பரமார்த்த குரு கதைகள் – சொர்க்கம் என்ற சோற்று மூட்டை

4.5/5 - (11 votes)

பரமார்த்தர் எங்கோ வெளியே சென்றிருந்தார். சீடர்கள் மட்டும் திண்ணையில் இருந்தனர். அப்போது புளூகன் ஒருவன் அங்கே வந்தான். திண்ணையில் படுத்தபடி, “அப்பாடா! இப்போதுதான் சொர்க்கத்தில் இருப்பது மாதிரி இருக்கிறது!” என்று கூறினான்.

அதைக் கேட்ட மட்டிக்கு வியப்பாக இருந்தது. “அப்படியானால் நீங்கள் சொர்க்கம் போய் இருக்கிறீர்களா?” என்று கேட்டான்.

“நேராக அங்கே இருந்துதான் வருகிறேன்!” என்றான் புளுகன்.

“அடேயப்பா! எங்களால் சந்திரலோகமே போக முடியவில்லை. நீங்கள் எப்படிச் சொர்க்க லோகம் போய் வந்தீர்கள்?” எனக் கேட்டான், மடையன்.

“சொர்க்கத்தில் யார் யார் இருக்கிறார்கள்?” என்று விசாரித்தான் முட்டாள்.

“உங்கள் குருவுக்குக் குருவான சோற்று மூட்டை அங்கே தான் இருக்கிறார்” என்றான் புளுகன்.

“அப்படியா? அவர் நலமாக இருக்கிறாரா?” என்று கேட்டான் மண்டு.

“ஊகும்! பேர் தான் சோற்று மூட்டையே தவிர சோற்றுக்கே தாளம் போடுகிறார்! கந்தல் துணிகளைக் கட்டிக் கொண்டு, பைத்தியம் மாதிரி திரிகிறார்! பார்ப்பதற்குப் பாவமாக இருக்கிறது!” என்றான் புளுகன்.

“பூலோகத்தில் இருந்த போது சுகமாக இருந்திருப்பார்….. அங்கே போய் இப்படிக் கஷ்டப்படுகிறாரே!.. என்று துக்கப்பட்டான் மூடன்.

“ஐயா நீங்கள் மறுபடி சொர்க்கத்துக்குப் போவீர்களா?” என்று மட்டி கேட்டதும், “ஓ நாளைக்கே போனாலும் போவேன்!” என்றான் புளுகன்.

“அப்படியானால், எங்களிடம் இருக்கிற புதுத் துணிகளை எல்லாம் தருகிறோம். கொஞ்சம் பணமும், சுருட்டும் கொடுக்கிறோம். எல்லாவற்றையும் கொண்டு போய், எங்கள் குருவுக்குக் குருவிடம் தந்து விடுங்கள்.”

“புளுகனோ மகிழ்ச்சியோடு “சரி” என்று சம்மதித்தான். உடனþ ஐந்து சீடர்களும் போட்டி போட்டுக் கொண்டு, மடத்தில் இருந்த துணிமணிகள், சுருட்டு, பணம் பூராவையும் எடுத்து வந்தனர்.

“போகும் வழியில் சாப்பிடுங்கள்” என்று புளி சாதம் தந்தான் மட்டி.

எல்லாவற்றையும் மூட்டை கட்டி எடுத்துக் கொண்ட புளுகன், சொர்க்கம் போவதாகக் கூறி விட்டு, ஓட்டம் பிடித்தான்.

வெளியே சென்றிருந்த பரமார்த்தர் திரும்பி வந்தார். “குருவே! நீங்கள் இல்லாத சமயத்தில் கூட, நாங்கள் புத்திசாலித்தனமான செயல் செய்துள்ளோம்” என்று பெருமையோடு சொன்னான் மண்டு.

உங்கள் “குருநாதரான சோற்று மூட்டை சுவாமிக்கு இனி கவலையே இல்லை!” என்றான் மூடன்.

“சொர்க்கத்தில் இருந்து ஆள் அனுப்பி இருந்தார். அவரிடம் உங்கள் குருவுக்குத் தேவையானதை எல்லாம் கொடுத்து அனுப்பினோம்!” என்று முட்டாள் சொன்னான்.

பரமார்த்த குருக்கோ ஒன்றும் விளங்கவில்லை. தாங்கள் செய்த காரியத்தை சீடர்கள் விளக்கியதும், “அடப்பாவிகளா! ஏன் இப்படிச் செய்தீர்கள்?” எனக் குதித்தார்.

“நாங்கள் நல்லது தானே செய்தோம்?” உங்கள் குருநாதர் பசியால் வாடலாமா?” என்று மட்டி கேட்டான்.

“முட்டாள்களே! எனக்குக் குருநாதரே யாரும் கிடையாது! இது தெரியாதா உங்களுக்கு? எவனோ உங்களை நன்றாக ஏமாற்றி விட்டுப் போய் விட்டானே!” என்று பரமார்த்தர் சொன்னதும், சீடர்கள் எல்லோரும் ‘திரு திரு’ என்று விழித்தார்கள்.

“சீடர்களே! நீங்கள் ஏமாந்ததும் ஒரு வகையில் நல்லது தானே! அதே திட்டத்தைப் பயன்படுத்தி, நம் ஊர் அரசனை நாம் ஏமாற்றி விடலாம்!” என்றார் பரமார்த்தர்.

அப்போதே குருவும், சீடர்களும் அரண்மனைக்குப் போனார்கள்.

“மன்னா! நாங்கள் நேற்று ராத்திரி சொர்க்கம் போய் வந்தோம். அங்கே எல்லோரும் நன்றாக இருக்கிறார்கள். ஆனால் உங்கள் தாத்தா மட்டும் பிச்சை எடுத்துத் திரிகிறார்!” என்று புளுகினார்.

“ஆமாம் அரசே! ராஜ குடும்பத்தில் பிறந்தவர் இப்படிப் பிச்சை எடுக்கலாமா?” என்று மட்டி கேட்டான்.

மடையனோ, “அவரைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது!” என்றான்.

“நாங்கள் மறுபடியும் நாளைக்குச் சொர்க்கலோகமம் போகப் போகிறோம். ஏராளமாகப் பணமும் துணியும் உங்களிடம் இருந்து வாங்கி வரச் சொன்னார்!” என்று புளுகினான் முட்டாள்.

“அப்படியே உயர்ந்த இனக் குதிரையாக இரண்டு வாங்கி வரச் சொன்னார்” என்று தள்ளி விட்டான், மண்டு.

“எல்லாவற்றையும் எங்களிடம் தந்து விடுங்கள். நாங்கள் பத்திரமாகக் கொண்டு போய்க் கொடுத்து விடுகிறோம்!” என்றார் பரமார்த்தர்.

அரசனுக்கோ, கோபம் கோபமாக வந்தது.

“யாரங்கே! இந்த ஆறு முட்டாள்களையும், ஆறு நாளைக்குச் சிறையில் தள்ளுங்கள்!” என்று கட்டளை இட்டான்.

“அரசே! நாங்கள் என்ன தவறு செய்தோம்? செத்துப்போன உங்கள் தாத்தாதான் எங்களை அனுப்பினார்!” என்று ஏமாற்ற நினைத்தார், பரமார்த்த குரு.

அரசனோ, “யாரை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்? இன்னும் என் தாத்தா சாகவே இல்லையே! இதோ உயிரோடு தான் இருக்கிறார்!” என்று சொன்னபடி பக்கத்தில் அமர்ந்திருந்த தாத்தாவைக் காட்டினான்.

“ஐயையோ! அரசரின் தாத்தா செத்து விட்டாரே இல்லையா என்று தெரிந்து கொள்ளாமலேயே இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே!” என்று குருவும் சீடர்களும் அழுதனர்.

One Comment

  1. Superb story
    Reply April 28, 2020 at 8:59 pm

Leave a comment