Category: சரித்திர கதைகள்

ஆழிப்பேரலை

கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்லவர்களின் துறைமுக நகரமாம் மாமல்லபுர கடற்கரை, சூரியன் மேற்கே பழுத்த கோவைப்பழ வெளிச்சக்கீற்றை தன் அன்றைய நாளின் இறுதி மூச்சாய் விட்டுக் கொண்டிருந்தது. அந்திசாயும் இளம்மாலை நேரமானதால் பொருட்கள் கப்பலில் ஏற்றப்படுவதும் வந்த கப்பலில் இருந்து பொருட்கள் இறக்கப்படுவதுமாக துறைமுகம் மிகவும் சுறுசுறுப்பாக காணப்பட.. அயல் தேச வியாபாரிகள் தாங்கள் தங்கள் தேசத்திலிருந்து கொணர்ந்த வைரம், ரத்தினம், வைடூரியம், கோமேதகம், பவளம், மரகதம் மற்றும் விலை உயர்ந்த கற்களிலான அலங்கார அணிகலன்களையும் வாசனை திரவியங்களையும் பல வேலைப்பாடுகளுடன் கூடிய பாத்திரங்களையும், அரேபிய வியாபாரிகளோ உயர்ஜாதி புரவிகளையும், பேரீச்ச பழங்களையும் உள்ளூர் வியாபர்களிடம் பண்டமாற்று முறையில் அதற்கு ஈடாக ஏலக்காய், மிளகு, வசம்பு, இலவங்கம், மிளகாய் மற்றும் பல வாசனை பொருட்களையும் அழகிய சிற்பங்களையும் கற்சிலைகளையும் தங்கம், வெள்ளி, முத்து, பவழமாகவோ அணிகலனமாகவோ மாற்றிக்கொண்டிருந்தனர்.

மாமல்லபுரத்தில் செல்வம் கோலோச்சிக்கொண்டிருந்த காலம் அது.. மாலை நேரங்களில் அந்நகர மக்கள் தங்கள் குடும்பத்தாருடன் கூடி கடற்கரையில் சித்ரான்னம் சாப்பிடுவதும்… அலையில் அடித்து வரும் சோழிகளை சிறுவர்கள் சேகரித்து அதை அடுத்த குழந்தை மீது வீசி விளையாடுவதும்.. சிறுவர்களும் சிறுமிகளும் ஒருவருக்கொருவர் மணற்பரப்பில் சண்டை இட்டு உருளுவதை அவரவர் பெற்றோர்கள் வேடிக்கை பார்த்து மகிழ்வதும்… வாலிபவயது ஆண்களோ தங்கள் காதலியின் மீது கடற்கரை நண்டுகளை விட்டு அவர்கள் அலறும் சத்தத்தைக் கண்டு ரசிப்பதும்… பெண்கள் தாங்களும் ஆண்களுக்கு சற்றும் சலைத்தவரில்லை என்பதை நிரூபிப்பது போல ஆண்கள் மீது அலையின் நுரையை இரு கைகளிலும் அள்ளி அவர்களுக்கு தெரியாமல் தலை மீது ஊற்றச் செய்து உடலை நனைத்து கைகொட்டிச் சிரிப்பதும் அன்றாடம் நடக்கும் வேடிக்கை நிகழ்ச்சிகள்.

அன்று சித்ரா பௌணர்மி, நிலவுக் காதலி அலைக் காதலன் மீது தன் ஒளியை பாய்ச்சி அதனை வெள்ளிப் பாளங்களாய் கடலில் மிதக்க விட்டுக்கொண்டிருக்க, அந்த அலையோ சில்லென்று வீசும் காற்றை தன்னில் வாங்கி நிலவுக் காதலியை பிடிக்க முடியாத கோபத்தில் ‘ஹோ’வென்ற பேரிரைச்சலை பெருமூச்சாய் விட்டுக்கொண்டிருந்தது. அந்த அலையின் ஓசையையும் மீறி உளியின் ‘ணங்’, ‘ணங்’ ஓசை கேட்கிறதென்றால் சிற்பிகள் பாறையில் சிலையை செதுக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று கொள்ளலாம். ஆனால் அந்த இரவு வேலையில் எங்கெல்லாம் உளியின் ஓசை கேட்கிறதோ அங்கெல்லாம் கண்டிப்பாக அந்த பித்தன் இருக்க வேண்டும் அலையின் ஓசையும் சில்லென்று வீசும் உப்புக்காற்றையும் பொருட்படுத்தாமல் கற்சிலையை சிரத்தையாய் செதுக்கிக்கொண்டிருப்பான் அவன். கண்கள் பஞ்சடைந்து உடல் மெலிந்து தலை முழுவதும் கடல் நுரையை தலையில் கொட்டியபடி நரை படர்ந்து வியாபித்திருப்பதும் மோவாய் முதல் தொடை வரை நீண்ட தாடியும் பார்ப்பதற்கு பரதேசியாய் காணப்பட்டாலும் உடல் செதுக்கிய பாறையாய் உறுதியுடன் இருப்பது மட்டும் யாருக்கும் எளிதில் புரியாத அதிசியம். தள்ளாத வயதிலும் கையில் உளியுடன் தான் காணும் பாறையில் எல்லாம் தனக்கு தோன்றிய உருவங்களை நடு ஜாமம் வரை செதுக்கிக் கொண்டு… கிடைப்பதை உண்டு நகரமெல்லாம் சுற்றி வந்த போதிலும் அவன் உறங்குவதற்கு மட்டும் சரியாக இளவஞ்சியின் வீட்டிற்குச் சென்று விடுவான். அன்று அவனது கால்கள் மணலில் சிக்கி தள்ளாடுவதையும், சிக்கிய கால்களை பெரும் பிராயத்தனம் பட்டு வெளியே எடுத்து மெல்ல மெல்ல இளவஞ்சியின் குடிலை நோக்கி முன்னேறியபடி நடக்க… அவன் மனமோ பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது.

‘எத்தனை முறை கூறியிருக்கிறேன்… இந்த நடுசாமத்தில் வரவேண்டாம் என்று…’ ஊருக்கு ஒதுக்குபுறமாய் அமைந்த குடில் அது… வெண்ணிலவு தலைக்கு நேர் வரும் நள்ளிரவு வேளை.. உளி கொண்டு அடித்த உடம்பின் வலியை சோமபாணம் உண்டு மயங்கிய நிலையில் மணல்தரையில் கால்கள் கோலம் போட இளவஞ்சியின் குடிலை வந்தியசேனன் அடைந்தபொழுது அவள் கேட்ட முதல் கேள்வி அவனை மேலும் தடுமாற வைத்தது..

இளவஞ்சி… பேரரசு முதல் பெருந்தனக்காரர்கள் வரை விரும்பும் போகப்பொருள்.. அலைமகள் அள்ளித்தந்த விலைமகள்.. ஆம்… சில ஆண்டுகள் முன் கடலில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.. அந்தப் பெருமழையில் கடலில் சென்ற படகுகள் கவிழ்ந்து அதில் பயணித்த அனைவரும் மூழ்க… ஒரு பெட்டியில் பத்திரமாக அலையில் அடித்து கரை சேர்ந்த அந்த மழலையை ‘இளவஞ்சி’ என்று நாமம் சூட்டிய வளர்த்தவள் ஊரின் நாட்டியக்காரி. மழலையாய் வந்தவள் முலை வளரும் பருவம் வந்தவுடன் முறைப்படி கோவிலில் பொட்டு கட்டி விடப்பட.. அந்த ஊரின் தேவதாசியானவள்.

‘என்ன செய்வது… நீயும் அனாதை… நானும் அனாதை… பகல் முழுவதும் பாறையை செதுக்குவதும்.. மாலை வந்தால் வலியை மறக்க மதுவை அருந்துவதும் இரவு வந்தால் இன்பம் பெற உன்னை சந்திப்பதும் முறை மாறாமல் நடப்பதுதானே…’

‘அதற்குத்தான் கூறினேன்.. ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து திருமணம் செய்துகொள் என்று’

‘அது ஏன் நீயாக இருக்கக் கூடாதா…’

‘என்ன குடித்து விட்டு பிதற்றுகிறாய்… நீ வாழவேண்டியவன்… வாலிபன்… நானோ நாட்டியக்காரி… பகலில் நாட்டியமாடி இரவில் ஊருக்கே விருந்து படைப்பவள்… உனக்கு மட்டும் எப்பொழுதும் தனியாக விருந்து படைத்தல் என்பது நடவாத காரியம்… அதை ஊரும் ஏற்காது… அது மட்டுமல்ல நீயோ இளையவன்.. நானோ மூத்தவள்…‘

‘மெய்ப்பசிக்கு தெரிகிறதா வயதும் ஆசையும்…’

‘அப்படிச் சொல்லவில்லை….’

‘பின்னர் எப்படி…. பெருந்தனக்காரர்களை மட்டுமே விரும்பும் நீ.. என்னை மட்டும் எப்படி விரும்பினாய்.. உன்னுடன் சேர்த்துக்கொண்டாய்..’

‘அது வந்து….’

‘சொல்… ஏன் தடுமாறுகிறாய்..’

‘மற்றவர்களிடமிருந்து வேண்டிய பொருள் மட்டும்தான் கிடைக்கிறது… பாசம்… நேசம்.. ம்ம்ம்.. அது உன்னுடன் பழகுவதில் மட்டும் தான் கிடைக்கிறது… அன்பும் கனிவான பேச்சும் இனிமையான நட்பும் என்னை உன்னுடன் பகிர்வதில் மனதிருப்தியும் கிடைக்கிறது… இது தான் என்னை உன்னிடம் இணைத்தன் ரகசியம்.. புரிகிறதா.. அதற்கென்று இந்த உறவை அடிக்கடி தொடர்வது சரியென்று கூறமாட்டேன்.. உனக்கென்று ஒருத்தி கண்டிப்பாக பிறந்து இருப்பாள்… அவளை வாழ்க்கை துணையாக ஏற்று… இல்வாழ்வை நல்லறமாய் நடத்து…’ அந்த அறையில் உள்ளே காற்றில் அசைந்த நெய்விளக்கின் சுடரொளி அவளின் பேச்சை ஆமோத்திப்பதாய் தன் தலையை அசைக்க, சொன்னவளின் நெஞ்சில் தன் நெஞ்சம் பதித்து… மெய்மறந்து பஞ்சணையில் கள்ளை உண்ணும் வண்டாய் அவள் மேனியில் மேல் மேவும் வேளையில்… கண்கள் கூசும் காட்சியைக் கண்டு வீசிய காற்றில் நெய்விளக்கு தன் ஒளியை அணைத்துக் கொண்டது அவர்களைப் போல. முயக்க நிலை முடிந்து மயக்க நிலையில் ஒருவரை ஒருவர் தயக்கத்துடன் ஒட்டிக்கொண்டிருந்த அந்த கணப்பொழுதில்… வாசலின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.

அந்த குகையின் இருளை தீப்பந்தங்கள் விரட்டிக் கொண்டிருக்க… ஒரு உயர்ந்த பாறையில் அமர்ந்திருந்த தலைமைச் சிற்பி விக்கிரமவர்மர் தனக்கு அடுத்த நிலையுள்ள நான்கு தலைமை சிற்பிகளும் வந்து விட்டார்களா என்று அருகில் இருந்த தன் உதவியாளனைக் கேட்க..

‘வந்தியசேனன் மட்டும் வரவேண்டும்.. ஆள் அனுப்பி இருக்கிறேன் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவான்… நீங்கள் கூற வேண்டியதை கூற ஆரம்பியுங்கள்..’

‘அவனும் வரட்டும்.. எங்கே போய்விடப்போகிறான்.. அந்த தாசி வீட்டில் தான் இருப்பான்… பாவம்.. அனாதை.. மிகச் சிறந்த திறமைசாலி… எதற்கு இப்படி கள்ளுண்ணுவதிலும் காமகளியாட்டத்திலும் நேரத்தை வீணடிக்கிறானோ… அவனுக்கு ஒரு திருமணம் செய்து வைத்து விட்டால் திருந்தி விடுவான்…’

‘நீங்கள் தான் அப்படி கூறுகிறீர்கள்.. ஆனால் கள்ளுண்ணுவதும்… கன்னியை ஆள்வதும் போதுமென்று நினைத்து விட்டானோ என்னவோ…’ மூத்த சிற்பி உரைக்க…

‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்…’ மற்றொரு சிற்பி அவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்.

‘இவன் கல்லுடனே காலத்தை செலவழித்து உளியாய் மாறியவனாயிற்றே… இரும்பை கரைக்க ரசாவாதம் தெரிந்த சித்தரைத்தான் வரவழைக்க வேண்டும்’ தான் ஏதோ விகடமாய் கூறியதாக நினைத்து கலகலவென்று சிரிக்க ஆரம்பித்தார் மூத்த சிற்பி மறுபடியும்.

‘என்ன ஒரே சிரிப்பு… எனக்கும் சொன்னால் நானும் ரசிப்பேன் இல்லையா…’ கூறியவாரே உள்ளே நுழைந்தான் வந்தியசேனன்.

‘வா.. வந்தியசேனா… அப்படி அந்த பாறையில் அமர். உனக்காகத்தான் காத்திருந்தோம்.. இன்னும் ஆலோசனையை துவங்கவில்லை… ‘

‘சொல்லுங்கள் தலைமை சிற்பியாரே…. விடிவெள்ளி தோன்றும் வேலையில் பிடிகொண்டு அழைத்து வரக் காரணமென்ன…’

‘கூறுகிறேன்… அதற்கு முன் நாம் கட்டிக்கொண்டு வரும் கடற்கரைக்கோவில் வேலை எந்த நிலையில் இருக்கிறது…’

‘இன்னும் ஒரு மண்டலத்தில் முடிந்துவிடும்… சுற்று மதிற்சுவர் வேலை, கோபுர சிற்ப வேலை மற்றும் கோவிலின் கருவறையின் கடவுள் சிலை உருவாக்கம் மட்டும் முடித்தாக வேண்டியுள்ளது…’ மூத்த சிற்பி சொல்லச் சொல்ல ஆழ்ந்து கேட்ட விக்கிரமவர்மர்,

‘இன்று மாலை காஞ்சியிலிருந்து அரசர் ஒரு சேதி அனுப்பியிருந்தார்… வரும் சித்ரா பௌர்ணமியில் கோவிலின் குடமுழுக்கு நடத்த முடிவு செய்திருப்பதை.. அதற்கு இன்னும் சரியாக இரண்டு திங்கள் தான் உள்ளது.. எனினும் கடைசி நாள் வரை வேலையை தள்ளிச் செல்வது உசிதம் அல்ல… அதற்குள் எப்படியாவது முடித்து விடவேண்டும்.. என்ன புரிகிறதா…’
‘அதற்கு ஆட்கள் நிறைய தேவைப்படுமே…’

‘தேவையான ஆட்களை வெளி ஊர்களிலிருந்து வரவழைத்துக் கொள்வோம்… இப்பொழுது அதுவல்ல பிரச்சனை… எனக்கு ஒரு மற்றுமொரு ரகசிய செய்தி கிடைத்தது..’

‘என்ன…’ அனைவரும் ஆச்சிரிய முகத்துடன் அவரைப் பார்க்க…

வரும் அமாவாசையன்று அரசர் ரகசிய விஜயமாய் இங்கே வருவதாக செய்தி அறிந்தேன்.. எப்படியும் சில நாட்கள் இங்கே தங்க உத்தேசிட்டு இருப்பதாக கேள்விபட்டேன்..’
‘வரட்டுமே… அதற்கும் நாம் செய்யும் வேலைக்கும் என்ன சம்பந்தம்..’

‘சம்பந்தம் இல்லாமல் இதனை சொல்வேனா… அப்படி தங்கும் நாட்களில்… ஏதாவது ஒரு நாளாவது கடற்கரை கோவிலில் நடைபெறும் வேலையை பார்வை இட வராமலிருப்பாரா என்ன… அதனால் இன்னும் அரைத்திங்களில் அதாவது வர இருக்கும்.அமாவாசைக்குள்… நாம் முடிந்த அளவு வேலையில் தீவிரம் காட்ட வேண்டும்… அதற்கு இரவும் பகலும் பாராமல் உழைக்க வேண்டும்… இந்தச் செய்தியைக் கூறவே உங்களை அழைத்தேன்… ‘ என்ன நான் சொல்வது சரிதானே என்பது போல அவர் அனைவரையும் ஒரு பார்வை பார்க்க…

‘கண்டிப்பாக… வேலையை ஆளுக்கு சமமாக பிரித்து நேரம் காலம் இல்லாமல் உழைத்தால் போதும்… முடித்து விடலாம்..’ வந்தியசேனன் சொல்ல..

அவன் சொல்லை அனைவரும் ஆமோதித்து பிரிந்தனர்.

துள்ளி வரும் கடலலையை தள்ளி நின்று பார்ப்பதும்.. தூர நகர்ந்தபின் ஓடிப் போய் கால்களை நனைப்பதுமாய் அந்த இரண்டு கன்னிகள் கடற்கரையையில் விளையடிக்கொண்டிருந்தனர்.
‘எழுனி… போதும் ஓடியாடியது… கால்கள் வலிக்கின்றன… வா வீட்டுக்குச் செல்வோம்.. அலைகள் பெரிதாக வருகின்றன.. ஆபத்தை விலைக்கு வாங்காதே” அவளுடன் வந்த தோழி சொல்ல… எதையும் காதில் வாங்காமல் அவள் அலைகளை ரசித்தப்படி தண்டை அணிந்த கால்கள் மணலில் செருக கெண்டை மீன் கண்கள் சுழல ஈர மண்ணில் ஆசை தீர விளையாடி மகிழ்ந்தாள் அவள்.

எழுனி… காஞ்சியை ஆளும் இரண்டாம் நரசிம்மவர்மரின் கப்பல்படைத் தலைவன் தழும்பனின் ஒரே செல்ல மகள், முட்டி மோதி திமிரும் பெண்மையை மூடி மறைத்தும், கெட்டியாக கைவைத்து மறைத்தும், விட்டு விட்டு வீசும் கடற்காற்றில் தறிகெட்டு கலைகிறது அவள் கட்டியிருந்த சேலை. பருவம் வளர்ந்து பார்ப்பவர்களின் புருவம் உயர்த்தும்படி உச்சி முதல் உள்ளங்கால் வரை மெச்சும் அழகி.. சுருங்கச் சொன்னால் பேரழகி.

‘நான் சொல்வது எதுவும் காதில் விழவில்லையா… ‘

‘ஆமாம் விழத்தான் செய்கிறது.. இந்த இரவு வேளையில் எங்கிருந்தோ உளியின் ஓசை கேட்கிறதே… எங்கே என்று கவனித்தாயா..’

‘கேட்டேன்.. அந்த பாறை இடுக்கிலிருந்துதான் கேட்கிறது..’

‘இந்த வேலையில் யார் கல்லைச் செதுக்குவது..’

‘அது யாராகவேணும் இருந்துவிட்டு போகட்டும்.. நமக்கெதற்கு வா… வீட்டிற்குப் போய்விடலாம்..’

‘இரு… சென்றுதான் போய் பார்ப்போமே..’

‘வேண்டாம் இந்த விவரீதம் எழுனி.. சொல்வதைக் கேள்..’ அவள் சொல்லச் சொல்ல கேளாமல் அந்தப் பாறையின் அருகில் செல்ல..

அங்கு தீப்பந்த ஒளியில் வந்தியசேனன் கோவிலின் கருவறை சிலையை வடிக்க பாறையை வெட்டியபடி இருந்தான், அவனின் கருத்த உருவமும் கல்லில் உளி கொண்டு செதுக்கும் கைகளின் தசைச் திரளும் உடம்பில் வழியும் வேர்வையும் தீப ஓளியில் மின்ன.. அப்படி ஒரு இளைஞனை எழுனி தன் வாழ்நாளிலே காணாததைப் போல காண..

இருட்டில் எரியும் தீப்பந்த வாசனையும் மீறி அவர்களின் வளையோசையும் தலையில் சூடிய மலரின் வாசமும் உளியின் வேகத்தைக் குறைக்கச் செய்தது… தலையை திருப்பி சுற்றும் முற்றும் பார்த்தவன்..

‘யாரது… ‘ உரத்த குரலில் அதட்ட..

‘பார்த்து விட்டான்.. வா சென்று விடுவோம்…’ தோழி சொல்ல… ஓடும் வேளையில் பாறையின் விளிம்பில் எழுனியின் கைபட்டு கைவளைவி உடைந்து கையைக் கீற… அவளோ… ‘ஆ‘வென கத்த… அருகில் வந்த வந்தியசேனன் இரண்டு கன்னிகளை கண்டு திகைத்தான்.

‘நீங்கள்…’ தோழி வாய் திறக்க…. அவளின் வாயை மூடிய எழுனி…

‘நாங்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள்…. உறவினர் வீட்டிற்கு வந்துள்ளோம்… கடற்கரையைப் பார்க்க வந்தோம்… இருட்டி விட்டது… உங்களின் உளி சத்தம் கேட்டு உதவி கேட்கத்தான் வந்தோம்..’

‘ஓ… இந்த இருட்டில் இனி தனியாக வரவேண்டாம்… இங்கு கயவர்கள் கள்ளுண்ண இரவில் வருவார்கள்.. சீக்கிரம் இடத்தை விட்டு நகருங்கள்..’

‘வழி தெரியவில்லை… தாங்கள் நல்லவர் போலத் தெரிகிறது… வழித்துணையாக வந்தால் நல்லது..’

‘ஆகட்டும்… முதலில் காயத்தைச் சுற்றி கட்டு போடுங்கள்… இரத்தம் வீணாகிறது…’
கிடைத்த பச்சிலைகளைக் கொண்டு காயத்துக்கு மருந்திட.. எழுனியோ அவனின் திடமான அங்கங்களின் அழகிலும், அடுத்தவர் நலம் காணும் சிரத்தையும் கண்டு மலைத்தாள்.. திளைத்தாள்… உணர்வை இழந்தாள்… உள்ளத்தை பறிகொடுத்தாள்.

அடி மேல் அடி வைத்தால் அம்மி நகருமோ இல்லையோ கற்பாறை மேல் படும் உளியின் அடி மேல் அடியால் அது தன் உருவமிழந்து சிலையின் வடிவைப் பெறும் என்பது சிற்பக் கலைஞர்களின் கூற்று. வந்தியசேனன் மிகவும் சிரத்தையாக அந்தச் சிலையை வடித்துக் கொண்டிருந்த மறு இரவில்…

‘என்ன சிற்பியாரே…. சிலை இன்னும் முழுமைபெற எத்தனை இரவுகள் தேவைப்படும்…’ எழுனி கேட்கவும்..

‘யார் அது…’

‘அதற்குள் மறந்து விட்டீர்களா…’

‘இல்லை இல்லை… நேற்று நடந்ததை இன்றே மறக்கும் அளவுக்கு வயதாகவில்லை… எங்கே உங்களின் வால் நட்சத்திரம்…’

‘என்னது…’

‘இரவில் தானே நட்சத்திரத்தைக் காண முடியும்… அதுவும் நீங்கள் நட்சத்திரம் என்றால் உங்கள் பின்னாடியே சுற்றித் திரியும் வால் அதான் உங்கள் தோழியைத்தான் அப்படி கேட்டேன்..எப்பொழுதும் உங்கள் அருகில் இருப்பார்களே… இன்று எங்கே என்று..’

‘ஓ… கல் உடைக்கும் சிற்பிக்கு கூட கொல் என்று சிரிக்க வைக்கும் சொல் பிறக்குமா என்ன..’

‘ஏன்… கல்லுடன் பழகுவதால் எங்கள் மனமும் கல்லாகி விட்டாதா என்ன… ‘

‘தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா.. ‘

‘இல்லை..’

‘ஓ… அதுதான்.. பகல் இரவு பாரமல் சிலையையே கொத்திக் கொண்டிருக்றீர்களோ…. மனைவி என்று ஒருத்தி இருந்தால் இப்படி இருக்கமாட்டீர் இல்லையா..’

‘எப்படி…’

‘இரவில் அதுவும் குளிர் காற்றில் இப்படி வேலை செய்தால்… எந்த மனைவிதான் அமைதியாய் இருப்பாள்…’

முழு நிலவு தேய்பிறையாக, பிறை நிலவு காதலோ முழு நிலவாய் மாறத் தொடங்கியது தொடர்ந்த நாட்களில்.

ஒரு இளம் மாலைப் பொழுதில்..

‘எழுனி நான் சொல்வதைக் கேள்… உன் தகுதிக்கு அவன் உகந்தவன் அல்ல..’

‘ஏன்… ஏழையை மணந்தாள் பாழ் ஆகிவிடுமா வாழ்க்கை…‘

‘அவன் தாய் தந்தை அற்ற தனியாள்… நீ தரணி ஆளும் அரசனின் கப்பல்படைத்தளபதியின் மகள்… புரிந்து கொள்..’

‘ஓ….’

‘அது மட்டுமில்லை.. மற்றொரு காரணம் இருக்கிறது…’

‘என்ன…’

‘சொல்ல நா கூசுகிறது…’

‘தொண்டை வரை வந்துவிட்டது முழுங்கி விடாமல் முழுவதையும் கொட்டி விடு..’

‘அவன் ஊர் தாசியிடம் அடிக்கடி செல்வானாம்.. அதனால்..’

‘அதனால் அவன் கெட்டவன்.. அப்படித்தானே சொல்கிறாய்…’

‘ஆமாம்…’

‘அரசன் முதல் ஆண்டி வரை ஆண்கள் செய்வதுதானே… இதில் அதிசியம் என்ன இருக்கிறது… தாசியிடம் செல்பவனும் சோமபாணம் அருந்துபவனும் கெட்டவன் என்றால்… உலகில் இருக்கும் அனைத்துப் பெண்களும் கன்னியாகவே காலம் தள்ள வேண்டியதுதான்..’

‘தெரியாமல் நடந்தால் பராவாயில்லை… இங்கே தெரிந்து விட்டதே அவனின் அருகதை…’

‘ஓ.. தெரியாமல் தவறு செய்யலாம்… தெரிந்து தவறு செய்யக் கூடாதா… அப்படித்தானே சொல்கிறாய்.. ஒன்று சொல்கிறேன்.. நீ சொன்னது அனைத்தையும் வந்தியசேனன் கூறிவிட்டான்.. அது அறியாத வயதில் புரியாமல் செய்தது… அன்பு காட்டவும் ஆதரவு தரவும் ஆட்கள் இல்லை… அவனுக்கு ஒரே ஆறுதல் அந்த இளவஞ்சி தான்… இனி தவறு செய்ய மாட்டான் என்று உறுதி அளித்திருக்கிறான் என்னிடம்..’

‘காதல் அவ்வளவு தூரம் வளர்ந்துவிட்டதா…’ தோழி சொல்ல கன்னம் சிவந்தாள் எழுனி.
காஞ்சி மன்னனின் ரகசிய வருகை படைத்தளபதிகள் மட்டுமே அறிந்த ரகசியமாய் காக்கப்பட… அரசர் தங்ககுவதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார் மன்னரின் கிழக்கு கப்பல்படைத் தலைவனும் எழுனியின் தந்தையுமான தழும்பன்.

தேய்பிறை முடியும் நாளின் பின்னிரவில் மன்னன் தன் முக்கிய அரசு அதிகாரிகளுடன் ரகசிய வீட்டில் தங்கினான், படைத்தலைபதி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்திவிட்டு ஓய்வாக தங்கி… பின்னர்… மாலையில் அரசு அதிகாரிகள் மற்றும் படைத்தளபதிகளின் குடும்பத்தாருடன் சற்று அளாவளாவிய பொழுதுதான் கவனித்தான் எழுனியை… அவளின் அழகில் மெய்மறந்தான்… மதி மயங்கினான்… தன்னை அவளிடம் பறிகொடுத்தான்… பின்னர் அவள் யார் எவர் என அறிந்து… தழும்பனை தனியாக அழைத்து வரச் சொன்னான்.. கட்டளைக்குப் பணிந்து அரசனின் அறைக்குச் சென்றான் தழும்பன்..

‘’வாரும் தளபதியாரே….’

‘மா மன்னர் வாழ்க… தாங்கள் அழைத்ததன் காரணம் அறிய விழைகிறேன்… வரவேற்பில் தவறா… பாதுகாப்பில் பிழையா…’

‘அமருங்கள்… உங்களிடம் தனியாக ஆலோசனை நிகழ்த்த வேண்டும்…’

‘கூறுங்கள் மன்னா…. செய்வதில் சித்தமாய் இருக்கிறேன்..’

‘எழுனி தங்கள் மகளா…’

‘ஆம் மன்னா…’ எழுனியின் அழகில் மயங்கினோம்… மதி இழந்தோம்… அவளை மணந்து கொள்ள விரும்புகிறோம்… என்ன கூறுகிறீர்கள்…‘

‘மன்னா….’ அதிர்ச்சி அடைந்த தழும்பன் தன்னை அறியாமல் அலறிட..

‘எழுனியை மணந்து காஞ்சிக்கு அழைத்துச் செல்கிறோம்… தங்களையும் போர்ப்படை அதிகாரியாக பதவி உயர்வு செய்கிறோம்‘

‘மன்னா… அதிர்ச்சியில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை… இது என் பாக்கியம்..’

‘நாளை அமாவாசை… நிச்சியம் செய்கிறோம்…. வரும் சித்ரா பௌர்ணமி அன்று திருமணம்‘
மன்னரிடம் விடைபெற்று மகளைப் பார்த்து மகிழ்ச்சியைப் பகிற சென்றான் எழும்பன்.
‘அப்புறம்.. என்ன முடிவெடுத்தாய் வந்தியசேனா…’

கண்ணோடு கண் பட்டு கலந்தது முதல் காதலில் விழுந்தது வரை எழுனியுடன் தனக்கு ஏற்பட்ட நெருக்கத்தையும் அனுபவத்தையும்…. கடந்த இரண்டு நாட்களாக அவள் வராதததையும் அதனால் தான் மன வேதனையில் விழுந்ததையும் கூறி முடித்தவன்… எப்படியோ அவளின் இருப்பிடத்தையும் பிறப்பையும் அறிந்தேன் அவள் தோழி மூலம்.

அவள் கப்பற்படைத்தலைவன் எழும்பனின் மகளாம்… அவளை அரசர் மணக்கப் போவதாகவும் அறிந்தேன்.. வாய் குழறியபடியே மனவேதனையில் சில நாட்களாக நிறுத்தி வைத்திருந்த மதுப்பழக்கத்தை எழுனியிடன் கொடுத்த உறுதியையும் மீறி அளவுக்கதிகாமாக குடித்துவிட்டு வந்து உளறியபொழுதுதான் இளவஞ்சி அவனைப் பார்த்து அப்படிக் கேட்டாள்.

‘சொல்.. அப்புறம் என்ன முடிவெடுத்தாய்…’

‘என்ன செய்வது… எழுனியும் கையறு நிலையில் அவதியுறுவதாகவும்… தன்னைச் சந்திக்க விரும்புவதாகவும்… பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தோழி மூலம் அறிந்தேன்..’
‘அதற்காகவா அளவுக்கதிமாக குடிப்பது…’

‘அவளை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும்… நீதான் ஒரு உபாயம் செய்ய வேண்டும்…’
‘இது அரசர் சம்பந்தப்பட்டது… ஆபத்து மிக்க அதிகம்…. அவசரப்படவேண்டாம்.. உரிய நேரத்தில் உதவுகிறேன்..’

‘இன்னும் இரண்டு நாட்களில் பௌர்ணமி.. அதற்குள்..’

‘புரிகிறது உந்தன் வேதனை… எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது…’

‘என்ன… சொல் இளவஞ்சி..’

‘ஒரு கட்டுமரத்தை மட்டும் ஏற்பாடு செய்துகொள்… அவளை எப்படியாவது அழைத்து வந்துவிடுகிறேன்… நீங்கள் இருவரும் தூர தேசத்திற்கு சென்றுவிடுங்கள்.. என்ன சரியா..’
‘இளவஞ்சி இதை மட்டும் நீ செய்தால்… உன்னை உயிர் இருக்கும் வரை நினைவில் கொள்வேன்..’

‘உந்தன் நட்புக்கும்… உன்னால் எனக்கு கிடைக்கும் அன்புக்கும் மகிழ்ச்சிக்கும் முன் இந்த உதவி எம்மாத்திரம்… கவலைப்படாமல் சொன்னதை மட்டும் ஏற்பாடு செய்… எல்லாம் நல்லபடியாக நடக்கும்..’

விடிந்தால் பௌர்ணமி, ஊரே விழாக்கோலம் பூத்திருந்தது… கோவிலின் குடமுழக்கு வேலைகள் வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது, மறுபுறம் எழினிக்கு மருதாணி இடவும்… மணக்கோல அலங்காரங்களைச் செய்யவும்… இளவஞ்சி அவள் அறைக்குச் சென்றவள்….

‘எழுனி எல்லாம் தெரியும் எனக்கு…. உனக்காக என் குடிலில் வந்தியசேனன் காத்துக் கொண்டிருக்கிறான்… உன் உடைகளை நான் அணிந்து கொள்கிறேன்… நான் எப்படியோ இங்கு சமாளித்துக் கொள்கிறேன்… உடனே அங்கு செல்’ உணர்ச்சிப் பெருக்கில் அவளை ஆரத்தழுவிய எழுனி…. அவள் சொற்படி கேட்டு… அங்கிருந்து நகர்ந்தாள்.

அந்த நடுசாம நேரத்தில் இளவஞ்சியின் குடிலில் எழுனியும், வந்தியசேன்னும் சந்திக்க… பிரிந்தவர்கள் கூடினால் பேச வார்த்தை வராமல் கண்களில் ஆனந்தக்கண்ணீர் சொரிய, உணர்ச்சி மேலீட்டால் இருவரும் தழவி உடுத்திருந்த ஆடை நழுவுவதை கூட கவனியாமல் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆடையாயினர், இருமனம் இணைந்தபின் திருமண நாடகம் எதற்கு என்பது போல அக்கணமே பிணைந்தனர், மீறிய உணர்ச்சிப் பெருக்கில் கூடிய இருவரும் களைப்பில் கண்ணயர… கோழி கூவுவதைக் கேட்டபிறகு தான் விழிப்பே வந்தது. இருவரும் களைந்த ஆடைகளை திருத்தி பிரயாணத்திற்கு கிளம்பத் தயாராயினர்.

பௌர்ணமி தினம் என்பதால் பனை மர உயர அலைகளை கடல் கடும் சீற்றத்துடன் வீசிக்கொண்டிருந்தது. விடியும் காலைப்பொழுதை விடிவெள்ளி கிழக்கில் தோன்றி அறிவித்தது…. அசுர பலத்துடன் அந்த கட்டுமரத்தை கடலில் செலுத்தினான் வந்தியசேனன்… அருகில் எழுனி கருநீலக் கடலின் சீற்றத்திலும் குளிர் காற்றிலும் படபடக்கும் நெஞ்சின் பயத்திலும் உறைந்துபோய் அமர்ந்திருந்தாள்.

மகளைக் காணாமல் எழும்பன் தவிக்க… மறுபுறமோ அரசனுக்கு பதிலுரையாய் என்ன உரைப்பது என்று மனம் பேதலிக்க… இளவஞ்சியை அழைத்து விசாரிக்க.. அவள் எதையும் சொல்லாமல் மறைக்க… அவளின் குடிலில் ஆராய.. அங்கு எழுனியின் ஆடைகளில் கோர்த்த விலையுயர்ந்த கற்கள் சிதறி கிடப்படதைக் கண்டு வெகுண்டவன்.

இளவஞ்சியை மிரட்டி, சித்திரவதை செய்து நடந்தவற்றை அறிந்து தானே முன்னின்று தனக்கு மிக நெருக்கமான படை வீரர்களுடன் படகில் ஏறி எழுனியைத் தேட முற்பட்டான் எழும்பன்.
அதறக்குள் எப்படியோ தகவல் அரசனின் காதுக்குச் செல்ல… சினந்தவன்…வந்தியசேனனை உயிருடன் பிடித்து வருமாறு படைவீரர்களுக்குக் கட்டளையிட்டான்.

சித்ரா பௌர்ணமி நாள்… சந்திரன் அன்று நடைப்பெறப்போகும் மிகப்பெரிய அழிவைக் காணவோ என்னவோ பயந்து மேகப்பொதிதியில் மறைந்தபடியே கடலிருந்து தன் முகத்தை மேலே கொண்டு வந்தது.

காலையில் மந்திரங்கள் ஒத, ஓமகுண்டம் வளர்த்து, மிக கோலாகமாக குடமுழுக்கு விழா நடந்தது பொழுது….

‘பிடித்து விட்டீர்களா… அவனை’ எழும்பனை பார்த்து மன்னன் விளம்ப..

‘ஆம் மன்னா… தனி அறையில் அடைந்து வைத்துள்ளேன்’

தன் இருப்பிடத்திற்கு அவனை அழைத்து வரச்செய்து விசாரனை செய்தார் அரசர். ‘அவர்கள் இருவருக்கும் உதவிய இளவஞ்சி பெண் என்பதாலும் ஊரின் நாட்டியக்காரி என்பதாலும் மன்னித்து விடுதலை செய்தார் அரசர். அடுத்து வந்தியசேனனைப் பார்த்து அமைச்சர்…

‘அரசருக்கு நிச்சியக்கபட்ட பெண்ணை கவர்ந்து சென்று இருக்கிறாய்.. இது ராஜ துரோகம்… என்ன துணிச்சல் உனக்கு…’

‘மன்னிக்க வேண்டும் அமைச்சரே.. நிச்சியப்படுவதற்கு முன்பே என்னால் உச்சரிக்கபட்டவள்..’

‘அமைச்சரே இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்..’

‘வழக்கம்போல் இவனை கடலில் கல்லைக் கட்டி வீசி எறியுங்கள்… ‘ அமைச்சர் சொல்ல…

‘ஆம்.. அதுதான் சரியான தண்டனை.. கோவிலின் குடமுழுக்குக்கு உயிர்பலி செய்ததாக இருக்கட்டும்.. அதுவும் இன்றிரவே…. ‘ அரசர் கட்டளையிட்டார்…. அடுத்து…. எழுனியைக்காண் அவள் அறைக்குச் சென்றார்…

‘உன்னை மணந்துகொண்டு அரசியாக்க நினைத்தேன்… நீ செய்த காரியத்திற்கு… உன்னை என் அந்தப்புரத்தின் ஆசை நாயகியாக இருக்க உத்திரவிடுகிறேன்… … இன்றிரவு என் பசிக்கு இரை நீ தான்.. யாரங்கே.. அழைத்துச் செல்லுங்கள் இவளை அந்தப்புரத்திற்கு’

‘அது ஒருக்காலும் முடியாது… நான் எச்சில் பட்டவள்… உன் இச்சைக்கு அடிபணிய மாட்டேன்..’ அவள் திமிரத் திமிர… ‘அழைத்துச் செல்லுங்கள் பாதுகாப்பாக அவளை.’ உத்தவிரட்டார் அரசர், சிறகொடிந்த கிளியாய் தங்கக்கூண்டில் அடைபடப்போவதை உணந்த எழுனி…

‘மன்னா… எனக்கு ஓரு ஒரு ஆசை… அதை மட்டும் நிறைவேற்றுங்கள்.. நான் உங்கள் சொற்படி கேட்கிறேன்..’

‘என்ன சொல்..’

‘வந்தியசேனனை கடலில் வீசும் முன் கடைசியாக ஒருமுறை அவர் முகத்தை காண அனுமதி கொடுங்கள் அது போதும்..’ யோசித்த அரசர்…

‘சரி அனுப்பிவைக்கிறேன்….’

அரசன் தன் பரிவாரங்களுடன் மலையின் உச்சியிலிருந்து விளக்கொளியில் மின்னும் கடற்கரை கோவிலையும் அதன் ஊடே நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளையும் ரசித்தப்படி இருக்க.. அவன் மனமோ இரவு எழுனியுடன் நடைபெறப் போகும் உறவை நினைத்து நினைத்து களித்தது.

சங்கலியால் கட்டி வைத்த பாறாங்கல்லில் கண்கள் சொருக வந்தியசேனன் தன் கடைசி பயணத்திற்கு பிரயாணமானான்… ஒரு பொழுது வாழ்க்கை வாழ்ந்து மறு பொழுது தன் கண் முன்னே காதலன் உயிர் பிரியப்போவதை தாங்கொணாமல் கன்னம் சிவக்க அழுது… கண்கள் வீங்கி… தலைமுடி கலைந்து… உயிரற்ற பிணமாய் வீற்றிருந்தாள் படகின் மறுபுறம் எழுனி.
‘நடுக்கடல் வந்தாயிற்று… வீசி எறியுங்கள் அவனை….’ படகை ஓட்டிய தலைமைக் காவலன் சொல்ல… படகில் இருந்த பாறையோடு கட்டிய அவனை தூக்கி வீசும் சமயம்… ஓ என்று கதறியவாறு எழுனி அவன் மார்பில் விழுந்து கதற… அவளை தனியே பிரித்து.. அவனை கடலில் தள்ளும் சமயம்…. ‘வந்தியசேனா…’ ஆவேசம் கொண்டு எழுந்த எழுனி…. ஒரு தாவாய் அவனை கட்டித் தழுவியபடி தானும் கடலில் விழுந்து மூழ்கினாள்.

‘எத்தனை முறை கூறியிருக்கிறேன்… இந்த நடுசாமத்தில் வராவேண்டாம் என்று…’

அந்தப் பெரியவர் இளவஞ்சியின் குடிலை அடைந்து கதவை தட்ட, திறந்த கதவில் ஊடே அந்த பெண் அவரைப் பார்த்து கூறவும் சரியாக இருந்தது.

‘பழகிவிட்டது…’

‘நேரத்தோடு வர வேண்டாமா… காத்திருந்து காத்திருந்து என் தூக்கம் தான் கலைகிறது.. மறுநாள் நான் நாட்டிய மாட சிறிது உறக்கம் அவசியம் இல்லையா…’

‘இனி எப்பொழுதும் இது மாதிரி நடவாமல் பார்த்துக்கொள்கிறேன்..’

‘இப்படி தாங்கள் கூறியதை கேட்டு கேட்டு எனக்கும் சலித்துவிட்டது..’

அவள் பொய்க்கோபத்துடன் அந்தப் பெரியவரை கைப்பிடித்து பஞ்சனையில் படுக்கவைத்து செல்ல… அவளின் தலையைக் கோதிய்வாறு….

‘இன்பவல்லி…. நாளை முதல் அந்தி சாயும் பொழுதே வந்து விடுகிறேன்… நிம்மதியாக படுத்துறங்கு…’

‘எந்த “நாளை” என்று சொல்ல மறந்து விட்டீரே.. அப்பா…’

அன்று வந்தியசேனன், எழுனியின் உடல்கள் மூழ்கிய பொழுது கடலில் ஏற்பட்ட மாற்றத்தால் வீசிய ஆழிப்பேரலை வந்தியசேனனை மட்டும் கடற்கறையில் ஒதுக்க… வந்தியசேனன், இளவஞ்சியால் காப்பற்றப்பட்டு இன்பவல்லியைப் பெற்றபின் இளவஞ்சி இறக்க… அந்தக் குழந்தையை வந்தியசேனனே வளர்த்து பெரியவளாக்கி குலத்தொழிலான நாட்டியத்தையே கற்கவைத்து இறுதி மூச்சு வரை அவளுடனே வாழ்ந்து மடிந்தான்.

அன்று அந்தக் கடற்கரை கோவிலை ஆழிப்பேரலை தன்னுள் உள்வாங்கிக்கொள்ள இன்றும் அந்தக் கோவில் கடலில் மூழ்கியபடி மாமல்லபுரத்தின் தற்போதைய கடற்கரைக் கோவிலுக்கு சற்று தொலைவில் மூழ்கியபடி காணப்படுகிறது.

ஒரு ராஜ விசுவாசியின் கதை

காலம் கிபி.1300, சரியாக சொல்ல வேண்டும் என்றால் மூன்றாம் இராஜேந்திர சோழனுக்கு பிந்தைய காலம்.

வாசுகாறை என்னும் நாட்டை சுமவன் என்னும் அரசன் அறம் தவறாது ஆட்சி செய்து வந்தான்.சுமவன் மிக பெரும் சிவபக்தன், அதனால் நாட்டின் தென்பகுதியில் மிகப்பெரும் சிவாலயத்தை அமைக்கும் பணியில் ஈடு பட்டிருந்தான்.

நாட்டில் காலம் தவறாது மழை பொழிந்ததால் விவசாயமும் அதை சார்ந்த தொழில்களும் சிறப்பாக நடந்து வந்தன. நாட்டின் ஒரு பக்கம் கடல் நீர் பரப்பி இருந்ததால், வாசுகாறைக்கு இரண்டு நன்மைகள். ஒன்று வாணிபம் செலித்தது மற்றொன்று அந்த பகுதி வழியாக எதிரிகளின் அச்சுறுத்தல்கள் குறைவு.

நாட்டின் மக்கள் சுயதிருப்தியுடன் செலிப்பாக வாழ்ந்து வந்தனர் அதானல் நாட்டின் கஜானாவும் நிரம்பி இருந்தது. ஆலய பணிகளுக்காக செல்வத்தை கணக்கிடாமல் சுமவன் செலவழித்து கொண்டிருந்தான்.

வாசுகாறை-க்கு அவ்வப்போது எதிரிகளிடம் இருந்து அச்சுருத்தல்கள் இருந்து கொண்டே இருந்தது இதற்கு நாட்டின் இயற்கை வளம் முக்கிய காரணம். நாட்டின் நடுவே கோடு கிழித்தார் போல் வாவலாறு எனும் ஆறு ஓடி நாட்டை செலிப்பாக்கியது. இத்தகைய செலிப்பிற்கு சுமவனின் ஆட்சி கொள்கைகளும் முக்கிய காரணம்.

வெறும் ஏட்டு கல்வி மட்டும் உதவாது என்று எண்ணிய மன்னன், தொழில் சார்ந்த கல்வி முறையை பெரிதும் ஊக்குவித்தான் அதற்கு நல்ல பலனும் கிடைத்தது.

இது போக முக்கிய கொளகையாக, வாணிபத்தில் ஈடு படும் தன் நாட்டை சேர்ந்தவர்க்கு போதுமான சலுகைகளையும் அளித்து வந்தான். வெளி நாடு வணிகர்களை அவன் பெரிதும் ஊக்குவித்ததில்லை. இதனாலேயே வாசுகாறை செல்வ செலிப்பு மிக்க நாடாக மாறியது.
இது போக பகைவர் நாட்டம் கொள்ள மற்றொரு காரணமும் இருந்தது அது, நாட்டின் இளவரசி பவதனி. பவதனி ஓர் பேரழகி,மன்னனுக்கு வேறு ஆண் வாரிசு கிடையாது அதானால் பவதனியை மணந்து கொண்டால் நாட்டையும் கைப்பற்றி விடலாம் என்கிற எண்ணத்தில் பகைவர்கள் இருந்தனர்.

சுமவன் ஆன்மிக பணிகளில் ஈடு பட்டிருந்ததால் நாட்டை பாதுகாக்கும் பொறுப்பினை தனது சேனாதிபதி வம்திரனிடம் ஒப்படைத்திருந்தான்.

வீரத்திற்கும் , தீரத்திற்கும் அடையாளம் வம்திரன். தவறு செய்தவர்கள் மன்னனுக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ இவனுக்கு பயப்படுவார்கள் அவ்வளவு கண்டிப்பானவன்.
மன்னன் தவிர்த்து எவருக்கும் அடிபணிய மாட்டான், சரியென பட்டதை இடம் , பொருள் , ஏவல் பாராது சொல்லிவிடுவான். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தட்டி கேட்க்க தயங்கமாட்டான். இதெல்லாம் அவன் சிறு வயது முதல் கற்ற பாடம். இதானால் நிறைய எதிரிகளையும் சம்பாதித்திருந்தான். இவனது முதுகில் குத்த சமயம் பார்த்து காத்திருக்கிறார்கள் இதில் சில அமைச்சர்களும் அடக்கம்.

போர்தொழில் போக இவனுக்கு பல திறமைகள் உண்டு, அதில் பாடுவதும், இசைப்பதும் அவனுக்கு பிடித்தவை. வீணை எடுத்து மீட்ட ஆரம்பித்தால் இராவணனே தோற்று விடுவான் என்கிற அளவுக்கு எங்கும் ஒலிக்கும் இசை.

தனது நாடான வாசுகாறையை இரவு , பகல், குளிர், வெயில் பாராது, ஒரு நொடியும் தவறாது பாதுகாத்து வந்தான். நட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தனக்கு மிகவும் விசுவாசமானவர்களை ஒற்றர்களாக நியமித்திருந்தான்.

இதனால் ஏதேனும் பிரச்சனை தொடங்கும் முன்பே அதை வேறுடன் அழிக்க முடிந்தது.
எதிரிகளின் அச்சுறுத்தல்கள் அதிகம் இருப்பதால், பவதினி நகர்வலம் செல்லும் பட்சத்தில் பாதுகாப்பு மிகவும் சிரத்தையாக மேற்கொள்ளப்பட்டிருக்கும். வம்திரன் நிச்சயம் அங்கே இருப்பான் பவதனியின் மெய்காப்பாளனாக.

இவ்வாறு நட்கள் நகர்ந்து கொண்டிருந்தது, எதிரிகளின் சின்ன சின்ன சீண்டல்களை வம்திரன் வெற்றிகரமாக முறியடித்து வந்தான்.

***

சும்பனுக்கு சில நாட்களாக சரியான் தூக்கமில்லை, மேலும் துர்சொப்பனங்கள் வேறு, இதற்கான காரணம் அறிய அரசகுல ஜோதிடர் அறகசியை வரவழைத்தான்.

கிரக நிலைகளை ஆராய்ந்த அவர் மவுனித்தார். மன்னனின் பதட்டம் அறிந்த வம்திரன் அறகசியின் மவுனம் கலைத்தான்.

அவரிடம், அறகசி அவர்களை , தாங்கள் கண்ட கிரக நிலைகளை பற்றி விழக்கி சொல்லுங்கள் என்றான்.

அவ்ர் பெருமூச்சை விட்டு விட்டு சொல்ல துவங்கினார்,

“மன்னா, தங்களின் கிரக நிலை சரியாக இல்லை, இதனால் நாட்டிற்கு பெரும் ஆபத்து வரவிருக்கிறது.”

இதை சரி செய்ய எதும் வழிகள் இருக்கிறதா, சற்றே பதட்டபட்டார் மன்னர்

இருக்கிறது மன்னா, நமது அண்டை நாடான வார்சுழியில் அமைந்துள்ள சிவாலயத்தில் தாங்கள் தொடர்ந்து பதினாறு நாட்கள் பூஜை செய்ய வேண்டும் என்றார்.

இப்போது வம்திரன் குறுக்கிட்டான், அவர்கள் எப்போது நம்முடன் போர் புரியலாம் என்று காத்திருக்கிறார்கள் அவர்களிடம் சென்று நாம் எப்படி உதவி கோர முடியும்.

மாற்று வழி ஒன்று இருக்கிறது மன்னா, அதை செல்லுங்கள் என்று அவசர படுத்தினான் வம்திரன்.

அது வேண்டாம் மன்னா.

பரவாயில்லை செல்லுங்கள் இங்கே நாம் மூவர் மட்டும் தானே இருக்கிறோம். சொல்லுங்கள் அறகசி.

நமது இளவரசிக்கு , மணமுடிதது அவளை மணப்பவனை வாசுகாறைக்கு மன்னனாக முடிசூட்ட வேண்டும்.

இவ்வளவு தானா இதை சொல்லவா தயங்கி நின்றீர்கள்.

இது மட்டும் இல்லை மன்னா, முடி சூட்டிய பின்னர் “நீங்கள், உங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் மன்னா” என்று திக்கி தினறி சொல்லி முடித்தார்.

அவர் வாக்கியத்தை முடித்த நொடி, வெகுண்டெழுந்த வம்திரன், தனது வாளை எடுத்து அறகசியின் கழுத்தில் வைத்தான்.

உத்தரவிடுங்கள் மன்னா… இப்போதே கொல்கிறேன் என்றான் கடும் சினத்துடன்.

அவனை அமைதியடைய சொல்லிவிட்டு தானும் மொளனம் ஆனார் மன்னர், இருவரிடமும் நான் சற்று தனிமையில் இருக்க விரும்புகிறேன். இங்கு நடந்தது நம்க்குள் இருக்கட்டும். நாளை நான் உங்களை சந்தித்து இது பற்றி பேசுகிறேன் நீங்கள் இப்போது நீங்கள் போகலாம் என்றார்.

வம்திரன் சற்று தயங்கினாலும் , சமவனின் வார்த்தைக்ககட்டு பட்டு அங்கிருந்து சென்றான். அவன் சென்றால் அவன் நினைவு முழுவதும் அறகசி சொன்ன விசயத்திலேயே நின்றது.

***

ம்திரன் நாட்டிற்கே சேனாதிவதியாக இருந்தாலும் அவனுக்கு மென்மையான மறுபக்கமும் இருந்தது. அவனுக்குள்ளும் ஒரு காதல் இருந்தது, காதலுக்கு காரணம் மத்தமிழ் பேருக்கேற்றார் போல் தமிழின் இனிமையும் அழகும் சரிவர கலந்த பெண்ணாக இருந்தால்.

இவளுடன் ஒப்பிட்டால் பவதனியும் தோற்று போவாள். இருவருக்குள்ளும் சரியான புரிதல் இருந்தது, இருவரும் பார்த்துக்கொள்வதே அறிது.

இன்று அவளை அவன் பார்க்க சென்றான், மாலை மங்கும் வேளையில், விழித்திருந்தது போதும் என்று சூரியன் வீட்டிற்கு செல்ல ஆயத்தமாகி கொண்டிருந்தது.

அவளுக்கு முன்பாகவே நந்தவனத்திர்க்கு சென்று அவளுக்காக காத்திருந்தான். அவளும் வந்தாள். மின்னல் ஒளியில் மட்டுமே மலரும் தாழம்பூ சூடி காற்றில் எங்கும் நறுமணம் கமழ, அடிமேல் அடிவைத்து இவனை நோக்கி வந்தாள்.

அப்போது நிலவிய சூழ் நிலையில் தொலைவில் இருந்து அவளை பார்த்தால் அவள் பூலோகத்தை சேர்ந்தவள் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டர்.

அவனும் ஒரு நொடி நிலைகுலைந்துதான் போனான், பின்பு அவளிடம் அரசவையில் நடந்த சிலவற்றை கூறினான். முன்னதாக மன்னனிடம் தனது காதல் பற்றி சொல்லி இவளை மனம் முடிக்க அனுமதி கேட்க்க போவதாக சொல்லியிருந்தான் அவள் அதை வினவினாள்.
இவன் இல்லை என்பது போல் தலையாட்டிவிட்டு, நமக்கும் வார்சுழிக்கு போர் மூளும் நிலை இருக்கிறது அந்த போரில் வெற்றி கண்டு மன்னனிடம் இது பற்றி பேசுகிறேன் என்றான்.

ஏன் திடீரெண போர் என மீண்டும் வினவினாள்??

அவன் பதில் கூறாது நேரம் ஆகிவிட்டது நீ உனது இல்லத்திற்கு செல், மீண்டும் உன்னை மற்றொரு நாள் சந்திக்கின்றேன் என்று வழியனுப்பினான்.

அவளை அனுப்பிவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.

***

றுநாள், சுமவனை காண இருவரும் சென்றனர். அப்போது தான் எடுத்த முடிவை அவர்களிடம் சொல்ல துவங்கினார்.

கூடிய விரைவில் பவதனிக்கு மணம் முடித்துவிட்டு , தவம் புரிய வனம் புக போவதாக சொல்லி நான் வனாந்திரத்தில் எனது உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்திருக்கிறேன் என்றார்.

இப்போது குறுக்கிட்ட வம்திரன், நாட்டு மக்களுக்கு கேடு நேராமல் இருக்க தங்கள் உயிரை விடவும் துணிந்து விட்டீர்கள். வேண்டாம் மன்னா நான் இருக்கிறேன், வார்சுழியை போரில் வென்று காணிக்கை ஆக்குகிறேன். பின்பு நீங்கள் அங்கு சென்று பூஜை செய்யலாம்.
வேண்டாம் வம்திரா, அவர்களது படை பலம் , நம்மை காட்டிலும் அதிகம், அவர்களை வெல்வது கடினம்.

எண்ணிக்கை இருந்தால் என்ன? என்னிடம் வெற்றிபெற வேண்டும் என்கிற வேட்கை இருக்கிறது. எனது உயிர் போகும் முன்னர் அவர்களை வெல்வேன்,தங்களது ஆசிர்வாதத்துடன்.

வாழ்த்தி அனுப்புங்கள் மன்னா…

***

ன்னரும் வாழ்த்தி அனுப்பினார், அன்றே தனது சகாக்களுடன், தாக்குதல் திட்டத்தை வகுக்க துவங்கினான்.

வார்சுழி ஒரு பக்கம் மலை, அதன் பக்கவாட்டு பக்கத்தில் கடல் அதனால் இரு திசை தாக்குதலில் ஈடுபட்டால் போதுமானது என்றான் ஒருவன்.

பொதுவான இடத்தில் போர் நடைபெற இரு நாட்டு மன்னர்களின் ஒப்புதல் அவசியம். சுமவன் சம்மதித்து விட்டார், வார்சுழி இதற்கு உடன்படாத பட்ச்சத்தில் , இரு திசை தாக்குதல் நடத்துவோம் என்று முடிவு செய்தான்.

சங்ககால தமிழ் மரபுபடி எதிரி நாட்டிற்கு முரசறைந்து, போர் புரிய வருவதை தெரிவித்தான் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

அடுத்த கட்ட நடவடிக்கையாக, வம்திரன் மற்றும் பதினைந்து பேர் கொண்ட குழு வெட்சிப்பூ அணிந்து ஆநிரை கவர்தலில் ஈடு பட்டனர். இதற்கு அவர்கள் எதிர்பார்த்த பலன் கிடைத்தது.

அவர்கள், ஆநிரையை மீட்க்க கரந்தை பூ அணிந்து வந்தனர், வந்தவர்களை, தனது படை பலத்தால் தோற்கடித்து அனுப்பினான்.

பின்னர் , வார்சிழியின் தூதுவன் வந்தான், தங்கள் மன்னர் போர் புரிய நாட்டம் தெரிவித்திருப்பதையும், இடத்தை நீங்களே தேர்வு செய்யலாம் என்றான்.

வந்தவனிடம், பொதுவான சமவெளி பகுதியை தேர்வு செய்து அனுப்பிவைத்தான் வம்திரன்.

***

று நாள் விடிந்தது, சங்குகள் முழங்க போர்கலம் சென்றான் வம்திரன் தனது படை வீரர்களுடன்.

எதிரிகளின் படை இவர்களைவிட பெரிதாகவே இருந்தது. அவர்கள் சக்கரவியூகத்தில் படைகளை அணிவகுத்து களம் புகுந்தனர். அதை முறியடிக்க ஊசிமுனை வியூகத்தை வம்திரன் பயன்படுத்தின்.

இங்கே வியூகம் என்பது படை வீரர்கள், அணிவகுத்து போர்புரியும் தோற்றத்தை குறிக்கும்.
ஆரம்பத்தில் புழுதி பறந்த போர்களம், நேரம் ஆக ஆக இரத்த சகதியில் புழுதி அமுங்கியது. மதிய பழுது வரை நடைபெற்ற போரில் வார்சுழியின் பக்கமே இழப்பு அதிகமாக இருந்தது.
மதிய பொழுதுவரை நிலையாக போர் செய்த வம்திரனால், அதன் பிறகு நிலையாக போர் புரிய இயலவில்லை.

இதற்கு காரணம் , மெதுவாக கொல்லும் நஞ்சை எதிரி நாட்டு அரசன் இவனுக்கு குடுக்க சொல்லியிருக்கிறான் என்பதை தாமதமாகத் தான் அறிந்தார்கள் ஒற்றர்கள்.

விவரம் அறிந்ததும் உடனடியாக வைத்தியர் வரவழைக்கப்பட்டார். மாற்று மருந்து அளிக்கப்பட்டு மீண்டெழுந்தான் வம்திரன்.

இந்த நிலைமையில் அவனை போர் புரிய வேண்டாம் என்று தடுத்தனர் அவனது சகாக்கள், “வீழ்வது இழிவாக விழுந்து கிடப்பது இழிவே” என்று சொல்லி அவர்களிடம் ஒரு புன்னகையை உதி்ர்த்தான்.

நஞ்சிட்ட துரோகியை பிடிக்க தன் சகாக்களிடம் உததரவிட்டு, ஆவேசமாக போர்களம் புகுந்தான்.

அம்புகளை மழையென பொழிந்து முன்னேறினான், இந்த முயற்ச்சியில் வார்சுழி சேனாதிபதியை சொர்கத்திற்கு அனுப்பினான். பின்பு வார்சுழி மன்னனை நோக்கி தனது கவனத்தை திருப்பினான். அவனை ஆக்ரோஷமாக நெருங்கினான்.

இவனது வேகம் கண்டு சரணடைய முற்ச்சிப்பது போல் அவனிடம் மண்டியிட்டு வேண்டலானான். வம்திரன் யோசித்து நின்ற நேரத்தில் தன்னிடம் இருந்த நஞ்சில் தோய்ந்த கத்தியால் வம்திரனது வலது மார்பில் குத்தினான்.

இதை எதிர்பாரதபோதும் சுதாரித்து பின் தனது வாளைக்கொண்டு ஒரே வீச்சில் அவனது தலையய் கொய்தான்.

ஏற்கனவே உணவில் இருந்த நஞ்சுடன் இப்போது கத்தில் இருந்ததும் சேர்ந்து கொண்டதால் அவனால் நிலைகொள்ள முடியவில்லை.

இருந்தும் உயிர் போகும் முன் வெற்றியை காணிக்கை ஆக்குகிறேன் என்று வாக்கு குடுத்திருந்ததால் தனது புரவில் தாவி ஏறி வாசுகாறை நோக்கி விரையத் துவங்கினான்.

***

ரத்தம் வழியும் தேகத்துடன் அரசவைக்குள் நுழைந்தான், மன்னை கண்டு தான் வெற்றி கண்டதை சொன்னான். பின்பு தனது காதல் பற்றியும் கஷ்டப்பட்டு சொல்லி முடித்து மயங்கி விழுந்து விட்டான்.

உடனே அரண்மனை வைத்தியர் வரவழைக்கப்பட்டார், வம்திரனுக்கு வைத்தியம் பார்க்கப்பட்டது. அவன் கண்விழிக்க இரண்டு நாட்கள் ஆகும் என்றார் வைத்தியர்.
மன்னன் போரில் வெற்றி பெற்றாலும் வருத்தத்துடனே காணப்பட்டார். இதை கண்ட ஒரு அரசவை அமைச்சர் தனிமையில் காரணம் வினவினார்.

எல்லாம் , இளவரசியை பற்றியது தான் அவளை வம்திரனுக்கு மனம் முடித்து வைத்து விட்டால். நாடும் நன்றாக இருக்கும் , அவளும் சந்தோஷமாக இருப்பாள் என்று எண்ணியிருந்தேன். ஆனால், வம்திரனோ இன்னொருத்தியை காதலிப்பதாக சொல்கிறான்.
இதில் என்ன முடிவெடுக்க என்று எனக்கு தெரியவில்லை.

இதற்கு நான் வழி சொல்கிறேன். இந்த அமைச்சருக்கும் வம்திரனுக்கும் பனி போர் நடந்து கொண்டிருக்கிறது. என்பதை அறியாத மன்னன். அமைச்சரின் ஆலோசனைக்கு செவிசாய்த்தான்.

வம்திரனின் சந்தோஷத்தை கெடுக்க நினைத்த அமைச்சர், சுமவனிடம் அவன் காதல் கொள்ளும் பெண்ணை நாடு கடத்திவிடலாம் அல்லது அவளை கொலை செய்து விடலாம்.
ஒரு நாட்டின் வருங்காலத்திற்காக , ஒரு உயிரை கொல்வதில் எந்த பாவமும் இல்லை என்றார்.

முதலில் மறுத்த மன்னன் பின்னர் சமதித்தார். அதுவும் வம்திரன் கண்விழிப்பதர்க்குள் நிகழவேண்டும்.

இந்த முடிவின் படி மறு நாளே மத்தமிழ் வீட்டுடன் நெருப்பி்ன் நக்குகளுக்கு இரையாக்கப்பட்டாள்.அது கொலையாக இல்லாமல் விபத்தென ஆக்கப்பட்டது.

***

குணமடைந்த வம்திரன் கண்விழித்தான், தடு மாற்றத்துடன் நடந்து மன்னனை பார்க்க சென்றான்.

இவனிடம் மத்தமிழிக்கு ஏற்ப்பட்டதை எப்படி சொல்வது என்று குழப்பத்தில் இருந்தான். இவனது குழப்பத்தை உணர்ந்த வம்திரன் அவனே கேட்டான்.

என்ன மன்னா? இன்னும் என்ன வருத்தம்? என்றான்

தயங்கி தயங்கி துயரசெய்தியை சொன்னான்.

கேட்டவுடன் நொருங்கி போன் வம்திரன், தான் உடனடியா துறவரத்தில் ஈடுபடபோவதாக தனது போர் வாளை சுமவனின் பாதத்தில் வைத்தான்.

இதை சற்றும் எதிர் பாராத மன்னன் அவனது தோழ் தொட்டு “வம்திரா.. நட்டின் பாதுகாப்பே உனது கையில் தான் இருக்கிறது. இதை நிரந்தரமாக்கவும் நாட்டின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டும் நான் பவதனியை உனக்கு மணம் முடடித்து வைக்க முடிவு செய்திரு்க்கிறேன். இந்த நேரத்தில் நீ வனம் புக போவதாக செல்கிறாய். இத்தனை நாள் நீ கட்டி காத்த வாசுகாறையை இனி யார் பார்த்து கொள்வார்”

என்னை தடுக்காதீர்கள் மன்னா..

அப்படி சொல்லாதே வம்திரா உனக்காக இல்லாவிட்டாலும் எனக்காகவும் இந்த நாட்டிற்காகவும் நீ இதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

உடனே நீ மாற வேண்டாம் , நான் தெற்கே கட்டி வரும் ஆலயத்தின் திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது அது முடிந்து. ஆலயத்தில் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு உங்களது திருமணத்தை நடத்தலாம் என்றார்.

வம்திரனுக்கு இஷ்டம் இல்ல விட்டாலும், மன்னரின் வார்த்தையை தட்ட முடியாத காரணத்தால் சம்மதித்தான்.

***

நாட்கள், கடந்தன ஆலய திருப்பணிகள் முடிந்தன, ஆகம விதிகளின் படி பூஜைகள் மேற்கொள்ள, மிக பெரும் யாகங்களுக்கு ஏற்ப்பாடு செய்ய பட்டது.

இதற்கிடையில் மத்தமிழுக்கு இழைக்கப்பட்ட அநீதி வம்திரனின் செவிகளுக்கு வந்து சேர்ந்தது. கடும் கோபம் கொண்டான்.

என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான், மன்னரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்தான். மறு கணம் வேண்டாம் துறவு மேற்கொள்ளுவோம் என்று முடிவு செய்தான். இப்படி ஏகப்பட்ட சிந்தனைகள் அவனது மூளைக்குள் சுற்றி திரிந்தன.

இறுதியாக ஒரு முடிவெடுத்தான் , மன்னனுக்கு மடல் ஒன்றை எழுதினான், அவனுக்கு விசுவாசமான ஒருவனை அழைத்து மன்னரிம் சேர்க்க சொன்னான்.

பின்பு ஆலயம் நோக்கி சென்றான் , அங்கே எறிந்து கொண்டிருக்கும் யாக குண்டத்தில் விழுந்து இவனும் நெருப்புக்கு இரையானான்.

அந்த மடலில்,

மன்னா,
மத்தமிழுக்கு ஏற்ப்பட்ட உன்மை நிலையை நான் அறிவேன். அதானல், என்னுள் ஏகப்பட்ட குழப்பமான எண்ணங்கள் தோன்றின. இறுதியாக ஒரு முடிவை எடுத்திருக்கிறேன். என்னவளை தீண்டிய நெருப்பின் நாவில் நானும் விழ ஆசைப்படுகிறேன். இதற்கு மற்றுமொரு காரணம் இருக்கிறது. பஞ்ச பூதங்களில் நெருப்பிர்க்கு மட்டுமே நேரடியாக வானுலுகத்தில் சேர்க்கும் சக்தி உள்ளது. வையத்தில் சேராத எங்கள் காதல் வானத்திலாவது சேரவேண்டும் என்று இறைவனை பிரார்த்தியுங்கள்.

முக்கியமாக, எனக்கு தெரிந்த அனைத்து ராஜ ரகசியுங்களும் என்னுடனே இருக்கிறது. நீங்கள் என்னை வஞ்சித்ததால் நானும் அப்படி செய்வேன் என்று நீங்கள் நினைத்து பயம் கொள்ள வேண்டாம்.

நீங்கள் இதை படிக்கும் நேரத்தில் நான் வையத்தை விட்டு சென்றிருப்பேன்.

இது ஒரு ராஜ விசுவாசியின் இறுதி மடல்.

படித்த மன்னர் தன்னையும் அறியாது கண்ணீர் வடித்து அழத்துவங்கினார்.

இரண்டாம் பீஷ்மன்

அர்ச்சுனன் இருளில் விற்பயிற்சி செய்துகொண்டிருக்கிறான். துரோணர் தீவட்டி வெளிச்சத்துடன் அவனை நோக்கி வருகிறார்.

துரோணர்: அர்ச்சுனா, வில்லின் நாண் உன் உள்ளங்கையில் உராய்ந்த ஒலி கேட்டு இங்கே வருகிறேன். இவ்விருளில் என்ன செய்துகொண்டிரு- க்கிறாய் வீரனே ?

அர்ச்சுனன்: வணக்கம் குருதேவா!விற் பயிற்சிதான் செய்து கொண்டிரு க்கிறேன். அன்றொரு நாள் இரவில் உணவருந்திக்கொண்டிருக்கும்போது

காற்றடித்ததில் விளக்குகள் அணைந்து போயின. ஆனால் நான் சாப்பிடுவதை நிறுத்தவில்லை. என் கை வாயைத்தவிர வேறிடத்தில் செல்லவில்லை. அதேபோல உணவை எடுத்த இடத்திலும் கை மாறவில்லை. இதற்கெல்லாம் காரணம் தினம் உண்டதால் ஏற்பட்ட கைப்பயிற்சிதானே என்று உணர்ந்தேன். அதே பயிற்சியை வில்லிலும் இரவில் தொடர எண்ணியே இங்கே வந்தேன். தங்களிடம் கூறாமல் வந்துவிட்டதை மன்னிக்க வேண்டுகிறேன்.

துரோணர்: ( அர்ச்சுனனைத் தழுவிக்கொண்டே) மகிழ்ச்சி, அர்ச்சுனா மெத்த மகிழ்ச்சி. உன்னைப்போன்ற சிறந்த பயிற்சி உடையவனைக் காணேன். இனி உலகில் உனக்குச் சமமான வில்லாளி இல்லை எனும் அளவுக்கு உனக்குப் பயிற்சி தரப்போகிறேன். இது உண்மை.

அர்ச்சுனன்: நன்றி குருதேவா! நான் பெரும் பாக்கியம் செய்தவன்! அதற்கான தகுதி எனக்குண்டாக ஆசீர்வதியுங்கள் பெருமானே!

துரோணர்: அங்ஙனமே ஆகுக, என் பிரிய சீடனே!

காட்சி:2

காலம்: ஒரு பகல்

களம் : துரோணர் இல்லம்

கதை மாந்தர் : ஏகலைவன், துரோணர்

ஏகலைவன்: வணக்கம் குருதேவா!

துரோணர்: யாரது மகனே, உன் தேடல் யாது ?

ஏகலைவன்: குருதேவரே, பக்கத்துக்காட்டில் வாழும் வேடர்களின் தலைவனான இரண்யதனுஸ் என்பவரின் மகன் நான். என் பெயர் ஏகலைவன். வில் வித்தையைச் சிறப்பாகக் கற்றுக்கொள்ளவிழைகிறேன். அவ்வித்தையைக் கற்பிப்பதில் தங்களைவிடச் சிறந்த ஆசிரியர் எவரும் இலர் என்று கேள்விப்பட்டு த் தங்களையே குருவாக வரிக்க வந்திருக்கிறேன். என்னையும் தங்கள் சீடர்களில் ஒருவனாக ஏற்றுக் கடாட்சிக்கவேண்டும் மகாகுருவே! (மீண்டும் வணங்குகிறான்)

துரோணர்: எழுந்திரு வேடன் மகனே! கல்வி தேடி குருவை நாடி வந்தவனை உதாசீனப்படுத்தக்கூடாது. ஆனால் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் பயிற்சி அளிப்பதற்கே எனக்கு நேரம் காணவில்லை. என்றாலும் உன்னையும் என் சீடனாகக் கருதுகின்றேன். எப்போதும் விற்பயிற்சி செய்பவனாய் இரு. அதில் மிக்க பலம் உள்ளவனாவாய். இப்போது வீட்டிற்குத் திரும்பச்செல். என் மனமார்ந்த ஆசிகள்.

ஏகலைவன்: தங்கள் கட்டளைப்படியே ஆகட்டும் குருதேவா! (வணங்கித் திரும்புகிறான்)(மனதுக்குள்): தங்களையே குருவாக வரித்து தங்கள் பதுமையின் முன் என் பயிற்சிகளை ஆரம்பிப்பேன், வழிகாட்டுவீராக!

காட்சி:3

காலம்: சில மாதங்கள் கழித்து ஒரு பகல்

களம் : துரோணர் இல்லம்

கதை மாந்தர்: துரோணர், அர்ச்சுனன்

அர்ச்சுனன்: (துரோணரைப் பார்த்து) வணக்கம் ஐயனே! ‘உனக்கு மேம்பட்ட சீடன் எனக்கில்லை ‘ என்று என்னைத் தழுவிக்கொண்டு ஒரு முறை அன்புடன் கூறி இருக்கிறீர்கள். அப்படியிருக்க தங்களுக்கு என்னைவிட மேம்பட்ட சீடன் ஒருவன் இருக்கிறானே, அதெப்படி குருவே ?

துரோணர்: என்ன கூறுகிறாய் அர்ச்சுனா, சற்று விளக்கமாய்ச் சொல்.

அர்ச்சுனன்: குருதேவா, நேற்று உங்களிடம் அனுமதி பெற்று நாங்களும் கெளரவர்களும் காட்டுக்கு வேட்டையாடச் சென்றோமில்லையா ? எங்கள் பின்னால் வந்துகொண்டிருந்த நாய் ஒன்று பலமாகக் குரைத்துக்கொண்டே ஒரு கரிய வேடுவச் சிறுவனை நோக்கி ஓடியது.ஆனால் சிறிதே நேரத்தில் ஏழு பாணங்களால் நிரப்பப்பட்ட வாயுடன்

குரைக்கமுடியாமல் அந்நாய் எங்களிடம் ஓடி வந்தது. யார் இவ்வளவு திறமையுடன் அம்புகளை எய்தார்கள் என்று அவ்வேடச்சிறுவனைத்தேடிக் கேட்டதில், ‘ வீரர்களே, நான் இரண்யதனுஸ் என்பவனுடைய மகன். என் பெயர் ஏகலைவன்.தனுர் வேதத்தில் பயிற்சி பெற்றுவருகிறேன். துரோணரின் மாணவன் நான் ‘ என்று அவன் பதில் கூறினான். இப்போது கூறுங்கள், குருதேவரே, அவன் எவ்வாறு உங்கள் சீடனானான், எப்போது விற்பயிற்சி பெற்றான், எங்களுக்கும் தெரியாத வித்தைகளை அவன் எப்படிக் கற்றான் ?

துரோணர்: வீரனே, அவசரப்பட வேண்டாம். என்னுடன் வந்து அவனைக் காட்டு. அவன் முன்னிலையிலேயே நீதான் என் அத்யந்த சீடன் என்பதை நிரூபிக்கிறேன். வா, செல்லலாம்.

காட்சி:4

காலம்:மாலை.

களம் :வனம்

கதை மாந்தர்: துரோணர், அர்ச்சுனன், ஏகலைவன்

ஏகலைவன் துரோணரைப் போன்று மண்ணால் செய்யப்பட்ட பதுமையின் முன் வணங்கிவிட்டு தொடர்ந்து அம்புகளை எய்தவண்ணம் விற்பயிற்சியில் இருக்கிறான். துரோணர் வருவதைக்கண்டவுடன் ஓடிவந்து அவர் பாதங்களில் விழுந்து வணங்குகிறான். ஏகலைவன்: வணக்கம் குருதேவரே, நான் தங்கள் சீடன் ஏகலைவன். தங்கள் கிருபையால் தனுர்வித்தை ஒரளவு கைவரப் பெற்றிருக்கிறேன். மேலும் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வருகிறேன்.அருள்பாலியுங்கள் குருநாதரே!

துரோணர்: மகிழ்ச்சி ஏகலைவனே, உன் திறமை கண்டு போற்றுகிறேன். அதிருக்கட்டும்; நீ என் சீடன் என்றால் எனக்கு குரு காணிக்கை கொடுக்கவேண்டுமல்லவாஅப்போதுதானே கற்ற வித்தைக்குப் பலன் உண்டாகும் ?

ஏகலைவன்: பெருமானே, நான் என்ன கொடுக்கவேண்டும் ?கட்டளை இடுங்கள்!

துரோணரின் முகம் நிறம் மாறுகிறது.தன் வஞ்சக எண்ணத்தை மறைத்து,

துரோணர்: என் பிரிய சீடனே, குரு காணிக்கையாக உன் வலக்கைக் கட்டை விரலைத் தருவாயா ?

ஏகலைவன்: குருதேவரே, என்னவோ என்று பயந்துபோய் விட்டேன். இதோ உங்கள் காணிக்கை, ஏற்றுக்கொள்வீர்களாக!(இவ்வாறு கூறிக்கொண்டே தன் வலக்கைக் கட்டை விரலை வெட்டி துரோணரிடம் தருகிறான் ஏகலைவன். துரோணரும் வாய்ப் பேச்சற்றவராக கைகளை உயர்த்தி ஏகலைவனை ஆசீர்வதித்தவண்ணம் அர்ச்சுனனைப் பார்க்கிறார், ‘உன் போட்டியை ஒழித்துவிட்டேன் பார்த்தாயா ‘ என்ற குறிப்பு தோன்ற)

அர்ச்சுனன்: ஏகலைவா, என்னே உன் குரு பக்தி! நீ நீடூழி வாழ்க! உன் வித்தையும் வாழ்க!

காட்சி: 5

காலம்:சில வாரங்கள் கழித்து ஒரு மாலை.

களம் :துரோணர் இல்லம்

கதை மாந்தர்:அர்ச்சுனன், துரோணர்.

அர்ச்சுனன் பதறிக்கொண்டே ஓடி வருகிறான். துரோணரைப் பார்த்து அர்ச்சுனன்: நாம் மோசம் போய்விட்டோம் குருதேவா! ஏகலைவன் உங்களை ஏமாற்றிவிட்டான்.

துரோணர்: என்ன பதட்டம் இது அர்ச்சுனா, எதைக் கண்டு இந்த முடிவு ?

அர்ச்சுனன்: ஆம் குருதேவரே, இன்னொரு முறையாக இப்போதுகூட ஏகலைவனின் வில் திறனை நான் பார்க்கநேர்ந்ததே காரணம். நேற்றிரவு ஏகலைவன் கானகத்தினோரம் ஒரு பசுவைக் கொல்ல வந்த புலியின் வாயை அம்புகளால் கட்டி விரட்டியடித்த விந்தையை நட்சத்திர ஒளிக்கிடையே நான் கண்டேன். இருளிலும் சப்தங்களைக்கேட்டே அம்பைக்குறி வைக்கும் திறனை அவனிடம் பார்த்தேன். ஆனால் அவனிடம் நேரில் எதுவும் பேசாமல் வந்து விட்டேன். இது எப்படி சாத்தியமாயிற்று அவனுக்கு ? அவன் எதோ ஏமாற்று வேலை செய்திருக்கிறான் என்றே நினைக்கிறேன் குருதேவா!

துரோணர்: இருக்காது வீரனே, என்னை நம்பு. என் சீடர்கள் எவரும் பொய்யர்கள் அல்லர். இன்னமும் நீதான் என் தலையாய சீடன். எனினும் நீ கூறியது என்னை சங்கடப்படுத்துகிறது. நாமிருவரும் நாளை ஏகலைவனைச் சந்தித்து உண்மையை அறிவோம்.அதுவரை பொறுமை காத்திரு.

அர்ச்சுனன்: குருதேவா, என்னைவிடச் சிறந்த வில்லாளி என்னிடம் ஏற்படுத்திய மன உளைச்சலில் தங்கள் மனதை சங்கடப்படுத்தியதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். என்னை மன்னியுங்கள் பெருமானே!

துரோணர்: சென்று வா வீரனே, வீரம் வெல்லட்டும்!

அர்ச்சுனன் வணங்கி விடை பெறுகிறான்.

காட்சி:6

காலம்: மறு நாள் காலை

களம் :கானகம்

கதை மாந்தர்: ஏகலைவன், துரோணர், அர்ச்சுனன்

ஏகலைவன் குருவின் பதுமையின் முன் வணங்கி கண்களை மூடித் தியானத்தில் இருக்கிறான். துரோணரும் அர்ச்சுனனும் வரும் சலசலப்பு சத்தம் கேட்க, கண் திறந்து துரோணரைப் பர்த்துவிட்டு அவரை வணங்குகிறான்.

துரோணர்(ஏகலைவனைப் பார்த்து): வாழ்க குழந்தாய்,ஒன்பது விரல்களைக் கொண்டு கைகூப்பி வணங்கும்படி உன்னைச் செய்துவிட்டேனே,என் விபரீதகோரிக்கையை பொறுத்துக்கொள்வாயாக! இன்னமும் உன் வில் வித்தை ஆசை போகவில்லைபோலிருக்கிறதே. நேற்று முன் தினம் இரவு நீ ஒரு புலியின் வாயைக்கட்டி விரட்டியதை அர்ச்சுனன் பார்த்தானாம். என்னிடம் சொன்னான். வலக்கை கட்டைவிரல் இழந்தும் இது எப்படி சாத்தியமாயிற்று என்று எனக்கே வியப்பாக இருக்கிறது!

ஏகலைவன்: குருதேவரே! உங்கள் பரிபூரண ஆசி இருக்கும்போது எதுதான் சாத்தியமாகாது ? மேலும் நீங்கள் வலக்கை கட்டை விரலைத் தானே பெற்றுப்போனீர்கள் ? நான் இடக்கைப் பழக்கம் உள்ளவனாயிற்றே! அதனால் என் வில் வித்தைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை; இனியும் இருக்காது.அது இருக்கட்டும், தாங்கள் இப்போது என்னைக் காண வந்த காரணம் நான் அறியலாமோ பெருமானே ?

எகலைவன் கூற்றைக் கேட்ட துரோணரும் அர்ச்சுனனும் திகைத்துப் போகிறார்கள்.முகத்தில் குற்ற உணர்வுடன், துரோணர்: என்னை மன்னித்துவிடு , என் பிரிய சீடனே, நான் முதலிலேயே உன்னிடம் உண்மையைக் கூறியிருக்கவேண்டும். அர்ச்சுனன்தான் என்றும் என் சிறந்த சீடன் என்று அவனிடம் வாக்களித்திருந்தேன். ஆனால் சத்திரியனான அவனைவிட வேடனான நீ வில் வித்தையில் சிறந்து விளங்குவதை அவனால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. என் வாக்கும் பொய்த்துப்போய் விடும்போலிருந்தது. எனவேதான் உன்னைச் செயலிழக்கச் செய்ய உன் வலக்கை கட்டைவிரலைக் காணிக்கையாகப் பெற்றேன். ஆனால் என் பொய் என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டது.உன் இடக்கைப் பழக்கம் உன் வித்தையைக் காப்பாற்றிவிட்டது. (அர்ச்சுனனைப் பார்த்தவாறே) அர்ச்சுனனும் என்னை மன்னிக்கட்டும்! நான் வருகிறேன்.(திரும்ப யத்தனிக்கிறார்)

ஏகலைவன் (அவரை இடைமறித்து) :குருசிரேஷ்டரே,அபசாரம்,அபசாரம். இவ்வார்த்தைகள் தங்கள் திருவாயிலிருந்து வரலாமா ? தாங்கள் என்னிடம்காணிக்கை கேட்டபோதே தங்கள் நோக்கத்தை நான் உணர்ந்திருக்கவேண்டும். அதற்கேற்ப என் இடக்கைக் கட்டை விரலை தங்களுக்குக் காணிக்கையாக தந்திருக்கவேண்டும். நான் வேட்டுவன்தானே, அரசாளும் சத்தியர்களுக்கும் அவ்ர்கள் பேணும் அந்தணர்களுக்கும் உள்ள சாமர்த்திய புத்தி எனக்கில்லையல்லவா ? இப்போதும் கேளுங்கள். இன்னொருமுறை காணிக்கையாக என் இடக்கை க் கட்டை விரலையும் தரத் தயார்!…….

துரோணர் இடை மறிக்கிறார்: வேண்டாம் குழந்தாய், வேண்டாம். நான் இழைத்த ஒரு குற்றமே போதும்!

அர்ச்சுனனும் இடைமறித்து:நண்பனே ஏகலைவா,போதும். உன் குரு பக்தியையும் விற்திறனையும் கண்டு நான் வெட்கப்படுகிறேன், பொறாமைப்படுகிறேன். என் தகுதி எனக்குத் தெரிந்துவிட்டது. நீ மேலும் உன்னை வருத்திக்கொள்ளவேண்டாம்.

ஏகலைவன்: மன்னிக்கவேண்டும் குருதேவரே! நான் இன்னொரு உண்மையையும் சொல்லவேண்டும். உங்களுக்கு என் இடக்கை கட்டைவிரலைக் காணிக்கையாக்கிவிட்டு நான் சும்மா இருக்கமாட்டேன். வில் வித்தையின் மேலுள்ள என் ஆர்வம் என்றுமே தீராதது.ஆகவே கை கட்டைவிரல்களை இழந்தாலும் கால் விரல்களால் பயிற்சி செய்ய ஆரம்பிப்பேன். குருவருளால் வெற்றியும் பெறுவேன். ஆனால் குருவின் எண்ணங்களை நிறைவேற்றாத பாவியாகிவிடுவேன். ஆகவே என் கை கால்களில் உள்ள எல்லா விரல்களையுமே உங்களுக்குக் காணிக்கையாக்கத் தயாராகயிருக்கிறேன்.கட்டளை இடுங்கள் குருநாதரே!

துரோணர்(திடுக்கிட்டு ஏகலைவா, என்ன விபரீதம் இது ? எங்களை மேலும் கொடூரர்களாக ஆக்க முயற்சிக்காதே. என் வாக்கு பொய்த்ததாகவே இருக்கட்டும்.அர்ச்சுனனை நான் வேறு வழிகளில் சமாதானப்படுத்துகிறேன். எல்லாம் விதிப்படிஅன்றோ நடக்கும் ? குழந்தாய், உன் குரு பக்தி இணயில்லாதது.எங்களை மீண்டும் மன்னித்துவிடு. நாங்கள் விடை பெறுகிறோம்.

ஏகலைவன்: குருதேவரே, உங்கள் பெரிய மனது எனக்குப் புரிகிறது. ஆனால் என்னைக் கடமை தவறியவனாக ஆக்கிவிடாதீர்கள். உங்கள் எண்ணத்தைப் பூர்த்தி செய்ய நான் கடமைப் பட்டுள்ளேன். அதை உங்கள் மீது பழியில்லாவண்ணம் என் விரல்களை வெட்டிக் கொள்ளாமலேயே நிறைவேற்றும் வழி உண்டு என்று நினைக்கையில் எனக்கு மகிழ்ச்சி மேலிடுகிறது. உங்கள் வாக்கு பொய்க்காதபடி இனி அர்ச்சுனனே உங்களின் தலை சிறந்த சீடனாக விளங்குவான். ஆம்,இக்கணம் முதல் நான் வில்லைத் தொடமாட்டேன். என் வேட்டுவத் தொழிலுக்காக ஈட்டி,கத்தி,கம்பு, கை போன்றவைகளையே பயன் படுத்துவேன். இது உறுதி, அந்தணரும் சத்திரியரும் அறிய, கானும் வானும் அறிய, என் வில்லும் அம்புகளும் அறிய உறுதி. இச் சபதம்தான் குருவுக்கான என் காணிக்கை. மன மகிழ்வுடன்ஏற்று என்னை வாழ்த்தி அருளுங்கள் முனிபுங்கவரே! (துரோணரின் கால்களில் விழுகிறான்)

துரோணர்(ஏகலைவனை தூக்கி நிறுத்தி மார்புடன் அணைத்து): குழந்தாய் ஏகலைவா! உன் சபதம் என்னை மெய் சிலிர்க்கவைக்கிறது. எவர் வேண்டுமானாலும் என் தலை சிறந்த சீடனாகயிருக்கலாம், ஆனால் குருபக்தியில் எந்தச்சீடனும் உன்னை மிஞ்சமுடியாது. இது சத்தியம். சத்திரியர்களையும், அந்தணர்களையும் இன்று வெட்கப்படச் செய்துவிட்ட வேட்டுவ வீரனே, வீரத்துக்கும் நற்பண்புகளுக்கும் குலம் தடையல்ல என்று நீ நிரூபித்துவிட்டாய்.பிதாமகர் பீஷ்மரும் பொறாமைப் படக்கூடிய இரண்டாவது பீஷ்மன் நீ! வாழ்க உன்னனையோர்! ஐயனே, எங்களுக்கு விடை கொடு!

துரோணரும் அர்ச்சுனனும் வெட்கம் சூழ வெளியேறுகின்றனர்.