சுவாமி விவேகானந்தர் கதைகள் – சமுதாய உணர்வில் போலித்தனம் கூடாது!

1.7/5 - (3 votes)

சமுதாய நலனில் ஒவ்வொருவருக்கும் உண்மையான ஈடுபாடு இருக்க வேண்டும். சமுதாய உணர்வுடன் ஒவ்வொருவரும் நாட்டு நலனுக்குத் தங்களால் இயன்ற தொண்டு செய்ய வேண்டும். சமுதாயத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்று பேசினால் மட்டும் போதுமா? அது செயலிலும் இருக்க வேண்டும் என்பதை, சுவாமி விவேகானந்தர் ஒரு கதை மூலம் சொல்லியிருக்கிறார். அந்தக் கதையை நாம் இப்போது பார்க்கலாமா? அரசன் ஒருவன் இருந்தான். அவனுடைய அரசவையில் அதிகாரிகள் பலர் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், நான்தான் அரசனிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கிறேன். நான் அரசனுக்காக என் உயிரையும் கொடுப்பதற்குத் தயாராக இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு நாள் அரசவைக்கு துறவி ஒருவர் வந்தார். அரசன் அவரிடம், இந்த அளவுக்கு ஈடுபாடு உடைய அதிகாரிகளைப் பெற்ற அரசன் என்னைப்போல் வேறு யாரும் இருக்க இயலாது என்று கூறினான். துறவி புன்சிரிப்புடன், நீ சொல்வதை நான் நம்பவில்லை என்றார். அரசன், நீங்கள் வேண்டுமானால் அதைச் சோதித்துக்கொள்ளலாம் என்றான். சிறிய ஒரு சோதனை வைத்தார் துறவி – அரசனின் ஆயுளும் ஆட்சியும் பல்லாண்டுகள் நீடிப்பதற்கு, நான் பெரிய ஒரு வேள்வி செய்யப் போகிறேன். அதற்குத் தேவையான பாலுக்காக ஓர் அண்டா வைக்கப்படும். அதில் அதிகாரிகள் ஒவ்வொருவரும் இரவில் ஒரு குடம் பால் ஊற்ற வேண்டும் என்று துறவி கூறினார். அரசன் புன்முறுவலுடன், இதுதானா சோதனை? என்று இகழ்ச்சியாகக் கேட்டான்.

பின்னர் அரசன், அதிகாரிகளை அழைத்து நடக்க இருப்பதைக் கூறினான். அந்த யோசனைக்கு அதிகாரிகள் அனைவரும் தங்களின் மனபூர்வமான சம்மதத்தைத் தெரிவித்தனர். நள்ளிரவில் எல்லோரும் அந்த அண்டாவின் அருகில் சென்று, தங்கள் குடங்களில் இருந்ததை அதற்குள் ஊற்றினார்கள். மறுநாள் காலையில் பார்த்தபோது அண்டா நிறையத் தண்ணீர்தான் இருந்தது! திடுக்கிட்ட அரசன் அதிகாரிகளை அழைத்து விசாரித்தான். அப்போது, எல்லோரும் பாலைத்தான் ஊற்றப் போகிறார்கள். நான் ஒருவன் மட்டும் அதில் தண்ணீர் ஊற்றினால், அது மற்றவர்களுக்கு எப்படித் தெரியப்போகிறது? என்று ஒவ்வொருவரும் நினைத்து, எல்லோரும் தண்ணீரையே ஊற்றினார்கள் என்பது தெரிய வந்தது. துரதிர்ஷ்டவசமாக நம்மில் பலருக்கும் இதே எண்ணம்தான் இருக்கிறது. இந்தக் கதையில் வரும் அதிகாரிகள் செய்தது போலவே, நாமும் நம் பங்குக்கு உரிய வேலையைச் செய்து வருகிறோம். உலகத்தில் சமத்துவக் கருத்து நிறைந்திருக்கும்போது, நான் ஒருவன் மட்டும் கொண்டாடும் தனிச்சலுகை யாருக்குத் தெரியப் போகிறது? என்கிறார் ஒருவர். இப்படித்தான் பணக்காரர்களும் கொடுங்கோலர்களும் சொல்கிறார்கள். எல்லா மக்களையும் சமமாக நினைக்கும் ஞானத்தைப் பெறுவதற்கு நாம் முயற்சி செய்வோம்!

Leave a comment