குணசேகரின் கதை

3.9/5 - (15 votes)
kunasekar
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அதை தன் தோளில் சுமந்தவாறு மயானத்தை நோக்கி செல்லுகையில் அதனுள் இருந்த வேதாளம் அவனை நோக்கி, “மன்னா, உன்னைப் போல் சிலர் வாழ்க்கையில் லட்சியவாதியாகத் திகழ்பவர்கள் ஒரு குறிக்கோளை வகுத்துக் கொண்டு அதை அடைய அரும் முயற்சி செய்வார்கள்.

ஆனால் சிலர் வாழ்க்கையில் எந்தவிதப் பற்றுதலும் இல்லாமல் ஞானிபோல் திரிபவர்கள் திடீரென தடம்மாறி பயங்கர முயற்சி செய்து பல ஆண்டுகளாய் அடைய நினைத்ததை சில நாள்களிலேயே பெற்றுவிடுவர். அப்படிப்பட்ட குணசேகரனின் கதையைக் கூறுகிறேன், கேள்” என்றது.

விராக நாட்டை ஆண்டு வந்த சந்திரவர்மன் என்ற சிற்றரசருக்கு இரட்டைப் பிள்ளைகள் இருந்தனர். பெரியவன் குலசேகரன் இளையவன் குணசேகரனிடமிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தான். சிறு வயது முதல் தான் மன்னனாவது பற்றி குலசேகரன் கற்பனை செய்வதுண்டு. தனக்கு சமமான அந்தஸ்து படைத்தவர்களுடன் மட்டுமே பழகுவான். ஆனால் குணசேரகன் ஆசாபாசங்கள் அற்றவன். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதங்கள் அவனுக்குக் கிடையாது. அவனுக்கு ஆட்சிபுரியும் ஆசை சிறிதுமில்லை.

இருவருடைய பிறந்தநாளையும் சந்திரவர்மர் மிக விமரிசையாகக் கொண்டாடுவதுண்டு. அவ்வாறு அவர்களின் பத்தாவது பிறந்தநாளைக் கொண்டாடும்போது அவர்கள்இருவருக்கும் ஒரு கருடனின் பொம்மை பரிசாகக் கிடைத்தது. அதை அனுப்பியவர் சந்திரவர்மரின் குலகுரு சம்புநாதர்! அந்த பொம்மை பெரிதாக இருந்தது. அது மட்டும்இன்றி, அதன் காதருகில் பொருத்தப் பட்டிருந்த சாவியைத் திருகினால் அது சற்று நேரம் வானில் பறந்து சென்று திரும்பியது. அதில் ஒருவர் மட்டுமே அமர்ந்து செலுத்த முடியும்.
தங்களுக்குப் பரிசாகக் கிடைத்த பொம்மையை எடுத்துக் கொண்டு இருவரும் நந்தவனத்திற்குச் சென்றனர். முதலில் குலசேகரன் அதன் மீதேறி அமர்ந்து சாவியை முடுக்க, அது பறந்தது. சற்று நேரம் பறவையில் பறந்து களித்தபின், தன் தம்பிக்கு அதை அளித்தான். அப்போது அரண்மனை வேலைக்காரி ஒருத்தியின் மகனான சாரதி அந்தப் பறவையில் தானும் அமர்ந்துப் பறப்பதற்கு விரும்பினான்.
அவனுக்கு அது தகுதியற்ற ஆசை என்று அவன் தாய் உணர்த்தினாள். அதைத் தற்செயலாக கவனித்த குணசேகரன் அவளிடம் “உன் மகன் சாரதி எனக்கு சமமான வயதுடையவன். இந்த வயதில் இத்தகைய ஆசை தோன்றுவது நியாயமே! ஆகவே, பொம்மை மீது அமர்ந்து பறக்க அவனுக்கு வாய்ப்பு தருகிறேன்” என்று சொல்லிவிட்டு, தான் பறவை மீது ஏறாமல் சாரதியை ஏறச் சொன்னான். அதைக்கண்ட குலசேகரன் ஓடி வந்து அவனைத் தடுத்தான்.
அவன் செய்கையை அனைவரும் ஆதரித்தது குணசேகரனுக்கு வியப்பையும் வருத்தத்தையும் அளித்தது. “சாரதி குதிரையில் உட்காரக்கூடாது என்றால் நானும் அதில் உட்கார மாட்டேன்” என்ற குணசேகரன் “நான் குலகுரு சம்புநாதரிடம் சிஷ்யனாகச் சேர்ந்து, இதேபோல் ஒரு பொம்மையைப் படைத்து அதில் சாரதியை உட்காரச் செய்வேன்” என்றான்.

அப்போது, சந்திரவர்மருக்கும் அதே யோசனை தோன்றியது. தன் புதல்வர்கள் இருவரையும் தன் குருகுல சம்புநாதரிடம் சீடர்களாக அமர்த்தி ராஜநீதி, பொறியியல், பொருளாதாரம் போன்ற அறிவியல் பாடங்களைக் கற்கட்டும் என்று எண்ணி, சம்புநாதரின் குருகுலத்தில் சேர்த்தார். சேர்ந்த நாள் முதல், குலசேகரன் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள, குணசேகரன் பொறியியலில் மிக்க ஆர்வம் காட்டினான். சில நாள்களில் குணசேகரன் தான் கூறியது போல் ஒரு கருட பறவையைத் தயாரித்து அதில் சாரதியை ஏறச் சொன்னான். அவனுடைய சமத்துவ மனப்பான்மையைக் கண்டு வியந்து பாராட்டிய சம்புநாதர், “நீ சாதாரண மனிதன்னல்ல, நீ ஒரு மகான்!” என்று விமரிசனம் செய்தார்.
குருகுல சம்புநாதரிடம் கல்வி பயின்று முடித்தபின் இருவரும் அரண்மனை திரும்பினர். ஆனால் இருவரின் போக்கும் முற்றிலும் வேறுபட்டிருந்ததைக் கண்டு கவலையுற்ற சந்திரவர்மர் சம்புநாதரிடம், “குலசேகரன் தங்களிடம்இருந்து அரசியலை நன்குக் கற்றுக் கொண்டு விட்டான் ஆனால் குணசேகரன் அரசியலைப் பற்றிக் கற்றுக் கொண்டது போல் தெரியவில்லையே!” என்றார் மன்னர்.
“அவனுக்கு ஆட்சி புரிவதில் ஆர்வமில்லை. அதனால்தான் அவன் அரசியலை ஆர்வத்துடன் கற்கவில்லை” என்றார் சம்புநாதர். “குருநாதரே! என் ராஜ்யத்தை இரண்டாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவனை மன்னன் ஆக்க விரும்புகிறேன்” என்றார் சந்திரவர்மர். ஆனால் சந்திரவர்மருடைய யோசனை அவருடைய தந்தைக்கும், மற்ற அமைச்சர்களுக்கும் சரியாகத் தோன்றவில்லை.
ஆகையால் அவர்கள் இதற்குச் சம்மதிக்கவில்லை. இதனால் சந்திரவர்மர் அயல் ராஜ்யத்தின் மீது படையெடுத்து, வெற்றி கண்டு, அதை குணசேகரனுக்கு உரிமையாக்கி விடலாம் என்று கருதினார்.

அப்போது, விசால ராஜ்யத்து இளவரசி சந்திரகலாவின் சுயம்வரம் அறிவிக்கப்பட்டு, அதற்கு பல நாட்டு இளவரசர்கள் அழைக்கப்பட்டுஇருந்தனர். உடனே, மன்னர் மூத்தவன் குலசேகரனுக்கு பதிலாக குணசேகரனையே சுயம்வரத்திற்கு அனுப்ப எண்ணினார். சந்திரகலா விசாலராஜாவிற்கு ஒரே பெண்! அதனால், அவளை மணம் புரிந்தால், குணசேரன் எதிர்காலத்தில் விசாலராஜ மன்னன் ஆகிவிடுவான் என்ற நப்பாசைதான் காரணம்! அதைப்பற்றி மன்னர் சந்திரவர்மர் குணசேகரனிடம் கூறியபோது, அவனும் முதலில் சுயம்வரத்திற்குச் செல்லவே விரும்பினான். ஆனால் குலசேகரன் சந்திரகலாவை விரும்புவதையறிந்த அவன், உடனே தன் விருப்பத்தை கைவிட்டு விட்டாள். அதனால் குலசேகரன் மட்டும் சுயம்வரத்திற்குச் சென்றான்.
பல ராஜ்யங்களில் இருந்து மன்னர்களும், இளவரசர்களும் சந்திரகலாவின் கரம் பற்ற விரும்பி சுயம்வரத்தில் கூடியிருந்தனர். சந்திரகலா தன் கையில் மாலையுடன் சுயம்வர மண்டபத்திற்குள் நுழைந்த போது, திடீரென ஒருவன் முன்னே வந்து அவளுடைய கையைப் பற்றிக் கொண்டு, “என் பெயர் மித்ரபிந்தன்! நான் சந்திரகலாவை மிகவும் நேசிக்கிறேன். அவள் எனக்குத்தான் உரியவள்! அதனால் நான் இவளை என்னுடைய மகாபர்வத ராஜ்யத்திற்கு அழைத்துச் செல்கிறேன். உங்களுக்கு வீரம் இருந்தால், போரில் என்னைத் தோற்கடித்தப் பிறகு, சந்திரகலாவை அழைத்துச் செல்லுங்கள்!” என்று சவால் விட்டுவிட்டு, அங்கு தயாராக இருந்த தன் குதிரைமீது அவளை பலவந்தமாக ஏற்றிக் கொண்டு, விரைந்து வெளிஏறினான்.
சந்திரகலாவின் தந்தை வீரகுப்தர், தன் மகளை கயவன் மித்ரபிந்தனிடம்இருந்து மீட்டு வரும் இளவரசனுக்குத் தன் பெண்ணை மணமுடித்துத் தருவதுடன், தன் ராஜ்யத்தையும் அளிப்பதாக அறிவித்தார். உடனே சில நாள்களிலேயே, பல மன்னர்கள் மகாபர்வதத்தின் மீது படையெடுத்து, சந்திரகலாவை மீட்க முயன்றனர்.
ஆனால், மலைப்பிரதேசமான மகாபர்வத ராஜ்யத்தோடு போரிடுவது மிகக் கடினமாக இருந்தது. படைஎடுத்துச் சென்ற மன்னர்கள் அனைவரும் போரில் கொல்லப்பட்டனர். அவ்வாறு, போர்க்களத்தில் உயிர் நீத்தவர்களில் குலசேகரனும் ஒருவன்!

தன் சகோரதன் கொல்லப்பட்டதையறிந்த குணசேகரன் மித்ரபிந்தன் மீது தானே போர்தொடுக்க முடிவு செய்தான். ஆனால், மற்றவர்களைப் போல் உடனே படையெடுத்துச் செல்லாமல், முதலில் மித்ரபிந்தனைப் பற்றிய தகவல்களை சேகரிக்க முற்பட்டான்.
மித்ரபிந்தன் மகாபர்வதக் கோயிலின் அம்மன் ருத்ரபைரவியை சிறு வயது முதல் ஆராதனை செய்து, அம்மனிடமிருந்து பல விசேஷ சக்திகளைப் பெற்றிருந்ததாகத் தெரிந்து கொண்டான். ஒருமுறை ருத்ரபைரவி அவனுடைய கனவில் தோன்றி தனக்கு இரத்த தாகம் ஏற்பட்டுள்ளதாகவும், நூறு மன்னர்களை அவளுக்குப் பலியிட்டால், அவன் மகா பலம் பொருந்தியவனாகத் திகழ வரம் தருவதாகவும் கூறினாளாம்! ருத்ரபைரவியின் சூலாயுதத்தைக் கொண்டு மித்ரபிந்தனை யாராவது தாக்கினால் மட்டுமே அவன் இறப்பான் என்றும் கூறினாள்.
மேற்கூறிய தகவல்களை அறிந்த பிறகு, குணசேகரன் பல முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டபின், அவன் தனியாக மாறுவேடத்தில் மகாபர்வதம் சென்றான். ஒருநாள் நள்ளிரவில், மித்ரபிந்தன் சந்திரகலாவுடன் ருத்ரபைரவியின் கோயிலுக்குச் சென்றபோது, அவர்கள் அறியாமல் பின் தொடர்ந்தான். அம்மனின் சன்னிதிக்கு மித்ரபிந்தன் சென்றதும் குணசேகரன், விரைந்து கருவறைக்குள் புகுந்தான். அம்மனின் கையிலிருந்த சூலத்தை எடுத்து, அவள் முன்னிலையில் மித்ரபிந்தன் மார்பில் சூலத்தைப் பாய்ச்சி, அவனைக் கொன்றான். உடனே குணசேகரன் முன் தோன்றிய அம்மன், “இத்துடன் நூறு இளவரசர்கள் பலியாகி விட்டனர். இறுதியாக நூறாவது இளவரசனை பலிகொடுத்த உனக்கு நான் வரம் தர விரும்புகிறேன். என்ன வேண்டுமோ, கேள்!” என்று சொல்ல, மித்ரபிந்தனைத் தவிர அனைவரையும் உயிர்ப்பிக்க வேண்டும் என வரம் கேட்க, அம்மனும் அவ்வாறே வரம் தந்தாள்.
உயிர் பெற்று எழுந்த மற்ற மன்னர்களையும் இளவரசர்களையும் நோக்கி “உங்களுக்கு உயிர் கொடுத்த குணசேகரனை உங்கள் சக்கரவர்த்தியாகக் கருதுங்கள்!” என்று கூறி மறைந்தாள்.
கதையை இந்த இடத்தில் நிறுத்திய வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! குணசேகரனின் செயலைப் பார்த்தால் வியப்பாக இல்லையா? அரசாள்வதில் ஆசையே இல்லை என்று ஆரம்ப முதல் சொல்லி வந்தவன் இறுதியில் எப்படி மாறி விட்டான் பார்த்தாயா? தவிர, மித்ரபிந்தனை சாதாரண மனிதர்களினால் கொல்ல முடியாது என்று அம்மன் கூறியிருக்க, அவனை குணசேகரனால் எவ்வாறு கொல்ல முடிந்தது? என்னுடைய கேள்விகளுக்கு விடை தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால், உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.
அதற்கு விக்கிரமன், “ராஜ்யம் ஆளும் ஆசையினால் குணசேகரன் மித்ரபிந்தனைக் கொல்லவில்லை. தன் சகோதரனைக் கொன்றவனைப் பழி தீர்க்க எண்ணியே அவன் மித்ரபிந்தனைக் கொன்றான். தன் சகோதரன் மட்டுமன்றி, மற்றும் பல மன்னர்களை அநியாயமாகக் கொன்று பலியிட்ட மித்ரபிந்தனை பழிவாங்கவே அவன் அவ்வாறு செய்தான். சாதாரண மனிதர்களினால் மித்ரபிந்தனைக் கொல்ல முடியாது என்று ருத்ரபைரவி கூறியிருந்தது உண்மையே! ஆனால் குணசேகரன் மற்றவர்களைப் போல் சராசரி மனிதன் அல்ல! நற்குணங்கள் பொருந்திய உத்தம புருஷன்! ஆகவே, சராசரி மனிதர்களிலிருந்து அப்பாற்பட்ட குணசேகரனால் மித்ரபிந்தனைக் கொல்ல முடிந்ததில் வியப்பில்லை!” என்றான்.
விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே, வேதாளம் மீண்டும் பறந்து சென்று முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது.

3 Comments

  1. Venkat
    Super
    Reply November 13, 2018 at 7:56 pm
  2. பார்த்தசாரதி
    குணசேகரன் மித்ரபிந்தன்மேல் படையெடுத்ததன் காரணம் சந்திரகலாவை அநீதியான முறையில் மித்ரபிந்தன் கடத்திச் சென்றதுதான்!மித்ரபிந்தன் நூறு இளவரசர்களைப் பலியிடாத நிலையில்தான் குணசேகரன் அவனைத் தாக்கியுள்ளான்.ருத்ரபைரவியின் ஆயுதத்தை தொட்டவுடன் குணசேகரன் சாதாரணமனிதனாக கருதப்படும் நிலை போய்விட்டது. சந்திரகலாவை அடையைவோ ராஜ்யமாளவோ ஆசைகொண்டிருந்தால் மற்ற இளவரசர்களை உயிர்ப்பிக்க வரம் கேட்டிருக்கமாட்டான்!தன்னை யாரும் வெல்லமுடியாத வரம் கேட்டிருப்பான்!ஆகவே வேதாளம் குணசேகரனைப் பற்றி கூறியது பொருந்தவில்லை.ஆகவே அந்தக் கேள்விக்குப் பொருந்தும் பதில் கிடையாது.ஆனால் பொறுத்த (சமத்கார) பதிலை விக்ரமன் கூறியுள்ளார்!
    Reply May 25, 2020 at 2:29 pm
  3. அருமை!!
    Reply December 1, 2020 at 10:09 am

Leave a comment