சுவாமி விவேகானந்தர் கதைகள் – ஸ்ரீராமகிருஷ்ண சீடர்களின் தவம்!

3.1/5 - (7 votes)

சுவாமி நித்யாத்மானந்தா எழுதிய M-The Apostle and the Evangelist (ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகளை எழுதிய மகேந்திரநாத் குப்தர் என்ற ம) என்ற நூலில் உள்ள 16 ஜூலை 1924-ல் நடந்த உரையாடலிலிருந்து தொகுத்தது.

அபய்பாபு: சுவாமி விவேகானந்தரும் அவரது சகோதரத் துறவிகளும் எதற்கு அவ்வளவு தவம் மேற்கொண்டார்கள்? ஸ்ரீராமகிருஷ்ணர்தான் ஏற்கனவே அவர்களையெல்லாம் சித்தியடைந்த வர்களாக உயர்நிலைக்கு அழைத்துப் போய்விட்டாரே! அப்படியிருந்தும், உணவு, தூக்கம் இவற்றையெல்லாம் துறந்து எதற்கு அவ்வளவு கடுமையான தவம் செய்தார்கள்?

ம: கடவுளை அடைந்த பிறகும் அவர்கள் ஏன் தவம் செய்கிறார்கள் என்றால், தாம் பெற்ற இறையுணர்வைத் திடப்படுத்திக் கொள்வதற்காக என்பதுதான் பதில். புராணத்தில் படித்திருக்கி றோம், முசுகுந்த மகாராஜா இறையனுபவம் கிட்டிய பிறகும் தவம் மேற்கொண்டார் என்று. ஏன்? அந்த உயர் அனுபவ நிலைக்குப் பிறகும் அவருக்கு மனம் அமைதியற்றுச் சலித்துக் கொண்டே இருந்தது. அதனாலேயே அவருக்கு, தவம் செய் என்ற ஆணை கிடைத்தது. அலை பாய்வது மனதின் சுபாவம்; அதைத் தவத்தின் மூலம் அமைதிப்படுத்த முடியும்.இன்னொரு காரணம். இறையுணர்வை அனுபவத்தில் அடைந்த பின்னும் அதிலிருந்து சறுக்கி விழ வாய்ப்புண்டு. ஏன் தினமும் தியானம் செய்கிறீர்கள்? என்று ஸ்ரீராமகிருஷ்ணர், தமக்கு அத்வைத சாதனையைக் கற்றுத் தந்த குருவான தோதாபுரியைக் கேட்டார். அதற்கு தோதாபுரி, பாத்திரத்தைத் தினமும் துலக்க வேண்டும்; இல்லாவிட்டால் அதில் களிம்பு ஏறிக் கறுத்துவிடும் என்றார். ஸ்ரீராமகிருஷ்ணர் விடாமல், பாத்திரமாக இருந்தால்தானே தினம் தினம் துலக்க வேண்டும்? அதுவே தங்கமாகிவிட்டால் தினமும் துலக்க வேண்டியதில்லை அல்லவா? என்று கேட்டாராம். உண்மை என்னவெனில், எல்லோராலும் தங்கப் பாத்திரமாய் ஆகிவிட முடியாது. ஸ்ரீராம கிருஷ்ணர் ஓர் அவதார புருஷர்; அவர் சொக்கத் தங்கம்தான்.

எல்லோரையும் அவர் நிலைக்கு ஒப்பிட முடியுமா? ஸ்ரீராமகிருஷ்ணரைச் சரணடைந்தவர்கள் முக்தியடைவார்கள் என்பது உண்மைதான். இதுபற்றி அன்னை ஸ்ரீசாரதாதேவி ஒரு சாதுவிடம் விளக்குகையில், கடைசி மூச்சை விடுகையில், குருதேவர் வந்து அழைத்துப் போவார் என்பதில் ஐயமில்லை; ஆனால், நீ உயிரோடிருக்கும்போதே, சாந்தியில் நிலைபெற்று இருக்க வேண்டுமானால், தவம் செய்ய வேண்டும்; குருதேவரைத் தியானிக் கத்தான் வேண்டும் என அறிவுறுத்தினார். பொதுவாக, தவம் செய்பவனுக்கே இறைவ னின் கருணை கிட்டுகிறது. தவத்தின் மூலம் மனம் தூய்மையாகிறது; அதன் மூலம் கடவுளின் கருணைக்குப் பாத்திரமாவது எளிதாகிறது. அதே சமயம், கடவுளின் கருணை கிட்டுவதற்கு எந்தச் சட்டதிட்டமும் கிடையாது என்பதும் உண்மையே. அவர் நியதிகளுக்கு அப்பாற்பட்டவர்; அருளுவதும் அருளாதிருப்பதும் அவரது விருப்பம். அப்படியென்றால் என்னதான் வழி? செய்தால் அவரை வளைத்துப் போட்டு விட முடியும் என்ற கணக்கு ஏதும் போடாமல், தவம் செய்ய வேண்டும்.அப்படியானால், வாழ்நாள் பூராவும் ஒருவன் தவம் செய்து கொண்டே இருக்க வேண்டுமா? படகோட்டி, பயண தூரம் முழுவதும் துடுப்பு போட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதானா? அப்படியல்ல.

அலை அதிகமாகப் பொங்குகையில், காற்று வேகமாகச் சுழன்றடிக்கையில், படகோட்டி துடுப்பைக் கவனமாகப் போடத்தான் வேண்டும். சற்று நேரம் பொறுத்து, கடல் அமைதியாகும்; காற்று சாதகமாய் வீசும். அப்போது, படகோட்டி பாய்மரத்தைச் சரியாகக் கட்டிவிட்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டு புகைபிடிக்கிறான். படகு, தானே ஒழுங்காகப் பயணிக்கிறது. இப்போது படகோட்டிக்கு, ஓய்வு, அமைதி, ஆனந்தம்தான். அதுபோலவே ஒரு சாதகன், மனதின் கொந்தளிப்புகளையும், ஆசாபாசங்களையும் சமாளிக்கக் கடுந்தவம் செய்கிறான்; மனம் அமைதியாகும்போது தவமும் முடிவுக்கு வருகிறது.ஸ்ரீராமகிருஷ்ணர் ஓர் அவதாரபுருஷராக இருந்தும், அவரே எத்தனை தவம் செய்தார்! எத்தனை வித ஆன்மிகச் சாதனைகள், எத்தனை பஜனை! சாதுசங்கத்தின் அவசியத்தைத் திரும்பத் திரும்ப உபதேசித்த அவர், தாமே சாதுக்களையும் உருவாக்கித் தந்தார். தன் அந்தரங்கச் சீடர்களைப் பூரணத்துவம் அடைந்தவர்களாக ஆக்கித் தந்தார். இறைவனை உருவமுள்ளவராகவும் உருவமற்றவராகவும் காணும் அனுபவத்தை அவர்களுக்கு வழங்கினார். அப்படியிருந்தும், அவர்களை இப்படி கடும் தவத்துக்கு ஏன் உட்படுத்தினார் என்றால், அதற்கு மற்றொரு முக்கிய காரணம், அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக அவர்கள் இருக்க வேண்டும் என்பதால்தான். அவர்களைப் பார்த்துத்தான் பிறரும் சாதனையும் தவமும் செய்யக் கற்றுக் கொள்வார்கள்.குருதேவரின் மறைவுக்குப் பிறகு, தனித்து விடப்பட்ட அந்த இளம்சாதுக்கள், பாராநகர் மடத்தில் எத்தகைய விவேக வைராக்கியத்தோடு தவம் மேற்கொண்டார்கள் என்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேனே.

அவர்கள் இடுப்பில் கோவணம் மட்டும்தான் இருந்தது. நாள் முழுவதும் ஜபத்திலும் தியானத்திலும் மூழ்கிக் கிடப்பார்கள். உடம்பைப் பற்றியோ, உணவைப் பற்றியோ கவலையே படமாட்டார்கள். சில நாட்கள் தொடர்ந்து உண்ண ஒன்றுமே இருக்காது. அவர்களிடம் மொத்தத்தில் உருப்படியாய் இருந்தது ஒரு வேஷ்டியும் ஒரு துண்டும்தான். அவர்களில் யாருக்கு வெளியே போகும் வேலை இருக்கிறதோ, அவர்கள் அதை உடுத்திக் கொண்டு போய் வருவார்கள்.அவர்கள் உலகுக்கே உபதேசிக்கப் பிறந்தவர்கள். ஒரு முறை கண்டவர்கள் என்ற தகுதி அதற்குப் போதாது. பிரம்மஞானத்தில் நிலைபெற்றவர்களாக அவர்கள் உறுதி பெற வேண்டியிருந்தது. அதற்குத்தான் இத்தனை கடின தவம். ப்ரம்மாஸ்மி (நான் பிரம்மமாக இருக்கின்றேன் என்றோ கல்விதம் பிரம்மா (இருப்பதெல்லாம் பிரம்மம் ஒன்றே) என்றோ, வெறுமனே கிளிப்பிள்ளைபோல் வாயால் சொல்லாமல், அதை அனுபவப்பூர்வமாக, எல்லாவற்றிலும் இறைவனைக் கண்டு வணங்கும் நிலையைப் பெறுவதற்குத்தான் இத்தனை கடினமான தவம். மொத்தத்தில், ஆரம்ப நிலையில் கடவுளை அடைவதற்குத் தவம் வேண்டியிருக்கிறது; அடுத்த நிலையில், அனுபூதியில் பெற்றதை நிலைத்த ஆனந்தமாக ஆக்கவும், தாம் பெற்ற ஆனந்தத்தை அடுத்தவர்களுக்கு வழங்கும் தகுதியைப் பெறவும் தவம் அவசியமாகிறது.- தமிழாக்கம்: சி. வரதராஜன்

Leave a comment