
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அகாசுரனை வதம் செய்ததும் தேவர்கள் சந்தோசத்தால் எழுப்பிய மங்களகரமான இனிய ஒலி அதிர்வுகள், உயர்நிலை கிரகங்களை எட்டியபோது, அவற்றைக் கேட்ட பிரம்மா, என்ன நடந்தது என்று பார்ப்பதற்காக கீழே இறங்கி வந்தார். அசுரன் கொல்லப்பட்டு கிடப்பதைக் கண்டு, முழுமுதற் கடவுளின் அசாதாரண மற்றும் மகிமை மிக்க லீலைகளைக் கண்டு வியந்தார். அகாசுர வதம் நடைபெற்ற போது கிருஷ்ணரும் அவருடைய நண்பர்களும் ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்களாக இருந்தனர்.
யமுனை நதிக்கரையில் கன்றுகள் புல் மேய, கிருஷ்ணரும் அவரது நண்பர்களும் மதிய உணவை உண்பதற்காக, கிருஷ்ணர் நடுவில் அமர, அவரைச் சுற்றி மற்றவர்கள் உட்கார்ந்தனர். அனைவரும் உணவு உண்பதற்கு ஆரம்பிக்கும் போது அருகாமையில் புல் மேய்ந்து கொண்டிருந்த கன்றுகள் புதிய புல்லைத் தேடி காட்டுக்குள் வெகு தூரம் சென்று விட்டன. அப்போது கிருஷ்ணர், தன் நண்பர்கள் சாப்பிடுவதை விட்டு விட்டு கன்றுகளைத் தேடப் போவதை விரும்பவில்லை. எனவே அவர், தன் நண்பர்களைத் தொடர்ந்து சாப்பிடும் படியாகவும் தான் கன்றுகளைத் தேடிப் போவதாகவும் கூறிச் சென்றார்.
அகாசுரன் கொல்லப்பட்ட நிகழ்ச்சியை தேவர்கள் பெரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தபோது விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து பிறந்தவரான பிரம்மாவும் அந்த சம்பவத்தை பார்க்க வந்திருந் பிரம்மா, கிருஷ்ணரின் மகிமை மிக்க லீலைகளை மேலும் காணும் விருப்பத்துடன் கன்றுகள் எல்லாவற்றையும் திருடி வேறு இடத்துக்கு எடுத்துச் சென்று விட்டார். கிருஷ்ணர் எவ்வளவு தேடியும் கன்றுகளைக் கண்டு பிடிக்க முடியவல்லை. அவர் நீண்ட தூரம் சென்றதால் அவரது நண்பாகளுடனான தொடர்பும் இல்லாமல் போய்விட்டது. ஆனால் அவர் முழுமுதற் கடவுளான படியால் சிறுவர்களையும் கன்றுகளையும் பிரம்மா திருடி இருந்ததை அறிந்தார். பிரம்மா, சிறுவர்களையும் கன்றுகளையும் கொண்டு போய் விட்டதால், தான் மட்டும் எப்படி விருந்தாவனம் செல்வது? தாய்மார்கள் கவலைப் படுவார்களே என கிருஷ்ணர் நினைத்தார்.
தன் நண்பர்களின் தாய்மார்களை திருப்திப் படுத்துவதற்காகவும் முழுமுதற் கடவுளின் சக்தியை பிரம்மா உணரும்படி செய்வதற்காகவும் கிருஷ்ணர், உடனடியாகத் தன்னை இடைச் சிறுவர்களாகவும் கன்றுகளாகவும் தன்னை விரிவு படுத்திக்கொண்டார். அந்த சிறுவர்களது தோற்றம், நடை, உடை, பாவனை போன்று மாற்றிக் கொண்டார். இந்த விஷயங்கள் கிராம வாசிகளுக்கு தெரியாது. விருந்தாவனத்தை அடைந்த பிறகு, கன்றுகள் எல்லாம் தத்தம் கொட்டிலை அடைந்தன. சுpறுவர்களும் தத்தமது தாய்மார்களிடம் வீட்டிற்குச் சென்றார்கள். சிறுவர்கள் எல்லோரும் தாய், தந்தையருடன் வழக்கம் போலவே பழகினார்கள். அவர்களிடம் எந்தவித வேறுபாடுகளும் காண முடியவில்லை. ஒரு வருடமாக கிருஷ்ணர் இவ்வாறு கன்றுகளாகவும் ஆயர்குலச் சிறுவர்களாகவும் வியாபித்திருந்து மேய்ச்சல் நிலங்களுக்குச் சென்று வந்தார்
பிரம்மாவின் ஒரு கணம், நமது கணக்குப்படி ஒரு வருடம். பிரம்மா தனது ஒரு கணத்தின் பின், தாம் சிறுவர்களையும், கன்றுகளையும் திருடியதால் ஏற்பட்ட குழப்பத்தை வேடிக்கை பார்ப்பதற்காக திரும்பி வந்தார். தான் முதலில் கண்ட படியே கன்றுகளும், சிறுவர்களும் கிருஷ்ணரோடு விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார். உண்மையில் அவர், அவைகளை எடுத்துக் கொண்டு போய், தன் மந்திர சக்தியால் உறங்க வைத்திருந்தார். பிரம்மாவுக்கு இது பெரிய குழப்பமாக இருந்தது.
அங்கிருந்த பசுக்களும் கன்றுகளும் சிறுவர்களும் உண்மையானவை அல்ல என்பதை பிரம்மாவுக்கு உணர்த்துவதற்காக கிருஷ்ணர், அவற்றை நீல நிற மேனியோடு சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை நான்கு கைகளில் வைத்திருக்கும் விஷ்ணு வடிவங்களாக மாறுபடச் செய்தார். பிரம்மா, முழுமுதற்கடவுளின் அற்புதமான சக்தியைக் கண்டு வியந்தார். உடனேயே பிரம்மா தம் வாகனமான ஹம்ஸத்தில் இருந்து இறங்கி வந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, தனது பிரார்த்தனையை செலுத்தி விட்டு கிருஷ்ணரை மூன்று முறை வலம் வந்து, பிரம்மலோகம் சென்றார்.
பிரம்மா சென்றவுடன் ஸ்ரீ கிருஷ்ணர், கன்றுகளும் சிறுவர்களும் மறைந்த அன்று எப்படி இருந்தாரோ, அதே தோற்றத்தை உடன் மேற்கொண்டார். யமுனை நதிக்கரையில் உணவருந்திக் கொண்டிருந்த அவரது நண்பர்களை, அவர் விட்டுச் சென்று சரியாக ஒரு வருடத்தின் பின்பு அங்கு வந்த போதிலும் அவர் ஒரு நிமிடத்தில் திரும்பி விட்டதாக கிருஷ்ணரது நண்பர்கள் நினைத்தார்கள். பின்பு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்.
உணவை முடித்து விட்டு கிருஷ்ணரும் நண்பர்களும் கன்றுகளுடன் தம் வீடுகளுக்கு திரும்பினார்கள். போகும் வழியில் அகாசுரன் பெரும் பாம்பின் வடிவில் இறந்து கிடந்ததைப் பார்த்து மகிழ்ந்தார்கள். கிருஷ்ணரின் மகிமைகளைப் பாடினார்கள். சிறுவர்கள், தாம் பயங்கரமான பாம்பின் வாயிலிருந்து தப்பியதை விருந்தாவன வாசிகள் அனைவருக்கும் கூறினார்கள். உண்மையில் அகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த நிகழ்வு, பிரம்மா, சிறுவர்களையும் கன்றுகளையும் திருடியதால் ஒரு வருடத்திற்குப் பின்பே அனைவருக்கும் தெரிய வந்தது.
Category: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
One Comment