சுவாமி விவேகானந்தர் கதைகள் – எடுத்த காரியம் யாவினும் வெற்றி!

3.4/5 - (5 votes)

நரேந்திரன் பதினோரு வயது சிறுவன். தலைமைப் பண்பு அவனிடம் இயல்பாகவே இருந்தது. எனவே தன் வயதுடைய சிறுவர்களுக்கு எப்போதும் அவன்தான் தலைவனாக இருந்தான். கொல்கத்தாவுக்கு சிராபிஸ் என்ற ஒரு போர்க்கப்பல் வந்தது. அதை மக்கள் சென்று பார்த்தார்கள். நரேந்திரனும் அவனது நண்பர்களும், அந்தப் போர்க்கப்பலைத் தாங்களும் சென்று பார்க்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினார்கள். நரேந்திரன் விசாரித்தபோது, சிராபீஸ் கப்பலைப் பார்க்க வேண்டுமானால், அதற்கு ஆங்கிலேய அதிகாரி ஒருவரிடம் முன்அனுமதி சீட்டு பெற வேண்டும் என்று தெரிந்தது. எனவே நரேந்திரன் உரிய விண்ணப்படிவத்துடன், ஆங்கிலேய அதிகாரியைச் சந்திப்பதற்குச் சென்றான். ஆங்கிலேய அதிகாரியின் அலுவலகம் ஒரு கட்டிடத்தின் மாடியில் இருந்தது. அவரைச் சந்திக்க வேண்டும் என்றால், மாடிப்படிகளில் ஏறிச் செல்ல வேண்டும்.

மாடிப்படி அருகில் காவல்காரன் ஒருவன் நின்றிருந்தான். அங்கு அவன் அனுமதித்தால்தான், மக்கள் மாடிப்படியில் ஏறிச் சென்று ஆங்கிலேய அதிகாரியைச் சந்திக்க முடியும். எனவே காவல்காரனிடம் நரேந்திரன், சிராபீஸ் போர்க்கப்பலை நானும் என் நண்பர்களும் சென்று பார்க்க விரும்புகிறோம். அதற்கு ஆங்கிலேய அதிகாரியைச் சந்தித்து அனுமதி சீட்டு பெறுவதற்காக வந்திருக்கிறேன் என்று தெரிவித்துக்கொண்டான். காவல்காரன், நரேந்திரன் சிறுவன் என்பதால், அவனை மாடிப்படி ஏறிச் செல்வதற்கே அனுமதிக்கவில்லை. காவல்காரனின் அனுமதியில்லாமல் மாடிப்படிகளில் ஏறிச் செல்லவும் முடியாது, ஆங்கிலேய அதிகாரியைச் சந்திக்கவும் முடியாது. இப்போது என்ன செய்வது? என்று யோசித்தான் நரேந்திரன். சரி… மாடியில் இருக்கும் ஆங்கிலேய அதிகாரியைச் சந்திப்பதற்கு, இங்கு வேறு ஏதாவது வழி இருக்கிறதா? பார்க்கலாம் என்ற எண்ணத்தில் அவன் கட்டிடத்தைச் சுற்றி வந்தான். நரேந்திரனின் எண்ணம் வீண் போகவில்லை. கட்டிடத்தின் பின்னால், பொதுமக்களின் பார்வை படாத இடத்தில் சிறிய ஒரு படிக்கட்டு இருந்தது. அதில் நரேந்திரன் ஏறிச் சென்று, அங்கிலேய அதிகாரியைச் சந்தித்து தன் வேண்டுகோளைத் தெரிவித்தான்.

ஆங்கிலேய அதிகாரி நரேந்திரன் எதிர்பார்த்தபடியே, அவனும் அவனுடைய நண்பர்களும் சிரபீஸ் போர்க்கப்பலைச் சென்று பார்ப்பதற்கு அனுமதிசீட்டு கொடுத்தார். நரேந்திரன் அங்கு வந்த வேலை நல்லவிதமாக முடிந்தது. பிறகு நரேந்திரன், காவல்காரன் தன்னைத் தடுத்த முன்படிக்கட்டு வழியாகத் திரும்பி வந்தான். நரேந்திரனைப் பார்த்த காவல்காரன், இந்தச் சிறுவன் மாடிக்கு எப்படிச் சென்றான்? என்று நினைத்தான். எனவே அவன் நரேந்திரனிடம், நீ எப்படி மாடிக்குச் சென்றாய்? என்று ஆச்சரியத்துடன் வினவினான். அதற்கு நரேந்திரன், நான் ஒரு மந்திரவாதி! என்று புன்சிரிப்புடன் பதிலளித்தான். இந்த நரேந்திரன் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் ஆனார். அவர் உலகின் பல நாடுகளுக்குச் சென்று, இந்தியாவின் பெருமையை நிலைநிறுத்தினார். எல்லையற்ற வலிமையும், எல்லையற்ற ஞானமும், வெல்ல முடியாத ஆற்றலும் உனக்குள்ளேயே குடிகொண்டிருப்பதை நீ உணர முடிந்தால் – நீ அந்த ஆற்றலை வெளியே கொண்டுவர முடியுமானால் – நீயும் என்னைப்போல் ஆக முடியும் என்று சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார்.

Leave a comment