செல்வம் வேண்டாமா?

4.2/5 - (17 votes)

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அவன் அதைத் தோளில் சுமந்தவாறு மாயனத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம் அவனிடம், “உன்னுடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என்று என்னால் இப்போது சொல்ல முடியவில்லை. ஏனென்றால் நீயும் ராமநாதனைப் போலிருந்தால் மிகவும் கஷ்டப்பட்டு அடைந்ததை கை நழுவ விட்டு விடுவாய். அந்த ராமநாதன் தன் விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள அரும்பாடுபட்டான். ஆனால் அது நிறைவேறிய பிறகு அதை அனுபவிக்காமல் தியாகம் செய்துவிட்டான். அந்த ராமநாதனின் கதையைக் கேள்!” என்று கதை சொல்லாயிற்று.

 

மாயனூர் என்ற கிராமத்தில் ராமநாதன் என்ற இளைஞன் இருந்தான். ஒரு நாள் கிராமத்திற்கு வருகை தந்த சாமியார் ஒருவர் அவன் கை ரேகைகளைப் பார்த்துவிட்டு, “அதிருஷ்டம் உன்னைத் தானே தேடிவரும்” என்று சொன்னார். அதில் இருந்து ராமநாதன் வேலை செய்வதை விட்டு விட்டு தான் பணக்காரன் ஆவது பற்றியே எப்போதும் மனக்கோட்டைக் கட்ட ஆரம்பித்தான். ஒருநாள் அவனைத்தேடி வந்த வாலிபன் ஒருவன் “நான் சொல்லும் இடத்தில் நீ ஐந்து வருஷம் வேலை செய்தால், உனக்கு நிறைய செல்வம் கிடைக்கும். சம்மதமா?” என்று கேட்டதும், ராமநாதனுக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல் இருந்தது.

 

ஆயினும் அவன் முழு விவரங்களை அறிய விரும்பியதால், ஆனந்தன் விளக்கிக் கூறினான். ஸ்ரீபுரத்தைச் சேர்ந்த ஆனந்தன் அதே கிராமத்திலிருந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டான். ஆனால் அவளுடைய தகப்பன் அவளை மணக்க விரும்புபவர்களிடம், ஆயிரம் பொன் வரதட்சணை கேட்டான். ஆனந்தனிடம் அத்தனை பணம் இல்லை. அப்போது அந்தக் கிராமத்து வியாபாரியான சரவணன் ஆனந்தனை அழைத்துத் தன் வீட்டில் குறைந்தது ஐந்து வருஷம் வேலை செய்ய வேண்டும் என்றும், அப்படிச் செய்தால் ஆயிரம் பொன் தருவதாகவும் கூறினான்.

 

உடனே ஆனந்தனும் அவனிடம் வேலை செய்ய ஒப்புக் கொண்டான். ஆனால் வேலைக்குச் சேர்ந்த சில நாள்களிலேயே விசித்திரமான நோயின் காரணமாக அவன் விகாரமாக மாறினான். இதனால் அவன் விரும்பிய பெண்ணும் அவனை நிராகரித்து விட்டாள். ஆகையால் ஆனந்தன் சன்னியாசியாக முடிவு செய்தான். அந்த முடிவை சரவணன் ஏற்கவில்லை. இருப்பினும் ஆனந்தன் தான் தீர்த்த யாத்திரை சென்று வருவதாகவும், அதன்பின் தன் பணியைத் தொடர்வதாகவும் ஊறுதி அளித்துவிட்டுச் சென்றான்.

பிருஹதாரண்யத்தில் ஆனந்தன் பிரகாண்டர் என்ற ரிஷியை சந்தித்தான். அவரிடம் தன்னைப் பற்றிக் கூறி தனக்கு சந்நியாசியாக விருப்பம் என்றும், அவரைத் தனக்கு தீட்சை அளிக்குமாறும் வேண்டினான்.

 

அதற்கு பிரகாண்டர், “உனக்கு ஏற்பட்டுள்ள விரக்தி தற்காலிகமானது. அதனால் நான் உனக்கு தனமந்திரம் ஒன்று சொல்லித்தருகிறேன். அதை இடைவிடாமல் ஜெபித்தால் உனக்குப் புதையல் கிடைக்கும். புதையல் கிடைத்த பின்னும் அதை அனுபவிக்க ஆசை ஏற்படவில்லை எனில், நீ சந்நியாசியாகத் தகுதியானவன். ஆனால் ஒரு வருடத்திற்குள் உன் தவப்பலனை உணர்ச்சிவசப்பட்டு வீணாக்கினால், நீ சந்நியாசி ஆகமுடியாது” என்று கூறி அவனுக்கு தன மந்திரத்தை உபதேசித்தார்.

 

ஆனந்தன் தனியாக தனக்கென ஓர் ஆசிரமம் அமைத்துக் கொண்டு, இடைவிடாமல் தனமந்திரத்தை ஜெபித்தான். சில நாள்களிலேயே, அவனுடைய மனக்கண்ணில் ஒரு அரசமரத்தடியில் உள்ள புதையல் புலனாகியது. ஆனாலும் இறைவனை தியானம் செய்ய ஆரம்பித்தான். அப்படியிருக்கையில் ஒரு நாள் அவனைத் தேடி நீலாம்பரி என்ற இளம்பெண் ஆசிரமத்துக்கு வந்தாள்.

 

ஆனந்தனிடம் அடைக்கலம் கேட்ட அவள் தன் பிரச்சினையை விளக்கினாள். அவள் ஏழையாக இருந்தாலும், சிறுவயது முதல் செல்வத்திலும், சுகபோகங்களிலும் அபார ஈடுபாடு இருந்தது. அவளை சோமு என்ற வாலிபன் வரதட்சணை ஏதுமின்றி திருமணம் செய்து கொள்ள விரும்பினான்.

 

அவன் ஏழை என்பதால் அவனை மணம் செய்ய நிராகரித்துவிட்டாள். ஆனால் அவள் தந்தை அதற்கு சம்மதித்து விட்டார். அதனால் வீட்டை விட்டு ஓடி வந்த அவள் ஆனந்தனிடம் தனக்கு  புகலிடம் தருமாறு வேண்டினாள். அதற்கு சம்மதித்த ஆனந்தன், “நீலாம்பரி! ஒரு வருடம்வரை புதையலைப் பாதுகாத்தவாறு எனக்கு உதவி செய்து கொண்டு இருந்தால், உனக்கு அந்தப் பணம் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறினான். அவளும் அதற்குச் சம்மதித்தாள்.

ஒருநாள் அவளை மணதார விரும்பிய சோமு அவளைத் தேடி ஆசிரமத்திற்கே வந்து விட்டான். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி மீண்டும் அவளை நச்சரித்தான். அதற்கு அவள், “ஆனந்தனை நீ கொன்று விட்டால். அந்தப் புதையலை நாம் எடுத்துக் கொண்டு திருமணம் புரிந்து மகிழ்ச்சியுடன் இருப்போம்” என்றாள். நீலாம்பரி பேசியதை ஆற்றில் நீராடச் சென்று திரும்பிய ஆனந்தன் கேட்டு திடுக்கிட்டான். உடனே அவள் முன் வந்து, “பணத்திற்காக உனக்குப் புகலிடம் தந்த என்னையே நீ கொல்ல எண்ணினாய்! அதனால் நீ ராட்சஸியாக மாறுவாய்” என்று சாபம் கொடுக்க, நீலாம்பரி ராட்சஸியாக மாறிவிட்டாள்.

அப்போது அங்கே வந்த பிரகாண்ட ரிஷி ஆனந்தனைப் பார்த்து, “நீலாம்பரிக்கு சாபம் கொடுத்ததனால் உன் தவ வலிமையை நீ இழந்து விட்டாய்!” என்றார்.  “சுவாமி! மனித குலத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டேன். என்னை உடனே சந்நியாசியாக மாற்றுங்கள்” என்று ஆனந்தன் வேண்டினான்.

 

“சரவணனுக்கு நீ கொடுத்த வாக்கு என்னாவது? உனக்குப் பதிலாக வேறு யாரையாவது அவனிடம் வேலைக்கு அமர்த்து! உன்னால் சாபமிடப்பட்ட நீலாம்பரிக்கு சாப விமோசனம் அளி! அதன்பிறகு சந்நியாசத்தைப் பற்றி யோசிக்கலாம்” என்றார் ரிஷி. “நீங்கள் எனக்குச் சற்று உதவி செய்யக்கூடாதா?” என்று ஆனந்தன் வேண்ட, அவர் “பணத்தின் மீதுள்ள ஆசையினால்தானே நீலாம்பரி உன்னைக் கொலை செய்யவும் துணிந்தாள். அதே பணத்தை துச்சமாகக் கருதி எவன் ஒருவன் தியாகம் செய்கிறானோ, அவன் மூலம் நீலாம்பரிக்கு விமோசனம் அடைய, உன்னுடைய கடமையும் முழுமையடையும்” என்றார்.

 

மேற்கூறிய தன் வரலாற்றை விளக்கியபின், ராமநாதனை சரவணனிடம் அழைத்துச் செல்லவே தான் வந்ததாக ஆனந்தன் கூறினான். இதைக் கேட்டதும் ராமநாதன் மிகுந்த உற்சாகத்துடன் சரவணனிடம் வேலைக்கு அமர்ந்தான். பிறகுதான் அவனுக்கு அந்த வீட்டில் வேலை செய்வது எத்தனை கடினம் என்று புரிந்தது. ஒருநாள், எஜமானி “இந்த கிராமத்தில் சந்திரா என்ற சமையற்காரி ஒருத்தி இருக்கிறாள். அவள் மிகப் பிரமாதமாக சமைப்பாள். அவளை எப்படியாவது இங்கு சமையல் செய்ய அழைத்து வா! முடியவில்லை எனில் உன்னை வேலை விட்டு நீக்கி விடுவேன்” என்று பயமுறுத்தினாள்.

 

ஆனால் சந்திரா மறுத்துவிட்டாள். ராமநாதன் விடாமல், “ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு ஆயிரம் பொன் கிடைக்கும். அதை உன்னோடு பகிர்ந்து கொள்வேன். தயவு செய்து எனக்கு உதவி செய்!” என்று கெஞ்சினான். அவனைக் கண்டு இரக்கமுற்ற சந்திரா, “எனக்கு உன்னுடைய பணம் தேவையில்லை. உன்னுடைய நிலைமை பரிதாபமாக இருப்பதால் உனக்கு உதவி செய்ய ஒத்துக் கொள்கிறேன்” என்று கூறினாள்.

 

அவனுடன் சரவணன் வீட்டுக்கு வந்து சமையல் வேலை மட்டுமன்றி, மற்ற எல்லா வீட்டு வேலைகளிலும் ராமநாதனின் தோளாடு தோள் நின்று உதவி செய்தாள். நாளடைவில் பணத்தைப் பற்றிய அவன் கருத்து மாறியது. அவன் தன் வாழ்வில் சந்திராவை வாழ்க்கைத் துணைவியாக அடைந்தால் அதுவே பெரிய பொக்கிஷம் கிடைப்பது போல் என்று எண்ண ஆரம்பித்தான்.

ஐந்து ஆண்டுகள் சென்றபிறகு அவன் ஆனந்தனை அடைந்து, “உன் பொருட்டு, நான் அந்த வீட்டில் ஐந்து ஆண்டுகள் வேலை செய்து முடித்து விட்டேன். ஆனால் எனக்கு அந்த ஆயிரம் பொன் தேவையில்லை. அதை நீயே வைத்துக்கொள்! என் வாழ்க்கையின் மிகப்பெரிய செல்வம் சந்திரா ஒருத்தியே என்று உணருகிறேன்!” என்று ராமநாதன் கூறியதும், ஆனந்தன் ஆச்சரியப்பட்டான். அந்த சமயம் அங்கு வந்த பிரகாண்ட ரிஷி, ராமநாதனை மனதார வாழ்த்தினார். நீலாம்பரியும் அக்கணத்திலேயே சாப விமோசனம் பெற்று சுய உருவத்தைப் பெற்றாள்.

 

இந்த இடத்தில் கதையை நிறுத்திய வேதாளம் விக்ரமனிடம், “மன்னா! பணம் வேண்டும் என்று ராமநாதன் ஐந்து வருடம் சரவணன் வீட்டில் மிகக் கடுமையாக உழைத்த பின், கடைசியில் ஆயிரம் பொன்னை வேண்டாம் என்று தியாகம் செய்தது ஏன்? ஆனந்தன் ஒன்றுமே செய்யாமல் நீலாம்பரிக்கு சாபவிமோசனம் எப்படிக் கிடைத்தது? கடைசியில் பிரகாண்ட ரிஷி ராமநாதனை மனதார வாழ்த்துமளவிற்கு அவன் அப்படியென்ன செய்துவிட்டான்? என்னுடைய சந்தேகங்களுக்கு விளக்கம் தெரிந்தும் நீ மௌனமாக இருந்தால் உன் தலை வெடித்து சுக்கு நூறாகும்” என்றது.

 

அதற்கு விக்கிரமன், “ராமநாதனுக்குப் பணத்தின் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது உண்மைதான்! ஆனால் சந்திராவை சந்தித்தது முதல் அவன் மனத்தில் மாறுதல் ஏற்படத் தொடங்கியது. தான் அளிப்பதாகக் கூறிய பணத்தை நிராகரித்து விட்டு, தன் மீதுள்ள இரக்கம் காரணமாக தனக்கு உதவி செய்ய வந்த சந்திராவைக் கண்டது முதல் அவனுக்குப் பணத்தின் மீது மோகம் குறைந்தது. அதனால் தனக்கு வரவேண்டிய ஆயிரம் பொன்னையும் தியாகம் செய்தான். ராமநாதன் செய்த தியாகத்தினால் நீலாம்பரிக்கு சாபவிமோசனம் கிட்டியது. மகத்தான தியாகம் செய்த ராமநாதனை பிரகாண்ட ரிஷி வாழ்த்தாமல் வேறு என்ன செய்வார்?” என்றான்.

 

விக்கிரமனது சரியான பதிலினால் அவன் மௌனம் கலையவே வேதாளம் தான் புகுந்திருந்த உடலுடன் பறந்து சென்று மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.

2 Comments

  1. vidhya
    Superb story.......
    Reply December 3, 2015 at 3:18 pm
  2. பார்த்தசாரதி
    ராமநாதன் உழைக்காமல் பணத்தைப்பற்றி சிந்தித்துஅதேமோகத்திலிருந்தபோது பணம் அவனை அடிமையாக்கி அண்ணாந்து பார்க்க வைத்ததால் அதைப்பெரிதாக நினைத்தான்.அந்தப்பணத்தையே லட்சியம் செய்யாத சந்திரா தனக்காக வேலைசெய்ய முன்வந்ததும் அவனுக்கு தன் உழைப்பின் அருமை புரிந்தது.ஐந்து வருடங்கள் சந்திராவுடன் உழைத்ததில் கிடைத்த சந்தோஷம் வாழ்நாள் முழுதும் நிலைக்க அதை ஆயிரம் பொன்னிற்கு ஈடாக்காமல் சந்திராவை வாழ்க்கைதுணையாக பெறுவதே என்று கருதி தனக்கு உழைக்க பணம்வேண்டாம் என்றவளுக்கு தன்னையே கொடுத்து காடன்கட்டிய உத்தமகுணத்தால் நீலாம்பரியும் உயிர்பெற்று ரிஷியும் வாழ்த்தலானது.என்னுடைய. விளக்கத்தையும் கேட்ட வேதாளம் விக்ரமாதித்தர் சுமந்துவந்த உடலை விட்டுவிட்டு வேறு உடலைத் தேடிச் சென்றது.
    Reply May 26, 2020 at 7:56 am

Leave a comment