மகாத்மா காந்தியின் சுய சரிதை – சத்திய சோதனை – இங்கிலாந்து போக ஆயத்தம்

Rate this post

1887-ல் நான் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் தேறினேன். அப்பொழுது அகமதாபாத், பம்பாய் ஆகிய இரு இடங்களில் அப்பரீட்சை நடப்பது வழக்கம். நாட்டின் பொதுவான வறுமை நிலை காரணமாக இயற்கையாகவே சமீபத்தில் இருக்கும், அதிகச் செலவில்லாத இடத்திற்கே கத்தியவார் மாணவர்கள் சென்றனர். என் குடும்பத்தின் வறுமையினால் நானும் அவ்விதமே செய்ய வேண்டியதாயிற்று. ராஜ்கோட்டிலிருந்து அகமதாபாத்துக்கு முதன் முதலாக, அதிலும் துணையின்றி, நான் பிரயாணம் செய்தது அப்பொழுதுதான்.

மெட்ரிகுலேஷன் பரீட்சையில் தேறிய பின் நான் கல்லு}ரியில் சேர்ந்து தொடர்ந்து படித்து வர வேண்டும் என்று வீட்டிலிருந்த பெரியவர்கள் விரும்பினர். பவநகரில் ஒரு கல்லூரி இருந்தது, பம்பாயிலும் இருந்தது. பவநகரில் படித்தால் செலவு அதிகமாகாதாகையால் அங்கே போய்ச் சாமளதாஸ் கல்லூரியில் சேருவதென முடிவு செய்தேன். அவ்வாறே சேர்ந்தும் விட்டேன். ஆனால், அங்கே எனக்குத் திக்குத் திசை புரியவில்லை. எல்லாமே எனக்குக் கஷ்டமாக இருந்தது. நான் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்பது இருக்கட்டும், முதலில் பேராசிரியர்களின் பிரசங்கங்களே எனக்குப் புரியவில்லை. இது அப்பேராசிரியர்களின் குற்றமன்று. அக்கல்லூரி பேராசிரியர்கள் முதல்தரமானவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். ஆனால், நான் தான் கல்லூரிப் படிப்புக்குப் பண்படுத்தப் படாதவனாய் இருந்தேன். ஆறு மாதமானதும் வீடு திரும்பினேன்.

மாவ்ஜி தவே என்ற கல்வியறிவுள்ள பிராமணர், எங்கள் குடும்பத்திற்கு நண்பரும் ஆலோசகருமாக இருந்தார். அவர் புத்திக் கூர்மையுள்ளவர். என் தந்தையார் இறந்த பிறகும் கூட அவர் எங்கள் குடும்பத்துடன் தொடர்பு வைத்திருந்தார். விடுமுறைக்கு நான் ஊர் போயிருந்த போது ஒரு முறை அவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். என் தாயாருடனும் என் தமையனாருடனும் பேசிக்கொண்டிருந்தபோது என் படிப்பைப் பற்றியும் விசாரித்தார். நான் சாமளதாஸ் கல்லூரியில் படிக்கிறேன் என்பதை அறிந்ததும் அவர் பின்வருமாறு கூறினார்: ‘இப்பொழுது காலம் மாறிப் போய்விட்டது. தக்க படிப்பு இல்லாமல் உங்களில் யாரும் உங்கள் தந்தையின் பதவிக்கு வர முடியாது. இப்பொழுது இப்பையன் இன்னும் தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பதால், அப்பதவிக்கு இவனைத் தயார் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். இவன் பி.ஏ. பட்டத்தைப் பெறுவதற்கு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாகவது ஆகும். அப்படிப் பெறும் பட்டம், இவனை ஓர் அறுபது ரூபாய்ப் பதவிக்குத்தான் தகுதியுடையவனாக்குமேயின்றித் திவான் பதவிக்கு தகுதியுடையவானாக்காது. என் மகனைப் போல் இவனும் சட்டம் படித்துத் தேர்ச்சி பெறவும் அதிக காலமாகும். அதற்குள் திவான் பதவியைப் பெற முயலும் வக்கீல்கள் எராளமாகி விடுவார்கள். இதையெல்லாம்விட இவனை இங்கிலாந்துக்கு அனுப்புவது எவ்வளவோ மேல் என்று எனக்குத் தோன்றுகிறது. பாரிஸ்டராவது மிக எளிது என்று என் மகன் கேவல்ராம் கூறுகிறான். மூன்று வருடங்களில் இவன் திரும்பி விடலாம், செலவும் நான்கு முதல் ஐயாயிரத்திற்கு மேல் ஆகாது. இங்கிலாந்திலிருந்து இப்பொழுதுதான் வந்திருக்கும் அந்தப் பாரிஸ்டரைப் பாருங்கள், எவ்வளவு நாகரிகமாக அவன் வாழ்க்கை நடத்துகிறான்! கேட்டால் போதும், அவனுக்குத் திவான் பதவி கிடைத்துவிடும். இவ்வருடமே மோகன்தாஸை இங்கிலாந்துக்குக் கட்டாயம் நீங்கள் அனுப்பிவிடவேண்டும் என்றே நான் கூறுவேன். இங்கிலாந்தில் கேவல்ராமுக்கு அநேக நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அவன் அறிமுகக் கடிதங்கள் கொடுப்பான். மோகன்தாஸ் அங்கே சுகமாக இருந்துவிட்டு வரலாம்!’

மாவ்ஜி தவேயை, ஜோஷிஜி என்று சொல்லுவது வழக்கம் அவர் என்னைத் திரும்பிப் பார்த்து, “இங்கே படிப்பதைவிட இங்கிலாந்துக்குப் போகவே நீ விரும்புகிறாயல்லவா?” என்று முழு நம்பிக்கையுடன் கேட்டார். இதைவிட எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது. கஷ்டமான கல்லூரிப் படிப்புடன் நான் தொல்லைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆகையால், இந்த யோசனையை உடனே ஏற்றுக் கொண்டு, “என்னை எவ்வளவு சீக்கிரத்தில் அனுப்புகிறீர்களோ அவ்வளவுக்கு நல்லது” என்றேன். சீக்கிரத்தில் பரீட்சைகளில் தேறிவிடுவது என்பது எளிதான வேலையே அல்ல. எனவே, “என்னை வைத்தியத் தொழில் பயிற்சிக்கு அனுப்பக் கூடாதா?” என்று கேட்டேன்.

என் சகோதரர் உடனே குறுக்கிட்டு இவ்வாறு கூறினார்: “அது தந்தைக்குப் பிடிப்பதேயில்லை. அவர் உன்னை மனத்தில் வைத்துக் கொண்டே, ‘பிணங்களை அறுத்துச் சோதிப்பது வைஷ்ணவர்களாகிய நமக்குக் தகாது’ என்று சொன்னார். நீ வக்கீல் ஆக வேண்டும் என்றுதான் அவர் விரும்பினார்.”

ஜோஷிஜி இடைமறித்துத் கூறியதாவது: “காந்திஜியைப் போல் வைத்தியத் தொழில் கூடாது என்பவனல்ல நான். நமது சாத்திரங்களும் அதற்கு விரோதமாகக் கூறவில்லை. ஆனால், ஒரு வைத்தியப் பட்டம் உன்னைத் திவான் ஆக்கிவிடாது. நீ திவானாக வேண்டும்; சாத்தியமானால் இன்னும் பெரிய பதவியையும் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்படி ஆனால் தான் உன்னுடைய பெரிய குடும்பத்தை நீ காப்பாற்ற முடியும். காலம் வேகமாக மாறிக்கொண்டே போகிறது. நாளுக்கு நாள் கஷ்டமாகிக் கொண்டும் வருகிறது. ஆகையால், மிகப் புத்திசாலித்தனமான காரியம் பாரிஸ்டராகி விடுவதுதான்!” என் தாயாரைப் பார்த்து அவர் கூறியதாவது: “இப்பொழுது நான் புறப்பட வேண்டும். நான் கூறியதை நன்றாக யோசிக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். நான் திரும்ப இங்கே வரும்போது, இங்கிலாந்துக்குப் புறப்படுவதற்கான ஏற்பாடுகளைக் குறித்து நான் அறியலாம் என்று எதிர் பார்க்கிறேன். ஏதாவது ஒருவகையில் நான் உதவி செய்ய முடியுமென்றால் நிச்சயமாக எனக்குத் தெரிவியுங்கள்.”

ஜோஷிஜி போய்விட்டார். நானும் மனக்கோட்டைகள் கட்டலானேன்.

என் மூத்த சகோதரரின் மனம் மிகப் பரபரப்படைத்து விட்டது. என்னை அனுப்புவதற்கு வேண்டிய பணத்திற்கெல்லாம் என்ன செய்வது? என்னைப் போன்ற ஓர் இளைஞனை நம்பித் தன்னந்தனியாக வெளிநாடுகளுக்கு அனுப்புவது சரியா?

என் தாயாருக்கும் ஒரே மனக்குழப்பம் ஆகிவிட்டது. என்னை விட்டுப் பிரிய அவர் விரும்பவில்லை. ஆகவே, எனக்குச் சாக்குப் போக்குச் சொல்லிவிட முயன்றார். “இப்பொழுது சிறிய தகப்பனார்தான் நம் குடும்பத்தில் பெரியவர். அவரை முதலில் கலந்து ஆலோசிக்க வேண்டும். அவர் ஒப்புக்கொண்டால் இவ்விஷயத்தைப் பற்றி யோசிப்போம்” என்றார்.

என் சகோதரருக்கு இன்னும் ஒரு யோசனை தேன்றிற்று. அவர் என்னிடம் பின்வருமாறு கூறினார்: “போர்பந்தர் சமஸ்தானத்தினிடம் உதவியை எதிர்பார்க்க நமக்கு உரிமை இருக்கிறது. ஸ்ரீ லேலி அதற்க நிர்வாக அதிகாரி. நம் குடும்பத்தினிடம் அவருக்கு நல்ல மதிப்பு உண்டு. நமது சிறிய தகப்பானாரிடம் அவர் பிரியமாக இருக்கிறார். இங்கிலாந்தில் நீ படிப்பதற்காக உனக்கு ஏதாவது சமஸ்தான உதவி அளிக்க அவர் சிபாரிசு செய்வது சாத்தியமாகலாம்.”

இந்த யோசனை எனக்கும் பிடித்தமானாதாக இருந்தது. போர்பந்தருக்கு உடனே புறப்படுவதற்கு தயாரானேன். அந்தக் காலத்தில் ரயில் கிடையாது. மாட்டு வண்டியில் ஐந்து நாட்கள் போகவேண்டும். நான் பயங்காளி என்பதை முன்னாலேயே கூறியிருக்கிறேன். இங்கிலாந்துக்குப் போகவேண்டும் என்ற ஆசையே என்னை முற்றும் அப்பொழுது ஆட்கொண்டிருந்ததால் அதன் முன்னால் என் பயங்காளித்தனமெல்லாம் ஓடி மறைந்துவிட்டது. தோராஜி வரைக்கும் ஒரு மாட்டு வண்டியை அமர்த்திக் கொண்டேன் போர்பந்தருக்கு ஒரு நாள் முன்னாடியே போய்விட வேண்டும் என்பதற்காகத் தோராஜியில் ஓர் ஒட்டகத்தை அமர்த்தினேன். ஒட்டகத்தில் நான் சவாரி செய்தது அதுதான் முதல் முறை.

கடைசியாகப் போர்பந்தர் போய்ச் சேர்ந்தேன். என் சிறிய தகப்பனாரை சாஷ்டாங்கமாய் வணங்கி எல்லாவற்றையும் அவரிடம் சொன்னேன். அதைப்பற்றி அவர் யோசித்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்: “மத தருமம் கெடாமல் ஒருவர் இங்கிலாந்தில் இருப்பது சாத்தியம் என்பது எனக்கு நிச்சயமில்லை. நான் கேள்விப்பட்டிருப்பவைகளைக் கொண்டு பார்த்தால் எனக்குச் சந்தேகமாகத்தான் இருக்கிறது. இந்தப் பெரிய பாரிஸ்டர்களை நான் பார்க்கும்போது இவர்கள் வாழ்க்கைக்கும் ஐரோப்பியர் வாழ்க்கைக்கும் எந்த வித்தியாசத்தையும் நான் காணவில்லை. இவர்கள் எந்த உணவையும் சாப்பிடுகிறார்கள். இவர்கள் வாயில் சுருட்டு இல்லாமல் இருப்பதே இல்லை. வெட்கமில்லாமல் ஆங்கிலேயரைப் போலவே உடை உடுத்துகிறார்கள். இவையெல்லாம் தம் குடும்ப பாரம்பரியத்திற்குப் பொருந்தாதவை. சீக்கிரத்தில் நான் க்ஷேத்திர யாத்திரைக்குப் புறப்படப் போகிறேன். இன்னும் பல வருடங்களுக்கு நான் உயிரோடிருக்கப் போவதில்லை. மரணத்தின் தருவாயில் இருக்கும் நான், இங்கிலாந்துக்குப் போகவும், கடல் கடக்கவும் உனக்கு அனுமதி கொடுக்க எப்படித் துணிவேன்? ஆனால், உன் வழியில் குறுக்கிடமாட்டேன். இதற்கு முக்கியமாக வேண்டியது உன் தாயாரின் அனுமதி. அவர் அனுமதி கொடுத்துவிட்டால், சுகமாகப் போய் வா. இதில் நான் குறுக்கிடமாட்டேன் என்று அவருக்குத் தெரிவி. என் ஆசி உனக்கு எப்பொழுதும் இருக்கும்.”

“இதைவிட அதிகமாக எதையும் நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது” என்றேன். “என் தாயாரின் சம்மதத்தைப் பெற முயல்கிறேன். ஸ்ரீ லேலிக்கு என்னைப் பற்றி நீங்கள் சிபாரிசு செய்கிறீர்களா?” என்று கேட்டேன்.

“அதை நான் எப்படிச் செய்ய முடியும்?” என்றார் அவர். “ஆனால் அவர் நல்லவர். உனது உறவு முறையைத் தெரிவித்து, அவரை நீ பார்க்க விரும்புவதாகக் கேள்; நிச்சயமாகப் பார்ப்பார். உனக்கு உதவி செய்யவும் கூடும்” என்றார்.

என் சிறிய தகப்பனார் எனக்கு ஏன் சிபாரிசுக் கடிதம் கொடுக்கவில்லை என்பதைப் பற்றி என்னால் கூறமுடியாது. நான் இங்கிலாந்துக்குப் போவது மத விரோதமான காரியம் என்ற கருத்து அவருக்கு இருந்ததால் நான் போவதில் நேரடியாக ஒத்துழைக்க அவர் தயங்கினார் என்று ஏதோ கொஞ்சம் எனக்கு ஞாபகம் இருக்கிறது.

ஸ்ரீ லேலிக்கு எழுதினேன். தமது வீட்டில் வந்து பார்க்கும்படி அவர் அறிவித்தார். மாடிப் படிக்கட்டு ஏறிக்கொண்டிருந்தபோதே அவர் என்னைப் பார்த்தார். “முதலில் நீ பி.ஏ. பாஸ் செய். பிறகு வந்து என்னைப் பார். இப்பொழுது உனக்கு எந்த உதவியும் செய்வதற்கில்லை” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு வேகமாகப் படியேறிப் போய்விட்டார். அவரைச் சந்திப்பதற்காக எவ்வளவோ விரிவான முன்னேற்பாடுகளை எல்லாம் செய்திருந்தேன். அவரிடம் பேசச் சில வாக்கியங்களைக் கவனமாகக் கற்று வைத்திருந்தேன். தாழ்ந்து தலை வணங்கி, இரு கரங்களாலும் சலாம் போட்டேன் ஆனால், அவையெல்லாம் ஒன்றுக்கும் பயன்படவில்லை.

பிறகு என் மனைவியின் நகைகளைப்பற்றி நினைத்தேன். என் மூத்த அண்ணன் நினைவும் வந்தது. அவரிடம் எனக்கு முழு நம்பிக்கையும் உண்டு. அவர் தாராளமான மனமுடையவர். என்னைத் தம் மகன் போலவே கருதி அன்பு கொண்டிருந்தார்.

போர்பந்தரிலிருந்து ராஜ்கோட்டுக்குத் திரும்பி, அங்கே நடந்ததையெல்லாம் தெரிவித்தேன். ஜோஷிஜியைக் கலந்து ஆலோசித்தேன். அவரோ, அவசியமானால் கடன் வாங்கும் படியும் யோசனை கூறினார். என் மனைவியின் நகைகளை விற்றால் இராண்டாயிரம் அல்லது மூவாயிரம் ரூபாய் கிடைக்கும். அவற்றை விற்றுவிடும் யோசனையையும் கூறினேன். எப்படியும் பணம் தேடிவிடுவதாக என் சகோதரர் வாக்களித்தார்.

என் தாயார் மாத்திரம் இன்னும் என்னை இங்கிலாந்துக்கு அனுப்ப விரும்பாமலேயே இருந்தார். நுட்பமாக எல்லா விவரங்களையும் விசாரித்துக் கொண்டிருந்தார். வாலிபர்கள் இங்கிலாந்துக்குப் போய்க் கெட்டு விடுகிறார்கள் என்று யாரோ ஒருவர் அவருக்குச் சொல்லிவிட்டார். இன்னும் யாரோ ஒருவர், ‘அவர்கள் மாமிசம் சாப்பிட ஆரம்பித்து விடுகிறார்கள்’ என்று சொல்லிவிட்டார். ‘குடிக்காமல் அங்கே அவர்களால் இருக்கவே முடியாது’ என்று இன்னும் ஒருவர் சொல்லியிருந்தார். “இவைகளுக்கெல்லாம் நீ என்ன சொல்லுகிறாய்?” என்று என் தாயார் என்னைக் கேட்டார். நான், “என்னை நீங்கள் நம்பமாட்டீர்களா? உங்களிடம் பொய் சொல்லமாட்டேன். ‘அவைகளில் எதையும் தீண்டுவதில்லை’ என்று உங்களுக்குச் சத்தியம் செய்து கொடுக்கிறேன். அங்கே அப்படிப்பட்ட அபாயம் ஏதாவது இருந்தால் ஜோஷிஜி என்னைப் போக விடுவாரா?” என்றேன்.

“உன்னை நானே நம்பலாம். ஆனால் நீ தொலைவான நாட்டில் இருக்கும்போது எப்படி நம்புவது? எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. என்ன செய்வது என்பதே புரியவில்லை. பேச்சர்ஜி சுவாமியைக் கேட்கிறேன்” என்றார், அன்னை.

பேச்சர்ஜி சுவாமி முன்பு மோத் வணிகர். இப்பொழுது ஜைன சந்நியாசியாகி விட்டார். ஜோஷிஜியைப் போல் இவரும் குடும்பத்திற்கு வேண்டிய ஆலோசனைகளைக் கூறி வருவார். அவர் எனக்கு உதவினார். “மூன்று விரதங்களை அவன் அனுசரிப்பதாக அவனிடம் சத்தியம் வாங்கிக் கொள்ளுகிறேன். பிறகு அவனைப் போகச் செல்லலாம்” என்றார். அவர் என்னிடம் அப்படியே பிரமாணம் வாங்கினார். ‘மதுபானம், பெண், மாமிசம் ஆகியவைகளைத் தொடுவதில்லை’ என்று சத்தியம் செய்து கொடுத்தேன். உடனே என் அன்னை அனுமதி தந்தார்.

என்னைக் கௌரவிப்பதற்காக உயர்நிலைப் பள்ளியில் எனக்கு ஒரு பிரிவு உபசாரம் நடத்தினர். ராஜ்கோட்டைச் சேர்ந்த ஒரு வாலிபன், இங்கிலாந்துக்குப் போகிறான் என்றால் அது சாமானிய விசயமன்று! நன்றி தெரிவிப்பதற்கென்று சில வார்த்தைகள் எழுதி வைத்திருந்தேன். அதைப் படிக்க நான் எழுந்தபோது எனக்கு எவ்விதம் தலை சுற்றியது. உடம்பெல்லாம் எவ்விதம் நடுங்கியது என்பது இன்னும் நினைவிருக்கிறது.

எங்கள் வீட்டுப் பெரியவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்று நான் பம்பாய்க்குப் புறப்பட்டேன். ராஜ்கோட்டிலிருந்து நான் பம்பாய்க்குச் சென்றது இதுவே முதல் முறை. என் சகோதரரும் என்னுடன் வந்தார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுவதற்குள் எத்தனையோ விபத்துக்களும், சமாளித்தாக வேண்டிய கஷ்டங்களும் பம்பாயில் காத்திருந்தன.

Leave a comment