ஒரு நாள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் பலராமரும் மற்றும் கோபாலச் சிறுவர்களும் விருந்தாவனத்தின் காட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பிரலம்பாசுரன் என்ற பெயருடைய அரக்கன் அவர்களிடையே புகுந்து பலராமரையும் கிருஷ்ணரையும் கொல்ல விளைந்தான். கிருஷ்ணர் அப்போது ஆயர்குலச் சிறுவனாக விளையாடிக் கொண்டிருந்தார் என்றாலும், முழுமுதற் கடவுளாகிய அவர் முக் காலங்களையும் உணர்ந்தவர் அல்லவா? எனவே, பிரலம்பாசுரன் அவர்களிடையே வந்து புகுந்ததும் அவனை எப்படிக் கொல்வதென்று முடிவெடுத்தார். வெளிப்படையாக, ஒரு நண்பனைப் போல் வரவேற்று,அன்பான நண்பனே, எங்களின் விளையாட்டில் கலந்து கொள்ள நீயும் வந்திருப்பது நல்லதாயிற்று என்று கூறி, நண்பர்களை அழைத்து,இப்போது நாம் ஜோடி ஜோடியாக விளையாடலாம், ஒருவருக்கொருவர் சவால் விடலாம் என்று கூறினார்.

சிறுவர்கள் ஒன்று கூடி சிலர் கிருஷ்ணரின் பக்கமும், சிலர் பலராமரின் பக்கமும் சேர்ந்து கொண்டார்கள். எதிர்க் கட்சிகள் ஜோடி ஜோடியாக யுத்தம் செய்ய வேண்டும். வென்றவர்களைத் தோற்றவர்கள் முதுகில் சுமக்க வேண்டும் என்பது நிபந்தனை. விளையாடியபடியே அவர்கள் பசுக்களையும் கவனித்துக் கொண்டார்கள். இவ்வாறு அவர்கள் பாண்டீர வனம் எனும் காட்டினூடே சென்றனர். ஸ்ரீ தாமனும் விருஷபனும் இருந்த பலராமனின் கட்சி வெற்றி பெற்றது. கிருஷ்ணரின் கட்சி அவர்களை சுமந்து கொண்டு பாண்டீர வனத்தில் நடக்க வேண்டியதாயிற்று. கிருஷ்ணர், ஸ்ரீ தாமனையும் பத்ரசேனர் விருஷபனையும் அங்கு ஆயர்குலச் சிறுவனின் தோற்றத்தில் வந்திருந்த பிரலம்பாசுரன் பலராமரையும் முதுகில் சுமக்க வேண்டியதாயிற்று.

பிரலம்பாசுரன் அசுரர்களுள் மிகப் பெரியவன். அங்கிருந்த ஆயர்குலச் சிறுவர்களுள் கிருஷ்ணர் மிகுந்த பலசாலியென்பதை அவன் யூகித்திருந்தான். கிருஷ்ணரின் அருகில் இருக்க விரும்பாமல் பிரலம்பாசுரன், பலராமரை வெகு தூரம் தூக்கிச் சென்றான். அந்த அசுரன் பலத்திலும் சக்தியிலும் மிகுந்தவன். ஆனால், ஒரு மலைக் குகைக்குச் சமமான பலராமரை அவன் தூக்கிச் சென்றான். எனவே அவன் களைப்புற்று பாரத்தைச் சுமக்க முடியாமல் போனதால் அவனது உருவம் மேக மண்டலம் வரை விரிந்து, கண்கள் அனலெனப் பளிச்சிட கூரிய பற்கள் வெளிப்பட அவன் தோன்றியதை பலராமர் கவனித்தார்.

OLYMPUS DIGITAL CAMERA

அசுரனின் தோற்றத்தைக் கண்டு பலராமர் ஆச்சரியப் பட்டார். தன்னை அந்த அசுரன், தன் நண்பர்களிடமிருந்து தூரமாக எடுத்துச் சென்று கொல்ல நினைக்கிறான் என்பதை அறிந்தார். உடனே அவர், இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் ஒரு மலையைத் தாக்குவது போல் அசுரனின் தலையில் தன் முஷ்டியால் ஓங்கித் தாக்கினார். பலராமரின் தாக்குதலைத் தாங்க மாட்டாமல், தலை நசுக்கப்பட்ட பாம்பைப் போல், அசுரன் கீழே விழுந்து இறந்தான். அவனின் வாயிலிருந்து இரத்தம் கொட்டியது. சிறுவர்களெல்லாம் அந்த இடத்துக்கு விரைந்தார்கள். கோரமான காட்சியைக் கண்டதும் பலராமருக்குசபாஷ் என்று கூறிப் பாராட்டினார்கள். தேவர்கள் மனமுவந்து பலராமர் மீது பூக்களைத் தூவி, ஆசி வழங்கி, பிரலம்பாசுரனைக் கொன்றதற்காகப் பாராட்டினார்கள்.