சூஃபி ஞானி கதைகள் – பசி தணிக்கும் பழம்

4/5 - (6 votes)

Tamil-Daily-News-Paper_6290400029
ஒரு குறிப்பிட்ட ஊரில் பல சிறப்புகளை கொண்ட சுவையான பழம் ஒன்று கிடைக்கும் என்றும், அதைப் புசித்தால் நெடுநாளைக்கு பசியே எடுக்காது என்றும் முந்தின ஊரில் சூஃபி ஞானிக்கு தகவல் கொடுத்திருந்தார்கள்.

ஆனால், அந்த ஊருக்குப் போன அவருக்கு, காய்கனி சந்தையில் அந்தப் பழம் கண்களில் படவில்லை. தயங்கியபடியே பார்த்துக்கொண்டு வந்தார்.

அவருடைய தயக்கத்தை பார்த்த ஓர் இளைஞன், அவரிடம் வந்தான். “நீங்கள் எதையோ தேடுவதுபோல தெரிகிறது. நான் உங்களுக்கு உதவலாமா?” என்று கேட்டான்.

அவனிடம் “இந்த ஊரில் அபூர்வமான பழம் ஒன்று கிடைக்கும் என்றும், அதை உட்கொண்டால் சில நாட்கள் வரை பசியே எடுக்காது என்றும் சொன்னார்கள். அந்தப் பழம் கிடைத்தால் அல்லது அதன் விதை கிடைத்தால் அதை எடுத்துப் போய் பட்டினியால் வாடும் மக்கள் உள்ள பகுதியில் பயிரிட முயன்று அந்தப் பகுதி மக்களின் பசியைப் போக்க முடியுமா என்று பார்க்கிறேன்” என்று பதில் சொன்னார் ஞானி.

இளைஞன் உடனே பரபரத்தான். “சற்று இருங்கள், வருகிறேன்” என்று சொல்லிவிட்டு புறப்பட்டுப் போனான். சிறிது நேரம் கழித்து வந்தான். அவன் கையில் ஒரு பழம். “நீங்கள் கேட்ட பழம் இதுதான், இந்தாருங்கள்” என்று சொல்லி அதை ஞானியிடம் கொடுத்தான்.

“இந்த ஊரில் இந்தப் பழம் நிறையவே கிடைக்கும் என்று சொன்னார்களே” என்று கேட்டார் ஞானி.

“உண்மைதான். இந்த ஊரில் இந்த பழம் நிறையதான் கிடைத்துக்கொண்டு வந்தது. ஆனால், மக்கள் சுயநலமிகள் ஆகிவிட்டார்கள். தாம் அனுபவிக்கும் பலனை பிற யாரும் அனுபவிக்கக் கூடாது என்ற சுயநல நோக்கில் இந்தப் பழத்தை பதுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதைப் பயிரிடும் முறையையும் மிக ரகசியமாக வைத்துக் கொண்டார்கள். என் வீட்டில் இருந்த ஒரு பழத்தை உங்களுக்காக நான் கொண்டு வந்திருக்கிறேன். பட்டினியால் வாடும் மக்களுக்கு உதவுவதற்காக இந்தப் பழத்தை நீங்கள் பயன்படுத்த போவதாக சொன்னதைக் கேட்டதும் உங்களுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்று எனக்கு தோன்றியது” என்று சொன்னான் அந்த இளைஞன்.

அவனுடைய செயலாலும், சொற்களாலும் நெகிழ்ந்த ஞானி, அவனை வாழ்த்தினார்: “உன்னைப் போல பிறருக்காக உதவ முன்வரும் இளைஞர்கள் பெருகினார்களானால், அவர்கள் வாழும் பகுதியில் யாருக்கும் எந்தக் குறையும் இருக்காது.”

Leave a comment