மகாத்மா காந்தியின் சுய சரிதை – சத்திய சோதனை – சமயங்களுடன் தொடர்பு

4/5 - (15 votes)

நான் இங்கிலாந்தில் இருந்த இரண்டாம் ஆண்டின் இறுதியில் பிரம்மஞான சங்கத்தைச் சேர்ந்த சகோதரர்களுடன் எனக்குப் பழக்கம் உண்டாயிற்று. அவர்கள் இருவரும் மணம் ஆகாதவர்கள். அவர்கள் கீதையைக் குறித்து என்னிடம் பேசினர். ஸர் எட்வின் அர்னால்டு மொழி பெயர்த்திருந்த கீதையை அவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். அசல் நுலைத் தங்களுடன் சேர்ந்த படிக்க வருமாறு என்னை அழைத்தார்கள். அத்தெய்வீக நுலைச் சமஸ்கிருதத்திலோ, குஜராத்தியிலோ நான் படித்ததில்லையாகையால் எனக்கு வெட்கமாகி விட்டது. நான் கீதையைப் படித்ததேயில்லை. ஆனால், அவர்களோடு சேர்ந்து மகிழச்சியுடன் அதைப் படிப்பேன் என்பதை நான் அவர்களிடம் சொல்லியாக வேண்டியதாயிற்று. சமஸ்கிருதத்தில் எனக்கு இருந்த ஞானம் சொற்பமேயாயினும், மொழிபெயர்ப்பு எந்த இடத்தில் அதன் பொருளைச் சரியாகக் கொண்டுவரத் தவறியிருக்கிறது என்பதைக் கூறும் அளவுக்கு மூலநு}ல் எனக்கு விளங்கும் என்றும் அவர்களிடம் சொன்னேன். அவர்களோடு சேர்ந்து கீதையைப் படிக்க ஆரம்பித்தேன். அதன் இரண்டாவது அத்தியாத்தில் காணும் சில சுலோகங்களின் கருத்து இது.

இந்திரிய விசயங்களைத் தியானிக்கிற மனிதனுக்கு
அவற்றினிடம் பற்றுதல் உண்டாகிறது.
பற்றுதலிலிருந்து ஆசை உண்டாகிறது,
ஆசையிலிருந்து குரோதம் வளர்கிறது
குரோதத்திலிருந்து மனக்குழப்பம் உண்டாகிறது,
குழப்பத்திலிருந்த நினைவின்மையும்
நினைவின்மையிலிருந்து புத்தி நாசமும் உண்டாகின்றன
புத்தி நாசத்தினால் மனிதன் அழிந்துபோகிறான்.

இந்தச் சுலோகங்கள் என் மனத்தில் ஆழப் பதிந்தன. அவை இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அந்நூல் விலை மதிப்பைக் கடந்த மாணிக்கமாக எனக்குத் தோன்றியது. அதிலிருந்து இந்தக் கருத்து எனக்கு வலுப்பட்டுக்கொண்டே வந்தது இதன் பலனாக, சத்தியமான ஞானத்தைப் போதிக்கம் மிகச் சிறந்த நூல் இது என்று நான் எண்ணி வருகிறேன். எனக்கு மனச் சஞ்சலங்கள் ஏறு;படும் சமயங்களில் இந்நூல் மதித்தற்கரிய உதவியாக இருந்திருக்கிறது. அநேகமாக கீதையின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். அவற்றிற்கெல்லாம் ஸர் எட்வின் அர்னால்டின் மொழிபெயர்ப்பே மிகச் சிறந்து என்று நான் கருதுகிறேன். மூலத்தின் கருத்து ஒரு சிறிதும் மாறுபடாத வகையில் அவர் மொழி பெயர்த்திருக்கிறார். அது மொழிபெயர்ப்பாகவே தோன்றவில்லை. இந்த நண்பர்களடன் சேர்ந்து, அப்பொழுது கீதையை நான் படித்த போதிலும் அதைத் தீரக் கற்றேன் என்று நான் பாசாங்கு செய்வதற்கில்லை. சில ஆண்டுகள் சென்ற பின்னரே நான் தினந்தோறும் கீதையைப் படிக்கலானேன்.

ஸர் எட்வின் அர்னால்டு எழுதிய, ஆசியாவின் ஜோதி என்ற நூலையும் படிக்கும்படி அச்சகோதரர்கள் என்னிடம் கூறினார். பகவத் கீதையின் மொழிப்பெயர்ப்பாளர்கள் என்று மாத்திரமே ஸர் அர்னால்டை அதுவரையில் எனக்குத் தெரியும். பகவத் கீதையையும்விட இன்னும் அதிகக் கவனத்துடன் அந்நூலைப் படித்தேன். படிக்கக் கையில் எடுத்துவிட்டால் பிறகு அதைக் கீழே வைத்துவிட முடிவதில்லை. அச்சகோதரர்கள் ஒரு சமயம் என்னைப் பிளாட்வட்ஸ்கி விடுதிக்கு அழைத்து சென்று, பிளாவட்ஸ்கி அம்மையாரையும் ஸ்ரீமதி பெஸன்டையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர். ஸ்ரீமதி பெஸன்ட் அப்பொழுதுதான் பிரம்மஞான சங்கத்தில் சேர்ந்திருந்தார். அவர் இவ்விதம் மாறிவிட்டதைக் குறித்த நடந்து வாதப் பிரதிவாதங்களைச் சிரத்தையுடன் கவனித்து வந்தேன். இச்சங்கத்தில் சேரும்படி நண்பர்கள் எனக்கும் யோசனை கூறினர். என் மதத்தைப் பற்றியே நான் இன்னும் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் இருக்கும்போது மத சம்பந்தமான எந்த ஒரு ஸ்தாபனத்திலும் சேர நான் விரும்பவில்லை என்று மரியாதையுடன் கூறி மறுத்துவிட்டேன். அந்தச் சகோதரர்கள் சொன்னதன் பேரில் பிளாவட்ஸ்கி அம்மையார் எழுதிய, பிரம்மஞானத் திறவு கோல் என்னும் நூலை நான் படித்தாகவும் எனக்கு நினைவு இருக்கிறது. ஹிந்து சமயத்தைப் பற்றிய நூல்களைப் படிக்கும் ஆர்வத்தை இந்நூல் எனக்கு ஊட்டியது ஹிந்து சமயத்தில் மூடநம்பிக்கைகளே மலிந்து கிடக்கின்றன என்று பாதிரிகள் செய்த பிரச்சாரத்தினால் எனக்கு உண்டாகியிருந்த தவறான எண்ணத்தையும் இந்நூல் போக்கியது.

அதே சமயத்தில் மான்செஸ்டரிலிருந்து வந்த ஓர் உத்தமமான கிறிஸ்தவரை சைவ உணவு விடுதி ஒன்றில் நான் சந்தித்தேன். கிறிஸ்தவத்தைப் பற்றி அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். ராஜ;கோட்டில் கிறிஸ்தவ் பாதிரிமார் நடத்தி வந்த பிரச்சாரத்தைக் குறித்த என்னுடைய பழைய நினைவுகளை அவரிடம் கூறினேன். அதைக் கேட்டு, அவர் மனவேதனை அடைந்தார் நான் சைவ உணவ மாத்திரமே சாப்பிடுபவன், மதுபானமும் அருந்துவதில்லை. கிறிஸ்தவர்கள்அநேகர் மாமிசம் சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் மது, மாமிசம் சாப்பிடும்படி எங்கள் வேதம் சொல்லவில்லை, தயவு செய்து பைபிளைப் படியுங்கள் என்றார். அவருடைய யோசனையை ஏற்றுக் கொண்டேன், அவர் எனக்குப் பைபிள் பிரதி ஒன்றும் வாங்கிக்கொடுத்தார். அவரே பைபிள் பிரதிகளை விற்று வந்ததாகவும், படங்கள், அரும்பத் அகராதி முதலிய விளக்கங்கள் அடங்கிய ஒரு பைபிள் பிரதியை அவரிடம் நான் வாங்கியதாகவும் எனக்குக் கொஞ்சம் நினைவிருக்கிறது அதைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் பழைய ஏற்பாட்டைப் படித்துக் புரிந்துகொள்ள என்னால் இயலவல்லை. ஆதி ஆகமத்தையும் அதையடுத்த அத்தியாயங்களையும் படிக்க ஆரம்பித்ததுமே எனக்குத் தூக்கம் வந்துவிடும். ஆனால், பைபிளைப் படித்திருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள இயலவேண்டும் என்பதற்காகச் சிரமத்தோடேயே மற்றப் பகுதிகளையும் மேலெழுந்தவாரியாகப் படித்து முடித்தேன். அதில் எனக்கு கொஞ்சமும் சிரத்தை ஏற்படவில்லை, எனக்கு அது விளங்கவும் இல்லை. எண்ணாகமம் என்ற பகுதியைப் படிப்பதற்கே எனக்கு வெறுப்பாக இருந்தது.

ஆனால் புதிய ஏற்பாட்டைப் படித்தபோது எனக்கு முற்றும் மாறான உணர்ச்சி ஏற்பட்டது. முக்கியமாக மலைப்பிரசங்கம் நேரடியாகவே என் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டது. அதைக் கீதையுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். தீமைக்குப் பதிலாகத் தீமையைச் செய்யாதே என்று உங்களுக்குக் கூறுகிறேன். உன்னை வலது கன்னத்தில் யாராவது அறைந்தால் மற்றொரு கன்னத்தையும் திரப்பிக் காட்டு. எவனாவது உன் சட்டையை எடுத்துக் கொண்டுவிட்டானாயின் உன் போர்வையையும் அவனுக்குக் கொடு என்பன போன்ற உபதேசங்கள் எனக்கு அளவு கடந்த ஆனந்தத்தை அளித்தன. உண்ணும் நீர் தந்த ஒருவனுக்குத் கைம்மாறாய் விண்ணமுதத்தைப் போல் அன்னம் விரும்பிப் படைத்திடுவாய் என்ற ஷாமல்பட்டின் பாடல் உடனே என் நினைவுக்கு வந்தது கீதை, ஆசிய ஜோதி மலைப்பிரசங்கம் ஆகிய மூன்றும் ஒன்றே என்று கருத என் இளம் மனம் முயன்றது. துறவே, சமயத்தின் தலைசிறந்த அம்சம் என்பது என் மனத்தை மிகவும் கவர்ந்தது.

இவைகளைப் படித்ததனால் மற்றச் சமயாசாரியர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் படிக்கவேண்டும் என்ற பசி எனக்கு உண்டாக்கிவிட்டது. கார்லைல் எழுதிய, வீரர்களும் வீரர் வழிபாடும் என்ற நூலைப் படிக்குமாறு ஒரு நண்பர் கூறினார். வீரனைத் தீர்க்கதரிசியாகக் கூறும் அத்தியாயத்தைப் படித்து, முகமது நபியின் பெருமையையும் வீரத்தையும் எளிய வாழ்க்கையையும் பற்றித் தெரிந்துகொண்டேன்.

பரீட்சைக்குப் படிக்க வேண்டியிருந்தது. மற்ற வெளி விஷயங்களைக் குறித்துப் படிக்க நேரம் கிடைப்பதே இல்லை. ஆகையால் சமயங்களைப் பற்றி இன்னும் அதிகமாக நான் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், சமய நூல்களை இன்னும் அதிகமாகப் படிக்க வேண்டும் என்று என் மனத்திற்குள் முடிவு செய்து கொண்டேன்.

நாத்திக வாதத்தைக் குறித்து நான் ஒரு சிறிதும் தெரிந்து கொள்ளாமல் இருப்பது எப்படி ? பிராட்லாவின் பெயரையும் நாத்திகம் என்று கூறப்படும் அவர் வாதத்தையும் ஒவ்வோர் இந்தியரும் அறிவர் அதைக் குறித்து ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்தேன். அதன் பெயரை மறந்துவிட்டேன். அதற்கும் முன்னாலேயே நாத்திகம் என்ற பாலைவனத்தைக் கடந்து விட்டேனாகையால், அப்புத்தகம் என் மனத்தை மாற்றிவிடவில்லை. அச்சமயம் ஸ்ரீமதி பெஸண்டின் பெயர் எங்கும் பிரபலமாக இருந்தது. அவர் நாத்திகத்திலிருந்து ஆத்திகத்திற்குத் திரும்பிவிட்டார். நான் பிரம்மஞான சங்கத்தில் சேர்ந்தது ஏன் ? என்று அவர் எழுதியிருந்த நூலையும் படித்தேன்.

ஏறக்குறைய அந்தச் சமயத்தில்தான் பிராடலா காலமானார். அவர் சடலத்தை வோகிங் கல்லறையில் அடக்கம் செய்தனர். இச்சவ அடக்கச் சடங்கிற்கு நானும் போயிருந்தேன். லண்டனில் இருந்த இந்தியர் எல்லோருமே அதற்குச் சென்றிருந்தனர் என்று நம்புகிறேன். அவருக்குக் கடைசி மரியாதை செய்வதற்காகப் பாதிரிமார் சிலரும் வந்திருந்தனர். அச்சடங்கிலிருந்து திரும்பும்போது ரயிலுக்காக நிலையத்தில் நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்பொழுது அக்கூட்டத்தில் இருந்த ஒரு தீவிர நாத்திகர், பாதிரிகளில் ஒருவரைக் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்.

சரி கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்கள் அல்லவா ? என்று அவர் கேட்டார்.

ஆம் என்று அடக்கமான குரலில் அந்த நல்ல மனிதர் பதில் சொன்னார்.

இப்பூமியின் சுற்றளவு 28,000 மைல்கள் என்றும் நீங்கள் ஒப்புக் கொள்ளுகிறீர்கள் அல்லவா? என்று அந்த நாத்திகர் தன்னம்பிக்கையுடன் சிரித்துக்கொண்டே கேட்டார்.

ஆமாம் என்றார் பாதிரியார்.

அப்படியானால் உங்கள் கடவுளின் உருவம் என்ன, அவர் எங்கே இருப்பார் என்பதையும் தயவு செய்து சொல்லுங்கள்.

சரி நம்மால் அறிய மாத்திரம் முடிந்தால், அவர் நம் இருவர் உள்ளங்களிலும் வீற்றிருக்கிறார்.

இதோ பாருங்கள் என்னைக் குழந்தை என்று நினைத்துவிட வேண்டாம் என்றார், அத்தீவிரவாதி அதோடு வெற்றிப் பார்வையுடன் எங்களை நோக்கினார்.

பாதிரியாரோ, அடக்கத்துடன் மௌனமாக இருந்து விட்டார். இந்த வாக்குவாதம் நாத்திகத்திடம் எனக்கு இருந்த வெறுப்பை மேலும் அதிகமாக்கி விட்டது.

One Comment

  1. very best
    Reply August 4, 2020 at 8:41 pm

Leave a comment