Category: சுவாமி விவேகானந்தர் கதைகள்

சுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது!

ஓர் இளம் தாய் தெரு வழியாகச் சென்று கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்து ஒரு நாய் குரைக்கிறது. அவள் பயந்து அருகிலுள்ள வீட்டில் தஞ்சம் புகுகிறாள். மறுநாள் அதே தாய் தன் குழந்தையுடன் சென்று கொண்டிருக்கிறாள். திடீரென ஒரு சிங்கம் அவள் குழந்தையின் மீது பாய்கிறது. அவள் அப்போது என்ன செய்வாள்? சிங்கத்தின் வாயில் தன்னை அர்ப்பணித்தாவது அவள் குழந்தையைக் காப்பாற்றுவாள் அல்லவா?

இவ்வுதாரணத்தைக் கூறி சுவாமி விவேகானந்தர் உண்மையான அன்பின் இலக்கணத்தை விளக்குகிறார்: அன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும் அடிமைப்படும் அளவிற்கு பயம் அதிகரிக்கிறது. தான் ஒன்றுக்கும் உதவாதவன் என்று ஒருவன் நினைப்பானேயானால் பயம் அவனைப் பற்றிக் கொள்வது நிச்சயம். தான் அற்பன் என்ற எண்ணம் குறையக் குறைய பயமும் குறையும். துளியளவு பயம் இருந்தால்கூட அங்கே அன்பு இருக்க முடியாது. அன்பும், பயமும் இணைந்து இருக்க முடியாதவை. கடவுளை நேசிப்பவன் அவரிடம் பயப்படக்கூடாது. பயத்தின் காரணமாக இறைவனை நேசிப்பவர்கள் மனிதர்களில் கடைப்பட்டவர்கள்.; பக்குவப்படாதவர்கள். தண்டனை கிடைக்கும் என்ற பயத்தினால் இவர்கள் இறைவனை வழிபடுகிறார்கள். இப்படி தண்டனைக்கு பயந்து இறைவனை வழிபடுவது, வழிபாடு என்பதையே தரம் தாழ்த்துவதாகும். அத்தகைய வழிபாடு சற்றும் பக்குவப்படாத தாழ்ந்தநிலை வழிபாடாகும். மனத்தில் பயம் இருக்கும்வரை அங்கே அன்பு எப்படி வர முடியும்? பயங்கள் அனைத்தையும் வெற்றி கொள்வது அல்லவா அன்பின் இயல்பு!…கடவுள் மீது நாம் கொள்கின்ற பயம் மதத்தின் துவக்கமே; அவர்மீது கொள்ளும் அன்பே மதத்தின் முடிவு. இங்கு பயம் அனைத்தும் ஓடிவிட்டது. அன்பின் மூலம் வழிபாடு செய்வதே உண்மையான ஆன்மிக வழிபாடு. கடவுள் இரக்கமுள்ளவரா என்ற கேள்வியே இங்கு எழுவதில்லை. அவர் கடவுள், அவர் எனது அன்பர். அவர் எல்லாம் வல்லவரான சர்வ சக்தி வாய்ந்தவரா, ஓர் எல்லைக்கு உட்பட்டவரா, உட்படாதவரா என்ற கேள்விகளுக்கும் இங்கே இடமில்லை. அவர் நல்லது செய்தால் நல்லது. தீமை செய்தாலும் அதனால் என்ன? எல்லையற்ற அந்த அன்பைத் தவிர மற்ற எல்லா குணங்களும் மறைகின்றன…கடவுளே அன்பு, அன்பே கடவுள்…தெய்வீக அன்பாக மாறிவிடுவதுதான் உண்மையான வழிபாடு..அன்பின் உருவமாக எண்ணி அவரை வழிபடுங்கள். எல்லையற்ற அன்பு என்பதே அவரது பெயர். இது ஒன்றே அவரைப் பற்றிய விளக்கம்…தகப்பன் அல்லது தாய்க்குக் குழந்தையின்மீது உள்ள பாசம், கணவனுக்கு மனைவிமீதும், மனைவிக்குக் கணவன்மீதும் உள்ள காதல், நண்பர்களுக்கிடையே உள்ள நட்பு இவையனைத்தும் ஒன்றாகத் திரண்ட பேரன்பைக் கடவுள்மீது செலுத்தவேண்டும்…கடவுள்மீது நாம் அன்பு செலுத்த வேண்டிய முறை இதுவே: எனக்கு செல்வம் வேண்டாம், உடைமை வேண்டாம், கல்வி வேண்டாம், முக்தியும் வேண்டாம்…ஆனால் ஒன்றுமட்டும் அருள்வாய் நான் உன்னை நேசிக்கவேண்டும். அதுவும் அன்பிற்காக அன்பு செலுத்த அருள்வாய்…இறைமகிமை ஓங்கட்டும்! அன்பின் வடிவான அவன் புகழ் ஓங்கட்டும்!

சுவாமி விவேகானந்தர் கதைகள் – வேதாந்தமும் தனிச்சலுகையும்!

அரசன் ஒருவன் இருந்தான். அவனுக்குப் பல அலுவலர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும், தானே அரசனிடம் மிகுந்த ஈடுபாடு உள்ளவனென்றும், அரசனுக்காக உயிரைத் தரவும் ஆயத்தமாக இருப்பதாகவும் சொல்லி வந்தனர். ஒரு நாள் அரசபைக்கு துறவியொருவர் வந்தார். அரசன் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, தனது அலுவலர்களின் நேர்மையைக் குறித்துப் பெருமையாகக் கூறினார். ஆனால் துறவி அதை சோதிக்க விரும்பினார். அரசனும் அதை அனுமதித்தான். ஒரு சிறிய சோதனை வைத்தார் அத்துறவி. அவர் அரசனிடம், தான் அவரது ஆயுளும், ஆட்சியும் பல்லாண்டுகள் நீடிக்க ஒரு யாகம் செய்யப் போவதாகவும், அதற்கு நிறைய பால் தேவைப்படுகிறதென்றும், அரசனது அலுவலர் ஒவ்வொருவரும் ஒரு குடம் பால் தந்து அதற்காக வைக்கப்படும் அண்டாவில் அன்றிரவு ஊற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அரசன் புன்முறுவலுடன், இதுதானா உங்கள் சோதனை என்று இகழ்ச்சியுடன் கேட்டான். பின்னர் அவன் தனது அலுவலர் அனைவரையும் அழைத்து, துறவி நடத்தவுள்ள யாகத்தைப் பற்றிக் கூறி, அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குடம் பால் தர வேண்டும் எனக் கூற, அவர்கள் அனைவரும் அந்த யோசனைக்குத் தங்கள் மனப்பூர்வமான சம்மதத்தைத் தெரிவித்துத் திரும்பினர். அன்றிரவு அவ்வாறே ஒவ்வொருவரும் ஒரு குடம் பாலை அதற்காக வைக்கப்பட்டிருந்த அண்டாவில் ஊற்றிச் சென்றனர். மறுநாள் காலையில் பார்த்தபோது அண்டா நிறையத் தண்ணீர்தான் இருந்தது. துணுக்குற்ற அரசன் அலுவலர் அனைவரையும் அழைத்து விசாரித்தான். எல்லோரும் பால் ஊற்றும் போது, தான் ஒருவன் மட்டும் பால் ஊற்றினால் எப்படித் தெரியப் போகிறது என நினைத்து, எல்லோருமே தண்ணீரையே ஊற்றினர் என்பது விளங்கியது.

இந்த உதாரணத்தைக் கூறி சுவாமி விவேகானந்தர் உலக மக்களின் சுயநலப் போக்கைச் சுட்டிக் காட்டுகிறார்: கதையில் கண்ட அலுவலர்களைப் போலவே நாமும் நமது பங்கு வேலையைச் செய்து வருகிறோம். அதாவது, எல்லா உயிர்களிலும் இறைவன் வசிக்கிறான் என்று கூறுகிறோம், ஆனால் அது கொள்கையளவில் இருக்கிறதே தவிர, நடைமுறைக்கு வரவேயில்லை. உலகத்தில் சமத்துவக் கருத்து நிறைந்திருக்கும்போது, நான் ஒருவன் மட்டும் கொண்டாடும் தனிச்சலுகை, அல்லது தனியுரிமை, யாருக்குத் தெரியப் போகிறது என நினைக்கிறோம். ஆனால் நம்மிடமுள்ள இறைவன் எல்லோரிலும் இருக்கிறார். ஒவ்வோர் உயிரும் பரமாத்மாவின் கோயிலே. தனிச் சலுகை என்னும் கருத்து ஒழிந்தால் தான் மதம் என்பதே தோன்றும். எனவே, ஒவ்வொரு சலுகையையும், அதற்குக் காரணமாக நம்முள் இருக்கும் சுயநலப்போக்கையும் தூக்கியெறிந்துவிட்டு, எல்லா மக்களையும் சமமாகக் காணும் ஞானத்தைப் பெற முயலுங்கள் என நமக்கு அறைகூவல் விடுக்கிறார் சுவாமி விவேகானந்தர்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – பட்டம் வேண்டாம் பதவியும் வேண்டாம்!

சுவாமி விவேகானந்தர் அமெரிக்க தேசத்திற்குச் சென்று மிகப்பிரபலமடைந்து பெரும் புகழையும் பெற்றார். 1896 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் போஸ்டனில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் சுவாமிஜி உரை நிகழ்த்தினார். இந்த சொற்பொழிவு அநேகரின் பாராட்டுதல்களைப் பெற்றது பல்கலைக் கழக மாணவர்களுக்கு சுவாமிஜியை மிகவும் பிடித்துப் போயிற்று. கீழைத் தத்துவத் துறை தலைமைப் பதவியை சுவாமிஜிக்கு அளிக்க இப்பல்கலைக்கழகம் முன் வந்தது இது மிகவும் அபூர்வமான விஷயம். நூற்றாண்டுகளுக்கு மேல் பாரம்பரியம் உடைய ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் இத்தகைய பதவி பெறுவதென்பது சாமான்யமானதல்ல. ஆனால் சுவாமிஜியோ, நான் ஒரு துறவி துறவி பட்டமோ பதவியோ பெறுவது அழகல்ல என்று கூறி பல்கலைக் கழகத்தின் வேண்டுகோளை மறுத்து விட்டார்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – நாகரீகம் என்பது நன்னடத்தையில்

அமெரிக்க நாட்டிலுள்ள நியூயார்க் நகர வீதியில் சுவாமி விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார் கையிலே ஒரு தடியுடன் உடலின் மீது ஒரு சால்வையை மட்டும் போர்த்தியபடி சுவாமிஜி சென்றார். அப்போது எதிரில் வந்த ஒரு ஆங்கிலேயப் பெண்மணி சுவாமிஜியின் தோற்றத்தைக் கண்டு மிகவும் சிரித்ததோடு மட்டுமின்றி கேலியாகவும் பேசினார். சிறிதாவது கோபம் வரட்டுமே சுவாமிஜிக்கு ஊஹும் புன்முறுவல் தவழும் முகத்துடன் அம்மா எங்கள் இந்திய நாட்டில் ஒருவர் அணியும் உடைகளை வைத்து அவரை மதிப்பிடும் வழக்கம் இல்லை. நாகரீகம் என்பது மனிதனுடைய நன்னடத்தையில் தான் அடங்கியிருக்கிறது என்று அப்பெண்ணிடம் சொல்லி விட்டு அங்கிருந்து அகன்றார். தமது சொந்த மண்ணின் மீது சுவாமிஜிக்குத்தான் எத்துணை மதிப்பு!

சுவாமி விவேகானந்தர் கதைகள் – சந்நியாசி கீதம் உருவான கதை!

அமெரிக்காவில் தன் ரம்மியமான சிறகுகளை பிரித்துப் பாய்ந்து செல்லும் செயிண்ட் லாரன்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது ஆயிரம் தீவுப் பூங்கா. அங்கு சுவாமி விவேகானந்தர் மிஸ் எலிசபெத் டச்சர் என்பவரின் குடிலில் 1895 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 19 ஆம் நாள்( புதன் கிழமை) முதல் ஆகஸ்டு 6ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை தங்கி யிருந்தார். மிஸ் டச்சர் அடங்கிய மாணவக் குழுவிற்கு தினசரி ஆன்மிக வகுப்புகள் எடுத்து வந்தார் சுவாமிஜி. அங்கிருந்த மாணவியரில் சகோதரி கிறிஸ்டைன் இந்த சம்பவத்தினை நினைவு கூர்ந்து எழுதுகிறார்.

அன்றைய தினம் 12 பேர் அந்த வகுப்பில் அமர்ந்திருந்தோம். அப்போது ஒரு பேரொளி வானத்திலிருந்து மெல்ல இறங்கி சுவாமிஜியின் திருப்பாதங்களைத் தீண்டியது போல் இருந்தது. அன்று மதியம் சுவாமிஜி துறவின் பெருமையைப் பற்றியும் காவி அணிவதால் வரும் ஆனந்தம், மற்றும் சுதந்திரம் பற்றியும் விவரித்துக் கொண்டே இருந்தார். திடீரென்று அங்கிருந்து சென்று விட்டார் அவர் பின் சிறிது நேரத்திற்குள் தியாகத்தையும் துறவையும் போற்றும் சந்நியாசி கீதம் என்ற கவிதையை எழுதி முடித்தார். அறுபது ஆண்டுகளுக்காகப் பிறகு 1995 ஆம் வருடம் செப்டம்பர் மாத வாக்கில்தான் சுவாமிஜி கைப்பட எழுதிய சந்நியாசி கீதத்தின் பேப்பர்கள் திரும்பக்கிடைத்தன. இது ஒரு விந்தையான விஷயம் 1948 ஆம் ஆண்டு நியூயார்க் ராமகிருஷ்ண விவேகானந்த மையம் ஆயிரம் தீவுப் பகுதியில் சுவாமிஜி தங்கியிருந்த வீட்டில் மறுசீரமைப்புப் பணிக்கு ஏற்பாடு செய்தது.

சுவாமிஜி எழுதிய சந்நியாசி கீதம் அங்கிருப்பது யாருக்கும் தெரியாததால் அது மற்ற பயனற்ற பொருள்களோடு வெளியே தன் குடும்பத்துடன் வழக்கமாக மடத்திற்குச் சென்று வரும் எலக்ட்ரீஷியனான மிஸ்டர் ஹரால்டு கோல் என்பவர் அந்த சந்நியாசி கீதத்தின் பெருமையை உணர்ந்து அந்தக் கவிதையை எடுத்து வந்து பத்திரமாக வைத்திருந்தார். சுவாமிஜியின் ஞாபகார்த்தமாக அவர் அதை வைத்திருந்தாலும் தன்னிடம் சுவாமிஜியின் கவிதை இருக்கும் தகவலை அவர் யாரிடமும் சொல்லவில்லை. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு 1955 செப்படம்பர் மாதம் அவர் அதை நியூயார்க்கில் உள்ள ராமகிருஷ்ண விவேகானந்த மையத்தின் தலைவரான சுவாமி நிகிலானந்த மகராஜிடம் ஒப்படைத்தார்.

சுவாமி சத்பிரகாஷானந்தர் எழுதிய என்ற நூலில் இந்த செய்தி வெளி வந்துள்ளது. சுவாமிஜியின் திருக்கரங்களினால் எழுதப்பட்ட சந்நியாச கீதத்தைப் பற்றி அவரது சீடர் சிறப்பித்துக் கூறுவதைக் காண்போம். சுவாமி விவேகானந்தரின் சீடர் சுவாமி ஆத்மானந்தர் தன் குருவான சுவாமிஜியிடம் அவர் கொண்டிருந்த பக்தி அளவிடற்கரியது. சுவாமிஜி எழுதிய கவிதைகளை பாடல்களை அவர் பாடும் போது அந்த இடம் முழுமையும் ஆன்மிக அதிர்வுகளால் நிரம்பும் அவரைப் பெரிதும் கவர்ந்தது சுவாமிஜி எழுதிய சந்நியாசி கீதம் என்ற பாடல்கள்.

புதிதாகத் துறவறம்மேற்கொண்டவர்களிடம் ஆத்மானந்தர் நீங்கள் உண்மையிலேயே துறவியாக வாழ விரும்பினால் இன்று முதல் இந்தப் பாடல்களின் ஒவ்வொரு வார்த்தையையும் இன்று முதல் தியானம் செய்யுங்கள் என்று கூறுவார். சுவாமிஜி கூறிய கருத்துக்கள் சந்நியாசிகளுக்கு மட்டும்தானா? வாழ்வை மேம்படுத்திக் கொள்ள விரும்பும் மனிதர்கள் அனைவருக்குமே அவை வழிகாட்டு அல்லவா! அவற்றின் ஒரு சிறிய பகுதியை நாமும் காண்போமே!

உறுதி உடைய நற்றுறவீ உம்மைப் பிணைத்துக் கீழ்ப்படுத்தி
இறுக்கும் தளைகளை நீர் நொறுக்கி எறிந்து விடுங்கள் இக்கணமே
மின்னும் தங்கத்தளையெனினும் மிகவும் கரிய இரும்பெனினும்
மன்றும் அன்பே ஆயிடினும் மனத்தில் வளரும் வெறுப்பெனினும்
எல்லாம் இடுக்கிப் பிடிபோல என்றும் உம்மை நெருக்குபவை
தங்கத் தளைகள் ஆனாலும் சற்றும் வலிமை குறைந்தனவா?
சிங்கத் துறவீ தளைமுற்றும் சிதைத் தெறியுங்கள் இப்போதே
ஓம்தத்ஸத் என நீங்கள் உள்ளம் உருகச் சொல்லுங்கள்.

என்ன அற்புதமான பொருள் பொதிந்த கவிதைகளை சுவாமிஜி வழங்கியிருக்கிறார்.

உண்மையான துறவியாக வாழ விரும்பும் சந்நியாசியாக இருந்தாலும் சரி இறைவனை அடைய விரும்பும் சாதகனாக இருந்தாலும் சரி நம்மைப் பிணைத்துள்ள தளைகளிலிருந்து விடுபட்டே ஆக வேண்டுமல்லவா!

தினமும் சுவாமிஜியின் இக் கவிதைகளின் பொருளைத் தியானிக்கும் போது, தளைகளிலிருந்து விடுபடவேண்டுமென்ற ஆர்வத்தையும், அதற்குரிய ஆற்றலையும் சுவாமிஜி வழங்குவார்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – ஸ்ரீராமகிருஷ்ண சீடர்களின் தவம்!

சுவாமி நித்யாத்மானந்தா எழுதிய M-The Apostle and the Evangelist (ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகளை எழுதிய மகேந்திரநாத் குப்தர் என்ற ம) என்ற நூலில் உள்ள 16 ஜூலை 1924-ல் நடந்த உரையாடலிலிருந்து தொகுத்தது.

அபய்பாபு: சுவாமி விவேகானந்தரும் அவரது சகோதரத் துறவிகளும் எதற்கு அவ்வளவு தவம் மேற்கொண்டார்கள்? ஸ்ரீராமகிருஷ்ணர்தான் ஏற்கனவே அவர்களையெல்லாம் சித்தியடைந்த வர்களாக உயர்நிலைக்கு அழைத்துப் போய்விட்டாரே! அப்படியிருந்தும், உணவு, தூக்கம் இவற்றையெல்லாம் துறந்து எதற்கு அவ்வளவு கடுமையான தவம் செய்தார்கள்?

ம: கடவுளை அடைந்த பிறகும் அவர்கள் ஏன் தவம் செய்கிறார்கள் என்றால், தாம் பெற்ற இறையுணர்வைத் திடப்படுத்திக் கொள்வதற்காக என்பதுதான் பதில். புராணத்தில் படித்திருக்கி றோம், முசுகுந்த மகாராஜா இறையனுபவம் கிட்டிய பிறகும் தவம் மேற்கொண்டார் என்று. ஏன்? அந்த உயர் அனுபவ நிலைக்குப் பிறகும் அவருக்கு மனம் அமைதியற்றுச் சலித்துக் கொண்டே இருந்தது. அதனாலேயே அவருக்கு, தவம் செய் என்ற ஆணை கிடைத்தது. அலை பாய்வது மனதின் சுபாவம்; அதைத் தவத்தின் மூலம் அமைதிப்படுத்த முடியும்.இன்னொரு காரணம். இறையுணர்வை அனுபவத்தில் அடைந்த பின்னும் அதிலிருந்து சறுக்கி விழ வாய்ப்புண்டு. ஏன் தினமும் தியானம் செய்கிறீர்கள்? என்று ஸ்ரீராமகிருஷ்ணர், தமக்கு அத்வைத சாதனையைக் கற்றுத் தந்த குருவான தோதாபுரியைக் கேட்டார். அதற்கு தோதாபுரி, பாத்திரத்தைத் தினமும் துலக்க வேண்டும்; இல்லாவிட்டால் அதில் களிம்பு ஏறிக் கறுத்துவிடும் என்றார். ஸ்ரீராமகிருஷ்ணர் விடாமல், பாத்திரமாக இருந்தால்தானே தினம் தினம் துலக்க வேண்டும்? அதுவே தங்கமாகிவிட்டால் தினமும் துலக்க வேண்டியதில்லை அல்லவா? என்று கேட்டாராம். உண்மை என்னவெனில், எல்லோராலும் தங்கப் பாத்திரமாய் ஆகிவிட முடியாது. ஸ்ரீராம கிருஷ்ணர் ஓர் அவதார புருஷர்; அவர் சொக்கத் தங்கம்தான்.

எல்லோரையும் அவர் நிலைக்கு ஒப்பிட முடியுமா? ஸ்ரீராமகிருஷ்ணரைச் சரணடைந்தவர்கள் முக்தியடைவார்கள் என்பது உண்மைதான். இதுபற்றி அன்னை ஸ்ரீசாரதாதேவி ஒரு சாதுவிடம் விளக்குகையில், கடைசி மூச்சை விடுகையில், குருதேவர் வந்து அழைத்துப் போவார் என்பதில் ஐயமில்லை; ஆனால், நீ உயிரோடிருக்கும்போதே, சாந்தியில் நிலைபெற்று இருக்க வேண்டுமானால், தவம் செய்ய வேண்டும்; குருதேவரைத் தியானிக் கத்தான் வேண்டும் என அறிவுறுத்தினார். பொதுவாக, தவம் செய்பவனுக்கே இறைவ னின் கருணை கிட்டுகிறது. தவத்தின் மூலம் மனம் தூய்மையாகிறது; அதன் மூலம் கடவுளின் கருணைக்குப் பாத்திரமாவது எளிதாகிறது. அதே சமயம், கடவுளின் கருணை கிட்டுவதற்கு எந்தச் சட்டதிட்டமும் கிடையாது என்பதும் உண்மையே. அவர் நியதிகளுக்கு அப்பாற்பட்டவர்; அருளுவதும் அருளாதிருப்பதும் அவரது விருப்பம். அப்படியென்றால் என்னதான் வழி? செய்தால் அவரை வளைத்துப் போட்டு விட முடியும் என்ற கணக்கு ஏதும் போடாமல், தவம் செய்ய வேண்டும்.அப்படியானால், வாழ்நாள் பூராவும் ஒருவன் தவம் செய்து கொண்டே இருக்க வேண்டுமா? படகோட்டி, பயண தூரம் முழுவதும் துடுப்பு போட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதானா? அப்படியல்ல.

அலை அதிகமாகப் பொங்குகையில், காற்று வேகமாகச் சுழன்றடிக்கையில், படகோட்டி துடுப்பைக் கவனமாகப் போடத்தான் வேண்டும். சற்று நேரம் பொறுத்து, கடல் அமைதியாகும்; காற்று சாதகமாய் வீசும். அப்போது, படகோட்டி பாய்மரத்தைச் சரியாகக் கட்டிவிட்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டு புகைபிடிக்கிறான். படகு, தானே ஒழுங்காகப் பயணிக்கிறது. இப்போது படகோட்டிக்கு, ஓய்வு, அமைதி, ஆனந்தம்தான். அதுபோலவே ஒரு சாதகன், மனதின் கொந்தளிப்புகளையும், ஆசாபாசங்களையும் சமாளிக்கக் கடுந்தவம் செய்கிறான்; மனம் அமைதியாகும்போது தவமும் முடிவுக்கு வருகிறது.ஸ்ரீராமகிருஷ்ணர் ஓர் அவதாரபுருஷராக இருந்தும், அவரே எத்தனை தவம் செய்தார்! எத்தனை வித ஆன்மிகச் சாதனைகள், எத்தனை பஜனை! சாதுசங்கத்தின் அவசியத்தைத் திரும்பத் திரும்ப உபதேசித்த அவர், தாமே சாதுக்களையும் உருவாக்கித் தந்தார். தன் அந்தரங்கச் சீடர்களைப் பூரணத்துவம் அடைந்தவர்களாக ஆக்கித் தந்தார். இறைவனை உருவமுள்ளவராகவும் உருவமற்றவராகவும் காணும் அனுபவத்தை அவர்களுக்கு வழங்கினார். அப்படியிருந்தும், அவர்களை இப்படி கடும் தவத்துக்கு ஏன் உட்படுத்தினார் என்றால், அதற்கு மற்றொரு முக்கிய காரணம், அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக அவர்கள் இருக்க வேண்டும் என்பதால்தான். அவர்களைப் பார்த்துத்தான் பிறரும் சாதனையும் தவமும் செய்யக் கற்றுக் கொள்வார்கள்.குருதேவரின் மறைவுக்குப் பிறகு, தனித்து விடப்பட்ட அந்த இளம்சாதுக்கள், பாராநகர் மடத்தில் எத்தகைய விவேக வைராக்கியத்தோடு தவம் மேற்கொண்டார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேனே.

அவர்கள் இடுப்பில் கோவணம் மட்டும்தான் இருந்தது. நாள் முழுவதும் ஜபத்திலும் தியானத்திலும் மூழ்கிக் கிடப்பார்கள். உடம்பைப் பற்றியோ, உணவைப் பற்றியோ கவலையே படமாட்டார்கள். சில நாட்கள் தொடர்ந்து உண்ண ஒன்றுமே இருக்காது. அவர்களிடம் மொத்தத்தில் உருப்படியாய் இருந்தது ஒரு வேஷ்டியும் ஒரு துண்டும்தான். அவர்களில் யாருக்கு வெளியே போகும் வேலை இருக்கிறதோ, அவர்கள் அதை உடுத்திக் கொண்டு போய் வருவார்கள்.அவர்கள் உலகுக்கே உபதேசிக்கப் பிறந்தவர்கள். ஒரு முறை கண்டவர்கள் என்ற தகுதி அதற்குப் போதாது. பிரம்மஞானத்தில் நிலைபெற்றவர்களாக அவர்கள் உறுதி பெற வேண்டியிருந்தது. அதற்குத்தான் இத்தனை கடின தவம். ப்ரம்மாஸ்மி (நான் பிரம்மமாக இருக்கின்றேன் என்றோ கல்விதம் பிரம்மா (இருப்பதெல்லாம் பிரம்மம் ஒன்றே) என்றோ, வெறுமனே கிளிப்பிள்ளைபோல் வாயால் சொல்லாமல், அதை அனுபவப்பூர்வமாக, எல்லாவற்றிலும் இறைவனைக் கண்டு வணங்கும் நிலையைப் பெறுவதற்குத்தான் இத்தனை கடினமான தவம். மொத்தத்தில், ஆரம்ப நிலையில் கடவுளை அடைவதற்குத் தவம் வேண்டியிருக்கிறது; அடுத்த நிலையில், அனுபூதியில் பெற்றதை நிலைத்த ஆனந்தமாக ஆக்கவும், தாம் பெற்ற ஆனந்தத்தை அடுத்தவர்களுக்கு வழங்கும் தகுதியைப் பெறவும் தவம் அவசியமாகிறது.- தமிழாக்கம்: சி. வரதராஜன்

சுவாமி விவேகானந்தர் கதைகள் – எது உண்மையான வழிபாடு?

அன்பிலும், இதயத்தின் தூய்மையான பக்தியிலும்தான் மதம் வாழ்கிறதே தவிர, சடங்குகளில் மதம் வாழவில்லை. ஒருவன் உடலும் மனமும் தூய்மையாக இல்லாமல், கோயிலுக்குச் செல்வதும் சிவபெருமானை வழிபடுவதும் பயனற்றவை. உடலும் மனமும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை சிவபெருமான் நிறைவேற்றுகிறார். ஆனால், தாங்களே தூய்மையற்றவர்களாக இருந்துகொண்டு, பிறருக்கு மதபோதனை செய்பவர்கள் இறுதியில் தோல்வியே அடைகிறார்கள். புற வழிபாடு என்பது, அக வழிபாட்டின் அடையாளம் மட்டுமே ஆகும். அக வழிபாடும் தூய்மையும்தாம் உண்மையான விஷயங்கள். இவையின்றிச் செய்யப்படும் புற வழிபாடு பயனற்றது. இதை நீங்கள் மனத்தில் பதிய வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். நாம் எதை வேண்டுமானாலும் செய்யலாம்; பிறகு ஒரு திருத்தலத்திற்குச் சென்றால், அந்தப் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிடும் என்று நினைக்கும் அளவிற்குக் கீழான நிலைக்கு, இந்தக் கலியுகத்தில் மக்கள் வந்துவிட்டார்கள். தூய்மையற்ற உள்ளத்துடன் கோயிலுக்குச் செல்லும் ஒருவன், ஏற்கெனவே தன்னிடம் இருக்கும் தன் பாவங்களுடன் மேலும் ஒன்றை அதிகப்படுத்துகிறான்; கோயிலுக்குப் புறப்பட்டபோது இருந்ததைவிட, இன்னும் மோசமானவனாக அவன் வீடு திரும்புகிறான்.

திருத்தலங்கள், புனிதமான பொருள்களாலும் மகான்களாலும் நிரம்பி இருப்பவை. மகான்கள் வாழ்கின்ற இடங்களில் கோயில் எதுவும் இல்லையென்றாலும், அந்த இடங்கள் திருத்தலங்கள்தான். நூறு கோயில்கள் இருந்தாலும், அங்கே புனிதமற்றவர்கள் இருப்பார்களானால் அங்கு தெய்விகம் மறைந்துவிடும். திருத்தலங்களில் வாழ்வதும் மிகவும் கடினமான செயலாகும். காரணம், சாதாரண இடங்களில் செய்யும் பாவங்களைச் சுலபமாக நீக்கிக்கொள்ள முடியும். ஆனால் திருத்தலங்களில் செய்யும் பாவத்தை நீக்கவே முடியாது. மனத்தைத் தூய்மையாக வைத்திருப்பதும், பிறருக்கு நன்மை செய்வதும்தான் எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழை எளியவர்களிடமும், பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் சிவபெருமானைக் காண்பவன்தான் உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான். விக்கிரகத்தில் மட்டும் சிவபெருமானைக் காண்பவனின் வழிபாடு ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது. ஒரே ஒரு ஏழைக்காகிலும், அவனது ஜாதி, இனம், மதம் போன்ற எதையும் பாராமல் – அவனிடம் சிவபெருமானைக் கண்டு, அவனுக்கு உதவிகள் செய்து தொண்டாற்றுபவனிடம் சிவபெருமான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறார். கோயிலில் மட்டும் தன்னைக் காண்பவனைவிட, அவனிடம் சிவபெருமான் அதிக மகிழ்ச்சி கொள்கிறார்.

ஒரு பணக்காரனுக்கு ஒரு தோட்டம் இருந்தது. அதில் இரண்டு தோட்டக்காரர்கள் இருந்தார்கள். ஒருவன் சோம்பேறி. அவன் வேலையே செய்ய மாட்டான். ஆனால் யஜமானன் தோட்டத்திற்கு வந்தால் போதும்; உடனே எழுந்துபோய் கைகூப்பி வணங்கியபடி யஜமானனிடம், ஓ, என் யஜமானின் முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது! என்று புகழ் பாடி, அவர் முன்னால் பல்லை இளித்துக்கொண்டு நிற்பான். மற்றொரு வேலைக்காரன் அதிகம் பேசுவதே இல்லை. ஆனால் அவன் கடினமாக உழைப்பான். பல வகையான பழங்களையும் காய்கறிகளையும் பயிர் செய்து, நீண்ட தூரத்தில் வசிக்கும் தன்னுடைய யஜமானனின் வீட்டிற்குச் சுமந்துகொண்டு செல்வான். இந்த இரண்டு தோட்டக்காரர்களில் யாரை யஜமானன் அதிகம் விரும்புவார்? சிவபெருமான்தான் அந்த யஜமானன். இந்த உலகம் அவரது தோட்டம். இங்கே இரண்டு வகையான தோட்டக்காரர்கள் இருக்கிறார்கள். ஒரு வகையினர் சோம்பேறிகள் – ஏமாற்றுக்காரர்கள். அவர்கள் எதுவும் செய்வதில்லை; சிவபெருமானின் அழகான கண்களையும் மூக்கையும் மற்ற குணநலன்களையும் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். ஏழைகளும், பலவீனர்களுமான எல்லா மனிதர்கள், விலங்குகள் மற்றும் அவரது படைப்புகள் அனைத்தையும் மிகுந்த கவனத்தோடு பராமரிப்பவர்கள் மற்றொரு வகையினர்.

இவர்களில் யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? நிச்சயமாக அவருடைய பிள்ளைகளுக்குச் சேவை செய்பவர்களே சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள். தந்தைக்குச் சேவை செய்ய விரும்புவர்கள், முதலில் பிள்ளைகளுக்குச் சேவை செய்ய வேண்டும். சிவபெருமானுக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள், முதலில் அவருடைய குழந்தைகளாகிய இந்த உலக உயிர்கள் அனைத்திற்கும் தொண்டு செய்ய வேண்டும். இறைவனின் தொண்டர்களுக்குச் சேவை செய்பவர்களே இறைவனின் மிகச் சிறந்த தொண்டர்கள் என்று, சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் கருத்தை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன்: மனத்தூய்மையுடன் இருங்கள்; உங்களை நாடி வரும் ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். இது நல்ல செயல். இதன் பலனாக உங்கள் இதயம் தூய்மையடையும். அதனால் எல்லோரிடமும் குடிகொண்டிருக்கும் சிவபெருமான் உங்களிடம் வெளிப்பட்டுத் தோன்றுவார். அவர் எல்லோருடைய இதயத்திலும் எப்போதும் இருக்கிறார். அழுக்கும் தூசியும் படிந்த கண்ணாடியில் நாம் நம் உருவத்தைப் பார்க்க முடியாது. அஞ்ஞானமும் தீய குணங்களும்தாம் நம் இதயம் என்ற கண்ணாடியில் படிந்திருக்கும் தூசியும் அழுக்குமாகும்.

நமது நன்மையை மட்டுமே நினைக்கும் சுயநலம், பாவங்கள் எல்லாவற்றிலும் முதல் பாவமாகும். நானே முதலில் சாப்பிடுவேன்; மற்றவர்களைவிட எனக்கு அதிகமாகப் பணம் வேண்டும்; எல்லாம் எனக்கே வேண்டும்; மற்றவர்களுக்கு முன்னால் நான் சொர்க்கம் போக வேண்டும்; எல்லோருக்கும் முன்னால் நான் முக்தி பெற வேண்டும் என்றெல்லாம் நினைப்பவன் சுயநலவாதி. சுயநலம் இல்லாதவனோ, நான் கடைசியில் இருக்கிறேன். சொர்க்கம் செல்வதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நான் நரகத்திற்குச் செல்வதால் என் சகோதரர்களுக்கு உதவ முடியுமானால் – நான் நரகத்திற்குச் செல்லவும் தயாராக இருக்கிறேன் என்று சொல்கிறான். இத்தகைய சுயநலமற்ற தன்மைதான் ஆன்மிகம். சுயநலம் இல்லாதவனே மேலான ஆன்மிகவாதி; அவனே சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான். அவன் படித்தவனாக இருந்தாலும் சரி, படிக்காதவனாக இருந்தாலும் சரி – அவன் அறிந்தாலும் சரி, அறியவில்லை என்றாலும் சரி – அவனே மற்ற எல்லோரையும்விட சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான்.
சுயநலம் கொண்டவன் எல்லாக் கோயில்களுக்கும் சென்று வழிபட்டிருந்தாலும், புண்ணியத் தலங்கள் அனைத்தையும் தரிசித்திருந்தாலும், சிறுத்தையைப் போல் தன் உடல் முழுவதும் மதச் சின்னங்களை அணிந்திருந்தாலும் – அவன் சிவபெருமானிடமிருந்து விலகியே இருக்கிறான்.

(சுவாமி விவேகானந்தர், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி கோயிலில் 27.1.1897-ஆம் நாள் நிகழ்த்திய சொற்பொழிவு.)

சுவாமி விவேகானந்தர் கதைகள் – பிரச்னையைச் சரியான முறையில் அணுகக் கற்றுக்கொள்!

இந்தியாவை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமானால், சுவாமி விவேகானந்தரைப் படியுங்கள். அவரிடம் எல்லாமே ஆக்கபூர்வமானவை; அவரிடம் எதிர்மறையாக எதுவும் இல்லை என்று, கவியரசர் ரவீந்தரநாத் தாகூர் கூறினார். சுவாமி விவேகானந்தரிடம் குறுகிய மனப்பான்மை, எதிர்மறைக் கருத்துகள் ஆகியவை ஒருபோதும் இருந்ததில்லை. அவர் மற்றவர்களும் குறுகிய மனப்பான்மையைக் கைவிட்டு, நடைமுறையில் நன்மை தரக்கூடிய செயல்களில் ஈடுபட வேண்டும்; பரந்த மனப்பான்மையுடன் வாழ வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒரு சமயம் கர்நாடக மாநிலத்தில் பெல்காம் என்ற இடத்தில், சுவாமி விவேகானந்தர் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு 29 வயது. அங்கு அவரை அறிஞர்கள், உயர் அதிகாரிகள், தெய்வபக்தி உள்ளவர்கள், தெய்வபக்தி இல்லாதவர்கள், பண்டிதர்கள், பாமரர்கள் என்று சமுதாயத்தில் அனைத்து நிலைகளிலும் உள்ள பலர் சந்தித்து உரையாடினார்கள். அவ்விதம் விவேகானந்தரைச் சந்தித்துப் பேசுவதற்காக வந்தவர்களுக்கிடையில், அவ்வப்போது கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இந்த உரையாடல்களின்போது சிலர் நியாயமில்லாத ஏதேனும் ஒரு கருத்தை உறுதியாகப் பிடித்துக்கொண்டு நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று முரட்டுத்தனமாகப் பேசினார்கள். சிலர் தங்கள் கருத்து தவறு என்று தெரிந்த பிறகும், அதுதான் சரி என்று விவாதித்தார்கள். அவ்விதம் ஒரு முடிவுக்கும் வராமல் ஒரு நாள் மனம்போன போக்கில் பண்டிதர்கள் சிலர், தங்களுக்குள் காரசாரமாக விவாதம் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்குப் படிப்பினை தரும் வகையில் சுவாமி விவேகானந்தர் பின்வரும் ஒரு கதையைக் கூறினார்: ஓர் அரசன் தன் நாட்டை ஆட்சி செய்து வந்தான். திடீரென்று ஒரு நாள் அவனுடைய நாட்டை, பக்கத்து நாட்டு அரசன் படையெடுத்து வந்து முற்றுகையிட்டான். உடனே அரசன் எல்லோரையும் அழைத்து, பகைவர்களின் படை விரைந்து வந்துகொண்டிருக்கிறது! அவர்களை எப்படி எதிர்கொள்வது? இப்போது நாம் என்ன செய்யலாம்? என்று ஆலோசனை கேட்டான். அங்கிருந்த பொறியியல் வல்லுநர்கள், நம் தலைநகரைச் சுற்றிலும் பெரிய ஒரு மண் சுவர் எழுப்பி, அதைச் சுற்றி ஓர் அகழி அமைக்க வேண்டும் என்றார்கள்.

தச்சர்களோ, மண் சுவர் பயனற்றது, மழை வந்தால் கரைந்துவிடும். எனவே மரத்தினால் சுவர் அமைக்க வேண்டும் என்று கூறினார்கள். இதைக் கேட்ட சக்கிலியர், இரண்டும் பயனற்றவை. தோலால் தலைநகரத்தைச் சுற்றிலும் சுவர் அமைப்பது போன்று பாதுகாப்பானது வேறு எதுவுமில்லை என்றனர். அப்போது கொல்லர்கள், நீங்கள் சொல்வது எதுவுமே சரியில்லை. இரும்புச்சுவரைப் போன்று ஒரு பாதுகாப்பை வேறு எதனாலும் தர முடியாது. இரும்பினால்தான் மதிற்சுவரைக் கட்ட வேண்டும் என்று கூக்குரலிட்டனர். அப்போது அங்கே வந்த சட்ட நிபுணர்கள், நாம் பகையரசனிடம் நீங்கள் இப்படி வலுவில் வந்து எங்கள் நாட்டின் மீது படையெடுப்பது முறையல்ல. இது சட்டத்திற்குப் புறம்பானது. எதையும் சட்டப்பூர்வமாக அணுகுவதுதான் சிறப்பு. எனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின்படி நீங்கள் நடப்பதுதான் நியாயமாகும் என்று, அவர்களுக்கு அறிவுரை சொல்ல வேண்டும் என்று வாதிட்டார்கள். கடைசியாக அரசாங்கப் பூஜாரிகள் வந்தார்கள். அவர்கள் அது வரையில் ஆலோசனை கூறிய எல்லோரையும் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்கள். அவர்கள், நீங்கள் எல்லோரும் பைத்தியக்காரர்கள்போல் பேசுகிறீர்கள்! முதலில் யாகங்கள் செய்து தேவர்களை மகிழ்விக்க வேண்டும். அப்படிச் செய்தால் நம்மை யாராலும் வெல்ல முடியாது! என்றார்கள்.

இப்படியெல்லாம் அவர்கள் நாட்டைக் காப்பாற்றுவதற்குப் பதில் வீண் வாக்குவாதம் செய்வதிலும், தங்களுக்குள் சண்டையிடுவதிலும் காலத்தை வீணாக்கிக்கொண்டிருந்தார்கள். இதற்குள் பகை அரசன் புயல்போல் தன் படைகளுடன் தலைநகரத்திற்குள் புகுந்தான். அவன் எந்த எதிர்ப்பும் இன்றி, மிகவும் சுலபமாகத் தலைநகரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கினான். நம்மில் பலர் இப்படித்தான் நடந்துகொள்கிறோம் – என்று சுவாமி விவேகானந்தர் கதையைச் சொல்லி முடித்தார். உண்மை எது? என்று நாம் சரியாகத் தெரிந்துகொள்ளும் பொருட்டு, மற்றவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவது நல்லது. ஆனால் தெரிந்து வேண்டுமென்றே வீண் வாக்குவாதங்களிலும், வீம்புப் பேச்சுக்களிலும் ஈடுபடுவது வரவேற்கத்தக்கதல்ல. ஒரு பிரச்னை என்று வரும்போது, அதைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான ஒரு வழியைக் கண்டறிந்து செயல்படுத்தி பிரச்னையைத் தீர்ப்பதுதான் – வெற்றி பெறுவதுதான் அறிவுடைமையாகும். இதற்கு மாறாக புரிந்துகொள்ளாமல் விவாதம் செய்வது, திக்குத் தெரியாத காட்டில் நுழைவது போன்றது. கொள்கைவெறி அழிவுக்கு காரணமாக அமையுமே தவிர, ஒருபோதும் ஆக்கபூர்வமான எந்த நன்மையையும் தராது.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – மனத்தை ஒருமுகப்படுத்தினால் வெற்றி!

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் ஓர் ஊரில் தங்கியிருந்தார். அங்கு ஒரு நீரோடையும் பாலமும் இருந்தன. ஒரு நாள் சுவாமி விவேகானந்தர், நீரோடைக் கரையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அங்கு இளைஞர்கள் சிலர், முட்டையோடுகளைத் துப்பாக்கியால் குறிவைத்து சுடுவதற்குப் பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள், முட்டையோடுகளை ஒரு நூலில் கட்டி, நீரோடையில் மிதக்க விட்டிருந்தார்கள். அந்த நூல், நீரோடைக் கரையிலிருந்த சிறிய ஒரு கல்லில் கட்டப்பட்டிருந்தது. நீரோடை நீரின் அசைவுக்கு ஏற்ப, நூலில் கட்டப்பட்டிருந்த முட்டையோடுகள் இலேசாக அசைந்துகொண்டிருந்தன. இளைஞர்கள் பாலத்தில் நின்று, ஓடை நீரில் அசைந்துகொண்டிருக்கும் முட்டையோடுகளைச் சுடுவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் துப்பாக்கியால் முட்டையோடுகளைச் சுட்டார்கள். ஆனால் அவர்கள் வைத்த குறி தவறித்தவறிப் போயிற்று. ஒரு முட்டையோட்டைக்கூட அவர்களால் சுட முடியவில்லை. இளைஞர்களின் இந்தச் செயலை விவேகானந்தர் பார்த்தார். இவர்களால் இந்த முட்டையோடுகளைச் சுடமுடியவில்லையே! என்று நினைத்தார். அதனால் அவர் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. இதை அங்கிருந்த இளைஞர்களில் ஒருவன் கவனித்தான்.

அவன் விவேகானந்தரிடம், பார்ப்பதற்கு இந்த முட்டையோடுகளைச் சுடுவது சுலபமான செயல் போன்று தெரியும். ஆனால் நீங்கள் நினைப்பதுபோல், இந்த முட்டையோடுகளைச் சுடுவது அவ்வளவு சுலபமான செயல் அல்ல. நீங்களே முயற்சி செய்து பாருங்கள்! அப்போது உங்களுக்கே தெரியும்! என்று கூறினான். சுவாமி விவேகானந்தர் துப்பாக்கியைக் கையில் எடுத்தார். அங்கிருந்த முட்டையோடுகளைக் குறி வைத்து சுட ஆரம்பித்தார். அப்போது அங்கு சுமார் பன்னிரெண்டு முட்டையோடுகள் நீரோடையில் மிதந்துகொண்டிருந்தன. விவேகானந்தர் வைத்த குறி ஒன்றுகூட தவறவில்லை. வரிசையாக அவர் ஒவ்வொரு முட்டையோடாகச் சுட்டார். அங்கிருந்த அத்தனை முட்டையோடுகளும் வெடித்துச் சிதறின! இதைப் பார்த்து அங்கிருந்த இளைஞர்கள் பெரிதும் வியப்படைந்தார்கள். அவர்கள் விவேகானந்தரிடம், நீங்கள் துப்பாக்கிச் சுடுவதில் ஏற்கெனவே நல்ல பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். அதனால்தான் நீங்கள் அத்தனை முட்டையோடுகளையும் ஒரு குறிகூடத் தவறாமல் சுட்டீர்கள், இல்லையா? என்று வினவினார்கள். அதற்கு விவேகானந்தர், என் வாழ்நாளில் இன்றுதான் நான் முதன் முறையாகத் துப்பாக்கியைத் தொடுகிறேன் என்றார். அவர் கூறியதை இளைஞர்களால் நம்ப முடியவில்லை.

அவர்கள், அப்படியானால் ஒரு குறி கூடத் தவறாமல் உங்களால் எப்படி முட்டையோடுகளைச் சுட முடிந்தது? என்று கேட்டார்கள். அதற்கு விவேகானந்தர், எல்லாம் மனதை ஒருமுகப்படுத்துவதில் தான் இருக்கிறது. மனதை ஒருமுகப்படுத்திச் செய்யும் எந்தச் செயலும் வெற்றியைத் தரும் என்று பதிலளித்தார். மேலும் சுவாமி விவேகானந்தர் மனஒருமைப்பாடு பற்றி இவ்விதம் கூறியிருக்கிறார்: வெற்றியின் ரகசியம் மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கிறது. உயர்ந்த மனிதனையும் தாழ்ந்த மனிதனையும் ஒப்பிட்டுப் பார். இருவருக்கும் உள்ள வேறுபாடு, தங்கள் மனத்தை ஒருமுகப்படுத்துவதில்தான் இருக்கும். மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர, வளர, அதிக அளவில் அறிவைப் பெறலாம். ஏனென்றால் இந்த வழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரே வழி. தாழ்ந்த நிலையில் உள்ள செருப்புக்கு மெருகு போடுபவன், மனத்தை அதில் அதிகம் ஒருமுகப்படுத்திச் செய்தால், மேலும் சிறப்பாகச் செருப்புகளுக்கு மெருகு பூசுவான். மனத்தை ஒருமுகப்படுத்திச் செய்யும் சமையற்காரன் மேலும் சிறந்த முறையில் உணவு சமைப்பான். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்த ஒரு வேலையானாலும் மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தைச் செய்து முடிக்கலாம்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவு கொண்ட நெஞ்சினாய் வா, வா, வா!

காசி திருத்தலம் கங்கைக் கரையில் அமைந்திருக்கிறது. இங்கு காசி விசுவநாதரும் விசாலாட்சியும் எழுந்தருளியிருக்கிறார்கள். ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர், காசியில் துர்க்கை கோயிலின் மதிற்சுவரையொட்டி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரை அங்கிருந்த ஒரு குரங்குக் கூட்டம் பார்த்தது. உடனே குரங்குக் கூட்டம் கீறிச்சிட்டு, பெரும் கூச்சலுடன் விவேகானந்தரைச் சூழ்ந்துகொண்டது. இந்த நிலையில் அவர் முன்னேறுவதற்குத் தயங்கிப் பின்வாங்கினார். அதைப் பார்த்த சில குரங்குகள் அவர் மீது முரட்டுத்தனமாகப் பாய்ந்தன, சில குரங்குகள் அவரைப் பிறாண்டின, சில குரங்குகள் அவரைக் கடித்தன, சில குரங்குகள் அவரது உடையைப் பிடித்திழுத்தன! எனவே இந்த இக்கட்டான நிலையில் விவேகானந்தர், குரங்குகளிடமிருந்து தப்பிப்பதற்கு அங்கிருந்து ஓட ஆரம்பித்தார்! ஆனால் அவர் ஓடினாலும், குரங்குகள் பின்தொடர்ந்து அவரை விடாமல் துரத்தின. இந்தக் குரங்குகளிடமிருந்து தப்புவதற்கு வழியில்லை! என்று அவர் நினைத்தார். விவேகானந்தர் ஓடிக்கொண்டிருப்பதையும், ஒரு குரங்குக் கூட்டம் அவரைத் துரத்துவதையும் சற்று தூரத்திலிருந்த சந்நியாசி ஒருவர் பார்த்தார்.

உடனே அவர் விவேகானந்தரைப் பார்த்து, நில்! குரங்குகளை எதிர்த்து நில்! என்று உரத்த குரலில் கூவினார். அந்தச் சொற்கள் விவேகானந்தரின் காதுகளில் விழுந்தன. அவர் புதிய ஓர் ஊக்கம் பெற்றார். உடனே ஓடுவதை நிறுத்தி, துணிவுடன் குரங்குகளை நோக்கித் திரும்பினார். இப்போது அவர் குரங்குளை நோக்கி முனைப்புடன் முன்னேறத் தொடங்கினார். அவர் உறுதியுடன் வீறுடன் குரங்குகளை எதிர்க்கும் நிலையில் இருந்தார். அவ்வளவுதான்! அவரது தோற்றத்தைப் பார்த்து குரங்குக் கூட்டம் பயந்துவிட்டது! இப்போது அங்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது! இவர் நம்மைத் தாக்குவார்! இவரிடமிருந்து இப்போது நாம் எப்படியும் தப்பிக்க வேண்டும்! இவரிடமிருந்து நாம் தப்பித்தால் போதும்! என்று குரங்குகள் நினைத்து, அங்கிருந்து பின்வாங்கி மிகவும் வேகமாக வந்த வழியில் திரும்பி ஓட ஆரம்பித்தன! இந்த நிகழ்ச்சி விவேகானந்தரின் உள்ளத்தில் மிகவும் நன்றாகப் பதிந்துவிட்டது.

இதை அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்காவில் நியூயார்க்கில் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் கூறினார். அந்தச் சொற்பொழிவில் அவர், இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினையைப் பற்றியும் இவ்விதம் குறிப்பிட்டார்: இது நம் வாழ்க்கை முழுவதற்கும் நல்ல ஒரு படிப்பினையாகும். பயங்கரத்தை எதிர்த்து நில்! தைரியமாகப் பிரச்னைகளை எதிர்த்து நில்! ஒருபோதும் அவற்றுக்கு பயந்து ஓடாதே! இவற்றுக்கு நாம் பயந்து ஓடாமல் இருந்தால், அந்தக் குரங்குக்கூட்டம் போலவே துன்பங்களும் நம்மிடமிருந்து விலகி ஓடிவிடும். மனிதனைக் கீழ்நிலைக்கு இழுத்துச் செல்லும் இயற்கையின் வேகங்களையும், பிரச்னைகளையும் நாம் எதிர்த்து நிற்க வேண்டும். அவற்றிற்கு ஒருபோதும் பணிந்துவிடக் கூடாது. கோழைகள் ஒருபோதும் வெற்றி பெறுவதில்லை. அச்சத்தை எதிர்த்து நில்லுங்கள்! துன்பங்களை எதிர்த்து நில்லுங்கள்! அறியாமையை எதிர்த்து நில்லுங்கள்!

சுவாமி விவேகானந்தர் கதைகள் – இளைஞர்கள் வைத்த சோதனை!

ஒரு முறை அமெரிக்காவில் சுவாமி விவேகானந்தர், இறைவனை அனுபூதியில் உணர்ந்த நிலை என்பது பற்றிச் சொற்பொழிவு செய்தார். அந்தச் சொற்பொழிவில் அவர், இறைவனைப் பற்றிய உயர்ந்த அனுபவத்தை நேரடியாகப் பெற்ற ஒருவர், எந்தச் சூழ்நிலையிலும் கலங்குவதில்லை – பதற்றப்படுவதில்லை என்று குறிப்பிட்டார். இந்தச் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் இளைஞர்கள் சிலரும் இருந்தார்கள். இவர்கள் உயர்கல்வி கற்றவர்கள். ஆனால் இந்த இளைஞர்கள் மனம் போனபடி வாழ்ந்தனர். அவர்கள், விவேகானந்தர் கூறியதை நாம் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்! என்று முடிவு செய்தார்கள்.

எனவே அவர்கள் விவேகானந்தரை, ஒரு சொற்பொழிவுக்காக அழைத்தனர். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க விவேகானந்தர், சொற்பொழிவு செய்ய வேண்டிய இடத்திற்குச் சென்றார். ஆரம்பத்திலிருந்தே அந்த இளைஞர்கள், விவேகானந்தரைச் சோதிப்பது போலவே நடந்துகொண்டார்கள். ஒரு மரத்தொட்டியைக் கவிழ்த்துப் போட்டு, இதுதான் சொற்பொழிவு மேடை – இதில் நின்றுதான் நீங்கள் பேச வேண்டும் என்று கூறினார்கள்.
விவேகானந்தர் எந்த மறுப்பும் கூறாமல் அவர்கள் கூறியதை ஏற்றுக்கொண்டார். அவர் சொற்பொழிவு செய்ய ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அவர் சொல்லிக்கொண்டிருந்த கருத்தில் மனம் ஒன்றிய நிலையில், சூழ்நிலையை மறந்து பேசினார். திடீரென்று அவரைச் சுற்றிலும் துப்பாக்கிக் குண்டுகள் வெடித்தன! காதைப் பிளக்கும் துப்பாக்கிக் குண்டுகளின் ஓசை அங்கு பலமாக எழுந்தது! சில குண்டுகள் விவேகானந்தரின் காதின் அருகிலும் பாய்ந்து சென்றன! ஆதலால் சுற்றிலும் பதற்றமும் கூக்குரலும் எழுந்தன.

ஆனால் இவ்விதம் சூழ்நிலை மாறியது காரணமாக, விவேகானந்தரிடம் எந்தச் சலனமும் இல்லை. அவர் சூழ்நிலையால் ஒரு சிறிதும் பாதிக்கப்படவில்லை. அவர் தொடர்ந்து சொற்பொழிவு செய்துகொண்டிருந்தார். இப்போது, விவேகானந்தரைச் சோதித்துப் பார்க்க வேண்டும்! என்று நினைத்த இளைஞர்கள் தோற்றார்கள். எதுவுமே அங்கு நடக்காததுபோல், விவேகானந்தர் உரிய நேரத்தில் தன் சொற்பொழிவை முடித்தார்.அந்த இளைஞர்கள் விவேகானந்தரிடம், உண்மைதான் சுவாமிஜி, நீங்கள் அப்பழுக்கற்றவர். நீங்கள் மற்றவர்களுக்கு என்ன போதிக்கிறீர்களோ, அப்படியே வாழ்கிறீர்கள் என்று கூறி, அழாத குறையாக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்கள்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – கடமையைச் செய், உயர்வை அடைவாய்!

கடமைகளைச் செய்வதுதான், நாம் உயர்வு பெறுவதற்கு உரிய ஒரே வழியாகும். அவ்விதம் நமது கடமைகளைச் செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கும் வலிமையைப் பெருக்கிக்கொண்டே சென்று, இறுதியில் நாம் உயர்ந்த நிலையை அடைந்துவிடலாம். இளம் துறவி ஒருவர் காட்டிற்குச் சென்றார். அங்கு அவர் தியானம், வழிபாடு, யோகப்பயிற்சி போன்றவற்றில் நீண்ட காலம் ஈடுபட்டிருந்தார். ஒரு நாள் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் தலைமீது சில உலர்ந்த சருகுகள் வீழ்ந்தன. அவர் நிமிர்ந்து பார்த்தார். அங்கே மரக்கிளை ஒன்றில் ஒரு காகமும் கொக்கும் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அவருக்கு வந்ததே கோபம்! கோபத்துடன் அவர், என்ன! எவ்வளவு துணிச்சல் இருந்தால் என் தலைமீது சருகுகளை உதிர்ப்பீர்கள்! என்று கூறியபடியே, அந்தப் பறவைகளைப் பார்த்தார். யோகி அல்லவா! அவரது கண்களிலிருந்து ஒரு நெருப்பு மின்னல்போல் மேலெழுந்து சென்று, அந்தப் பறவைகளை எரித்துச் சாம்பலாக்கிவிட்டது! அவருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. பார்வையாலேயே பறவைகளை எரிக்கும் தமது ஆற்றலைக் கண்டு, அவருக்குத் தலைகால் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தத் துறவி, உணவிற்காக அருகில் இருக்கும் ஊருக்குச் சென்றார். அங்கு ஒரு வீட்டின் முன்நின்று, அம்மா, பிச்சை இடுங்கள்! என்று கேட்டார். மகனே! கொஞ்சம் இரு என்று வீட்டின் உள்ளே இருந்து ஒரு குரல் வந்தது. இதைக் கேட்ட அந்தத் துறவி தனக்குள், பெண்ணே, என் சக்தியை நீ அறியவில்லை! என்னைக் காக்க வைக்கிறாயே! உனக்கு எவ்வளவு தைரியம்! என்று நினைத்தார். இப்படி அவர் நினைத்ததுமே உள்ளே இருந்து, மகனே, உன்னைப்பற்றி அவ்வளவு பெரிதாக நினைத்துக்கொள்ளாதே! இங்கே இருப்பது காக்கையும் அல்ல, கொக்கும் அல்ல! என்று குரல் வந்தது. துறவி திகைத்துவிட்டார். எப்படியானாலும் அவர் காத்திருக்கத்தான் வேண்டியிருந்தது. கடைசியாக அந்தப் பெண் வெளியில் வந்தாள். துறவி அவள் கால்களில் வீழ்ந்து வணங்கி, அம்மா, நான் மனதில் நினைத்ததை நீங்கள் எப்படி அறிந்தீர்கள்? என்று வினவினார். அதற்கு அவள், மகனே, உன்னைப்போல் எனக்கு யோகமோ தவமோ எதுவும் தெரியாது. அன்றாடம் என் கடமைகளைச் செய்துகொண்டிருக்கும் ஒரு சாதாரணப் பெண் நான். என் கணவர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். நான் அவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தேன். அதனால்தான் உன்னைக் காக்க வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நான் என் கடமைகளை வாழ்நாள் முழுவதும் மனபூர்வமாகச் செய்துவருகிறேன். திருமணத்திற்கு முன்பு பெற்றோருக்கு என் கடமையைச் செய்தேன்; இப்போது என் கணவருக்குச் செய்து வருகிறேன். என் கடமைகளை நான் செய்து வந்த காரணத்தால் என் ஞானக்கண் திறந்துவிட்டது. அதன்மூலம்தான் நான் உன் எண்ணங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது, காட்டில் உனக்கு நடந்ததையும் தெரிந்துகொண்டேன். இதற்கு மேலும் நீ ஏதாவது தெரிந்துகொள்ள விரும்பினால், இன்ன நகரத்திலுள்ள கடைத்தெருவுக்குச் செல். அங்கே ஒரு வியாதனை (இறைச்சி வியாபாரி) நீ சந்திப்பாய். அவன் உனக்குப் போதிப்பான் என்று கூறினாள். முதலில் அந்தத் துறவி, ஒரு வியாதனிடம் நான் போவதா? என்றுதான் நினைத்தார். ஆனால் சற்றுமுன்பு நடந்த நிகழ்ச்சியால் அவரது ஆணவம் சற்று விலகியிருந்தது. எனவே நகரத்திற்குச் சென்றார். கடைத்தெருவைத் தேடிக் கண்டுபிடித்து அங்கே சென்றார். அங்கே கொழுத்த பருமனான ஒருவன் பெரிய ஒரு கத்தியால் இறைச்சியை வெட்டியபடியே, இறைச்சியை விலை பேசுவதும் விற்பதுமாக இருந்தான்.

அடக் கடவுளே! இந்த மனிதனிடமிருந்தா நான் உயர்ந்த கருத்துகளைக் கற்றுக்கொள்ளப் போகிறேன்! இவனைப் பார்த்தால் அசுரனின் அவதாரம்போல் தோன்றுகிறதே! என்று நினைத்து துறவி அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையில் வியாதன் துறவியைக் கவனித்துவிட்டு, ஓ சுவாமி, அந்தப் பெண்மணி உங்களை இங்கே அனுப்பினார்களா? இங்கு சிறிது நேரம் அமர்ந்திருங்கள், என் வியாபாரத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்றான். இங்கே என்ன நடக்கப் போகிறதோ? என்று நினைத்துக்கொண்டே துறவி அங்கு உட்கார்ந்திருந்தார். நீண்ட நேரம் கழிந்தது. வியாதனின் வேலை முடிந்தது. அவன் பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு துறவியிடம் வந்து, வாருங்கள், நாம் வீட்டிற்குப் போகலாம்! என்றான். வியாதன் வீட்டை அடைந்ததும் துறவி அமர்வதற்கு இருக்கை ஒன்றை அளித்து, இங்கேயே இருங்கள், வந்துவிடுகிறேன்! என்று கூறிவிட்டு உள்ளே சென்றான். பின்னர், அவன் வயது முதிர்ந்த தன் தந்தையையும் தாயையும் குளிப்பாட்டி, உணவூட்டி, அவர்கள் மனம் மகிழும்படி பலவகையான சேவைகளைச் செய்தான். பிறகு துறவியிடம் வந்தான்.

துறவி அவனிடம் ஆன்மாவைப் பற்றியும் இறைவனைப் பற்றியும் சில கேள்விகளைக் கேட்டார். வியாதன் அதற்குத் தந்த விளக்கம் வியாத கீதை என்ற பெயரில் மகாபாரதத்தில் இடம் பெற்றிருக்கிறது. பின்னர் துறவி வியாதனைப் பார்த்து, நீங்கள் ஏன் வியாதனாக இருக்கிறீர்கள்? இது இழிவான தொழில் ஆயிற்றே! என்று வினவினார். அதைக் கேட்ட வியாதன் துறவியை நோக்கி, மகனே, கடமைகளில் எதுவும் இழிந்ததும் இல்லை, கேவலமானதும் இல்லை. என்னுடைய பிறப்பு, கசாப்புத் தொழில் செய்யும் இந்தச் சூழ்நிலையில் என்னை வைத்திருக்கிறது. எனக்குப் பற்று எதுவும் இல்லை. என் பெற்றோரை மகிழ்விப்பதற்கு உரிய சேவைகள் எல்லாவற்றையும் நான் செய்கிறேன். உங்கள் யோகம் எனக்குத் தெரியாது, நான் வீட்டைத் துறந்து காட்டிற்குப் போகவில்லை. என் நிலைக்கு உரிய என் கடமைகளை நான் பற்றின்றி செய்தேன். அதனால் எனக்குக் கிடைத்தவற்றையே நீங்கள் என்னிடம் பார்க்கிறீர்கள், கேட்கிறீர்கள் என்று கூறினான்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – சென்னை இளைஞர்களுக்கு சுவாமி விவேகானந்தர் எழுதிய கடிதம்

நியூயார்க்
19.11.1894

என் வீர இளைஞர்களுக்கு,

அன்பு, நேர்மை, பொறுமை ஆகிய மூன்றும் இருந்தால் போதும் – வேறு எதுவும் தேவையில்லை. அன்புதான் வாழ்க்கையின் ஒரே நியதி. எல்லாவிதமான சுயநலமும் மரணம்தான். மற்றவர்களுக்கு நன்மை செய்வதுதான் வாழ்க்கை. மற்றவர்களுக்கு நன்மை செய்யாமல் இருப்பதுதான் மரணம். என் இளைஞர்களே, அன்புடையவர்களைத் தவிர மற்றவர்கள் வாழ்பவர்கள் அல்லர். என் குழந்தைகளே! மற்றவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும் – மற்றவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும்; ஏழை எளியவர்கள், பாமரர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியவர்களுக்காக உங்கள் மனம் உருக வேண்டும் – மிகவும் மனம் உருக வேண்டும். மற்றவர்களின் நன்மையின் பொருட்டு உங்கள் இதயமே நின்று, மூளைக் குழம்பி, உங்களுக்குப் பைத்தியம் பிடிக்கும் என்ற நிலை வரும் வரையில் மற்றவர்களுக்காக நீங்கள் மனம் உருகுங்கள். பிறகு இறைவனின் திருவடிகளில் உங்கள் ஆன்மாவைச் சமர்ப்பியுங்கள். அப்போது உங்களுக்கு ஆற்றல் வரும், உதவி வரும், குறையாத ஊக்கம் வரும்.
முயற்சி செய்யுங்கள்! முயற்சி செய்யுங்கள்! – கடந்த பத்து ஆண்டுகளாக இதுதான் என் இலட்சியமாக இருந்து வந்தது. முயற்சி செய்யுங்கள்! – இதையே இப்போதும் நான் சொல்கிறேன்.

என்னைச் சுற்றிலும் இருள் சூழ்ந்திருந்தபோதும், முயற்சி செய்யுங்கள்! என்று கூறினேன்; இப்போது ஒளி வருகின்ற வேளையிலும், முயற்சி செய்யுங்கள்! என்று அதையே நான் சொல்கிறேன். என் குழந்தைகளே! பயப்படாதீர்கள்! பணத்தால் பயனில்லை, பெயரால் பயனில்லை, புகழலால் பயனில்லை, கல்வியால் பயனில்லை – அன்பு ஒன்றுதான் பயன் தருகிறது; ஒழுக்கம் ஒன்றுதான் துளைக்க முடியாத சுவர்களையெல்லாம் துளைத்து நம்மை முன்னேறச் செய்கிறது. சுதந்திரம் இல்லாமல் எந்த வளர்ச்சியும் அடைய முடியாது. நமது முன்னோர்கள் ஆன்மிகச் சிந்தனைக்குச் சுதந்திரம் அளித்தார்கள். அதனால் அற்புதமான ஒரு மதம் நமக்குக் கிடைத்தது. ஆனால் அதே சமயம், அவர்கள் சமுதாயத்தின் கால்களில் கனத்த சங்கிலியைக் கட்டி வைத்தனர். அதனால் இப்போது நமது சமுதாயம் – ஒரு வார்த்தையில் சொல்வதானால் – மிகவும் பயங்கரமாகவும், காட்டுமிராண்டித்தனமானதாகவும் இருக்கிறது. இதற்கு மாறாக, மேற்கு நாடுகளில் சமுதாயத்தில் மக்களுக்கு எப்போதும் சுதந்திரம் இருந்து வந்திருக்கிறது; அவர்களுடைய சமுதாயத்தைப் பாருங்கள்! அதற்கு மாறாக அவர்களின் மதத்தையும் பாருங்கள்!

வளர்ச்சிக்கு முதல் நிபந்தனை சுதந்திரம். சிந்திக்கவும் பேசவும் சுதந்திரம் தேவைப்படுவதுபோல் உணவு, உடை, திருமணம் முதலிய ஒவ்வொரு விஷயத்திலும் மற்றவர்களுக்குத் தீமை செய்யாத அளவில் மனிதனுக்குச் சுதந்திரம் இருக்க வேண்டும். இந்தியாவை உயர்த்த வேண்டும், ஏழைகளுக்கு உணவு தர வேண்டும், கல்வியைப் பரப்ப வேண்டும், சமுதாயத்தில் கொடுமைகளை அகற்ற வேண்டும். சமுதாயத்தில் கொடுமைகள் வேண்டாம்; ஒவ்வொருவருக்கும் இன்னும் அதிகமாக உணவு வேண்டும், இன்னும் அதிகமான வாய்ப்புகள் தர வேண்டும்! மற்றவர்களுக்குச் சுதந்திரம் அளிக்கத் தயாராக இல்லாதவனுக்கு, சுதந்திரம் பெறுவதற்குத் தகுதி கிடையாது. எல்லா அதிகாரங்களையும் ஆங்கிலேயர்கள் உங்களுக்கே தந்துவிடுவதாக வைத்துக்கொள்வோம். அதனால் என்ன ஆகும்? அந்த அதிகாரம், சாதாரண மக்கள் அதைப் பெறாமல் இருப்பதற்குத்தான் பயன்படும். அடிமைகள் மற்றவர்களை அடிமைப்படுத்துவதற்காகவே அதிகாரம் கேட்கிறார்கள். இந்தியாவில் இந்தியாவின் ஆன்மிகத்தைக் கொண்ட ஓர் ஐரோப்பிய சமுதாயத்தை உங்களால் உருவாக்க முடியுமா? முடியும், முடிய வேண்டும் என்பதுதான் என் நம்பிக்கை. எல்லோருக்கும் முக்தி உண்டு, எல்லோரும் சமம் என்று போதித்த பண்டைய ஆச்சாரியர்களான சங்கரர், இராமானுஜர், சைதன்யர் போன்றவர்களின் வழியில் சமுதாயத்தைப் புதுப்பிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

உங்களிடம் ஊக்கம் என்ற நெருப்பு பற்றி எரிய வேண்டும். பிறகு அதை எல்லா இடங்களிலும் பரப்புங்கள். வேலை செய்யுங்கள், வேலை செய்யுங்கள். மற்றவர்களை வழி நடத்திச் செல்லும்போது, நீ ஒரு வேலைக்காரன் போலவே நடந்துகொள். சுயநலம் இல்லாதவனாக இரு. உன்னுடைய நண்பன் மற்றொருவனைத் தனிமையில் திட்டுவதை ஒருபோதும் கேட்டுக்கொண்டிருக்காதே! எல்லையற்ற பொறுமையுடன் இரு. அவ்விதம் நீ செய்தால் உனக்கு வெற்றி நிச்சயம். மற்றவர்களின் நன்மைக்காக வேலை செய்வதுதான் வாழ்க்கையின் இலட்சியம். போலித்தனம் என்பது இருக்கக் கூடாது, பொய் கூடாது, போக்கிரித்தனம் கூடாது – இதைத்தான் நான் விரும்புகிறான். நான் எப்போதும் இறைவனையே நம்பி இருக்கிறேன்; பெயரும் புகழும் தேடிக்கொள்வதற்காகவோ, ஏன் பொதுநன்மைக்காகவோகூட, நான் போலியாக வாழ்ந்தேன் என்ற கறைபடிந்த மனசாட்சியுடன் இறந்துபோக நான் விரும்பவில்லை. ஒழுக்கக்கேடு என்ற மூச்சுக்காற்றுகூட வீசக் கூடாது; செயல்முறையில் குற்றத்தின் நிழல்கூடப் படியக் கூடாது.
சலனபுத்தி வேண்டாம், இரகசிய வித்தை என்ற அயோக்கியத்தனம் வேண்டாம், இருட்டில் செய்யும் எதுவும் வேண்டாம். என் வீரக் குழந்தைகளே, முன்னேறுங்கள். பணம் இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி – உங்களுடன் மனிதர்கள் இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி – முன்னேறிச் செல்லுங்கள்!

உங்களிடம் அன்பு இருக்கிறதா, இல்லையா? உங்களிடம் இறைவன் இருக்கிறாரா, இல்லையா? முன்னேறிச் செல்லுங்கள்! தொடர்ந்து முன்னேறுங்கள்! எதுவும் உங்களை எதிர்த்து நிற்க முடியாது! கவனமாக இருங்கள். உண்மைக்குப் புறம்பான எல்லாவற்றிலும் எச்சரிக்கையாக இருங்கள். உண்மையைவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள், நாம் வெற்றி பெறுவோம்; அது மெதுவாக இருக்கலாம், ஆனால் வெற்றி நிச்சயம். இந்தியாவின் எதிர்காலம் உங்களையே நம்பியிருக்கிறது. வேலை செய்துகொண்டே போங்கள்!

ஆசீர்வாதங்கள்.
அன்புள்ள,
விவேகானந்த

சுவாமி விவேகானந்தர் கதைகள் – என் உடல் புலிக்கு உணவாகட்டும்!

சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றார். இவ்விதம் அவர் நாலரை ஆண்டுகள் இருந்தார். அந்நாள்களில் பொதுவாக அவர் பிச்சை எடுத்து, அதில் கிடைக்கும் உணவையே உட்கொண்டார். இந்த நிலையில் ஒருநாள் அவர், எனக்கு ஏழைகள் உணவு தருகிறார்கள். அந்த ஏழைகளுக்கு என்னால் என்ன நன்மை? அவர்கள் எனக்குத் தரும் ஒரு பிடி அரிசியை மீதம் பிடித்தால், அது அவர்கள் குழந்தைகளுக்கு ஒரு நாள் உணவாகுமே! அதெல்லாம் போகட்டும், நான் இந்த என் உடலைக் காப்பாற்றி என்ன ஆகப் போகிறது? எனவே இனிமேல் நான் பிச்சையெடுக்க மாட்டேன் என்று தீர்மானம் செய்துகொண்டார். அந்த எண்ணம் அவரிடம் தீவிரமடைந்தது. எனவே அவர், ஏதாவது ஒரு காட்டிற்குள் சென்று, உணவு எதுவும் உட்கொள்ளாமல் தவம் செய்தபடியே இறந்துவிடுவது! என்று தீர்மானித்தார். இந்த எண்ணத்துடன் அவர் ஒரு காட்டிற்குள் சென்றார்.

அங்குக் காட்டில் உணவு எதுவும் உட்கொள்ளாமல் ஒரு நாள் முழுவதும் நடந்தார். மாலை வேளை வந்தபோது, மயக்க நிலையில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து இறைவனைத் தியானம் செய்ய ஆரம்பித்தார். அவரது தியானம் சிறிது கலைந்தபோது… ஆகா… அதோ தெரியும் இரண்டு நெருப்புத் துண்டுகள்… ஆம்! அவை… சந்தேகமேயில்லை! ஒரு புலியின் கண்கள்தாம்! அதோ, அந்தக் கண்கள் அவரை நோக்கி நெருங்கி நெருங்கி வந்தன; இதோ அருகில் வந்துவிட்டன! விவேகானந்தரின் உடலும் சரி, உள்ளமும் சரி – இம்மிகூட அசையவில்லை. அசைந்து அசைந்து வந்துகொண்டிருந்த அந்தப் புலியும், ஏனோ அவருக்குச் சற்று தூரத்தில் படுத்துக் கொண்டது. புலியை அன்புடன் நோக்கினார் விவேகானந்தர்:சரிதான். என்னைப்போல் இந்தப் புலியும் இப்போது பசியோடு இருக்கிறது போலும்! இருவரும் பட்டினியாக இருக்கிறோம். இந்த என் உடலால் உலகத்திற்கு ஏதாவது நன்மை ஏற்படும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த புலிக்காவது என் உடல் உணவாகப் பயன்படும் என்றால், அது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்று நினைத்துக்கொண்டார். இந்த எண்ணத்துடன் அவர் அமைதியாக, அசைவின்றி மரத்தில் நன்றாகச் சாய்ந்துகொண்டார்.

கண்களை மூடி அவர், இதோ! இப்போது புலி என்மீது பாயப் போகிறது! என்று நினைத்துக் கொண்டே அமர்ந்திருந்தார். ஒரு கணம், இரண்டு கணம், ஒரு நிமிடம் என்று நேரம் கடந்தது. புலி பாயவில்லை. அதனால் அவருக்குச் சற்று சந்தேகம் எழுந்தது. கண்களைத் திறந்து பார்த்தார். அங்கே புலி இல்லை, அது அங்கிருந்து சென்றுவிட்டிருந்தது. அப்போது அவர், ஆகா! இறைவன் என்னை எப்படியெல்லாம் பாதுகாத்து வருகிறார்! என்று மனம் உருகி நினைத்துப் பார்த்தார். அன்றைய இரவை விவேகானந்தர் காட்டிலேயே தியானத்தில் கழித்தார். பொழுது விடிந்தது. முந்தின நாளின் களைப்பு, சிரமம் எவையும் அவர் உடலில் இல்லை. உடலும் மனமும் புதிய ஓர் ஆற்றலைப் பெற்றதுபோல் இருந்தன. அவர் மேற்கொண்டு தம் பயணத்தைத் தொடர்ந்தார்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – ராக்ஃபெல்லருக்கு வழங்கிய அறிவுரை!

அப்போது சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் சிகாகோ மாநகரத்தில் தங்கியிருந்தார். அங்கு அவரை ராக்ஃபெல்லர் என்பவர் சந்தித்தார். ராக்ஃபெல்லர், பிற்காலத்தில் உலகில் புகழ் பெற்ற பெரிய பணக்காரர்களில் ஒருவராக விளங்கினார். விவேகானந்தரைச் சந்தித்தபோது, ராக்ஃபெல்லர் அவ்வளவாகப் பிரபலம் ஆகவில்லை. ராக்ஃபெல்லரின் நண்பர்கள் பலர், விவேகானந்தரைப் பற்றி அவ்வப்போது ராக்ஃபெல்லரிடம் கூறியிருந்தார்கள். எனவே விவேகானந்தரைப் பற்றி ராக்ஃபெல்லர் நிறையவே கேள்விப்பட்டிருந்தார். என்றாலும் ஏனோ அவர், விவேகானந்தரைச் சந்திப்பதற்குத் தயங்கினார். விவேகானந்தர் அமெரிக்காவில் பல இடங்களுக்குச் சென்று, சொற்பொழிவுகள் செய்துகொண்டிருந்தார். அவர் ஒருமுறை ராக்ஃபெல்லரின் நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது ஒருநாள் திடீரென்று, விவேகானந்தரைச் சந்திக்க வேண்டும்! என்ற தீவிர எண்ணம் ராக்ஃபெல்லருக்கு ஏற்பட்டது.

அந்த வேகத்தில் அவர் விவேகானந்தர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றார். அங்கு அவருக்காக வீட்டின் கதவை வேலைக்காரன் திறந்தான். அந்த வேலைக்காரனைப் பிடித்துத் தள்ளிவிட்டு, ராக்ஃபெல்லர் முன்அனுமதிகூடப் பெறாமல் விவேகானந்தர் இருந்த அறைக்குள் நுழைந்தார். விவேகானந்தர் அப்போது அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். அவ்வளவு வேகமாக ராக்ஃபெல்லர் சென்றும் விவேகானந்தர் தன் முகத்தைத் தூக்கி, வந்தது யார்? என்று பார்க்கவில்லை. இவ்விதம் சிறிது நேரம் கழிந்தது. தலை கவிழ்ந்திருந்த நிலையில் விவேகானந்தர் – தலை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் – திடீரென்று ராக்ஃபெல்லர் மட்டுமே அறிந்திருந்த அவருடைய கடந்த கால நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். இறுதியில் அவர், உங்களிடம் இருக்கும் பணம் உண்மையில் உங்களுடையது இல்லை. உலகிற்கு நன்மை செய்வதற்காக இறைவன் உங்களிடம் அந்தப் பணத்தைக் கொடுத்து வைத்திருக்கிறார்.

அதனால் உலகிற்கு நன்மை செய்வதற்கு உரிய ஒரு வாய்ப்பை இறைவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார், அவ்வளவுதான்! எனவே நீங்கள் உங்களிடம் இருக்கும் பணத்தை உலக நன்மைக்காகச் செலவு செய்யுங்கள் என்று கூறினார். இவ்விதம் விவேகானந்தர் கூறியது ராக்ஃபெல்லருக்குப் பிடிக்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்னொருவர் எனக்குச் சொல்வதா? என்று அவருக்குத் தோன்றியது. எனவே அவர், நன்றி, வணக்கம், சென்று வருகிறேன் என்றுகூட எதுவும் சொல்லாமல், வேகமாக அந்த அறையைவிட்டு வெளியேறினார். ஆனால் விவேகானந்தரின் ஆன்மிகசக்தி ராக்ஃபெல்லரிடமும் வேலை செய்தது. ஒரு வாரம் கழிந்திருக்கும். ராக்ஃபெல்லர், பொதுத்தொண்டு நிறுவனம் ஒன்றுக்குப் பெரிய ஒரு தொகையை நன்கொடை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். எனவே அவர் அதற்கான திட்டங்களை விரிவாக ஒரு காகிதத்தில் எழுதி, அதை எடுத்துக்கொண்டு விவேகானந்தரைச் சந்திப்பதற்குச் சென்றார். முன்பு போலவே அதே வேகத்தில் அவர் மீண்டும் முன்அனுமதியின்றி, விவேகானந்தர் இருந்த அறைக்குள் நுழைந்தார்.

அன்றைய தினமும் விவேகானந்தர் ஏதோ படித்துக்கொண்டிருந்தார். ராக்ஃபெல்லர், தாம் கொண்டு சென்றிருந்த காகிதத்தை விவேகானந்தர் முன்பு வேகமாக வீசி, இதோ, இதைப் படித்துப் பாருங்கள்! இப்போது உங்களுக்குத் திருப்திதானே! நீங்கள் இப்போது எனக்கு நன்றி சொல்ல வேண்டும்! என்று கூறினார். விவேகானந்தர் அசையவும் இல்லை; ராக்ஃபெல்லரைத் தலை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை; அவர் அமைதியாக ராக்ஃபெல்லர் காகிதத்தில் எழுதியிருந்த அனைத்தையும் படித்தார். படித்து முடித்ததும் அவர், நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டியதில்லை. நீங்கள்தாம் எனக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார். அதுதான் ராக்ஃபெல்லர் தமது வாழ்க்கையில் அளித்த முதல் பெரிய நன்கொடை ஆகும். ராக்ஃபெல்லர் தன்னிடமிருந்த செல்வத்தை மக்களுக்குப் பயன்படும் வகையில், நல்ல விதத்தில் செலவு செய்வதற்கு விவேகானந்தர் வழிகாட்டினார். எனவே அவர்தாம் விவேகானந்தருக்கு, நன்றி சொல்ல வேண்டிய நிலையில் இருந்தார்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – சிகாகோ சொற்பொழிவுகள்

1. வரவேற்புக்கு மறுமொழி – செப்டம்பர் 11, 1893

அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே!
இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு மறுமொழிகூற இப்போது உங்கள் முன் நிற்கிறேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை. உலகத்தின் மிகப்பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். அனைத்து மதங்களின அன்னையின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்துப் பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன்.

இந்த மேடையில் அமர்ந்துள்ள பேச்சாளர்களுள் சிலர் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ள பிரதிநிதிகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, ‘வேற்று சமய நெறிகளை வெறுக்காத பண்பினைப் பல நாடுகளுக்கு எடுத்துச் சென்ற பெருமை, தொலைவிலுள்ள நாடுகளிலிருந்து வந்துள்ள இவர்களைத்தான் சாரும்’ என்று உங்களுக்குக் கூறினார்கள். அவர்களுக்கும் என் நன்றி. பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல், ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம். உலகிலுள்ள அனைத்து நாடுகளாலும் அனைத்து மதங்களாலும் கொடுமைப் படுத்தப்பட்டவர்களுக்கும், நாட்டை விட்டு விரட்டி அடிக்கப் பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான் என்பதில் பெருமைப் படுகிறேன். ரோமானியரின் கொடுமையால், தங்கள் திருக்கோயில் சிதைந்து சீரழிந்த அதே வருடம் தென்னிந்தியாவிற்கு வந்து எங்களிடம் தஞ்சமடைந்த அந்தக் கலப்பற்ற இஸ்ரேல் மரபினர்களுள் எஞ்சி நின்றவர்களை மனமாரத் தழுவித் கொண்டவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் பெருமைப் படுகிறேன். பெருமைமிக்க சொராஸ்டிரிய மதத்தினரில் எஞ்சியிருந்தோருக்கு அடைக்கலம் அளித்து, இன்னும் பேணிக் காத்து வருகின்ற சமயத்தைச் சார்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

என் அருமைச் சகோதரர்களே! பிள்ளைப் பருவத்திலிருந்தே நான் பாடிப் பயின்று வருவதும், கோடிக்கணக்கான மக்களால் நாள் தோறும் இன்றும் தொடர்ந்து ஓதப்பட்டு வருவதுமான பாடலின் ஒரு சில வரிகளை இங்கு, உங்கள் முன் குறிப்பிட விரும்புகிறேன்:

    எங்கெங்கோ தோன்றுகின்ற ஓடையெல்லாம்
         இறுதியிலே கடலில் சென்று
    சங்கமாம் பான்மையினைப் போன்றுலகோர்
         பின்பற்றும் தன்மை யாலே
    துங்கமிகு நெறி பலவாய் நேராயும்
         வளைவாயும் தோன்றி னாலும்
    அங்கு அவைதாம் எம்பெரும! ஈற்றில் உனை
    அடைகின்ற ஆறே யன்றோ!

இதுவரை நடந்துள்ள மாநாடுகளில், மிக மிகச் சிறந்ததாகக் கருதக் கூடிய இந்தப் பேரவை, கீதையில் உபதேசிக்கப் பட்டுள்ள பின் வரும் அற்புதமான ஓர் உண்மையை உலகத்திற்குப் பிரகடனம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்: ‘யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன.’

பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன. அவை இந்த பூமியை நிரப்பியுள்ளன. உலகை ரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்தியிருக்கும்!

அவற்றிற்கு அழிவு காலம் வந்து விட்டது. இன்று காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிட முழங்கிய மணி, மத வெறிகளுக்கும், வாளாலும் பேனாவாலும் நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும், ஒரே குறிக்கோளை அடைய பல்வேறு வழிகளில் சென்று கொண்டிருக்கும் மக்களிடையே நிலவும் இரக்கமற்ற உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் திடமாக நம்புகிறேன்.

 

2. நாம் ஏன் ஒத்துப் போவதில்லை? – செப்டம்பர் 15, 1893

ஒரு சிறு கதை சொல்லப் போகிறேன். இப்போது பேசிய சிறந்த பேச்சாளர், ‘நாம்ஒருவரை யொருவர் தூற்றுவதை நிறுத்த வேண்டும்’ என்று கூறியதைக் கேட்டீர்கள். இவ்வளவு வேறுபாடுகள் இருப்பதற்காக அவர் வருத்தப்பட்டார். இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்ன என்பதை விளக்க ஒரு கதை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஒரு கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்தது. நீண்ட காலமாக அங்கு அது வசித்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அந்தத் தவளை சின்னஞ் சிறியது. அது கண்களை இழந்து விட்டதா, இல்லையா என்று சொல்வதற்கு, நல்லவேளையாக அங்கே பரிணாமவாதிகள் யாரும் இல்லை. நம் கதைக்காக, அதற்குக் கண்கள் இருந்தன என்றே வைத்துக் கொள்வோம். அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழு பூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப் படுத்தியது. அந்தச் சுறுசுறுப்பு, நம் தற்காலக் கிருமி ஆராய்ச்சியாளர்களுக்கு இருந்தால் அது அவர்களுக்குப் பெருமை தரும் விஷயமாகும். அவ்வாறே வாழ்ந்ததால் அந்தத் தவளை சிறிது பருத்தும் விட்டது.
ஒரு நாள் கடலில் வாழ்ந்து வந்த தவளையொன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்துவிட்டது.

‘நீ எங்கிருந்து வருகிறாய்?’

‘கடலிலிருந்து’

‘கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரியதாயிருக்குமா?’ என்று கூறி, ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத் தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை.

‘நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?’ என்று கேட்டது கடல் தவளை.

கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, ‘உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமோ?’ என்று கேட்டது.

‘சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?’

‘நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றை விட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரிதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்!’ என்று கத்தியது கிணற்றுத் தவளை.
காலம் காலமாக இருந்து வரும் கஷ்டம் இது தான். நான் இந்து. நான் என் சிறிய கிணற்றிற்குள் இருந்து கொண்டு என் சிறு கிணறு தான் முழுவுலகம் என்று நினைக்கிறேன். கிறிஸ்தவன் தனது மதமாகிய சிறு கிணற்றிற்குள் அமர்ந்து கொண்டு, தன் கிணறுதான் முழுவுலகம் என்று நினைக்கிறான் அவ்வாறே முகம்மதியனும் தன் சிறு கிணற்றில் உட்கார்ந்து கொண்டு, அது தான் முழுவுலகம் என்று நினைக்கிறான். நமது இந்த சிறிய உலகின் எல்லைகளைத் தகர்த்தெறிய, அமெரிக்கர்களாகிய நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் பெரிய முயற்சிக்காக நான் உங்களுக்கு நன்றி செலுத்த வேண்டும். வருங்காலத்தில், உங்கள் விருப்பம் நிறைவேற இறைவன் அருள் புரிவான் என்று நம்புகிறேன்.

3. இந்து மதம் – செப்டம்பர் 19, 1893 இல் வாசிக்கப்பட்டது

வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலேயே தோன்றி, இன்றும் நிலைத்து நிற்கும் மதங்கள் மூன்று. அவை இந்து மதம், சொராஸ்டிரிய மதம், யூத மதம் ஆகும். அவை அனைத்தும் பல கடுமையான அதிர்ச்சிகளுக்கு உட்பட்டும், இன்றும் நிலைத்திருப்பதின் வாயிலாக தங்கள் உள் வலிமையை நிரூபிக்கின்றன.
யூத மதம் கிறிஸ்தவ மதத்தைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளத் தவறியது மட்டுமின்றி, அனைத்தையும் வெற்றி கொண்டதும் தன்னிலிருந்து தோன்றியதுமான கிறிஸ்தவ மதத்தால், பிறந்த இடத்திலிருந்தே விரட்டி அடிக்கப்பட்டுவிட்டது. இன்று தங்கள் பெருமைக்குரிய மதத்தை நினைவு படுத்த ஒரு சில பார்சிகள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள்.
இந்திய மண்ணில் ஒன்றன் பின் ஒன்றாக எத்தனையோ கிளைமதங்கள் உண்டாயின.வேத நெறியின் அடித்தளத்தையே அவை உலுக்கிவிடும் போலத் தோன்றியது. ஆனால், பயங்கரமான நில நடுக்கம் ஏற்பட்டால், எப்படிக் கடலானது சிறிது நேரம் பின்னோக்கிச் சென்று, பின்னர் ஆயிரம் மடங்கு சீற்றத்துடன் பெருகி வந்து அனைத்தையும் வளைத்துக் கொள்கிறதோ, அது போல, எல்லா கிளை மதங்களும் ஆரம்ப ஆரவாரம் ஓய்ந்ததும் மிகப்பெரியதான தாய்மதத்தால் கவர்ந்து இழுக்கப்பட்டு, அதனுள் இரண்டறக் கலந்து விட்டன.
அறிவியலின் இன்றைய கண்டு பிடிப்புகள் எந்த வேதநாதத்தின் எதிரொலிகள் போன்று உள்ளனவோ, அந்த வேதாந்த தத்துவத்தின் மிக உயர்ந்த ஆன்மீகக் கோட்பாடுகள் முதல் பல்வேறு புராணக் கதைகள் கொண்ட மிகச் சாதாரண உருவ வழிபாட்டுக் கருத்துகள், பௌத்தர்களின் சூன்யவாதம், சமணர்களின் நாத்திக வாதம், ஆகிய அனைத்திற்கும் இந்து சமயத்தில் இடம் உள்ளது. அப்படியானால் ஒன்றுக்கொன்று மிகவும் வேறுபட்டு நிற்கும் இவை அனைத்தும் ஒன்று சேரும் பொதுமையம் எங்கே இருக்கிறது, என்ற கேள்வி எழுகிறது. ஒன்று சேரவே முடியாதது போல் தோன்றுகின்ற இவை அனைத்தும் ஒருங்கிணைவதற்கான அடித்தளம் எங்கிருக்கிறது? இந்தக் கேள்விக்குத் தான் நான் விடை கூற முயலப்போகிறேன்.
தெய்வீக வெளிப்பாடான (Revelation) வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அன்று. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட, ஆன்மீக விதிகளின் கருவூலமே வேதங்கள். புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் அது இருக்கும். அவ்வாறே ஆன்மீக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவுக்கும் இன்னோர் ஆன்மாவுக்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மீக, நீதி நெறி உறவுகள், அவை கண்டு பிடிக்கப் படுவதற்கு முன்னரும் இருந்தன. நாம் அவற்றை மறந்தாலும் இருக்கும்.
இந்த விதிகளைக் கண்டறிந்தவர்கள் ரிஷிகள் எனப்பட்டனர். பூரணத்துவம் அடைந்தவர்கள் என்று அவர்களை நாங்கள் போற்றுகிறோம். அவர்களுள் மிகச் சிறந்த சிலர் பெண்கள் என்பதைக் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த விதிகள், அவை விதிகளாதலால், முடிவில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்கம் இருந்திருக்க வேண்டுமே என்று கூறலாம். படைப்பு, தொடக்கமும் முடிவும் இல்லாதது என்று வேதங்கள் போதிக்கின்றன. பிரபஞ்ச சக்தியின் மொத்த அளவு என்றும் ஒரே அளவில் தான் இருக்கிறதென்று விஞ்ஞானம் நிரூபித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படியானால், பிரபஞ்சத்தில் ஒன்றுமே இருந்திராத ஒரு காலம் இருந்திருக்குமானால் இப்போது காணப்படும் சக்தி அனைத்தும் எங்கிருந்தது? அது கடவுளிடம் ஒடுக்க நிலையில்இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியானால் கடவுள், சில காலம் ஒடுக்க நிலையிலும் சில காலம் இயக்க நிலையிலும் இருக்கிறார் என்றாகிறது. அதாவது, கடவுள் மாறக்கூடிய தன்மையர். மாறக்கூடிய பொருள் கூட்டுப் பொருளாகத் தானிருக்க வேண்டும். எல்லா கூட்டுப் பொருள்களும் அழிவு என்னும் மாறுதலை அடைந்தே தீரவேண்டும். எனவே, கடவுள் இறந்து விடுவார் என்றாகிறது. இது அபத்தம். ஆகையால் படைப்பு இல்லாதிருந்த காலம் ஒரு போதும் இருந்ததில்லை.

இதை ஓர் உவமையால் விளக்க நினைக்கிறேன். படைப்புத் தொழிலும், படைப்பவனும், தொடக்கமும் முடிவும் இல்லாது சமதூரத்தில் ஓடுகின்ற இரண்டு இணைகோடுகள். கடவுள் எப்போதும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பரம்பொருள். அவரது சக்தியால் ஒழுங்கற்ற நிலையிலிருந்து (Chaos) பல ஒழுங்கு முறைகள் (Systems) ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன, சிறிது காலம் செயல்படுகின்றன, பின்னர் அழிந்து விடுகின்றன. இதையே அந்தணச் சிறுவன் தினமும் ஓதுகிறான்: ‘பழைய கல்பங்களில் இருந்த சூரியர்களையும் சந்திரர்களையும் போன்றே சூரியனையும் சந்திரனையும் கடவுள் படைத்தார்.’ இது தற்கால அறிவியலுக்குப் பொருந்தியதாக உள்ளது.
இங்கு நான் நிற்கிறேன். கண்களை மூடிக்கொண்டு, ‘நான், நான், நான்’ என்று என்னைப் பற்றி நினைத்தால் என்னுள் என்ன தோன்றுகிறது? உடலைப் பற்றிய எண்ணம்தான். அப்படியானால் சடப் பொருள்களின் மொத்த உருவம் தானா நான்? ‘இல்லை’ என்கின்றன வேதங்கள். நான் உடலில் உறைகின்ற ஆன்மா. நான் அழிய மாட்டேன். நான் இந்த உடலில் இருக்கிறேன். இது வீழ்ந்து விடும். ஆனால் நான் வாழ்ந்து கொண்டே இருப்பேன். நான் முன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தேன். ஆன்மா படைக்கப்பட்டதன்று. படைக்கப்பட்டதாயின் அது பல பொருள்களின் சேர்க்கையாகும். அப்படியானால் வருங்காலத்தில் அது கண்டிப்பாக அழிந்து போக வேண்டும். எனவே, ஆன்மா படைக்கப்பட்டதானால் அது இறக்க வேண்டும்.
சிலர் பிறக்கும்போதே இன்பத்தில் பிறக்கிறார்கள். உடல் வளத்தோடும் வனப்போடும் மனவலிமையோடும், தேவைகள் அனைத்தும் நிறைவேறப் பெற்று வாழ்கிறார்கள். சிலர் துயரத்திலேயே பிறக்கிறார்கள். சிலர் முடமாகவும் நொண்டியாகவும் இருக்கிறார்கள். சிலர் முட்டாள்களாகவே வாழ்ந்து, வாழ்க்கை முழுவதையும் ஏதோ இழுபறி நிலையிலேயேகடத்துகிறார்கள்.
அவர்கள் அனைவரும் படைக்கப் பட்டவர்கள் என்றால், நேர்மையும் கருணையும் உள்ள கடவுள், ஒருவரை இன்பத்தில் திளைப்பவராகவும் இன்னொருவரைத் துன்பத்தில் உழல்பவராகவும் ஏன் படைக்க வேண்டும்? அவர் ஏன் அத்தனை வேறுபாடு காட்டவேண்டும்? இந்தப் பிறவியில் துன்பப்படுபவர்கள் அடுத்த பிறவியில் இன்பம் அடைவார்கள் என்று கூறுவதும் பொருந்தாது. நேர்மையும் கருணையும் கொண்ட கடவுளின் ஆட்சியில் ஏன் ஒருவர் துயருற வேண்டும்?
ஆகவே, படைப்பாளராகிய கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று கொள்வது இந்த முரண்பாட்டைத் தெளிவு படுத்தவில்லை. மாறாக, எல்லா வல்லமையும் வாய்ந்த ஒருவரின் கொடுங்கோன்மையையே காட்டுகிறது. அப்படியானால், ஒருவன் மகிழ்வதற்கோ துயரத்தில் உழல்வதற்கோ உரிய காரணங்கள், அவன் பிறப்பதற்கு முன்பே இருந்திருக்க வேண்டும். அவையே அவனது முற்பிறப்பின் வினைகள். ஒருவனுடைய உடல், உள்ளம் ஆகியவற்றின் இயல்புகள் பரம்பரையாக வருவது என்று காரணம் காட்டப்படுகிறது அல்லவா?
வாழ்க்கையில் இரண்டு இணை கோடுகள் உள்ளன – ஒன்று மனத்தைப் பற்றியது. இன்னொன்று சடப்பொருளைப் பற்றியது. சடப் பொருளும் அதன் மாற்றங்களும் மட்டுமே நமது இப்போதைய நிலையை விளக்கி விடும் என்றால் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது என்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சடத்திலிருந்து எண்ணம் தோன்றியது என்று நிரூபிக்க முடியாது. தத்துவப்படி, ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியுமானால் ஆன்மா ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டும் என்பதைப் போல பகுத்தறிவுக்குப் பொருந்தியதே. ஆனால் இவை எதுவும் இப்போது நமக்கு அவசியமில்லை.
பரம்பரையின் மூலம் உடல்கள் சில இயல்புகளைப் பெறுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் குறிப்பிட்ட மனம் குறிப்பிட்ட விதமாகச் செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கின்ற ஒரு தூல உருவத்தையே இந்த இயல்புகள் குறிக்கின்றன. இனி, ஆன்மாவுக்கும் கடந்தகால விளைவுகளின் காரணமாகச் சில குறிப்பிட்ட இயல்புகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட இயல்புகளுடன் கூடிய ஆன்மா, குண ஒற்றுமை விதிகளுக்கு (Laws of Affinity)இணங்க எந்த உடலில் பிறந்தால் அந்த இயல்புகளை வெளிப்படுத்த முடியுமோ, அந்த உடலில் பிறக்கிறது. இது அறிவியலுக்கு ஏற்புடையது. ஏனெனில், அறிவியல் எதையும் பழக்கத்தைக் கொண்டே விளக்க விரும்புகிறது. பழக்கமோ எதையும் திரும்பத் திரும்பச் செய்வதால் தான் உண்டாகிறது. ஆகவே புதிதாகப் பிறந்த ஓர் ஆன்மாவின் இயல்புகளை விளக்குவதற்கு, அது அந்தச் செயலைத் திரும்பத் திரும்பச் செய்திருக்க வேண்டும் என்று ஆகிறது. அந்த இயல்புகள் இந்தப் பிறவியில் பெறப்பட்டவை அல்லன. ஆதலால் அவை முந்தைய பிறப்புகளிலிருந்து வந்திருக்க வேண்டும்.
இன்னொரு கருத்தும் இருக்கிறது. இவையெல்லாம் சரியென்றே வைத்துக் கொள்வோம், ஆனால் ஏன் எனக்கு முற்பிறவியைப் பற்றிய எதுவும் நினைவில் இல்லை? இதை எளிதில் விளக்க முடியும். இப்போது நான் ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கிறேன். இது என் தாய்மொழி அல்ல. உண்மையில், என் தாய்மொழிச் சொற்கள் எதுவும் என் உணர்வுத் தளத்தில் இப்போது இல்லை. ஆனால் பேசுவதற்குச் சிறிது முயன்றால் போதும், அவை விரைந்து வந்துவிடும். மனக்கடலின் மேற்பரப்பு மட்டுமே உணர்வுப் பகுதி, மனத்தின் ஆழத்தில் தான் அனுபவங்கள் அனைத்தும் திரண்டு கிடக்கின்றன என்பதையே இது காட்டுகிறது. முயலுங்கள், போராடுங்கள், அவை மேலே வரும். முற்பிறவியையும் நீங்கள்அறிய முடியும்.
இது நேரான, நிரூபிக்கப்படக் கூடிய சான்று. நிரூபிக்கப்படுவது தான் ஒரு கொள்கை சரியென்பதற்குச் சான்று. உலகிற்கு ரிஷிகள் விடுக்கும் அறைகூவல் இதுவே: ‘நினைவுக் கடலின் ஆழத்தைக் கிளறிவிடும் ரகசியத்தை நாங்கள் கண்டு பிடித்துள்ளோம். முயலுங்கள், முயன்றால் நீங்களும் நிச்சயமாக முற்பிறவியின் நினைவுகளை முழுமையாகப் பெறுவீர்கள்!’
தான் ஓர் ஆன்மா என்பதை இந்து நம்புகிறான். ஆன்மாவை வாள் வெட்ட முடியாது. நெருப்பு எரிக்க முடியாது, நீர் கரைக்க முடியாது. காற்று உலர்த்த முடியாது. ஒவ்வோர் ஆன்மாவும் சுற்றெல்லையில்லாத, ஆனால் உடலை மையமாகக் கொண்ட ஒரு வட்டம். இந்த மையம் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறிச் செல்வதே மரணம் என்று இந்து நம்புகிறான். சடப்பொருளின் நியதிகளுக்கும் ஆன்மா கட்டுப்பட்டதல்ல. அது இயல்பாகவே சுதந்திரமானது, தளைகள் அற்றது, வரம்பு அற்றது, புனிதமானது, தூய்மையானது, முழுமையானது. எப்படியோ அது, தான் சடத்துடன் கட்டுப்பட்டதாக தன்னைக் காண்கின்றது. எனவே தன்னைச் சடமாகவே கருதுகிறது.
சுதந்திரமான, நிறைவான, தூய்மையான ஆன்மா ஏன் இவ்வாறு சடத்திற்கு அடிமையாக இருக்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்ற நம்பிக்கையில் எவ்வாறு மயங்கிவிட முடியும்? இத்தகைய கேள்விக்கு இங்கு இடமில்லை என்று கூறி, இந்துக்கள் இதைத் தட்டிக் கழிப்பதாகச் சொல்லப்படுகிறது. சில சிந்தைனையாளர்கள், முழுமை நிலைக்குச் சற்றுக் கீழே இருக்கின்ற, ஆனால் முழுமை பெறாத பல தெய்வங்களைக் கூறி, பெரிய பெரிய சொற்களால் இடைவெளியை நிரப்ப முயற்சி செய்வதன் மூலம் இதற்கு விடை காண விரும்புகிறார்கள். ஆனால் பெரிய சொற்களைக் கூறுவது விளக்கமாகி விடாது. கேள்வி அப்படியேதான் இருக்கிறது. முழுமையான ஒன்று முழுமை நிலையிலிருந்து எப்படிக் கீழே வரமுடியும்? தூய்மையானதும் முழுமையானதுமான பொருள் தன் இயல்பை எப்படி அணுவளவேனும் மாற்றிக்கொள்ளமுடியும்?
இந்து நேர்மையானவன். அவன் குதர்க்கவாதம் செய்து தப்பிக்க விரும்பவில்லை. கேள்வியை ஆண்மையுடன் எதிர் கொள்ளும் துணிவு அவனுக்கு உண்டு. அவனது பதில் இதுதான்: ‘எனக்குத் தெரியாது. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்றும், சடத்துடன் இணைக்கப்பட்டு, அதனால் பாதிக்கப்படுகிறது என்றும் ஏன் தன்னைப் பற்றி நினைக்கஆரம்பித்தது என்று எனக்குத் தெரியாது.’ உண்மை என்னவோ அதுதான். ஒவ்வொருவரும் தன்னை உடலாக நினைத்துக் கொண்டிருப்பது உண்மைதான். தான் உடல் என எண்ணிக் கொள்வது ஏன் என்பதை விளக்க எந்த இந்துவும் முயல்வதில்லை. அது கடவுளின் திருவுளம் என்று பதில் அளிப்பது விளக்கமாகாது. ‘எனக்குத் தெரியாது’ என்று இந்து கூறுகிறானே அதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது.
ஆகவே, மனித ஆன்மா நிலையானது. அழிவற்றது, நிறைவானது, எல்லையற்றது. மரணம் என்பது ஓர் உடலினின்று மற்றோர் உடலுக்கு இடம் பெயர்தலே ஆகும். கடந்தகால வினைகளால் நிகழ்காலம் தீர்மானிக்கப்படுகிறது. எதிர்காலம் நிகழ்காலத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. பிறப்புக்குப் பின் பிறப்பு, இறப்புக்குப் பின் இறப்பு, என்று ஆன்மா மேல் நிலைக்கு உயர்ந்தோ அல்லது கீழ் நிலைக்குத் தாழ்ந்தோ சென்று கொண்டிருக்கும்.

இங்கு மற்றொரு கேள்வி எழுகிறது. சூறாவளியில் சிக்கி, ஒரு கணம் கடல் அலையின் நுரை நிறைந்த உச்சிக்குத் தள்ளப்பட்டு, அடுத்த கணமே, ‘ஆ’ வென்று வாயைப் பிளந்து கொண்டிருக்கும் பள்ளத்தில் வீழ்த்தப்பட்டு, நல்வினை தீ வினைகளின் ஆதிக்கத்தில் மேலும் கீழுமாக உருண்டு உழன்று கொண்டிருக்கும் ஒரு சிறு படகா மனிதன்? கடுஞ் சீற்றமும் படுவேகமும் தணியாத தன்மையும் கொண்ட காரண காரியம் என்னும் நீரோட்டத்தில் அகப்பட்டு, அழிந்து போகின்ற, சக்தியற்ற, உதவியற்ற பொருளா மனிதன்? இல்லை, விதவையின் கண்ணீரைக் கண்டும், அனாதையின் அழுகுரலைக் கேட்டும், சற்றும் நிற்காமல், தான் செல்லும் வழியிலுள்ள அனைத்தையும் நசுக்கிக் கொண்டு உருண்டு ஓடும் காரணம் என்னும் சக்கரத்தின் அடியில் எறியப்பட்ட புழுவைப் போன்றவனா மனிதன்?
இதை நினைக்கும் போது நெஞ்சு தளர்வுறுகிறது. ஆனால் இது தான் இயற்கையின் நியதி. நம்பிக்கை இழந்த நெஞ்சின் அடித்தளத்திலிருந்து ‘நம்பிக்கையே கிடையாதா? தப்பிக்க வழியே கிடையாதா’ என்ற குரல் எழுந்து மேலே சென்றது. அந்தக் குரல் கருணைத் திருவுருவின் அரியாசனத்தை அடைந்தது. அங்கிருந்து நம்பிக்கையும் ஆறுதலும்அளிக்கும் சொற்கள் கீழே வந்தன. அவை ஒரு வேத முனிவரைக் கிளர்ந்தெழச் செய்ய, அவர் எழுந்து நின்று உலகோரைப் பார்த்து கம்பீர தொனியுடன் பின்வரும் செய்தியை முழங்கினார்: ‘ஓ அழயாத பேரின்பத்தின் குழந்தைகளே! கேளுங்கள். உயர் உலகங்களில் வாழ்பவர்களே! நீங்களும் கேளுங்களும். அனைத்து இருளையும், அனைத்து மாயையையும் கடந்து ஆதி முழுமுதலை நான் கண்டு விட்டேன். அவரை அறிந்தால்தான் நீங்கள் மீண்டும் இறப்பிலிருந்து காப்பாற்றப் படுவீர்கள்.’
‘அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே!’ ஆ, ஆ! எவ்வளவு இனிமையான, எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் பெயர்! அருமை சகோதரர்களே! அந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாத பேரின்பத்தின் வாரிசுகளே!ஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமானவர்கள், பூரணர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே! நீங்கள் பாவிகளா? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம். மனித இயல்புக்கே அது அழியாத களங்கம். சிங்கங்களே, வீறு கொண்டு எழுங்கள். நீங்கள் ஆடுகள் என்கிற மாயையை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அழியாத ஆன்மாக்கள், சுதந்திரமான, தெய்வீகமான, நிரந்தரமான ஆன்மாக்கள்! நீங்கள் சடப்பொருள் அல்ல, நீங்கள் உடல் அல்ல, சடப்பொருள் உங்கள் பணியாள், நீங்கள் சடப்பொருளின் பணியாளர் அல்ல.
இரக்கமற்ற விதிகளின் ஒரு பயங்கரத் தொகுதியை வேதங்கள் கூறவில்லை, காரணகாரியம் என்னும் எல்லையற்ற சிறைச் சாலையை அறிவிக்கவில்லை. ஆனால் இந்த விதிகளுக்கெல்லாம் முடிவில், சடம் சக்தி ஆகியவற்றின் ஒவ்வொரு சிறு பகுதியின் உள்ளும் புறமும் ஒருவன் இருக்கிறான். ‘அவனது கட்டளையால் தான் காற்று வீசுகிறது, நெருப்பு எரிகிறது, வானம் பொழிகிறது, உலகில் மரணம் நடைபோடுகிறது’ என்றுகூறுகின்றன.
அவனது இயல்புதான் என்ன? அவன் எங்கும் நிறைந்தவன், புனிதமானவன், உருவற்றவன், எல்லாம் வல்லவன், பெருங்கருணையாளன். ‘அப்பனும் நீ, அன்னையும் நீ, அன்புடைய நண்பனும் நீ, ஆற்றல் அனைத்தின் தோற்றமும் நீ, எமக்கு வலிமை தந்தருள்வாய்! புவனத்தின் சுமையைத் தாங்குபவனே, இந்த வாழ்க்கையின் சுமையைத் தாங்க நீ எனக்குஅருள் செய்வாய்!’- வேத முனிவர்கள் இவ்வாறு பாடினர். அவனை எப்படி வணங்குவது? அன்பினால், இம்மையிலும் மறுமையிலும் உள்ள எதையும் விட அதிக அன்புக்கு உரியவனாக அவனை வழிபட வேண்டும். வேதங்கள் முழங்குவதும் இந்த அன்பு நெறியையே. கடவுளின் அவதாரம் என்று இந்துக்கள் நம்பிப் போற்றும் ஸ்ரீகிருஷ்ணர் அதை எப்படி வளர்த்தார், மக்களுக்கு போதித்தார் என்று பார்ப்போம்.
மனிதன் இவ்வுலகில் தாமரை இலையைப் போல வாழ வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ணர் சொன்னார். அது தண்ணீரில் வளர்கிறது. ஆனால் தண்ணீரால் நனைவதில்லை. அது போல மனிதன் இந்த உலகில் வாழ வேண்டும் – இதயத்தை இறைவன்பால் வைத்து கைகளால் வேலை செய்ய வேண்டும்.

இவ்வுலக நன்மை அல்லது மறுவுலக நன்மை கருதி, இறைவனிடம் அன்பு செலுத்துவது நல்லது தான். ஆனால் அன்புக்காகவே அவனை அன்பு செய்வது சிறந்தது. ‘எம்பெருமானே, எனக்குச் செல்வமோ, பிள்ளைகளோ, கல்வியோ வேண்டாம். உனதுதிருவுள்ளம் அதுவானால் நான் மீண்டும் மீண்டும் பிறக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால் நான் பலன் கருதாது உன்னிடம் அன்பு கொள்ளவும், தன்னலமின்றி அன்புக்காகவே அன்பு செய்யவும் அருள் செய்’ என்கிறது ஒரு பிரர்த்தனை.
ஸ்ரீகிருஷ்ணரின் சீடர்களுள் ஒருவர், பாரதத்தின் அன்றைய சக்கரவர்த்தியாக விளங்கிய யுதிஷ்டிரர். அவர் பகைவர்களால் நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, மனைவியுடன் இமயமலைக் காட்டில் வசிக்க நேர்ந்தது. ஒருநாள் அரசி யுதிஷ்டிரரிடம், ‘அறத்தில் மிகச் சிறந்து விளங்கும் உங்களுக்கும் ஏன் துன்பம் வர வேண்டும்?’ என்று கேட்டாள். அதற்கு யுதிஷ்டிரர், ‘தேவி, இதோ, இந்த இமய மலையைப் பார் எவ்வளவு எழிலோடும் மாட்சிமையோடும் காட்சியளிக்கிறது! நான் இதனை நேசிக்கிறேன். இது எனக்கு ஒன்றும் தருவதில்லை. அழகும் கம்பீரமும் நிறைந்தவற்றில் உள்ளத்தைப் பறிகொடுப்பது என் இயல்பு. அதனால் நான் அதனை விரும்புகிறேன். அது போலவே இறைவனை நான் நேசிக்கிறேன். அவரே அனைத்து அழகிற்கும் கம்பீரத்திற்கும் மூலகாரணம். அன்பு செலுத்தப்படவேண்டியவர் அவர் ஒருவரே. அவரை நேசிப்பது என் இயல்பு. ஆதலால் நான் அவரை நேசிக்கிறேன். நான் எதுவும் கேட்கவில்லை. அவர் விருப்பம் போல் என்னை எங்கு வேண்டுமானாலும் வைக்கட்டும். அன்புக்காகவே அவரிடம் நான் அன்பு செலுத்த வேண்டும். அன்பை விலை பேச என்னால்முடியாது’ என்றார்.
ஆன்மா தெய்வீகமானது, ஆனால் சடப்பொருளின் கட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. இந்தக் கட்டு அவிழும் போது ஆன்மா நிறைநிலையை அடைகிறது. அந்த நிலை முக்தி. முக்தி என்பது விடுதலை என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. விடுதலை-நிறைவுறாத நிலையிலிருந்து விடுதலை, மரணத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை.
கடவுளின் கருணையால் தான் இந்தக் கட்டு அவிழும். அந்தக் கருணை தூயவர்களுக்குத் தான் கிட்டும். எனவே, அவனது கருணையைப் பெறுவதற்குத் தூய்மை அவசியம் என்றாகிறது. அந்தக் கருணை எப்படிச் செயல்படுகிறது? தூய உள்ளத்தில் அவன் தன்னை வெளிப்படுத்துகிறான், ஆம், தூயவர்களும் மாசற்றவர்களும் இந்தப் பிறவியிலேயே கடவுளைக் காண்கின்றனர். அப்போது தான் இதயக் கோணல்கள் நேராகின்றன, சந்தேகங்கள் அகல்கின்றன. காரணகாரியம் என்ற பயங்கர விதி அவர்களை அணுகுவதில்லை.
இதுதான் இந்து மதத்தின் மையமும், அதன் முக்கியமான அடிப்படைக் கருத்தும் ஆகும்.
இந்து, வார்த்தைகளிலும் கொள்கைகளிலும் வாழ விரும்பவில்லை. புலன் வயப்பட்டசாதாரண வாழ்விற்கு அப்பாற்பட்ட வாழ்வுகள் உண்டு என்றால், அவன் அவற்றை நேருக்கு நேர் காண விரும்புகிறான். சடப்பொருள் அல்லாத ஆன்மா என்ற ஒன்று அவனுள் இருக்குமானால் அதனிடம் நேரே செல்ல விரும்புகிறான். கருணையே வடிவான, எங்கும் நிறைந்த இறைவன் ஒருவர் இருப்பாரானால் அவரை நேரே காண விழைகிறான். அவன்அவரைக் காண வேண்டும். அதுதான் அவனது எல்லா சந்தேகங்களையும் அகற்றும். ஆன்மா இருக்கிறது, கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஓர் இந்து ஞானி கொடுக்கக் கூடியசிறந்த சான்று, ‘நான் ஆன்மாவை கண்டுவிட்டேன்’ என்று அவர் கூறுவது தான். நிறை நிலைக்கு அது தான் ஒரே நியதி. இந்து மதம் என்பது ஏதோ ஒரு கோட்பாட்டையோ கொள்கையையோ நம்புவதற்கான போராட்டங்களிலும் முயற்சிகளிலும் அடங்கி விடாது. வெறும் நம்பிக்கை அல்ல, உணர்தலே; உணர்ந்து அதுவாக ஆதலே இந்து மதம்.
இடைவிடாத முயற்சியின் மூலம் நிறை நிலை பெறுவதும் தெய்வதன்மை அடைவதும் தெய்வத்தைஅணுகுவதும் அவனைக் காண்பதுமே அவர்களது நெறியின் ஒரே நோக்கமாகும். தெய்வத்தை அணுகி, அவனைக் கண்டு, வானில் உறையும் தந்தையைப் போல நிறை நிலை அடைவதும் தான் இந்துக்களின் மதம். நிறை நிலை பெறும் ஒருவன் என்ன ஆகிறான்? அவன் எல்லையற்ற, முழுமையான பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான். பேரின்பம் பெற எதனை அடைய வேண்டுமோ, அந்த ஆண்டவனை அடைந்து, அவனுடன் பேரானந்தத்தில் திளைக்கிறான்.
இதுவரையில் எல்லா இந்துக்களும் ஒத்துப் போகின்றனர். இந்தியாவிலுள்ள அனைத்து சமயப் பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கும் இது தான் பொதுவாக உள்ள மதம். நிறை நிலை என்பது எல்லையற்றது. எல்லையற்றது இரண்டாகவோ, மூன்றாகவோ இருக்க முடியாது. அதற்கு குணங்கள் இருக்க முடியாது. அது தனிப்பட்ட ஆளாக இருக்க முடியாது.எனவே ஆன்மா நிறை நிலையையும் எல்லையற்ற நிலையையும் அடையும்போது பிரம்மத்துடன் ஒன்றாகியே தீர வேண்டும். அது இறைவனை நிறைநிலையாக, ஒரே உண்மையாக, தானேயாக, தனது இயல்பாக, இருக்கின்ற ஒருவர் மட்டுமாக, தனியறிவு வடிவாக, பேரானந்த வடிவாக உணர்கிறது. தனித் தன்மையை இழந்து, ஒரு கட்டையைப் போன்றோ, கல்லைப் போன்றோ ஆகிவிடுவது தான் இந்த நிலை என்றெல்லாம் படிக்கிறோம். ‘காயம் படாதவன் தான் தழும்பைக் கண்டு நகைப்பான்’.
நான் கூறுகிறேன், அது அம்மாதிரி அல்ல. இந்தச் சிறிய உடலின் உணர்வை அனுபவிப்பது இன்பமானால், இரண்டு உடல்களின் உணர்வை அனுபவிப்பது இன்னும் அதிக இன்பமாகும். உடல்களின் எண்ணிக்கை பெருகப்பெருக இன்பத்தின் அளவும் பெருகுகிறது. இறுதியாக, பிரபஞ்ச உணர்வாக மாறும் போது நமது குறிக்கோளாகிய எல்லையற்ற இன்பம் கிட்டுகிறது.
எல்லையற்ற, பிரபஞ்சம் தழுவிய அந்த தனித்தன்மையைப் பெற வேண்டுமானால், துன்பம் நிறைந்த இந்த உடற்சிறை என்னும் தனித்தன்மை அகல வேண்டும். நாம் உயிருடன் ஒன்றும் போது தான் மரணம் அகல முடியும். இன்பத்துடன் ஒன்றும்போது தான் துன்பம் அகல முடியும், அறிவுடன் ஒன்றும் போது தான் பிழைகள் அகல முடியும். இதுதான் அறிவியலுக்குப் பொருந்துகின்ற முடிவு. உடலைச் சார்ந்த தனித்தன்மை ஒருமாயை. இடைவெளியற்றுப் பரந்து நிற்கும் சடப் பொருளாகிய கடலில், தொடர்ந்து மாறிக் கொண்டே செல்லும் ஒரு சிறிய பொருள் தான் என் உடல் என்று அறிவியல் நிரூபித்து விட்டது. எனவே என் இன்னொரு பாகமான ஆன்மா அத்வைதம் (ஒருமை), என்ற முடிவுக்குத் தான் வரவேண்டியிருக்கிறது.
ஒருமை நிலையைக் கண்டு பிடிப்பது தான் அறிவியல். முழுமையான ஒருமை நிலை கிட்டியதும் அறிவியல் மேலே செல்லாமல் நின்றுவிடும். ஏனெனில் அது தன் குறிக்கோளை எட்டி விட்டது. அது போலவே, எந்த மூலப் பொருளிலிருந்து எல்லா பொருள்களும் படைக்கப் படுகின்றனவோ, அதைக் கண்டு பிடித்த பின்னர் வேதியியல் முன்னேற முடியாது. எந்த மூலசக்தியிலிருந்து எல்லா சக்திகளும் வெளிப் படுகின்றனவோ, அதைக்கண்டறிந்ததும் இயற்பியல் நின்றுவிடும். மரணம் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில், மரணத்தைக் கடந்து நிற்கும் ஒரே உயிரைக் கண்டுபிடித்ததும், மாறிக் கொண்டேயிருக்கும் உலகில் மாறாத ஒரே அடிப்படையான அவனைக் கண்டு பிடித்ததும், எந்த ஓர் ஆன்மாவிலிருந்து பிற ஆன்மாக்கள் வெளிப்படுவது போன்று மாயையால் தோன்றுகிறதோ அந்த ஆன்மாவைக் கண்டுபிடித்ததும், சமய விஞ்ஞானம் பூரணமாகிவிடும்.
அறிவியல் அனைத்தும் கடைசியில் இந்த முடிவிற்குத் தான் வந்தாக வேண்டும். ஒடுங்கி இருப்பவை வெளிப்படுகின்றனவே தவிர படைப்பு என்பதில்லை என்பது தான் இன்றைய அறிவியலின் கூற்று. தான் பல்லாண்டுகளாக இதயத்தில் வைத்துப் போற்றி வந்த உண்மை, இன்னும் ஆற்றல் மிக்க மொழியில், தற்கால அறிவியல்முடிவுகளின் ஆதாரவிளக்கங்களுடன் புகட்டப்படப் போகின்றது என்பதை அறிந்து இந்து பெருமகிழ்ச்சியையே அடைகிறான்.
தத்துவ நாட்டத்திலிருந்து இப்போது நாம் சாதாரண மக்களின் மதத்திற்கு வருவோம், பலதெய்வ வழிபாடு (Polytheism) இந்தியாவில் இல்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ஆலயங்களில் வழிபடுபவர்கள், அங்கிருக்கின்ற திருவுருவங்களை, தெய்வத்தின் எல்லா குணங்களும்-எங்கும் நிறைந்ததன்மை உட்படத்தான் – இருப்பதாகக் கூறிவழி படுவதை அருகிலிருந்து கவனித்தால் அறியலாம். அது பல தெய்வவழிபாடாகாது. பலதெய்வங்களுள் ஒருவரை ஆற்றல் மிக்கவராகக் கருதி, அவரை வழிபடுகின்ற கோட்பாடு (Henotheism) என்றும் இதனை விளக்க முடியாது. ‘ரோஜா மலரை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அதேநறுமணம் தான் கமழும்’. பெயர்கள் விளக்கங்களாக மாட்டா.

நான் சிறுவனாயிருந்த போது, கிறிஸ்தவ பாதிரி ஒருவர், ஒரு கூட்டத்தில் பிரசாரம் செய்து கொண்டிருந்த நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. பல சுவையான செய்திகளைச் சொல்லிக் கொண்டே வந்த அவர் இடையில், ‘நான் உங்கள் விக்கரகத்தை என் கைத்தடியால் ஓங்கி அடித்தால் அது என்னை என்ன செய்துவிடும்?’ என்று கேட்டார்.அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் சற்றும் தாமதியாமல், ‘உங்கள் ஆண்டவரை நான் ஏசினால் அவர் என்னை என்ன செய்வார்?’ என்றுகேட்டார், ‘இறந்ததும் நீ தண்டிக்கப் படுவாய்’ என்று பதிலளித்தார் பாதிரி. ‘அப்படியே எங்கள் விக்கிரகமும் நீர் இறந்ததும் உம்மைத் தண்டிக்கும்’ என்று திருப்பிச் சொன்னார் அந்த இந்து!
பழத்தைக் கொண்டு மரம் அறியப்படுகிறது. உருவ வழிபாட்டினர் என்று கூறப்படுகிறவர்களுள், ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் பக்தியிலும் ஈடிணையற்று விளங்குபவர்களை நான் காணும்போது, ‘பாவத்திலிருந்து புனிதம் பிறக்குமா?’ என்று என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்.
மூடநம்பிக்கை, மனிதனின் பெரும் பகைவன்தான். ஆனால், மதவெறி அதை விட மோசமானது. கிறிஸ்தவன் ஏன் சர்ச்சிற்குப் போகிறான்? சிலுவை ஏன் புனிதமானது? பிரார்த்தனை செய்யும்போது முகம் ஏன் வானை நோக்க வேண்டும்? கத்தோலிக்க சர்ச்சுகளில் ஏன் அத்தனை உருவங்கள் இருக்கின்றன? பிராட்டஸ்டன்டினர் பிரார்தனை செய்யும்போது அவர்கள் உள்ளங்களில் ஏன் அத்தனை உருவங்கள் உள்ளன?
என் சகோதரர்களே, சுவாசிக்காமல் உயிர் வாழ முடியாதது போல, உள்ளத்தில் ஓர் உருவத் தோற்றமின்றி, நாம் எதனையும் நினைத்துப் பார்க்க முடியாது. இணைப்பு விதியின் படி (Law of Association) வெளி உருவம் உள் உருவத்தையும், உள் உருவம் வெளி உருவத்தையும் நினைவு படுத்துகிறது. அதனால் தான் இந்து வழிபடும்போது, ஒருபுறச் சின்னத்தைப் பயன் படுத்துகிறான். தான் வழிபடும் பரம்பொருளின் மீது சிந்தையைப் பதியச் செய்வதற்கு அது உதவுகிறது என்று அவன் கூறுவான். அந்த உருவம் கடவுள் அல்ல, அது எங்கும் நிறைந்தது அல்ல என்று உங்களைப் போல அவனுக்கும் தெரியும். ‘எங்கும் நிறைந்தது’ என்று சொல்லும் போது பெரிதாக என்ன தான் புரிந்து கொள்ளமுடியும்?அது ஒரு சொல், சின்னம் மட்டுமே. இறைவனுக்குப் பரப்பு இருக்க முடியுமா, என்ன? ‘எங்கும் நிறைந்தவர்’ என்று நாம் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, மிஞ்சிப் போனால், விரிந்த வானையும் பரந்த வெளியையும் நினைக்கலாம், அவ்வளவுதான்.
எல்லையற்றது என்ற கருத்தை நீலவானின் அல்லது கடலின் தோற்றத்துடன் தொடர்பு படுத்தியே பார்க்க வேண்டியுள்ளது. மன அமைப்பு விதி அவ்வாறு தான் செயல் படுகிறது. அவ்வாறே புனிதம் என்றால் சர்ச், பள்ளிவாசல் அல்லது சிலுவை போன்ற உருவங்களுடன் இணைத்துப் பார்ப்பதுதான் இயல்பானது. இந்துக்களும் தூய்மை, உண்மை, எங்கும்நிறைந்த நிலை ஆகியவை பற்றிய கருத்துக்களை பல்வேறு உருவங்களுடனும்,தோற்றங்களுடனும் தொடர்பு படுத்தி உள்ளனர். ஆனால் ஒரு வித்தியாசம். சிலர் சர்ச்சின் உருவவழிபாட்டுடன் தங்கள் வாழ்க்கை முழுவதையும் இணைத்துக் கொண்டு, அதற்கு மேல் வளராமல் நின்று விடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, மதம் என்றால் சில கோட்பாடுகளை ஒப்புகொள்வது, பிறருக்கு உதவி செய்வது என்பவை மட்டும்தான். இந்துவின் சமயமோ தெய்வத்தை நேரடியாக உணர்வது. தெய்வத்தை உணர்ந்து, மனிதன் தெய்வமாக வேண்டும். திருவுருவங்கள், கோவில்கள், சர்ச்சுகள், நூல்கள் இவை எல்லாம் ஆன்மீக வாழ்க்கையின் குழந்தைப் பருவத்தில் இருக்கும் மனிதனுக்கு உதவிகள், ஆதாரங்கள். ஆனால் அவன் இன்னும் மேலே மேலே முன்னேற வேண்டும்.
அவன் எங்குமே நின்று விடக்கூடாது. ‘புற வழிபாடும் சடப்பொருள் வழிபாடும் கீழ்நிலை ஆகும். மேல்நிலைக்கு வர முயன்று, மனத்தால் பிரார்த்தனை செய்தல், அடுத்த உயர்நிலை. ஆண்டவனை உணர்வதுதான் அனைத்திலும் மேலான நிலை’. என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதே உறுதிப்பாடு கொண்டவர், விக்கரகத்தின் முன்னால் முழந்தாளிட்டுக் கொண்டு கூறுவதைக் கேளுங்கள் : ‘அவனை சூரியனும் விவரிக்க முடியாது, விண்மீன்களாலும் மின்னலாலும் உணர்ந்துரைக்க முடியாது, தீயும் அவனைத் தேர்ந்துரைக்காது, அவை அனைத்தும் அவனால்தான் ஒளிர்கின்றன.’
இந்து யாருடைய விக்கிரகத்தையும் இழிவு படுத்திப் பேசுவதில்லை; எந்த வழிபாட்டையும் பாவம் என்று கூறுவதில்லை. அது வாழ்க்கையின் இன்றியமையாத படி என்றுஅவன் ஏற்றுக் கொள்கிறான். ‘குழந்தை, மனிதனின் தந்தை.’ குழந்தைப் பருவம் பாவமானது, அல்லது வாலிபப் பருவம் பாவமானது என்று வயதானவர் சொல்வது சரியாகுமா?

ஒரு விக்கிரகத்தின் மூலமாகத் தனது தெய்வீக இயல்பை ஒருவர் உணர முடியும் என்றால், அதைப்பாவம் என்று கூறுவது சரியா? இல்லை, அந்த நிலையைக் கடந்த பிறகு அவரே அதைப் பிழை என்று கூறலாமா? இந்துவின் கொள்கைப்படி, மனிதன் பிழையிலிருநது உண்மைக்குச் செல்லவில்லை, உண்மையில் இருந்து உண்மைக்கு, அதாவது கீழ்நிலை உண்மையிலிருந்து மேல் நிலை உண்மைக்குப் பயணம செய்கிறான். அவனைப் பொறுத்தவரை, மிகவும் தாழ்ந்த ஆவி வழிபாட்டிலிருந்து அத்வைதம் வரை எல்லாமே பரம் பொருளை உணர்வதற்காக ஆன்மா செய்யும் முயற்சிகள். ஒவ்வொன்றும் அது தோன்றிய இடத்தையும் சூழலையும் பொறுத்தது, ஒவ்வொன்றும் முன்னேற்றத்தின் ஒரு படியைக் குறிக்கிறது. ஒவ்வோர் ஆன்மாவும் மேலே மேலே பறந்து செல்லும் ஓர் இளம் பருந்தைப் போன்றது. அது உயரச் செல்லச்செல்ல மேன்மேலும் வலுவைப் பெற்று, கடைசியில் ஒளிமிக்க சூரியனை அடைகிறது.
வேற்றுமையில் ஒற்றுமை தான் இயற்கையின் நியதி. அதை இந்து உணர்ந்துள்ளான். பிற மதங்கள் எல்லாம் சில கோட்பாடுகளை நிர்ணயித்து அவற்றைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமாறு கட்டாயப் படுத்துகின்றன. ஒரே ஒரு சட்டையை வைத்துக் கொண்டு,சமுதாயத்திலுள்ள ஜாக், ஜான், ஹென்றி எல்லாருக்கும் அந்த ஒரு சட்டை பொருந்த வேண்டும் என்று கூறுகின்றன. ஜானுக்கோ, ஹென்றிக்கோ சட்டை பொருந்தா விட்டால் அவர்கள் உடலில் அணியச் சட்டையின்றிதான் இருக்க வேண்டும்.
சார்புப் பொருள்கள் மூலமே எல்லையற்ற இறைவனை உணரவோ, நினைக்கவோ பேசவோ முடியும். திருவுருவங்களும் சிலுவைகளும் பிறைகளும் வெறும் சின்னங்களே, ஆன்மீகக் கருத்துக்களை மாட்டி வைப்பதற்குப் பயன்படும் முனைகளே என்பதை இந்துக்கள் கண்டு பிடித்துள்ளனர். இந்த உதவி எல்லோருக்கும் தேவை என்பது அல்ல.ஆனால், தேவைப் படாதவர்கள், அது தவறு என்று கூற உரிமையில்லை. இந்து சமயத்தில் அது கட்டாயமும் அன்று.
ஒன்று நான் சொல்லவேண்டும். இந்தியாவில் உருவ வழிபாடு என்பது பயங்கரமான ஒன்றல்ல. விலை மகளிரை உருவாக்கும் இடமும் அல்ல. உயர்ந்த ஆன்மீக உண்மைகளைப் புரிந்து கொள்வதற்கு, பக்குவப் படாதவர்களின் முயற்சி தான் உருவ வழிபாடு. இந்துக்களிடம் தவறுகள் உண்டு, சில வேளைகளில் விதி விலக்குகளும் உண்டு. ஆனால் ஒன்றைக் கவனியுங்கள். அவர்கள் தங்கள் உடல்களை வருத்திக் கொள்வார்களே தவிர, அடுத்தவனின் கழுத்தை அறுக்க மாட்டார்கள், இந்து மதவெறியன் தன்னை தீயில் கொளுத்திக் கொள்வானேயன்றி பிறரையல்ல. சூனியக்காரிகள் கொளுத்தப்பட்டதற்கு எப்படிக் கிறிஸ்தவ மதம் பொறுப்பில்லையோ, அதே போன்று இதற்கு இந்து மதம் பொறுப்பல்ல.
இந்துவிற்கு, உலகின் எல்லா மதங்களும், பலவித நிலைகளிலும் சந்தப்பங்களிலும் உள்ள பல்வேறு ஆண்களும் பெண்களும் ஒரே இலக்கை நோக்கிச் செய்கின்ற பயணம்தான். சாதாரண உலகியல் மனிதனிடம் கடவுளை வெளிப்படச் செய்வதுதான் எல்லா மதங்களின் நோக்கமுமாகும். அவர்கள் அனைவருக்கும் எழுச்சியை ஊட்டுபவர் ஒரே கடவுள் தான். அப்படியானால் இத்தனை மாறுபாடுகள் எல்லாம் வெளித் தோற்றமே என்கிறான் இந்து. வெவ்வேறு சூழ்நிலைகளுக்கும் பல்வேறு இயல்புகளுக்கும் ஏற்ப தன்னை மாற்றி அமைத்துக்கொள்ளும் ஒரே உண்மையில் இருந்து தான் இந்த மாறுபாடுகள் எழுகின்றன.
ஒரே ஒளிதான் பல்வேறு வண்ணக் கண்ணாடிகளின் மூலம் பல நிறங்களில் வருகிறது. நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள இந்த வேறுபாடுகள் அவசியம். ஆனால், எல்லாவற்றின் மையத்திலும் அதே உண்மைதான் ஆட்சி புரிகிறது. கிருஷ்ணாவதாரத்தின் போது இந்துக்களுக்கு பகவான், ‘முத்து மாலையிலுள்ள முத்துக்களைக் கோக்கின்ற நூல் போல நான் எல்லா மதங்களிலும் இருக்கிறேன். மக்களினத்தை உயர்த்திப் புனிதப்படுத்தும் அசாதாரணமான தூய்மையும் அசாதாரணமான ஆற்றலும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் நான் இருக்கிறேன் என்று அறி’ என்று சொன்னார். அதன் பலன் என்ன? இந்துக்கள் மட்டுமே காப்பாற்றப்படுவார்கள், மற்றவர்கள் காப்பாற்றப் பட மாட்டார்கள் என்று சமஸ்கிருத தத்துவ இலக்கியத்தில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா என்று கண்டு பிடிக்கும்படி நான் உலகத்திற்குச் சவால் விடுகிறேன். ‘நமது ஜாதிக்கும் கோட்பாடுகளுக்கும் அப்பால் கூட நிறை நிலை பெற்றவர்களைக் காண்கிறோம்’ என்கிறார் வியாசர்.

இன்னொன்று: ‘அனைத்து எண்ணங்களிலும் கடவுளையே மையமாகக் கொண்ட இந்து, எப்படி சூன்யவாதம் பேசும் பெளத்தர்களையும், நாத்திகவாதம் பேசும் சமணர்களையும் நம்புவான்?’ பெளத்தர்களோ, சமணர்களோ கடவுளை நம்பி வாழ்வதில்லை. ஆனால் மனிதனை தெய்வமாக்க வேண்டும் என்னும் எல்லா மதங்களுடையவும் மையக் கருத்து இருக்கிறதே, அதுதான் அவர்களுடைய மதங்களின் முழு நோக்கமாகும். அவர்கள் தந்தையைப் பார்த்ததில்லை. ஆனால் மகனைப் பார்த்துள்ளார்கள். மகனைப் பார்த்தவன் தந்தையையும் பார்த்துள்ளான். சகோதரர்களே! இந்து சமயக் கருத்துக்களின் சுருக்கம் இது தான். தன் திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற இந்து தவறியிருக்கலாம். ஆனால் என்றாவது உலகம் தழுவிய மதம் (Universal Religion) என்ற ஒன்று உருவாக வேண்டுமானால், அது இடத்தாலும் காலத்தாலும் எல்லைப் படுத்தப்படாததாக இருக்கவேண்டும். அந்த மதம் யாரைப் பற்றிப் பிரசாரம் செய்கிறதோ, அந்தக் கடவுளைப் போன்று அது எல்லையற்றதாக இருக்க வேண்டும். சூரியன், தன் ஒளிக்கிரணங்களை எல்லார் மீதும் சமமாக வீசுவது போன்று அது கிருஷ்ண பக்தர்கள், கிறிஸ்து பக்தர்கள், ஞானிகள், பாவிகள், எல்லோரையும் சமமாக எண்ண வேண்டும். அது பிராமண மதமாகவோ பெளத்த மதமாகவோ கிறிஸ்தவ மதமாகவோ முகம்மதிய மதமாகவோ இருக்காமல், இவற்றின் ஒட்டு மொத்தமாக இருப்பதுடன், இன்னும் வளர்ச்சியடைய எல்லையற்ற இடம் உள்ளதாக இருக்க வேண்டும். விலங்கினங்களைப் போல உள்ள காட்டு மிராண்டி மக்களிலிருந்து, இவரும் மனிதரா என்று சமுதாயம் பயபக்தியுடன் வணங்கி நிற்கும் அளவுக்கு அறிவாலும் இதயப் பண்பாலும் உயர்ந்து, மனித இயல்புக்கு மேலோங்கி விளங்கும் சான்றோர் வரை, எல்லோருக்கும் இடமளித்து, தன் அளவற்ற கரங்களால் எல்லோரையும் தழுவிக் கொள்ளும் பரந்த மனப்பான்மை உள்ளதாக இருக்க வேண்டும். அந்த மதத்தில் பிற மதத்தினரைத் துன்புறுத்தலும், அவர்களிடம் சகிப்புத் தன்மையற்று நடந்து கொள்ளுதலும் இருக்காது. அது ஆண், பெண் எல்லாரிடமும் தெய்வத்தன்மை இருப்பதை ஏற்றுக் கொள்ளும். மனித இனம் தன் உண்மையான தெய்வீகத் தன்மையை உணர்வதற்கு உதவி செய்வதே அதன் நோக்கமாக இருக்கும். அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும்.
அத்தகைய மதத்தை அளியுங்கள், எல்லா நாடுகளும் உங்களைப் பின்பற்றும். அசோகரின் சபை பெளத்த மத சபையாக இருந்தது. அக்பரது சபை இதை விடச் சற்று உயர்ந்த நோக்கம் கொண்டதாக இருந்தாலும் வீட்டு சபையாகவே இருந்தது. கடவுள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார் என்று உலகம் அனைத்திற்கும் முழக்கம் செய்ய அமெரிக்கா ஒன்றுக்குத் தான் கொடுத்து வைத்திருந்தது.
இந்துக்களுக்கு பிரம்மாவாகவும், சொராஸ்டிரர்களுக்கு அஹுரா-மஸ்தாவாகவும், பெளத்தர்களுக்கு புத்தராகவும், யூதர்களுக்கு ஜெஹோவாவாகவும், கிறிஸ்தவர்களுக்கு பரமண்டலத்தில் இருக்கும் பிதாவாகவும் இருக்கின்ற ஆண்டவன் உங்கள் உன்னதமான நோக்கம் நிறைவேற உங்களுக்கு வலிமை அளிப்பானாக! விண்மீன் கிழக்கிலே எழுந்து மேற்கு நோக்கி நேராகச் சென்றது. சிலவேளைகளில் மங்கலாகவும், சிலபொழுது ஒளிமிக்கதாகவும் உலகத்தைச் சுற்றியது. இப்போது கிழக்குத் திசையிலே சான்போ நதிக்கரையினில் முன்னைவிட ஆயிரம் மடங்கு ஒளியுடன் மறுபடியும் உதயமாகிக் கொண்டிருக்கிறது.
சுதந்திரத்தின் தாயகமாகிய கொலம்பியாவே, நீ வாழ்க! அயலாரின் இரத்தத்தில் கையினைத் தோய்க்காமல், அயலாரைக் கொள்ளையடிப்பது தான் பணக்காரன் ஆகக் குறுக்கு வழி என்று கண்டு பிடிக்காத உனக்குத் தான் சமரசக் கொடி பிடித்து, நாகரிகப் படையின் முன்னணியில் வெற்றி நடை போடும் பெரும் பேறு கொடுத்து வைத்திருந்தது.

4. மதம் இந்தியாவின் அவசரத் தேவையன்று – செப்டம்பர் 20, 1893

நல்ல விமர்சனங்களை ஏற்க கிறிஸ்தவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நான் கூறப்போகும் சிறிய விமர்சனங்களை நீங்கள் பொருட்படுத்த மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அஞ்ஞானிகளின் ஆன்மாக்களைக் காப்பாற்றுவதற்கு, சமயப் பிரசாரகர்களை அனுப்பும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் அவர்களது உடல்களைப் பட்டினியிலிருந்து காப்பாற்ற ஏன் முயலவில்லை? கடுமையான பஞ்சங்களின் போது இந்தியாவில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இருந்தும் கிறிஸ்தவர்களாகிய நீங்கள் ஒன்றும் செய்யவில்லை.
இந்தியா முழுவதிலும் சர்ச்சுகளைக் கட்டுகிறீர்கள். கீழ்த்திசை நாடுகளின் அவசரத் தேவை மதம் அன்று. தேவையான மதம் அவர்களிடம் உள்ளது. இந்தியாவில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மக்கள் தொண்டை வற்றக் கூக்குரலிடுவது உணவுக்காகத் தான். அவர்கள் உணவு கேட்கிறார்கள், நாம் கற்களைக் கொடுக்கிறோம். பசியால் வாடும் மக்களுக்கு மதப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பசியால் துடிப்பவனுக்கு தத்துவ போதனை செய்வது அவனை அவமதிப்பதாகும்.
இந்தியாவில் பணத்திற்காகச் சமயப் பிரசாரம் செய்பவரைச் ஜாதியை விட்டு விலக்கி, முகத்தில் காறித்துப்புவார்கள். வறுமையில் வாடும் எங்கள் மக்களுக்கு உதவி கோரி இங்குவந்தேன். கிறிஸ்துவ நாட்டில் கிறிஸ்தவர்களிடமிருந்து, பிற மதத்தினருக்காக உதவிகிடைப்பது எவ்வளவு கடினமானது என்பதை நன்றாக உணர்ந்து விட்டேன்.

5. புத்த மதம் இந்து மதத்தின் நிறைவு – செப்டம்பர் 26, 1893

நான் பெளத்தன் அல்ல என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனாலும் நான் ஒரு பெளத்தன். சீனாவும் ஜப்பானும் இலங்கையும் அந்த மகானின் உபதேசங்களைப் பின்பற்றுகின்றன. இந்தியாவோ அவரைக் கடவுளின் அவதாரம் என்று போற்றி வணங்குகிறது. நான் பெளத்த மதத்தை விமர்சிக்கப் போவதாகச் சற்று முன் கூறினார்கள். அதன் பொருளை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுளின் அவதாரம் எனக்கூறி நான் வழிபடுபவரை நானே விமர்சிப்பது என்பது என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால் புத்தர் பெருமானை அவரது சீடர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் எங்கள் கருத்து. இந்து மதத்திற்கும் (நான் இந்து மதம எனக்குறிப்பிடுவது வேத மதத்தைத் தான்) இந்நாளில் பெளத்தமதம் என்று கூறப்படுகிறதே அதற்கும் உறவு, யூத மதத்திற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் உள்ள உறவுதான்.
ஏசு கிறிஸ்து ஒரு யூதர். சாக்கிய முனிவர் ஓர் இந்து. யூதர்கள் கிறிஸ்துவை ஒதுக்கித் தள்ளியது மட்டுமின்றி, அவரைச் சிலுவையிலும் அறைந்தார்கள். இந்துக்கள் சாக்கிய முனிவரைக் கடவுள் என்று ஏற்று வணங்குகிறார்கள். இந்துக்களாகிய நாங்கள் எடுத்துக் கூற விரும்பும், தற்கால பெளத்த மதத்திற்கும் புத்தபகவானின் உண்மை உபதேசத்திற்கும்உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால், சாக்கிய முனிவர் எதையும் புதிதாக உபதேசிக்க வரவில்லை என்பது தான். அவரும் ஏசுநாதரைப் போன்று, நிறைவு செய்யவே வந்தார், அழிக்க வரவில்லை.
ஏசுநாதர் விஷயத்தில், பழைய மக்களாகிய யூதர்கள் தாம் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. புத்தர் விஷயத்தில், அவரைப் பின்பற்றியவர்களே அவரது உபதேசங்களின் கருத்தை உணரவில்லை. பழைய ஏற்பாடு நிறைவு செய்யப்படுவதை யூதர்கள் புரிந்து கொள்ளாதது போன்று, இந்து மத உண்மைகள் நிறைவு செய்யப்படுவதை பெளத்தர்கள் அறிந்து கொள்ளவில்லை. மீண்டும் சொல்கிறேன்: சாக்கிய முனிவர் இந்துமதக் கொள்கைகளை அழிக்க வரவில்லை. ஆனால் இந்து மதத்தின் நிறைவு, அதன் சரியான முடிவு. அதன் சரியான வளர்ச்சி எல்லாம் அவரே.

இந்து மதம் இரு பாகங்களாகப் பிரிந்து உள்ளது. ஒன்று கர்ம காண்டம், மற்றொன்று ஞான காண்டம். ஞான காண்டத்தைத் துறவிகள் சிறப்பாகக் கருதுகின்றனர். இதில் ஜாதி கிடையாது. மிக உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவரும் மிகத் தாழ்ந்த ஜாதியில் பிறந்தவரும் துறவியாகலாம். அப்போது அந்த இரண்டு ஜாதிகளும் சமமாகி விடுகின்றன.
மதத்திற்கு ஜாதியில்லை. ஜாதி என்பதுவெறும் சமுதாய ஏற்பாடு. சாக்கிய முனிவரே ஒரு துறவி தான். வேதங்களில் மறைந்து கிடந்த உண்மைகளை வெளிக் கொணர்ந்து அவற்றை உலகம் முழுவதற்கும் தாராள மனத்துடன் பரவச் செய்த பெருமைக்கு உரியவர் அவர். உலகத்திலேயே முதன் முதலாக சமயப் பிரசாரத்தைச் செயல்படுத்தியவர், ஏன், மதமாற்றம் என்ற கருத்தை உருவாக்கியவரே அவர்தான்.
எல்லாரிடமும், குறிப்பாக, பாமரர்களிடமும் ஏழை எளியவரிடமும், ஆச்சரியப்படும் வகையில் பரிவு காட்டிய பெரும் புகழுக்கு உரியவர் அவர். அவரது சீடர்களுள் சிலர் பிராமணர்கள். புத்தர் தேசம் செய்த காலத்தில், சமஸ்கிருதம் பேச்சு மொழியாக இல்லை. பண்டிதர்களின் நூல்களில் மட்டுமே அந்த மொழி இருந்தது. புத்தரின் பிராமணச் சீடர்களுள் சிலர், அவரது உபதேசங்களை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்க விரும்பினர். அதற்கு அவர், ‘நான் ஏழைகளுக்காக வாழ்பவன், மக்களுக்காக வாழ்பவன். என்னை மக்களின் மொழியிலேயே பேச விடுங்கள்’ என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அதனால் தான் இன்றளவும், அவரது போதனைகளில் பெரும் பகுதி, அந்நாளைய பேச்சு மொழியிலேயே உள்ளது.
தத்துவ சாஸ்திரத்தின் நிலை என்னவாகவும் இருக்கட்டும், மெய்ஞ்ஞான நிலை என்னவாகவும் இருக்கட்டும், உலகத்தில் மரணம் என்ற ஒன்று உள்ளவரையில், மனித இதயத்தில் பலவீனம் என்புது இருக்கும் வரையில், மனிதனின் பலவீனம் காரணமாக,அவன் இதயத்திலிருந்து எழும் கூக்குரல் இருக்கும் வரை, கடவுள் மீது நம்பிக்கைஇருந்தே தீரும்.
தத்துவ சாஸ்திரத்தைப் பொறுத்தவரை, புத்த தேவரின் சீடர்கள் நிலையான மலைபோன்ற வேதங்களோடு மோதிப் பார்த்தார்கள். ஆனால் அவற்றை அழிக்க முடியவில்லை. மற்றொரு புறம் அவர்கள் ஆண், பெண், அனைவரும் பாசத்தோடு பற்றிக் கொண்டிருந்த அழிவற்ற இறைவனை நாட்டினின்று எடுத்துச் சென்று விட்டார்கள். அதன் பயன், பெளத்தமதம் இந்தியாவில் இயற்கை மரணம் எய்தியது. அது பிறந்த நாட்டிலேயே, பெளத்தன் என்று கூறிக்கொள்ள ஒருவர் கூட இன்று இல்லை.
அதே வேளையில், பிராமண சமுதாயத்திற்குச் சில இழப்புகள் ஏற்பட்டன. சீர்திருத்தும் ஆர்வம், எல்லாரிடமும் வியக்கத்தக்க வகையில் பரிவும் இரக்கமும் காட்டல், பக்குவமாய் மாற்றியமைக்கும இங்கிதப் பாங்கு முதலிய பெளத்தப் பண்புகளை பிராமண சமுதாயம் இழந்தது. இந்தப் பண்புகள் தாம் இந்தியாவைப் பெருமையுறச் செய்திருந்தது. அந்நாளைய இந்தியாவைப் பற்றி, ஒரு கிரேக்க வரலாற்று ஆசிரியர், ‘பொய் சொல்லும் இந்துவையோ, கற்பிழந்த இந்துப் பெண்ணையோ நான் பார்க்கவில்லை’ என்று கூறுகிறார்.
புத்த மதமின்றி இந்து மதம் வாழ முடியாது. அவ்வாறே இந்து மதமின்றி புத்த மதமும் வாழ முடியாது. பிரிவின் காரணமாக என்ன நேர்ந்ததென்று பாருங்கள்! பிராமணர்களின் நுண்ணறிவும், தத்துவ ஞானமுமின்றி பெளத்தர்கள் நிலைத்து வாழ முடியாது. பெளத்தர்களின் இதயமின்றி பிராமணர்களும் வாழ முடியாது. பெளத்தர்களும் பிராமணர்களும் பிரிந்ததுதான் இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம். அதனால் தான் இந்தியா முப்பது கோடி பிச்சைக்காரர்களின் இருப்பிடமாகி விட்டது. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நாடு பிடிப்பவர்களின் அடிமையாக இருக்கிறது. ஆகவே பிராமணனின் அற்புதமான நுண்ணறிவையும், புத்தரின் இதயம், உயர்ந்த உள்ளம், வியப்பிற்குரிய மனிதாபிமானம் இவற்றையும் ஒன்று சேர்ப்போமாக!

6. நிறைவு நாள் உரை – செப்டம்பர் 27, 1893

சர்வசமயப் பேரவை சிறப்பாக நிறைவுற்று விட்டது. இதை உருவாக்க முயற்சி செய்தவர்களுக்கு இறைவன் துணை நின்று, அவர்களுடைய தன்னலமற்ற உழைப்பிற்கு வெற்றி வாகை சூட்டியுள்ளார்.
இந்த அற்புதமான கனவை, முதலில் கண்டு, பிறகு அதை நனவாக்கிய, பரந்த இதயமும், உண்மையில் பற்றும் கொண்ட உத்தமர்களுக்கு என் நன்றி, என் மீது ஒரு மித்த அன்பு காட்டியதற்காகவும், சமயங்களுக்கு இடையே நிலவுகின்ற அதிருப்தியைத் தணிப்பதற்காகக் கூறப்பட்ட கருத்துக்களைப் பாராட்டியதற்காகவும் அறிவு சார்ந்த சபையினருக்கு என்நன்றி. இந்த இன்னிசையில் அவ்வப்போது சில அபசுவரங்கள் கேட்டன. அவர்களுக்கு என் சிறப்பான நன்றி. ஏனெனில் அவர்கள் தங்கள் மாறுபட்ட ஒலியால், இன்னிசையை மேலும் இனிமை ஆக்கினர்.
சமய ஒருமைப் பாட்டிற்குரிய பொது நிலைக்களம் பற்றி திகம் பேசப்பட்டது. இதைப் பற்றி என்சொந்தக் கோட்பாட்டை இப்போது நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இந்த ஒருமைப்பாடு ஏதாவது ஒருமதத்தின் வெற்றியாலும், மற்ற மதங்களின் அழிவாலும் கிட்டும் என்று இங்குள்ள யாரேனும் நம்பினால், அவரிடம் நான், ‘சகோதரா! உனது நம்பிக்கை வீண்’ என்று சொல்லிக் கொள்கிறேன். கிறிஸ்தவர் இந்துவாகி விட வேண்டும் என்பது என் எண்ணமா? கடவுள் தடுப்பாராக! இல்லை, இந்துவோ பெளத்தரோ கிறிஸ்தவராக வேண்டுமென எண்ணுகிறேனா? கடவுள் தடுப்பாராக!
விதை தரையில் ஊன்றப்பட்டு, மண்ணும் காற்றும் நீரும் அதைச் சுற்றி போடப்படுகின்றன. விதை மண்ணாகவோ, காற்றாகவோ, நீராகவோ ஆகிவிடுகிறதா? இல்லை. அது செடியாகிறது. தனது வளர்ச்சி விதிக்கு ஏற்ப அது வளர்கிறது. காற்றையும் மண்ணையும் நீரையும் தனதாக்கிக் கொண்டு, தனக்கு வேண்டிய சத்துப் பொருளாக மாற்றி, ஒருசெடியாக வளர்கிறது. மதத்தின் நிலையும் இதுவே. கிறிஸ்தவர் இந்துவாகவோ பெளத்தராகவோ மாற வேண்டியதில்லை. அல்லது இந்து, பெளத்தராகவோ கிறிஸ்தவராகவோ மாற வேண்டியது இல்லை. ஒவ்வொருவரும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களைத் தனதாக்கிக் கொண்டு, தன் தனித்தன்மையைப் பாதுகாத்துக் கொண்டு, தன் வளர்ச்சி விதியின் படி வளரவேண்டும்.
இந்த சர்வசமயப்பேரவை உலகத்திற்கு எதையாவது எடுத்துக்காட்டியுள்ளது என்றால் அது இதுதான்: புனிதம், தூய்மை, கருணை இவை உலகின் எந்த ஒரு பிரிவுடையதின் தனிச் சொத்து அல்ல என்பதையும், மிகச்சிறந்த ஒவ்வொரு சமயப்பிரிவும் பண்புள்ள ஆண்களையும் பெண்களையும் தோற்றுவித்து இருக்கிறது என்பதையும் நிரூபித்துள்ளது. இந்த சாட்சியங்களுக்கு முன்பு, தம் மதம் மட்டும் தான் தனித்து வாழும், மற்ற மதங்கள்அழிந்துவிடும் என்று யாராவது கனவு காண்பார்களானால் அவர்களைக் குறித்து நான் என் இதய ஆழத்திலிருந்து பச்சாதாபப் படுவதுடன், இனி ஒவ்வொரு மதத்தின் கொடியிலும், ‘உதவி செய், சண்டை போடாதே’, ‘ஒன்றுபடுத்து, அழிக்காதே’, ‘சமரசமும் சாந்தமும் வேண்டும், வேறுபாடு வேண்டாம்’ என்று எழுதப்படும் என்றுஅவருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

Share this:

சுவாமி விவேகானந்தர் கதைகள் – சமுதாய உணர்வில் போலித்தனம் கூடாது!

சமுதாய நலனில் ஒவ்வொருவருக்கும் உண்மையான ஈடுபாடு இருக்க வேண்டும். சமுதாய உணர்வுடன் ஒவ்வொருவரும் நாட்டு நலனுக்குத் தங்களால் இயன்ற தொண்டு செய்ய வேண்டும். சமுதாயத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்று பேசினால் மட்டும் போதுமா? அது செயலிலும் இருக்க வேண்டும் என்பதை, சுவாமி விவேகானந்தர் ஒரு கதை மூலம் சொல்லியிருக்கிறார். அந்தக் கதையை நாம் இப்போது பார்க்கலாமா? அரசன் ஒருவன் இருந்தான். அவனுடைய அரசவையில் அதிகாரிகள் பலர் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், நான்தான் அரசனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கிறேன். நான் அரசனுக்காக என் உயிரையும் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் அரசவைக்கு துறவி ஒருவர் வந்தார். அரசன் அவரிடம், இந்த அளவுக்கு ஈடுபாடு உடைய அதிகாரிகளைப் பெற்ற அரசன் என்னைப்போல் வேறு யாரும் இருக்க இயலாது என்று கூறினான். துறவி புன்சிரிப்புடன், நீ சொல்வதை நான் நம்பவில்லை என்றார். அரசன், நீங்கள் வேண்டுமானால் அதைச் சோதித்துக்கொள்ளலாம் என்றான். சிறிய ஒரு சோதனை வைத்தார் துறவி – அரசனின் ஆயுளும் ஆட்சியும் பல்லாண்டுகள் நீடிப்பதற்கு, நான் பெரிய ஒரு வேள்வி செய்யப் போகிறேன். அதற்குத் தேவையான பாலுக்காக ஓர் அண்டா வைக்கப்படும். அதில் அதிகாரிகள் ஒவ்வொருவரும் இரவில் ஒரு குடம் பால் ஊற்ற வேண்டும் என்று துறவி கூறினார். அரசன் புன்முறுவலுடன், இதுதானா சோதனை? என்று இகழ்ச்சியாகக் கேட்டான்.

பின்னர் அரசன், அதிகாரிகளை அழைத்து நடக்க இருப்பதைக் கூறினான். அந்த யோசனைக்கு அதிகாரிகள் அனைவரும் தங்களின் மனபூர்வமான சம்மதத்தைத் தெரிவித்தனர். நள்ளிரவில் எல்லோரும் அந்த அண்டாவின் அருகில் சென்று, தங்கள் குடங்களில் இருந்ததை அதற்குள் ஊற்றினார்கள். மறுநாள் காலையில் பார்த்தபோது அண்டா நிறையத் தண்ணீர்தான் இருந்தது! திடுக்கிட்ட அரசன் அதிகாரிகளை அழைத்து விசாரித்தான். அப்போது, எல்லோரும் பாலைத்தான் ஊற்றப் போகிறார்கள். நான் ஒருவன் மட்டும் அதில் தண்ணீர் ஊற்றினால், அது மற்றவர்களுக்கு எப்படித் தெரியப்போகிறது? என்று ஒவ்வொருவரும் நினைத்து, எல்லோரும் தண்ணீரையே ஊற்றினார்கள் என்பது தெரிய வந்தது. துரதிர்ஷ்டவசமாக நம்மில் பலருக்கும் இதே எண்ணம்தான் இருக்கிறது. இந்தக் கதையில் வரும் அதிகாரிகள் செய்தது போலவே, நாமும் நம் பங்குக்கு உரிய வேலையைச் செய்து வருகிறோம். உலகத்தில் சமத்துவக் கருத்து நிறைந்திருக்கும்போது, நான் ஒருவன் மட்டும் கொண்டாடும் தனிச்சலுகை யாருக்குத் தெரியப் போகிறது? என்கிறார் ஒருவர். இப்படித்தான் பணக்காரர்களும் கொடுங்கோலர்களும் சொல்கிறார்கள். எல்லா மக்களையும் சமமாக நினைக்கும் ஞானத்தைப் பெறுவதற்கு நாம் முயற்சி செய்வோம்!

சுவாமி விவேகானந்தர் கதைகள் – மனிதநேயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு!

1893-ஆம் ஆண்டு அமெரிக்காவில், சிகாகோ நகரத்தில் சர்வ சமயப் பேரவை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு சுவாமி விவேகானந்தர் இந்துமதம் பற்றிச் சொற்பொழிவுகள் செய்தார். அவர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றார். அப்போது அவர் பிரபலமாகவில்லை. அந்த நிலையில் ஒரு சமயம் விவேகானந்தர் ஓர் ஊரில் தங்கினார். அவரைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். அவர் அவர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் இவ்விதம் கூறியிருக்கிறார்: நம்புவதற்கே உங்களுக்குக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் மூன்று நாள்கள் இரவும் பகலும் எனக்கு ஒரு விநாடிகூட ஓய்வே கிடைக்கவில்லை. தூக்கம், உணவு எவையும் அறவே எனக்கு இல்லாமற் போய்விட்டன. யாரும் அதைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை. மக்கள் வந்துகொண்டே இருந்தார்கள். நானும் அவர்களுடன் பேசிக்கொண்டே இருந்தேன். மூன்றாம் நாள் இரவு வந்தது. அநேகமாக எல்லோரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். நான் மட்டும் தனியாக இருந்தேன். அப்போது தாழ்ந்த சாதியைச் சேர்ந்த, செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவன் என்னிடம் வந்தான்.

அவன் என்னிடம், சுவாமிஜி! நீங்கள் மூன்று நாள்களாக உணவு, தூக்கம் எதுவுமே இல்லாமல் பேசிக்கொண்டிருந்ததை நான் கவனித்தேன். அதனால் என் மனம் வேதனையில் துடிக்கிறது. பசியும் களைப்பும் உங்களுக்கும் இருக்கத்தானே செய்யும்! மூன்று நாள்களாக ஒரு டம்ளர் தண்ணீர்கூட நீங்கள் குடிக்கவில்லையே! என்று பரிவுடன் கூறினான். அவனது அன்பு என் மனத்தை நெகிழச் செய்தது. நான் அவனிடம், சாப்பிடுவதற்கு நீ எனக்கு ஏதாவது தருகிறாயா? என்று கேட்டேன். அதற்கு அவன், நீங்கள் சாப்பிடுவதற்கு ஏதாவது தர வேண்டும் என்றுதான் என் மனம் ஏங்குகிறது. ஆனால் என்ன செய்வேன்? நான் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன்; சக்கிலியன். நான் சப்பாத்தி செய்து உங்களுக்குத் தர முடியாது. கோதுமை மாவும் மற்ற பொருள்களும் நான் உங்களுக்குக் கொண்டுவந்து தருகிறேன். நீங்களே சமைத்துச் சாப்பிடுங்கள் என்று கேட்டுக்கொண்டான். நான் அவனிடம், பரவாயில்லை. நீயே சமையல் செய்துகொண்டு வா. நான் சாப்பிடுகிறேன் என்றேன். இவ்விதம் நான் கூறியதைக் கேட்டு அவன் நடுங்கிவிட்டான்.

காரணம், சக்கிலியனான அவன் ஒரு துறவிக்கு உணவளித்தது மற்றவர்களுக்குத் தெரிந்தால் தண்டிக்கப்படுவான். ஏன், நாடு கடத்தவும் செய்வார்கள். ஆனால் நான் அவனைச் சமாதானப்படுத்தி, உனக்குத் தண்டனை கிடைக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று உறுதியளித்தேன். அவன் எனது உறுதியை அவ்வளவாக நம்பவில்லை. இருந்தாலும் அவனுக்கு என்மீதிருந்த அன்பு காரணமாகச் சப்பாத்தி செய்து கொண்டு வந்தான். அதை நானும் சாப்பிட்டேன். தேவர்களுக்குத் தலைவனான தேவேந்திரன் ஒரு தங்கக்குவளையில் தேவாமிர்தத்தை எனக்குத் தந்திருந்தால் – அதுகூட அப்போது அவ்வளவு ருசியாக இருந்திருக்காது என்றே எனக்குத் தோன்றியது. என் இதயம் அன்பாலும் நன்றியாலும் நிறைந்தது. என் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. இதற்கிடையில், விவேகானந்தர் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவன் கொடுத்த உணவைச் சாப்பிடுவதைப் பார்த்த உயர் சாதியினர் சிலர் கோபம் கொண்டார்கள். அதை அவர்கள் விவேகானந்தரிடமே தெரிவித்தார்கள். அவர்கள் கூறியதைப் பொறுமையாகக் கேட்டார் விவேகானந்தர். பிறகு அவர்களைப் பார்த்துக் கூறினார்: நீங்கள் என்னை மூன்று நாள்கள் தொடர்ந்து பேச வைத்தீர்கள்!

இடையில் நான் ஏதாவது சாப்பிட்டேனா, ஓய்வெடுத்தேனா என்று ஒருமுறைகூட நீங்கள் யாரும் கவலைப்படவில்லை. நீங்கள் பெரிய மனிதர்கள், உயர்ந்த சாதியினர்! ஆனால் இங்கே பாருங்கள், தனக்குத் தண்டனை கிடைக்கும்! என்று தெரிந்திருந்தும், மனிதநேயம் என்ற ஒரே காரணத்தால் அவன் எனக்கு உணவு தந்தான். அவனைத் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன் என்று நீங்கள் ஒதுக்குகிறீர்களே! இது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? சில நாட்களில் விவேகானந்தருக்கு கேத்ரி மன்னருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அப்போது விவேகானந்தர், செருப்புத்தைக்கும் தொழிலாளி தனக்கு உதவியதைப் பற்றி மன்னரிடம் தெரிவித்தார். எனவே மன்னர், உடனடியாகச் செருப்புத்தைக்கும் தொழிலாளியைத் தன் அரண்மனைக்கு வரவழைத்தார். தொழிலாளி, என்னை மன்னர் அழைத்திருக்கிறாரே! என் தவறுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ! என்று பயந்துகொண்டே வந்தான். ஆனால் கேத்ரி மன்னர் அவனுடைய பயத்தைப் போக்கியதுடன், அவனுடைய செயலைப் புகழ்ந்து பாராட்டினார். மேலும் அரசர் அவனுக்குப் பொன்னும் பொருளும் தாராளமாகக் கொடுத்தனுப்பினார்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – சுயமரியாதை வேண்டும்!

ஒரு நாள் புவனேசுவரிதேவி தம் மகன் நரேந்திரனிடம், மகனே! நீ என்றும் தூயவனாக இரு. சுயமரியாதையுடன் இரு. அதே சமயத்தில் மற்றவர்களின் சுயமரியாதைக்கு மதிப்புக் கொடுத்து வாழவும் கற்றுக்கொள். மென்மையானவனாகவும், சமநிலை குலையாதவனாகவும் இரு; ஆனால் தேவையேற்படும்போது, உன் இதயத்தை இரும்பாக்கிக்கொள்ளவும் தயங்காதே! என்று கூறினார். தம் தாய் கூறிய இந்த அறிவுரைகளை, நரேந்திரர் துறவறம் மேற்கொண்டு சுவாமி விவேகானந்தர் ஆனபிறகும் மறவாமல் பின்பற்றினார். தன்மானம், சுயமரியாதை உணர்வு விவேகானந்தரிடம் முழுமையாக இருந்தது. தம்மைப் போலவே இந்திய மக்களும் தன்மானத்துடன், இணையற்ற பெருமைக்குரிய தங்கள் பாரம்பரியங்களை அறிந்தவர்களாக வாழ வேண்டும் என்று அவர் விரும்பினார். இது தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியை இங்கு இப்போது நாம் பார்க்கப் போகிறோம்.

ஒரு முறை விவேகானந்தரும் மற்றோர் அன்பரும் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது டிக்கெட் பரிசோதகர் அங்கு வந்தார். அவர் வெள்ளைக்காரர். அவர் அன்பரிடம், நீங்கள் இந்தப் பெட்டியில் பயணம் செய்ய முடியாது! என்று முரட்டுத்தனமாகக் கூறி, அன்பரை அந்தப் பெட்டியிலிருந்து வெளியேறும்படி வற்புறுத்தினார். மேலும் அந்த வெள்ளைக்காரர், தமக்குச் சாதகமாக ஏதோ ஒரு ரயில்வே சட்டத்தையும் கூறினார். அன்பரும் ரயில்வேயில் பணி புரியும் ஒருவர்தாம். அன்பர் டிக்கெட் பரிசோதகரிடம், நீங்கள் கூறுவதுபோல் ரயில்வேயில் அப்படி ஒரு சட்டம் இல்லை என்று கூறி, அந்த ரயில் பெட்டியிலிருந்து வெளியேற மறுத்தார். இவ்விதம் தம்மை ஓர் இந்தியன் எதிர்ப்பதைப் பார்த்து, அந்த வெள்ளைக்காரருக்குக் கோபம் தலைக்கேறியது. கடைசியில் இந்தப் பிரச்னையில் விவேகானந்தர் தலையிட்டார். அதுவும் வெள்ளைக்காரரின் கோபத்தைத் தணிக்கவில்லை. அவர் கோபத்துடன் கடுமையான குரலில் விவேகானந்தரிடம் இந்தியில் பேசினார்.

வெள்ளைக்காரர்: நீ ஏன் இதில் தலையிடுகிறாய்? விவேகானந்தர்:முதல் வகுப்பில் பயணம் செய்யும் ஒருவரை நீ என்று நீங்கள் மரியாதை இல்லாமல் அழைக்கிறீர்களே! முதலில் நீங்கள் மற்றவர்களிடம் மரியாதையாகப் பழகுவதற்குக் கற்றுக்கொள்ளுங்கள்.

வெள்ளைக்காரர்:தவறுதான், பொறுத்துக்கொள்ளுங்கள். எனக்கு இந்தி சரியாகத் தெரியாது. இவன் (This man) …

விவேகானந்தர் (குறுக்கிட்டு): உங்களுக்கு இந்தி சரியாகத் தெரியாது என்று சொல்கிறீர்கள்! ஆனால் இப்போது உங்களுக்கு உங்கள் தாய்மொழியான ஆங்கிலமும் சரியாகத் தெரியாது என்று தெரிகிறது. இவன் (This man) என்று அல்ல, இவர் (This gentleman) என்று சொல்ல வேண்டும். தமது தவற்றை உணர்ந்த பரிசோதகர், பெட்டியைவிட்டு வெளியேறினார். பின்னர் ஒரு சமயம் விவேகானந்தர், கேத்ரி மன்னரின் தனிச்செயலாளர் ஜக்மோகனிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் மேற்கூறிய நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பின்வருமாறு கூறினார்: வெள்ளைக்காரர்களுடன் பழகும்போது நாம் நமது சுயமரியாதையை விட்டுக் கொடுக்கக் கூடாது. உரியவருக்கு உரிய மரியாதை கொடுத்துப் பழகாததால்தான் வெள்ளைக்காரர்கள் நம்மை அவமதிக்கிறார்கள். நமக்கு சுயமரியாதை வேண்டும், பிறருக்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – எடுத்த காரியம் யாவினும் வெற்றி!

நரேந்திரன் பதினோரு வயது சிறுவன். தலைமைப் பண்பு அவனிடம் இயல்பாகவே இருந்தது. எனவே தன் வயதுடைய சிறுவர்களுக்கு எப்போதும் அவன்தான் தலைவனாக இருந்தான். கொல்கத்தாவுக்கு சிராபிஸ் என்ற ஒரு போர்க்கப்பல் வந்தது. அதை மக்கள் சென்று பார்த்தார்கள். நரேந்திரனும் அவனது நண்பர்களும், அந்தப் போர்க்கப்பலைத் தாங்களும் சென்று பார்க்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினார்கள். நரேந்திரன் விசாரித்தபோது, சிராபீஸ் கப்பலைப் பார்க்க வேண்டுமானால், அதற்கு ஆங்கிலேய அதிகாரி ஒருவரிடம் முன்அனுமதி சீட்டு பெற வேண்டும் என்று தெரிந்தது. எனவே நரேந்திரன் உரிய விண்ணப்படிவத்துடன், ஆங்கிலேய அதிகாரியைச் சந்திப்பதற்குச் சென்றான். ஆங்கிலேய அதிகாரியின் அலுவலகம் ஒரு கட்டிடத்தின் மாடியில் இருந்தது. அவரைச் சந்திக்க வேண்டும் என்றால், மாடிப்படிகளில் ஏறிச் செல்ல வேண்டும்.

மாடிப்படி அருகில் காவல்காரன் ஒருவன் நின்றிருந்தான். அங்கு அவன் அனுமதித்தால்தான், மக்கள் மாடிப்படியில் ஏறிச் சென்று ஆங்கிலேய அதிகாரியைச் சந்திக்க முடியும். எனவே காவல்காரனிடம் நரேந்திரன், சிராபீஸ் போர்க்கப்பலை நானும் என் நண்பர்களும் சென்று பார்க்க விரும்புகிறோம். அதற்கு ஆங்கிலேய அதிகாரியைச் சந்தித்து அனுமதி சீட்டு பெறுவதற்காக வந்திருக்கிறேன் என்று தெரிவித்துக்கொண்டான். காவல்காரன், நரேந்திரன் சிறுவன் என்பதால், அவனை மாடிப்படி ஏறிச் செல்வதற்கே அனுமதிக்கவில்லை. காவல்காரனின் அனுமதியில்லாமல் மாடிப்படிகளில் ஏறிச் செல்லவும் முடியாது, ஆங்கிலேய அதிகாரியைச் சந்திக்கவும் முடியாது. இப்போது என்ன செய்வது? என்று யோசித்தான் நரேந்திரன். சரி… மாடியில் இருக்கும் ஆங்கிலேய அதிகாரியைச் சந்திப்பதற்கு, இங்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா? பார்க்கலாம் என்ற எண்ணத்தில் அவன் கட்டிடத்தைச் சுற்றி வந்தான். நரேந்திரனின் எண்ணம் வீண் போகவில்லை. கட்டிடத்தின் பின்னால், பொதுமக்களின் பார்வை படாத இடத்தில் சிறிய ஒரு படிக்கட்டு இருந்தது. அதில் நரேந்திரன் ஏறிச் சென்று, அங்கிலேய அதிகாரியைச் சந்தித்து தன் வேண்டுகோளைத் தெரிவித்தான்.

ஆங்கிலேய அதிகாரி நரேந்திரன் எதிர்பார்த்தபடியே, அவனும் அவனுடைய நண்பர்களும் சிரபீஸ் போர்க்கப்பலைச் சென்று பார்ப்பதற்கு அனுமதிசீட்டு கொடுத்தார். நரேந்திரன் அங்கு வந்த வேலை நல்லவிதமாக முடிந்தது. பிறகு நரேந்திரன், காவல்காரன் தன்னைத் தடுத்த முன்படிக்கட்டு வழியாகத் திரும்பி வந்தான். நரேந்திரனைப் பார்த்த காவல்காரன், இந்தச் சிறுவன் மாடிக்கு எப்படிச் சென்றான்? என்று நினைத்தான். எனவே அவன் நரேந்திரனிடம், நீ எப்படி மாடிக்குச் சென்றாய்? என்று ஆச்சரியத்துடன் வினவினான். அதற்கு நரேந்திரன், நான் ஒரு மந்திரவாதி! என்று புன்சிரிப்புடன் பதிலளித்தான். இந்த நரேந்திரன் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் ஆனார். அவர் உலகின் பல நாடுகளுக்குச் சென்று, இந்தியாவின் பெருமையை நிலைநிறுத்தினார். எல்லையற்ற வலிமையும், எல்லையற்ற ஞானமும், வெல்ல முடியாத ஆற்றலும் உனக்குள்ளேயே குடிகொண்டிருப்பதை நீ உணர முடிந்தால் – நீ அந்த ஆற்றலை வெளியே கொண்டுவர முடியுமானால் – நீயும் என்னைப்போல் ஆக முடியும் என்று சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – விவேகானந்தர் ஒரு சாதாரணத் துறவியல்ல!

சுவாமி விவேகானந்தருக்கு அப்போது இருபத்தி எட்டு வயது. அவர், ராஜஸ்தான் அபு மலையில் பாழடைந்த ஒரு குகையில் தங்கித் தவம் செய்துகொண்டிருந்தார். அங்கு மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை. ஒரு நாள் அவர் மாலையில் உலவச் சென்றார். அங்கு அவரை அரசாங்க வழக்கறிஞரான முஸ்லிம் ஒருவர் சந்தித்தார். அவரை விவேகானந்தரின் கம்பீரமான தோற்றம் பெரிதும் ஈர்த்தது. எனவே வழக்கறிஞர் தாமாகவே விவேகானந்தரிடம் சென்று பேசினார். அவ்விதம் பேசியபோது அவர், இவர் ஒரு சாதாரண துறவியல்ல; அறிவிலும் ஆன்மிகத்திலும் மிகவும் உயர்ந்தவர் என்று சில நிமிடங்களில் புரிந்துகொண்டார். அதன்பிறகு முஸ்லிம் வழக்கறிஞர், அடிக்கடி விவேகானந்தரைச் சந்தித்து உரையாடினார். ஒரு நாள் அவர் விவேகானந்தரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, சுவாமிஜி, நான் உங்களுக்கு எந்த விதத்திலாவது உதவி செய்ய முடியுமா? என்று பணிவுடன் கேட்டுக்கொண்டார்.

அதற்கு விவேகானந்தர், இப்போது மழைக்காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்தக் குகைக்குக் கதவுகள் இல்லை. எனவே மழை பெய்தால் குகைக்குள் தண்ணீர் வந்து தேங்கிவிடும். நீங்கள் விரும்பினால் இந்தக் குகைக்குக் கதவுகள் செய்து கொடுங்கள் என்றார். அதைக் கேட்ட வழக்கறிஞர், சுவாமிஜி, நீங்கள் எனக்கு அத்தகைய ஒரு வாய்ப்புக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி. இந்தக் குகைக்குக் கதவுகள் போட்டாலும்கூட இந்த இடம் மிகவும் வசதியற்றது. நீங்கள் ஏன் இங்கே இருக்க வேண்டும்? ஆதலால் என்னுடைய பணிவான ஒரு வேண்டுகோளை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்: எனக்குப் பெரிய ஒரு பங்களா இருக்கிறது. அங்கே நான் ஒருவன்தான் தனியாக வாழ்ந்து வருகிறேன். உங்களுக்குச் சம்மதம் என்றால், நீங்கள் அந்த பங்களாவில் வந்து தங்கலாம் என்று கூறினார். விவேகானந்தர் வழக்கறிஞரின் அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.

மேலும் வழக்கறிஞர், ஆனால் சுவாமிஜி! நான் ஒரு முஸ்லிம். எனவே உங்கள் உணவிற்கு நான் தனியாக ஏற்பாடு செய்து தருகிறேன் என்றும் தெரிவித்துக்கொண்டார். விவேகானந்தர், வழக்கறிஞர் உணவு பற்றி கூறியதைப் பொருட்படுத்தவில்லை. அவர் வழக்கறிஞருடன் அவரது பங்களாவிற்குச் சென்றார். அங்கு விவேகானந்தருக்குப் பலர் அறிமுகமானார்கள். அவர்களில் ஜக்மோகன் என்பவரும் ஒருவர். அவர் ராஜஸ்தானைச் சேர்ந்த கேத்ரி மன்னரின் தனிச் செயலாளராக இருந்தார். ஜக்மோகன் வந்தபோது, விவேகானந்தர் வெறும் கௌபீனம் மட்டும் அணிந்து தூங்கிக்கொண்டிருந்தார். அந்த நிலையில் விவேகானந்தரைப் பார்த்ததும் ஜக்மோகன், ஓ! இவர் பத்தோடு ஒன்று பதினொன்று என்ற வகையைச் சேர்ந்த ஒரு சாதாரண துறவி! போக்கிரி, திருட்டுக் கூட்டம், ஏமாற்றுக் கும்பல் போன்றவற்றைச் சேர்ந்த ஒருவர்! என்று தமக்குள் நினைத்துக்கொண்டார். விவேகானந்தர் தூக்கம் கலைந்து கண் விழித்தார். உடனே ஜக்மோகன் முதல் கேள்வியாக அவரிடம், சுவாமிஜி! நீங்கள் ஓர் இந்துத் துறவி. அப்படியிருக்கும்போது முஸ்லிம் ஒருவருடன் தங்கியிருக்கிறீர்களே! அது எப்படி? உங்கள் உணவை அவர் அடிக்கடி தொட நேரிடுமே! என்று வினவினார்.

இந்தக் கேள்வி விவேகானந்தருக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே அவர் நெருப்புச்சுடர்கள் தெறித்துக்கிளம்புவதுபோல் பேசினார்: நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நான் ஒரு துறவி. உங்கள் சமுதாயக் கட்டுப்பாடுகள் எல்லாவற்றையும் நான் கடந்தவன். நான் ஒரு துப்புரவுத் தொழிலாளியுடன்கூட அமர்ந்து உணவு உட்கொள்ளலாம். அதற்காக எனக்கு இறைவனிடம் பயமில்லை; ஏனென்றால் அவர் அதை அனுமதிக்கிறார். எனக்கு சாஸ்திரங்களிடமும் பயமில்லை; ஏனென்றால் அவையும் அதை அனுமதிக்கின்றன. ஆனால் நான் உங்களுக்குத்தான் பயப்படுகிறேன், இந்தச் சமுதாயத்திற்குத்தான் பயப்படுகிறேன். உங்களுக்கு இறைவனைப் பற்றியும் தெரியாது, சாஸ்திரங்களைப் பற்றியும் எதுவும் தெரியாது. நான் எங்கும் இறைவனைப் பார்க்கிறேன்; மிகவும் சாதாரண ஓர் உயிரிடம்கூட இறைவனே நிறைந்திருப்பதைப் பார்க்கிறேன்.

எனக்கு உயர்ந்தது, தாழ்ந்தது என்று எதுவும் கிடையாது! இப்படி விவேகானந்தர் கூறியதைக் கேட்டு ஜக்மோகன் அதிர்ந்து போனார். அவருக்கு விவேகானந்தரிடம் பெரிய மதிப்பு ஏற்பட்டது. அவர், நமது கேத்ரி மன்னர் இந்தத் துறவியைச் சந்தித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார். அதனால் அவர் விவேகானந்தரிடம், உங்களை எங்கள் கேத்ரி அரசர் அவசியம் பார்க்க வேண்டும். நீங்கள் எங்கள் அரண்மனைக்கு வாருங்கள் என்று கேட்டுக்கொண்டார். விவேகானந்தர், நாளைய மறுநாள் வருகிறேன் என்று வாக்களித்தார். அதன்படி விவேகானந்தர் 1891 ஜூன் 4-ஆம் தேதி கேத்ரி மன்னரைச் சென்று சந்தித்தார். கேத்ரி மன்னர் அஜீத்சிங், விவேகானந்தரை மிகவும் நன்றாகப் புரிந்துகொண்டார். அதனால் அவர் விவேகானந்தரின் சீடர்களில் ஒருவராகவும் ஆனார்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – நரேந்திரன் கண்ட தீர்வு!

சிறுவன் நரேந்திரனிடம் “தலைமைப் பண்பு’ என்பது இயல்பாகவே அமைந்திருந்தது. அவன் தன் நண்பர்களை பொருட்காட்சி, கண்காட்சி, நினைவுச் சின்னம், பூங்கா போன்ற இடங்களுக்கு அவ்வப்போது சுற்றுலாவாக அழைத்துச் செல்வான். கொல்கத்தா, புறநகர் பகுதியில் உயிரியில் பூங்கா ஒன்று இருந்தது. ஒரு நாள் நரேந்திரன் தன் நண்பர்களை, அந்த உயிரியில் பூங்காவுக்கு அழைத்துச் சென்றான். அங்கு அவர்களுக்கு மகிழ்ச்சியாக பொழுது போயிற்று. அங்கிருந்து அவர்கள், கங்கையில் படகில் கொல்கத்தாவிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். படகில் வந்துகொண்டிருந்தபோது, நரேந்திரனின் நண்பன் ஒருவனுக்கு உடல்நலம் சரியில்லாமல் போயிற்று. அதனால் அவன் படகிலேயே வாந்தி எடுத்தான்.

அதைப் பார்த்த படகோட்டிகள் சிறுவர்களிடம், “”நீங்களே உங்கள் கையால் படகை சுத்தப்படுத்த வேண்டும்! இல்லாவிட்டால் நீங்கள் இங்கிருந்து போக முடியாது!”” என்று கண்டிப்புடன் கூறினர். அதை மறுத்து நரேந்திரனும் அவனது நண்பர்களும், “”படகுப் பயணத்திற்கு இரண்டு மடங்குக் கட்டணம் தருகிறோம்” என்று படகோட்டிகளிடம் கேட்டுக்கொண்டார்கள். ஆனால் அதற்கு படகோட்டிகள் ஒப்புக்கொள்ளாமல் தகராறு செய்தனர். படகு கரையை அடைந்தது. படகோட்டிகள் சிறுவர்களிடம், “”நீங்கள்தான் படகைச் சுத்தப்படுத்த வேண்டும்! இல்லாவிட்டால் நீங்கள் படகிலிருந்து இறங்க முடியாது!” என்று கடுமையாகக் கூறி பயமுறுத்தினார்கள். அப்போது யாரும் கவனிக்காத சமயத்தில், நரேந்திரன் படகிலிருந்து இறங்கிக் கரைக்குச் சென்றான். அங்கு கங்கைக் கரையில் இரண்டு ஆங்கிலேய சிப்பாய்கள் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களை நரேந்திரன் அணுகி, தனக்கும் தன் நண்பர்களுக்கும் படகோட்டிகளால் ஏற்பட்டிருக்கும் சங்கடத்தைத் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் தெரிவித்து உதவும்படி கேட்டுக்கொண்டான்.

மேலும் அவன் ஆங்கிலேய சிப்பாய்களின் கைகளை மெல்லப் பற்றி, அவர்களைப் படகு இருந்த இடத்திற்கே அழைத்தும் வந்துவிட்டான். ஆங்கிலேய சிப்பாய்கள் படகோட்டிகளிடம், சிறுவர்களைப் படகிலிருந்து இறங்கவிடுங்கள்!” என்று கடிந்து கூறினர். இப்படி ஆங்கிலேய சிப்பாய்கள் கூறியதும், மறு பேச்சில்லாமல் படகோட்டிகள் சிறுவர்கள் படகிலிருந்து இறங்கிச் செல்ல அனுமதித்தனர். நரேந்திரனின் துணிவு ஆங்கிலேய சிப்பாய்களை மிகவும் கவர்ந்தது. அவர்கள் நரேந்திரனை ஏதோ ஒரு பொழுபோக்கு நிகழ்ச்சிக்குத் தங்களுடன் வருமாறு அழைத்தனர். அதற்கு நரேந்திரன் ஒப்புக்கொள்ளாமல், “”மிகவும் நன்றி, நான் வருகிறேன்” என்று கூறிவிட்டு, அவர்களிடமிருந்து விடைபெற்றான். இந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவராகி, “சுவாமி விவேகானந்தர்’ என்ற உலக புகழ்பெற்ற துறவியாக விளங்கினார்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – சூழ்நிலையால் தடுமாறாதே!

சிறுவன் நரேந்திரன் கொல்கத்தாவைச் சேர்ந்தவன். அப்போது அவனுக்கு பத்து வயது நடந்துகொண்டிருந்தது. அவன் தன் வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து, ஒரு நாடக்குழுவை அமைத்தான். அதில் அவனும் அவனது நண்பர்களும் பல நாடகங்கள் நடத்தினார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு நரேந்திரன், தன் வீட்டு முற்றத்தில் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஓர் உடற்பயிற்சி குழுவை அமைத்தான். பின்னர் நரேந்திரனும் அவனது நண்பர்களும், முறைப்படி உடற்பயிற்சிகளைக் கற்றுக்கொள்ள விரும்பினார்கள். எனவே அவர்கள், நவகோபால் மித்ரா என்பவர் நடத்தி வந்த உடற்பயிற்சி நிலையத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்தார்கள். அங்கு நரேந்திரன் கபடி, சிலம்பம், மல்யுத்தம், நீச்சல் பயிற்சி, படகு செலுத்துதல், கத்திச்சண்டை, கிரிக்கெட், லத்திச்சண்டை ஆகியவற்றைப் பெரிதும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டான். அவனுடைய ஆர்வத்தை நவகோபால் மித்ரா கவனித்தார். எனவே அவர், தன்னுடைய உடற்பயிற்சி நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பை நரேந்திரனிடமே ஒப்படைத்தார்.

ட்ரபீஸ் (tணூச்ணீஞுத்ஞு) என்பது ஒரு வகையான உடற்பயிற்சியாகும். கூரையில் இரண்டு கயிறுகளுக்கு இடையில் கனமான மரக்கட்டையைத் தொங்கவிட்டிருப்பார்கள். அந்த மரக்கட்டையைப் பிடித்துக்கொண்டு உடற்பயிற்சி செய்வதுதான் ட்ரபீஸ் உடற்பயிற்சியாகும். ஒரு நாள் நரேந்திரனும் அவனது நண்பர்களும் சேர்ந்து, ட்ரபீஸ் மரக்கட்டையைக் கூரையில் பொறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். அதைப் பார்ப்பதற்கு அங்கு மக்கள் கூட்டம் கூடிவிட்டது. அந்தக் கூட்டத்தில் ஆங்கிலேய மாலுமி ஒருவரும் இருந்தார். அவரை நரேந்திரன் உதவிக்கு அழைத்தான்.
ஆங்கிலேய மாலுமியும் நரேந்திரனும் அவனது நண்பர்களும் ஒன்றுசேர்ந்து, கனமான மரக்கட்டையைக் கூரையில் பொறுத்துவதற்கு முயற்சி செய்தார்கள். ஒரு தருணத்தில் மரக்கட்டை நழுவி, நேராக மாலுமியின் தலையில் விழுந்தது. மாலுமி சுயநினைவு இழந்து விழுந்துவிட்டார். அவர் தலையில் பலமாக அடிபட்டு இரத்தம் கசிந்தது. அதைப் பார்த்து, மாலுமி இறந்துவிட்டார்! என்று நினைத்து, அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டம் வேகமாகக் கலைந்து போயிற்று.

நரேந்திரனும் அவனுடைய ஒன்றிரண்டு நண்பர்களையும் தவிர, மற்ற நண்பர்கள் அங்கிருந்து நழுவிவிட்டார்கள். இந்தக் குழப்ப நிலையில் நரேந்திரனின் மனம் ஒரு சிறிதும் தடுமாறவில்லை. அவன் தன் வேட்டியைக் கிழித்து, ஆங்கிலேய மாலுமியின் தலையில் அடிபட்ட இடத்தில் கட்டினான்; மாலுமியின் முகத்தில் சிறிது தண்ணீர் தெளித்து, மெல்ல விசிறி தேவையான முதலுதவி சிகிச்சை செய்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு மாலுமிக்கு சுயநினைவு திரும்பியது. உடனே நரேந்திரனும் அவனது நண்பர்களும், கைத்தாங்கலாக மாலுமியை அருகில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தார்கள். அங்கு நரேந்திரன் டாக்டர் ஒருவரை அழைத்து வந்து, மாலுமிக்கு உரிய சிகிச்சை அளித்தான்.
மாலுமிக்கு அங்கு ஒரு வாரம் சிகிச்சை நடந்தது. மாலுமி உடல் நலம் தேறியதும், நரேந்திரனுக்கும் அவனது நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார். அவர் புறப்பட்டபோது நரேந்திரன், தன் நண்பர்களிடம் திரட்டிய பணத்துடன் தன் பங்கையும் சேர்த்து மாலுமிக்குச் சிறிது பணம் தந்தான். இந்த நரேந்திரன் வளர்ந்து பெரியவனாகி, சுவாமி விவேகானந்தர் என்ற புகழ் பெற்ற துறவியானார். அவர் உலகின் பல நாடுகளுக்கும் சென்று, இந்தியாவின் பெருமையை நிலைநிறுத்தினார்.

இந்த உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல; இங்கிருந்து நீ தப்பியோட முயற்சி செய்யாதே. இந்த உலகம் மிகப் பெரிய ஓர் உடற்பயிற்சிக்கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடையவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம். – சுவாமி விவேகானந்தர்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவும் வீரமும்!

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு – குறள் -423

இதற்கு, எந்தச் செய்தியை யார் கூறக் கேட்டாலும், கூறியவர் யார் என்று பாராமல் அந்தச் செய்தியில் உள்ள உண்மையை ஆராய்ந்து அறிவதே சிறந்த அறிவாகும் என்பது பொருள். திருவள்ளுவரின் இந்தக் கருத்துக்கு, எடுத்துக்காட்டாக நரேந்திரன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சி இது: சிறுவன் நரேந்திரன் சுறுசுறுப்பானவன், எப்போதும் உற்சாகத்துடன் இருப்பவன். ஓடி விளையாடு பாப்பா! என்று பாரதியார் கூறியதுபோல், விளையாட்டுகளில் நரேந்திரனுக்கு ஆர்வம் அதிகம். நரேந்திரனின் நண்பர்களில் ஒருவனுடைய வீட்டில் ஒரு செண்பகமரம் இருந்தது. நரேந்திரன் தன் நண்பர்களுடன் அங்கு சென்று, செண்பகமரத்தில் ஏறித் தலைகீழாகத் தொங்கி ஆடிக்கொண்டிருப்பான்; அப்படியே குட்டிக்கரணம் போட்டுத் தரையில் குதிப்பான். இந்த விளையாட்டு அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. நரேந்திரன் தன் நண்பர்களுடன் அடிக்கடி இப்படி செண்பகமரத்தில் ஏறி விளையாடிக்கொண்டிருப்பதை, அந்த வீட்டிலிருந்த தாத்தா ஒருவர் பார்த்தார்.

அவர், இந்தச் சிறுவர்கள் மரத்தில் இப்படி தலைகீழாகத் தொங்கி விளையாடப்போய், கைகால்களை உடைத்துக்கொண்டால் என்ன செய்வது? நரேந்திரன் விளையாடினால், மற்ற சிறுவர்களும் அவனுடன் சேர்ந்து விளையாடத்தான் செய்வார்கள். எனவே நரேந்திரன் இங்கு விளையாடுவதைத் தடுக்க வேண்டும் என்று நினைத்தார். எனவே அவர், செண்பகமரத்தில் விளையாடிக்கொண்டிருந்த நரேந்திரனை அருகில் அழைத்தார். நரேந்திரன் அவர் முன்பு சென்று நின்றான். தாத்தா, நரேந்திரா! நீ இப்படி உன் நண்பர்களுடன் இந்த மரத்தில் ஏறி தலைகீழாகத் தொங்கி விளையாடாதே! என்றார். ஏன் விளையாடக் கூடாது? என்று கேட்டான் நரேந்திரன். இவனுக்கு என்ன பதில் சொல்வது? ஏதாவது சொல்லி இப்போது இவனைப் பயமுறுத்தி வைக்க வேண்டும் என்று நினைத்தார் தாத்தா. எனவே அவர், இந்த மரத்தில் ஒரு பூதம் இருக்கிறது! அந்த பூதம் இரவில் வெள்ளையுடை உடுத்திக்கொண்டுச் செல்வதைப் பார்த்தால் பயமாக இருக்கும். அந்த பூதம் மரத்தில் ஏறுபவர்களின் கழுத்தை நெறித்துக் கொன்றுவிடும்! என்று கூறினார்.

தாத்தா கூறியதைப் பணிவுடன் அமைதியாக இருந்து, நரேந்திரன் கேட்டுக்கொண்டான். தாத்தா, ஒருவிதமாக நரேந்திரனை ஏமாற்றிவிட்டோம்! என்று மனதிற்குள் சிரித்தபடியே அங்கிருந்து சென்றார். தாத்தா அந்த இடத்தைவிட்டு சென்றாரோ இல்லையோ, உடனே நரேந்திரன் மீண்டும் கிடுகிடுவென்று மரத்தில் ஏறி, முன்புபோல் தலைகீழாகத் தொங்கி விளையாட ஆரம்பித்தான். நரேந்திரனின் இந்தச் செயலை, தாத்தா அது வரையில் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்த நண்பன் ஒருவன் பார்த்தான். அவன் பதற்றத்துடன், நரேந்திரா! தாத்தா இப்போதுதானே இந்த மரத்தில் ஒரு பூதம் இருக்கிறது என்று சொன்னார்! அது உன் கழுத்தை நெறித்துக் கொன்றுவிடப் போகிறது! சீக்கிரம் மரத்திலிருந்து கீழே இறங்கி வந்துவிடு! என்று கூவினான். பயந்து போயிருந்த நண்பனைப் பார்த்து கண் சிமிட்டி கலகலவென்று சிரித்துக்கொண்டே நரேந்திரன், நீ ஒரு முட்டாள்! யாரோ கதை கட்டினால் அதை நாம் நம்பி விடுவதா? தாத்தா நாம் மரத்தில் ஏறக் கூடாது என்பதற்காக அப்படி ஒரு கதை கட்டிவிட்டிருக்கிறார்! நாம் முன்பு எத்தனை முறை இந்த மரத்தில் ஏறித் தலைகீழாகத் தொங்கி விளையாடியிருக்கிறோம்? தாத்தா சொன்னது உண்மையாக இருந்தால், அந்த பூதம் எப்போதோ என் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்குமே! என்று கூறினான்.

நரேந்திரனிடம் துணிச்சலும் இருந்தது, வீரமும் இருந்தது. ஆனால் அவனுடைய துணிச்சலும் வீரமும் எப்போதும் அறிவு சார்ந்ததாகவே இருந்தது. இந்த நரேந்திரன்தான் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் என்று புகழ் பெற்றார். அப்போது அவர் கூறியவை இவை: நாம் எந்தப் பொருளை எடுத்துக்கொண்டாலும், அதன் உள்நோக்கத்தையும் அடிப்படைத் தன்மையையும் கண்டறிய வேண்டும். இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன் – முதலில் நீ உன்னிடத்தில் நம்பிக்கை வை. நாம் பகுத்தறிவைப் பயன்படுத்தி ஆராய்ந்து பார்க்க வேண்டும். தனக்கு இறைவன் கொடுத்திருக்கும் அறிவாற்றலைப் பயன்படுத்தாமல், கண்மூடித்தனமாக நம்புபவனை மன்னிப்பதைவிட, தன்னுடைய பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தி நம்பாமல் இருக்கும் ஒருவனை இறைவன் மன்னித்துவிடுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – வெள்ளரிக்காய் வழங்கிய முஸ்லிம் அன்பர்!

அமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் 1893-ஆம் ஆண்டு சர்வ சமயப் பேரவை நடைபெற்றது. அதில் உலகில் முக்கியத்துவம் வாய்ந்த எல்லா மதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டார்கள். இந்தப் பேரவை நிகழ்ச்சிகள் 1893 செப்டம்பர் 11-ஆம் தேதி முதல், 27-ஆம் தேதி வரை பதினேழு நாள்கள் நடைபெற்றன. பேரவை நிகழ்ச்சிகளில், சுவாமி விவேகானந்தர் இந்துமதத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அதனால் அவர் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தினார். சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு சுமார் நாலரை ஆண்டுகள், இந்தியாவின் பல பகுதிகளுக்கும் திருத்தலப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவ்விதம் அவர் பயணம் செய்தபோது, ஒருமுறை அவருடன் சுவாமி அகண்டானந்தரும் இருந்தார். சுவாமி அகண்டானந்தர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்களில் ஒருவர்.

இருவரும் இமயமலையில் இருக்கும் அல்மோரா என்ற இடத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். இருவரும் உணவு சாப்பிட்டு பல மணி நேரங்கள் ஆகியிருந்தது. அல்மோராவை அடைவதற்கு முன்பு, சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் முஸ்லிம்களின் இடுகாடு இருந்தது. அந்த இடத்தை அடைந்தபோது, பசி தாகம் காரணமாக விவேகானந்தருக்கு மிகுந்த களைப்பும் சோர்வும் ஏற்பட்டது. அதனால் அவரால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை. மயங்கிக் கீழே விழும் நிலைக்கு வந்துவிட்டார். எனவே அவரை அங்கேயே படுக்க வைத்துவிட்டு, பக்கத்தில் எங்காவது உணவோ, தண்ணீரோ கிடைக்குமா? என்று பார்ப்பதற்கு அகண்டானந்தர் சென்றார். அந்த இடுகாட்டில் ஜுல்பிகர் அலி என்ற முஸ்லிம் ஒருவர் வேலை செய்து வந்தார். அவர் இடுகாட்டிற்கு அருகில் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தார். அவரிடம் அன்றைய தினம் உணவு என்று சொல்வதற்கு, ஒரே ஒரு வெள்ளரிக்காய் மட்டும்தான் இருந்தது. விவேகானந்தரின் மோசமான உடல் நிலை ஜுல்பிகர் அலிக்குப் புரிந்தது. எனவே அவர் ஓடிச் சென்று, தம்மிடமிருந்த வெள்ளரிக்காயை விவேகானந்தருக்குக் கொடுத்தார். மிகவும் பலவீனமாக இருந்த விவேகானந்தர், அதைத் தமது வாயில் வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

அதற்கு ஜுல்பிகர் அலி, சுவாமிஜி, நான் ஒரு முஸ்லிம் ஆயிற்றே! என்றார். அதனால் என்ன! நாம் அனைவரும் சகோதரர்களே அல்லவா? என்று புன்முறுவலுடன் கேட்டார் விவேகானந்தர். முஸ்லிம் வெள்ளரிக்காயை விவேகானந்தர் வாயில் வைத்து சாப்பிடும்படி செய்தார். அதனால் விவேகானந்தரின் களைப்பு ஒரு சிறிது நீங்கியது. இதைப் பற்றி பிற்காலத்தில் விவேகானந்தர், அந்த முஸ்லிம் உண்மையிலேயே அப்போது என் உயிரைக் காப்பாற்றினார். அதுபோல் என் வாழ்நாளில் எப்போதும் நான் களைப்படைந்ததில்லை என்று கூறினார். பின்னர் விவேகானந்தர் இந்தியாவின் ஆன்மிகக் கருத்துகளை அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் பிரச்சாரம் செய்து புகழ் பெற்றார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் ஒருமுறை அல்மோராவிற்குச் சென்றார். அப்போது அல்மோராவில் விவேகானந்தரை ஊர்வலமாக அழைத்துச் சென்று, மிகவும் சிறந்த முறையில் வரவேற்பு அளித்தார்கள். அந்த நிகழ்ச்சியின்போது, ஜுல்பிகர் அலி ஓர் ஓரமாக நின்று விவேகானந்தரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு விவேகானந்தரை இன்னார் என்று அடையாளம் தெரியவில்லை. ஆனால் விவேகானந்தர், ஜுல்பிகர் அலியைப் பார்த்தவுடன் அடையாளம் தெரிந்துகொண்டார். உடனே அவர் அங்கிருந்த மக்கள் கூட்டத்தையும் பரபரப்பையும் ஒரு சிறிதும் பொருட்படுத்தாமல் நேராக ஜுல்பிகர் அலியிடம் சென்று, அவரைக் கட்டியணைத்துக் கொண்டார். மேலும் விவேகானந்தர் அருகில் இருந்தவர்களிடம் ஜுல்பிகர் அலியைப் பற்றி நன்றியுணர்வுடன் கூறி, அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் ஜுல்பிகருக்கு விவேகானந்தர் பணமும் கொடுத்தார்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – துணிவு மிக்க சிறுவன்!

கொல்கத்தாவில் ஒரு நாடக அரங்கத்தில் நாடகம் நடந்துகொண்டிருந்தது. மக்கள் நாடகக் காட்சிகளில் மனத்தைப் பறிகொடுத்து இரசித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத வகையில் திடீரென்று நாடகமேடையில் ஒரு காட்சி. அதில் நாடகத்திற்கு ஒரு சிறிதும் தொடர்பில்லாத பாத்திரங்கள் நாடகமேடையில் தோன்றினர். அதைத் தொடர்ந்து நாடகமேடையிலும் மக்களிடமும் சலசலப்பு எழுந்தது. விஷயம் இதுதான் – நாடகத்தில் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்துக்கொண்டிருந்த நடிகர்களில் ஒருவர், எவரிடமோ பணம் கடன் வாங்கியிருந்தார். அது காரணமாக அந்த நடிகரைக் கைது செய்யும் பொருட்டு, ஆங்கிலேயப் போலீசார் கையில் வாரண்டுடன் நாடகமேடைக்கே சென்றுவிட்டனர். இந்த விஷயம் நாடகம் பார்க்க வந்திருந்த பொதுமக்களுக்குத் தெரிய வந்தது. ஆனால் அவர்கள் அனைவரும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தனர்.

அப்போது ஒரு சிறுவனின் குரல், போலீஸ்காரரை நோக்கி இடி போன்று அங்கே முழங்கியது: மேடையை விட்டு வெளியே போ! நடிகரைக் கைது செய்யும் உன் வேலையை நாடகம் முடிந்தபிறகு வைத்துக்கொள்! நாடகத்தின் இடையில் புகுந்து பொதுமக்களைத் தொந்தரவு செய்யாதே! அந்தச் சிறுவனின் குரல் திட்டவட்டமாகவும், போலீஸாருக்குக் கட்டளை பிறப்பிப்பது போலவும் கணீரென்று ஒலித்தது. அதைக் கேட்டுப் போலீஸாரே திடுக்கிட்டு விட்டனர். அதற்குள் சிறுவன் கூறியதை ஆமோதித்துப் பொதுமக்களும் ஒருமித்த குரலில் போலீசாரை நோக்கி, மேடையை விட்டுக் கீழே இறங்கு! நாடகம் முடியும் வரையில் காத்திருந்து நடிகரைக் கைது செய்துகொள்! என்று கூவினர். பெருத்த எதிர்ப்பு எழுந்ததால், போலீசாரும் அவ்விதமே நடந்துகொள்ளும்படி ஆயிற்று. பொதுமக்கள் சரியான சமயத்தில் குரலெழுப்பிய சிறுவனைப் பாராட்டினார்கள். இது நடந்த சமயத்தில் துணிவு மிக்க அந்தச் சிறுவனுக்கு வயது பதினான்கு. பிற்காலத்தில் அந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவனானபோது, அஞ்சாமை என்ற கருத்தை ஆணித்தரமாக இந்திய மக்களுக்குப் போதித்தான். ஆம், பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தராக மலர்ந்த நரேந்திரன்தான் அந்தச் சிறுவன்.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – மூன்று வரங்கள்!

ஏழை ஒருவன் ஒரு தேவதைக்குத் திருப்தி ஏற்படும்படி நடந்து கொண்டான். அந்தத் தேவதை அவன் முன்னர்த் தோன்றி, மூன்று சொக்கட்டான் காய்களைக் கொடுத்து, அவற்றை உருட்டி மூன்று வரங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியது. மகிழ்ச்சி அடைந்த அந்த மனிதன் வீடு திரும்பி, தன் மனைவியிடம் விவரத்தைச் சொன்னான். பண ஆசை பிடித்த அவளோ பணத்திற்காகக் காயை உருட்டும்படிச் சொன்னாள். அதற்கு அவன், நம் இருவருக்கும் மூக்கு மிகவும் அசிங்கமாக இருக்கிறது. ஊரார் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள். முதலில் அழகான மூக்கு வேண்டும் என்று காயை உருட்டுவோம் என்றான். ஆனால் பணத்தை விரும்பிய மனைவியோ காயை உருட்ட விடாமல் கணவனின் கையைப் பிடித்துக் கொண்டாள். கணவனோ திமிறிக் கையை விடுவித்துக் கொண்டு எங்கள் இருவருக்கும் அழகான மூக்குகள் அமையட்டும்’ மூக்குகளைத் தவிர வேறு எதுவும் எங்களுக்கு வேண்டாம் என்று காயை உருட்டி விட்டான்.

உடனே அவர்கள் இருவர் உடம்பிலும், அழகிய ஆனால் பல மூக்குகள் தோன்றி விட்டன. பல மூக்குகள் இருப்பது அவர்களுக்கு மிகவும் தொந்தரவாக இருந்ததால் மூக்குகளே வேண்டாம் என்று காயை உருட்ட அவர்கள் இருவரும் சம்மதித்தார்கள். அதன்படி உருட்டியப் போது மூக்குகளே இல்லாமல் போய்விட்டன. இப்படி இரண்டு வரங்கள் வீணாகிவிட்டன. என்ன செய்வது என்று அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கேட்பதற்கு இனி ஒரே ஒரு வரம் தான் மீதி இருந்தது. மூக்குகள் இல்லாத காரணத்தால் அதிக விகாரமாக இருந்தது. இந்த நிலையில் வெளியில் போக அவர்கள் மிகவும் நாணினார்கள். அழகிய மூக்குடன் எப்படி வந்தது என்று ஊரார் கேட்பார்களே, அதற்கு என்ன பதில் சொல்வது என்று அஞசினார்கள். தங்கள் மடமையை நினைத்து வருத்தப் பட்டார்கள். அதனால் அழகற்ற பழைய மூக்கு தங்களுக்கு வந்தால் போதும் என்று காயை உருட்டினார்கள். ஆசைப்படாதே ஆசைப்படுவது உனக்கு கிட்டும். அதோடு கூட, பந்தமும் வரும் என்பதை இந்தக் கதை விளக்குகிறது.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – பிச்சைக்கார அரசன்
சுவாமி விவேகானந்தர் கதைகள் – பிச்சைக்கார அரசன்

பெருமன்னன் ஒருவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அங்கு ஒரு முனிவரைக் கண்டான். அவரோடு சிறிது நேரம் உரையாடிய மன்னன் பெரு மகிழ்ச்சியுற்று. தன்னிடமிருந்து ஏதாவது நன்கொடையொன்றைப் பெற்றுக் கொள்ளுமாறு அவரை வேண்டினான். முனிவரோ, எதுவும் வேண்டாம். என் நிலைமையில் மனத்திருப்தியை முற்றும் பெற்றுள்ளேன். இம்மரங்கள் எனக்கு உண்ணப் போதிய கனிகளைக் கொடுக்கின்றன; இவ்வழகிய தூய நீரோடைகள் எனக்கு வேண்டிய நீரையெல்லாம் தருகின்றன; இக்குகையிலே நான் உறங்குகிறேன்.

நீ ஒரு மன்னாதி மன்னனாயினும், உன் நன்கொடைகளை நான் ஏன் பொருட்படுத்த வேண்டும்? என்று கூறினார். பேரரசனோ, என்னைத் தூயவனாக்கவும், மகிழ்விக்கவுமே, ஏதேனும் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் ஒன்றை நன்கொடையாகப் பெறுக; நகருக்குள் என்னோடு எழுந்தருள்க என்று வேண்டினான். இறுதியில் முனிவர் பேரரசனோடு செல்ல இசைந்தார். அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவர் பொன்னும் மணியும், பளிங்கும் மற்றும் பல வியத்தகு பொருள்களும் இருக்கக் கண்டார். செல்வமும் அதிகாரமும் எங்கும் விளங்கின. மன்னன் முனிவரைக் காத்திருக்குமாறு கூறி, ஒரு மூலைக்குச் சென்று, இறைவா! இன்னும் மிகுந்த செல்வமும், மக்களும் நாடும் எனக்கு அருள்க என்று பிரார்த்தனை செய்யத் தொடங்கினான். இதற்கிடையே முனிவர் எழுந்து வெளியே செல்ல முற்பட்டார். அவர் செல்வதைக் கண்ட பேரரசன். அவரைப் பின் தொடர்ந்து, ஐயா, நில்லுங்கள்; நீங்கள் எனது நன்கொடையைப் பெறாது செல்கின்றீர்களே! என்றான். முனிவர் அவனை நோக்கி, மன்னா! பிச்சைக்காரரிடம் நான் இரப்பதில்லை. உன்னால் என்ன கொடுக்க இயலும்? நீயே பொழுதெல்லாம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாய் என்று கூறினார். அன்பு வெளிப்படும் முறை இதுவன்று. இறைவனிடம் இதைத் தா அதைத்தா என்று நீ வேண்டுவாயானால் அன்பிற்கும் வியாபாரத்திற்கும் என்ன வேறுபாடு?

சுவாமி விவேகானந்தர் கதைகள் – கங்கை ஜாடி

மேலைநாடுகளுக்கு சுவாமி விவேகானந்தர் இரண்டாம் முறையாகக் கப்பலில் புறப்பட்டார். 1899 ஜூன் 24-இல் கப்பல் சென்னை வந்து சேர்ந்தது. சுவாமி துரியானந்தரும் சகோதரி நிவேதிதையும் சுவாமிஜியுடன் பயணித்தனர்.

சென்னை மடத்தில் பூஜைக்காக கங்கை நீர் தேவைப்பட்டது. சுவாமிஜியிடம் சசி மகராஜ் அதைக் கேட்டிருந்தார். எனவே ஒரு பெரிய பீங்கான் ஜாடியில் சுவாமிஜி கங்கை நீரைக் கொண்டு வந்தார். அந்த சமயத்தில் துரதிர்ஷ்டவசமாகக் கல்கத்தாவில் பிளேக் என்னும் கொள்ளை நோய் பரவியிருந்தது. சுவாமிஜி கப்பலிலிருந்து தரையில் இறங்க அனுமதிக்கப்படவில்லை. ஆகையால் சசி மகராஜ் ஒரு படகை அமர்த்திக் கொண்டு கப்பலுக்கு அருகில் சென்றார். சுவாமிஜிக்காகத் தான் அன்புடன் கொண்டு சென்றிருந்த இனிப்புக்களையும் உணவு வகைகளையும் ஒரு கூடையில் வைத்தார். கூடை மேலே ஏற்றப்பட்டது. அதே கூடையில் கங்கை நீர் நிறைந்த பீங்கான் ஜாடி கீழே இறக்கப்பட்டது. அந்த ஜாடியை சுவாமிஜி ஒரு கயிற்றினால் அழுத்தமாகக் கட்டியிருந்தார்; அதை சசி மகராஜால் அவிழ்க்க முடியவில்லை. ஆகவே, சுவாமிஜி அதை அறுப்பதற்காக ஒரு கத்தியையும் கீழே போட்டார்.

திரும்புவதற்கு முன்னால் சசி மகராஜ் படகுக்காரனிடம் கப்பலை மூன்று முறை வலம் வருமாறு பணித்தார். இரண்டு பெரிய மகான்களின் பாதங்களை இன்று நம்மால் பணிய முடியவில்லை கப்பலை வலம் வந்தாவது நாம் திருப்தி அடைவோம் என்றார். சுவாமிஜி கொண்டுவந்தது என்பதற்காக அந்த ஜாடியையும் அவரது திருக்கரங்கள் பட்டது என்பதற்காக அந்தக் கத்தியையும் சசி மகராஜ் பூஜையறையில் வைத்து வழிபடத் தொடங்கினார். அவை இன்றும் பாதுகாக்கப்படுகின்றன.

சுவாமி விவேகானந்தர் கதைகள் – மன உறுதி

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார். நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார். பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர். விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார். “சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார். உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.

நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.

இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.