Author: siruvar malar

பரமார்த்த குரு கதைகள் – தவளைக் குட்டிச் சீடன்

முட்டாளும் மூடனும் தவிர பரமார்த்த குருவும் மற்ற சீடர்களும் ராஜ வீதியில் காத்திருந்தனர். அந்த நாட்டு மன்னன் தேரில் ஊர்வலமாக வந்து கொண்டு இருந்தான்.

தங்கள் அருகே தேர் வந்ததும், கையில் தயாராக வைத்திருந்த செத்துப் போன தவளையையும், ஓணானையும் தேரின் சக்கத்தில் போட்டான், மட்டி.

அதன் மீது சக்கரம் ஏறி நகர்ந்ததும், நசுங்கிப் போன தவளையையும் ஓணானையும் தூக்கி வந்தான், மடையன்.

பரமார்த்தர், தேருக்கு முன்னால் சென்று, ஐயோ! என் சீடர்களைக் கொன்று விட்டாயே! இது தான் நீ குடிமக்களைக் காப்பாற்றும் முறையா? என்று கூச்சலிட்டார்.

மட்டியும் மடையனும் சேர்ந்து கொண்டு, ஐயோ, கொஞ்ச நேரத்துக்கு முன்னால் எங்களோடு சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தீர்கள். அதற்குள் இப்படி நசுங்கிக் கூழ் கூழாக ஆகிவிட்டீர்களே! என்று ஒப்பாரி வைத்தனர்.

அரசனுக்கும் அமைச்சர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. யாரைக் கொன்றேன்? எனக் கேட்டான், மன்னன்.

என் அருமையான சீடர்களான முட்டாளையும், மூடனையும் நீதான் தேர் ஏற்றிக் கொன்று விட்டாய்! என்று குற்றம் சாட்டினார், குரு.

அப்படியானால் எங்கே அவர்கள் உடல்கள்? என்று மந்திரி கேட்டார்.

இதோ இவைதான் என்றபடி, நசுங்கிப் போன தவளையையும், ஓணானையும் காட்டினார், பரமார்த்தர்!

எல்லோருக்கும் வியப்பாக இருந்தது.

இது தவளை அல்லவா? இந்தக் தவளையா உன் சீடன்? எனக் கேட்டான், மன்னன்.

இது ஓணான்! இதுவா உன் சீடன்? யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்? என்று கோபமாகக் கேட்டார், ஓர் அமைச்சர்.

அரசே! நான் எதற்கு உன்னை ஏமாற்ற வேண்டும்? உண்மையாகவே இந்தத் தவளையும் ஓணானும் என் சீடர்கள்தாம். நம்மைப் போல மனிதர்களாகத்தான் இவர்கள் இருந்தார்கள். ஒரு மந்திரவாதியின் சாபத்தால் இப்படி ஆகிவிட்டார்கள்! என்று பொய் கூறினார், பரமார்த்தர்.

தவளைதான் என்றாலும் மனிதர்களைப் போலவே பேசுவான்! ஓணான்தான் என்றாலும் தினம் நூறு பொற்காசு சம்பாதித்துக் கொண்டு வந்து கொடுப்பான்! என்று புளுகினான் மண்டு.

இதைக் கேட்டு, அரசனுக்கும் மந்திரிகளுக்கும் பெரும் சங்கடமாக இருந்தது.

சரி… நடந்தது நடந்து விட்டது. இப்போது என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டார், அமைச்சர்.

என்ன செய்வதா? இவர்களை வைத்துத்தானே எங்கள் பிழைப்பே நடந்தது. அதனால், மறுபடியும் இதே தவளைக்கும் ஓணானுக்கும் உயிர் கொடுங்கள். இல்லாவிட்டால், தினம் நூறு பொற்காசுகளை நீங்கள் தான் தர வேண்டும், என்றார் பரமார்த்தர்.

வேறு வழி தெரியாத மன்னன், மறுபடியும் உயிர் கொடுக்க முடியாது. அதனால் தினம் நூறு பொற்காசு தந்து விடுகிறேன், என்று ஒப்புக் கொண்டான்.

மடத்துக்கு வந்ததும், செத்துப் போன தவளையையும் ஓணானையும் காட்டி ராஜாவையே ஏமாற்றி விட்டோம்! இனிமேல் தினமும் நூறு பொற்காசு கிடைக்கப் போகிறது, என்று குதித்தார்கள்.

முட்டாளையும் மூடனையும் பார்த்து, நீங்கள் இரண்டு பேரும் செத்து விட்டதாகக் கூறி விட்டோம். ஆகையால் இனிமேல் மடத்தை விட்டு வெளியே போகவே கூடாது. தப்பித் தவறி வெளியே போனீர்களானால் மாட்டிக் கொள்வோம். ஜாக்கிரதை! என்று எச்சரிக்கை செய்தார், குரு.

ஒரே வாரம் கழிந்தது. இரவு நேரத்தில் எல்லோரும் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டு இருந்தனர்.

முட்டாளும் மூடனும் மட்டும் விழித்துக் கொண்டனர். சோ! ஊர் சுற்றி ஒரு வாரம் ஆகிறது! யாருக்கும் தெரியாமல் ஒரு சுற்றுச் சுற்றிக் கொண்டு வந்து விடலாம்! என்று ஆசைப்பட்டனர்.

கையில் கொள்ளிக் கட்டையுடன் இருவரும் வெளியே புறப்பட்டனர். இரண்டு தெரு சுற்றுவதற்குள், இரவுக் காவலர்கள் கண்ணில் பட்டு விட்டனர்!

உடனே இருவரையும் துரத்திப் பிடித்தனர். பொழுது விடிந்ததும், மற்ற சீடர்களும் குருவும் கைது செய்யப்பட்டனர்.

ஆளை உயிரோடு வைத்துக் கொண்டே செத்து விட்டதாக ஏமாற்றினீர்கள். அதனால், இப்போது உண்மையாகவே இவர்கள் இருவரையும் தேர் ஏற்றிச் சாகடிக்கப் போகிறேன்! என்றான், மன்னன்.

அதைக் கேட்ட குருவும் சீடர்களும், அலறினார்கள். ஐயோ, மன்னா! தெரியாமல் செய்து விட்டோம். உங்களிடம் இருந்து வாங்கிய பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுகிறோம். மன்னித்து விட்டு விடுங்கள், என்று அரசனின் கால்களில் விழுந்தார்.

சீடர்களும் கீழே விழுந்து வேண்டினார்கள்.
மன்னனும் போனால் போகிறது என்று மன்னித்து அனைவரையும் விடுதலை செய்தான்!

பரமார்த்த குரு கதைகள் – ஓலைச் சுவடி பத்திரிகை

“குருநாதா! நாம் ஒரு ஓலைச் சுவடி பத்திரிகை ஆரம்பித்தால் என்ன?” என்று கேட்டான் முட்டாள்.

“பத்திரிகையா? அதனால் நமக்கு என்ன லாபம்?” என்றார் பரமார்த்தர்.

“தினம் தினம் நம்மைப் பற்றிப் புகழ்ந்து எழுதிக் கொள்ளலாம். நமக்குப் பிடிக்காதவர்களை விருப்பம் போல் திட்டலாம்” என்றான் மூடன்.

“அப்படியானால் நம் பத்திரிகைக்குத் ‘தினப் புளுகு’ என்று பெயர் வைக்கலாம்” என்றார் குரு.

“பெயருக்குக் கீழே “கெட்டிக்காரன் புளுகு – எட்டு நாள் உண்மை!” என்று போடலாம்” என்றான் மண்டு.

அன்று முதல் பரமார்த்தரின் மடம், பத்திரிகை அலுவலகம் ஆயிற்று. பரமார்த்தர், ‘தினப் புளுகு’ நாளிதழின் ஆசிரியராக பதவி ஏற்றுக் கொண்டார். மட்டியும், மடையனும் நிருபர்களாக நியமிக்கப்பட்டனர்.

இருட்டத் தொடங்கியதும், நிருபர்களான மட்டியும், மடையனும் வெளியே புறப்பட்டனர். அப்போது அந்த நாட்டு அரசன், நகர சோதனை செய்வதற்காக மாறு வேடத்தில் புறப்பட்டான்.

அதைக் கண்ட மட்டி, “அரசர் ஏன் மாறு வேடத்தில் போகிறார்?” என்று கேட்டான்.

“திருடுவதற்காக இருக்கும்” என்றான் மடையன்.

“ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்க்கிறாரே, ஏன்?” என்று சந்தேகம் கொண்டான், மட்டி.

“எந்த வீட்டில் கொள்ளையடிக்கலாம் எனத் திட்டம் தீட்டுகிறார்” என்று விளக்கினான், மடையன்

“அப்படியானால் இதைச் சும்மா விடக் கூடாது. முதல் பக்கத்திலேயே பெரிதாக எழுத வேண்டும்!” என்றான் மட்டி.

மடத்துக்கு வந்ததும், திரட்டி வந்த செய்திகளை எழுதத் தொடங்கினார்கள்.

வேலியே பயிரை மேய்கிறது!

பொதுச் சொத்தைக் கொள்ளையடிக்க அரசரே திட்டம்!!

இரவு நேரத்தில், மாறு வேடத்தில் ஒவ்வொரு வீடாக எட்டிப் பார்த்தார்.

இந்தத் தலைப்பின் கீழ், அரசரைக் கண்டிபடித் தாக்கி எழுதினார்கள்.

“தேர்தலில் நம்மை எதிர்த்துப் போட்டி போட்டவர்களைச் சும்மா விடக்கூடாது. பழி வாங்கியே தீர வேண்டும்” என்றான் மண்டு.

“மந்திரிகள் பேரிலும் ஊழல் பட்டியல் தயாரிப்போம்” என்று கத்தினான் மூடன்.

உடனே மட்டியும் மடையனும் கீழ்க்கண்டவாறு செய்திகளை எழுதினார்கள்.

அரசு பணத்தில் அட்டகாசம்! தளபதி தம்புசாமி குடித்து விட்டுக் கலாட்டா!

அறிவுகெட்ட அமைச்சர் அப்புசாமி, ஆறு கட்டு சுருட்டு லஞ்சம் வாங்கினார்.

ஊழலோ ஊழல்! மந்திரி மலர்வண்ணன் மாடி வீடு கட்டிய மர்மம் என்ன?

இளவரசர் இந்திரனின் லீலை! இளம் பெண்ணின் கையைப் பிடித்திழுத்து வம்பு!

இதே போல் தங்களுக்குப் பிடிக்காதவர்களை எல்லாம் விருப்பம் போல் தாக்கி எழுதினார்கள்.

“நம்மைப் பற்றிக் கொஞ்சம் புகழ்ந்து எழுதிக் கொள்வோமே!” என்றான் முட்டாள்.

“என்ன எழுதுவது?” எனக் கேட்டான் மூடன்.

சுருட்டு மன்னர் பரமார்த்தரின் சாதனை! ஒரே நாளில் தொடர்ந்து முப்பது சுருட்டு பிடித்தார்! என்று எழுதினான், முட்டாள்.

‘மண்ணில் புரளுவது எப்படி?’ என்ற தலைப்பில் மண்ணில் புரளுவதால் உடல் நலம் ஏற்படும் எனப் பேட்டி கொடுத்தான் மட்டி!

‘தொப்பை வளர்ப்பது எப்படி?’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை ‘அறிவியல்’ பகுதியில் எழுதினார் பரமார்த்தர்.

‘பரமார்த்தருக்குச் சிலை! மக்கள் போராட்டம்! ‘தத்துவத் தந்தை’ பரமார்த்த குருவுக்கும், அவரது சீடர்களுக்கும் சிலை வைக்க வேண்டும் என்று கோரி, மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்தச் சிலையை அரண்மனைக்கு எதிரேதான் வைக்க வேண்டும் என்றும் மக்கள் கோஷமிட்டபடி ஊர்வலம் சென்றார்கள்!’

இதே போல் ஒவ்வொருவருக்கும் தங்களைப் பற்றிக் கண்டபடி கிறுக்கி வைத்தனர்.

எல்லாவற்றையும் கொண்டு போய்ப் பரமார்த்தரிடம் கொடுத்ததும், “எல்லாம் நன்றாகத்தான் எழுதியிருப்பீர்கள். விடிந்ததும் விற்றுவிட்டு வாருங்கள்” என்று கூறிவிட்டுப் படுத்து விட்டார்.

பொழுது விடிந்ததும், சீடர்கள் பத்திரிகைகளை எடுத்துக் கொண்டு விற்கப் போனார்கள்.

‘தினப் புளுகு வாங்கலையோ, தினப் புளுகு! நாலு பக்கம் நாற்பது காசு!’ என்று கத்தினான் முட்டாள்.

சிலர் ஓடிவந்து ஓலையில் எழுதப்பட்ட பத்திரிகையை வாங்கிப் பார்த்தனர். செய்திகளைப் படித்து விட்டு அதிர்ச்சி அடைந்தனர்.

செய்தி, அரசருக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் எட்டியது. நீதி தவறாத மன்னனைப் பற்றியும், அவனது மந்திரிகளைக் குறித்தும் கண்டபடி தவறா எழுதியதற்காகப் பரமார்த்தர் மீதும், சீடர்கள் மீதும் ‘குற்றப்பத்திரிகை’ வாசிக்கப்பட்டது.

“பரமார்த்தரோ, “இதெல்லாம் உண்மை என்று யார் சொன்னது? பத்திரிகையின் பெயரைப் பாருங்கள்; ‘தினப் புளுகு’ என்று தானே போட்டிருக்கிறோம்” என்று கூறினார்.

அதன் பின் குருவும், சீடர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

பரமார்த்த குரு கதைகள் – சொர்க்கம் என்ற சோற்று மூட்டை

பரமார்த்தர் எங்கோ வெளியே சென்றிருந்தார். சீடர்கள் மட்டும் திண்ணையில் இருந்தனர். அப்போது புளூகன் ஒருவன் அங்கே வந்தான். திண்ணையில் படுத்தபடி, “அப்பாடா! இப்போதுதான் சொர்க்கத்தில் இருப்பது மாதிரி இருக்கிறது!” என்று கூறினான்.

அதைக் கேட்ட மட்டிக்கு வியப்பாக இருந்தது. “அப்படியானால் நீங்கள் சொர்க்கம் போய் இருக்கிறீர்களா?” என்று கேட்டான்.

“நேராக அங்கே இருந்துதான் வருகிறேன்!” என்றான் புளுகன்.

“அடேயப்பா! எங்களால் சந்திரலோகமே போக முடியவில்லை. நீங்கள் எப்படிச் சொர்க்க லோகம் போய் வந்தீர்கள்?” எனக் கேட்டான், மடையன்.

“சொர்க்கத்தில் யார் யார் இருக்கிறார்கள்?” என்று விசாரித்தான் முட்டாள்.

“உங்கள் குருவுக்குக் குருவான சோற்று மூட்டை அங்கே தான் இருக்கிறார்” என்றான் புளுகன்.

“அப்படியா? அவர் நலமாக இருக்கிறாரா?” என்று கேட்டான் மண்டு.

“ஊகும்! பேர் தான் சோற்று மூட்டையே தவிர சோற்றுக்கே தாளம் போடுகிறார்! கந்தல் துணிகளைக் கட்டிக் கொண்டு, பைத்தியம் மாதிரி திரிகிறார்! பார்ப்பதற்குப் பாவமாக இருக்கிறது!” என்றான் புளுகன்.

“பூலோகத்தில் இருந்த போது சுகமாக இருந்திருப்பார்….. அங்கே போய் இப்படிக் கஷ்டப்படுகிறாரே!.. என்று துக்கப்பட்டான் மூடன்.

“ஐயா நீங்கள் மறுபடி சொர்க்கத்துக்குப் போவீர்களா?” என்று மட்டி கேட்டதும், “ஓ நாளைக்கே போனாலும் போவேன்!” என்றான் புளுகன்.

“அப்படியானால், எங்களிடம் இருக்கிற புதுத் துணிகளை எல்லாம் தருகிறோம். கொஞ்சம் பணமும், சுருட்டும் கொடுக்கிறோம். எல்லாவற்றையும் கொண்டு போய், எங்கள் குருவுக்குக் குருவிடம் தந்து விடுங்கள்.”

“புளுகனோ மகிழ்ச்சியோடு “சரி” என்று சம்மதித்தான். உடனþ ஐந்து சீடர்களும் போட்டி போட்டுக் கொண்டு, மடத்தில் இருந்த துணிமணிகள், சுருட்டு, பணம் பூராவையும் எடுத்து வந்தனர்.

“போகும் வழியில் சாப்பிடுங்கள்” என்று புளி சாதம் தந்தான் மட்டி.

எல்லாவற்றையும் மூட்டை கட்டி எடுத்துக் கொண்ட புளுகன், சொர்க்கம் போவதாகக் கூறி விட்டு, ஓட்டம் பிடித்தான்.

வெளியே சென்றிருந்த பரமார்த்தர் திரும்பி வந்தார். “குருவே! நீங்கள் இல்லாத சமயத்தில் கூட, நாங்கள் புத்திசாலித்தனமான செயல் செய்துள்ளோம்” என்று பெருமையோடு சொன்னான் மண்டு.

உங்கள் “குருநாதரான சோற்று மூட்டை சுவாமிக்கு இனி கவலையே இல்லை!” என்றான் மூடன்.

“சொர்க்கத்தில் இருந்து ஆள் அனுப்பி இருந்தார். அவரிடம் உங்கள் குருவுக்குத் தேவையானதை எல்லாம் கொடுத்து அனுப்பினோம்!” என்று முட்டாள் சொன்னான்.

பரமார்த்த குருக்கோ ஒன்றும் விளங்கவில்லை. தாங்கள் செய்த காரியத்தை சீடர்கள் விளக்கியதும், “அடப்பாவிகளா! ஏன் இப்படிச் செய்தீர்கள்?” எனக் குதித்தார்.

“நாங்கள் நல்லது தானே செய்தோம்?” உங்கள் குருநாதர் பசியால் வாடலாமா?” என்று மட்டி கேட்டான்.

“முட்டாள்களே! எனக்குக் குருநாதரே யாரும் கிடையாது! இது தெரியாதா உங்களுக்கு? எவனோ உங்களை நன்றாக ஏமாற்றி விட்டுப் போய் விட்டானே!” என்று பரமார்த்தர் சொன்னதும், சீடர்கள் எல்லோரும் ‘திரு திரு’ என்று விழித்தார்கள்.

“சீடர்களே! நீங்கள் ஏமாந்ததும் ஒரு வகையில் நல்லது தானே! அதே திட்டத்தைப் பயன்படுத்தி, நம் ஊர் அரசனை நாம் ஏமாற்றி விடலாம்!” என்றார் பரமார்த்தர்.

அப்போதே குருவும், சீடர்களும் அரண்மனைக்குப் போனார்கள்.

“மன்னா! நாங்கள் நேற்று ராத்திரி சொர்க்கம் போய் வந்தோம். அங்கே எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள். ஆனால் உங்கள் தாத்தா மட்டும் பிச்சை எடுத்துத் திரிகிறார்!” என்று புளுகினார்.

“ஆமாம் அரசே! ராஜ குடும்பத்தில் பிறந்தவர் இப்படிப் பிச்சை எடுக்கலாமா?” என்று மட்டி கேட்டான்.

மடையனோ, “அவரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது!” என்றான்.

“நாங்கள் மறுபடியும் நாளைக்குச் சொர்க்கலோகமம் போகப் போகிறோம். ஏராளமாகப் பணமும் துணியும் உங்களிடம் இருந்து வாங்கி வரச் சொன்னார்!” என்று புளுகினான் முட்டாள்.

“அப்படியே உயர்ந்த இனக் குதிரையாக இரண்டு வாங்கி வரச் சொன்னார்” என்று தள்ளி விட்டான், மண்டு.

“எல்லாவற்றையும் எங்களிடம் தந்து விடுங்கள். நாங்கள் பத்திரமாகக் கொண்டு போய்க் கொடுத்து விடுகிறோம்!” என்றார் பரமார்த்தர்.

அரசனுக்கோ, கோபம் கோபமாக வந்தது.

“யாரங்கே! இந்த ஆறு முட்டாள்களையும், ஆறு நாளைக்குச் சிறையில் தள்ளுங்கள்!” என்று கட்டளை இட்டான்.

“அரசே! நாங்கள் என்ன தவறு செய்தோம்? செத்துப்போன உங்கள் தாத்தாதான் எங்களை அனுப்பினார்!” என்று ஏமாற்ற நினைத்தார், பரமார்த்த குரு.

அரசனோ, “யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்? இன்னும் என் தாத்தா சாகவே இல்லையே! இதோ உயிரோடு தான் இருக்கிறார்!” என்று சொன்னபடி பக்கத்தில் அமர்ந்திருந்த தாத்தாவைக் காட்டினான்.

“ஐயையோ! அரசரின் தாத்தா செத்து விட்டாரே இல்லையா என்று தெரிந்து கொள்ளாமலேயே இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே!” என்று குருவும் சீடர்களும் அழுதனர்.

பரமார்த்த குரு கதைகள் – நரபலி சாமியார்

பரமார்த்தரும் சீடர்களும் கந்தபுரம் என்ற ஊருக்குள் நுழைந்தார்கள். அப்போது அந்த ஊர் மக்கள் பெரும் அச்சத்தில் இருந்தார்கள்.

அதற்குக் காரணம் நரபலி சாமியார் நாகப்பா அந்த ஊரில் உலவுகிறான் என்பதுதான்!

“குருவே! நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் நமக்கே ஆபத்தாக முடிகிறதே! அது ஏன்?” என்று மட்டி கேட்டான்.

“நாம் எல்லோரும் போன பிறவியில் நிறைய பாவம் செய்து விட்டோம் போலிருக்கிறது!” என்றார் பரமார்த்தர்.

“குருவே! உடனே இதற்கு ஏதாவது பரிகாரம் செய்தே ஆக வேண்டும்” என்று சொன்னான், முட்டாள்.

குருவும் சீடர்களும் அன்று இரவே ரகசியமாக ஆலோசனை செய்தார்கள்.

“குருவே! முனிவர்களைப் போல யாகம் செய்தால் நாம் பாவம் எல்லாம் போய்விடும்” என்றான் மூடன்.

“அதற்கு நிறைய பணம் செலவாகும். நம்மால் முடியாது. வேண்டுமானால், நரபலி கொடுக்கலாம்” என்றார் பரமார்த்தர்.

“நரபலியா? ஐயையோ!” என்று சீடர்கள் அனைவரும் அலறினார்கள்.

“சீடர்களே! நமக்கு நல்ல காலம் பிறக்க வேண்டுமானால் நரபலி கொடுத்தே ஆக வேண்டும் வேறு வழியே இல்லை” என்று முடிவாகச் சொல்லி விட்டார், பரமார்த்தர்.

“அப்படியானால் யாரைப் பலி கொடுப்பது?” என்று கேட்டான் மண்டு.

“வேறு யாரையாவது பிடிக்கப் போனால் மாட்டிக் கொள்வோம்! அதனால்……சீடர்களே… உங்களில் யாராவது ஒருவர்தான் பலியாக வேண்டும்! இந்த நல்ல செயலுக்கு யார் முன் வருகிறீர்கள்?” என்றார் பரமார்த்தர்.

அவ்வளவுதான்!

“ஐயோ நான் பலியாகிவிட்டால், அப்புறம் உங்கள் சுருட்டுக்குக் கொள்ளி வைப்பது யார்?” என்று அழ ஆரம்பித்தான் முட்டாள்.

“ஐயையோ நான் மாட்டேன்” என்று மூடனும் மூக்கால் அழுதான்.

“குருவே! நாங்களும் பலியாக மாட்டோம்” என்றபடி மற்ற சீடர்களும் தூர ஓடப் பார்த்தனர்.

பரமார்த்தருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நெருதூரம் தாடியை உருவிக் கொண்டு யோசனை செய்தார்.

“சரி, சீடர்களே! நீங்கள் யாரும் பலியாக வேண்டாம்! வேறு ஒரு வழி தோன்றுகிறது. அதன்படிச் செய்வோம்” என்று சொல்லிப் படுத்து விட்டார் பரமார்த்தர்.

மறுநாள், சீடர்கள் அனைவரும் “எங்கள் குரு நரபலி கொடுக்கப் போகிறார்” என்று ஊர் முழுவதும் பெருமையோடு சொல்லிக் கொண்டு திரிந்தார்கள்.

அதனால் அந்த ஊர் அரசனுக்கும் செய்தி எட்டியது. பரமார்த்தரை, நரபலி சாமியார் நாகப்பா என்று தவறாக நினைத்து விட்டான்.

“நாகப்பாவையும் அவன் கூட்டத்தையும் கையும் மெய்யுமாகப் பிடித்து வாருங்கள்” என்று ஆணையிட்டான்.

நரபலி இடுவதற்காகக் குறிப்பிட்ட நாளும் வந்தது! பரமார்த்தரும் சீடர்களும் யாருக்கும் தெரியாமல் பதுங்கிப் பதுங்கிச் சென்று கொண்டு இருந்தார்கள்.

ஊர்க் கோடியில் இருந்த காளி கோயிலை அடைந்ததும் பரமார்த்தர் பரம சந்தோஷம் அடைந்தார்.

மண்டை ஓட்டு மாலையும், நீளம் நீளமான பற்களுமாக இருந்த பத்ரகாளி சிலையைப் பார்த்த சீடர்கள் பயந்து நடுங்கினார்கள். “ஏ, காளியம்மா! வாக்குக் கொடுத்தபடி உனக்கு நரபலி கொடுக்கப் போகிறோம்! நீதான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். ஜெய் காளி” என்று காளியின் கால்களில் விழுந்து வணங்கினார் பரமார்த்தர்.

சீடர்களும் ‘தடால்’ என்று விழுந்து கும்பிட்டார்கள்.

நடு இரவு ஆகிவிட்டதை அறிவிப்பதற்கு, அரண்மனையில் இருந்து மணியோசை கேட்டது.

அப்போது, கோயிலைச் சுற்றிலும் மறைந்தபடி நின்று கொண்டிருந்த அரண்மனைக் காவலர்கள் சுறுசுறுப்பானார்கள்.

“சீடர்களே! சீக்கிரம் நாம் கொண்டு வந்த உயிரைப் பலி பீடத்தின் மீது வையுங்கள்!” என்று அவசரப்படுத்தினார், பரமார்த்தர்.

சீடர்களும் அவசரம் அவசரமாகத் தாங்கள் கொண்டு வந்த உயிரைப் பலி பீடத்தில் வைத்தனர்.

“ஓம்…ரீம்…பத்ரகாளி!…… இந்தா நரபலி!” என்று ஆவேசமாய்க் கத்தியபடி, பலி பீடத்தின் மீது கொடுவாளை வீசினார், பரமார்த்தர்.

உடனே அரண்மனை வீரர்கள் ஓடிவந்தது பரமார்த்தரையும் சீடர்களையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

பரமார்த்தர் யாரைப் பலியிட்டார் என்று எல்லோரும் ஆவலோடு பலி பீடத்தைப் பார்த்தனர்.

அங்கே… ஒரு பல்லி, இரண்டு துண்டாகிக் கிடந்தது.

அரண்மனை வீரர்களுக்கு ஒரே அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

“சே, நரபலி சாமியார் என்று நினைத்தோம். இவர் நரபல்லி சாமியாராக அல்லவா இருக்கிறார்” என்றபடி பரமார்த்தரையும் சீடர்களையும் அரசனிடம் அழைத்துச் சென்றார்கள்.

மன்னா! ஏன் எங்களைக் கைது செய்தாய்? நாங்கள் செய்த தவறு என்ன?” என்றார் பரமார்த்தர்.

“நரபலி கொடுப்பது எங்கள் நாட்டுச் சட்டப்படி குற்றம்” என்றான் மன்னன்.

“நாங்கள் என்ன, மனிதர்களையா பலி கொடுத்தோம்? கேவலம் ஒரு பல்லியைத்தானே கொன்றோம்” என்று சொன்னார் பரமார்த்தர்.

“அதுதான் நீங்கள் செய்த தவறு! எங்கள் நாட்டு மக்களின் குலதெய்வம் பல்லி! என் நாட்டுக் கொடியில் இருப்பதும் பல்லி சின்னம்! அந்தப் பல்லியைக் கொன்று, அவமரியாதை செய்த குற்றத்திற்காக உங்கள் அனைவரையும் சிறையில் இட ஆணையிடுகிறேன் என்று கட்டளையிட்டான், கந்தபுர மன்னன்.

ஐயோ! நரபலி கொடுத்தால் நல்லது நடக்கும் என்று நினைத்தோம். அதுவும் ஆபத்தில் கொண்டு வந்து விட்டு விட்டதே” என்று புலம்பியபடி குருவும் சீடர்களும் சிறைக்குச் சென்றார்கள்.

பரமார்த்த குரு கதைகள் – காணாமல் போனது யார்?

பொழுது விடியாத பின்னிரவு நேரத்தில் பரமார்த்த குரு பயணம் செய்துகொண்டிருந்தபோது, ஆறு ஒன்று குறுக்கிட்டது. ஆறு வேகமாக சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது.

ஆற்றில் சல சல இரைச்சல் இருப்பதால் அது விழித்துக் கொண்டிருக்கிறது என்று குரு கருதினார். அதனால், இந்த வேளையில் ஆற்றைக் கடப்பது ஆபத்து எனப் பயந்தார். எனவே, ஆறு தூங்கும் வேளையில் கடப்பது நல்லது என்று முடிவு செய்தார்.

ஆற்றின் கரையில் இருந்த ஒரு மரத்தடியில் தனது சீடர்களுடன் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

சிறிது நேரம் கழித்து, குரு தனது சீடர்களில் ஒருவனான மட்டியை அழைத்தார். அவன் கையில் ஒரு கொள்ளிக் கட்டையைக் கொடுத்து, ஆற்றின் அருகில் சென்று, அது இன்னும் விழித்துக் கொண்டிருக்கிறதா? தூங்கத் துவங்கிவிட்டதா? என்று பார்த்து வருமாறு அனுப்பினார்.

மட்டி, தன் குருவின் கட்டளையை ஏற்று கொள்ளிக் கட்டையைக் கையில் பிடித்துக் கொண்டு, ஆற்றை நெருங்கினான்.

ஆற்று நீர் தன் மேல் பட்டுவிடாத படி, எட்டி நின்று கொண்டு, கொள்ளிக்கட்டையை நீரில் அமிழ்த்தினான். அது சுரீரென்று ஒலியுடன் அணைந்து விட்டது.

அந்த ஒலியைக் கேட்டதும் மட்டி பதறிப் போனான். வேகமாகக் குருவை நோக்கி ஓடி வந்தான்.

குருவே ஆறு விழித்துக் கொண்டிருக்கிறது. கொள்ளிக் கட்டையால் அதைக் தொட்டவுடன் சீறி விட்டது. நல்ல வேளை தப்பியோடி வந்து விட்டேன் என்று பயந்து கொண்டே கூறினான்.

அதனைக் கேட்ட குரு, “நீ போய்ச் சோதித்துப் பார்த்துவிட்டு வந்தது நல்லதாய்ப் போயிற்று. ஆறு விழித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நாம் ஆற்றைக் கடந்தால் ஆற்றின் பொல்லாத கோபத்துக்குள்ளாகியிருப்போம். அது நன்றாகத் தூங்கும் வரை பொறுத்திருந்து, அதன்பின் பயணத்தைத் தொடர்வோம்” என்று கூறிவிட்டு அமர்ந்தார்.

சீடர்கள், அவரவர்களுக்குத் தெரிந்த கதைகளைக் கூறிப் பொழுதைப் போக்கிக்
கொண்டிருந்தனர். பொழுது வெளுக்க ஆரம்பித்தது. அயர்ந்து தூங்கிய குரு திடுக்கிட்டு எழுந்தார். மடையனை அழைத்தார். “மடையா! பொழுது, புலர ஆரம்பித்துவிட்டது. இப்போதாவது ஆறு தூங்குகிறதா, விழித்துக் கொண்டிருக்கிறதா என்று பார்த்துவிட்டு வா” என்று கூறினார்.

உடனே மடையன், மட்டி கொண்டு வந்த போட்ட அணைந்து போன கொள்ளிக் கட்டையை எடுத்துக் கொண்டு ஆற்றை நெருங்கினான். கட்டையை நீருக்குள் விட்டான். எந்தவித ஒலியும் ஏற்படவில்லை. அவனுடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வேகமாக ஓடி வந்தான்.

“குரு! இப்போது ஆறு நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டு இருக்கிறது” என்று கூறினான்.

“அப்படியா, இதுதான் சரியான வேளை யாரும் எந்த ஒலியும் எழுப்பாமல் மிகவுவம் அமைதியாக வாருங்கள். சப்தம் போட்டால் ஆறு விழித்துக் கொள்ளும்” என்று தன் சீடர்களை எச்சரித்து விட்டு மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து குரு ஆற்றை நோக்கி நடக்க, சீடர்களும் பின் தொடாந்தனர். பயந்து கொண்டே ஆற்றைக் கடந்து, ஒரு வழியாக அக்கரை வந்து சேர்ந்தனர்.

தன்னுடைய சீடர்கள் அனைவரும் பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டார்களா என்று சரிபார்க்க குரு எண்ணினார். தனது சீடர்களில் ஒருவனை அழைத்து, “சீடனே! என்னையும் சேர்த்து நாம் ஆறு பேர். நாம் அனைவரும் பத்திரமாக இருக்கிறோமா? நம்மில் யாரையாவது அந்தப் பொல்லாத ஆறு விழுங்கிவிட்டதா? எனச் சரிபார்த்து எண்ணிக்கூறு?” என்று கூறினார்.

அபிஷ்டு தன் முன்னால் நிற்பவர்களை ஒன்று இரண்டு என்று எண்ண ஆரம்பித்தான். தன்னை மட்டும் சேர்க்காமல் மற்றவர்களை மட்டும் எண்ணி, “குருவே, ஐந்து பேர்தான் உள்ளோம்” என்ற கூறினான்.

ஆறு பேரில் ஒருவரைக் காணோம் என்று குரு திடுக்கிட்டுப் போனார். தங்களில் ஒருவரை ஆறு விழுங்கிவிட்டது என்ற அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

அதனால், குரு மீண்டும் எண்ணிப் பார்க்குமாறு மற்றொரு சீடனிடம் கூறினார். அவனும் தன்னை விட்டுவிட்டு மற்றவர்களை மட்டும் எண்ணி விட்டு, “குருவே, மோசம் போனோம். அபிஷ்டு எண்ணியது சரியே! நம்மில் ஒருவரைக் காணோம். ஐவர்தான் உள்ளோம் என்று அலறினான்.

இப்படியே மற்ற சீடர்களும், குருவும் தங்களைச் சேர்க்காமலேயே எண்ணி ஐவர்தான் என்று முடிவு செய்தனர். தங்களில் ஒருவரை இழந்துவிட்ட சோகத்தில் அழுதுகொண்டிருந்தனர்.

குருவுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. தன் சீடர்களில் ஒருவரை அபகரித்துக் கொண்ட ஆற்றின் மீது கடுங் கோபம் கொண்டார். அதனைப் பலவாறு பழித்துக் கூறி சாபமிட்டார்.

குருவும் சீடர்களும் துயரம் தாங்காமல் அழுது புலம்ப ஆரம்பித்துவிட்டனர். ஆற்றோடு போனவன் தங்களில் யார் என்று அறிந்து கொள்ளாமலேயே துக்கம் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர்.

அந்த நேரத்தில் வழிப்போக்கன் ஒருவன் குருவும், சீடர்களும் இருந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவர்கள் துயரத்தில் ஆழ்ந்திருப்பதைக் கண்டு அனுதாபம் கொண்டான். காரணம் என்ன என்று அவர்களிடம் விசாரித்தான். சீடர்கள் நடந்ததைக் கூறி மேலும் அழுதனர். வழிப் போக்கன் அவர்களை எண்ணிப் பார்த்தான். அவர்களின் மடமையை எண்ணி மனதிற்குள் சிரித்துக் கொண்டான்.

“அன்பர்களே! நடந்தது நடந்ததாக இருக்கட்டும். போனவர்களை மீட்கும் மந்திர சக்தி என்னிடம் உண்டு. உங்களில் ஆறு விழுங்கிய நபரை மீட்டுத் தருகிறேன். அதற்கு என்ன சன்மானம் கொடுப்பீர்கள்?” என்று வழிப்போக்கன் கேட்டான். “ஐயா, எங்களில் காணாமல் போனவரைத் தாங்கள் மீட்டுக் கொடுத்தால் எங்களிடம் உள்ள பணம் முழுவதையும் தந்து விடுகிறோம். தங்களுக்கு நாங்கள் என்றும் நன்றிக் கடன் பட்டவர்களாக இருப்போம்” என்று, குரு நெகிழ்ந்து கூறினார்.

வழிப்போக்கன் தன் கையில் ஒரு குறுந்தடி வைத்திருந்தான். அதனை எடுத்தவாறு, “இந்தக் கோலில்தான் மந்திர சக்தி இருக்கிறது. நீங்கள் வரிசையாக நில்லுங்கள். நான் இந்தத் தடியால் முதலில் நிற்பவர் முதுகில் தட்டுவேன். அவர் ‘ஒன்று’ என்று கூறிவிட்டுத் தன் பெயரைக் கூறவேண்டும்” என்று கூறினான்.

வழிப்போக்கன் கூறியவாறே, குரு வரிசையில் முதலிலும் அதனையடுத்து சீடர்களும் வரிசையாக நின்றனர். முதலில் குருவின் முதுகில் கம்பால் தட்டினான். அவர், “ஒன்று. என் பெயர் பரமார்த்த குரு” என்று கூறினார். அடுத்தவனைத் தட்டியதும் ‘இரண்டு’ என்று கூறித் தன் பெயரையும் சொன்னான். இவ்வாறே மற்றவர்களும் முதுகில் தட்டியதும் தங்கள் பெயருடன் எண்ணிக்கையையும் கூறினர். கடைசியாக நின்றவன் “ஆறு, என் பெயர் மூடம்” என்ற கூறியதும் அவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி தாங்கவில்லை. காணாமல் போனவன் கிடைத்து விட்டான், இப்போது ஆறு பேர் உள்ளோம் என்று கூறி ஆனந்தக் கூத்தாடினர்.

தங்களில் ஒருவனை மீட்டுத் தந்த வழிபோக்கனின் அதிசய ஆற்றலை எண்ணி வியந்தனர். அவனைப் போற்றிப் புகழ்ந்து, தங்களிடமிருந்த பணம் முழுவதையும் தந்தனர்.

அதிருஷ்டத்தை நினைத்துக் கடவுளுக்கு நன்றி கூறினான் போக்கன்.

பரமார்த்த குரு கதைகள் – மருத்துவத் தொழில்

“குரு நாதா! இனிமேல் நாம் மருத்துவத் தொழில் செய்தால் என்ன?” எனக் கேட்டான், முட்டாள்.
“அதனால் நமக்கு என்ன பயன்?” என்று பரமார்த்த குரு கேட்டார்.

“பணம் கிடைக்கும். அத்துடன் புண்ணியமும் கிடைக்கும்” என்றான், மூடன்.

“அப்படியே செய்வோம்” என்றார் குரு.

“மனிதர்களுக்கு மட்டும்தானா?” என்று கேட்டான் மண்டு.

“மனிதர்க்கும் வைத்தியம் செய்வோம்; மாட்டுக்கும் செய்வோம்; குழந்தைக்கும் செய்வோம்; குரங்குக்கும் செய்வோம்!” என்றான் மட்டி.

பரமார்த்தரும் அவரது ஐந்து சீடர்களும் மருத்துவம் செய்யும் செய்தி ஊர் முழுதும் பரவியது.

காய்ச்சலால் அவதிப்பட்ட ஒருவன் வந்தான். அவன் உடலைத் தொட்டுப் பார்த்த மடையன், “குருவே! இவன் உடம்பு நெருப்பாகச் சுடுகிறது!” என்றான்.

“அப்படியானால் உடனே உடம்பைக் குளிர்ச்சி அடையச் செய்ய வேண்டும்!” என்றார் பரமார்த்தர்.

“அதற்கு என்ன செய்வது?” எனக் கேட்டான் முட்டாள்.

“இந்த ஆளைக் கொண்டுபோய்த் தொட்டியில் உள்ள தண்ªரில் அழுத்தி வையுங்கள். ஒரு மணி நேரம் அப்படியே கிடக்கட்டும்” என்றார் குரு.

உடனே மட்டியும் மடையனும் அந்த நோயாளியைத் தூக்கிக் கொண்டு போய், தொட்டி நீரில் போட்டனர். முட்டாளும் மூடனும் மாற்றி மாற்றி அவனை நீரில் அழுத்தினார்கள்.

நோயாளியோ “ஐயோ, அம்மா!” என்று அலறியபடி விழுந்தடித்து ஓடினான்.

கொஞ்ச நேரம் கழித்து ஒரு கிழவி வந்தாள். “கண் வலிக்கிறது” என்றாள்.

“இப்போது நேரமில்லை. உண் கண்ணை மட்டும் தோண்டி எடுத்துக் கொடுத்து விட்டுப்போ. சரி செய்து வைக்கிறோம்!” என்றான் முட்டாள்.

கிழவியோ, “ஐயையோ” என்று கத்திக் கொண்டு ஓடினாள்.

சிறிது நேரம் சென்றது. “உடம்பெல்லாம் வெட வெட என்று நடுங்குகிறது என்றபடி ஒருவன் வந்தான்.

“சும்மா இருப்பதால்தான் ஆடுகிறது. உடம்பு முழுவதும் கயிறு போட்டுக் கட்டி விடுங்கள்! அப்போது எல்லாம் சரியாகிவிடும்” என்றார் பரமார்த்தர்.

முட்டாளும் மூடனும், வந்தவனை இழுத்துக் கொண்டு சென்று தூணில் கட்டி வைத்தனர்.

கட்டி வைத்த பிறகும் அவன் உடம்பு நடுங்குவதைக் கண்ட மட்டி, “குருதேவா! இது குளிரால் வந்த நோய். இது தீர வேண்டுமானால், இவன் உடம்பைச் சூடாக்க வேண்டும்!” என்றான்.

அதைக் கேட்ட முட்டாள் தன் கையிலிருந்த கொள்ளிக் கட்டையால் நோயாளியின் உடல் முழுவதும் வரிவரியாகச் சூடு போட்டான்.

வலி தாங்காத நோயாளி சுருண்டு விழுந்தான்.

“பல் வலி தாங்க முடியவில்லை. என்ன செய்வது?” என்று கேட்டபடி வேறொருவர் வந்தார்

“வலிக்கிற பல்லை எடுத்து விட்டால் சரியாகி விடும்” என்றார் பரமார்த்தர்.

சீடர்களோ, ஆளுக்குக் கொஞ்சமாக எல்லா பல்லையும் கத்தியால் தட்டி எடுத்துப் பொட்டலமாகக் கட்டிக் கொடுத்தனர்!

“இனிமேல் உனக்குப் பல்வலியே வராது!” என்றார் பரமார்த்தர்

சற்று நேரம் கழிந்தது. யானைக்கால் வியாதிக்காரன் ஒருவன் வந்தான்.

“உலகிலேயே இதற்கு இரண்டு வகையான வைத்தியம்தான் இருக்கிறது. நன்றாக இருக்கிற காலை வெட்டிவிட்டு, அந்த இடத்தில் யானையின் காலை ஒட்டி விட வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் காலுக்குச் சமமாக இந்தக் காலில் உள்ள சதையைச் செதுக்கி எடுத்து விட வேண்டும்!” என்றார் பரமார்த்தர்

யானைக்கால் வியாதிக்காரனோ, “காலை விட்டால் போதும்” என்று தப்பினான்.

“ஐயா! ஒரே இருமல். தொடர்ந்து இருமிக் கொண்டே இருக்கிறþன்” என்றபடி வேறு ஓர் ஆள் வந்தார். வாயைத் திறப்பதால்தானே இருமல் வருகிறது. வாயை மூடிவிட்டால் என்ன? என்று நினைத்தார், பரமார்த்தர். “இவர் வாயை அடைத்து விடுங்கள்!” என்று கட்டளை இட்டார்.

குருவின் சொல்படி, கிழிந்த துணிகளை எல்லாம் சுருட்டி, இருமல்காரனின் வாயில் வைத்துத் திணித்தான் மட்டி.

“என் ஆடு சரியாகத் தழை தின்னமாட்டேன் என்கிறது” என்றபடி ஒருவன் வந்தான். அந்த ஆட்டைக் கண்ட குரு, “தொண்டையில் ஏதாவது அடைத்துக் கொண்டு இருக்கும்” என்றார்.

“வாயைப் பெரிதாக ஆக்கிவிட்டால் போதும்” என்றான் மடையன்.

கத்தி ஒன்றைத் தூக்கிக் கொண்டு வந்தான், முட்டாள்.

அதைப் பிடுங்கி, ஆட்டை வெட்டப் போனான் மூடன்.

பயந்துபோன ஆட்டுக்காரன், ஆட்டை இழுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான்.

குருவும் சீடர்களும் வைத்தியம் என்ற பெயரில் கண்டபடி நடந்து கொள்வதைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டனர். ஊர் பெரியவர்கள் கூடி இனி குருவையும் சீடர்களையும் ஊருள் நுழையவிடக் கூடாதென முடிவெடுத்தனர்..

சிறுவர் கதைகள் – மந்திரியான காக்கை அண்ணாச்சி

மங்கள தேவி கோட்டத்தின் கீழ்ப்பகுதியல் குமுளி மலைத் தொடரும். மேற்பகுதியில் தேக்கடி மலைத் தொடரும் காடுகளால் சூழப்பட்டு இருந்தன.

அன்று குமுளி மலைப்பகுதி காடு பரபரப்பாயிருந்தது. காரணம் காட்டுக்குள்ளே அன்று தேர்தல் நடந்தது.

மிருகங்களும், பறவைகளும் மற்றும் புழு பூச்சிகளும் கூட தேர்தலில் கலந்து கொண்டன.

வேங்கைப்பள்ளம் என்ற இடத்தில் இந்தத் தேர்தல் நடந்தது. தோதகத்தி மரங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் செந்நாய்கள் அதிகம் இருந்தன.

ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தத் தேர்தல். தேர்தலை இந்த முறை செந்நாய்கள் ஏற்பாடு செய்திருந்தன.

இந்தத் தேர்தலில் சுகாதார மந்திரிக்கு மட்டும் மும்முனைப் போட்டி வந்துவிட்டது. சுகாதார மந்திரிக்குப் போட்டி இடுபவர் தங்களை தூய்மையானவர்கள் என்று நிரூபிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களுக்கு ஓட்டு கிடைக்கும்.

சுகாதார மந்திரிப் பதவிக்கு பன்றியும், பட்டாம் பூச்சியும், காக்கையும் போட்டியிட்டன.

போட்டியைத் தவிர்க்க முயற்சி செய்தும் முடியாமல் போனது. எனவே ஓட்டு எடுப்பு நடத்துவது அவசியமாகி விட்டது.

சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட குரங்கு தேர்தலை நடத்தியது. பல ஆண்டுகள் பிரதமராக இருந்த சிங்கம் வயதான காரணத்தால் சபாநாயர் பதவிக்கு நின்று தோற்றுப் போனது.

காட்டரசுத் தலைவராக முயல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டது.

பிரதமர் பதவிக்கு மட்டும் போட்டி கடுமையாக இருந்தது.

ஆரம்பத்தில் காட்டு எருமையை ஆதரித்த குரங்குகள் திடீரென்று செந்நாயை ஆதரித்தன. தவிர செந்நாய்கள் அராஜகத்திற்கு பயந்து மான்கள் முழுமையாக செந்நாயை ஆதரித்தன. செந்நாய் பிரதமராகி விட்டது.

நிதி மந்திரியாக வரிக்குதிரையும், பாதுகாப்பு மந்திரியாக ஓநாயும், உணவு மந்திரியாக கழுதையும், சொற்பமான ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தன.

வெளியுறவு மந்திரியாக எவ்வித போட்டியும் இன்றி நரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சபாநாயகர் குரங்கார் முதலில் பன்றியாரை அழைத்துத் தனது தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறும்படி பணித்தார்.

பன்றியார் வேகமாக மேடையை நோக்கி நடந்தார். வழியில் நின்றிருந்த யானையார் பட்டென்று நகர்ந்து அவருக்கு வழி விட்டார்.

பன்றியார் மேடைக்கு வந்ததும் காட்டரசுத் தலைவர் நாற்றம் தாள முடியாமல் தனது பெரிய காதுகளை தேய்த்துக் கெண்டார்.

“என்னுடைய வாழ்க்கையே சுகாதாரப் பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டவன். அது மட்டுமல்ல.. யானையார் போன்ற பெரியவர்கள் கூட என்னைக் கண்டதும் விலகி நிற்பார்கள். எனவே என்னை உங்கள் சுகாதார மந்திரியாக தேர்ந்தெடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்…..” என்று சொல்லிவிட்டுப் போய் உட்கார்ந்தார்.

அடுத்து தனது சிவப்பு நிற இறக்கைகளை விரித்துப் பறந்து வந்தது பட்டாம்பூச்சி. முயலார் பட்டாம் பூச்சியின் வண்ணத்தைப் பார்த்து மயங்கினார்.

தனது சிறகுகளை அசைத்தபடி பேசியது பட்டாம்பூச்சி.

“அண்ணாச்சி பன்றியார் வந்து நின்று பேசிய இடத்தை சுத்தம் செய்யவே தனியாக ஒரு சுகாதார மந்திரியைப் போட வேண்டும்” என்றதும் கொல்லென்று எல்லாம் சிரித்தன.

“என்னைப் பாருங்கள்.. என் சிறகுகளைப் பாருங்கள். என்னைப் போல நீங்களும் அழகாக இருக்க உங்கள் வாக்குகளை எனக்கே போடுங்கள்” என்று சொல்லிவிட்டுப் பறந்து சென்றது.

அடுத்து காகம் வந்தது….”பன்றியார் வந்தார் நான் சுகாதாரத்தின் அவதாரம் என்றார்.. நானே சுத்தம் செய்கிறேன் என்றார்….வாஸ்தவம் தான். அவர் இருக்கும் இடம் எப்படிப் பட்ட இடம் என்று நமக்குத் தெரியாதா? அது கிடக்கட்டும். நமது பட்டாம்பூச்சி அண்ணாச்சி குடிப்பது தேன்தான் இல்லை என்று சொல்லவில்லை. அவர் படுப்பது எங்கு என்று தெரியுமா? பிராணிகளின் மலம்.

மலத்தை உண்பவருக்கு உங்கள் ஓட்டா?

மலத்தில் உறங்குபவருக்கு உங்கள் ஓட்டா?”
என்ற கேள்வியுடன் பறந்து சென்றார் காக்கையார்.

அதன் பின்னர் பறவைகளும், மிருகங்களும் இவற்றை ஆதரித்தும், தாக்கியும் பேசி ஓட்டு வேட்டை ஆடின.

கடைசியாக நரியாரை எழுந்து பேசும்படி எல்லாம் வற்புறுத்தின.

நரியார் தனது வாலால் முகத்தைத் துடைத்தபடி மேடையில் ஏறினார். எப்போதும் நரியார் பேச்சுக்கு பரவலான மரியாதை இருந்தது.

“காட்டரசர் நாமம் வாழ்க” என்று பேச ஆரம்பித்தார் நரியார்.

“பன்றியார் சொன்னது போல்….. அவர் மலக்கழிவுகளை உண்டு சுகாதாரத்திற்கு வழி செய்கிறார் என்பது வாஸ்தவம்தான்…. பட்டாம் பூச்சியார் சுத்தமான தேனைக் குடிக்கிறார். பார்க்க அழகாக கவர்ச்சியாக இருக்கிறார் அதுவும் சரிதான்”

நரியார் சொன்னதை எல்லா பறவைகளும் மிருகங்களும் உன்னிப்பாய் கவனித்தன.

“காக்கையாரும் பன்றிகளைப் போல அசுத்தங்களை உண்டு சுத்தப்படுத்துகிறார்.. இது நமக்குத் தெரியும்” என்று சொல்லிவிட்டு நிறுத்தியது. முக்கியமான செய்தியைச் சொல்லும் போது நரியார் இப்படி நின்று நிதானித்துப் பேசுவார்.

“சுத்தம் என்பது தானும் சுத்தமாக இருக்க வேண்டும். தனது சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மூவரில் இதற்குப் பொருத்தமானவர்?” என்ற கேள்வியுடன் மீண்டும் ஒருமுறைத் தனது பேச்சை நிறுத்தினார்.

யானையார் கூட தனது காதுமடல்களை அசைக்காமல் கேட்டுக் கொண்டிருந்தார்.

“பன்றியாரின் உடம்பையும், உறைவிடத்தையும் சுத்தமானது என்று சொல்ல முடியாது. மலத்திலும் மூத்திரத்திலும் படுத்து உறங்கும் பட்டாம் பூச்சியாரும் சுகாதாரச் சூழலில் வாழ்கிறார் என்று சொல்ல முடியாது. ஆனால்” கொக்கி போட்டு நிறுத்தினார் நரியார்.

இம்மியளவு இலை விழுந்தால் கூட இடிச்சத்தம் போல் கேட்கும் அளவுக்கு அமைதி.

மீண்டும் நரியார் ஆரம்பித்தார்.

“காக்கையார் உடல் சுத்தம். உள்ளம் சுத்தம். அவர் சுற்றுப் புறமும் சுத்தமானது. நாள் தவறினாலும் அவர் குளியல் தவராது. இனி ஓட்டுப் போடுவது உங்கள் சுதந்திரம்” என்று சொல்லிவிட்டு நடந்தார் நரியார்.

இப்போது எல்லோருக்கும் ஒரு தெளிவான வழியைக் காட்டியது போல் தமக்குள் பேசிக் கொண்டனர்.

சற்று நேரத்தில் ஓட்டெடுப்பு நடந்தது. செந்நாய் அமைதிப் படை தில்லுமுல்லுகள் நடக்காமல் பார்த்துக் கொண்டன.

ஓட்டுகள் எண்ணப்பட்டன. காக்கையார் சுத்தம் சோறுபோடும் என்பது உங்களுக்குத் தெரியும் ஆனால் தேர்தலில் ஜெயிக்கவைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று சபாநாயகர் குரங்கார் ஜோக் அடிக்க எல்லோரும் சிரிக்க குமுளி மலைக் காடே அதிர்ந்தது.

சிறுவர் கதைகள் – யானை பல் விளக்குமா?

புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான்.

“ஏண்டா இன்னைக்கு குளிச்சியா” என்றாள் அப்புவின் அம்மா.

“நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஓடினான். அப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான்.

வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது.

அடுத்த நாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம்தான் வந்தார்.

“ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா?” என்று ரகசியமாக அவனிடம் கேட்டார்.

“மறந்திட்டேன் சார்” சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. பல நாட்கள் அப்பு பல் விளக்காமலேகூட பள்ளிக்குப் போயிருக்கிறான்.

அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், “யானை பல் விளக்குகிறதா” என்று கிண்டலாகப் பதில் சொல்வான்.

அப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை.

அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது.

ஆனால் பையன்கள் இவனை “அழுக்குமாமா” என்று அழைத்தனர்.

அரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

“டேய் குளிச்சிட்டுப் போய் படிடா” இது அப்புவின் அம்மா.

“குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா” என்பான் அப்பு.

பரிட்சைக்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான்.

மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது.

அப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை.

விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.

அடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

“பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து” என்றார் டாக்டர்.

அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போகமுடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான்.

“தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சினையெல்லாம் வரவே வராது” என்றார் டாக்டர்.

அப்பு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான்.

அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது.

அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. “முதல் மார்க் ரங்கராஜன்” என்று ஆசிரியர் பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான்.

ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார்.

“சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்” என்றார். அப்பு மௌனமாக இருந்தான்.

அடுத்தநாள் அவன் பள்ளிக்கு “பளிச்” என்று வந்தான்.

“அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா” என்று ஒருவன் சொல்ல பையன் “கொல்” லென்று சிரித்தனர்.

அப்புவுக்கும் சிரிப்பு வந்தது

சிறுவர் கதைகள் – தேவதை

மாலைப்பொழுது வானத்துக்கு மஞ்சள் கலந்த இளஞ்சிவப்பு நிறத்தைக் கொடுத்து திரும்ப வாங்கிய வண்ணம் கதிரவன் மேற்குத் தொடர்ச்சி மலைக்குள் புகுந்து கொண்டிருக்கிறது.

ஆறாம் வகுப்புப் படிக்கும் கணேஷ் பள்ளியில் இருந்து வந்தவுடன் புத்தகப்பையை இறக்கிவிட்டு அடுப்படியில் கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்திருந்த பொரிகடலையை இரண்டு வாய் அள்ளிப்போட்டுக் கொண்டு தெருவின் முற்றத்தில் விளையாடப் போய்விட்டான்.

இருள் ஆக்ரமித்துக் கொண்டிருக்கிறது.

“ஏய்…கணேஷ்! விளையாடியது போதும், வந்து படிடா” என்று அம்மா கூவ, ஓடிவந்தான்.

“போய் கை, கால் அலம்பிட்டு மாடி மேலே போயி படி”

கணேஷ் நெடுநேரம் மும்முரமாகப் படித்துக்கொண்டிருந்தான்.

“கணேஷ் நேரமாயிடுச்சு. சாப்பிட்டு தாத்தா கூடப் போய்ப்படு. காலையில் படிக்கலாம்” என்றாள் அம்மா.

சாப்பிட்டுவிட்டு தாத்தாவுடன் படுத்தான். தூக்கம் வரவில்லை. “தாத்தா ஒரு கதை சொல்லுங்க தாத்தா” என்றான்.

பேரக்குழந்தை கேட்கிறதே என்று தாத்தாவும் கதை கூற ஆரம்பித்தார்:

ஒரு ஊர்ல ஒரு ராஜா. அவரு ஆட்சியில மாதம் மும்மாரி பொழிந்தது. அந்த ராஜாவுக்கு மீனான்னு ஒரு ராஜகுமாரி. தேவதை போல கொள்ளை அழகு. குருகுலத்துல நல்லா பாடம் படிச்சும் வீர, தீர வித்தைகளை கத்துகிட்டும் இருந்தது. அழகும் அறிவும் இணைந்த பொக்கிஷம் என்று நாட்டு மக்கள் இளவரசியைப் புகழ்ந்தார்கள்.

மீனாவுக்காகவே வனம் போன்ற அழகுடன் அரண்மனைக்குப் பக்கத்தில் நந்தவனம் அமைத்துக் கொடுத்தார் ராஜா. மாதம் ஒரு தடவை அரண்மனையை விட்டு வெளியே வரும் மீனா, நந்தவனம் வந்து உலவிவிட்டுப் போவாள்.

அந்த ஊர் மக்கள் எல்லாம் மகிழ்ச்சியா இருக்கிற நேரத்துல அந்த ஊருக்குள்ள ஒரு வேதாளம் புகுந்தது. அந்த வேதாளம் ராத்திரி நேரம் ஊருக்குள் வந்து கல்யாணம் ஆகாத பொண்ணுங்க யாரு வந்தாலும் அடிச்சி ரத்தம் குடிச்சு கொன்னு போட்டுடும். கல்யாணம் ஆகாத பெண்களை விட்டுட்டு வேற யாரையும் தொடுறதும் இல்லை. கண்ணுக்குத் தட்டுப்படறதும் இல்லை.

இந்த விஷயம் ராஜாவுக்குத் தெரிஞ்சி, வேதாளத்தைக் கொல்ல ஆட்களை அனுப்பினார். ஆனாலும் அதைக் கொல்ல முடியவில்லை. ராஜா குழம்பிப் போய் சோர்வாக இருந்தார்.

ராஜாவின் மனக்கவலையை மீனா அறிந்தாள்.

ஒரு நாள் ராஜகுமாரி ரொம்ப தைரியமாக ராத்திரி நேரம் அரண்மனைப் பின்பக்க வாசல் வழியா வேதாளத்தைப் பார்க்க கிளம்பினாள். கொஞ்சதூரம் போயி ஊரைக் கடந்ததும் வெள்ளிக்கொலுசை மாட்டி “ஜலக் ஜலக்” -னு சத்தம் வர்ற மாதிரி நடக்க ஆரம்பிச்சா.

உடனே பக்கத்துல இருக்குற ஒரு மரத்துல இருந்த அந்த வேதாளம் பாய்ந்து வந்து நின்றது. ராஜகுமாரி மீனாவுக்கு அதைப் பார்த்ததும் பயமாகிவிட்டது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு வேதாளத்தைப் பார்க்காத மாதிரி உட்கார்ந்திருந்தாள்.

அந்த நேரம் ராஜகுமாரியின் கண்ணைப் பார்த்த வேதாளம் மின்னல் தாக்கின மாதிரி தடுமாறியது. அதே வேளையில் ராஜகு‘ரி சுதாரித்தபடி, தனது இடுப்பில் இருந்த கத்தியைத் தூக்கி வேதாளத்தின் நெஞ்சில் எறிந்தாள். வேதாளத்தின் நெஞ்சு பிளந்து ரத்தம் பீறிட்டது.

வேதாளம் சாகப்போற நேரத்துல ராஜகுமாரியை கூப்பிட்டுச் சொன்னது, “தேவியாரே! நான் வேதாளம் இல்லை. பக்கத்து நாட்டு அரக்க வம்சத்தவன். உங்கள் ஊரில் செல்வச் செழிப்போடு மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதை சீர்குலைக்க எங்கள் ராஜாவால் வேதாளம் வேஷம் போட்டு அனுப்பப்பட்டவன் நான்” என்று சொன்னான். இதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் உயிர் பிரிந்தது.

நாடே ராஜகுமாரியைப் புகழ்ந்தது. வீரத்திருமகள்னு அவளை முடிசூட்டி இளவரசி ஆக்கினார்கள்.

“என்னடா பேரப்புள்ள அந்த ராஜகுமாரி மாதிரி நீயும் நல்லா படிச்சி வீரமா, நல்ல தைரியத்தோடு, எதுக்கும் பயப்படாம இருக்கணும் என்ன!” என்று தாத்தா கேட்க, “கொர்…கொர்” என்ற குறட்டையுடன் கணேஷ் தூங்கிக் கொண்டிருந்தான்.

விடியற்காலை ஐந்து மணிக்கு படிப்பதற்காக கணேஷை எழுப்பி விட்டார். கணேஷூம் எழுந்து முகம் கழுவிவிட்டு வந்து புத்தகத்தை எடுத்தவாறு தாத்தாவிடம் கேட்டான்:

“என்ன தாத்தா! ராத்திரி நீங்க ஏதோ ராஜா, ராஜகுமாரி, வேதாளம்னு சொன்னீங்க. ஆனா எனக்கு முழுக்கதையும் ஏன் சொல்லலை?” என்று கேட்டான்.

தாத்தா கலகலவென்று சிரித்து விட்டார்.

பரமார்த்த குரு கதைகள் – நரகலோகத்தில் பரமார்த்தர்

மட்டியும் மடையனும் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு, கவலையோடு இருந்தனர்.

மண்டுவும் மூடனும் போனாரே! எங்கள் குரு செத்துப் போனாரே! என்று மூக்கால் அழுது கொண்டு இருந்தனர்.

“இனி மேல் யார் சுருட்டுக்கு நான் கொள்ளி வைப்பேன்? எங்களைத் தனியாக விட்டுட்டு, இப்படி அநியாயமாச் செத்துட்டீங்களே!” என்று ஒப்பாரி வைத்தான், முட்டாள்

அதன் பிறகு, ஐந்து சீடர்களும் மடத்துக்கு எதிரே தெருவில் கட்டிப்பிடித்து உருண்டார்கள்.

“செத்துப்போன நம் குரு, எங்கே போயிருப்பார்?” என்றான் மட்டி

“எமலோகத்துக்குப் போனால் பார்க்கலாம்”

“ஒரு வேளை, சொர்க்கத்துக்குப் போயிருப்பாரோ?”

“நம் குரு நிறைய பாவம் செய்தவர். அதனால் நரகத்துக்குத் தான் போயிருப்பார்”

முட்டாளும் மூடனும் இப்படிப் பேசிக் கொண்டு இருந்தனர்.

“நாமும் நரகத்துக்குப் போனால் நம் குருவைப் பார்க்கலாமே!” என்று யோசனை சொன்னான், மண்டு.

“நம் குருவை மீண்டும் பார்ப்பதற்கு இது தான் ஒரே வழி!” என்று குதித்தான் மடையன்.

உடனே மண்டுவும் மூடனும் கைகோர்த்தபடி, தோட்டத்தில் இருந்த கிணற்றில் குதித்தனர்.

முட்டாளோ, கையில் இருந்த கொள்ளிக் கட்டையால் தலையில் நெருப்பு வைத்துக் கொண்டான்.

சற்று நேரத்துக்கெல்லாம், பரமார்த்த குருவின் அருமைச் சீடர்கள் ஐந்து பேரும் உயிரை விட்டனர்.

எங்கு பார்த்தாலும் ஒரே புகை மயமாக இருந்தது. சீடர்களுக்கோ, ஒன்றுமே புரியவில்லை.

“நாம் தான் செத்து விட்டோமே, மறுபடியும் இப்போது எங்கே இருக்கிறோம்?” என்று கேட்டான் மட்டி.

அப்போது, “அதோ பாருங்கள், நரலோகம்!” என்று கத்தினான் மடையன்.

நரகத்திற்கு வந்து சேர்ந்து விட்டதை உணர்ந்த சீடர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

“வாருங்கள், நம் குருவைத் தேடிப் பார்ப்போம்!” என்று ஒவ்வொரு இடமாகப் பரமார்த்தரைத் தேடிக் கொண்டே சென்றார்கள்.

ஓரிடத்தில் பெரிய பெரிய செக்குகள் சுழன்று கொண்டு இருந்தன. பாவம் செய்த சிலரை அதனுள் போட்டு நசுக்கிக் கொண்டு இருந்தனர்.

அதைப் பார்த்த மட்டியும் மடையனும், “நம் குரு, இதன் உள்ளே இருந்தாலும் இருப்பார்!” என்று சொன்னபடி செக்குக்குள் தலையை விட்டார்கள்.

அவ்வளவுதான்! “ஐயோ! ஐயையோ!” என்று தலை நசுங்கி, ரத்தம் ஒழுகக் கீழே விழுந்தனர்.

இன்னொரு இடத்தில், உயரமான கொப்பரைகளில் எண்ணெய் கொதித்துக் கொண்டு இருந்தது.

அதைப் பார்த்த முட்டாள், “நம் குருவை இந்தக் கொப்பரையில் தான் போட்டிருப்பார்கள்!” என்று கூறிக்கொண்டே, கொப்பரைக்குள் எகிறிக் குதித்தான்!

முட்டாள் விழுவதைக் கண்ட மூடன், தானும் ஓடிப் போய் ஒரு கொப்பரையில் குதித்தான்!

கொதிக்கும் எண்ணெய் உடல் முழுவதும் பட்டதும், லபோ திபோ என அலறியவாறு இருவரும் சுருண்டு விழுந்தனர்.

மண்டு மட்டும் பல இடங்களில் பரமார்த்தரைத் தேடிக் கொண்டே சென்றான்.

நரக லோகத்தின் சனி மூலையில் ஏராளமான விறகுக் கட்டைகளை வைத்துத் திகு திகு என்று எரியும் அடுப்பைக் கண்டான்.

நம் குரு இந்த நெருப்புக்கு உள்ளே ஒளிந்து கொண்டு இருந்தாலும் இருப்பார் என்றபடி அதற்குள் நுழைந்தான்.

அடுத்த கணம், “ஆ, நெருப்பு! அம்மாடி நெருப்பு!” என்று கதறியவாறு விழுந்து புரண்டான்.

இதே சமயத்தில், நரக லோகத்தில் கட்டப்பட்டு இருந்த விஷ மண்டலத்தில் பரமார்த்தர் அலறிக் கொண்டு இருந்தார்.

அவரைச் சுற்றிலும் ராட்சத தேள்களும், பாம்புகளும், நண்டுகளும் படையெடுத்து வந்தன.

“ஐயோ, தேளே! நீ வாழ்க! உன் கொடுக்கு வாழ்க! என்னை மட்டும் கொட்டாதே!” என்று கும்பிட்டார்.

அதற்குள் ஐந்து சீடர்களும் அவர் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

“ஐயோ! பாம்பு, பாம்பு!” என்று அலறியபடி திண்ணை மேலிருந்து தடால் என்று கீழே விழுந்தார், பரமார்த்தர்.

சீடர்கள் அனைவரும் ஓடி வந்து பார்த்தார்கள்.

அப்பொழுதுதான் பரமார்த்தர் சுற்றும் முற்றும் பார்த்தார். “நல்ல காலம்! மடத்தில் தான் இருக்கிறேன். நரக லோகத்தில் மாட்டிக் கொண்டது போல வெறும் கனவுதான் கண்டிருக்கிறேன்!” என்று மகிழ்வுடன் தொப்பையைத் தடவிக் கொண்டார்.

சீடர்களும் மகிழ்ச்சியுடன் குதித்தார்கள்.

அரசர் கதைகள் – போர்க்களத்தில் எதிரி

மலைவளம் நிறைந்த நாடு சேர நாடு. அந்த நாட்டின் தலைநகரம் கருவூர். அங்கே இரும்பொறை என்ற அரசர் சிறப்புடன் ஆண்டு வந்தார். குல மரபையும் சேர்த்து அந்துவஞ் சேரல் இரும்பொறை, என்று அவரை அழைத்தார்கள்.

வீரம் நிறைந்த அவர் நீதிநெறி தவறாது ஆட்சி நடத்தினார். அவருடைய அரசவையில் புலவர்கள் பலர் சிறப்புப் பெற்றிருந்தனர்.

இரும்பொறையின் நெருங்கிய நண்பராக உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர் இருந்தார். இருவரும் இணை பிரியாது இருந்தனர். எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்றனர்.

முடமோசியாரின் அறிவுரைகளைக் கேட்டு ஆட்சி செய்தார் இரும்பொறை.

வழக்கம் போல இருவரும் சோலையில் உலாவிக் கொண்டிருந்தார்கள்.

சிந்தனையில் ஆழ்ந்திருந்த இரும்பொறை ஏதும் பேசவில்லை.

அரசர் ஏதோ குழப்பத்தில் உள்ளார் என்பது முடமோசியார்க்குப் புரிந்தது.

அரசே! உங்கள் ஆட்சி நல்லாட்சியாக உள்ளது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். வீரத்திலும் சிறந்து விளங்குகிறீர்கள். உங்கள் புகழ் எங்கும் பரவி உள்ளது.

ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவரைப் போல உள்ளீர்களே. ஆட்சியில் ஏதேனும் குறை நேர்ந்து விட்டதா? எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள்.

புலவரே! உங்கள் அறிவுரைப் படி ஆட்சி செய்து வருகிறேன், எப்படிக் குறை வர முடியும்?
அரசே! வாரி வழங்கியதால் கருவூலம் காலியாகி விட்டதா? மக்களின் மேல் அதிக வரி விதிக்கும் நிலை வந்து விட்டதா?

புலவரே! மலை வளம் மிக்க நாடு நம் சேர நாடு. எவ்வளவு வாரி வழங்கினாலும் இதன் வளம் குறையாது. மக்களும் உழைப்பின் பெருமையை உணர்ந்தவர்கள். கடுமையாக உழைப்பவர்கள். நாட்டின் வளம் பெருகிக் கொண்டே செல்கிறது.

அரசே! ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவரைப் போல உள்ளீர்களே?

புலவரே! வளம் மிக மிக நம் நாட்டிற்குத் தீங்கு வருமோ? மக்கள் துன்பம் அடைவார்களோ? இதை நினைத்து என் உள்ளம் கலக்கம் கொள்கிறது.

அரசே! வீரம் மிகுந்த நீங்களா இப்படிக் கலங்குகிறீர்கள்? எனக்கு வியப்பாக உள்ளது.
புலவரே! சேரர் குடியில் பிறந்தவன் நான். அச்சம் என்ற சொல்லையே அறியாதவன். ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தி அதிர்ச்சியைத் தந்தது. போர் மேகங்கள் நம் நாட்டைச் சூழ்ந்து வருகின்றன. எப்பொழுது வேண்டுமானாலும் போர் நிகழலாம்.

மக்கள் மகிழ்ச்சிக்கு இடையூறு வருமோ என்று தான் கலங்குகிறேன்.

அரசே! வீரம் மிக்கவர் நீங்கள். நாட்டைக் காக்க வலிமை வாய்ந்த பெரும் படை உள்ளது. எல்லா நாட்டு அரசர்களும் இதை அறிவார்கள். தனக்கே அழிவைத் தேடும் வீண் முயற்சியில் இறங்கும் அந்த அரசன் யார்?
புலவரே! சோழன் தான் அந்த அரசன். சேர நாட்டைக் கைப்பற்ற பெரும்பாட்டை திரட்டி வருகிறானாம். ஒற்றர்கள் கொண்டு வந்த செய்தி இது.

சோழ அரசர் குடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளியா. அவருக்கா நாடு பிடிக்கும் பேராசை? இதனால் எத்தனை உயிர்கள் அழியப் போகின்றன? இரண்டு நாடுகளுக்கும் எவ்வளவு இழப்புகள் ஏற்படப் போகின்றன? இதை அவர் அறிய வில்லையா?

புலவரே! புகழ் வெறி யாரை விட்டது? பெரும்படை இருக்கின்றது என்ற ஆணவம் அந்தச் சோழனுக்கு. இங்கே அவனுக்கும் நல்ல பாடம் கிடைக்கப் போகிறது.

அமைதியான இந்த நாட்டில் போர் ஆரவாரம் தான் எங்கும் கேட்கும். நாமும் வழக்கம் போல் அடிக்கடி சந்தித்து உரையாட இயலாது.

நாட்டின் பாதுகாப்பு வலுவாக இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும். படைத் தலைவர்கள். வீரர்களோடு இது குறித்துப் பேச வேண்டும். நாம் அரண்மனை திரும்புவோம், என்றார் இரும்பொறை.
இருவரும் அங்கிருந்து சென்றார்கள்.

சோழ நாட்டுத் தலை நகரம் உறையூர். அரசவை கூடியுள்ளது. அரியணையில் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி பெருமிதத்துடன் வீற்றிருந்தார்.

அமைச்சர்கள், படைத் தலைவர், அவையினர் அவரவர் இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர்.
அவையினரே! என் முன்னோர்கள் இமயத்தை வென்று வெற்றிக் கொடி நாட்டினார்கள். அவர்கள் வீரத்தால் இந்தச் சோழ நாடே பெருமை பெற்றது. அவர்களைப் போன்று நானும் பெருமை பெற விரும்புகிறேன், என்றார் அரசர்.
படைத் தலைவர் எழுந்து, அரசே! கடல் போன்று சோழ நாட்டுப் படை உள்ளது. உங்கள் கட்டளைக்குக் காத்திருக்கிறது. விண்ணுலகையும் வெல்லும் ஆற்றல் வாய்ந்தவர்கள் நம் வீரர்கள். இமயத்தை வெல்லுவதா அவர்களுக்கு அரிய செயல், என்றார்.

படைத் தலைவரே! என் எண்ணத்தை அண்மையில் தான் வெளியிட்டேன். உடனே பெரும்படை திரட்டி விட்டீர்களே. மிக்க மகிழ்ச்சி.

அரசே! நம் வீரர்கள் எப்பொழுது போர் வருமென்று ஆவலுடன் காத்திருந்தார்கள். செய்தி அறிந்தவுடன் எல்லோரும் போருக்குத் தயாராகி விட்டார்கள்.

சேர நாட்டின் மீது படை எடுக்க வேண்டும். அதை வெல்ல வேண்டும். இதுதான் முதல் முயற்சி.
அமைச்சர் எழுந்து அரசே! என் கருத்தை இங்கே சொல்லலாமா? என்று கேட்டார்.

அமைச்சரே! எல்லோர் கருத்தையும் கேட்பதற்காகத்தான் அரசவை உள்ளது. தயங்காமல் சொல்லுங்கள்.
அரசே! நமக்கும் சேர நாட்டிற்கும் பகை ஏதும் இல்லை. சேர நாட்டு அரசரும் உங்களைப் போலவே சிறந்த வீரர். அந்நாட்டு மக்களும் வீரம் மிக்கவர்கள். பேரழிவை ஏற்படுத்தும் இந்தப் போர் தேவையா? சிந்தியுங்கள்.
அமைச்சரே! வலிமை வாய்ந்த அரசனோடு போரிட்டு வென்றால்தானே நமக்குப் பெருமை. பக்கத்தில் வலிமை வாய்ந்த நாடு இருப்பது நமக்கு எப்போதுமே தொல்லை. சேர அரசனை வென்றால் என் புகழ் உலகெங்கும் பரவும். அந்த நாட்டின் செல்வமும் நம் கருவூலத்தில் சேரும். நம் நாடு மேலும் வளம் பெறும்.

அரசே! அமைதியை விரும்பிய நான் என் எண்ணத்தைச் சொன்னேன். வீரம் மிக்கவராகிய நீங்கள் போர் செய்யவே துடிக்கிறீர்கள், என்று அமர்ந்தார் அமைச்சர்.

படைத் தலைவரே! ஒரு திங்களில் நம் படை சேர நாட்டிற்குப் புறப்பட வேண்டும். இந்தப் போருக்கு நானே தலைமை ஏற்கப் போகிறேன். என் வீரத்தை உலகமே அறிந்து போற்றப் போகிறது. எல்லா ஏற்பாடுகளையும் விரைந்து செய்து முடியுங்கள்.

அரசே! கட்டளையை உடனே நிறைவேற்றுகிறேன், என்றார் படைத் தலைவர்.
என் எண்ணம் நிறைவேறும் நாள் வந்து விட்டது. சோழ நாட்டு வெற்றிக் கொடி பல நாடுகளில் பறக்கப் போகிறது, என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

அவையினர் உணர்ச்சிப் பெருக்குடன், சோழ அரசர் வாழ்க, என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள்.

கருவூர் நகர வீதிகளில் போர் வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். அமைதி தவழ்ந்த அந்த நகரத்தில் எங்கும் ஆரவாரம் கேட்டது.

அரண்மனையில் அரசனும் புலவர் முடமோசியாரும் உரையாடிக் கொண்டிருந்தனர்.
அங்கு வந்த படைத் தலைவர் பணிவாக அரசனை வணங்கினார்.

படைத் தலைவரே! என்ன செய்தி?

அரசே! சோழர் படை நம் நாட்டிற்குள் நுழைந்து விட்டது. நம் காப்பு அரண்களை எல்லாம் அழித்து விட்டார்கள். தலை நகரின் அருகே பாசறை அமைத்துத் தங்கி உள்ளார்கள். எங்கே எப்பொழுது போரிடலாம்? இது குறித்து நம் பதிலை எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

நாம் அவர்களைக் காக்க வைக்க வேண்டாம். விரைவில் போர் செய்வோம். எதிரிகளை விரட்டி அடிப்போம். நம் படைகள் எல்லாம் தயார் நிலையில் உள்ளனவா?

அரசே! நம் நால்வகைப் படைகளும் போருக்குத் தயாராக உள்ளன. நம் படையினர் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார்கள். நம் படைகளின் அணிவகுப்பை நீங்கள் பார்வையிட வேண்டும்.

படைத் தலைவரே! கோட்டைக்கு வெளியே நாளை நம் படை வீரர்கள் அணிவகுத்து நிற்கட்டும். நானும் முடமோசியாரும் கருவூர்க் கோட்டை வேண்மாடத்தில் இருந்து பார்வை இடுகிறோம். நாளை மறுநாள் படைக்குத்
தலைமை தாங்குகிறேன். எதிரிகளோடு போரிட்டு வெல்கிறேன்.
தங்கள் கட்டளை அரசே! என்ற படைத் தலைவர் வணங்கி விட்டுச் சென்றார்.

முடமாசியாரே! போர் நிகழ உள்ளது. நம் வீரர்கள் எவ்வளவு மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் இருக்கிறார்கள். பார்த்தீரா?

ஆம் அரசே! நம் நாட்டு மக்கள் வீரம் மிக்கவர்கள். எதற்கும் கலங்காதவர்கள். எத்தகைய பெரிய படையையும் அழிக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள்.

புலவரே! சேரனின் வீரத்தை இந்த உலகமே வியந்து போற்றப் போகிறது. பகைவரின் செங்குருதி வெள்ளத்தில் நில மகள் நீராடப் போகிறாள், என்று உணர்ச்சி பொங்கப் பேசினார் இரும்பொறை.

அரசே! நாம் நாளை சந்திப்போம், என்று சொல்லி விடை பெற்றார் முடிமோசியார்.

கருவூர்க் கோட்டைக்குச் சிறிது தொலைவில் சோழர் படையின் பாசறை இருந்தது.
காலை நேரம். சோழ வீரர்கள் ஆங்காங்கே போர்ப் பயிற்சி செய்து கொண்டு இருந்தார்கள்.
சோழ அரசர் நற்கிள்ளி அவர்களைப் பாராட்டிக் கொண்டே சென்றார்.

குன்றுகளை ஒத்த யானைகள் இருந்த இடத்திற்கு வந்தார் அவர். வலிமை வாய்ந்த யானைப் படையைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.

எதிரிகளை வெல்ல இந்த யானைப் படையே போதுமே. நம்மை எதிர்த்து ஒரு நாள் கூட அவர்களால் போர் செய்ய முடியாது, என்று நினைத்தார் அவர்.

அங்கிருந்த பட்டத்து யானை பிளிறியது. அந்த யானையின் அருகே சென்றார் அவர்.
பாகன் பரபரப்புடன் ஓடி வந்தான். அரசரைப் பணிவாக வணங்கினான்.
பாகனே! பட்டத்து யானையின் மேல் அமர்ந்து நம் படையை பார்வையிட விரும்புகிறேன்.

தயக்கத்துடன் பாகன், அரசர் பெருமானே! பட்டத்து யானை அடிக்கடி பிளிறுகிறது. இரண்டு நாட்களாக எனக்கும் கட்டுப்பட மறுக்கிறது. மதம் பிடித்தது போல உள்ளது.

பட்டத்து யானையின் மேல் அமர வேண்டாம். இன்று மாலைக்குள் பட்டத்து யானையைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்து விடுவேன். என்னை மன்னியுங்கள், என்று பணிவுடன் சொன்னான்.

பாகனே! மதம் கொண்ட யானையை நான் அடக்குகிறேன், என்று சொன்னார் அவர். யானையின் மேல் ஏறி அமர்ந்தார்.

அரசே! வேண்டாம். நான் சொல்வதைக் கேளுங்கள், என்று கெஞ்சினான் பாகன்.
யானையோ பிளிறியபடி வேகமாக ஓடத் தொடங்கியது.
பாகன் திகைத்து நின்றான்.

பட்டத்து யானைக்கு மதம் பிடித்து விட்டது. அரசரைச் சுமந்து ஓடுகிறது, என்ற கூக்குரல் பாசறை எங்கும் ஒலித்தது.
வீரர்கள் ஓடி வந்தார்கள்.

ஐயோ! பட்டத்து யானை கருவூர்க் கோட்டையை நோக்கிச் செல்கிறதே. அதைத் தடுப்பார் இல்லையே, என்று எல்லோரும் அலறினார்கள்.
வேகமாக ஓடிய யானையைப் பின் தொடர வீரர்களால் முடியவில்லை.
யானை அவர்கள் கண்களில் இருந்து மறைந்தது.
கருவூர்க் கோட்டைத் திடலில் சேர நாட்டு வீரர்கள் அணிவகுத்து நின்றனர்.

கோட்டையின் வேண்மாடத்தில் இரும்பொறையும் முடமோசியாரும் நின்று இருந்தனர். படை வீரர்களின் அணிவகுப்பைப் பார்த்தனர்.

புலவரே! கண்ணுக்கு எட்டிய தொலைவு நம் வீரர்களே உள்ளனர். சேர அரசர் வாழ்க! வெற்றி வேந்தர் வாழ்க, என்று விண்ணதிர முழக்கம் செய்கின்றனர். போர் வேண்டி அவர்கள் செய்யும் ஆரவாரம் உங்களுக்குக் கேட்கிறதா?
அரசே! சேர வீரர்களின் வீரத்தை எல்லோரும் அறிவார்கள். எங்களைப் போன்ற புலவர்கள் போரை விரும்ப மாட்டார்கள். அதனால் மக்களுக்கு அழிவுதான் ஏற்படுகிறது. ஒரு போர் மற்றொரு போருக்கு அழைத்துச் செல்கிறது. அதனால் மக்கள் தொடர்ந்து பெருந் துன்பத்தை அடைகிறார்கள்.

புலவரே! நாங்கள் போரையா விரும்பினோம்? சோழன் தூங்கும் புலியை எழுப்பி விட்டான். புலியின் சீற்றத்தையும் வலிமையையும் அவன் சந்தித்தே ஆக வேண்டும்.

அரசே! அதோ பாருங்கள். எங்கிருந்தோ யானை ஒன்று ஓடி வருகிறது. படை அணிவகுப்பிற்குள் நுழைந்து விட்டது. படை அணிவகுப்பிற்குள் நுழைந்து விட்டது. தன் துதிக்கையால் வீரர்கள் சிலரைத் தூக்கி எறிந்து விட்டது. அந்த யானையின் மேல் ஒரு வீரன் அமர்ந்து உள்ளான்.

ஆம் புலவரே! அந்த யானையின் மேல் நம் எதிரி ஒருவன் உள்ளான். படை அணிவகுப்பிற்குள் நுழைந்து குழப்பம் விளைவிக்கிறான். என்ன துணிவு அவனுக்கு?

அரசே! நம் வீரர்கள் அந்த யானையைச் சூழ்ந்து விட்டனர். யானையும் கோட்டையின் அருகே வந்து விட்டது. இனி எந்த எதிரியால் தப்ப முடியாது. அவன் தோற்றம் இப்பொழுது தெளிவாகத் தெரிகிறது.
புலவர் தனக்குள் ஆ! யானையின் மேல் இருப்பவர் சோழ அரசர் நற்கிள்ளி அல்லவா? எதற்காக அவர் யானையின் மேல் தனியே இங்கு வந்தார்?

மதம் கொண்ட யானையை அவர் அடக்க முயற்சி செய்திருக்க வேண்டும். அவருக்குக் கட்டுப்படாத யானை இங்கே வந்திருக்க வேண்டும். அரசர் இரும்பொறைக்கு உண்மையை உணர்த்த வேண்டும்? என்று நினைத்தார்.
புலவரே! ஏன் திடீரென்று அமைதியாகி விட்டீர்?

அரசே! அந்த யானையில் மேல் இருப்பவர் சோழ அரசர்.
புலவரே! நீங்கள் சொல்வது உண்மையா? யானையின் மேல் இருப்பது சோழ அரசனா? நன்றாகப் பார்த்துச் சொல்லுங்கள்.

அரசே! அவர் சோழ அரசர் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளிதான். நான் அவரைப் பலமுறை சந்தித்து இருக்கிறேன்.

அவர் ஏன் யானையின் மேல் அமர்ந்து தனியே இங்கே வந்தார்?
அரசே! யானைக்கு மதம் பிடித்திருக்க வேண்டும். அதை அடக்க அவர் முயற்சி செய்திருக்க வேண்டும். அவர்க்கு அடங்காமல் யானை இங்கே வந்திருக்க வேண்டும்.

புலவரே! நீங்கள் சொல்வது போலத்தான் நடந்திருக்க வேண்டும். அங்கே பாருங்கள். நம் வீரர்கள் அந்த யானையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டார்கள்.

அரசே! யானையின் மேல் இருப்பவர் உங்கள் எதிரிதான். தனியே உங்களிடம் சிக்கி உள்ளார். அவருக்கு எந்தத் துன்பமும் செய்யாதீர்கள்.

அவருக்கு ஏதேனும் நேர்ந்தால் உலகம் என்ன சொல்லும்? தனியே தளர்ந்து வந்த அரசனைக் கொன்றான் சேரன். இவ்வாறு உலகமே உங்களை இகழும். புகழ் வாய்ந்த சேரர் குடிக்கே தீராப் பழி நேரும்.

புலவரே! என்னோடு இவ்வளவு காலம் பழகி இருக்கிறீர்கள். என் உள்ளத்தை அறிய வில்லையே. உண்மையான வீரர்கள் போர்க்களத்தில் தான் வீரத்தைக் காட்டுவார்கள். எந்தச் சூழலிலும் போர் அறத்தை விட மாட்டார்கள். தனியே சிக்கிய எதிரிக்குத் தொல்லை தருபவனா நான்?

அருகில் நின்றிருந்த வீரனைப் பார்த்து, யானையின் மேல் இருப்பவர் சோழ அரசர். அரசருக்கு உரிய சிறப்புடன் இங்கே அழைத்து வாருங்கள். என்று கட்டளை இட்டார்.

அரசர் வாழ்க, என்ற அந்த வீரன் சென்றான்.
சிறிது நேரத்தில் வீரர்கள் சூழச் சோழ அரசர் அங்கு வந்தார். தலை கவிழ்ந்த வண்ணம் அவர் இருந்தார்.
முகம் மலர அவரை வரவேற்றார் சேர அரசர்.
வாருங்கள்! சோழ அரசரே! எதிர்பாராமல் நிகழ்ந்த சந்திப்பு இது. உங்கள் வருகையால் இந்தக் கருவூர் நகரமே சிறப்புப் பெற்றது. என் அருகே இருப்பவர் பெரும்புலவர் ஏணிச்சேரி முடமோசியார். என் இனிய நண்பர். அவரால்தான் உங்களை அறிந்து கொள்ளும் பேறு பெற்றேன், என்றார்.
ஏதும் பேசாமல் தலை கவிழ்ந்தபடி நின்றார் சோழ அரசர்.
இங்கு வந்த சூழலை எண்ணி நீங்கள் வருந்த வேண்டாம். எங்கள் விருந்தினராகச் சிறிது நேரம் இங்கே இருங்கள். பிறகு உங்கள் எண்ணம் போலச் செய்யுங்கள்.

இங்கே உங்களைத் தடுப்பார் யாரும் இல்லை. நாளை நாம் இருவரும் போர்க்களத்தில் சந்திப்போம்.
போர்க்களத்தில் தான் நீங்கள் என் எதிரி. எதிர்பாராத நிகழ்ச்சிகளால் நீங்கள் இங்கே வந்து விட்டீர்கள். தனியே நுழைந்த நீங்கள் என் நண்பர். எந்தச் சூழலிலும் போர் அறத்தை நான் மீற மாட்டேன், என்றார் இரும்பொறை.
நற்கிள்ளி தலை நிமிர்ந்து இரும்பொறையைப் பார்த்தார்.

நண்பரே! மண்ணாசையால் உங்களோடு போரிடப் பெரும் படையுடன் வந்தேன். யானை மதம் பட்டதால் உங்கள் பெருமித உள்ளத்தை அறிந்தேன்.

உங்களைப் போரில் வெற்றி கொள்ள நினைத்தேன். உண்மையில் வெற்றி பெற்றவர் நீங்கள் தான். இனி நமக்குள் போரே வேண்டாம். நாம் இருவரும் நல்ல நண்பர்களாக இருப்போம், என்றார்.
இரு அரசர்களும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.

நண்பரே! நீங்களும் உங்கள் வீரர்களும் எங்களின் விருந்தினர்களாக இங்கே தங்க வேண்டும். சேர நாட்டு விருந்தோம்பலை நீங்கள் அறிய வேண்டும். இது என் வேண்டுகோள், என்றார் இரும்பொறை.
அப்படியே ஆகட்டும், என்றார் சோழ அரசர்.

அருகில் இருந்த புலவர் மகிழ்ச்சியுடன் போரே இல்லாத உலகத்தைக் கனவு கண்டேன். அப்படிப்பட்ட உலகத்தில் மக்கள் அமைதியாகவும். வளமாகவும் வாழ்வார்கள். நற்பண்புகள் கொண்ட உங்கள் இருவரால் என் எண்ணம் நிறைவேறியது. உங்களுக்கு என் பாராட்டுகள், என்றார்.

அணிவகுத்து நின்ற சேர வீரர்கள், சோழ அரசர் வாழ்க, என்று வாழ்த்தொலி எழுப்பினார்கள்.

இரண்டு அரசர்களும் மகிழ்ச்சியுடன் உரையாடிக் கொண்டே அரண்மனைக்குள் நுழைந்தார்கள்.

இவனியா ரென்குவை யாயி னிவனே
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின்
மறலி யன்ன களிற்று மிசையோனே
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்
பன்மீ னாப்பட் டிங்கள் போலவும்
சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோ ரறியாது மைந்துபட் டன்றே

(புறநானூற்றுப் பாடல் 13, அடிகள் 1 முதல் 8 வரை. பாடியவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்)

பரமார்த்த குரு கதைகள் – வெள்ளை யானை பறக்கிறது

மதுராந்தகம் மன்னனுக்குக் கண் பார்வை மங்கிக் கொண்டே போனது. வெள்ளை யானையின் தந்தங்களைத் தேய்த்து, கண்களில் பூசிக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் மறுபடி கண்பார்வை வந்துவிடும், என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

வெள்ளை யானையை உயிரோடு பிடித்து வந்தால், ஒரு ஊரையே பரிசாகத் தருவதாக அறிவித்தான், மன்னன். இந்தச் செய்தி பரமார்த்தருக்கும், அவரது சீடர்களுக்கும் எட்டியது.

குருநாதா! நமக்குத் தெரிந்தவரை யானை கருப்பு நிறமாகத்தானே இருக்கிறது? வெள்ளை யானை கூட உண்டா என்ன? எனக் கேட்டான், மட்டி.

தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளையாக இருக்குமாம், என்றான் மடையன்.

குருவே! அந்த யானையைப் பிடித்துவர உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா? என்று கேட்டான், முட்டாள்.

உடனே குருவுக்குக் கோபம் வந்து விட்டது!

கோழையே! என்னால் முடியாத காரியம்கூட உண்டா? ஆனால், இந்திரனுக்கும் எனக்கும் போன ஜென்மத்தில் இருந்தே தீராத பகை. அதனால் அங்கே போவதற்கு நான் விரும்பவில்லை, என்று கூறியபடி தாடியை உருவிக் கொண்டார்.

குருதேவா! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது… வீட்டுக்கு வெள்ளை அடிப்பது மாதிரி, யானைக்கும் வெள்ளை அடித்து விட்டால் என்ன? என்று கேட்டான், மண்டு.

ஆமாம் குருவே! யானையின் மேல் சுண்ணாம்பு தடவி விட்டால் போதும். கருப்பு யானை வெள்ளையாக மாறிவிடும்! என்று குதித்தான், மூடன்.

ராஜாவுக்குத்தான் சரியாகக் கண் தெரியாதே! அதனால் அவரால் நம் மோசடியைக் கண்டுபிடிக்க முடியாது! என்று மகிழ்ந்தான், முட்டாள்.

ஆகா! ஆளுக்கு ஒரு ஊர் பரிசாகக் கிடைக்கப் போகிறது. இனிமேல் நாம் எல்லோரும் குட்டி ராஜாக்கள்தான்! என்றபடி மண்ணில் புரண்டான், மட்டி.

பலே, பலே! இப்போதுதான் உங்கள் மூனை நன்றாக வேலை செய்கிறது! எனப் பாராட்டினார், பரமார்த்தர்.

அப்போதே தன் சீடர்களை அழைத்துக் கொண்டு, யானைப் பாகனிடம் போனார்.

ஒருநாளைக்கு மட்டும் உங்கள் யானையை வாடகைக்குக் கொடுங்கள். தேவையான பணம் தருகிறோம். நீங்களும் கூடவே வரவேண்டும், என்று வேண்டினான் மட்டி.

பணத்துக்கு ஆசைப்பட்ட பாகனும் சரி என்று சம்மதித்தான்.

நன்றாக இருட்டிய பிறகு, பானை பானையாகச் சுண்ணாம்பு கொண்டு வந்தான், மடையன்.

அதை எடுத்து அபிஷேகம் செய்வது போல, பானையின் மேல் ஊற்றினான், முட்டாள்.

கொஞ்சம் சுண்ணாம்பை வாரி எடுத்து, பயந்து கொண்டே யானையின் வாயில் பூசிவிட்டான், மண்டு.

பரமார்த்தரும் தம் கைத் தடியால் வரி வரியாக வெள்ளை அடித்தார்.

குருவே! யானை கருப்பாக இருக்கும்போது தந்தம் வெள்ளையாக இருக்கிறது, அதுபோல யானை வெள்ளையாக இருந்தால், தந்தம் கருப்பாக அல்லவா இருக்க வேண்டும்? எனக் கேட்டான், பாகன்.

ஆமாம்! நீ சொல்வதும் சரிதான்! என்றபடி அடுப்புக் கரியைத் தேய்த்து, தந்தங்களில் பூசி விட்டான், முட்டாள்.

இது தேவலோகத்தில் இருந்து பிடித்து வந்தது என்பதை அரசன் நம்ப வேண்டும். அதனால் இரண்டு இறக்கைகள் கட்ட வேண்டும், என்றார் பரமார்த்தர்.

குருவின் யோசனையை உடனே செயல்படுத்தினான், மூடன்.

எல்லா வேலையையும் முடிந்தது. யானையைச் சுற்றி வந்து பார்வையிட்ட குரு, அற்புதம்! இது இந்திர லோகத்து யானையேதான்! என்றபடி அதன் தும்பிக்கையைத் தொட்டுக் கும்பிட்டார்.

மறுநாள், அரண்மனைக்கு முன்னால் மக்கள் கூட்டம் ஜே ஜே என்று இருந்தது. வெள்ளை யானையைப் பார்ப்பதற்காக மந்திரிகள் புடைசூழ மன்னனும் வந்தான்.

திறந்த வெளியில் கட்டி இருந்த யானையைப் பார்த்த அரசன், அதிசயமாக இருக்கிறதே! இந்த யானையை எங்கிருந்து பிடித்து வந்தீர்கள்? என்று கேட்டான்.

தேவலோகம் வரை தேடிக் கொண்டு போனோம்! என்று புளுகினான், மண்டு.

ஐயோ! இதைப் பிடிக்க நாங்கள் பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும்! என்றான் மூடன்.

தந்தம் மட்டும் கருப்பாக இருக்கிறதே? என்று மந்திரி கேட்டதும், அது வைரம் பாய்ந்த தந்தம்! அப்படித்தான் இருக்கும்! என்றான் முட்டாள்.

இவர்கள் பேசிக் கொண்டே இருக்கும்போது, திடீரென்று பலத்த காற்று அடிக்க ஆரம்பித்தது. உடனே யானையின் மீது கட்டப்பட்ட இறக்கைகள் பிய்த்துக் கொண்டு கீழே விழுந்தன.

உடனே பலத்த மழையும் பெய்ய ஆரம்பித்தது. மழை நீர் யானையின் மீது பட்டதும் கொஞ்சம் கொஞ்சமாகச் சுண்ணாம்பு எல்லாம் கரைந்து, வெள்ளை யானை கருப்பாக மாறியது.

இதைப் பார்த்த குருவுக்கும் சீடர்களுக்கும் பயத்தால் உடம்பு வெட வெட என்று நடுங்கியது!

சிறிது நேரத்திலேயே பரமார்த்தரின் சாயம் வெளுத்து விட்டது – ஊகும் – கருத்து விட்டது. வழக்கம்போல் தண்டனைக்கு ஆளானார்கள்.

தேவலோகத்தில் ஐராவதம் என்று ஒரு யானை இந்திரனிடம் இருக்கிறது. அது வெள்ளை

பரமார்த்த குரு கதைகள் – தோட்டத்தில் மேயுது

அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் தோட்டத்தில் கீரை பயிரிட்டு இருந்தனர், குருவும் சீடர்களும்.

செடிகள் நன்றாக வளர்ந்து, தள தள என்று இருந்தனர். ஒருநாள் காலையில் எழுந்து பார்த்த மட்டி, “ஐயோ! போச்சு! போச்சு!” என்று அலறினான்.

பரமார்த்தரும், மற்ற சீடர்களும் தோட்டத்துக்கு ஓடினார்கள்.

மொத்தம் மூன்று பாத்திகள் இருந்தன. அதில் ஒரு பாத்தியில் இருந்த செடிகளை மாடு ஒன்று மேய்ந்து விட்டிருந்தது.

“அடடா! நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து வருகிறோம்; எல்லாம் இப்படிப் பாழாகி விட்டதே” என்று வருத்தப்பட்டார் பரமார்த்தர்.

செடிகளை மாடு மேயாமல் இருப்பதற்காகத் தம் சீடர்களை யோசனை கூறுமாறு கேட்டார்.

“குருவே! அந்த மாடு வந்து மேய்வதற்கு முன்பு நாமே கொஞ்சம் கீரையைப் பறித்து அதற்கு போட்டு விடலாமே!” என்றான் முட்டாள்.

“நாம் பயிரிடுவதை மாடு சாப்பிடாமல் இருக்க வேண்டுமானால் மாட்டுக்கென்று தனியாக ஒரு பாத்தியில் கீரை விதைத்து விட்டால் போதும். அதை மட்டும் சாப்பிட்டு விட்டுப் போய்விடும்!” என்றான்ன மூடன்.

“புத்திகெட்டவர்களே! நீங்கள் சொல்கிறபடி செய்தாலும் நமக்குத்தானே நஷ்டம்? அதையும் தின்று, இதையும் தின்றுவிடுமே!” என்று அவர்களைத் திட்டினார், பரமார்த்தர்.

அப்போது மண்டுவுக்கு ஒரு யோசனை தோன்றியது. “ராத்திரியில் மட்டும்தானே மேய்கிறது? அதனால் தினம் தினம் இரவு வந்ததும் எல்லாச் செடிகளையும் பிடுங்கி பத்திரமாக மறைத்து வைத்து விடலாம்! பொழுது விடிந்ததும், பழையபடி நட்டு விடலாம்!” என்றான்.

இந்த யோசனையும் சரிப்பட்டு வராது என்று பரமார்த்தர் கூறிவிட்டார்.

“தழைகள் எல்லாம் மேலே இருப்பதால்தான் தின்று விடுகிறது, பூரா செடிகளையும் பிடுங்கி, தலைகீழாக நட்டு விடுவோம்! வேர் மட்டும் மேலே இருப்பதைப் பார்த்து, மாடு ஏமாந்து போய்விடும்!” என்று சொன்னான் மட்டி

“ஆமாம்! இதுதான் சரியான வழி!” என்று, ஒரு பாத்தியில் இருந்த செடிகளை மட்டும் பிடுங்கித் தலைகீழாக நட்டு வைத்தனர்.

வேர் முழுவதும் மண்ணுக்கு மேலே இருந்ததால் செடிகள் முழுவதும் ஒரே நாளில் செத்து விட்டன.

“குருவே! இந்தச் செடிகளின் மீது பானைகளை கவிழ்த்து மூடி விட்டால் போதும். செடிகளைத் தேடிப் பார்த்து விட்டு மாடு ஏமாந்து போய்விடும்!” என்று சொன்னான் மடையன்.
மறுநாளே, சந்தையிலிருந்து ஏராளமான பானைகளை வாங்கி வந்தனர். ஒவ்வொரு செடியின் மீதும் ஒவ்வொரு பானையைக் கவிழ்த்து வைத்தனர்.

சூரிய வெளிச்சம் படாததால், பத்தே நாளில் இரண்டாவது பாத்தியில் இருந்த செடிகளும், வாடி வதங்கி விட்டன.

குருவுக்கும், சீடர்களுக்கும் ஒரே கவலையாகப் போய்விட்டது. “குருவே! அந்தப் பசு மாட்டைப் பிடித்துக் கட்டி விட்டால் போதும். நாமே தினம் பால் கறந்து சாப்பிடலாம்! மாட்டுக்காரன் வந்து கேட்டால் செடிகளை மேய்ந்ததற்காகத் தண்டனையாக நிறைய பணத்தையும் வாங்கிக் கொள்ளலாம்” என்று கூறினான் மடையன். “இப்போதுதான் நமக்கு இரண்டு வழிகளில் லாபம்!” என்றபடி குதித்தான் மட்டி

மறுநாள் இரவு வெளிச்சம் தெரிவதற்காகக் கையில் கொள்ளிக் கட்டையை வைத்துக் கொண்டான், முட்டாள். குருவும், சீடர்களும் தோட்டத்தில் பதுங்கிக் கொண்டனர்.

இந்தத் தடவை வழக்கமான மாட்டுக்குப் பதில் எலும்பும் தோலுமாய் இருந்த வேறொரு பசுமாடு வந்தது.

மாட்டைக் கண்டதும் பதுங்கியிருந்த குருவும் சீடர்களும் தடால் என்று அதன் மேல் விழுந்து புரண்டார்கள்.

மாட்டின் வாலைப் பிடித்து முறுக்கினான் மூடன். அதன் முகத்தில் சூடு போட்டான், முட்டாள். வயிற்றின் மேல் ஏறிக் குதித்தான் மடையன்.

“அப்பாடா! ஒரு வழியாகத் திருட்டு மாட்டைக் கண்டுபிடித்து விட்டோம்!” என்ற பரமார்த்தரும் சீடர்களும் மகிழ்ச்சியோடு படுக்கச் சென்றார்கள்.

பொழுது விடிந்ததும், அந்த ஊரிலேயே பெரிய முரடனான முனியாண்டி, தன் மாட்டைத் தேடிக் கொண்டு வந்தான்.

பரமார்த்தரும் சீடர்களும் தன் மாட்டை கட்டி வைத்திருப்பதைப் பார்த்துப் பயங்கரமாகக் கோபம் கொண்டான்.

“டேய்! உங்களுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் என் மாட்டைக் கட்டி வைப்பீர்கள்? மாட்டுக்குச் சூடு போட்டதற்கும், அதன் காலை ஒடித்துக் கட்டிப் போட்டதற்கும் சேர்த்து மரியாதையாகப் பணத்த எடுத்து வையுங்கள்!” என்று கத்தியபடி குருவையும் சீடர்களையும் உதைக்க ஆரம்பித்தான்.

“கீரையும் வேண்டாம்; பணமும் வேண்டாம். ஆளை விட்டால் போதும்” என்று அலறியபடி குருவும், சீடர்களும் மடத்தை விட்டே ஓடத் தொடங்கினார்கள்.

பரமார்த்த குரு கதைகள் – பரமார்த்தரின் பக்தி

பரமார்த்தரின் வேண்டுகோள்படி மதுரை மன்னன், அவருக்கும் சீடர்களுக்கும் அரண்மனையில் விருந்து அளித்து ஒருநாள் தங்க வைத்தான்.

பட்டு மெத்தையில் படுத்துக் கொண்டு இருந்த பரமார்த்தர், தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தார். சீடர்களில் மண்டுவுக்கும் மூடனுக்கும் மட்டும் தூக்கம் வரவில்லை.

“குருவே! சற்று நேரம் உலாவினால் தூக்கம் வரும் என்று வைத்தியர் காலையில் யாரிடமோ சொன்னாரே… அதேபோல் நாமும் எங்காவது சென்று உலாவி விட்டு வரலாமே என்றான் மண்டு.

நல்லது! அப்படியே செய்வோம்” என்று அவனைத் தட்டிக் கொடுத்தார் பரமார்த்தர்.

தெருவில் நடந்தால், நம்மைத் திருடர்கள் என்று காவலர்கள் பிடித்துக் கொண்டால் என்ன செய்வது? அதனால் உப்பரிகைக்குச் சென்று உலாவலாம்!” என்றான், மூடன்.

அதன்படியே மற்ற சீடர்களையும் எழுப்பிக் கொண்டு, எல்லோரும் மெதுவாக நடந்து சென்றனர்.

உப்பரிகையின் படிகள் இருக்குமிடம் வந்ததும், மட்டி மட்டும் குருவை மிஞ்சிய சீடனைப் போல கட கட என்று அவரைத் தள்ளிக் கொண்டு வேகமாக மேலே ஏறினான்.

நான்கு படிகள் ஏறுவதற்குள் கால் வழுக்கிக தடதட என்று உருண்டு கீழே வந்தான். உருண்டு வந்த வேகத்தில் குருவின் மேல் மோதி அவர் பின்னால் வந்த சீடர்களை மோதி எல்லோரும் உருண்டு கீழே வந்து சேர்ந்தனர்.

“மட்டியே! அவசரப்படுகிறாயே!” என்று திட்டினார் பரமார்த்தர். மறுபடியும் எல்லோரும்
மெதுவாக ஏறி, உப்பரிகையை அடைந்தார்கள்.

அன்று முழு நிலவு நாள். அதனால், நாடும் நகரமும் அழகாகத் தெரிந்தது. “அற்புதம், அற்புதம்” என்று குரு மகிழ்ந்தார்.

அப்போது மடையன் மட்டும் அலறினான்

“என்ன? என்ன?” என்று பதறினார் குரு.

“குளிர்கிறதே” என்றான் மடையன்.

“அப்படியானால் நீ மட்டும் கீழே போய்ப் படுத்துக் கொள். நாங்கள் பிறகு வருகிறோம்” என்று பரமார்த்தர் சொன்னதும் அவன் கீழே இறங்கிப் போய்விட்டான்.

குருவும் மற்ற சீடர்களும் நகர அழகைக் கண்டு கொண்டு இருந்தனர்.

அரச வீதிகளில் நிறைய காவல் இருந்தது. குதிரையில் வீரர்கள் அப்படியும் இப்படியும் பாரா வந்து கொண்டு இருந்தனர்.

அந்த வீரர்களைப் பார்த்துக் குருவுக்கும், குதிரைகளைப் பாத்துச் சீடர்களுக்கும் நடுக்கம் ஏற்பட்டது.

அதற்கள் கீழே இறங்கிப் போன மடையன், மறுபடி மேலே ஏறி வந்து, “குருவே.. நான் கீழே இறங்கிப் போனேன். அங்கே இரண்டு பேர். ஒருவன் குண்டாக இருந்தான்; இன்னொருவனுக்குத் தாடியும் மீசையும் உள்ளது. இருவரும் அரண்மனையை விட்டு வெளியே போகிறார்கள். நிச்சயமாக அவங்க இரண்டு பேரும் திருடர்களாகத்தான் இருக்க வேண்டும்” என்று மூச்சு வாங்கக் கூறினான்.

“அப்படியா? அப்படியானால் உடனே அவர்களைப் பிடித்தாக வேண்டுமே!” என்ற பரமார்த்தர், “எல்லோரும் வாருங்கள், கீழே போவோம்” என்றபடி இறங்கினார்.

எல்லோரும் வேகமாக அரண்மனை வாசலுக்கு ஓடிவந்து பார்த்தனர். மடையன் சொன்னபடி இரண்டுபேர் குண்டாக ஒருவரும், ஒல்லியாக ஒருவரும் வேகமாக மறைந்து மறைந்து போவது தெரிந்தது.

அப்போது அங்கே சிலக காவலர்கள் ஓடிவந்தார்கள். அவர்களிடம், “மடையர்களே! அதோ பாருங்கள், இரண்டு திருடர்கள் அரண்மனையிலிருந்து பணத்தையும் நகைகளையும் திருடிக் கொண்டு போகிறார்கள். ஓடிப் போய் அவர்களைப் பிடியுங்கள்!” என்று கோபத்துடன் திட்டினார்.

வீரர்கள், குருகாட்டிய திசையில் ஓடினார்கள். பரமார்த்தரும், சீடர்களும் திருடன்!திருடன்! விடாதே, பிடி! என்று கத்தியபடியே பின்னாலேயே துரத்தினார்கள்.

அதற்குள் சப்தம் கேட்டு அரண்மனையிலும் நகரத்திலும் எல்லோரும் விழித்துக் கொண்டார்கள். எல்லோரும் தெருவுக்கு ஓடி வந்து பார்த்தனர்.

ராஜ வீதியில் ஒரே கலவரம். கூக்குரல்கள். அப்போது மூடன், “அதோ…அதோ.. பிடியுங்கள்” என்று கத்தினான்.

பரமார்த்தரும் சீடர்களும் அந்த இருவர் மீதும் தடால் என்று விழுந்து உருட்டி, அவர்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.

வீரர்கள் அவர்களை விலக்கி, திருடர்களை உற்றுப் பார்த்தனர். உடனே, “அரசே! மந்திரியே! நீங்களா?!” என்று வியந்தனர்.

“எல்லோரும் அரசர் காலில் விழுந்து, “எங்களை மன்னியுங்கள்! இந்தக் குருவும் சீடர்களும்தான் உங்களைத் திருடர்கள் என்று கூறினர்” என்று நடுங்கியபடி கூறினர்.

பரமார்த்தருக்கும் சீடர்களுக்கும் ஒன்றுமே புரியவில்லை. அரசரையே திருடன் என்று சொல்லி விட்டோமே என்று பயந்து நடுங்கினார்கள். கோபம் அடைந்த மக்கள் குருவையும் சீடர்களையும் அடிப்பதற்குச் சென்றனர்.

உடனே அரசர், “பொதுமக்களே! நானும் மந்திரியும் நகர சோதனைக்குச் செல்வது தெரியாமல் பரமார்த்த குரு தவறாக நினைத்து விட்டார். உண்மையிலேயே திருடர்களாக இருந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? ஆகவே திருடர்களைப் பிடிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட சீடர்களையும், பரமார்த்தருக்கு இருக்கும் அரச பக்தியையும் நான் பாராட்டுகிறேன். பரமார்த்தரும் சீடர்களும் இரவில் கூடத் தூங்காமல் காவல் செய்வதை நினைத்துப் பூரிப்படைகிறேன். இதற்காக நாளையே அவர்களுக்காக ஒரு விழா கொண்டாடுவோம்!” என்று கூறினார்.

மக்களும், பரமார்த்த குரு வாழ்க! சீடர்கள் வாழ்க! என்று முழக்கமிட்டனர்.

குருவும் சீடர்களுக்கும் சந்தோஷமாக இருந்தது.

பரமார்த்த குரு கதைகள் – பூவரசம் மரமே புத்திகொடு

மரத்தடியில், உட்கார்ந்த நிலையிலேயே தூங்கிக் கொண்டிருந்தார், பரமார்த்தர். திடீரென்று விழித்துக் கொண்டிருந்தார், பரமார்த்தர். திடீரென்று விழித்து எழுந்து, “சீடர்களே! புத்தருக்குப் போதி மரத்தடியில் ஞானம் பிறந்ததாம். அதுபோல் இப்போது எனக்கு இந்த பூவரசம் மரத்தடியில் புத்தி பிறந்து விட்டது!” என்று மகிழ்ச்சியுடன் கத்தினார்.

அதைக் கேட்ட சீடர்கள், “புத்தருக்கு ஒரு போதி; எங்கள் பரமார்த்தருக்கு ஒரு பூவரசம்! புத்தி கொடுத்த மரமே, நீ வாழ்க!” என்று அந்த மரத்தைச் சுற்றி வந்து வணங்கினார்கள்.

“சீடர்களே! நாம் யாருடனாவது கூட்டு சேர்ந்து பயிர் வைப்போம்; கொள்ளை லாபம் அடிப்போம்!” என்றார் குரு.

பரமார்த்தரின் யோசனையைக் கேள்விப்பட்ட ஒருவன், அவர்களுடன் கூட்டாகப் பயிர் செய்வதற்கு ஒப்புக் கொண்டான். எப்படியும் குருவும், சீடர்களும் ஏமாந்து விடுவார்கள் என்று நம்பினான்.

“கூட்டு வாணிகம் என்பதால், மண்ணுக்கு மேலே விளைவதை ஒருவரும், பூமிக்குக் கீழே கிடப்பதை இன்னொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இருவருக்கும் லாபம் சமமாக இருக்கும். உங்களுக்குப் பூமிக்குக் கீழே விளைவது வேண்டுமா? மேலே கிடைப்பது வேண்டுமா?” என்று கேட்டான், கூட்டாளி.

குருவும் சீடர்களும் தனியாகச் சென்று யோசித்தார்கள். “குருவே! பூமிக்கு மேலே இருப்பது வேண்டாம்! அதை யார் காவல் காப்பது? பூமிக்கு அடியில் இருப்பதையே எடுத்துக் கொள்வோம். எல்லாம் பத்திரமாக இருக்கும்!” என்றனர் சீடர்கள்.

சீடர்கள் பேச்சை நம்பிய பரமார்த்தரும், “பூமிக்குக் கீழே இருப்பது எல்லாம் எங்களுக்கே!” என்று கூறி விட்டார்.

ஏமாற்ற நினைத்த கூட்டாளியோ, சோளம், கம்பு, கேழ்வரகு என்று மண்ணுக்கு மேலே கிடைப்பவையாகப் பயிரிட்டான்!

செடிகள் நன்றாகச் செழித்து வளர்வதைக் கண்ட பரமார்த்தர், “பலே! மண்ணுக்கு மேலேயே இவ்வளவு செழிப்பாக இருந்தால், அடியில் இன்னும் வளமாகக் காய்க்குமே! இந்தத் தடவை நமக்கு நல்ல லாபம் நிச்சயமாகக் கிடைக்கப் போகிறது!” என்று மகிழ்ந்தார்.

சீடர்களும் நம் கூட்டாளியும் நன்றாக ஏமாந்து போனான். நம்முடைய திட்டம் அவனுக்குப் புரியவில்லை! என்று நினைத்தனர்.

அறுவடைக் காலம் வந்தது. குருவையும் சீடர்களையும் அழைத்து வந்த கூட்டாளி, “இதோ பாருங்கள்! பேசிய பேச்சை மீறக்கூடாது. பூமிக்கு அடியில் இருப்பதை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். மேலே இருப்பதை மட்டும் நான் கொண்டு போகிறேன்” என்று கூறினான்.

அவன் எல்லாவற்றையும் அறுத்துச் சென்ற பிறகு, குருவும் சீடர்களும் வெறும் மண்ணைக் கிளற ஆரம்பித்தார்கள்.

எங்கு தோண்டினாலும் வெறும் வேர் மட்டுமே இருந்தது.

“குருவே! மோசம் போனோம்!” என்று அலறினான் மட்டி.

“ஏதோ மாய வேலை நடந்து விட்டது!” என்று அழுதான் மடையன்.

“குருவே! பாதாள உலகத்தில் இருப்பவர்கள் தான் எல்லாவற்றையும் அடியிலிருந்தே திருடிக் கொண்டு போய் விட்டார்கள்!” என்றான் முட்டாள்.

“இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டு உழைத்தோம். எல்லாம் பாழாகி விட்டதே!” என்று வருத்தப்பட்டார், பரமார்த்தர்.

“குருதேவா! அடுத்த முறை பயிர் செய்யும் போது மேலே இருப்பதை நாம் எடுத்துக் கொள்வோம். நாம் ஏமாந்தது போல அவனும் ஏமாற வேண்டும்!” என்றான் மூடன்.

அடுத்த முறை பயிர் செய்யும் காலம் வந்தது. இந்தத் தடவை மண்ணுக்கு மேலே இருப்பது எல்லாம் எங்களுக்கு!” என்று கூறிவிட்டனர், குருவும் சீடர்களும்.

மறுபடியும் ஏமாற்ற நினைத்த கூட்டாளி, இந்தத் தடவை வேர்க் கடலையும் மரவள்ளிக் கிழங்கும் பயிர் வைத்தான்.

குருவும் சீடர்களும் கடுமையாக உழைத்தார்கள். “குருவே! செடிகள் வளமாக வளர்கின்றன. கொள்ளை லாபம் கிடைக்கப் போகிறது!” என்றான் மண்டு. அறுவடை நேரம் வந்தது. “சீக்கிரம் மேலே இருப்பதை எல்லாம் கொண்டு போங்கள். நான் மண்ணை தோண்ட வேண்டும்” என்றான் ஏமாற்றுக்காரன்.

செடியில் ஒன்றுமே காய்க்காததைக் கண்ட சீடர்கள், வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டனர்.

“குருதேவா! இந்தத் தடவையும் மோசம் போய் விட்டோம்!” என்று கண்ணீர் விட்டான் மட்டி.

“இரவு பகலாகக் காவல் காத்தும் பயனில்லாமல் போச்சே!” என்றும் புலம்பினான் மடையன். இது ஏதோ சைத்தான் வேலையாகத்தான் இருக்கும்!” என்றான் முட்டாள்.

பரமார்த்தர், தனிமையில சிந்தனை செய்து ஒரு முடிவுக்கு வந்தார்! “சீடர்களே! இது சைத்தான் வேலையுமல்ல; சனீஸ்வரன் வேலையுமல்ல! எல்லாம் நான் செய்த தவறுதான்!” என்றார்.

“என்ன! நீங்கள் செய்த தவறா? என்ன அது?” என்று சீடர்கள் வியப்போடு கேட்டனர்.

“மரத்தடியில் படுத்துத் தூங்கியபோது, புத்தி வந்ததாகக் கூறினேன். அது தவறு. அந்த மரம் பூவரசம் மரம் இல்லை என்பது தான் நேற்று தான் தெரிந்தது. வேறு ஏதோ ஒரு மரத்தடியில் மாறிப் போய்த் தவறுதலாகத் தூங்கி விட்டேன்! வாருங்கள், உண்மையாக பூவரசம் மரத்தடிக்குப் போவோம்!” என்றார்.

சீடர்களும், “பூவரசம் மரமே! புத்தி கொடு!” என்று மீண்டும் தவம் செய்யத் தொடங்கினார்கள்.

பரமார்த்த குரு கதைகள் – மாடு பிடிப்போம், நாடு ஆள்வோம்

அழகாபுரி ஊர் மக்கள் ஒரே மகிழ்ச்சியாக இருந்தனர். அதற்குக் காரணம், அன்றுதான் பொங்கல் பண்டிகை ஆரம்பம் ஆனது.

பரமார்த்தரும் சீடர்களும் கூட மிகவும் சுறுசுறுப்பாய் இருந்தனர்.

மறுநாள் – மாட்டுப் பொங்கலும் வந்து விட்டது.

“குருவே…குருவே..” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான் மண்டு. “இன்று சாயுங்காலம், ஊர் எல்லையில் நிறைய பந்தயம் எல்லாம் நடக்கப் போகுதாம்!”

“பந்தயமா? என்ன அது?” என்றபடி குருவும் சீடர்களும் அவனைச் சூழ்ந்து கேட்டார்கள்.

“காளை மாட்டின் கொம்புகளுக்கு வண்ணம் பூச வேண்டுமாம். அப்புறம், ஜல்லிக் கட்டுகூட நடக்கப் போகுதாம். வெற்றி பெறுபவர்களுக்குப் பல கிராமங்களைத் தரப் போகிறாராம் நம் அரசர்” என்று சொன்னான் மண்டு.

இதைக் கேட்டதும் பரமார்த்தரின் மூளை தீவிரமாக வேலை செய்தது.

“சீடர்களே! எப்படியாவது இந்தப் பந்தயத்தில் நாம் ஜெயித்து விட்டால்…. நான் பல ஊர்களுக்குத் தலைவன் ஆகிவிடுவேன்! உங்களுக்கும் பதவி கிடைக்கும். அப்புறம் நமக்கு எந்தத் துன்பமும் இல்லை”

குருவின் திட்டத்தைக் கேட்ட சீடர்கள் மகிழ்ச்சியால் எகிறி எகிறிக் குதித்தனர்.

“குருவே! நீங்கள் கவலையே படாதீர்கள். எப்படியும் நாங்கள் வெற்றிபெற்றுக் காட்டுகிறோம்!” என்று முட்டாள் சொன்னான்.

“நம் குரு மட்டும் எப்படியாவது ராஜா ஆகி விட்டால்… மகிழ்ச்சியாக இருக்கலாமே! விதம் விதமான குதிரைகள் பூட்டிய தேரில் ஜம்மென்று ஊர்வலம் வரலாம்!” என்று கனவு கண்டான் மூடன்.

“அது மட்டுமா? தெருவில் போனால், எல்லோரும் நம் காலில் விழுந்து விழுந்து கும்பிடுவார்களே!” என்று சிரித்தான், மட்டி.

“ஆமாம், ஆமாம். எனக்கும்கூட இலவசமாக நிறைய சுருட்டுகள் கிடைக்கும். பணத்துக்குப் பதில் சுருட்டையே வரியாகக் கட்டச் சொல்ல வேண்டும்!” என்றார் பரமார்த்தர்.

“குருவே! இன்னொரு கட்டளையும் போட வேண்டும். “இனிமேல் புதிதாகக் குதிரைகள் போடும் முட்டைகள் எல்லாம் மன்னருக்கே சொநதம்” என்று சொல்லி விட்டால், எல்லா குதிரைகளும் நமக்கே கிடைத்து விடும் என்று மடையன் யோசனை சொன்னான்.

“சீடர்களே, அற்புதமான யோசனைகள்! அருமையான எதிர்காலம்! வெற்றி நமக்கே! விடாதீர்கள்… ஓடுங்கள்…” என்று ஆவேசமாய்க் கூச்சலிட்டார், பரமார்த்தார்.

“குருவுக்கு ஜே” என்றபடி எல்லோரும் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள்.

ஒரு வீதியில் குருவும் சீடர்களும் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது.

“ஐயா! அந்த மாட்டைப் பிடியுங்கள்” என்று கூச்சலிட்டுக் கொண்டு ஒரு தடித்த அம்மாள் பரங்கிக்காய் போன்ற தன் உடலை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு நடந்து வந்தாள்.

இலேசாகக் காற்று வீசினால் கூட மூன்று முறை குட்டிக்கரணம் போட்டு உருளும் அளவுக்கு ஒரு பசுமாடு வாயில் நுரை வழிய நொண்டி நொண்டித் தள்ளாடி நடந்துவந்தது. அது, அவளுக்குப் “போக்கு” காட்டிக் கொண்டிருந்தது. அதன் விலாவில் வரிவரியாக எலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன.

மாட்டுப் பொங்கல் என்பதால் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, பூவும் சுற்றப்பட்டு இருந்தது.

பொங்கல் தயாரித்த பின் அதைத் தன் அருமையான பசுமாட்டுக்கு ஊட்டுவதற்காக ஒரு பெரிய கிண்ணத்தில் வைத்திருந்தாள். அந்தக் கிண்ணம் அடிக்கடி பசுமாட்டுக்கு மருந்து கரைத்து ஊட்டுவதற்குப் பயன்படுத்தப்படுவது. எனவே ஏதோ மருந்து ஊட்ட வருகிறாள் என்று நினைத்துப் பசு தள்ளாடித் தடுக்கி ஓட்டம் பிடிக்கத் தொடங்கியிருந்தது.

இதற்கிடையே தாடி மீசையும், சுருட்டும் புகையுமாக பரமார்த்த குருவும், அலங்கோல விசித்திரங்களாக அவரது சீடர்களும் எதிரே வரவே அவர்களைக் கண்டு மாடு மிரண்டது.

“இதோ ஒரு ஜல்லிக்கட்டு காளை! மைதானத்திலிருந்து தப்பி வந்திருக்கிறது!” என்று சீடர்கள் அதைச் சூழ்ந்து கொண்டார்கள்.

“விடாதே! விடாதே! வாலைப்பிடி! இதை அடக்கி மன்னரிடம் பரிசு வாங்கி விடலாம்!” என்று குரு கட்டளையிட எல்லா சீடர்களும் ஒரே நேரத்தில் மாட்டின் வாலைப் பிடித்து இழுத்தார்கள். வால் பாதியாக அறுந்தது.

வேதனை தாளாமல் குரல் எழுப்பிய மாடு தன்னிடமிருந்த கொஞ்சம் நஞ்சம் சக்தியையும் திரட்டி, கழுதைபோல் ஒரு உதை விட்டது. இதில் மட்டிக்கம் மடையனுக்கும் மூக்கு பிய்ந்தது. இருவரும் கதறிக் கொண்டு தூரப்போய் விழுந்தார்கள்.

“இது மாடா? அல்லது கழுதையா?” என்று திகைத்த குரு, கொம்பு இருப்பதைப் பார்த்து “பொல்லாத மாடாக இருக்கிறதே! கொம்மைப் பிடியுங்கள்! அப்போதுதான் அடங்கும்!” என்று பதறியவாறே சொன்னார்.

முட்டாளும் மூடனும் மண்டுவும், மாட்டின் மீது போய் விழுந்தார்கள். இவர்கள் பாய்ந்த வேகத்தில் இரண்டு கொம்புகளும் பிய்ந்து கையோடு வந்து விட்டன. பசு கால்களை விரித்துப் படுத்தே விட்டது.

“ஆ..! மாடு அடங்கி விட்டது! அடங்கி விட்டது!” என்று குருவும் சீடர்களும் குதித்தார்கள்.

“ஐயோ! என் கண்ணுன! என் செல்லம்.. போச்சே! தினமும் நாலுபடி பால் கறக்கும் அருமைப் பசுவைக் கொன்று விட்டீர்களே! என்று குண்டுக் கிழவி கண்ணீர் விட்டு ஒப்பாரி வைக்கத் தொடங்கி விட்டாள்.

“கவலைப்படாதே பாட்டி! மாட்டை அடக்கிய வீரச் செயலை மன்னரிடம் சொல்லி, கிடைக்கும் பரிசுப் பணத்தில் உனக்கு நஷ்ட ஈடு கொடுத்து விடுகிறோம்!” என்று கூறி அவளைச் சீடர்கள் சமாதானப்படுத்தினார்கள். குற்றுயிராகக் கிடந்த பசு மாட்டை ஒரு கட்டை வண்டியில தூக்கிப் போட்டுக் கொண்டு ஜல்லிக்கட்டு மைதானத்துக்குப் போனார்கள். போய் சேருவதற்கள் மாடு இறந்து விட்டது.

ஜல்லிக் கட்டுக் காளையை அடக்குவதாக நினைத்து நோஞ்சான் பசு மாட்டின் உயிரையும் போக்கிய குருவையும் சீடர்களையும் கண்டு மைதானத்தில் திரண்டிருந்த மக்கள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்கள்.

ஆனால், ஒரு பசுவைக் கொன்ற குற்றத்திற்காகக் குருவுக்கும் சீடர்களுக்கும் சாட்டையடிகள் தரப்பட்டன.

பரமார்த்த குரு கதைகள் – அன்புள்ள ஆவியே

“ஙொய்ய்ய்…” என்ற சப்தம் பரமார்த்தரின் காதைத் துளைத்தது. படுத்துக் கொண்டு இருந்தவர், எழுந்து மேலே பார்த்தார். அவர் தலையைச் சுற்றிலும் சில கொசுக்கள் பறந்து கொண்டு இருந்தன. உடனே தம் சீடர்களைக் கூப்பிட்டார்.

“குருதேவா! இதென்ன விசித்திரமாக இருக்கிறது? இது மாதிரிச் சின்னச் சின்னப் பறவைகளை இதற்கு முன்பு நாம் பார்த்ததே இல்லையே!” என்றான் மட்டி.

அப்போது, குருவையும் சீடர்களையும் சில கொசுக்கள் கடித்தன.

வலி தாங்காத குரு, கத்தினார், சீடர்களும் அவருடன் சேர்ந்து கூச்சல் போட்டனர்.

“குருநாதா! இந்தப் பறவைகள் ஏன் நம்மைக் கடிக்கின்றன?” எனக் கேட்டான், மடையன்.

அவை கொசுக்கள் என்பது பரமார்த்தருக்குத் தெரியாது. உண்மையைச் சொன்னால் சீடர்கள் கேலி செய்வார்கள் என்று நினைத்தார். அதனால், “ஒரு சமயம் நான் வேட்டையாட காட்டுக்குப் போயிருந்தேன். அப்போது ஒரு மரத்தில் நூறு பறவைகள் இருந்தன. எல்லாவற்றையும் அம்பு கோட்டுக் கொன்று விட்டேன். அதன் ஆவிகள்தான் இப்போது வந்து தொல்லை கொடுக்கின்றன” என்று புளுகினார்.

உடனே சிஷ்யர்கள், “அன்புள்ள ஆவியே, எங்கள் குருவின் குற்றத்தை மன்னித்து, எங்களுக்குத் தொல்லை தராமல் இருங்கள்” என்று ஒவ்வொரு கொசுவிடமும் வேண்டினார்கள்.

“உஸ்ஸ்… சத்தம் போடாதே… ஆவிகளுக்கு நாம் பேசுவது கேட்கும். அதனால் எல்லாப் பறவைளையும் தந்திரமாகத்தான் பிடிக்க வேண்டும்” என்று மெல்லக் கூறினான், முட்டாள்.

“குருவே! ஒவ்வொரு பறவையாகப் பிடித்துத் தூக்கில் தொங்க விட வேண்டும்!” என்று குதித்தான், மூடன்.

“அதைவிட, அதற்குக் “கிச்சு கிச்சு” மூட்டி, அது சிரித்துக் கொண்டு இருக்கும்போதே, ஊசியால் குத்திக் கொலை செய்து விடலாம்!” என்றான் மண்டு.

“சரி…சரி… முதலில் ஒவ்வொரு பறவையாகப் பிடியுங்கள்” என்று கட்டளை இட்டார் குரு.

மண்டுவின் மொட்டைத் தலையில் உட்கார்ந்திருந்த ஒரு கொசுவை அடிக்க நினைத்தான் முட்டாள். தன் தலையில் இருந்த கொள்ளிக் கட்டையால் அவன் தலையில் ஓங்கி ஒரு அடி அடித்தான்.

மண்டையில நெருப்புப் பட்டதும், “ஐயோ…” என்று கதறினான் மண்டு.

மெல்ல ஒரு கொசுவைப் பிடித்தான், மட்டி. அதற்குக் கிச்சு கிச்சு காட்டினான், மடையன். பரமார்த்தரோ, தம் கைத்தடியால் அந்தக் கொசுவை நசுக்கப் பார்த்தார். அதற்குள் அது பறந்து போய் விட்டது.

சற்று நேரத்தில் எல்லா கொசுக்களும் வேறு எங்கோ பறந்து சென்று விட்டன.

“குருவே” இந்தப் பறவைகளுக்கு மந்திரம் தெரியும் போலிருக்கிறது. நம் திட்டத்தைத் தெரிந்து கொண்டு மாயமாய் மறைந்து விட்டன” என்றான்.

“வேறு வழியில்தான் பிடிக்க வேண்டும்” என்றான், மண்டு.

“இந்தப் பறவைகளுக்கு எதிரியாக ஏதாவது பூச்சிகளைப் பிடித்து வந்துவிட வேண்டும். அவை இரண்டும் சண்டை போட்டுக் கொண்டு இருக்கும். நாம் நிம்மதியாகத் தூங்கலாம்” என்றான் முட்டாள்.

முட்டாளின் திட்டப்படி, மடம் பூராவும் மூட்டைப் பூச்சிகளைப் பிடித்து வந்து விட்டனர்.

இரண்டு நாட்கள் சென்றன. கொசுவுடன் மூட்டைப் பூச்சிகளும் சேர்ந்து கொண்டு கடித்தன.

“சே! பெரிய தொல்லையாகப் போய்விட்டதே! என்ன செய்வது?” என்று பரமார்த்தர் கேட்டார்.

“குருவே! எனக்கு ஓர் அற்புதமான யோசனை தோன்றி விட்டது. “மூட்டைப் பூச்சிக்குப் பயந்து கொண்டு வீட்டைக் கொளுத்தினானாம்” என்று சொல்கிறார்களே! அதைச் செய்து பார்த்தால் என்ன? என்று கேட்டான் மட்டி.

“ஆமாம் குருவே! நாம் பயப்படாமல் வீரத்துடன் கொளுத்துவோம்!” என்றான் மடையன்.

“குருவே! அப்படியே இன்னொரு திட்டத்தையும் செயல்படுத்துவோம்! எரிகிற மடத்தோடு சேர்ந்து நாமும் எரிவோம்!” என்றான் மூடன்.

“அப்படிச் செய்தால் செத்துப் போய் விடுவோமே?” என்றான் மண்டு.

“செத்தால்தான் ஆவியாகலாம். ஆவியாக மாறினால் நமக்குத் தொல்லை தருகிற சின்னப் பறவைகளை எல்லாம் சுலபமாகப் பிடிக்கலாம்!” என்றான் மூடன்.

“பலே மூடா!” என்று அவனைப் பாராட்டினார் பரமார்த்தர்.

அவன் திட்டப்படி, மடத்துக்குக் கொள்ளி வைத்துவிட்டு, எல்லோரும் உள்ளே சென்று நின்றனர்.

“திகு, திகு” என்று நெருப்பு பிடித்துக் கொண்டு எரிய ஆரம்பித்ததும், காட்டுக் கத்தலாய்க் கூச்சல் போடத் தொடங்கினார்கள்.

சப்தம் கேட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். நெருப்பை அணைத்ததுடன், குருவையும் சீடர்களையும் தீயிலிருந்து காப்பாற்றினார்கள்.

அப்போதும் “சே! இந்த அறிவு கெட்ட மக்கள் நம் அருமையான திட்டத்தைப் பாழாக்கி விட்டார்களே!” என்று முணு முணுத்துக் கொண்டார், பரமார்த்தர்!

சிறுவர் கதைகள் – அன்பின் மதிப்பு

குணசீலன் என்கிற அரசன் ஒருவன் நோய்வாய்ப்பட்டு, பல நாட்களாகப் படுத்த படுக்கையாகக் கிடந்தான். அவனைப் பார்க்க தினமும் பல பிரமுகர்கள் வந்துகொண்டிருந்தனர்.

ஒருநாள், சில பெரிய மனிதர்கள் பலவித பழங்களைக் கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, ஒரு விவசாயி தன்னைத் தடுத்த காவலாளிகளையும் பொருட்படுத்தாமல், மன்னனின் படுக்கையருகே வந்து நின்றான்.

அவனது கலைந்த தலைமுடியும், ஆடையில் படிந்திருந்த தூசியும் அவன் தன் கிராமத்திலிருந்து வெகுதூரம் நடந்து வந்திருக்கிறான் என்பதை அறிவித்தன.

அவன் மன்னனிடம், “அரசே……..உங்கள் உடல் தேறவேண்டுமென்று எங்கள் ஊர் மாரியம்மனுக்குப் பொங்கல் படைத்தேன். அந்தப் பிரசாதத்தைக் கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்ளுங்கள். அம்மன் பிரசாதத்தைச் சாப்பிட்டால் எந்த நோயும் பறந்து ஓடிவிடும்” என்றான்.

அவன் பிரசாதத்தை வெளியே எடுத்ததும் அது கெட்டுப் போன நாற்றம் அடித்தது. அங்கிருந்த பிரமுகர்கள் மூக்கைப் பொத்திக் கொண்டார்கள். முகம் சுளித்தார்கள். அரசனோ, பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு, தன் கழுத்தில் இருந்து முத்துமாலையைக் கழற்றி எடுத்து, அந்த விவசாயிக்கு பரிசளிக்க அளித்து அனுப்பினான்.

மன்னனுக்கு வேண்டிய பிரமுகர் ஒருவர், “அரசே, கெட்டுப் போன பொங்கலுக்கா முத்து மாலை பரிசு?” என்று கேட்டார். மன்னனோ, “அது கெட்டிருந்தாலும் அந்த பிரசாதத்தை நான் சாப்பிட்டுக் குணமடைய வேண்டும் என்று விரும்பி கள்ளங்கபடமற்ற மனதுடன் தன் கிராமத்திலிருந்து ஒரு வாரம் நடந்து வந்திருக்கிறான். அவனது அன்பு உண்மையானது. போலித்தனம் இல்லாதது. உண்மையான அன்புக்கு மதிப்பு மிக அதிகம். நான் அளித்த முத்துமாலைகூட அவனது அன்புக்கு ஈடாகாது” என்று கூறினான்.

நமது அன்பு உண்மையாக இருந்தால், கடவுளே கையைக் கட்டிக் கொண்டு, நமக்கு சேவை புரிய வந்து நிற்பார்.

சிறுவர் கதைகள் – அம்மா சொல் கேள்!

செழிப்பான ஒரு புல்வெளியில் ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. அவற்றை மேய்த்துக்கொண்டு வந்தவன், மரத்தடியில் உட்கார்ந்து கண் மூடி, புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தான்.

புல்வெளியைச் சுற்றி வேலி போடப்பட்டிருற்தது. அதன் அருகே, ஓர் ஆட்டுக்குட்டி மேய்ந்து கொண்டிருந்தது. வேலிக்கு வெளிப்பக்கம் இருந்த ஓநாய் ஒன்று ஆட்டுக் குட்டியைப் பார்த்தது.

வேலிக்குள் முகத்தை நுழைத்துக்கொண்டு, ஓநாய் எதையோ பார்ப்பது போல பாசாங்கு செய்தது. அதைப் பார்த்த ஒர் ஆட்டுக்குட்டி, “உனக்கு என்னவேண்டும்?” என்று கேட்டது.

ஓநாயும் “நண்பா, நண்பா…இங்கே இளசான புல் கிடைக்குமா என்று பார்க்கிறேன்! இளம்புல் என்றால் எனக்கு ரொம்பப் பிரியம். அதைத் தின்று, ஜில்லென்று தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! உங்களுக்கெல்லாம் அந்த யோகம் கிடைத்திருக்கிறது! எனக்கு அது கிடைக்கவில்லை…..” என்று வருத்தத்துடன் கூறியது.

“அப்படியா! நீ புல்லா சாப்பிடுவாய்? நீ மாமிசத்தைத்தான் சாப்பிடுவாய் என்று என் அம்மாவும் அப்பாவும் சொன்னார்களே?” என்று ஆச்சரியத்துடன் கேட்டது ஆட்டுக் குட்டி.

“சேச்சே…அதெலாம் சுத்தப் பொய்!” என்றது ஓநாய்.

“அப்படியென்றால் இரு. நான் வெளியே வந்து, மலையின் அந்தப் பக்கம் இளம்புல் இருக்குமிடத்தைக் காட்டுகிறேன். நாம் இரண்டு பேரும் போய், அதைச் சாப்பிட்டுவிட்டு, ஃப்ரெண்ட்ஸாக ஜாலியாகச் சுற்றலாம்!” என்று சொல்லிவிட்டு ஆட்டுக்குட்டி வேலி இடுக்கின் வழியாக நுழைந்து, ஓநாயின் பக்கம் போயிற்று.

“உடனே ஓநாய் அதன்மீது பாய்ந்து அதைக் கொன்று தின்றது.

அந்த ஆட்டுக் குட்டிக்குத் தானாகத் தெரியவில்லை. அது போகட்டும், பரவாயில்லை…அனுபவம் நிறைந்த அம்மா, அப்பா பேச்சை கேட்டிருந்தால், மதிப்பு வாய்ந்த, தன் உயிரை இழந்திருக்காது அல்லவா?

சிறுவர் கதைகள் – அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால்

இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்துகொண்டது.

சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை நுழைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்துவிட்டு, “குருவி அக்கா. எங்கள் வீட்டில் நுழைந்து எனக்கு இடமில்லாமல் பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டது.

“போடி போ. உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்” என்று குருவி மறுத்து விட்டது.

தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது.

சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்து “அப்படிப்போடு………..அப்படிப்போடு” என்று ஜாலியாகக் பாடிக் கொண்டிருந்தது.

திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்தது. ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பூசின. கூட்டின் வாசல் குறுகிக் கொண்டே போனது.

முதலில் சிட்டுக்குருவியின் கழுத்து, அப்புறம் தலைமட்டும், கடைசியாக அலகு என்று தெரிந்துகொண்டே வந்து, கடைசியில் ஒன்றுமே தெரியவில்லை. தூக்கணாங்குருவிகள், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போயின.

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி என்று தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது.

சிறுவர் கதைகள் – மறைக்க முடியாத பொய்

ஜானகி ஆன்ட்டி ஒருமுறை செக்கச்செவேல் என்று பழுத்திருந்த ப்ளம்ஸ் பழங்களை வாங்கினாள். ஆன்ட்டிக்கு நான்கு குழந்தைகள். கோபு பாபு, சிட்டு, பட்டு என்று அவர்களுக்குப் பெயர். குழந்தைகள் சாப்பிட்ட பிறகு பழங்களைத் தரலாம் என்று ஆன்ட்டி நினைத்தாள்.

பழங்கள் மேஜைமீது ஒரு தட்டில் இருந்தன. பட்டுக்குட்டி இதுவரை ப்ளம்ஸ் பழத்தைச் சாப்பிட்டதேயில்லை. ஆசையோடு அவற்றை வாசனை பார்த்தாள். அந்த வாசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. பழத்தைத் தின்று பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை அவளுக்கு உண்டாயிற்று.

அறையில் யாருமில்லாதபோது ஒரு பழத்தை எடுத்துத் தின்றுவிட்டாள். எல்லோரும் சாப்பிட்ட பின்பு ஜானகி ஆன்ட்டி பழங்களை எண்ணிப் பார்த்தாள். ஒன்று குறைந்தது.

“மைடியர் சில்ட்ரன். ஒரு ப்ளம்ஸ் பழம் குறைகிறது. யாராவது சாப்பிட்டீர்களா?” என்று குழந்தைகளைப் பார்த்துக் கேட்டாள்.

“நான் இல்லை”, “நான் இல்லை” என்று எல்லோரும் சொன்னார்கள். பட்டுக்குட்டியும் அவர்களோடு சேர்ந்து “நான் தின்னவில்லை” என்று சொன்னாள்.

“ஓகே……..யார் சாப்பிட்டிருந்தாலும் பரவாயில்லை. ஆனால், ப்ளம்ஸ் பழத்தில் கொட்டை இருக்கும். சாப்பிடத் தெரியாமல் அந்தக் கொட்டையையும் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் பெரியதாக ப்ளம்ஸ் மரம் முளைத்துவிடும். அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது” என்றாள் ஜானகி ஆன்ட்டி.

பட்டுக்குட்டி பயந்துபோய், “இல்லை, நான் கொட்டையை ஜன்னலுக்கு வெளியே எறிந்துவிட்டேன்” என்று கூறி அழத் தொடங்கினாள்.

“பொய் சொன்னால் எப்படியும் மாட்டிக் கொள்கிறோம் பார்த்தாயா? இனிமேல் பொய் சொல்லக்கூடாது……….என்ன?” என்று பட்டுக்குட்டியை சமாதானப்படுத்தினாள் ஜானகி ஆன்ட்டி.

சிறுவர் கதைகள் – சிஙகமும் பங்கும் – ஆப்பிரிக்கக் குட்டிக் கதை

சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கைக்
கேட்டது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம்.
கழுதைப் புலியோ, “நீ ஏன் குடலைக் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்குதானே நமக்கு உரியது?” என்று கேட்டது.

குட்டி கழுதைப்புலி சொல்லியது: “நான் சின்னப்பயல். பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும்”.

அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கோண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு கண்களை அச்சமூட்டும் வகையில் வைத்திருந்தது. “ஏன் இங்கே வந்தாய்?” – கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.

பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி தற்போது தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு பேசியது: “ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்”.

குடலை சிங்கத்திடம் கொடுத்து விட்டு திரும்பிய கழுதைப்புலியிடம் குட்டி கேட்டது: “பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்து விட்டு வருகிறீர்களே?”
“மகனே! சிங்கம் மிகக் கொடுரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கி விட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டி விட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக” என்றது தாய் கழுதைப்புலி.

நம்மை விட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.

சிறுவர் கதைகள் – எல்லோர்க்கும் நல்லவன் தன்னை இழந்தான்!

ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர் இவர்களைப் பார்த்து, “பாரேன், இவர்களை, அற்புதமான கழுதையை ஓட்டிக் கொண்டு நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்களில் யாராவது அதில் ஏறிச் செல்லலாம். ஆனால் பொருளைக் கொடுத்த கடவுள் அதைப் பயன்படுத்த அறிவைக் கொடுக்கவில்லை, இவர்களுக்கு” என்று ஏளனம் செய்தனர்.

இதனால் வெட்கப்பட்டுப் போன தந்தையும் மகனும் ஒரு முடிவு செய்து, வயதில் சிறியவனான மகன் கழுதையின் மேல் உட்கார்ந்து கொண்டு, தந்தை நடந்தவாறே இருவருமாகப் போனார்கள். அப்போது வேறு சில வழிப்போக்கர்கள், “இங்கப் பாருடா அநியாயம்! பெரியவர் நடக்கமுடியாமல் நடக்கிறார், இந்த வாலிபப் பையன் சொகுசா கழுதை சவாரி செய்கிறான்” என்று கிண்டலடித்தனர்.

இதைக் கேட்டு இவர்கள் கூறுவதில் நியாயம் இருப்பதாக உணர்ந்த பையன், தந்தையைக் கழுதையில் உட்காரவைத்து இருவரும் புறப்பட்டனர்.இன்னும் சற்று தூரம் சென்ற பின் ஒரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து “கலி முற்றிவிட்டது.. இங்கப் பாரு! நல்லா சுக்குமாந்தடி போல இருக்கிற பெரியவர், ஒரு நோஞ்சான் பையனை நடக்கவிட்டு தான் மட்டும் சொகுசாக கழுதை மேல் ஏறிப்போகிறார்” என்றான்.

வழக்கம் போல இதைக்கேட்ட தந்தை-மகன் இருவரும் ஒரு சேர கழுதைமேல் ஏறிகொண்டனர். இனி இந்த உலகம் தங்களைப் பார்த்துக் கேலிப் பேசாது என்று தந்தைக் கூறினார்.

கொஞ்ச தூரம் சென்றபின் இன்னொரு வழிப்போக்கன் இவர்களைப் பார்த்து “இரண்டு தடியன்கள், ஒரு நோஞ்சான் கழுதையின் மேல் ஏறி சவாரி செய்கிறார்கள்; இரக்கங்கெட்ட ஜென்மங்கள்!” என்று காட்டமாக விமர்சித்தான்.

இதைக் கேட்டு வருந்திய தந்தையும், மகனும் கழுதையிலிருந்து குதித்தனர். இனி என்ன செய்வது? என்று சிந்தித்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு “மக்கள் மனம் மகிழ கழுதையை நாம் கட்டித் தோளில் சுமந்து செல்வோம்!” என்று முடிவு செய்தனர்.

அவ்வாறு கழுதையைத் தோளில் சுமந்து செல்கையில் வழியில் ஒரு காட்டாறு குறுக்கிட்டது. அதைக் கடக்கையில் கழுதை மிரண்டு போய் வெள்ளத்தில் விழுந்தது. கால்கள் கட்டப்பட்டிருந்ததால் அதனால் நீந்த முடியவில்லை! எனவே அது ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. தந்தையும் மகனும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.எப்படி இருக்கு?

சிறுவர் கதைகள் – ஏமாந்த சிறுத்தை – கிழக்கு ஆப்பிரிக்க குட்டிக் கதை

ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது.

அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.

அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.

சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. ‘எதைத் துரத்தலாம்’ என்று தயங்கி நின்றது. பிறகு, ‘சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்’ என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.

உடனே சிறுத்தை “அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி… புள்ளி மானைப் பிடிக்கலாம்” என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.

முக்கியமான நேரத்தில் முக்கியமான் முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.

சிறுவர் கதைகள் – கருத்துடன் செயல்படு – ஐரோப்பிய குட்டிக் கதை

ஓரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு புத்தகத்தைக் கண்டெடுத்தான்.

அது ஒரு மிகப் பழைய புத்தகம். பக்கங்கள் மஞ்சள் படிந்து மடித்துப் போயிருந்தன. பக்கங்களைத் திருப்புகையில் மிகக் கவனம் தேவையிருந்தது. இல்லாவிட்டால் பக்கங்கள் உதிரத் தொடங்கின.

அவன் அந்தப் புத்தகம் மந்திர மாயங்களைப் பற்றியது என்று அறிந்து கொண்டான். எத்தனையோ முறை படிக்க முயன்றும் அவன் ஒரே ஒரு பத்தியில் உள்ள கருத்தை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றவை அவனுக்குப் புரியவில்லை.

அந்தப் பத்தியில் கருங்கடற் கரையில் கிடக்கும் மாய சக்தி மிக்க ஒரு கறுப்புக் கூழாங்கல்லைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. அந்தக் கல்லால் எதைத் தொட்டாலும் அதைத் தங்கமாக மாற்றி விடுமாம். அந்தக் கல்லை எப்படிக் கண்டு கொள்வது என்றும் அந்தப் புத்தகத்தில் சொல்லப் பட்டிருந்தது. தொட்டுப் பார்த்தால் மற்ற கற்கள் எல்லாம் பனிக் கட்டி போல் குளிராய் இருக்க, அந்தக் கல் மட்டும் வெதுவெதுப்பாய் இருக்குமாம்.

இதைத் தெரிந்து கொண்ட மனிதனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. கருங்கடல் கரை நோக்கி உடனே புறப்பட்டான்.

அங்கு தினமும் காலையிலிருந்து மாலை வரை அவன் ஒவ்வொரு கல்லாய் தொட்டுப் பார்த்துத் தேடத் துவங்கினான். கடற்கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கருங்கூழாங்கற்கள் கிடந்தன. அவனுக்கு ஒரு முறை சோதித்த கல்லை மறுபடி மறுபடி சோதிக்காமல் இருக்க வேண்டுமே என்ற கவலை வந்து விட்டது. சோதித்த கல்லைக் கடலுக்குள் உடனே எறிந்து விட்டால் குழப்பம் வராது என்று யோசித்து, அதன்படியே ஒவ்வொன்றாகக் கற்களைக் கடலுக்குள் எறிந்தான்.

பல மாதங்களும் வருடங்களும் கடந்து போயின. கல்லும் கிடைக்கவில்லை, அவனும் விடுவதாய் இல்லை. கற்களைத் தொட்டுப் பார்த்து கடலுக்குள் எறியும் பணி அவனுக்கு அனிச்சைச் செயல் போல் ஆகி விட்டது.

ஒரு நாள் மாலை, மிகுந்த தேடலுக்குப் பிறகு களைத்துப் போய் கடற்கரையை விட்டுச் செல்லும் போது ஒரு கறுப்புக் கூழாங்கல் அவன் கண்ணில் பட்டது. அதைக் கையில் எடுத்தான். அது வெதுவெதுப்பாய் இருந்தது. ஆனால், பல வருடப் பழக்கத்தால், எப்பொழுதும் போல் அதையும் யோசிக்குமுன் கடலில் தூர எறிந்து விட்டான்.

செய்யும் செயல்களில் எப்பொழுதும் கருத்தும் கவனமும் தேவை. பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தவிர்க்க வேண்டும்.

சிறுவர் கதைகள் – உழைப்பே அதிர்ஷ்டம் தரும்

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார்.

பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேன்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருன்ட்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.

முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா “இரண்டடி” என்று சொல்வதற்கு பதிலாக “ஓரடி” என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை.

எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது.

‘இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும்’ என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே!

அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் ‘சரி.. தோண்டியது வீணாக வேண்டாம்’ என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம்.

இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.

சிறுவர் கதைகள் – உழைப்பே அதிர்ஷ்டம் தரும்

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார்.

பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேன்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருன்ட்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.

முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா “இரண்டடி” என்று சொல்வதற்கு பதிலாக “ஓரடி” என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை.

எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது.

‘இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும்’ என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே!

அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் ‘சரி.. தோண்டியது வீணாக வேண்டாம்’ என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம்.

இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.

சிறுவர் கதைகள் – தாய்மையின் சக்தி

ஒரு மலைப் பிரதேசத்தில் மலை உச்சியில் ஒர் இனத்தாரும், அடிவாரத்தில் இன்னொரு இனத்தாரும் வாழ்ந்து வந்தார்கள். இரு இனத்தாருக்கும் எப்போதும் பகை.

ஒரு முறை உயரத்தில் இருந்தவர்கள் அடிவாரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தையைக் கடத்தி விட்டார்கள்.

சமூகத்திலிருந்த சில பெரியவர்கள், மலைமேல் இருந்த சமூகத்தினரிடம் சமாதானமாகப் போய் பேசினால் குழந்தையை மீட்டு வந்து விட சாத்தியம் இருப்பதாக ஊரில் உள்ள இளைஞர்களிடம் அறிவுரை கூறினர்.
இளைஞர்கள் சிலர் உடனே முன்வந்தார்கள். அவர்கள் கடினமான வேலைகள் செய்து பழகியவர்கள். எந்தச் செயலை எடுத்தாலும் அதை விடாமுயற்சியுடன் முடிக்கும் மனப்போக்கைக் கொண்டவர்கள். ஊர் பெரியவர்களும், இந்தச் செயலை முடிக்க இவர்கள்தான் சிறந்தவர்கள் என்று அவர்களை வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள்.

இளைஞர்களும் ஆர்வத்துடன் கிளம்பினார்கள். அந்த மலையின் சில பகுதிகள் மிகவும் செங்குத்தானவை. அந்த இளைஞர்களால் அப்படி ஒரு பகுதியை ஏறிக் கடக்க முடியவில்லை. விடாமுயற்சியுடன் அப்பகுதியைக் கடக்க பலமணி நேரமாக பல வழிகளில் முயன்று கொண்டிருந்தனர். களைத்துப் போனால் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் முயற்சித்தனர்.

அப்போது தம் ஊரைச் சேர்ந்த ஒரு பெண் மேலேயிருந்து கடத்தப்பட்ட குழந்தையைத் தூக்கிக் கொண்டு கீழே இறங்கி வருவதைப் பார்த்தார்கள். அவள் அருகில் வந்தவுடன் “நாங்கள் ஏற சிரமப்பட்ட மலையை நீ ஏறிச் சென்றுவிட்டாயே! எப்படி?” என்று வியப்புடன் கேட்டார்கள்.

அவள் இடுப்பிலிருந்த குழந்தையைக் காட்டி “இது உங்கள் குழந்தை இல்லை. என் குழந்தை. அதுதான் வித்தியாசம்” என்று பதில் சொன்னாள்.

சிறுவர் கதைகள் – உங்களுக்குப் பயன் தேவையா? அடுத்தவருக்கு உதவுங்கள் !

ராமுவும் மாரியும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும், தாய், தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது. இது போதாதென்று ராமுவுக்குக் கண் தெரியாது. அதேபோல் மாரியால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து, கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதைச் சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர்.

ஒரு நாள் அவர்களுக்குச் சிறிது தொலைவில் உள்ள மற்றொரு ஊரில் நடக்கும் திருவிழா பற்றித் தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே போக மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். மாரி சலிப்புடன் சொன்னான்” “என்னாலோ நடக்க முடியாது, உன்னாலோ பார்க்க முடியாது. இந்த லட்சணத்தில் நமக்கு ஏன் இந்த ஆசை?”

ராமு சிறிது நேரம் தீவிரமாக யோசித்து விட்டுச் சொன்னான்: “நண்பா! யோசித்துப் பார். உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக் கொள். எனக்கு வழியைச் சொல்லிக் கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வரமுடியும்”

ராமுவும் மாரியும் திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள்!!

1. நம் பலங்கள் எவை என்பதை எப்பொழுதும் உணர்ந்திருப்பது அவசியம். அவற்றைத் தகுந்த சமயத்தில் உபயோகிக்கத் தெரிய வேண்டியதும் அவசியம்

2. ஏன் நம்மால் ஒரு காரியத்தை சாதிக்க முடியாது என்று யோசிப்பதை விட, எப்படி சாதிக்க முடியும் என்று யோசிப்பது அதிகப் பயன் தரும்.

3. அடுத்தவர் பலங்கள் நமக்குப் பயன் தர வேண்டுமானால், அவர்களுக்குத் தேவையான நமது பலங்களின் பயன்களை அவர்களுக்கு அளித்து உதவத் தயங்கக்கூடாது

4. முயன்றால் முடியாதது எதுவுமில்லை

சிறுவர் கதைகள் – குறையா நிறையா?

ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

“ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்”

அதன் எஜமானன் கூறினான்.

“பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்”

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது

சிறுவர் கதைகள் – நாம் செய்யும் காரியங்களும் பேசும்!

ஒரு ஊரில் ஒரு குயவன் அவன் தாய், மனவி, மற்றும் மகனுடன் வாழ்ந்து வந்தான். குயவனின் மனைவிக்கு அவளது மாமியாரைப் பிடிக்கவில்லை. அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பத் துணிந்தாள். குயவனை தினமும் நச்சரித்தாள். அவனது அம்மாவை பக்கத்தில் ஒரு வீட்டில் குடியமர்த்தும் படி சொன்னாள்.

வெகு நாட்கள் குயவன் அவள் சொன்னதை காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருந்தான்.

மனைவி விடாமல் நச்சரித்தாள். அவனது அம்மாவிற்குத் தனியாக இருந்தால் ஒரு குறையும் வராது என்றும், அவரது சாப்பாட்டுத் தேவையைத் தான் கவனித்துக் கொள்வதாகவும் சொன்னாள்.

ஒரு நாள் குடியானவனுக்கு நச்சரிப்புத் தாங்க முடியவில்லை. அம்மாவைப் இருபது அடி தள்ளியிருந்த ஒரு வீட்டில் குடியமர்த்தினான். மனைவி மாமியாரிடம் குயவன் செய்த தட்டு ஒன்றைக் கொடுத்து, வேளாவேளைக்குத் தன் வீட்டுக்குத் தட்டை எடுத்து வந்தால் அதில் உணவு நிரப்பித் தருவதாகவும், அதை மாமியார் அவர் வீட்டுக்கு எடுத்துச் சென்று மகிழ்ச்சியாகச் சாப்பிடலாம் என்றும் கூறினாள்.

மாமியாருக்கு இது அவமானமாகத் தோன்றினாலும், தன் மகனுக்காக வாயைத் திறக்காமல் மருமகள் சொன்ன வழியில் வாழ்ந்து வந்தாள்.

பேரனுக்குப் பாட்டி வீட்டை விட்டுப் போனது அறவே பிடிக்கவில்லை. அவன் அம்மாவுக்குத் தெரியாமல் சில சமயம் பாட்டி வீட்டிற்குச் சென்று விளையாடுவான்.

அவன் வளர வளர குயவன் மண்பாண்டம் செய்வதைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான். சில சமயம் குயவன் வேலை செய்யாத போது அவனது இயந்திரத்தை மகன் இயக்கிப் பார்க்க ஆரம்பித்தான். ஒரு நாள் மகனுக்கு அப்பாவைப் போலவே மண்பாண்டம் செய்ய வந்தது. மிகச் சிறு வயதிலேயே அவன் அப்பாவின் தொழிலைக் கற்றுக் கொண்டான்.

அவன் முதல் முதலில் தன் அம்மாவுக்கு அருமையான தட்டு ஒன்றைச் செய்தான். அதை அவன் அம்மாவிடம் கொடுத்த போது அவள் மகனின் திறமையை நினத்து பெருமைப் பட்டாள். தனக்கு அவன் முதலில் பொருள் செய்து கொடுத்ததை எண்ணி அளவில்லா மகிழ்ச்சி அடைந்தாள். தனது சிறிய மகனை இவ்வாறு கேட்டாள்: “மகனே! நீ செய்த தட்டு மிக அருமை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. எத்தனையோ பாண்டங்கள் இருக்கும் போது ஏன் எனக்கு ஒரு தட்டைச் செய்து தர வேண்டும் என்று உனக்குத் தோன்றியது?”

மகன் குழந்தைத் தனமாகச் சொன்னான்: “அம்மா! ஒரு நாள் நான் அப்பாவைப் போலக் கல்யாணம் செய்து கொள்வேன். அப்போது நீ பாட்டியைப் போல பக்கத்து வீட்டுக்குப் போய் விடுவாய் அல்லவா. அப்போது உனக்கு என் மனைவி தினமும் சாப்பாடு கொடுக்க ஒரு தட்டு வேண்டுமல்லவா! அதைத்தான் உனக்கு நான் இப்போது செய்து கொடுத்தேன்”

குயவனின் மனைவிக்குத் தான் செய்த காரியத்தின் தீவிரம் புரிந்தது. மிகவும் வருந்தினாள். மாமியாரைத் தன் வீட்டுடன் வரவழைத்து மிகவும் அன்புடன் கவனித்துக் கொண்டாள்.

சிறுவர் கதைகள் – பிச்சைக்காரனும் தங்க நாணயமும்

ஒரு பிச்சைக்காரன் உணவுக்காக வீடு வீடாக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு, சிக்குப் பிடித்த தலைமுடியோடு இருந்தான். ஒரு பழைய கோணிப் பையே அவனுக்கு உடமையாக இருந்தது.

ஒவ்வொரு வீடாகப் போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் தனக்குள் அந்த வீட்டைப் பற்றி சொல்லிக் கொள்வான். ஒரு வீட்டின் முன்னே போய் சொன்ன வார்த்தைகள்; “வீடு மிகப் பெரியது. ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிறைய இருந்தும் திருப்தி இல்லை. அவர்கள் எப்போதும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். கடைசியில் அவர்கள் பேராசையால் எல்லாவற்றையும் இழப்பார்கள்…”

இன்னொரு வீட்டுக்குப் போனான். உணவு கிடைக்கவிலை. “இந்த வீட்டில் உள்ளவன் கோடீஸ்வரன். ஆனால் இருக்கிற பணத்தில் திருப்தியடையாமல் அவற்றை இரட்டை மடங்காக்க சூதாடினான். கடைசியில் எல்லாவற்றையும் இழந்தான். எனக்கோ கொஞ்சப் பணம் கிடைத்தால் போதும். திருப்தி கொள்வேன். அதிக ஆசைப் படமாட்டேன்!” என்று அந்த பிச்சைக்காரன் சொன்னதும் அதிர்ஷ்ட தேவதை அவன் முன்னே தோன்றியது.

“நான் உனக்கு உதவப் போகிறேன். நீ உன்னுடைய கோணிப்பையைப் பிடி. நான் அதனுள்ளே தங்க நாணயங்கள் போடுவேன். உனக்கு எவ்வளவு வேண்டுமோ பெற்றுக் கொள்”.

பிச்சைக்காரன் அதிர்ஷ்ட தேவதையைப் பார்த்தான். அதன் கரங்களில் தங்க நாணயங்கள் நிறைய இருந்தன. உடனே அவன் கோணிப்பையை விரித்தான். அப்போது அதிர்ஷ்ட தேவதை சொல்லியது: “கோணிப்பைக்குள் விழுகின்ற நாணயங்கள் தங்கமாக இருக்கும். அவை நிலத்தில் விழுந்தால் தூசியாகி விடும். இது எனது எச்சரிக்கை…”

பிச்சைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான். அதிர்ஷ்ட தேவதை மீண்டும் எச்சரித்தது. அதன் பிறகு பிச்சைக்காரனின் கோணிப்பைக்குள் தங்க நாணயங்களைக் கொட்டியது. கோணிப்பை நிரம்பியதும் தேவதை தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிறுத்தியது. “உன் கோணிப்பையில் இருக்கிற நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்கும். அது போதும்தானே?” என்றது அதிர்ஷ்ட தேவதை. “போதாது. இன்னும் வேண்டும்” என்றான் பிச்சைக்காரன்.

அதிர்ஷ்ட தேவதை மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்து விட்டு சொன்னது, “உன் கோணிப்பை இதற்கு மேல் தாங்காது”. பிச்சைக்காரன் சொன்னான்… “இன்னும் கொஞ்சம் வேண்டும்”…”. அதிர்ஷ்ட தேவதை மேலும் தங்க நாணயங்கள் சிலவற்றைக் கொடுத்துவிட்டு நிறுத்தியது.

“உன் கோணிப்பை கிழியப் போகிறது…”. பிச்சைக்காரன் மறுத்தான். “இல்லை… நீ இன்னும் கொஞ்சம் நாணய்ங்களைப் போடு! என் கோணிப்பை தாங்கும்…” மறு வினாடி கோணிப்பை கிழிந்தது. அதனுள் இருந்த நாணயங்கள் கீழே விழுந்து தூசியாகின. அதிர்ஷ்ட தேவதையும் மறைந்தது. பிச்சைக்காரன் திகைத்துப் போய் நின்றான்.

சிறுவர் கதைகள் – வல்லவர் யார் ?

கல்லில் சிலை வடிக்கும் சிற்பி ஒருவன் ஒரு தேவதையின் சிலையை வடித்துக் கொண்டிருந்தான். அற்புதமாக தத்ரூபமாகத் தோற்றமளித்த அந்தச் சிலை வடித்து முடித்த கணம் ஒரு மின்னல் நேரத்தில் உயிர் பெற்றது. தேவதை மகிழ்ச்சியுடன் சிற்பியின் கலைத் திறனைப் பாராட்டி வேண்டிய வரம் ஒன்று கேட்குமாறு சொன்னது.

சிற்பிக்கு வல்லவர்களுக்கு வல்லவனாக வேண்டும் என்ற வெகுநாள் ஆசை. அவன் அதை தேவதையிடம் சொன்னான். தேவதை அன்புடன் சிரித்துக் கொண்டே “சிற்பியே! நன்கு சிந்தித்துத்தான் கேட்கிறாயா?” என்று கேட்டது. சிற்பியும் மிகுந்த ஆவலுடன் “ஆம்!” என்றான்.

தேவதை “சரி! அடுத்த இரண்டு நாட்களுக்கு நீ யாரை அல்லது எதை வல்லவன் என்று நினைக்கிறாயோ அதுவாகவே மாறிவிடுவாய்” என்று வரம் அளித்து விட்டு அதே மின்னல் வேகத்தில் மறுபடியும் சிலை வடிவிற்குப் போய் விட்டது,

சிற்பி திடீரென்று நிகழ்ந்த இந்த நிகழ்வைப் பற்றி நம்புவதா வேண்டாமா என்று தீவிரமாகச் சிந்தித்துக்கொண்டே தன் வேலையைத் தொடர்ந்தான்.

சூரியன் உச்சிக்கு வந்து தகித்துக் கொண்டிருந்தது. சிலை வடிக்கும் கருங்கற்பாறை கொதித்தது. கல்லைக் கொத்தும் உளி கொதித்தது. சிற்பியின் உடலெல்லாம் வியர்த்து வழிந்தது. சிற்பி “இந்த சூரியன் மிகச் சக்தி படைத்தவனாக இருக்கிறானே. எல்லாவற்றையும் ஆட்டிப் படைக்கிறானே! இவன்தான் மிக வல்லவனாக இருக்க வேண்டும்” என்று நினைத்தான். என்ன ஆச்சரியம்! உடனே அவன் தேவதை கொடுத்த வரத்தின் சக்தியால் சூரியனாகவே மாறிவிட்டான்.

சிறிது நேரம் உலகைச் சுற்றி வந்து தனது சக்தியால் ஆனந்தமாக கண்ணில் பட்ட எல்லாவற்றையும் தகிக்கச் செய்து மகிழ்ந்து கொண்டிருந்தான்.

ஒரு இடத்தில் மேகங்கள் சூழ்ந்திருந்தன. அவை சூரியனின் கதிர்களை மறைத்தன. ஆகவே அவை மறைத்த இடங்களை சூரியக் கதிர்கள் சென்றடைய முடியவில்லை. சூரியனாக இருந்த சிற்பி, தன் மிக உக்கிரமான கதிர்களை அந்த மேகங்கள் மேல் செலுத்திப் பார்த்தான். அந்தக் கருமேகக் கூட்டங்கள் அசைவதாக இல்லை. “என்ன… இந்த மேகக் கூட்டங்கள் சூரியனின் சக்திமிக்க கதிர்களையே மறைக்கும் வல்லமை படைத்தவையாக இருக்கின்றனவே” என்று நினைத்தவுடன் அவன் அந்தக் கருமேகங்களாக மாறிவிட்டான்.

சிறிது நேரம் மகிழ்ச்சியாக சூரியக் கதிர்களை மறைத்துக் கொண்டு ஆனந்தப் பட்டுக் கொண்டிருந்தான். அப்போது பலமாகக் காற்றடித்தது. அந்தக் காற்று மேகக் கூட்டங்களை இப்படியும் அப்படியுமாக அலைக்கழித்தது. சிற்பி எவ்வளவு முயன்றும் காற்றின் வேகத்திற்கு எதிராக எதையும் செய்ய முடியவில்லை. “சூரியனின் கதிர்களை மறைக்கும் மேகத்தையே செலுத்தும் காற்று எவ்வளவு வல்லமை படைத்ததாக இருக்க வேண்டும்” என்று நினைத்தான். அந்தக் கணமே அவன் காற்றாக மாறிவிட்டான்.

காற்று வடிவில் சிற்பி தென்றலாகவும், புயலாகவும் எண்ணப் படி மாறி மாறி உலகைக் கலக்கிக் கொண்டிருந்தான். மிகவும் வல்லமை படைத்தவனாகத் தன்னைப் பற்றி எண்ணி எண்ணி நினைத்த இடத்திற்கெல்லாம் சடுதியில் சென்று மகிச்சியில் திளைத்துக் கொண்டிருந்தான். அவன் ஒரு முறை அப்படிக் கடும் புயலாக மாறிச் சென்று கொண்டிருந்த வழியை மறித்துக் கொண்டு ஒரு நெடிதுயர்ந்த மலை நின்று கொண்டிருந்தது. எவ்வளவோ உக்கிரமாக முட்டி மோதிப் பார்த்தும் கடும் புயலாய் வடிவெடுத்திருந்த சிற்பியால் அந்த மலையைக் கடந்து செல்ல முடியவில்லை. “அட.. இந்த மலைக்குக் கடும் புயலையும் மிஞ்சும் சக்தி இருப்பது முன்னமேயே நமக்குத் தெரியாமல் போய் விட்டதே!” என்று நினைத்த மாத்திரம் அவன் ஒரு மலையாக மாறிவிட்டான்.

அப்போது மற்றொரு சிற்பி அந்த மலை மேல் மெதுவாக ஏறி வந்தான். அவன் ஒரு இடத்தில் உள்ள மலையின் பாறைகளைத் தேர்ந்தெடுத்து தன் உளியையும் சுத்தியலையும் கொண்டு பாறையைப் பிளந்து சிலை வடிக்க ஆரம்பித்தான். மலை வடிவில் இருந்த சிற்பி “சக்தி வாய்ந்த மலையின் பாறைகளையே பிளக்கும் சிற்பிதான் மலையை விட வல்லவன்” என்று நினைத்தான்.

தேவதையின் வரம் பாக்கியிருக்கிறதே! அதனால் அப்படி நினைத்த மாத்திரத்தில் பழைய படி அவன் தன் சுய உருவை அடைந்து விட்டான்.

சுய உருவிற்கே திடீரென்று திரும்பி விட்ட அவனுக்கு இப்போது மூளைக்குள் ஏதோ பொறி தட்டியது போல் இருந்தது. நிதானமாக அமர்ந்து, தன் அனுபவங்களை நினைத்துப் பார்த்தான்.

ஒவ்வோருவருக்கும் ஒரு தனித்துவமும் அதைச் சார்ந்து வல்லமைகளும் இருப்பதை அறிந்து கொண்டான். அனைவருக்கும் வல்லவனாக் விளங்க வேண்டும் என்ற நினைப்பைக் கை விட்டான். தன் வல்லமைகளைப் முடிந்த வரை பெருக்கிக் கொண்டு அவற்றின் மூலம் உலகிற்கு உப்பாக விளங்குவதே சிறந்தது என்று நினைக்க ஆரம்பித்தான்.

தேவதை அவன் முன் திரும்பவும் தோன்றி அவனுக்கு நிறையப் பரிசுகளை மிக மகிழ்ச்சியுடன் வழங்கியது.

சிறுவர் கதைகள் – எறும்பு, பூரான் வல்லவர் யார் ?

தரையில் எறும்பு மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பூரான் அதன் அருகே வந்தது.

“நண்பா! நான் வருவதைக் கூடக் கவனிக்காமல் எங்கே சென்று கொண்டிருக்கிறாய்?” என்று எறும்பிடம் கேட்டது.

எறும்பு “பூரான் நண்பா! உன்னைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் கடமையை நான் சரிவரச் செய்ய முடியாதே” என்று ஊர்ந்து கொண்டே சொன்னது.

“அப்படியென்ன முக்கியமான கடமை?” என்று பூரான் கேட்டது.

எறும்பும் ஊர்வதை நிறுத்தாமல் “மழைக்காலத்திற்குத் தேவையான உணவை வெயில் காலத்திலேயே தேடிச் சேர்த்து வைப்பது என் கடமை. உன்னிடம் பேசிக் கொண்டிருந்தால் என் கடமையைச் செய்ய முடியாது” என்று கூறிச் சென்று விட்டது.

பூரான், எறும்பு தன்னை ஏமாற்றி விட்டதாகக் கருதியது. எறும்பை மட்டம் தட்டியே தீர வேண்டும் என்று நினைத்துக் கொண்டது.

அடுத்த நாள் எறும்பு வரும் வழியில் நின்று அதை வழி மறித்தது. “எறும்பே, கடமையை சரிவரச் செய்வதால் மட்டும் நீ வல்லவனாக முடியாது!. உன்னால் என்னைப் போல வேகமாக ஊர்ந்து வர முடியுமா? அப்படி வந்தால் நீ என்னை விட வல்லவன் என்று ஒத்துக் கொள்கிறேன்” என்று கேட்டது.

அதற்கு எறும்பு “வீண் பேச்சு வேண்டாமே. நான் என் கடமைச் செய்ய விடேன்” என்று பணிவாகக் கேட்டது.

பூரான் “தப்பித்து ஓடப் பார்க்காதே!” என்று கேலி செய்தது.

அதற்கு எறும்பு மிக அமைதியுடன் “பூரானே. உன் அளவுக்கு வேகமாக என்னால் ஊர முடியாது. அந்த தைரியத்தில் நீ பேசுகிறாய். ஆனால், நான் செய்யும் சில காரியங்களை உன்னாலும் செய்ய முடியாது. அதனால் யார் வலியவன் என்ற பரிட்சையெல்லாம் வேண்டாம்” என்று திரும்பவும் கூறியது.
பூரானோ “அப்படி என்ன சாகசத்தை நீ கிழித்து விடப் போகிறாய். சாதூரியமாகப் பேசக் கற்று வைத்திருக்கிறாய்” என்று கூறியது.

எறும்பு பூரானை பதில் பேசாமல் ஒரு தண்ணீர் தொட்டியின் அருகில் அழைத்துச் சென்றது. பூரானை வேடிக்கை பார்க்கச் சொல்லி விட்டு கரையின் அருகில் இருந்த ஒரு துரும்பில் தொற்றிக்கொண்டு தண்ணிரில் விழுந்து அந்த துரும்பைப் பற்றிக் கொண்டு தண்ணீரில் மிதந்தது.

பூரானைப் பார்த்து “உன்னால் இப்படிச் செய்து காட்ட முடியுமா?” என்று கேட்டது.

பூரானுக்கு அப்போதுதான் எல்லோருக்கும் சில வல்லமைகளும் சில இயலாமைகளும் இயற்கையிலேயே உண்டு என்று புரிந்தது. எறும்பிடம் மன்னிப்புக் கேட்டது.

அன்றிலிருந்து பூரான் எறும்பின் கருத்துகளை மதித்து நடந்து அதற்குச் சிறந்த நண்பனாகத் திகழ்ந்து வந்தது.

சிறுவர் கதைகள் – குறை காண முடியாத பணியொன்று சொல்வீர்!

ஒரு ஊரில் ஒரு குயவனும் ஒரு வைரம் தீட்டுபவனும் அருகருகே வாழ்ந்து வந்தார்கள். இருவரும் தத்தம் தொழிலில் சிறந்தவர்கள். அவர்கள் செய்யும் பொருட்களை பல ஊர்களிலும் உள்ள மக்கள் விரும்பி வந்து வாங்கிச் சென்றனர்.

குயவனிடம், வைரம் தீட்டுபவன் ஒரு நாள் “எப்படி இருக்கிறாய்? உன் வேலை எப்படிப் போகிறது?” என்று கேட்டான்.

குயவன் “அட போப்பா! எனக்குக் களிமண்ணில் வேலை.. நாளெல்லாம் சகதியை மேலே அப்பிக் கொண்டு … கையெல்லாம் அழுக்காக்கிக் கொண்டு வேலை செய்ய வேண்டியிருக்கிறது. உன்னைப் போல வெள்ளையும் சள்ளையுமாகவா இருக்க முடிகிறது? அலுப்புத் தட்டுகிறது போ!” என்று கொட்டாவி விட்டான்.

அதற்கு வைர வியாபாரி சொன்னான் “உனக்கு என்ன தெரியும் என் வேலையைப் பற்றி… நாளெல்லாம் வைரத்தைத் தீட்டுகிறேன் என்று எத்தனை முறை நான் என் கையை அறுத்து ரத்த காயப் படுத்திக் கொள்கிறேன் தெரியுமா உனக்கு? உன் வேலையில் இந்த ஆபத்தெல்லாம் கிடையாதே. வேலை செய்து கையெல்லாம் புண்ணாகிப் போனதுதான் மிச்சம். இன்றும் நாள் முழுவதும் இந்த வேலையைத்தான் ஆபத்து என்று தெரிந்தே செய்ய வேண்டும்…” என்று அலுத்துக் கொண்டே புண்ணாகிப் போன தன் கைகளைக் காட்டினான்.

எல்லோருக்கும் அவரவர் வேலையில் மகிழ்ச்சி இல்லையா? மகிழ்ச்சியான வேலைதான் எது? என்று இருவரும் சிந்தித்தார்கள். அவர்களுக்கு எதுவும் பிடிபடவில்லை.

ஊரில் எல்லோரும் மதித்து நடக்கும் சிந்தனையில் சிறந்த பெரியவர் ஒருவர் இருந்தார். இருவரும் அவரிடம் சென்று “ஐயா எங்கள் வேலையில் அலுப்பும் ஆபத்தும்தான் தெரிகிறது? எப்போதும் மகிழ்ச்சியாகச் செய்யக் கூடிய வேலை ஏதாவது இருந்தால் சொல்லுங்கள்” என்று கேட்டார்கள்.

பெரியவர் புன்னகைத்துக் கொண்டே “உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்வதைத் தவிர வேறு வேலை ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார்.

அவர்கள் தத்தம் வேலைகளை மட்டுமே தமக்குச் செய்யத் தெரியும் என்று பதில் கூறினார்கள்.

“உலகிலே மண்பாண்டங்களும், தீட்டிய வைரங்களும் இயற்கையாகவே கிடைத்தால் என்ன நடக்கும்?” என்று அவர்களிடம் கேட்டார்.

“எங்கள் வேலைக்கே மதிப்பில்லாமல் போய்விடும்!” பயத்துடன் பதில் சொன்னார்கள்.

“அப்படியானால் உங்கள் வேலைக்கு என்ன மதிப்பு?” பெரியவர் கேட்டார்.

“களிமண்ணை பாண்டமாக உருவாக்குவதும், இயற்கையில் கிடைக்கும் வைரத்தை மின்னல் போல் பளபளக்கச் செய்வதும்தான்” என்று இருவரும் சொன்னார்கள்.

“உலகில் குறைகள் இருப்பதால்தான் உங்கள் இருவருக்கும் வேலை இருக்கிறது. அந்தக் குறைகளை நிறை செய்யும் திறமை உங்களுக்கு இருப்பதால் உங்களை மக்கள் மதிக்கிறார்கள். அந்தத் திறமை மற்றவர்களை விட உங்களுக்கு அதிகமாக இருப்பதால்தான் உங்களைத் தேடி வருகிறார்கள். நீங்கள் அதைப் பெரிதாக நினைக்காமல், குறைகளால் ஏற்படும் வருத்தங்களைப் பெரிதாக நினைக்கிறீர்கள். மகிழ்ச்சியும் மகிழ்ச்சியின்மையும் உங்கள் நோக்கிலேயே இருக்கிறது. செய்யும் வேலையில் இல்லை. குறைகளை அவற்றை நிறை செய்யும் வாய்ப்பாகப் பார்ப்பவன் மகிழ்ச்சியுடன் இருக்கிறான். குறையை அதில் உள்ள சிரமங்களாகப் பார்ப்பவன் வருத்தத்துடன் இருக்கிறான்” என்று முடித்தார்.

சிறுவர் கதைகள் – வேஷங்கள் நிலைப்பதில்லை

ஒரு ஏரியில் நிறைய மீன்களும் பாம்புகளும் வாழ்ந்து வந்தன. முதலில் நட்பு பாரட்டி இந்த இரண்டு இனங்களும் வாழ்ந்து வந்தன. பருவமழை பொய்த்து ஏரி வற்ற ஆரம்பித்ததும் இடத்துக்குச் சண்டை போட்டு ஏரியைப் பிரித்துக் கொண்டு வாழ்ந்தன. ஒரு இனம் வாழும் இடத்திற்கு மற்றொரு இனம் போகக் கூடாது. மீறினால் எதிரியின் கையில் சரியான உதை கிடைக்கும்

இதில் ஒரு விலாங்கு (eel) மட்டும் தந்திரமாக வேஷம் போட்டு ஏரி முழுவதும் சுற்றி வந்து கொண்டிருந்தது.

பாம்புகள் இடத்திற்குப் போகும் போது விலாங்கு தன் நீண்ட உடலையும் பாம்பு போன்ற தலையையும் வைத்து தான் ஒரு பாம்பு என்று காட்டிக் கொள்ளும்.

மீன்களின் இடத்திற்குப் போகும் போது உடலைச் சுருட்டி மீன் போன்ற துடுப்புகளையும் வாலையும் காட்டி தான் ஒரு மீன் என்று காட்டிக் கொள்ளும்.

இப்படி ஏமாற்றியே பொழுதை ஓட்டிக் கொண்டு இரண்டு இடங்களிலும் உணவு பெற்று ஏரி முழுவதும் சுற்றித் திரிந்து வந்தது விலாங்கு.

வெயில் காலம் அதிகமானது. ஏரி மேலும் வற்றியது. பாம்புக் கூட்டமும் மீன் கூட்டமும் தங்கள் இடங்களை நெருக்கியும் குறுக்கியும் அமைத்துக் கொண்டே வந்தன.

ஒரு நாள் இரண்டு கூட்டங்களும் ஒன்றன் இருப்பிடத்தை இன்னொன்று பார்த்துக் கொள்ளும் தூரத்தில் அமைக்கும் நிலை வந்தது.

அப்போது மீனாக விலாங்கு வேஷம் போட்டால் பாம்புகள் பார்த்து தாக்கின. பாம்பாக வேஷம் போட்டால் மீன்கள் கடித்துக் குதறின.

“நான் பாம்பும் அல்ல மீனும் அல்ல” விலாங்கு கதறீயது. நம்புவாரில்லை. விலாங்கு “முதலிலேயே உண்மையைச் சொல்லியிருக்கலாமோ” என்று நினைத்துக் கொண்டு செத்தே போனது.

சிறுவர் கதைகள் – நன்மை செய்தவருக்கு தீமை நினைக்கக் கூடாது

ஒரு மீனவன் கடலோரத்தில் வாழ்ந்து வந்தான். வயதாக ஆக முதுமையால் வலுவிழந்த அவனால் கடலுக்குள் போய் மீன் பிடிக்க முடியவில்லை.ஆற்றோரத்திலேயே நாளெல்லாம் தவம் கிடந்து கிடைத்த மீனை சந்தையில் விற்று மிகச் சிரமத்துடன் வாழ்ந்து வந்தான்.

ஒரு நாள் அவன் அப்படி ஆற்றோரத்தில் வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்த போது அங்கு ஒரு அழகான பெரிய பறவை வந்தது. அது வெள்ளிச் சிறகுகளாலான இறக்கையைக் கொண்டிருந்தது. பார்ப்பதற்கு கம்பீரத் தோற்றத்துடன் காட்சியளித்தது. அதுதான் தேவலோகப் பறவையான காஹா.

காஹா தாத்தாவைப் பார்த்து “ஏன் தாத்தா இந்த வெயிலில் காய்கிறாய். உனக்கு உதவ உன் வீட்டில் யாருமே இல்லையா?” என்று கேட்டது.”

ஒரு ஆத்மா கூட இல்லை” என்றான் மீனவன்.

“நீ இந்த வயதில் இவ்வளவு வேலை செய்யக் கூடாது. நான் இனி தினமும் உனக்கு ஒரு மீன் கொண்டு வந்து தருகிறேன். அதைக் கொண்டு பிழைத்துக் கொள்” என்று கனிவுடன் கூறி விட்டு பறந்து விட்டது.

அன்றிலிருந்து சொன்ன சொல் தவறாமல் காஹா யார் கண்ணிலும் படாமல் ஒரு பெரிய மீனை தாத்தாவின் வீட்டில் போட்டு விட்டு போய்விடும். அது வந்து போவது தாத்தாவுக்கு மட்டும்தான் தெரியும்.

அந்த மீனுக்குச் சந்தையில் மிகுந்த கிராக்கி இருந்ததால் மீனவன் அதை அதிக விலைக்கு விற்றுப் பணம் சேர்க்க ஆரம்பித்தான். வசதியாக வாழத் தொடங்கினான். சுற்றிலும் அழகிய தோட்டத்துடன் ஒரு பெரிய வீட்டைக் கட்டிக் கொண்டான். மனைவியை இழந்த அவன் இன்னோரு திருமணம் செய்யக் கூட நினைத்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

எது தவறினாலும் காஹா மட்டும் சொன்ன சொல் தவறவேயில்லை.

ஒரு நாள் தண்டோரா போட்டார்கள். காஹா என்ற ஒரு பறவை அந்த இடத்தில் சுற்றித் திரிவதாக அறிவதாகவும், அரசருக்கு அந்த பறவை தேவையென்றும் கூறிய தண்டோரா, பறவையைப் பற்றித் தகவல் தெரிவிப்பவர்களுக்கு கருவூலத்திலிருக்கும் பாதித் தங்கம் தர அரசர் தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள்.

“அரசனுக்கு காஹா ஏன் தேவை?” மீனவன் தண்டோராவிடம் கேட்டான்.”

அரசனுக்குக் கண் போய் விட்டது. அவர் காஹாவின் ரத்ததில் குளித்தால் அவருக்குக் கண் பார்வை திரும்பக் கிடைக்கும்” என்று கூறிய தண்டோரா. சட்டென்று “உனக்கு காஹாவைப் பற்றி தெரிந்திருக்கும் போலிருக்கிறதே?” என்று கேட்டான்.

இதை மீனவன் எதிர் பார்க்கவில்லை. காஹாவின் மேலிருந்த நன்றி உணர்ச்சிக்கும், அரசன் கொடுக்கப் போகும் வெகுமதி தங்கத்தைப் பற்றிக் கேட்டதால் எழுந்த பேராசைக்கும் நடுவே தத்தளிக்கத் தொடங்கிய அவன் மனம் ஒரு நிலையில்லை. “அது.. வந்து.. இல்லையில்லை.. எனக்குத் தெரியவே தெரியாது” என்று உளறினான்.

தண்டோராவுடன் வந்த காவலர்களுக்கு சந்தேகம் வந்ததால் மீனவனைப் பிடித்துச் சென்று அரசன் முன்னால் நிறுத்தி விட்டார்கள். பயந்து போன மீனவன், “காஹா பெரிய பறவை. அதை என் ஒருவனால் பிடிக்க முடியாது” என்று கூறினான்.

அரசன் பத்துக் காவலர்களை மீனவனுடன் அனுப்பினான். அவர்கள் மீனவன் வீட்டில் ஒளிந்து கொண்டார்கள்.அன்று வழக்கம் போல காஹா வந்தது.

மீனவன் “காஹா! உனக்கு இத்தனை நாளாக நான் நன்றி சொன்னதே இல்லை. இன்று ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. கொஞ்சம் உள்ளே வந்து விட்டுப் போயேன்” என்று கூறினான். காஹாவும் அவனை நம்பி உள்ளே வந்தது.ஒடிப் போய் அதன் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட மீனவன், ஒளிந்து கொண்டிருந்த காவலர்களைக் கூப்பிட்டான்.

அவர்கள் வருவதற்குள் சுதாரித்துக் கொண்ட காஹா காலைக் கட்டிக் கொண்டிருந்த மீனவனுடன் பறந்து உயர எழுந்து விட்டது. விழுந்தால் சிதறி விடுவோம் என்று பயந்த மீனவனால் கையை எடுக்க முடியவில்லை.

அன்றிலிருந்து காஹாவையோ மீனவனையோ யாருமே பார்க்க முடியவில்லை. நீங்கள் பார்த்தால் கொஞ்சம் சொல்லுங்கள்.

சிறுவர் கதைகள் – சமயோசிதம் தேவை

ஒரு பொற்கொல்லன். வசதியாக வாழ்ந்து வந்தான். அவனுக்குத் திருமண வயதில் அழகான மகள்.

அதே ஊரில் வட்டிக்குக் கடன் கொடுக்கும் சேட்டு ஒருவன் இருந்தான். இளைஞன். அவனுக்கு பொற்கொல்லன் மகளை மணம் முடிக்க ஆசை. கேட்ட போதெல்லாம் பொற்கொல்லனும் அவன் மகளும் தொடர்ந்து மறுத்து வந்தனர். பொற்கொல்லன் மகளுக்கு சேட்டு இளைஞனை அறவே பிடிக்காது.

ஒரு முறை நாட்டின் பொருளாதாரம் தீவிரமாகத் தேய ஆரம்பித்தது ( Downturn :o) ). பொற்கொல்லனின் வியாபாரம் நொடித்துப் போகும் நிலைக்கு வந்தது. ஏகப் பட்ட பொருள் இழப்பு. வியாபாரத்தை தொடரவும், வாழ்க்கைச் செலவுகளுக்கும் கடன் வாங்க வேண்டிய அவசியம் வந்தது.

பொற்கொல்லன் வேறு வழியில்லாமல் சேட்டு இளைஞனிடம் கடன் வாங்கப் போனான். சேட்டும் கேள்வி கேட்காமல் கடன் கொடுத்தான். அவனைப் பொறுத்த வரை வருங்கால மாமனாரல்லவா !

பொற்கொல்லனால் கடனைக் குறித்த நேரத்தில் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. சேட்டு இளைஞன் கடனைத் திரும்பக் கேட்காமல் பொற்கொல்லனிடம் அவன் மகளை மணம் முடித்துத் தருமாறு கேட்டான்.

பொற்கொல்லனும் அவன் மகளும் தீவிரமாக மறுத்தார்கள்.

சேட்டு ஊர் பெரியவர்களிடம் நியாயம் கேட்டான். அவர்களும், வசதியாக வாழும் சேட்டுக்கு மகளை மணம் முடித்துக் கொடுத்து விடும் படிதான் பொற்கொல்லனுக்கு அறிவுறுத்தினார்கள். பொற்கொல்லன் மறுத்து விட்டான்.

பணத்தை எப்படியாவது திருப்பித் தந்து விடுவதாகச் சொன்னான். எப்படி, எப்போது என்றுதான் அவனால் சொல்ல முடியவில்லை.

பிரச்சனையைத் தீர்க்க சேட்டு அனைவருக்கும் ஒரு யோசனை சொன்னான். அதன்படி, ஊரின் மத்தியில் உள்ள திடலில் சம்பந்தப் பட்ட அனைவரும் வாரக் கடைசியில் கூட வேண்டும். அந்தத் திடலில் கருங் கூழாங்கற்களும், வெண் கூழாங்கற்களும் நிறைந்திருக்கும். அந்தச் சமயம் சேட்டு திடலிலிருக்கும் கற்களிலிருந்து ஒரு கருங் கூழாங்கல்லையும் ஒரு வெண் கூழாங்கல்லையும் ஒரு சிறிய பைக்குள் போட்டுக் கொண்டு வருவான். பொற்கொல்லன் மகள் அவன் கொண்டுவரும் பைக்குள் கையை விட்டு, ஊரார் மத்தியில், ஒரு கல்லை எடுக்க வேண்டும். அவள் கையில் வெள்ளைக் கல் வந்தால் அவள் விருப்பம் போல் மணம் செய்து கொள்ளலாம். கருப்புக் கல் வந்தால் தன்னைத்தான் அவள் மணம் செய்து கொள்ளவேண்டும்.

இந்த யோசனையை பொற்கொல்லனும் அவன் மகளும் ஒத்துக் கொண்டால், கடனை ரத்து செய்து விடுவதாக சேட்டு ஊர் பெரியவர்களிடம் கூறினான்.
ஊரார் கட்டாயப் படுத்தியதன் காரணத்தால் வேண்டா வெறுப்பாக பொற்கொல்லனும் அவன் மகளும் இந்தத் திட்டத்திற்கு ஒத்துக் கொண்டார்கள்.

சேட்டு தந்திரமாக ஒரு காரியம் செய்தான். அவன் திடலுக்குக் கொண்டு செல்லும் பைக்குள், ரகசியமாகச் செய்வதாக நினைத்துக் கொண்டு, இரண்டு கருப்பு கூழாங்கற்களை வைத்துக் கட்டி விட்டான்.

ஆனால், உண்மையில், பொற்கொல்லன் மகளுக்கு வேண்டிய ஒரு சிறுவன் இந்தக் காரியத்தை சேட்டுக்குத் தெரியாமல் பார்த்து விட்டான். உடனே ஓடிப் போய் அவளிடம் போட்டுக் கொடுத்து விட்டான்.

பொற்கொல்லன் மகள் தீவிரமாக சிந்தித்துப் பார்த்தாள். அப்பாவும் அவளும் எடுத்திருந்த முந்தைய நிலைகளால் சேட்டின் மேல் இப்போது சந்தேகத்தைக் கிளப்பினால், வேண்டுமென்றே திருமணத்தைத் தவிர்ப்பதற்காக செய்வதாகத்தான் ஊரார் நினைக்கப் போகிறார்கள் என்று அவளுக்குத் துல்லியமாகப் புரிந்தது. முதலில் அப்படிச் செய்யத் தோன்றிய எண்ணத்தைக் கை விட்டு விட்டாள். அவள் சிறுவனை இந்த விபரம் மற்றவருக்குத் தெரியாமல் பார்த்துக் கொள்ளும் படி அறிவுறுத்தி அனுப்பினாள்.

அடுத்த நாள் ஊரார் மத்தியில் அவள் தலைவிதி நிச்சயிக்கப் படப் போகிறது. என்ன செய்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை. இரவு முழுவதும் தூங்காமல் யோசித்து யோசித்து விடை எதுவும் கிடைக்காமல் அவதிப் பட்டுக்கொண்டிருந்தாள்.

அடுத்த நாள் திடலுக்குப் போகும் நேரம் வந்தது. அமைதியாக திடலுக்குப் போனாள். அங்கே அவளுக்கு தரையில் கிடந்த கறுப்பு வெள்ளைக் கூழாங்கற்களைப் பார்த்தவுடன் உற்சாகம் வந்து விட்டது.

சேட்டு கண்டிப்பாக தனக்குக்குத்தான் வெற்றி என்று நமட்டுச் சிரிப்புடன் பையைக் கொண்டு வந்து பொற்கொல்லன் மகளிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கித் திறந்து அதனுள் இருந்த ஒரு கல்லை எடுத்து அதன் வண்ணத்தை எவரும் கவனிக்கும் முன் கை தவறுவது போல திடலில் கிடக்கும் மற்ற கறுப்பு வெள்ளை கூழாங்கற்களுக்கு மத்தியில் நழுவ விட்டு விட்டாள். எதிர்பாராமல் நடந்ததாலும், அவள் நழுவ விட்ட கல் மற்ற கூழாங்கற்களுக்கு மத்தியில் சேர்ந்து விட்டதாலும், அந்தக் கல்லை சேட்டு உட்பட யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியல்லை.

திடுக்கிட்டுப் போன ஊர் பெரியவர்களிடம் அவள் அமைதியாகப் பேசினாள். பைக்குள் ஒரு வெள்ளைக் கல்லும் ஒரு கருப்புக் கல்லும் இருந்ததால், பைக்குள் மிச்சமிருக்கும் கல்லை ஊரார் பார்த்தால் அவள் எடுத்து நழுவ விட்ட கல்லின் வண்ணம் எதுவென்று தானாகத் தெரிந்துவிடும் என்று சொல்லி பையை அவர்களிடம் கொடுத்து விட்டாள்.

பைக்குள் இரண்டு கருப்புக் கற்களை வைத்த சேட்டுக்குத் “திருடனுக்குத் தேள் கொட்டியது போல” ஆகி விட்டது. சொல்லவும் முடியவில்லை, விழுங்கவும் முடியவில்லை. கடனை ரத்து செய்வதாக எழுதிக் கொடுத்து விட்டு தலையைத் தொங்க விட்டுக் கொண்டு போய் விட்டான்.

சிறுவர் கதைகள் – மெக்ஸிகோ தேசத்து மீனவன்

மெக்ஸிகோ தேசத்து ஏழை மீனவன் ஒருவன் கடற்கரையில் அவனது கட்டுமரத்தில் மேல் படுத்து பானகம் பருகிக் கொண்டும் பாட்டுப் பாடிக் கொண்டும் கவலையில்லாமல் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான். கடற்கரைக்கு வந்த துடிப்பான இளைஞன் ஒருவன் இதைக் கவனித்தான்.

கடற்கரையை விட்டுச் சென்ற இளைஞன் சில மணி நேரம் கழித்து மீண்டும் கடற்கரைக்கு வந்த போதும் மீனவனை அதே நிலையில் பார்த்தான். இளைஞனுக்குப் பொறுக்கவில்லை.

மீனவனிடம் சென்று “ஐயா! இப்படி வேலை செய்ய வேண்டிய காலத்தில் படுத்துப் பொழுதை வீணடிக்கிறீர்களே. இப்படி படுத்துக் கிடக்கும் நேரத்தில் கடலுக்குள் சென்று மீன் பிடித்தால் நாலு காசாவது கிடைக்குமே!” என்றான்.

அதற்கு மீனவன் “காசு கிடைச்சா…?” என்று ரஜினி பாணியில் கேட்டான்.

இளைஞன் “காசு சேர்த்தால் நீங்கள் இந்தக் கட்டுமரத்தை விற்றுவிட்டு ஒரு படகு வாங்கலாம். அதை எடுத்துக் கொண்டு கடலுக்குள் போனால் இன்னும் நிறைய மீன் பிடித்து வரலாம். ஒவ்வொரு நாளும் பணம் அதிகமாக சம்பாதிக்கலாம்” என்று சொன்னான்.

மீனவன் “அதிகம் சம்பாதிச்சா….?” என்று கேட்டான்.

இளைஞன் பொறுமையாக “ஐயா, நீஙகள் உங்களுக்கு நல்லதொரு வீடு கட்டிக் கொள்ளலாம். சிறிது சிறிதாகப் பொருள் சேர்த்து மீன் பிடி கப்பல் ஒன்றை வாங்கலாம். ஆழ்கடலுக்குள் சென்று பல வகை மீன்களைப் பிடித்து வரலாம். உள்நாட்டுச் சந்தை தவிர வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் நீங்கள் அவற்றை ஏற்றுமதி செய்யலாம்” என்று சொன்னான்.

மீனவன் “ஏற்றுமதி செஞ்சா…?” என்று திருப்பிக் கேட்டான்.

இளைஞனுக்கு மீனவனின் அறியாமை குறித்து சிறிது அதிருப்தி ஏற்பட்டாலும் பொறுமையை தக்க வைத்துக் கொண்டு “ஏற்றுமதி செய்தால் உங்களுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பெரிய மாளிகை போன்ற வீட்டைக் கட்டிக் கொள்ளலாம். படகு போன்ற கார் வாங்கலாம். மேலும் மீன்பிடி கப்பல்கள் வாங்கி மீன் பிடிக்க அனுப்பலாம். நாட்டிலேயே பெரிய மீன் தொழில் கழகம் ஒன்றை அமைக்கலாம். பேரும் புகழும் பெருந்தனமும் கிடைக்குமே” என்றான்.

மீனவன் மறுபடியும் “இதெல்லாம் கிடைச்சா…” என்றான்.

இளைஞன் “உங்களுக்கு அதற்குப் பின்னால் வேலை செய்ய வேண்டிய தேவையே இருக்காது. மகிழ்ச்சியாக நாளெல்லாம் உலகின் அழகான நீலக் கடல் சார்ந்த கடற்கரைகளில் மணலில் படுத்து பானகம் பருகிக் பாட்டுப் பாடிக் கொண்டே வாழ்க்கையை அனுபவிக்கலாம்” என்றான்.

“நான் இப்பவே அதைத்தானே நண்பா செய்து கொண்டிருக்கிறேன்” என்றான் மீனவன்.

மெக்ஸிகோ தேசத்து ஏழை மீனவன் ஒருவன் கடற்கரையில் அவனது கட்டுமரத்தில் மேல் படுத்து பானகம் பருகிக் கொண்டும் பாட்டுப் பாடிக் கொண்டும் கவலையில்லாமல் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தான். கடற்கரைக்கு வந்த துடிப்பான இளைஞன் ஒருவன் இதைக் கவனித்தான்.

கடற்கரையை விட்டுச் சென்ற இளைஞன் சில மணி நேரம் கழித்து மீண்டும் கடற்கரைக்கு வந்த போதும் மீனவனை அதே நிலையில் பார்த்தான். இளைஞனுக்குப் பொறுக்கவில்லை.

மீனவனிடம் சென்று “ஐயா! இப்படி வேலை செய்ய வேண்டிய காலத்தில் படுத்துப் பொழுதை வீணடிக்கிறீர்களே. இப்படி படுத்துக் கிடக்கும் நேரத்தில் கடலுக்குள் சென்று மீன் பிடித்தால் நாலு காசாவது கிடைக்குமே!” என்றான்.

அதற்கு மீனவன் “காசு கிடைச்சா…?” என்று ரஜினி பாணியில் கேட்டான்.

இளைஞன் “காசு சேர்த்தால் நீங்கள் இந்தக் கட்டுமரத்தை விற்றுவிட்டு ஒரு படகு வாங்கலாம். அதை எடுத்துக் கொண்டு கடலுக்குள் போனால் இன்னும் நிறைய மீன் பிடித்து வரலாம். ஒவ்வொரு நாளும் பணம் அதிகமாக சம்பாதிக்கலாம்” என்று சொன்னான்.

மீனவன் “அதிகம் சம்பாதிச்சா….?” என்று கேட்டான்.

இளைஞன் பொறுமையாக “ஐயா, நீஙகள் உங்களுக்கு நல்லதொரு வீடு கட்டிக் கொள்ளலாம். சிறிது சிறிதாகப் பொருள் சேர்த்து மீன் பிடி கப்பல் ஒன்றை வாங்கலாம். ஆழ்கடலுக்குள் சென்று பல வகை மீன்களைப் பிடித்து வரலாம். உள்நாட்டுச் சந்தை தவிர வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் நீங்கள் அவற்றை ஏற்றுமதி செய்யலாம்” என்று சொன்னான்.

மீனவன் “ஏற்றுமதி செஞ்சா…?” என்று திருப்பிக் கேட்டான்.

இளைஞனுக்கு மீனவனின் அறியாமை குறித்து சிறிது அதிருப்தி ஏற்பட்டாலும் பொறுமையை தக்க வைத்துக் கொண்டு “ஏற்றுமதி செய்தால் உங்களுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பெரிய மாளிகை போன்ற வீட்டைக் கட்டிக் கொள்ளலாம். படகு போன்ற கார் வாங்கலாம். மேலும் மீன்பிடி கப்பல்கள் வாங்கி மீன் பிடிக்க அனுப்பலாம். நாட்டிலேயே பெரிய மீன் தொழில் கழகம் ஒன்றை அமைக்கலாம். பேரும் புகழும் பெருந்தனமும் கிடைக்குமே” என்றான்.

மீனவன் மறுபடியும் “இதெல்லாம் கிடைச்சா…” என்றான்.

இளைஞன் “உங்களுக்கு அதற்குப் பின்னால் வேலை செய்ய வேண்டிய தேவையே இருக்காது. மகிழ்ச்சியாக நாளெல்லாம் உலகின் அழகான நீலக் கடல் சார்ந்த கடற்கரைகளில் மணலில் படுத்து பானகம் பருகிக் பாட்டுப் பாடிக் கொண்டே வாழ்க்கையை அனுபவிக்கலாம்” என்றான்.

“நான் இப்பவே அதைத்தானே நண்பா செய்து கொண்டிருக்கிறேன்” என்றான் மீனவன்.

சிறுவர் கதைகள் – விருப்பப் பட்டியல்

பேரரசன் நெப்போலியன் பெருங் களிப்பில் இருந்தான். போரில் பெற்ற மாபெரும் வெற்றிதான் அதற்குக் காரணம். அந்த வெற்றிக்குப் பேருதவியாக இருந்த அவனது நான்கு தளபதிளையும் அழைத்து “உங்களுக்கு என்ன் வேண்டுமானாலும் கேளுங்கள்” என்று கூறினான்.

முதல் தளபதி ஜெர்மனியைச் சேர்ந்தவன். அவன் “மன்னா! என்க்கு பாரிஸ் நகரத்தில் ஒரு வீடு கட்டிக் கொள்ள வெகுநாளாக ஆசை” என்றான்.

“உனக்கு பாரிஸ் நகரத்தில் பெரிய மாளிகையே கட்டித் தரச் சொல்கிறேன்” என்றான் நெப்போலியன்.

அடுத்தவன் பாரிஸ் நகரத்தைச் சேர்ந்தவன். தனக்கு சொந்தமாக ஒரு தங்கும் விடுதி (Hotel) நடத்த ஆசை என்று மன்னனிடம் கூறினான்.

மாமன்னன் நெப்போலியன் சிரித்துக் கொண்டே மகிழ்ச்சியுடன் ஏற்பாடு செய்வதாகக் கூறினான்.

மூன்றாம் தளபதி போலந்துக் காரன். அவன் தனக்கு திராட்சை மது செய்யும் தோட்டமும், தொழிற்சாலையும் வேண்டும் என்று கேட்டான். அதற்கும் நெப்போலியன் அதே பதில்தான் சொன்னான்.

கடைசி தளபதி ஒரு யூதன். அவன் நெப்போலியனிடம் இரண்டு வார விடுப்பு பரிசாக வேண்டும் என்று கேட்டான். அதற்கு மன்னன் நெப்போலியன் “உன் விடுப்பு நாளை முதல் தொடங்கும்” என்றான்.

அவன் பணித்தவுடன் வெளியே வந்த தளபதிகளில் முதல் மூவரும் யூதனைப் பார்த்து “சரியான முட்டாளாக இருக்கிறாயே! ஏதாவது விலை மதிப்புள்ளதாகக் கேட்காமல் விடுப்பைப் போய் கேட்டாயே?” என்று ஏளனம் செய்தார்கள்.

அதற்கு அவன் “நண்பர்களே! நீங்கள் கேட்டதையெல்லாம் மன்னன் ஏற்பாடு செய்து தருவதாகத்தான் கூறியிருக்கிறான். இன்னும் அவை உங்கள் கையில் கிடைக்கவில்லை. மன்னன் அவன் கொடுத்த வாக்குகளை நேரடியாகச் செயல் படுத்த அவனுக்கு நேரமிருக்கப் போவதில்லை. அவனது காரியதரிசியைத்தான் பணிக்கப் போகிறான். காரியதரிசியோ ஆயிரம் வேலை செய்பவன். அவனும் அவனுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத்தான் இந்த வேலைகளைக் கொடுப்பான். உங்களுக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கான வாக்குறுதிகளின் முக்கியத்துவம் இப்படி கீழே ஆணைகள் செல்லச் செல்ல கரைந்து கொண்டே போய் மறக்கப் படும் வாய்ப்புகள் அதிகம்” என்றான்.

மற்ற தளபதிகள் “அப்படி நடந்தால் மன்னனிடம் போய் முறையிடலாம்தானே” என்றார்கள்.

யூதத் தளபதி சொன்னான் “நண்பர்களே. மன்னனுக்கு இன்றைக்கு இருக்கும் வெற்றிக் களிப்பு வெகுநேரம் நிலைக்காது. போரில் பெற்ற வெற்றியின் மதிப்பு நாளடைவில் மற்ற பிரச்சினைகளுக்கு இடையே ஒளியிழந்து போகும். அதோடல்லாமல் இந்தக் கணத்தின் உங்கள் துறையின் வெற்றி மட்டுமே அவன் கண் முன் நிற்கிறது. நாளை உங்கள் துறையில் ஏதாவது தவறு நடந்தால் நீங்கள் தலை நிமிர்ந்து அவன் முன் நின்று உங்கள் பரிசை உரிமையுடன் நினைவுறுத்த இயலாது. ஆனால் நான் கேட்ட பரிசோ இப்போது என் கையில்”

இதைக் கேட்ட மற்றவர்கள் பேச்சடைத்துப் போனார்கள். யூதத் தளபதி தன் விடுமுறையைத் திட்டமிடக் கிளம்பினான்.

அரிதான இடத்தில் உடனே கிடைக்கக் கூடிய ஒரு ரூபாய் பின்னால் கிடைக்கப் போகும் நூறு ரூபாய்களை விட மேலானது.

சிறுவர் கதைகள் – கிணற்றைத்தானே விற்றேன்

(இது ஒரு பெர்ஷிய குட்டிக் கதை)

ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான்.

வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான்.

அப்போது விற்றவன் அங்கே நின்று கொண்டிருந்தான். விவசாயியை தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.

விவசாயிக்குக் கோபம் வந்தது. “எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே?” என்று விற்றவனை கோபத்துடன் கேட்டான்.

விற்றவன் “ஐயா! உமக்கு நான் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை அல்லவே!!” என்று தர்க்கம் செய்தான்.

விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் காஜியிடம் (நீதிபதியிடம்) சென்று முறையிட்டான்.

நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார். பின்னர் கிணற்றை விற்றவனிடம் “நீ கிணற்றை விற்றுவிட்ட படியால் அது உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில்தான் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டுமென்றால் விவசாயிக்கு அதற்கான வாடகையை தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால் கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேறு” என்று தீர்ப்புக் கூறினார்.

விற்றவன் தலையைக் குனிந்து கொண்டே, தனது தவற்றுக்கு மன்னிப்புக் கோரி விட்டு, விவசாயியை கிணற்றின் முழுப் பலனையும் அனுபவிக்கச் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான்.

சிறுவர் கதைகள் – தூங்குமூஞ்சி வாத்தியார்

ஒரு ஊரில் ஒரு வாத்தியார் இருந்தார். அவருக்கு மதிய உணவிற்குப் பிறகு சற்று நேரம் கண்ணயராமல் இருக்க முடியாது. மாணவர்களைப் பாடம் படிக்கச் சொல்லி ஏவி விட்டு அவர் வகுப்பறையிலேயே சற்று நேரம் தூங்குவது வழக்கம்.

மாணவர்கள் அவரைக் கேலி செய்வார்கள். ஏன் இப்படி வகுப்பில் தூங்குகிறீர்கள் என்று கேட்பார்கள்.

அதற்கு அவர் திறமையாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு, தான் தினமும் கனவுலகிற்குச் சென்று வருவதாகவும், அங்கே பல பண்டைய காலத்து ஞானிகளை சந்தித்து வருவதாகவும் கூறுவார்.

இந்தக் காலத்து மாணவர்கள் இதற்கெல்லாம சரிந்து விட மாட்டார்கள். அவருக்கே பாடம் கற்றுத் தர ஒரு திட்டம் போட்டார்கள்.

வாத்தியார் சற்றும் எதிர்பாரத ஒரு நாளன்று அவர் வகுப்புக்குள் நுழையும் நேரம் அனைத்து மாணவர்களும் தூங்குவது போல் படுத்துக் கிடந்தார்கள். திடுக்கிட்ட வாத்தியார் பிரம்பால் அனைவரையும் தட்டி எழுப்பித் திட்டினார். ஏன் வகுப்பில் தூங்கினீர்கள் என்று கேட்டார்.

மாணவர்கள் ஒரே குரலில் அவர் தினமும் செல்லும் கனவுலகிற்குத் தாங்களும் ஞானிகளைப் பார்க்கச் சென்று வந்ததாகக் கூறினார்கள்.

வாத்தியார் முகத்தில் ஈயாடவில்லை.

சிறுவர் கதைகள் – வழுக்கைக்கு மருந்து
சிறுவர் கதைகள் – வழுக்கைக்கு மருந்து

அரசனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. தலைமுடி கொட்டி வழுக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அரசனுக்கு தன் கம்பீரம் குறைந்து விடும் என்ற கவலை அதிகமாகிப் போய் ஒரு நாள் அரசவைத் தலைமை மருத்துவனிடம் நிவாரணம் கேட்டான்.

தலைமை மருத்துவன் “மன்னா! இதற்கு மருந்தே கிடையாது” என்று உண்மையைச் சொன்னான். அரசனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை. கோபமடைந்தான். ஆத்திரம் தலைக்கேறி தலைமை மருத்துவனை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான்.

ஊரில் இருக்கும் அனைத்து சிறந்த மருத்துவர்களையும் வரவழைத்தான். ஒரே வாரத்தில் தன் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு பிடிக்குமாறு பணித்தான்.

மருத்துவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். அரசனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்றுதான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு துடிப்பான இளைஞன் இருந்தான். பிரச்சினைக்குத் தன்னிடம் தீர்வு இருப்பதாகக் கூறினான். அனுபவம் முதிர்ந்த வயதான மருத்துவர்கள் கூட்டத்தில் இருந்தனர். அவனைப் பார்த்து சிரித்தனர். “வழுக்கைக்குத் தீர்வா? போய் வேறு வேலை இருந்தால் கவனியப்பா” என்று கூறினர்.

நாள் செல்லச் செல்ல அவர்களுக்கு அரசனிடமிருந்து தப்பிக்கும் வழி தெரியவில்லை.

அரசனை இந்த நிலையில் சந்தித்தால் கண்டிப்பாகத் தலைமை மருத்துவனுக்கு நேர்ந்த கதிதான் தமக்கும் நடக்கும் என்று எல்லோருக்கும் புரிந்தது. கதி கலங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது இளைய மருத்துவன் திரும்பவும் “என்னை நம்பினால் நம் எல்லோருக்கும் விடிவு நிச்சயம்” என்று கூறினான்.

வேறு வழியில்லாமல் அனைவரும் அவன் வழியில் செல்ல ஒத்துக் கொண்டார்கள். அவனோ, மருந்தை நேரடியாக அரசனிடம்தான் தருவேன், என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான்.

அடுத்த நாள் சபை கூடியது. மருத்துவர்கள் இளைய மருத்துவனைக் கூட்டிக் கொண்டு அரசவைக்கு வந்தார்கள்.

அவன் அரசனிடம் ஒரு குடுவையைக் கொடுத்தான். “மன்னா இதில் இருக்கும் மருந்தை தினமும் சிரசில் தேய்த்துக் கொண்டு வந்தால், ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்று போகும். இரண்டே மாதத்தில் முடியில்லாத இடத்திலெல்லாம் முடி வளர ஆரம்பிக்கும், ஆறே மாதத்தில் கருகருவென தலையெங்கும் தலைமுடி அழகாக வளர்ந்திருக்கும்” என்றான்.

மன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. “இப்போதே அந்தப்புரத்திற்குப் போய் தலையில் மருந்தைத் தடவிக் கொள்கிறேன்” என்று கிளம்பினான்.

அப்போது மருத்துவன் “மன்னா. இந்த மருந்து வேலை செய்ய வேண்டுமென்றால், அதைத் தலையில் தடவிக் கொள்ளும் போது மட்டும் நீங்கள் குரங்கை நினைக்கக் கூடாது!” என்றான்.

முட்டாள் மன்னன் சரியென்று சொன்னான். மந்திரியிடம் மருத்துவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து சிறப்பாக மரியாதை செய்து அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டு அந்தப்புரத்திற்கு வேகமாகச் சென்று விட்டான். மருத்துவர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊரை விட்டே ஓடி விட்டார்கள்.

அந்தப்புரத்திற்குச் சென்ற அரசன், அங்கு குடுவையைக் கையில் எடுத்து அதிலிருந்த மருந்தைத் தலையில் தேய்க்கப் போனான். அப்போது அவனுக்கு மருத்துவன் சொல்லிய பக்குவம் கவனத்திற்கு வந்தது. “குரங்கை நினைக்கக் கூடாது” என்று நினைத்தவுடன் குரங்கைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டான். என்ன முயற்சித்தும் அவன் நினைவிலிருந்து குரங்கை அகற்ற இயலவில்லை.

மன்னனுக்கு மருத்துவனின் தந்திரம் புரியவில்லை. சற்று நேரம் கழித்து முயற்சிப்போம் என்று வேறு வேலையில் ஈடுபட்டான்.

ஆனால் ஒவ்வொரு முறை அவன் மருந்தைக் கையில் எடுத்த போதும் மருத்துவனின் அறிவுரை மனதில் தோன்றி அவனுக்குக் குரங்கு பற்றிய யோசனை வந்து கொண்டே இருந்தது.

பல நாள் திரும்பத் திரும்ப முயற்சித்து விட்டு, இந்தச் சிரமத்திற்குப் பேசாமல் வழுக்கையாகவே இருந்து விடலாம் என்று தீர்மானித்து விட்டான்.

சிறுவர் கதைகள் – முடிவுகளில் கவனம் தேவை

சீனாவில் ஒரு ஊரில் பத்து விவசாயிகள் இருந்தார்கள்.

ஓரு நாள் அவர்கள் தத்தம் நிலங்களில் உழவு வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

அப்பொழுது வானம் இருட்டிக் கொண்டு வந்தது. பயங்கர மின்னலுடன் இடி இடித்தது.

பயந்து போன அவர்கள் பக்கத்தில் இருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஓடி ஒளிந்து கொண்டனர்.

வெகுநேரமாகியும் மின்னல் வெட்டுவதும் இடி இடிப்பதும் நிற்கவில்லை. அவற்றின் உக்கிரம் வேறு அதிகரித்துக் கொண்டே போனது.

பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த விவசாயிகளில் ஒருவன் ‘நம்மிடையே ஒரு மகாபாவி இருக்கிறான். அவனைக் குறி வைத்துத்தான் கடவுள் இடியையும் மின்னலையும் ஏவியிருக்கிறார். அந்தப் பாவியை வெளியே அனுப்பிவிட்டால் மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்’ என்று சொன்னான்.

மற்றவர்கள் இதனை ஆமோதித்தார்கள்.

இத்தனை பேரில் அந்தப் பாவியை எப்படி அடையாளம் கண்டு கொள்வது என்று விவாதம் நடந்தது. விவாதத்தின் முடிவில் தீர்ப்பைக் கடவுளிடமே விட்டு விடுவது என்று முடிவாயிற்று. அதன் படி அனைவரும் தத்தம் தொப்பிகளைக் கையில் பிடித்துக் கொண்டு தொப்பியை மழையில் நீட்டுவது என்று முடிவாயிற்று.

அனைவரும் தத்தம் தொப்பிகளை மழையில் நீட்டினர்.

பயங்கரமான இடி முழக்கத்துடன் ஒரு மின்னல் வெட்டியது. அதில் ஒரு விவசாயியின் தொப்பி மட்டும் எரிந்து சாம்பலாகியது.

மற்ற ஒன்பது விவசாயிகளும் “இவன்தான் பாவி. இவனை முதலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளு” என்று கத்திக் கொண்டே அவன் மேல் பாய்ந்தனர்.

அந்த விவசாயி கெஞ்சிக் கதறி தான் அப்பாவி என்று மன்றாடினான். மற்றவர் யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. அவனை பலவந்தமாகக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினர்.

அவன் கதறிக் கொண்டே மழையில் ஒடினான்.

அப்போது அதி உக்கிரமாக ஒரு மின்னல் தாக்கி இடி இடித்தது. ஒடிக்கொண்டிருந்த விவசாயி அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான். சற்று நேரத்தில் நிலைக்குத் திரும்பி மண்டபத்தைத் திரும்பிப் பார்த்தான்.

மண்டபத்தில் இடி விழுந்து நொறுங்கிக் கிடந்தது. ஒரு புண்ணியவானின் புண்ணிய பலத்தில் தப்பித்திருந்த ஒன்பது விவசாயிகளும் அவனை வெளியே தள்ளிப் பாதுகாப்பை இழந்து பரிதாபமாகக் கருகிச் செத்துப் போய் விட்டனர்.

சிறுவர் கதைகள் – ஞான பண்டிதர்

ஒரு கற்றறிந்த பண்டிதர். அவர் தமக்கு நிகர் யாருமில்லை என்ற கர்வ குணமுள்ளவர். படிப்பறிவில்லாதவர்களைக் கண்டால் அவருக்கு அறவே பிடிக்காது.

ஒரு நாள் அவர் ஓரு அகலமான ஆற்றைக் கடந்து அக்கரை செல்ல வேண்டியிருந்தது. பரிசலில் போவதைத் தவிர வேறு வழிகள் இல்லை.

பரிசல் ஓட்டுபவன் ஒரு பரம ஏழை. பார்ப்பதற்கு மிகச் சாதாரணமாயிருந்தான். அவன் படிப்பறிவில்லாதவன் என்பது அவன் பேச்சிலேயே தெரிந்தது.

பண்டிதருக்கு அவனை விட்டால் வேறு வழி தெரியாததால் “அக்கரையில் உள்ள ஊரில் விட்டு விடப்பா” என்று சொல்லிப் பரிசலில் ஏறிக்கொண்டார்.

பரிசலும் ஆற்றுக்குள் செல்ல ஆரம்பித்தது. பரிசல் ஓட்டுபவன் மௌனமாக பரிசலை செலுத்திக் கொண்டிருந்தான்.

பண்டிதருக்குச் சும்மாயிருக்க முடியவில்லை. பரிசல்காரனைப் பார்த்து “நீ வேதம் படித்திருக்கிறாயா?” என்று கேட்டார்.

“அப்படின்னா என்ன சாமி?” என்று பரிசல்காரன் திருப்பிக் கேட்டான்.

“வேதம் படிக்காதவன் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?” என்று பண்டிதர் கிண்டலாகக் கேட்டார்.

பின்னரும் சும்மாயிருக்காமல் “சரி உனக்கு கீதை தெரியுமா?” என்றார்.

பரிசல்காரன் விழித்தான்.

“என்னப்பா உன் வாழ்க்கை? கீதை கூடப் படிக்காமல் நீ என்னத்தைச் சாதிக்கப் போகிறாய்” என்று மறுபடியும் பரிகசித்தார்.

இன்னூம் கொஞ்சம் தூரம் பரிசல் ஆற்றில் சென்றது. உனக்கு “ராமாயணம், மஹாபாரதம் கதையாவது தெரியுமா?” என்று அவனை மறுபடியும் வம்புக்கு இழுத்தார்.

அவன் பொறுமையாக “சாமி, நமக்கு இந்தப் பரிசலை ஓட்டுவதைத் தவிர வேறு எதுவும் தெரியாதுங்க!” என்று பதில் சொன்னான்.

“இப்படிப் படிப்பறிவே இல்லாமல் இருக்கிறாயே. நீ வாழ்ந்து என்ன பயன்?” என்று அவனை இகழ்ந்தார்.

இதற்குள் பரிசல் ஆற்றின் நடுவே வந்து விட்டிருந்தது. ஆற்றின் வேகத்தில் பரிசல் திடிரென தத்தளிக்க ஆரம்பித்தது.

பரிசல்காரன் பண்டிதரைப் பார்த்து “சாமி! உங்களுக்கு நீச்சல் தெரியுமா?” என்று கேட்டான்.

பண்டிதர் “தெரியாதே! ஏனப்பா?” என்று கேட்டார்.

பரிசல்காரன் “ஏன் சாமி? இம்புட்டு படிச்சிருக்கிங்களே! உங்களுக்கு நீச்சல் தெரியலையே! இப்ப ஆத்துல வெள்ளம் வந்துருச்சே. பரிசல் தாங்காது. நீந்த முடியலைன்னா வாழ்க்கைக்கே ஆபத்தாச்சே!” என்று சொல்லிவிட்டு ஆற்றில் குதித்து நீந்திப் போய்விட்டான்.

சிறுவர் கதைகள் – இதெல்லாம் எதுக்கம்மா?

தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் ஒரு மாலைப் பொழுதில் உலாத்திக் கொண்டிருந்தன.

குட்டி ஒட்டகம் படு சுட்டி. சதா வாய் ஓயாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும். அன்றைக்கும் அப்படித்தான்.

“அம்மா! நமக்கு மட்டும் முதுகில் திமில் இருக்கே. ஏனம்மா?”

தாய் எப்போதும் பொறுமையாக பதில் சொல்லும்.

“நாமெல்லாம் இயல்பாகப் பாலைவனத்தில் வாழ்பவர்கள் இல்லையா! பாலைவனத்தில் தண்ணீர் பாலைவனச் சோலைகளில் மட்டும்தான் கிடைக்கும். தினம் தினம் கிடைக்காது. கிடைக்கும் தண்ணீரை முடிந்த மட்டும் நம் உடம்பில் சேமித்து வைத்துக் கொண்டு வேண்டும் போது உபயோகப் படுத்திக் கொண்டால் தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் பல நாள் சுற்றித் திரியவே நமக்கு இயற்கை திமிலைக் கொடுத்திருக்கு”

குட்டி திரும்பவும் கேட்டது. “அப்போ நமக்கு கண் இமை கெட்டியாக இருக்கே, மூக்கை மூடிக் கொள்ள மூடி இருக்கே? மத்த மிருகத்துக்கு அப்படி இல்லையே. அது ஏன்”

தாய் ஒட்டகம் வாயை அசை போட்டுக் கொண்டு சொன்னது.

“பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும், அப்போ சட்டுன்னு ஒதுங்க இடம் கிடைக்காது. கண்ணுக்கும் மூக்குக்கும் பாதுகாப்பா மூடி இல்லைன்னா கண்ணுலயும் மூக்குலையும் மணல் போயிடுமே. அதனால்தான் நமக்கெல்லாம் இப்படி மூடி இருக்கு”

குட்டி இப்போது அம்மாவின் கால் குளம்பைப் பார்த்துக் கேட்டது. “இவ்வளவு பெரிய குளம்பு நமக்கு எதுக்கு?”

“அது கண்ணு, மணல்ல நடக்கும் போது நம்ம கால் மணல்ல புதையாம நடக்கத்தான்”. பொறுமையாக பதில் சொன்னது அம்மா ஒட்டகம்.

“பல்லும் நாக்கும் இவ்வளவு கெட்டியா, தடியா இருக்கே. அது ஏன்?”. இது குட்டி யோசனையுடன் கேட்ட கேள்வி.

அம்மா ஒட்டகம் சொன்னது. “பாலைவனத்தில் செடி கொடியெல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும். அதையெல்லாம் கடித்துச் சவைத்துத் தின்ன வேண்டாமா?”

இப்போது குட்டி பட்டென்று கேட்டது. “அம்மா! இதையெல்லாம் வைத்துக் கொண்டு லண்டன் குளிரிலே இந்த மிருகக் காட்சி சாலையிலே நாம ரெண்டு பேரும் என்ன செஞ்சுகிட்டு இருக்கோம்?”

சிறுவர் கதைகள் – நாவினால் சுட்ட வடு

ஒரு முன்கோபக்காரப் பையன் இருந்தான். முணுக்கென்றால் அவனுக்குக் கோபம் வரும்.

கோபம் வந்தால் தலைகால் தெரியாமல் வாய்க்கு வந்த படி வயது வரம்பில்லாமல் எல்லோரையும் பேசி விடுவான். பின்னர் அவர்களிடம் வருத்தப் படுவான்.

நாளடைவில் அவனை சுற்று வட்டாரத்தில் பலருக்கு இதனாலேயே பிடிக்காமல் போனது. அவனைத் தவிர்க்க ஆரம்பித்தார்கள். பையனுக்குத் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் எப்படி என்றுதான் தெரியவில்லை.

அவனுடைய அப்பா பொறுத்துப் பொறுத்து பார்த்து விட்டு ஒரு நாள் அவனிடம் ஒரு வாளி நிறைய ஆணிகளையும் ஒரு சுத்தியலையும் கொடுத்தார்.

ஒவ்வொரு முறை ஆத்திரப் படும் போதும் சம்பந்தப் பட்டவர்களைத் திட்டுவதைத் தவிர்த்து விட்டு வீட்டுக்குப் பின்னால் உள்ள மர வேலியில் ஒரு ஆணியை ஆத்திரம் தீரும் வரை அறைந்து ஏற்றி விடும் படி அறிவுரைத்தார்.

முதல் நாள் வேலியில் சுமார் 50 ஆணிகளை அறைந்து ஏற்றினான். நாட்கள் செல்லச் செல்ல அவனைக் கோபமூட்டுபவர்கள் முன் வன்மையாகப் பேசுவதைக் கட்டுப் படுத்தக் கற்றுக் கொண்டான். கோபம் வந்தால்தான் உடனே ஆணி அடிக்கப் போக வேண்டுமே!

நாளடைவில் வாளியையும் சுத்தியலையும் எடுத்துக் கொண்டு வேலிப் பக்கம் போகுமுன் கோபவெறி குறைந்து போய், வேலியில் ஆணி அறைவது குறையத் தொடங்கியது. சில நாட்களில் வேலியில் ஆணி அடிக்க வேண்டிய தேவையே அவனுக்கு இருக்கவில்லை.

அப்பாவிடம் போய் விபரத்தைச் சொன்னான். அவர் உள்ளுக்குள் மகிழ்ச்சியடைந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அவனிடம் ஒரு ஆணி பிடுங்கும் கருவியைக் கொடுத்து வேலியில் அவன் அடித்த ஆணிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கச் சொன்னார். அனைத்தையும் பிடுங்க் அவனுக்கு முழுதாக ஒரு நாள் பிடித்தது.

எல்லா ஆணியையும் பிடுங்கிய பிறகு அப்பாவும் மகனும் வேலியை பார்க்கப் போனார்கள். அப்பா வேலியில் ஆணிகளைப் பிடுங்கிய இடத்தில் இருந்த வடுக்களை மகனுக்குக் காட்டி “கோபம் வந்தால் அறிவிழந்து சொல்லும் சுடுசொல்லும் இந்த ஆணியைப் போலத்தான். ஆணியைப் பிடுங்குவது போல் நீ பேசியதற்கு மன்னிப்புக் கேட்டாலும், அந்த சொல் தைத்த இடத்தில் உள்ள வடு இந்த ஆணி ஏற்படுத்திய வடுவைப் போலவே மறைவது மிகக் கடினம்” என்று அவனுக்கு எடுத்துக் கூறினார்.

மகனும் கருத்தை நன்றாக உணர்ந்து திருந்தி ஊர் போற்றும் வகையில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றான்.

சிறுவர் கதைகள் – முதன்மைக் கடமைகளில் முழுக் கவனம் வேண்டும்

கடற்கரை ஓரம் இருந்த ஊரில் ஒரு கலங்கரை விளக்கு இருந்தது. அந்தக் கடற்கரை ஒரம் கப்பல் போக்குவரத்து அதிகம்.

பாறைகள் நிறைந்த கடல் பகுதியானதால் கப்பல்கள் பாறைப் பகுதியைத் தவிர்த்து பத்திரமாகச் செல்ல வகை செய்யும் வண்ணம் அந்தக் கலங்கரை விளக்கை அமைத்திருந்தார்கள். எண்ணையால் எரியும் விளக்கு அது.

கலங்கரை விளக்கை செயல்படுத்த ஒரு காப்பாளன் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான்.

வாராவாரம் கலங்கரை விளக்கிற்குத் தேவையான எண்ணையை கப்பல் நிறுவனங்கள் அவனுக்குத் தப்பாமல் அனுப்பிக் கொண்டிருந்தன.

காப்பாளனின் முக்கியமான வேலை கலங்கரை விளக்கைக் காப்பது மற்றும் விளக்கு அணையாமல் அதைச் செலுத்திக் கொண்டிருப்பது மட்டுமே.

எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது.

ஒரு கடுங் குளிர்கால இரவில் கலங்கரை விளக்கின் அலுவலகக் கதவை யாரோ தட்டினார்கள். காப்பாளன் கதவைத் திறந்து பார்த்தான். பக்கத்து ஊரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் குளிரில் நடுங்கிக் கொண்டே நின்று கொண்டிருந்தார்.

“தம்பி! என் வீட்டில் விளக்கெரிக்கக் கூட எண்ணை இல்லை. குளிர் நடுக்குகிறது. நீ மிகவும் நல்லவனாகத் தெரிகிறாய். கொஞ்சம் எண்ணை கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன். சீக்கிரம் திருப்பிக் கொடுத்து விடுவேன்” என்று கெஞ்சினார்.

மனமிளகிய காப்பாளன் அவருக்குக் கொஞ்சம் எண்ணை கொடுத்தனுப்பினான்.

அடுத்த நாள் இரவு மறுபடியும் கதவில் “டக்… டக்”. கதவைத் திறந்தால் ஒரு வழிப்போக்கன். “அண்ணே! பக்கத்து ஊரில் உங்கள் உதவும் குணத்தைப் பற்றி ரொம்பவும் சிலாகித்துப் பேசினார்கள். நான் அவசரமாக ஊருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன். மிகவும் முக்கியமான வேலையாகப் போய்க் கொண்டிருக்கிறேன். இங்கே தங்க முடியாத நிலை. என் கை விளக்கில் எண்ணை தீர்ந்து விட்டது. பயணத்திற்கு எண்ணை கொடுத்து உதவினால் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்” என்று வெகு இளக்கமாகப் பேசினான்.

காப்பாளனும் வழிப்போக்கனுக்கு எண்ணை கொடுத்த்னுப்பினான்.

மூன்றாம் நாளும் இதே கதை தொடர்ந்தது. இப்போது கதவைத் தட்டியது ஒரு மூதாட்டி. “ராசா. நீ நல்லாயிருக்கணும். வீட்டில் பச்சைக் குழந்தைக்குப் பால் காய்ச்ச அவசரமாக அடுப்பு எரிக்கணும். வீட்டில் எண்ணை தீர்ந்து போய் விட்டதப்பா! எனக்கு உன்னை விட்டால் வழியில்லை என்று வந்து விட்டேன். நீதான் அவசரத்துக்குக் கடவுள் போல் கை கொடுத்து உதவணும்” என்றாள்.
அவளுக்கும் காப்பாளன் எண்ணை கொடுத்தான்.

வாரக் கடைசி. அடுத்த வாரத்திற்கான எண்ணையைக் கொண்டு வரும் வண்டி வர இரண்டு நாளாகும். காப்பாளன் வழக்கம் போல விளக்கிற்கு எண்ணை நிரப்ப பீப்பாயைத் திறந்து பார்த்தான். பீப்பாயில் இருந்த எண்ணை வாரக் கடைசி வரை விளக்கைச் செலுத்தப் போதாது என்று புரிந்தது.

இருந்த எண்ணையை விளக்கில் நிரப்பி அதை எரிய விட்டு விட்டு பதறிப் போய் ஊருக்குள் ஒடினான். மிக அவசரமாக விளக்கிற்கு எண்ணை தேவை. கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கொடுத்து விடுங்கள் என்று கேட்டான். எல்லோரும் கை விரித்து விட்டார்கள்.

வாரக் கடைசியில் இரவில் எண்ணை தீர்ந்து போய் விளக்கு அணைந்து விட்டது. இரண்டு கப்பல்கள் அன்று இரவு கலங்கரை விளக்கு எரியாததால் வழி தவறிப் போய் பாறையில் மோதிச் சிதறி விட்டன.

மூன்று பேருக்கு உதவுவதற்காக தன் முதன்மைக் கடமையில் தவறிய காப்பாளன், முன்னூறு பேரின் உயிர் சேதத்திற்குக் காரணமானான்.

சிறுவர் கதைகள் – அறிவுரைகளை ஆராய்ந்து செயல்படுத்து

ஊருக்கு ஒதுக்குப் புறமாக ஒரு கொடிய விஷமுள்ள பாம்பு வாழ்ந்து வந்தது. ஊர் மக்கள் யாராவது அதன் புற்றின் பக்கம் போனால் சீறி வந்து கொத்தி விடும். பாம்புப் புற்று இருந்த பாதை அந்த ஊருக்கும் பக்கத்து சந்தைக்கும் குறுக்கு வழி. பாம்புக்கு பயந்தே ஊர் மக்கள் பல தொலைவு சுற்றி அந்த சந்தைக்குப் போய் வந்து கொண்டிருந்தார்கள். வேறு வழியில்லாததால் சலிப்புடனேயே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு நாள் அந்த ஊருக்கு ஒரு யோகி வந்தார். அவர் மிருகங்களிடம் பேசக் கூடிய வரம் பெற்றவர். ஊர் மக்கள் தங்கள் குறையை அவரிடம் முறையிட்டனர். அவர் பாம்பிடம் பேசி அதற்கு ஊர் மக்களை கடிக்கக் கூடாது என்று கட்டளை இட்டு விட்டு பக்கத்து ஊருக்குச் சென்று விட்டார். பாம்பும் அவர் கட்டளைக்குக் கட்டுப் பட்டு நடந்தது.

ஆனால் ஊர் மக்கள் சும்மாயில்லை. வழியே போகும் சிறுவனுக்குக் கூட பாம்பிடம் இருந்த பயம் போய் விட்டது. பாம்பைக் கண்டால் அதைக் கல்லால் அடிப்பது, துன்புறுத்துவது, விரட்டியடிப்பது என்று அதன் வாழ்க்கையை நிம்மதியில்லாமல் செய்து கொண்டிருந்தனர். உடம்பில் பல காயங்களுடன் குற்றுயிரும் குலையுயிருமாகி விட்டது பாம்பு.

யோகி ஒரு நாள் பாம்புப் புற்று இருந்த வழியாக ஊருக்குள் திரும்ப வரும் போது பாம்பின் பரிதாபமான நிலையைக் கண்டு அதனை விசாரித்தார். பாம்பும் நடந்த கதையையெல்லாம் கூறி அழுதது.

யோகி பாம்பைப் பார்த்து “அட முட்டாள் பாம்பே! உன்னை மக்களைக் கடிக்கவேண்டாம் என்றுதானே கூறிச் சென்றேன். பக்கத்தில் வருபவனைப் பார்த்து சீறாதே என்று ஒரு போதும் சொல்லவில்லையே” என்று கேட்டார். இதற்குப் பின் பாம்பும் பிழைத்துக் கொண்டது.

சிறுவர் கதைகள் – வித்தியாசமான உதவி

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.

சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு “யாராவது காப்பாற்றுங்கள்’ என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது.

தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. “பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு” என்று கோபத்துடன் கேட்டான்.

பெரியவர் பதில் பேசாமல் மற்றொரு சிறிய கல்லை எடுத்து அவன் மேல் எறிந்தார். மேலும் கோபமுற்ற இளைஞன் பெருமுயற்சி எடுத்து கையை வீசி மேலிருந்த கிளை ஒன்றை பலமாக பற்றிக் கொண்டு “நான் கீழே வந்தால் உம்மைச் சும்மா விட மாட்டேன்” என்று எச்சரித்தான்.

பெரியவர் மேலும் ஒரு கல்லை அவன் மேல் வீசினார். இளைஞன் இப்போது இன்னொரு பெருமுயற்சி எடுத்து கிளைமேல் ஏறி விட்டான். விடுவிடுவென இறங்கி வந்த அவன் நேராகப் பெரியவரிடம் வந்தான். அவரை சரமாரியாகத் திட்டினான். “ஏன் அப்படிச் செய்தீர்? உம்மை நான் உதவிதானே கேட்டேன்?” என்றான்.

பெரியவர் அமைதியாக சிரித்துக் கொண்டே “தம்பி.. நான் உனக்கு உதவிதான் செய்தேன்” என்றார். இளைஞன் திருதிருவென முழித்தான்.

பெரியவர் விளக்கினார். “நான் உன்னை முதலில் பார்த்த போது நீ பயத்தால் உறைந்து போயிருந்தாய். உன் மூளை வேலை செய்யவில்லை. நான் கல்லை விட்டு எறிந்ததும் பயம் மறைய ஆரம்பித்து நீ என்னை எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தாய். யோசிக்க ஆரம்பித்தவுடன் நீயாகவே உன்னைக் காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன் கண்ணை மறைத்துக் கொண்டிருந்தது. அதிலிருந்து உன்னை நான் திசை திருப்பினேன்” என்று சொல்லி விட்டுத் தன் வழியே அவர் போய் விட்டார்

சிறுவர் கதைகள் – காக்கா உட்கார பனம் பழம் விழுந்தது

இரண்டு ஜப்பானியர்கள் நியுயார்க் சென்றார்கள். அங்கே நகரத்தைச் சுற்றிப் பார்க்க ரயில் நிலையம் சென்றார்கள். ஒரு பழக்கடையைப் பார்த்தார்கள். ஆப்பிள், ஆரஞ்சுப் பழங்கள் நிறைய இருந்த அந்தக் கடையில் அவர்கள் பார்த்திராத ஒரு பழமும் இருந்தது.

கடைக்காரரிடம் அந்தப் பழத்தைப் பற்றி கேட்டார்கள். அவரும் அதை வாழைப்பழம் என்று அடையாளம் சொல்லி அதை எப்படி உரித்துத் தின்பது என்றும் செய்து காண்பித்தார்.

நம் ஜப்பானிய நண்பர்கள் மகிழ்ச்சியுடன் ஆளுக்கு ஒரு பழம் வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறி அமர்ந்தார்கள். ரயில் புறப்பட்ட உடன் இருவரும் பழத்தை உரித்து உண்ணத் தொடங்கினார்கள்.

முதலாமவன் பழத்தை முதல் கடி கடிக்கும் போது ரயில் சரியாக ஒரு சுரங்கப் பாதைக்குள் நுழைந்தது. உடனே ரயில் பெட்டிக்குள் கும்மிருட்டு பரவியது.

அவன் உடனே இரண்டாமவனிடம் அவசரமாக கத்தினான். ‘நண்பா, அந்தப் பழத்தை சாப்பிடாதே. நான் ஒரே ஒரு கடி கடித்த உடனே குருடாகி விட்டென். அந்தப் பழத்தில் விஷம் இருக்கிறது. தயவு செய்து சாப்பிட்டு விடாதே’ என்றான் அவன்.

சிறுவர் கதைகள் – கை மேல் பலன் கிடைத்தது

அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படித்தான் ‘அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்’ என்று நம்பிக்கை ஊட்டினார்.

மன்னன் சேவகனை அழைத்தான். காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.

அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.

ஒரு நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். “அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.

இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு காக்காய் ‘வாக்கிங்’ போய் விட்டது.

மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து ‘இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு’ என்று உத்தரவிட்டான்.

சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும். மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது. ‘நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி’ என்று உறுமினான்.

சேவகன் சொன்னான். ‘மகா மன்னரே. இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா?’ என்றான்.

மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. சோதிடர் கூட ‘எஸ்கேஏஏஏஏ..ப்’ ஆகிவிட்டார் என்று கேள்வி!!!

சிறுவர் கதைகள் – பச்சோந்திக் கல்

நகரில் கப்பி ரோடு ஒன்று இருந்தது. அதன் மேல் வேகமாகப் போன வண்டியின் சக்கரம் ஒன்று ஒரு கப்பிக் கல்லை பெயர்த்து உருட்டி விட்டுப் போய் விட்டது. அந்தக் கப்பிக் கல் தனக்குள் சொல்லிக் கொண்டது. “என்னைப் போன்ற மற்றவர்களுடன் பிணைக்கப் பட்டு நான் இப்படி ஒரே இடத்தில் கிடப்பானேன்? நான் தனியாகவே வாழ்ந்து பார்க்கிறேன்!”
தெருவோடு போன ஒரு பையன் அந்தக் கல்லைத் தன் கையில் எடுத்துக் கொண்டான். கல் தனக்குள் எண்ணிக் கொண்டது. “நான் பிரயாணம் செய்ய விரும்பினேன். பிரயாணம் செய்கிறேன். தீவிரமாக எதையும் விரும்பினாலே போதும். விரும்பிய படி நடக்கும்!”

 

கல்லை ஒரு வீட்டை நோக்கி எறிந்தான் பையன். “ஹா! நான் பறக்க விரும்பினேன்; பறக்கிறேன். என் விருப்பம் போலத்தான் நடக்கிறது எல்லாம்”

 

ஒரு ஜன்னல் கண்ணாடியில் ‘டண்’ என்று கல் மோதி உடைத்துக் கொண்டு உள்ளே போனது, கண்ணாடி உடையும் போது அது சொல்லியது “போக்கிரி, நான் போகும் வழியில் விலகிக் கொள்ளாமல் நிற்கிறாயே?! என்னை மறிப்பவர்களை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. என் சௌகரியத்திற்காகத்தான் எல்லாம் இருக்கிறது. ஆகவே இனிமேல் கவனமாக இரு!”
வீட்டின் அறைக்குள் இருந்த ஒரு மெத்தையின் மேல் விழுந்தது கல். “இவ்வளவு நேரம் பிரயாணம் செய்ததில் அலுப்பாகி விட்டது. சற்று ஓய்வு தேவை என்று நினைத்த பட்சத்திலேயே படுக்கை கிடைத்து விட்டதே. ஆஹா!” என்று நினைத்துக் கொண்டது.

 

ஒரு வேலைக்க்காரன் அங்கே வந்தான். படுக்கையில் இருந்த கல்லைத் தூக்கி ஜன்னல் வழியே திரும்பவும் தெருவில் எறிந்து விட்டான்.

 

அப்போது கப்பிக் கல் தன்னுடன் பதிந்திருந்த ஏனைய கப்பிக் கற்களிடம் “சகோதரர்களே! சௌக்கியமா? நான் இப்போது பெரிய மனிதர்களைப் பார்க்க அவர் மாளிகைக்குப் போய் விட்டுத் திரும்புகிறேன். பெரிய மனிதர்களையும் பணக் காரர்களையும் எனக்குப் பிடிப்பதில்லை. என்னைப் போன்ற சாதாரண மக்களிடம்தான் எனக்கு உண்மையில் ரொம்பப் பிரியமும் மரியாதையும் இருக்கிறது. அதனால்தான் திரும்பி விட்டேன்” என்றது.

 

சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரக்கு ஏற்றி வந்த ஒரு வண்டியின் சக்கரம் தனியாகக் கிடந்த கல்லின் மேல் ஏறியது. “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!” என்று சொல்லிக் கொண்டே துண்டு துண்டாகச் சிதறிப் போனது அந்தப் பச்சோந்தி கப்பிக் கல்.

சிறுவர் கதைகள் – மதில் மேல் பூனை மனப்பான்மை வேலைக்கு உதவாது

மஹாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்திற்குள் வந்து கொண்டிருந்ததை கிருஷ்ணர் கவனித்தார். அவனுடைய நேர்ப் பார்வையும், நிமிர்த்திய நெஞ்சும், வீர நடையும் கிருஷ்ணரை ஈர்த்தது. தன் உருவை மாற்றிக் கொண்டு அவனை அணுகி “வீரனே எங்கு வந்தாய்?” என்று கேட்டார். “நான் போரில் பங்கேற்க வந்தேன்!” என்றான் அவன். “உனக்கு என்னப்பா தகுதியிருக்கிறது” என்றார் கிருஷ்ணர். அவன் தன்னிடம் இருக்கும் வில்லையும் மூன்று அம்புகளையும் காட்டி, “இதில் ஒன்றால் பாண்டவர்களையும், மற்றொன்றால் கௌரவர்களையும், மூன்றாவதால் அந்தக் கிருஷ்ணனையும் கொல்லும் திறமை படைத்தவன் நான்” என்றான்.

“எப்படி உன்னை நம்புவது?” என்றார் கடவுள். அவன் அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு தூரத்தில் உள்ள மரத்தைக் காட்டி, அதில் இருக்கும் இலைகள் அனைத்தையும் ஒரே அம்பில் வீழ்த்திக் காட்டுவதாகக் கூறினான். விளையாடிப் பார்த்து விடுவது என்று முடிவு செய்த கிருஷ்ணர், “சரி செய் பார்க்கலாம்” என்றார். அவர் கடவுளல்லவா? அவனுக்குத் தெரியாமல் மரத்தின் ஐந்து இலைகளை முதலில் தன் காலடியின் கீழே மறைத்துக் கொண்டார்.

 

வீரன் நாண் ஏற்றி அம்பை எய்தான். அவன் சொன்னது போலவே மரத்தில் அனைத்து இலைகளும் ஒரே அம்பின் தாக்குதலில் கீழே விழுந்து விட்டன. அதோடில்லாமல் அம்பு திரும்பவும் வந்து ஐந்து முறை கிருஷ்ணரின் காலைத் துளைத்தது.

 

வீரன் கிருஷ்ணரைத் தெரிந்து கொண்டு வணங்கினான். கிருஷ்ணரும் அவனது திறமையைப் பாராட்டினார், “சரி, யாருக்காக போராடப் போவதாக உத்தேசம்?” என்று கிருஷ்ணர் கேட்டார். வீரன் “என் திறமைக்கு சவாலாக நான் எப்போதுமே தோற்கும் கட்சிக்கு ஆதரவாகவே போரிடுவேன்” என்றான். “இவன் போரிட்டால் இவன் பக்கம் உள்ள கட்சி ஜெயிக்க ஆரம்பிக்கும், உடனே இவன் எதிர் கட்சிக்குப் போய் விடுவான். பிறகு அது ஜெயிக்க ஆரம்பிக்கும். இது முடியவே முடியாதே. போருக்கு ஒரு முடிவு ஏற்படாமல் போய் விடுமே” என்று கிருஷ்ணர் யோசித்தார்.
“வீரனே எனக்கு ஒரு உதவி உன்னிடமிருந்து ஆக வேண்டியிருக்கிறது” என்று அவனிடம் சொன்னார். அவனும் செய்யக் காத்திருப்பதாகத் தலை வணங்கினான். ‘இந்தப் போரின் முடிவைப் பாதிக்கும் சக்தியுள்ள ஒருவன் இருக்கிறான். அவன் தலை எனக்கு வேண்டும்” என்றார் கிருஷ்ணர். ‘யார் அவன். சொல்லுங்கள். இப்போதே கொய்து வருகிறேன்” என்றான் வீரன்.

 

கிருஷ்ணர் “வீரனே, போரின் முடிவுக்காக உழைக்க எண்ணாமல் உன் திறமைக்குச் சவாலாகப் போரில் பங்கேற்க விழையும் நீதான் அந்த ஆள்” என்று அவன் தலையைக் கேட்டு விட்டார். அவனும் உடனே கொடுக்க ஒப்புக் கொண்டான். கிருஷ்ணர் அவன் பக்தியை மெச்சி, அவனுக்கு வரம் ஒன்று கொடுத்தார். அவன் “தான் இறந்தாலும் மஹாபாரதப் போரைத் தன் கண்ணால் பார்க்க வேண்டும்” என்று வரம் கேட்டான். வரத்தை அருளி விட்டு தலையை வாங்கிக் கொண்டார் கிருஷ்ணர்.

 

நீதி: எந்தப் பக்கமும் சாயாமல் மதில் மேல் பூனையாக சுயநல சிந்தனையுடன் இருப்பவர்கள் எவ்வளவு திறமையிருந்தாலும் காரியத்திற்கு உதவ மாட்டார்கள்.
சிறுவர் கதைகள் – உலகத்திற்கு உப்பாய் இரு

ஒரு காலத்தில் இந்திரத்யும்னன் என்று ஒரு மாமன்னன் இருந்தான். அவன் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்குப் போனான். சொர்க்கபுரியின் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த அவனை ஒரு நாள் சொர்க்கத்தின் ‘தலை’ கூப்பிடுவதாக தேவதூதன் வந்து சொன்னான். மன்னன் சென்று என்னவென்று கேட்ட போது ‘உனக்கு சொர்க்க வாசம் முடிந்து விட்டது. பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாரக இரு’ என்று கட்டளை போட்டது ‘தலை’. ஏனென்று மன்னன் கேட்டான். ‘நீ செய்த நல்ல காரியங்களை நினைவில் வைத்திருக்க யாருமே இனிமேல் பூலோகத்தில் உயிருடன் இல்லை. இன்றுடன் அந்த கணக்குத் தீர்ந்து விடும். ஆகவே கிளம்பும் வழியைப் பார்’ என்று பதில் வந்தது. ‘இதற்குத் தீர்வே இல்லையா?’ என்று மன்னன் முறையிட்டான். ‘தலை’ முகவாயைச் சொறிந்து கொண்டு யோசித்தது. பிறகு ‘மன்னா, நீ கீழே போய் உனது நற்காரியங்களால் இன்னும் பலன் பெறும் ஒரு ஜீவனையாவது கண்டு பிடித்தால் உனக்கு சொர்க்கம் நீடிக்கப் படும்’ என்று சொன்னது.

மன்னனும் கிளம்பிப் பூலோகம் வந்தான். பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. அவன் வாழ்ந்த இடமே தலை கீழாக மாறிப் போயிருந்தது. மக்களில் யாரையும் அவனால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. மனதைத் தேற்றி நம்பிக்கையை ஏற்றிக் கொண்டு விடாமுயற்சியாகத் தேடி, இருப்பதிலேயே வயதான ஒரு மனிதரை சந்தித்தான். அவரிடம் ‘ஐயா! உமக்கு இந்திரத்யும்னன் என்று இந்தப் பகுதியை அரசாண்ட மன்னனைப் பற்றித் தெரியுமா?’ என்று ஆர்வத்துடனும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் கேட்டான். வயோதிகர் இடுங்கிய கண்களால் அவனை மேலும் கீழும் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி விட்டார். ‘வேண்டுமானால் என்னை விட வயதான ஆந்தை ஒன்று பக்கத்து மரப் பொந்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இரவில் அது விழித்த பின் அதனிடம் போய்க் கேள்’ என்று சொல்லி விட்டார்.

 

வேறு வழியில்லாமல் இரவு வரை கோவில் நிழலில் உட்கார்ந்திருந்து விட்டு இரவு ஆந்தையைப் பார்த்தான். தலையை முதுகுப் பக்கம் வைத்து ஒரு இரையைக் குறி வைத்துக் கொண்டிருந்த ஆந்தையிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். இரையைத் தப்ப விட்ட எரிச்சலில் ஆந்தை ‘எனக்குத் தெரியாது. இங்கே ஒரு கிழட்டு நாரை தினமும் காலைப் பொழுதில் திரியும். வேண்டுமானால் அதைக் கண்டு பிடித்துக் கேள்’ என்று சொல்லி விட்டுத் தன் வேலையைப் பார்க்கப் போய் விட்டது.

 

காலையில் அலைந்து திரிந்து நாரையைக் கண்டு பிடித்தான். அதனிடம் கேட்டபோது. ‘எனக்கு நினைவில்லை. ஆனால் பக்கத்து ஏரியில் ஒரு ஆமை கிடக்கிறது. அதற்கு நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது’ என்று நம்பிக்கையை வளர்த்தி விட்டது.

 

மன்னன் ஏரியைத் தேடி ஓடினான். அங்கே வயதான ஆமையைப் பார்த்தான். தள்ளாத வயதில் சிரமப் பட்டுக் கொண்டிருந்தது அந்த ஆமை. நம் மன்னன் அதனிடம் இந்திரத்யும்னனைப் பற்றிக் கேட்டான். ஆமை உடனே ‘ஆமாம். அவனால்தான் இந்த ஏரியும் இருக்கிறது, அதில் இருக்கும் உயிரினங்களும் நன்றியுடன் உயிர் வாழ்கின்றன’ என்று சொன்னது. அப்போது மன்னன் ‘நானேதான் அந்த இந்திரத்யும்னன்! எனக்கு இந்த ஏரியை ஏற்படுத்தியதாக நினைவில்லையே. நீ ஏதோ தப்பாகச் சொல்கிறாய்’ என்று நம்பிக்கை இழந்து போய் ஆமையிடம் சொன்னான்.
ஆமையும் ‘கதை அப்படியில்லையப்பா! நீ அரசாண்ட போது மக்களுக்குத் தினமும் ஏராளமான பசுக்களைத் தானமாக வழங்கினாய். மக்கள் அவற்றையெல்லாம் இந்தப் பகுதியிலுள்ள புல் தரையில் மேய விட்டார்கள். மாடுகள் தினமும் அலைந்து திரிந்து தன் குளம்புகளால் மண்ணைக் கிளப்பி விட்டதால் இந்தப் பகுதி நாளடைவில் பள்ளமாகப் போய் விட்டது. மழை பெய்து நீர் பிடித்ததால் ஏரியாக மாறிவிட்டது. இந்தப் பகுதியின் செழிப்பிற்கே இந்த ஏரிதான் காரணம் என்றும் ஆகி விட்டது. அதைக் கேட்டுத்தான் நான் இங்கே குடியேறினேன். இத்தனை நாள் நன்றியுடன் வாழ்ந்திருக்கிறேன். இன்னமும் பல உயிரினங்களும் வாழ்கின்றன. வாழப் போகின்றன’ என்றது.

 

தூரத்தில் சொர்க்கபுரியில் இருந்து மன்னனைக் கூட்டிப் போக விமானம் வருவது மன்னனுக்குத் தெரிந்தது.

நீதி: நாம் செய்யும் நல்ல காரியங்களுக்கு பலன் பல நாட்களுக்கும் பல தலைமுறைகளுக்கும் நீட்டித்திருக்கும் படியாக யோசித்துச் செய்வது நல்லது

சிறுவர் கதைகள் – கொடுத்துப் பெறுதல்

ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.

அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு “உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?” என்று கேட்டார்.

இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை! கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்.

அப்பாஜி கதைகள் – தன்​னைப் ​போல்தான் வாழ்வார் உலகிலுள்​ளோர்களும்

தினசரி அதிகா​லையில் கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழிப்பதற்கு சவரத் ​தொழிலாளி ஒருவன் அரண்ம​ணைக்கு வருவது வழக்கம்.  தினசரி கா​லையில் முகத்​தை மழித்து முடி​யைத் திருத்துபவராதலால் அந்தத் ​தொழிலாளியிடம் ​வேடிக்​கையாக எ​தையாவது​ பேசுவது கிருஷ்ண​தேவராயரின் வழக்கம்.  அவனும் மன்னர் ​கேட்கும் ​கேள்விகளுக்கு இணக்கமாகப் பதிலு​ரைப்பான்.

ஒருநாள் அவன் கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழித்துக் ​கொண்டிருக்கும் ​போது,”நீ நாட்டு மக்களிடம் சகஜமாகப் பழகுபவனாயிற்​றே.  நமது நாட்டு மக்களின் வாழ்க்​கைத் தரம் எந்த நி​லையில் இருக்கிறது என்று உனக்குத்​ தெரிந்திருக்கு​மே என்றார்.  ”​

மேன்​மை தாங்கிய மகாராஜா அவர்க​ளே!  தங்களு​டைய ஆட்சியில் மக்கள் நன்கு சுபிட்சமாக இருக்கின்றனர்.  மக்களின் ஒவ்​வொருவர் இல்லத்தில் கு​றைந்தபட்சம் எலுமிச்சம்பழம் அளவிற்குத் தங்கம் இருக்கிறது.  அதனால் எவரும் கவ​லையில்லாமல் இருக்கின்றனர்” என்றார் சவரத்​தொழிலாளி.  சவரத்​ தொழிலாளி ​சென்ற பின்னர் எப்​போதும் ​போன்று மன்ன​ரைக் காண அப்பாஜி வந்தார்

அப்பாஜியிடம் சவரத் ​தொழிலாளி கூறிய​தை மன்னர் கூறினார்.  ”இவன் இப்படிக் கூற என்ன காரணம்?  இவன் ​சொன்னது ​போன்று எப்படி ​எல்லோரிடமும் எலுமிச்சம்பழ அளவில் ​பொன் இருக்கும்?  எலுமிச்சம்பழ அளவு ​பொன் என்பது சாதாரண மக்கள்​ வைத்திருக்க முடியாது!  ​பெரும் பணக்காரர்களிடத்தில் அல்லவா இருக்கும்.  ஆ​கையினால் இதுபற்றித் ​தெரிந்து ​கொள்ள ​வேண்டும்!” என்று வினவினார்.

”இதற்கு வி​ரைவில் வி​டை​யைக் கூறுகி​றேன்” என்று அப்பாஜி மன்னரிடம் கூறிவிட்டுச் ​சென்றுவிட்டார்.  மறுநாள் வழக்கம்​போல் சவரத் ​தொழிலாளி அரண்ம​னைக்கு வந்து கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழித்துக் ​கொண்டிருந்தான்.

அச்சமயம் அப்பாஜி, காவலர்க​ளை அ​ழைத்து ”சவரத் ​தொழிலாளியின் இல்லத்​தை ​சோத​னை ​செய்துவிட்டு வி​ரைவில் வாருங்கள்” என்று கட்ட​ளையிட்டார்.

காவலர்கள் சவரத் ​தொழிலாளியின் இல்லத்திற்குச் ​சென்று ​சோத​னை ​செய்த​போது, அடப்பப் பெட்டியில் எலுமிச்சம்பழ அளவுக்கு ​பொன் இருப்ப​தைக் கண்டு வந்து கூறினர். அத ​னை மன்னரிடம் ​கொடுத்துவிட்டு, மன்னர் ​பெருமா​னே! அடுத்த நாள் சவரத் ​தொழிலாளி வந்ததும், முதலில் ​கேட்டது ​போன்று ​கேளுங்கள். அவனிடமிருந்து ​வேறு விதமான பதில் கி​டைக்கும்” என்றார் அப்பாஜி.

வழக்கம் ​போல் கா​லை கிருஷ்ண​தேவராயருக்கு முகம் மழிக்க சவரத் ​தொழிலாளி வந்தமர்ந்தான்.  வரும்​போ​தே அவனது முகம் வாடியிருந்தது.  அவன் தனது ​வே​லை​யை ஆரம்பிக்கும் சமயம்,

”இப்​​பொழுது குடிமக்கள் எவ்வாறு இருக்கிறார்கள்?  ஏதாவது மாறுதல் உண்டாகியிருக்கிறதா?”  என்று வினவினார் மன்னர்.

”​பெருமதிப்பிற்குரிய மகாராஜா அவர்க​ளே! அ​தை ஏன் ​கேட்கின்றீர்கள்?  எல்​லோரும் மனக்கலக்கத்துடன் இருக்கின்றனர். ​ கையில் இருக்கும் எலுமிச்சம் பழ அளவு தங்கத்​தை இழந்துவிட்டால் மக்கள் எப்படி மகிழ்ச்சியுடன் வாழ முடியும்?” என்று சவரத்​ தொழிலாளி கண்களில் நீர் மல்க ​தொண்​டை அ​டைக்கக் ​கூறினான்.

அச்சமயம் வந்த அப்பாஜி, ”மன்னர் ​பெருமா​னே!  இப்​போது வி​டை ​தெரிந்து விட்டதா?  உலகத்திலுள்ள ஒவ்​வொருவரும் தன்னு​டைய மன இயல்புக்கு ஏற்பதான் மற்றவர்களின் நி​லை​யை நிர்ணயிக்கின்றனர்.  தன்​னைப் ​போல்தான் பிறரும் இருப்பார்கள் என்று நி​னைக்கின்றனர்.

தான் நல்ல வருமானத்துடன் வாழ்ந்தால் மற்றவர்களும் அப்படித்தான் வாழ்வார்கள் என்றும், தான் கஷ்டநி​லையில் வாழ்ந்தால் மற்றவர்களும் கஷ்டத்துடன் தான் வாழ்கிறார்கள் என்று மனப்பக்குவத்தில் வாழ்கின்றனர்” என்றார் அப்பாஜி.  உட​னே காவல​னை அ​ழைத்து, ”கஜானாவில் பாதுகாப்புடன் இருக்கும் எலுமிச்சம்பழ அளவு ​பொன்​னைக் ​கொண்டு வந்து சவரத் ​தொழிலாளியிடம் ​கொடுங்கள்” என்று ஆ​ணையிட்டார் மன்னர். ​

கொண்டு ​கொடுத்த ​பொன்னுடன் சிறிது ​பொன்னும் பரிசாகச் சவரத் ​தொழிலாளிக்குக் ​கொடுத்தார்.  அவனும் மனம் மகிழ்ந்து பணிவுடன் வணங்கி இன்முகத்துடன் ​வாங்கிச் ​சென்றான்.  மனித இயல்​பை விளக்கிக் காட்டிய அப்பாஜியின் அறிவுத் திற​மை​யைப் பாராட்டினார் கிருஷ்ண​தேவராயர்.

அப்பாஜி கதைகள் – கவலையும் பலமும்

கிருஷ்ணதேவராயர் சில யானைகள் முன்னால் வர, பின்னால் ஒரு யானையின் மீது அமர்ந்து வீதி உலாச் சென்றார். ஒரு வீதியில் செல்லும்போது, எதிரில் வந்த இளைஞன் ஒருவன், முதலில் சென்ற யானையின் தந்தத்தைப் பிடித்துத் தள்ளினான். யானை சிறிது தூரம் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
அரசர் தம் மந்திரியான அப்பாஜியிடம் “இந்த இளைஞன் எவ்வளவு பலசாலியாக இருக்கிறான்?” என்றார்.
“அரசே! கவலையில்லாமல் வளர்ந்த பிள்ளை போலும்” என்று அப்பாஜி பதிலளித்தான். மறுநாளே அந்த இளைஞனைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தான். பின்பு அவனுடைய வீட்டைத் தேடிச் சென்றான்.
இளைஞனின் அம்மாவிடம் “அம்மா! ஒரே பிள்ளை என்று மிகுந்த செல்லம் கொடுக்கிறீர்கள். இப்படியே போனால் வளர்ந்த பிறகு பொறுப்பே இல்லாமல் இருப்பான். இனிமேல் அவனுக்கு அளிக்கும் உணவில் உப்பே போடாதீர்கள். ‘சம்பாதித்து வந்தால்தான் உப்பு போடுவேன்’ என்று சொன்னால், உங்கள் பிள்ளை பொறுப்பானவனாகிவிடுவான்.” என்று அப்பாஜி கூறியதும் அவ்வாறே செய்யலானாள்.
சில நாள்கள் சென்ற பின்பு, இராயர் முன்பு போலவே யானைப் படையுடன் நகர்வலம் சென்றார். யானையைக் கண்டதும் அந்த இளைஞன் தந்தத்தைப் பிடித்துத் தள்ள முயன்றான். அவனால் முடியவில்லை. அதற்குள் யானை அவனைக் கீழே தள்ளிவிட்டது.
“அரசே! பார்த்தீர்களா? சம்பாதிப்பது எப்படி என்ற கவலையால் இளைஞன் பலமிழந்தான். கவலையின்மையே பலத்தைத் தரும் என்பது புரிகிறதா?” என்றார் அப்பாஜி. அரசரும் ‘நன்றாகப் புரிந்தது’ என்றார்.

அப்பாஜி கதைகள் –  கிருஷ்ணதேவராயரிடம் அப்பாஜி மந்திரி ஆன கதை
அப்பாஜி கதைகள் – கிருஷ்ணதேவராயரிடம் அப்பாஜி மந்திரி ஆன கதை

விஜய நகர மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் அப்பாஜி என்று ஒரு மந்திரி இருந்தார். அவர் இதற்கு முன் கிருஷ்ணதேவராயருக்குக் கப்பம் கட்டும் ஒரு குறு நில மன்னரிடம் மந்திரியாக இருந்தார். அந்த மன்னர் ஏதோ காரணத்தால் வரிசையாக சில ஆண்டுகள் கப்பம் கட்ட இயலவில்லை. கிருஷ்ண தேவராயரின் கோபத்துக்கு அஞ்சினார். அவர் சர்வ சாதாரணமாக சம்பந்தப்பட்ட மன்னரை அழைத்து அவரைத் தனிமையில் வைத்து பிரம்பாலேயே அடிப்பார், பிறகு புண்மேல் உப்பு தடவச் செய்வார்.

அப்பாஜி அம்மன்னனை அழைத்துக் கொண்டு கிருஷ்ண தேவராயரைப் பார்க்க வந்தார். ஊருக்கு வெளியில் ஒரு சத்திரத்தில் மன்னனைத் தங்க வைத்தார். தான் தகவல் தெரிவிக்கும் வரை மன்னன் கிருஷ்ண தேவராயரின் முன்னால் வரக் கூடது என்றுக் கூறி விட்டு அவர் மட்டும் சென்று கிருஷ்ண தேவராயரை சென்று பார்த்தார். கிருஷ்ண தேவராயரும் அவரை வரவேற்று தன்னுடன் வைத்துக் கொண்டார்.

சில நாட்கள் கழிந்தன.கிருஷ்ண தேவராயரும் அப்பாஜியும் விஜய நகர சந்தை வீதியில் உலாவிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கிருஷ்ண தேவராயர் அப்பாஜியின் முகத்தைப் பார்க்காமல் அவரிடம் “ஆமாம், உங்கள் மன்னர் எங்கே? அவரை நான் பார்க்க வேண்டுமே” என்றார்.அப்பாஜியும் உரியன செய்வதாக வாக்களித்தார்.பிறகு தன் மன்னனிடம் ரகசியத் தூதனுப்பி தன் சொந்த நாடுக்கு உடனே விரைந்துச் செல்லுமாறுக் கூறினார். மன்னரும் ஓடி விட்டார்.

சில நாட்கள் கழித்து கிருஷ்ண தேவராயர் அப்பாஜியிடம் அவர் மன்னன் இன்னும் வராததற்கானக் காரணம் கேட்டார். அப்பாஜீ அவரிடம் நடந்ததைக் கூறினார்.கிருஷ்ண தேவராயர் ஆச்சரியத்துடன் அவரிடம் “நீங்கள் செய்தது உங்கள் மன்னனைக் காப்பாற்றி விட்டது. அவருக்குத் தக்கத் தண்டனை கொடுக்கவே எண்ணியிருந்தேன். ஆனால் இதை எப்படி உணர்ந்துக் கொண்டீர்கள்?” என்று கேட்டார்.அப்போது அப்பாஜீ “மகாராஜா, நீங்கள் என் மன்னனைப் பற்றிப் பேசும் போது உங்கள் பார்வைப் போன திசையைக் கவனித்தேன். அங்கு ஒரு கசாப்புக் கடையில் ஆடுகள் தோலுறிக்கப்பட்டுத் தொங்கிக் கொண்டிருந்தன. அதைப் பார்த்தவுடனேயே உங்களுக்கு எம் மன்னன் ஞாபகம் வந்தது. ஆகவே இது நல்லதுக்கல்ல என்று நான் உணர்ந்துக் கொண்டேன்” என்றார்.

அதன் பிறகு அப்பாஜி மகராஜாவிடம் மந்திரியாக இருந்தார். அது வேறு கதை, சோக முடிவுடன். அரசர்களுடன் நெருங்கி பழகுவது எப்போதுமே கத்திமுனையில் நடப்பது போலத்தான்.

அப்பாஜி கதைகள் – ஆறாவது முட்டாள்

அரசர் கிருஷ்ணதேவராயருக்கு அன்று விபரீதமான ஓர் ஆசை ஏற்பட்டது. அவர் அப்பாஜியிடம், “”அமைச்சரே, இன்று மாலை ஆறு மணிக்குள் நம் தலைநகரான விஜயநகரை நீர் நன்றாகச் சுற்றிப் பார்த்து, ஆறு முட்டாள்களின் விலாசத்தைக் குறித்துக் கொண்டு வாருங்கள்,” என்று ஆணையிட்டார்.

“”முட்டாள்களின் முகவரி எதற்கு?” என்று பணிவுடன் கேட்டார் அப்பாஜி.

“”வீணாக விளக்கம் கேட்க வேண்டாம். சொன்னதைச் செய்யும்!” என்று அரசர் கண்டிப்பாகக் கூறினார்.

அரசர் விருப்பப்படி முட்டாள்களைத் தேடி அலைந்தார் அப்பாஜி. அந்தி நேரத்திற்குள் ஆறு முட்டாள்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்கள் விலாசத்தைக் குறிக்க வேண்டுமே! எங்கே போவது? எப்படி முட்டாள்களைச் சந்திப்பது?

அப்பாஜி இரண்டு மணி நேரம் மாறு வேடமணிந்து முட்டாள்களைத் தேடினார். யாரையும் காணோம். நகர எல்லையை ஒட்டிய மரத்தின் நிழலில் சிறிது நேரம் நின்றார்.

அப்போது ஒருவன் கழுதை மீது ஏறி வந்தான். அவன் தலை மீது ஒரு புல்கட்டினைச் சுமந்து கொண்டிருந்தான்.

“”ஐயா, கழுதை மீது இருக்கும் நீர் ஏன் புல்கட்டினைச் சுமந்துக் கொண்டிருக்கிறீர்?” என்று கேட்டார் அப்பாஜி.

“”உமக்கு அறிவு இருக்கா? என் கழுதைக்கு வயதாகிவிட்டது. ரொம்பவும் தளர்ந்து விட்டது; அதனால், என்னை மட்டுமே சுமக்க இயலும். இந்தப் புல்கட்டினையும் சேர்த்துச் சுமக்க இயலாது. ஆகவே, நான் புல்கட்டினைச் சுமந்து செல்கிறேன்,” என்றான்.

அப்பாஜிக்கு ஒரே மகிழ்ச்சி. தான் தேடி வந்த முட்டாள்களில் ஒருவன் அகப்பட்டுக் கொண்டானே! அவனிடம் சாமர்த்தியமாகப் பேசி அவனது விலாசத்தைக் கேட்டுக் குறித்துக் கொண்டார்.

சிறிது துõரம் சென்றதும் அருகில் உள்ள ஒரு மரத்தின் நுனி கிளையில் ஒருவன் உட்கார்ந்துக் கொண்டு மரத்தை வெட்டிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்த அப்பாஜி,

“”ஐயா! இப்படி உட்கார்ந்துக் கொண்டு வெட்டினால் நீங்கள் கீழே விழுந்து விடுவீர்கள்.
அந்த பக்கமா உட்கார்ந்து வெட்டுங்க,” என்றார்.

“”ஏன்யா… நான் என்ன மடயன்னு நெனச்சியா… நான் இப்படி உட்கார்ந்துகிட்டு மரத்தை வெட்டினா இந்த மரக்கிளை கீழே விழும். நீ உடனே துõக்கிகிட்டு ஓடலாம்னு பார்த்தியா? அதுக்காகத் தானே நான் இங்க உட்கார்ந்துகிட்டு வெட்டுறேன்,” என்றான்.

“”சே! உங்க புத்திசாலித்தனம் யாருக்கு வரும்… உங்க வீட்டு முகவரியை கொடுங்க…” என்று வாங்கிக் கொண்டார். அடுத்து பாட்டி ஒருத்தி அடுப்பை பற்றவைக்க மிகவும் போராடிக் கொண்டிருந்தார்.

“”பாட்டி என்ன பிரச்னை? என்றார் அப்பாஜி, “”அய்யா! இது நல்லா காய்ஞ்ச விறகு தான். மண்ணென்ணெய் இல்லை. தண்ணியும், மண்ணென்ணெயும் ஒரே மாதிரி தானே இருக்கு அதனால இந்த விறகுகள்ல நல்லா தண்ணிய ஊத்தி எரிய வைக்க முயற்சி செய்றேன் எரியவே மாட்டேங்குது,” என்றாள். சிரித்துக் கொண்டே அவளது முகவரியையும் குறித்துக் கொண்டார் அப்பாஜி.

அடுத்த முட்டாள் அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. இன்னும் மூன்று முட்டாளைத் தேடியாக வேண்டும்! ஒரு மணி நேரமே உள்ளது.

அலுத்துப் போய் ஆற்றங்கரைக்குச் சென்றார் அப்பாஜி. அங்கே ஒருவன் குளித்து முடித்துவிட்டு இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார். அப்பாஜி அவனிடம்,

“”தாங்கள் எதைத் தேடிக் கொண்டு அலைகிறீர்கள்?” என்று விசாரித்தார்.

அவன், “”ஐயா, நான் என் உடைகளையும் கொஞ்சம் பணத்தையும் ஓர் இடத்தில் வைத்துவிட்டுக் குளித்தேன். குளித்துவிட்டு வந்து பார்த்தால் பணத்தையும், உடைகளையும் காணோம்,” என்று கவலையுடன் கூறினான்.

“”ஏதாவது அடையாளம் வைத்து இருந்தாயா?”

“”ஆமாம், அடையாளத்தையும் காணோம்.”

“”என்ன அடையாளம்?”

“”வானத்தில் வெண்மேகம் ஒன்றிருந்தது. அதை அடையாளமாகக் கொண்டு அதன் அடியில் அவற்றை வைத்தேன்.”

அவனது முட்டாள்தனத்தைப் புரிந்து கொண்ட அப்பாஜி அவன் பெயரோடு விலாசத்தையும் குறித்துக் கொண்டார்.

மாலை ஆறு மணி அப்பாஜி அரசனிடம் விரைந்து சென்றார். நான்கு முட்டாள்களுடைய விலாசத்தையும் கொடுத்தார்.

கிருஷ்ணதேவராயர் அவற்றைப் பார்த்தார். முட்டாள்களின் விபரங்களை அறிந்து ரசித்து சிரித்த அரசன், “”அமைச்சரே, இன்னும் இரண்டு முட்டாள்களின் விலாசம் எங்கே?” என்று கேட்டார்.

அப்பாஜி, “”அரசே, ஒரு பெரிய சாம்ராஜ்ஜியத்தின் மந்திரி நாள் முழுவதும் முட்டாள்களைத் தேடிக் கொண்டு அலைந்தது முட்டாள்தனமல்லவா! ஆகவே, எனது விலாசத்தை ஐந்தாவதாக எழுதிக் கொள்ளுங்கள்,” என்று பணிவோடு வேண்டினார். அரசரும் அப்பாஜியின் முகவரியை எழுதிக் கொண்டார்.

பிறகு, “”அமைச்சரே, ஆறாவது முட்டாளின் விலாசம் எங்கே?” என்று அரசர் ஆர்வத்துடன் கேட்டார்.

“”அரசே, கோபித்துக் கொள்ளாதீர்கள்! உங்கள் விலாசம் உங்களுக்குத் தெரியாதா? ஒரு நாட்டின் அமைச்சருக்கு என்ன வேலை கொடுக்க வேண்டும் என்று ஒரு ஒழுங்கு கிடையாதா? நாம் அறிவாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களால் பல நன்மைகளைப் பெற வேண்டுமே தவிர, முட்டாள்களைத் தேடிக் கண்டு பிடித்து, அவர்களது தொடர்பால் நம்மையும் முட்டாளாக்கிக் கொள்ளக் கூடாதல்லவா!” என்று உருக்கமாகக் கூறினார்.

அரசனுக்குத் தான் செய்த தவறு புரிந்து விட்டது. தன் கையிலிருந்து நான்கு முட்டாள்களின் விலாசத்தையும் உடனே கிழித்து எறிந்தார். அப்பாஜியின் அறிவுக் கூர்மையையும் துணிச்சலையும் பாராட்டி அவருக்குப் பரிசு அளித்தார்.

முல்லாவின் கதைகள் – முல்லாவும் மூன்று அறிஞர்களும்

நம்ம முல்லா நஸ்ருதீன் இருந்த நாட்டில் நிறைய கல்வி கற்ற அறிஞர்கள் இருந்தார்கள், அவர்களோடு மற்ற நாட்டு அறிஞர்கள் போட்டி போடுவார்கள், அதனால் மக்களுக்கு நல்ல நல்ல விசயங்கள் தெரிய வரும். சில நேரங்களில் போட்டி கடுமையாக இருக்கும், வெற்றி பெற்றவருக்கு பட்டமும், பணமும் கிடைக்கும்.

ஒருமுறை மூன்று மெத்த படித்தவர்கள், எல்லாமே தெரிந்தவர்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டு, அடுத்தவர்கள் பதில் சொல்ல முடியாத அளவுக்கு கேள்வி கேட்பார்கள். அவர்கள் போட்டி அழைத்தாலே, ஏன் வீணாக அவமானப்பட வேண்டும் என்று நினைத்து நிறைய பேர் போட்டியை புறக்கணிப்பார்கள்.

அப்படி பட்ட அந்த மூன்று பேரும் நம்ம முல்லா இருந்த நாட்டிற்கு வந்து அரசனிடம் எங்களுடன் போட்டிப் போட உங்கள் நாட்டில் புத்திசாலிகள் இருந்தால் வரச் சொல்லுங்க என்றார். உடனே அரசர் தன்னுடைய அரண்மனை அறிஞர்களைப் பார்க்க அவர்களோ தலையை தொங்கப் போட்டு விட்டார்கள், யாரும் போட்டிப் போட விருப்பம் தெரிவிக்கவில்லை,

உடனே அந்த மூன்று பேரும், சப்தமாக சிரித்து, உங்கள் நாட்டில் அனைவரும் முட்டாள்களா? எங்களுடன் போட்டிப்போட யாருமே இல்லையா? ஹா ஹா, அப்படியே போட்டி போட்டு எங்களை வென்றால் நாங்கள் இந்த நாட்டுக்கு அடிமை, இல்லை என்றால் நீங்கள் அனைவரும் எங்களுக்கு அடிமை, போட்டிக்கு தயாரா? என்று கிண்டலாக கேட்க, அரசனுக்கு அவமானம் தாங்க முடியவில்லை.

நாளை நாட்டின் நடுவில் இருக்கும் ஒரு இடத்தில் போட்டி நடைபெறும், யார் வேண்டும் என்றாலும் கலந்துக் கொள்ளலாம், இந்த மூன்று பேரையும் வெற்றிக் கண்டால் நிறைய பரிசுகள் கிடைக்கும், இல்லை என்றால் கடுமையான தண்டனை என்று அறிவிப்பு செய்தார். அன்றைய இரவே புத்திசாலிகள் என்று சொல்லித் திரிந்த நிறைய பேர் ஊரை விட்டு போய் விட்டார்கள்.

அடுத்த நாள் காலையில் அங்கே நிறைய மக்கள் கூடி இருந்தார்கள், அவர்களோடு போட்டி போட்டு தோற்றவர்கள் தலை குனிந்து நின்றுக் கொண்டிருந்தார்கள். யாருமே அவர்களை வெற்றிக் கொள்ள முடியவில்லை என்ற ஆத்திரத்தில் அரசன் அமர்ந்திருந்தான்.

அந்த பக்கமாக நம்ம முல்லா பக்கத்து நாட்டில் வியாபாரம் செய்து முடித்து தன்னுடைய கழுதையுடன் ஊருக்கு வந்தார், என்னடா இங்கே இவ்வளவு கூட்டமாக இருக்கிறதே, என்று வேடிக்கை பார்த்தவருக்கு பயங்கர அதிர்ச்சி. அவரது மச்சான் வேறு கையை கட்டி தலை குனிந்து நின்றுக் கொண்டிருந்தான்.

மக்களிடம் என்ன ஏது என்று கேட்டு தெரிந்துக் கொண்டார், மச்சானின் தொந்தரவு இனி இருக்காது என்று நினைத்தார். சிறிது நேரத்திலேயே தன் நாட்டு மக்கள் யாருமே பதில் சொல்லவில்லை, அப்படி செய்தால் தன் நாட்டிற்கு பெருத்த அவமானம் ஆகுமே என்று நினைத்ததோடு இல்லாமல் இந்த அறிஞர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்.

தன்னுடைய கழுதையோடு கூட்டத்தின் நடுவே சென்று, அரசனை பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு, தான் போட்டியிடப் போவதாக சொன்னார்.

அரசனும் சரி என்றார், ஆனால் அந்த மூன்று பேரும் முல்லாவின் ஆடை, கழுதையோடு நின்ற நிலையை பார்த்து ஏளனமாக சிரித்து, உன்னிடம் நாங்கள் ஆளுக்கு ஒரு கேள்வி கேட்போம், நீ சொல்லும் பதிலை நாங்க சரி, தவறு என்று சொல்வோம், அப்படி நாங்க பதில் சொல்லவில்லை என்றால் உனக்கும் இந்த நாட்டுக்கும் அடிமை. நீ தோற்றால் இந்த நாடும், மற்றவர்களும், நீயும் வாழ்நாள் முழுவதும் எங்களுக்கு அடிமை.

முல்லா: அது எல்லாம் சரி, கேள்வியை கேளுங்கப்பா, சீக்கிரம் வீட்டுக்கு போகணும்?

முதல் அறிஞர் முல்லாவிடம், “இந்த உலகின் மைய இடம் எது?” என்று கேட்டார்.

அதற்கு முல்லா, “”என் கழுதை நிற்குமிடம் தான் உலகின் மையம்,” என்றார்.

அந்த அறிஞர், “அதை உண்மை என்று நிரூபியுங்கள் பார்க்கலாம்,” என்றார்.

உடனே முல்லா, “அது உங்க வேலை, நான் சொன்னது தவறு என்று நிரூபியுங்கள். உலகை அளந்து பாருங்கள். அப்போது என் கழுதை நிற்குமிடம் உலகின் மையம் என்று தெரியும்,” என்றார்.

முதல் அறிஞர் என்ன சொல்வது என்று தெரியாமல் பேசாமல் இருந்தார்.

அடுத்து இரண்டாம் அறிஞர், “ஆகாயத்தில் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன?” என்று கேட்டார்.

அதற்கு முல்லா, “என் கழுதையின் உடலில் எத்தனை உரோமங்கள் இருக்கின்றனவோ அத்தனை நட்சத்திரங்கள் ஆகாயத்தில் உள்ளன. வேண்டுமானால் எண்ணிப் பாருங்கள்,” என்றார்.

இரண்டாம் அறிஞர் பேசாமல் இருந்துவிட்டார்.

மூன்றாவது அறிஞர் முல்லாவிடம், “மக்கள் கடைபிடிப்பதற்காகச் சான்றோர்கள் வகுத்த நெறிகள் எவ்வளவு?” என்றார்.

அதற்கு முல்லா, “அறிஞர்களே உங்கள் மூவருடைய தாடியிலும் எவ்வளவு உரோமங்கள் உண்டோ அத்தனை நெறிகளைச் சான்றோர்கள் மக்களுக்காக வகுத்துள்ளனர்.

“இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள். உங்கள் மூவருடைய தாடியிலும் உள்ள உரோமங்களைப் பிடுங்கி எண்ணிக்கை சரியானது என்று நிரூபிக்கிறேன்,” என்றார்.

இவ்வாறு முல்லா கூறியதும், “வேண்டாம், வேண்டாம். நீங்கள் சொன்ன பதிலை ஒப்புக் கொள்கிறோம்” என்று கூறி அந்த அறிஞர்கள் தாங்கள் தோற்றுப் போனதை ஒப்புக் கொண்டு தங்கள் பரிசுகளை முல்லாவிடம் சமர்ப்பித்தனர், தங்களை அந்த நாட்டின் அடிமை என்று அறிவித்தார்கள்.

போட்டியில் வென்றதால் அரசன் முல்லாவை கட்டிப்பிடித்து, நன்றி சொன்னார். என்ன கேட்டாலும் கொடுக்கத் தயார் என்றார், உடனே “அந்த மூன்று அறிஞர்களையும் தங்கள் நாட்டிற்கு போக அனுமதிக்க வேண்டும், இனிமேல் அவர்கள் இது போல் போட்டியிட மாட்டார்கள்” என்றார்.

அந்த மூவரும் முல்லாவுக்கு நன்றி சொல்லி தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடி போனார்கள். முல்லாவின் புகழ் மேலும் பரவியது.

சிறுவர் கதைகள் – மந்திர புல்லாங்குழல்

ஆனைக்குடி என்ற ஊரில் அழகேசன் என்ற ஏழை இளைஞன் இருந்தார், அவர் பக்கத்து ஊரில் ஜம்பு என்ற ஜமிந்தாரிடம் வேலை பார்த்து வந்தார், கடுமையாக உழைத்தாலும் ஜமிந்தார் ஒன்றுமே கொடுக்க மாட்டார், சாப்பாடு மட்டுமே போடுவார். இருந்தாலும் தனக்கு வேலை கொடுத்த ஜமிந்தாருக்கு மிகவும் உண்மையாக உழைத்தார், ஜமிந்தார் கொடுப்பதில் தன் தாயாருக்கு பொருட்கள் வாங்கி கொடுத்து அனுப்புவார்.

இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து வேலை செய்து, பின்னர் தன் தாயை பார்க்க போவதாக ஜமிந்தாரிடம் சொன்னார் அழகேசன். ஜமிந்தாருக்கு அவரை விட மனசு இல்லை, இருந்தாலும் போய் வா, இதோ இரண்டு ஆண்டுக்கான உன் கூலி என்று கூறி 5 செப்பு காசுகள் கொடுத்தார்.

அவரும் மனம் கோணாமல் தாயாரைப் பார்க்க போகிற மகிழ்ச்சியில் சந்தோசமாக வாங்கி, முதலாளிக்கு நன்றி சொல்லிட்டு ஊருக்கு கிளம்பினார். அதே நேரம் அந்த ஊரில் ஒரு பெரிய திருடன் ஒருவன், ஜம்பு ஜமிந்தாரின் வீட்டை ரொம்ப நாட்களாக நோட்டம் போட்டுட்டு வந்தான். அழகேசன் இருந்தவரை அவனால் திருட முடியவில்லை, அழகேசன் ஊருக்கு கிளம்புவதையும், அவர் சம்பளம் வாங்கி சென்றதையும் பார்த்தான், கண்டிப்பாக நிறைய தங்கம் கொண்டு செல்வார் என்று நினைத்தான், அதற்கு முன்னர் ஜமிந்தார் வெளியே சென்ற நேரம் பார்த்து அவரது வீட்டில் யாருக்கும் தெரியாமல் நுழைந்து, அங்கே பாதுகாப்பாக வைத்திருந்த தங்க காசுகள், நகைகள் மற்றும் அனைத்து ஆபரணங்களையும் கொள்ளை அடித்து, பெரிய மூட்டை கட்டினான்.

பேராசை யாரை விட்டது, இது போதாது என்று நினைத்து, அழகேசன் கையில் இருக்கும் பொருட்களையும் பிடுங்க திட்டமிட்டான், எப்படி அழகேசன் காட்டு வழியாகத் தான் நடந்து ஊருக்கு செல்வார், எனவே அங்கே அவரை அங்கேயே மடக்கி, இருப்பதை திருடலாம் என்று நினைத்தான். குறுக்கு பாதையில் ஓடி காட்டில் ஒளிந்துக் கொண்டான்.

அழகேசன் காட்டு வழியாக செல்லும் போது ஒரு இடத்தில் ஒரு குள்ளமான ஒருவர் கீழே விழுந்து கிடந்தார், அவரை ஓடி போய் தூக்கி, குடிக்க தண்ணீர் கொடுத்தார். சிறிது நேரத்தில் அந்த குள்ள மனிதர் கண் விழித்து பார்த்தார், அவரது தோற்றம் வேடிக்கையாக இருந்தது. நீண்ட வெண்ணிறத்தாடி, தலையில் கூம்பு வடிவில் தொப்பி.

“அய்யா, பெரியவரே! என்ன ஆச்சு, ஏன் மயங்கி கிடக்கிறீங்க”
“தம்பி, என்னை காப்பாற்றியதற்கு நன்றி, நான் பசியாலும், பட்டினியாலும் வாடுகிறேன், எனக்கு உன்னால் முடிந்த உதவியை செய்வாயாக”
“அ=ய்யா, நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த வருமானம் இதோ இருக்குது, இதில் 2 செப்பு காசுகள் நீங்க வைத்துக் கொள்ளுங்க”
‘தம்பி! உன் இரக்க குணம் என்னை மகிழ்ச்சி கொள்ளச் செய்யுது, கை மாறாக நான் உனக்கு உதவ இருக்கிறேன். எனக்கு சில மந்திர சக்திகள் இருக்குது, அதனை பயன்படுத்த மற்றவர்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறேன், உனக்கு என்ன வேண்டும் கேள், தருகிறேன்”

அழகேசனுக்கு ஆச்சரியம், நம்பமுடியவில்லை. என்னடா இது, நாம இவருக்கு உதவினால் அவர் நமக்கு உதவுகிறாராம், அதுவும் மந்திரசக்தியால், புரியவில்லையே என்று திகைத்தார்.

“தம்பி, சந்தேகம் வேண்டாம், உனக்கு உதவி செய்ய இருக்கிறேன், என்ன வேண்டும் கேள்”
“அய்யா, எனக்கு இசையில் மிக்க ஆர்வம் உண்டு, நான் ஊதினால் இனிமையான இசை வரக்கூடிய ஒரு புல்லாங்குழல் கொடுங்க, அதை கேட்டவர்களும் மெய் மறந்து போகும் அளவுக்கு இருக்க வேண்டும்”

உடனே குள்ள மனிதர் கண்ணை மூடி ஏதோ மந்திரம் சொல்ல, கையில் அழகான புல்லாங்குழல் வந்தது, அதை அழகேசனுக்கு கொடுத்து, ஆசிர்வாதம் செய்து, வேறு வழியில் சென்று விட்டார்.

அழகேசனும் மகிழ்ச்சியாக நடக்கத் தொடங்கினார், திடிரென்று அவர் முன்னால் பெரிய கத்தியோடு அந்த திருடன் வந்து நின்றான், மரியாதையாக உங்க முதலாளி கொடுத்த காசுகளை எனக்கு கொடு என்றான். அழகேசனுக்கு பயம், ஏன் வீணாக திருடனிடம் சண்டை போட்டு, உயிரை இழக்க வேண்டும், என்று நினைத்து, பையில் இருந்த 3 செப்பு காசுகளை கொடுத்தான். என்ன 3 செப்பு காசா, அவர் 5 அல்லவா கொடுத்தார், தங்கம் கிடையாதா, கஞ்சப்பயல், அதான் அவன் வீட்டில் நான் இத்தனை தங்கம் இருந்ததா, ஆமாம் மீதி 2 காசு எங்கே, அதையும் கொடு, இல்லை என்றால் கொன்று விடுவேன்”

“என்னிடம் 3 தான் இருக்குது, 2 ஒரு குள்ள மனிதருக்கு கொடுத்து விட்டேன்”
“நான், நம்ப மாட்டேன், எங்கே ஒளித்து வைத்திருக்கிறாய்?”
அழகேசன் என்ன செய்வது என்று யோசித்தார், திருடனிடமிருந்து தப்பிக்க ஒரே ஒரு ஆயுதம், அந்த புல்லாங்குழல் தான், அதை உபயோகிக்கலாம் என்று முடிவு செய்து “மீதி 2 காசு, இதுக்குள்ளே இருக்குது, இரு, ஊதி எடுக்கிறேன்” என்று கூறி புல்லாங்குழலை இசைக்கத் தொடங்கினார்.

அதிலிருந்து அருமையான இனிய இசை கிளம்பியது, அனைத்து பறவைகளும் மெய் மறந்து கேட்டன, திருடன் சும்மாவா இருக்க முடியும், திருடனும் ஆகா, ஓகோ என்று தை தைக்கா என்று குதிக்கத் தொடங்கினான், அழகேசன் விடாமல் இசைக்க, திருடன் அங்கே இங்கே ஆடத் தொடங்கினான், கீழே விழுந்தான், முள் செடியில் மாட்டிக் கொண்டான், தொடர்ந்து ஆட உடம்பு எல்லாம் அடிப்பட்டு, ரத்தக்களரியாகி, “அய்யா, அய்யா, தயவு செய்து புல்லாங்குழல் இசைப்பதை நிறுத்துங்க, இல்லேன்னா, நான் செத்து போயிடுவேன், என்னால் வலி தாங்க முடியலை, ஆடாமலும் இருக்க முடியலை, நான் திருடியதை எல்லாம் உங்களுக்கே கொடுத்து விடுகிறேன்” என்றான்.

அழகேசனும் அவனிடமிருந்ததை எல்லாம் வாங்கி விட்டு, அவனை ஒரு மரத்தில் கட்டி வைத்து விட்டு, மீண்டும் ஊருக்கு திரும்பினார்.

அங்கே ஜமிந்தார் “அய்யோ, எல்லாமே போயிட்டதே, நான் சம்பாதித்தது எல்லாமே களவு போயிட்டதே, நான் தவறாக சம்பாதித்தது முதல் எல்லாமே போயிட்டதே, இனிமேல் நான் என்ன செய்வேன்” என்று புலம்பிக் கொண்டிருந்தார்.

அழகேசன் அவரை பார்த்து “அய்யா அழ வேண்டாம், திருடன் திருடியதை எல்லாம் நான் வாங்கி வந்து விட்டேன், அவனன காட்டில் கட்டி வைத்திருக்கிறேன், உடனே ஊர்க்காவலர்கல் போய் பிடியுங்க, இதோ உங்க நகைகள், பணம், சரி பாருங்க” என்றார்.

ஜமிந்தாருக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை, இத்தனை நாள் கொடுமைப்படுத்தியும், நேர்மையாக நடந்து கொண்ட அழகேசன் மீது மரியாதை ஏற்ப்பட்டது, தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு, அழகேசனுக்கு அந்த ஊரிலேயே பங்களா ஒன்றையும், நிறைய நிலங்களையும் கொடுத்து உதவினார். அழகேசனும் தன் தாயாருடனும், அற்புத புல்லாங்குழலுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்.

சிறுவர் கதைகள் – பெரியவங்க சொன்னா கேட்கணும்

அந்தியூர் என்ற காட்டில் புறாக்கள் கூட்டமாக சேர்ந்து ஒரு ஆலமரத்தில் வாழ்ந்து வந்தன, அவற்றில் ஒரு வயதான புறாவும் உண்டு, புறாக்கள் எல்லாம் இரை தேடி வந்து மரத்தில் அமரும். அப்போ வயதான புறா தன் அனுபவங்களை கூறும், அப்போ நிறைய புறாக்கள் பழங்கதைகள் சொல்லி எங்களுக்கு ஏன் வீணாக அறிவுரை சொல்லுறீங்க, நாங்களே யோசிக்கும் அளவுக்கு எங்களுக்கும் அறிவு இருக்குது என்று உதாசினப்படுத்துவார்கள். சிலருக்கு உண்மையிலேயே ஆபத்து வந்தால் அப்போ அந்த வயதான புறா தான் நல்ல வழி காட்டும்.

ஒரு நாள் அனைத்து புறாக்களும் சேர்ந்து உணவு தேடி சென்றன. அப்போ ஓரிடத்தில் பறவைகளைப் பிடிக்க வேடன் ஒருவன் வலை விரித்திருந்தான், அதன் அடியில் பெரிய பெரிய நெல்மணிகளை கொட்டியிருந்தான்.

அப்போ புறாக்கள் அனைத்தும் அந்த நெல்மணிகளை சாப்பிட திட்டமிட்டன, ஆனால் வயதான புறா அது வேடம் விரித்த வலை, நாம் போய் நெல்லை சாப்பிட்டால் மாட்டிக் கொள்வோம், எனவே வேற இடத்தில் இரைத் தேடலாம் என்றது, ஆனால் மற்றவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. வலையில் மாட்டாமல் நெல்மணிகளை சாப்பிட போகிறோம் என்று கூறி வலையின் மீது சாமர்த்தியமாக அமர்ந்து சாப்பிட்டன, ஒரு புறாவும் வலையில் மாட்டவில்லை, அப்போ வயதான புறாவைப் பார்த்து கேலி செய்தன மற்ற புறாக்கள்.

திடிரென்று ஒரு குண்டு புறா நிலைத் தடுமாறி ஒரு புறா மேல் விழ, அனைத்தும் சரிந்து நிலை குலைய, அவற்றின் கால்கள் வலையின் பின்னிக் கொண்டன, அவ்வளவு தான் அனைத்து புறாக்களும் வலையில் மாட்டிக் கொண்டன.

அவ்வளவு தான் அனைத்தும் என்ன என்ன முயற்சியோ செய்தன, ஆனால் ஒன்றும் முடியவில்லை. வலையானது தரையோடு சேர்த்து அடிக்கப்படிருந்தது.

உடனே அனைத்துப் புறாக்களும் வயதான புறாவை பார்த்து மன்னிப்பு கேட்டு, தங்களை காப்பாற்ற உதவி செய்ய வேண்டும் என்றன.

வயதான புறா “என் ஒருவனால் உங்கள் அனைவரையும் விடுவிக்க முடியாது, அதற்கான சக்தியும் என்னிடம் இல்லை, ஆனால் என்னுடைய வயதான அனுபவத்தால் கிடைத்ததை வைத்து ஒரு வழி சொல்கிறேன், அதன்படி நடந்தால் தப்பிக்கலாம் என்றது.

மற்ற புறாக்கள் கண்டிப்பாக சொல்லுங்க, இதுவரை உங்கள் அனுபவங்களை உதாசினப்படுத்தியதற்கு மன்னியுங்க என்றன.

வயதான புறா “இன்னும் கொஞ்ச நேரத்தில் வேடன் வருவான், அவன் வரும் போது நீங்க யாரும் உயிரோடு இருப்பது போல் காட்டிக் கொள்ளக்கூடாது, மரணம் அடைந்த மாதிரி விழுந்து கிடக்க வேண்டும்.”

“அவனும் செத்துப் போன புறாக்கள் தானே என்று உங்களை தரையில் போடுவான், கடைசி புறாவை போடும் வரை அமைதி காக்க வேண்டும், கடைசி புறாவைப் போட்டதும், நான் வேகமாக வந்து வேடனை கொத்துவேன், அவன் நிலை குலைந்தவுடன் நீங்க அனைவரும் உடனே பறந்து தப்பிவிடுங்க”

அனைத்து புறாக்களும் வயதான புறாவை வணங்கி, அது சொன்னது போல் செத்துப் போனது போல் நடித்தன, அங்கே வந்த வேடனும் அனைத்தும் செத்து கிடப்பதைக் கண்டு, தண்ணீர் குடிக்காததால் ஒருவேளை அனைத்தும் இறந்து போயிருக்கும் என்று நினைத்து, ஒவ்வொரு புறாவையும் வலையில் விடுவித்து கீழே போட்டான். கடைசி புறாவையும் போட்டு நிமிர்ந்து நிற்கவும், நம்ம வயதான புறா வேகமாக பறந்து வந்து வேடனின் தலையில் கொத்தியது, திடிரென்று நடந்த இந்த சம்பவத்தால் வேடன் பயந்து கண்களை மூடிக் கொண்டு, தலையின் மேல் கைகளை வீசினான்.

அவ்வளவு தான் அந்த சந்தர்ப்பத்தில் அனைத்து புறாக்களும் தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்பது போல் தப்பி பறந்தோடின.

பின்னர் அனைத்து புறாக்களும் ஆலமரத்தில் கூடி, வயதான புறாவை போற்றின, பெரியவங்க சொல்லும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் இருக்கும், அவர்கள் சொல்வதை கேட்டு நடந்தால் துன்பமே வராது என்பதை புரிந்துக் கொண்டோம், இனிமேல் உங்கள் அறிவுரைப் படியே நடப்போம் என்று உறுதி கூறின. தினமும் வயதான புறாவின் அறிவுரைகள் கேட்டு நடந்து,. ஆபத்தில்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.

சிறுவர் கதைகள் – வரும்முன் காப்போம்

தேரிக்குடியிருப்பு என்ற ஊரின் எல்லையில் இருந்த காட்டில் பெரிய குளம் இருந்தது, அதனை ஒட்டி சிறிய நீரோடை ஓடிக் கொண்டிருக்கும்.

அந்த குளத்தில் நிறைய மீன்கள், நண்டுகள், மற்றும் அனைத்து நீர்வாழ் இனங்கள் வாழ்ந்து வந்தன. அவற்றில் ராமு, சோமு, தாமு என்ற மூன்று மீன்கள் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அந்த மூவரும் எங்கே சென்றாலும் ஒன்றாகவே போவார்கள். ஒரு பயமும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வந்தார்கள்.

அவர்கள் மகிழ்ச்சியை கெடுக்கும் விதமாக ஒரு நாள் மாலையில் ஒரு இரண்டு மனிதர்கள் அங்கே வந்தார்கள், வேட்டையாடிய களைப்பு முகத்தில் தெரிந்தது, குளத்து நீரை அருந்தி விட்டு, குளத்தை நன்றாக ஆராய்ந்தார்கள், பின்னர் அவர்களில் ஒருவர் “இந்த குளத்தில் நிறைய மீன்கள் இருக்கிறதே, அதுவும் நன்றாக வளர்ந்து கொழு கொழு என்று இருக்கிறதே, நாம் வீணாக காடு மேடு என்று அலைந்து வேட்டையாட வேண்டாம், பேசாம இங்கே நாளை வந்து வலையை விரிப்போம், மாட்டிக் கொள்ளும் மீன்களை விற்று பணம் சம்பாதிக்கலாம்” என்றார். மற்றவரும் “ஆகா, அருமையான யோசனையாக இருக்கிறதே” என்றார்.

இவர்கள் பேசுவதை கேட்ட ராமு என்ற மீன் பெருங்கவலை அடைந்தது, உடனே தன் நண்பர்களான சோமு, தாமுவிடம் கூறியது. காட்டின் நடுவில் இருந்ததால் இதுவரை பெரிய ஆபத்து வந்தது இல்லை, குளத்தில் நடுவில் போய் இருந்தால் பறவைகள் கூட தங்களை ஒன்றும் செய்தது இல்லை, இன்றோ இந்த மனிதர்களால் பெரிய ஆபத்து வந்து விட்டதே என்ன செய்யலாம் என்று யோசித்தன.

ராமு எப்போவும் வரும்முன் காத்துக் கொள்ளும் மனம் படைத்த மீன், மற்ற மீன்களைப் பார்த்து, நாளை கண்டிப்பாக அவர்கள் இங்கே வருவார்கள், நாம் இன்று இரவே இக்குளத்தை விட்டு நீரோடையின் உதவியால் அருகில் இருக்கும் வேறு குளத்திற்கு போகலாம். சில காலம் போனபின்பு மீண்டும் இங்கே வரலாம் என்றது.

ராமுவின் நல்ல யோசனையை மற்ற இருவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் சும்மா சொல்லிவிட்டு போயிருப்பார்கள், அவர்களாவது நம்மை பிடிப்பதாவது, நீ வீணாக பயப்படுகிறாய் என்றன.

ராமு எவ்வளவோ சொல்லிப் பார்த்தது, ஆனால் சோமு,தாமு இருவரும் கேட்கவில்லை. ராமு அவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் இன்று இரவே அந்த குளத்தை விட்டு போவதாக சொல்லி விட்டு இரவே தப்பி வேற குளத்திற்கு போய் விட்டது.

மறு நாள் காலையில் சோமு, தாமு இருவரும் கூடி பேசினார்கள், மீன் பிடிப்பதாக சொன்னவர்களை காணவில்லை, சும்மா பேச்சு சொன்னதை நம்பி ராமு வேற குளத்திற்கு போனது முட்டாள்த்தனம் என்று கேலி செய்தன.

சிறிது நேரத்தில் வலை விரிப்பதாக சொன்ன இருவரும் பெரிய வலையை எடுத்து வந்து எங்கே வலை வீசுவது என்று பேசினார்கள். அவ்வளவு தான் அதைக் கேட்டு சோமு “அய்யோ கடவுளே!, ராமு அப்போவே சொன்னதே, இரவே தப்பியிருக்கலாமே” என்று புலம்பியது.

ஆனால் தாமு அந்த சூழ்நிலையிலும் கொஞ்சமும் பயப்படவில்லை, “ஏன் பயப்படுகிறாய், குளத்தில் எவ்வளவோ இடங்கள் இருக்கின்றன, நாம் மறைந்துக் கொள்ளலாம்” என்றது.

சோமு கொஞ்சம் கொழு கொழு மீன், அதற்கு பயம் வந்து விட்டது, அதற்குள் மீனவர்கள் வலை வீச, தாமூ ஓடி ஒளிந்துக் கொண்டது. சோமு மாட்டிக் கொண்டது, வலையில் இருந்து தன்னை விடுவிக்க படாத பாடு பட்டது, இறுதியில் சோமுவின் வால் பகுதியும் முதுகும் சேதமடைந்து, வலையில் இருந்து விடுபட்டு நீரோடையில் பாய்ந்து தப்பி விட்டது. உடல் எங்கும் ரத்தம், வரும் முன்னால் காக்காமல் வந்த போது காக்க நினைத்த தன் முட்டாள்தனத்தை நினைத்து வருந்தியது.

தாமு குளத்தின் உள்ளே இருந்த பாறையின் அடியில் ஒளிந்துக் கொண்டது, தான் வீரமாக தப்பியதை நினைத்து பெருமைப்பட்டது. அது ரொம்ப நேரம் நீடிக்கவில்லை. வந்த இருவரில் ஒருவர் நீண்ட கம்பை எடுத்து குளத்தின் அடியில் இருக்கும் பாறைகளில் செலுத்தி அசைத்தார், அவ்வாறு செய்கையில் ஒரு முறை அந்த கம்பானது தாமுவை தாக்கியது, தாமு தப்பிக்க நினைத்து அதிலிருந்து வெளியே வர, அங்கே இருந்த வலையில் மாட்டிக் கொண்டது.

சிறிது நேரத்தில் மீனவர்கள் வலையை வெளியே எடுத்து மாட்டிய அனைத்து மீன்களையும் தரையில் போட்டு கொன்றார்கள். அதில் தாமுவும் ஒரு மீன்.

வரும்முன் காப்போம் என்ற கொள்கை கொண்ட ராமு ஒரு ஆபத்தும் இல்லாமல் தப்பி, மகிழ்ச்சியாக வாழ்ந்தது, வந்த போது காப்போம் என்ற கொள்கை உடைய சோமு, உடல் எங்கும் காயப்பட்டு, மற்ற மீன்களுக்கு பயந்து பயந்து வாழ்ந்தது, வந்தப்பின்பு பார்ப்போம் என்ற கொள்கை உடைய தாமுவோ கொல்லப்பட்டு விட்டது.

குழந்தைகளே! இக்கதையானது நம் அனைவருக்கும் நல்ல பாடம். எந்த விசயத்தையும் வரும் முன்பே யோசிக்க வேண்டும், மழைக்காலம் என்றால் வெளியே செல்லும் போது கையில் குடை இருக்க வேண்டும். தேர்வு வருகிறது என்றால் ஒரு வாரத்திற்கு அனைத்துப் பாடங்களையும் படித்து முடிக்க வேண்டும். கடைசி நேரத்தில் படிக்கத் தொடங்கினால் அது பயன் அளிக்காது, எனவே நாம் எப்போவும் வரும்முன் காப்போம் என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும், பின்பற்றினால் கவலையின்றி வாழலாம்.

சிறுவர் கதைகள் – விக்கிரமாதித்தனும் இந்திரனும்

ஒரு முறை விசுவாமித்திர முனிவர் கடுமையான தவம் செய்து கொண்டிருந்தார். அவருடைய தவம் முற்றுப் பெற்றால் இந்திரனுடைய பதவிக்கே ஆபத்து வந்துவிடும். இதை இந்திரன் விரும்பவில்லை. தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பினான்.

இதற்காகத் தனது சபையில் நடன மாதர்களாக உள்ள ரம்பை, ஊர்வசி இருவரையும் வரவழைத்தான். இருவரில் ஒருவரை அனுப்பி முனிவரின் தவத்தைக் கலைத்து வருமாறு செய்ய நினைத்தான்.

இருவரில் யாரை அனுப்புவது என்று இந்திரனுக்குப் புரியவில்லை. செய்தி அறிந்த இருவரும் தாங்களே செல்வதாகப் போட்டியிட்டனர்.

“”ஒருவர் மட்டும்தான் செல்ல வேண்டும். உங்களில் யாரை அனுப்பலாமென்று நீங்களே கூறி விடுங்கள்,” என்றான் இந்திரன்.

“”நடனக் கலையில் எனக்கு ஈடு இணை எவருமே கிடையாது. எனவே, நான் தான் பூலோகத்திற்குச் செல்வேன்,” என்று ரம்பை கூறினாள்.

“”ரம்பை நடனக்கலை ஒன்றில்தான் சிறந்தவள். நான் சகல கலைகளிலும் சிறந்தவள் என்பதைத் தாங்களே அறிவீர்கள். அவ்வாறு இருக்கையில் என்னை விடத் தகுதி பெற்றவர் வேறு எவர் இருக்கக்கூடும்,” என்றாள் ஊர்வசி.

இருவருடைய பேச்சையும் கேட்ட இந்திரனுக்கு ஒன்றுமே புரியவில்லை. இருவரில் எவர் சிறந்தவர் என்று தீர்மானிக்க அவனால் முடியவில்லை.
இச்சமயத்தில் நாரதர் அவ்விடம் வந்தார். இந்திரன் அவரை வரவேற்று உபசரித்தான்.

“”இந்திரதேவா, ஏன் வருத்தமுற்று இருக்கிறாய்?” என்று கேட்டார் நாரதர்.

“”ஐயனே! விசுவாமித்திர முனிவர் கடும் தவம் இயற்றிக் கொண்டிருக்கிறார். அவரது தவத்தைக் கலைக்க எனது நடன மாதர்களில் ஒருவரை அனுப்ப நினைத்தேன். அதற்காக இவர்கள் இருவரையும் வரவழைத்தேன். ஆனால், இப்பொழுது இவர்களில் யாரைப் பூலோகத்திற்கு அனுப்புவது என்று புரியவில்லை…” என்றான் இந்திரன்.

“”இரண்டு பேரையும் உனது சபையில் நடனமாடச் செய்து சிறப்பாக எவள் நடனமாடுகிறாளோ அவளையே பூலோகத்திற்கு அனுப்பிவிடு…” என்றார் நாரத முனிவர்.

மறுநாள் இந்திர சபையில் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரின் நடன நிகழ்ச்சி நடந்தது. நடனத்தைக் காண தேவர்களும், சகல கலைகளையும் உணர்ந்த கலைவாணர்களும் சபையில் குழுமியிருந்தனர்.

நடனம் ஆரம்பம் ஆயிற்று. இருவரும் சளைக்காமல் ஆடினர்.

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவில்லை. இருவருமே சிறப்பாக நடனம் ஆடினர். ஒருவருடைய நடனத்திலும் குற்றம் குறை சொல்ல முடியவில்லை. இருவருமே சரிசமமாக ஆடினர். இருவருடைய நடனத்தில் எவருடைய நடனம் சிறந்தது என்று தீர்ப்புச் சொல்ல முடியாமல் அனைவரும் குழம்பினர்.

இச்சமயத்தில் நாரத முனிவர் எழுந்து, “”இந்திரனே, இங்குள்ள எவராலும் முடியாத காரியத்தைச் செய்யக்கூடிய ஒருவன் பூலோகத்தில் வசிக்கிறான். அவன் பெயர் விக்கிரமாதித்தன். உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை ஆண்டு சகல கலைகளையும் உணர்ந்தவன் விக்கிரமாதித்தன். சிறப்பாக நாட்டியக் கலையில் தேர்ச்சி பெற்றவன். அவனை இங்கு அழைத்து வரச் செய்தால் அவன் ரம்பை, ஊர்வசி ஆகிய இருவரில் எவர் சிறந்தவர் என்பதைக் கூறி விடுவான்,” என்றார்.

உடனே இந்திரன் தனது தேரோட்டியான மாதிரியை அழைத்து, “”மாதிரி, உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்திற்குச் சென்று உடனே விக்கிரமாதித்தனை இங்கு அழைத்து வா!” என்றான்.

மாதிரிக்கு விக்கிரமாதித்தனை இந்திரலோகத்திற்கு அழைத்துவர விருப்பமில்லை. “ஒரு மானிடன் இந்திர லோகத்திற்கு வருவதா?’ என்று நினைத்தான்.

இதை அறிந்து கொண்ட நாரதமுனிவர், “”மாதிரி, விக்கிரமாதித்தனை அவ்வளவு சாதாரணமாக நினைத்துக் கொள்ளாதே! தேவர்களுக்கெல்லாம் மேலாக விளங்கக் கூடியவன். இங்கு எழுந்துள்ள சிக்கலான பிரச்னையைத் தீர்த்து வைக்கக் கூடியவன் அவன் ஒருவனே. எனவே, தாமதம் செய்யாமல் அவனை இங்கு அழைத்து வா,” என்றார்.

மாதிரியும் அரை மனதுடன் பூலோகத்திற்குச் சென்றான். விக்கிரமாதித்தனைக் கண்டு இந்திரன் அவனை அழைத்து வருமாறு கூறினான்.

விக்கிரமாதித்தன் நேரே காளிகோயிலுக்குச் சென்றான். காளியிடம் எலுமிச்சம் பழமும் திருநீறும் ஆசியும் பெற்று இந்திரலோகம் செல்லக் கிளம்பினான். தேவலோகத்திலிருந்து வந்த விமானத்தில் ஏறுவதற்காக விக்கிரமாதித்தன் தமது வலது காலை எடுத்து வைத்தான்.

இடது கால் தரையில் இருந்தது. அச்சமயத்தில் மாதிரி, “இந்த மானிடன் இந்திரலோகத்திற்கு வருவதா?’ என்ற எண்ணத்துடன் விமானத்தைத் திடீரென்று கிளப்பினான்.

இதை அறிந்து கொண்ட விக்கிரமாதித்தன் தமது வலது காலின் பெருவிரலைத் தேர்த் தட்டில் அழுத்தமாக ஊன்றினான். மாதிரி எவ்வளவு முயற்சி செய்தும் விமானத்தை அவனால் மேலே கிளப்ப முடியவில்லை.

உடனே மாதிரி விக்கிரமாதித்தனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். பின்னர் விமானம் தேவலோகம் நோக்கிச் சென்றது.

இந்திரன் விக்கிரமாதித்தனை எதிர் கொண்டழைத்தான். தங்க ஆசனம் கொடுத்து அமரச் செய்தான். பிறகு விக்கிரமாதித்தனிடம் எல்லாச் செய்தியையும் கூறி அவனிடம் ஒரு பாரிஜாத மாலையைக் கொடுத்தான்.

“”விக்கிரமாதித்தரே! ரம்பை, ஊர்வசி இருவரில் எவர் சிறப்பாக நடனமாடுகிறாரோ அவருக்கு இந்த மாலையை அணிவியுங்கள்,” என்றான் இந்திரன்.

போட்டி ஆரம்பமாகியது. இருவரும் முன் போலவே ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆடினர். விக்கிரமாதித்தனுக்கு யாரைத் தேர்ந்தெடுப்பது என்றே புரியவில்லை.

போட்டி முடிவுற்ற பிறகு, “”தேவேந்திரா, இருவரும் தனித்தனியாக ஆடினர். எனவே, இவர்களில் எவர் சிறப்பாக ஆடினர் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நாளைய தினம் இருவரையும் சேர்ந்தாற்போல் ஆடச் செய்யுங்கள். அதைப் பார்த்தப் பிறகு என்னுடைய தீர்ப்பை வழங்குகிறேன்,” என்றான் விக்கிரமாதித்தன்.

மறுநாள் காலையில் விக்கிரமாதித்தன் நந்தவனத்திற்குச் சென்றான். அங்கு மலர்களைப் பறித்தான். அவைகளை இரண்டு பூச்செண்டுகளாகக் கட்டினான். உள்ளே நிறைய வண்டுகளைத் திணித்து வைத்துக் கட்டினான்.

இரவு நடன நிகழ்ச்சி நடக்கும் போது, தான் தயாரித்து வைத்திருந்த பூச்செண்டுகளுடன் சபைக்குச் சென்றார். நடனம் ஆரம்பமாவதற்கு முன், “”வெறுங்கையுடன் ஆடினால் அழகாக இராது. இந்தப் பூச்செண்டுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினால் அழகாக இருக்கும்,” என்று கூறிய விக்கிரமாதித்தன் இருவரிடமும் ஆளுக்கொரு பூச்செண்டைக் கொடுத்தான்.

ரம்பையும், ஊர்வசியும் விக்கிரமாதித்தன் கொடுத்த பூச்செண்டுகளுடன் ஆட ஆரம்பித்தனர். நேரம் செல்லச் செல்ல ரம்பை தன்னை மறந்தாள். கையில் பிடித்திருந்த பூச்செண்டை அழுத்திப் பிடித்தவாறு வெறியுடன் ஆடிக் கொண்டிருந்தாள். பூச்செண்டை அவள் அழுத்திப் பிடித்ததால் அதற்குள்ளிருந்த வண்டுகள் அவள் கையைப் கொட்டத் தொடங்கின. வலி தாங்காத ரம்பை ஆட்டத்தை மறந்தாள். தாறுமாறாக, ஆட ஆரம்பித்தாள். தாளம் தவறி ஆட ஆரம்பித்தாள்.

ஆனால், ஊர்வசி நிதானமாக ஆடியதால் பூச்செண்டை மென்மையாகக் கையில் பிடித்துக் கொண்டிருந்தாள். இதனால் வண்டுகள் அவளை ஒன்றும் செய்யவில்லை. தாளத்துக்குத் தக்கவாறு அவள் ஆடினாள்.

இதிலிருந்து ஊர்வசியே சிறப்பாக நடனமாடினாள் என்று தீர்ப்பு வழங்கிய விக்கிரமாதித்தன், இந்திரன் அளித்த பாரிஜாத மாலையை அவளுக்கு அணிவித்தான்.

விக்கிரமாதித்தனின் தீர்ப்பைக் கண்டு வியந்த இந்திரன் அவரைப் பாராட்டினான். தான் இந்திரப் பட்டம் ஏறிய பொழுது பரமேசுவரனால் அவனுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட தங்க சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக அளித்தான்.

அழகுமிகுந்த அந்த சிம்மாசனத்திற்கு முப்பத்தி இரண்டு படிகள் இருந்தன.
ஒவ்வொரு படியிலும் ஓர் அழகிய பதுமை இருந்தது. சிம்மாசனத்தில் ஏறுவதானால் ஒவ்வொரு பதுமையின் தலைமீது கால்வைத்துத் தான் ஏறவேண்டும்.

இந்த சிம்மாசனத்தை விக்கிரமாதித்தனுக்குப் பரிசாக அளித்த இந்திரன், “”இந்த சிம்மாசனத்தில் இருந்தவாறே ஆயிரம் ஆண்டுகாலம் சிறப்பாக ஆட்சி செய்து வருவாயாக,” என்று வரமும் அளித்தான்.

ரத்தின மயமான அந்த சிம்மாசனத்துடன் விக்கிரமாதித்தன் உஜ்ஜயினி மாகாளிப்பட்டணத்தை அடைந்தான்.

ஈசாப் நீதிக் கதைகள் – கெட்டிக்காரன் புளுகு

ஒரு நாள் காலையில் ஒரு மரத்தின் மீது சேவல் உட்கார்ந்து இருந்தது. காலை நேரம் ரம்மியமாக இருந்தபடியால் உற்சாகமாய் சேவல் கூவியது. பலதடவை கூவியது.

இதைக் கேட்ட நரி அங்கே வந்தது. நரிக்கு சரியான பசி இருந்தது. அந்த சேவலை பிடித்து சாப்பிட ஆசைப்பட்டது, ஆனால் சேவல் மரத்தின் மீது இருந்தபடியால் அதைப் பிடிக்க முடியவில்லை. இதற்காக ஒரு தந்திரம் செய்ய நினைத்தது. உடனே சேவலைப்பார்த்து,

“சகோதரனே!, வணக்கம். ஒரு நல்ல செய்தியை நீ கேள்விபட்டாயா? பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது. இனி ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. அன்பாய் நடந்துக் கொள்ள வேண்டும், சகோதர மனப்பான்மையை வளர்க்க வேண்டும். நீ கொஞ்சம் கீழே வாயேன். இந்த நல்ல செய்தியைப் பற்றி பேசுவோம்” என்றது
.
நரியின் தந்திரப் பேச்சைச் சேவல் புரிந்து கொண்டது. அதை வெளியே காட்டவில்லை. தூரத்தில் எதையோ பார்ப்பதைப் போல் தலையைத் தூக்கிப் பார்த்தது.

இதைக் கண்ட நரி, என்ன சகோதரா!, ரொம்ப அக்கறையாக எதையோ அடிக்கடி பார்க்கிறாயே. அங்கே என்ன இருக்கிறது? என்று கேட்டது.

அதற்கு சேவல்,

அங்கே சில வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள் தானா என்பதைக் கவனிக்கிறேன்

அவ்வளவு தான் நரிக்கு உடல் நடுங்கி விட்டது, வேகவேகமாக “சரி, சரி நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன்” என்று கூறி கிளம்பியது.

சேவல், “அருமை சகோதரா, போகாதே, நான் இதோ கீழே வருகிறேன். நாய்களைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்? இப்பொழுது தானே நீ சொன்னாய், எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது”

நரி “அந்த ஒப்பந்தைத்தைப் பற்றி அநேக பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள், அந்த நாய்களுக்கு தெரியாமல் இருந்தால், நான் என்ன கதி ஆவது? நான் போகிறேன்”.

இதை சொல்லி விட்டு நரி ஒரே ஓட்டமாக ஓடி காட்டுக்குள் மறைந்தது.

சேவல் “யாரிடம் ஏமாற்றப் பார்க்கிறாய், உன்னுடைய கெட்டிக்கார பொய்கள் என்னிடம் பலிக்காது” என்று கூறி சிரித்தது.

கெட்டிக்காரன் புளுகினாலும் அது புத்திச்சாலியிடம் வெளிபட்டு விடும்.

சிறுவர் கதைகள் – கூடல் குமரனும், கொடிய வேதாளமும்

கூடல் மாநகரத்தில் குமரன் என்ற இளைஞர் இருந்தார், அவரது பெற்றோருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை, அவரது தாயார் தினமும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு என்று தனக்கு ஒரு குழந்தை வரம் கொடுக்குமாறு வேண்டிக் கொள்வார். இவ்வாறாக நீண்ட நாட்களாக வேண்டியும் அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை, ஒரு நாள் அவரது தாயார் அம்மனை வேண்டியும் குழந்தை கிடைக்கவில்லையே என்ற வெறுப்பில் வேண்டிக் கொண்டிருக்கும் போது “தாயே! குட்டையோ, நெட்டையோ எனக்கு ஒரு குழந்தையை கொடு தாயே!, எங்களுக்கும் வயதாகி வருகிறது, கருணை காட்டு தாயே!” வேண்ட, அதுவரை அமைதியாக இருந்த அம்மன், அப்படியே ஆகட்டும் என்று வரம் கொடுத்து விட்டார்.

அடுத்த ஆண்டே அழகான ஆண் குழந்தை பிறந்தது, அக்குழந்தைக்கு அவர்கள் குமரன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். குமரன் மற்ற குழந்தைகளை விட உயரம் ரொம்ப கம்மியாக இருந்தார், இருந்தாலும் பெற்றோர் அன்பும், பண்பும் காட்டி வளர்த்தார்கள். குமரன் படிப்பிலும், விளையாட்டிலும், குறும்புத்தனத்திலும் சிறந்து விளங்கினார், எல்லோரும் உலகமகா சேட்டைக்காரன் என்று அழைக்கும் அளவுக்கு பெயர் எடுத்தார்.

கூடல் மாநகரத்தில் ஆட்சி செய்து வந்த மன்னரும் ரொம்பவும் நல்லவர், மக்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த போது ஒரு நாள் வெளிதேசத்திலிருந்து பறந்து வந்தது ஒரு வேதாளம்.

வேதாளம் என்றால் அது டிராகன் மாதிரியே இருந்தது, 50 யானைகளை கொண்டு செய்த மாதிரியான உடம்பு, பறக்க இறக்கைகள், நீண்ட வால், கால் நகங்கள் பெரியதாக, பெரிய யானை தூக்கிச் செல்லும் அளவுக்கு பலம் படைத்ததாக இருந்தது. வாயைத் திறந்தால் நெருப்பை கக்கும் தன்மை கொண்டதாக இருந்தது.

அவ்வாறு வந்த வேதாளமானது முதலில் கூடல் மாநகரத்தை ஒட்டிய கிராமங்களின் வயல்வெளிகளையும், தோப்புகளையும் தன் நெருப்பால் பொசுக்கியது, மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகளை மொத்தம் மொத்தமாக தூக்கி சாப்பிட்டது.

மொத்த மாநகரமே நடுங்கியது, பாதிக்கப்பட்ட மக்கள் அரசரை கண்டு கதறி அழுதார்கள், தங்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்கள். எதற்கும் அஞ்சாத அரசர், உடனே தன்னுடைய சேனாதிபதியை அழைத்து, உடனே ஆயிரம் வீரர்களை தயார் செய்து, அந்த வேதாளத்தை அழித்துவிட்டு வரச் சொன்னார். ஆயிரம் பேரும் மலையடிவாரத்தில் தங்கியிருந்த வேதாளத்தை கொன்று போட செல்லும் வழியிலேயே வேதாளத்தால் தாக்கப்பட்டு மலையின் மேல் சிறைவைக்கப்பட்டார்கள். மன்னரும் பெருங்கவலை அடைந்தார்.

உடனே மன்னர் உத்தரவின் படி ஊர் எங்கும் தண்டோரா போட்டு செய்தி சொல்லப்பட்டது, அதாவது “யார் அந்த கொடிய வேதாளத்தை உயிரோடோ அல்லது பிணமாகவோ கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு இராஜ்யத்தில் பாதியையும், தன் ஒரே மகளான இளவரசியையும் திருமணம் செய்து கொடுப்பதாக சொன்னார்”.

இச்செய்தியை கேட்டதும் வீரத்தீரம் மிக்க இளைஞர் பட்டாளம் கிளம்பியது, ஆனால் அதற்கு முன்பே கொடிய வேதாளம் அரசரின் அரண்மனைக்கு மேல் பறந்து வந்து அமர்ந்தது, உடனே ஊரே பயந்து நடுங்கியது, அரசரும் அசராமல் வெளியே வந்து அந்த கொடிய வேதாளத்த்துடன் மோத வந்தார்.

அப்போ அந்த வேதாளம் அனைவரையும் பார்த்து ஒரு பாட்டு பாடியது,

“வந்தேண்டா வேதாளம்
வரவேற்க தைரியமுண்டா
என்னை வெல்ல வழியுண்டு
வெல்லுவதும் எளிதில்லை
ஆயிரம் வாட்கள் கொண்டவனே
என்னை வெல்ல முடியும்,
இல்லாத பாலமேறி
என்னருகே வரமுடியும்
செய்யாத கோப்பையிலே
கொடுக்க வேண்டும் அமுதமே
அவ்வாறு செய்தால்
நானாவேன் உன் நண்பனாய்”

என்று உரக்கப்பாடி விட்டு பறந்து விட்டது.

வேதாளம் பாடிய பாட்டை அர்த்தம் தெரிந்துக் கொள்ள அனைவரும் முயன்றார்கள். அரசவை புலவர்களும் பலவகை அர்த்தங்கள் சொல்லி அரசருக்கு தலைவலியே வந்து விட்டது, ஆயிரம் வாட்களை ஒருவனால் எப்படி தூக்கிக் கொண்டு அத்தனை பெரிய வேதாளத்தை வெல்ல முடியும். இல்லாத பாலமேறுவதும், செய்யாத கோப்பை, அதிலும் அமுதம், ஒன்றுமே புரியாமல் விழித்தார்கள்.

நாடும், இளவரசியும் கிடைப்பார் என்ற குருட்டு தைரியத்தில் வேதாளம் தங்கியிருந்த மலையடிவாரத்தை நோக்கி சென்ற இளைஞர் பட்டாளம் வேதாளத்துடன் மோதி தோற்று அங்கே அடிமையாகி கிடந்தார்கள்.

அரசருக்கோ இனியும் வேதாளத்தை வெல்ல யாரும் வரமாட்டார்கள், இனிமேல் தானே முயற்சி செய்யவேண்டியது தான் என்ற நிலைக்கு வந்த போது, அரண்மனைக்கு நல்ல குட்டி குமரன் சென்றார்.

அரசரை பார்த்து “அரசே! நான் அந்த கொடிய வேதாளத்தை கொல்லப் போகிறேன், அதற்கு முன்பு எனக்கு உங்க ஆசிர்வாதம் தேவை” என்றார்.

அத்தனை வேதனையிலும் அவையில் இருந்தவர்கள் அனைவரும் சிரித்தார்கள், அவர்கள் குமரனின் சிறிய உருவத்தை பார்த்து கேலியாக சிரித்தார்கள், ஆனால் அரசரும் இளவரசியும் சிரிக்கவில்லை.

குமரனின் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் பார்த்து வியந்தார்கள், இத்தகைய தன்மை கொண்டவர்களால் தான் செய்யக்கரிய செயல்களை செய்ய முடியும் என்று நம்பினார்கள். அரசரும் தன் ஆசனத்தை விட்டு கீழே இறங்கி வந்து குமரனை கட்டிப்பிடித்து தன்னுடைய வாளை குமரனிடம் கொடுத்தார். இளவரசியும் ஏதாவது கொடுக்க நினைத்து திடிரென்று தன்னுடைய தலைமுடியில் ஒன்றை பிடுங்கி கொடுத்தார், குமரன் வாளையும் இளவரசி அன்பாக கொடுத்த தலைமுடியையும் பத்திரமாக வைத்துக் கொண்டார்.

தைரியமாக வீட்டுக்கு சென்று அன்னையிடமும் அப்பாவிடமும் ஆசிர்வாதம் வாங்கினார், பெற்றோரும் தங்கள் பிள்ளையால் கண்டிப்பாக சாதிக்கமுடியும் என்று நம்பிக்கை ஆசிர்வாதம் செய்து அனுப்பி வைத்தார்கள்.

குமரன் தன்னுடைய குட்டிக்குதிரையில் ஏறி மலையடிவாரம் போகத் தொடங்கினார், போகிற வழியில் ஒரு மரத்தடியில் தங்கி இளைப்பாரலாம் என்று நினைத்து குதிரையை அங்கே நிறுத்தினார்.

அங்கே ஒரு பெரிய தேன்கூடு தரையில் கிடந்தது, தேனீக்கள் எல்லாம் அங்கே இங்கே என்று பறந்துக் கொண்டிருந்தது, அதைக் கண்டு இரக்கப்பட்ட குமரன், அந்த தேன்கூட்டை கையில் எடுத்து மரத்தின் மேல் வைத்தார், உடனே தேன் கூட்டிலிருந்து வெளியே வந்த இராணித்தேனி குமரனிடம் பேசியது “இரக்கக்குணம் படைத்த இளைஞரே! நாங்கள் நீண்ட நாட்களாக இங்கே தரையில் தான் கிடைக்கிறோம், ஆனாலும் யாருமே எங்களை மரத்தின் மேல் வைக்க நினைக்கவில்லை, அதற்கு பதில் துன்புறுத்தவே செய்தார்கள், பல வீரர்கள் எங்களைத் தாண்டி சென்று தான் வேதாளத்திடம் சரணடைந்து விட்டார்கள். ஆனால் நீங்களோ அவ்வாறாக இல்லை, எனவே உங்களுக்கு உதவ நாங்களும் தயார், எனவே எங்களை உங்களுடனே கொண்டு செல்லுங்க” என்றது.

குமரனும் மகிழ்ச்சியோடு தேன் கூட்டை தன் பையில் வைத்துக் கொண்டார். குமரன் வருவதை அறிந்த வேதாளம் குமரனின் உருவத்தை கண்டு கேலியாக சிரித்தது, என் கால் நகம் உயரம் கூட நீ இல்லை, எப்படி என்னை வெல்வாய் என்று கூறியது. குமரனும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது, அம்மனின் அருளும் இருக்கிறது, என்று கூறி சண்டைக்கு போனார். அப்போ ராணீத்தேனி “குமரன், ஆயிரம் வாட்கள் கொண்டு வெல்ல வேண்டும் என்றால் என்னிடம் இருக்கும் ஆயிரம் வீரத்தேனிகளை கொடுக்கிறேன், அவை உங்க வாள் மீது அமர்ந்துக் கொள்வார்கள், நீங்க வாளை தூக்கி வேதாளத்தின் முகத்தை பார்த்து வீசுங்க, மீதியை என் வீரர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றது.

குமரனும் தன் வாளை உயர்த்த, தேன் கூட்டிலிருந்து ஆயிரம் தேனீக்கள் வாளை சுற்றி அமர்ந்தது, உடனே குமரனும் தன் வாளை தூக்கி வேதாளத்தை நோக்கி வீசினார், உடனே ஆயிரம் தேனீக்களும் அந்த வாளை தூக்கிக் கொண்டு வேதாளத்தின் முகத்தை நோக்கி கொண்டு சென்று, அவை அனைத்தும் தனித்தனியாக பிரிந்து வேதாளத்தின் கண்களை குறிவைத்து கொட்டியது, ஆயிரம் தேனீக்கள் கொட்டியதால் கண் பார்வை தெரியாமல், கண்கள் வீங்கி, வலியில் வேதாளம் துடிதுடித்தது.

இனியும் குமரனும் மோதுவது சரியில்லை என்று பயந்த வேதாளம் தன் இருப்பிடத்தை நோக்கி பறந்து சென்று விட்டது. வேதாளத்தை கொட்டிய ஆயிரம் தேனிக்களும் வீரமரணம் அடைந்தது, அது குமரனுக்கு கஷ்டமாக இருந்தது, கண்களில் கண்ணீர் வந்துவிட்டது, உடனே ராணித்தேனி “குமரன், தேனீக்கள் வாழ்க்கையில் தினம் தினம் எங்களுக்கு வீரமரணம் உண்டு, கவலைப்பட வேண்டாம், அடுத்த காரியத்தை பற்றி சிந்திப்போம்” என்றது.

வேதாளம் இருந்த மலை உச்சிக்கும், குமரன் இருந்த இடத்திற்கும் இடையே பெரிய பாதாளம் இருந்தது, அதை எப்படி தாண்டுவது என்று தெரியாமல் குமரன் விழிக்க, ராணித்தேனீ “நண்பரே! உங்களிடம் நூல், கயிறு போன்று ஏதாவது இருக்கிறதா என்று கேட்டது”, உடனே குமரனுக்கு இளவரசி கொடுத்த தலைமுடி நினைவுக்கு வந்து, அதை எடுத்து ராணித்தேனியிடம் கொடுத்தார்.

ராணித்தேனீ தன் தளபதி தேனியை அழைத்து, இந்த தலைமுடியை மலை உச்சியில் கட்டி வருமாறு சொல்லி, மறுமுனையை குமரனை பிடிக்கச் சொன்னது, என்ன ஆச்சரியம், தளபதி தேனீ பறக்க பறக்க இளவரசியின் தலைமுடியானது நீண்டுக் கொண்டே சென்றது, இறுதியில் மலை உச்சியில் முடிச்சி போட்டு வர, குமரன் மறுமுனையை தன் குதிரையின் மீது கட்டி, பின்னர் அந்த தலைமுடியை பிடித்து தொங்கிக் கொண்டு, மலை உச்சியை அடைந்தார்.

ஒருவழியாக மலை உச்சியில் வேதாளம் இருந்த இடத்தை தேடி போன போது, வேதாளத்தின் கண்கள் எல்லாம் வீங்கி, கடுமையான வலிகள் துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த குமரனுக்கு கோபத்திற்கு பதில் வேதாளத்தின் மேல் இரக்கம் தோன்றியது. பாவம் வேதாளம் கெட்டக் குணம் என்றாலும் வலியால் துடிப்பதை பார்க்க மனசு இல்லாமல் எப்படி உதவுவது என்று யோசித்தார்.

உடனே ராணித்தேனீ, வேதாளத்தின் வலி நீங்கி மீண்டும் கண் பார்வை வர ஒரே ஒரு வழியுண்டு, நாங்க சேமித்து வைத்திருக்கும் தேனை குடித்தால் கண்பார்வை வரும்” என்றது.

உடனே குமரன் தேனை பிடித்து கொடுக்க பாத்திரம் போல் ஒன்றும் இல்லையே என்று யோசித்தார், தூரத்தில் வேதாளம் சாப்பிட்டு போட்ட பெரிய யானையின் மண்டையோடு கிடந்தது, அதை எடுத்து வந்து ராணித்தேனி கொடுத்த தேனை பிடித்து, வேதாளத்தின் மீது ஏறி, அதன் வாயில் தேனை ஊற்றினார்.

உடனே வேதாளத்தின் வலி நீங்கி கண் பார்வை வந்தது, நெருப்பாக இருந்த அதன் கண்கள் கருணை கொண்டதாக மாறியது.

குமரனை நோக்கி “அய்யா! நீங்க நம்பிக்கையுள்ள மாவீரர் மட்டுமல்லாது மிக்க இரக்கம் கொண்டவர், இனிமேல் நான் உங்கள் அடிமை. தேவலோகத்தை சேர்ந்த நான் முன்பு ஒரு காலத்தில் தவம் செய்த முனிவரை தொந்தரவு செய்ததால் சாபமிட்டு விட்டார், அதன் பரிகாரமாக உங்கள் வீரச்செயலாலும் அன்பாலும் என் சாபம் நீங்கும் என்றார். இன்று எனக்கு சாபவிமோசனம் கிடைத்து விட்டது, உங்களுக்கு நான் உதவப் போகிறேன்” என்று கூறியது.

கொஞ்ச நேரத்தில் அழகிய தேவதூதனாக மாறியது வேதாளம், அதே நேரம் குமரனும் அழகிய தோற்றத்துடன் ஆறடி உயரம் கொண்ட மாவீரராக மாறிவிட்டார். தேவதூதன் நிறைய பொக்கிஷங்களையும், தன்னால் உயிழந்த அனைத்து உயிர்களையும், ஆயிரம் தேனிக்களையும், சிறைபிடித்த வீரர்களையும் திருப்பி கொடுத்தார். உதவி தேவைப்படும் போது வந்து உதவுவதாக உறுதி கூறி விடைபெற்றார்.

குமரன் அனைவரோடு வெற்றிமகனாக கூடல் நகரம் திரும்பினார், ஊரே விழாக்கோலம் பூண்டது. அரசரும் இளவரசியும் குமரனை வரவேற்க நகரின் எல்லைக்கே வந்தார்கள். குமரனின் புதிய தோற்றத்தை கண்டு அவரது பெற்றோரும் மகிழ்ந்தார்கள், மக்கள் அனைவரும் வாழ்த்தி வரவேற்றார்கள்.

குமரனுக்கும் இளவரசிக்கும் திருமணம் ஆகி ஒரு குட்டி இளவரசியும் பிறந்தார், அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.

மரியாதை இராமன் கதைகள் – நேர்மை கொண்ட உள்ளம்
மரியாதை இராமன் கதைகள் – நேர்மை கொண்ட உள்ளம்

மரியாதை ராமன் தெனாலி ராமன் போல் விகடகவி அல்ல, அவர் மிகவும் புத்திசாலி, இளம் வயதிலேயே பெரியவங்களுக்கு புலப்படாத நுணுக்கமான விசயங்களையும் எளிதில் விடுவிப்பார்.

மரியாதை ராமனின் தீர்ப்புகள் அனைத்தும் புகழ்பெற்ற கதைகளாக மக்களிடம் பேசப்பட்டு வருகிறது, அதில் ஒன்று இதோ.

மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர் பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார்.

ஒரு முறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கும் வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.

வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப்பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார். அப்போ அவரது மனைவியார் “உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க” என்றார்.

ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊர் மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து
அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இருந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.

அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்யமுடியவில்லை, வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து, சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப்பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார்.

அப்படி காட்டுவழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கிடந்தது, அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்று தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிழையில் வைத்துவிட்டு வந்தார். அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை. அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டு விட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.

அப்போ ஊருக்குள் சென்ற போது அங்கே இருந்த கடையில் விசாரித்த போது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி, அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.

உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார், சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்த பணப்பையை வாங்கிக் கொண்டார், அதே நேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்து விட்டது, பணமும் சரியாக இருக்குது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும், சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.

கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து “நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை, மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்” என்று கத்தினான்.

பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே, இவரிடம் சன்மானம் வாங்குவதை விட பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.

சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார், பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல் நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சனையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.

சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர் மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும், பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.

ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும், அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான்.

ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துக் கொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் “சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போ பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது, ஆக இது சோமனின் பையே இல்லை, வேற யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லல, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊர் வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன் கோயில் செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக் கொள்ளலாம், ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்து வைத்துக் கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்”.

மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது. பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவிதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.

முல்லாவின் கதைகள் – குழப்பவாதிகள்

முல்லா நஸ்ருதீன் மன்னருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார், அது அரசுசவையில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை.

ஒருமுறை முல்லா ஒரு நண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பேச்சுவாக்கில் நாட்டில் உள்ள அறிஞர்கள் எல்லாம் குழப்பவாதிகள், எதையுமே உறுதியாக, தீர்மானமாகக் கூற இயலாதவர்கள் என்று சொன்னார்.

அதை அறிந்த முல்லாவின் எதிரிகள் மன்னரிடம் போய் “மன்னர் நீங்க அறிஞர்களை வைத்திருப்பதற்கு பதிலாக குழப்பவாதிகளை வைத்திருப்பதாகவும், சரியான முடிவு எடுக்கத் தெரியாமல் இருக்கும் அறிஞர்கள் பேச்சு கேட்பதாகவும் முல்லா சொல்லிக் கொண்டு திரிக்கிறார் என்று அரசரிடம் முல்லாவைப் பிடிக்காதவர்கள் கூறித் தூண்டி விட்டார்கள்.

உண்மை நிலையை அறிய விரும்பிய அரசர், முல்லாவை சபைக்கு வரவழைத்தார்.

அத்துடன், தத்துவ மேதைகள், மார்க்க ஞானிகள், சட்ட நிபுணர்கள், அறிவுசால் அமைச்சர்கள் அனைவரையுமே கூட்டினார். பிறகு முல்லாவை நோக்கி, ” இவர்கள் எலலாம் குழப்பவாதிகள் என்று கூறினீர்களாமே?…ஏன் அப்படிக் கூறினீர்கள் ? இவர்கள் குழப்பவாதிகள் என்று உம்மால் நிரூபிக்க முடியுமா?” என்று கேட்டார்.

இது என்னடா வம்பா போச்சு, சும்மா வாய் பேச்சுக்கு சொன்னதை வைத்து என்னை மாட்டி விடப் பார்க்கிறீங்களா, அப்போ நீங்க குழப்பவாதிகள் தான், அதை நிறுபித்தால் ஆச்சுது என்று நினைத்து “அரசே என்னால் நிறுபிக்க முடியும்” என்று கூறிய முல்லா, அனைவரிடமும் ஆளுக்கொரு தாளைக் கொடுத்தார்.

பின்னர் அவர்களிடம், ” அறிஞர் பெருமக்களே…நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்கப் போகிறேன். அதற்குரிய பதிலை, இந்தத் தாளில் நீங்கள் எழுதிக் கொடுக்கவேண்டும்” என்றார்.

பின்னர், அவர்களிடம் ஒரு தாளை கொடுத்தார், அதில் , ” ரொட்டி என்றால் என்ன? ” என்று கேட்டார்.

அனைவரும் பதிலைத் தாளில் எழுதி அரசரிடம் கொடுத்தார்கள். அரசர் படிக்க ஆரம்பித்தார்.

ஒருவர்- ரொட்டி என்பது சத்துள்ள பண்டம் என்று எழுதியிருந்தார்.

இரண்டாமவர் – ரொட்டி என்பது ஒரு உணவு என்று குறிப்பிட்டிருந்தார்.

மூன்றாமவர் – இறைவன் கொடுத்த கொடையே ரொட்டி.

நான்காமவர் – ரொட்டி என்பது வேகவைத்த மாவுப் பொருள்.

ஐந்தமவர் – ரொட்டி என்பது மாவும் நீரும் கலந்த கலப்பு.

ஆறாமவர் – அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப சுவையும் வடிவும் பெறுவது ரொட்டி

ஏழாமவர் – ரொட்டி என்பதற்கு சரியான பொருள் யாருக்குமே தெரியாது……என்று குறிப்பிட்டு எழுதியிருந்ததை அரசர் படித்தார்.

எல்லா பதில்களையும் அரசர் படித்து முடிக்கும்வரை பொறுமையுடம் காத்திருந்த முல்லா, ” அரசே ! …ரொட்டி என்பது என்ன? என்ற எனது சாதாரன கேள்விக்கு, இவர்கள் அனைவரும் பலவிதமான பதில்களைக் கொடுத்துள்ளார்கள்.

யாருடைய பதிலும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகவில்லை பார்த்தீர்களா?

இதனால்தான் நம் நாட்டில் உள்ள அறிஞர்கள் குழப்பவாதிகள் என்றேன்” என்றார்.

அரசர் முல்லாவில் அறிவாற்றலை வியந்து அவர்மீது இருந்த குற்றச் சாட்டினைத் தள்ளுபடி செய்தார். அரசவையில் கூடியிருந்த அனைவரும் முல்லாவின் திறமையை பாராட்டினார்கள்.

சிறுவர் கதைகள் – நேர்மையான பிச்சைக்காரர்

ஒரு மனிதன் தனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை எப்படி பயன்படுத்துகிறான் என்று அறிய ஒரு மன்னனுக்கு ஆவல் ஏற்பட்டது. அதை சோதிக்க நினைத்து ஒரு நாள் இரண்டு ரொட்டித் துண்டுகளை வரவழைத்து, விலையுயர்ந்த வைரக் கற்களை ஒன்றினுள் பதுக்கி வைத்தான்.

பிறகு இரண்டு ரொட்டித் துண்டுகளையும் பணியாளன் ஒருவனிடம் கொடுத்து, “”கவனமாகக் கேள், தகுதியுள்ள கண்ணியமான மனிதன் ஒருவனுக்கு இந்த கனமான ரொட்டியைக் கொடு. மற்றொரு சாதாரண ரொட்டியை ஒரு சாதாரணப் பிச்சைக்காரனுக்குக் கொடு,” என்று சொன்னான்.

நீண்ட மேலங்கி அணிந்து அடர்ந்த தாடியுடன் சாமியாரைப் போல் தோற்றமளித்த ஒரு நபருக்கு அந்தப் பணியாளன் வைரக் கற்கள் நிரம்பிய கனமான ரொட்டியை அளித்தான். பிறகு மற்றொன்றை ஒரு பிச்சைக்காரனுக்கு அளித்தான்.

இவற்றையெல்லாம் மன்னன் தன் அரண்மனை மேல் மாடத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான். சாமியார் போன்ற தோற்றமளித்த நபர் தனக்குக் கிடைத்த ரொட்டியை உற்றுப் பார்த்தான்.

இது சரியாக பக்குவப்படுத்தப்படாததால் கொஞ்சம் கனமாக உள்ளது என்று எண்ணி தன் அருகில் வந்து கொண்டிருந்த பிச்சைக்காரனை அழைத்து, “”நண்பா, எனக்குக் கிடைத்த ரொட்டி கனமாக உள்ளது. எனக்கு அவ்வளவு பசியில்லை. ஆகையால் இதை நீ எடுத்துக் கொண்டு உன்னுடையதை எனக்குக் கொடு,” என்றான்.

உடனே இருவரும் தங்களுடைய ரொட்டிகளை மாற்றிக் கொண்டனர்.

இதைக் கண்ட மன்னன், “”ஆஹா! என்ன கடவுளின் உள்ளம்! ஒரு தவயோகிக்கு செல்வம் தேவை இல்லையாதலால் வைரக் கற்கள் உடைய ரொட்டி அவரிடம் தங்காமல் அந்த ஏழையிடம் சென்று விட்டது’ என்று நினைத்தான்.

உடனே அந்த சாமியாரையும், பிச்சைக்காரனையும் பின் தொடருமாறு தன் வேலையாட்களுக்கு உத்தரவிட்டான்.

அன்று மாலையே அவ்விருவரைப் பற்றிய தகவல்களும் மன்னனுக்குக் கிடைத்தன. சாமியார் போல் தோற்றமளித்தவர் தன் வீட்டுக்குச் சென்று பொய்த் தாடியையும், மேலங்கியையும் எடுத்துவிட்டு, ஆசைதீர ரொட்டியை உண்டு விட்டு, பிறகு பழையபடி தாடியை ஒட்ட வைத்துக் கொண்டு சாமியார் வேடத்தில் பிச்சை எடுக்க கிளம்பி விட்டதாக அறிந்தான்.

தன் வீட்டிற்குச் சென்ற பிச்சைக்காரன், தன் மனைவியுடன் ரொட்டியை உண்ணத் தொடங்கியதும் அதற்குள் இருந்த வைரக் கற்களைக் கண்டான்.

மகிழ்ச்சியில் துள்ளிய அவன் மனைவி அவற்றை தாங்களே எடுத்துக் கொள்ள விரும்பிய போது, அந்தப் பிச்சைக்காரன், “”இந்த வைரக் கற்களைக் கொண்டு கடவுள் என் மனசாட்சியை சோதிக்க விரும்புகிறார்.

இந்த ரொட்டியை அளித்த அரசுப் பணியாளரிடம் இதைப் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வைரக் கற்கள் உள்ளிருப்பது அவருக்குத் தெரியாது என்றால், அவருடைய பொருளை அவரிடமே சேர்க்க வேண்டும். ஆனால், தெரிந்தே இவ்வாறு கொடுத்தார் என்றால், இவை அந்தச் சாமியாரைச் சேர வேண்டும். அதுதான் நியாயம்,” என்று கூறினான்.

அந்தப் பிச்சைக்காரனின் நேர்மையையும், உயர்ந்த உள்ளத்தையும் அறிந்த மன்னன், அவனை அரண்மனைக்கு அழைத்து அந்த வைரக் கற்களை அவனுக்கே கொடுத்து மேலும் பல பரிசுகளும் வழங்கினான்.

கடவுளின் அருளால் வைரக் கற்கள் ஒரு போலிச் சாமியாரிடம் சிக்காமல், நேர்மையான ஒரு பிச்சைக்காரனை அடைந்ததை எண்ணி மகிழ்ந்தான் மன்னன். பிச்சைக்காரரும் அதை விற்று கிடைத்த பணத்தில் வியாபாரம் செய்து சந்தோசமாக வாழ்ந்தார்.

சிறுவர் கதைகள் – நாவடக்கம் இல்லாத அரசன்

சேர நாட்டின் மேற்குக் கரையோரமுள்ள நெய்தல் நாட்டின் மன்னன் மூவன். அந்நெய்தலின் உட்பகுதி நல்ல வளமான வயல்களை உடைய செழிப்புமிக்க நாடு.

இந்த அரசன் திறமையானவன், நற்குணங்கள் பல உடையவன். ஆனால், நாவடக்கம் இல்லாதவன். யாரையும் எடுத்தெறிந்து பேசிவிடுவான். தான் பேசிய பேச்சிற்கு வருத்தமும் தெரிவிக்கமாட்டான். அமைச்சர்களும் கூட இவனிடம் தங்கள் கருத்துக்களைச் சொல்ல அஞ்சினர்.

ஒரு சமயம் பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் மூவனைப் பாடிப் பரிசு பெற்றுச் செல்ல வந்தார். இப்புலவர் குமணவள்ளலைப் பாடிப் பரிசுகள் பல பெற்றவர். அப்பரிசுகளை எல்லாம் ஏழைகளுக்கு கொடுத்ததால் மறுபடியும் ஏழ்மை நிலையை அடைந்தார்.

புலவர் பல நாட்கள் காத்துக்கிடந்த பின் ஒரு நாள் மூவனை அரசவையில் சந்தித்து பாடல் ஒன்றைப் பாடினார்.

“அரசே, நான் ஒரு புலவன். என் பெயர் பெருந்தலைச் சாத்தனார்.”

“உமது பெயருக்கும் உருவத்திற்கும் சிறிதும் பொருத்தம் இல்லையே!”

“ஏன் மன்னா அப்படிக் கூறுகிறீர்கள்?”

“பெருந்தலைச் சாத்தனார் என்கிறீர்கள். உமது தலை பெரியதாக இல்லையே… சிறியதாகத்தானே இருக்கிறது.”

“மன்னிக்க வேண்டும் மன்னா. பெருந்தலை என்பது எனது ஊரின் பெயர்!”

“ஓ, அப்படியா செய்தி!”

“நான் குமணவள்ளலைப் பாடிப் பல பரிசுகள் பெற்றவன்!”

“இப்போதும் அவனிடமே செல்ல வேண்டியதுதானே. உன் போன்ற புலவர்களுக்குக் கொடுத்துக் கொடுத்து அவன் போண்டியாகி இருப்பான்!”

“அரசே, பழம் பழுத்த மரங்களை நாடித்தானே பறவைகள் செல்லும். அதைப் போல மன்னர்களையும், வள்ளல்களையும் நாடி பாவலர்களாகிய நாங்கள் வருகிறோம்.”

“நீங்கள் பொய்யாக எதையும் புனைந்து பாடுவீர்கள். இல்லாததை இருப்பதாகக் கூறுவீர்கள். அதைக் கேட்டு சிலர் மகிழ்ந்துபோய் உங்களுக்குப் பரிசு கொடுக்கிறார்கள். அவர்கள் தற்புகழ்ச்சியை விரும்புபவர்கள். நீங்கள் பொய் சொல்லியே பிழைக்கும் ஒரு வஞ்சகக் கூட்டம்… யாரங்கே, இந்தப் புலவரை வெளியே அனுப்பு.”

“இல்லை, நானே சென்றுவிடுகிறேன்.”

புலவர் அவமானத்தால் முகம் சோர்ந்து சென்றதைக் கண்ட மூவன் சிரிசிரி என்று சிரித்தான்.

மூவன், சேரன் கணைக்கால் இரும்பொறைக்குக் கட்டுப்பட்ட ஒரு குறுநில மன்னன். மூன்று ஆண்டுகளாகவே மூவன் கப்பம் கட்டாததை அறிந்தான் இரும்பொறை.

“என்ன சொல்கிறான் மூவன் என்று அறிந்துவா!” எனத் துõதுவனை
அனுப்பினான்.

மூவன் அவைக்கு வந்த தூதுவன், மூவனை மரபுப்படி வணங்கி, “”மன்னன் கணைக்கால் இரும்பொறையின் துõதுவன் நான்,” என்றான்.

“கணைக்காலனுக்குக் கருவூலத்தில் பணத்தட்டுப்பாடு வந்ததும் என் நினைவு வந்துவிட்டதாக்கும்… இங்கே என்ன கொட்டியா கிடக்கிறது?”

“மன்னா, நான் உங்களிடம் யாசகம் ஒன்றும் கேட்க வரவில்லை. எங்கள் மன்னருக்கு மூன்று ஆண்டுகளாக நீங்கள் கட்ட வேண்டிய திறையைச் செலுத்தவில்லை.”

“தூதுவனே! நன்றாகக் கேட்டுக் கொள். எனது நெய்தல் நாடு இன்றிலிருந்து சுதந்திர பூமி. நாங்கள் இனி யாருக்கும் கப்பம் கட்டமாட்டோம்.”

“எமது அரசரின் பெருமையையும், வலிமையையும் தெரிந்தே நீங்கள் இப்படிப் பேசுவது மிகவும் வருந்தத்தக்கது.”

“உனது கணைக்காலனுக்கு நான்தான் காலன். என்னைப் போர்க்களத்தில் வந்து சந்திக்கும்படி கூறு.”

“உங்களால் எம் மன்னனை வெல்ல முடியும் என்று நீவிர் நினைப்பது உங்கள் இறுமாப்பு. எமது மன்னனின் வலிமை தெரியாமல் பேசுவது மிகவும் இரங்கத்தக்கது.”

“அடே தூதுவனே… இங்கே நிற்காதே, ஓடிவிடு. இல்லையெனில் உன் முன்பற்களைத் தட்டிவிடுவேன். எச்சரிக்கை!”

தூதுவன் கணைக்கால் இரும்பொறையிடம் வந்து நடந்தவற்றை ஒன்றுவிடாமல் கூறினான்.

“தூதுவன் ஒருவனின் பற்களைத் தட்டுவேன் என்று நாவடக்கம் இல்லாமல் சொன்ன அந்த மூவனைப் போர்க்களத்தில் சந்தித்தே தீருவேன்,” என்று முடிவு கட்டினான் இரும்பொறை.

“மன்னா, சிறு நரியை எதிர்க்கச் சிங்கம் செல்வதா? வேண்டாம். இது உங்கள் வீரத்திற்கு இழுக்கு. நாவடக்கமின்றிப் பேசிய அந்த மூவனை வென்று அவன் முன்பற்களை உங்களிடம் கொண்டு வந்து காணிக்கையாக்குகிறேன்.” தளபதி வீரமுழுக்கமிட்டான்.

“அதுவும் சரிதான். மூவன் இனி வாயைத் திறக்கும் போதெல்லாம் நாவடக்கம் வேண்டும் என்பதை உணர வேண்டும். அவன் முன்பற்களைக் கொண்டு வருவது தான் நன்று!”

“சரி மன்னா, அப்படியே செய்கிறேன்.”

“தளபதியாரே, மூவனின் முன்பற்களைப் பிடுங்கி நம் தொண்டிக் கோட்டையின் வாயிற் கதவுகளில் பொருத்தி, “யாகாவாராயினும் நாகாக்க. நாவைக் காக்காத மூவனின் பற்களைப் பாரீர்!’ என்று அதன் கீழ் எழுதி வையுங்கள்.”

“உத்தரவு மன்னா!”

கணைக்கால் இரும்பொறையின் படைவீரர்கள் அவனை விரட்டிப் பிடித்து தளபதியிடம் கொண்டு வந்தனர்.

நாவடக்கமின்றிப் பேசிய மூவனின் முன் பற்கள் தட்டப்பட்டன. மன்னன் கூறியவாறே அவை தொண்டிக் கோட்டையின் வாயிற் கதவில் பதிக்கப்பட்டன.

சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் மூவன் தன் செயலுக்காக வருந்தினான், தன் நாவடக்கமற்ற செயலால் தனக்கும் தன் நாட்டுக்கும் தீராத அவமானம் தேடியதை நினைத்து நினைத்து சேரநாட்டுச் சிறையிலிருந்தே உயிர்விட்டான்.

குழந்தைகளே! வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி பிறருடைய மனதைப் புண்படுத்தாமல் இருக்க மூவனுக்கு ஏற்பட்ட நிலை ஒரு நல்ல பாடம்.

சிறுவர் கதைகள் – முட்டாள்களுக்கு வீண் உபதேசம்

நல்வழிப்படுத்தவும்.

Saturday, April 08, 2006

கதை எண் 91 – முட்டாள்களுக்கு வீண் உபதேசம்

 

 

எருமைப்பட்டியில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் இரண்டு கழுதைகள் இருந்தன. அவை இரண்டும் ஒரு நாள் மிகவும் வருத்தத்துடன் பேசிக் கொண்டன.

“நாம் சுமந்து வரும் அழுக்கு துணிகள் மட்டும் சலவை செய்ததும் அழுக்கெல்லாம் போய் வெண்மையாக தெரிகின்றதே! ஆனால், நாம் மட்டும் ஏன் அந்த துணிகளைப் போன்று வெண்மையாக மாற முடியவில்லை?” என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டன.

அந்தப் பக்கமாக வந்த ஆடு கழுதைகளின் பேச்சை ஒட்டுக் கேட்டுவிட்டது.

கழுதைகளின் முட்டாள்தனமான பேச்சை கேட்டு அந்த ஆட்டிற்கு சிரிப்பே வந்துவிட்டது.

“கழுதைகளே! நலம்தானா? நீங்கள் இருவரும் உங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசுவதுபோல் தெரிகின்றதே…” என்று அவர்கள் வாயை கிளறியது.

“ஆடே! ஆடே நலம்தானே? எங்கள் சந்தேகத்தை தீர்க்க யாரும் வரவில்லையே என்று நினைத்தோம். நல்ல வேளை நீ வந்திருக்கிறாய்!” என்றவாறு கழுதைகள் இரண்டும் ஆட்டை நோக்கின.

“கழுதைகளே! நீங்கள் பேசிக் கொண்டிருந்ததை நானும் அறிவேன். உங்கள் சந்தேகம் என்னவென்று எனக்குப் புரிந்துவிட்டது. முட்டாள்தனமான உங்கள் சந்தேகத்தை எப்படிப் போக்குவதென்று எனக்குத் தெரியவில்லை…” என்று கூறியது ஆடு.

இதைக் கேட்ட கழுதைகளுக்கு கோபம் வந்துவிட்டது. “ஆடே எங்களைப் பார்த்து முட்டாள்கள் என்று கூறுகிறாயா? எங்கள் சந்தேகத்திற்கு உன்னால் விடை கூற முடிந்தால் கூறு… இல்லையேல் இந்த இடத்தை விட்டு ஓடு… அதை விட்டு விட்டு முட்டாள்தனமான சந்தேகம் எனக் கூறி எங்களை இன்சல்ட் பண்ணாதே,” என்று கோபமாக கூறின.

“கழுதைகளே! நீங்கள் என் மீது ஏன் இப்படி கோபப்படுகிறீர்கள்? துணிகளும் நீங்களும் ஒன்றா? அப்படியிருக்க முட்டாள்தனமான உங்கள் கேள்விக்கு என்னால் எப்படி பதில் கூற முடியும்? அப்படியே நான் பதில் கூறினால் நானும் உங்களோடு சேர்ந்து முட்டாளாகி விடுவேன்,” என்று கூறியது.

கழுதைகள் இரண்டும் பொறுமை இழந்தன. தங்களின் ஆத்திரத்தை எல்லாம் ஒன்று திரட்டி தங்கள் கால்களால் ஆட்டை எட்டி உதைத்தன.

கழுதைகள் இரண்டும் உதைத்த வேகத்தில் ஆடு எங்கோ சென்று விழுந்தது. வலி தாங்காமல் நொண்டி நொண்டி நடந்து சென்றது.

சிறுவர் கதைகள் – நாட்டுப்பற்று

முன்னொரு காலத்தில் மணிவர்மன் என்னும் மன்னர் மதுரையை சீரும் சிறப்புமாக ஆட்சிபுரிந்து வந்தார். அவனுடைய மனைவி ராணி பத்மாவதி மீது உயிரையே வைத்திருந்தார்.

அந்நாட்டு மக்கள் தங்கள் அரசனையும் அரசியையும் மிகவும் நேசித்தனர். எங்கும் பசுமையும் வளமையும் குடிகொண்ட அந்த நாட்டில் மக்களுக்கு எந்த ஒரு குறையும் வைக்காமல் மன்னன் ஆட்சி செய்து வந்தார்.

மக்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் அரசன், அரசி இருவருக்கும் மனதுக்குள் ஒரு பெரும் குறை இருந்தது. திருமணமாகி, பல ஆண்டுகள் ஆகியும் தங்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை என்பதுதான் அது.

எதிர்காலத்தில் தங்கள் நாட்டை ஆள ஒரு வாரிசு இல்லையே என மக்களும் மிகவும் கவலைப்பட்டார்கள். ராணி கலங்கும்போதெல்லாம் மன்னன் அவரை சமாதானம் செய்துவந்தார்.

ஒரு நாள் மதுரை மாநகருக்கு முனிவர் ஒருவர் விஜயம் செய்தார். மன்னரும் மகாராணியும் அவரை அன்போடு வரவேற்று உபசரித்தனர். முனிவரின் காலில் விழுந்து வணங்கி, தங்கள் குறையை அவரிடம் தெரிவித்தனர்.

முனிவர் மன்னரை நோக்கி, “”இந் நாட்டு மக்களில் யாராவது ஒரு தாய், தான் பெற்ற ஒரே குழந்தையை வைகை நதிக்கு அர்ப்பணித்தால் உனக்குக் குழந்தை பிறக்கும்” என்று கூறினார்.

அதைக் கேட்டதும் மன்னரும் ராணியும் அதிர்ச்சி அடைந்தனர். எந்த ஒரு தாயும் இதற்கு ஒத்துக்கொள்வது என்பது இயலாத காரியம் என்று நினைத்து இருவரும் தயங்கினர். முனிவரும் “இதைத் தவிர வேறு வழியில்லை’ என்று கூறி அங்கிருந்து சென்றார்.

மன்னர் அமைச்சரை நோக்கி, “”யாரேனும் ஒரு தாய், தான் பெற்ற ஒரே குழந்தையை வைகை நதிக்கு அர்ப்பணித்தால், நாட்டில் பாதி பரிசாக அளிக்கப்படும்” என்று முரசு அறிவிக்கச் சொன்னார்.

நாடெங்கும் முரசு அறிவிக்கப்பட்டது. ஆயினும் மக்களில் எந்தத் தாயும் தங்களுடைய குழந்தையை ஆற்றில் விடுவதற்கு முன்வரவில்லை.
நாட்கள் பல கடந்தன. அரசனும் அரசியும் மிகவும் சோர்ந்துபோயினர்.

அரசனின் உடல்நிலை இக் கவலையால் மிகவும் பாதிக்கப்பட்டது.

அரசனும் அரசியும் கவலைப்படுவதை அரசனின் மெய்க்காப்பாளன் வேலப்பனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவனுக்கு ஓர் ஆண்குழந்தை இருந்தது. பிறந்து ஒரு வருடமே ஆகியிருந்த அக் குழந்தையை வேலப்பனும் அவனது மனைவி ரத்னாவும் மிகவும் நேசித்தனர்.

சில நாள்கள் சென்றன. கவலையினால் மன்னர் நோயுற்று, படுத்த படுக்கையானார். அரசன் மீது மிகுந்த அன்பு வைத்திருந்த வேலப்பனால் இந்தத் துயரைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. ஒரு குழந்தையின்றி, மன்னர் படும் வேதனையைப் பார்க்கச் சகிக்காமல் ஒரு முடிவுக்கு வந்தான்.
வீட்டுக்குச் சென்று தன் மனைவி ரத்னாவை அழைத்தான்.

“குழந்தையில்லாத ஏக்கத்தில் நம் மன்னர் இறந்துவிட்டால், பின்னர் நம் நாடு, சரியான தலைமையில்லாமல் பகைவர்களின் கையில் சிக்கி, அடிமையாகிவிடும்” என்றான்.

“அதற்கு நாம் என்ன செய்வது?” என்றாள் ரத்னா.

“நம் நாட்டைக் காப்பாற்ற நாம் ஒரு தியாகம் செய்யவேண்டும். நமது குழந்தையை வைகை ஆற்றுக்கு அர்ப்பணிக்க வேண்டும்” என்றான்.

ரத்னா இதைக் கேட்டதும் அதிர்ச்சியில் மயங்கும் நிலைக்குச் சென்றாள். குழந்தையைப் பிரிவது – அதுவும் ஆற்றில் விடுவது என்பதை அவளால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. ஆயினும் குழந்தையை விட நாடும், மன்னரும் மிக முக்கியம் என்பதைப் பலவாறு தன் மனைவியிடம் எடுத்துச் சொன்னான் வேலப்பன்.

கணவனின் வார்த்தையை மீறாத அவன் மனைவியும் கண்ணீரோடு அதற்குச் சம்மதித்தாள். மறுநாள் குழந்தையை எடுத்துக்கொண்டு ஆற்றுக்கு வந்தாள். நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டு எந்தவிதச் சலனமும் இல்லாமல் வைகை ஓடிக்கொண்டிருந்தது.

ரத்னா ஆற்றில் இறங்கி, கண்ணீரோடு கடைசியாய்த் தன் மகனை முத்தமிட்டாள். ஒரு மூங்கில் தட்டில் குழந்தையைக் கிடத்தி, ஆற்றில் விட்டாள். பிறகு கதறி அழுதவாறே வீட்டுக்குச் சென்றாள்.

இச் செய்தி அரசனுக்கும் அரசிக்கும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வேலப்பனையும் ரத்னாவையும் அழைத்து, கண்களில் நீர் மல்க நன்றி தெரிவித்தனர். அவர்கள் இருவரையும் புகழ்ந்து, “வேலப்பா, நீங்கள் இருவரும் செய்திருக்கும் தியாகத்துக்கு இந்த நாட்டையே பரிசாக உங்களுக்குக் கொடுத்தாலும் ஈடு செய்ய முடியாது. ஆயினும் நான் அறிவித்தபடி இந்த நாட்டில் பாதியை உங்களுக்குப் பரிசாகத் தருகிறேன்” என்றார் அரசர்.

வேலப்பன் மன்னரை வணங்கி, “பிரபு! தாங்கள் அளிக்கும் பரிசுக்காக நாங்கள் இதைச் செய்யவில்லை. தங்கள் மீதுள்ள அன்பினாலும் இந்த நாட்டின் மீது நாங்கள் வைத்திருக்கும் பாசத்துக்காகவும்தான் நாங்கள் இந்தக் காரியத்தைச் செய்தோம்” என்று கூறி, அரசன் அறிவித்த பரிசை ஏற்க மறுத்துவிட்டான்.

மன்னர் மிகவும் வற்புறுத்தியும் அவர்களிருவரும் பரிசை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. நாடே அவர்களின் தியாகத்தைப் போற்றிப் புகழ்ந்தது.

சில நாள்களில் அரசி தாய்மைப்பேறு அடைந்தார். மன்னரும் மக்களும் மிகவும் மகிழ்ந்தனர். மாதங்கள் உருண்டோடின. அரசிக்கு ஓர் அழகிய ஆண்குழந்தை பிறந்தது. செய்தியறிந்து நாடே திருவிழாக் கோலம் பூண்டது.
வேலப்பனும் ரத்னாவும் தங்கள் துக்கத்தை மறந்து, இந்த மகிழ்ச்சியில் பங்குகொண்டனர். அன்றிரவு ரத்னாவுக்குத் தன் குழந்தை ஞாபகம் வந்தது.

வைகைக் கரைக்குச் சென்றாள். குழந்தையைத் தான் விட்ட இடத்துக்குச் சென்று நின்றுகொண்டு, மகன் நினைவில் கண்ணீர்விட்டுக்கொண்டிருந்தாள்.

அப்போது..
திடீரென ஒருவர் ரத்னாவின் முன்னே குழந்தையோடு நிற்பது போலிருந்தது. கண்களைத் துடைத்துவிட்டு, ரத்னா உற்றுப்பார்த்தாள். மன்னருக்கு ஆசி வழங்கிய அதே முனிவர்தான். கையில் குழந்தையோடு நின்று கொண்டிருந்தார். அந்தக் குழந்தை, ரத்னாவின் குழந்தையேதான்.

ரத்னா வியப்புடனும் மகிழ்ச்சியுடனும் முனிவரைப் பார்த்தாள். குழந்தையை ரத்னாவிடம் கொடுத்த முனிவர், அவளைப் பார்த்து, “நீ குழந்தையை ஆற்றில் விட்டவுடன் நான்தான் எடுத்து வளர்த்து வருகிறேன். நீயும் உன் கணவனும் செய்த இந்த மாபெரும் தியாகத்தைப் பாராட்டுகிறேன். உங்கள் இருவருடைய நாட்டுப்பற்றை இந்த உலகம் உணரவே இதுபோல் செய்தேன். எதிர்காலத்தில் உன் மகன், இளவரசனுக்குத் துணையாக நின்று இந்த நாட்டைக் காப்பான்” என்று கூறி, ஆசி வழங்கினார்.

குழந்தையுடன் ரத்னா வீட்டுக்கு ஓடோடி வந்த மறுநிமிஷம், இச் செய்தி காட்டுத்தீ போல் பரவியது. அரசனும் அரசியும் ரத்னாவுக்கு மீண்டும் குழந்தை கிடைத்ததை அறிந்து மிகவும் மகிழ்ந்தனர். அக் குடும்பத்தை அழைத்து, அரசவையில் உரிய மரியாதை தந்து கவுரவித்தனர். அவர்களின் நாட்டுப்பற்றை நாடே கவுரவித்தது.

சிறுவர் கதைகள் – புத்திசாலி ராணுவவீரர்

அமெரிக்கா ஒரு காலத்தில் இங்கிலாந்திடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. அமெரிக்க மக்கள், இங்கிலாந்து மக்களிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காகப் போராட்டம் நடத்தினர். அது கி.பி., பதினெட்டாம் நுõற்றாண்டு.

அமெரிக்க ராணுவப் படை, இங்கிலாந்து ராணுவப் படையுடன் கடுமையாக மோதியது. போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை வந்தது. ஆகவே, இரண்டு தரப்பினரும் போர் நிறுத்தம் செய்தனர்.

அச்சமயம் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகளில் ஒருவரான இஸ்ரேல் பொட்னாம் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவரைச் சந்தித்தார். இருவருக்குமிடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அமெரிக்க அதிகாரி, ஆங்கிலேயே அதிகாரியை மிகவும் திட்டி விட்டார். இதைக் கேட்ட ஆங்கில அதிகாரி கொதித்தெழுந்தார்.

“இவ்வளவு துõரம் நீ பேசிவிட்டாய் அல்லவா…? நாளை நீ என்னுடன் சண்டைக்கு வர வேண்டும். நீ உன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வா. நான் என் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வருகிறேன். இருவரும் துப்பாக்கியால் சண்டை போடுவோம். யார் வெல்கிறார்கள் என்று பார்க்கலாமா?” என்றார்.

இஸ்ரேல் பொட்னாம் இதைக் கேட்டு பதில் எதுவும் பேசவில்லை. அமைதியாக அங்கே கிடந்த மரப் பீப்பாய் ஒன்றின் மேல் உட்கார்ந்திருந்தார். போர்க்களத்தில் இந்த மரப் பீப்பாய்கள் அதிகமாகக் காணப்படும். காரணம், இம்மாதிரிப் பீப்பாய்களில் தான் போருக்குத் தேவையான வெடி மருந்துகள் நிரப்பி வைத்திருப்பர்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரி அதிகமான கோபம் அடைந்தார்.

“அப்படியானால் நீ ஒரு கோழை என்பதை வெளிப்படையாகவே ஒப்புக் கொள்ள வேண்டியதுதானே! மவுனம் ஏன்?” என்று சீண்டினார்.

“நான் உன்னைப் போன்ற கோழை இல்லை. வாய்ச் சொல்லில் வீரம் பேசவும் எனக்குத் தெரியாது. நான் செயல் வீரன். நீ உனக்குச் சாதகமான முறையில் துப்பாக்கிச் சண்டை செய்யலாம் என்று கூறினாய். உனக்குத் துப்பாக்கி சுடுவதில் நல்ல பயிற்சி உண்டு என்பது எனக்குத் தெரியும்.

“ஆகையினால் நீ துப்பாக்கிச் சண்டையைத் தேர்ந்தெடுத்தாய். என் விஷயம் அப்படி இல்லை. எனக்குத் துப்பாக்கி சுடுவதில் அத்தனை அனுபவமில்லை. யார் வீரன் என்பதை நிரூபிக்க ஒரு பொதுவான வழிமுறையை உன்னால் சொல்லத் தெரியவில்லையே!”

“ஏன், நீதான் செயல் வீரனாயிற்றே! பொதுவான ஒரு வழியைச் சொல்லேன் பார்க்கலாம்,” என்று குமுறினார் ஆங்கில அதிகாரி.

“சரி! நானே சொல்கிறேன். இங்கே இரண்டு பீப்பாய்கள் இருக்கின்றன. இந்தப் பீப்பாய்கள் எதற்காக உபயோகப்படுத்தப்படுகின்றன என்பதை நீயும் அறிவாய். வெடிமருந்து போட்டு வைக்க உபயோகப்படுத்தும் பீப்பாய்கள் இவை என்பதை நீ மறந்தாலும் நான் உனக்கு நினைவூட்டுகிறேன்.

“இப்போது இந்த இரண்டு பீப்பாய்களிலும் நான் ஒரு துளையை இடுகிறேன். நீ ஒரு பீப்பாயின் மேல் அமர்ந்து கொள். நான் ஒரு பீப்பாயின் மேல் அமர்ந்து கொள்கிறேன்.
இந்த இரண்டு பீப்பாய்களில் எதன் மீதாவது அமரவும் உனக்குச் சுதந்திரம் உண்டு.

“இதன் பிறகு நான் ஒரு வயரைச் செருகி வைப்பேன். அதன் முனையையும் பற்ற வைத்து விடுவேன். அது மெல்ல மெல்லக் கனிந்து பீப்பாய்க்குள் போகும். இவ்வாறு பற்ற வைத்த பின்னாலும் யார் ஒருவர் நீண்ட நேரம் வரை கீழே இறங்காமலேயே அந்தப் பீப்பாயின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர். சம்மதமா? அதற்கான தைரியம் உன்னிடமிருக்கிறதா?’ என்று கேட்டார் இஸ்ரேல் பொட்னாம்.

“சரி’ என்று வீராவேசமாக ஒப்புக் கொண்டார் ஆங்கிலேய அதிகாரி.

பொட்னாம் எழுந்தார். இரண்டு நீண்ட “ப்யூஸ்’ வயர்களை இணைத்து அதைப் பீப்பாய்க்குள் செலுத்தி விட்டு நுனியைப் பற்ற வைத்துவிட்டு அமைதியாகப் பீப்பாய் மேல் வந்து அமர்ந்தார். ஆங்கிலேய அதிகாரியும் ஒரு பீப்பாய் மேல் அமர்ந்திருந்தார்.

நெருப்பு சிறிது சிறிதாகக் கனிந்து பீப்பாயை நோக்கி வர ஆரம்பித்தது. அது பாதித் தொலைவில் வந்தவுடனேயே ஆங்கிலேய அதிகாரி நடுங்கினார்.

“இவன் நம்மைத் துண்டு துண்டாகச் சிதற வைக்கத் திட்டம் தீட்டித்தான் இம்மாதிரி ஏற்பாடு செய்திருக்கிறான்!’ என்று எண்ணினார். நெருப்பு மெல்ல மெல்ல ஊர்ந்து வந்து கொண்டிருந்தது.

“இது மிகவும் பைத்தியக்காரத்தனமான ஒன்று. இதனால் நாம் இருவருமே வெடித்துச் சிதறி இறந்து விடுவோம். இது பயத்துக்குரிய ஒன்று.’

இஸ்ரேல் பொட்னாம் பேசவில்லை. அவர் முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லை. பீப்பாயை விட்டு அவர் இறங்கவுமில்லை. இன்னும் நன்றாக வசதியாக அமர்ந்து கொண்டார் அவர். திரி எரிந்து பீப்பாய்க்கு வெகு அருகில் வந்து விட்டது.
இன்னும் முப்பது விநாடிகள் தாமதித்தால் நெருப்பு பீப்பாய்க்குள் போய்விடும். அப்படிப் போய் விட்டால்…?

நினைத்தால் கூடத் தப்பி ஓட முடியாது.

அதற்கு மேல் ஆங்கிலேய அதிகாரியால் அமைதியாக இருக்க முடியவில்லை.

பீப்பாயிலிருந்து துள்ளிக் குதித்து இறங்கினார். திடுதிடுவென அந்த இடத்தைவிட்டு ஓட ஆரம்பித்தார். பாதுகாப்பான இடத்தில் நின்று திரும்பிப் பார்த்தார். பீப்பாய்க்குள் நெருப்பு நுழைய ஒரு விநாடி இருந்தது. அப்போதும் பொட்னாம் பீப்பாயை விட்டு எழவில்லை.
ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தார்.

“கோழை யார் என்பது புரிந்ததா?’ என்று சப்தமாகக் கேட்டார்.

அவர் அவ்வாறு கேட்டு முடித்தவுடன், பீப்பாய் வெடித்துத் துண்டு துண்டாகச் சிதறி விடும் என்று ஆங்கிலேய அதிகாரி எதிர்பார்த்தார். அவ்விதமான அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. பீப்பாய்க்குள்ளும் நெருப்புப் போய்விட்டது.

பொட்னாம் அமைதியாகவே இருந்தார். ஐந்து நிமிடங்களுக்குப் பின் முழுதாக இறங்கி வந்தார் பொட்னாம்.

“இந்தப் பீப்பாய்க்குள் இருப்பது வெடி மருந்து என்றுதானே நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். இல்லை, அது வெங்காயம். வெங்காயத்தைச் சமையல் அறையில் கொட்டிய பின் தான் வெடி மருந்து அதில் நிரப்பப்பட வேண்டும்!’ என்று அமைதியாகக் கூறினார்.

ஆங்கிலேய அதிகாரி மிகப் பெரிய அவமானத்தை அடைந்தார். அன்று இரவோடு இரவாக அந்த அதிகாரி அந்தப் பகுதியிலிருந்து வேறு பகுதிக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு சென்று விட்டார். இந்த அமெரிக்கச் சுதந்திரப் போரில் ஈடுபட்ட அந்த அதிகாரி இஸ்ரேல் பொட்னாம் பின்னாளில் அமெரிக்காவின் ராணுவத் தளபதியானார்.
புத்தி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.

சிறுவர் கதைகள் – கொக்குவுக்கு எத்தனை கால்

பண்ணையார் பரந்தாமன் அன்று வேட்டைக்குச் சென்று திரும்பினார். அவர் கையில் கொக்கு ஒன்று இருந்தது. தன் கையிலிருந்த கொக்கைச் சமையல்காரனிடம் தந்தார்.

“இன்று இரவு உணவிற்கு இதை அருமையாகச் சமைத்து வை. என் நண்பர்கள் சாப்பிட வருகிறார்கள்,” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

சமையல்காரன் அந்தக் கொக்கை உரித்து மசாலா போட்டுக் குழம்பு வைத்தான். கறிக் குழம்பின் மணம் அவன் மூக்கைத் துளைத்தது. ஆசையை அடக்க முடியாது அவன் கொக்கின் ஒரு காலை எடுத்து சாப்பிட்டு விட்டான்.

“முதலாளி கேட்கமாட்டார். கேட்டாலும் சமாளித்துக் கொள்ளலாம்’ என்று நினைத்தான் அவன்.

சாப்பாட்டு நேரம்—
முதலாளியும் அவர் நண்பர்கள் சிலரும் சாப்பிட அமர்ந்தனர். கறிக்குழம்பு பரிமாறப்பட்டது. கொக்கின் ஒரு காலைச் சுவைத்து உண்ட அவர், “”மிக நன்றாக உள்ளது. இன்னொரு காலை கொண்டு வா,” என்று கேட்டார்.

திகைத்த சமையல்காரனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. “கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி. எப்படி இன்னொரு காலைக் கொண்டு வர முடியும்?” என்று கேட்டான்.

நண்பர்கள் எதிரில் சமையல்காரனோடு வாதிட விரும்பாத முதலாளி, “ம்ம்ம்… நாளைக் காலையில் கொக்கிற்கு ஒரு காலா இரண்டு காலா என்று தெரிந்து கொள்ளலாம்,” என்று சொல்லிவிட்டு அந்தப் பிரச்னையை அதோடு விட்டு விட்டார்.

மறுநாள் பொழுது விடிந்தது. சமையல்காரனை அழைத்துக் கொண்டு முதலாளி வேட்டைக்குப் புறப்பட்டார். போகும் வழியில் வயல் வெளியில் ஏராளமான கொக்குகள் நின்றிருந்தன. “கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா? இப்பொழுது சொல்,” என்று கேட்டார் முதலாளி.

“ஐயா! அதோ பாருங்கள். எல்லாக் கொக்குகளும் ஒரே காலில்தான் நின்று கொண்டுள்ளன. ஆகவே, கொக்கிற்கு ஒரு கால் தான் முதலாளி,” என்றான் சமையல்காரன்.

முதலாளி, கொக்குக் கூட்டத்தை பார்த்து “ச்சூ’ என்று கூச்சல் போட்டு விரட்டினார்.

ஒரு காலில் நின்று கொண்டிருந்த கொக்குகள் அனைத்தும் இரண்டு கால்களையும் தரையில் ஊன்றி எழுந்தபடி சிறிது துõரம் தாவிப் பின் பறந்து சென்றன.

“இப்பொழுது என்ன சொல்கிறாய்? கொக்கிற்கு ஒரு காலா? இரண்டு காலா?” என்று மறுபடியும் கேட்டார் பண்ணையார்.

“ஐயா! நீங்கள் சாப்பிடும் போது இப்படிச் “ச்சூ’ என்று சத்தம் போட்டிருந்தால் அந்தக் கொக்கிற்கும் இன்னொரு கால் வந்திருக்குமே!” என்று சாமர்த்தியமாகச் சொன்னான் சமையல்காரன்.

அவனுடைய கெட்டிக்காரத்தனமான பேச்சைக் கேட்டு மகிழ்ந்த அவர், “இனி இப்படி நடந்து கொள்ளாதே… பொய் சொல்வது, ஏமாற்றுவது எனக்கு பிடிக்காத குணம். உனக்கு என்ன வேணுமோ அதை கேட்டு வாங்கிச் சாப்பிடு,” என்றார் முதலாளி.

“என்னை மன்னிச்சிடுங்க முதலாளி… இனிமேல் இப்படிச் செய்யமாட்டேன்!” என்றான் சமையல்காரன்.

சிறுவர் கதைகள் – புத்தி பலம்

புத்தூர் என்ற ஊரில் இளங்கோ என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் உடல் வலிமையே இல்லாதவன். ஆள் பார்ப்பதற்கு சுமாரான உடல் கட்டு கொண்டவனாக இருந்தாலும், அவனால் கடினமான வேலைகள் எதையும் செய்ய முடியாது. ஆனால், பிறரது பலத்தை தனக்குப் பயன்படுத்தி காரியம் சாதித்துக் கொள்வதில் அவனை மிஞ்ச யாராலும் முடியாது.

இளங்கோவுக்கு மூன்று நண்பர்கள் இருந்தனர். அவர்களும் இளங்கோவை போல் உடல் வலிமையற்றவர்கள் என்று நினைத்து விடக்கூடாது. அவர்கள் மிகவும் பலசாலி.

“தினமும் உடற்பயிற்சி செய்து உடலை பலப்படுத்தி என்ன பிரயோஜனம்? மூளையை பலப்படுத்துங்கள். அது தான் வாழ்க்கைக்கு உதவும்!” என்று சொல்லிச் சிரிப்பான்.

அதற்கு அந்த மூவரும், “இளங்கோ! உடலை பலப்படுத்தினால் போதும், மூளை தானே பலப்பட்டு விடும். மூளை வலிமையை விட உடல் வலிமையால் உலகத்தில் நிறைய சாதிக்க முடியும். ஹூம்… நோஞ்சான் பயலான உனக்கு உடலைப் பற்றி என்ன தெரியும்!” என்று சொல்லி சிரிப்பர்.

இப்படியாக அவர்கள் நல்ல நண்பர்களாகவே இருந்து கொண்டிருந்தனர்.

ஒரு நாள் இளங்கோ தனது மளிகைக் கடைக்குத் தேவையான சாமான்களை சந்தைக்குச் சென்று வாங்கி மூட்டை மூட்டையாகக் கட்டி சிறு வண்டியில் வைத்து மிகவும் சிரமத்துடன் இழுத்து வந்து கொண்டிருந்தான்.

வழியில் ஒரு பெரிய மேடு குறுக்கிட்டது. அவன் உடலில் பலம் இல்லாததால் அந்த மேட்டின் மேல் சரக்கு வண்டியை இழுக்க முடியாமல் மிகவும் திணறினான். யாராவது ஒருவர் உதவிக்கு வந்தால் வண்டியை எளிதாக மேட்டின் மேல் ஏற்றி விடலாம் என்று நினைத்த அவன், வண்டியை நிறுத்தி விட்டு யாராவது வருகிறார்களா என்று மேட்டின் மீது ஏறி நின்று பார்த்தான்.

அப்பொழுது—
எதிர் திசையில் இருந்து அவனது மூன்று பலசாலி நண்பர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்த இளங்கோவுக்கு ஒரு யோசனை தோன்றியது.

“விடுவிடு’வென்று கீழே இறங்கி, தன்னிடம் இருந்த கயிற்றின் ஒரு முனையை வண்டியில் கட்டினான். கயிற்றின் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு மறுபடியும் மேட்டிற்கு ஓடி வந்தான்.

அதற்குள் நண்பர்கள் அவனை நெருங்கி வந்து விட்டனர். உடனே இளங்கோ கயிற்றின் முனையைப் பிடித்தபடியே அவர்களை நெருங்கினான்.

“எனதருமை நண்பர்களே! உங்களுக்கும் எனக்கும் ஒரு போட்டி!” என்றான் இளங்கோ.

“என்ன போட்டி நோஞ்சான்?” என்று கேட்டனர்.

“உங்களுக்கும், எனக்கும் கயிறு இழுக்கும் போட்டி. நீங்கள் மூன்று பேரும் இந்த முனையைப் பிடித்துக் கொண்டு இழுங்கள். நான் மறுமுனையைப் பிடித்துக் கொண்டு இழுக்கிறேன். யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்ப்போம்!” என்றான் இளங்கோ.

அதைக் கேட்டு அந்த மூன்று பலசாலி நண்பர்களும் “ஹா… ஹா… ஹா…!” என்று பலமான சிரிப்புச் சிரித்தனர்.

“நோஞ்சான் பயலான உனக்கும், பலசாலிகளான எங்களுக்கும் கயிறு இழுக்கும் போட்டியா? வெளியே சொன்னால் எங்களுக்குத்தான் அவமானம். போய் வேறு ஏதாவது வேலையிருந்தால் பார்!” என்றனர் அவர்கள்.

“இதோ பாருங்கள். ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள். எனக்குள் இருக்கும் பலம் உங்களுக்குத் தெரியாது. நீங்கள் உண்மையான பலசாலிகளாக இருந்தால் என்னோடு போட்டியிடுவீர்கள். நீங்களோ போலி. பலசாலிகள் போல வேஷம் போடுகிறீர்கள்!” என்று அவர்களைச் சீண்டிவிட்டான்.

“சுண்டைக்காய் பயலே! எங்கள் பலத்தையா போலி என்றாய். உனக்குப் பாடம் கற்பித்தால்தான் புத்தி வரும். பிடி மறுமுனையை ஒரே ஒரு இழுதான். நீ எங்கோ பறந்து சென்று மண்ணைக் கவ்வப் போகிறாய்!” என்று சொல்லிவிட்டு கயிற்றின் ஒரு முனையைப் பிடித்தனர்.

இளங்கோ மேடு ஏறிப் போய் மறுபடியும் இறக்கத்தில் இறங்கி வண்டியில் கட்டப்பட்டிருந்த கயிறை இறுக்கமாகப் பிடித்தான்.

“ம்! இழுக்கலாம்!” என்று கத்தினான்.

அந்த மூன்று நண்பர்களும் இளங்கோதான் கயிறு இழுப்பதாய் நினைத்துக் கொண்டு மிகச் சாதாரணமாய் இழுத்தனர். அவர்கள் நினைத்தது போல் அது அவ்வளவு சாதாரணமாய் இழுபடவில்லை.

திடீரென்று “இளங்கோவுக்கு பலம் இருக்கிறதோ’ என்ற சந்தேகம் அவர்களுக்கு உண்டாயிற்று. ஆகவே, கயிற்றை இறுக்கமாகப் பிடித்து இழுத்தனர். ஆனால், இழுப்பது மிகவும் கடினமாக இருந்தது.

மூன்று பேர் முகத்திலும் திகில் பரவியது. ஒரு நோஞ்சான் பயலிடம் தோற்றுப் போனால் அது எத்தனை அவமானம் என்று நினைத்த அவர்கள், தங்கள் பலங் கொண்ட மட்டும் கயிறை இழுத்தனர்.

எதிர்ப்பக்கமிருந்த இளங்கோ, தான் இழுப்பதை மெல்ல மெல்ல விட்டுக் கொண்டே இருந்தான்.

வண்டி இப்பொழுது மெல்ல மேட்டில் ஏறத் துவங்கியது.

இளங்கோ தான் மெல்ல பலத்தை இழந்து மேலே வருகிறான் என்று நினைத்த அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம் உண்டாகியது. “இந்த நோஞ்சான் பயலுக்கு ஏது இவ்வளவு பலம்’ என்று நினைத்தவாறே மீண்டும் கயிறை வேகமாக இழுத்தனர்.

கடைசி நேர இழுவையில் சரக்கு வண்டி மேட்டின் மேலே ஏறிவிட்டது. அதைப் பார்த்துக் கொண்டு சிரித்தபடி வந்தான் இளங்கோ.

அவர்களுக்கு அப்பொழுதுதான் விஷயமே புரிந்தது. இவ்வளவு நேரம் நாம் இழுத்தது இளங்கோவின் வண்டியை என்று.

மூவர் முகத்திலும் அசடு வழிந்தது. இறக்கத்தில் இறங்கி அவர்களிடம் வந்த இளங்கோ, “”மூளை பலம் என்பது இது தான்,” என்று சொல்லி நமுட்டு சிரிப்பு சிரித்துவிட்டு, தனது வண்டியை சமதளத்தில் மிகவும் லாவகமாக இழுத்துக் கொண்டு போனான்.

சிறுவர் கதைகள் – தானத்தில் சிறந்தவர் கர்ணனே

ரொம்ப நாட்களாகவே பாண்டவர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.
அது, நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர்.

இருப்பினும் கர்ணனையே ஏன் எல்லாரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்பது தான் அது. இவர்கள் மனதில் உள்ள சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன் ஒரு நாள் பாண்டவர்களை அழைத்தார்.

தங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கினார். பின் பாண்டவர்களை நோக்கி, “இங்கே பாருங்கள்! இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்,” என்று கூறினார்.

பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர தருமர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார். ஆனால், நகர மக்களில் பெரும் பகுதியினருக்கு அவ்வாறு தானம் செய்தும் தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. அதற்கு மாறாக அவ்விரு மலைகளும் வெட்ட வெட்ட வளர்ந்து கொண்டே இருந்தன.

மாலைப் பொழுது வந்ததும் இனி தங்களால் முடியாது என்பதை உணர்ந்த தருமர், “எங்களால் முடியாது கண்ணா!” என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார்.

உடனே கிருஷ்ணன் ஓர் ஆளை அனுப்பி கர்ணனை வரவழைத்தார்.

“கர்ணா! இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்க மலை. மற்றொன்று வெள்ளி மலை; இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப் பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? யோசித்துச் சொல்,” என்று கூறினார்.

உடனே கர்ணன், “இதில் யோசிக்க என்ன இருக்கிறது இப்போதே செய்து காட்டுகிறேன்,” என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, “இதோ பாருங்கள்! நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்,” என்று கூறி தனது தர்மத்தை முடித்து விட்டுக் கிளம்பினான்.

பாண்டவர்கள் அசந்து போயினர். அவர்களை ஒரு அர்த்தப் பார்வையுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன். தர்மருக்கும் பரந்த மனசு தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவரைக் காட்டிலும் தான தருமம் செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே என்பதை சொல்லாமல் பாண்டவர்களுக்கு உணர்த்திவிட்டார் கிருஷ்ணன்.

சிறுவர் கதைகள் – கஞ்ச மகா பிரபு

பட்டினப்பாக்கத்தில் ஜம்பு என்ற செல்வந்தர் இருந்தார். அவரிடம் ஏராளமான செல்வம் இருந்தது. இருப்பினும் சரியான கஞ்சன்.

எங்குச் சென்றாலம் அவர் நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட அழகான வண்டியில் அமர்ந்து செல்வார்.

ஒரு முறை, வெளியூர் சென்றிருந்த அவர் தன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். வண்டிச் சக்கரத்தில் ஏதோ முறிவது போன்ற ஓசை கேட்டது.

கோபத்துடன் அவர் வண்டியோட்டியைப் பார்த்து, “டேய் வண்டியை நிறுத்து. சக்கரத்திற்கு என்ன ஆயிற்று பார்?” என்று கத்தினார்.

நடுக்கத்துடன் கீழே இறங்கிய வண்டியோட்டி சக்கரத்தைப் பார்த்தான். “ஐயா! சக்கரத்தில் உள்ள கடையாணி உடைந்துவிட்டது. அந்த ஆணியைச் சரி செய்தால்தான் வண்டியை ஓட்ட முடியும்,” என்றான்.

“முட்டாளே! புறப்படும்போதே இதைப் பார்த்திருக்க வேண்டாமா? பக்கத்தில் உள்ள ஊருக்கு வண்டியை இழுத்துச் செல். அங்கே கொல்லனிடம் காட்டி வண்டியைச் சரி செய். நேரத்தை வீணாக்காதே,” என்று வண்டியில் இருந்தபடியே கத்தினார் ஜம்பு.

குதிரைகளுடன் வண்டியை மெதுவாக இழுத்துச் சென்றான் அவன். சிறிது நேரத்தில் வண்டி கொல்லனின் உலைக்களத்தின் முன் நின்றது.

அவன் குரல் கொடுக்க வெளியே வந்த கொல்லன் வண்டியைப் பார்த்தான்.
கேசவனை பார்த்தக் கொல்லன், “உடைந்திருக்கும் கடையாணிக்குப் பதில் வேறொரு ஆணியை மாட்டினால் வண்டி பழையபடி ஓடும். ஒரு வெள்ளிப் பணம் கூலி ஆகும்,” என்றான்.

“என்ன ஒரு ஆணியை மாட்டக் கூலி ஒரு வெள்ளிப் பணமா? நீ கொல்லனா அல்லது கொள்ளைக்காரனா?” என்று கோபத்துடன் கேட்டார் ஜம்பு.

“எனக்கு நிறைய வேலை இருக்கிறது. நான் கேட்ட கூலி தருவதாக இருந்தால் சொல்லுங்கள். வண்டியைச் செப்பனிட்டுத் தருகிறேன். இல்லையேல் வேறு ஆளைப் பாருங்கள்,” என்றான் அவன்.

வேறு வழியில்லாத ஜம்பு, “சரி” என்றார்.

சிறிது இரும்புத்துண்டு ஒன்றை எடுத்தான் அவன். உலைக்களத்து நெருப்பில் அதைப் போட்டான். பழுக்கக் காய்ந்த அந்த இரும்புத்துண்டை கத்தியால் நன்கு அடித்தான். ஆணியாக மாறிய அதை சக்கரத்தில் மாட்டினான்.

“இனிமேல் வண்டி நன்றாக ஓடும். கூலியைத் தாருங்கள்,” என்றான் அவன்.
நடந்ததை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். ஒரு வெள்ளிப் பணத்தைத் தந்துவிட்டு புறப்பட்டார்.

வண்டி ஓடிக் கொண்டிருந்தது. “இந்தச் சிறிய வேலைக்கு ஒரு வெள்ளிப் பணம் கூலியா? இப்படிப் பொருள் ஈட்டினால் இவன் என்னை விடச் செல்வனாகி விடுவானே. இந்த வேலையை நான் கற்றுக் கொண்டால் நல்ல வருவாய் வருமே. நாள்தோறும் இங்கு வந்து இவன் எப்படி வேலை செய்கிறான் என்று பார்ப்பேன். எல்லா வேலைகளையும் கற்றுக் கொண்ட பிறகு இவனை இங்கிருந்து விரட்டி விடுவேன்’ என்று நினைத்தார் அவர்.

அதன்படி நாள்தோறும் அந்த உலைக்களத்திற்கு வந்தார். கொல்லன் எப்படி வேலை செய்கிறான் என்பதை கவனித்தபடி இருந்தார். சில நாட்கள் சென்றன. கொல்லனுடைய தொழிலில் தான் தேர்ச்சி பெற்றுவிட்டதாக நினைத்தார் அவர்.

கொல்லனைப் பார்த்து, “இனி உனக்கு இங்கு வேலை இல்லை. எங்காவது ஓடிப்போ. என்னைப் பற்றி உனக்குத் தெரியும். நீ மீண்டும் என் கண்ணில் பட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன்,” என்று மிரட்டினார்.

அவருக்கு அஞ்சிய அவன், “இனி நான் இங்கு வரமாட்டேன்,” என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

மகிழ்ச்சியுடன் உலைக்களத்திற்குள் நுழைந்தார் அவர். வண்டியோட்டியைப் பார்த்து, “இன்று முதல் கொல்லன் தொழிலை நான் செய்யப் போகிறேன். நீ என் உதவியாளர்,” என்றார்.

“ஐயா! இந்தத் தொழிலில் எனக்கு ஏதும் தெரியாதே,” என்றான் அவன்.

“நான் என்ன சொல்கிறேனோ அதைச் செய். அது போதும். வெளியே நின்று யாராவது இங்கு வருகிறார்களா பார்?” என்றார் அவர்.

“ஐயா, பெரிய இரும்புத் துண்டைத் தூக்கிக் கொண்டு ஒரு ஆள் இங்கு வருகிறான்” என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்.

“பக்கத்து ஊரில் வாழும் உழவன் நான். இந்த இரும்பில் எனக்கு ஒரு கலப்பை செய்ய வேண்டும்,” என்றான் அவன்.

அந்த இரும்புத் துண்டைத் துõக்கிப் பார்த்தார். அவர். மிகுந்த கனம் உடையதாக இருந்தது. அதை உருட்டி மேலும் கீழும் பார்த்தார்.

“நல்ல இரும்பு இது. இதில் உறுதியான, நீடித்து உழைக்கும் கலப்பை செய்ய முடியும்,” என்றார்.

பிறகு அந்த இரும்பைத் துõக்கி உலைக்களத்தில் போட்டார். சக்கரத்தைச் சுற்றச் சுற்ற தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இரும்புத் துண்டு பழுக்கக் காய்ந்தது.
உதவியாளைப் பார்த்து, “ஏய்! பழுக்கக் காய்ந்த இந்த இரும்புத் துண்டை, அந்த இரும்புக் கட்டையின் மேல் வை. இந்தப் பெரிய சுத்தியால் அதை அடித்துக் கூர்மையாக்கு. எவ்வளவு வலிமையாக அடிக்கிறாயோ அந்த அளவு கலப்பை உறுதியாக இருக்கும்,” என்றார்.

உதவியாளும் அவர் சொன்னது போலப் பெரிய சுத்தியால் ஓங்கி அடித்துக் கொண்டிருந்தான். சின்ன சுத்தியலுடன் அவரும் அவனுடன் சேர்ந்து இரும்புத் துண்டை அடித்தார்.

களைப்பு அடைந்த அவன் சுத்தியலால் அடிப்பதை நிறுத்தினான். “ஐயா! என்னால் முடியவில்லை,” என்றான்.

உழவனைப் பார்த்து அவர், “இன்னும் சிறிது நேரம் சுத்தியால் அடித்தால் போதும். அழகான கலப்பை கிடைக்கும் உதவி செய்,” என்றார்.

பெரிய சுத்தியலை எடுத்தான் உழவன். அதனால் இரும்புத் துண்டை ஓங்கி அடிக்கத் தொடங்கினான். களைப்பு அடைந்த அவனும் அடிப்பதை நிறுத்தினான்.

நீண்ட நேரம் சுத்தியால் வலிமையாக அடித்ததால் இரும்புத் துண்டு சிறியதாகிவிட்டது. அதை மேலும் கீழும் புரட்டிப் பார்த்தார்.
உதட்டைப் பிதுக்கிய அவர், “என்ன இரும்புத் துண்டைக் கொண்டு வந்திருக்கிறாய். மட்டமான இரும்பு. இதில் கலப்பை செய்ய முடியாது. வேண்டுமானால் ஒரு கோடரி செய்து தருகிறேன். பல பரம்பரைக்குத் தொடர்ந்து அது உழைக்கும். என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார்.

“சரி கோடரியே செய்து தாருங்கள், ” என்றான் அவன்.
மீண்டும் அந்த இரும்புத் துண்டை உலைக்களத்தில் போட்டுத் தீ மூட்டினார் அவர். பழுக்கக் காய்ந்த அந்த இரும்பை உதவியாளும் அவரும் சேர்ந்து சுத்தியலால் அடித்தனர்.

சிறிது நேரம் சென்றது. அடிப்பதை நிறுத்திய அவர் இரும்புத் துண்டைப் பார்த்தார்.

மிகவும் சிறியதாக இருந்தது அது. “இதில் கோடரி செய்ய முடியாது. கூர்மையான அழகான சுத்தி செய்து தருகிறேன். இது போன்று வேலைப்பாடு அமைந்த சுத்தி யாரிடமும் இருக்க முடியாது. என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார்.

“ஏதாவது செய்யுங்கள்,” என்று கடுப்புடன் சொன்னான் உழவன்.

பழையபடி அந்த இரும்பை நெருப்பில் போட்டு எடுத்து அவரும் உதவியாளும் அடித்தார்கள். அந்த இரும்பு மெல்லியதாக ஆகிவிட்டது. அதைப் பார்த்த அவர், “நீ கொண்டு வந்த இரும்பு மிக மோசம். அதில் ஒரு ஊசி தான் செய்ய முடியும். என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார்.

நடந்ததை எல்லாம் பார்த்து வெறுப்படைந்த உழவன், “எதையாவது செய்து தாருங்கள்,” என்றான்.

அந்த இரும்புத் துண்டை சுத்தியலால் தட்டி ஊசி போல ஆக்கினார் ஜம்பு. மகிழ்ச்சியுடன் அதைக் கையில் எடுத்த அவர், “இந்த ஊசி சாதாரண ஊசி அல்ல. அருமையான ஊசி. நீண்ட காலம் உழைக்கும் ஊசி. இதைப் போன்ற அழகான ஊசியை இதுவரை யாரும் உருவாக்கி இருக்க முடியாது,” என்று அதை உழவனிடம் தந்தார்.

“நான் இதற்காக அதிகக் கூலி கேட்கமாட்டேன். நான் உழைத்த உழைப்பு உனக்கே தெரியும். ஐந்து வெள்ளிப் பணம் கொடு. அது போதும்,” என்றார்.

“ஒரு காசுகூடப் பெறாத ஊசி இது. பெரிய இரும்புத் துண்டை வீணாக்கியதோடு ஐந்து வெள்ளிப் பணமா கேட்கிறாய்? அந்தப் பணத்திற்கு பத்துப் புதிய கலப்பைகளையே வாங்க முடியுமே. என்னை ஏமாற்றவா நினைக்கிறாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்,” என்று உள்ளத்திற்குள் கருவினான் அவன்.

“இப்பொழுது என்னிடம் வெள்ளிப் பணம் ஏதும் இல்லை. என் வீட்டில் ஏராளமாக நெல் உள்ளது. அங்கு வாருங்கள். பத்து வெள்ளிப் பணத்திற்கு உரிய நெல்லைத் தருகிறேன்,” என்றான் அவன்.

மகிழ்ச்சி அடைந்த அவர், “நீ முன்னால் செல். நான் வண்டியுடன் பின்னால் வருகிறேன்,” என்றார்.

உலைக்களத்தைப் பூட்டிவிட்டு வண்டியில் அமர்ந்தார் அவர். வண்டியோட்டி வண்டியை உழவனின் வீட்டின் முன் நிறுத்தினான்.

வண்டியோட்டியைப் பார்த்து, “நான் இந்தக் காலி சாக்கு மூட்டைகளுடன் உள்ளே செல்கிறேன். நீ இங்கிருந்தபடியே உள்ளிருந்து வரும் பேச்சுக் குரலைக் கவனி. சாக்கு மூட்டைகளில் எல்லாம் நெல்லை நிரப்பும் அவன் “போதுமா’ என்று கேட்பான். நீ உடனே, “போதாது, நானும் வேலை செய்திருக்கிறேன். என் பங்கையும் அவரிடம் தாருங்கள் என்று குரல் கொடு,” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

அவரின் வருகைக்காக உழவனும் அவன் உறவினர்களும் கோபத்துடன் காத்திருந்தனர்.

அவர் உள்ளே நுழைந்ததும் எல்லாரும் அவரைப் பிடித்து இழுத்தனர். வலிமை கொண்ட அளவுக்கு அவரை உதைத்தனர்.

வலி பொறுக்க முடியாத அவர், “ஐயோ! என்னை விட்டு விடுங்கள் போதும்,” என்று அலறினார்.

வெளியே இருந்த வண்டியோட்டி, “போதாது! போதாது! என் பங்கையும் சேர்த்து அவரிடம் தாருங்கள்,” என்று உரத்த குரலில் கத்தினான்.

“கேட்டீர்களா? இன்னும் இவனை உதையுங்கள்,” என்றான் உழவன்.
எல்லாரும் சேர்ந்து அவரை மேலும் அடித்து உதைத்தனர்.

உடலெங்கும் காயத்துடன் பரிதாபமாக முனகியபடி வெளியே வந்தார் அவர்.
வண்டியோட்டி உதவி செய்யத் தடுமாறியபடி வண்டியில் அமர்ந்தார்.

“அய்யா! எங்கேய்யா, நம்ம மூட்டை, நான் போய் வாங்கி வரவா?”

“டேய்! வண்டியை விடு. சீக்கிரம் இங்கிருந்து புறப்பட வேண்டும். கொல்லனாக இருந்தால் இப்படி அடி உதை கிடைக்கும் என்பதை அறியாமல் போனேனே! என் வாழ்நாளிலேயே இப்படி வேதனைப்பட்டது கிடையாது. இனி இந்த வேலையே வேண்டாம்,” என்றுஅலறினார் செல்வந்தர்.

சிறுவர் கதைகள் – நயவஞ்சக நரி

ஒரு காட்டில் நரி ஒன்று இருந்தது. ஒரு முறை அதற்கு நிறைய உணவு ஒரே வேளையில் சாப்பிட வேண்டுமென்று விரும்பிற்று. அதற்கான தருணம் எப்போது வாய்க்கப் போகிறதோ என்று காத்துக் கொண்டிருந்தது.

மரத்தின் நடுவிலுள்ள பொந்து ஒன்றில் அது மிகவும் நல்லவனைப் போல வசிக்க ஆரம்பித்தது. மனதுக்குள் இந்த மரத்தின் கூடு கட்டி வரும் பறவைகள் குஞ்சு பொரித்தால் குஞ்சுகளை அப்படியே சாப்பிட்டு விடலாமே என்றெண்ணிற்று நரி.

அதன் எண்ணம் வீண் போகவில்லை. இரண்டு கழுகுகள் கணவன், மனைவியாக ஒரு நாள் அம்மரத்தடிக்கு வந்தன. மரப் பொந்தில் மிகவும் சாது மாதிரி படுத்துக் கிடக்கும் நரியைப் பார்த்தன.

“நரியாரே! நீ இம்மரப் பொந்தில் எவ்வளவு நாளாக இருக்கிறீர்?” என்று கேட்டது ஆண் கழுகு.

“கழுகாரா… வாங்க… கூட யாரு? மன்னியா?” என்று கேட்டது.

“ஆமாம்!” “நான் கேட்டதற்கு நீர் இன்னமும் பதில் சொல்லவில்லையே!” என்று கேட்டது.

“ஆமாம்…! இம்மரப் பொந்தில் பல வருஷங்களாக இருக்கிறேன்…! ஏன் கேட்கிறீர்?” என்று கேட்டது நரி.

“என் மனைவிக்கு பிரசவ காலம் நெருங்குகிறது. இம்மரத்தில் கூடு கட்டி, முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கலாமா என்று ஒரு ஆசை!” என்றது ஆண் கழுகு.

“ரொம்ப ராசியான மரம் இது… முன்பு கூட ஒரு பருந்து இங்கு கூடு கட்டி, குஞ்சு பொரித்து, சுகமாக வாழ்ந்தது!” என்றது நரி.

“ஆபத்து ஏதாவது உண்டாகுமா?” என்று கவலையோடு கேட்டது பெண் கழுகு.

“நான் வயதானவன் இந்த பொந்தே கதி என்று கிடக்கிறேன். நீங்கள் பயப்படவே வேண்டாம். நாம் நல்ல நண்பர்களாக இருப்போம்!” என்றது நரி.

பிறகு மரத்தை அண்ணாந்து பார்த்து மூன்று கிளைகள் பிரியும் ஒரு இடத்தை சுட்டிக் காட்டி, “அங்கு கூடு கட்டிக் கொள்ளுங்கள். மிகவும் வசதியாக இருக்கும்!” என்றது.

ஆண் கழுகும், பெண் கழுகும் அங்கு சென்று கூடு கட்ட ஆரம்பித்தன. ஆண் கழுகு வெளியில் இரை தேடிச் செல்லும் பொழுது, “என் மனைவி மட்டும் கூட்டிலிருக்கிறாள். அவளால் பறக்க முடியவில்லை… இன்றோ, நாளையோ முட்டை இடப்போகிறாள்… கொஞ்சம் பார்த்துக் கொள்ளும் நரியாரே!” என்றது.

“கவலைப்படாமல் போய் வாரும் நண்பரே! நான் இங்கிருக்கும் வரை எந்த ஆபத்தும் அண்டாது!” என்றது நரி.

நமக்கு நல்ல நண்பன் கிடைத்தான் என்றெண்ணி இரை தேட பறந்து சென்றது ஆண் கழுகு.

பெண் கழுகு முட்டையிட்டு குஞ்சு பொரித்து அவை சுமாராக பெரிதானதும், எல்லாவற்றையும் சாப்பிட்டு விட வேண்டுமென்று நரி எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது, மரத்தடியில் புதிதாக வந்த பன்றியும், அதன் கொழு கொழு குட்டிகளும் அதன் பார்வையில் பட்டது.

பன்றிக் குட்டிகளை சாப்பிட்டு பல நாள் பசியாறலாம் போலிருக்கிறதே என்றெண்ணிற்று நரி. மேலே கழுகு குஞ்சுகள், கீழே பன்றிக் குட்டிகள்… பேஷ் பேஷ்…

“நரியாரே இந்த மரத்தடியில் நானும் என் குட்டிகளும் தங்கலாமா?” என்று கேட்டது அம்மா பன்றி.

“பேஷாக தங்கலாம்!” என்றது நரி.

“எனக்கும், என் குட்டிக்கும் ஏதாவது ஆபத்து வருமா நரியாரே?” என்று கவலையோடு கேட்டது அம்மா பன்றி.

“நான் இருக்கும் இடத்துக்கு வந்துவிட்டாய் பன்றியே… கவலையே படாதே…! நான் வயதானவன். இந்த பொந்தே கதி என்று கிடப்பவன்…! எதிரிகள் எவரையும் மரத்தருகில் அண்டவே விடமாட்டேன்…! நானிருக்க பயமேன்?” என்றது நரி.

பன்றி தன் குட்டிகளுடன் மரத்தடியில் தங்கிக் கொண்டது. நாளடைவில் மரத்தின் மேலுள்ள கூட்டில் பெண் கழுகு முட்டையிட்டு குஞ்சு பொரித்தது. நான்கைந்து குஞ்சுகள் இருக்கும். கத்தியபடி இருந்தன. மரத்தடியில் பன்றிக் குட்டிகளும் “கர், கர்’ என்று உறுமியபடி உலாவிக் கொண்டிருந்தன.

வந்ததற்கு இப்போது பன்றிக் குட்டிகள் மிகவும் பருத்திருந்தன. அம்மா பன்றியும் தான். அவைகளை எப்படி சாப்பிடலாம் என்று யோசித்த நரி, ஆண் கழுகையும், பெண் கழுகையும் அழைத்தது.

“இதோ பாருங்கள்…! மரத்தடியில் இருக்கிறதே பன்றி அது சுத்த மோசம்… உங்கள் குஞ்சுகளை எப்பொழுது சாப்பிடலாமென்று தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது!” என்றது.

இரண்டு கழுகுகளும் இரை தேடக் கூட வெளியில் செல்லாமல், கூட்டிலுள்ள குஞ்சுகளை காவல் காக்கத் தொடங்கின. வெளியே எங்கேயும் போக பயந்தன.

மேலே ஒருமுறை பார்த்துவிட்டு குட்டிகளுடன் மேய்ந்து கொண்டிருந்த பன்றியிடம் வந்தது நரி.

“பன்றியே…! நீ உன் குட்டிகளை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும். மேலே இருக்கிற இரண்டு கழுகுகளும் மகா பொல்லாத கழுகுகள். அவை நீ இல்லாத சமயத்தில் உன் குட்டிகளைக் கொத்திக் கொன்று சாப்பிட்டுவிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கின்றன!” என்றது நரி.

பன்றி ஒரேயடியாக பயந்து போய்விட்டது. குட்டிகளை எல்லாம் தன் காலின் கீழ் அழைத்துக் கொண்டது. மரத்தடியிலேயே இருக்க வேண்டும். குட்டிகளை தனியாக விட்டு விட்டு போய் விடக்கூடாது.

கழுகுகள் சாப்பிடவா என் குட்டிகளை கண் போல வளர்க்கிறேன் என்றெண்ணியது பன்றி. அதன் பிரகாரமே இருக்கவும் ஆரம்பித்தது அம்மாப் பன்றி.

ஆண், பெண் கழுகுகளும், அம்மா பன்றியும், பன்றிக் குட்டிகளும் இரை தேடாததால் வாடி இளைத்து, சோர்ந்து, துவண்டு ஒரு நாள் எல்லாமே இறந்து போயின.

நரி விரும்பியதுபோல் நிறைய சாப்பிட கழுகுகளும், பன்றிகளும் அதன் தந்திரத்தால் கிடைத்துவிட்டன.

யார் யாரிடம் நட்பு கொள்ள வேண்டுமென்று யோசித்து நட்புக் கொள்ளாததால் கழுகுகளுக்கும், பன்றிகளுக்கும் நேர்ந்த பரிதாபமான முடிவைப் பார்த்தீர்களா, நல்லவர்களோடு மட்டுமே நட்பு கொள்ள வேண்டும்.

சிறுவர் கதைகள் – பூதம் சொன்ன கதை

முன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும் நல்லவன்; இரக்க குணமுடையவன். இளையவன் யாசகன் மிகவும் கெட்டவன்.

கொஞ்ச நாட்களில் பணக்காரர் இறக்கவே அண்ணனும், தம்பியும் வியாபாரத்தை கவனித்து வந்தனர். அவர்கள் இருவரும் ஒரு முறை ஒரு கிராமத்திற்குப் போய் தமக்கு வரவேண்டிய ஆயிரம் பவுன்களை வசூலித்தனர்.

அதனை ஒரு பையில் போட்டுக் கொண்டு இருவரும் ஊர் திரும்ப ஆற்றங்கரைக்கு வந்து சேர்ந்தனர். படகுக்காரன் எங்கோ போயிருந்ததால் தம்பியிடம் பண மூட்டையைக் கொடுத்து விட்டுச் சற்று கண்மூடித் தூங்கினான் அண்ணன். இதற்குள் தம்பி அதே போல ஒரு பண மூட்டையில் கற்களை வைத்துக் கட்டி எடுத்து ஒளித்துக் கொண்டான்.

சற்று நேரத்திற்கெல்லாம் படகுக்காரன் வரவே தம்பி தன் அண்ணனை எழுப்பி அவரோடு படகில் ஏறி உட்கார்ந்தான். படகும் கிளம்பியது. படகு நடு ஆற்றில் போகும் போது தம்பி ஒரு மூட்டையை எடுத்து ஆற்றில் நழுவ விட்டு, “ஐயோ அண்ணா பண மூட்டை ஆற்றில் விழுந்துவிட்டதே,” எனக் கூறினான்.

“போனால் போகட்டும். அது நம் பணமாக இருந்தால் நமக்கே கிடைக்கும்,” எனக் கூறினான் அமுதன். தம்பியும் தான் தந்திரமாக ஆயிரம் பவுன்களை தட்டி விட்டதாக எண்ணி மகிழ்ந்தான். ஆனால், அவன் அவசரத்தில் ஆற்றில் போட்டது பண மூட்டையைதான். கற்களை வைத்துக் கட்டிய மூட்டைதான் அவனிடம் இருந்தது.

அந்த ஆற்றில் ஒரு பூதம் இருந்தது. தம்பி மூட்டையை ஆற்றில் போட்டதும் ஒரு மீனை உடனே விழுங்கச் சொல்லி கட்டளை இட்டது அது. மீனும் அப்பூதம் சொன்னபடி நடந்தது.

பூதம் தம்பி செய்த மோசடியை புரிந்து கொண்டது. எனவே, அந்தப் பண மூட்டையை எப்படியும் அண்ணனிடம் சேர்த்து விட எண்ணி மூட்டையை விழுங்கிய மீன் எங்கும் போகாதபடி காவல் காத்தது.

அண்ணனும், தம்பியும் காசிக்கு வந்து தம் வீட்டை அடைந்தனர். தம்பி வீட்டில் தனியாக ஓரிடத்திற்குப் போய் தன்னிடமிருந்து மூட்டையை அவிழ்த்துப் பார்த்தான். அதில் கற்கள் இருப்பதைக் கண்டு, “ஐயோ! நான் அண்ணனை ஏமாற்ற எண்ணி நானே ஏமாந்தேனே…” என எண்ணி மனம் புழுங்கினான்.

அன்று சில மீனவர்கள் ஆற்றில் வலை போட்ட போது பூதம் மீனவராக மாறி அந்த மீனை எடுத்துக் கொண்டு அண்ணனின் வீட்டுக்குச் சென்றது. அண்ணன் அவன் கேட்டபடி ஒரு பவுனைக் கொடுத்து அந்த மீனை வாங்கிக் கொண்டார். அதனை அவர் தன் மனைவியிடம் கொடுக்கவே அவள் அதனை இரண்டாக நறுக்கினாள். அதன் வயிற்றிலிருந்து பணமூட்டை வெளியே விழுந்தது.

அதைக் கண்டு திகைத்தான் அமுதன். “இது நம் பணமே. இதனை நம்மிடம் கொடுக்கவே இந்த மீனவன் வந்திருக்கிறான். இவனுக்கு எப்படி இது தெரிந்தது?” என எண்ணி ஆச்சரியப்பட்டான்.

அப்போது, “அமுதா… நீ மிகவும் நல்லவன். இந்த ஊரில் உள்ள ஏழைகளுக்கு நிறைய உதவிகளைச் செய்கிறாய். ஒரு முறை நீங்கள் படகில் சென்றபோது உன் கையில் இருந்து நழுவிய உணவு பொட்டலத்தை உண்டேன்.

“அது எனக்கு மிகுந்த பலத்தைக் கொடுத்தது. அதனால் தான் உன்னுடைய பணமூட்டையை உன் தம்பி வேண்டுமென்றே தூக்கி வீசிய போது அதை விழுங்கும்படி இந்த மீனுக்கு கட்டளை கொடுத்தேன். அந்த மீனையும் எடுத்துக் கொண்டு வந்தேன். நல்லவர்களுக்கு எல்லாமே நல்லதாய் தான் நடக்கும்…” என்று சொல்லி மறைந்தது.

அதை கேட்டு மகிழ்ந்தான் அமுதன். மறைக்காமல் அதில் பாதியான ஐநுõறு பவுன்களைக் தன் தம்பியிடம் கொடுத்தார். தம்பியும் தனது அண்ணனுடைய கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினான்.

சிறுவர் கதைகள் – தொலைந்த மூக்கு

அண்ணன் தங்கை இருவருக்கும் எப்போதும் சண்டை தான். அண்ணன் பரத் மகா குறும்பன். இரண்டாம் வகுப்பில் படிக்கின்றான். தங்கை நந்தினி இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை.சின்னப் பெண். தாய் தந்தை இருவரும் பணி புரிகின்றார்கள். அப்பத்தாவும் தாத்தாவும் இவர்களுடன் இருக்கிறார்கள். பரத் , நந்தினி குடும்பம் இருப்பது ஒரு அடுக்குமாடி குடியிருப்பில். அந்த குடியிருப்பில் மொத்தம் 5 மாடி. மூன்றாவது மாடியில் இவர்கள் குடியிருக்கின்றார்கள்.

ஒரு சனிக்கிழமை காலை அப்பாவும் அம்மாவும் பணிக்கு சென்றபின்னர் பரத்தும் நந்தினியும் விளையாடிக் கொண்டு இருந்தனர். தாத்தா வெளியே தன் நண்பர்களைக் காண கிளம்பினார்

“பரத் தங்கையை சீண்டாமல் விளையாடு. சண்டை போட்டுக்க கூடாது சரியா? தாத்தா சீக்கிரம் வந்துவிடுகின்றேன்”

“சரிங்க தாத்தா” – இருவரும்.

விளையாட்டு சாமான்கள் எடுத்துக்கொண்டு இருவரும் மொட்டைமாடியில் விளையாடச் சென்றனர். நிழலாக இருந்த ஓரத்தில் விளையாடினர்.எந்த பொருள் பரத் எடுத்தாலும் உடனே நந்தினி அது வேண்டும் என்பாள். அப்போது திடீர் என்று பரத் “உஷ் உஷ்” என்று கத்தியபடி ஓடினான்.

“அண்ணா என்ன ஆச்சு?” பயத்துடன் அண்ணன் சட்டைக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள்..

“ஒரு பருந்து வந்தது பார்த்தியா?”

“இல்லையே”

“பெரிய பருந்து”

”அச்சோ அப்புறம்?. ஏன் விரட்டிக்கொண்டு ஓடினீர்கள்?”

“அழக்கூடாது சரியா. அந்த பருந்து உன் மூக்கை கடிச்சி எடுத்துக்கொண்டு போய் விட்டது. அது தான் துரத்திக்கொண்டு சென்றேன். அதற்குள் பறந்தே போய்விட்டது”..

இவன் சொல்லி முடிப்பதற்குள் நந்தினி அழ ஆரம்பித்துவிட்டாள்..”அம்மா என் மூக்கு..என் மூக்கு” என்று அழுதபடி படிக்கட்டுகளில் இறங்கி தன் வீட்டிற்கு சென்றாள். அவள் விட்ட சத்தத்திற்கு அந்த கட்டிடத்தில் உள்ள அனைவருமே பயந்துவிட்டனர். யார் என்ன சொல்லியும் அழுகை நின்ற பாடில்லை. அப்பத்தா அதெல்லாம் ஒன்றும் இல்லை.அண்ணன் விளையாடுகிறான் என்றாள். கேட்கவே இல்லையே. அழுதபடியே இருந்தாள்.கை கால் உதைத்தாள்.

தாத்தா அந்த சமயம் வீட்டிற்குள் வந்தார். “என்னாச்சு பாப்பாக்கு? ஏன் என் தங்கம் அழுகின்றது?”

தன் அழுகையை நிறுத்தி “தாத்தா, நானும் அண்ணனும் விளையாடிக் கொண்டு இருந்தோம்.ஒரு பெரிய பருந்து கறுப்பு நிறத்தில் வந்தது. என் மூக்கை…” மீண்டும் அழுகை…

“அழாமல் சொன்னால் தானே புரியும்…”

“என் மூக்கை கடிச்சி எடுத்துக்கொண்டு போய்விட்டது..ம்ம்ம்..ம்ம்ம்”
நிலைமையை புரிந்து கொண்டார் தாத்தா. “ஓ உன் மூக்கு தானா அது? ” என்றார்.
அமைதியானாள் நந்தினி. “நான் தெருவில் வந்த போது ஒரு பருந்து வந்து என்னிடம் பேசியது.ஒரு அழகான குட்டி பெண்ணின் மூக்கை எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். பாவம் அவள் நல்ல பெண், சமத்து பெண், என்று சொல்லிவிட்டு மூக்கை என்னிடம் கொடுத்து விட்டு பறந்து சென்றது.”

“இதோ பத்திரமாக என் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன்.எங்கே கிட்டவா..கண்ணை மூடிக்கொள்..”

பாக்கெட்டில் இருந்து ஏதோ எடுப்பது போல் பாவனை செய்து அவள் முகத்தில் வைத்து அழுத்தினார்.

“ஆகா. மூக்கு ஒட்டியாச்சே..போய் கண்ணாடியில் பார்.” நந்தினி கண்ணாடியை நோக்கி ஓடினாள்..”படவா..குழந்தையை ஏன் இப்படி ஏமாற்றுகிறாய்” என்று செல்லமாக பரத் கன்னத்தை கிள்ளினார் தாத்தா..

“ஹைய்யா மூக்கு வந்துடுச்சே..ஜாலி..ஜாலி..அண்ணா மூக்கு வந்துடுச்சு…ஜாலி ஜாலி…” மீண்டும் மாடிக்கு சென்று விளையாட துவங்கினர் ஆனந்தமாக.

சிறுவர் கதைகள் – பட்டாணி

ஒரு நாள் ஒரு மூதாட்டி மண் அடுப்பில் வைத்து சமையல் செய்து கொண்டிருந்தாள். அவள் அடுப்பில் வைத்திருந்த தண்ணீர் கொதித்ததால் அதற்குள் சில காய்கறிகளை போட்டாள். அப்போது பட்டாணி அந்தப் சட்டியிலிருந்து வெளியே குதித்து வந்து, “என்னை வேக வைக்கவேண்டாம். என்னை சமைக்கவேண்டாம்” என்று கத்தியது.

“மூதாட்டியோ நீ மரியாதையாக பழையபடி சட்டிக்குள் போகிறாயா? இல்லை உன்னை நசுக்கட்டுமா?” என்றாள்.

ஆனால் மூதாட்டியின் உத்தரவை பட்டாணி கேட்கவில்லை. அங்கிருந்து வேகமாக ஓட்டம் பிடித்தது. அப்போது “நில் நில் ஓடாதே’ உன்னுடன் நானும் வருகிறேன்” என்று இன்னொரு குரல் கேட்டது. பட்டாணி திரும்பிப் பார்த்தது, அப்படிக் கத்தியது என்று சொன்னது எரிந்து கொண்டிருந்த ஒரு துண்டு நிலக்கரி.

“அடுப்பிற்குள் இருந்தால் எனக்கு மூச்சு முட்டுகிறது. அதனால் நானும் உன்னுடன் வெளியுலகைப் பார்க்க வருகிறேன்” என்றது, நிலக்கரி.

“என்ன வெளியுலகைப் பார்க்கப் போகிறாயா?. அப்படியென்றால் என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்”. என்றது கீழே கிடந்த வைக்கோல் ஒன்று.

“சரி, வா போகலாம்” என்று நிலக்கரியும் பட்டாணியும்? வைக்கோலை தங்களுடன் கூட்டு சேர்த்துக் கொண்டன.

மூன்றும் சேர்ந்து நடந்தபோது சாலையின் ஓரிடத்தில் விரிசல் விட்டிருந்தது. அந்த இடத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.

“இனி நாம் தொடர்ந்து செல்ல முடியாது. அதனால் நான் அடுப்பிற்கே போய் விடுகிறேன்” என்றது, நிலக்கரி.

“அப்படியென்றால் நானும் அடுப்பில் எரியும் சட்டிக்குள் போய் விடுவேன்” என்றது பட்டாணி.

“நண்பர்களே சோர்ந்து விடாதீர்கள். நான் இந்த பாலத்திற்கு (விரிசல்) இணைப்பாக இருக்கிறேன். நீங்கள் இருவரும் என்மீது ஏறி நடந்து மறுபக்கம் போய்விடலாம்” என்று நம்பிக்கைïட்டியது, வைக்கோல்.

முதலில் பட்டாணி, வைக்கோல் மீது ஏறி விரிசலின் மறுபக்கத்தை அடைந்தது. ஆனால் எரிந்து கொண்டிருந்த நிலக்கரி, வைக்கோல் மீது ஏறியதும் அது தீப்பிடித்துக் கொண்டது. இதனால் இரண்டும் சேர்ந்து தண்ணீருக்குள் விழுந்தன.

“ஷ்..ஷ்..ஷ்…”தன் மீது எரிந்து கொண்டிருந்த நெருப்பு அணைந்ததும் நிலக்கரி பெருமூச்சு விட்டது.

அந்த வினோத சத்தத்தைக் கேட்ட பட்டாணி சிரிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து அது பலமாகச் சிரித்ததால் வெடித்து சிதறி அதிலிருந்த ஒவ்வொரு பட்டாணியும் ஓட ஆரம்பித்தன.

அந்தப் பட்டாணிகள் அனைத்தும் ஒரு தையல்கடையை நோக்கிச் சென்றன. தையல்காரரிடம் தயவு செய்து எங்களை ஒன்றாக வைத்து தைத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டன.

தையல்காரரும் பட்டாணிகளின் வேண்டுகோளை ஏற்று ஒரு தடித்த நூல் கொண்டு தைத்து விட்டார்.

இதனால் தான் அன்று முதல் பட்டாணியை நாம் உரிப்பதற்கு அதன் மேல் தோலில் நூல் போல் உள்ள பகுதியை உரிக்கவேண்டியிருக்கிறது.

சிறுவர் கதைகள் – கடவுளின் கருணை

கோட்டையூர் என்ற ஊரில் அருணாச்சலம் என்பவன் வாழ்ந்து வந்தான். இவன் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவன். வாழ்க்கையில் இன்பமோ துன்பமோ எது நடந்தா லும் எல்லாம் கடவுள் செயல் என்று சொல்வான்.

இதனால் எதை பற்றியும் கவலைப்படமாட்டான். இறைவன் அருள் இன்றி ஒரு அணுவும் அசையாது என்பது இவனுடைய கொள்கை. அதே ஊரில் தங்கையா என்பவன் வாழ்ந்து வந்தான். இவன் அருணாச்சலத்திற்கு நேர் எதிர்.

கடவுளே இல்லை என்று சொல்லும் கொள்கையுடையவன். வசதிக்கு குறைவில்லை. எனவே, அருணாசலத்தை பார்க்கும் போதெல்லாம் மிகவும் கிண்டல் செய்வான். காரணம் அருணாச்சலம் ஏழை. அதனால் அவனது கிண்டலுக்கு கேட்கவேண்டுமா?

நீ நம்பி இருக்கிற கடவுள் உன்னை மட்டும் ஏழையாக வைத்துவிட்டு என்னை மட்டும் பணக்காரனாக படைத்திருக்கிறான் பார்த்தாயா? இப்படியெல்லாம் பேசி நக்கல் செய்வான்.

அதற்கு அருணாச்சலம் எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். அதை இறைவனை தவிர யார் அறிய முடியும் என்று சொல்வான். இப்படியாக தங்கையா கிண்டல் செய்வதும் அருணாச்சலம் பதில் சொல்வதுமாக இருந்தான்.

ஒரு நாள் உச்சி வெயில் மண்டையை பிளந்தது. அப்போது அந்த வழியாக குடை பிடித்து கொண்டு வந்து கொண்டிருந்தான் தங்கையா. குடை வாங்க வசதியில்லாத அருணாச்சலம் வெயிலில் வேர்வை வழிந்தோட வந்து கொண்டிருந்தான். அவனை கண்டதும் அருணாச்சலத்திற்கு ஏக குஷி.

வழக்கம் போல் அருணாச்சலத்தை வம்புக்கு இழுத்தான். “”என்ன அருணாச்சலம் வெயிலில் வேர்க்க விறுவிறுக்க எங்க போயிட்டு வர்ற? எல்லாம் கடவுள் செயல் என்று சொல்லும் உனக்கு ஒரு குடை கொடுக்க வேண்டும் என்று அந்த கடவுளுக்கு தெரியாதா! என்னய்யா சாமி?” என்று நக்கல் செய்தான்.

வெயில் கொடுமை ஒரு பக்கம்; அவனது தொடர் தொல்லை ஒரு பக்கம் சேர்ந்து கொண்டு அருணாச்சலத்தை எரிச்சல் படுத்தியது.

“”அந்த கடவுளின் கருணை இல்லையென்றால் உன் கையில் குடை இருந்தாலும் நீ அதை பிடித்து செல்ல முடியாது. அதை கையில் வைத்து கொண்டு தலை காய ஓடுவாய் என்பதை மட்டும் மறந்துவிடாதே. இறைவனது கருணையை எப்போதும்
கிண்டல் செய்யாதே,” என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தான்.

பெரிய தத்துவம் சொல்றான் என்று சிரித்து கொண்டே நடந்தான் தங்கையா. சிறிது துõரம் கூட நடந்திருக்கமாட்டான் அதற்குள் வெறி நாய் ஒன்று அவனை துரத்த ஆரம்பித்தது. உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்தான் தங்கையா. நாயோ பயங்ரமாக துரத்தியது.

குடையை பிடித்து கொண்டு ஓடுவதற்கு சிரமமாக இருந்தது. எனவே, குடையை மடக்கி கையில் வைத்து கொண்டு ஓட்டமாக ஓடி உயிர் தப்பிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

அப்பொழுதுதான் அவன் மனதில் அருணாச்சலம் சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

கடவுளின் கருணை இல்லாவிட்டால் கையில் குடை இருந்தாலும் பிடிக்கமுடியாது என்பதை உணர்ந்தான். அவனை அறியாமல் ஒருவித பயம் அவனை ஆட்கொண்டது. அன்றிலிருந்து கடவுளின் அருளை நம்ப ஆரம்பித்தான் தங்கையா.

சிறுவர் கதைகள் – தன்னலமற்ற சேவை
சிறுவர் கதைகள் – தன்னலமற்ற சேவை

முன்னொரு காலத்தில் வேங்கைபுரி என்ற நாட்டை வேந்தன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவர் தமது நாட்டில் இறைவனுக்காக மிகப் பெரிய ஆலயம் ஒன்றை அமைக்க எண்ணினார். இதுவரை எவருமே கட்டியிராதவாறு மிக அழகிய கோயில் கட்டுவதன் மூலம் தமது புகழ் பல்லாண்டு காலம் புகழுடன் விளங்கும் என்பது அவருடைய விருப்பம்.
இதற்காக நாடெங்கிலுமிருந்து கைதேர்ந்த சிற்பிகளை வரவழைத்தார். கோயில் கட்டுவதற்கான கற்களையும் பாறைகளையும் கொண்டு வரச் செய்தார்.

சிற்பிகள் வேலையைத் தொடங்கினர். கல்லுளிகளின் ஓசை கேட்கலாயிற்று. கோயில் வேலை துரிதமாக நடைபெற்று வந்தது. மன்னன் நாள்தோறும் கோயில் வேலையை வந்து பார்வையிடுவார். நாளுக்கு நாள் கோயில் கட்டும் வேலை வளர்ச்சி பெறுவது கண்டு உள்ளம் பூரிப்படைந்தான்.

பல நாட்களுக்குப் பின்னர் ஒரு வழியாகக் கோயில் கட்டி முடிந்தது. அழகிய கோபுரமும் கோபுரத்தில் உள்ள சிற்பங்களும் பார்ப்பவர் உள்ளத்தைப் பரவசமடையச் செய்யும்படியாக விளங்கின. மன்னன் இதனைக் கண்டு பூரிப்படைந்தான். கோயில் பணி பூர்த்தியானதும் மிகப் பெரிய சலவைக்கல் ஒன்றில் கோயிலைக் கட்டிய தனது பெயரைப் பொன்னால் பொறிக்கச் சொன்னான். அதனைக் கோபுர வாசற்படியில் எல்லோர் கண்களிலும் படும்படியாகப் பதித்து வைக்கச் சொன்னான்.

அன்று இரவு அரசன் துõங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு கனவு கண்டான். கனவில் இறைவன் தோன்றினார். மன்னன் கட்டிய கோயிலும் தோன்றியது. அதில் மன்னன் பெயர் பொறிக்கப் பெற்ற சலவைக் கல்லும் இருந்தது.

இறைவன் நேரே மன்னன் பெயர் பொறிக்கப்பட்டிருந்த சலவைக் கல்லின் அருகே சென்றார். மன்னன் பெயரை அழித்துவிட்டு வேறு யாரோ ஒரு பெண்மணியின் பெயரை எழுதிவிட்டுச் சென்றார்.

மன்னன் திடுக்கிட்டுக் கண் விழித்தான். நேரே கோயிலுக்குச் சென்றான். சலவைக் கல்லைப் பார்த்தான். அவனுக்குத் துõக்கிவாரிப் போட்டது. ஆம், அவன் பெயர் அழிக்கப்பட்டு யாரோ ஊர் பேர் தெரியாத ஒரு பெண்மணியின் பெயர் அதில் பொறிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்ட அரசனுக்கு ஒருபுறம் அவமானமாகவும் மறுபுறம் வேதனையாகவும் இருந்தது. “இவ்வளவு பாடுபட்டுப் பெரும் பொருள் செலவு செய்து இந்தக் கோயிலைக் கட்டினேன். முடிவில் என்னுடைய பெயர் பொறிக்கப்படாமல் வேறு யாரோ ஒரு பெண்மணியின் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறதே!’ என்று வேதனையடைந்தான். காவலர்களை அனுப்பி அந்தச் சலவைக் கல்லில் பெயர் பொறித்துள்ள பெண்மணியை எங்கிருந்தாலும் தேடி அழைத்து வருமாறு கட்டளையிட்டான்.

காவலர்களும் நகர் பூராவும் சுற்றித் திரிந்து கடைசியில் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள ஒரு குடிசையில் தன்னந்தனியாக வசித்து வந்த ஒரு மூதாட்டியை அழைத்து வந்தனர். அவள் பெயர் தான் அந்தச் சலவைக்கல்லில் பொறிக்கப்பட்டிருந்தது.

அந்த மூதாட்டியைப் பார்த்த அரசன், “”அந்தச் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டிருக்கும் பெயர் உங்களுடையதுதானா?” என்று கேட்டான்.

கிழவி கண்களை நன்கு துடைத்துக் கொண்டு சலவைக்கல்லைப் பார்த்தாள். பிறகு, “”ஆம் அரசே அது என்னுடைய பெயர் தான்… தவறுதலாகப் பொறிக்கப் பட்டுவிட்டது போல் இருக்கிறது!”

“”இல்லை அம்மா, என் பெயர் தான் முதலில் அந்தச் சலவைக் கல்லில் பொறிக்கப்பட்டது. இறைவனே வந்து என் பெயரை அழித்துவிட்டுத் தங்கள் பெயரை இதில் பொறித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அதன் காரணம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை,” என்றான் அரசன்.

“”நான் இந்தப்பக்கம் வந்தது கூட இல்லை… அப்படியிருக்க இதில் என் பெயர் ஏன் பொறிக்கப்பட்டிருக்கிறது?” என்று வியப்புடன் கேட்டாள் கிழவி.

“”தாயே, இந்தக் கோயில் பணியில் நீங்கள் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் இறைவன் தங்கள் பெயரை இதில் பொறித்திருக்கமாட்டார். தாங்கள் செய்த தொண்டு என்னவென்று கூறுங்கள்!” என்றான் அரசன்.

நெடுநேரம் யோசனை செய்து பார்த்த கிழவி, “”மன்னா! இந்தக் கோயில் பணிக்காக நான் ஒன்றும் செய்யவில்லை ஆனால், ஒன்று மட்டும் செய்திருக்கிறேன். இந்தக் கோயில் கட்டுவதற்கான கற்கள் மரங்கள் முதலியவற்றை ஏற்றிவரும் வண்டிகள் நாள்தோறும் என் வீட்டுப் பக்கமாகத் தான் வரும். அந்த சமயத்தில் வண்டியோட்டிகளுக்குத் தாகந்தீரத் தண்ணீர் கொடுப்பேன்; மோர் கொடுப்பேன். குதிரைகளுக்குச் சிறிது புற்களை கொடுத்து தண்ணீர் காட்டுவேன். அவ்வளவுதான் நான் செய்தது,” என்றாள் கிழவி.

“”தாயே! நான் வெறும் புகழுக்காக இந்தக் கோயிலைக் கட்டினேன். தாங்களோ புகழை விரும்பாமல் தொண்டு செய்தீர்கள். எனவே, தான் என் பெயரை அழித்துவிட்டு இறைவன் தங்கள் பெயரைப் பொறித்துள்ளார். தன்னலமற்ற தங்கள் தொண்டினை இந்தக் கோயிலில் உள்ள சலவைக்கல் என்றென்றும் எடுத்துக் காட்டும். வாழ்க தங்கள் புகழ்!” என்று கூறிய மன்னன், அந்தக் கிழவிக்கு நிறைய பொருள் பரிசாகக் கொடுத்து அனுப்பினான்.

சிறுவர் கதைகள் – புத்திசாலி பெலிக்ஸ்
சிறுவர் கதைகள் – புத்திசாலி பெலிக்ஸ்

ஒரு ஊரிலே ஏழைத் தாய் ஒருத்தி வாழ்ந்து வந்தாள். அவள் மிகவும் அன்பானவள். அவளுக்கு ஒரே ஒரு மகன் இருந்தான். அவனது பெயர் பெலிக்ஸ். அம்மாவைப் போலவே அன்பான குணங்கள் நிறைந்தவன். ஆனால், நல்ல பலசாலி. நாளுக்கு நாள் பலம் மிக்கவனாக அவன் வளர்ந்து வந்தான்.

அந்த ஊர் அரசன் மிகவும் கர்வம் பிடித்தவன்; இரக்கமில்லாதவன். ஏழைகளைத் துன்புறுத்துவதில் இன்பங் காண்பவன்.

எல்லாவிதமான போர் முறைகளையும் கற்றுத் தேர்ந்து கொண்டான். அங்கிருந்த எல்லா வீரர்களையும் அவன் சண்டையிட்டுத் தோற்கடித்தான். அதனால் அங்குள்ள மக்கள் எல்லாரும் அவனுக்கு “மகாவீரன்’ என்ற பட்டத்தைச் சூட்டினர். மகாவீரன் பெலிக்ஸ் தன்னுடைய பலத்தையும் ஆற்றலையும் தவறான விஷயங்களுக்காக ஒரு போதும் பயன்படுத்தவில்லை. மக்களின் நன்மைக்காகவே தன் வீரத்தை பயன்படுத்தி வந்தான். கொடிய காட்டு மிருகங்கள் அந்த ஊரின் வயல்களுக்குள் புகுந்து நாசஞ் செய்த போது அவன் அவற்றை வேட்டையாடிக் கொன்றான். இதனால் மக்கள் அவன் மீது மேலும் அன்பு கொண்டனர்.

இவனது வீரச்செயல் அரசனின் காதுகளில் வீழ்ந்தது. அரசனுக்கு அவன் மீது வெறுப்பு ஏற்பட்டது. இப்படியே இவனது புகழை வளரவிட்டால் தனக்கும் ஆபத்து ஏற்படும் என்று எண்ணினான். எனவே, பெலிக்ஸ்சை எப்படியும் அழித்துவிட நினைத்தான் அரசன்.
பெலிக்ஸ்சை எப்படி அழிப்பது என்று அவன் யோசித்தான். பெலிக்ஸ்சை போன்ற பலசாலியோடு மோதுவதற்கு யாரும் முன்வர மறுத்துவிட்டனர். அரசனுக்கு இதனால் மிகுந்த ஏமாற்றமாகி விட்டது.

தந்திரத்தாலும், வஞ்சனையாலுந்தான் இவனை வெற்றி கொள்ள வேண்டுமென்ற முடிவுக்கு அரசன் வந்தான்.

பெலிக்ஸை அரசன் கொல்ல நினைத்த விஷயம் அவனுக்கு தெரிய வந்து கொஞ்சமும் தாமதியாது அவன் தன்னுடைய தாயையும் அழைத்துக் கொண்டு மாயமாக அங்கிருந்து மறைந்து விட்டான். அங்குள்ள தன் பிரியமான தோழர்களான சின்னஞ்சிறு குழந்தைகளை விட்டுப் பிரிந்து போவது தான் பெலிக்ஸ்க்கு மிகவும் கவலையை அளித்தது.

ஒரு நாள்—
அந்த ஊருக்கு ஒரு பூதம் வந்தது. அந்த பூதம் மிகவும் பிரமாண்டமானதாயிருந்தது. அது மூச்சுவிட்டால் புகை புஸ்புஸ்ஸென்று கிளம்பிற்று. வாயைத் திறந்தாலோ நெருப்புக் கக்கிற்று. பெரிய முட்கள் நிறைந்த பனைமரம் போல அதன் வால் நீண்டிருந்தது. தனது அச்சமூட்டும் வாலினால் அது மிருகங்களையும் சுழற்றிப் பிடித்து அடித்துக் கொன்றது.
இதனால் ஊர் மக்கள் வெளியே வர அஞ்சினர். வீட்டுக்குள்ளேயே அடைந்து கொண்டனர்.

அவர்கள் வயலுக்குப் போகாததால் பயிர் செய்ய முடியவில்லை. இதனால் அந்த ஊரில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. பெலிக்ஸ் ஒருவனாலேயே அந்த விலங்குப் பூதத்தைக் கொல்ல முடியும் என நினைத்த அரசன் அவனைத் தேடிக் கண்டுபிடிக்க ஒற்றர்களை எல்லாத் திசைகளுக்கும் அனுப்பி வைத்தான். அவர்களும் பெலிக்ஸ் இருக்குமிடத்தை அறிந்து கொண்டனர். அரசனுக்குச் செய்தியை உடனே அறியப்படுத்தினர்.

உடனே அரசன், பெலிக்ஸ்சை தனது அரண்மனைக்கு இழுத்து வரும்படி கட்டளையிட்டான். படை வீரர்கள் அவனைக் கைது செய்ய முயன்றனர். பெலிக்ஸ் அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு திசையில் வீசி எறிந்தான். படை வீரர்கள் எதுவும் செய்ய முடியாமல் அங்கிருந்து திரும்பி ஓடிப் போய் அரசனிடம் நடந்தவற்றைக் கூறினர்.
அரண்மனையில் எல்லாரும் ஒன்றாகக் கூடி யோசித்தனர். கடைசியில் பெலிக்ஸ்சிடம், விலங்கு பூதத்திடம் இருந்து தங்களைக் காப்பாற்றும்படி கேட்க குழந்தைகளை அனுப்பி வைப்பதென்று முடிவாயிற்று. அப்படியே அவன் இருந்த வீட்டிற்கு குழந்தைகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தாங்கள் பூதத்திற்குப் பயந்து வாழ்வதை குழந்தைகள் பயத்தோடு அழுதபடியே கூறியதைக் கேட்க பெலிக்ஸ் மிகவும் இரக்கம் கொண்டான். அந்தக் குழந்தைகளின் கண்ணீரை அவன் துடைத்து அவர்களுக்கு ஆறுதல் வார்த்தை சொன்னான். விலங்குப் பூதத்தோடு தான் சண்டையிட்டு அதை வெல்வதாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்தான்.
பின்னர் அவன் பனிரெண்டு பீப்பாய் நிறையத் தாரையும், பனிரெண்டு வண்டியில் வைக்கோலையும் சேகரித்தான். பெரியதொரு தண்டாயுதத்தையும் எடுத்துக் கொண்டான். பூதத்தின் குகை வாசலிலே இவற்றோடு போய் நின்ற அவன், பூதத்தை தன்னோடு சண்டைக்கு வரும்படி சவால் விட்டான்.

பூதம் ஆவென்று வாயைப் பிளந்து சீறியபடி அவனைக் கடிக்க வந்தது. உடனே கொதிக்க வைத்த தார்க் குழம்பை அதன் வாயினுள்ளே ஊற்றினான். அந்தத் திரவம் பூதத்தின் பற்களையும் வாயையும் கெட்டியாகப் பிடித்து, அது வாயைத் திறக்காமல் செய்துவிட்டது. தனது கையில் தண்டாயுதத்தை எடுத்து அதன் முகம், உடலெங்கும் ஓங்கி அடிக்கத் தொடங்கினான். ஏதும் செய்ய முடியாத பூதம் தனக்கு இரக்கம் காட்டும்படி மன்றாடியது. தீமைக்கு ஒருபோதும் இரக்கம் காண்பிக்கக் கூடாது என்று எண்ணினான் பெலிக்ஸ். பெரிய ஏரை அந்த பூதத்தின் மேல் பூட்டி, நகரத்தின் வயல் முழுவதையும் நன்றாக உழுது முடித்தான் பெலிக்ஸ்.

இவ்வளவு நாளும் வீட்டுக்குள் அடைந்து கிடந்த மக்கள், வெளியே வந்தனர். பெலிக்ஸ்சை வாழ்த்தினர். ஆடிப்பாடி மகிழ்ந்தனர். குழந்தைகள் பெலிக்ஸ்சை சுற்றி நின்று மகிழ்ந்தனர்.
பிறகு பூதத்தை மன்னித்து அதை அந்த ஊரை விட்டே போய்விடும்படி கூறினான்.

பூதமும் அங்கிருந்து போய்விட்டது. இவ்வளவு காலமும் கொடியவனாக நடந்து வந்த அரசன் தனது குணத்தை மாற்றிக் கொண்டான். பெலிக்ஸை மிகவும் போற்றினான். மீண்டும் அவனையும் அவனது தாயாரையும் தனது ஊருக்கே வரச் செய்தான். பெலிக்ஸை அரசன் தனது படைத் தளபதியாக நியமித்து ஆனந்தமாக வாழ்ந்து வரலானான்.

சிறுவர் கதைகள் – துணிச்சலான சிறுவன்

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது பழமொழி.

சின்ன வயதிலேயே அந்தச் சிறுவன் மிகவும் துரு துருவென்று இருப்பான்.ஒருநாள் அவனும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு மரத்திலே ஏறி, மரக்கிளையில் இருந்து தலை கீழாகத் தொங்கி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

விபரீதமான இந்த விளையாட்டைப் பார்த்த அந்தப் பையனுடைய தாத்தா, பையன்கள் கீழே விழுந்தால் உயிருக்கு ஆபத்தே என்று நினைத்தார். உடனே அனைவரும் கீழிறங்கி வாருங்கள் என்று சப்தம் போட்டார்.

அவர்கள் வந்ததும், ” இந்த மரத்திலே ஒரு பேய் இருக்கிறது. இப்படி மரத்தில் ஏறி விளையாடினால் அது உங்கள் அடித்துக் கொன்றுவிடும். அதனால் மரத்தில் ஏறாமல் கீழேயே விளையாடுங்கள்” என்று பயமுறுத்தினார்.

இதைக் கேட்டு எல்லா சிறுவர்களும் பயந்துவிட்டார்கள். நமது சுட்டிப் பையனும் சரி சரி என்று தலையை ஆட்டினான். ஆனால், அவர் அந்தப் பக்கம் போனதும், மறுபடியும் மரத்திலே ஏற ஆரம்பித்தான்.

அவனது நண்பர்கள், “ஐயையோ…ஏறாதே….பேய் உன்னை அடித்துவிடும்” என்று கத்தினார்கள். ” இந்த மரத்திலே பேய் இருக்கிறதாக தாத்தா சொன்னார்…சரிதான். ஆனாலப்படிப் பேய் இருந்திருந்தால் இன்னேரத்துக்கு அது நம்மை அடித்துக் கொன்றிருக்கும். தாத்தா சும்மா நம்மைப் பயமுறுத்தியுள்ளார்.” என்று சிறுவர்களுக்குப் பதில் கூறினான்.

அதற்கு மற்ற சிறுவர்கள், ” அது சரி…உன் தாத்தா சொன்னபோது…சரி என்று தலையை ஆட்டினாயே…அது ஏன்?” என்று கேட்டதற்கு, “எதிர்த்துப் பேசினால் அவர் மனது கஷ்டப்படுமே. அதனால் தான் அவரை சமாதானப்படுத்த சரி என்றேன்”.

குழந்தைகளா, மரத்தில் ஏறிய அந்தப் பையன் யார் தெரியுமா?…..

எண்ணற்ற இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் சுவாமி விவேகானந்தர்தான், அந்தச் சிறுவன். அதோ படத்தில் இருக்கிறார் தானே, அவரே தான். அவரைப் பற்றி நிறைய கதைகல் இருக்கின்றன, விரைவில் சொல்கிறேன்.

சிறுவர் கதைகள் – குரங்கும் ஒற்றுமையற்ற பூனைகளும்

ஒரு நாள் இரண்டு பூனைகள் சேர்ந்து ஒரு வீட்டிலிருந்து ஒரு அப்பத்தை எடுத்தன. அந்த அப்பத்தைச் சாப்பிடுவதற்காக இரண்டாகப் பிரிக்கும் போது ஒரு பூனை, அப்பம் சரி சமமாகப் பிரிக்கப் பட வேண்டும் என்று மற்றப் பூனையுடன் சண்டையிட ஆரம்பித்தது.

இரண்டு பூனைகளும் சண்டை பிடித்துக் களைத்துப் போயின. அதனால் தொடர்ந்து சண்டை பிடிக்காமல், யாரிடமாவது சென்று அப்பத்தைப் பங்கிடுவோம் என்று தீர்மானித்தன.

அதனால் இரண்டு பூனைகளும், அப்பத்தைப் பங்கு பிரிப்பதற்காக ஒரு குரங்கிடம் சென்றன. குரங்கும், அப்பத்தைச் சமமாகப் பிரிக்க ஒரு தராசை எடுத்து வந்தது.

அப்பத்தை இரண்டாக வெட்டித் தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு துண்டை வைத்து நிறுத்துப் பார்த்தது. தராசின் ஒரு தட்டு கீழே தாழ்ந்தது. அப்பொழுது குரங்கு, அந்தத் தட்டில் இருந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்துத் தான் சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது. இப்பொழுது, மற்றத் தட்டுக் கீழே தாழ்ந்தது. அந்தத் தட்டிலிருந்த அப்பத்தையும் குரங்கு எடுத்துக் கடித்து விட்டுத் தட்டில் போட்டது.

இப்படியே தட்டுகள் மாறி மாறித் தாழ்ந்தன. குரங்கும் மாறி மாறி அப்பத் துண்டுகளைக் கடித்துக் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தது.

இப்படியே அப்பம் குறைவதை பார்த்த பூனைகள், தங்கள் தவறை உணர்ந்து பங்கு பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று மீதமுள்ள அப்பத்தைத் தரும் படி கேட்டன. ஆனால் குரங்கு, மீதமுள்ள அப்பம், தான் இது வரை செய்த வேலைக்குக் கூலி, என்று சொல்லி விட்டு அதையும் வாயில் போட்டுக் கொண்டது.

ஒற்றுமையற்ற பூனைகள் வெட்கத்துடனும் வேதனையுடனும் திரும்பிச் சென்றன.

குழந்தைகளே! ஒரு பூனையாவது கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் இத்தனை நஷ்டம் ஏற்பட்டிருக்குமா? விட்டுக் கொடுத்தல் பிறரிடம் நமக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும், இறைவனுக்கும் அதுவே பிடிக்கும்.

சிறுவர் கதைகள் – குருவின் நல்ல உள்ளம்
சிறுவர் கதைகள் – குருவின் நல்ல உள்ளம்

ஒருநாள், முனிவர் சித்தானந்தர் தம் சீடர்களுடன் நகரத்தின் தெருக்கள் வழியாக நடந்து கொண்டிருந்தார். அவர் சிறந்த ஞானி. எனவே, மக்கள் அவரை மிகவும் மதித்தனர். அவர் சீடர்கள் அவரைத் தொடர்ந்து சென்றனர்.

ஒரு பணக்கார பெண்மணியின் வீட்டருகே அவர்கள் நடந்தனர். அப்போது ஒரு சிறிய பெண் குழந்தை அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தது. குழந்தைகள் மேல் மிகுந்த அன்புடையவர் ஞானி. அவர் குழந்தையை அன்புடன் நோக்கினார்.

குழந்தை ஒரு தட்டு நிரம்ப ரோஜா மலர்களைக் கொண்டு வந்து சித்தானந்தர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது.

மலர்கள், மணம் தரும் பொருட்கள், தைலங்கள் என்றால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார் என்பது சீடர்களுக்குத் தெரியும். ஒரு ரோஜா மலரை மட்டும் எடுத்துக் கொண்டு தட்டை சீடர்களிடம் நீட்டினார். சீடர்களுக்கு சொல்லவா வேண்டும். தலைக்கு இரண்டு மூன்றாக அவர்கள் மலரை அள்ளிக் கொண்டனர்.

மலர்களை அர்பணித்த குழந்தை மகிழ்ச்சியுடன் இல்லம் சென்றது. சீடர்கள் புடை சூழ சித்தானந்தரின் உலா தொடங்கியது.

ஒரு வயதான மூதாட்டி ஞானியை தன் வீட்டுக்குள் வரவேற்றாள். சீடர்கள் உள்ளே சென்று அமர்ந்தனர். ஒரு பணியாள் ஆப்பிள் பழத்தட்டை அவர் முன் வைத்தார். ஒரு பழத்தை எடுத்துச் சுவைத்தார் சித்தானந்தர். பழம் மிகவும் சுவையாக இருந்தது. அவைகளை எடுத்து தன் சீடர்களுக்கு வழங்கினார்.

சீடர்கள் பழங்களை சுவைத்து உண்டனர். ஞானியைத் தொடர்ந்து செல்வதால் அவர்களுக்கு அவ்வப்போது நல்ல சுவையான பொருட்கள் கிடைத்து வந்தன. எனவே, இந்த சந்தர்ப்பங்களை சீடர்களில் எவரும் தவறவிடுவதில்லை.

செல்வந்தர்கள் வாழும் வீதிகளை எல்லாம் அவர்கள் கடந்து சென்றனர். இப்போது வசதி குறைந்தவர்கள் இடம்; நகரின் ஒதுக்குப் புறமான பகுதி.

ஏழை விதவைப் பெண்ணொருத்தி அங்கே நின்று கொண்டிருந்தாள். அவள் ஞானியை தன் சிறிய வீட்டுக்கு வருமாறு அழைத்தாள். அவளது அழைப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அவரும் சீடர்களும் உள்ளே சென்று அமர்ந்தனர்.

“”ஐயனே, நீங்கள் இதைச் சாப்பிட வேண்டும்,” என்று கூறி ஒரு தட்டை நீட்டினாள்.

தட்டைப் பெற்றுக் கொண்ட ஞானி அதில் திராட்சைப் பழங்கள் இருந்ததை பார்த் தார்.
ஒரு பழத்தை எடுத்து வாயில் போட்டார். சுவைத்து உண்டார். சீடர்கள் பார்த்துக் கொண்டே இருந்தனர்.

மீண்டும் ஒரு பழத்தைப் பிய்த்து வாயில் போட்டு மென்று சுவைத்தார். இப்படியாக எல்லா பழத்தையும் தான் ஒருவராகவே தின்று தீர்த்தார். தங்களுக்கு அப்பழத்தை வழங்காமல் தானே உண்டதைக் கண்ட சீடர்கள் வியப்படைந்தனர்.

திராட்சைப் பழம் வழங்கிய ஏழைக் கைம்பெண்ணுக்கு நன்றி கூறினார் ஞானி. பின்னர் வெளியே வந்து நடக்கத் தொடங்கினார். சீடர்கள் அவரோடு நடந்தனர்.

சீடர்கள் முகத்தில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. “இதுவரை எல்லா பொருட்களையும், உணவையும் பகிர்ந்து கொண்ட குரு திராட்சைப் பழங்களை மட்டும் தன்னந்தனியாய்த் தானே உண்டது ஏன்?’ எல்லாருடைய உள்ளத்திலும் இக்கேள்வி எழுந்து நின்றது.
சீடர் ஒருவர் வாய் திறந்து இக்கேள்வியைக் கேட்டே விட்டார். “”நீங்கள் ஏன் தனியாகச் சாப்பிட்டீர்கள்? எங்களுக்கு ஒரு பழங்கூட தரவில்லையே… ஏன்?”

“”அந்த திராட்சைப் பழம் மிகவும் புளிப்பாய் இருந்தது. எனவே, நான் ஒருவனாக அவற்றைத் தின்றேன்,” என்றார் குரு.

“”உங்களுடைய சுகத்திலும் துக்கத்திலும் நாங்கள் பங்கு கொண்டிருக்கிறோம். அப்படியிருக்க, சுவையற்றதை நீங்கள் தனியாக உண்ண வேண்டும்; சுவை மிகுந்ததை மட்டும் எங்களோடு பகிர்ந்துண்ண வேண்டுமா? இது நீதியாகுமா?”

“”என்னுடைய சுகத்திலும் துக்கத்திலும் நீங்கள் பங்கு கொள்ள விரும்புவது உண்மையாக இருக்கலாம். ஆனால், இதில் ஓர் ஏழைக் கைம்பெண் இடையே இருக்கிறாள். அவள் தந்த திராட்சைப் பழங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டால், “இந்தப் பழம் புளிக்கிறது’ என்று நீங்கள் சாப்பிடும் போதே சொல்லி விமர்சனம் செய்து அந்தப் பெண்ணின் மனதைப் புண்படுத்திவிடுவீர்கள். அவளது மனது படாத பாடுபட்டு நொந்து போய்விடும். அதனால் தான் திராட்சைப் பழங்களை உங்களுக்குத் தரவில்லை,” என்று சொன்னார் முனிவர்.

எவருடைய மனதையும் புண்படுத்தக் கூடாது என்ற கருத்தில் தங்கள் குரு எத்தனை உண்மையாக இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ந்தனர் சீடர்கள்.

சிறுவர் கதைகள் – பேயால் வந்த வாழ்வு
சிறுவர் கதைகள் – பேயால் வந்த வாழ்வு

முன்னொரு காலத்தில் மதின் என்ற இளைஞன் பொன்னேரி என்ற சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தான். இவனது பெற்றோர் இறந்துவிட்டனர். இனி அந்த ஊரில் இருக்கப் பிடிக்காமல் பக்கத்திலுள்ள ஊருக்கு வேலை தேடிச் சென்றான். உச்சி வெயில் அதிகமானது.

அப்போது ஆலமரத்தடியில் படுத்து துõங்கினான். அவனை யாரோ தட்டி எழுப்புவது போல் இருந்தது. துõக்கம் கலைந்து விழித்த போது ஒரு பேய் மரத்தின் கிளையில் உட்கார்ந்து கொண்டிருந்தது.
அதைப் பார்த்ததும் அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது. பேய்… பேய்… என்று அலறினான்.

“”தம்பி பயப்படாதே… நானும் உன்னைப் போல் மனிதன் தான். தற்சமயம் பேயாக இருக்கிறேன்.”

மதினுக்கு கை கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தான்.

“”உன் பெயரென்ன தம்பி?”

“”மதின்!”

“”எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்?”

“”வேலைத் தேடி நகரத்திற்குச் சென்று கொண்டிருக்கிறேன்.”

“”நானும் உன்னைப் போல் இருந்தவன் தான். நுõறு வருடங்களுக்கு முன் வாழ்ந்து வந்தேன். ஒரு நாள் இந்த காட்டிற்கு வந்தேன். இங்கே தவம் செய்த முனிவரைப் பார்த்து கேலியாக சிரித்தேன். ஆத்திரம் அடைந்த முனிவர் என்னை பேயாகும்படி சபித்துவிட்டார்.

“”பிறகு நான் அவரைப் பார்த்து மன்றாடினேன்.

“”ஐயா, தயவு செய்து இந்தச் சாபத்திற்கு ஏதேனும் விமோசனம் சொல்லுங்கள். இப்படி மனித பேயாய் நான் எத்தனை நாட்கள் திரிவது?” என்று கேட்டான்.

“”சரி, நீ கெஞ்சிக் கேட்டுக் கொள்வதால் உனக்கு விமோசனம் தருகிறேன். உன் கதையை எந்த மனிதன் பொறுமையோடு கேட்கிறானோ அன்று நீ மீண்டும் மனிதனாவாய். பிறகு விண்ணுலகுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, இம்மனிதப் பிறவியிலிருந்து விடுதலை அடைவாய்…” என்றார்.

“”பல காலம் நான் மற்றவர்களிடம் என் கதையை சொல்ல முயன்றேன். அவர்கள் என்னைப் பார்த்ததும் ஓடிவிடுகிறார்கள்” என்று கூறிய பேய் மறைந்து போய் அழகான வாலிபன் தோன்றினான். சிறிது நேரத்தில் அவன் மேல் எழுந்து வானத்தை நோக்கிச் சென்றான். என்னை “”எப்போது நினைத்துக் கொண்டாலும் உனக்கு நல்லதே நடக்கும். நீ எடுத்த காரியத்திலும் வெற்றி அடைவாய்,” என்ற பேய் மேகத்தின் நடுவில் மறைந்து போனது.

மதினுக்கு எல்லாமே கனவு போல் இருந்தது.

புதிய நகரை அடைந்தான். அங்கே நாடே விழாக்கோலம் கொண்டது. என்ன விஷயம் என்று கேட்டான்.

“”உனக்குத் தெரியாதா? அரசரின் பிறந்த நாள் விழாவை நாளை கொண்டாட இருக்கின்றனர். வாண வேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் எல்லாம் நடக்கும். ஏழைகளுக்கு அன்னதானம் நடக்கும். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் அரண்மனை உபசரிப்பும் கொடுப்பார்கள்,” என்றான்.

சிலம்பம், மல்யுத்தம் என நடந்த அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அரசரின் சிறப்பு விருந்தினராக விரும்பிய மதின் பேயை மனதில் நினைத்துக் கொண்டான். பேயின் உதவியால் எல்லா போட்டிகளிலும் வென்றான்.

அவனுக்கு ஓர் அறை கொடுக்கப்பட்டது. அரண்மனை உணவும் வழங்கப்பட்டது. ஒரு வாரம் தங்கி விருந்துண்டு தன் அறைக்குச் சென்றான் மதின்.

அங்கிருந்த அழகிய மஞ்சத்தில் படுத்தவுடன் உறக்கம் வந்துவிட்டது. நடு இரவில் விழித்த மதின், தன் அறையில் சிறிது நேரம் உலாவினான். அப்போது சுவற்றில் காட்டெருமையின் கொம்பு பதிக்கப்பட்டுள்ளதைக் கண்டான். அதைப் பிடித்துப் பார்த்தபோது “கிர்ர்…’ என்ற சப்தம் கேட்டது.

அவனுக்கு மிகவும் ஆச்சரியமாகப் போய்விட்டது. அதைப் பிடித்துத் திருகிய போது, தரையில் ஒரு சுரங்க வழி ஏற்பட்டது. ஒரு தீபத்தைக் கையில் எடுத்துக் கொண்டு படிக்கட்டுகளில் இறங்கினான்.

கீழே பெரிய அறை ஒன்று இருந்தது. எங்கு பார்த்தாலும் போர் ஆயுதங்களும் முத்து மாலைகளும் தங்க மாலைகளும் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தன.

துõரத்தில் யார் நின்று கொண்டிருப்பது? அமைச்சர் ராஜசேகர்… இங்கு என்ன செய்கிறான்? உற்றுப் பார்த்தான். நகைகள், பணத்தை திருடி பையில் போட்டுக் கொண்டிருந்தான்.

அங்கிருந்த வாளை உருவி, அவனை வெட்டச் சென்றான் மதின்.

அதற்குள் ரகசிய வழியில் தப்பி விட்டான் அமைச்சன்.
பிறகு மதின் தன் இருப்பிடத்திற்குச் சென்று காட்டெருமைக் கொம்பைத் திருகி தரையை முன்பு போல மூடச் செய்தான்.

இதை எப்படியாவது அரசரிடம் சொல்ல வேண்டும் என்று மனதில் உறுதி செய்து கொண்டான்.

இரவோடு இரவாக அமைச்சரை பற்றி மன்னனிடம் கூறினான்.
பல நாட்களாக பொக்கிஷ அறையில் திருடு போவதை அறிந்திருந்த அரசர், எத்தனையோ காவல் போட்டும் கண்டுபிடிக்க முடியாத ரகசியத்தை மதின் சொன்னதும் மகிழ்ந்தார். உடனே அமைச்சரை கைது செய்ய ஆட்களை அனுப்பினார் மன்னர்.

குடும்பத்துடன் தப்ப இருந்த அமைச்சரை கைது செய்து சிறையில் அடைத்தான் அரசன். அரசனது முன்னோர்கள் வைத்திருந்த இந்த ரகசிய வழி அரசனுக்கே தெரியவில்லை. இதை எப்படியோ அறிந்த அமைச்சன், இத்தனை நாட்களாக ரகசிய வழியில் நுழைந்து நகை திருடிய விஷயம் இப்போது தான் புரிந்தது. மதினை பாராட்டிய மன்னன் அவனையே தன் அமைச்சனாக்கிக் கொண்டான். பேயால் தனக்கு கிடைத்த வாழ்வை எண்ணி மகிழ்ந்தான் மதின்.

சிறுவர் கதைகள் – விவேகமான வெள்ளாடு

உழவர் ஒருவர் வீட்டில் வெள்ளாடும், செம்மறி ஆடும் இருந்தன. அவை இரண்டும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. எங்கே சென்றாலும் ஒன்றாகவே சென்றன.

உழவருக்கு அவை நன்றாகவே உழைத்தன, ஆனாலும் அவன் சரியாக சப்பாடு போடுவதில்லை, ஒரு நாள் தோட்டத்தில் விளையும் சுவையான செடிகளை அவை கடித்து சாப்பிட்டன், அதை கண்டு கோபம் கொண்ட உழவர், ஆத்திரமாக “நீங்கள் இனிமேல் இங்கே இருக்கக் கூடாது. இருந்தால் உங்களைக் கொன்று விடுவேன். எங்காவது போய் விடுங்கள்” என்று விரட்டினார்.

இரண்டு ஆடுகளும் தங்கள் பொருள்களை ஒரு சாக்குப் பையில் போட்டன. அந்தப் பையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டன.

செம்மறி ஆடு வலிமை உள்ளதாக இருந்தது. ஆனால் கோழையாக இருந்தது.
மாறாக வெள்ளாடோ வீரத்துடன் விளங்கியது. ஆனால் வலிமை இல்லாமல் இருந்தது.
சிறிது தூரம் நடந்த இரண்டும் ஒரு வயலை அடைந்தன. அங்கே இறந்து போன ஓநாய் ஒன்றின் தலை கிடந்தது.

அந்த ஓநாயின் தலையை எடுத்துக் கொள். நீதான் வலிமையுடன் இருக்கிறாய், என்றது வெள்ளாடு.

என்னால் முடியாது நீதான் வீரன். நீயே எடு, என்றது செம்மறி ஆடு.

இரண்டும் சேர்ந்து அந்த ஓநாயின் தலையைச் சாக்கிற்குள் போட்டன.

சாக்கைத் தூக்கிக் கொண்டு இரண்டும் நடந்தன. சிறிது தொலைவில் நெருப்பு வெளிச்சத்தை அவை பார்த்தன.

அந்த நெருப்பு எரிகின்ற இடத்திற்குப் போவோம். குளிருக்கு இதமாக இருக்கும். ஓநாய்ளிடம் இருந்தும் நாம் தப்பித்துக் கொள்ளலாம், என்றது வெள்ளாடு.

இரண்டும் நெருப்பு இருந்த இடத்தை நோக்கி நடந்தன. அருகில் சென்றதும் அவை அதிர்ச்சி அடைந்தன.

அங்கே மூன்று ஓநாய்கள் உணவு சமைத்துக் கொண்டிருந்தன.

ஓநாய்கள் தங்களைப் பார்த்து விட்டன. தப்பிக்க வழியில்லை, என்பதை உயர்ந்தன ஆடுகள்.

நண்பர்களே! நீங்கள் நலந்தானே என்று தைரியத்துடன் கேட்டது வெள்ளாடு.

அச்சத்தால் செம்மறி ஆட்டின் கால்கள் நடுங்கின.

நண்பர்களா நாங்களா? எங்கள் உணவு தயார் ஆகட்டும். அதன் பிறகு உங்களைக் கவனிக்கிறோம். எங்கே ஓடிவிடப் போகிறீர்கள்? என்றது ஒரு ஓநாய்.

இவற்றிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று சிந்தித்தது வெள்ளாடு.

செம்மறி ஆடே! இன்று நாம் கொன்றோமே ஓநாய்கள். அவற்றில் ஒன்றின் தலையை எடுத்து இவர்களிடம் காட்டு. நாம் யார் என்பது புரியும்? என்று உரத்த குரலில் சொன்னது அது.
செம்மறி ஆட்டிற்கு அதன் திட்டம் புரிந்தது. சாக்கிற்குள் கையை விட்டு ஓநாயின் தலையை எடுத்தது.

ஏ! முட்டாள் ஆடே! பெரிய ஓநாயின் தலையை எடுத்துக் காட்டு என்றேன். நீ சிறிய தலையை எடுத்துக் காட்டுகிறாயே, பெரியதை எடு, என்று கத்தியது வெள்ளாடு.

அந்தத் தலையைச் சாக்கிற்குள் போட்டது செம்மறி ஆடு. மீண்டும் அதே தலையை வெளியே எடுத்துக் காட்டியது. கோபம் கொண்டது போல் நடித்தது வெள்ளாடு. இருக்கின்ற ஓநாய்த் தலைகளில் பெரியதை எடு. மீண்டும் நீ சிறிய தலைகளையே எடுத்துக் காட்டுகிறாய். இதைப் போட்டுவிட்டு பெரிய தலையாக எடு, என்று கத்தியது.

அந்தத் தலையைப் போட்டுவிட்டு அதே தலையை மீண்டும் வெளியே எடுத்தது செம்மறி ஆடு.
இதைப் பார்த்த மூன்று ஓநாய்களும் நடுங்கின.

இவை சாதாரண ஆடுகள் அல்ல. நீ அவற்றைக் கேலி செய்திருக்கக் கூடாது. சாக்கிற்குள் இருந்து ஒவ்வொரு ஓநாய்த் தலையாக எடுக்கின்றன, என்றது ஒரு ஓநாய். மூன்றும் சிறிது நேரம் அமைதியாக இருந்தன.

ஆடுகளைப் பார்த்து ஓநாய் ஒன்று, உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி, குழம்பு நன்றாகக் கொதிக்கிறது, இன்னும் சிறிது தண்ணீர் ஊற்ற வேண்டும், நான் சென்று தண்ணீர் கொண்டு வருகிறேன், என்று புறப்பட்டது.

சிறிது நேரம் சென்றது. இரண்டாவது ஓநாய், அந்த ஓநாயிற்கு நம் அவசரமே தெரியாது. போய் எவ்வளவு ஆகிறது? நான் சென்று அதை அழைத்துக் கொண்டு தண்ணீருடன் வருகிறேன், என்று புறப்பட்டது.

பரபரப்புடன் இருந்த மூன்றாவது ஓநாய், இருவரும் எங்கே தொலைந்தார்கள்? நான் சென்று அவர்களை அழைத்து வருகிறேன் என்று புறப்பட்டது. தப்பித்தோம் என்ற மகிழ்ச்சியில் ஓட்டம் பிடித்தது.

செம்மறி ஆடே! நம் திட்டம் வெற்றி பெற்று விட்டது. ஓநாய்களிடம் இருந்து தப்பித்து விட்டோம். விரைவாகச் சாப்பிட்டுவிட்டு இங்கிருந்து புறப்படுவோம். உண்மை தெரிந்து மீண்டும் அவை இங்கே வரும், என்றது வெள்ளாடு.

இரண்டும் அங்கிருந்த உணவை வயிறு முட்ட உண்டன. மகிழ்ச்சியுடன் ஏப்பம் விட்டுக் கொண்டே புறப்பட்டன. ஓடிய மூன்று ஓநாய்களும் வழியில் சந்தித்தன.

ஆடுகளுக்குப் பயந்தா நாம் ஓடி வருவது? என்று கேட்டது ஒரு ஓநாய்.

நம்மை அவை ஏமாற்றி இருக்கின்றன. நாமும் ஏமாந்து விட்டோம், என்றது இன்னொரு ஓநாய்.

மூன்றாவது ஓநாய், நாம் உடனே அங்கு செல்வோம், அவற்றைக் கொன்று தின்போம், என்றது. மூன்று ஓநாய்களும் அங்கு வந்தன. உணவை உண்டு விட்டு இரண்டு ஆடுகளும் ஓடி விட்டதை அறிந்தன.

புத்திசாலித்தனத்தால் ஆடுகள் உயிர் தப்பியதை கண்டு ஏமாந்து போன ஓநாய்கள் பற்களை நறநறவென்று கடித்தன. பாவம் அவற்றால் வேறு என்ன செய்ய முடியும்?

உயிர்தப்பிய ஆடுகள் தன் எஜமானனை நினைத்துப் பார்த்தன, அவரிடம் இருந்தவரை உயிருக்கு ஆபத்து ஒன்றும் ஏற்படவில்லை, எனவே அவரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் சேர்ந்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தன, அதே நேரத்தில் ஆடுகளை பிரிந்த உழவர் தன் தவற்றை உணர்ந்து ஆடுகளுக்கு நன்றாக தீனி போடுவது என்று தீர்மானித்து ஆடுகளை தேடி காட்டிற்கு வந்தார், எதிரே வந்த ஆடுகள் ஓடி போய் உழவரிடம் மன்னிப்பு கேட்டது, உழவரும் மன்னிப்பு கேட்டு, ஆடுகளை வீட்டிற்கு அழைத்து வந்து ருசியான இலைகளை கொடுத்தார்.

நீதிக் கதைகள் – சிங்கமும் நரியும்

ஒரு கா‌ட்டி‌ல் பல ‌வில‌ங்குக‌ள் வா‌ழ்‌ந்து வ‌ந்தன. அ‌தி‌ல் ஒரு ‌சி‌ங்கமு‌ம், ந‌ரியு‌ம் வெகு நாளாக உண‌வி‌ன்‌றி அலை‌ந்து ‌தி‌ரி‌ந்து கொ‌‌ண்டிரு‌ந்தன. ஒரு நா‌ள் இர‌ண்டு‌ம் நேரு‌க்கு நே‌ர் ச‌ந்‌தி‌த்து த‌த்தமது ‌நிலைமையை புல‌ம்‌பி‌க் கொ‌ண்டன.

இறு‌தியாக இர‌ண்டு‌ம் சே‌ர்‌ந்து வே‌ட்டையாடுவது எ‌ன்ற முடிவு‌க்கு வ‌ந்தன. அத‌ற்கு ‌சி‌ங்க‌ம் ஒரு ‌தி‌ட்ட‌ம் வகு‌த்து‌க் கொடு‌த்தது. அதாவது, ந‌ரி பலமாக ச‌த்த‌ம் போ‌ட்டு க‌த்த வே‌ண்டு‌ம். அ‌ந்த ச‌த்த‌த்தை‌க் கே‌ட்டது‌ம் கா‌ட்டு ‌வில‌ங்குக‌ள் ‌மிர‌ண்டு அ‌ங்கு‌ம் இ‌ங்கு‌ம் ஓடு‌ம். அ‌ப்படி ஓடு‌ம் ‌மிருக‌ங்களை ‌சி‌ங்க‌ம் அடி‌த்து‌க் கொ‌‌ல்ல வே‌ண்டு‌ம்.

இ‌ந்த யோசனை ந‌ரி‌க்கு ‌மிகவு‌ம் ‌பிடி‌த்‌திரு‌ந்தது. அதனா‌ல் உடனே ஒ‌ப்பு‌க் கொ‌ண்டது. அத‌ன்படி, ந‌ரி தனது பய‌ங்கரமான குர‌லி‌ல் க‌த்த‌த் துவ‌ங்‌கியது. அத‌ன் ‌வி‌சி‌த்‌திரமான ச‌த்த‌த்தை‌க் கே‌ட்ட கா‌ட்டு ‌வில‌ங்குக‌ள் அ‌ங்கு‌ம் இ‌ங்கு‌ம் வேகமாக ஓடின. அ‌‌ந்த சமய‌த்‌தி‌ல் ‌சி‌ங்க‌ம் ‌நி‌ன்‌றிரு‌ந்த ப‌க்க‌ம் வ‌ந்த ‌வில‌ங்குகளை எ‌ல்லா‌ம் ‌சி‌ங்க‌ம் வே‌ட்டையாடி‌க் கொ‌‌ன்றது.

ஒரு க‌ட்ட‌த்‌தி‌ல் ந‌ரி க‌த்துவதை ‌நிறு‌த்தி ‌வி‌ட்டு ‌சி‌ங்க‌த்‌தி‌ன் ப‌க்க‌ம் வ‌ந்தது. அ‌ங்கு வ‌‌ந்தது‌ம் ‌ந‌ரி‌க்கு ஏக‌ப்ப‌ட்ட ச‌ந்தோஷ‌ம். ஏனெ‌னி‌ல் ‌‌நிறைய ‌மிருக‌ங்க‌‌ள் அ‌ங்கு இற‌ந்து ‌கிட‌‌‌ந்தன. அதை‌ப் பா‌ர்‌த்தது‌ம் ந‌ரி, தா‌ன் அகோரமாக‌க் க‌த்‌தியதா‌ல்தா‌ன் இ‌ந்த ‌மிருக‌ங்க‌ள் இற‌ந்து‌வி‌ட்டன எ‌ன்று ‌க‌ர்வ‌ம் கொ‌ண்டது.

சி‌ங்க‌த்‌தி‌ன் அரு‌கி‌ல் வ‌ந்து, எ‌ன்னுடைய வேலையை‌ப் ப‌ற்‌றி எ‌ன்ன ‌நினை‌க்‌கிறா‌ய்.. நா‌ன் க‌த்‌தியே இ‌த்தனை ‌மிருக‌ங்களை கொ‌ன்று‌வி‌ட்டே‌ன் பா‌ர்‌த்தாயா எ‌ன்று க‌ர்வ‌த்துட‌ன் கே‌ட்டது.

அத‌ற்கு ‌சி‌ங்க‌ம்.. ஆமா‌ம்.. உ‌ன் வேலையை‌ப் ப‌ற்‌றி சொ‌ல்ல வே‌ண்டுமா எ‌ன்ன? ‌நீதா‌ன் க‌த்து‌கிறா‌ய் எ‌ன்று தெ‌ரியாம‌ல் இரு‌ந்‌திரு‌ந்தா‌ல் ஒரு வேளை நானு‌ம் ப‌ய‌த்‌திலேயே செத்து‌ப் போ‌‌யிரு‌ப்பே‌ன் எ‌‌ன்று பாரா‌ட்டியது.

 

 

நீதிக் கதைகள் – ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு

ஒரு கோவில் கோபுரத்தில் சில நீல நிறப் புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் வாழ்ந்து வந்தன. நீலப் புறாக்கள் தாம் வெள்ளைப் புறாக்களைவிட அழகாக இருப்பதாக எண்ணி கர்வர்த்துடன் இருந்தன. சிலநாட்களின் பின் அக் கோபுரத்தில் திருத்த வேலகள் ஆரம்பமானது.

அதனால் எல்லாப் புறாக்களுக்கும் கோபுரத்தை விட்டு வெளியேற வேண்டி ஏற்பட்டது. புறாக்கள் எல்லாம் வேறொரு இடம் தேடி ஒரே திசையில் பறந்து சென்றன.  அவைகள் பறந்து செல்லும் போது ஓரிடத்தில் வெய்யிலில் உலர்வதற்காக பரப்பப்பட்ட நெற்களைக் கண்டன. கண்டதும் அனைத்தும் ஒன்றாக அவ்விடத்திற்கு பறந்து சென்று காயப் போடப்பட்ட நெற்களை தின்று தீர்த்து விட்டு அருகே இருந்த ஒரு பெரிய மரம் ஒன்றில் அமர்ந்தன.

தானியத்தை காய்வதற்காக பரப்பி விட்டு சென்ற வேடன் திரும்பி வந்து பார்த்த பொழுது தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.

நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் வலை ஒன்றைத் தயார் செய்து அந்த இடத்தில் விரித்து தானியங்களையும் போட்டு புறாக்கள் வரும்வரை காத்திருந்தான்.

அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலைகளில் சிக்கிக் கொண்டன.

சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் எல்லாப் புறாக்களும் ஒன்றாக இறக்கையை விரித்து பறக்க ஆரம்பித்தது. வலையையும் புறாக்கள் தூக்கி கொண்டு உயரப் பறந்து சென்றன.

இதனைக் கண்ட வேடன், “அய்யய்யோ… புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே…” என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான்.

பறந்து செல்லும் போதே, அதில் இருந்த நீலப் புறாக்கள் கர்வத்தோடு, “எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்… அவ்வளவுதான்” என்று கூறின. உடனே வெள்ளை நிறப் புறாக்களும் தம் பங்குக்கு, “நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக்கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது” என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்தன. வீ ண் கர்வத்தினால் சண்டையிட்டுக் கொண்டு பறந்ததினால் அவற்றின் பறக்கும் வேகம் குறைய ஆரம்பித்தது, அதனால் அவை ஒரு மரக்கிளையில் வலையுடன் சிக்கிக் கொண்டது.

இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக அவற்றின் “ஒற்றுமை நீங்கியதால் அனை வருக்கும் தாழ்வு” என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி” என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை பிடித்து தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.

 

நீதிக் கதைகள் – நரியின் தந்திரம் பாட்டி வடை

ஒரு ஊரில் ஒரு பாட்டி வடை சுட்டு விற்று வந்தாள்.

பாட்டி வடைகளைச் சுட்டு ஒரு தட்டில் எல்லோருக்கும் தெரியும்படி பரப்பி வைத்திருந்தாள். இதனை ஒரு காகம் கண்டது. காகத்திற்கும் வடை மேல் ஆசை வந்தது.

பாட்டி வடைசுடும் கவனத்தில் இருந்தபோது அந்தக் காகம் சந்தற்பத்தை பயன் படுத்தி ஒரு வடையை தூக்கிச் சென்று ஒரு மரத்தின் மீது உட்காந்தது.

இதனைக் ஒரு நரி கண்டது. நரி எப்படியும் அந்த வடையை தந்திரமாக காகத்திடம் இருந்து பெற்றுக் கொள்ள நினைத்தது.

நரி உடனே அந்த மரத்தடிக்குச் சென்று காகத்தைப் பாத்து, நீ என்ன அழகாக இருக்கிறாய்.

உன் சொண்டு தனி அழகு. உனது குரலும் மிகவும் இனிமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். உனது இனிமையான குரலில் ஒரு பாட்டு கேட்க ஆசைப்படுகிறேன் என்று சொன்னது.

மிகவும் அழகான பறவை என்று தன்னை நரி கூறியதால் காகமும் நரியை சந்தோசப் படுத்த எண்ணியது. உடனே காகம் தன் வாயில் வடை இருப்பதை மறந்து தனது இனிமையான குரலில் :”கா” “கா” “கா” என்று கத்தியது.

அப்போது காகத்தின் வாயில் இருந்த வடை கீழே விழுந்து விட்டது. அதனைக் கண்ட நரி தன் தந்திரத்தில் காகம் ஏமாந்து விட்டது என நினைத்துக் கொண்டு வடையை கவ்வி எடுத்துக் கொண்டு பற்றை மறைவில் இருந்து உண்டது.

மற்றவர்களின் தந்திர வார்தையை நம்பி காகம் ஏமந்தது.

நீதிக் கதைகள் – முயலும் சிங்கமும்

சிங்கம் ஒரு காட்டு மிருகம். அதை மிருகங்களின் இராசா என்றும் கூறுவர்.

அது தாவர உணவு உண்ணும், மான், மரை, முயல் போன்ற சாதுவான மிருகங்களை வேட்டையாடி அவற்றின் மாமிசத்தை விரும்பி உண்ணும்.

ஒரு காட்டில் வாழ்ந்து வந்த சிங்கம் ஒவ்வொருநாளும் பல மிருகங்களை வேட்டையாடி தின்று வந்தது.

இதனை கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் வாழ்ந்து வந்தன.

சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொருநாளும் கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி ஆலோசனை செய்தது.

சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்குத் நன்கு தெரியும்.

அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினம் ஒரு மிருகமாக போவதற்கு தீர்மானித்தன.

எல்லா மிருகங்களும் சிங்கத்தின் குகைக்குச் சென்று தாம் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகவும். அதனால் சிங்கராசா இரை தேடி அலையத் தேவையில்லை. நாமே தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வருகின்றோம் என தெரிவித்தன.

அத்துடன் நீங்கள் பல மிருகங்களை ஒரு நாளில் கொன்றால் நாங்கள் எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோ. பின்பு உங்களுக்கு உணவுகிடையாமல் நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவீர்கள் என்றன, இதனை கேட்ட சிங்கராசாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது.

அன்றிலிருந்து ஒவ்வொரு மிருகம் சிங்கத்திற்கு இரையாகச் சென்றது,

ஒருநாள் ஒரு முயலின் முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாகச் சென்றது.

அதனால் சிங்கம் மிகுந்த கோபத்துடன் இருந்தது.

சிங்கம் முயலைப் பார்த்து நீ ஏன் தாமதமாகினாய் என கர்ச்சித்தது.

அதனைக் கேட்ட முயலார் நடுக்கத்துடன் “சுவாமி” நான் வரும் வழியில் வேறொரு பெரிய சிங்கம் என்னை பிடிக்க கலைத்தது. நான் பதுங்கி இருந்துவிட்டு இப்பதான் வாறேன் என்றது.

என்னைவிட பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று இறுமாப்புடன் கேட்டது.

அதற்கு “ஆம் சுவாமி” வாருங்கள் காட்டுகின்றேன் என்று சிங்கத்தை அழைத்துச் சென்று ஒரு கிணற்றைக் காட்டி இதற்குள்தான் அந்த பெரிய சிங்கம் இருந்தது என்று கூறியது.

அதனை நம்பிய சிங்கம் கிணற்றை எட்டிப் பாத்தது. அப்போது சிங்கத்தின் நிழல் (பிம்பம்) வேறொரு சிங்கம் கிணற்றினுள் இருப்பது போல் தெரிந்தது. சிங்கம் அதைப் பார்த்து கர்ச்சித்தது.

பிம்பமும் கர்ச்சித்தது. சிங்கத்திற்க்கு ஆத்திரம் பொங்கியது.

இதோபார் உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என கூறிக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்தது.

சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி மாண்டது.

முயலின் சமயோசித முயற்சியால் மற்றைய மிருகங்களும் காப்பாற்றப்பட்டன.

நீதிக் கதைகள் – முதலையும் குரங்கும்

ஒரு காட்டில் ஒரு குரங்கு வசித்து வந்தது. அந்த காட்டின் நடுப் பகுதியில் ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் கரையில் ஒரு நாவல் மரம் நின்றது. அதில் இருந்த நாவல் பழங்களைத் தின்று குரங்கு உயிர் வாழ்ந்து வந்தது.

அக்காட்டின் ஒரு பகுதில் பெரிய ஆறு ஒன்று ஓடியது. அந்த ஆற்றில் எப்போதுமே நீர் பெருக்கெடுத்து ஓடும். ஆற்றிற்கு மறுபக்கத்தில் இருக்கும் காடு மிகவும் செழிப்பாகக் காணப்பட்டதால் அங்கு போய் பார்க்க வேண்டும் என்று குரங்கிற்கு ஆசை ஏற்பட்டது. ஆனால் குரங்கிற்கு அந்த ஆற்றைக் கடந்து போக பயமாக இருந்தது.

ஒருநாள் ஆற்றில் இருந்த முதலை ஒன்று நாவல் பழம் தின்று கொண்டிருந்த குரங்கைப் பார்த்து ‘நாவல் பழம் மிகவும் ருசியாக உள்ளதா?’ எனக் கேட்டது.

குரங்கும்..”முதலையாரே! உமக்கும் சில நாவல் பழம் பறித்துத் தருகிறேன். சாப்பிட்டுப் பாருங்கள்” என்று நாவல் பழங்கள் சிலவற்றை பறித்து ஆற்றில் வாயைப் பிளந்துக் கொண்டிருந்த முதலையின் வாயில் போட்டது. முதலையும் பழத்தை ருசித்து சாப்பிட்டது. அவற்றைச் சாப்பிட்ட முதலை இந்த சுவையான பழங்களை உண்ணும் முதலையின் ஈரன் மிகவும் ருசியாக இருக்கும் என எண்ணியது. அதனால் முதலை குரங்குடன் நண்பனாகப் பழகி அதன் ஈரலை உண்ண திட்டம் போட்டது

குரங்காரே நீர் எனக்கு நல்லபழங்களை தந்து என் பசியை தீர்த்தீர் உமக்கு நான் ஏதும் உபகாரம் செய்யலாம் என்று யோசிக்கின்றேன் என்று கூறியது. அத்துடன் ஆற்றின் மற்றக் கரையில் நல்ல பழ மரங்கள் பழுத்து தூங்குகின்றன. நீர் அங்கு சென்றால் அப் பழங்களை நீயும் உண்டு எனக்கும் தரலாம் அல்லவா என்றது.

அதற்கு குரங்கு எனக்கும் அக்காட்டைப் பார்க்க வேண்டும் என்று பல நாளாக ஆசை இருக்கு ஆனால் எனக்கு இந்த ஆற்றைக் கடந்து போகதான் பயமாக இருக்கிறது என்றது.

அதனைக் கேட்ட முதலை நான் இருக்கும் போது நீ ஏன் பயப்பட வேண்டும். இப்பவே எனது முதுகில் ஏறி இரு நான் உன்னை அக்கரையில் சேர்த்து விடுகின்றேன் என்றது.

வஞ்ச எண்ணம் கொண்ட முதலையின் அன்பு வார்த்தையை நம்பிய குரங்கும் முதலையின் முதுகின் மீது தாவி ஏறி உட்காந்தது.

தனது ஆசையை நிறைவேற்ற இதுதான் தருணம் என்று எணிய முதலை குரங்கை நடு ஆற்றுக்கு கொண்டு சென்று அங்கே குரங்கின் ஈரலை சாப்பிட இருக்கும் தனது ஆசையைச் குரங்கிற்கு சொன்னது. அப்போது குரங்கு பதட்டமடையாது.

அப்படியா! நீ அதை முதலில் சொல்லவில்லையே என்று கூறி நீரில் நனைந்து ஈரல் பழுதாகி விடும் என எண்ணி தான் தனது ஈரலை எடுத்து மரக்கிளையில் வைத்துவிட்டு வந்துவிட்டதாக கூறி; என்னை திரும்ப மரத்தடிக்கு கொண்டு செல் நான் அதை எடுத்து மாட்டிக் கொண்டு வருகிறேன் என்று சமயோசிதமாக கூறியது.

முதலையும் யோசிக்காது..குரங்கு உண்மை சொல்வதாக எண்ணிக் கொண்டு அதை திரும்ப மரத்திற்கு அழைத்து வந்தது

வேகமாக மரத்தில் ஏறிய குரங்கு..’முட்டாள் முதலையே. ஈரலை உடலிலிருந்து கழட்டி மாட்ட முடியுமா? உன்னை நம்பிய என்னை ஏமாற்றிவிட்டாயே..நியாயமா? என்று கேட்டது.

முதலையும் ஏமாந்து திரும்பியது.

நாமும் யாரையும் உடன் நம்பக்கூடாது. அவர்கள் நல்லவர்களா..கெட்டவர்களா என நட்பு கொள்ளுமுன் பார்க்க வேண்டும்.

நீதிக் கதைகள் – யுக்தியால் தாகம் தீர்த்த காகம்

ஒரு கோடை காலம், பகல் நேரம். கொழுத்தும் வெயில் மக்களையும், பறவைகளையும் வருத்தியது. தாகம் எல்லோருக்கும் ஏற்பட்டது

பறவைகள் தங்கள் தாகத்தைத் தீர்க்க தண்ணீர் இன்றி அங்கும் இங்கும் அலைந்து திரிந்தன.

அவற்றில் ஒரு புத்திசாலி காகமும் இருந்தது. அது தண்ணீருக்காக அலையும் போது. ஒரு வீட்டின் வெளியே வாய் குறுகிய குடுவை பாத்திரம் ஒன்றைக் கண்டது.

அங்கே சென்று பார்த்தபோது அப்பாதிரத்தில் கொஞ்சத் தண்ணிர் இருந்ததைக் கண்டு மகிழ்வுற்றது.

உடனே குடுவையின் விளிம்பில் அமர்ந்து, தன் அலகால் தண்ணீரைக் குடிக்கப் பார்த்தது. ஆனால் அதன் அலகிற்கு தண்ணீர் மட்டத்தை எட்ட முடியவில்லை. அதனால் பாத்திரத்தில் இருந்த நீரை காகத்தால் குடிக்க முடியவில்லை.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என காகம் மனம் வருந்தியது. இதைவிட்டால் வேறு இடத்தில் தண்ணீர் கிடக்கவும் மாட்டாது என எண்ணி அதனை எப்படியாவது குடிக்க வேண்டுமென சுற்றுமுற்றும் பார்த்து யோசனை செய்தது. பக்கத்தில் சிறு சிறு கூழாங்கற்கள் கொட்டிக் கிடந்தன.உடனே அதற்கு ஒரு யுக்தித் தோன்றியது. ஒவ்வொரு கூழாங்கற்களாக எடுத்து. அதை அந்தக் குடுவையில் போட்டது.

கூழாங்கற்கள் விழ,விழ..தண்ணீரின் நீர் மட்டம் உயரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் குடுவையின் வாயருகே தண்ணீர் வந்து விட்டது.

உடன், அந்தக் காகம் தண்ணீரில் தன் அலகை வைத்து. தாகம் தீர தண்ணீர் அருந்தி மகிழ்ந்தது.

எந்தப் பிரச்னையாயினும் அதற்கு ஒரு தீர்வு உண்டு. நமது புத்தியை பயன்படுத்தி,யோசித்து..தீர்வு கண்டால் பிரச்னை தீர்ந்து மகிழ்ச்சி ஏற்படும்.

 

நீதிக் கதைகள் – உப்பு வியாபாரியும் கழுதையின் தந்திரமும்

முன்னொரு காலத்தில் ஒரு உப்பு வியாபாரி இருந்தான். அவன் தினந்தோறும் ஒரு கழுதையின் மீது உப்பு மூட்டைகளை ஏற்றி ஊருக்குள் போய் வியாபாரம் செய்து வருவான். போகும் வழியில் ஒரு ஆறு இருந்தது. அந்த ஆற்றைக் கடந்துதான் ஊருக்குள் போக வேண்டும்.

ஒரு நாள் உப்பு வியாபாரி வழக்கம் போல கழுதையின் முதுகில் உப்பு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு கிளம்பிச் சென்றான். வழியில் உள்ள ஆற்றை கழுதை கடந்த போது எதிர்பாராமல் கழுதையின் கால்கள் வழுக்கிவிட்டது. எனவே, கழுதை தடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டது.

கழுதை தவறி விழுந்ததால் அதன் முதுகில் இருந்த உப்பு மூட்டை நனைந்து விட்டது. கழுதையை வியாபாரி மெல்ல தூக்கிவிட்டான். ஆனால், நீரில் மூழ்கியதால் உப்பு மூட்டை நனைந்தது அல்லவா? அது ஒரு சில நிமிடத்தில் அப்படியே, தண்ணீரில் கரைந்து பாதி மூட்டையாகிவிட்டது.

எனவே, கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை வெறும் சாக்குப் போல எடையில்லாதபடி ஆகிவிட்டது. ஆஹா என்ன ஆச்சரியம் இப்போது கழுதை முதுகில் சுமையே தெரியவில்லை.
கழுதைக்கு மிகுந்த சந்தோஷம். ஆனால் வியாபாரிக்கு பெரிய நஷ்டம். உப்பு வியாபாரியும் உப்பு வியாபாரம் செய்ய வழியில்லாமல் கழுதையை ஓட்டிக் கொண்டு வீட்டிற்கு திரும்பினான்.

மறுநாளும் வழக்கம் போல வியாபாரி உப்பு வியாபாரத்திற்கு கிளம்பினான். கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை கழுதைக்கு கனமாக இருந்தது. கழுதை மெல்ல நடந்து ஆற்றுப் பாலம் அருகே வந்தது. திடீரென அதற்கு முந்தைய நாள் நினைவு வந்தது. எனவே, மெல்ல தடுமாறுவது போல செய்து சட்டென்று ஆற்றுக்குள் விழுந்தது.

அடுத்த நிமிடம் கழுதை முதுகில் இருந்த உப்பு மூட்டை நீரில் கரைந்து விட்டது. இன்றும் கழுதைக்கு முதுகில் சுமை இல்லாது போய்விட்டது.

கழுதை தனது தந்திரத்தால் தொடர்ந்து இதையே செய்த வந்தது. இதனால் தினமும் வியாபாரத்திற்குப் போக முடியாமல் வியாபாரி தொடர்ந்து சிரமம் கொண்டான். அவனுக்கு மெல்ல மெல்ல கழுதையின் தந்திரம் புரிந்தது. எனவே, அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தான்.

அன்று கழுதை முதுகில் வழக்கம் போல உப்பு மூட்டையை ஏற்றவில்லை வியாபாரி. மாறாக, பஞ்சு நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை கழுதை முதுகில் ஏற்றினான். கழுதை வழக்கம் போல ஆற்று பாலத்தின் அருகே வந்தது. எதிர்பாராமல் கால் தடுமாறுவது போல தடுமாறி ஆற்றிற்குள் விழுந்தது.

மூட்டையில் இருந்த பஞ்சு நீரில் நனைந்தது. அடக் கஷ்டமே! கழுதையின் முதுகில் இருந்த பஞ்சு மூட்டை முன்பைவிட அதிகமாக கனத்தது. கழுதையும் மிகவும் கஷ்டப்பட்டு ஆற்றைக் கடந்து கரைக்கு வந்து சேர்ந்தது.

தனது ஏமாற்று வேலை இவ்வளவு நாள் தன்னைக் காப்பாற்றிவந்த வியாபாரிக்குத் தெரிந்து விட்டத்தை எண்ணி வெட்கப்பட்டது. இனி நேர்மையாக நடக்க முடிவெடுத்தது.

நாமும். நம்மை நம்பியவர், நம்பாதவர் யாரையும் ஏமாற்றக் கூடாது. அப்படி செய்தால் ஒரு நாள் நம் செயல் அவர்களுக்குத் தெரியவரும். அன்று அவமானம் அடையும் நிலை வரும். அதற்கான தண்டனையும் நமக்குக் கிடைக்கும்.

 

நீதிக் கதைகள் – பேராசை பெரும் நஷ்டம்

கந்தசாமி என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாது போகவே, தங்களிடம் இருந்த பொருட்களை விற்று சாப்பிட வேண்டி ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல…அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.

இந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி …’இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்…இது இப்படியே நீடித்தால்….வறுமை தாங்காது…நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை’ என வேண்டினான்.

அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க….அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும்…அதை விற்று அன்றடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளைக் சந்தோஷமாக கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.

வாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட …அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழிந்தனர்.

ஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று ‘தினம் தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள்.  இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனப் தோன்றியது.

உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக் கிழித்தான். “ஆ” என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒருமுட்டையுமே இருக்கவில்லை. அதன் வயிறில் மற்றைய வாத்துகள்போல் வெறும் குடலே இருந்தது கண்டு ஏங்கினர்.

தினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது.

தங்கள் பேராசையே பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி இறந்தனர்.

ஆசை அளவுக்கு மிஞ்சினா; அது பேராசை. பேராசை பெரு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தரும்.

பேராசை பெரும் நஷ்டம்

நீதிக் கதைகள் – விட்டுக் கொடுத்து நடந்தால் ஒற்றுமை வளரும், நஸ்டம் ஏற்படாது

ஒரு வீட்டில் இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன….ஆனால் அவைகள் இரண்டும் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன.

ஒரு நாள் அப்பூனைகளுக்கு ஒரு அப்பம் கிடைத்தது. அவை இரண்டும் அதை சாப்பிட முனைந்த போது அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.

அதனால் பூனைகள் இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணி வீட்டிற்கு வெளியே வந்தன. அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.

குரங்கிடம் அப்பத்தை கொடுத்து  அதைச் சமமாக பிரித்துத் தரசம்படி கேட்டன. குரங்கும் மிக மகிழ்வுடன் அதற்கு சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்து, அப்பத்தை இரண்டாக பித்து தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு அப்பத்துண்டை வைத்து நெறுத்தது.

அப்போது ஒரு அப்பத் துண்டு சிறிது பெரிதாக இருந்ததினால் அந்தத் துண்டு இருந்த தட்டு சற்று கீழே பதிந்தது. உடனே அந்தக் குரங்கு அந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து சாப்பிட்டு விட்டு மீதியை தட்டில் போட்டது . இப்போது மற்றத் தட்டு கீழே தாழ்ந்தது. அப்போதும் அந்த தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து சிறிது  கடித்து விட்டு மீண்டூம் போட்டது.

இப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ…குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை கடித்துச் சாப்பிட்டது.

அப்பம் குறைவதைக் கண்ட பூனைகள் இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம் நாங்களே பார்த்துக்கொள்கிறோம்” என மீத முள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன.

ஆனால் குரங்கோ, மீதமிருந்த அப்பம் ‘நான் இது வரை செய்த வேலைக்கு கூலி’ என்று சொல்லிவிட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது.

பூனைகள் ஒன்றுக்கொன்று விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக இருந்திருந்தால்…அப்பத்தை சாப்பிட்டு இருக்கலாம். ஒற்றுமையில்லாததால் நஷ்டம் அடைந்தன.

நாமும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து அன்பாக இருந்தால், உள்ளதையும் இழக்காமல் ஒற்றுமையுடனும் இருக்கலாம்.

 

நீதிக் கதைகள் – உருவுகண்டு எள்ளாமை வேண்டும்

உருவத்தில் சிறியவனாக இருப்பதால் அவனை ஏளனம் செய்யக்கூடாது. அவன் வேறு விடையங்களில் வல்லவனாக இருப்பான் என்பதை உண்ர்த்தும் நீதிக்கதை

ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்து வந்தது. அது தனது பலத்தாலும், தோற்றத்தாலும், கர்ஜனையாலும் காட்டில் வசித்த அனைத்து மிருகங்களையும் பயமுறுத்தி வந்தது.
பயம் காரணமாய் அனைத்து மிருகங்களும் சிங்கத்திற்கு கிட்டச் செல்வதில்லை. சிங்கத்தைக் கண்டால் பயந்து ஓடிவிடுகின்றன.

ஆனால் ‘ஈ” ஒன்று பயமின்றி சிங்கத்தின் மீது வந்து அமர்ந்தது.  அதைப் பார்த்ததும் சிங்கம் கோபமுற்று கர்ஜனை செய்தபடியே..’உன்னை என் பற்களால் கடித்துக் குதறுவேன், நகங்களால் விறாண்டுவேன், நசுக்கிப் பொசிக்கிப் போடுவேன் என்றது.

அதற்கு ஈ யோ நீ பலசாலியாய் இருக்கலாம்..உன்னைப் பார்த்து மற்ற மிருகங்கள் பயப்படலாம். ஆனால் நான் பயப்பட மாட்டேன். இன்னும் சொல்லப்போனால்..நீ சொன்னபடி உன்னையே நீ பற்களால் கடித்துக் கொள்ளவும், நகங்களால் விறாண்டிக் கொள்ளவும் செய்வேன்” என்றது.

இதைக் கேட்ட சிங்கம் கோபத்துடன் ஏலுமாயின் அதைச் செய் என் சவால் விட..ஈ பறந்து வந்து சிங்கத்தின் முதுகில் அமர்ந்து அதைக் கடித்தது. ஈ முதுகில் அமர்ந்த போது..அதை விரட்ட சிங்கம்.தன் பற்களால் முயன்ற போது..ஈ பறந்து விட சிங்கம் தன் முதுகைத் தானே கடித்துக் கொண்டது.

ஈ சிங்கத்தின் முகத்தில் அமர்ந்த போது, அதை விரட்ட தன் கால் நகங்களால் முயல..ஈ பறக்க…சிங்கம் தன் நகங்களால் தன் முகத்தையே விறாண்டிக் கொண்டது. இவ்வாறு பலதடவை சிங்கத்தை நன்கு இம்சை செய்து விட்டு ஈ பறந்தது.

சிங்கத்தினால் ஈயை பிடிக்கவோ நசுக்கவோ முடியவில்லை. அதனால் சிங்கம் தன் இயலாஇயை எணி வெட்கப்பட்டது.

அதன் பின்புதான் சிங்கத்திற்கு புரிந்தது..தான் உடலளவில் வீரமாய் இருந்தாலும்..ஒரு சிறு ஈ தன்னை இம்சைப் படுத்தி விட்டதே என்று. .

உருவத்தைக் கண்டு யாரையும் எடை போடக் கூடாது

இதைத்தான் வள்ளுவரும்..

உருவுகண் டெள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னார் உடைத்து

என்றார்.
(பொருள்- உருவத்தால் சிறிதாக இருந்தாலும் அதை கேலி செய்து அலட்சியப் படுத்த்க் கூடாது. பெரிய தேர் ஓடக் காரணமாய் இருப்பது சிறிய அதன் அச்சாணியே)