் எரிந்து கொண்டிருந்த நிலக்கரி, வைக்கோல் மீது ஏறியதும் அது தீப்பிடித்துக் கொண்டது. இதனால் இரண்டும் சேர்ந்து தண்ணீருக்குள் விழுந்தன.

“ஷ்..ஷ்..ஷ்…”தன் மீது எரிந்து கொண்டிருந்த நெருப்பு அணைந்ததும் நிலக்கரி பெருமூச்சு விட்டது.

அந்த வினோத சத்தத்தைக் கேட்ட பட்டாணி சிரிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து அது பலமாகச் சிரித்ததால் வெடித்து சிதறி அதிலிருந்த ஒவ்வொரு பட்டாணியும் ஓட ஆரம்பித்தன.

அந்தப் பட்டாணிகள் அனைத்தும் ஒரு தையல்கடையை நோக்கிச் சென்றன. தையல்காரரிடம் தயவு செய்து எங்களை ஒன்றாக வைத்து தைத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டன.

தையல்காரரும் பட்டாணிகளின் வேண்டுகோளை ஏற்று ஒரு தடித்த நூல் கொண்டு தைத்து விட்டார்.

இதனால் தான் அன்று முதல் பட்டாணியை நாம் உரிப்பதற்கு அதன் மேல் தோலில் நூல் போல் உள்ள பகுதியை உரிக்கவேண்டியிருக்கிறது.

சிறுவர் கதைகள் – கடவுளின் கருணை

கோட்டையூர் என்ற ஊரில் அருணாச்சலம் என்பவன் வாழ்ந்து வந்தான். இவன் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவன். வாழ்க்கையில் இன்பமோ துன்பமோ எது நடந்தா லும் எல்லாம் கடவுள் செயல் என்று சொல்வான்.

இதனால் எதை பற்றியும் கவலைப்படமாட்டான். இறைவன் அருள் இன்றி ஒரு அணுவும் அசையாது என்பது இவனுடைய கொள்கை. அதே ஊரில் தங்கையா என்பவன் வாழ்ந்து வந்தான். இவன் அருணாச்சலத்திற்கு நேர் எதிர்.

கடவுளே இல்லை என்று சொல்லும் கொள்கையுடையவன். வசதிக்கு குறைவில்லை. எனவே, அருணாசலத்தை பார்க்கும் போதெல்லாம் மிகவும் கிண்டல் செய்வான். காரணம் அருணாச்சலம் ஏழை. அதனால் அவனது கிண்டலுக்கு கேட்கவேண்டுமா?

நீ நம்பி இருக்கிற கடவுள் உன்னை மட்டும் ஏழையாக வைத்துவிட்டு என்னை மட்டும் பணக்காரனாக படைத்திருக்கிறான் பார்த்தாயா? இப்படியெல்லாம் பேசி நக்கல் செய்வான்.

அதற்கு அருணாச்சலம் எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். அதை இறைவனை தவிர யார் அறிய முடியும் என்று சொல்வான். இப்படியாக தங்கையா கிண்டல் செய்வதும் அருணாச்சலம் பதில் சொல்வதுமாக இருந்தான்.

ஒரு நாள் உச்சி வெயில் மண்டையை பிளந்தது. அப்போது அந்த வழியாக குடை பிடித்து கொண்டு வந்து கொண்டிருந்தான் தங்கையா. குடை வாங்க வசதியில்லாத அருணாச்சலம் வெயிலில் வேர்வை வழிந்தோட வந்து கொண்டிருந்தான். அவனை கண்டதும் அருணாச்சலத்திற்கு ஏக குஷி.

வழக்கம் போல் அருணாச்சலத்தை வம்புக்கு இழுத்தான். “”என்ன அருணாச்சலம் வெயிலில் வேர்க்க விறுவிறுக்க எங்க போயிட்டு வர்ற? எல்லாம் கடவுள் செயல் என்று சொல்லும் உனக்கு ஒரு குடை கொடுக்க வேண்டும் என்று அந்த கடவுளுக்கு தெரியாதா! என்னய்யா சாமி?” என்று நக்கல் செய்தான்.

வெயில் கொடுமை ஒரு பக்கம்; அவனது தொடர் தொல்லை ஒரு பக்கம் சேர்ந்து கொண்டு அருணாச்சலத்தை எரிச்சல் படுத்தியது.

“”அந்த கடவுளின் கருணை இல்லையென்றால் உன் கையில் குடை இருந்தாலும் நீ அதை பிடித்து செல்ல முடியாது. அதை கையில் வைத்து கொண்டு தலை காய ஓடுவாய் என்பதை மட்டும் மறந்துவிடாதே. இறைவனது கருணையை எப்போதும்
கிண்டல் செய்யாதே,” என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தான்.

பெரிய தத்துவம் சொல்றான் என்று சிரித்து கொண்டே நடந்தான் தங்கையா. சிறிது துõரம் கூட நடந்திருக்கமாட்டான் அதற்குள் வெறி நாய் ஒன்று அவனை துரத்த ஆரம்பித்தது. உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்தான் தங்கையா. நாயோ பயங்ரமாக துரத்தியது.

குடையை பிடித்து கொண்டு ஓடுவதற்கு சிரமமாக இருந்தது. எனவே, குடையை மடக்கி கையில் வைத்து கொண்டு ஓட்டமாக ஓடி உயிர் தப்பிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

அப்பொழுதுதான் அவன் மனதில் அருணாச்சலம் சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

கடவுளின் கருணை இல்லாவிட்டால் கையில் குடை இருந்தாலும் பிடிக்கமுடியாது என்பதை உணர்ந்தான். அவனை அறியாமல் ஒருவித பயம் அவனை ஆட்கொண்டது. அன்றிலிருந்து கடவுளின் அருளை நம்ப ஆரம்பித்தான் தங்கையா.

சிறுவர் கதைகள் – தன்னலமற்ற சேவை
சிறுவர் கதைகள் – தன்னலமற்ற சேவை

முன்னொரு காலத்தில் வேங்கைபுரி என்ற நாட்டை வேந்தன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவர் தமது நாட்டில் இறைவனுக்காக மிகப் பெரிய ஆலயம் ஒன்றை அமைக்க எண்ணினார். இதுவரை எவருமே கட்டியிராதவாறு மிக அழகிய கோயில் கட்டுவதன் மூலம் தமது புகழ் பல்லாண்டு காலம் புகழுடன் விளங்கும் என்பது அவருடைய விருப்பம்.
இதற்காக நாடெங்கிலுமிருந்து கைதேர்ந்த சிற்பிகளை வரவழைத்தார். கோயில் கட்டுவதற்கான கற்களையும் பாறைகளையும் கொண்டு வரச் செய்தார்.

சிற்பிகள் வேலையைத் தொடங்கினர். கல்லுளிகளின் ஓசை கேட்கலாயிற்று. கோயில் வேலை துரிதமாக நடைபெற்று வந்தது. மன்னன் நாள்தோறும் கோயில் வேலையை வந்து பார்வையிடுவார். நாளுக்கு நாள் கோயில் கட்டும் வேலை வளர்ச்சி பெறுவது கண்டு உள்ளம் பூரிப்படைந்தான்.

பல நாட்களுக்குப் பின்னர் ஒரு வழியாகக் கோயில் கட்டி முடிந்தது. அழகிய கோபுரமும் கோபுரத்தில் உள்ள சிற்பங்களும் பார்ப்பவர் உள்ளத்தைப் பரவசமடையச் செய்யும்படியாக விளங்கின. மன்னன் இதனைக் கண்டு பூரிப்படைந்தான். கோயில் பணி பூர்த்தியானதும் மிகப் பெரிய சலவைக்கல் ஒன்றில் கோயிலைக் கட்டிய தனது பெயரைப் பொன்னால் பொறிக்கச் சொன்னான். அதனைக் கோபுர வாசற்படியில் எல்லோர் கண்களிலும் படும்படியாகப் பதித்து வைக்கச் சொன்னான்.

அன்று இரவு அரசன் துõங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு கனவு கண்டான். கனவில் இறைவன் தோன்றினார். மன்னன் கட்டிய கோயிலும் தோன்றியது. அதில் மன்னன் பெயர் பொறிக்கப் பெற்ற சலவைக் கல்லும் இருந்தது.

இறைவன் நேரே மன்னன் பெயர் பொறிக்கப்பட்டிருந்த சலவைக் கல்லின் அருகே சென்றார். மன்னன் பெயரை அழித்துவிட்டு வேறு யாரோ ஒரு பெண்மணியின் பெயரை எழுதிவிட்டுச் சென்றார்.

மன்னன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். நேரே கோயிலுக்குச் சென்றான். சலவைக் கல்லைப் பார்த்தான். அவனுக்குத் துõக்கிவாரிப் போட்டது. ஆம், அவன் பெயர் அழிக்கப்பட்டு யாரோ ஊர் பேர் தெரியாத ஒரு பெண்மணியின் பெயர் அதில் பொறிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட அரசனுக்கு ஒருபுறம் அவமானமாகவும் மறுபுறம் வேதனையாகவும் இருந்தது. “இவ்வளவு பாடுபட்டுப் பெரும் பொருள் செலவு செய்து இந்தக் கோயிலைக் கட்டினேன். முடிவில் என்னுடைய பெயர் பொறிக்கப்படாமல் வேறு யாரோ ஒரு பெண்மணியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறதே!’ என்று வேதனையடைந்தான். காவலர்களை அனுப்பி அந்தச் சலவைக் கல்லில் பெயர் பொறித்துள்ள பெண்மணியை எங்கிருந்தாலும் தேடி அழைத்து வருமாறு கட்டளையிட்டான்.

காவலர்களும் நகர் பூராவும் சுற்றித் திரிந்து கடைசியில் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள ஒரு குடிசையில் தன்னந்தனியாக வசித்து வந்த ஒரு மூதாட்டியை அழைத்து வந்தனர். அவள் பெயர் தான் அந்தச் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டிருந்தது.

அந்த மூதாட்டியைப் பார்த்த அரசன், “”அந்தச் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் உங்களுடையதுதானா?” என்று கேட்டான்.

கிழவி கண்களை நன்கு துடைத்துக் கொண்டு சலவைக்கல்லைப் பார்த்தாள். பிறகு, “”ஆம் அரசே அது என்னுடைய பெயர் தான்… தவறுதலாகப் பொறிக்கப் பட்டுவிட்டது போல் இருக்கிறது!”

“”இல்லை அம்மா, என் பெயர் தான் முதலில் அந்தச் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டது. இறைவனே வந்து என் பெயரை அழித்துவிட்டுத் தங்கள் பெயரை இதில் பொறித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அதன் காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை,” என்றான் அரசன்.

“”நான் இந்தப்பக்கம் வந்தது கூட இல்லை… அப்படியிருக்க இதில் என் பெயர் ஏன் பொறிக்கப்பட்டிருக்கிறது?” என்று வியப்புடன் கேட்டாள் கிழவி.

“”தாயே, இந்தக் கோயில் பணியில் நீங்கள் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இறைவன் தங்கள் பெயரை இதில் பொறித்திருக்கமாட்டார். தாங்கள் செய்த தொண்டு என்னவென்று கூறுங்கள்!” என்றான் அரசன்.

நெடுநேரம் யோசனை செய்து பார்த்த கிழவி, “”மன்னா! இந்தக் கோயில் பணிக்காக நான் ஒன்றும் செய்யவில்லை ஆனால், ஒன்று மட்டும் செய்திருக்கிறேன். இந்தக் கோயில் கட்டுவதற்கான கற்கள் மரங்கள் முதலியவற்றை ஏற்றிவரும் வண்டிகள் நாள்தோறும் என் வீட்டுப் பக்கமாகத் தான் வரும். அந்த சமயத்தில் வண்டியோட்டிகளுக்குத் தாகந்தீரத் தண்ணீர் கொடுப்பேன்; மோர் கொடுப்பேன். குதிரைகளுக்குச் சிறிது புற்களை கொடுத்து தண்ணீர் காட்டுவேன். அவ்வளவுதான் நான் செய்தது,” என்றாள் கிழவி.

“”தாயே! நான் வெறும் புகழுக்காக இந்தக் கோயிலைக் கட்டினேன். தாங்களோ புகழை விரும்பாமல் தொண்டு செய்தீர்கள். எனவே, தான் என் பெயரை அழித்துவிட்டு இறைவன் தங்கள் பெயரைப் பொறித்துள்ளார். தன்னலமற்ற தங்கள் தொண்டினை இந்தக் கோயிலில் உள்ள சலவைக்கல் என்றென்றும் எடுத்துக் காட்டும். வாழ்க தங்கள் புகழ்!” என்று கூறிய மன்னன், அந்தக் கிழவிக்கு நிறைய பொருள் பரிசாகக் கொடுத்து அனுப்பினான்.

சிறுவர் கதைகள் – புத்திசாலி பெலிக்ஸ்
சிறுவர் கதைகள் – புத்திசாலி பெலிக்ஸ்

ஒரு ஊரிலே ஏழைத் தாய் ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் மிகவும் அன்பானவள். அவளுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவனது பெயர் பெலிக்ஸ். அம்மாவைப் போலவே அன்பான குணங்கள் நிறைந்தவன். ஆனால், நல்ல பலசாலி. நாளுக்கு நாள் பலம் மிக்கவனாக அவன் வளர்ந்து வந்தான்.

அந்த ஊர் அரசன் மிகவும் கர்வம் பிடித்தவன்; இரக்கமில்லாதவன். ஏழைகளைத் துன்புறுத்துவதில் இன்பங் காண்பவன்.

எல்லாவிதமான போர் முறைகளையும் கற்றுத் தேர்ந்து கொண்டான். அங்கிருந்த எல்லா வீரர்களையும் அவன் சண்டையிட்டுத் தோற்கடித்தான். அதனால் அங்குள்ள மக்கள் எல்லாரும் அவனுக்கு “மகாவீரன்’ என்ற பட்டத்தைச் சூட்டினர். மகாவீரன் பெலிக்ஸ் தன்னுடைய பலத்தையும் ஆற்றலையும் தவறான விஷயங்களுக்காக ஒரு போதும் பயன்படுத்தவில்லை. மக்களின் நன்மைக்காகவே தன் வீரத்தை பயன்படுத்தி வந்தான். கொடிய காட்டு மிருகங்கள் அந்த ஊரின் வயல்களுக்குள் புகுந்து நாசஞ் செய்த போது அவன் அவற்றை வேட்டையாடிக் கொன்றான். இதனால் மக்கள் அவன் மீது மேலும் அன்பு கொண்டனர்.

இவனது வீரச்செயல் அரசனின் காதுகளில் வீழ்ந்தது. அரசனுக்கு அவன் மீது வெறுப்பு ஏற்பட்டது. இப்படியே இவனது புகழை வளரவிட்டால் தனக்கும் ஆபத்து ஏற்படும் என்று எண்ணினான். எனவே, பெலிக்ஸ்சை எப்படியும் அழித்துவிட நினைத்தான் அரசன்.
பெலிக்ஸ்சை எப்படி அழிப்பது என்று அவன் யோசித்தான். பெலிக்ஸ்சை போன்ற பலசாலியோடு மோதுவதற்கு யாரும் முன்வர மறுத்துவிட்டனர். அரசனுக்கு இதனால் மிகுந்த ஏமாற்றமாகி விட்டது.

தந்திரத்தாலும், வஞ்சனையாலுந்தான் இவனை வெற்றி கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு அரசன் வந்தான்.

பெலிக்ஸை அரசன் கொல்ல நினைத்த விஷயம் அவனுக்கு தெரிய வந்து கொஞ்சமும் தாமதியாது அவன் தன்னுடைய தாயையும் அழைத்துக் கொண்டு மாயமாக அங்கிருந்து மறைந்து விட்டான். அங்குள்ள தன் பிரியமான தோழர்களான சின்னஞ்சிறு குழந்தைகளை விட்டுப் பிரிந்து போவது தான் பெலிக்ஸ்க்கு மிகவும் கவலையை அளித்தது.

ஒரு நாள்—
அந்த ஊருக்கு ஒரு பூதம் வந்தது. அந்த பூதம் மிகவும் பிரமாண்டமானதாயிருந்தது. அது மூச்சுவிட்டால் புகை புஸ்புஸ்ஸென்று கிளம்பிற்று. வாயைத் திறந்தாலோ நெருப்புக் கக்கிற்று. பெரிய முட்கள் நிறைந்த பனைமரம் போல அதன் வால் நீண்டிருந்தது. தனது அச்சமூட்டும் வாலினால் அது மிருகங்களையும் சுழற்றிப் பிடித்து அடித்துக் கொன்றது.
இதனால் ஊர் மக்கள் வெளியே வர அஞ்சினர். வீட்டுக்குள்ளேயே அடைந்து கொண்டனர்.

அவர்கள் வயலுக்குப் போகாததால் பயிர் செய்ய முடியவில்லை. இதனால் அந்த ஊரில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. பெலிக்ஸ் ஒருவனாலேயே அந்த விலங்குப் பூதத்தைக் கொல்ல முடியும் என நினைத்த அரசன் அவனைத் தேடிக் கண்டுபிடிக்க ஒற்றர்களை எல்லாத் திசைகளுக்கும் அனுப்பி வைத்தான். அவர்களும் பெலிக்ஸ் இருக்குமிடத்தை அறிந்து கொண்டனர். அரசனுக்குச் செய்தியை உடனே அறியப்படுத்தினர்.

உடனே அரசன், பெலிக்ஸ்சை தனது அரண்மனைக்கு இழுத்து வரும்படி கட்டளையிட்டான். படை வீரர்கள் அவனைக் கைது செய்ய முயன்றனர். பெலிக்ஸ் அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு திசையில் வீசி எறிந்தான். படை வீரர்கள் எதுவும் செய்ய முடியாமல் அங்கிருந்து திரும்பி ஓடிப் போய் அரசனிடம் நடந்தவற்றைக் கூறினர்.
அரண்மனையில் எல்லாரும் ஒன்றாகக் கூடி யோசித்தனர். கடைசியில் பெலிக்ஸ்சிடம், விலங்கு பூதத்திடம் இருந்து தங்களைக் காப்பாற்றும்படி கேட்க குழந்தைகளை அனுப்பி வைப்பதென்று முடிவாயிற்று. அப்படியே அவன் இருந்த வீட்டிற்கு குழந்தைகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தாங்கள் பூதத்திற்குப் பயந்து வாழ்வதை குழந்தைகள் பயத்தோடு அழுதபடியே கூறியதைக் கேட்க பெலிக்ஸ் மிகவும் இரக்கம் கொண்டான். அந்தக் குழந்தைகளின் கண்ணீரை அவன் துடைத்து அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை சொன்னான். விலங்குப் பூதத்தோடு தான் சண்டையிட்டு அதை வெல்வதாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்தான்.
பின்னர் அவன் பனிரெண்டு பீப்பாய் நிறையத் தாரையும், பனிரெண்டு வண்டியில் வைக்கோலையும் சேகரித்தான். பெரியதொரு தண்டாயுதத்தையும் எடுத்துக் கொண்டான். பூதத்தின் குகை வாசலிலே இவற்றோடு போய் நின்ற அவன், பூதத்தை தன்னோடு சண்டைக்கு வரும்படி சவால் விட்டான்.

பூதம் ஆவென்று வாயைப் பிளந்து சீறியபடி அவனைக் கடிக்க வந்தது. உடனே கொதிக்க வைத்த தார்க் குழம்பை அதன் வாயினுள்ளே ஊற்றினான். அந்தத் திரவம் பூதத்தின் பற்களையும் வாயையும் கெட்டியாகப் பிடித்து, அது வாயைத் திறக்காமல் செய்துவிட்டது. தனது கையில் தண்டாயுதத்தை எடுத்து அதன் முகம், உடலெங்கும் ஓங்கி அடிக்கத் தொடங்கினான். ஏதும் செய்ய முடியாத பூதம் தனக்கு இரக்கம் காட்டும்படி மன்றாடியது. தீமைக்கு ஒருபோதும் இரக்கம் காண்பிக்கக் கூடாது என்று எண்ணினான் பெலிக்ஸ். பெரிய ஏரை அந்த பூதத்தின் மேல் பூட்டி, நகரத்தின் வயல் முழுவதையும் நன்றாக உழுது முடித்தான் பெலிக்ஸ்.

இவ்வளவு நாளும் வீட்டுக்குள் அடைந்து கிடந்த மக்கள், வெளியே வந்தனர். பெலிக்ஸ்சை வாழ்த்தினர். ஆடிப்பாடி மகிழ்ந்தனர். குழந்தைகள் பெலிக்ஸ்சை சுற்றி நின்று மகிழ்ந்தனர்.
பிறகு பூதத்தை மன்னித்து அதை அந்த ஊரை விட்டே போய்விடும்படி கூறினான்.

பூதமும் அங்கிருந்து போய்விட்டது. இவ்வளவு காலமும் கொடியவனாக நடந்து வந்த அரசன் தனது குணத்தை மாற்றிக் கொண்டான். பெலிக்ஸை மிகவும் போற்றினான். மீண்டும் அவனையும் அவனது தாயாரையும் தனது ஊருக்கே வரச் செய்தான். பெலிக்ஸை அரசன் தனது படைத் தளபதியாக நியமித்து ஆனந்தமாக வாழ்ந்து வரலானான்.

சிறுவர் கதைகள் – துணிச்சலான சிறுவன்

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது பழமொழி.

சின்ன வயதிலேயே அந்தச் சிறுவன் மிகவும் துரு துருவென்று இருப்பான்.ஒருநாள் அவனும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு மரத்திலே ஏறி, மரக்கிளையில் இருந்து தலை கீழாகத் தொங்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

விபரீதமான இந்த விளையாட்டைப் பார்த்த அந்தப் பையனுடைய தாத்தா, பையன்கள் கீழே விழுந்தால் உயிருக்கு ஆபத்தே என்று நினைத்தார். உடனே அனைவரும் கீழிறங்கி வாருங்கள் என்று சப்தம் போட்டார்.

அவர்கள் வந்ததும், ” இந்த மரத்திலே ஒரு பேய் இருக்கிறது. இப்படி மரத்தில் ஏறி விளையாடினால் அது உங்கள் அடித்துக் கொன்றுவிடும். அதனால் மரத்தில் ஏறாமல் கீழேயே விளையாடுங்கள்” என்று பயமுறுத்தினார்.

இதைக் கேட்டு எல்லா சிறுவர்களும் பயந்துவிட்டார்கள். நமது சுட்டிப் பையனும் சரி சரி என்று தலையை ஆட்டினான். ஆனால், அவர் அந்தப் பக்கம் போனதும், மறுபடியும் மரத்திலே ஏற ஆரம்பித்தான்.

அவனது நண்பர்கள், “ஐயையோ…ஏறாதே….பேய் உன்னை அடித்துவிடும்” என்று கத்தினார்கள். ” இந்த மரத்திலே பேய் இருக்கிறதாக தாத்தா சொன்னார்…சரிதான். ஆனாலப்படிப் பேய் இருந்திருந்தால் இன்னேரத்துக்கு அது நம்மை அடித்துக் கொன்றிருக்கும். தாத்தா சும்மா நம்மைப் பயமுறுத்தியுள்ளார்.” என்று சிறுவர்களுக்குப் பதில் கூறினான்.

அதற்கு மற்ற சிறுவர்கள், ” அது சரி…உன் தாத்தா சொன்னபோது…சரி என்று தலையை ஆட்டினாயே…அது ஏன்?” என்று கேட்டதற்கு, “எதிர்த்துப் பேசினால் அவர் மனது கஷ்டப்படுமே. அதனால் தான் அவரை சமாதானப்படுத்த சரி என்றேன்”.

குழந்தைகளா, மரத்தில் ஏறிய அந்தப் பையன் யார் தெரியுமா?…..

எண்ணற்ற இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் சுவாமி விவேகானந்தர்தான், அந்தச் சிறுவன். அதோ படத்தில் இருக்கிறார் தானே, அவரே தான். அவரைப் பற்றி நிறைய கதைகல் இருக்கின்றன, விரைவில் சொல்கிறேன்.

சிறுவர் கதைகள் – குரங்கும் ஒற்றுமையற்ற பூனைகளும்

ஒரு நாள் இரண்டு பூனைகள் சேர்ந்து ஒரு வீட்டிலிருந்து ஒரு அப்பத்தை எடுத்தன. அந்த அப்பத்தைச் சாப்பிடுவதற்காக இரண்டாகப் பிரிக்கும் போது ஒரு பூனை, அப்பம் சரி சமமாகப் பிரிக்கப் பட வேண்டும் என்று மற்றப் பூனையுடன் சண்டையிட ஆரம்பித்தது.

இரண்டு பூனைகளும் சண்டை பிடித்துக் களைத்துப் போயின. அதனால் தொடர்ந்து சண்டை பிடிக்காமல், யாரிடமாவது சென்று அப்பத்தைப் பங்கிடுவோம் என்று தீர்மானித்தன.

அதனால் இரண்டு பூனைகளும், அப்பத்தைப் பங்கு பிரிப்பதற்காக ஒரு குரங்கிடம் சென்றன. குரங்கும், அப்பத்தைச் சமமாகப் பிரிக்க ஒரு தராசை எடுத்து வந்தது.

அப்பத்தை இரண்டாக வெட்டித் தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு துண்டை வைத்து நிறுத்துப் பார்த்தது. தராசின் ஒரு தட்டு கீழே தாழ்ந்தது. அப்பொழுது குரங்கு, அந்தத் தட்டில் இருந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்துத் தான் சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது. இப்பொழுது, மற்றத் தட்டுக் கீழே தாழ்ந்தது. அந்தத் தட்டிலிருந்த அப்பத்தையும் குரங்கு எடுத்துக் கடித்து விட்டுத் தட்டில் போட்டது.

இப்படியே தட்டுகள் மாறி மாறித் தாழ்ந்தன. குரங்கும் மாறி மாறி அப்பத் துண்டுகளைக் கடித்துக் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தது.

இப்படியே அப்பம் குறைவதை பார்த்த பூனைகள், தங்கள் தவறை உணர்ந்து பங்கு பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று மீதமுள்ள அப்பத்தைத் தரும் படி கேட்டன. ஆனால் குரங்கு, மீதமுள்ள அப்பம், தான் இது வரை செய்த வேலைக்குக் கூலி, என்று சொல்லி விட்டு அதையும் வாயில் போட்டுக் கொண்டது.

ஒற்றுமையற்ற பூனைகள் வெட்கத்துடனும் வேதனையுடனும் திரும்பிச் சென்றன.

குழந்தைகளே! ஒரு பூனையாவது கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் இத்தனை நஷ்டம் ஏற்பட்டிருக்குமா? விட்டுக் கொடுத்தல் பிறரிடம் நமக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும், இறைவனுக்கும் அதுவே பிடிக்கும்.

சிறுவர் கதைகள் – குருவின் நல்ல உள்ளம்
சிறுவர் கதைகள் – குருவின் நல்ல உள்ளம்

ஒருநாள், முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர் சிறந்த ஞானி. எனவே, மக்கள் அவரை மிகவும் மதித்தனர். அவர் சீடர்கள் அவரைத் தொடர்ந்து சென்றனர்.

ஒரு பணக்கார பெண்மணியின் வீட்டருகே அவர்கள் நடந்தனர். அப்போது ஒரு சிறிய பெண் குழந்தை அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தது. குழந்தைகள் மேல் மிகுந்த அன்புடையவர் ஞானி. அவர் குழந்தையை அன்புடன் நோக்கினார்.

குழந்தை ஒரு தட்டு நிரம்ப ரோஜா மலர்களைக் கொண்டு வந்து சித்தானந்தர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.

மலர்கள், மணம் தரும் பொருட்கள், தைலங்கள் என்றால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார் என்பது சீடர்களுக்குத் தெரியும். ஒரு ரோஜா மலரை மட்டும் எடுத்துக் கொண்டு தட்டை சீடர்களிடம் நீட்டினார். சீடர்களுக்கு சொல்லவா வேண்டும். தலைக்கு இரண்டு மூன்றாக அவர்கள் மலரை அள்ளிக் கொண்டனர்.

மலர்களை அர்பணித்த குழந்தை மகிழ்ச்சியுடன் இல்லம் சென்றது. சீடர்கள் புடை சூழ சித்தானந்தரின் உலா தொடங்கியது.

ஒரு வயதான மூதாட்டி ஞானியை தன் வீட்டுக்குள் வரவேற்றாள். சீடர்கள் உள்ளே சென்று அமர்ந்தனர். ஒரு பணியாள் ஆப்பிள் பழத்தட்டை அவர் முன் வைத்தார். ஒரு பழத்தை எடுத்துச் சுவைத்தார் சித்தானந்தர். பழம் மிகவும் சுவையாக இருந்தது. அவைகளை எடுத்து தன் சீடர்களுக்கு வழங்கினார்.

சீடர்கள் பழங்களை சுவைத்து உண்டனர். ஞானியைத் தொடர்ந்து செல்வதால் அவர்களுக்கு அவ்வப்போது நல்ல சுவையான பொருட்கள் கிடைத்து வந்தன. எனவே, இந்த சந்தர்ப்பங்களை சீடர்களில் எவரும் தவறவிடுவதில்லை.

செல்வந்தர்கள் வாழும் வீதிகளை எல்லாம் அவர்கள் கடந்து சென்றனர். இப்போது வசதி குறைந்தவர்கள் இடம்; நகரின் ஒதுக்குப் புறமான பகுதி.

ஏழை விதவைப் பெண்ணொருத்தி அங்கே நின்று கொண்டிருந்தாள். அவள் ஞானியை தன் சிறிய வீட்டுக்கு வருமாறு அழைத்தாள். அவளது அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அவரும் சீடர்களும் உள்ளே சென்று அமர்ந்தனர்.

“”ஐயனே, நீங்கள் இதைச் சாப்பிட வேண்டும்,” என்று கூறி ஒரு தட்டை நீட்டினாள்.

தட்டைப் பெற்றுக் கொண்ட ஞானி அதில் திராட்சைப் பழங்கள் இருந்ததை பார்த் தார்.
ஒரு பழத்தை எடுத்து வாயில் போட்டார். சுவைத்து உண்டார். சீடர்கள் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

மீண்டும் ஒரு பழத்தைப் பிய்த்து வாயில் போட்டு மென்று சுவைத்தார். இப்படியாக எல்லா பழத்தையும் தான் ஒருவராகவே தின்று தீர்த்தார். தங்களுக்கு அப்பழத்தை வழங்காமல் தானே உண்டதைக் கண்ட சீடர்கள் வியப்படைந்தனர்.

திராட்சைப் பழம் வழங்கிய ஏழைக் கைம்பெண்ணுக்கு நன்றி கூறினார் ஞானி. பின்னர் வெளியே வந்து நடக்கத் தொடங்கினார். சீடர்கள் அவரோடு நடந்தனர்.

சீடர்கள் முகத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. “இதுவரை எல்லா பொருட்களையும், உணவையும் பகிர்ந்து கொண்ட குரு திராட்சைப் பழங்களை மட்டும் தன்னந்தனியாய்த் தானே உண்டது ஏன்?’ எல்லாருடைய உள்ளத்திலும் இக்கேள்வி எழுந்து நின்றது.
சீடர் ஒருவர் வாய் திறந்து இக்கேள்வியைக் கேட்டே விட்டார். “”நீங்கள் ஏன் தனியாகச் சாப்பிட்டீர்கள்? எங்களுக்கு ஒரு பழங்கூட தரவில்லையே… ஏன்?”

“”அந்த திராட்சைப் பழம் மிகவும் புளிப்பாய் இருந்தது. எனவே, நான் ஒருவனாக அவற்றைத் தின்றேன்,” என்றார் குரு.

“”உங்களுடைய சுகத்திலும் துக்கத்திலும் நாங்கள் பங்கு கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க, சுவையற்றதை நீங்கள் தனியாக உண்ண வேண்டும்; சுவை மிகுந்ததை மட்டும் எங்களோடு பகிர்ந்துண்ண வேண்டுமா? இது நீதியாகுமா?”

“”என்னுடைய சுகத்திலும் துக்கத்திலும் நீங்கள் பங்கு கொள்ள விரும்புவது உண்மையாக இருக்கலாம். ஆனால், இதில் ஓர் ஏழைக் கைம்பெண் இடையே இருக்கிறாள். அவள் தந்த திராட்சைப் பழங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டால், “இந்தப் பழம் புளிக்கிறது’ என்று நீங்கள் சாப்பிடும் போதே சொல்லி விமர்சனம் செய்து அந்தப் பெண்ணின் மனதைப் புண்படுத்திவிடுவீர்கள். அவளது மனது படாத பாடுபட்டு நொந்து போய்விடும். அதனால் தான் திராட்சைப் பழங்களை உங்களுக்குத் தரவில்லை,” என்று சொன்னார் முனிவர்.

எவருடைய மனதையும் புண்படுத்தக் கூடாது என்ற கருத்தில் தங்கள் குரு எத்தனை உண்மையாக இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ந்தனர் சீடர்கள்.

சிறுவர் கதைகள் – பேயால் வந்த வாழ்வு
சிறுவர் கதைகள் – பேயால் வந்த வாழ்வு

முன்னொரு காலத்தில் மதின் என்ற இளைஞன் பொன்னேரி என்ற சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தான். இவனது பெற்றோர் இறந்துவிட்டனர். இனி அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல் பக்கத்திலுள்ள ஊருக்கு வேலை தேடிச் சென்றான். உச்சி வெயில் அதிகமானது.

அப்போது ஆலமரத்தடியில் படுத்து துõங்கினான். அவனை யாரோ தட்டி எழுப்புவது போல் இருந்தது. துõக்கம் கலைந்து விழித்த போது ஒரு பேய் மரத்தின் கிளையில் உட்கார்ந்து கொண்டிருந்தது.
அதைப் பார்த்ததும் அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது. பேய்… பேய்… என்று அலறினான்.

“”தம்பி பயப்படாதே… நானும் உன்னைப் போல் மனிதன் தான். தற்சமயம் பேயாக இருக்கிறேன்.”

மதினுக்கு கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான்.

“”உன் பெயரென்ன தம்பி?”

“”மதின்!”

“”எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?”

“”வேலைத் தேடி நகரத்திற்குச் சென்று கொண்டிருக்கிறேன்.”

“”நானும் உன்னைப் போல் இருந்தவன் தான். நுõறு வருடங்களுக்கு முன் வாழ்ந்து வந்தேன். ஒரு நாள் இந்த காட்டிற்கு வந்தேன். இங்கே தவம் செய்த முனிவரைப் பார்த்து கேலியாக சிரித்தேன். ஆத்திரம் அடைந்த முனிவர் என்னை பேயாகும்படி சபித்துவிட்டார்.

“”பிறகு நான் அவரைப் பார்த்து மன்றாடினேன்.

“”ஐயா, தயவு செய்து இந்தச் சாபத்திற்கு ஏதேனும் விமோசனம் சொல்லுங்கள். இப்படி மனித பேயாய் நான் எத்தனை நாட்கள் திரிவது?” என்று கேட்டான்.

“”சரி, நீ கெஞ்சிக் கேட்டுக் கொள்வதால் உனக்கு விமோசனம் தருகிறேன். உன் கதையை எந்த மனிதன் பொறுமையோடு கேட்கிறானோ அன்று நீ மீண்டும் மனிதனாவாய். பிறகு விண்ணுலகுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இம்மனிதப் பிறவியிலிருந்து விடுதலை அடைவாய்…” என்றார்.

“”பல காலம் நான் மற்றவர்களிடம் என் கதையை சொல்ல முயன்றேன். அவர்கள் என்னைப் பார்த்ததும் ஓடிவிடுகிறார்கள்” என்று கூறிய பேய் மறைந்து போய் அழகான வாலிபன் தோன்றினான். சிறிது நேரத்தில் அவன் மேல் எழுந்து வானத்தை நோக்கிச் சென்றான். என்னை “”எப்போது நினைத்துக் கொண்டாலும் உனக்கு நல்லதே நடக்கும். நீ எடுத்த காரியத்திலும் வெற்றி அடைவாய்,” என்ற பேய் மேகத்தின் நடுவில் மறைந்து போனது.

மதினுக்கு எல்லாமே கனவு போல் இருந்தது.

புதிய நகரை அடைந்தான். அங்கே நாடே விழாக்கோலம் கொண்டது. என்ன விஷயம் என்று கேட்டான்.

“”உனக்குத் தெரியாதா? அரசரின் பிறந்த நாள் விழாவை நாளை கொண்டாட இருக்கின்றனர். வாண வேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் எல்லாம் நடக்கும். ஏழைகளுக்கு அன்னதானம் நடக்கும். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் அரண்மனை உபசரிப்பும் கொடுப்பார்கள்,” என்றான்.

சிலம்பம், மல்யுத்தம் என நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அரசரின் சிறப்பு விருந்தினராக விரும்பிய மதின் பேயை மனதில் நினைத்துக் கொண்டான். பேயின் உதவியால் எல்லா போட்டிகளிலும் வென்றான்.

அவனுக்கு ஓர் அறை கொடுக்கப்பட்டது. அரண்மனை உணவும் வழங்கப்பட்டது. ஒரு வாரம் தங்கி விருந்துண்டு தன் அறைக்குச் சென்றான் மதின்.

அங்கிருந்த அழகிய மஞ்சத்தில் படுத்தவுடன் உறக்கம் வந்துவிட்டது. நடு இரவில் விழித்த மதின், தன் அறையில் சிறிது நேரம் உலாவினான். அப்போது சுவற்றில் காட்டெருமையின் கொம்பு பதிக்கப்பட்டுள்ளதைக் கண்டான். அதைப் பிடித்துப் பார்த்தபோது “கிர்ர்…’ என்ற சப்தம் கேட்டது.

அவனுக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது. அதைப் பிடித்துத் திருகிய போது, தரையில் ஒரு சுரங்க வழி ஏற்பட்டது. ஒரு தீபத்தைக் கையில் எடுத்துக் கொண்டு படிக்கட்டுகளில் இறங்கினான்.

கீழே பெரிய அறை ஒன்று இருந்தது. எங்கு பார்த்தாலும் போர் ஆயுதங்களும் முத்து மாலைகளும் தங்க மாலைகளும் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தன.

துõரத்தில் யார் நின்று கொண்டிருப்பது? அமைச்சர் ராஜசேகர்… இங்கு என்ன செய்கிறான்? உற்றுப் பார்த்தான். நகைகள், பணத்தை திருடி பையில் போட்டுக் கொண்டிருந்தான்.

அங்கிருந்த வாளை உருவி, அவனை வெட்டச் சென்றான் மதின்.

அதற்குள் ரகசிய வழியில் தப்பி விட்டான் அமைச்சன்.
பிறகு மதின் தன் இருப்பிடத்திற்குச் சென்று காட்டெருமைக் கொம்பைத் திருகி தரையை முன்பு போல மூடச் செய்தான்.

இதை எப்படியாவது அரசரிடம் சொல்ல வேண்டும் என்று மனதில் உறுதி செய்து கொண்டான்.

இரவோடு இரவாக அமைச்சரை பற்றி மன்னனிடம் கூறினான்.
பல நாட்களாக பொக்கிஷ அறையில் திருடு போவதை அறிந்திருந்த அரசர், எத்தனையோ காவல் போட்டும் கண்டுபிடிக்க முடியாத ரகசியத்தை மதின் சொன்னதும் மகிழ்ந்தார். உடனே அமைச்சரை கைது செய்ய ஆட்களை அனுப்பினார் மன்னர்.

குடும்பத்துடன் தப்ப இருந்த அமைச்சரை கைது செய்து சிறையில் அடைத்தான் அரசன். அரசனது முன்னோர்கள் வைத்திருந்த இந்த ரகசிய வழி அரசனுக்கே தெரியவில்லை. இதை எப்படியோ அறிந்த அமைச்சன், இத்தனை நாட்களாக ரகசிய வழியில் நுழைந்து நகை திருடிய விஷயம் இப்போது தான் புரிந்தது. மதினை பாராட்டிய மன்னன் அவனையே தன் அமைச்சனாக்கிக் கொண்டான். பேயால் தனக்கு கிடைத்த வாழ்வை எண்ணி மகிழ்ந்தான் மதின்.

சிறுவர் கதைகள் – விவேகமான வெள்ளாடு

உழவர் ஒருவர் வீட்டில் வெள்ளாடும், செம்மறி ஆடும் இருந்தன. அவை இரண்டும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. எங்கே சென்றாலும் ஒன்றாகவே சென்றன.

உழவருக்கு அவை நன்றாகவே உழைத்தன, ஆனாலும் அவன் சரியாக சப்பாடு போடுவதில்லை, ஒரு நாள் தோட்டத்தில் விளையும் சுவையான செடிகளை அவை கடித்து சாப்பிட்டன், அதை கண்டு கோபம் கொண்ட உழவர், ஆத்திரமாக “நீங்கள் இனிமேல் இங்கே இருக்கக் கூடாது. இருந்தால் உங்களைக் கொன்று விடுவேன். எங்காவது போய் விடுங்கள்” என்று விரட்டினார்.

இரண்டு ஆடுகளும் தங்கள் பொருள்களை ஒரு சாக்குப் பையில் போட்டன. அந்தப் பையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டன.

செம்மறி ஆடு வலிமை உள்ளதாக இருந்தது. ஆனால் கோழையாக இருந்தது.
மாறாக வெள்ளாடோ வீரத்துடன் விளங்கியது. ஆனால் வலிமை இல்லாமல் இருந்தது.
சிறிது தூரம் நடந்த இரண்டும் ஒரு வயலை அடைந்தன. அங்கே இறந்து போன ஓநாய் ஒன்றின் தலை கிடந்தது.

அந்த ஓநாயின் தலையை எடுத்துக் கொள். நீதான் வலிமையுடன் இருக்கிறாய், என்றது வெள்ளாடு.

என்னால் முடியாது நீதான் வீரன். நீயே எடு, என்றது செம்மறி ஆடு.

இரண்டும் சேர்ந்து அந்த ஓநாயின் தலையைச் சாக்கிற்குள் போட்டன.

சாக்கைத் தூக்கிக் கொண்டு இரண்டும் நடந்தன. சிறிது தொலைவில் நெருப்பு வெளிச்சத்தை அவை பார்த்தன.

அந்த நெருப்பு எரிகின்ற இடத்திற்குப் போவோம். குளிருக்கு இதமாக இருக்கும். ஓநாய்ளிடம் இருந்தும் நாம் தப்பித்துக் கொள்ளலாம், என்றது வெள்ளாடு.

இரண்டும் நெருப்பு இருந்த இடத்தை நோக்கி நடந்தன. அருகில் சென்றதும் அவை அதிர்ச்சி அடைந்தன.

அங்கே மூன்று ஓநாய்கள் உணவு சமைத்துக் கொண்டிருந்தன.

ஓநாய்கள் தங்களைப் பார்த்து விட்டன. தப்பிக்க வழியில்லை, என்பதை உயர்ந்தன ஆடுகள்.

நண்பர்களே! நீங்கள் நலந்தானே என்று தைரியத்துடன் கேட்டது வெள்ளாடு.

அச்சத்தால் செம்மறி ஆட்டின் கால்கள் நடுங்கின.

நண்பர்களா நாங்களா? எங்கள் உணவு தயார் ஆகட்டும். அதன் பிறகு உங்களைக் கவனிக்கிறோம். எங்கே ஓடிவிடப் போகிறீர்கள்? என்றது ஒரு ஓநாய்.

இவற்றிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தது வெள்ளாடு.

செம்மறி ஆடே! இன்று நாம் கொன்றோமே ஓநாய்கள். அவற்றில் ஒன்றின் தலையை எடுத்து இவர்களிடம் காட்டு. நாம் யார் என்பது புரியும்? என்று உரத்த குரலில் சொன்னது அது.
செம்மறி ஆட்டிற்கு அதன் திட்டம் புரிந்தது. சாக்கிற்குள் கையை விட்டு ஓநாயின் தலையை எடுத்தது.

ஏ! முட்டாள் ஆடே! பெரிய ஓநாயின் தலையை எடுத்துக் காட்டு என்றேன். நீ சிறிய தலையை எடுத்துக் காட்டுகிறாயே, பெரியதை எடு, என்று கத்தியது வெள்ளாடு.

அந்தத் தலையைச் சாக்கிற்குள் போட்டது செம்மறி ஆடு. மீண்டும் அதே தலையை வெளியே எடுத்துக் காட்டியது. கோபம் கொண்டது போல் நடித்தது வெள்ளாடு. இருக்கின்ற ஓநாய்த் தலைகளில் பெரியதை எடு. மீண்டும் நீ சிறிய தலைகளையே எடுத்துக் காட்டுகிறாய். இதைப் போட்டுவிட்டு பெரிய தலையாக எடு, என்று கத்தியது.

அந்தத் தலையைப் போட்டுவிட்டு அதே தலையை மீண்டும் வெளியே எடுத்தது செம்மறி ஆடு.
இதைப் பார்த்த மூன்று ஓநாய்களும் நடுங்கின.

இவை சாதாரண ஆடுகள் அல்ல. நீ அவற்றைக் கேலி செய்திருக்கக் கூடாது. சாக்கிற்குள் இருந்து ஒவ்வொரு ஓநாய்த் தலையாக எடுக்கின்றன, என்றது ஒரு ஓநாய். மூன்றும் சிறிது நேரம் அமைதியாக இருந்தன.

ஆடுகளைப் பார்த்து ஓநாய் ஒன்று, உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, குழம்பு நன்றாகக் கொதிக்கிறது, இன்னும் சிறிது தண்ணீர் ஊற்ற வேண்டும், நான் சென்று தண்ணீர் கொண்டு வருகிறேன், என்று புறப்பட்டது.

சிறிது நேரம் சென்றது. இரண்டாவது ஓநாய், அந்த ஓநாயிற்கு நம் அவசரமே தெரியாது. போய் எவ்வளவு ஆகிறது? நான் சென்று அதை அழைத்துக் கொண்டு தண்ணீருடன் வருகிறேன், என்று புறப்பட்டது.

பரபரப்புடன் இருந்த மூன்றாவது ஓநாய், இருவரும் எங்கே தொலைந்தார்கள்? நான் சென்று அவர்களை அழைத்து வருகிறேன் என்று புறப்பட்டது. தப்பித்தோம் என்ற மகிழ்ச்சியில் ஓட்டம் பிடித்தது.

செம்மறி ஆடே! நம் திட்டம் வெற்றி பெற்று விட்டது. ஓநாய்களிடம் இருந்து தப்பித்து விட்டோம். விரைவாகச் சாப்பிட்டுவிட்டு இங்கிருந்து புறப்படுவோம். உண்மை தெரிந்து மீண்டும் அவை இங்கே வரும், என்றது வெள்ளாடு.

இரண்டும் அங்கிருந்த உணவை வயிறு முட்ட உண்டன. மகிழ்ச்சியுடன் ஏப்பம் விட்டுக் கொண்டே புறப்பட்டன. ஓடிய மூன்று ஓநாய்களும் வழியில் சந்தித்தன.

ஆடுகளுக்குப் பயந்தா நாம் ஓடி வருவது? என்று கேட்டது ஒரு ஓநாய்.

நம்மை அவை ஏமாற்றி இருக்கின்றன. நாமும் ஏமாந்து விட்டோம், என்றது இன்னொரு ஓநாய்.

மூன்றாவது ஓநாய், நாம் உடனே அங்கு செல்வோம், அவற்றைக் கொன்று தின்போம், என்றது. மூன்று ஓநாய்களும் அங்கு வந்தன. உணவை உண்டு விட்டு இரண்டு ஆடுகளும் ஓடி விட்டதை அறிந்தன.

புத்திசாலித்தனத்தால் ஆடுகள் உயிர் தப்பியதை கண்டு ஏமாந்து போன ஓநாய்கள் பற்களை நறநறவென்று கடித்தன. பாவம் அவற்றால் வேறு என்ன செய்ய முடியும்?

உயிர்தப்பிய ஆடுகள் தன் எஜமானனை நினைத்துப் பார்த்தன, அவரிடம் இருந்தவரை உயிருக்கு ஆபத்து ஒன்றும் ஏற்படவில்லை, எனவே அவரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் சேர்ந்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தன, அதே நேரத்தில் ஆடுகளை பிரிந்த உழவர் தன் தவற்றை உணர்ந்து ஆடுகளுக்கு நன்றாக தீனி போடுவது என்று தீர்மானித்து ஆடுகளை தேடி காட்டிற்கு வந்தார், எதிரே வந்த ஆடுகள் ஓடி போய் உழவரிடம் மன்னிப்பு கேட்டது, உழவரும் மன்னிப்பு கேட்டு, ஆடுகளை வீட்டிற்கு அழைத்து வந்து ருசியான இலைகளை கொடுத்தார்.

நீதிக் கதைகள் – சிங்கமும் நரியும்

ஒரு கா‌ட்டி‌ல் பல ‌வில‌ங்குக‌ள் வா‌ழ்‌ந்து வ‌ந்தன. அ‌தி‌ல் ஒரு ‌சி‌ங்கமு‌ம், ந‌ரியு‌ம் வெகு நாளாக உண‌வி‌ன்‌றி அலை‌ந்து ‌தி‌ரி‌ந்து கொ‌‌ண்டிரு‌ந்தன. ஒரு நா‌ள் இர‌ண்டு‌ம் நேரு‌க்கு நே‌ர் ச‌ந்‌தி‌த்து த‌த்தமது ‌நிலைமையை புல‌ம்‌பி‌க் கொ‌ண்டன.

இறு‌தியாக இர‌ண்டு‌ம் சே‌ர்‌ந்து வே‌ட்டையாடுவது எ‌ன்ற முடிவு‌க்கு வ‌ந்தன. அத‌ற்கு ‌சி‌ங்க‌ம் ஒரு ‌தி‌ட்ட‌ம் வகு‌த்து‌க் கொடு‌த்தது. அதாவது, ந‌ரி பலமாக ச‌த்த‌ம் போ‌ட்டு க‌த்த வே‌ண்டு‌ம். அ‌ந்த ச‌த்த‌த்தை‌க் கே‌ட்டது‌ம் கா‌ட்டு ‌வில‌ங்குக‌ள் ‌மிர‌ண்டு அ‌ங்கு‌ம் இ‌ங்கு‌ம் ஓடு‌ம். அ‌ப்படி ஓடு‌ம் ‌மிருக‌ங்களை ‌சி‌ங்க‌ம் அடி‌த்து‌க் கொ‌‌ல்ல வே‌ண்டு‌ம்.

இ‌ந்த யோசனை ந‌ரி‌க்கு ‌மிகவு‌ம் ‌பிடி‌த்‌திரு‌ந்தது. அதனா‌ல் உடனே ஒ‌ப்பு‌க் கொ‌ண்டது. அத‌ன்படி, ந‌ரி தனது பய‌ங்கரமான குர‌லி‌ல் க‌த்த‌த் துவ‌ங்‌கியது. அத‌ன் ‌வி‌சி‌த்‌திரமான ச‌த்த‌த்தை‌க் கே‌ட்ட கா‌ட்டு ‌வில‌ங்குக‌ள் அ‌ங்கு‌ம் இ‌ங்கு‌ம் வேகமாக ஓடின. அ‌‌ந்த சமய‌த்‌தி‌ல் ‌சி‌ங்க‌ம் ‌நி‌ன்‌றிரு‌ந்த ப‌க்க‌ம் வ‌ந்த ‌வில‌ங்குகளை எ‌ல்லா‌ம் ‌சி‌ங்க‌ம் வே‌ட்டையாடி‌க் கொ‌‌ன்றது.

ஒரு க‌ட்ட‌த்‌தி‌ல் ந‌ரி க‌த்துவதை ‌நிறு‌த்தி ‌வி‌ட்டு ‌சி‌ங்க‌த்‌தி‌ன் ப‌க்க‌ம் வ‌ந்தது. அ‌ங்கு வ‌‌ந்தது‌ம் ‌ந‌ரி‌க்கு ஏக‌ப்ப‌ட்ட ச‌ந்தோஷ‌ம். ஏனெ‌னி‌ல் ‌‌நிறைய ‌மிருக‌ங்க‌‌ள் அ‌ங்கு இற‌ந்து ‌கிட‌‌‌ந்தன. அதை‌ப் பா‌ர்‌த்தது‌ம் ந‌ரி, தா‌ன் அகோரமாக‌க் க‌த்‌தியதா‌ல்தா‌ன் இ‌ந்த ‌மிருக‌ங்க‌ள் இற‌ந்து‌வி‌ட்டன எ‌ன்று ‌க‌ர்வ‌ம் கொ‌ண்டது.

சி‌ங்க‌த்‌தி‌ன் அரு‌கி‌ல் வ‌ந்து, எ‌ன்னுடைய வேலையை‌ப் ப‌ற்‌றி எ‌ன்ன ‌நினை‌க்‌கிறா‌ய்.. நா‌ன் க‌த்‌தியே இ‌த்தனை ‌மிருக‌ங்களை கொ‌ன்று‌வி‌ட்டே‌ன் பா‌ர்‌த்தாயா எ‌ன்று க‌ர்வ‌த்துட‌ன் கே‌ட்டது.

அத‌ற்கு ‌சி‌ங்க‌ம்.. ஆமா‌ம்.. உ‌ன் வேலையை‌ப் ப‌ற்‌றி சொ‌ல்ல வே‌ண்டுமா எ‌ன்ன? ‌நீதா‌ன் க‌த்து‌கிறா‌ய் எ‌ன்று தெ‌ரியாம‌ல் இரு‌ந்‌திரு‌ந்தா‌ல் ஒரு வேளை நானு‌ம் ப‌ய‌த்‌திலேயே செத்து‌ப் போ‌‌யிரு‌ப்பே‌ன் எ‌‌ன்று பாரா‌ட்டியது.

 

 

நீதிக் கதைகள் – ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு

ஒரு கோவில் கோபுரத்தில் சில நீல நிறப் புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் வாழ்ந்து வந்தன. நீலப் புறாக்கள் தாம் வெள்ளைப் புறாக்களைவிட அழகாக இருப்பதாக எண்ணி கர்வர்த்துடன் இருந்தன. சிலநாட்களின் பின் அக் கோபுரத்தில் திருத்த வேலகள் ஆரம்பமானது.

அதனால் எல்லாப் புறாக்களுக்கும் கோபுரத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. புறாக்கள் எல்லாம் வேறொரு இடம் தேடி ஒரே திசையில் பறந்து சென்றன.  அவைகள் பறந்து செல்லும் போது ஓரிடத்தில் வெய்யிலில் உலர்வதற்காக பரப்பப்பட்ட நெற்களைக் கண்டன. கண்டதும் அனைத்தும் ஒன்றாக அவ்விடத்திற்கு பறந்து சென்று காயப் போடப்பட்ட நெற்களை தின்று தீர்த்து விட்டு அருகே இருந்த ஒரு பெரிய மரம் ஒன்றில் அமர்ந்தன.

தானியத்தை காய்வதற்காக பரப்பி விட்டு சென்ற வேடன் திரும்பி வந்து பார்த்த பொழுது தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.

நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் வலை ஒன்றைத் தயார் செய்து அந்த இடத்தில் விரித்து தானியங்களையும் போட்டு புறாக்கள் வரும்வரை காத்திருந்தான்.

அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன.

சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் எல்லாப் புறாக்களும் ஒன்றாக இறக்கையை விரித்து பறக்க ஆரம்பித்தது. வலையையும் புறாக்கள் தூக்கி கொண்டு உயரப் பறந்து சென்றன.

இதனைக் கண்ட வேடன், “அய்யய்யோ… புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே…” என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான்.

பறந்து செல்லும் போதே, அதில் இருந்த நீலப் புறாக்கள் கர்வத்தோடு, “எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்… அவ்வளவுதான்” என்று கூறின. உடனே வெள்ளை நிறப் புறாக்களும் தம் பங்குக்கு, “நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது” என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்தன. வீ ண் கர்வத்தினால் சண்டையிட்டுக் கொண்டு பறந்ததினால் அவற்றின் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்தது, அதனால் அவை ஒரு மரக்கிளையில் வலையுடன் சிக்கிக் கொண்டது.

இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக அவற்றின் “ஒற்றுமை நீங்கியதால் அனை வருக்கும் தாழ்வு” என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி” என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை பிடித்து தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.

 

நீதிக் கதைகள் – நரியின் தந்திரம் பாட்டி வடை

ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டு விற்று வந்தாள்.

பாட்டி வடைகளைச் சுட்டு ஒரு தட்டில் எல்லோருக்கும் தெரியும்படி பரப்பி வைத்திருந்தாள். இதனை ஒரு காகம் கண்டது. காகத்திற்கும் வடை மேல் ஆசை வந்தது.

பாட்டி வடைசுடும் கவனத்தில் இருந்தபோது அந்தக் காகம் சந்தற்பத்தை பயன் படுத்தி ஒரு வடையை தூக்கிச் சென்று ஒரு மரத்தின் மீது உட்காந்தது.

இதனைக் ஒரு நரி கண்டது. நரி எப்படியும் அந்த வடையை தந்திரமாக காகத்திடம் இருந்து பெற்றுக் கொள்ள நினைத்தது.

நரி உடனே அந்த மரத்தடிக்குச் சென்று காகத்தைப் பாத்து, நீ என்ன அழகாக இருக்கிறாய்.

உன் சொண்டு தனி அழகு. உனது குரலும் மிகவும் இனிமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். உனது இனிமையான குரலில் ஒரு பாட்டு கேட்க ஆசைப்படுகிறேன் என்று சொன்னது.

மிகவும் அழகான பறவை என்று தன்னை நரி கூறியதால் காகமும் நரியை சந்தோசப் படுத்த எண்ணியது. உடனே காகம் தன் வாயில் வடை இருப்பதை மறந்து தனது இனிமையான குரலில் :”கா” “கா” “கா” என்று கத்தியது.

அப்போது காகத்தின் வாயில் இருந்த வடை கீழே விழுந்து விட்டது. அதனைக் கண்ட நரி தன் தந்திரத்தில் காகம் ஏமாந்து விட்டது என நினைத்துக் கொண்டு வடையை கவ்வி எடுத்துக் கொண்டு பற்றை மறைவில் இருந்து உண்டது.

மற்றவர்களின் தந்திர வார்தையை நம்பி காகம் ஏமந்தது.

நீதிக் கதைகள் – முயலும் சிங்கமும்

சிங்கம் ஒரு காட்டு மிருகம். அதை மிருகங்களின் இராசா என்றும் கூறுவர்.

அது தாவர உணவு உண்ணும், மான், மரை, முயல் போன்ற சாதுவான மிருகங்களை வேட்டையாடி அவற்றின் மாமிசத்தை விரும்பி உண்ணும்.

ஒரு காட்டில் வாழ்ந்து வந்த சிங்கம் ஒவ்வொருநாளும் பல மிருகங்களை வேட்டையாடி தின்று வந்தது.

இதனை கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் வாழ்ந்து வந்தன.

சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொருநாளும் கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி ஆலோசனை செய்தது.

சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்குத் நன்கு தெரியும்.

அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினம் ஒரு மிருகமாக போவதற்கு தீர்மானித்தன.

எல்லா மிருகங்களும் சிங்கத்தின் குகைக்குச் சென்று தாம் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகவும். அதனால் சிங்கராசா இரை தேடி அலையத் தேவையில்லை. நாமே தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வருகின்றோம் என தெரிவித்தன.

அத்துடன் நீங்கள் பல மிருகங்களை ஒரு நாளில் கொன்றால் நாங்கள் எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோ. பின்பு உங்களுக்கு உணவுகிடையாமல் நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவீர்கள் என்றன, இதனை கேட்ட சிங்கராசாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது.

அன்றிலிருந்து ஒவ்வொரு மிருகம் சிங்கத்திற்கு இரையாகச் சென்றது,

ஒருநாள் ஒரு முயலின் முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாகச் சென்றது.

அதனால் சிங்கம் மிகுந்த கோபத்துடன் இருந்தது.

சிங்கம் முயலைப் பார்த்து நீ ஏன் தாமதமாகினாய் என கர்ச்சித்தது.

அதனைக் கேட்ட முயலார் நடுக்கத்துடன் “சுவாமி” நான் வரும் வழியில் வேறொரு பெரிய சிங்கம் என்னை பிடிக்க கலைத்தது. நான் பதுங்கி இருந்துவிட்டு இப்பதான் வாறேன் என்றது.

என்னைவிட பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று இறுமாப்புடன் கேட்டது.

அதற்கு “ஆம் சுவாமி” வாருங்கள் காட்டுகின்றேன் என்று சிங்கத்தை அழைத்துச் சென்று ஒரு கிணற்றைக் காட்டி இதற்குள்தான் அந்த பெரிய சிங்கம் இருந்தது என்று கூறியது.

அதனை நம்பிய சிங்கம் கிணற்றை எட்டிப் பாத்தது. அப்போது சிங்கத்தின் நிழல் (பிம்பம்) வேறொரு சிங்கம் கிணற்றினுள் இருப்பது போல் தெரிந்தது. சிங்கம் அதைப் பார்த்து கர்ச்சித்தது.

பிம்பமும் கர்ச்சித்தது. சிங்கத்திற்க்கு ஆத்திரம் பொங்கியது.

இதோபார் உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என கூறிக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்தது.

சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி மாண்டது.

முயலின் சமயோசித முயற்சியால் மற்றைய மிருகங்களும் காப்பாற்றப்பட்டன.

நீதிக் கதைகள் – முதலையும் குரங்கும்

ஒரு காட்டில் ஒரு குரங்கு வசித்து வந்தது. அந்த காட்டின் நடுப் பகுதியில் ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் கரையில் ஒரு நாவல் மரம் நின்றது. அதில் இருந்த நாவல் பழங்களைத் தின்று குரங்கு உயிர் வாழ்ந்து வந்தது.

அக்காட்டின் ஒரு பகுதில் பெரிய ஆறு ஒன்று ஓடியது. அந்த ஆற்றில் எப்போதுமே நீர் பெருக்கெடுத்து ஓடும். ஆற்றிற்கு மறுபக்கத்தில் இருக்கும் காடு மிகவும் செழிப்பாகக் காணப்பட்டதால் அங்கு போய் பார்க்க வேண்டும் என்று குரங்கிற்கு ஆசை ஏற்பட்டது. ஆனால் குரங்கிற்கு அந்த ஆற்றைக் கடந்து போக பயமாக இருந்தது.

ஒருநாள் ஆற்றில் இருந்த முதலை ஒன்று நாவல் பழம் தின்று கொண்டிருந்த குரங்கைப் பார்த்து ‘நாவல் பழம் மிகவும் ருசியாக உள்ளதா?’ எனக் கேட்டது.

குரங்கும்..”முதலையாரே! உமக்கும் சில நாவல் பழம் பறித்துத் தருகிறேன். சாப்பிட்டுப் பாருங்கள்” என்று நாவல் பழங்கள் சிலவற்றை பறித்து ஆற்றில் வாயைப் பிளந்துக் கொண்டிருந்த முதலையின் வாயில் போட்டது. முதலையும் பழத்தை ருசித்து சாப்பிட்டது. அவற்றைச் சாப்பிட்ட முதலை இந்த சுவையான பழங்களை உண்ணும் முதலையின் ஈரன் மிகவும் ருசியாக இருக்கும் என எண்ணியது. அதனால் முதலை குரங்குடன் நண்பனாகப் பழகி அதன் ஈரலை உண்ண திட்டம் போட்டது

குரங்காரே நீர் எனக்கு நல்லபழங்களை தந்து என் பசியை தீர்த்தீர் உமக்கு நான் ஏதும் உபகாரம் செய்யலாம் என்று யோசிக்கின்றேன் என்று கூறியது. அத்துடன் ஆற்றின் மற்றக் கரையில் நல்ல பழ மரங்கள் பழுத்து தூங்குகின்றன. நீர் அங்கு சென்றால் அப் பழங்களை நீயும் உண்டு எனக்கும் தரலாம் அல்லவா என்றது.

அதற்கு குரங்கு எனக்கும் அக்காட்டைப் பார்க்க வேண்டும் என்று பல நாளாக ஆசை இருக்கு ஆனால் எனக்கு இந்த ஆற்றைக் கடந்து போகதான் பயமாக இருக்கிறது என்றது.

அதனைக் கேட்ட முதலை நான் இருக்கும் போது நீ ஏன் பயப்பட வேண்டும். இப்பவே எனது முதுகில் ஏறி இரு நான் உன்னை அக்கரையில் சேர்த்து விடுகின்றேன் என்றது.

வஞ்ச எண்ணம் கொண்ட முதலையின் அன்பு வார்த்தையை நம்பிய குரங்கும் முதலையின் முதுகின் மீது தாவி ஏறி உட்காந்தது.

தனது ஆசையை நிறைவேற்ற இதுதான் தருணம் என்று எணிய முதலை குரங்கை நடு ஆற்றுக்கு கொண்டு சென்று அங்கே குரங்கின் ஈரலை சாப்பிட இருக்கும் தனது ஆசையைச் குரங்கிற்கு சொன்னது. அப்போது குரங்கு பதட்டமடையாது.

அப்படியா! நீ அதை முதலில் சொல்லவில்லையே என்று கூறி நீரில் நனைந்து ஈரல் பழுதாகி விடும் என எண்ணி தான் தனது ஈரலை எடுத்து மரக்கிளையில் வைத்துவிட்டு வந்துவிட்டதாக கூறி; என்னை திரும்ப மரத்தடிக்கு கொண்டு செல் நான் அதை எடுத்து மாட்டிக் கொண்டு வருகிறேன் என்று சமயோசிதமாக கூறியது.

முதலையும் யோசிக்காது..குரங்கு உண்மை சொல்வதாக எண்ணிக் கொண்டு அதை திரும்ப மரத்திற்கு அழைத்து வந்தது

வேகமாக மரத்தில் ஏறிய குரங்கு..’முட்டாள் முதலையே. ஈரலை உடலிலிருந்து கழட்டி மாட்ட முடியுமா? உன்னை நம்பிய என்னை ஏமாற்றிவிட்டாயே..நியாயமா? என்று கேட்டது.

முதலையும் ஏமாந்து திரும்பியது.

நாமும் யாரையும் உடன் நம்பக்கூடாது. அவர்கள் நல்லவர்களா..கெட்டவர்களா என நட்பு கொள்ளுமுன் பார்க்க வேண்டும்.

நீதிக் கதைகள் – யுக்தியால் தாகம் தீர்த்த காகம்

ஒரு கோடை காலம், பகல் நேரம். கொழுத்தும் வெயில் மக்களையும், பறவைகளையும் வருத்தியது. தாகம் எல்லோருக்கும் ஏற்பட்டது

பறவைகள் தங்கள் தாகத்தைத் தீர்க்க தண்ணீர் இன்றி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தன.

அவற்றில் ஒரு புத்திசாலி காகமும் இருந்தது. அது தண்ணீருக்காக அலையும் போது. ஒரு வீட்டின் வெளியே வாய் குறுகிய குடுவை பாத்திரம் ஒன்றைக் கண்டது.

அங்கே சென்று பார்த்தபோது அப்பாதிரத்தில் கொஞ்சத் தண்ணிர் இருந்ததைக் கண்டு மகிழ்வுற்றது.

உடனே குடுவையின் விளிம்பில் அமர்ந்து, தன் அலகால் தண்ணீரைக் குடிக்கப் பார்த்தது. ஆனால் அதன் அலகிற்கு தண்ணீர் மட்டத்தை எட்ட முடியவில்லை. அதனால் பாத்திரத்தில் இருந்த நீரை காகத்தால் குடிக்க முடியவில்லை.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என காகம் மனம் வருந்தியது. இதைவிட்டால் வேறு இடத்தில் தண்ணீர் கிடக்கவும் மாட்டாது என எண்ணி அதனை எப்படியாவது குடிக்க வேண்டுமென சுற்றுமுற்றும் பார்த்து யோசனை செய்தது. பக்கத்தில் சிறு சிறு கூழாங்கற்கள் கொட்டிக் கிடந்தன.உடனே அதற்கு ஒரு யுக்தித் தோன்றியது. ஒவ்வொரு கூழாங்கற்களாக எடுத்து. அதை அந்தக் குடுவையில் போட்டது.

கூழாங்கற்கள் விழ,விழ..தண்ணீரின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் குடுவையின் வாயருகே தண்ணீர் வந்து விட்டது.

உடன், அந்தக் காகம் தண்ணீரில் தன் அலகை வைத்து. தாகம் தீர தண்ணீர் அருந்தி மகிழ்ந்தது.

எந்தப் பிரச்னையாயினும் அதற்கு ஒரு தீர்வு உண்டு. நமது புத்தியை பயன்படுத்தி,யோசித்து..தீர்வு கண்டால் பிரச்னை தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படும்.

 

நீதிக் கதைகள் – உப்பு வியாபாரியும் கழுதையின் தந்திரமும்

முன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும்.

ஒரு நாள் உப்பு வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.

கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா? அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது.

எனவே, கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை வெறும் சாக்குப் போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை.
கழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.

மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போல செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது.

அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது.

கழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்த வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான். அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான்.

அன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை வியாபாரி. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது.

மூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே! கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.

தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது.

நாமும். நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம் அடையும் நிலை வரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.

 

நீதிக் கதைகள் – பேராசை பெரும் நஷ்டம்

கந்தசாமி என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாது போகவே, தங்களிடம் இருந்த பொருட்களை விற்று சாப்பிட வேண்டி ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல…அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.

இந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி …’இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்…இது இப்படியே நீடித்தால்….வறுமை தாங்காது…நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை’ என வேண்டினான்.

அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க….அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும்…அதை விற்று அன்றடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளைக் சந்தோஷமாக கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.

வாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட …அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழிந்தனர்.

ஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று ‘தினம் தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள்.  இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனப் தோன்றியது.

உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக் கிழித்தான். “ஆ” என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒருமுட்டையுமே இருக்கவில்லை. அதன் வயிறில் மற்றைய வாத்துகள்போல் வெறும் குடலே இருந்தது கண்டு ஏங்கினர்.

தினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது.

தங்கள் பேராசையே பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி இறந்தனர்.

ஆசை அளவுக்கு மிஞ்சினா; அது பேராசை. பேராசை பெரு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தரும்.

பேராசை பெரும் நஷ்டம்

நீதிக் கதைகள் – விட்டுக் கொடுத்து நடந்தால் ஒற்றுமை வளரும், நஸ்டம் ஏற்படாது

ஒரு வீட்டில் இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன….ஆனால் அவைகள் இரண்டும் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன.

ஒரு நாள் அப்பூனைகளுக்கு ஒரு அப்பம் கிடைத்தது. அவை இரண்டும் அதை சாப்பிட முனைந்த போது அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.

அதனால் பூனைகள் இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணி வீட்டிற்கு வெளியே வந்தன. அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.

குரங்கிடம் அப்பத்தை கொடுத்து  அதைச் சமமாக பிரித்துத் தரசம்படி கேட்டன. குரங்கும் மிக மகிழ்வுடன் அதற்கு சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்து, அப்பத்தை இரண்டாக பித்து தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு அப்பத்துண்டை வைத்து நெறுத்தது.

அப்போது ஒரு அப்பத் துண்டு சிறிது பெரிதாக இருந்ததினால் அந்தத் துண்டு இருந்த தட்டு சற்று கீழே பதிந்தது. உடனே அந்தக் குரங்கு அந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது . இப்போது மற்றத் தட்டு கீழே தாழ்ந்தது. அப்போதும் அந்த தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து சிறிது  கடித்து விட்டு மீண்டூம் போட்டது.

இப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ…குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை கடித்துச் சாப்பிட்டது.

அப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என மீத முள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன.

ஆனால் குரங்கோ, மீதமிருந்த அப்பம் ‘நான் இது வரை செய்த வேலைக்கு கூலி’ என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது.

பூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால்…அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம். ஒற்றுமையில்லாததால் நஷ்டம் அடைந்தன.

நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பாக இருந்தால், உள்ளதையும் இழக்காமல் ஒற்றுமையுடனும் இருக்கலாம்.

 

நீதிக் கதைகள் – உருவுகண்டு எள்ளாமை வேண்டும்

உருவத்தில் சிறியவனாக இருப்பதால் அவனை ஏளனம் செய்யக்கூடாது. அவன் வேறு விடையங்களில் வல்லவனாக இருப்பான் என்பதை உண்ர்த்தும் நீதிக்கதை

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது தனது பலத்தாலும், தோற்றத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் வசித்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.
பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திற்கு கிட்டச் செல்வதில்லை. சிங்கத்தைக் கண்டால் பயந்து ஓடிவிடுகின்றன.

ஆனால் ‘ஈ” ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது.  அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..’உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன், நகங்களால் விறாண்டுவேன், நசுக்கிப் பொசிக்கிப் போடுவேன் என்றது.

அதற்கு ஈ யோ நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட மாட்டேன். இன்னும் சொல்லப்போனால்..நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் விறாண்டிக் கொள்ளவும் செய்வேன்” என்றது.

இதைக் கேட்ட சிங்கம் கோபத்துடன் ஏலுமாயின் அதைச் செய் என் சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் முதுகில் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது..அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.

ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க…சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே விறாண்டிக் கொண்டது. இவ்வாறு பலதடவை சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது.

சிங்கத்தினால் ஈயை பிடிக்கவோ நசுக்கவோ முடியவில்லை. அதனால் சிங்கம் தன் இயலாஇயை எணி வெட்கப்பட்டது.

அதன் பின்புதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை இம்சைப் படுத்தி விட்டதே என்று. .

உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது

இதைத்தான் வள்ளுவரும்..

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து

என்றார்.
(பொருள்- உருவத்தால் சிறிதாக இருந்தாலும் அதை கேலி செய்து அலட்சியப் படுத்த்க் கூடாது. பெரிய தேர் ஓடக் காரணமாய் இருப்பது சிறிய அதன் அச்சாணியே)

நீதிக் கதைகள் – செய்யும் செயலில் அவதானம் வேண்டும்

ஒரு ஊரில் ஒரு இளம் பெண் பால் விற்று ஜீவியம் செய்து வந்தாள். அவள் தினமும் தன்னிடம் இருந்த ஒரு பசு மாட்டிலிருந்து பாலைக் கறந்து அதை ஒரு குடத்திலிட்டு தன் தலையில் வைத்து எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்தாள்.  தான் ஏழையாக இருப்பதனாலே இப்படி தினமும் பால் விற்று சீவிக்க வேண்டி உள்ளது என் போன்ற மற்றப் பெண்கலெல்லாம் விதம் விதமாக ஆடை அணிந்து எடுப்பாகச் செல்கிறார்களே என தன்னுள் கவலையுடன் இருந்தாள்.

ஒருநாள் அவள் வழமைபோல் பாலைக் கறந்தெடுத்து குடத்டினுள் விட்டு அதனை விற்பதற்காக தெரு வீதி வழியே சென்று கொண்டிருந்த போது தன் வாழ்க்கைத் தரத்தை எப்படி முன்னேற்றலாம் என கற்பனை செய்தாள்.

இன்று பாலை விற்று வரும் பணத்தில். சில கோழிக் குஞ்சுகள் வாங்குவேன். அவை வளர்ந்து பெரிதானதும்..அவைகளை விற்று வரும் பணத்தில் இரண்டு ஆட்டுக் குட்டிகள் வாங்குவேன்.. அவை வளர்ந்ததும் அவற்றை விற்று இன்னொரு பசு மாடு வாங்குவேன்.. அவற்றைக் கொண்டு ஒரு பெரிய மாட்டுப் பண்ணை வைப்பேன். அதில் வேலை செய்ய பல பெண்களை வேலைக்கு அமர்த்துவேன்.

வருமானம் பெருகவே பலவிதமான ஆடை அணிகளையும் நகைகளையும் வாங்கி அவற்றை அணிந்து கொண்டு மற்றப் பெண்கள் எல்லாம் என்னைப் பார்த்து அதிசயிக்கக் கூடியதாக உல்லாசமாக இப்படி நடப்பேன் என தலையில் பால் குடம் இருந்ததை மறந்து அதைப் பிடித்திருந்த கையை எடுத்து விசுக்கி ஸ்ரையிலாக நடக்க ஆரம்பித்தாள்.

என்ன பரிதாபம் அவள் நடந்த நடையில் தலையில் இருந்த அனைத்து பாலும் கீழே கொட்டியது. குடமும் உடைந்தது

அவளுக்கு அன்றைய பால் வியாபாரம் நஷ்டமடைந்ததுடன்..பால் குடமும் வேறு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்போதுதான் அவள், எந்த ஒரு காரியமும் நடந்து முடிக்கும் முன், அதை எண்ணி திட்டங்கள் போடக் கூடாது என்பதை உணர்ந்தாள்.

எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும்..அதை முதலில் கவனமாக முடிக்க வேண்டும். இடையில் வேறு நினைவுகள் வந்தால் நஷ்டமே

செய்யும் செயலில் அவதானம் வேண்டும். இல்லையேல் பெருநஷ்டம்.

நீதிக் கதைகள் – துஷ்ட்டருக்கு அறிவுரை கூறாக் கூடாது

ஒரு காட்டில் ஒரு நாள் அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றது.

அந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு நனையாது பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டிருந்தது.

மரத்தடியில் குரங்கு நனைந்து நடுங்குவதைப் பார்த்ததும் பறவைக்கு குரங்கு மீது இரக்கம் வந்தது.  மனம் பொறுக்காமல் ‘ குரங்காரே..என்னைப்பாரும்…வெய்யில் மழையிலிருந்து என்னையும் என் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன்.  அதனால் தான் இந்த மழையிலும் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறறோம். நீரும் அப்படி ஒரு பாதுகாப்பான கூடு செய்திருக்கலாமே. கூடு இருந்தால் நீர் இப்படி நனைய மாட்டீர் அல்லவா? என்று புத்தி சொன்னது. இதனைக் கேட்ட குரங்காருக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. உனைவிட நான் எவ்வளவு வலுவானவன். எனக்கு நீ புத்தி சொல்கிறாயா?….

இப்போ உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்’ என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது.

பறவைக்கு அப்போதுதான் புரிந்தது’ அறிவுரைகளைக்கூட…..அதைக்கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்லவேண்டும்  என்று.

துஷ்டனுக்கு நல்லது சொல்லப் போய் தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருந்த கூட்டை இழந்து நனைகின்றோமே என மனம் வருந்தியது.

நாமும்…ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதனை ஏற்று நடப்பாரா என்று புரிந்துகொண்ட பின்னரே அறிவுரை வழங்கவேண்டும்.

 

நீதிக் கதைகள் – பிறரை வஞ்சித்தால் நீயும் வஞ்சிக்கப் படுவாய்

ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி…அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.

ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு…அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.

கொக்கும் …நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது. கொக்கு அதன் நீண்ட அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை…ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே …கொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.

கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது…அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.

நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது

நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..

அதைக் கண்ட கொக்கு ..’நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் …என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்…என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.

தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.

நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.

அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.

நீதிக் கதைகள் – அன்பா, செல்வமா, வெற்றியா சிறந்தது?

ஒரு ஊரில் குமரன் தன் தாய் தந்தையுடன் வசித்துவந்தான். அப்போது அவன் வீடட்டின் முன் மூன்று வயதானவர்கள் வந்து ‘ உள்ளேவரலாமா ‘ என்று கேட்டனர்.

தந்தை ‘வாருங்கள்’ என்றார்.

‘நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது…யாராவது ஒருவர் தான் வரமுடியும்…என் பெயர் பணம்…இவர் பெயர் வெற்றி…இவர் பெயர் அன்பு..எங்கள் மூவரில் ஒருவர் தான் ஒரு வீட்டிற்குள் செல்லமுடியும்…எங்கள் மூவரில் உங்களுக்கு யார் வேண்டுமோ அவரை அழைத்துக் கொள்ளுங்கள்’ என்றார் பணம் எனப்படுபவர்.

குமரனின் தந்தை ‘ வெற்றியை அழைக்கலாம்..நாம் எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றியடையலாம்’ என்றார்.

ஆனால் குமரனோ …’அப்பா பணத்தையே உள்ளே அழைக்கலாம்…நம்மிடம் பணம் சேர்ந்துவிட்டால்…எல்லாவற்றையும்..வெற்றி ..உட்பட …அனைத்தையும் வாங்கலாம்’ என்றான்.

ஆனால் குமரனின் தாயோ ‘வேண்டாம்…அன்பையே அழைக்கலாம்.அன்பு தான் முக்கியம்’ என்றாள்.

பின் மூவரும், ”அன்பு உள்ளே வரட்டும்” என்றனர்.

அன்பு உள்ளே வர, அவரைத் தொடர்ந்து வெற்றியும், பணமும் கூட உள்ளே நுழைந்தனர்.

உடன் குமரனின் அம்மா’அன்பை மட்டும் தானே உள்ளே அழைத்தோம்’ என்றார்.

அன்பு சொன்னார்,’ நீங்கள் பணத்தையோ, வெற்றியையோ அழைத்திருந்தால்..மற்ற இருவரும் வெளியே நின்றிருப்போம்.

ஆனால் அன்பான என்னை வரச் சொன்னதால்.. நான் இருக்கும் இடத்தில் தான் பணமும், வெற்றியும் இருக்கும்..ஆகவே அவர்களும் உள்ளே வந்து விட்டனர்’

அன்பு உள்ளம் இருந்தால்..நம் வாழ்வில் வெற்றியும்,தேவையான வசதிகளும் தானாகவே வந்துவிடும்.

அன்பே சிவம்…அன்பே முக்கியம்.

இதையே வள்ளுவர்..

அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு

அன்பு நெஞ்சத்தின் வழியில் இயங்குவதே உயிருள்ள உடலாகும். இல்லையேல் ,அது வெறும் எலும்புத்தோல் போர்த்திய வெறும் உடலாகும். சுருங்கச் சொன்னால்..அன்பு மனம் கொண்டவர்களே மனிதர்கள் ஆவர்.

நீதிக் கதைகள் – சமயோசித யுக்தியால் உயிர் தப்பிய நாய்

நாய், சிறுத்தை, குரங்கு
ஒரு காட்டில் காட்டுநாய் ஒன்று சுற்றித் திரிந்து கொண்டு இருந்தது. அப்போது ஒரு சிறுத்தைப்புலி தன்னை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்ததை அந்த காட்டுநாய் பார்த்தது.

நாயை பிடித்து தின்ன வேண்டும் என்பதுதான் சிறுத்தைப்புலியின் நோக்கம். எப்படி அதனிடம் இருந்து தப்பி செல்வது என்பது காட்டு நாயின் கவலை.

ஓடிச்செல்வதால் பயனில்லை. ஏனென்றால் எவ்வளவு வேகமாக ஓடினாலும் சிறுத்தைப்புலியின் அளவுக்கு காட்டு நாயால் வேகமாக ஓட முடியாது.

எனவே காட்டு நாய் உடனே மிக வேகமாக யோசிக்க தொடங்கியது. அருகில் சில எலும்புகள் கிடந்தன. அவற்றை பார்த்தும் உடனே அந்த காட்டு நாய்க்கு ஒரு யோசனை பிறந்தது.

சிறுத்தைப்புலியின் பக்கம் தன் முதுகை திருப்பிக்கொண்டு கீழே அமர்ந்து அந்த எலும்புகளை மென்று தின்பதுபோல் கடிக்க ஆரம்பித்தது. சிறுத்தைப்புலி அருகில் வந்து தன் மீது பாய்வதற்கு தயாரானபோது காட்டு நாய் உரத்த குரலில் சொன்னது….

”இப்போது நான் தின்று முடித்த சிறுத்தைப்புலி மிகவும் சுவையாக இருந்தது. அக்கம் பக்கத்தில் வேறு சிறுத்தைப்புலி கிடைக்குமா? என்று தேடிபார்க்க வேண்டும்” என்றது.

இதைக் கேட்டதும் பயந்து போய் சிறுத்தைப்புலி அப்படியே ஸ்தம்பித்து சிலைபோல் நின்று விட்டது.

இந்த காட்டு நாய் சிறுத்தைப்புலிகளையே கொன்று தின்று விடுகிறதே. அப்படியானால் எவ்வளவு பலம் வாய்ந்ததாய் இருக்க வேண்டும். இதனிடம் அகப்படாமல் தப்பி சென்றுவிட வேண்டும் என்று நினைத்து ஓசைப்படாமல் பின்னோக்கி சென்று அந்த சிறுத்தைப்புலி புதருக்குள் மறைந்துவிட்டது.

அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து இருந்த ஒரு குரங்கு நடந்ததை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தது. தனக்கு தெரிந்த தகவலை சிறுத்தைப்புலியுடன் பகிர்ந்து கொண்டு சிறுத்தைப்புலியுடன் பேரம் பேசி தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ளலாம் என்று அந்தக் குரங்கு கருதியது.

எனவே சிறுத்தைப்புலியை பின் தொடர்ந்து அந்தக்குரங்கு வேகமாக ஓடிச்சென்றது. காட்டு நாயும் இதை கவனித்தது. ஏதோ சதி நடக்கிறது என்பதை புரிந்துக்கொண்டது.

குரங்கு, சிறுத்தைப்புலியிடம் சென்று காட்டு நாய், சிறுத்தைப்புலியை எப்படி ஏமாற்றியது என்ற முழு விவரத்தையும் சொன்னது. சிறுத்தைப்புலிக்கு தாங்க முடியாத கோபமும், ஆத்திரமும் வந்தது.

அந்த காட்டு நாய் என்னையே ஏமாற்றலாம் என்று நினைக்கிறதா? அதற்கு மறக்க முடியாத பாடத்தை புகட்டுகிறேன்.

”இந்த காட்டில் யார் யாரை கொன்று தின்பார்கள் என்பதை காட்டுகிறேன்” என்று சொல்லிவிட்டு, “”குரங்கே வா. என் முதுகில் ஏறி உட்கார். 2 பேரும் அந்த காட்டு நாயை பிடிக்கலாம்” என்றது. குரங்கு, சிறுத்தைப்புலியின் முதுகில் ஏறி உட்கார்ந்தது.

இரண்டும் நாயை நோக்கி சென்றன. சிறுத்தையும், குரங்கும் சேர்ந்து வருவதை காட்டு நாய் பார்த்தது. இந்த திருட்டு குரங்கு என்னை இப்படி ஆபத்தில் மாட்டி விட்டதே இப்போது என்ன செய்வது? என்று அந்த காட்டு நாய் யோசித்தது. அப்படி யோசித்ததே தவிர, அதற்காக அந்த காட்டு நாய் பயந்து ஓடவில்லை.

அந்த சிறுத்தையையும், குரங்கையும் பார்க்காத மாதிரி நடித்து அவைகளுக்கு தன் முதுகை காட்டிக்கொண்டு தரையில் அமர்ந்தது. அவை அருகில் நெருங்கியதும் அந்த காட்டு நாய் உரத்த குரலில் சொன்னது.

”அந்த போக்கிரி குரங்கு எங்கேபோய் தொலைந்தது. அதனை நம்பவே முடியாது. நான் இன்னொரு சிறுத்தைப்புலியை சாப்பிடுவதற்கு பிடித்துக்கொண்டுவா என்று சொல்லி அனுப்பி அரை மணிநேரத்துக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் அந்த குரங்கை காணோமே?” என்றது.

காட்டு நாய் சொன்னதை கேட்ட சிறுத்தைப்புலி தன் கோபம் முழுவதையும் குரங்கின் மீது திருப்பியது. அதனை கடித்துக் குதறி கொன்று தின்றுவிட்டது.

நீதி: வாழ்க்கையில் பல பிரச்சினைகள் வரலாம். ஆபத்துக்கள் வரலாம். பிரச்சினைகளை நேருக்கு நேர் சந்தியுங்கள். வெல்லலாம்

நீதிக் கதைகள் – காகமும் மகாராணியின் நெக்கிளேசும்

ஒரு காட்டில் ஒரு காகம் கூடுகட்டி வாழ்ந்து வந்தது. அக் காகம் விவாகமாகி ஆண் காகமும் பெண்காகமும் அக்கூட்டிலே வாழ்ந்தனர். பல நாட்கள் சென்ற பின் பெண் காகம் 5 முட்டைகள் இட்டது. அதனைக் கண்ட ஆண்காகம் தான் ஐந்து பிள்ளைகளுக்கு தந்தையாக போவதையிட்டு மிக மகிழ்ச்சியடைந்தது. பெண்காகம் முட்டைகளை அடைகாத்து வந்தது. ஆண் காகம் பெண் காகத்திற்கு வேண்டிய இரையை தேடிக்கொடுத்து பெண்காகம் அடைகாப்பதற்கு உதவி செய்தது, இருவரும் தமக்கு 5 பிள்ளைகள் பிறக்கப் போகிறார்கள் என்று மிகவும் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர்.

அக் காட்டில் ஒரு நரியும் குடும்பமாக வசித்து வந்தது. அந்த நரியும் காகமும் நல்ல நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். ஒரு நாள் ஆண்காகம் இரைதேடி வரும் வழியில் வேட்டைக்காரர்கள் காட்டினுள் நுளைவதைக் கண்டது. உடனே காகம் நரி நண்பர் வசிக்கும் இடத்திற்கு சென்று வேட்டைக்காரர் காட்டில் வருவதையும் பாதுகாப்பாக எங்காவது மறைந்து இருக்கும் படியும் கூறியது. அத்துடன் தனக்கும் ஐந்து பிள்ளைகள் பிறக்க உள்ளார்கள் என்றும் நண்பனான நரிக்கு கூறியது. அப்போது நரி தங்களுக்கு பாட்டி வைக்கும்படி கேட்டது. காகமும் அன்று இரவு பாட்டி தர அழைக்க வருவதாக கூறியது. உடனே நரியார் குடும்பம் நன்றி கூறி விட்டு ஓடி ஒழித்துக் கொண்டது.

ஆண் காகம் இரையுடன் பெண்காகம் அடைகாத்துக் கொண்டிருந்த கூட்டுக்கு வந்தது. அப்போது பெண்காகம் அழுது கொண்டிருந்தது. காரணம் வினவிய போது. பாம்பொன்று வந்து தனது முட்டைகளை குடித்துவிட்டதாக கூறிப் புலம்பியது. அதனைக் கேட்ட ஆண்காகமும் விம்மி அழுத்துடன். அந்தப் பாம்பு தமது பிள்ளைகளை அழித்ததுடன் தமக்கு எனிமேலும் பிள்ளைகள் பிறக்க விடமாட்டாது அதனை கொன்றே தீருவேன் என சபதம் எடுத்தது.

மறு நாள் நரியார் காகம் இருந்த கூட்டடிக்கு சென்று காகத்தை அழைத்தது. காகம்ம் இரண்டும் பறந்து வந்து சோகமாக இருந்தன. அதனை கண்ட நரி உங்களுக்கு என்ன நடந்தது என்று கேட்டது. அப்போது ஆஅண் காகம் முழு விபரத்தையும் சொல்லி  புத்திசாலியான நரியிடம் பாம்பைக் கொல்ல ஒரு உபாயம் சொல்லும் படி கேட்டது. நரியும் அவர்களுக்கு எப்படியும் உதவி செய்ய வேண்டும் எண்ணத்துடன் ஆலோசித்தது. மறு நாள் நரி வெளியே சென்ற போது மகாராணியார் ஆற்றில் குழிப்பதற்காக தோழியருடனும் காவலருடனும் வருவதை அவதானித்தது. மகாராணி தனது நகைகள் கழட்டி ஆற்றங்கரையில் வைத்து விட்டு குழித்துக் கொண்டிருந்தார்.

உடனே நரிக்கு உபாயம் தோன்றியது மாகாராணி நாளைக்கு குழிக்கும் போது கரையில் வைத்த நெக்ளெஸ்சை காகம் தூக்கிக் கொண்டு போய் பாம்பின் புற்றுக்குள் போட்டால் அரச காவலாளிகள் பாம்பைக் கொலை செய்து நகைகளை மீட்பார்கள் அப்போது எனது நண்பரின் எதிரி இறந்து விடுவான் என திட்டம் போட்டு, தனது திட்டத்தை காகங்களுக்கு கூறியது. மறுநாள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே காகங்களும் நரியும் அவ் ஆற்றங்கரைக்குச் சென்று சரியான சூழ்நிலை வரும் வரை காத்து இருந்தன.

மகாராணியாரும் வழ்காகம் போல் நகைகள்ல் லழட்டி ஆற்றங்கரையி; வைத்து விட்டு குழிக்கச் சென்றாள். இதனைக் கண்ட காகன் இதுதான் த்ருணம் என எண்ணி ராணி நகைகள் வைத்திருந்த இடத்திற்குச் சென்று நெக்ளெஸை தூக்கிச் சென்றது. காவலாளிகள் காகத்தைத் பின் தொடர்ந்தார்கள். காகம் அந்த நெக்கிளெஸ்சை எதிரியான பாம்பு இருந்த புற்றினுள் போட்டது.. காவலாளாளிகள் நெக்ளெஸ்சை எடுக்க முயற்சித்தார்கள் அப்போது அதனுள் இருந்த பாம்பு சீறிக்கொண்டு வெளியே வந்தது. உடனே பாம்பை அடித்து கொலை செய்தபின் நெக்ளெஸ்சை மீட்டுச் சென்றார்கள். அதன் பின் காகங்கள் நின்மதியாக வாழ்ந்தது.

ஆபத்தான நேரத்தில் காகம் நரியின் குடும்பத்தைக் காப்பாற்றியதால் நரியின் உதவியுடன் காகம் தனது குடும்பத்தை காப்பாற்றியது.

 

நீதிக் கதைகள் – சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன்

போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்றுஅங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான்.

தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான். மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள் சோம்பலுடன் அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள் ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல் அவன் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள்  ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருந்தது. சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல் அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.

இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக் கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில் வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது. அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன் முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்?

நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்” என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.

தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர் புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான். அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான். தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே மறக்கவில்லை.

நீதிக் கதைகள் – நேர்மை உயர்வு தரும்

மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர், பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார்.

ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.

வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.

அப்போ அவரது மனைவியார் ‘உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க’ என்றார்.

ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊரு மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.

அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்ய முடியவில்லை வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப் பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார்.

அப்படி காட்டு வழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கடந்தது. அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்ற தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்துவிட்டு வந்தார்.

அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டுவிட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.

அப்போது ஊருக்குள் சென்ற போது அங்கு இருந்த கடையில் விசாரித்தபோது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.

உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்தப் பணப்பையை வாங்கிக் கொண்டார், அதேநேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்துவிட்டது, பணமும்சரியாக இருந்தது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும். சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.

கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து ‘நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை. மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்’ என்று கத்தினான்.

பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே இவரிடம் சன்மானம் வாங்குவதைவிட பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.

சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சினையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.

சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும, பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.

ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும். அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான்.

ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துகொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் ‘சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது.

ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊரு வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன்கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக்கொள்ளலாம்.

ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்.’
மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது.

பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவீதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.

நீதிக் கதைகள் – பொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு

தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.
“”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர்.

இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார்.

மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இரு…” என்றார்.

மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன்.

பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர். ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.

இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.

அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்  என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள்.

எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் பெரியோர்களின் பரிசில்களைப்பெறல்லாம்

நீதிக் கதைகள் – ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா?

ஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு  அந்தக் கிளையையே வெட்டினானாம்.

உமாதேவியார் பார்த்துவிட்டு, இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே, கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெரிமானிடம் சொன்னாராம். அதற்கு அவர் சொன்னாராம், சரி அவன் உதவிக்கு உன்னைக் கூப்பிட்டால் நீ போய் காப்பாற்று; என்னைக் கூப்பிட்டால் நான் காப்பாற்றுகிறேன் என்றாராம்.

இருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்களாம்.

அவன் இருந்த கிளை இறுதியாக முறிந்து விழுந்தது. அவன் “ஐயோ” என்று கதறிக்கொண்டே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் செத்துப்போனான்.

உமாதேவியார் என்ன இறந்துபோனானே என்றாராம். அதற்கு சிவன் சொன்னாராம், அவன் எமனின் மனைவி “ஐயோ” வை அல்லவா கூப்பிட்டான். அதான், ஐயோ வந்து அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றாராம்.

அதான் “ஐயோ” என்று ஏன் சொல்லக்கூடாது என்பதற்காக ஒரு சின்ன கதை.

நீதிக் கதைகள்

வீரபாகுவின் பெருந்தன்மை
வீரபாகுவின் பெருந்தன்மை
Veerabaghu
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம், “மன்னா! இரவு பகலாக இவ்வாறு காட்டிலும், மேட்டிலும் நடு நிசியில் திரியும் உன்னைக் கண்டு பரிதாபமாக இருக்கிறது.
ஆனால் நீ தேடும் பொருள் உனக்குக் கிட்டும்போது, அதைக் கை நழுவ விட்டுவிடுவாயோ என்ற சந்தேகமும் எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில், வீரபாகு என்ற ஒருவன் இப்படித்தான் புத்தி தடுமாறி தவறு புரிந்தான். அவன் கதையை உனக்குச் சொல்கிறேன், கேள்!” என்றது.
தண்டகாரண்ய வனத்தில் முன்னொரு காலத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு காட்டுசாதியினர் வசித்து வந்தனர்.
ஒருநாள், அந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களும், இளம் பெண்களும் ஒன்றுகூடி ஏரிக்கரையில் உல்லாசமாகப் பொழுது போக்கிக் கொண்டிருக்கையில், ஏரியிலிருந்த மீன்கள் துள்ளிக் குதித்து நீரிலிருந்து எழும்பி மேலே வந்து, மீண்டும் ஏரிக்குள்ளே விழுந்து விளையாடிக் கொண்டிருந்தன.

அப்போது, கூட்டத்திலிருந்த ஓர் இளைஞன் மற்றவர்களை நோக்கி, “மேலே எழும்பித் துள்ளிக் குதிக்கும் இந்த மீன்களின் மீது குறி பார்த்து அம்பு எய்து கொல்ல முடியுமா?” என்று கேட்டான். அதற்கு மற்றொருவன், “முடியவே முடியாது! தண்ணீருக்கு மேலே அவை ஒரு வினாடிக்கும் குறைவாக துள்ளிவிட்டு, உடனே தண்ணீரில் குதித்து விடுகின்றன. அந்த ஒரு வினாடி நேரத்தில், ஒரு மீன் கூட குறிபார்த்து அம்பு எய்த முடியாது” என்றான். மற்றவர்களில் பலர் அதை ஆமோதித்தனர். பிறகு அவர்களுக்குள்ளே விவாதம் ஏற்பட்டது.
அப்போது, அந்தக் கூட்டத்தில் இருந்த நீலிமா என்ற மிக அழகான இளம்பெண் தன் மனத்திற்குப் பிடித்தவனான பிரதாப் என்ற இளைஞனைப் பார்த்து “நீ மட்டும் ஒரு மீனைக் குறி பார்த்து அம்பு எய்தினால், உன்னை நான் திருமணம் செய்து கொள்வேன்!” என்றாள். அவள் அவ்வாறு கூறியதும், கூட்டத்தில் பரபரப்பு உண்டாகியது. நீலிமாவின் அழகில் அத்தனை இளைஞர்களும் மயங்கி இருந்தனர். ஆனால் நீலிமாவின் மனத்தில் இடம் பிடித்தவன் பிரதாப் மட்டுமே! அவள் கூறியதைக் கேட்டதும் அவன் வில்லை நாணேற்றி, அம்பைத் தொடுத்து, குறிபார்த்து எய்தான். ஆனால், துரதிருஷ்டவசமாக அவன் இலக்கு தவறியது.
உடனே, சற்று தொலைவில் அமர்ந்திருந்த வீரபாகு என்ற இளைஞன் தன் வில்லில் ஓர் அம்பினைத் தொடுத்து எய்தான். அவன் எய்திய அம்பு ஒரு மீனின் மீது பாய்ந்தது. வீரபாகுவின் நண்பர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, அவன் நீலிமாவின் அருகில் வந்தான்.
“ஏய் அழகு சுந்தரி! நீ அறிவித்த போட்டியில் நான் வெற்றி பெற்று விட்டேன். ஆகவே என்னை நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும்!” என்றான். அதற்கு நீலிமா, “திருமணமா? உன்னுடனா? ஒருக்காலும் இல்லை! முதலில் நான் இதைக் கூறியது பிரதாப்பை நோக்கித்தான்! தவிர, இதை நான் ஒரு போட்டியாக அறிவிக்கவில்லை” என்றாள்.

“இல்லை! நீ அப்படிச் சொல்லவில்லை!” என்று மறுத்தான். வீரபாகு, அவனது நண்பர்களும் அவன் சொல்வதையே ஆதரித்தனர். அதிலும் குறிப்பாக கங்கா என்ற வீரபாகுவின் நண்பன் நீலிமா தன் வாக்குறுதியை மீறாமல் வீரபாகுவைத்தான் மணம் புரிய வேண்டுமென்று அடித்துக் கூறினான். “முடியவே முடியாது!” என்று நீலிமா கூச்சலிட, “நீலிமா! உன்னை நான் திருமணம் செய்தேத் தீருவேன்!” என்று வீரபாகுவும் சவால் விட்டான். பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.
காட்டுசாதி மக்களிடையே இவ்வாறு அவ்வப்போது சண்டையும், பூசலும் ஏற்படுவதுண்டு. ஆனால் அவர்களில் ஒருவன் ஆபத்தில் சிக்கினால், மற்றவன் விரோதியாக இருந்தாலும், பகையை மறந்து அவனுக்கு உதவி செய்வான்.
ஒருமுறை, வீரபாகு மரத்திலேறி தேன் கூட்டைக் கலைத்து தேன் எடுக்க முயன்றபோது, திடீரென தேனீக்கள் அவனைச் சூழ்ந்து கொண்டு பயங்கரமாகத் தாக்கியபோது, அவன் நிலை தடுமாறி மரத்திலிருந்து விழுந்து விடவிருந்தான்.
அந்த சமயம் பிரதாப் அங்கே தற்செயலாக வந்து சேர, அவன் வீரபாகுவை தாங்கிப் பிடித்துக் கொண்டான். வீரபாகுவை ஆசுவாசப் படுத்திய பிறகு, பிரதாப் அவனிடம், “வீரபாகு! நீலிமா மீது உனக்கு மிகவும் ஆசை என்றால் அவளை நீயே மணந்து கொள்! ஆனால் அவள் உன்னை விரும்புகிறாளா என்று தெரிந்து கொள்!” என்றான்.
நீலிமாவின் பேச்சை எடுத்தவுடன், வீரபாகு கோபம் கொண்டான். “உன்னுடைய புத்திமதி எனக்குத் தேவையில்லை!” என்று விறைப்பாகக் கூறிவிட்டு அகன்றான். இது நடந்து சில நாள்களுக்குப் பின், இளைஞர்களும், இளம் பெண்களும் சேர்ந்து காட்டில் வேட்டையாடச் சென்றனர்.
அந்தக் கூட்டத்தில் நீலிமா, பிரதாப், வீரபாகு அனைவருமிருந்தனர். வேட்டையாடிய மிருகத்தை சமைத்து அனைவரும் சேர்ந்து விருந்துண்டனர். அப்போது திடீரென ஒரு புலி அந்தக் கூட்டத்தின் மீது பாய்ந்தது. அந்த சமயம் புலியைச் சற்றும் எதிர்பார்க்காத கூட்டத்தினர் அங்கிருந்த குன்றின் மீது தாவியேறி தப்பிக்க முயன்றனர்.

கடைசியில் சென்று கொண்டிருந்த நீலிமா கால் தடுக்கிக் கீழே விழ, புலி அவள் மீது பாய இருந்தது. அதைப் பார்த்த வீரபாகு அங்கிருந்த ஒரு சிறிய பாறையைத் தூக்கி புலி மீது வீச, அடிபட்ட புலி சுருண்டது. வீரபாகு நீலிமாவின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு ஓட, அடிபட்ட புலி மீண்டும் எழுந்தது. அதனிடமிருந்து தப்பிக்க வேறு வழி தெரியாமல் வீரபாகுவும், நீலிமாவும் குன்றிலிருந்து கீழே குதித்தனர். அதற்குள் அடிபட்ட புலி கீழே விழுந்து இறந்தது.
கீழே விழுந்த அதிர்ச்சியில், நீலிமா மயக்க மடைந்தாள். அவள் இடது முழங்கையில் அடிபட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. மயக்கத்தைத் தெளிவிப்பதற்காக வீரபாகு அருகில் உள்ள குளத்திற்கு நீர் எடுத்துவரச் சென்றான்.
அப்போது வீரபாகுவின் நேருங்கிய நண்பன் கங்கா குன்றின் மீது இருந்தபடியே வீரபாகுவிடம், “நண்பா! நீலிமாவின் இடது கையில் இரத்தம் கசிவதைப் பார். நீயும் உன் இடது கையில் கத்தியால் கீறி, இரத்தம் சொட்டச் செய்து அவளுடைய ரத்தத்துடன் கலந்து விடு. நம் இன வழக்கப்படி, ஓர் ஆண், ஒரு பெண் இருவரின் ரத்தமும் கலந்தால் அவர்கள் தம்பதி ஆவர்!
இந்த வாய்ப்பை நழுவ விடாதே!” விட்டு என்று சொல்லி ஓடிப் போனான். கங்கா மூலம் நடந்ததைக் கேள்விப் பட்ட பிரதாப் பேயறைந்தவன் போல் ஆனான். பிறகு, அவள் வீரபாகு நீலிமாவைக் கட்டாயத் திருமணம் புரிந்து கொண்டான் என்று வழக்குத் தொடுத்தான்.
பஞ்சாயத்தும் கூடியது! நீலிமா, வீரபாகு இருவரும் முன்னணியில் நிற்க, பஞ்சாயத்துத் தலைவர் அவளை நோக்கி, “பெண்ணே! உன் சம்மதத்துடன் உனது திருமணம் நடக்கவில்லையென்றும், உன்னை பலவந்தப்படுத்தி வீரபாகு அவ்வாறு செய்துள்ளான் என்றும் பிரதாப் வழக்குத் தொடுத்திருக்கிறான். அவன் சொல்வது உண்மையா என்று சொல்! அப்படியானால், வீரபாகு இந்த இடத்திலேயே கொல்லப் படுவான்! அதன் பிறகு, உனக்கு உண்மையிலேயே யார் மேல் பிரியமோ, அவனை நீ மணம் புரியலாம்!” என்றார்.
உடனே, அங்கே ஒரு அசாதாரண மௌனம் நிலவியது. சற்று நேரம் யோசித்த நீலிமா, “என்னுடைய முழு சம்மதத்துடன் தான் வீரபாகு அவ்வாறு செய்தார்” என்றாள். அப்போது யாரும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி நடந்தது. வீரபாகு முன் வந்து, “இல்லை! நான் உண்மையைக் கூறுகிறேன்.
கங்கா கூறியதும் எனக்கும் அவ்வாறு நீலிமா மயக்கமாக இருக்கும் போதே காரியத்தை முடித்துவிட ஆசை ஏற்பட்டது உண்மை! அதற்காக என் கையையும் கீறிக் கொண்டேன். ஆனால் நீலிமாவின் ரத்தத்துடன் கலக்க அவள் அருகே சென்ற போது, அவளுடைய முகத்தைப் பார்த்து என் மனம் மாறி விட்டது. ஆகவே நாங்கள் தம்பதி ஆகவில்லை. என்னுடைய குற்றத்திற்காக நான் என்னையே தண்டித்துக் கொள்கிறேன். நான் இந்த காட்டை விட்டு வெளியேறி விடுகிறேன்” என்று அங்கிருந்து வெளியேறிவிட்டான்.
” இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா, வீரபாகுவும் நீலிமாவும் ஏன் சம்மந்தமில்லாமல் நடந்து கொண்டார்கள்? தலைவரிடம் நீலிமா, உண்மையைக் கூறி இருந்தால் அவள் விரும்பிய பிரதாபனையே திருமணம் செய்து இருந்திருக்கலாம்.
தவிர யாரை முதலிலிருந்து வெறுத்தாளோ அவனுடன் மனப்பூர்வமாகத் திருமணம் நடந்ததாகப் பொய் சொல்லிவிட்டாள். இவ்வாறு பொய் சொல்வதன் அவசியம் என்ன? அதே போல் வீரபாகு முன்பு, உன்னை என்றாவது ஒருநாள் திருமணம் செய்தே தீருவேன் என்று கூறினான்.
அப்படி இருக்கையில் நீலிமா ஒப்புக் கொண்டபிறகும், எங்களுக்குத் திருமணம் நடக்கவில்லை என்று கூறிவிட்டு அந்தக் கிராமத்தை விட்டே சென்று விட்டான். இருவரது செயல்களும் எனக்குப் புரியவில்லை. இந்தக் கேள்விகளுக்கு விடை தெரிந்திருந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகி விடும்” என்றது.
அதற்கு விக்கிரமன், நீலிமா சுய நினைவில்லாமல் இருந்ததால் தனக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் இருந்தாள். அதேபோல் வீரபாகுவுடன் தனக்குத் திருமணம் நடந்து விட்டது என்று அவள் கூறியது அவளது இனத்திற்கே உரிய நன்றி உணர்வைத்தான் காட்டுகிறது. அதாவது அவர்கள் இன வழக்கின்படி எவனொருவரின் உயிர் ஆபத்தில் இருக்கிறதோ அவனை எவ்வித பாகுபாடும் இல்லாமல் காப்பாற்றுவார்கள்.
அவள் தனது விருப்பமின்றி இந்தத் திருமணம் நடந்தது என்று கூறினாள். வீரபாகுவைக் கொன்று விடுவார்கள். தன்னைக் காப்பாற்றிய ஒருவனுக்குத் தண்டனைக் கிடைக்கக் கூடாது என்பதற்காகத்தான் அவள் பொய் கூறினாள்.
ஆனால் வீரபாகு, நீலிமாவை நேசித்தானே தவிர மீறி கட்டாயத் திருமணம் புரிய நினைக்கவில்லை என்று உண்மையைக் கூறினான். இவ்வளவு நடந்த பிறகும் அவன் அந்தக் கிராமத்தில் இருந்தால் கிராமத்தில் ஒற்றுமை சீல்குலைந்து விடும். ஆகையால் அவன் அங்கிருந்து சென்று விட்டான்” என்றான்.
விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் தான் தங்கியிருந்த உடலுடன் பறந்து சென்று வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
சாப விமோசனம்
சாப விமோசனம்
sabavimochanam
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம், “மன்னா! இந்த உலகில் சில சோதிடர்கள் தங்களிடம் வரும் மக்களை பரிகாரம் என்ற பெயரில் பல இன்னல்களுக்கு ஆளாக்குகின்றனர்.
அப்படி யாரோ ஒரு சோதிடர் தான் உன்னையும் பரிகாரம் என்ற பெயரில் இவ்வாறு அலைய விட்டு இருக்கிறான் என்று தோன்றுகிறது. அத்தகைய கௌசிகன் என்ற சோதிடன் ஒருவனைப் பற்றியக் கதையை உனக்குக் கூறுகிறேன், கேள்!” என்று சொல்லிவிட்டுக் கதை சொல்திவாகர் என்ற பெரும் செல்வர் மகாதானபுரத்தில் வசித்து வந்தார். அவருடைய ஒரே மகளான கலா திருமணப் பருவத்தை அடைந்தவுடன், அவர் மும்முரமாக வரன் தேடத் தொடங்கினார். ஆனால், ஏதாவது ஒரு காரணத்தின் பேரில், திருமணப் பேச்சு வார்த்தைகள் தடைப் பட்டுப் போயின. தன் மகளின் திருமணம் தள்ளிக் கொண்டே செல்வதைக் கண்டு திவாகர் கவலையில் ஆழ்ந்தார். அவருடைய மனைவி பிரபா தன் சகோதரன் கோபியின் உதவியை நாடினான். அவன்

கலாவின் ஜாதகத்தைப் பரிசீலனை செய்ய வேண்டுமென்று சோதிடத்தில் புகழ்பெற்ற தனது நண்பன் கௌசிகனிடம் அவளது ஜாதகத்தை காட்டினான். கலாவின் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்தபின், சோதிடன் கௌசிகன், “கலாவின் ஜாதகம் சாட்சாத் சீதா தேவியின் ஜாதகத்தை ஒத்திருக்கிறது. தேவிக்கு வாழ்க்கையில் இன்னல்கள் ஏற்பட்டது போல் கலாவிற்கும் பல சோதனைகள் ஏற்படவுள்ளன.
ஆனால் இறுதியில் எல்லாம் நல்லபடியாக முடியும். நீ ஒரு காரியம் செய்! உன் சகோதரி குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு ஜெயபுரிக்குச் செல்! அங்குள்ள ராமர் கோயிலில் தேவியையும் ராமரையும் கலா தரிசிக்க வேண்டும். அங்கு தரப்படும் பிரசாதத்தை அந்த ஊரிலுள்ள ஒரு புண்ணியவானுக்கு அதை கலா வழங்கினால் விரைவில் அவள் திருமணம் நடைபெறும்!” என்றான்.
“சரிதான்! ஆனால் ஜெயபுரியில் புண்ணியவான் யார் என்று நாங்கள் எப்படிக் கண்டு பிடிப்பது? நீயும் எங்களுடன் வந்து, அந்தப் புண்ணியவானை எங்களுக்கு அடையாளம் காட்டு!” என்றான் கோபி. அதற்கு கௌசிகன் சம்மதித்தான். பிறகு, கோபி அனைவரையும் அழைத்துக் கொண்டு ஜெயபுரிக்குச் சென்றான். அங்குள்ள ராமர் கோயிலுக்குச் சென்று, ராமரையும் சீதையையும் அனைவரும் வழிபட்டனர்.

லத் தொடங்கியது.

பிறகு, அர்ச்சகர் தந்த பிரசாதத்தைக் கலா எடுத்துக் கொள்ள, அனைவரும் ஒரு குதிரை வண்டியில் ஜெயபுரியின் தெருக்களை வலம் வந்தனர். ஒரு பெரிய வீட்டின் வாயிலில் கௌசிகன் வண்டியை நிறுத்தச் சொன்னான். பிறகு கலாவிடம் அந்த வீட்டிலுள்ளவர்களுக்கு பிரசாதத்தை அளிக்குமாறு கூறினான். கலாவும் பிரசாதத்தை எடுத்துக் கொண்டு அந்த வீட்டினுள் நுழைந்தாள்.

அவள் நுழையும்போது, வீட்டுக்குள்இருந்து ஓர் அழகான வாலிபன் வெளியே வந்தான். கலாவைப் பார்த்தவுடன் அப்படியே பிரமித்துப் போய் நின்று அவளைக் கண்இமைக்காமல் பார்த்தபடியே நின்றான். அதனால் வெட்கமடைந்த கலா தலையைக் குனிந்து கொண்டு, “நாங்கள் ராமர் கோயிலில் தரிசனம் செய்ய வந்தோம். பிரசாதம் கொடுக்க வந்தேன். இதை ஏற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள்.
அவள் மீது செலுத்திய பார்வையை அகற்றாமல் அந்த வாலிபன், “என் பெற்றோரிடம் இதைக் கொடு!” என்று கூறிவிட்டு உள்ளே சென்று தன் பெற்றோரை அழைத்தான். அவர்களும் வெளியே வந்தனர். கலாவைக் கண்டு ஆச்சரியமுற்ற அவர்கள் அவளை வரவேற்று உபசரித்தனர்.
பிறகு அவளுடைய நோக்கமறிந்து, வண்டியிலிருந்த அனைவரையும் வீட்டிற்குள் அழைத்தனர். கலாவை மிகவும் பிடித்து விட்டதால், அவர்கள் தாங்களாகவே திருமணப் பேச்சைத் தொடங்க, கௌசிகன் அந்த வாலிபனது ஜாதகத்தைப் பரிசீலனை செய்து, பெண்ணின் ஜாதகம் அவனுடன் பொருந்துவதாக அறிவித்தான். அந்த வாலிபனும் சம்மதிக்க, திருமணம் உடனே நிச்சயிக்கப் பட்டது.
வாலிபன் பெயர் வீரபத்திரன் என்றும், தந்தை பெயர் சிவராமன் என்றும் தாயின் பெயர் காமினி என்றும் அறிந்தனர். திருமண நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு மறுநாள் ஊர் திரும்புகையில் இரவில் ஒரு சத்திரத்தில் தங்கினர். மறுநாள் காலை கௌசிகன் அருகிலிருந்த ஆற்றுக்கு நீராடச் சென்றபோது, திடீரென ஒரு ராட்சசன் மரத்திலிருந்து குதித்து, கௌசிகனிடம், “என் கேள்விகளுக்கு பதில் சொல்! இல்லைஎன்றால் கொன்று விடுவேன்!” என்றான்.
கௌசிகன் சோதிடர் மட்டுமன்றி, உலக ஞானமும், துணிச்சலும் உடையவன். அதனால் அவன் சற்றும் பயப்படாமல் ராட்சசனை நோக்கி, “நீ ஏதோ ஒரு சாபத்தினால் இவ்வாறு ராட்சசனாக உலவுகிறாய்! உனக்கு சாப விமோசனம் தான் தேவை! அதற்கான வழியைச் சொல்லுகிறேன். வீணாகக் கேள்வி கேட்காதே!” என்றவுடன் ராட்சசன் அவனை வணங்கி, “நான் மீண்டும் மனிதனாக மாற என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.அதற்கு கௌசிகன், “உனக்கு அபூர்வ சக்தி உள்ளது. அதை நல்ல காரியத்திற்குப் பயன்படுத்தினால், சாப விமோசனம் கிட்டும்!” என்றான். “ஆம்! எனக்கு ஒரு அபூர்வ மந்திரம் தெரியும். ஒரு பழத்தைக் கையில் வைத்துக் கொண்டு அதை உச்சரித்தால், அந்தப் பழம் சக்தி வாய்ந்ததாகி விடும். அதை உண்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்!” என்றான். “அந்த சக்தியை குழந்தை பாக்கியம்அற்ற ஒரு புண்ணியவதியான பெண்ணுக்குக் கொடு!” என்று கௌசிகன் சொல்ல, “எனக்குப் புண்ணியவதி யார், பாவி யார் என்று தெரியாது. நீங்கள் தான் கூற வேண்டும்” என்றான்.சற்று நேரம் தீவிர சிந்தனையில்ஆழ்ந்த கௌசிகன், “அதற்கு இன்னும் நேரம் வரவில்லை. நீ இன்னும் சில ஆண்டுகள் காத்திரு!” என்று கூறிவிட்டுச் சென்றான். பிறகு அனைவரும் ஊர் திரும்பினர். சில நாள்களுக்குப் பிறகு கலா-வீரபத்திரன் விவாகம் இனிதாக நடந்தது. கலா கணவன் வீடு சென்று தன் இல்வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் தொடங்கினாள்.

ஆனால், அவளது மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை. மணமாகி ஓராண்டு முடிந்தும் அவளுக்குக் குழந்தைப் பேறு உண்டாகாததால் அவளுடைய மாமியார் அவளை மிகவும் கடுமையான சொற்களால் வாட்டி வதைத்தாள். மாமனாரும் அவளுடைய உதவிக்கு வரவில்லை. கணவனும் அவளை உதாசீனம் செய்தான். இவ்வாறு, மூன்று ஆண்டுகள் கழிந்தன. வீரபத்திரனின் தூரத்து உறவினரான ராமநாதன் என்பவர் தன் பெண்ணை அவனுக்கு இரண்டாம் தாரமாகத் தர விரும்பினார்.

ஆகையால் அவர், சீதாராமன் என்ற சோதிடரை அணுகி, “நீ சிவராமன் வீட்டிற்குச் சென்று அவருடைய மருமகள் கலாவின் ஜாதகத்தைக் கேட்டு வாங்கு! அதை ஆராய்வது போல் பாசாங்கு செய்தபின் ஜாதகப்படி கலாவிற்குக் குழந்தையே பிறக்காது என்று அடித்துச் சொல்! என் பெண் சுபத்ராவை வீரபத்திரன் மணந்தால், குழந்தை பாக்கியம் கிட்டும் என்று சொல்! இதை நீ ஒழுங்காக செய்தால், உனக்கு நிறையப் பணம் தருவேன்!” என்று ஆசை காட்டினார்.

அவர் கூறியதுபோலவே சீதாராமன் வீரபத்திரனிடம் சென்று கூற, ஏற்கெனவே கலாவை விஷமாக வெறுத்த வீரபத்திரன் பெற்றோர் அவனுக்கு இரண்டாம் தாரமாக சுபத்ராவை மணம் முடிப்பதற்குத் தீர்மானித்தனர்.
விஷயமறிந்த கலாவின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கௌசிகனை அணுக, அவர் வீரபத்திரனின் வீட்டை அடைந்தார். கலாவின் ஜாதகப்படி அவளுக்குக் குழந்தை பாக்கியம் உண்டு என்று கூறினார். தொடர்ந்து “அது தாமதமானதற்குக் காரணம் நீங்கள் இருவரும் புரிந்திருக்கும் பாவங்களே! ஆனால், கலாவிற்குக் குழந்தை பிறக்கும் நல்ல வேளை பிறந்து விட்டது” என்றார்.
உடனே சிவராமன் சோதிடர் சீதாராமனின் சோதிடக்கணிப்பை பற்றிக்கூற, கௌசிகன் உடனே சீதாராமனை வரவழைத்தார். அவர் வந்ததும் அவரை நோக்கி, “நாம் இருவரும் பந்தயம் கட்டுவோம். நான் கூறும் சோதிடம் கட்டாயம் பலிக்கும் என்கிறேன். இரண்டு மாதத்தில் அது பலிக்காவிட்டால் நான் தோல்வியை ஏற்பேன். ஆனால் கலா கருவுற்றால், உங்களுக்கு செருப்பு மாலை அணிவித்து கழுதை மேல் ஏற்றி ஊர்வலம் வரச் செய்வேன்! சம்மதமா?” என்று சவால் விட, பயந்து போன சீதாராமன் ஊரை விட்டே ஓடிப்போனார்.
உடனே கௌசிகன் ராட்சசனை சந்தித்து, “உனக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. அந்த மகிமை வாய்ந்த பழத்தை இப்போது தா!” என்று கேட்க, அவனும் ஒரு பழத்தை மந்திரம் உச்சரித்துக் கொடுத்தான். கொடுத்த மறுகணமே அவன் கீழே விழுந்து உயிர் நீத்தான். அந்தப் பழத்தை எடுத்துக் கொண்டு வந்த கௌசிகன் கலாவிடம் அதைத் தந்து உண்ணச் சொன்னார்.
 இரண்டே மாதத்தில் கருத்தரித்த கலா, ஓர் ஆண் மகனைப் பெற்றெடுத்தாள். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! கலாவிற்கு திருமணம் நடந்தவுடனே மகிமைவாய்ந்த பழத்தை கௌசிகன் கொடுத்து இருந்தால் அவள் துன்பப்பட்டிருக்க மாட்டாள் இல்லையா? அவளை மட்டுமா தவிக்கவிட்டான்?
அந்த ராட்சசனையும் மூன்று ஆண்டுகள் காக்க வைத்தான். அவனை சந்தித்த போதே அந்தப் பழத்தை அவனிடம் இருந்து வாங்கிக் கொடுத்திருந்தால் கலாவும் உடனே கருத்தரித்திருப்பாள். ராட்சசனுக்கும் சாப விமோசனம் கிட்டியிருக்கும். கௌசிகனின் இந்த தாமதத்திற்குக் காரணம் தெரிந்தும் நீ மௌமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.
அதற்கு விக்கிரமன், “கௌசிகன் சோதிடர் மட்டுமே! கடவுள் அல்ல! அவனால் விதியைப் பற்றிக் கூற முடியுமே தவிர விதியை மாற்ற முடியாது. ஒருவருடைய ஜாதக ராசிப்படி, சில நல்ல காரியங்கள் குறிப்பிட்ட நல்ல காலம் வரும் போதுதான் நடக்கும். கலாவின் ஜாதகப்படி அவளுக்கு வாழ்க்கையில் இன்னல்கள் ஏற்படும் என்றும், இறுதியில் எல்லாம் சுபமாக முடியும் என்று முன்னமே கௌசிகன் கணித்துக் கூறினான்.
அவளுடைய ஜாதகப்படி அவளுக்கு மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் குழந்தை பிறக்கும் என்றிருந்தால், அதை கௌசிகனால் மாற்றியமைக்க முடியாது. எனவே, அவன் உரிய நல்ல காலம் வரும் வரைக் காத்திருந்து, பிறகே பழத்தை அவளுக்கு அளித்தான். அதேபோல், ராட்சசனுக்கும் அவன் விதிப்படி மூன்று ஆண்டுகள் மேலும் காக்க நேரிட்டது.
ஆகவே கௌசிகன் தாமதம் செய்தான் என்பது தவறு. அவன் நல்ல வேளை கூடி வரும் வரை காத்திருந்தான் என்பதே சரி” என்றான். விக்கிரமனது இந்த சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் தான் சுமந்து வந்த உடலுடன் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
கடுமையான முயற்சி
கடுமையான முயற்சி
kadumayana-muyarchi
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேஇறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! இரவு, பகல் பாராமல் இந்த மயானத்தில் நீ இத்தனை கடுமையான முயற்சி செய்வது யாருக்காக?

உன்னுடைய ஏதாவது லட்சியம் நிறைவேறுவதற்கா, அல்லது வேறு யாருக்காகவோ செய்கிறாயா? கிருபானந்தா என்ற வஞ்சக யோகி ஒருமுறை மூவரை சிரமப்படச் செய்தான்.அவன் கதையைக் கூறுகிறேன், கேள்!” என்றது. ஒரு கிராமத்தில் ராமன், பீமன், சோமன் என்று மூன்று வாலிபர்கள் நண்பர்களாக இருந்தனர். ராமன் கல்வியறிவு உள்ளவன்! பீமன் மல்யுத்தத்தில் கெட்டிக்காரன்.

சோமன் தண்ணீரில் மூழ்கிப் பல வித்தைகளை செய்யக் கூடியவன்! மூவரும் தங்களுடைய பலவித வித்தைகளின் திறமையினால் அந்த கிராமத்து மக்களின் ஆதரவுடன் சொற்ப வருமானம் பெற்றுக் காலம் கழித்தனர். ஒரு சமயம் கிராமத்தில் பஞ்சம் ஏற்பட்டதால், அவர்கள் வேலை தேடி ஸ்ரீநகரை அடைந்தனர்.

ஸ்ரீநகரில் ஈஸ்வரன் என்ற ஜமீன்தார் வசித்து வந்தார். ஒரு சமயம் அவர் வீட்டிற்கு கிருபானந்தா என்ற யோகி வருகை தந்தார். ஜமீன்தாரின் உபசாரங்களினால் திருப்தியடைந்த யோகி “உன் மருமகள் விரைவிலேயே ஓர் ஆண் மகவைப் பெற்றெடுப்பாள்” என்று வாழ்த்தினார். உடனே, ஈஸ்வரனின் மனைவி, “சுவாமி! எங்களுக்குக் குழந்தையே இல்லை. அப்படியிருக்க பேரன் எப்படிப் பிறப்பான்?” என்று கேட்டாள்.
சற்று நேரம் கண்களை மூடி யோசனையில் ஆழ்ந்த யோகி, “அம்மா! அது தெய்வ வாக்கு. நீங்கள் யாராவது ஒரு வயது வந்த வாலிபனை தத்து எடுத்து அவனுக்குத் திருமணம் செய்து வையுங்கள். அவனுக்கு விரைவிலேயே குழந்தை பிறக்கும்!” என்றார் யோகி. சரியாக அந்த சமயத்தில் ராமன், பீமன், சோமன் ஆகிய மூவரும் ஈஸ்வரன் வீட்டுக் கதவைத் தட்டினார்கள்.
ஈஸ்வரன் கதவைத் திறந்ததும், அந்த மூவரும் தங்களை அறிமுகம் செய்து கொள்வதற்கு முன்பாகவே, கிருபானந்த யோகி அவர்களைப் பெயரிட்டு அழைத்து அவர்கள் அங்கு வந்திருப்பதன் நோக்கத்தையும் கூறினார். அதை அவர்கள் மூவரும் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டிருக்க யோகி தொடர்ந்து, “இந்த ஜமீன்தாருக்கு குழந்தை பாக்கியம் இல்லை.
அவருடைய மனைவி கர்ப்பமாக தசரத மலையில் உள்ள வசிஷ்ட மரத்திலிருந்து பழம் கொண்டு வந்து கொடுங்கள். அதை சாப்பிட்டால் அவள் தாயாவாள்! ஆனால் தசரத மலையைப் பற்றிய ஒரு சிறிய தகவல் மட்டும் என்னால் தரமுடியும். அது மேற்குத் திசையில் இல்லை.
அதனால் மற்ற மூன்று திசைகளிலும் ஆளுக்கு ஒரு திசையாகச் சென்று தேடுங்கள். இரண்டு மாதக்காலத்திற்குள் யார் முதலில் அந்த வசிஷ்டமரத்திலிருந்து பழம் கொண்டு வருகிறானோ, அவனுக்கு ஜமீன்தார் தனது சொத்தில் பாதியையேக் கொடுத்து விடுவார். மூன்று மாதக் காலத்திற்குள் ஒருவராலும் கொண்டு வர முடியவில்லையெனில், மூவரும் திரும்பி வந்து விடுங்கள்.

மூவரில் யார் மிகவும் கடுமையாக முயற்சி செய்தானோ அல்லது கஷ்டமான வேலை செய்தானோ, அவனை ஜமீன்தார் தனது சுவிகாரப் புத்திரனாகத் தத்து எடுத்துக் கொள்வார்” என்றார். அவர்கள் உடனே யோகியை விழுந்து வணங்கிவிட்டு அங்கிருந்துப் புறப்பட்டுச் சென்றனர். ராமன் வடக்குத் திசையில் சென்றான். போகுமிடமெல்லாம் தசரத மலையைப் பற்றி விசாரித்துக் கொண்டே சென்றான்.
ஆனால் யாரும் சரியாக பதில் சொல்லவில்லை. வழியில் ஒரு கிராமத்தில் கோவிந்தன் என்ற வியாபாரி தனக்கு அந்த மலையைப் பற்றித் தெரியும் என்றான். உடனே ஆவலுடன் ராமன் அவனை விசாரிக்க, அவன், “என் வீட்டில் ஆறு வாரங்கள் எடுபிடி வேலை செய்! நீ நன்றாக வேலை செய்பவனாகவும், புத்திசாலியாகவும் இருப்பதாகத் தெரிந்தால், பிறகு நான் அந்த மலையைப் பற்றி விவரம் கூறுவேன்!” என்றான்.
உடனே, ராமன் வியாபாரியின் வீட்டில் வேலைக்குச் சேர்ந்தான். நன்கு கல்வி கற்றிருந்த அவனை, அந்த வியாபாரி வேலைகளில் ஈடுபடுத்தினான். தனது தகுதியையும், செய்யும் வேலையையும் நினைத்து ராமன் தினமும் மனம் வருந்தினான். இருந்தாலும் தசரத மலையைப் பற்றிய விவரத்தை அறிய வேண்டும் என்பதற்காக அனைத்தையும் பொறுத்துக் கொண்டான்.
ஆறு வாரங்கள் வேலை செய்து முடித்தப்பின், வியாபாரியிடம் தசரத மலையைப் பற்றி ராமன் கேட்டதும், “நீ உழைப்பாளி என்பதில் சந்தேகம்இல்லை. ஆனால் மாடு போல் உழைத்த உன்னை எப்படி புத்திசாலி என்று கூறுவது? அதனால் உனக்கு சொல்ல மாட்டேன்” என்றான் வியாபாரி.
காலக்கெடுவில் பாதி முடிந்து விட்டதை அலைவதில் பயனில்லை என்று உணர்ந்த அவன் ஸ்ரீநகர் திரும்பத் தீர்மானித்தான். மூவரில் இரண்டாமவன் ஆன பீமன் தெற்குத் திசையை நோக்கிச் சென்றான். விசித்திரபுரி என்ற கிராமத்தில் அவன் தன் மல்யுத்தத் திறமையைக் காட்டியபோது, அந்த கிராமத்து ஆட்களில் ஒருவனான சூலபாணி “தம்பி! உன்னைப் போன்ற ஓர் ஆள் நான் பல நாள்களாய்த் தேடிக் கொண்டிருந்தேன்.

நான் மலை ஏறுவதில் விருப்பம் உள்ளவன்! அஞ்சனமலை என்று ஒன்று அருகில் உள்ளது. அதன்மீது ஏறிப்பார்க்க எனக்கு ஆசை! ஆனால் உன்னைப் போன்ற ஓர் ஆள் என்னுடன் வந்தால் தைரியமாகச் செல்வேன். யார் கண்டது? நீ தேடும் தசரத மலைகூட அங்கிருக்கலாம்!” என்றான்.
உடனே, பீமன் உற்சாகத்துடன் சூலபாணியோடு கிளம்பினான். அந்த மலைப் பிரதேசத்தில் ஏற்பட்ட பல இடையூறுகளை பீமன் தனது புஜபலத்தினாலும், மல்யுத்தத் திறமையினாலும் அவனுக்கு ஏற்பட்ட இடையூறுகளையும் வெற்றிகரமாக சமாளித்தான். அதற்குள் ஆறு வாரங்கள் ஆகிவிடவே, பீமன் ஸ்ரீநகருக்கு வந்தான். மூன்றாமவன் சோமன் கிழக்குத் திசையை நோக்கிச் சென்றான்.
செல்லும் இடமெங்கும் தசரத மலையைப் பற்றி விசாரித்தும் அவனுக்குத் தகவல் ஏதும் கிடைக்கவில்லை. ஒருநாள், முல்லையாற்றங்கரையில் அமைந்திருந்த மல்லிகாபுரி கிராமத்தில் ஆடிப்பெருக்கு விழாவில் கலந்து கொண்ட சோமன், ஆற்றில் குதித்து நீச்சலடித்துப் பல வித்தைகளைக் காட்டி அங்கிருந்தவர்களை பிரமிக்க வைத்தான். அங்கு இருந்தவர்களில் மேகநாதன் என்பவன், “தம்பி! முல்லையாறு கடலில் கலக்கும் இடத்தில், கடலில் மகரத்தீவு என்று ஒரு மிக அழகான தீவு உள்ளது.
அங்கு செல்லவேண்டும் என்பது என் நீண்ட நாளைய ஆசை! ஆனால் சங்கமப் பிரதேசத்தில் ஏராளமான முதலைகள் இருப்பதால், யாரும் என்னுடன் வரத்தயாராக இல்லை. நீ வருகிறாயா? ஒருக்கால், மகரத்தீவின் அருகிலே நீ தேடும் தசரத மலை இருக்கலாம்!” என்றான். அது கேட்ட சோமன் உற்சாகத்துடன் மேகநாதனோடுப் புறப்பட்டான்.
இரண்டு நாள்கள் முல்லையாற்றில் மேகநாதனுடன் படகில் பயணம் செய்த பிறகு, ஆறு கடலில் சேருமிடம் வந்தது. திடீரென ஏராளமான முதலைகள் அவ்விருவரையும் சூழ்ந்து கொண்டுத் தாக்க ஆரம்பித்தன. சோமன் அத்தனை முதலைகளையும் படகோட்டும் துடுப்பினால் அடித்துப் படுகாயப் படுத்தினான். முதலைகள் இடமிருந்துத் தப்பி, இருவரும் மகரத்தீவை அடைந்தனர்.

அந்தத்தீவில் வாழ்ந்தப் பழங்குடியினர் இருவரையும் சிறைப் பிடித்துத் தங்கள் தலைவன் முன் நிறுத்தினர். பழங்குடியினத்தினரின் தலைவன் அவர்கள் இருவரையும் நோக்கி, “மகர தேவி எங்கள் குலதேவதை! அவளுக்கு நாங்கள் நரபலி கொடுப்பது வழக்கம்! உங்களைப் போல் பயணிகளைத்தான் நாங்கள் பிடித்து வந்து பலியிடுவோம்! இங்கு ஒரு முதலைக்குளம் உள்ளது. உங்கள் இருவரையும் அதில் வீசி எறிவோம்! மகரதேவி முதலையின் உருவில் வந்து உங்களைக் கடித்து உண்ணுவாள்!” என்றான்.
அதைக்கேட்டு, இருவருக்கும் இதயமே நின்று விடும் போலிருந்தது. ஆனால் சற்று நேரத்தில் சமாளித்துக் கொண்ட சோமன், “தலைவா! முதலில் என்னைக் குளத்தில் அனுப்பு! அங்குள்ள முதலைகளிடமிருந்து நான் தப்பி விட்டால், எங்களை எங்களை விட்டுவிடு!” என்றான். அதற்குத் தலைவனும் சம்மதித்தான்.
உடனே, சோமன் முதலைக் குளத்தில் வீசி எறியப் பட்டான். அங்கு பல முதலைகள் அவனைக் கடித்துத் தின்ன முயன்றும், சோமன் அவற்றுக்கு மிக சாமர்த்தியமாகப் போக்குக் காட்டி மின்னலென நீந்திக் கரைக்கு வந்துவிட்டான். தலைவனும் மகரதேவி அவர்களை பலியாக விரும்பவில்லை என்று நம்பி விட்டுவிட, இருவரும் மல்லிகாபுரி திரும்பினர். அங்கிருந்து சோமன் ஸ்ரீநகர் திரும்பினான்.
ஆக, தசரத மலையைக் கண்டு பிடிக்க முடியாமல், மூவரும் ஸ்ரீநகர் திரும்பினர். நடந்ததை எல்லாம் கேட்ட பின்னர் யோகி, “முன்னமே நான் சொன்னபடி, தசரத மலையைக் கண்டு பிடிக்க மிகக் கடுமையாக முயற்சிசெய்தவனை, ஜமீன்தார் தத்து எடுத்துக் கொள்வார் என்று சொல்லி இருந்தேன்.
அதன்படி, உங்களில் ராமன்தான் மிகவும் கஷ்டப்பட்டவன்! ஆகவே, அவனையே தத்து எடுத்துக் கொள்ள ஜமீன்தார் சிபாரிசு செய்கிறேன்!” என்றார். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! தசரத மலையைக் கண்டு பிடிக்க பீமனும், சோமனும் தான் மிகக் கடினமாகப் பாடுபட்டார்கள். உயிருக்கே அபாயம் விளைவிக்கக் கூடிய சாதனைகளைப் புரிந்தார்கள். அப்படியிருக்க, கேவலம் எடுபிடி வேலை செய்த ராமனைப் போய் எவ்வாறு யோகி தேர்ந்தெடுத்தார்? என் சந்தேகத்திற்கு பதில் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்!” என்றது.
அதற்கு விக்கிரமன், “பீமன், சோமன் இருவரும் உண்மையாகவே பாடுபட்டார்கள் என்றாலும், அவர்கள் செய்தது அவர்களுடைய திறமைக்குப் பொருத்தமான செயல்களே! அபாயகரமான சாதனைகளை அவர்கள் உற்சாகத்துடன் செய்தார்கள். ஒருவன் தனது மனத்திற்குப் பிடித்த வேலையை செய்யும்போது சிரமம் தெரிவதில்லை.
ஆனால் ராமனின் நிலை வேறு! நன்கு படித்திருந்த அவனை ஒரு கொத்தடிமை போல் ஈனமான வேலைகளைச் செய்யச் சொன்னான் அந்த வியாபாரி! அவனுடைய மனத்திற்குப் பிடிக்காத, வேலையை அவனுக்கு செய்ய நேரிட்டது. எதனால்? தசரத மலையைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தினால்தான்! மூவரின் நோக்கம் ஒன்றானாலும், அவர்களுக்கு செய்ய நேரிட்ட முயற்சிகள் வேறுபட்டவை!
ஆகவே, மூவரில் ராமன்தான் அதிக சிரமப்பட்டான் என்று யோகி தேர்வு செய்தது சரியே!” என்றான். விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, அவன் சுமந்திருந்த வேதாளம் தான் புகுந்திருந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
நம்பமுடியாத உண்மை
நம்பமுடியாத உண்மை
namba-mudiyatha-unmai
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தில்ஏறி, அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில் அதனுள்ளிருந்த வேதாளம், “மன்னா! உன்னுடைய கடும் முயற்சிகளைப் பார்த்தால் ஏதோ ஒரு சாதாரண விஷயத்திற்காக நீ இத்தனை பாடுபடுகிறாய் என்று தோன்றவில்லை.

உன்னதமான ஒரு லட்சியத்தை இலக்காகக் கொண்டுள்ளாய் என்று தோன்றுகிறது. ஆனால் சிலர் அற்ப விஷயங்களுக்காகத் தங்கள் சக்தியை வீணாக்குகின்றனர். அத்தகைய ரவிவர்மன் என்ற மன்னனுடைய கதையைக் கூறுகிறேன், கேள்!” என்று கதை சொல்லலாயிற்று.

ரவிவர்மன் விதர்ப ராஜ்யத்தை ஆண்டு வந்த மன்னன்! வினோத மான, அதிசயமான விஷயங்களில் அவனுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ஆட்சிப் பொறுப்பை மந்திரி களிடமும், அதிகாரிகளிடமும் ஒப்படைத்து விட்டு, தன் நேரத்தைப் புதிய விஷயங்களைப் பற்றி அறிவதில் ஆர்வம் காட்டி வந்தான். அவ்வப்போது மந்திரிகளை அழைத்து ராஜ்யத்தைப் பற்றி விசாரிப்பதுண்டு. அவர்கள் ராஜ்ய நிர்வாகம் சீராக நடப்பதாகவும், குடிமக்கள் மகிழ்ச்சிஉடனிருப்பதாகவும் கூறுவதைக் கேட்டு விட்டு திருப்தி அடைந்து வந்தான்.

ஒரு சமயம் மகாபாரதத்தில் மயன் நிர்மாணித்த அற்புதமான மாளிகையைப் பற்றி கதை கேட்ட போது, மன்னனுக்கு தன் ராஜ்யத்தில் நடக்கும் வினோதமான விஷயங்களைப் பற்றி அறிய அவா உண்டாயிற்று. உடனே தனது முதன் மந்திரியை அழைத்து அடுத்த பௌர்ணமியன்று சபையைக் கூட்ட வேண்டுமென்றும், அன்று நாட்டின் பல வினோதமான விஷயங்களைப் பற்றிக் கூறுபவர்களுக்குப் பரிசு அளிக்கப் போவதாகவும் அறிவித்தான்.
அவ்வாறே பௌர்ணமிதினத்தன்று சபையில் பெருங்கூட்டம் கூடியது. மன்னர் தன் ஆசனத்தில் அமர்ந்தவுடன், முதலில் கோபி என்ற விவசாயி முன் வந்தான். மன்னை வணங்கிவிட்டு, அவன் தான் கொண்டு வந்த பெட்டியைக் காட்டினான். பின்னர், “மகாராஜா! சில ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் நான் என் வயலை உழுதுக் கொண்டிருக்கையில், எனக்கு இது கிடைத்தது.
அதைத் திறந்து பார்த்ததில் உள்ளே ஒரு கருங்கல் இருந்தது. பெட்டியைத் திறந்தவுடன், திடீரென பகல் பொழுது மறைந்து இருள் சூழ்ந்தது. பெட்டியை மூடியவுடன், மீண்டும் இருள் நீங்கிப் பகலாகியது. பெட்டிக்குள்ளிருந்த கல்லில்தான் ஏதோ மாயசக்தி உள்ளது என்று எனக்குத் தோன்றியது. இது பகலை இரவாக்கிவிடும் தன்மைஉடையது!” என்று சொல்லிவிட்டுப் பெட்டியை மன்னரிடம் தந்தான். உடனே ரவிவர்மன் பெட்டியைத் திறந்துப் பார்க்க, திடீரென பகல் இரவாகியது. பெட்டியை மூடியவுடன், இருள் மறைந்து விட்டது “ஆகா! இந்தக் கருங்கல் ஒரு நம்ப முடியாத உண்மை” என்று பாராட்டி விட்டு கோபிக்கு ஆயிரம் பொற்காசுகள் தந்தார்.
அடுத்து, ரத்னாகரன் என்ற வியாபாரி முன் வந்தான். மன்னனை வணங்கிய பிறகு அவன், “மகாராஜா! ஒருநாள் இரவில் என் வீட்டுத் தோட்டத்தில் நான் உலவிக் கொண்டிருந்தபோது வானில் ஓர் அதிசயக் காட்சியைக் கண்டேன். சிறகுகள் கொண்ட ஒரு குதிரை வானில் பறக்க, அதன்மீது ஒரு கந்தர்வ தம்பதி அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, அந்தப் பெண்ணின் கூந்தலிலிருந்து ஒரு பூ கீழே விழுந்தது. அடுத்தகணம், என் தோட்டம் முழுவதும் அந்தப் பூவிலிருந்து வீசிய நறுமணத்தினால் நிறைந்தது. உடனே அதையெடுத்து நான் பூசையறையில் வைத்தேன். என்ன அதிசயம் தெரியுமா? அந்தப் பூ இன்று வரை வாடவில்லை” என்று மன்னனிடம் ஒரு தந்தப் பேழையை நீட்டினான்.
அதை ரவிவர்மன் ஆர்வத்துடன் திறந்துப் பார்க்க, அதனுள் ஒரு பூ இருந்தது. அதிலிருந்து வீசிய நறுமணம் சபைமுழுவதும் சூழ்ந்தது. “இது நிச்சயம் கந்தர்வலோக மலர்தான்! இதுவும் ஒரு நம்ப முடியாத உண்மை!” என்று புகழ்ந்த மன்னன், ரத்னாகரனுக்கு ஒரு முத்துமாலையைப் பரிசாக அளித்தான்.
அடுத்து கோபால் சர்மா என்ற பண்டிதர் முன் வந்து, “மகாராஜா! என்னிடம் ஓர் அபூர்வ நாணயம் உள்ளது. அதைத் தொட்டால் பழைய விஷயங்கள் அனைத்தும் நினைவிற்கு வரும்!” என்று அந்த நாணயத்தை மன்னனிடம் தந்தார். அதைத் தொட்டவுடன் பழைய சம்பவங்கள் அனைத்தும் மன்னனுக்கு ஞாபகம் வர, உடனே ஒரு தங்க மாலையை சர்மாவிற்குப் பரிசுஅளித்தான்.
அதற்குப் பிறகு, கம்பீரமான தோற்றம் கொண்ட ஓர் இளைஞன் முன் வந்தான். அவன் மன்னனை நோக்கி, “மகாராஜா! என் பெயர் சிவதாஸ்! நான் பிரதான வாயில் வழியே தர்பாரில் நுழையவில்லை. பின் எந்த வாயில் வழியாக வந்தேன் தெரியுமா?” என்று மன்னரையே கேள்வி கேட்டான். “எந்த வாயில் வழியாக?” என்று ரவிவர்மன் ஆவலுடன் கேட்டான்.
“நான் லஞ்ச வாயில் வழியாக வந்தேன்!” என்று அவன் கூறியதும் மன்னன் திடுக்கிட்டான். “லஞ்ச வாயிலா? அது என்ன?” என்று மன்னன் கேட்டான். “மகாராஜா! வினோதமான பொருட்களைத் தங்களிடம் காட்டி வெகுமதி பெற வந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் தங்களுடைய தர்பாரின் பிரதான வாயில் காவலர்கள் பத்து பொற்காசுகள் லஞ்சம் வாங்கிஇருக்கிறார்கள். நானும் அவ்வாறு லஞ்சம் கொடுத்த பிறகுதான் தர்பாரில் நுழைய அனுமதி கிடைத்தது. அப்படியிருக்கத் தங்கள் தர்பாரின் நுழைவு வாயிலை லஞ்ச வாயில் என்று அழைப்பதில் என்ன தவறு?” என்று பயமின்றி பேசினான் அந்த இளைஞன்.

“என்ன?” என்று துள்ளிக்குதித்த மன்னன் “என் காவலர்கள் லஞ்சம் வாங்குகின்றனரா? என்னால் நம்ப முடியவில்லை!” என்று அதிர்ச்சி யுடன் கூறினான். “மகாராஜா! உங்களால் நம்ப முடியவில்லை என்றா சொன்னீர்கள்? ஆம்! அது நம்ப முடியாத உண்மை தான்! நீங்கள் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துள்ள அதிகாரிகள் அனைவரும் பொதுப்பணத்தையும், குடிமக்களிடமிருந்து வரி என்ற பெயரிலும், லஞ்சமாகவும் பணத்தைக் கொள்ளையடிக்கின்ற னர். ஆனால் இவை எதுவுமே உங்களுக்குத் தெரியாது. அந்த நம்ப முடியாத உண்மையை எடுத்துரைப் பதற்காகத்தான் நான் இங்கு வந்தேனே தவிர, உங்களிடம் பரிசு பெறுவதற்காக அல்ல!” என்று இளஞ்சிங்கம் போல் கர்ஜித்தான்.
பல நாள்களாகத் தெரியாத ஓர் உண்மையைத் தெரிந்து கொண்ட அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கு ரவிவர்மனுக்கு சில நிமிடங்கள் ஆயின. மந்திரிகள், அதிகாரிகள் அனைவரும் தலை குனிந்தனர். தன் சிம்மாசனத்திலிருந்து எழுந்து வந்த ரவிவர்மன் இளைஞன் சிவதாசை அணுகி, “இப்போது நீ கூறிய விஷயம்தான் மிகவும் நம்பமுடியாத அதிசயமான உண்மை!” என்று கூறி தன் கழுத்திலிருந்த வைரமாலையை அவனுக்கு அணிவித்தான். அதைத்தொடர்ந்து, “உன்னை என் பிரதம ஆலோசகராக நியமிக்கிறேன்!” என்றும் அறிவித்தான். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், “மன்னா!
ரவிவர்மனின் இந்த செயலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? மிகவும் அதிசயமான விஷயங்களைச் சான்றுடன் காட்டுபவர்களுக்கு பரிசு அளிப்பதாக அறிவித்தான். கோபி கொண்டு வந்த கருங்கல் ஓர் அதிசயமான பொருள்! ரத்னாகரன் கொண்டு வந்த கந்தர்வலோகப் பூ மகா அதிசயமான பொருள்! சர்மாவின் நாணயமும் அப்படியே! அவை அனைத்தையும் சாதாரணமாகக் கருதிவிட்டு, சிவதாஸ் கூறிய நம்ப முடியாத உண்மைக்காக அவனுக்கு வைரமாலை கொடுத்தது மட்டுமன்றி, அவனைப் பிரதம ஆலோசகராகவும் நியமித்தான். சிவதாஸ் கூறியதில் அப்படியென்ன அதிசயம் இருக்கிறது? என் சந்தேகத்திற்கு விளக்கம் தெரிந்துஇருந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்!” என்றது.
அதற்கு விக்கிரமன், “முதல் மூவரும் காட்டியது அதிசயமான பொருள்கள் என்பதில் சந்தேக மில்லை. ஆனால் சிவதாஸ் தெரிவித்த உண்மை அதுவரை அறியாமையில் மூழ்கியிருந்த மன்னனின் கண்களைத் திறந்தது. ஆகவே, அதற்கு மதிப்பு மிகவும் அதிகம்! முதலில் வந்த மூவர் காட்டிய அதிசயப் பொருள்களால் நாட்டுக்கோ, மக்களுக்கோ எந்த விதப் பயனுமில்லை.
ஆனால் சிவதாஸ் தெரிவித்த நம்ப முடியாத உண்மை மகத்துவப்பூர்வமானது. நாட்டில் மன்னனுக்குத் தெரியாமல் நடைபெறும் அநீதியை அவனுக்கு உணர்த்த தைரியமாக முன் வந்தான். தான் செய்யத் தவறிய விஷயத்தை தக்க சமயத்தில் எடுத்துரைத்து, அதை மன்னனால் நம்ப முடியாத உண்மை என்று காட்டிய சிவதாஸ் மீது மன்னன் பெருமதிப்புக் கொண்டு அவனுக்கு உயர்ந்த பரிசும், பதவியும் வழங்கினான்” என்றான். விக்கிரமனது சரியான பதிலினால் அவனது மௌனம் கலையவே, அவன் சுமந்திருந்த உடலிலிருந்த வேதாளம் உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
குணசேகரின் கதை
குணசேகரின் கதை
kunasekar
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அதை தன் தோளில் சுமந்தவாறு மயானத்தை நோக்கி செல்லுகையில் அதனுள் இருந்த வேதாளம் அவனை நோக்கி, “மன்னா, உன்னைப் போல் சிலர் வாழ்க்கையில் லட்சியவாதியாகத் திகழ்பவர்கள் ஒரு குறிக்கோளை வகுத்துக் கொண்டு அதை அடைய அரும் முயற்சி செய்வார்கள்.

ஆனால் சிலர் வாழ்க்கையில் எந்தவிதப் பற்றுதலும் இல்லாமல் ஞானிபோல் திரிபவர்கள் திடீரென தடம்மாறி பயங்கர முயற்சி செய்து பல ஆண்டுகளாய் அடைய நினைத்ததை சில நாள்களிலேயே பெற்றுவிடுவர். அப்படிப்பட்ட குணசேகரனின் கதையைக் கூறுகிறேன், கேள்” என்றது.

விராக நாட்டை ஆண்டு வந்த சந்திரவர்மன் என்ற சிற்றரசருக்கு இரட்டைப் பிள்ளைகள் இருந்தனர். பெரியவன் குலசேகரன் இளையவன் குணசேகரனிடமிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தான். சிறு வயது முதல் தான் மன்னனாவது பற்றி குலசேகரன் கற்பனை செய்வதுண்டு. தனக்கு சமமான அந்தஸ்து படைத்தவர்களுடன் மட்டுமே பழகுவான். ஆனால் குணசேரகன் ஆசாபாசங்கள் அற்றவன். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதங்கள் அவனுக்குக் கிடையாது. அவனுக்கு ஆட்சிபுரியும் ஆசை சிறிதுமில்லை.

இருவருடைய பிறந்தநாளையும் சந்திரவர்மர் மிக விமரிசையாகக் கொண்டாடுவதுண்டு. அவ்வாறு அவர்களின் பத்தாவது பிறந்தநாளைக் கொண்டாடும்போது அவர்கள்இருவருக்கும் ஒரு கருடனின் பொம்மை பரிசாகக் கிடைத்தது. அதை அனுப்பியவர் சந்திரவர்மரின் குலகுரு சம்புநாதர்! அந்த பொம்மை பெரிதாக இருந்தது. அது மட்டும்இன்றி, அதன் காதருகில் பொருத்தப் பட்டிருந்த சாவியைத் திருகினால் அது சற்று நேரம் வானில் பறந்து சென்று திரும்பியது. அதில் ஒருவர் மட்டுமே அமர்ந்து செலுத்த முடியும்.
தங்களுக்குப் பரிசாகக் கிடைத்த பொம்மையை எடுத்துக் கொண்டு இருவரும் நந்தவனத்திற்குச் சென்றனர். முதலில் குலசேகரன் அதன் மீதேறி அமர்ந்து சாவியை முடுக்க, அது பறந்தது. சற்று நேரம் பறவையில் பறந்து களித்தபின், தன் தம்பிக்கு அதை அளித்தான். அப்போது அரண்மனை வேலைக்காரி ஒருத்தியின் மகனான சாரதி அந்தப் பறவையில் தானும் அமர்ந்துப் பறப்பதற்கு விரும்பினான்.
அவனுக்கு அது தகுதியற்ற ஆசை என்று அவன் தாய் உணர்த்தினாள். அதைத் தற்செயலாக கவனித்த குணசேகரன் அவளிடம் “உன் மகன் சாரதி எனக்கு சமமான வயதுடையவன். இந்த வயதில் இத்தகைய ஆசை தோன்றுவது நியாயமே! ஆகவே, பொம்மை மீது அமர்ந்து பறக்க அவனுக்கு வாய்ப்பு தருகிறேன்” என்று சொல்லிவிட்டு, தான் பறவை மீது ஏறாமல் சாரதியை ஏறச் சொன்னான். அதைக்கண்ட குலசேகரன் ஓடி வந்து அவனைத் தடுத்தான்.
அவன் செய்கையை அனைவரும் ஆதரித்தது குணசேகரனுக்கு வியப்பையும் வருத்தத்தையும் அளித்தது. “சாரதி குதிரையில் உட்காரக்கூடாது என்றால் நானும் அதில் உட்கார மாட்டேன்” என்ற குணசேகரன் “நான் குலகுரு சம்புநாதரிடம் சிஷ்யனாகச் சேர்ந்து, இதேபோல் ஒரு பொம்மையைப் படைத்து அதில் சாரதியை உட்காரச் செய்வேன்” என்றான்.

அப்போது, சந்திரவர்மருக்கும் அதே யோசனை தோன்றியது. தன் புதல்வர்கள் இருவரையும் தன் குருகுல சம்புநாதரிடம் சீடர்களாக அமர்த்தி ராஜநீதி, பொறியியல், பொருளாதாரம் போன்ற அறிவியல் பாடங்களைக் கற்கட்டும் என்று எண்ணி, சம்புநாதரின் குருகுலத்தில் சேர்த்தார். சேர்ந்த நாள் முதல், குலசேகரன் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள, குணசேகரன் பொறியியலில் மிக்க ஆர்வம் காட்டினான். சில நாள்களில் குணசேகரன் தான் கூறியது போல் ஒரு கருட பறவையைத் தயாரித்து அதில் சாரதியை ஏறச் சொன்னான். அவனுடைய சமத்துவ மனப்பான்மையைக் கண்டு வியந்து பாராட்டிய சம்புநாதர், “நீ சாதாரண மனிதன்னல்ல, நீ ஒரு மகான்!” என்று விமரிசனம் செய்தார்.
குருகுல சம்புநாதரிடம் கல்வி பயின்று முடித்தபின் இருவரும் அரண்மனை திரும்பினர். ஆனால் இருவரின் போக்கும் முற்றிலும் வேறுபட்டிருந்ததைக் கண்டு கவலையுற்ற சந்திரவர்மர் சம்புநாதரிடம், “குலசேகரன் தங்களிடம்இருந்து அரசியலை நன்குக் கற்றுக் கொண்டு விட்டான் ஆனால் குணசேகரன் அரசியலைப் பற்றிக் கற்றுக் கொண்டது போல் தெரியவில்லையே!” என்றார் மன்னர்.
“அவனுக்கு ஆட்சி புரிவதில் ஆர்வமில்லை. அதனால்தான் அவன் அரசியலை ஆர்வத்துடன் கற்கவில்லை” என்றார் சம்புநாதர். “குருநாதரே! என் ராஜ்யத்தை இரண்டாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவனை மன்னன் ஆக்க விரும்புகிறேன்” என்றார் சந்திரவர்மர். ஆனால் சந்திரவர்மருடைய யோசனை அவருடைய தந்தைக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் சரியாகத் தோன்றவில்லை.
ஆகையால் அவர்கள் இதற்குச் சம்மதிக்கவில்லை. இதனால் சந்திரவர்மர் அயல் ராஜ்யத்தின் மீது படையெடுத்து, வெற்றி கண்டு, அதை குணசேகரனுக்கு உரிமையாக்கி விடலாம் என்று கருதினார்.

அப்போது, விசால ராஜ்யத்து இளவரசி சந்திரகலாவின் சுயம்வரம் அறிவிக்கப்பட்டு, அதற்கு பல நாட்டு இளவரசர்கள் அழைக்கப்பட்டுஇருந்தனர். உடனே, மன்னர் மூத்தவன் குலசேகரனுக்கு பதிலாக குணசேகரனையே சுயம்வரத்திற்கு அனுப்ப எண்ணினார். சந்திரகலா விசாலராஜாவிற்கு ஒரே பெண்! அதனால், அவளை மணம் புரிந்தால், குணசேரன் எதிர்காலத்தில் விசாலராஜ மன்னன் ஆகிவிடுவான் என்ற நப்பாசைதான் காரணம்! அதைப்பற்றி மன்னர் சந்திரவர்மர் குணசேகரனிடம் கூறியபோது, அவனும் முதலில் சுயம்வரத்திற்குச் செல்லவே விரும்பினான். ஆனால் குலசேகரன் சந்திரகலாவை விரும்புவதையறிந்த அவன், உடனே தன் விருப்பத்தை கைவிட்டு விட்டாள். அதனால் குலசேகரன் மட்டும் சுயம்வரத்திற்குச் சென்றான்.
பல ராஜ்யங்களில் இருந்து மன்னர்களும், இளவரசர்களும் சந்திரகலாவின் கரம் பற்ற விரும்பி சுயம்வரத்தில் கூடியிருந்தனர். சந்திரகலா தன் கையில் மாலையுடன் சுயம்வர மண்டபத்திற்குள் நுழைந்த போது, திடீரென ஒருவன் முன்னே வந்து அவளுடைய கையைப் பற்றிக் கொண்டு, “என் பெயர் மித்ரபிந்தன்! நான் சந்திரகலாவை மிகவும் நேசிக்கிறேன். அவள் எனக்குத்தான் உரியவள்! அதனால் நான் இவளை என்னுடைய மகாபர்வத ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்கிறேன். உங்களுக்கு வீரம் இருந்தால், போரில் என்னைத் தோற்கடித்தப் பிறகு, சந்திரகலாவை அழைத்துச் செல்லுங்கள்!” என்று சவால் விட்டுவிட்டு, அங்கு தயாராக இருந்த தன் குதிரைமீது அவளை பலவந்தமாக ஏற்றிக் கொண்டு, விரைந்து வெளிஏறினான்.
சந்திரகலாவின் தந்தை வீரகுப்தர், தன் மகளை கயவன் மித்ரபிந்தனிடம்இருந்து மீட்டு வரும் இளவரசனுக்குத் தன் பெண்ணை மணமுடித்துத் தருவதுடன், தன் ராஜ்யத்தையும் அளிப்பதாக அறிவித்தார். உடனே சில நாள்களிலேயே, பல மன்னர்கள் மகாபர்வதத்தின் மீது படையெடுத்து, சந்திரகலாவை மீட்க முயன்றனர்.
ஆனால், மலைப்பிரதேசமான மகாபர்வத ராஜ்யத்தோடு போரிடுவது மிகக் கடினமாக இருந்தது. படைஎடுத்துச் சென்ற மன்னர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர். அவ்வாறு, போர்க்களத்தில் உயிர் நீத்தவர்களில் குலசேகரனும் ஒருவன்!

தன் சகோரதன் கொல்லப்பட்டதையறிந்த குணசேகரன் மித்ரபிந்தன் மீது தானே போர்தொடுக்க முடிவு செய்தான். ஆனால், மற்றவர்களைப் போல் உடனே படையெடுத்துச் செல்லாமல், முதலில் மித்ரபிந்தனைப் பற்றிய தகவல்களை சேகரிக்க முற்பட்டான்.
மித்ரபிந்தன் மகாபர்வதக் கோயிலின் அம்மன் ருத்ரபைரவியை சிறு வயது முதல் ஆராதனை செய்து, அம்மனிடமிருந்து பல விசேஷ சக்திகளைப் பெற்றிருந்ததாகத் தெரிந்து கொண்டான். ஒருமுறை ருத்ரபைரவி அவனுடைய கனவில் தோன்றி தனக்கு இரத்த தாகம் ஏற்பட்டுள்ளதாகவும், நூறு மன்னர்களை அவளுக்குப் பலியிட்டால், அவன் மகா பலம் பொருந்தியவனாகத் திகழ வரம் தருவதாகவும் கூறினாளாம்! ருத்ரபைரவியின் சூலாயுதத்தைக் கொண்டு மித்ரபிந்தனை யாராவது தாக்கினால் மட்டுமே அவன் இறப்பான் என்றும் கூறினாள்.
மேற்கூறிய தகவல்களை அறிந்த பிறகு, குணசேகரன் பல முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டபின், அவன் தனியாக மாறுவேடத்தில் மகாபர்வதம் சென்றான். ஒருநாள் நள்ளிரவில், மித்ரபிந்தன் சந்திரகலாவுடன் ருத்ரபைரவியின் கோயிலுக்குச் சென்றபோது, அவர்கள் அறியாமல் பின் தொடர்ந்தான். அம்மனின் சன்னிதிக்கு மித்ரபிந்தன் சென்றதும் குணசேகரன், விரைந்து கருவறைக்குள் புகுந்தான். அம்மனின் கையிலிருந்த சூலத்தை எடுத்து, அவள் முன்னிலையில் மித்ரபிந்தன் மார்பில் சூலத்தைப் பாய்ச்சி, அவனைக் கொன்றான். உடனே குணசேகரன் முன் தோன்றிய அம்மன், “இத்துடன் நூறு இளவரசர்கள் பலியாகி விட்டனர். இறுதியாக நூறாவது இளவரசனை பலிகொடுத்த உனக்கு நான் வரம் தர விரும்புகிறேன். என்ன வேண்டுமோ, கேள்!” என்று சொல்ல, மித்ரபிந்தனைத் தவிர அனைவரையும் உயிர்ப்பிக்க வேண்டும் என வரம் கேட்க, அம்மனும் அவ்வாறே வரம் தந்தாள்.
உயிர் பெற்று எழுந்த மற்ற மன்னர்களையும் இளவரசர்களையும் நோக்கி “உங்களுக்கு உயிர் கொடுத்த குணசேகரனை உங்கள் சக்கரவர்த்தியாகக் கருதுங்கள்!” என்று கூறி மறைந்தாள்.
கதையை இந்த இடத்தில் நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! குணசேகரனின் செயலைப் பார்த்தால் வியப்பாக இல்லையா? அரசாள்வதில் ஆசையே இல்லை என்று ஆரம்ப முதல் சொல்லி வந்தவன் இறுதியில் எப்படி மாறி விட்டான் பார்த்தாயா? தவிர, மித்ரபிந்தனை சாதாரண மனிதர்களினால் கொல்ல முடியாது என்று அம்மன் கூறியிருக்க, அவனை குணசேகரனால் எவ்வாறு கொல்ல முடிந்தது? என்னுடைய கேள்விகளுக்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால், உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.
அதற்கு விக்கிரமன், “ராஜ்யம் ஆளும் ஆசையினால் குணசேகரன் மித்ரபிந்தனைக் கொல்லவில்லை. தன் சகோதரனைக் கொன்றவனைப் பழி தீர்க்க எண்ணியே அவன் மித்ரபிந்தனைக் கொன்றான். தன் சகோதரன் மட்டுமன்றி, மற்றும் பல மன்னர்களை அநியாயமாகக் கொன்று பலியிட்ட மித்ரபிந்தனை பழிவாங்கவே அவன் அவ்வாறு செய்தான். சாதாரண மனிதர்களினால் மித்ரபிந்தனைக் கொல்ல முடியாது என்று ருத்ரபைரவி கூறியிருந்தது உண்மையே! ஆனால் குணசேகரன் மற்றவர்களைப் போல் சராசரி மனிதன் அல்ல! நற்குணங்கள் பொருந்திய உத்தம புருஷன்! ஆகவே, சராசரி மனிதர்களிலிருந்து அப்பாற்பட்ட குணசேகரனால் மித்ரபிந்தனைக் கொல்ல முடிந்ததில் வியப்பில்லை!” என்றான்.
விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.
சுயநலத்தின் விளைவு
சுயநலத்தின் விளைவு

sunalathain-vilaivu

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும்போது, அதனுள்இருந்த வேதாளம் விக்கிரமனிடம், “மன்னா! ஆவிகளும், பேய்களும் உலவும் இந்த பயங்கர வனத்தில் நீ எதற்காக இவ்வாறு அலைந்து திரிகிறாய் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை.

 

ஒருவேளை, அற்புதமான சக்திகளைப் பெறுவதற்காக நீ இத்தனை முயற்சிகளை மேற்கொள்ளுகிறாயோ என்று தோன்றுகிறது. கபாலி என்பவனின் கதையைக் கூறுகிறேன்” என்று கதை சொல்லலாயிற்று: மாணிக்கபுரியில் வசித்து வந்த பிரபல வியாபாரி பத்மநாபன் தன் ஒரே மகளான பிரத்யுஷாவிற்குத் திருமணம் செய்து வைக்கத் தீர்மானித்தார்.

தன்னுடைய  நண்பரின் மகனான ஆனந்தனுக்கேத் தன் மகளை மணமுடிக்க முடிவும் செய்தார். ஆனால், திடீரென, திருமணத்திற்கு சில தினங்கள் முன் பிரத்யுஷாவிற்கு ஒரு விசித்திர நோய் ஏற்பட்டது. அவளால் பேசவே முடியாமல் வாய் அடைத்துப் போனது. இதனால் பத்மநாபன் துடிதுடித்துப் போனார். பல ஊர்களில்இருந்து தலைசிறந்த வைத்தியர்களை வரவழைத்து சிகிச்சை செய்தும் பலனில்லை. கடைசியில் ஒருநாள் தனஞ்சயன் என்ற வைத்தியர் அவளைப் பரிசோதித்து அவளுடைய நோய் என்னவென்று கண்டு பிடித்தார். அவர் பத்மநாபனை நோக்கி, “உங்கள் மகளின் குரல்வளை நரம்புகள் செயலற்று விட்டன.

 

அதனால் அவளால் பேச முடியவில்லை. இந்த நோயை தசமூலம் எனும் மூலிகையினால் மட்டுமே குணப்படுத்த முடியும். ஆனால் அந்த மூலிகை வங்காளக் கடலில் உள்ள நாகத்தீவில் மட்டுமே கிடைக்கும். ஆனால், அங்கு செல்வது மிகவும் கடினம்!” என்றார்.
வைத்தியர் சொன்னதைக் கேட்டு ஆனந்தன், “வைத்தியரே! நான் பிரத்யுஷாவிற்காக தசமூல மூலிகையை உலகின் எந்தத் திசையிலிருந்தாலும் எடுத்து வருவேன். அந்த முயற்சியில் என் உயிரே போனாலும் பரவாயில்லை!” என்று உணர்ச்சிவசப்பட்டுக் கூறினான்.
அவனைப் பெருமிதத்துடன் பார்த்த தனஞ்செயர், “நீ அந்த மூலிகையை நீ எப்பாடுபட்டாவது எடுத்து வந்தால், அது பிரத்யுஷாவிற்கு மட்டுமன்றி, அதே நோயால் பீடிக்கப்பட்டுள்ள பல நோயாளிகளுக்கும் பலன் கிடைக்கும். நீ தனியாகச் செல்ல வேண்டாம். உன்னுடன் என் சீடன் சஞ்சய் வருவான். அவனையும் அழைத்துச் செல்!” என்றார்.
ஆனந்தனின் நண்பன் சிவநாதனும் அவனுடன் செல்ல முன் வந்தான். அங்கு இருந்தவர்களில் ஒருவனான கபாலி, “எனக்கு வீரதீர சாகசங்கள் மிகவும் பிடிக்கும். அதனால் இந்தப் பயணத்தில் நானும் கலந்து கொள்வேன். நால்வருமாகச் செல்வோம்! வெற்றியுடன் திரும்புவோம்!”

ஒரு நல்ல நாளில் நால்வரும் மாணிக்கபுரியை விட்டுக் கிளம்பினர். கால்நடையாகப் பல நாள்கள் சென்றபின் கிழக்குக் கடற்கரையான வங்கக் கடலை அடைந்தனர். ஒரு கட்டுமரப் படகில் நால்வரும் நாகத்தீவை நோக்கிப் பயணித்தனர். முதல் ஐந்து நாள்கள், பயணத்தில் அபாயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் ஆறாம் நாளன்று திடீரென ஒரு திமிங்கிலம் தன் வாலைச் சுழற்றி அவர்களுடைய கட்டுமரத்தையடிக்க, அது துண்டு துண்டாக உடைந்தது. நால்வரும் கடலில் மூழ்கினர். ஆனந்தன் கடலுக்குள் மூழ்கவிருந்த சமயம், அவன் நண்பன் சிவநாதன் உடைந்த படகின் ஒரு துண்டை அவனிடம் தள்ளிவிட்டான். தனக்கு தகுந்த சமயத்தில் உதவி செய்த நண்பனுக்கு நன்றி கூறத் திரும்பினான்.

 

ஆனால் சிவநாதனைக் காணவில்லை. மற்ற இருவரும் சற்றுத் தொலைவில் உடைந்தப் படகுத்துண்டுகளைப் பிடித்துக் கொண்டு மிதப்பது தெரிந்தது. தனக்குதவி செய்த நண்பன் மட்டும் காணாமற்போனதைக் கண்டு ஆனந்தன் வருந்தினான். மிதந்து கொண்டே சென்ற மூவரும், கடலின் நடுவில் இருந்த குன்றுகள் சூழ்ந்த ஒரு தீவில் ஒதுங்கினர். அப்போது வானில் ஒரு பறக்கும் தட்டு தெரிந்தது.
அந்தப் பறக்கும் தட்டு அவர்கள் இருக்குமிடத்தில் கீழே இறங்கியது. அதில் மிகவும் வயதான ஒரு கிழவர் உட்கார்ந்திருந்தார். அவரை மிகுந்த ஆச்சரியத்துடன் மூவரும் நோக்க, அவர், “பயப்படாதீர்கள்! நானும் உங்களைப் போல் மனிதன்தான்! வானில் பறக்கவேண்டுமென்பது எனது நீண்ட நாள் கனவு! அதற்காகக் காலமெல்லாம் முயன்று இந்தப் பறக்கும் தட்டை உருவாக்கினேன்” என்றார். “ஐயா! தசமூலம் எனும் மூலிகையைத் தேடி நாங்கள் நாகத் தீவிற்குப் புறப்பட்டோம். அது எங்கிருக்கிறது என்று தெரியுமா?” என்று ஆனந்தன் கேட்டான்.

 

“இதுதான் நாகத்தீவு! மலையின் மீது வஞ்சிநகர் என்ற ஊர் உள்ளது. அங்கு இந்தப் பறக்கும் தட்டில்தான் செல்ல வேண்டும்! உங்களில் யாராவது தன் இளமையை எனக்குத் தியாகம் செய்தால், இதை நீங்கள் எடுத்து உபயோகிக்கலாம்!” என்றார் அந்த கிழவர்! உடனே சஞ்சய் தன் இளமையைத் தியாகம் செய்ய முன் வந்தான். ஆனந்தன் அவனைத் தடுத்தும் சஞ்சய் கேட்கவில்லை.

உடனே, கிழவர் சொல்லிக் கொடுத்த மந்திரத்தை சஞ்சய் உச்சரிக்க, அவன் சிறிது நேரத்தில் கிழவனாக மாறினான். கிழவர் குமரனாக மாறினார். குமரனான கிழவர் ஆனந்தனிடம் பறக்கும் தட்டைக் கொடுத்தார்.
பிறகு ஆனந்தன், கபாலி இருவர் மட்டும் பறக்கும் தட்டில் ஏறி வஞ்சிநகரை சேர்ந்தனர்.
வஞ்சிநகரில் அவர்கள் கண்ட காட்சி அவர்களை திடுக்கிடச் செய்தது. அந்த ஊரிலுள்ள இளைஞர்களும், இளம்பெண்களும் மிருகங்களின் தலைகளுடனும், மனிதர்களின் உடலுடனும் தென்பட்டனர். கிழவர்களும், கிழவிகளும் மட்டும் முழு மனித வடிவத்தில் இருந்தனர். அங்கு யாரை என்ன கேட்பது, தசமூல மூலிகையை எப்படித் தேடுவது என்று புரியாமல் அவர்கள் அலைந்து
திரிந்து கடைசியில் ஒரு கிழவியின் குடிசையை அடைந்தனர்.
அந்தக் கிழவியிடம் தசமூல மூலிகையைப் பற்றிக் கேட்டனர். அதற்குக் கிழவி, “அந்த மூலிகை இளவரசியின் நந்தவனத்தில் இருக்கிறது. ஆனால் அதை உங்களால் பெற முடியாது. இளவரசியே இப்போது ஒரு மந்திரவாதியின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறாள்” என்றாள்.
“யார் அந்த மந்திரவாதி? ஏன் இந்த ஊரில் இளவயதினர் விசித்திரமான தோற்றத்துடன் காணப்படுகிறார்கள்?” என்று கபாலி கேட்டான். “அது பெரிய கதை! மகாதம்பன் என்ற மந்திரவாதி இளவரசி நந்தினியை அடைய விரும்பினான். ஆனால் இளவரசிக்கு அவனைச் சிறிதும் பிடிக்கவில்லை. அதனால் கோபங்கொண்ட மந்திரவாதி இந்த ஊரிலுள்ள இளைஞர்களையெல்லாம் மிருகத்தலைகளுடன் தோன்றுமாறு சபித்து விட்டான். எங்களைப் போன்ற வயதானவர்களை விட்டுவிட்டான். இளவரசி தன்னைத் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே, சாபத்தை நீக்கிக் கொள்வான் என்று கிழவி சொல்லிக் கொண்டிருக்கையில், அந்தப் பக்கமாக மந்திரவாதி சென்று கொண்டிருந்தான்.

உடனே கபாலி அவன் எதிரில் போய் நின்று, “ஏய் மந்திரவாதி! உன் அக்கிரமத்தை ஒடுக்க நான் வந்துஇருக்கிறேன். மரியாதையாக, உன் சாபத்தைத் திரும்பப் பெறு!” என்று துணிச்சலுடன் கூறினான். “யாரடா நீ? நான் மந்திரவாதி மகாதம்பன்! என்னிடமா விளைாயடுகிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்?” என்று கோபத்துடன் கூவிக் கொண்டே, அவன் தன் மந்திரக்கோலை உயர்த்தினான். உடனே, சற்றும் எதிர்பாராதவிதமாய், கபாலி அவன் மீது பாய்ந்து அவன் மந்திரக்கோலைப் பிடுங்கிக் கொண்டான்.

 

மந்திரக்கோல் கை மாறியதும் தன் சக்தியை இழந்த மந்திரவாதி தப்பியோட முயலுகையில், அவனை ஆனந்தனும், கபாலியும் பிடித்துக் கட்டிப்போட்டனர். உடனே, செய்தி அறிந்த இளவரசி அங்கு வந்து மந்திரவாதியை சிறையிட கட்டளை இட்டாள். பிறகு, ஆனந்தனையும், கபாலியையும் ராஜமரியாதையுடன் அரண்மனைக்கு அழைத்துச் சென்று உபசாரம் செய்தாள். அவர்கள் அங்கு வந்ததன் நோக்கத்தையறிந்து, தசமூல மூலிகைகளை வேண்டிய அளவு தன் நந்தவனத்திலிருந்து எடுத்துக் கொடுத்தாள்.
செல்லுமுன், கபாலி அங்குள்ள மக்களுக்கு மந்திரக்கோலைப் பயன்படுத்தி சில மந்திர உச்சாடனங்கள் செய்து சுய உருவம் கொடுத்தான்.

வஞ்சிநகரை விட்டுச் செல்லும் போது ஆனந்தன், “கபாலி!  இனி அந்த மந்திரக்கோல் தேவை இல்லை. அதைத் தூக்கி எறிந்து விடு!” என்றான்.

ஆனால் கபாலி மந்திரக்கோலை தன்னிடமே வைத்துக் கொண்டான். பிறகு, இருவரும் தாங்கள் கிழவரையும், சஞ்சயையும் விட்டு வந்த இடத்திற்குச் சென்றனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. சிவநாதன் அங்கு உயிருடன் காணப்பட்டான். சஞ்சய் பழையபடி வாலிபனாக மாறிஇருந்தான். கிழவர் பழையபடி கிழவராகவே இருந்தார்.

ஆனந்தனைக் கட்டித் தழுவிய சிவநாதன், “நண்பா! கடல் அலைகள் என்னை வேறு திசையில் தள்ளிவிட்டதால் நான் உங்களைப் பிரிந்து விட்டேன். பிறகு, சிரமப்பட்டு இங்கு வந்து விட்டேன்!” என்றான். கிழவரிடம் பறக்கும் தட்டை ஒப்படைத்துவிட்டு, நால்வரும் மாணிக்கபுரிக்குத் திரும்பினர்.

தசமூல மூலிகையின் மகிமையினால் பிரத்யுஷா விரைவிலேயே குணமடைந்தாள். ஒரு நல்ல முகூர்த்தத்தில் ஆனந்தன் அவளைத் திருமணம் செய்து கொண்டான். மந்திரவாதியின் மந்திரக்கோலைக் கைப்பற்றித் தன்னுடைமையாக்கிக் கொண்ட கபாலி அதை வைத்து மந்திரவித்தைகள் காட்டிப் பணம் சம்பாதிக்க முயன்றான். ஆனால் அந்த மந்திரக்கோல் வேலை செய்யாதது மட்டுமன்றி, கபாலியை நன்றாக அடித்துத் துவைக்க, அவன் அந்த ஊரைவிட்டே வெளியேறினான்.
இந்த இடத்தில் தன் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! கபாலியின் கதியைப் பார்த்தாயா? கபாலியின் மந்திரக்கோல் வேலை செய்யாதது மட்டுமன்றி அவனையே நையப் புடைத்தது. இவ்வாறு நடக்கக் காரணம் என்ன? வாள் பிடித்தவனுக்கு வாளினால்தான் சாவு என்பதுபோல் மந்திரசக்திகளினால் என்றாவது ஒருநாள் அவற்றைக் கையாள்பவனுக்கே தீங்கு நேரும் என்பது உண்மையா? என்னுடைய கேள்விகளுக்கு விடை தெரிந்தும் நீ மவுனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.

 

அதற்கு விக்கிரமன், “நீ சொல்வது சரியல்ல! ஆனந்தனுக்கு  உதவி புரிவதற்காகவே முதலில் அவனுடன் சிவநாதன், சஞ்சய், கபாலி ஆகியோர் சென்றனர். சிவநாதன் தன் நண்பன் கடலில் மூழ்க இருக்கையில் அவனுக்கு உதவி செய்து உயிரைக் காப்பாற்றினான். சஞ்சய் ஆனந்தனின் நோக்கம் நிறைவேற தன் இளமையையே தியாகம் செய்தான். கபாலி மந்திரவாதியிடமிருந்து மந்திரக் கோலை பறித்த பிறகு, அவன் மனத்தில் பணம் சம்பாதிக்கும் ஆசை ஏற்பட்டது. மந்திரக்கோலைத் தன் சுயநலத்திற்குப் பயன்படுத்த எண்ணியதால் வந்த விளைவுதான் அது!” என்றான்.

விக்கிரமனது சரியான பதிலினால் அவனுடைய மௌனம் கலையவே, அவன் சுமந்திருந்த உடலிலிருந்த வேதாளம் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கெண்டது.

ராமு சுயநலவாதியா?
ராமு சுயநலவாதியா?

ramu-suyanalavathiya

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தில் ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அதைத் தோளில் சுமந்தவாறு மயானத்தை நோக்கிச் செல்கையில், அதனுளிருந்த வேதாளம் அவனை நோக்கி, “மன்னா! நீ இந்த பயங்கர மயானத்தில் எதற்காக கஷ்டப்படுகிறாய்?  பரோபகாரச் சிந்தையுடன் பொது நலத்திற்காக இப்படிப் பாடுபடுகிறாயா? ஏன் என்றால் உலகில் பலர் பரோபகாரம், பொதுநலம் என்று பேசுவார்கள். ஆனால் சுயநலவாதிகளாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ராமு என்பவனின் கதையை இப்போது சொல்லப் போகிறேன். கதை சொல்லத் தொடங்கியது.

விஜயபுரியில் ரத்னாகரன் என்ற பணக்கார வியாபாரிக்கு மூன்று புதல்வர்கள் இருந்தனர். முதல் இரண்டு பிள்ளைகளும் திருமணம் செய்து கொண்டு தங்கள் தந்தையுடன் கூட இருந்து அவருடைய வியாபாரத்தில் உதவி செய்து வந்தனர். ஆனால் அவருடைய மூன்றாவது பிள்ளையான ராமுவிற்கு மட்டும் வியாபாரத்தில் நாட்டமேயில்லை. இயற்கையிலேயே மிகவும் தயாள குணம் படைத்த ராமு அவனை நாடி யார் எந்த உதவி கேட்டாலும் உடனே செய்து விடுவான். ராமுவின் போக்கு அவன் பெற்றோருக்குக் கவலையளித்தது.

 

ஒருநாள் ராமுவைப் பற்றி ரத்னாகரன் கவலையுடன் தன் நேருங்கிய நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கையில், அவருடைய நண்பர், “எனக்கு ராமுவைப் பற்றி நன்றகாத் தெரியும். மிகவும் தயாள குணம் படைத்தவன். என்னுடைய பெண் மனோரமா மிகவும் புத்திசாலி. அவளை ராமுவிற்குத் திருமணம் செய்து கொடுத்தால், அவள் அவனைத் திருத்தி விடுவாள்” என்றார். நண்பருடைய யோசனை சரியென்று தோன்றவே, ரத்னாகரன் அதற்கு சம்மதிக்க விரைவிலேயே ராமுவின் திருமணம் மனோரமாவுடன் இனிதே நடைபெற்றது. ஒருநாள் மனோரமா ராமுவிடம், “உங்களை உதவி செய்ய வேண்டாம் என்று தடுக்கவில்லை. ஆனால் நீங்கள் செய்யும் உதவியினால் ஏதாவது பயன் இருக்கிறதா என்று நீங்கள் யாருக்கெல்லாம் தானம் கொடுத்தீர்களோ அவர்களிடம் சென்று ஆராய்ச்சி செய்யுங்கள். அவர்கள் உங்கள் உதவியினால் சரியானபடி பயன் அடைந்தார்கள் என்று தோன்றினால், நீங்கள் தானம் செய்து கொண்டேயிருங்கள். இல்லையேல் உங்கள் சுபாவத்தை மாற்றிக் கொள்ளுங்கள்” என்றாள்.

 

அதை ஒப்புக் கொண்ட ராமு, முதலில் சமீபத்தில் தான் பண உதவி செய்திருந்த சங்கரன் வீட்டிற்குச் சென்றான். அங்கு சங்கரன் கவலையுடன் உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தான். ராமுவைப் பார்த்து அவன், “நீ தந்த பணத்தில் விருந்து தயாரித்து உண்டதில், என் பிள்ளைக்கும், தந்தைக்கும் உடல் நலம் கெட்டு விட்டது. பணமெல்லாம் விருந்தில் கரைத்து விட்டோம். இப்போது மருத்துவருக்கு வேறு தண்டச் செலவு” என்றான்.

இதுபோல் இன்னும் சிலர் வீடுகளுக்குச் சென்றான். ஆனால்  ஒருவர் கூட ராமு கொடுத்தப் பணத்தை உருப்படியாகப் பயன்படுத்தவில்லையென்று தெரிந்தது. ராமு ஏமாற்றத்துடன் வீடு திரும்பினான்.

தன் மனைவியிடம் தான் கண்டறிந்ததைப் பற்றி விளக்கிக் கூறிவிட்டு, “நீ சொன்னபடியே தான் நடந்திருக்கிறது. இனிமேலும், நான் மற்றவர்களுக்கு உதவி செய்வதையே விரும்புகிறேன். அது அவர்களுக்குப் பயன்படும்படி எந்த முறையில் உதவி செய்யலாம்?” என்று கேட்டான் ராமு. அதற்கு அவள், “மனிதர்களுக்கு மிக முக்கியமானது உடல் நலம்! மருத்துவத் தொழில் மூலம் மற்றவர்களுக்குப் படி உதவி செய்யலாமே!” என்றாள்.

“மருத்துவத் தொழிலா? அதை நான் கற்றுக் கொள்ளவே பல ஆண்டுகள் பிடிக்குமே?” என்று கவலையுடன் கேட்டான் ராமு. “வேதாரண்யத்தில் வைத்தியானந்தா என்ற யோகி இருக்கிறார். அவரிடம் கற்றுக் கொண்டால் ஒரே ஆண்டில் நீங்கள் நல்ல மருத்துவர் ஆக முடியும்” என்றாள் மனோரமா.

 

ராமு உடனே வேதாரண்யம் சென்று வைத்தியானந்தாவிடம் சீடனானான். மனோரமா கூறியதுபோல், ஒரே ஆண்டில் மருத்துவத்தை அவனுக்குக் கற்பித்த யோகி, ஆண்டு முடிவில் அவனிடம், “நீ மிகச் சிறந்த சீடனாக விளங்கினாய். எனக்குத் தெரிந்த அனைத்தையும் உனக்கு சொல்லிக் கொடுத்து விட்டேன். மந்திரங்கள் அடங்கிய ஓலைச்சுவடிகள் என்னிடம் உள்ளன. அதை இப்போது உனக்குத் தர மாட்டேன்.

 

நீ சுயநலநோக்கமே இல்லாமல், நேர்மையான மருத்துவனாகத் திகழ்கிறாய் என்பது நிரூபணம் ஆன பின்னரே, அதை உனக்குத் தருவேன். சென்று வா!” என்று கூறி அவர் அவனை ஆசீர்வதித்து அனுப்பினார்.

விஜயபுரி திரும்பிய ராமு தன் மனைவியிடம் நடந்ததையெல்லாம் விளக்கிக் கூறினான். அதற்கு அவள் அவனை நேர்மையாக மருத்துவத் தொழிலைச் செய்யுமாறு கூறினாள். அதன்படியே, ராமு தன் மருத்துவத் தொழிலை புனிதத் தொண்டாகக் கருதி செய்யலானான்.ஓராண்டிற்குப் பிறகு, ஒருநாள் ஒரு சன்னியாசி அவன் வீட்டிற்கு வந்தார்.

வீட்டின் வரவேற்பறையை அவன் மருத்துவ சாலையாகப் பயன்படுத்தி வந்தான். வாயிலிலே நின்று, சன்னியாசி உள்ளே நடப்பதை கூர்ந்து கவனித்தார். ராமு ஓர் ஏழை நோயாளியை சோதித்துக் கொண்டுஇருக்கையில், தடபுடலாக வந்துஇறங்கிய ஒரு பணக்கார ஆசாமி, “வைத்தியரே! முதலில் என்னை கவனியுங்கள். எத்தனை பணம் வேண்டுமானாலும் தருகிறேன்!” என்றார்.

 

அவரை ஒருமுறை கூர்ந்து பார்த்த ராமு, “ஐயா! இப்போது என்னை இந்த நோயாளியை சோதிக்க அனுமதியுங்கள். உங்களுடைய முறை வரும்போது உங்களைக் கூப்பிடுகிறேன்” என்றான்.தற்செயலாக வாயிலில் காத்துக் கொண்டிருந்த சன்னியாசியை நோக்கிய ராமு, “சுவாமி! நீங்கள் சிகிச்சைக்காக வரவில்லை என்று நினைக்கிறேன். தயவு செய்து என்னுடன் அமர்ந்து சாப்பிட்டு விட்டுச் செல்லுங்கள்” என்றான்.

 

அதற்கு சன்னியாசி, “அவசரம் இல்லையப்பா! நீ எல்லா நோயாளிகளையும் கவனித்து விட்டு வரும் வரை நான் காத்திருக்கிறேன்!” என்றார். அதன்படியே, ராமு எல்லா நோயாளிகளையும் கவனிக்கும் வரை பொறுமையாகக் காத்திருந்த சன்னியாசி, பிறகு அவனுடன் போஜனம் செய்ய அமர்ந்தார். உண்டு முடித்த பிறகு அவர் ராமுவை நோக்கி, “மகனே! நீ சிகிச்சை செய்யும் முறையை ஆரம்பத்திலிருந்தே கூர்ந்து கவனித்தேன். சுயநல நோக்கு சிறிதுமின்றி, நீ தொழில் புரிந்த விதம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. மந்திரங்கள் அடங்கிய ஓலைச்சுவடிகளைப் பெறத் தகுதியானவன்தான் நீ! உடனே, நீ வேதாரண்யம் சென்று அவற்றைப் பெற்றுக் கொள்!” என்றார்.

 

அவர் தன் குருநாதர் வைத்தியானந்தா அனுப்பி வைத்தவர் என்று ராமு புரிந்து கொண்டான். வேதாரண்யம் செல்வதைப் பற்றித் தன் மனைவியுடன் கலந்தாலோசித்து விட்டு வந்தவன். சன்னியாசியிடம், “சுவாமி! என்னைத் தேடி தினமும் இங்கு நோயாளிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர். நான் இல்லாமற்போனால் அவர்கள் கஷ்டப்படுவார்கள். என்றைய தினம் நோயாளிகள் யாரும் வரவில்லையோ, அன்று வேதாரண்யம் செல்வேன்!” என்றான் ராமு.

இதற்கிடையில் மன்னரின் தாயார் நோய்வாய்ப்பட, அரண்மனையிலிருந்து ஆட்கள் அவனை அழைத்துச் செல்ல வந்தனர். அவர்களிடம், “நான் விஜயபுரியை விட்டுச் சென்று அரண்மனையில் தங்கி மன்னரின் தாய்க்கு வைத்தியம் செய்தால், என்னை நம்பியுள்ள நோயாளிகள் திண்டாடிப் போவார்கள். அதனால், மன்னரின் தாயை இங்கு அனுப்பி வையுங்கள்” என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டான்.

 

அதையறிந்த சன்னியாசி மீண்டும் ராமுவிடம் வந்து, “மன்னரின் தாய் என்று அறிந்தும், அவருடைய அதிகாரத்திற்குத் தலை வணங்காமல் நீ உன்னுடைய நோயாளிகளின் நிலைமையே மிகவும் முக்கியமாகக் கருதினாய். நீ தலை சிறந்த மருத்துவனாக மாறத் தகுதியானவன். ஆகவே, நீ உடனே சென்று உன் குருவை சந்தித்து ஓலைச்சுவடிகளைப் பெறுவாய்!” என்றார். அப்போது ராமு மறுத்து விட்டான்.

 

ராமுவின் மனைவி மனோரமா நாளாவட்டத்தில் கவலையுற்றாள். நோயாளிகள் ராமுவை நாடி வராத நாள்களே இல்லை. இப்படியே சென்றால், ராமு எப்போதுதான் தன் குருவிடம் சென்று ஓலைச்சுவடிகளைப் பெறுவார்? மந்திர  சிகிச்சையும் தன் கணவன் கற்றுக் கொண்டால், இன்னும் பல நோயாளிகள் பலம் அடைவார்கள் எனத் தோன்றியது. ராமுவை வேதாரண்யம் செல்லுமாறு பலமுறை கூறத் தொடங்கினாள். ஆனால் ராமு மறுத்து விட்டான்.

 

மனோரமா சன்னியாசியை அழைத்து ராமுவை எவ்வாறு வேதாரண்யத்திற்கு அனுப்புவது என்று ஆலோசிக்க, அவருடைய யோசனைப்படி தான் நோய்வாய்ப் பட்டது போல் பாசாங்கு செய்தாள். ராமு தனக்குத் தெரிந்த எல்லா மருந்துகளை அளித்தும், அவள் குணமாகாதது போல் நடித்தாள். சன்னியாசி ராமுவை அழைத்து, “உன் மனைவியின் நோய் மருந்தினால் தீராது மந்திரத்தினால்தான் தீரும்! இப்போதாவது நீ உடனே உன் குருவிடம் சென்று ஓலைச்சுவடிகளைப் பெற்று வா!” என்றார். ராமுவும் உடனே வேதாரண்யம் சென்று தன் குருவிடமிருந்து ஓலைச்சுவடிகளை வாங்கி வந்தான்.

அவற்றைக் கற்றுத் தேர்ந்து, தன் மனைவியின் நோய்க்கு மந்திரம் ஓத, அவளும் குணமானதுபோல் நடித்தாள். அன்றுமுதல் ராமு மருந்தினால் தீராத நோய்களையும் மந்திரத்தினால் தீர்த்து வைத்து, அந்தப் பகுதியில் தலைசிறந்த வைத்தியனாகத் திகழ்ந்தான்.

 

இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், “மன்னா! இந்த ராமுவின் சுயநலத்தை என்னவென்று சொல்வது? பலமுறை சன்னியாசி குருவிடம் சென்று ஓலைச்சுவடிகளைப் பெற்றுக் கொள்ளச் சொல்லியும் போகாதவன், தன் மனைவியின் பொருட்டு தனது கொள்கையைக் காற்றில் பறக்க விட்டு விட்டான். சுயநல நோக்கம் இன்றி நேர்மையாக மருத்துவத் தொழில் செய்தால் மட்டுமே ஒலைச் சுவடிகளைத் தருவேன் என்று சொல்லிய அவன் குரு அவனுக்கு அவற்றை எப்படித் தந்தார்? என் சந்தேகத்திற்கு விளக்கம் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.

 

அதற்கு விக்கிரமன், “ராமுவை சுயநலக்காரன் என்று சொல்வது முற்றிலும் தவறு. தன் நோயாளிகளை பரிதவிக்க விட்டுவிட்டு குருவிடம் செல்ல மறுத்தது அவன் தன் நோயாளிகளின் மீது கொண்டிருந்த அக்கறையைக் காட்டுகிறது. ஆனால் மனைவிக்கே தீராத நோய் எனும் போது எந்தக் கணவனால் சும்மா இருக்க முடியும்? அவளைக் குணப்படுத்த அவன் தன் கொள்கையிலிருந்து விலகி குருவிடம் சென்றது ஒரு போதும் தவறு ஆகாது. ராமுவின் நேர்மையை நன்கு அறிந்து  வைத்து இருந்த குருவும் அதனால்தான் சிறிதுகூட தயக்கமின்றி ஓலைச்
சுவடிகளை அவனுக்கு அளித்தார்” என்றான்.

 

விக்கிரமனுடைய சரியான பதிலினால் அவனது மௌனம் கலையவே, வேதாளம் தான் சுமந்து வந்த உடலோடு பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

 

வாரிசாகத் தகுதியானவன் யார் ?
வாரிசாகத் தகுதியானவன் யார் ?

varisu

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில்தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தி, பின்னர் அதைத் தோளில் சுமந்து கொண்டுசெல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா? நீவீரமும், பராக்கிரமும் மிகுந்தவன் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு மன்னனுக்கு வீரமும், பராக்கிரமும் எவ்வளவு தேவை என்று உன்னைப்பார்த்தாலே அறிந்து கொள்ளலாம். ஆனால் அறிவில் சிறந்தவர்கள் என்றுகருதப்படுபவர்கள் சிலருக்கு இந்த சாதாரண உண்மை புலப்படுவதில்லை.அவர்களுடைய தவறான ஆலோசனைகளினால் நாட்டிற்கே பெரிய தீங்கு உண்டாகக் கூடும்.

விக்ரமன் – வேதாளம் கதைகளில் , விக்ரமன் வேதாளத்திற்கு அளித்த பதில்களில் நீங்கள் ஏற்றுக்கொள்ளாத பதிலைக் கொண்ட கதை எது ? ஏன் ?

அத்தகைய அறிவிற்சிறந்த ஒருவரின் கதையைக் கூறுகிறேன் கேள்!” என்று கதை சொல்லலாயிற்று. மன்னர் சுதட்சிணர் ஆட்சிக்காலத்தில் நாட்டில் சுபிட்சம் நிலவியது. மக்கள் மனநிறைவுடன் வாழ்க்கை நடத்தினார். ஆனால் மன்னருக்கு வாரிசு இல்லாதது ஒரு பெருங்குறையாக இருந்தது. தனக்குப் பிறகு ராஜ்யத்தை ஆளப்போவது யார் என்று பெருங்கவலையில் மூழ்கிய மன்னர் ஒருநாள் தன் முதன்மந்திரி கங்காதரரை அழைத்து அதைப்பற்றி ஆலோசித்தார்.

 

“மந்திரியாரே! இந்த ராஜ்யத்தை நான் ஒழுங்காக நிர்வாகம் செய்து வருகிறேன். ஆனால் எனக்குப் பிறகு யார் ஆட்சிப் பொறுப்பை ஏற்பார்கள் என்பது எனக்குப் பெரும் கவலையை அளிக்கிறது. எனக்குப்பிறகு சிம்மாசனத்தில் அமரப் போவது யார் என்பதை இப்போதே நாம் தீர்மானித்தால் நல்லது. ராணியைக் கலந்து ஆலோசித்தால் அவள் தன்னுடைய உறவினர்களின் பிள்ளைகள் யாரையாவது தத்து எடுத்துக் கொள்ளுமாறு சொல்கிறாள். அதில் எனக்கு விருப்பமில்லை. எனக்குப் பிறகு முடிசூட்டிக் கொள்பவன் வீரதீரப் பராக்கிரமனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட வீரனை நாம் எப்படித் தேடுவது?” என்றார்.

 

அதற்கு மந்திரி, “பிரபு! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நமது தலைநகரில் உள்ள குருகுலத்தில் வித்யாசாகர் அவர்கள் பல க்ஷத்திரிய மாணவர்களுக்கு வில் வித்தை, வாட்போர், மல்யுத்தம் ஆகியவற்றையும், ராஜாங்க நிர்வாகத்தையும், போர்த்தந்திரங்களையும் கற்பித்து வருகிறார். அவரிடம் சென்றால், நம் ராஜ்யத்தின் எதிர்கால வாரிசை நாம் தேர்ந்தெடுக்கலாம்” என்றார். மன்னருக்கு அது சரியான யோசனை என்ற தோன்றவே, இருவரும் மறுநாளே குருகுலத்திற்குச் சென்று, வித்யாசாகரை சந்தித்து, தாங்கள் வந்த காரியத்தைப் பற்றிக் கூறினர்.

 

அதற்கு குரு வித்யாசாகர், “மகாராஜா! நீங்கள் சரியான சமயத்தில்தான் வந்திருக்கிறீர்கள். விஜயதசமியையொட்டி, குரு குலத்தில் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. அந்தப் போட்டிகளைப் பார்வை இட்டால், உங்களுக்குத் தேவையான வீரனை நீங்களே தேர்வு செய்து கொள்ள முடியும்” என்றார்.

மறுநாள், போட்டியில் பங்கேற்ற மூன்று பேர் நீண்ட தூரம் பயணம் செல்ல வேண்டும் என குரு உத்தரவிட்டார்.இதன் படி தங்கள் பயணத்தைத் தொடங்கிய மூன்று பேரும் ஒருமாதப் பயணத்திற்குப்பின் குருகுலத்திற்குத் திரும்பினர். அவர்கள் திரும்பி வந்தபோது, குருகுலத்தில் குரு வித்யாசாகருடன், மன்னரும், மந்திரியும் அமர்ந்திருந்தனர்.
அவர்களை வரவேற்ற குரு, மூவரையும் ஒருவர் பின் ஒருவராக தங்கள் பயண அனுபவங்களைக் கூறும்படிச் சொன்னார். முதலில் முன்வந்த வில்வித்தை நிபுணனான ஜெயன் “குருவே! நான் வடக்குதிசையை நோக்கிப் பயணமானேன். வழியில் எனக்கு எந்தவிதத் தடங்கலும் ஏற்படவில்லை. சென்ற இடங்களிலெல்லாம் மக்கள் மகிழ்ச்சியுடன் தென்பட்டனர். ஆனால் நம் ராஜ்யத்து எல்லையில் உள்ள காட்டுப்பிரதேசத்தில் நான் கண்ட காட்சி என்னைத் திடுக்கிடச் செய்தது. அங்கு சில இளைஞர்கள் இரகசியமாக ஆயுதப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தனர்.

 

மறைந்திருந்துத் தாக்குவது, அரசாங்க ஆயுதங்களைத் திருடுவது, ரகசிய ஆயுதத் தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டிருந்த அந்த இளைஞர்கள் பக்கத்து ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள். வறுமையில் வாடும் அந்த இளைஞர்களை யாரோ ஒருவன் சைகாட்டி அவ்வாறு ஆயுதப் பயிற்சி அளிப்பதைப் பார்த்தேன். நமது ராஜ்யத்தில் இவ்வாறு தீயசக்திகள் உருவாவதைப் பொறுக்க முடியாமல், இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சியளித்து அவர்களைத் தவறான வழியில் ஈடுபடுத்த முயன்ற பயிற்சியாளனை அம்பெய்திக் கொன்று விட்டேன். என்னுடைய கடமையை நிறைவேற்றியதற்காகப் பெருமைப்படுகிறேன்” என்றான்.
அடுத்து வந்த விஜயன், “நான் தென்திசை நோக்கிப் பயணம் சென்றேன். தென்திசைப் பகுதிகளில் சட்டம், ஒழுங்கு சரியான முறையில் இல்லை என்பதை அறிந்தேன். அங்குள்ள அரசாங்க அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதே இதற்குக் காரணம் என்று அறிந்தேன். எங்கு பார்த்தாலும் வழிப்பறி கொள்ளைகள் நடந்து கொண்டிருந்தன. அங்கிருந்த இளைஞர்களுக்குக் கொள்ளைக்காரர்களை எதிர்த்துப் போரிட தைரியம் இல்லை. அந்த நிலைமையை மாற்ற எண்ணிய நான் அங்கிருந்த இளைஞர்களைத் திரட்டி அவர்களுக்கு வாள் சண்டை கற்றுக் கொடுத்தேன். இப்போது அங்குள்ள இளைஞர்கள் எனது முயற்சியினால் வீரம் மிகுந்தவர்களாக மாறிவிட்டனர்.” என்றான்.

அடுத்து, மூன்றாமவன் கௌதமன் முன் வந்து, “நான் கிழக்கு திசையில் பயணம் சென்றேன். ராஜ்யத்தின் கிழக்குப் பகுதி சுபிட்சமாகவும், அமைதியாகவும் இருந்தது. அதனால் என்னுடைய போர்க்கலைகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஒருநாள் அங்குள்ள கோயில் ஒன்றில் வடித்திருந்த சிற்பத்தின் விரல்களுக்குள் ஒரு பல்லி சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. எப்படி சிக்கியது என்று தெரியவில்லை. ஆனால், அந்த இடத்தை விட்டு மீள முடியாமல் தவித்ததைக் கண்டேன். அப்போது ஓர் அதிசயக் காட்சியைக் கண்டேன். மற்ற பல்லிகள் தங்கள் வாயில் உணவைக் கவ்விக் கொண்டு வந்து சிக்கிக் கொண்டிருந்த பல்லிக்கு அளித்துக் கொண்டிருந்தன. ஓரறிவு படைத்த சாதாரண பல்லிகளுக்குள் நிலவிய அந்த நல்லிணக்கத்தைக் கண்டு வியந்த நான், ஒரு சிற்பியை வரவழைத்து, சிற்பங்களின் விரல்களை உடைத்து, அது தப்பிக்க வழி செய்தேன்.
திரும்பி வரும் வழியில், ஒரு காட்டில் கிணற்றினுள் ஒரு யானைக் குட்டி விழுந்திருந்ததைக் கண்டேன். நான் காட்டுவாசி மக்களை அங்கு அழைத்து வந்து, அந்த யானைக் குட்டியை கிணற்றிலிருந்து வெளியே மீட்க ஏற்பாடு செய்தேன். பிறகு, அந்த ஆட்களிடம் பல்லிகள், யானைகள் போன்ற மிருகங்கள் தங்களுக்குள் உதவி செய்து கொள்வதை சுட்டிக்காட்டி, மனிதர்களாகிய நாமும் அதிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று உபதேசம் செய்தேன். பொறாமை, பேராசை ஆகியவற்றின் காரணமாக, மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவது எத்தகைய அறிவீனம் என்பதை எடுத்துரைத்தேன்” என்றான்.

 

உடனே, மன்னரும், மந்திரியும் தனியே சென்று தங்களுக்குள் கலந்து ஆலோசித்தனர். தாங்கள் தேடிக் கொண்டிருந்த வீரமும், பராக்கிரமும் ஜெயனிடமும், விஜயனிடமும் பரிபூரணமாக இருந்ததைக் கண்டு, அவர்களில் ஒருவனையே இளவரசனாகத் தேர்வு செய்ய வேண்டுமெனத் தீர்மானித்தபின், குரு வித்யாசாகரின் கருத்தினை அறிய அவரிடம் சென்றனர்.
வித்யாசாகர் மன்னரை நோக்கி, “மகாராஜா! என்னுடைய அபிப்பிராயப்படி மூவரில் கௌதமன்தான் உங்களுடைய வாரிசாகத் தகுதியானவன். அவனிடம் வீரம், பராக்கிரமம் ஆகியவற்றுடன், மனிதகுலத்திற்குத் தேவையான ஜீவகாருண்யமும் நிரம்பியுள்ளது. அத்தகைய ஜீவகாருண்யச் சிந்தனை உள்ளவனே எதிர்கால மன்னனாகத் தகுதியானவன்” என்றார்.
குருவின் கருத்தினைக் கேட்ட மன்னரும், மந்திரியும் மிகுந்த ஆச்சரியப்பட்டனர். நீண்டநேரம் யோசித்த பிறகு மன்னர், “குருதேவரே! உங்கள் கருத்தினை ஏற்கிறேன்” என்று சொல்லிவிட்டு, மந்திரியுடன் திரும்பிச் சென்றார்.
இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், “மன்னா! மிகவும் அறிவாளியான குரு வித்யாசாகர் சரியானபடி முடிவு செய்வார் என்று நம்பி அவரை மன்னர் அணுகியது எவ்வளவு தவறாகப் போயிற்று? வீரதீர சாகசங்கள் புரிந்த ஜெயனையும், விஜயனையும் ஒதுக்கிவிட்டு, புத்தரைப் போல் ஜீவகாருண்யத்தை போதித்த கௌதமனைப் போய் யாராவது இளவரசனாக சிபாரிசு செய்வார்களா? இவை யாவும் தெரிந்தும், மன்னர் ஏன் குருவின் முடிவை ஏற்றுக் கொண்டார்? என்

சந்தேகத்திற்கு விளக்கம் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது. அதற்கு விக்கிரமன், “அரசவை ஆட்சி பீடத்தில் அமரப் போகும் இளவரசனுக்கு வீரமும், பராக்கிரமமும் தேவை என்பது மறுக்க முடியாத உண்மை! அதைத்தான் மன்னர் சுதட்சிணர் எதிர்பார்த்தார். ஆனால் அவையிரண்டும் மட்டும்  ளவரசனிடமிருந்தால் போதாது. மன்னன் என்பவன் யார்? தன் குடிமக்களின் நலத்திற்காக அல்லும் பகலும் பாடுபடுபவனே மன்னன். சட்டம், அமைதியை நிலைநாட்ட எவ்வாறு வீரம் தேவையோ, அவ்வாறு மக்களின் நலம் காக்க நெஞ்சில் ஈரமும் தேவை! ஜெயன், விஜயன் இருவரிடம் வீரத்தை மட்டுமே கண்ட குரு, கௌதமனிடம் வீரத்துடன், ஜீவகாருண்யத்தையும் கண்டார்.

 

தங்களுக்குள் ஒற்றுமையின்றி சண்டையிடும் மக்களை நல்லிணக்கத்துடன் வாழ, அன்புக்கரம் நீட்டுவதே மேல்! நோய் வந்த பின் சிகிச்சை அளிப்பதைவிட, நோய் வருமுன் காப்பது சிறந்ததல்லவா! கௌதமனின் அணுகுமுறையினால் நாட்டில், அமைதியும், நல்லிணக்கமும் நிலவும் என்பதை குரு புரிந்து கொண்டார். மற்றொன்றையும் நோக்க வேண்டும். தனத வீர, தீரப் பராக்கிரமத்தைக் காட்ட கௌதமனுக்குப் பயணத்தில் வாய்ப்பு கிடைக்கவில்லையே தவிர, அவனுக்கு வீரமேயில்லை என்று சொல்ல முடியாதே! அவன் சிறந்த மல்யுத்த வீரன்! தேவைப்படும் போது வீரத்தைக் காட்டவும், மற்ற சமயங்களில் அன்பினைப் பொழியவும் அவனால் முடியும் என்பதால் தான் குரு அவனைத் தேர்வு செய்தார். நீண்ட சிந்தனைக்குப் பிறகு, மன்னருக்கு அது விளங்கவே அவரும் குருவின் கருத்தினை ஒப்புக்கொண்டார்” என்றான்.

 

விக்கிரமனின் சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

சேனாதிபதி பதவிக்கு தகுதியானவன் யார்?
சேனாதிபதி பதவிக்கு தகுதியானவன் யார்?

senathipathi-pathavi

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேஇறங்கி, அவன் அதைத் தூக்கிக்கொண்டு செல்லும் போது, அதனுள்ளிருந்த வேதாளம், “மன்னா! எந்த இலட்சியத்தை நாடி, இவ்வாறு நடு இரவில் மயானத்தில் என்னை சுமந்து கொண்டு திரிகிறாய் என்பது எனக்குத் தெரியவில்லை.

சில சமயங்களில் அறிவில் சிறந்தவர்கள் என்று நாம் கருதும் சிலரது ஆலோசனைகள் நம்மைத் தவறான பாதையில் அழைத்துச் செல்லக் கூடும்! அவ்வாறு, அறிவிற்சிறந்தவர் என்று தான் கருதிய மந்திரியின் சொல் கேட்டு, தவறிழைத்த மன்னன் ஒருவனது கதையை உனக்குக் கூறகிறேன்!” என்று சொல்லிவிட்டு, தன் கதையைத் தொடங்கியது.
மகிபாலன் என்ற மன்னன் தனது முதல் மந்திரியான தர்மசீலரின் ஆலோசனைப்படி ஆட்சி செலுத்தி வந்தான். ஒரு சமயம், அவனுடைய சேனாதிபதி திடீரென இறந்து போக, புதிய சேனாதிபதியை நயமிக்கும் பொறுப்பை மகிபாலன் தர்மசீலரிடம் ஒப்படைத்தான்.

உடனே தர்மசீலரும் நாடெங்கிலும் உள்ள பல வீர இளைஞர்களைத் தலைநகரத்திற்கு வந்து வாட்போர், வில் வித்தை, மல்யுத்தம் படைகளை இயக்கும் ஆற்றல், யுத்தத் தந்திரங்கள் ஆகியவற்றில் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த அழைத்தார். அந்த அறிவிப்பின்படி, ஏராளமான வீரர்கள் தலைநகரில் கூடினர். ஒவ்வொரு நாளும், பலருடைய திறமைகளையும் உன்னிப்பாக கவனித்த தர்மசீலர் இறுதியில் ரூபசேனன், பராக்கிரமன் ஆகிய இருவரைத் தேர்வு செய்தார். இருவருமே அனைத்து கலைகளிலும் சமமாக இருந்தனர்.

அதனால், இருவரில் ஒருவரை மட்டும் தேர்ந்துஎடுப்பதில் தர்மசீலருக்கு சிரமம் ஏற்பட்டது. அவர்களை நேரிலே அழைத்த மந்திரி, “நீங்கள் இருவரும் அனைத்து கலைகளிலும் சரிசமமாக இருக்கிறீர்கள். சோதிக்கப்பட வேண்டிய சில குணங்கள் இன்னும் சில உள்ளன. அவற்றை சோதிக்க, நான் உங்களிடம் சபையில் எல்லார் முன்னிலையிலும் மூன்று கேள்விகள் கேட்பேன். அவற்றிற்கு நீங்கள் அளிக்கும் பதில்களைப் பொறுத்து உங்களில் ஒருவரைத் தேர்வு செய்வேன். சம்மதமா?” என்று கேட்டார். இருவரும் அதற்கு சம்மதித்தனர்.

அதன்படி, மறுநாள் இருவரும் சபைக்கு வந்தனர். சபை நரம்பியிருக்க, மன்னரும் மந்திரியும் வந்து தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். தர்மசீலர் எழுந்து இருவரையும் நோக்கி, “சேனாதிபதி பதவிக்குரிய மற்றும் சில குணாதிசயங்களை சோதிக்க நான் உங்களை மூன்று கேள்விகள் கேட்கப் போவதாகக் கூறினேன். என்னுடைய முதல் கேள்வி: பிரதான சாலையில், இரு இளைஞர்கள் ஒருவரோடு  சண்டையிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கிறீர்கள்! உடனே, நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்றார்.

உடனே பராக்கிரமன், “என்னிலும் வயதில் சிறியவன் ரூபசேனன்! முதலில் அவனுக்கு வாய்ப்பை அளியுங்கள்!” என்றான். தர்மசீலரும் ரூபசேனன் பக்கம் திரும்பினார். உடனே ரூபசேனன், “ஐயா! பிரதான சாலையில் இருவர் சண்டையிடுவது சட்டப்படி குற்றம்! அதனால் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை செய்வேன். பிறகு அவர்கள்  இருவரிடம் சண்டையின் காரணத்தை அறிந்து அவர்களை மன்னர் முன் தீர்ப்பு வழங்குவதற்காக நிறுத்துவேன்” என்றான்.

பராக்கிரமனோ, “இருவர் பிரதான சாலையில் சண்டையிடுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இருக்கும்! நான் அவர்கள் சண்டையிடுவதைத் தவிர்த்து, காரணம் கேட்பேன்! தவறு யார் பேரில் உள்ளது என்று தெரிந்து கொண்டு அவர்களது சண்டைக்கான காரணத்திற்குத் தீர்வு கொடுப்பேன்” என்றான். சபையில் தர்மசீலர், மன்னர் உட்பட அனைவருக்கும் அவனுடைய பதில் திருப்திகரமாக இருந்தது. தர்மசீலர் தனது அடுத்த கேள்வியைக் கேட்டார். “நாட்டில் சில கலகக்காரர்கள் மக்களை மன்னருக்கு எதிராக ராஜதுரோகக் காரியங்களில் தூண்டி விடுகின்றனர் என்ற தகவல் உங்களுக்குக் கிடைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்.
அதற்கு ரூபசேனன், “எனது திறமைவாய்ந்த ஒற்றர்கள் மூலம் அந்த சதிகாரர்களைக் கண்டு பிடித்து சிறையில் அடைத்து விசாரணை செய்வேன். அவர்களுடைய தலைவன் யார், அவர்கள் எந்த மாதிரியான நாசவேலைகளில் ஈடுபடுகின்றனர், அவர்களுக்கும் நமது பகைவர்களுக்கும் தொடர்பு உள்ளதா, என்பது போன்ற ரகசியங்களைக் கண்டு பிடித்து விட்டு சேனையின் உதவியோடு அவர்களை அழித்து விடுவேன்” என்று ஆவேசமாகக் கூறினான்.

பராக்கிரமன், “ராஜதுரோக வேலையில் சிலர் ஈடுபடுகின்றனர் எனில் அதற்கு ஏதாவது காரணம் இருக்கும்! சதிகாரர்களிடம் அந்தக் காரணத்தை அறிய முயல்வேன். நியாயமான காரணங்களுக்காக அவர்கள் சதிவேலையில் ஈடுபட்டுஇருந்தால், அவர்கள் குறைகளை மன்னருக்குத் தெரிவித்து நீதி வழங்குவேன். ஆனால் பேராசையின் பொருட்டு அவ்வாறு செய்கிறார்களெனில், அவர்களுக்கு தண்டனை அளிப்பேன்!” என்றான்.

பராக்கிரமனின் அறிவுப்பூர்வமான பதிலைக் கேட்டு சபையினர் கரகோஷம் செய்தனர். பிறகு தர்மசீலர் தனது மூன்றாவது கேள்வியைக் கேட்டார். “மன்னருடன் வேட்டையாடச் செல்லும்போது, அவர் மீது ஒரு சிங்கம் திடீரெனப் பாய்ந்தால், என்ன செய்வீர்கள்?” என்றார்.
“என் உயிரைக் கொடுத்து மன்னரைக் காப்பாற்றுவேன்!” என்றான் ரூபசேனன்.

“நான் உடனிருந்தால் மன்னர் மீது சிங்கம் பாய்வதற்கான சூழ்நிலையே உண்டாகாது!” என்றான் பராக்கிரமன். அவனுடைய பதிலைக் கேட்டு, சபையோர் பலமாக கரகோஷம் செய்தனர். சற்று நேரத்திற்குப்பின் தர்மசீலர் இருவரையும் நோக்கி, “உங்களிடம் மூன்று கேள்விகள் மட்டுமே கேட்பதாகக் கூறினேன். ஆனால், இப்போது கடைசியாக மற்றொரு கேள்வியும் கேட்கப் போகிறேன். நமக்கு அருகிலுள்ள ராஜ்யங்கள் மூன்றில், ஒரு ராஜ்யத்தில் தங்கம் நிறைய இருக்கிறது. மற்றொன்றில் தானியங்கள் நிரம்பி உள்ளன. மூன்றாவது ராஜ்யத்தில் ஆயுதங்கள் நிறைய உள்ளன. எந்த ராஜ்யத்தின் மீது படையெடுத்துக் கைப்பற்றினால், நமக்குப் பயன் உண்டாகும்?” என்றார்.

உடனே ரூபசேனன், “இந்த விஷயத்தில் மன்னரின் தீர்மானமே இறுதியானது. மந்திரியுடன் ஆலோசித்து அவர் எந்த ராஜ்யத்தின் மீது படையெடுக்கக் கூறுகிறாரோ, அதன் மீது படை எடுப்பேன்!” என்றான்.

“படையை பலப்படுத்துவது சேனாதிபதியின் முதல் கடமையாகும். அதற்கு ஆயுதங்கள் மிகவும் அவசியம். ஆயுதங்கள் நமக்குக் கிடைத்துவிட்டால் நம்மால் எளிதில் மற்ற இரண்டு ராஜ்யத்தையும் கைப்பற்றி விடலாம். தைரிய லஷ்மி எங்கிருக்கிறாளோ அங்குதான் மற்ற ஏழு லட்சுமிகளும் வசிக்கும் என்று உங்களுக்குத்தான் தெரியுமே! ஆகையால் நான் முதலில் எந்த ராஜ்யத்தில் ஆயுதங்கள் உள்ளனவோ அதன் மீது தான் படையெடுப்பேன்” என்று மிகவும் கம்பீரமாகப் அளித்தான்.

பராக்கிரமனுடைய அறிவுப்பூர்வமான பதிலைக் கேட்டு சபையில் கரகோஷம் உண்டாகியது. மன்னர் கண்டிப்பாக பராக்கிரமனைத்தான் தேர்ந்தெடுப்பார் என்று சபையோருக்கு தெரிந்து விட்டது. அப்படி இருக்கையில் அவர் ரூபசேனனை சேனாதிபதியாக தேர்ந்தெடுப்பதாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டார். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனிடம், “மன்னா!  பராக்கிரமன், ரூபசேனன் இருவருமே போர்க் கலைகளில் சரிசமமாகக் காணப்பட்டார்கள். ஆகையினால், அவர்களுடைய மற்ற தகுதிகளைப் பரிசீலிக்க மந்திரி தர்மசீலர் முயன்றது தவறில்லை.

ஆனால், அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் “மன்னரிடம் அறிவிப்பேன்! அவர் கட்டளைப்படி நடப்பேன்” என்று பதில் கூறிய ரூபசேனனைவிட, பிரச்சினைகளின் மூலகாரணத்தை ஆராய்ந்து தானே செயற்படும்படி பராக்கிரமன் அளித்த அறிவுப்பூர்வமான விடைகளிலிருந்து அவனே சேனாதிபதிப் பதவிக்குத் தகுதியானவன் என்று தெளிவாக இருக்கிறதல்லவா? அவனுடைய பதில்களை சபையோர் மட்டுமன்றி, தர்மசீலரும் பாராட்டினார். அப்படிஇருந்தும், தர்மசீலர் கடைசியில் ரூபசேனனைத் தேர்ந்தெடுத்து அவரது தவறான முடிவைக் காட்டுகிறதல்லவா?

இதிலிருந்து, தர்மசீலர் மதிநுட்பத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல், ஒரு சாதாரண வீரனை சேனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தது, அவர் நடுநிலையிலிருந்து தவறிவிட்டார் என்பதைக் காட்டுகிறது அல்லவா? ரூபசேனனிடம் அப்படிஎன்ன குணம் அல்லது திறமை உள்ளது என்று அவனைத் தேர்ந்தெடுத்தார்? என்னுடைய இந்த சந்தேகங்களுக்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்குநூறாகும்” என்றது.

அதற்கு விக்கிரமன், “மதிநுட்பத்தை மட்டும் வைத்து இருவரையும் பரிசீலித்தால், பராக்கிரமன் நிச்சயமாக ரூபசேனனை விடச் சிறந்தவன்தான்! ஆனால், தர்மசீலர் முன்னமே கூறியபடி, சேனாதிபதி பதவிக்குரிய குணங்களில் முக்கியமான ஒன்று பராக்கிரமனிடம் இல்லை. ரூபசேனனிடம் தான் இருந்தது. ஒரு சேனாதிபதியின் கடமை தனது படைக்குத் தலைமை வகித்து, அவர்களை ஊக்குவித்து, தனது யுத்த தந்திரங்களால் போரினை வெல்வது மட்டும் தான்! மற்றபடி, எந்தப் பிரச்சினைக்கும் முடிவு எடுப்பது அவனுடைய அதிகாரத்தில் இல்லை.
எந்த ஒரு விஷயத்திலும் தீர்மானம் செய்வது மன்னருக்கே உரித்தான உரிமை. அதில் சேனாதிபதி தலையிடக்கூடாது. அரசாங்க விஷயங்களில் ஆலோசனை கூறும் உரிமை மந்திரிக்கு மட்டுமே உண்டு. அவரை ஆலோசனை கேட்பதும், அதன்படி, நடப்பதும், நடக்காததும் மன்னருடைய உரிமை. எல்லா விஷயங்களிலும் தான் நுழைந்து தானே முடிவெடுக்கும் சேனாதிபதி ஆபத்தானவன்! மன்னருடைய அதிகாரத்தை அவன் தன் கையில் எடுத்துக் கொள்வது சற்றும் சரியல்ல!

பராக்கிரமன் அளித்த விடைகளில் இருந்து அவன் மேதாவி என்பது தெளிவானாலும், அத்தகைய மேதாவிகள் மன்னருக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்க மாட்டார்கள் என்று மந்திரி நம்பினார். அதனால்தான் கீழ்படிந்து நடக்கும் சுபாவம் கொண்ட ரூபசேனனை சேனாதிபதியாகப் பரிந்துரை செய்தார். மந்திரியின் கருத்து அவருடைய தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது. ஆகவே, அவர் எடுத்த முடிவே சரியானது!” என்றான்.

விக்கிரமனது சரியான பதிலினால் அவனது மௌனம் கலையவே, வேதாளம் தான் புகுந்திருந்த உடலுடன் மீண்டும் பறந்து போய் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

புரிந்து கொள்ளாத மக்கள்

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேயிறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம், “”மன்னா! யாரையாவது பழி தீர்ப்பதற்காக இந்த நள்ளிரவில் மயானத்தில் அலைந்து திரிந்து உன்னை நீயே வருத்திக் கொள்கிறாயா? உன் நோக்கம் தான் என்ன? உன்னைப் போல் சிலர் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சபதம் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின் அவர்களுடைய ஆவேசம் தணிந்து போய் விடுகிறது.

குணவீரமன்  என்ற இளைஞன் தனது சிந்தனைகளைப் புரிந்து கொள்ளாத கிராமத்தினரை வெறுத்து அவர்களை விட்டு விலகியவன் இறுதியில் அவர்களிடமே மீண்டும் திரும்பி வந்தான். அவனுடைய கதையை உனக்குக் கூறுகிறேன் கேள்!” என்றது. அன்னாவரம் என்ற கிராமம் மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் நறைந்த கிராமம். அங்கிருந்த விவசாயிகள் பல நூதனமான பயிர்களை விவசாயம் செய்து வந்தனர். பலவிதமான கிழங்குகளையும், பழமரங்களையும் மூலிகைகளையும் பயிர்செய்து, அவற்றையே தங்கள் முக்கிய உணவாகவும் கொண்டு இருந்தனர்.

அந்த கிராமத்தில் குணவர்மன் என்ற இளைஞன் வசித்து வந்தான். சிறுவயது முதலே, அவன் தீவிர சிந்தனையாளனாக இருந்தான். எப்போதும், எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டேயிருந்தவனை, கிராமத்தினர் சோம்பேறி என்று இளக்காரம் செய்தனர். அவனுடைய வாழ்க்கையின் கண்ணோட்டமே வேறுவிதமாக இருந்தது. கிராமத்து மனிதர்களுடைய வாழ்க்கைமுறை அவனுக்குப் பிடிக்கவில்லை.

“கடவுள் கொடுத்த பகுத்தறிவை நன்குப் பயன்படுத்த வேண்டும். கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் உலகில் எத்தனையோ இருக்கின்றன” என்பது போன்ற அவனுடைய புதுமையான சிந்தனைகள் கிராமத்தினரின் மூளையில் நுழையவில்லை.

தன்னுடைய புதிய கருத்துகளை யாரும் ஏற்காததால் சலிப்படைந்த குணவர்மன் ஒருநாள் தன் தந்தையிடம், “அப்பா! இங்குள்ள மக்கள் இயந்திரம்போல் இயங்குகின்றனர். இங்கிருந்தால் என் வாழ்க்கை வீணாகிவிடும்! தண்டகாரண்யக் காட்டில் புஜங்கர் என்பவர் நடத்தும் குருகுலத்தில் சேர்ந்து, என் கல்வி அறிவை அபிவிருத்தி செய்து கொள்ள விரும்புகிறேன். பிறகு அங்கிருந்து திரும்பி வந்து, எந்த கிராமத்தினர் என்னை ஏளனம் செய்கின்றனரோ, அவர்கள் எனக்கு மரியாதை செலுத்துமாறு செய்வேன்!” என்று கூறி விட்டு, தண்டகாரண்யத்தை நோக்கிச் சென்றான்.

புஜங்கரின் ஆசிரமத்தை நெருங்கிக் கொண்டுஇருக்கையில், ஒரு தேர் அவன் பின்னால் வந்தது. அவனிடம் வந்து தேரை நிறுத்திய தேரோட்டி, “தம்பி! நீ எங்கு செல்கிறாய்?” என்று கேட்க, குணவர்மன் பதில் சொல்லவும், அவன், “நானும் அங்குதான் செல்கிறேன்! நீயும் தேரில் ஏறிக்கொள்! மன்னரின் தாய்க்கு உடல் நலை சரியில்லாததால், புஜங்கரை அழைத்துச் செல்ல நான் வந்திருக்கிறேன்!” என்று கூறிவிட்டு குணவர்மனைத் தன்னுடன் அழைத்துச் சென்றான்.
குருகுலத்தை அடைந்ததும், குணவர்மன் புஜங்கரை கால்களில் விழுந்து வணங்கித் தன் விருப்பத்தை வெளியிட்டான்.

அதற்கு அவர், “மகனே! என்னிடம் சீடனாகச் சேர வேண்டுமெனில், அதற்குமுன் ஜம்புகாரண்யத்தில் என் பழைய மாணவர் வினயர் ஒரு குருகுலம் நடத்தி வருகிறார். அங்கு சென்று இரண்டு ஆண்டுகள் பயின்ற பிறகு நீ இங்கு வா!” என்றார். “குருவே! உங்களுக்கு என் அறிவுத் திறமையில் சந்தேகம் என்று நினைக்கிறேன். வேண்டுமானால், நீங்கள் என் அறிவை சோதித்துப் பாருங்கள்!” என்றான்.

“மகனே! இப்போது நான் அரண்மனைக்குச் செல்ல வேண்டிஇருக்கிறது. திரும்பி வர எனக்கு ஒரு வாரம் ஆகும்! அதுவரை இந்த இரண்டு கிரந்தங்களை உன்னிடம் தருகிறேன். இவற்றை கவனமாகப் படி! இவற்றினுடைய கருத்தை நீ நன்றாகப் புரிந்து கொண்டால் மட்டுமே, நீ என் சீடனாக அமையத் தகுதியுள்ளவன்!” என்று கூறிவிட்டு அரண்மனை தேரில் ஏறிச் சென்று விட்டார்.

உடனே, மற்ற சீடர்கள் அவனிடம், “இரண்டு ஆண்டுகளாக இவற்றைப் புரிந்து கொள்ள நாங்கள் படாதபாடு படுகிறோம். அப்படி இருக்க, உன்னால் ஒரு வாரத்தில் புரிந்து கொள்ள முடியுமா?” என்று அவனை பயமுறுத்தினர்.
ஆனால் குணவர்மணா, “இதை நான் ஒரு சவாலாக ஏற்றுக் கொள்கிறேன்!” என்று சொல்லிவிட்டு, கிரந்தங்கள் இயற்றப்பட்டிருந்த ஓலைச்சுவடிகளை ஆழ்ந்து படிக்கத் தொடங்கினான். நான்கே நாள்களில், அவற்றின் சாரத்தை குணவர்மன் நன்றாக கிரகித்துக் கொண்டான்.

மற்ற சீடர்களை அழைத்துத் தான் புரிந்து கொண்ட விஷயங்களை அவர்களுக்கு விளக்கினான். ஆனால் அவர்கள் அவனுடைய அறிவுத்திறமையை தாழ்வாக மதிப்பிட்டு எள்ளி நகையாடினர். கோபங்கொண்ட, குணவர்மன், “உங்களுக்கும் என் கிராமத்து மக்களுக்கும் அதிக வேறுபாடு இல்லை. அவர்கள் படிக்காத முட்டாள்கள்! நீங்கள் படித்த முட்டாள்கள்!” என்று சினந்தான்.

அரண்மனையிலிருந்து திரும்பிய புஜங்கர், வந்ததும் உடனே குணவர்மனை கிரந்தங்களின் விளக்கம் கேட்டார். குணவர்மன் கூறிய விளக்கங்களைக் கேட்டு அவர் வியந்து போனார். “மகனே!  உன்னைப் போல் ஒரு புத்திசாலி எனக்கு சீடனாகக் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!” என்று மனமாரப் புகழ்ந்தார். அதன்பின் அவர் அரண்மனையில் நடந்ததை விவரிக்கத் தொடங்கினார்.

மன்னரின் தாயின் நோயை குணமாக்க எந்த வைத்தியராலும் முடியவில்லை. அப்போது, அவருடைய சபையில் இருந்த கவிஞர்களில் ஒருவர் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த யாரோ ஒருவர் எழுதிய காவியத்தை மன்னரிடம் படித்துக் காட்டினார். காவியத்தில் வரும் நாயகிக்கு ஏற்பட்ட விசித்திர நோயின் வர்ணனைகள் மன்னரின் தாய்க்கு ஏற்பட்டிருந்த நோயை அப்படியே ஒத்திருந்தது.

 

அதைப் படித்துக் காட்டிய கவிஞர், “மன்னா! இதில் மூலிகைகளைப் பற்றிய விவரங்களும் சிகிச்சை முறை பற்றியும் எழுதியுள்ள கவிதைகளின் பொருள் எனக்கு விளங்கவில்லை. இதைப் படித்து யாரேனும் அதன் பொருளை உணர்ந்து கொண்டால், அதே மருந்துகளையும், சிகிச்சையும் அளித்துத் தங்கள் தாயை குணமாக்கி விடலாம்!” என்றார். அதற்காகத்தான், புஜங்கர் அரண்மனைக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவராலும் அதன் பொருளை உணர்ந்து கொள்ள முடியவில்லை.

“மகனே! எனக்கே விளங்காத கவிதைகளின் பொருள் உனக்கு ஒருக்கால் விளங்கக்கூடும்! நீ படித்துப் பார்!” என்றார். அவற்றை வாங்கிப் படித்ததும், உடனே குணவர்மனுக்குப் பொருள் விளங்கி விட்டது. “குருவே! இதில் மூலிகைகளின் பெயர்கள் இரு பொருள்பட கூறப்பட்டுள்ளன. அவற்றை முறையே எடுத்து கசாயம் செய்து இதில் குறிப்பிடப்பட்டு உள்ளபடி மன்னரின் தாய் ஆடல் பாடலை ரசித்தபடி அருந்தினால் அவர் குணமடைந்து விடுவார்: என்றான். “ஆனால், இந்த மூலிகைகளை எப்படித் தேடுவது? நான் இவற்றைப் பற்றி கேள்விப்பட்டதேஇல்லையே!” என்றார் புஜங்கர்.

“அது பற்றிக் கவலையில்லை! இந்த மூலிகைகள் அனைத்தும் என் கிராமத்தில் பயிரிடப்படுகின்றன!” என்று குணவர்மன் கூற, புஜங்கர் மகிழ்ச்சியுடன் அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். குணவர்மனை சந்தித்த மன்னர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். உடனே, மன்னருடைய ஆட்கள் குணவர்மனுடன் சென்று அன்னாவரத்திலிருந்து மூலிகைகள் கொண்டுவர, வைத்தியர்கள் மருந்துத் தயாரித்துத் தந்தவுடன், மன்னரின் தாய் குணமானாள். மிகுந்த மகிழ்ச்சியுற்ற மன்னர் குணவர்மனுக்குப் பொன்னும் பொருளும் வெகுமதி அளித்தார்.

மன்னரின் தாயின் நோயை குணமாக்க எந்த வைத்தியராலும் முடியவில்லை. அப்போது, அவருடைய சபையில் இருந்த கவிஞர்களில் ஒருவர் தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த யாரோ ஒருவர் எழுதிய காவியத்தை மன்னரிடம் படித்துக் காட்டினார். காவியத்தில் வரும் நாயகிக்கு ஏற்பட்ட விசித்திர நோயின் வர்ணனைகள் மன்னரின் தாய்க்கு ஏற்பட்டிருந்த நோயை அப்படியே ஒத்திருந்தது.

 

அதைப் படித்துக் காட்டிய கவிஞர், “மன்னா! இதில் மூலிகைகளைப் பற்றிய விவரங்களும் சிகிச்சை முறை பற்றியும் எழுதியுள்ள கவிதைகளின் பொருள் எனக்கு விளங்கவில்லை. இதைப் படித்து யாரேனும் அதன் பொருளை உணர்ந்து கொண்டால், அதே மருந்துகளையும், சிகிச்சையும் அளித்துத் தங்கள் தாயை குணமாக்கி விடலாம்!” என்றார். அதற்காகத்தான், புஜங்கர் அரண்மனைக்கு அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், அவராலும் அதன் பொருளை உணர்ந்து கொள்ள முடியவில்லை.

“மகனே! எனக்கே விளங்காத கவிதைகளின் பொருள் உனக்கு ஒருக்கால் விளங்கக்கூடும்! நீ படித்துப் பார்!” என்றார். அவற்றை வாங்கிப் படித்ததும், உடனே குணவர்மனுக்குப் பொருள் விளங்கி விட்டது. “குருவே! இதில் மூலிகைகளின் பெயர்கள் இரு பொருள்பட கூறப்பட்டுள்ளன. அவற்றை முறையே எடுத்து கசாயம் செய்து இதில் குறிப்பிடப்பட்டு உள்ளபடி மன்னரின் தாய் ஆடல் பாடலை ரசித்தபடி அருந்தினால் அவர் குணமடைந்து விடுவார்: என்றான். “ஆனால், இந்த மூலிகைகளை எப்படித் தேடுவது? நான் இவற்றைப் பற்றி கேள்விப்பட்டதேஇல்லையே!” என்றார் புஜங்கர்.

“அது பற்றிக் கவலையில்லை! இந்த மூலிகைகள் அனைத்தும் என் கிராமத்தில் பயிரிடப்படுகின்றன!” என்று குணவர்மன் கூற, புஜங்கர் மகிழ்ச்சியுடன் அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார். குணவர்மனை சந்தித்த மன்னர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். உடனே, மன்னருடைய ஆட்கள் குணவர்மனுடன் சென்று அன்னாவரத்திலிருந்து மூலிகைகள் கொண்டுவர, வைத்தியர்கள் மருந்துத் தயாரித்துத் தந்தவுடன், மன்னரின் தாய் குணமானாள். மிகுந்த மகிழ்ச்சியுற்ற மன்னர் குணவர்மனுக்குப் பொன்னும் பொருளும் வெகுமதி அளித்தார்.

குருவுக்கு காணிக்கை

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் கீழேஇறங்கி, அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! உன்னுடைய ராஜ்யத்தின் ஏதோ மிகக் கடினமான பிரச்சினை ஒன்றுக்குத் தீர்வு காண்பதற்காக இத்தனை முயற்சிகளை மேற்கொள்கிறாய் என்று தோன்றுகிறது. சில சமயங்களில் மிக அறிவாளிகள் என்று நாம் நனைக்கும் சிலர் சாதாரண பிரச்சினையைக் கூட மிகக் கடினமான ஒன்றாக மாற்றி விடுகின்றனர்.  அத்தகைய குரு ஒருவரின் கதையைக் கூறுகிறேன், கேள்” என்று சொல்லிக் கதை சொல்லத் தொடங்கியது.

 

அவந்திபுரத்தை ஆண்டு வந்த சூரசேனருக்கு வஜ்ரசேனன், விக்கிரமசேனன் என்று இரு புதல்வர்கள் இருந்தனர். முதுமைப் பருவத்தை அடைந்ததும், தன் மூத்த மகன் வஜ்ரசேனனுக்கு ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, தன் மனைவியுடன் வானப்பிரஸ்தம் மேற்கொண்டு, அடர்ந்த காட்டினில் வாசம் செய்தார்.தன் தந்தையைப் போலவே வஜ்ர சேனனும் செங்கோல் ஆட்சி புரிந்து குடிமக்களின் நலனைப் பேணி வந்தான். அவனுடன் குருகுலத்தில் பயின்ற மணிதரன் என்ற பக்கத்து நாட்டு இளவரசனுடன் சிறு வயது முதல் நெருங்கிய நட்பு ஏற்பட்டது.

 

வஜ்ரசேனன் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததும், மணிதரன் தன் தங்கையை வஜ்ரசேனனுக்குத் திருமணம் செய்து வைத்துத் தானும் அவந்திபுரத்திலேயே தங்கி விட்டான். அவந்திபுரத்தைத் தனதாக்கிக் கொள்ளத் திட்டமிட்ட மணிதரன் சிறிது சிறிதாக வஜ்ரசேனனிடமிருந்து அதிகாரங்களைக் கைப்பற்றிக் கொண்டான்.  இசை, சிற்பம், நடனம் என்று அருங்கலைகளில் தன் நேரத்தை செலவிட்ட வஜ்ரசேனன் நாளடைவில் ஆட்சியின் முழு அதிகாரத்தையும் மணிதரனிடமே ஒப்படைத்து விட்டான்.

 

மணிதரனின் ஆதிக்கத்தில் அவந்திபுரத்தில் அராஜகம் தாண்டவம் ஆடியது.  மணிதரனின் கொடுங்கோலாட்சி யைக் கண்டு கலக்கமுற்ற பிரமுகர்கள் பலமுறை வஜ்ரசேனனை சந்தித்து உண்மை நலவரத்தைத் தெரிவிக்க முயன்றபோது,  மணிதரன் அவர்களைத் தடுத்துவிட்டான். அதனால் இளையவன் விக்கிரமசேனனிடம் சென்று பிரமுகர்கள் நாட்டின் நலைமையை எடுத்துக் கூறி,  அவனை மன்னனாகப் பொறுப்பேற்கச் சொன்னார்கள். ஆனால் தன் அண்ணன் ஆட்சி செய்வதுதான் சரியென்றும், மறுத்து விட்டான். வேறு வழியின்றி, அவர்கள் காட்டினை அடைந்து பெரியவரான சூரசேனரை சந்தித்து முறையிட்டனர்.

அனைத்தையும் கேட்ட பிறகு சூரசேனர், “ஒருமுறை ஆட்சிப் பொறுப்பை என் மூத்த மகனிடம் ஒப்படைத்து விட்டு ராஜ்யத்தை விட்டு வெளியேறிய பிறகு, எனக்கு அரசாங்க விஷயங்களில் தலையிட உரிமை இல்லை. சிறிதுகாலம் பொறுத்து இருங்கள்! உங்களுடைய பிரச்சினைக்கு ஒரு தீர்வு ஏற்படும்!” என்று சொல்லி அனுப்பினார். ஏதோ சமாதானம் சொல்லி அனுப்பிவிட்டாரே தவிர, தன் ராஜ்யத்தின் நலைமை சீர்குலைந்து போனதை அறிந்து சூரசேனன் மிகவும் வருந்தினார்.

 

இதற்கு வேறு ஏதாவது வழி உள்ளதா என்று தீவிர யோசனை செய்தார். வழி ஏதும் தோன்றாததால், அவர் தன் பிள்ளைகள் பயின்ற குருகுலத்தை அடைந்து அங்கிருந்த வயதில் மூத்த குருவை சந்தித்து, தன் ராஜ்யத்தின் பிரச்சினைகளைக் கூறி, உதவி செய்யுமாறு வேண்டினார். “மகாராஜா! அவந்திபுரத்தில் நடக்கும் ஆட்சியைப் பற்றி நானும் அறிவேன்! அதற்கெல்லாம் மூலகாரணம் வஜ்ரசேனனின் மைத்துனன் மணிதரன்தான்! கவலைப்படாதீர்கள்! இதை நான் தீர்த்து வைக்கிறேன்!” என்று குரு வாக்குறுதி அளித்தார்.

 

மறுநாள் குரு அவந்திபுரம் தர்பாரை அடைந்தார். தனது குரு தன்னைத் தேடி வந்திருப்பதைக் கண்டு உவகையுற்ற வஜ்ரசேனன் பலத்த உபசாரத்துடன் அவரை வரவேற்றான். பிறகு குரு, “வஜ்ரசேனா! குருகுலத்தில் வித்யாப்யாசம் முடிந்ததும், மாணவர்கள் குரு தட்சிணை  தருவது வழக்கம்! ஆனால், நான் உன்னிடம் எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை. பிற்காலத்தில் எனக்குத் தேவைப்படும் போது வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னேன்! அது உனக்கு ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டார்.

 

“ஆகா, ஞாபகம் இருக்கிறது! குருதேவரே! தாங்கள் எதைக் கேட்டாலும், அதை அளிக்க சித்தமாகஇருக்கிறேன்” என்றான் வஜ்ரசேனன் பணிவுடன். “வாக்களித்தபின், மறுக்க மாட்டாயே!” என்று குரு கேட்க, “குருதேவரே! ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்? வாக்குத்தவறுவது மரணத்திற்கு சமம்! தயங்காமல் கேளுங்கள்” என்றான் வஜ்ரசேனன்.
“அப்படியானால் உனக்கு சொந்தமான இந்த அவந்திபுர ராஜ்யத்தை எனக்கு குரு தட்சிணையாகக் கொடுத்து விடு!” என்றார்.

 

ஒரு கணம் திடுக்கிட்டாலும், விரைவிலேயே சமாளித்துக் கொண்ட வஜ்ரசேனன் “கொடுத்த வாக்கிலிருந்து தவற மாட்டேன்! எனது இந்த ராஜ்யம்…” என்று சொல்லி முடிப்பதற்குள், மணிதரன் ஆத்திரத்துடன் அவசரமாகக் குறுக்கிட்டு, “அவசரப்பட்டு ராஜ்யத்தை தானம் செய்யாதே வஜ்ரசேனா! அவருக்குப் பொன், பொருள், நலம் எது வேண்டுமானாலும் கொடு!”  என்று தடுக்க முயன்றான்.
அதற்கு வஜ்ரசேனன் “ஒருமுறை வாக்களித்தப்பிறகு அதிலிருந்து தவறுவது மிகப் பெரிய குற்றம்!” என்றவன், குருவை நோக்கி, “குரு தேவரே! தாங்கள் விரும்பியபடி என்னுடைய ராஜ்யத்தைத் தங்களுக்கு குரு தட்சிணையாக அளிக்கிறேன்!” என்று கூறிவிட்டு, தனது கி·டத்தை  கீழே வைத்துவிட்டு, சிம்மாசனத்தை விட்டு இறங்கி விட்டான்.

குரு வஜ்ரசேனனை நோக்கி, “வஜ்ரசேனா! உன்னுடைய அபாரமான குருபக்தியை மெச்சுவதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை.  கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் உனக்குள்ள அக்கறையில் பத்தில் ஒரு பங்காவது குடிமக்களின் நலனில் செலுத்தி இருக்கலாம்,”  என்று கூறிய பிறகு, தன் சீடர்களை அனுப்பி காட்டில் வசிக்கும் சூரசேனரை அழைத்து வரச் சொன்னார்.

 

சூரசேனர் வந்தவுடன், குரு அவரை நோக்கி, “மகாராஜா! உங்கள் மூத்த மகன் தன் ராஜ்யத்தையே எனக்கு தட்சிணையாக அளித்து விட்டான். நான் அதை தங்களிடம் தருகிறேன். நீங்கள் ராஜ்யத்தை இரண்டாகப் பிரிந்து, உங்கள் புதல்வர்கள் இருவருக்கும் சமமாக அளியுங்கள்! இதன்மூலம் நாட்டில் மீண்டும் அமைதி நலவும்!” என்றார். அவருடைய கட்டளையை சூரசேனரும் அவருடைய இரு பிள்ளைகளும் ஒப்புக் கொண்டனர். விரைவிலேயே சூரசேனர் ராஜ்யத்தை இரு மகன்களுக்கும் சமமாக பிரித்து அளித்து இருவரையும் மன்னர்களாக்கி விட்டார்.

 

இந்த இடத்தில் கதையை நறுத்திய வேதாளம், “மன்னா! வஜ்ரசேனன் நாட்டை ஆளத் தகுதியில்லாதவன் என்று தெரிந்த பிறகும் அவனுக்கு ஒரு பாதியைக் கொடுத்தது முட்டாள்தனம் இல்லையா? இளையவன் விக்கிரமசேனன் முதலில் அண்ணன் விஷயத்தில் தலையிடமாட்டேன். ஆட்சியில் தான் அமருவது தவறு என்றவன் பாதி

ராஜ்யம் கிடைத்ததும்  ஒப்புக் கொண்டான். அது ஏன்? சூரசேனரும் தான் நர்வாகத்தில் தலையிடமாட்டேன் என்று கூறியவர் பிறகு குருவின் மூலமாக நர்வாகத்தில் தலையிட்டு ராஜ்யத்தை சரிபாதியாக பிரித்து இருவருக்கும் அளித்தது எந்த விதத்தில் நயாயம்? எனது இந்த சந்தேகங்களுக்குப் பதில் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்!” என்றது.

அதற்கு விக்கிரமன், மன்னர் ஆட்சிப் பொறுப்பை விட்டு விலகும்போது, மூத்த மகன் ஆட்சிப் பொறுப்பை ஏற்பது தொன்றுதொட்டு இருந்து வரும் ராஜபரம்பரை வழக்கம்! ஆகவே, அதற்குப் புறம்பாக நடக்க விக்கிரமசேனன் முதலில் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் தன் தந்தை, அண்ணன் மற்றும் குரு வற்புறுத்திய பின்னர் பாதி ராஜ்யத்தை ஏற்றுக் கொண்டான். வஜ்ரசேனன் சுபாவத்தில் மிகவும் நல்லவன். அதனால்தான் அவன் தன் தந்தையின் கட்டளையை உடனே ஏற்றுக் கொண்டான். மணிதரனை ராஜ்யத்தை விட்டு வெளியேறச் சொன்னால், தானும் தன் தம்பியைப் போல் நல்லாட்சி புரியலாம் என்று எண்ணினான். வனவாசத்திலிருந்து ஆசிரமத்திற்கு வந்த மன்னர் மறுபடியும் தன் ராஜ்யத்தை குருவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

 

அதன்பின் அதை தன் பிள்ளைகளுக்கு சமமாகப் பங்கிட்டுக் கொடுக்கும்படி குரு கூறியதும் அவ்வாறே செய்தார். அவர் மக்கள் நலன் கருதியே இவ்வாறு செய்தார். இதில் அவரது சுயநலம் என்ற பேச்சிற்கே இடமில்லை மக்கள் நலன் கருதி அனைவரின் விருப்பத்திற்கேற்ப மன்னனும் குருவும் சேர்ந்து பிரச்சினையைத் தீர்த்து வைத்தனர். அவர்கள் இருவரும் பாராட்டுக்குஉரியவர்களே!” என்றான்.

 

விக்கிரமனின் சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் தான் தங்கியிருந்த உடலுடன், மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

பூலோகத்தில் கந்தர்வப் பெண்

தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிக் கொண்டு இருந்த உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும் போது, அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனைப் பார்த்து, “மன்னா! உன்னைப் போல் விடாமல் முயற்சி செய்யும் சிலர் கடைசி நிமிடத்தில் தங்கள் கொள்கையைக் கைவிட்டு, அதுநாள் வரை செய்த முயற்சியை வீணாக்குகின்றனர். அத்தகைய ஒரு பெண்ணின் கதையை நான் உனக்கு இப்போது கூறப் போகிறேன். கவனமாகக் கதையைக் கேள்!” என்று கதை சொல்லலாயிற்று.

 

வைசாலி ராஜ்யத்தில் திரிசங்கம் எனும் ஊரில் கலாதரன் என்ற ஒரு தெய்வீக சிற்பி வசித்து வந்தான். அவன் கல்லில் வடிக்கும் சிற்பங்கள் உயிருள்ளவைபோல் தத்ரூபமாக இருக்கும். ஒருநாள் இரவில் பௌர்ணமி நிலவொளியில் மொட்டை மாடியில் அவன் உறங்கிக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய கனவில் மிக அழகான ஓர் இளமங்கை தோன்றி “சிற்பியே! என்னுடைய உருவச்சிலையை நீ கல்லில் செதுக்க வேண்டுமென நான் மிகவும் விரும்புகிறேன். என் ஆசையை நீ நிறைவேற்றுவாயா?” என்று கேட்டாள்.

 

அதிரூப சுந்தரியான அந்தப் பெண்ணின் அழகில் தன் மனத்தைப் பறிகொடுத்த கலாதரன், “கண்டிப்பாக வடிக்கிறேன். அடுத்த பௌர்ணமி இதே நேரம் உன் சிலையை நீ காண்பாய்!” என்று உணர்ச்சி வசப்பட்டுக் கூறினான். அக்கணமே அவன் கனவும், தூக்கமும் கலைந்தன. கனவுதான் கலைந்ததே தவிர அந்த ரூபவதியின் அழகு அவன் மனத்திரையில் நன்றாகப் பதிந்து விட்டது. உடனே, தன் ஊரின் எல்லையில், மலைகள் சூழ்ந்த பகுதியில், ஒரு நீர் வீழ்ச்சியருகே அமர்ந்து ஒரு பாறையில் இரவும், பகலுமாகப் பாடுபட்டு அடுத்த பௌர்ணமிக்குள் அவளுடைய உருவச்சிலையை செய்து முடித்தான்.

கலாதரனின் கனவில் தோன்றிய அந்த அழகி ஒரு கந்தர்வ லோகத்துப் பெண். அவள் பெயர் நீலாஞ்சனா! ஒவ்வொரு பௌர்ணமி இரவிலும் அவள் தன் தோழிகளுடன் பூலோகத்தில் சஞ்சாரம் செய்வதுண்டு. அத்தகைய ஓர் இரவில்தான் உறங்கிக் கொண்டிருந்த கலாதரனின் கனவில் தோன்றித் தன்னை சிலை வடிக்குமாறு வேண்டினாள். பிறகு அடுத்த பௌர்ணமி இரவில் வழக்கப்படி அவள் தன் தோழிகளுடன் பூலோக சஞ்சாரத்திற்குப் புறப்பட்டாள். நேராகத் தன் தோழிகளுடன் வைசாலி ராஜ்யத்துத் திரிசங்கத்தை அடைந்து, கலாதரன் வடித்திருந்த சிற்பத்தைக் காட்டி நடந்தவற்றைக் கூறினாள்.

சிலையைக் கண்டு வியந்த நீலாஞ்சனாவின் தோழிகளில் ஒருத்தி, “இதற்கு உயிர் இருந்தால் இன்னொரு நீலாஞ்சனா பூலோகத்தில் தோன்றி விடுவாள்,” என்றாள். மற்றொருத்தி, “நீலா… நீ இதற்கு உயிர் கொடுத்து விடு!” என்றாள். மற்றொருத்தி, “உன்னுடைய அறிவையும்,  மனத்தையும் இதற்கு அளித்து விடு!” என்றாள். அதற்கு நீலாஞ்சனா, “சிலைக்கு என் உயிரைத் தந்து விட்டால் நான் என்ன ஆவது?” என்றாள்.

 

“இல்லை. கந்தர்வர்களாகிய நமக்கு அபூர்வ சக்திகள் உண்டு. நீ சிறிது காலம் உன் உயிரையும், மனத்தையும், புத்தியையும் சிலைக்கு அளிப்பாய். அதே சமயம் உன் உயிர், மனம், புத்தி ஆகியவை உன்னிடமும் இருக்கும். கந்தர்வலோகத்திலும் பூலோகத்திலும் இரட்டைப் பிறவிகள் போல் இருப்பீர்கள்!” என்றாள் இன்னொரு தோழி.

 

“இது என்ன விபரீத விளையாட்டு?” என்று நீலாஞ்சனா கூற, “சிறிது காலம் நீ உன் அறிவினால் பல காரியங்களை சாதித்தபின், பூலோக நீலாஞ்சனாவை அழித்துவிடு!” என்றனர் தோழிகள் அனைவரும். நீலாஞ்சனாவிற்கு அந்த யோசனை பிடித்திருந்தது. உடனே அவள் தன் சக்தியினால் சிலைக்கு உயிர் கொடுத்து, அதனுடன் தன் புத்தியையும், மனத்தையும் பகிர்ந்து கொண்டாள்.

 

சிலை உயிர் பெற்று பூலோக நீலாஞ்சனாவாக மாறியது. உறக்கத்திலிருந்து எழுந்தவள் போல் உயிர்த்தெழுந்த பூலோக நீலாஞ்சனா, நகரத்திற்குச் சென்று தன் திறமையைக் காட்டுவோம் என்று எண்ணி இரவு முழுவதும் நடந்தாள். காலையில் ஒரு காட்டை அடைந்தாள். அங்கு புதரிலிருந்து ஒரு புலி அவள் மீது பாய, அடுத்த கணம் புலியின் மீது ஓர் அம்பு பாய்ந்தது. தன்னைக் காப்பாற்றியது யார் என்று நீலாஞ்சனா சுற்றுமுற்றும் பார்க்க, தொலைவில் வில், அம்புகள் ஏந்தி ஓர் இளைஞன் குதிரையின் மீது வருவதைக் கண்டாள். அவளருகில் வந்ததும் அவன், “நீ இந்தக் காட்டில் என்ன செய்கிறாய்?” என்று கேட்டான்.

முதல் பார்வையிலேயே அவனிடம் மனத்தைப் பறிகொடுத்த நீலாஞ்சனா, “நான் பிழைப்பைத் தேடி தலைநகரம் செல்லும் வழியில் இந்தப் புலி குறுக்கிட்டது. என் உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றி! ஆனால் என்னிடம் வாள் இருந்திருந்தால், நானே புலியைக் கொன்று இருப்பேன்” என்றாள்.

 

“அட! பெண்ணான உனக்கு வாள் வீசத் தெரியுமா?” என்று வியப்புடன் அவன் கேட்க, “என் பெயர் நீலாஞ்சனா! எனக்கு எல்லாப் போர்க்கலைகளும் தெரியும். நான் வைசாலி மன்னரை சந்தித்து என்னைப் படையில் சேர்த்துக் கொள்ளுமாறு வேண்டுவேன்! உங்கள் பெயர் என்ன?” என்று அவள் கேட்டாள்.

 

“என் பெயர் பிரபாகரன்!” என்ற அந்த இளைஞன், “நீ மிகவும் அறிவாளி என்று தோன்றுகிறது. ஆனால் பெண்ணான உன்னைப் படையில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அதனால் நீ ஆண் வேடம் தரித்துக் கொள்! நானும் படையில் சேரத்தான் செல்கிறேன். அவந்தி ராஜ்ஜிய மன்னர் நமது ராஜ்யத்தின் மீது படையெடுத்துள்ளார். அதனால் நம் மன்னர் ஏராளமான வீரர்களைத் திரட்டுகிறார். என்னுடன் வா! உன்னை அழைத்துச் செல்கிறேன்!” என்றான்.

 

பிறகு இருவரும் தலைநகரம் சென்று சேனாதிபதியை சந்தித்து, படையில் சேர்ந்தனர். ஒருநாள் யுத்தகளத்தில் மன்னர் சேனாதிபதியுடன் யுத்தம் நடத்தும் விதத்தைப் பற்றி ஆலோசனை செய்து கொண்டுஇருக்கையில், நீலாஞ்சனா அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்து, “மகாராஜா! பகைவர்களின் படை நம்முடையதை விடப் பலமடங்கு பெரியது! அவர்களை நேருக்கு நேர் மோதி வெற்றி காண முடியாது. எதிரிப்படையில் குழப்பம் உண்டாக்கினால் அவர்களைத் தோற்கடிக்க முடியும். அதற்கான திட்டம் என்னிடம் இருக்கிறது” என்று தன் திட்டத்தை மன்னருக்கு விளக்கினாள்.

 

அதைக் கேட்டு மன்னர் வியந்து போனார். உடனே, தன் படையில் ஒரு சிறிய பகுதியைப் பிரித்தெடுத்து, அதற்கு அவளை உபதளபதி ஆக்கினார். அவளும் தன் படையை வழிநடத்திச் சென்று, போர்க்களத்தின் இருபுறமும் இருந்த மலைகள் மீதேறிப் பதுங்கிக் கொண்டாள். மறுநாள் போர் தொடங்கியதும், பகைவர் படை மீது எங்கிருந்தோ பாம்புகளும், தேள்களும் வந்து விழுந்தன.

 

மற்றொரு மலையில்இருந்து, தீப்பந்தங்கள் அவர்கள் மீது விழுந்தன. இதனால் பகைவர் படையில் ஒரே குழப்பம் ஏற்பட்டது. அந்த சமயம், வைசாலி ராஜ்ய வீரர்கள் அவர்களைத் தாக்க, பகைவர்கள் சரிவர போர்புரியாமல் பின்வாங்கி ஓடிப் போயினர். அந்த வெற்றிக்கு முழுக்காரணமான புத்திசாலி இளைஞனைப் பாராட்ட மன்னர் அவனைத் தன் அரண்மனைக்கு அழைத்தார். மன்னர் தனிமையில் இருந்தபோது, தன் ஆண்வேடத்தைக் கலைத்தாள் நீலாஞ்சனா.

“மகாராஜா! உண்மையில் நான் ஒரு பெண்! உங்களிடம் வேலைக்கு சேர்வதற்காக ஆண் வேடம் போட்டேன். என்னை மன்னிக்கவும்” என்றாள். அவள் எதிர்பார்த்ததற்கு மாறாக, மன்னருக்கு அபார வியப்பும், மகிழ்ச்சியும் உண்டாக, வாரிசில்லாமலிருந்த அவர் நீலாஞ்சனாவைத் தன் மகளாக ஸ்வீகாரம் எடுத்துக் கொண்டு, அவளை இளவரசியாக்கி அவள் விரும்புவதை அறிந்து பிரபாரகரை திருமணமும் செய்வித்தார்.

 

இவ்வாறு, தன் புத்திகூர்மையினால் பூலோகத்தில் வைசாலி ராஜ்யத்தின் இளவரசியான நீலாஞ்சனாவைப் பார்த்து, கந்தர்வலோக நீலாஞ்சனா மனம் பூரித்தாள். தன் தோழிகளிடம் தன்னுடைய பிரதிநிதியைப் பற்றிக் கர்வத்துடன் கூறினாள். ஆக, தாங்கள் ஆரம்பித்த விளையாட்டு முடிவுற்றது என்று கந்தர்வலோகப் பெண்கள் கருதினர். அவளை மீண்டும் பழையபடி சிலையாக்குவதற்காக,  கந்தர்வலோக நீலாஞ்சனா இளவரசியிடம் வந்தாள். அவள் யார் என்ற உண்மையை இளவரசிக்கு எடுத்துரைத்து, அவளது உயிரை எடுக்கப் போவதாகக் கூறினாள். ஆனால் அவள் அதற்கு இளவரசி மறுத்துவிட்டாள்.

 

“சொல்வதைக் கேள்! நாம் இருவரும் நிரந்தரமாக ஒரே சமயத்தில் வாழ முடியாது. நான் என் உயிரை தற்காலிகமாக உனக்குக் கொடுத்தேன். அதைத் திருப்பி எடுத்துக் கொள்ள என்னை அனுமதி!” என்றாள் கந்தர்வ நீலாஞ்சனா. “கந்தர்வப் பெண்ணே! நீ தனிமையாக வாழ்கிறாய். ஆனால் நான் என் வாழ்வை என் கணவடன் பிணைத்துள்ளேன். என் மீது அன்பைப் பொழியும் என் கணவர் நானின்றி உயிர் வாழ மாட்டார். நான் இப்போது வைசாலியின் இளவரசி! நான் மறைந்து போவதை குடிமக்களும் விரும்ப மாட்டார்கள்!” என்றாள் பூலோக நீலாஞ்சனா.

 

அவள் கடைசியாகக் கூறிய சொற்கள் கந்தர்வ நீலாஞ்சனாவின் மனத்தை உருக்கி விட்டன. ஆகையால் தனது இதயத்திலிருந்து தீ உருவாக்கி, அந்தத் தீயில் எரிந்து மறைந்து போனாள்.

 

இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், “மன்னா! கந்தர்வப் பெண் நீலாஞ்சனாவின் மதிகெட்ட செயலைப் பார்! பூலோக நீலாஞ்சனாவிற்கு உயிர் கொடுத்ததே அவள்தான். அதுவும் தற்காலிகமாகத்தான். தன்னுடைய புத்திகூர்மையை தன் பிரதிபிம்பத்தின் மூலம் பூவுலகில் நிரூபித்துக் காட்டியபின், மீண்டும் அதைத் திருப்பி எடுத்துக் கொள்வதாக இருந்தாள்.

 

ஆனால் கடைசி நிமிடத்தில் புத்தி பேதலித்து, தன் பிரதிபிம்பத்தை உயிருடன் வாழ அனுமதித்து விட்டு, தான் உயிர் நீத்தாள். இதை முட்டாள்தனம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது? என்னுடைய இந்த சந்தேகத்திற்கு விளக்கம் தெரிந்திருந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகும்” என்றது.

 

அதற்கு விக்கிரமன், “கந்தர்வப் பெண்ணான நீலாஞ்சனா தன் புத்தி சாதுர்யத்தை நிரூபிப்பதற்காக சிலைக்குத் தன் உயிரை தற்காலிகமாகக் கொடுத்தது உண்மைதான்! ஆனால் கடைசி நிமிடத்தில் அவள் மனம் மாறி தன்னுயிரைத் தியாகம் செய்தது முட்டாள்தனத்தினால் அல்ல, அவளுடைய தயாள குணத்தினால்தான்! விளையாட்டாகத் தொடங்கிய நாடகத்தில், பூலோக நீலாஞ்சனா போர்க்களத்தில் தன் தந்திரமான திட்டத்தால் வெற்றி பெற்றாள்.

 

அவள் தான் விரும்பிய பிரபாகரனைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு விட்டாள். மன்னருக்கும், பட்டத்து ராணிக்கும் ஸ்வீகாரப் பெண்ணாகி விட்டாள். குடிமக்களின் மனம் கவர்ந்த இளவரசியாகி விட்டாள். அவள் உயிரைப் பறித்தால் அவளைச் சார்ந்துள்ள அனைவரும் பெரும் துக்கத்தில் மூழ்குவர். ஆகையால் தான் உயிர் நீப்பதே சிறந்தது என்றும், தன் பிரதிபிம்பமாவது மகிழ்ச்சியுடன் வாழட்டும் என்றே அவள் மேற்கூறிய முடிவெடுத்தாள்” என்றான்.
விக்கிரமனது சரியான பதிலால் அவன் மவுனம் கலையவே, வேதாளம் தான் சுமந்து வந்த உடலுடன் பறந்து போய் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

நாகரத்தினத்தை திருடியது நியாயமா?

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் அவனை நோக்கி, “மன்னா! தர்ம சிந்தனையோடு பிறருக்கு நன்மை செய்வதற்காக நீ மிகவும் சிரமப்பட்டு அடர்ந்த காட்டிலும் மேட்டிலும், பேயும் உலவ அஞ்சும் இந்த நள்ளிரவில் மயானத்தில் அல்லலுறுகிறாய். தருமமே வெல்லும் என்று சாஸ்திரங்கள் கூறினாலும், பெரும் பாலானவர்களின் விஷயத்தில் நயவஞ்சகமே வெல்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. இதை நிரூபிக்கும் ஒரு கதையை நான் கூறுகிறேன், கேள்” என்றது.

 

கடம்பவனம் எனும் கிராமத்தில் கண்ணன், ரங்கன் என்ற இரு மாடுமேய்க்கும் இளைஞர்கள் வசித்து வந்தனர். ஒரு நாள் மாலையில் ரங்கனுடைய மாடுகளில் ஒன்றைக் காணவில்லை. அதனால் அவன் கண்ணனைத் தன் மாடுகளை வீட்டிற்கு ஓட்டிப் போகச் சொல்லி விட்டு, தான் தொலைந்து போன மாட்டைத் தேடிக் கொண்டு காட்டுக்குள் சென்றான். மாலை மங்கும் நேரத்தில், தீடீரென ஒரு புலி எதிரே வர, ரங்கன் பயந்து போய் ஒரு மரத்தின் மீது ஏறிக் கொண்டான்.

 

சிறிது நேரத்தில், காட்டில் இருள் சூழ்ந்தது. இனி, தொலைந்து போன மாட்டைத் தேடிப் பயனில்லை என்று கருதிய ரங்கன் வீடு திரும்ப எண்ணியபோது, அவன் அமர்ந்து இருந்த பெரிய மரத்திற்குச் சற்றுத் தொலைவில் இருந்த ஒரு புதரில் இருந்து ஒரு நாகப்பாம்பு வெளியே வந்தது. அந்த நாகத்தின் தலையில் கண்ணைப் பறிக்கும் ஒரு இரத்தினக் கல் ஒளிவிட்டுப் பிரகாசித்தது.

 

சரசரவென வெளியே வந்த நாகம் ரங்கனிருந்த மரத்தையணுகித் தன் தலையில் இருந்த இரத்தினத்தை எடுத்து, மரத்தின் அடியில் இருந்த ஒரு பொந்தினுள் வைத்து விட்டு, சற்றுத் தள்ளிப்போய் இன்னொரு மரத்தினடியில் அமர்ந்ததும் திடீரென ஒரு மனிதனாக மாறியது. நாகதேவனைப் போல் தோற்றமளித்த அந்த மனிதன் மரத்தடியில் அமர்ந்து கண்களை மூடிக்கொண்டு தவம் செய்ய ஆரம்பித்தான். இதைக் கண்ட ரங்கன் இனியும் அங்கு இருந்தால் ஆபத்து எனக் கருதி, சத்தமின்றி மரத்திலிருந்து இறங்கி, ஊரை நோக்கி ஓடிப்போனான்.

மறுநாள் அதைப்பற்றித் தன் தோழன் கண்ணணிடம் சொல்ல, கண்ணனின் விழிகள் வியப்பினால் விரிந்தன. அவன் ரங்கனை நோக்கி, “அடப்பாவி! சரியான முட்டாளாக இருக்கிறாயே! நாகரத்தினம் மட்டும் நம் கையில் இருந்தால், பாம்பு தீண்டிய பிறகு இறக்கும் நிலையில் இருப்பவர்களை நாம் காப்பாற்றி விடலாமே! நாம் அதையே ஒரு தொழிலாக வைத்துக் கொண்டால், நிறையப் பணம் சம்பாதித்துப் பணக்காரர்களாகி விடலாமே! சரி, சரி! இப்போது ஒன்றும் குடி முழுகிப் போய்விடவில்லை. இன்று இரவு அந்த இடத்திற்கு நாமிருவரும் சேர்ந்து செல்வோம். இன்றும் நேற்று நடந்தது போல் நடந்தால் நாம் இரத்தினத்தைத் திருடிக் கொண்டு வந்து விடலாம்!” என்று கூறினான்.

 

ரங்கன் வர மறுத்ததால் கண்ணன் மட்டும் தனியாக காட்டுக்குச் சென்றான். அவன் எதிர்பார்த்தது போலவே, அன்று நாகம் வந்தது. நாகதேவன் தீவிர தவத்தில் ஆழ்ந்து விட்டான் என்று தெரிந்ததும், கண்ணன் சத்தமின்றி கீழே இறங்கி, இரத்தினத்தைத் திருடிக்கொண்டு, ஊரை நோக்கித் திரும்பினான்.

 

மறுநாள் காலையிலேயே, அவன் கடம்பவனம் கிராமத்தைவிட்டு வெகுதூரம் சென்று மற்றொரு பெரிய கிராமத்தை அடைந்தான். அந்த ஊரின் ஜமீன்தாரின் பெண்ணை ஒருநாள் நாகம் தீண்டிவிட, கண்ணன் தன்னிடம் உள்ள  இரத்தினத்தைக் கொண்டு அவளை உயிர் பிழைக்கச் செய்தான். அதனால் மகிழ்வுற்ற ஜமீன்தார் அவனுக்கு அந்த கிராமத்திலேயே வீடு அமைத்துதர, அவன் அந்த ஊரிலேயே தங்கிவிட்டான்.

 

வயல்களும், காடுகளும் நிறைந்த அந்தப் பிரதேசத்தில் தினமும் பலர் பாம்பு தீண்டி விஷமேறி அவனைத்தேடி வர அவன் அவர்களை குணப்படுத்தி வந்தான். காப்பாற்றப்பட்டவர்கள் அவனுக்குக் கொடுத்த பல வெகுமதிகளினால் அவனிடம் குவிந்த செல்வமும் ஏராளமாக ஆயிற்று.

கண்ணனால் வஞ்சிக்கப்பட்ட நாகதேவன் மறுநாள் காலையில் தவங்கலைந்து எழுந்த பிறகு தன் இரத்தினத்தைத் தேட, அது காணவில்லை.சுதேந்திரன் என்ற அந்த நாகதேவன் தன் இரத்தினத்தை இழந்துத் துடித்துப் போனான். எதிர்காலத்தில் இந்து என்ற ஒரு பெண்ணை மணக்க விரும்பி அந்த நாகதேவன் கட்டிய மணக்கோட்டை இடிந்து போயிற்று. அவன் அந்தப்பெண்ணை சந்தித்ததே மிகவும் சுவாரசியமான நிகழ்ச்சி!

 

ஒரு விவசாயியின் பெண்ணான இந்து பார்க்க மிகவும் அழகாக இருந்தாள். ஒரு நாள் அவள் தன் குடிசை வாயிலில் நெல்லைக் காயவைத்துவிட்டு, அவற்றைப் பறவைகள் கொத்தாமல் விரட்டிக் கொண்டு இருக்கையில், திடீரென
அந்தப்பக்கம் ஓர் இளைஞன் வந்தான். இந்துவைக் கண்டதும் அவள் அழகில் மயங்கிய அவன், தன்னைத் திருமணம் செய்து கொள்ள அவளை வேண்ட, அவள் மறுத்தாள்.

 

கோபங்கொண்ட அவன் அவளிடம் வம்பு செய்ய, அவள் கூச்சலிட்டாள். ஆனால், அவள் கூக்குரலைக் கேட்டு அக்கம்பக்கத்தில் யாருமில்லை அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த சுதேந்திரன் என்ற நாகதேவன் நிராதரவான இந்துவின் மீது மிகவும் பரிதாபப்பட்டு, அந்த இளைஞனின் மீது படமெடுத்து சீறிப்பாய, அவன் பயந்தோடிப் போனான். தனக்கு உதவி செய்த அந்த நாகத்தினை நன்றியுடன் இந்து நோக்க, திடீரென அந்த நாகம் மனிதனாக மாறியது.

 

அவள்முன் வசீகரமான தோற்றத்துடன் நின்ற சுதேந்திரன், “பெண்ணே! என் பெயர் சுதேந்திரன்! நான் நாகலோகத்தைச் சேர்ந்த நாகதேவன்! என்னிடம் இரத்தினம் உள்ளது. அதன் சக்தியினால்தான் நான் இப்போது மனித உருவம் எடுத்து உன் முன் நிற்கிறேன். “என்னால் அதிக நேரம் மனித உருவில் இருக்க முடியாது. ஆனால் நிரந்தரமாக மனிதனாக மாற முயற்சி செய்வேன். அதுவரை நீ எனக்காகக் காத்திருப்பாயா?” எனவும் இந்து சம்மதித்தாள்.

உடனே மட்டிலா மகிழ்ச்சியுற்ற சுதேந்திரன் சுக்ரானந்தர் என்ற முனிவரின் ஆசிரமத்தையடைந்து தன்னுடைய விருப்பத்தை அவரிடம் தெரிவித்தான். சற்று நேரம் யோசித்த முனிவர், “சுதேந்திரா! கடவுள் ஏதாவது ஒரு காரணத்தினால் ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஒரு குறிப்பிட்ட உருவத்தைத் தந்து இருக்கிறார். நீ நாகலோகத்தைச் சேர்ந்தவன்! அதனால் நீ நாகத்தின் உருவத்தில் இருப்பதுதான் நியாயம் ஆனது. ஆகையால் உன் ஆசையை விட்டுவிடு!” என்றார்.

 

சுதேந்திரன் இந்துவின் மீது தான் கொண்டுள்ள அன்பைப் பற்றிக் கூறினான். ஆகையால் முனிவர், “அவள் மீதுள்ள உன்னுடைய அன்பு மிக ஆழமானது என்று தெரிந்து கொண்டேன். ஆகவே, நான் உன் ஆசையை கண்டிப்பாக நிறைவேற்ற முயல்கிறேன். என்னுடைய தவ வலிமையினால் நீ இரவு முழுவதும் மனித உருவில் இருப்பாய், இரவு நேரங்களில் நீ பரம்பொருளை தியானித்துத் தவம் செய்து வா! உன் மூலம் பல ஜீவராசிகளுக்கு நன்மை ஏற்படும் விதத்தில் நடந்து கொள். சில நாள்களிலேயே, நீ நிரந்தரமாக மனிதனாக மாறுவாய்!” என்றார்.

 

அவ்வாறு தவம் புரிந்துவந்த இரவுகளில் ஓரிரவில் அவனுடைய இரத்தினம் திருட்டுப் போயிற்று. அதனால் அவனுடைய சக்திகளை இழந்து அவன் ஒரு சாதாரண நாகம் ஆனான். மிகவும் சக்தி வாய்ந்த அந்த இரத்தினத்தைத் தன்னிடம் இருந்து திருடியவனைப் பழி வாங்குவதற்குத் துடித்தான்.

 

அந்த நேரம், வேறோரு கிராமத்தில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த கண்ணன். தன் பழைய நண்பன் ரங்கனைப் பார்க்க விரும்பி கடம்பவனம் வந்தான். ரங்கனை சந்தித்த அவன், நடந்த அனைத்ததையும் கூறிவிட்டு, “இன்று நான் நல்ல நிலைமையில் இருக்கிறேன். அந்த நன்றியை நான் மறக்கவில்லை, என்னுடைய செல்வத்தில் பாதியை உனக்குத் தருகிறேன். நீ என்னுடன் வந்து விடு!” என்றான்.

 

அதற்கு ரங்கன், “நன்றி கண்ணா! ஆனால், நியாயமாக உழைத்துக் கிடைக்கும் கூலியையே நான் விரும்புகிறேன். ஆகவே, நீ சென்று வா!” என்றான். அதன்பிறகு கண்ணன் தன் ஊர் திரும்பினான். அப்போது வழியில் சுதேந்திரன் கண்களில் கண்ணன் தென்பட்டான். கண்ணனிடம் உள்ள இரத்தினத்தின் சக்தி சுதேந்திரனை ஈர்க்க, உடனே அது தன்னுடையதுதான் என்றும், அதை எடுத்துச் செல்பவனே திருடிச் சென்றவன் என்றும் உணர்ந்த நாகம் மிகுந்த கோபத்துடன் கண்ணனின் மீது சீறிப்பாய்ந்து அவனைக் கொத்தியது. என்ன ஆச்சரியம்? சுதேந்திரன் தானாகவே மனித உருவம் பெற்று நின்றான். அதே சமயம் கண்ணணுக்கும் நாகம் தீண்டியதால் விஷம் ஏறவில்லை.

இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம், “மன்னா? சுயநலவாதியான கண்ணன் நாகம் தீண்டியும் எவ்வாறு விஷம் ஏறாமல் உயிரோடு இருந்தான்? அதைவிட வியப்பானது என்னவெனில், சுதேந்திரன் எவ்வாறு கண்ணனைத் தீண்டியதும் மனித உருவம் பெற்றான்? ரங்கன் தன்னுடைய கடமையை ஒழுங்காகச் செய்வதே தருமம் என எண்ணி அதன் வழியே நடந்தான். ஆனால் அவன் முன்னேறவே இல்லை. தருமத்தின் வழியில் நடப்பவர்களுக்கு இந்த கதிதான ஏற்படுமா? என்னுடைய கேள்விக்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.

 

அதற்கு விக்கிரமன், “ஒரு மனிதன் செய்யும் ஒவ்வொரு வேலையும் அது அதன் பலனின் அடிப்படையினால் மட்டுமன்றி, அந்த வேலையைச் செய்வதற்கு தூண்டுகோலாக அமையும் சூழ்நிலை மற்றும் வேலை செய்பவர்களின் பாவம் புண்ணியங்களின் அடிப்படையினாலும் அமையும். ரங்கன் மிகவும் கடுமையாக உழைத்து வாழும் வழ்கையை தேர்ந்தெடுத்தான். அதனால் அவனால் மகிழ்ச்சியாக வாழ்க்கை வாழ முடிந்தது. இரத்தினத்தை திருடினாலும், அதை வைத்து, பாம்பு தீண்டிய பலரின் உயிரைக் காப்பாற்றும் புண்ணியச் செயலைத்தான் அவன் செய்து இருக்கிறான்.

 

தவிர, செல்வம் சேர்ந்தவுடன் அதைத் தன் நண்பனுடன் பகிர்ந்தளிக்க அவனைத் தேடி வந்த நல்ல உள்ளம் படைத்தவன் கண்ணன். ஆகையால் சுதேந்திரன் என்ற நாகம் தீண்டியதும் அவன் இறக்கவில்லை. சுதேந்திரன் முனிவர் கூறியபடி  தானே நேரடியாக எந்த ஜீவராசிக்கும் உதவி புரிய வில்லை எனினும், அவனுடைய இரத்தினத்தின் மூலமே பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. ஆகவே அவன் நிரந்தர மனித உருவத்தைப் பெற்றான்.” என்றான்.

 

விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே வேதாளம் தான் சுமந்து வந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

நல்ல பகைவன்

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழேயிறங்கி அந்த உடலைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நமக்கு உதவி செய்பவர்களுடன் நட்பு பாராட்டுவதும் அவர்களுக்கு நன்றிக்கடன் தீர்க்க நாம் பிரதியுபகாரம் செய்வதும் இயற்கை! இதை நமது சாஸ்திரங்களும் வலியுறுத்தி இருக்கின்றன.

 

ஆனால் நான் உனக்கு இப்போது சொல்லப் போகும் கதையில் தனக்கு பேருதவி செய்தவருடன் பகைமை பாராட்டுமாறு ஒருவன் கருத்துக் தெரிவிக்க, அதை நன்கு கற்றுணர்ந்த அவனது குருவும் ஆமோதிக்கிறார். அந்தக் கதையை சற்று கேள்!” என்று வேதாளம் கதை சொல்லலாயிற்று.

 

விஜயபுரியில் சரண்யன் என்ற பெரிய தனவந்தர் நற்குணங்கள் நிரம்பியவராகவும், தான, தர்மங்கள் செய்பவராகவும் இருந்தார். பல ஆண்டுகளாக அவருக்குப் புத்திர பாக்கியமே இல்லாமல் இருந்து அவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு நம்பி என்று பெயர் சூட்டி, அவனை நன்கு வளர்த்தார்.

 

நம்பி மற்ற சிறுவர்களைப் போல் இல்லாமல் மந்த புத்தியுடையவனாக இருந்தான். சாதாரண விஷயங்களைக் கூட, அவனால் சரியாகப் புரிந்து கொள்ள இயலவில்லை. அவனை ஒரு நல்ல பள்ளியில் சேர்த்து விட்டால், நிலைமை சரியாகும் என்று சரண்யன் நம்பினார். ஆனால் பள்ளியில் சேர்ந்த பின்னும், அவன் மந்தமாகவே இருந்தான். சோதிடத்தில் நம்பிக்கை இல்லாத போதும், அவனை ஒரு பிரபல சோதிடரிடம் அழைத்துச் சென்றார் சரண்யன்.

அவரிடம், சோதிடர், “உங்கள் மகனுக்கு கிரகங்கள் சரியாக அமையவில்லை. இடமாற்றம் செய்தால் சகஜ நிலைக்கு அவன் திரும்பலாம். வித்யாவனம் எனும் ஊரில் ஞானேந்திரர் எனும் குருவிடம் அழைத்துச் செல். அவருடைய குருகுலத்தில் பயின்றால், அவன் சரியாகிவிடுவான்” என்றார்.

 

அவ்வாறே, சரண்யன் நம்பியை ஞானேந்திரரின் குருகுலத்திற்கு அழைத்துச் சென்றார். நம்பியை சில கேள்விகள் கேட்டு சோதித்த ஞானேந்திரர், “உங்கள் மகன் எந்த விஷயத்தையும் தனக்கே உரிய முறையில் பொருள் கொள்கிறான். மற்றவர்களைப் போல் அவனை சிந்திக்க வைக்க என்னால் இயன்ற அளவு முயற்சிக்கிறேன். நீங்கள் அடிக்கடி வந்து என்னிடம் அவனைப் பற்றி விசாரித்துவிட்டுச் செல்லுங்கள்” என்றார்.
ஞானேந்திரரின் குருகுலத்தில் சேர்ந்த பின்னும், நம்பியின் நிலைமையில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. ஒருநாள் அந்த குருகுலத்தில் சுகுமாரன் என்ற ஒரு விவாசாயியின் மகன் மாணவனாகச் சேர்ந்தான். மிகவும் புத்திசாலியான சுகுமாரன் சேர்ந்த சில மாதங்களிலேயே தலைசிறந்த மாணவன் என்ற பெயரைப் பெற்றுவிட்டான்.

சுகுமாரனுக்கு நண்பனாக ஆசைப்பட்ட நம்பி அவனிடம் நட்புரிமை பாராட்ட முயன்றபோது, சுகுமாரன் அவனை ஏற்கவில்லை.
சுகுமாரன் குருகுலத்தில் சேர்ந்து ஓர் ஆண்டு சென்றபின், அவனுடைய தந்தை கடன் தொல்லையில் சிக்கித் தவிப்பதாக அவனுக்குத் தகவல் வந்தது. ஆகையால் அவன் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட முயன்றான். தற்செயலாக நம்பியைக் காணவந்த சரண்யனிடம் நம்பி சுகுமாரனைப் பற்றிக் கூற, சரண்யன் சுகுமாரனை சந்தித்து, “தம்பி! உன்னைப் போன்ற புத்திசாலி மாணவனின் கல்வி தடைப்படக்கூடாது. உன்னுடைய கல்விக்கான செலவுகளை நான் ஏற்கிறேன். நீ தொடர்ந்து படி!” என்றார்.

 

நம்பியின் நல்ல உள்ளத்தையும், அவன் தந்தையின் பெருந்தன்மையும் கண்டு சுகுமாரன் வெட்கித் தலைகுனிந்தான். உடனே அவன் நம்பியிடம் தானாகவே வலியச் சென்று நட்புக்கரம் நீட்டினான். “நம்பி! நீயும் புத்திசாலிதான்! தவிர, நீ மிகவும் நல்லவன்! அதனால் உன்னை நண்பனாக அடைய விரும்புகிறேன். இனி குரு நடத்தும் பாடங்களை நீ எப்படிப் புரிந்து கொள்கிறாய் என்று தெரிந்து கொள்ள முயல்வேன்” என்றான்.

முதன் முதலாக தன்னை புத்திசாலி என்று சுகுமாரன் சொன்னதைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற நம்பி, அன்று முதல் வகுப்பில் நடந்த பாடங்களைத் தான் புரிந்து கொண்டதைக் பற்றி சுகுமாரனிடம் விளக்கத் தொடங்கினாள். அவற்றை கவனமாகக் கேட்டபின், அவன் தனக்குத் தெரிந்ததை விளக்குவான். ஓராண்டு காலத்திலேயே நம்பி மற்ற மாணவர்களைப் போல் சிந்திக்கத் தொடங்கினான். நம்பியின் மாற்றத்திற்குக் காரணமான சுகுமாரைத் தன்னிடம் அழைத்த ஞானேந்திரர் “நம்பியை எப்படி மாற்ற முடிந்தது?” என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.
“குருவே! மந்த புத்திக்காரனைப் பார்த்துக் கேலி செய்வதற்கு சாமர்த்தியம் தேவை இல்லை. அவனை சராசரிக்கும் மேலான அறிவாளியாக மாற்றத்தான் அறிவும், சாமர்த்தியமும், திறமையும்,  முயற்சியும் தேவை! அவற்றைப் பிரயோகித்து அவனை என்னைப் போல் அறிவாளியாக மாற்றினேன்” என்றான்.

 

“ஆகா! உத்தமமான பிள்ளை நீ! சுயநலமே உருவான இவ்வுலகில், நம்பி மீது விசேஷ அக்கறை எடுத்துக் கொண்டு அவனை மாற்றிவிட்டாய்! அவனுடைய மாற்றத்திற்குக் காரணம் நீதான் என்று அவன் தந்தை அறிந்தால் அவர் இன்னும் உனக்கு அதிக உதவிகள் செய்வார்” என்றார். “வேண்டாம் குருவே!” என்ற சுகுமாரன் “அவர் எனக்கு ஏற்கெனவே செய்த உதவிகள் போதும், அதற்கு இது கைம்மாறாக இருக்கட்டும்” என்றான்.

 

சுகுமாரனின் கல்விக்கான செலவை ஏற்றுக் கொண்டது மட்டுமின்றி, நம்பியின் தந்தையான சரண்யன் சுகுமாரனின் தந்தை வசிக்கும் கிராமத்திற்கு அடிக்கடிச் சென்று அவர் பட்ட கடனை எல்லாம் தானே தீர்த்து வைத்து, பொருளாதாரப் பிரச்சினையில் இருந்து அவரை மீட்டார். அப்போது அவருக்கு சுகுமாரனின் தந்தை ஏன் கடனாளியானார் என்ற விவரம் தெரிய வந்தது. அவருடைய பங்காளிகள் பேராசையே உருவானவர்கள். புத்திசாலியான சுகுமாரன் தன் தந்தையை விட்டு அகன்று குருகுலம் சென்றவுடன், அவரை பசப்பு வார்த்தைகளால் மயக்கி, அவரை ஏமாற்றிப் பணம் பறித்துக் கடனாளியாக்கி விட்டனர்.

 

இந்த விஷயத்தை அவர் அவ்வப்போது சுகுமாரனிடமும் தெரிவித்து வந்தார். இதனால் தனது சொந்தக்காரர்கனை நினைத்து மனம் கொதித்தான். கல்வியையே நிறுத்திவிட எண்ணியபோது, நம்பியின் தந்தை குறுக்கிட்டு கல்வியைத் தொடரச் செய்தார். ஐந்து ஆண்டுகளில் சுகுமாரன், நம்பி அகியோரின் குருகுலக் கல்வி நிறைவு பெற்றதும் குருவிடம் விடைபெற்றுக் கொள்ள சுகுமாரன் வந்தபோது அவர் “சுகுமாரா! சுபாவத்திலேயே நீ மிகவும் நல்ல பிள்ளை. நீ இன்று போல் என்றும் மிக்க நல்லவனாகவே இருப்பாய்!” என்றார்.

 

அதற்கு சுகுமாரன் “குருவே! என் தந்தையின் பங்காளிகள் என் தந்தையைப் படுகுழியில் தள்ளிவிட்டதை எண்ணியெண்ணி என் மனம் கொதிக்கிறது. அதனால், அவர்களைப் பழிக்குப் பழிவாங்கிய பின் நல்லவனாக மாற முயற்சிப்பேன்” என்றான். அதற்கு ஞானேந்திரன் “மகனே! பழக்குப் பழி, வஞ்சத்திற்கு வஞ்சம் என்று பிடிவாதமாக இருந்தால் அதற்கு ஒரு முடிவே இருக்காது. நான் சொல்வதைக் கேள்! அவர்களை மன்னித்துவிடு! அப்போது தான் வாழ்க்கையை நிம்மதியாகக் கழிக்க முடியும்” என்றார்.

அப்போது அங்கு சரண்யன் வந்தார். நடந்த விஷயங்களைக் கேட்டபிறகு அவர் சுகுமாரனிடம், “தம்பி! உன்னை என் மகனாகவே இதுவரை நினைத்திருக்கிறேன். இனியும் அப்படியே! நீ செய்ய விரும்பும் செயல்கள் எதுவானாலும் அதற்குத் துணை புரிவேன்” என்றார். அப்போது, ஞானேந்திரர் குறுக்கிட்டு, “ஐயா! நீங்கள் சுகுமாரனுக்கு எப்படி உதவி செய்ய வேண்டும் என்பது அவனிடம் கேட்காதீர்கள். மகா மேதாவியாகி விட்ட உங்கள் மகன் நம்பியிடம் அதைப்பற்றி கேளுங்கள்!” என்றார். பிறகு அவர் நம்பியை அழைத்து நடந்ததை எல்லாம் விவரித்தபின் அவனிடம் இது குறித்து அபிப்பிராயம் கேட்டார்.

 

அதற்கு நம்பி, “என் தந்தை மேற்கொண்டு உதவி செய்ய விரும்பினால், அவர் சுகுமாரனுக்குப் பகைவராக மாறவேண்டும். இதுவே என் யோசனை!” என்றதும். மற்ற மூவரும் திடுக்கிட்டனர். “சுகுமாரா!” என்று தொடர்ந்த நம்பி, “நீ இதுவரை என் தந்தை செய்த உதவிகளை மறந்துவிட்டு, அவரை உன் பகைவராக நினை! அவரைப் பழி வாங்க முயற்சி செய்! அவரைப் பழி வாங்கியபின் உன் கவனத்தை உன் சொந்தக்காரர்களிடம் திருப்பு! அவர்களைப் பழிவாங்கு!” என்றான்.

 

நம்பி கூறியதைக் கேட்டு அவன் தந்தையும், சுகுமாரனும் அதிர்ச்சி அடைய, குரு மட்டும் அதைப் புரிந்து கொண்டவராய் புன்னகை புரிந்து அவன் யோசனையை அமோதித்தார். இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நம்பி ஏற்கெனவே மந்த புத்தியுடையவன். அதனால் உதவி செய்தவரை பகைவராக நினை என்று உளறினான். அதனால் என்று நினைக்கிறேன். ஆனால் மகா புத்திசாலியான குரு ஞானேந்திரர் நம்பியின் யோசøயை எப்படி ஆமோதித்தார்? என் சந்தேகத்திற்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.

அதற்கு விக்கிரமன், “சுகுமாரன் சிறந்த அறிவாளி மட்டுமின்றி மிக நல்லவனும் கூட! சுகுமாரனின் ஆத்திரத்திற்குச் காரணம் தன் சொந்தக்காரர்கள் முற்றிலும் நயவஞ்சகர்கள் என்றும், அவர்களிடம் நற்குணங்கள் எதுவுமில்லை என்று எண்ணியதுதான்! பழிவாங்கும் எண்ணத்தை சுகுமாரன் மறக்க வேண்டுமெனில், முதலில் அவன் தன் சொந்தக்காரர்களிடம் உள்ள நல்ல குணாதிசயங்களையும் ஆராயவேண்டும். அத்தகைய மனப்பாங்கு அவனுக்கு உண்டாக வேண்டும் எனில் அதற்கு சரண்யன் போல் தர்ம சிந்தனையாளர் ஒருவர் அவனுக்குப் பகைவராக வேண்டும்.

 

“சரண்யன் என்னதான் பகைவராக மாறினாலும், சுகுமாரனுக்கு அவர் மீது விரோதம் உண்டாகாது. அவர் தனக்கு செய்த உதவிகளை மட்டும் நினைவில் நிறுத்தி அவரை அவன் மன்னித்து விடுவான். அதனால் அவனுடைய பழிவாங்கும் எண்ணம் குறைந்துவிடும். அதனால்தான், நம்பி தன் தந்தை சரண்யனை விரோதியாக பாவிக்கும்படி அவனுக்கு அறிவுரை கூறினான். அவன் கூறியது அபத்தமான யோசனை அல்ல; மாறாக, நன்கு சிந்தித்தப்பின் அவன் கூறிய மிகச்சிறந்த யோசனை ஆகும்!” என்றான்.

 

விக்கிரமனின் சரியான பதிலினால் அவன் மௌனம் கலைந்ததும் வேதாளம் தான் புகுந்து இருந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

செல்வம் வேண்டாமா?

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அதைத் தோளில் சுமந்தவாறு மாயனத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம் அவனிடம், “உன்னுடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என்று என்னால் இப்போது சொல்ல முடியவில்லை. ஏனென்றால் நீயும் ராமநாதனைப் போலிருந்தால் மிகவும் கஷ்டப்பட்டு அடைந்ததை கை நழுவ விட்டு விடுவாய். அந்த ராமநாதன் தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள அரும்பாடுபட்டான். ஆனால் அது நிறைவேறிய பிறகு அதை அனுபவிக்காமல் தியாகம் செய்துவிட்டான். அந்த ராமநாதனின் கதையைக் கேள்!” என்று கதை சொல்லாயிற்று.

 

மாயனூர் என்ற கிராமத்தில் ராமநாதன் என்ற இளைஞன் இருந்தான். ஒரு நாள் கிராமத்திற்கு வருகை தந்த சாமியார் ஒருவர் அவன் கை ரேகைகளைப் பார்த்துவிட்டு, “அதிருஷ்டம் உன்னைத் தானே தேடிவரும்” என்று சொன்னார். அதில் இருந்து ராமநாதன் வேலை செய்வதை விட்டு விட்டு தான் பணக்காரன் ஆவது பற்றியே எப்போதும் மனக்கோட்டைக் கட்ட ஆரம்பித்தான். ஒருநாள் அவனைத்தேடி வந்த வாலிபன் ஒருவன் “நான் சொல்லும் இடத்தில் நீ ஐந்து வருஷம் வேலை செய்தால், உனக்கு நிறைய செல்வம் கிடைக்கும். சம்மதமா?” என்று கேட்டதும், ராமநாதனுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் இருந்தது.

 

ஆயினும் அவன் முழு விவரங்களை அறிய விரும்பியதால், ஆனந்தன் விளக்கிக் கூறினான். ஸ்ரீபுரத்தைச் சேர்ந்த ஆனந்தன் அதே கிராமத்திலிருந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டான். ஆனால் அவளுடைய தகப்பன் அவளை மணக்க விரும்புபவர்களிடம், ஆயிரம் பொன் வரதட்சணை கேட்டான். ஆனந்தனிடம் அத்தனை பணம் இல்லை. அப்போது அந்தக் கிராமத்து வியாபாரியான சரவணன் ஆனந்தனை அழைத்துத் தன் வீட்டில் குறைந்தது ஐந்து வருஷம் வேலை செய்ய வேண்டும் என்றும், அப்படிச் செய்தால் ஆயிரம் பொன் தருவதாகவும் கூறினான்.

 

உடனே ஆனந்தனும் அவனிடம் வேலை செய்ய ஒப்புக் கொண்டான். ஆனால் வேலைக்குச் சேர்ந்த சில நாள்களிலேயே விசித்திரமான நோயின் காரணமாக அவன் விகாரமாக மாறினான். இதனால் அவன் விரும்பிய பெண்ணும் அவனை நிராகரித்து விட்டாள். ஆகையால் ஆனந்தன் சன்னியாசியாக முடிவு செய்தான். அந்த முடிவை சரவணன் ஏற்கவில்லை. இருப்பினும் ஆனந்தன் தான் தீர்த்த யாத்திரை சென்று வருவதாகவும், அதன்பின் தன் பணியைத் தொடர்வதாகவும் ஊறுதி அளித்துவிட்டுச் சென்றான்.

பிருஹதாரண்யத்தில் ஆனந்தன் பிரகாண்டர் என்ற ரிஷியை சந்தித்தான். அவரிடம் தன்னைப் பற்றிக் கூறி தனக்கு சந்நியாசியாக விருப்பம் என்றும், அவரைத் தனக்கு தீட்சை அளிக்குமாறும் வேண்டினான்.

 

அதற்கு பிரகாண்டர், “உனக்கு ஏற்பட்டுள்ள விரக்தி தற்காலிகமானது. அதனால் நான் உனக்கு தனமந்திரம் ஒன்று சொல்லித்தருகிறேன். அதை இடைவிடாமல் ஜெபித்தால் உனக்குப் புதையல் கிடைக்கும். புதையல் கிடைத்த பின்னும் அதை அனுபவிக்க ஆசை ஏற்படவில்லை எனில், நீ சந்நியாசியாகத் தகுதியானவன். ஆனால் ஒரு வருடத்திற்குள் உன் தவப்பலனை உணர்ச்சிவசப்பட்டு வீணாக்கினால், நீ சந்நியாசி ஆகமுடியாது” என்று கூறி அவனுக்கு தன மந்திரத்தை உபதேசித்தார்.

 

ஆனந்தன் தனியாக தனக்கென ஓர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு, இடைவிடாமல் தனமந்திரத்தை ஜெபித்தான். சில நாள்களிலேயே, அவனுடைய மனக்கண்ணில் ஒரு அரசமரத்தடியில் உள்ள புதையல் புலனாகியது. ஆனாலும் இறைவனை தியானம் செய்ய ஆரம்பித்தான். அப்படியிருக்கையில் ஒரு நாள் அவனைத் தேடி நீலாம்பரி என்ற இளம்பெண் ஆசிரமத்துக்கு வந்தாள்.

 

ஆனந்தனிடம் அடைக்கலம் கேட்ட அவள் தன் பிரச்சினையை விளக்கினாள். அவள் ஏழையாக இருந்தாலும், சிறுவயது முதல் செல்வத்திலும், சுகபோகங்களிலும் அபார ஈடுபாடு இருந்தது. அவளை சோமு என்ற வாலிபன் வரதட்சணை ஏதுமின்றி திருமணம் செய்து கொள்ள விரும்பினான்.

 

அவன் ஏழை என்பதால் அவனை மணம் செய்ய நிராகரித்துவிட்டாள். ஆனால் அவள் தந்தை அதற்கு சம்மதித்து விட்டார். அதனால் வீட்டை விட்டு ஓடி வந்த அவள் ஆனந்தனிடம் தனக்கு  புகலிடம் தருமாறு வேண்டினாள். அதற்கு சம்மதித்த ஆனந்தன், “நீலாம்பரி! ஒரு வருடம்வரை புதையலைப் பாதுகாத்தவாறு எனக்கு உதவி செய்து கொண்டு இருந்தால், உனக்கு அந்தப் பணம் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறினான். அவளும் அதற்குச் சம்மதித்தாள்.

ஒருநாள் அவளை மணதார விரும்பிய சோமு அவளைத் தேடி ஆசிரமத்திற்கே வந்து விட்டான். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி மீண்டும் அவளை நச்சரித்தான். அதற்கு அவள், “ஆனந்தனை நீ கொன்று விட்டால். அந்தப் புதையலை நாம் எடுத்துக் கொண்டு திருமணம் புரிந்து மகிழ்ச்சியுடன் இருப்போம்” என்றாள். நீலாம்பரி பேசியதை ஆற்றில் நீராடச் சென்று திரும்பிய ஆனந்தன் கேட்டு திடுக்கிட்டான். உடனே அவள் முன் வந்து, “பணத்திற்காக உனக்குப் புகலிடம் தந்த என்னையே நீ கொல்ல எண்ணினாய்! அதனால் நீ ராட்சஸியாக மாறுவாய்” என்று சாபம் கொடுக்க, நீலாம்பரி ராட்சஸியாக மாறிவிட்டாள்.

அப்போது அங்கே வந்த பிரகாண்ட ரிஷி ஆனந்தனைப் பார்த்து, “நீலாம்பரிக்கு சாபம் கொடுத்ததனால் உன் தவ வலிமையை நீ இழந்து விட்டாய்!” என்றார்.  “சுவாமி! மனித குலத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டேன். என்னை உடனே சந்நியாசியாக மாற்றுங்கள்” என்று ஆனந்தன் வேண்டினான்.

 

“சரவணனுக்கு நீ கொடுத்த வாக்கு என்னாவது? உனக்குப் பதிலாக வேறு யாரையாவது அவனிடம் வேலைக்கு அமர்த்து! உன்னால் சாபமிடப்பட்ட நீலாம்பரிக்கு சாப விமோசனம் அளி! அதன்பிறகு சந்நியாசத்தைப் பற்றி யோசிக்கலாம்” என்றார் ரிஷி. “நீங்கள் எனக்குச் சற்று உதவி செய்யக்கூடாதா?” என்று ஆனந்தன் வேண்ட, அவர் “பணத்தின் மீதுள்ள ஆசையினால்தானே நீலாம்பரி உன்னைக் கொலை செய்யவும் துணிந்தாள். அதே பணத்தை துச்சமாகக் கருதி எவன் ஒருவன் தியாகம் செய்கிறானோ, அவன் மூலம் நீலாம்பரிக்கு விமோசனம் அடைய, உன்னுடைய கடமையும் முழுமையடையும்” என்றார்.

 

மேற்கூறிய தன் வரலாற்றை விளக்கியபின், ராமநாதனை சரவணனிடம் அழைத்துச் செல்லவே தான் வந்ததாக ஆனந்தன் கூறினான். இதைக் கேட்டதும் ராமநாதன் மிகுந்த உற்சாகத்துடன் சரவணனிடம் வேலைக்கு அமர்ந்தான். பிறகுதான் அவனுக்கு அந்த வீட்டில் வேலை செய்வது எத்தனை கடினம் என்று புரிந்தது. ஒருநாள், எஜமானி “இந்த கிராமத்தில் சந்திரா என்ற சமையற்காரி ஒருத்தி இருக்கிறாள். அவள் மிகப் பிரமாதமாக சமைப்பாள். அவளை எப்படியாவது இங்கு சமையல் செய்ய அழைத்து வா! முடியவில்லை எனில் உன்னை வேலை விட்டு நீக்கி விடுவேன்” என்று பயமுறுத்தினாள்.

 

ஆனால் சந்திரா மறுத்துவிட்டாள். ராமநாதன் விடாமல், “ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு ஆயிரம் பொன் கிடைக்கும். அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன். தயவு செய்து எனக்கு உதவி செய்!” என்று கெஞ்சினான். அவனைக் கண்டு இரக்கமுற்ற சந்திரா, “எனக்கு உன்னுடைய பணம் தேவையில்லை. உன்னுடைய நிலைமை பரிதாபமாக இருப்பதால் உனக்கு உதவி செய்ய ஒத்துக் கொள்கிறேன்” என்று கூறினாள்.

 

அவனுடன் சரவணன் வீட்டுக்கு வந்து சமையல் வேலை மட்டுமன்றி, மற்ற எல்லா வீட்டு வேலைகளிலும் ராமநாதனின் தோளாடு தோள் நின்று உதவி செய்தாள். நாளடைவில் பணத்தைப் பற்றிய அவன் கருத்து மாறியது. அவன் தன் வாழ்வில் சந்திராவை வாழ்க்கைத் துணைவியாக அடைந்தால் அதுவே பெரிய பொக்கிஷம் கிடைப்பது போல் என்று எண்ண ஆரம்பித்தான்.

ஐந்து ஆண்டுகள் சென்றபிறகு அவன் ஆனந்தனை அடைந்து, “உன் பொருட்டு, நான் அந்த வீட்டில் ஐந்து ஆண்டுகள் வேலை செய்து முடித்து விட்டேன். ஆனால் எனக்கு அந்த ஆயிரம் பொன் தேவையில்லை. அதை நீயே வைத்துக்கொள்! என் வாழ்க்கையின் மிகப்பெரிய செல்வம் சந்திரா ஒருத்தியே என்று உணருகிறேன்!” என்று ராமநாதன் கூறியதும், ஆனந்தன் ஆச்சரியப்பட்டான். அந்த சமயம் அங்கு வந்த பிரகாண்ட ரிஷி, ராமநாதனை மனதார வாழ்த்தினார். நீலாம்பரியும் அக்கணத்திலேயே சாப விமோசனம் பெற்று சுய உருவத்தைப் பெற்றாள்.

 

இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்ரமனிடம், “மன்னா! பணம் வேண்டும் என்று ராமநாதன் ஐந்து வருடம் சரவணன் வீட்டில் மிகக் கடுமையாக உழைத்த பின், கடைசியில் ஆயிரம் பொன்னை வேண்டாம் என்று தியாகம் செய்தது ஏன்? ஆனந்தன் ஒன்றுமே செய்யாமல் நீலாம்பரிக்கு சாபவிமோசனம் எப்படிக் கிடைத்தது? கடைசியில் பிரகாண்ட ரிஷி ராமநாதனை மனதார வாழ்த்துமளவிற்கு அவன் அப்படியென்ன செய்துவிட்டான்? என்னுடைய சந்தேகங்களுக்கு விளக்கம் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.

 

அதற்கு விக்கிரமன், “ராமநாதனுக்குப் பணத்தின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது உண்மைதான்! ஆனால் சந்திராவை சந்தித்தது முதல் அவன் மனத்தில் மாறுதல் ஏற்படத் தொடங்கியது. தான் அளிப்பதாகக் கூறிய பணத்தை நிராகரித்து விட்டு, தன் மீதுள்ள இரக்கம் காரணமாக தனக்கு உதவி செய்ய வந்த சந்திராவைக் கண்டது முதல் அவனுக்குப் பணத்தின் மீது மோகம் குறைந்தது. அதனால் தனக்கு வரவேண்டிய ஆயிரம் பொன்னையும் தியாகம் செய்தான். ராமநாதன் செய்த தியாகத்தினால் நீலாம்பரிக்கு சாபவிமோசனம் கிட்டியது. மகத்தான தியாகம் செய்த ராமநாதனை பிரகாண்ட ரிஷி வாழ்த்தாமல் வேறு என்ன செய்வார்?” என்றான்.

 

விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே வேதாளம் தான் புகுந்திருந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

கந்தர்வனின் சாபம்

தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அதைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லும்போது, அதனுள்ளிருந்த வேதாளம், விக்கிரமனை நோக்கி, “மன்னா! இந்த நள்ளிரவில், இந்த பயங்கரக் காட்டில் நீ எதற்காக இத்தனை சிரமப்படுகிறாய் என்பது புரியவில்லை. யசோதரன் எனும் மன்னன் தனக்கு சிறிதும் தொடர்பே இல்லாத ஒரு கந்தர்வன் தனக்குக் கொடுத்த சாபத்தினால் மிகவும் துன்புற்றான். அந்த யசோதரனுடைய கதையைக் கூறுகிறேன், கேள்” என்று கதை சொல்லத் தொடங்கியது.

 

நிஷாதபுரியின் மன்னன் யாசோதரன் தன் குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்சி புரிந்து வந்தான். ராஜ்யத்தின் எல்லையிலிருந்த காடுகளிலிருந்து கொடிய மிருகங்கள் அடிக்கடி கிராமங்களில் புகுந்து மக்களுக்கு இன்னல்கள் விளைவித்ததால், அவற்றை வேட்டையாடத் திட்டமிட்டு ஒருநாள் அவன் தன் பரிவாரங்களுடன் எல்லையோரக் காடுகளுக்குள் புகுந்தான்.

 

யசோதரன் வேட்டையாடிக் கொண்டிருக்கையில், வானிலிருந்து ஒரு கந்தர்வனும் ஒரு கந்தர்வப் பெண்ணும் மலையுச்சியில் இறங்கி சற்றே இளைப்பாற அமர்ந்தனர். அமரன் என்ற அந்த கந்தர்வன், கந்தர்வப் பெண்ணான சர்மிளா மீது மிகவும் அன்பு கொண்டிருந்தான். மலை உச்சியில் அவர்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கும்போது, அவன் அவளை நோக்கி, “சர்மிளா! இந்த மலையுச்சியிலிருந்து கீழேயுள்ள காட்சிகளைப்பார்! ஒவ்வொன்றும் இயற்கையின் எழிலைப் பறைசாற்றுகின்றன. ஆனால் அவை ஒன்றுகூட உன் அழகுக்கு இணையாகாது” என்று கூறினான்.

 

ஆனால் அவள் அவன் சொல்வதைச் சிறிதும் கவனிக்கவில்லை. காட்டில் தன் புரவியில் அமர்ந்து காட்டு விலங்குளைத் துரத்தும் யசோதரனையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்து ரசிப்பதைக் கண்டதும், பொறாமையினால் அவன் இதயம் பற்றி எரிந்தது. “நான் உன் அழகில் மயங்கி உன்னை வர்ணித்துக் கொண்டு இருக்கும்போது, நீ ஒரு மனிதனின் அழகை ரசித்துக் கொண்டிருக்கிறாய். பார், இப்போது அவனை என்ன செய்கிறேன் என்று!” என்று சீறிக்கொண்டே யசோதரனுக்கு சாபம் கொடுத்தான்.

திடீரென யசோதரன் ஒரு சித்திரக் குள்ளனாக மாறிவிட்டான். தன் உருவம் மாறிப் போனதைக் கண்ட யசோதரன் பலத்த அதிர்ச்சியடைந்தான். அந்தப் பக்கமாக ஓடிக் கொண்டிருந்த ஒரு முயல் அவனை மோதித் தள்ளிக் குட்டிக்கரணமடிக்கச் செய்தது. அதைக் கண்டு அமரன் விழுந்து விழுந்து சிரித்தான். “சர்மிளா! பார்த்தாயா அந்த மனிதனின் கதியை?” என்று பரிகாசம் செய்தான்.

 

“அடப்பாவி! என்ன காரியம் செய்து விட்டாய்?” என்று அலறினாள் சர்மிளா. “அவன் குதிரை மீது வாயுவேகமாச் செல்லும் காட்சியைத்தான் ரசித்தேனே தவிர, அவன் அழகில் மயங்கி விடவில்லை. இத்தனை பொறாமை பிடித்தவனா நீ?”  என்று சொல்லிவிட்டு வானில் பறந்து விட, திடுக்கிட்டு போன அமர அவளை சமாதானப்படுத்தியவாறே வானில் அவளைப் பின் தொடர்ந்தான்.

 

அதற்குள் காட்டில் ஒரு சூறாவளிக் காற்றுவீச, சாண் உயரமேயான யசோதரனைக் காற்று மேலே தூக்கிச் சென்றது. பயந்து நடுங்கிப் போன யசோதரன், அந்த சமயம் வானில் பறந்து கொண்டிருந்த ஒரு கிளியின் வாலினைப் பிடித்துக் கொண்டான். அந்தக் கிளி அண்டை ராஜ்யமான அனந்தபுரியின் இளவரசி ராகலதாவின் வளர்ப்புக்கிளி. தன் தோழிகளுடன் அந்தப்புரத்தில் பந்து விளையாடிக் கொண்டிருந்த ராகலதா தன் வளர்ப்புக்கிளியின் வாலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு வந்த உருவத்தைப் பார்த்து வியப்பு அடைந்தாள்.

சாண் உயரமேயான உருவம், தலையில் சுண்டைக்காய் போல் ஒரு கிரீடம், கடுகுகள் போன்ற விழிகளைக் கொண்ட அந்த விசித்திரமான மனித உருவத்தை அவள் அதுவரை பார்த்ததேயில்லை. அதைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அதற்குள் அவளது தோழிகள், “ஆகா! இது என்ன அதிசயம்?” என்று கூச்சலிட, ராகலதா யசோதரனைத் தன் கையில் எடுத்துக் கொண்டாள். அந்த உருவம் அசைவதைக் கண்டு இளவரசி, “ஆகா! இது உயிருள்ள பொம்மை போலிருக்கிறது” என்றாள்.

 

மிக அருகில் ராகலதாவைப் பார்த்த யசோதரன் அவளுடைய அழகில் மதிமயங்கிப் போனான். மணந்தால் அவளையே மணப்பது என்ற தீர்மானித்தான்.
“ராஜகுமாரி! நான் நிஷாதபுரி மன்னன்! நான் எப்படி இத்தகைய உருவத்தைப் பெற்றேன் என்று எனக்கே தெரியவில்லை. நான் வீராதி வீரன்தான்! என்றாவது ஒருநாள் நான் சுயஉருவம் பெறுவேன்” என்றான் யசோதரன்.

“சாண் உயரத்தில் இருந்து கொண்டு பேச்சைப்பார்!” என்று தோழிகள் கேலி செய்ய, ராகலதா அவர்களை அடக்கினாள்.

 

இளவரசி அவனைத் தன்னுடன் அந்தப்புரத்தில் வைத்துக்கொள்ளத் தீர்மானித்தாள். தினமும் அவனுடன் இரகசியமாகப் பொழுதுபோக்கினாள். ராகலதா நன்றாக ஓவியம் வரையக் கூடியவள்! யசோதரன் எல்லாரையும் போல் சராசரி உயரத்தில் இருந்தால் எப்படியிருப்பான் என்று கற்பனை செய்து, அவனுடைய ஓவியத்தைத் தீட்டினாள்.

 

ஓவியத்தை அவள் பூர்த்தி செய்தபோது, பின்னாலிருந்து அதை கவனித்த யசோதரன், “ராகலதா! நீ ஓவியத்தில் வரைந்துள்ளதை போல் ஒரு நாள் கட்டாயம் மாறுவேன். அன்று என் மனத்தைத் திறந்து சொல்வதாக இருந்தேன். ஆனால் இப்போதே அதைச் சொல்கிறேன். நான் உன்னிடம் அன்பு கொண்டு உள்ளேன். சுயஉருவம் பெற்றபின் உன்னையே மணப்பேன்” என்றான். ராகலதா அதைக் கேட்டு நாணத்துடன் முகத்தை மூடிக் கொண்டாள்.

கடல்கன்னியை சிறைவைத்த மன்னன்

அதற்குள், பூலோகத்தைச் சுற்றிப் பார்க்கச் சென்றிருந்த ஜலேந்திரன் கடலுக்குத் திரும்பினான். அங்கு ஹிசிகாவைக் காணாமல் தேடிஅலைந்து, அவள் பூலோகத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டு, ரத்னகிரியில் அவளைத் தேடியலைந்தான். இறுதியில் சாமந்தன் மூலம் அவள் மன்னரின் அந்தப்புரத்தில் சிறைப்பட்டிருப்பதைத் தெரிந்து கொண்டு, அவன் மணிதரனை சந்தித்தான்.

 

மன்னனிடம் ஹிசிகாவை விடுதலை செய்யுமாறு கெஞ்சினான். அவனுக்கு பதிலளிக்க விரும்பாமல் மணிதரன் தன் மந்திரியை நோக்கினான். மன்னனின் மனத்தைப் புரிந்து கொண்ட மந்திரி ஜலேந்திரனை நோக்கி, “ஜலேந்திரா! எங்கள் ராஜ்யத்தில் நிலத்தில் வசிப்பவர்களாயினும், கடலில் வசிப்பவர்களாயினும் அனைவரும் எங்கள் ராஜாவின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டவர்கள். அதனால் ஹிசிகா மன்னரின் உடைமை!” என்றார்.

 

“மந்திரியாரே! உங்கள் மன்னரின் ஆதிக்கத்திற்குக் கட்டுப்பட்டவர்கள் நாங்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் மன்னரேயானாலும், தனிப்பட்ட நபர்களின் அந்தரங்கத்தில் குறுக்கிட அவருக்கு அதிகாரமில்லை” என்றான்.

“வார்த்தையை அளந்து பேசு! உங்கள் அந்தரங்கத்தில் மன்னர் குறுக்கிடவில்லை. ஹிசிகா ஒரு குற்றவாளி! கடலில் வசிப்பவர்கள் பூலோகத்தில் மன்னரின் அனுமதியின்றி நுழையக் கூடாது. அதனால்தான் அவளை சிறை வைத்து இருக்கிறோம். அதே குற்றத்திற்காக உன்னையும் சிறைப்பிடிக்க முடியும். நீங்கள் தண்டனையிலிருந்து தப்ப வேண்டுமெனில் ஒரு நிபந்தனை உள்ளது” என்றார் மந்திரி.

அந்த நிபந்தனை என்னவென்று சொல்லுங்கள்!” என்றான் ஜலேந்திரன். “கடலில் முத்துகளும், இரத்தினங்களும் மிகுந்துள்ளன என்பது உனக்குத் தெரியும். நீ எங்களுக்கு ஒரு லட்சம் இரத்தினக்கற்கள் கொண்டு வந்து கொடுத்தால், ஹிசிகா விடுதலை செய்யப்படுவாள்” என்றார் மந்திரி.
அதற்கு அவன் ஒப்புக் கொண்டு, கடலுக்குள் சென்று ஒரு லட்சம் இரத்தினக்கற்கள் சேகரித்துக் கொண்டு வந்து மணிதரனிடம் அளித்தான். ஆனால் அப்படியும் ராஜா ஹிசிகாவை விடுதலை செய்யவில்லை. மாறாக, இரத்தினக்கற்களை விற்ற பணத்தை தன் படை பலத்தைப் பெருக்கவும், ஏராளமான ஆயுதங்கள் வாங்கவும் செலவழித்தான்.

 

இந்த செய்தி ஒற்றர்களின் மூலம் வராககிரி மன்னன் பூஷணனை எட்டியது. உடனே பூஷணன் ஒரு பெரும் படையுடன் திடீரென கூர்மகிரியின் மீது படையெடுத்தான்.  கடுமையாக மூண்ட போரில் மணிதரன் கொல்லப்பட்டான். கூர்மகிரி பூஷணன் வசம் வந்தது.
சிறைப்பட்டிருந்த ஹிசிகாவை விடுதலை செய்த மன்னன் பூஷணன், ஜலேந்திரனை அழைத்து, “அன்பினால் இணைந்த உங்களை சேர்த்து வைக்க விரும்புகிறேன். நீங்கள் உங்கள் உலகத்திற்குச் செல்லுங்கள்” என்று கூறினான்.

மன்னன் பூஷணன் தங்களை என்ன செய்வானோ என்று கலங்கிய ஹிசிகாவிற்கும், ஜலேந்திரனுக்கும் அவனுடைய பெருந்தன்மை மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. “மகாராஜா! உங்கள் உதவிக்காக உங்களுக்கு எங்களால் முடிந்த அளவு முத்துகளும், இரத்தினமும் தரவிரும்புகிறோம்” என்றனர். அதைக் கேட்டுப் புன்னகைத்த பூஷணன், “நீங்கள் எனக்கு எதுவும் தர வேண்டாம். உங்கள் இருப்பிடத்திற்குச் சென்று வளமுடன் வாழங்கள்” என்று கூறி விடை கொடுத்தான்.

கடல்கன்னி ஹிசிகா

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அதை சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நீ அனுபவிக்க வேண்டிய ராஜபோகத்தைத் துறந்துவிட்டு, நிகழ்காலத்தை மட்டுமன்றி உன் எதிர்காலத்தையும் நீ வீணாக்கிக் கொண்டு இருக்கிறாய். உன்னைப் போல் பூஷணன் என்ற மன்னனும் தனக்குக் கிடைக்கவிருந்த ஐஸ்வரியங்களை தனது மதியீனத்தால் கை நழுவ விட்டான். அவன் கதையைக் கேள்!” என்று கதை சொல்லத் தொடங்கியது.

 

வராககிரி, கூர்மகிரி ஆகிய இரண்டும் அடுத்தடுத்த ராஜ்யங்கள். வராககிரியை ஆண்டு வந்த பூஷணன் நல்ல குணமுடையவன். ஆனால் கூர்மகிரி மன்னன் மணிதரனோ அதற்கு நேர்மாறானவன்! நிர்வாகத்தை மந்திரியிடம் ஒப்படைத்துவிட்டு, ராஜபோகத்தை அனுபவிப்பதிலேயே காலத்தைக் கழித்தான். அதனால் அவனுடைய படைபலம் குன்றியது. ஆனால் வராககிரி மன்னன் பூஷணனும், கூர்மகிரியின் மணிதரனும் நண்பர்களாகத் திகழ்ந்தனர்.

 

கூர்மகிரி ராஜ்யத்துக்கு உட்பட்ட கடற்கரையில் அமைந்திருந்த ரத்னகிரியில், சாமந்தன் என்ற இளம் வாலிபன் வசித்து வந்தான். அவனுடைய தந்தையான மணிகண்டன் மிகப் பெரிய வியாபாரி. அவர் திடீரென ஒருநாள் இறந்துபோக, அதுவரை தந்தையின் வியாபாரத்தில் கவனம் செலுத்தாத சாமந்தன் வியாபாரத்தைத் தொடர்ந்து செய்ய முடியாமல் திக்கு முக்காடிப் போனான். இதனால் பலத்த நட்டம் ஏற்பட்டது. கடன்காரர்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு தொந்தரவு செய்ய, சாமந்தன் கவலையில் ஆழ்ந்தான்.

 

ஒருநாள் இரவு உறக்கம் பிடிக்காமல் கடற்கரையில் உலவிக் கொண்டிருக்கையில், திடீரென்ற ஓர் அற்புதக் காட்சி தென்பட்டது. கடலிலிருந்து அழகே உருவான ஓர் இளம்பெண் எழுந்து வந்தாள்.

அவள் சாமந்தனை நோக்கி வந்து, “நான் ஒரு கடற்கன்னி! என் பெயர் ஹிசிகா! நான் இந்தக் கடலுக்குள் பாதாள லோகத்தில் வசிப்பவள். எங்கள் உலகத்தில் வாழ்ந்து வரும் ஜலேந்திரன் என்ற வாலிபன் மீது நான் பிரியம் கொண்டிருந்தேன். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக இருந்தோம். அதற்கு முன் அவன் பூலோகத்தில் உள்ள நகரங்களை ஒருமுறை சுற்றிப் பார்த்து விட்டு வருவதாகக் கூறிவிட்டு மூன்று மாதங்கள் முன் சென்றவன் இன்னும் திரும்பவில்லை. எனக்கும் பூலோகத்தைச் சுற்றிப் பார்க்க ஆசையாக இருக்கிறது. எனக்கு உதவி செய்வீர்களா?” என்றாள்.

 

“ஹிசிகா! தற்சமயம் நான் பெரிய சிக்கலில் மூழ்கியிருக்கிறேன். எனக்கு வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்ய பணம் தேவை! அதற்கு உன்னால் உதவி செய்ய முடியுமெனில், நானும் நீ கேட்பதை செய்வேன்” என்றான். உடனே ஹிசிகா கடலுள் மூழ்கிச் சென்று, விலையுயர்ந்த முத்துகளை அள்ளிக் கொண்டு வந்தாள். அவற்றைப் பெற்றுக் கொண்ட சாமந்தன், அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவளுக்குத் தங்குவதற்கு சகல வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தான்.

 

முத்துகளை விற்று, அதில் வந்த பணத்தைக் கொண்டு நஷ்டத்தை சரிசெய்து, மீண்டும் வியாபாரத்தைத் தொடங்கினான். தன் வீட்டுப் பெண்களுடன் ஹிசிகாவை தினந்தோறும் நகரில் நிடைபெறும் இசை, நடன நிகழ்ச்சிகளுக்கு அனுப்பி வைத்தான். ஹிசிகா அவற்றைப் பார்த்து மிகவும் ரசித்தாள். ஒருநாள் ஹிசிகா சாமந்தன் வீட்டுப் பெண்களுடன் ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த போது, அதே நிகழ்ச்சிக்கு கூர்மகிரி மன்னன் மணிதரனும் வந்திருந்தான். அழகே உருவான ஹிசிகாவைக் கண்டதும் மன்னன் மயங்கிப் போனான்.

 

தன்னுடைய வீரர்களை அவளை அந்த இடத்திலேயே பலவந்தமாகப் பிடித்து, தன் அரண்மனைக்கு இழுத்து வரச் செய்தான். சாமந்தன் வீட்டுப் பெண்கள் சாமந்தனிடம் விஷயத்தைச் சொல்ல, செய்வதறியாமல் திகைத்துப் போய் அவன் சும்மாயிருந்து விட்டான். அரண்மனைக்கு இழுத்து வரப்பட்ட ஹிசிகாவிடம், “பெண்ணே! நீ யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் உன்னைக் கண்டவுடன் உன் அழகில் மதி மயங்கிப் போனேன். என்னைத் திருமணம் செய்து கொள்! உன்னை மகாராணியாக்குகிறேன்” என்றான் மணிதரன்.

 

“ராஜா! நான் ஒரு கடற்கன்னி! நான் எப்படி பூலோகவாசியைக் திருமணம் செய்து கொள்ள முடியும்? தவிர, நான் ஏற்கெனவே எங்கள் உலகத்தைச் சேர்ந்த ஜலேந்திரனை மணம் செய்து கொள்வதாக இருக்கிறேன். அதனால் என்னை விட்டு விடுங்கள்!” என்று கெஞ்சினாள். “உன்னிடம் என் மனத்தைப் பறி கொடுத்து விட்டேன். இனி உன்னை விடுவதாக இல்லை!” என்று கூறிவிட்டு, ஹிசிகாவின் மனம் மாறும் வரை அவளை அந்தப்புரத்தில் சிறை வைக்க உத்தரவிட்டான்.

அக்பர் பீர்பால் கதைகள் – ஆந்தைகளின் மொழி

அன்று காலை, அக்பரைப் பார்த்தஉடனேயே அவர் அன்று என்ன செய்ய நினைக்கிறார் என்று பீர்பலுக்குத் தெரிந்து விட்டது. குதிரைச் சவாரிகேற்ற உடையை அவர் அணிந்திருந்தார். வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கவனித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் வேறு எங்கும் பார்க்காமல் ஆயுதங்களின் மீதே மிகவும் கவனமாக இருந்தார்.

அக்பர் அன்று வேட்டையாடத்திட்டமிட்டிருக்கிறார் என்று பீர்பல் புரிந்து கொண்டார். வேட்டையாடுவது அக்பருக்கு மிகவும் பிடித்தப் பொழுதுப் போக்கு! ஆனால் அவர் வேட்டைஆடுவது பீர்பலுக்குப் பிடிக்கவில்லை. அதை எப்படித் தடை செய்வது என்பதைப் பற்றியே அவர் சிந்திப்பார்.
சற்று நேரங்கழித்துத் தன் கவனத்தை ஆயுதங்களிலிருந்து விடுத்து, பீர்பலின் மீது செலுத்திய அக்பர் “நான் இன்று என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?” என்று பீர்பலைப் பார்த்துக் கேட்டதும், “மற்றவர்களின் மனத்திலுள்ளதை அறிந்து கொள்ளும் திறமை எனக்குக் கிடையாது” என்றார் பீர்பல்.
 “பொய் சொல்லாதே, பீர்பல்! நான் என்ன செய்யப் போகிறேன் என்று உனக்கு நன்றாகத் தெரியும். வேண்டுமென்றே தெரியாதது போல் நடிக்கிறாய். மிதமான குளிர்வீதம் இந்தக் காலைப் பொழுதில் வேட்டைஆடச் சென்றால் மிகவும் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து! உன் கருத்து என்னவோ?” என்றார். “தங்களின் கருத்தே என்னுடைய கருத்தும்!” என்றார் பீர்பல். “அப்படியானால், நீயும் என்னுடன் வேட்டையாட வர வேண்டும்!” என்றார் அக்பர்.
“தங்கள் கட்டளைப் படி நடக்க சித்தமாக இருக்கிறேன்” என்று பணிவுடன் பீர்பல் பதிலளித்தார். “பீர்பல்! நீ உடனிருந்தால் களைப்பே தெரிவதில்லை. நாவில் உனக்கு இத்தனை வலிமையைக் கொடுத்த இறைவன், உடலிலும் கொடுத்து இருக்கிறாரா என்பதையும் அறிய ஆசைப்படுகிறேன்” என்றார். “ஆகட்டும் பிரபு!” என்றார் பீர்பல்.
சற்று நேரத்திற்குப்பின், அக்பர் ஒரு பெரிய படை வீரர்களின் அணியுடன் காட்டை நோக்கிப் புறப்பட்டார். பீர்பலும் அக்பருடன் சென்றார். காட்டினுள் நுழைந்தபிறகு, அக்பரின் வீரர்கள் தாரை, தப்பட்டை ஆகியவற்றை உரக்க ஒலித்துக் காடே அதிரச் செய்தனர். அந்த சத்தத்தைக் கேட்டு காட்டு மிருகங்கள் மிரண்டு அங்குமிங்கும் சிதறி ஓட, அக்பரும், மற்றவர்களும் அவற்றைத் துரத்திச் சென்று, கொன்று குவித்தனர்.
திடீரென ஒரு புலி புதரிலிருந்து சீறிப் பாய்ந்து அவர்களை நோக்கி வந்தது. தாரை, தப்பட்டைகளின் ஒலியினால் எரிச்சல்அடைந்த புலி அவர்கள் மீது பாய முனைந்த போது, அக்பர் தன் கையில் இருந்த ஈட்டியை அதன்மீது எறிய, பயங்கரமாக உறுமிக் கொண்டே புலி மண்ணில் சாய்ந்தது. புலி இறந்து விட்டதால் அக்பர் உற்சாகமுற்றுக் கையை உயர்த்திக் கூச்சலிட, சுற்றியிருந்த வீரர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
மாலைக்குள் அக்பர் மற்றொரு புலியையும் வீரத்துடன் வேட்டையாடிக் கொன்றார். பிறகு அனைவரும் சென்று ஓய்வு எடுக்க, அக்பர் தனியாக அமர்ந்து பீர்பலுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.
மாலை மங்கிய நேரம்! பகல் முழுவதும் வானில் பறந்து திரிந்து கொண்டிருந்த பறவைகள் தங்கள் கூடுகளுக்குத் திரும்பிக் கொண்டு இருந்தன. அவற்றின் இனிமையான குரல்களை இருவரும் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அமர்ந்துஇருந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு மரத்தில் இரு ஆந்தைகள் பறந்து வந்து உட்கார்ந்து ஒலியெழுப்பத் தொடங்கின.
அவற்றின் ஒலியை வெகு நேரம் உன்னிப்பாகக் கவனித்த அக்பர், “இந்த ஆந்தைகளின் மொழி நமக்குப் புரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!” என்றார் பீர்பல். “பிரபு! அவற்றின் மொழி எனக்குத் தெரியும்!” என்றார் பீர்பல்.
“அப்படியா? பிறகு ஏன் சும்மாயிருக்கிறாய்? அவை என்ன பேசுகின்றன என்று உடனே சொல்!” என்றார் அக்பர். “பிரபு! அவையிரண்டில் ஒன்று மணப்பெண்ணின் தந்தை! மற்றொன்று பிள்ளையின் தந்தை! அவை வரதட்சிணையைப் பற்றி விவாதம் செய்து கொண்டு இருக்கின்றன. பிள்ளையின் தந்தை மிருகங்களே இல்லாத நாற்பது காடுகள் சீர்வரிசையாகத் தர வேண்டும் எனக் கேட்கிறது. பெண்ணின் தந்தை தன்னால் இருபது காடுகள் மட்டுமே தரமுடியும் என்று சொல்கிறது,” என்றார் பீர்பல்.
தொடர்ந்து, “பெண்ணின் தந்தையான அந்த ஆந்தை மேலும் தனக்கு ஆறு வாரகாலம் அவகாசம் தந்தால், மீதி இருபது காடுகளையும் ஏற்பாடு செய்ய முடியும் என்கிறது,” என்றார். “இது என்ன உளறல்? மிருகங்களேஇல்லாத காடுகள் அதற்கு எங்கிருந்து கிடைக்கும்? இருபது காடுகள் தருவதாக அது எப்படி ஒப்புக் கொண்டது?” என்றார் அக்பர்.
“அது உளறவில்லை! சரியாகத்தான் சொல்கிறது. நீங்கள் இருக்கும் தைரியத்தில்தான் அது அப்படிப் பேசுகிறது!” என்றார் பீர்பல். “சரிதான்! ஆந்தைதான் உளறுகிறது என்று நினைத்தால் நீயும் உளறுகிறாயே!” என்றார் அக்பர். “நான் உளறவில்லை, பிரபு! ஆந்தையும் உளறவில்லை! நீங்கள் ஒருமுறை வேட்டையாட வந்தாலே, காட்டில்உள்ள மிருகங்கள் அனைத்தும் கொல்லப்பட்டு விடுகிறது.
அதுபோல் இதுவரை நீங்கள் இருபது காடுகளை மிருகங்களேயில்லாமல் செய்து விட்டீர்கள். இன்னும் அடுத்த ஆறு வாரத்தில் நீங்கள் இருபது முறை வேட்டையாடினால், மீதியுள்ள இருபது காடுகளும் காலியாகிவிடும்! அந்த தைரியத்தில்தான் அந்த ஆந்தை அவ்வாறு கூறுகிறது!” என்றார் பீர்பல்.
பளீரென முகத்தில் அறைந்ததுபோல் இருந்த பீர்பலின் விளக்கம் அக்பரை மௌனமாக்கி விட்டது. தன் செய்கைக்கு முதன்முதலாக வெட்கித் தலை குனிந்த அக்பர், “பீர்பல்! என் கண்களை நீ இன்று திறந்து விட்டாய்! என்னுடைய மகிழ்ச்சிக்காக காட்டில் வாழும் மிருகங்களைக் கொன்று குவிப்பது ஈனமான செயல் என்று புரிந்து கொண்டேன். இன்றுமுதல் வேட்டையாடுவதை நிறுத்தி விடப் போகிறேன்” என்றார் அக்பர்.
பீர்பலுக்குத் தன் செவிகளையே நம்ப முடியவில்லை. இத்தனை எளிதாக அக்பரின் மனம் மாறும் என்று அவர் நினைக்கவில்லை. “பீர்பல்! என்ன அப்படிப் பார்க்கிறாய்? நான் இப்போது சொன்னதைக் கேட்டு அந்த ஆந்தை என்ன சொல்கிறது என்று எனக்குச் சொல்!” என்றார் அக்பர்.
“சக்கரவர்த்தியின் மனம் மாறிவிட்டதால், இனி என்னால் மிருகங்கள்அற்றக் காடுகளை வரதட்சிணையாக அளிக்க முடியாது என்று அது கூறுகிறது!” என்று பீர்பல் கூறவும், அக்பர் பலமாகச் சிரித்தார்.