அக்பர் பீர்பால் கதைகள் – திருடனைக் கண்டுபிடிப்பது எப்படி?

4.1/5 - (28 votes)

அக்பர் ஒரு நாள் பீர்பாலுடன் தோட்டத்தில் உலவிக் கொண்டு இருந்தார். திடீரென அக்பர் தன் வலது கைமணிக்கட்டை இடது கையால் அழுத்தித் தேய்க்க ஆரம்பித்தார். அவருடைய மணிக்கட்டு வீங்கியிருந்தது. அதைப் பார்த்த பீர்பால் சிரித்தார்.

 

“நான் வலியால் துடிக்கையில் உனக்கு சிரிக்கத் தோன்றுகிறதா?” என்று அக்பர்.
“மன்னிக்கவும் பிரபு! நான் ஏன் சிரித்தேன் என்று சொல்கிறேன்” என்ற பீர்பால் தோட்டத்திலிருந்த எலுமிச்சைச் செடிகளிலிருந்து ஒரு பழம் பறித்து வந்து அதை வெட்டி, அதன் சாறை வீக்கத்தில் தடவித் தேய்த்தார். வலி சற்றுக் குறைந்தாற்போல் போல் தோன்ற, அக்பர் “எலுமிச்சைச் சாறை குளவிக் கொட்டின இடத்தில் தடவினால் வலி குறையும் என்பது இன்றுதான் புரிந்தது” என்றார்.

 

“உங்களுக்கு அந்த உண்மை இன்று புரிந்தது. எனக்கு இன்று மற்றொரு உண்மை புரிந்தது. அதனால்தான் சிரித்தேன்” என்றார் பீர்பால். “அது என்ன?” என்று அக்பர் கேட்டார்.

“பிரபு! உங்களைக் கண்டு நாங்கள் அனைவரும் பய, பக்தியுடன் மரியாதை செய்கிறோம். ஆனால் ஒரு அற்பக் குளவி தைரியமாக உங்களிடம் பறந்து வந்து உங்களைக் கொட்டிவிட்டு சென்று விட்டதே! அதை நினைத்துத் தான் சிரித்தேன்” என்றார் பீர்பால்.

 

“நீ சொல்வது உண்மைதான்! என்னுடைய அதிகாரம் மனிதர்களிடம்தான் செல்லும். குளவி, வண்டு, எறும்பு ஆகிய சிறிய ஜீவராசிகள் கூட என்னைக் கண்டு பயப்படுவதில்லை. ஏனெனில் அவை தங்களுக்கு ஏதாவது ஆபத்து என்று தோன்றினால் மட்டுமே தங்கள் தற்காப்புக்காக சண்டையிடுகின்றன. ஆனால் மனிதன் மட்டுமே ஆசை, பொறாமை, கோபம் ஆகிய உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு, மற்றவர்களைத் துன்புறுத்துகிறான். அவ்வாறு குற்றமிழைப்பர்களை தண்டிப்பதுதான் என் கடமை?” என்றார்.

 

அவ்வாறு உரையாடிக் கொண்டே தோட்டத்தின் சிறிய கதவருகே வந்தனர். பிறகு கதவைத் திறந்து கொண்டு அரண்மனைக்குச் செல்ல நினைக்கையில் கதவருகே ஒரு பொற்கொல்லன் நின்று கொண்டு இருந்தான். அக்பரைக் கண்டதும் பணிவுடன் வணங்கினான்.
“யார் நீ?” என்றார் அக்பர்.
“நான் பொற்கொல்லன் பஜ்ரிதாஸ்!” என்றான் அவன்.
“உனக்கு என்ன வேண்டும்?” என்று அக்பர் கேட்டார்.

“ஐயா, என் வேலைக்குத் தேவையான அனைத்துத் தங்கத்தையும் ஓர் இரும்பு அலமாரியில் பத்திரமாக வைத்திருப்பது என் வழக்கம்! பூட்டியிருக்கும் அந்த அலமாரியின் சாவி என்னிடம்தான் இருக்கும். நான் வேலையில் மும்முரமாக இருந்தால், என் பணியாளர்கள் நால்வரில் ஒருவனை அனுப்பி, அலமாரிப் பூட்டைத் திறந்துத் தங்கத்தை எடுத்து வரச் சொல்வேன். என்னுடைய நான்கு பணியாளர்களும் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்கள்” என்றான்.

 

“சரிதான்! அப்படியிருந்தும் உன்னுடைய அலமாரியிலிருந்து தங்கம் திருட்டுப் போய்விட்டதாக்கும்! உன் பணியாளர்களில் ஒருவன்தான் அதைத் திருடியிருக்க வேண்டும். அப்படித்தானே?” என்றார் அக்பர்.
“ஆம் பிரபு!” என்றான் பஜ்ரிதாஸ்.
“திருட்டுப் போனத் தங்கத்தின் மதிப்பு என்ன?” என்று அக்பர் கேட்டார்.
“பத்து தங்கக் கட்டிகள்! அவற்றின் விலை ஒரு லட்சத்திற்கும் மேல்!” என்றான் பஜ்ரிதாஸ்.
“கவலைப்படாதே! மூன்றே நாளில் உன் தங்கம் உனக்குத் திரும்பிக் கிடைத்து விடும்” என்று சொல்லிவிட்டு அக்பர் நகர்ந்தார். “பிரபு? குற்றவாளியைக் கண்டு பிடிக்கும் பொறுப்பை யாரிடம் தரப் போகிறீர்கள்?” என்று பீர்பால் கேட்டார்.

“ஏன்? நகரக்காவல் தலைவர் இருக்கிறாரே.. அவரிடம்தான!” என்றார் அக்பர்.
திருடனைக் கண்டு பிடிக்கும் பொறுப்பை அக்பரிடமிருந்து ஏற்றுக்கொண்ட நகரக்காவல் தலைவர், உடனடியாக பஜ்ரிதாசின் நான்கு பணியாளர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தார். அவர்களைத் தலைகீழாகத் தொங்கவிட்டு சவுக்கால் அடித்து உடலை நாறாகக் கிழித்து விடுவதாக பயமுறுத்தி, உண்மையைக் கூறச் சொல்லி வற்புறுத்தினார்.
ஆனால் இரண்டு நாள்களாக அவர்களை அடித்து, உதைத்தும் அவர்கள் தாங்கள் நிரபராதி என்றே சாதித்தனர். இரண்டு நாட்களாகியும் தன்னால் உண்மைக் குற்றவாளியைக் கண்டு பிடித்து, தங்கத்தை மீட்க முடியாமற் போனதை நினைத்து காவல்தலைவருக்கு பயம் உண்டாயிற்று. தன் தோல்வியை ஒப்புக்கொண்டால் சக்கரவர்த்தியின் கடும் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் அவர் கலங்கிப் பரிதவித்தார்.

 

திடீரென பீர்பாலின் ஞாபகம் வந்தது. “அட! இது முன்னமே ஏன் எனக்குத் தோன்றவில்லை? இந்தப் பிரச்சினையைத் தீர்க்கக் கூடியவர் பீர்பால் ஒருவரே!” என்று சொல்லிக் கொண்டே, பொழுது விடிந்ததும் அவசரமாக பீர்பாலைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை பீர்பாலுக்கு விளக்கத் தொடங்கியவுடன், “இதைப்பற்றி எனக்கு ஏற்கெனவே தெரியும்” என்றார் பீர்பால்.

 

“நீங்கள்தான் எப்படியாவது குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டும்!” என்று காவல் தலைவர் கெஞ்ச, பீர்பால் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு, காவல் தலைவரை நோக்கி, “எனக்கு மூன்று அடி நீளமுள்ள குச்சிகள் நான்கு தேவைப்படுகிறது. அவற்றை நீங்கள் ஏற்பாடு செய்து சிறைச்சாலைக்கு எடுத்துச் செல்லுங்கள். நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கே வந்து அந்த நால்வரையும் சந்திக்கிறேன்” என்றார்.

பிறகு பீர்பால் சிறைச்சாலையை அடைந்த போது, காவல்தலைவர் குச்சிகளைக் கொடுத்து, அந்த நான்கு கைதிகளையும் அழைத்து வந்தார். வாடி, வதங்கிப் போய் அவர்கள் பீர்பால் முன் நின்றனர். அவர்களை நோக்கிய பீர்பால், “உங்கள் எசமானர் பஜ்ரிதாசின் அலமாரியிலிருந்து பத்துத் தங்கக் கட்டிகள் காணமற் போய்விட்டன. உங்களில் ஒருவர் தான் திருடியிருக்க வேண்டும்என அவர் புகார் செய்து இருக்கிறார்” என்றார்.
உடனே, அவர்களில் ஒருவன், “அவர் உப்பைத் தின்று வளர்ந்தவன் நான்! ஒருபோதும் அவருக்கு துரோகம் நினைக்க மாட்டேன்” என்றான். இரண்டாமவன், “நேர்மையை உயிராக மதிப்பவன் நான்! இத்தகைய ஈனச்செயலை கனவில் கூட என்னால் நினைக்க முடியாது” என்றான். “நான் இருபது ஆண்டுகளாக அவரிடம் வேலை செய்கிறேன். பணத்துக்கு ஆசைப்படுபவன் நானில்லை” என்றான் மூன்றாமவன். “நாயை விட நன்றி விசுவாசமானவன் நான்!” என்றான் நான்காமவன்.

 

“நீங்கள் சொல்வதை நம்புகிறேன். உங்களுக்காக இந்த மந்திரம் ஜெபித்த குச்சிகளைக் கொண்டு வந்திருக்கிறேன். இதை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று ஆளுக்கொன்றாகக் கொடுத்த பீர்பால், “யார் திருடினவனோ, அவன் கையிலுள்ள குச்சி இரவில் அவன் உறங்கும்போது மூன்று அங்குலம் வளர்ந்து விடும். உங்களை நாளைக்காலை சந்திக்கிறேன்” என்று சொல்லிவிட்டு பீர்பால் விடைபெற்றார்.

 

மறுநாள் பீர்பால் சிறைச்சாலைக்கு வந்ததும், அந்த நால்வரும் தங்களுடைய குச்சிகளுடன் வந்தனர். முதலில் ஒருவனுடைய குச்சியை வாங்கிக் கொண்ட பீர்பால் அதன் நீளத்தை சோதித்தார். பிறகு வரிசையாக அனைவரது குச்சியையும் பரிசோதித்தார். பரிசோதனை முடிந்ததும் மூன்றாவதாகக் குச்சியைத் தந்த ஆளை நோக்கி, “நீதான் தங்கத்தைத் திருடியவன்” என்றார் பீர்பால். அவன் உடனே அதை பலமாக மறுத்தான். ஆனால் திருப்பித் திருப்பிக் கேட்டபின் தான் திருடியதாக ஒப்புக் கொண்டான்.

 

“நீதான் திருடினாய் என்று எனக்குத் தெரிந்து விட்டது. ஏனெனில், உண்மையிலேயே நீ திருடியிருந்ததால், உனக்குக் கொடுத்த மந்திரக்குச்சி மூன்று அங்குலம் அதிகமாக வளர்ந்து விடும் என்று நம்பிக்கொண்டு, நேற்றிரவு சிறையில் மூன்று அங்குல நீளத்துக்கு உன் குச்சியை வெட்டி விட்டாய். ஆனால் குச்சியில மத்திரமும் இல்லை, மாயமும் இல்லை?
இதோ பார்! உன்னுடையது மற்ற குச்சிகளை விடக் குட்டையாக இருக்கிறது” என்று குச்சியைக் காண்பித்தார்.
காவலர்கள் அவனிடமிருந்து பிறகு தங்கத்தை மீட்டு பஜ்ரிதாசிடம் கொடுத்தனர். திருடியவன் சிறைக்கு அனுப்பப்பட்டான். பிறகு, காவல் தலைவர் தர்பாருக்கு வந்த அக்பரிடம் உண்மையான திருடனைக் கண்டுபிடிப்பதற்கு பீர்பால்தான் அவருக்கு உதவினார் என்பதைக் கூறினார்.“அட! பீர்பாால்! உனக்கு துப்பறியும் வேலை கூடத் தெரியும் என்று எனக்கு இதுநாள்வரை தெரியாதே!” என்று பாராட்டிய அக்பர், தன் கையிலிருந்த தங்க வளையம் ஒன்றைக் கழற்றி பீர்பாலுக்குப் பரிசாகத் தந்தார்.

7 Comments

  1. pravin
    Very nice storey. ...I am all so impressed
    Reply May 24, 2016 at 9:34 pm
  2. jerin
    very nice. super story kids enjoy
    Reply June 9, 2016 at 11:05 pm
  3. thamizharasan
    I like this stores
    Reply July 27, 2016 at 6:57 pm
  4. suresh kumar
    Super present of mind
    Reply August 16, 2016 at 9:57 pm
  5. suresh kumar
    Super
    Reply August 16, 2016 at 9:58 pm
  6. priya
    very nice and i really like the story
    Reply November 1, 2016 at 10:31 pm
  7. sountharyak
    wow nice story.its very use full to kids lying
    Reply November 10, 2018 at 3:33 pm

Leave a comment