மகாபாரதம் கதைகள்

மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று.
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது. இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இலியட், ஒடிஸ்சி ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய தெய்வீக நகைச்சுவை (Divine Comedy) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது.
நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராஷ்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும்.
இதனைத் தமிழில் இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார்.
தோற்றம்
இதன் முற்பட்ட பகுதிகள் வேதகாலத்தின் இறுதிப் பகுதியைச் (கிமு 8ஆம் நூற்றாண்டு) சேர்ந்தவையாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கிபி நான்காம் நூற்றாண்டில் தொடங்கிய குப்தர் காலத்தில் இது இதன் முழு வடிவத்தைப் பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. நீண்ட காலமாகப் படிப்படியாக வளர்ச்சியடைந்தே இது இதன் முழு நீளத்தை அடைந்ததாகச் சொல்கிறார்கள். முறையான பாரதம் எனக் கூறப்படும் இதன் மூலப் பகுதி 24,000 அடிகளைக் கொண்டது என மகாபாரதத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளது. வியாசரால் இயற்றப்பட்ட பாரதத்தின் மூலப் பகுதி 8,000 அடிகளைக் கொண்டிருந்தது என மகாபாரதத்தின் ஆதி பர்வம் கூறுகிறது. பின்னர் வைசம்பாயனரால் ஓதப்பட்டபோது இது 24,000 அடிகளைக் கொண்டிருந்தது. உக்கிராஸ்ராவ சௌதி ஓதியபடி இது 90,000 அடிகளை உடையதாக இருந்தது.
இவ்விதிகாசத்தை எழுதியவராக மரபுவழியாக நம்பப்படும் வியாசர் இதில் ஒரு கதை மாந்தராகவும் உள்ளார். வியாசரின் வேண்டுகோளுக்கு இணங்கி, அவர் பாடல்களைச் சொல்ல, இந்துக் கடவுளான பிள்ளையாரே ஏட்டில் எழுதினார் என மகாபாரதத்தின் முதல் பகுதியில் கூறப்பட்டுள்ளது. இடையில் நிறுத்தாமல் தொடர்ச்சியாகப் பாடல்களைச் சொல்லிவரவேண்டும் எனப் பிள்ளையார் நிபந்தனை விதித்தாராம். வியாசரும் எழுதுமுன் தன் பாடல் வரிகளைப் பிள்ளையார் புரிந்து கொண்டு எழுதினால் அந் நிபந்தனைக்கு உடன்படுவதாகக் கூறினாராம்.
“மகாபாரதம்” என்னும் நூல் தலைப்பு, “பரத வம்சத்தின் பெருங்கதை” என்னும் பொருள் தருவது. தொடக்கத்தில் இது, 24,000 அடிகளைக் கொண்டிருந்தபோது அது வெறுமனே “பாரதம்” எனப்பட்டது. பின்னர் இது மேலும் விரிவடைந்தபோது “மாகாபாரதம்” என அழைக்கப்பட்டது.
 உள்ளடக்கப் பரப்பு
இது, குருசேத்திரப் போர் எனப்படும், பாண்டவர்களுக்கும், [கௌரவர்]]களுக்கும் இடையிலான பெரும் போரை மையப்படுத்திய கதையாக இருந்தபோதிலும், இதில், மெய்யியல், சமயம் என்பன தொடர்பான உள்ளடக்கங்களும் பெருமளவில் உள்ளன. பகவத் கீதை, மனித வாழ்வின் நால்வகை நோக்கங்கள் தொடர்பான விளக்கங்கள் போன்றவை இவற்றுள் அடக்கம்.
மகாபாரதம் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியிருப்பதாகக் கூறுகிறது. இதன் முதலாம் பர்வம், “இதில் காணப்படுபவை வேறிடங்களிலும் காணப்படலாம். இதில் காணப்படாதவை வேறெங்கும் காணப்படா” என்கிறது. இவ்விதிகாசத்தினுள் அடங்கியுள்ள முக்கிய ஆக்கங்களும் கதைகளும் கீழே பட்டியலிடப்படுகின்றன.

பகவத் கீதை: இது மகாபாரதத்தின் ஆறாவது பர்வமான பீஷ்மபர்வத்தில் அடங்கியுள்ளது. குருசேத்திரப் போரின் தொடக்கத்தில், அப்போர் தேவைதானா என அருச்சுனனுக்கு ஏற்பட்ட ஐயத்தையும், தொய்வையும் நீக்குவதற்காகக் கண்ணன் கூறிய அறிவுரைகளை உள்ளடக்கியது இது.

விதுர நீதி: இது ஐந்தாம் பருவமான உத்யோக பருவத்தில் வருகிறது. திருதராட்டிரனுக்கு, விதுரன் ஓர் இரவு முழுவதும், மனிதன் எப்படி இருக்க வேண்டும்; எப்படி இருக்கக் கூடாது; என்னென்ன செய்ய வேண்டும்; என்னென்ன செய்யக் கூடாது என்கிற வாழ்வியல் நீதிநெறிகளை விளக்கிக் கூறும் பகுதி இது.

நளன், தமயந்தி கதை: இதிகாசத்தின் மூன்றாம் பர்வமான ஆரண்யகபர்வத்தில் காணப்படுகின்றது. இது நளன் என்னும் அரசனும், தமயந்தி என்னும் இளவரசியும் காதலித்து மணம்புரிந்து கொள்வதையும், பின்னர் நளன் சனியால் பீடிக்கப்பட்டு நாடிழந்து பல ஆண்டுகள் அல்லலுற்று மீண்டும் இழந்த அரசுரிமையைப் பெறுவதையும் கூறும் கதை.

இராமாயணத்தின் சுருக்கம்: மூன்றாம் பர்வமான ஆரண்யகபர்வத்தில் உள்ளது.

ரிஷ்யசிருங்கரின் கதை: ஆரண்யகபர்வத்தில் காணப்படுவது.

தேவயானி-கசன் கதை, யயாதியின் கதை, சாரங்கக் குஞ்சுகளின் கதை, அகஸ்தியரின் கதை, யவக்ரீவன் கதை, தருமவியாதன் என்னும் கசாப்புக் கடைக்காரனின் கதை என்று பலவும் ஆரண்யக பருவத்தில் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு வித வாழ்வியல் நீதி அல்லது நியதியை மையப்படுத்திய அற்புதக் கதைகள் ஆகும்.

இவை தம்மளவில் தனி ஆக்கங்களாகவும் கருதப்படத் தக்கவை.
வரலாறும் அமைப்பும்
இவ்விதிகாசம் கதைக்குள் கதை சொல்லும் அமைப்பை உடையது. இவ்வமைப்பு, பழங்கால இந்தியாவின் ஆக்கங்களில் பரவலாகக் காணப்படுவதாகும். வியாசரால் எழுதப்பட்ட இது பின்னர் பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவருடைய சீடரான வைசம்பாயனர் என்பவரால், அருச்சுனனின் கொள்ளுப்பேரனான சனமேசயன் என்னும் அரசனுக்குச் சொல்லப்பட்டது. இது மேலும் பல ஆண்டுகள் கடந்த பின்னர் கதைசொல்லியான உர்கசுராவ சௌதி என்பவரால் முனிவர்கள் குழுவொன்றுக்குச் சொல்லப்பட்டது.
மகாபாரதத்தின் பல்வேறு பகுதிகளின் காலத்தை அறிந்துகொள்ளும் முயற்சியில் பல அறிஞர்கள் நீண்ட காலத்தைச் செலவு செய்துள்ளனர். 20 ஆம் நூற்றாண்டின் இந்தியவிலாளர் பலர், இது குழப்பமாகவும், ஒழுங்கற்ற முறையிலும் அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர். மகாபாரதம் தொடர்பான மிக முற்பட்ட குறிப்புக்கள், கிமு நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் பாணினியின் அட்டாத்தியாயி என்னும் இலக்கண நூலிலும், அசுவலாயன கிருகசூத்திரம் என்னும் நூலிலும் காணப்படுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு 24,000 அடிகளுடன் கூடிய பாரதமும், விரிவாக்கப்பட்ட மகாபாரதத்தின் தொடக்க வடிவங்களும், கிமு நான்காம் நூற்றாண்டளவில் இருந்திருக்கக்கூடும் என அறிஞர்கள் கூறுகின்றனர். இதன், 8,800 அடிகளைக் கொண்ட மூல வடிவம் கிமு 9-8 நூற்றாண்டுகளிலேயே தோன்றியிருக்கக் கூடும் என்பது சிலரது கருத்து.
பதினெட்டு பர்வங்கள்
மகாபாரதத்தின் 18 பர்வங்கள் பின்வருமாறு:
1.  ஆதி பர்வம்: 19 துணைப் பர்வங்களைக் (1-19) கொண்டது. நைமிசக் காட்டில் முனிவர்களுக்கு சௌதி மகாபாரதத்தைச் சொல்லியது பற்றியும், வைசம்பாயனரால் முன்னர் இக்கதை சனமேசயனுக்குச் சொல்லப்பட்டது பற்றியும் இப் பர்வத்தில் விளக்கப்படுகிறது. பரத இனத்தின் வரலாறு பற்றி விளக்கமாகக் கூறும் இப்பர்வம், பிருகு இனத்தின் வரலாற்றையும் கூறுகிறது. குரு இளவரசர்களின் பிறப்பு, அவர்களது இளமைக்காலம் என்பனவும் இப் பர்வத்தில் எடுத்தாளப்படுகின்றன.
2.    சபா பர்வம்: 20 – 28 வரையான 9 துணைப் பர்வங்கள் இதில் உள்ளன. இந்திரப்பிரஸ்தத்தில் மயன் மாளிகை அமைத்தல், அரண்மனை வாழ்க்கை, தருமன் இராஜசூய யாகம் செய்தல் என்பன இப் பர்வத்தில் சொல்லப்படுகின்றன. அத்துடன், தருமன் சூதுவிளையாட்டில் ஈடுபட்டு இறுதியில் நாடிழந்து காட்டில் வாழச் செல்வதும் இப் பர்வத்தில் அடங்குகின்றன.
3.    ஆரண்யக பர்வம்: 29 – 44 வரையான 16 துணைப் பர்வங்கள் இதில் அடங்குகின்றன. இது பாண்டவர்களின் 12 ஆண்டுக்காலக் காட்டு வாழ்கை பற்றிய விபரங்களைத் தருகிறது.
4.    விராட பர்வம்: 45 – 48 வரையான 4 துணைப் பர்வங்களைக் கொண்ட இப் பர்வம், பாண்டவர்கள், மறைந்து விராட நாட்டில் வாழ்ந்த ஓராண்டு கால நிகழ்வுகளைக் கூறுவது.
5.    உத்யோக பர்வம்: 49 – 59 வரையான 11 துணைப் பர்வங்களைக் கொண்டது இது. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே அமைதி ஏற்படுத்த எடுத்த முயற்சிகளையும், அம்முயற்சிகள் தோல்வியுற்ற பின்னர் இடம்பெற்ற போருக்கான நடவடிக்கைகள் பற்றியும் எடுத்தாள்கிறது.
6.    பீஷ்ம பர்வம்: இது 60 – 64 வரையான 5 துணைப் பர்வங்களைக் கொண்டுள்ளது. பீஷ்மர் கௌரவர்களின் தளபதியாக இருந்து நடத்திய போரின் முதற்பகுதியையும், அவர் அம்புப் படுக்கையில் விழுவதையும் இது விவரிக்கிறது.
7.    துரோண பர்வம்: 65 – 72 வரையான 8 துணைப் பர்வங்களில், துரோணரின் தலைமையில் போர் தொடர்வதை இப் பர்வம் விவரிக்கின்றது. போரைப் பொறுத்தவரை இதுவே முக்கியமான பர்வமாகும். இரு பக்கங்களையும் சேர்ந்த பெரிய வீரர்கள் பலர் இப் பர்வத்தின் முடிவில் இறந்துவிடுகின்றனர்.
8.    கர்ண பர்வம்: 73 ஆம் துணைப் பர்வத்தை மட்டும் கொண்ட இப் பர்வத்தில் கர்ணனைத் தளபதியாகக் கொண்டு போர் தொடர்வது விவரிக்கப்படுகின்றது.
9.    சல்லிய பர்வம்: 74 – 77 வரையான 4 துணைப் பர்வங்களைக் கொண்டுள்ளது. சல்லியனைத் தளபதியாகக் கொண்டு இடம் பெற்ற இறுதிநாள் போர் இப் பர்வத்தில் கூறப்படுகின்றது. இதில் சரஸ்வதி நதிக்கரையில் பலராமனின் யாத்திரையையும், போரில் துரியோதனனுக்கும், வீமனுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிப் போரும் விளக்கப்படுகின்றது. வீமன் தனது கதாயுதத்தால் துரியோதனனின் தொடையில் அடித்து அவனைக் கொன்றான்.
10.    சௌப்திக பர்வம்: 78 – 80 வரையான 3 துணைப் பர்வங்களை இது அடக்குகிறது. அசுவத்தாமனும், கிருபனும், கிருதவர்மனும், போரில் எஞ்சிய பாண்டவப் படைகளில் பலரை அவர்கள் தூக்கத்தில் இருந்தபோது கொன்றது பற்றி இப் பர்வத்தில் கூறப்பட்டுள்ளது. பாண்டவர் பக்கத்தில் எழுவரும், கௌரவர் பக்கத்தில் மூவரும் மட்டுமே போரின் இறுதியில் எஞ்சினர்.
11.    ஸ்திரீ பர்வம்: 81 – 85 வரையான 5 துணைப் பர்வங்கள் இதில் அடங்குகின்றன. இப் பர்வத்தில் காந்தாரி, குந்தி முதலிய குரு மற்றும் பாண்டவர் பக்கங்களைச் சேர்ந்த பெண்கள் துயரப் படுவது கூறப்படுகின்றது.
12.    சாந்தி பர்வம்: 86 – 88 வரையான மூன்று துணைப் பர்வங்களை அடக்கியது இப் பர்வம். அஸ்தினாபுரத்தின் அரசனாகத் தருமருக்கு முடிசூட்டுவதும், புதிய அரசனுக்கு சமூகம், பொருளியல், அரசியல் ஆகியவை தொடர்பில் பீஷ்மர் வழங்கிய அறிவுரைகளும் இப் பர்வத்தில் அடங்கியுள்ளன. மகாபாரதத்தின் மிகவும் நீளமான பர்வம் இது.
13.    அனுசாசன பர்வம்: 89, 90 ஆகிய இரண்டு துணைப் பர்வங்களை அடக்கியது. பீஷ்மரின் இறுதி அறிவுரைகள்.
14.    அசுவமேதிக பர்வம்: தருமர் அசுவமேத யாகம் செய்வதையும், அருச்சுனன் உலகைக் கைப்பற்றுவதையும் இது உள்ளடக்குகிறது. கண்ணனால் அருச்சுனனுக்குச் சொல்லப்பட்ட கீதையும் இதில் அடங்குகிறது.
15.    ஆஸ்ரமவாசிக பர்வம்: 93 – 95 வரையான 3 துணைப் பர்வங்கள் இதில் உள்ளன. திருதராட்டிரன், காந்தாரி, குந்தி ஆகியோர் இமயமலையில் ஆச்சிரமத்தில் வாழ்ந்தபோது காட்டுத் தீக்கு இரையானது இப் பர்வத்தில் கூறப்படுகின்றது.
16.    மௌசால பர்வம் : 96 ஆவது துணைப் பர்வம். யாதவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திய சண்டையில் அவர்கள் அழிந்துபோனதை இப் பர்வம் கூறுகிறது.
17.    மகாபிரஸ்தானிக பர்வம்: 97 ஆவது பர்வம்: தருமரும் அவரது உடன்பிறந்தோரும் நாடுமுழுதும் பயணம் செய்து இறுதியில் இமயமலைக்குச் சென்றது, அங்கே தருமர் தவிர்ந்த ஏனையோர் இறந்து வீழ்வது ஆகிய நிகழ்ச்சிகள் இப் பர்வத்தில் இடம்பெறுகின்றன.
18.    சுவர்க்காரோகண பர்வம்: 98 ஆவது துணைப் பர்வம். தருமரின் இறுதிப் பரீட்சையும், பாண்டவர்கள் சுவர்க்கம் செல்வதும் இதில் சொல்லப்படுகின்றன.
99, 100 ஆகிய துணைப் பர்வங்களை உள்ளடக்கிய அரிவம்ச பர்வம் எனப்படும் பர்வம் முற் கூறிய 18 பர்வங்களுள் அடங்குவதில்லை. இதில் முன் பர்வங்களில் கூறப்படாத, கண்ணனின் வாழ்க்கை நிகழ்வுகள் கூறப்படுகின்றன.
வரலாற்றுச் சூழல்
வரலாற்று நோக்கில் குருசேத்திரப் போர் பற்றித் தெளிவு இல்லை. இப்படி ஒரு போர் நிகழ்ந்திருப்பின் அது கிமு 10 ஆம் நூற்றாண்டளவில் இரும்புக் காலத்தில் நடைபெற்று இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இதிகாசத்தின் பொதுவான சூழலும் இரும்புக் காலத்தில் வேதகாலச் சூழலில் நடந்ததாகவே தெரிகிறது. கிமு 1200 – 800 காலப்பகுதியில், குரு இராச்சியம் அரசியல் அதிகார மையமாக இருந்திருக்கலாம். இக்காலத்தில் இடம்பெற்ற வம்சம் சார்ந்த பிணக்கு ஒன்று தொடக்ககால பாரதம் எழுதுவதற்குத் தூண்டுகோலாக இருந்திருக்கக் கூடும்.
புராண இலக்கியங்கள் மகாபாரதத்துடன் தொடர்புடைய மரபுகளின் பட்டியல்களைத் தருகின்றன. புராணங்களில் இருந்து கிடைக்கும் சான்றுகள் இரு வகைப்படுவன. முதல்வகை நேரடிச் சான்று. இவ்வகைச் சான்றொன்றில், அருச்சுனனின் பேரனான பரீட்சித்துவுக்கும், மகாபத்ம நந்தனின் பதவியேற்புக்கும் இடையே 1015 ஆண்டுகள் (அல்லது 1050 ஆண்டுகள்) உள்ளது என்பது தெரியவருகிறது. மகாபத்ம நந்தனின் பதவியேற்பு கிமு 382 எனக் கணிக்கப்பட்டுள்ளதால் பாரதப் போர்க் காலத்தை ஏறத்தாழ கிமு 1400 எனக் கணிக்கலாம். ஆனால் இது, மரபு வழிகளில் குறிக்கப்பட்டுள்ள அரசர்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட முடியாத அளவுக்கு நீண்ட ஆட்சிக் காலங்களைத் தருகிறது. இரண்டாவது வகைச் சான்றுகள் புராணங்களில் கூறப்பட்டுள்ள இணை மரபுவழிகளைப் பகுத்தாய்ந்து பெறுவதாகும். பரீட்சித்துவின் கொள்ளுப் பேரனான அதிசிமகிருஷ்ணனுக்கும், மகாபத்ம நந்தனுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த மரபு வழிகள் ஒப்பிடப்பட்டன. இதன்படி பாரதப் போர்க் காலம் ஏறத்தாழ கிமு 950 எனக் கணிக்கப்பட்டுள்ளது. பி. பி. லால் என்பார் இதே முறையைப் பயன்படுத்திப் பாரதப் போர்க் காலத்தை கிமு 836 எனக் கணித்துள்ளார். அத்துடன் இக் காலத்தை, நிறந்தீட்டிய சாம்பல்நிற மட்பாண்டக் களங்களில் கிடைக்கும் தொல்லியல் சான்றுகளுடனும் ஒப்பிட்டு ஆய்ந்துள்ளார்.
தொல்வானியல் முறைகளைப் பயன்படுத்தி நிகழ்வுகளின் காலத்தைக் கணிக்க எடுத்த முயற்சிகள் போர்க் காலத்தை கிமு நான்காம் ஆயிரவாண்டு முதல் கிமு இரண்டாவது ஆயிரவாண்டின் நடுப்பகுதிவரை குறிக்கின்றன.
கதைச் சுருக்கம்
மகாபாரதத்தின் அடிப்படைக் கதை குரு வம்சத்தினரால் ஆளப்பட்டு வந்த அஸ்தினாபுரத்தின் ஆட்சி உரிமை பற்றிய பிணக்கு ஆகும். இரு சகோதரர்களின் வழிவந்தவர்களான கௌரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையிலேயே இப் பிணக்கு நிகழ்ந்தது. கௌரவர்களே இவர்களுள் மூத்த மரபினராக இருந்தாலும், கௌரவர்களில் மூத்தோனாகிய துரியோதனன், பாண்டவர்களில் மூத்தோனாகிய தருமனிலும் இளையவனாக இருந்தான். இதனால் துரியோதனன், தருமன் இருவருமே ஆட்சியுரிமையை வேண்டி நின்றனர். இப்பிணக்கு இறுதியில் குருசேத்திரப் போராக வெடித்தது. இதில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. இப் போர் உறவுமுறை, நட்பு போன்றவை தொடர்பான சிக்கலான நிலைமைகளை ஏற்படுத்தியது.
மகாபாரதம் கண்ணனின் இறப்புடனும் தொடர்ந்த அவருடைய மரபின் முடிவுடனும், பாண்டவர்கள் சுவர்க்கம் செல்வதுடனும் நிறைவடைகிறது. அத்துடன் இதன் முடிவுடன் கலியுகம் தொடங்குகிறது.
தமிழில் மகாபாரதம்
சின்னமனூர் செப்பேடு என்ற பழையசாசனமொன்றில் பாண்டியர்களின் பழைய வரலாற்றைச் சொல்கின்றபோது:
“தலையாலங்கானத்தில் தன்னொக்க இருவேந்தரைக் கொலைவாளில் தலை துமித்துக் குறைத்தலையின் கூத்தொழித்தும், மகாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச்சங்கம் வைத்தும்…..”
என்று குறிப்பிடுகிறது.தலையாலங்கானத் துச்செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சங்க காலத்தில் இருந்தவன்.ஆனால் அக்காலத்தில் அதனைத் தமிழ்ப்படுத்திய புலவர் யார்என்பதும் தெரியவில்லை. அந்த நூலும் கிடைக்கவில்லை.
பின்னர் தொண்டைமண்டலத்து திருமுனைப்பாடிநாட்டு சனியூரைச் சேர்ந்த வில்லிப்புத்தூரார் தனது புரவலரான வக்கபாகை வரபதியாட்கொண்டான் வேண்டிக்கொண்டதற்கு இணங்க பாரதத்தைப் பாடினார். வில்லிப்புத்தூரார் இயற்றிய பாரதத்தில் பத்துப் பருவங்களே (மொத்தப்பாடல்கள் 4350) இருக்கின்றன. மாபாரதத்தின் பதினெட்டாம் நாள் போரின் இறுதியுடன் தர்மன் முடி சூட்டுதல், பாண்டவர் அரசாட்சி என்று முடித்து விடுகிறார். 14ஆம் நூற்றாண்டில் வில்லிபுத்தூராரால் உருவாக்கப்பட்ட வில்லிபாரதமும் 18ஆம் நூற்றாண்டில் நல்லாப்பிள்ளையால் உருவாக்கப்பட்ட நல்லாப்பிள்ளை பாரதமும் மட்டுமே முழுமையாகக் கிடைத்த பிரதிகள்.
இதன் பின்னர் மாபாரதத்தை வேறு சிலரும் உரைநடையில் மொழியாக்கம் செய்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் ராஜாஜி. அவருடையது “வியாசர் விருந்து”. அ.லெ.நடராஜன் அவர்கள்”வியாசர் அருளிய மகாபாரதம்” என்ற பெயரில் நான்கு பாகங்களாக எழுதி வெளியிட்டுள்ளார்.

Leave a comment