சுவாமி விவேகானந்தர் கதைகள் – சூழ்நிலையால் தடுமாறாதே!

4.2/5 - (13 votes)

சிறுவன் நரேந்திரன் கொல்கத்தாவைச் சேர்ந்தவன். அப்போது அவனுக்கு பத்து வயது நடந்துகொண்டிருந்தது. அவன் தன் வீட்டில் நண்பர்களுடன் சேர்ந்து, ஒரு நாடக்குழுவை அமைத்தான். அதில் அவனும் அவனது நண்பர்களும் பல நாடகங்கள் நடத்தினார்கள். சிறிது காலத்திற்குப் பிறகு நரேந்திரன், தன் வீட்டு முற்றத்தில் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஓர் உடற்பயிற்சி குழுவை அமைத்தான். பின்னர் நரேந்திரனும் அவனது நண்பர்களும், முறைப்படி உடற்பயிற்சிகளைக் கற்றுக்கொள்ள விரும்பினார்கள். எனவே அவர்கள், நவகோபால் மித்ரா என்பவர் நடத்தி வந்த உடற்பயிற்சி நிலையத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்தார்கள். அங்கு நரேந்திரன் கபடி, சிலம்பம், மல்யுத்தம், நீச்சல் பயிற்சி, படகு செலுத்துதல், கத்திச்சண்டை, கிரிக்கெட், லத்திச்சண்டை ஆகியவற்றைப் பெரிதும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டான். அவனுடைய ஆர்வத்தை நவகோபால் மித்ரா கவனித்தார். எனவே அவர், தன்னுடைய உடற்பயிற்சி நிலையத்தின் நிர்வாகப் பொறுப்பை நரேந்திரனிடமே ஒப்படைத்தார்.

ட்ரபீஸ் (tணூச்ணீஞுத்ஞு) என்பது ஒரு வகையான உடற்பயிற்சியாகும். கூரையில் இரண்டு கயிறுகளுக்கு இடையில் கனமான மரக்கட்டையைத் தொங்கவிட்டிருப்பார்கள். அந்த மரக்கட்டையைப் பிடித்துக்கொண்டு உடற்பயிற்சி செய்வதுதான் ட்ரபீஸ் உடற்பயிற்சியாகும். ஒரு நாள் நரேந்திரனும் அவனது நண்பர்களும் சேர்ந்து, ட்ரபீஸ் மரக்கட்டையைக் கூரையில் பொறுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். அதைப் பார்ப்பதற்கு அங்கு மக்கள் கூட்டம் கூடிவிட்டது. அந்தக் கூட்டத்தில் ஆங்கிலேய மாலுமி ஒருவரும் இருந்தார். அவரை நரேந்திரன் உதவிக்கு அழைத்தான்.
ஆங்கிலேய மாலுமியும் நரேந்திரனும் அவனது நண்பர்களும் ஒன்றுசேர்ந்து, கனமான மரக்கட்டையைக் கூரையில் பொறுத்துவதற்கு முயற்சி செய்தார்கள். ஒரு தருணத்தில் மரக்கட்டை நழுவி, நேராக மாலுமியின் தலையில் விழுந்தது. மாலுமி சுயநினைவு இழந்து விழுந்துவிட்டார். அவர் தலையில் பலமாக அடிபட்டு இரத்தம் கசிந்தது. அதைப் பார்த்து, மாலுமி இறந்துவிட்டார்! என்று நினைத்து, அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டம் வேகமாகக் கலைந்து போயிற்று.

நரேந்திரனும் அவனுடைய ஒன்றிரண்டு நண்பர்களையும் தவிர, மற்ற நண்பர்கள் அங்கிருந்து நழுவிவிட்டார்கள். இந்தக் குழப்ப நிலையில் நரேந்திரனின் மனம் ஒரு சிறிதும் தடுமாறவில்லை. அவன் தன் வேட்டியைக் கிழித்து, ஆங்கிலேய மாலுமியின் தலையில் அடிபட்ட இடத்தில் கட்டினான்; மாலுமியின் முகத்தில் சிறிது தண்ணீர் தெளித்து, மெல்ல விசிறி தேவையான முதலுதவி சிகிச்சை செய்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு மாலுமிக்கு சுயநினைவு திரும்பியது. உடனே நரேந்திரனும் அவனது நண்பர்களும், கைத்தாங்கலாக மாலுமியை அருகில் இருந்த ஒரு பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தார்கள். அங்கு நரேந்திரன் டாக்டர் ஒருவரை அழைத்து வந்து, மாலுமிக்கு உரிய சிகிச்சை அளித்தான்.
மாலுமிக்கு அங்கு ஒரு வாரம் சிகிச்சை நடந்தது. மாலுமி உடல் நலம் தேறியதும், நரேந்திரனுக்கும் அவனது நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார். அவர் புறப்பட்டபோது நரேந்திரன், தன் நண்பர்களிடம் திரட்டிய பணத்துடன் தன் பங்கையும் சேர்த்து மாலுமிக்குச் சிறிது பணம் தந்தான். இந்த நரேந்திரன் வளர்ந்து பெரியவனாகி, சுவாமி விவேகானந்தர் என்ற புகழ் பெற்ற துறவியானார். அவர் உலகின் பல நாடுகளுக்கும் சென்று, இந்தியாவின் பெருமையை நிலைநிறுத்தினார்.

இந்த உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல; இங்கிருந்து நீ தப்பியோட முயற்சி செய்யாதே. இந்த உலகம் மிகப் பெரிய ஓர் உடற்பயிற்சிக்கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடையவர்களாக்கிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம். – சுவாமி விவேகானந்தர்.

Leave a comment