கடல்கன்னி ஹிசிகா

4.1/5 - (21 votes)

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் அதை சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள்ளிருந்த வேதாளம் விக்கிரமனை நோக்கி, “மன்னா! நீ அனுபவிக்க வேண்டிய ராஜபோகத்தைத் துறந்துவிட்டு, நிகழ்காலத்தை மட்டுமன்றி உன் எதிர்காலத்தையும் நீ வீணாக்கிக் கொண்டு இருக்கிறாய். உன்னைப் போல் பூஷணன் என்ற மன்னனும் தனக்குக் கிடைக்கவிருந்த ஐஸ்வரியங்களை தனது மதியீனத்தால் கை நழுவ விட்டான். அவன் கதையைக் கேள்!” என்று கதை சொல்லத் தொடங்கியது.

 

வராககிரி, கூர்மகிரி ஆகிய இரண்டும் அடுத்தடுத்த ராஜ்யங்கள். வராககிரியை ஆண்டு வந்த பூஷணன் நல்ல குணமுடையவன். ஆனால் கூர்மகிரி மன்னன் மணிதரனோ அதற்கு நேர்மாறானவன்! நிர்வாகத்தை மந்திரியிடம் ஒப்படைத்துவிட்டு, ராஜபோகத்தை அனுபவிப்பதிலேயே காலத்தைக் கழித்தான். அதனால் அவனுடைய படைபலம் குன்றியது. ஆனால் வராககிரி மன்னன் பூஷணனும், கூர்மகிரியின் மணிதரனும் நண்பர்களாகத் திகழ்ந்தனர்.

 

கூர்மகிரி ராஜ்யத்துக்கு உட்பட்ட கடற்கரையில் அமைந்திருந்த ரத்னகிரியில், சாமந்தன் என்ற இளம் வாலிபன் வசித்து வந்தான். அவனுடைய தந்தையான மணிகண்டன் மிகப் பெரிய வியாபாரி. அவர் திடீரென ஒருநாள் இறந்துபோக, அதுவரை தந்தையின் வியாபாரத்தில் கவனம் செலுத்தாத சாமந்தன் வியாபாரத்தைத் தொடர்ந்து செய்ய முடியாமல் திக்கு முக்காடிப் போனான். இதனால் பலத்த நட்டம் ஏற்பட்டது. கடன்காரர்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு தொந்தரவு செய்ய, சாமந்தன் கவலையில் ஆழ்ந்தான்.

 

ஒருநாள் இரவு உறக்கம் பிடிக்காமல் கடற்கரையில் உலவிக் கொண்டிருக்கையில், திடீரென்ற ஓர் அற்புதக் காட்சி தென்பட்டது. கடலிலிருந்து அழகே உருவான ஓர் இளம்பெண் எழுந்து வந்தாள்.

அவள் சாமந்தனை நோக்கி வந்து, “நான் ஒரு கடற்கன்னி! என் பெயர் ஹிசிகா! நான் இந்தக் கடலுக்குள் பாதாள லோகத்தில் வசிப்பவள். எங்கள் உலகத்தில் வாழ்ந்து வரும் ஜலேந்திரன் என்ற வாலிபன் மீது நான் பிரியம் கொண்டிருந்தேன். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக இருந்தோம். அதற்கு முன் அவன் பூலோகத்தில் உள்ள நகரங்களை ஒருமுறை சுற்றிப் பார்த்து விட்டு வருவதாகக் கூறிவிட்டு மூன்று மாதங்கள் முன் சென்றவன் இன்னும் திரும்பவில்லை. எனக்கும் பூலோகத்தைச் சுற்றிப் பார்க்க ஆசையாக இருக்கிறது. எனக்கு உதவி செய்வீர்களா?” என்றாள்.

 

“ஹிசிகா! தற்சமயம் நான் பெரிய சிக்கலில் மூழ்கியிருக்கிறேன். எனக்கு வியாபாரத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்ய பணம் தேவை! அதற்கு உன்னால் உதவி செய்ய முடியுமெனில், நானும் நீ கேட்பதை செய்வேன்” என்றான். உடனே ஹிசிகா கடலுள் மூழ்கிச் சென்று, விலையுயர்ந்த முத்துகளை அள்ளிக் கொண்டு வந்தாள். அவற்றைப் பெற்றுக் கொண்ட சாமந்தன், அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவளுக்குத் தங்குவதற்கு சகல வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்தான்.

 

முத்துகளை விற்று, அதில் வந்த பணத்தைக் கொண்டு நஷ்டத்தை சரிசெய்து, மீண்டும் வியாபாரத்தைத் தொடங்கினான். தன் வீட்டுப் பெண்களுடன் ஹிசிகாவை தினந்தோறும் நகரில் நிடைபெறும் இசை, நடன நிகழ்ச்சிகளுக்கு அனுப்பி வைத்தான். ஹிசிகா அவற்றைப் பார்த்து மிகவும் ரசித்தாள். ஒருநாள் ஹிசிகா சாமந்தன் வீட்டுப் பெண்களுடன் ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த போது, அதே நிகழ்ச்சிக்கு கூர்மகிரி மன்னன் மணிதரனும் வந்திருந்தான். அழகே உருவான ஹிசிகாவைக் கண்டதும் மன்னன் மயங்கிப் போனான்.

 

தன்னுடைய வீரர்களை அவளை அந்த இடத்திலேயே பலவந்தமாகப் பிடித்து, தன் அரண்மனைக்கு இழுத்து வரச் செய்தான். சாமந்தன் வீட்டுப் பெண்கள் சாமந்தனிடம் விஷயத்தைச் சொல்ல, செய்வதறியாமல் திகைத்துப் போய் அவன் சும்மாயிருந்து விட்டான். அரண்மனைக்கு இழுத்து வரப்பட்ட ஹிசிகாவிடம், “பெண்ணே! நீ யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் உன்னைக் கண்டவுடன் உன் அழகில் மதி மயங்கிப் போனேன். என்னைத் திருமணம் செய்து கொள்! உன்னை மகாராணியாக்குகிறேன்” என்றான் மணிதரன்.

 

“ராஜா! நான் ஒரு கடற்கன்னி! நான் எப்படி பூலோகவாசியைக் திருமணம் செய்து கொள்ள முடியும்? தவிர, நான் ஏற்கெனவே எங்கள் உலகத்தைச் சேர்ந்த ஜலேந்திரனை மணம் செய்து கொள்வதாக இருக்கிறேன். அதனால் என்னை விட்டு விடுங்கள்!” என்று கெஞ்சினாள். “உன்னிடம் என் மனத்தைப் பறி கொடுத்து விட்டேன். இனி உன்னை விடுவதாக இல்லை!” என்று கூறிவிட்டு, ஹிசிகாவின் மனம் மாறும் வரை அவளை அந்தப்புரத்தில் சிறை வைக்க உத்தரவிட்டான்.

2 Comments

  1. pl send secound half story
    Reply May 14, 2020 at 6:18 pm
  2. Vimal.m
    Last story avlothanaa 😥
    Reply November 4, 2020 at 4:45 pm

Leave a comment