Category: முல்லா கதைகள்

முல்லா கதைகள் – கோழியால் வந்த குழப்பம்

ஒர் ஊரில் ஒரு பள்ளி வாசல் இருந்தது. அங்கே தொழுகை நடந்து கொண்டிருந்தது. முல்லா அந்த வழிபாட்டை முன்னின்று நடத்திக்கொண்டிருந்தார். கருணையும் இரக்கமும் மிக்க ஆசிரியர்களுக்கெல்லாம் ஆசிரியரான அல்லாவின் திருப்பெயரால்…. இந்த சமயத்தில் குருநானக் அங்கு வந்தார் அவர் முகத்தில் புன் முறுவல் முல்லாவுக்கு கோபம் வந்து விட்டது. ஏன் சிரிக்கிறாய்? நண்பா! நீ செய்வது தொழுகை அல்ல….அதனால் சிரிக்கிறேன் என்ன சொல்லுகிறாய்? தொழுகை இல்லையா? ஆமாம் உன்னுள்ளே பிரார்த்தனை என்பதே இல்லை முல்லாவின் கோபம் இன்னும் அதிகமாயிற்று. நேராக ஒரு நீதிபதியின் முன்னால் போய் நின்றார். நீதிபதி அவர்களே! இந்த ஆள் நாங்கள் தொழுகிற வேளையில் பள்ளிவாசலுக்குள் நுழைந்தார் அதுமட்டுமல்ல வழிபாடு செய்கிற எங்களைப் பார்த்துச் சிரிக்கிறார். இவருக்கு நீங்கள் மரணதண்டனை வழங்க வேண்டும்.

நீதிபதி குருநானக் பக்கம் திரும்பினார். நிங்கள் சிரித்தது உண்மையா? உண்மைதான் ஏன் சிரித்தீர்கள்?அவர் செய்தது பிரார்த்தனை அல்ல….அதனால் சிரித்தேன் அப்படியா ஆமாம்…அவரை நான் சில கேள்விகள் கேட்க தாங்கள் அனுமதிக்க வேண்டும். கேளுங்கள்

முல்லா வந்து முன்னால் நின்றார். அவர் கையில் ஒரு புனித குர் ஆனைக்கொண்டு வந்து கொடுங்கள் என்றார் குருநானக் கொடுத்தார்கள். இப்போது சொல்லுங்கள்….. உங்கள் உதடுகள் அல்லாவை உச்சரித்த வேளையில் உங்கள் மனம் வீட்டிலே விட்டு வந்த கோழிகளை நினைத்ததா? இல்லையா? முல்லா கையில் குர் ஆன் இருந்தது. உண்மைதான் என்று முல்லா ஒப்புக் கொண்டார். குருநானக் விடப்பட்டார். குருநானக் முல்லாவை விடவில்லை. நீதிபதி சொன்னார் : முல்லா அவர்களே ! பள்ளி வாசலுக்குப் போய் ஏமாற்றுவதை விட அங்கே போகாமல் இருந்து விடுவது மேல். அங்கே ஒரு வேடதாரியாக இருக்காதீர்கள்.

கருணைமயமான இறைவனது திருநாமத்தைச் சொல்லும்போது கோழியை நினைக்காதீர்கள் உள்ளே இருக்கிற ஒன்றைத் தேடிச் செல்கிற போது வெளியே இருக்கிற ஒன்று நினைவுக்கு வரலாமா?

முல்லாவின் கதைகள் – முல்லாவும் மூன்று அறிஞர்களும்

நம்ம முல்லா நஸ்ருதீன் இருந்த நாட்டில் நிறைய கல்வி கற்ற அறிஞர்கள் இருந்தார்கள், அவர்களோடு மற்ற நாட்டு அறிஞர்கள் போட்டி போடுவார்கள், அதனால் மக்களுக்கு நல்ல நல்ல விசயங்கள் தெரிய வரும். சில நேரங்களில் போட்டி கடுமையாக இருக்கும், வெற்றி பெற்றவருக்கு பட்டமும், பணமும் கிடைக்கும்.

ஒருமுறை மூன்று மெத்த படித்தவர்கள், எல்லாமே தெரிந்தவர்கள் என்று மனதில் நினைத்துக் கொண்டு, அடுத்தவர்கள் பதில் சொல்ல முடியாத அளவுக்கு கேள்வி கேட்பார்கள். அவர்கள் போட்டி அழைத்தாலே, ஏன் வீணாக அவமானப்பட வேண்டும் என்று நினைத்து நிறைய பேர் போட்டியை புறக்கணிப்பார்கள்.

அப்படி பட்ட அந்த மூன்று பேரும் நம்ம முல்லா இருந்த நாட்டிற்கு வந்து அரசனிடம் எங்களுடன் போட்டிப் போட உங்கள் நாட்டில் புத்திசாலிகள் இருந்தால் வரச் சொல்லுங்க என்றார். உடனே அரசர் தன்னுடைய அரண்மனை அறிஞர்களைப் பார்க்க அவர்களோ தலையை தொங்கப் போட்டு விட்டார்கள், யாரும் போட்டிப் போட விருப்பம் தெரிவிக்கவில்லை,

உடனே அந்த மூன்று பேரும், சப்தமாக சிரித்து, உங்கள் நாட்டில் அனைவரும் முட்டாள்களா? எங்களுடன் போட்டிப்போட யாருமே இல்லையா? ஹா ஹா, அப்படியே போட்டி போட்டு எங்களை வென்றால் நாங்கள் இந்த நாட்டுக்கு அடிமை, இல்லை என்றால் நீங்கள் அனைவரும் எங்களுக்கு அடிமை, போட்டிக்கு தயாரா? என்று கிண்டலாக கேட்க, அரசனுக்கு அவமானம் தாங்க முடியவில்லை.

நாளை நாட்டின் நடுவில் இருக்கும் ஒரு இடத்தில் போட்டி நடைபெறும், யார் வேண்டும் என்றாலும் கலந்துக் கொள்ளலாம், இந்த மூன்று பேரையும் வெற்றிக் கண்டால் நிறைய பரிசுகள் கிடைக்கும், இல்லை என்றால் கடுமையான தண்டனை என்று அறிவிப்பு செய்தார். அன்றைய இரவே புத்திசாலிகள் என்று சொல்லித் திரிந்த நிறைய பேர் ஊரை விட்டு போய் விட்டார்கள்.

அடுத்த நாள் காலையில் அங்கே நிறைய மக்கள் கூடி இருந்தார்கள், அவர்களோடு போட்டி போட்டு தோற்றவர்கள் தலை குனிந்து நின்றுக் கொண்டிருந்தார்கள். யாருமே அவர்களை வெற்றிக் கொள்ள முடியவில்லை என்ற ஆத்திரத்தில் அரசன் அமர்ந்திருந்தான்.

அந்த பக்கமாக நம்ம முல்லா பக்கத்து நாட்டில் வியாபாரம் செய்து முடித்து தன்னுடைய கழுதையுடன் ஊருக்கு வந்தார், என்னடா இங்கே இவ்வளவு கூட்டமாக இருக்கிறதே, என்று வேடிக்கை பார்த்தவருக்கு பயங்கர அதிர்ச்சி. அவரது மச்சான் வேறு கையை கட்டி தலை குனிந்து நின்றுக் கொண்டிருந்தான்.

மக்களிடம் என்ன ஏது என்று கேட்டு தெரிந்துக் கொண்டார், மச்சானின் தொந்தரவு இனி இருக்காது என்று நினைத்தார். சிறிது நேரத்திலேயே தன் நாட்டு மக்கள் யாருமே பதில் சொல்லவில்லை, அப்படி செய்தால் தன் நாட்டிற்கு பெருத்த அவமானம் ஆகுமே என்று நினைத்ததோடு இல்லாமல் இந்த அறிஞர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்.

தன்னுடைய கழுதையோடு கூட்டத்தின் நடுவே சென்று, அரசனை பார்த்து வணக்கம் சொல்லிவிட்டு, தான் போட்டியிடப் போவதாக சொன்னார்.

அரசனும் சரி என்றார், ஆனால் அந்த மூன்று பேரும் முல்லாவின் ஆடை, கழுதையோடு நின்ற நிலையை பார்த்து ஏளனமாக சிரித்து, உன்னிடம் நாங்கள் ஆளுக்கு ஒரு கேள்வி கேட்போம், நீ சொல்லும் பதிலை நாங்க சரி, தவறு என்று சொல்வோம், அப்படி நாங்க பதில் சொல்லவில்லை என்றால் உனக்கும் இந்த நாட்டுக்கும் அடிமை. நீ தோற்றால் இந்த நாடும், மற்றவர்களும், நீயும் வாழ்நாள் முழுவதும் எங்களுக்கு அடிமை.

முல்லா: அது எல்லாம் சரி, கேள்வியை கேளுங்கப்பா, சீக்கிரம் வீட்டுக்கு போகணும்?

முதல் அறிஞர் முல்லாவிடம், “இந்த உலகின் மைய இடம் எது?” என்று கேட்டார்.

அதற்கு முல்லா, “”என் கழுதை நிற்குமிடம் தான் உலகின் மையம்,” என்றார்.

அந்த அறிஞர், “அதை உண்மை என்று நிரூபியுங்கள் பார்க்கலாம்,” என்றார்.

உடனே முல்லா, “அது உங்க வேலை, நான் சொன்னது தவறு என்று நிரூபியுங்கள். உலகை அளந்து பாருங்கள். அப்போது என் கழுதை நிற்குமிடம் உலகின் மையம் என்று தெரியும்,” என்றார்.

முதல் அறிஞர் என்ன சொல்வது என்று தெரியாமல் பேசாமல் இருந்தார்.

அடுத்து இரண்டாம் அறிஞர், “ஆகாயத்தில் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன?” என்று கேட்டார்.

அதற்கு முல்லா, “என் கழுதையின் உடலில் எத்தனை உரோமங்கள் இருக்கின்றனவோ அத்தனை நட்சத்திரங்கள் ஆகாயத்தில் உள்ளன. வேண்டுமானால் எண்ணிப் பாருங்கள்,” என்றார்.

இரண்டாம் அறிஞர் பேசாமல் இருந்துவிட்டார்.

மூன்றாவது அறிஞர் முல்லாவிடம், “மக்கள் கடைபிடிப்பதற்காகச் சான்றோர்கள் வகுத்த நெறிகள் எவ்வளவு?” என்றார்.

அதற்கு முல்லா, “அறிஞர்களே உங்கள் மூவருடைய தாடியிலும் எவ்வளவு உரோமங்கள் உண்டோ அத்தனை நெறிகளைச் சான்றோர்கள் மக்களுக்காக வகுத்துள்ளனர்.

“இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் சொல்லுங்கள். உங்கள் மூவருடைய தாடியிலும் உள்ள உரோமங்களைப் பிடுங்கி எண்ணிக்கை சரியானது என்று நிரூபிக்கிறேன்,” என்றார்.

இவ்வாறு முல்லா கூறியதும், “வேண்டாம், வேண்டாம். நீங்கள் சொன்ன பதிலை ஒப்புக் கொள்கிறோம்” என்று கூறி அந்த அறிஞர்கள் தாங்கள் தோற்றுப் போனதை ஒப்புக் கொண்டு தங்கள் பரிசுகளை முல்லாவிடம் சமர்ப்பித்தனர், தங்களை அந்த நாட்டின் அடிமை என்று அறிவித்தார்கள்.

போட்டியில் வென்றதால் அரசன் முல்லாவை கட்டிப்பிடித்து, நன்றி சொன்னார். என்ன கேட்டாலும் கொடுக்கத் தயார் என்றார், உடனே “அந்த மூன்று அறிஞர்களையும் தங்கள் நாட்டிற்கு போக அனுமதிக்க வேண்டும், இனிமேல் அவர்கள் இது போல் போட்டியிட மாட்டார்கள்” என்றார்.

அந்த மூவரும் முல்லாவுக்கு நன்றி சொல்லி தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடி போனார்கள். முல்லாவின் புகழ் மேலும் பரவியது.

முல்லாவின் கதைகள் – குழப்பவாதிகள்

முல்லா நஸ்ருதீன் மன்னருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார், அது அரசுசவையில் இருந்த பலருக்கு பிடிக்கவில்லை.

ஒருமுறை முல்லா ஒரு நண்பரின் திருமணத்திற்கு சென்ற போது பேச்சுவாக்கில் நாட்டில் உள்ள அறிஞர்கள் எல்லாம் குழப்பவாதிகள், எதையுமே உறுதியாக, தீர்மானமாகக் கூற இயலாதவர்கள் என்று சொன்னார்.

அதை அறிந்த முல்லாவின் எதிரிகள் மன்னரிடம் போய் “மன்னர் நீங்க அறிஞர்களை வைத்திருப்பதற்கு பதிலாக குழப்பவாதிகளை வைத்திருப்பதாகவும், சரியான முடிவு எடுக்கத் தெரியாமல் இருக்கும் அறிஞர்கள் பேச்சு கேட்பதாகவும் முல்லா சொல்லிக் கொண்டு திரிக்கிறார் என்று அரசரிடம் முல்லாவைப் பிடிக்காதவர்கள் கூறித் தூண்டி விட்டார்கள்.

உண்மை நிலையை அறிய விரும்பிய அரசர், முல்லாவை சபைக்கு வரவழைத்தார்.

அத்துடன், தத்துவ மேதைகள், மார்க்க ஞானிகள், சட்ட நிபுணர்கள், அறிவுசால் அமைச்சர்கள் அனைவரையுமே கூட்டினார். பிறகு முல்லாவை நோக்கி, ” இவர்கள் எலலாம் குழப்பவாதிகள் என்று கூறினீர்களாமே?…ஏன் அப்படிக் கூறினீர்கள் ? இவர்கள் குழப்பவாதிகள் என்று உம்மால் நிரூபிக்க முடியுமா?” என்று கேட்டார்.

இது என்னடா வம்பா போச்சு, சும்மா வாய் பேச்சுக்கு சொன்னதை வைத்து என்னை மாட்டி விடப் பார்க்கிறீங்களா, அப்போ நீங்க குழப்பவாதிகள் தான், அதை நிறுபித்தால் ஆச்சுது என்று நினைத்து “அரசே என்னால் நிறுபிக்க முடியும்” என்று கூறிய முல்லா, அனைவரிடமும் ஆளுக்கொரு தாளைக் கொடுத்தார்.

பின்னர் அவர்களிடம், ” அறிஞர் பெருமக்களே…நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்கப் போகிறேன். அதற்குரிய பதிலை, இந்தத் தாளில் நீங்கள் எழுதிக் கொடுக்கவேண்டும்” என்றார்.

பின்னர், அவர்களிடம் ஒரு தாளை கொடுத்தார், அதில் , ” ரொட்டி என்றால் என்ன? ” என்று கேட்டார்.

அனைவரும் பதிலைத் தாளில் எழுதி அரசரிடம் கொடுத்தார்கள். அரசர் படிக்க ஆரம்பித்தார்.

ஒருவர்- ரொட்டி என்பது சத்துள்ள பண்டம் என்று எழுதியிருந்தார்.

இரண்டாமவர் – ரொட்டி என்பது ஒரு உணவு என்று குறிப்பிட்டிருந்தார்.

மூன்றாமவர் – இறைவன் கொடுத்த கொடையே ரொட்டி.

நான்காமவர் – ரொட்டி என்பது வேகவைத்த மாவுப் பொருள்.

ஐந்தமவர் – ரொட்டி என்பது மாவும் நீரும் கலந்த கலப்பு.

ஆறாமவர் – அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப சுவையும் வடிவும் பெறுவது ரொட்டி

ஏழாமவர் – ரொட்டி என்பதற்கு சரியான பொருள் யாருக்குமே தெரியாது……என்று குறிப்பிட்டு எழுதியிருந்ததை அரசர் படித்தார்.

எல்லா பதில்களையும் அரசர் படித்து முடிக்கும்வரை பொறுமையுடம் காத்திருந்த முல்லா, ” அரசே ! …ரொட்டி என்பது என்ன? என்ற எனது சாதாரன கேள்விக்கு, இவர்கள் அனைவரும் பலவிதமான பதில்களைக் கொடுத்துள்ளார்கள்.

யாருடைய பதிலும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போகவில்லை பார்த்தீர்களா?

இதனால்தான் நம் நாட்டில் உள்ள அறிஞர்கள் குழப்பவாதிகள் என்றேன்” என்றார்.

அரசர் முல்லாவில் அறிவாற்றலை வியந்து அவர்மீது இருந்த குற்றச் சாட்டினைத் தள்ளுபடி செய்தார். அரசவையில் கூடியிருந்த அனைவரும் முல்லாவின் திறமையை பாராட்டினார்கள்.

முல்லாவின் கதைகள் – கீழே விழுந்த சட்டை

ஒரு நாள் முல்லா தமது மாடியில் ஏதோ வேலையாக இருந்தார். கீழே சமையலறையில் அவர் மனைவி சமையல் செய்து கொண்டிருந்தார்.

மாடியிலிருந்த முல்லா திடீரெனக் கால் தவறிக் கீழே விழுந்து விட்டார்.

தடால் என்ற சப்தத்துடன் எதோ ஒன்று கீழே விழுந்த சப்தத்தைக் கேட்ட மனைவி திடுக்கிட்டு அது என்ன சப்தம் என்று கேட்டாள்.

கீழே விழுந்த முல்லா தன் உடம்பில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டி விட்டவாறு ஒள்றுமில்லை மாடியிலிருந்து என் சட்டை கீழே விழுந்து விட்டது என்றார்.

ஒரு சட்டை விழுந்து விட்டதனாலேயா அவ்வளவு பெரிய சத்தம் கேட்டது? என்று மனைவி ஆச்சரியத்துடன் கேட்டாள்.

சட்டைக்குள் நான் இருந்தேன் என்று கூறி முல்லா கமாளித்தார். அவர் மனைவிக்கு அழுவதா சிரிப்பதா என்றே தோன்றவில்லை.

முல்லாவின் கதைகள் – கல்விமானுக்கு எழுந்த சந்தேகம்

ஒரு நாள் அயல்நாட்டில் இருந்து வந்த இரண்டு கல்விமான்கள் முல்லாவைச் சந்தித்து அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அந்தக் கல்விமான்களில் ஒருவர் முல்லாவை நோக்கி ” முல்லா அவர்களே! உலகத்தில் பொய்யைக் காட்டிலும் உண்மையின் மதிப்பு அதிகமாக இருக்கிறது, அது ஏன்?” என ஒரு சந்தேகத்தைக் கேட்டார்.

நானும் உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன் உலகத்தின் இரும்பைவிடத் தங்கத்துக்கு அதிக மதிப்பு இருக்கிறதே. அது ஏன்? என்று பதில் கேள்வி கேட்டார் முல்லா.

உலகத்தில் இரும்பு தாரளமாக எங்கம் கிடைக்கிறது. அதனால் இரும்பின் மதிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. தங்கமோ உலகத்தில் மிகவும் அரிதாகத்தான் எங்காவது ஒரிடத்தில் கிடைக்கிறது. அதனால்தான் தங்கத்தின் மதிப்பு அதிகமாக இருக்கிறது என்றார் கல்விமான்.

பொய்க்கும் உண்மைக்கும் இந்த உதாரணமும் பொருந்தும். பொய் உலகத்தில் யாரிடமும் தாராளமாக் கிடைக்கிறது. ஆனால் உண்மை பேசுபவர்களைக் கண்டுடிபிடிப்பதுதான் அரிதாக இருக்கிறது. இவ்வாறு உண்மை எளிதில் கிடைக்காத பொருளாக இருப்பதால்தான் அதற்கு அதிகமான மதிப்பு இருக்கிறது என்று முல்லா பதில் சொன்னார்.

அந்த விளக்கத்தைக் கேட்டு கல்விமான்கள் இருவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

முல்லாவின் கதைகள் – புதுப்பானை

முல்லாவின் வீட்டில் சிறுவன் ஒருவன் வேலை செய்து கொண்டிருந்தான். முல்லா ஒருநாள் புதுப்பானை ஒன்றை வாங்கி வந்தார்.

” பையா! இந்தப் பானையை எடுத்து கொண்டு கிணற்றுக்குப் போய் நிறைய நீர் கொண்டு வா”  எனக் கூறினார்.

பையன் பானையை எடுத்துக் கொண்டு கிணற்றுக்குப் புறப்பட்டான்.

முல்லா சற்று தூரம் சென்ற பையனைக் கூப்பிட்டார்.

பையன் திரும்பி வந்து, ” என்ன எஜமானே” என்று கேட்டான்.

இந்தப் பானை புத்தம் புதியது. அதிகப் பணம் கொடுத்து வாங்கியிருக்கிறேன். இதை நீ அஜாக்கிரதையாகக் கையாண்டு உடைத்தாயானால் அடி கொடுப்பேன் என்று கூறிய முல்லா பையன் முதுகில் ஒங்கி அறைந்தார்.

பையன் திடுக்கிட்டுத் திரும்பி, ” எஜமானே, பானையை உடைத்தால்தானே அடி கொடுப்பேன் என்று கூறினீர்கள். நான் பானையை உடைக்கவில்லையே என்னை எதற்காக அடித்தீர்கள்?” என்று கேட்டான்.

அதற்கு முல்லா, ” பையா! பானையை நீ உடைத்து விட்ட பிறகு உன்னை அடித்து என்ன பயன் உடைந்து போன பானை திரும்பியா வரும்? அதற்காகத்தான் எச்சரிக்கை அடியாக முன்னதாகவே அடித்தேன். இந்த அடியை நினைவில் வைத்தக் கொண்டு நீ பானை விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பாய் அல்லவா?” என்று பதிலளித்தார்.

முல்லாவின் கதைகள் – பதிலுக்குப் பதில்

ஒரு நாள் முல்லா ஒரு துணிக் கடைக்குச் சென்றார். அங்கு தலைப்பாகைகளும் விற்கப்பட்டன. தமக்கு ஒரு தலைப்பாகை வாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் முல்லா அங்கு சென்றார். அழகான ஒரு தலைப்பாகையைத் தேர்ந்தெடுத்து விலை பேசினார்.

பிறகு தலைப்பாகையைத் தலையில் அணிந்து கொண்டார்.

அந்தக் கடையில் அழகான சால்வைகளும் விற்கப்படுவதை முல்லா கண்டார். தலைப்பாகைக்கு பதிலாக சால்வையை வாங்கி விடலாம் என்று அவருக்குத் தோன்றியது. அதனால் அவர் கடைக்காரனைப் பார்த்து இந்தப் தலைப்பாகைகை;குப் பதிலாக சால்வையை வாங்கிக் கொள்கிறேன். இரண்டின் விலையும் ஒன்றாகத்தானே இருக்கிறது? என்றார்.

உங்கள் விருப்பம்போல எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார் கடைக்காரர். முல்லா தலைப்பாகையை கழற்றிக் கொடுத்து விட்டு சால்வையை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ஐயா, நீங்கள் வாங்கிய சால்வைக்குப் பணம் கொடுக்கவில்லையே என்று கடைக்காரர் கேட்டார். நான் ஏன் பணம் கொடுக்க வேண்டும். தலைப்பாகைக்குப் பதிலாகத்தானே சால்வையை வாங்கிக் கொண்டேன் என்றார் முல்லா.

அப்படியானால் தலைபாகைக்கு பணம் கொடுங்கள் என்றார் கடைக்காரர். தலைப்பாகைக்கு ஏன் பணம் தரவேண்டும்? அதைத்தான் உங்களிடம் திருப்பி கொடுத்துவிட்டேனே? என்று கூறிவாறு கடையை விட்டுக் கம்பீரமாக வெளியே நடந்தார்.

கடைக்காரருக்கு ஒன்றுமே விளங்கவில்லை. அவருடைய மூளை குழம்பி விட்டது.

முல்லாவின் கதைகள் – சூரியனா-சந்திரனா

அறிஞர்கள் கூடியிருந்த ஒரு சபையில் மிகவும் பயனுடையது எது சூரியனா அல்லது சந்திரனா? என்பது குறித்துப் பட்டிமன்றம் ஒன்று நடந்து கொண்டிருந்தது.

அங்கே பேசியவர்கள் பெரும்பான்மையினர் சந்திரனைவிட சூரியனால்தான் உலகத்திற்கு அதிகப் பயன் உண்டு என்ற கருத்தையே வலியுறுத்திப் பேசினர்.

அப்போது பேசியவர்களை நையாண்டி செய்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்று முல்லாவுக்குத் தோன்றியது.

அவர் உடனே எழுந்து ” அறிஞர் பெருமக்களே, இங்கே நடந்த பட்டிமன்றம் தொடர்பாக எனது கருத்தைக் கூறலாமா?” என்று கேட்டார்.

இது பொதுமன்றம், இங்கு யாரும் தங்கள் கருத்தினை எந்தவிதத் தடையுன்றிக் கூறலாம். முல்லா அவர்களே உங்கள் கருத்தைக் கூறுங்கள் என்று அறிஞர் பெருமக்கள் கேட்டுக் கொண்டனர். சூரியனைவிடச் சந்திரனால்தான் உலத்திற்கு அதிகமான பயன் கிடைக்கிறது என்று நான் கருதுகிறேன் என்றார் முல்லா.

அது எவ்வாறு விளக்குங்கள் என்று அறிஞர்கள் கேட்டனர்.

பகலில் நமக்கு இயற்கையாக வெளிச்சம் இருக்கிறது. அதனால் சூரியனுடைய உதவி நமக்குத் தேவையே இல்லை. இரவில் இருளாக இருக்கிறது. சந்திரன் இருளை அகற்றி நமக்கத் தேவையான ஒளியை இரவிலே அளிக்கிறது. அதனால் சந்திரன் தான் நமக்கு அதிகப் பயனை அளிக்கின்றது என்றார் முல்லா.

முல்லா தங்களை நையாண்டி செய்கிறார் என்பதை உணர்ந்து அறிஞர்கள் சிரித்து மகிழ்ந்தார்கள்.

முல்லாவின் கதைகள் – கழுதையால் கிடைத்த பாடம்

ஒருநாள் முல்லாவின் நண்பர் ஒருவர் முல்லாவிடம் வந்தார்.

” முல்லா அவர்களே! உங்களுடைய கழுதையை எனக்கு இரண்டு நாட்களுக்கு தயவுசெய்து இரவலாகத் தாருங்கள் இரண்டு நாட்கள் கழிந்ததும் திருப்பி தந்துவிடுகிறேன் ” என்றார் நண்பர். அந்த நண்பர் முன்பும் இரண்டொரு தடவை கழுதையை இரவல் வாங்கிச் சென்றதுண்டு. அப்பொழுதெல்லாம் சொன்ன நாட்களில் அவர் கழுதையைத் தரவில்லை. தவிரவும் கழதைக்கு சரியான உணவளிக்காமலும் விட்டிருந்தார்.

அதனால் அவருக்குக் கழுதையை இரவல் தரக்கூடாது என்று முல்லா தீர்மானித்து விட்டார். நண்பரே! என் கழுதை இப்போது வீட்டில் இல்லை. அதை வேறு ஒருவர் இரவலாகக் கொண்டு சென்றிருக்கிறார் என்று முல்லா கூறினார்.

நண்பர் அவரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட சமயம் முல்லாவின் வீட்டுக் கொல்லைப் புறத்தில் கழுதை கத்தும் குரல் கேட்டது.

” முல்லா அவர்களே கழுதை வீட்டில்தான் இருக்கிறது போலிருக்கிறதே! யாரோ இரவலாகக்கொண்டு சென்றதாகக் கூறினீர்களே” என்ற நண்பர் வியப்புடன் கேட்டார். முல்லாவுக்குக் கோபம் வந்த விட்டது.

” நான் சொன்ன சொல்லை நீர் நம்பவில்லை. ஒரு கழுதையின் சொல்லைத்தான் நம்புகிறீர். ஏன் மீது நம்பிக்கை இல்லாத ஒருவருக்குக் கழுதையை இரவல் தரக்கூடாது என்பதற்காகத்தான் வேறு ஒருவர் அதைக் கொண்டு சென்றார் எனச் சொன்னேன் ” என்றார்.

நண்பர் அவமானமடைந்து அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார்.

முல்லாவின் கதைகள் – முல்லா அணைத்த நெருப்பு

ஒரு தடவை முல்லா வியாபார விஷயமாக வெளியூர் சென்றிருந்தார்

வியாபார அலுவல்கள் முடிந்து பிறகு அன்று இரவுப் பொழுதைக் கழிப்பதற்காக ஒரு விடுதியில் தங்கினார். மிகவும் சாதாரணமாக உடையணிந்திருந்த முல்லாவை விடுதி வேலைக்காரர்கள் கொஞ்சமும் மதிக்கவில்லை. சரியானபடி உபசரிக்கவில்லை.

இரவு திடீரென அவருக்குத் தண்ணீர் தாகம் எடுத்தது.

வேலைக்காரர்களைக் கூப்பிட்டு தமக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். வேலைக்காரர்களோ அவரைக் கொஞ்சமும் லட்சியம் செய்யவில்லை. கும்பலாக அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர்.

முல்லாவுக்கோ நாவறட்சி அதிகமாக இருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார். அவருக்கு யோசனையொன்று தோன்றியது.

திடீரென அவர் ” நெருப்பு! – நெருப்பு! நெருப்பு பற்றிக் கொண்டு விட்டது” எனக் கூக்குரல் போட்டார்.

வேலைக்காரர்கள் பதறியடித்துக் கொண்டு ஆளுக்கு ஒரு குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒடி வந்தார்கள்.

முல்லாவைப் பார்த்து ” எங்கே தீப்பற்றிக் கொண்டது?” என்று பரபரப்புடன் கேட்டார்கள். முல்லா சாவதானமாக ஒரு குவளையை எடுத்து அவர்கள் கொண்டு வந்திருந்த குடம் ஒன்றிலிருந்து நீரை எடுத்து வயிறாரக் குடித்தார். அவர் தாகம் அடங்கியது.

” நெருப்பு பற்றிக் கொண்டதாகச் சொன்னீரே எங்கே?” என்று வேலைக்காரர்கள் கேட்டார்கள். நெருப்பு என் வயிற்றில்தான் பற்றிக் கொண்டு எரிந்தது. இப்போது தண்ணீர் விட்டு அணைத்து விட்டேன் என்று கூறிவிட்டுச் சிரித்தார் முல்லா.

முல்லாவின் கதைகள் – மீன் பிடித்த முல்லா

முல்லா வசித்த ஊரில் நெடுநாட்களாக நீதிபதி யாரையும் மன்னர் நியமிக்கவில்லை. மக்கள் இது குறித்து மன்னரிடம் முறையிட்டனர்.

” தற்பெருமை சற்றும் இல்லாத அடக்கமான ஒருவரை உங்கள் ஊரில் நீதிபதியாக நியமிக்க எண்ணியிருக்கிறேன். இதுவரை அத்தகைய தகுதி படைத்தவர் என் கண்களில் படவில்லை . அதனால் தான் உங்கள் ஊரில் நீதிபதியாக யாரையும் நியமிக்கவில்லை” என்றார் மன்னர்.

இந்தச் செய்தியை முல்லா அறிந்தார்.

ஒரு நாள் காலையில் முல்லா ஒரு பழைய மீன் பிடிக்கும் வலையை உடலில் போர்த்தியவாறு அரண்மனைப் பக்கமாக நடமாடிக் கொண்டிருந்தார்.

அரண்மனை உப்பரிகையில் உலாவிக் கொண்டிருந்த மன்னர் முல்லா மீன் வலையை போர்த்திக் கொண்டு உலாவுவது கண்டு ஆச்சரியமடைந்தார். தனது பணியாளன் ஒருவனை அனுப்பி முல்லாவை அழைத்து வரச் சொன்னார்.

” முல்லா நீர் ஏன் இப்படி மீன் வலையைப் போர்த்திக் கொண்டு உலாவுகிறீர்?” என்று வினவினார்.

” மன்னர் அவர்களே, நான் ஆதி நாளில் மீன் பிடிக்கும் தொழிலைத்தான் செய்து கொண்டிருந்தேன். நான் என்னதான் முல்லா ஆகிவிட்டாலும் பழைய தொழிலை மறக்கலாமா? எந்தத் தொழிலையும் கேவலமாகச் கருதக் கூடாது என்பதற்காக மறுபடியும் மீன் பிடிக்கப் போகிறேன் ” என்றார் முல்லா.

இத்தனைக் காலமாகத் தாம் எதிர்பார்த்த அடக்கமான மனிதர் முல்லாதான் என்று மன்னருக்குத் தோன்றியது.

அதனால் அவரையே மன்னர் நீதிபதியாக நியமித்தார்.

சில நாட்கள் சென்ற பிறகு தெரு வழியாகச் சென்று கொண்டிருந்த முல்லாவை அரண்மனை உப்பரிகையிலிருந்து மன்னர் கண்டார். அவரிடம் மீன் வலை இல்லாததை அவர் கவனித்தார்.

” என்ன முல்லா மீன் வலையைக் காணோம் ” என்று மன்னர் கேட்டார்.

” மன்னர் பெருமானே, மீனைப் பிடித்து விட்ட பிறகு வலை எதற்கு” என்றார் முல்லா. முல்லா மீன் என்று குறிப்பிட்டது நீதிபதி பதவியை.மன்னர் அதைப் புரிந்து கொள்ளவில்லை.

முல்லாவின் கதைகள் – சொன்ன சொல் மாறதவர்

வெகு காலத்திற்குப் பிறகு வெளியூர் அன்பர் ஒருவர் முல்லாவை வந்து சந்தித்தார்.

இருவரும் சுவையாக நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.

பேச்சின் இடையே வெளியூர் அன்பர் ” முல்லா அவர்களே தங்களது வயது என்ன?” என்று கேட்டார்.

” நாற்பது வயது” என்று முல்லா பதிலளித்தார். வெளியூர் நண்பர் வியப்படைந்தவராக ” என்ன முல்லா அவர்களே, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் தங்களைச் சந்தித்தபோதும் உங்களுக்கு வயது நாற்பது என்றுதான் கூறினீர்கள். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் அதே நாற்பது வயதையே கூறுகிறீர்களே! அது எப்படி?” என்று கேட்டார்.

” நான் சொன்ன சொல் மாறாதவன். ஓரு தடவை சொன்ன சொல்லை மாற்றிச் சொல்லும் ஈனபுத்தி எனக்குக் கிடையாது” என்று சிரித்துக் கொண்டே கூறினார் முல்லா.

முல்லாவின் கதைகள் – குட்டி போட்ட பாத்திரம்

ஒரு நாள் பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம் வந்து ” என் வீட்டில் குடும்ப விழா ஒன்று நடக்கிறது, புழங்குவதற்குப் போதிய பாத்திரங்கள் இல்லை உங்களிடம் இருக்கும் சொற்ப பாத்திரங்கள் இரண்டை இரவலாகக் கொடும். வேலை முடிந்ததும் திரும்பித் தந்து விடுகிறேன் ” என்று கேட்டார்.

முல்லா அண்டை வீட்டுக்காரருக்கு மிகவும் பெரிய கெட்டிப் பாத்திரங்கள் இரண்டை இரவலாகக் கொடுத்தார்.

பக்கத்து வீட்டுக்காரர் ஒரு மாதிரியான நையாண்டி மனிதர். யாரையும் கேலியும் கிண்டலும் செய்து சிரிக்கச் செய்வது அவரது வழக்கம்.

முல்லாவிடம் இரவல் வாங்கி பாத்திரத்தை அவர் திரும்பிக் கொடுக்கும் போது ஏதாவது ஒரு விதத்தில் முல்லாவை நையாண்டி செய்து பார்க்க வேண்டும் என அவர் தீர்மானித்தார்.

அவர் பாத்திரங்களை திரும்பிக் கொடுக்க வந்தபோது, முல்லா கொடுத்த இரண்டு பாத்திரங்கள் கூட ஒரு செம்பும் இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

” நான் இந்தச் செம்பை உங்களுக்கு கொடுக்கவில்லையே?” என வியப்புடன் கேட்டார் முல்லா.

” முல்லா அவர்களே உங்களுடைய பாத்திரங்கள் என் வீட்டில் இருந்த போது இந்தச் சொம்பைக் குட்டி போட்டன. அதனால் குட்டியையும் உடனே கொண்டு வந்தேன் ” என்றார் அண்டை வீட்டுக்காரர்.

சற்று யோசித்த முல்லாவுக்கு அவர் நம்மை நையாண்டி செய்வதற்காக இந்த நாடகமாடுகிறார் என்று புரிந்து கொண்டார். சந்தர்ப்பம் வாய்க்கும் போது அவருக்குச் சரியான புத்தி கற்பிக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.

” ஆமாம் நண்பரே பாத்திரங்களை கொடுக்கும்போது அவை கர்ப்பமாக இருக்கின்றன என்ற உண்மையைச் சொல்ல மறந்து விட்டேன் ” என்று கூறியவாறு அண்டை வீட்டுக்காரர் கொடுத்த பாத்திரங்களை வாங்கிக் கொண்டார் முல்லா.

சில நாட்கள் கடந்தன, ஒரு நாள் முல்லா அண்டை வீட்டுக்காரரிடம் சென்று என் வீட்டில் ஒரு விசேஷம் புழங்குவதற்குத் தேவையான பெரிய பாத்திரம் இல்லை. தயவு செய்து பெரிய பாத்திரங்கள் இரண்டு கொடுங்கள் என்று கேட்டார். அந்த வீட்டுக்காரரும் இரண்டு பெரிய பாத்திரங்களை கொடுத்தார். முல்லா அவற்றை வீட்டுக்கு எடுத்து வந்தார்.

இரண்டு நாட்கள் கழித்து முல்லா ஒரு பாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு அண்டை வீட்டுக்காாரிடம் சென்றார்.

” உங்களிடம் வாங்கிய பாத்திரம் இதோ இருக்கிறது. பெற்றுக்கொள்ளுங்கள” ் என்றார்.

” நான் இரண்டு பாத்திரம் கொடுத்தேனே ஒன்றுதான் திருப்பிக் கொண்டு வந்திருக்கிறீர்கள் ?” என அண்டை வீட்டுக்காரர் கேட்டார்.

முல்லா தமது முகத்தில் வருத்தம் பிரதிபலிக்க ” நண்பரே ஒரு தீய நிகழ்ச்சியினைச் சொல்வதற்காக வருந்துகிறேன். தாங்கள் எனக்கு அளித்த பாத்திரங்களில் ஒன்றான பெண் பாத்திரம் கர்ப்பமாக இருந்திருக்கிறது. என் வீட்டுக்கு வந்த இரவே அது பிரசவ வேதனைப்பட ஆரம்பித்து விட்டது. துரதிர்ஷ்டவசமாக அது பிரசவித்த குழந்தையும் செத்து விட்டது. தாயும் இறந்து விட்டது. அவை இரண்டையும் தகனம் செய்து விட்டேன் ” என்றார்.

முல்லா தனக்குச் சரியானபடி பதிலடி தருகிறார் என்பதைப் புரிந்து கொண்ட அண்டை வீட்டுக்காரர் அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

” இனி இந்த மாதிரி உங்களை நையாண்டி செய்ய மாட்டேன். தயவு செய்து என் பாத்திரத்தைத் திருப்பித் கொடுத்து விடுங்களஞ் என்று வேண்டிக் கொண்டார். முல்லா அவரடைய பாத்திரத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார்.

முல்லாவின் கதைகள் – வேதாந்த நூல்

ஓரு தடவை முல்லா ஒரு திருமணத்துக்குச் சென்றார். இரண்டொரு தடவை அவர் திருமணத்திற்கு சென்று திரும்பிவந்து பார்த்தபோது அவருடைய செருப்பு காணாமல் போய்விட்டது. அதனால் அன்று செருப்பை வெளியே விட்டுச் செல்ல முல்லாவுக்கு மனம் வரவில்லை.

அந்தக் காலத்தில் செருப்பணிந்த காலுடன் வீட்டுக்குள் நடமாடக் கூடாது. செருப்புக்களை இழக்க விரும்பாத முல்லா அவற்றைக் கழற்றி ஒரு துணியில் சுற்றிக் கையில் வைத்துக் கொண்டார்.

முல்லாவின் கையில் ஏதோ காகிதப் பொட்டலம் இருப்பதைக் கண்ட திருமண விட்டுக்காரர், ” முல்லா அவர்களே ஏதோ காகிதப் பொட்டலத்தை வைத்திருக்கிறீரே, அதில் என்ன இருக்கிறது ? மணமகனுக்கு அளிக்கப்பட வேண்டிய பரிசா?” என்று கேட்டார்.

அது மிகவும் புனிதமான ஒரு வேதாந்த நூல் என்று முல்லா பதிலளித்தார். ” வேதாந்த நூலா? இதை எங்கே வாங்கினீர்? ” என திருமண வீட்டுக்காரன் வினவினான். செருப்புக் கடையில் வாங்கினேன் என்று முல்லா பதிலளித்தார்.

அவர் என்ன பதிலளித்தார் என்று விளங்கிக் கொள்ள முடியாமல் திருமண வீட்டுக்காரர் தத்தளித்தார்.

முல்லாவின் கதைகள் – முல்லாவின் திருமண ஆசை

தனது மனைவி இறந்து போய் விட்டதால் முல்லா மறுமணம் செய்து கொள்வது என்று
தீர்மானித்தார்.

அப்பொழுது அவர் 60 வயதை நெருங்கிக் கொண்டிருந்தார்.

முதுமைக் காலத்தில் அவருக்குத் திருமண ஆசை ஏற்பட்டது. அவருடைய நண்பர்களுக்குப் பிடிக்கவில்லை.

ஒரு நாள் நண்பர்கள் முல்லாவிடம் உரையாடிக் கொண்டீருந்தபோது தங்கள் அதிருப்தியை வெளியிட்டனர்.

” முல்லா இந்த முதுமைப் பிராயத்தில் உங்களுக்குத் திருமணம் அவசியம்தானா? உங்களுக்கு ஏன் இப்படிப்பட்ட எண்ணம் ஏற்பட்டது?” என நண்பர்கள் கேட்டனர்.

முல்லா வழக்கமான சிரிப்புடன் பேசத் தொடங்கினார்.

” நண்பர்களே, உங்கள் அன்பான கருத்துக்கு நான் பதில் சொல்லி ஆக வேண்டும். இளமைப் பருவமோ – முதுமைப் பருவமோ ஆணுக்கு ஒரு பெண் துணை தேவை நான் முதுமைக் காலத்தில் திருமணம் செய்து கொள்வதற்கு இது ஒரு காரணம் எனக்கு வாய்க்கும் மனைவி நல்லவளாக என்னிடம் அன்பும் ஆதரவும் உள்ளவளாக இருந்தால் முதுமைக் காலத்திலும் நான் மகிழ்ச்சியுடன் இருப்பதற்கு வழி பிறக்கும் அல்லவா?”

முல்லாவின் இந்தப் பதிலைப் கேட்ட நண்பர்கள் ” முல்லா அவர்களே! நீங்கள் எதிர்பார்த்தற்கு மாறாக முதுமைக் காலத்தில் உங்களுக்கு வந்து வாய்க்கும் மனைவி பொல்லாதவளாக இருந்து விட்டால்?” என்று கேட்டனர்.

” வயதுதான் ஆகி விட்டதே? இன்னும் கொஞ்ச காலந்தானே அவளுடன் வாழப் போகிறோம் என்று மனத்தைத் தேற்றிக் கொள்வேன்” என்று முல்லா பதிலளித்தார்.

முல்லாவின் கதைகள் – யானைக்கு வந்த திருமண ஆசை

மன்னரின் யானையொன்று அண்டை அயல் நகரங்களுக்குச் சென்று பயிர்களை அழித்தும், மக்களில் பலரை நசுக்கிப் படுகாயப்படுத்தியும் அடிக்கடி பெருந்தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது.

இதுபற்றி பாதிக்கப்பட்ட சிலர் மன்னரிடம் முறையிட்ட போது மன்னர் அதனைப் பெரிய விஷயமாகக் கருதவில்லை.

தன்னுடைய யானை மீது வீண் புகார்கள் கூறுவதாகச் சிலரைக் கடிந்தும் கொண்டார். அதனால் யானையின் அட்டகாசம் பற்றி மேற்கொண்டு முறையிட யாருக்கும் துணிச்சல் வரவில்லை.

அவர்கள் முல்;லாவைச் சந்திந்து மன்னரின் யானையால் தங்களுக்கு ஏற்படும் தொல்லைகளைப் பற்றி எடுத்துக்கூறி மன்னரிடம் சொல்லி ஏதாவது செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். முல்லா தம்மிடம் வந்தவர்களை நோக்கி ” நீங்க எல்லாம் ஒன்று திரண்டு அந்த யானையைப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப்போட்டு விடுங்கள்” என்றார்.

” ஐய்யய்யோ மன்னரின் யானையைக் கட்டிப் போட்டு மீள முடியுமா? மன்னர் கடுமையான தண்டனை விதிப்பார்” என்று அச்சத்துடன் கூறினர் ஊர் மக்கள்.

நீங்கள் நான் சொன்னவாறு செய்யுங்கள். மன்னரிடமிருந்து யாராவது அங்கு வந்து கேட்டால் முல்லாதான் யானையைக் கட்டிப் போடச் சொன்னதாகக் கூறி விடுங்கள் என்று முல்லா கூறினார்.

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று கூடி மிகவும் சிரமப்பட்டு யானையைப் பிடித்து ஒரு பெரிய மரத்தில் கட்டிப் போட்டு விட்டனர்.

செய்தி அறிந்த மன்னர் முல்லாவுக்கு ஆள் அனுப்பி தம்மை வந்து சந்திக்குமாறு உத்திரவு பிறப்பித்தார்.

முல்லா அரண்மனை சென்று மன்னரை வணங்கினார்.

” என்ன முல்லா என்னுடைய யானையைக் கட்டிப் போட்டீராமே? உமக்கு அவ்வளவு துணிச்சல் எங்கிருந்து வந்தது?” என்று கோபத்துடன் கேட்டார்.

முல்லா பணிவுடன் மன்னரை நோக்கி ” மன்னர் பெருமானே தங்களது யானை எங்கள் ஊர்ப்பக்கம் வந்து தனக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டு அட்டகாசம் செய்ய ஆரம்பித்து விட்டது. மன்னருடைய யானையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டியது குடிமக்களாகிய எங்கள் கடமையல்லவா! அதனால் தங்கள் யானைக்காக ஒரு பெண் யானையைத் தேடிக் கொண்டிருக்கிறோம். பெண் யானை கிடைப்பதற்குள் யானை கோபித்துக் கொண்டு ஏதாவது தாறுமாறான நடவடிக்கையில் ஈடுபட்டு விடக் கூடாதே என்பதற்காகத்தான் அதைக் கட்டி வைத்திருக்கிறோம் ” என்றார்.

” என்ன? யானையாவது தனக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்பதாவது! யாரிடம் விளையாடுகிறாய்?” என்று மன்னர் கோபத்துடன் கேட்டார்.

மன்னர் பெருமான் அவர்களே தயவு செய்து சிரமம் கருதாது ஒரு தடவை எங்கள் ஊருக்கு வந்து தங்கள் யானையையே விசாரித்துப் பாருங்கள். நான் ஏதாவது பொய் சொல்லியிருந்தால் எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் என்று முல்லா கூறினார்.

மன்னர் தமது பரிவாரங்களுடன் முல்லாவை அழைத்துக் கொண்டு முல்லா சொன்ன பகுதிக்குச் சென்றார்.

வழி நெடுக்கிலும் விளை நிலங்களுக்கும் பழ மரங்களுக்கும் ஏற்பட்டிருந்த கடுமையான சேதத்தை அழிவைக் கண்டு அதிர்ச்சியுற்றார். அந்தப் பேரழிவுக்கு தனது யானைதான் காரணம் என்பதையும் உணர்ந்தார். தன்னை அந்தப் பகுதிகளுக்கு வரச் செய்வதற்காக முல்லா கையாண்ட தந்திரத்தையும் புரிந்து கொண்டார்.

மன்னர் உடனே தனது அதிகாரிகளை அழைத்து யானையினால் யார் யார் அதிகமான சேதத்துக்கு உள்ளாகியிருக்கிறார்களோ அவர்களுக்குத் தாராளமான நஷ்ட ஈடு வழங்க உத்திரவிட்டார் பிறகு யானையைக் கொண்டு சென்று அரண்மனையில் கட்டிப் போடுமாறும் உத்திரவிட்டார்.

முல்லாவுக்கு ஊர் மக்கள் நன்றி சொல்லி அவரை வாழ்தினார்கள்.

முல்லாவின் கதைகள் – எதிர்கால வாழ்க்கை

ஒரு நாள் முல்லா தெருவழியா நடந்து போய்க் கொண்டிருந்தார். ஒரு குடிசை வாசலை அவர் கடந்து சென்ற சமயம் குடிசைக்குள் ஏதோ சத்தம் கேட்கவே உள்ளே சென்றார்.

அந்தக் குடிசையில் ஒரு ஏழை விதவைப் பெண் வசித்து வந்தாள் துணிகளை தைத்துக் கொடுத்து அவள் கஷ்ட ஜPவனம் நடத்திக் கொண்டிருந்தாள் அவளுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருந்தான்.

அந்தக் குடும்பத்தைப் பற்றி முல்லாவுக்கு நன்றாகத் தெரியும் அவர்கள் மீது அவருக்கு அனுதாபமும் உண்டு.

வீட்டுக்குள் தாயும் மகனும் எதோ சச்சரவில் ஈடுபட்டிருந்தனர்.

” இங்கே என்ன நடக்கிறது?” என்று முல்லா வினவினார்.

” முல்லா அவர்களே இவனைப் பாருங்கள் ஒழுங்காக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறான், அறிவுரை கூறிப் பார்த்தேன் அடித்து மிரட்டிப் பார்த்தேன் ஒன்றுக்கும் மசியமாட்டேன் என்கிறான் ” என்றாள் தாய் வேதனையோடு.

” குழந்தாய் நீ பள்ளிக்கூடம் போக வேண்டியது அவசியமில்லையா? அது உன் எதிர்காலத்துக்கு நல்லதில்லையா?” என்று முல்லா சிறுவனுக்கு புத்திமதி கூறினார். பையன் கேட்பதாக இல்லை.

” நான் பள்ளிக்கூடம் போகப்போவதே இல்லை” என்று அடம்பிடித்தான்.

முல்லா சுற்றும்முற்றும் பார்தார் தைப்பதற்காக அந்தப் பையனின் தாய் வைத்திருந்த விலை உயர்ந்த துணி ஒன்று அவர் கண்களில் பட்டது.
அதை எடுத்து முல்லா துண்டு துண்டாகக் கிழித்துப் போட்டு விட்டார். அதைக்கண்டு தாயும் மகனும் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்தனர்.

” அம்மா முல்லா விலை உயரந்த துணியைக் கிழித்துப் பாழாக்கி விட்டரே?” என்று திகைப்போடு கேட்டான் பையன்.

” பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று உன் எதிர்கால வாழ்க்கையையே பாழாக்கிக் கொள்கிறாயே அதைவிட இந்த விலை உயரந்த துணி பாழானது பெரிய விஷயமா” என்றார் முல்லா.

இந்தச் சொற்கள் அவன் மனத்தில் பெரிய மாறுதலை உண்டாக்கிற்று உடனே புத்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்குப் புறப்பாட்டான்.

அவன் சென்றபிறகு முல்லா தாம் கிழித்த துணியின் மதிப்புக்கேற்ற விலையைக் கொடுத்து விட்டுப் புறப்பட்டார்.

முல்லாவின் கதைகள் – பாவத்தின் பலன்

ஓரு தடவை முல்லா தெருவழியே நடந்து சென்று கொண்டிருந்தார்.

ஒரு வீட்டின் கூரையில் நின்று கொண்டு வீட்டைப் பழுதுபார்த்துக் கொண்டிருந்தன் ஒருவன் கால் தவறிக் கீழே விழுந்தான்.

அந்த நேரமாகப் பார்த்து அங்கே நடந்து சென்று கொண்டிருந்த முல்லாவின் மீது அந்த மனிதன் வந்து விழுந்தான்.

விழுந்தவனுக்கு எந்தவித அடியோ காயமோ ஏற்படவில்லை. ஆனால் முல்லா பயங்கரமான அடிபட்டுப் படுகாயமடைந்தார்.

முல்லாவை அருகிலிருந்த மருத்தவனைக்கு சிலர் எடுத்துச் சென்று சிகிக்சைக்கு ஏற்பாடு செய்தார்கள்.

முல்லாவுக்கு பலமாக அடிபட்டு மருத்துவமனையில் கிடக்கிறார் என்ற செய்தியறிந்து நண்பர்களும் பொதுமக்களும் திரளாகச் சென்று முல்லாவைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.

” என்ன நடந்தது?” என்று கூட்டத்திலிருந்த ஒருவர் கவலையோடு கேட்டார்.

” எல்லாம் உலக நியதிப்படிதான் நடந்தது. உலகத்தில் யாரோ ஒருவன் பாவமோ குற்றமோ செய்ய அவன் தப்பித்து கொள்கிறான். ஆனால் நிரபாரதி பாவத்தின் பலனை அல்லது குற்றத்திற்கான தண்டணையை அனுபவிக்கிறான். அது மாதிரி தான் இதுவும் நான் கூரை மேலிருந்து விழவில்லை ஆனால் விழுந்தவனுக்குக் காயம் இல்லை விழாத எனக்கு காயம் ஏற்பட்டது” என்று சிரித்துக் கொண்டே முல்லா பதிலளித்தார்.

முல்லாவின் கதைகள் – முல்லா வசூலிக்கும் கடன்

முல்லா ஒருநாள் ஒரு பெரிய பணக்காரிடம் சென்றார் ஒரு மனிதனுடைய கஷ்ட நிலையைக்
கண்டு மனம் பொறாமல் தங்களிடம் வந்திருக்கிறேன். அந்த மனிதன் ஒரு மனிதரிடம் கொஞ்சம்

பணத்தை கடனாக வாங்கி விட்டான். கடன் வட்டிக்கு வட்டியாக பல மடங்கு பெரிய தொகையாக வளர்ந்து விட்டது. அந்தக் கடனைக் கொடுக்க முடியாமல் அவன் மிகவும் சங்கடப்படுகிறான். கடன் தொல்லை தாளமுடியாமல் அவன் தற்கொலை செய்து கொள்வானோ
என்று கூட எனக்கு அச்சமாக இருக்கின்றது. அந்த மனிதனின் கடனை அடைக்க ஒரு ஆயிரம் பொற்காசுகள் இருந்தால் கொடுங்;கள். உரிய காலத்தில் உங்கள் தொகையை அவன் திருப்பிக் கொடுத்து விடுவான். அதற்கு நான் உத்தரவாதம் கொடுக்கிறேன் என்று முல்லா மிகவும் உருக்கமாக கூறினார்.

அதைக் கேட்டு மனமுருகிய செல்வந்தர் முல்லாவிடம் ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து ” அவ்வளவு கஷ்ப்படும் மனிதன் யார்?” என்று கேட்டார்.

” வேறு யாருமில்லை, நான்தான் ” என்று கூறிச் சிரித்தவாறு முல்லா சென்று விட்டார்.

இரண்டொரு மாதங்கள் கழித்து செல்வந்தரிடம் வாங்கிய பணத்தை முல்லா திருப்பித் கொடுத்து விட்டார்.

இரண்டொரு மாதங்கள் கழித்த பிறகு ஒரு நாள் அதே பணக்காரரிடம் வந்தார்.;

” யாரோ ஒருவர் கடன் வாங்கிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறாராக்கும். அவருக்கு உதவ என்னிடம் கடன் வாங்;க வந்திருக்கிறீர் போலிருக்கிறது” என்று சிரித்துக் கொண்டே கேட்டார் செல்வந்தர்.

” ஆமாம் ” என்று முல்லா பதில் சொன்னார்.

” அந்தக் கஷ்டப்படும் ஆள் நீர்தானே” என்று செல்வந்தர் கேட்டார்.

” இல்லை , உண்மையாகவே ஒர் ஏழை தான் வாங்கிய கடனைக் கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறான் ” என்றார் முல்லா.

” உம்மை எவ்வாறு நம்ப முடியும்? பணத்தை வாங்;கிக் கொண்ட பிறகு நான்தான் அந்த ஏழை என்று கூறமாட்டீர் என்பது என்ன நிச்சயம்?” என்று செல்வந்தர் கேட்டார்.

” நீங்கள் இவ்வாறு சந்தேகப்படுவீர் என்று தெரிந்துதான் அந்த ஆளை நேரில் கொண்டு வந்து வாசலில் நிறுத்தியிருக்கிறனே” என்றார் முல்லா.

பிறகு வாசல் பக்கம் சென்று ஒரு ஏழையை அழைத்து வந்தார்.

” நீர்தான் கடன் வாங்கிக் கஷ்டப்படும் ஏழையா?” என்று செல்வந்தர் கேட்டார்.

” ஆமாம் ” என்ற அந்த ஏழை பதில் சொன்னான்.

செல்வந்தர் முல்லா சொன்ன தொகையை ஏழையிடம் நீட்டினார்.

அதனை முல்லா கைநீட்டி வாங்கிக் கொண்டார்.

” என்ன பணத்தை நீர் வாங்கிக் கொண்டிர் பழையபடி என்னை ஏமாற்றுகிறீரா?” என செல்வந்தர் கேட்டார்.

” நான் பொய் சொல்லவில்லையே கடன் வாங்கியது அந்த ஏழைதான் ஆனால் அவனுக்குக் கடன் கொடுத்தவன் நான். கொடுத்த கடன் இப்போது வசூல் செய்கிறேன் ” என்று கூறியவாறு ஏழையை அழைத்துக் கொண்டு முல்லா நடந்தார்.

முல்லாவின் கதைகள் – சந்தேகப்பிராணி

வியாபரத்தை முன்னிட்டு ஒரு தடவை முல்லா பெரிய நகரம் ஒன்றுக்குச் சென்றிருந்தார். அங்கே அவருக்கத் துணையாக ஒருவன் வந்து சேர்ந்தான்.

அவனுக்கு எடுத்தற்கெல்லாம் சந்தேகமாக இருந்தது.

அந்தப் பெரிய நகரத்தை பார்த்ததும் அவனுக்குப் பிரமிப்பாக இருந்தது.

சந்து பொந்தெல்லாம் மக்கள் இவ்வாறு நிரம்பி வழிகிறார்களே, இவ்வளவு கூட்டத்தில் மக்கள் எவ்வாறு தாங்கள் போக வேண்டிய இடத்தை அடையாளம் கண்டு கொள்வார்கள்? தாங்கள் தங்கியுள்ள விடுதியை எவ்வாறு கண்டு பிடிப்பார்கள்? அவ்வளவு ஏன், மக்கள் தங்களைத் தாங்களே கூட அடையாளம் கண்டு கொள்வது சிரமந்தான் இவ்வாறெல்லாம் அந்த சந்தேகப் பிராணி பேசிக் கொண்டேயிருந்தான்.

அந்த சந்தேகப் பிராணியும் முல்லாவும் அன்று இரவைக் கழிப்பதற்காக ஒரு விடுதியில் சென்ற தங்கினார்.

அந்த விடுதியில் பலர் தங்கியிருந்தார்கள்.

” காலையில் நான் கண் விழிக்கும் போது என்னையே மறந்து விட்டால் என்ன செய்வது? முல்லா அவர்களே எனக்கு ஒரு யோசனை சொல்லுங்கள் என்ற பரிதாபமாகக் கேட்டான் ” சந்தேகப் பிராணி.

முல்லா சிரித்துக் கொண்டே ” நண்பரே கவலைப்படாதீர். ஒரு கருப்புத் துணியை உமது ஒரு காலில் சுற்றிக் கட்டி விடும். காலையில் உறங்கி எழுந்ததும் உமது காலைப் பாரும். கருப்புத் துணி காலில் இருந்தால் நீர்தான் அது என்ற அடையாளம் கண்டு கொள்ளலாம் ” என்றார். சந்தேகப் பிராணிக்கு அது நல்ல யோசனையாகப்படவே தன் காலில் ஒரு கருப்புத் துணியைக் கட்டிக் கொண்டு படுத்து விட்டான்.

அவனுக்கு அருகே படுத்திருந்த முல்லா அவன் நன்றாக உறங்கிய பிறகு அவன் கட்டியிருந்த கருப்புத் துணியை அவிழ்த்துத் தம்முடைய காலில் கட்டிக் கொண்டார்.

” ஐயோ நான் காணாமல் போய் விட்டேனே. ஏன் காலில் இருந்த துணியைக் காணோமே” என்று கூக்குரல் போட்ட சந்தேகப் பிராணி முல்லாவின் காலைப் பார்த்து விட்டு ” நான் அகப்பட்டுவிட்டேன் நீர்தான் நான் ” என்று சத்தம் போட்டான்.

அங்கே ஏதோ குழப்பம் நடப்பதைக் கண்ட மற்ற பயணிகள் அங்கே வந்து கூடி என்ன நடந்தது என வினவினர்.

நடைபெற்ற நிகழ்ச்சிகளை முல்லா மற்றவர்களுக்கு விளக்கினார்.

சந்தேகப்பிராணியைப் பார்த்து அந்த விடுதியில் தங்கியிருந்த எல்லா பிரயாணிகளும் வாய் விட்டுச் சிரித்தனர்.

பிறகு முல்லா அந்தச் சந்தேகப் பிராணிக்கு ஏற்பட்டிருந்த சந்தேகப் பிரமையை அகற்றி அவனுக்குத் தெளிவை உண்டாக்கினார்.

முல்லாவின் கதைகள் – நாத்திகன் பட்ட அவஸ்த்தை

முல்லா வசித்துவந்த ஊரில் ஒரு நாத்திகன் வசித்து வந்தான்.

கொஞ்சமும் தெய்வ நம்பிக்கை இல்லாதவன். தெய்வ நம்பிக்கை உடைய முல்லா போன்றவர்களை எப்பொழுது பார்த்தாலும் கேலியும் கிண்டலும் செய்து பரிகசித்துக்கொண்டிருப்பான்.

ஓரு நாள் சந்தைக் திடலில் அந்த நாத்திகன் நின்று கொண்டிருந்தான்.

அந்தப் பக்கமாக முல்லா நடந்து வந்து கொண்டிருந்தார். அங்கே திரளாகக் கூடியிருந்த மக்களுக்கு மத்தியிலே முல்லாவை அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணினான்.

முல்லா அருகே வந்ததும், ” முல்லா அவர்களே உலகத்திலேயே நீங்கள்தான் முற்றம் துறந்த துறவி என்று மக்கள் பேசிக்கொள்கிறார்களே? அப்படி எதை நீர் துறந்து ஞானியானீர் ” என்று நாத்திகன் கேலியாகக் கேட்டான்.

” எந்த முட்டாள் அந்த மாதிரி சொன்னான் என்னைவிட மிகவும் மகத்துவம் வாய்ந்த துறவி ஒருவர் இருக்கிறாரே!” என்றார் முல்லா.

நாத்திகனுக்கு மட்டுமல்ல அங்கு நடமாடிக் கொண்டிருந்த மக்களகட்க்கும் முல்லா சொன்ன தகவல் ஆச்சரியத்தை விளைவித்தது.

முல்லாவையும்விட மேலான தறவி இந்த ஊரில் யார் இருக்க முடியும் என்று அவர்களுக்கு விளங்கவில்லை.

நாத்திகனும் அந்தத் தகவலைக் கேட்டு வியப்படைந்து ” முல்லா இந்த ஊரில் உள்ள அந்த மகத்துவம் வாயந்த துறவி யார்?” என்ற கேட்டான்.

” அந்தத் துறவி நீர் தான் ” என்று முல்லா கூறியதைக் கேட்ட நாத்திகன் அதிர்ச்சியடைந்து விட்டான்.

” நானா அந்தத் துறவி அது எப்படி?” என்று கேட்டான்.

” என்னைப் போன்ற சாதாரணத் துறவிகள் கேவலம் உலகத்தில் இருக்கும் பொருட்களைத் தான் துறப்பது வழக்கம் நீரோ கடவுளையே துறந்து விட்ட துறவியாயிற்றே உம்மை மிஞ்சக் கூடிய துறவி உலகத்தில் ஏது?” என்று முல்லா பதிலளித்தார். அங்கே சூழ்ந்திருந்த மக்கள் நாத்திகனைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்க ஆரம்பித்தனர். நாத்திகன் தலைகுனிந்தவாறு அந்த இடத்தை விட்டு வேகமாக அகன்று விட்டான்.

முல்லாவின் கதைகள் – முல்லா கற்ற இசை

முல்லாவுக்கு சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று திடீரென ஆசை வந்து விட்டது.

சங்கீதம் கற்றுக் கொடுக்கும் ஒரு பாட்டு வாத்தியாரிடம் சென்றார்.

” ஐயா எனக்குச் சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையாக இருக்கிறது. எனக்குச் சங்கீதம் கற்றக் கொடுப்பீர்களா?” என முல்லா அவரிடம் கேட்டார்.

” சங்கீதம் கற்றுக் கொடுப்பது தானே என் தொழில் நிச்சயம் தங்களுக்குக் சங்கீதம் கற்றுக் கொடுக்கிறேன் ” என்றார் பாட்டு வாத்தியார்.

” நான் என்ன கட்டணம் தரவேண்டும்?” என்று முல்லா கேட்டார்.

” முதல் மாதம் 100 பொற்காசுகள் தரவேண்டும் அடுத்த மாதம் அறுபது பொற்காசு கொடுத்தால் போதும், மூன்றாவது மாதம் ஐம்பது பொற்காசுகள் கொடுங்கள். இவ்வாறு கட்டணம் குறைந்து கொண்டே போகும் ” என்றார் பாட்டு வாத்தியார்.

” சரி வருகிறேன் ” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார் முல்லா.

” ஏன் புறப்பட்டு விட்டீர்கள்? சங்கீதம் கற்றுக் கொள்ளவில்லையா?” என பாட்டு வாத்தியார் கேட்டார்.

” ஒரு பத்து மாதம் கழித்து வரலாம் என்று நினைக்கிறேன். ஏனென்றால் மாதா குறையும் உமது கட்டண முறையில் பத்த மாதம் கழித்து நீர் இலவசமாகவே எனக்குக் கல்வி கற்றுத் தரவேண்டியிருக்கும். அதனால் பத்து மாதம் கழித்தே வருகிறேன் ” என்று கூறிவிட்டு முல்லா நடந்தார்.

முல்லாவின் கதைகள் – முல்லாவின் உயில்

முல்லாவின் நண்பர் ஒருவர் பெரிய பணக்காரர். அவர் வீட்டுக்கு முல்லா செல்லும் போதெல்லாம் பணக்காரர் தமது திரண்ட சொத்துக்களை தம் மக்களுக்கு எவ்வாறு பிரித்து உயில் எழுதி வைப்பது என்பது பற்றியே அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார்.

உயிலை எழுவதால் அவருக்கு சிக்கல் ஏதும் இல்லை. ஆனால் தம்முடைய செல்வச் செருக்குனை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவே யாரைக் கண்டாலும் உயிலைப் பற்றிப் பேச்செடுத்து மணிக்கணக்கில் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்பார். அவருடைய பணச் செருக்கு முல்லாவுக்கு எரிச்சலாக இருக்கும்.

ஒருநாள் செல்வந்தர் முல்லாவைத் தேடிக் கொண்டு முல்லாவின் வீட்டுக்கு வந்தார். அப்போது முல்லா ஒரு தாளில் ஏதோ தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பதை செல்வந்தர் கண்டார்.

” இவ்வளவு தீவிர சிந்தனையுடன் என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்?” என்று செல்வந்தர் கேட்டார்.

” என் உயிலைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன் தயாரித்து முடிப்பதற்குள் உயிர் போய்விடும் போலிருக்கிறது. ஒரே குழப்பம் சிக்கல் ” என்றார் முல்லா.

” நீரும் உயில் எழுதுகிறீரா? உயில் எழுதும் அளவுக்கு உம்மிடம் சொத்தோ பணமோ ஏது? ஒன்றும் இல்லாதபோது குழப்பமும் சிக்கலும் எங்கிருந்து வந்தது?” என்று செல்வந்தர் வியப்புடன் கேட்டார்.

” சொத்தோ செல்வமோ இல்லாததனால்தானே உயில் எழுதுவதில் சிக்கல் இல்லாத சொத்து அல்லது செல்வத்தை எவ்வாறு என் மக்களுக்குப் பிரித்துக் கொடுப்பது என்றுதான் எனக்கு விளங்கவில்லை” என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்.

தம்மை மட்டம் தட்டவே முல்லா இவ்வாறு கூறுகிறார் என்று உணர்ந்த செல்வந்தர் வெட்கத்துடன் தலைகுனிந்தார்.

முல்லாவின் கதைகள் – மகிழ்ச்சியின் எல்லை

முல்லாவின் வீட்டிற்கு அருகில் ஒரு செல்வந்தன் வீடு இருந்தது. அவனிடம் ஏராளமான பணமும் மற்றும் வீடு வாசல், தோட்டம் துறவு என சொத்துக்களும் நிறைய இருந்தன. ஆனால் அந்த செல்வந்தன் ஒருநாள் கூட மகிழ்ச்சியாக இருந்ததில்லை.

முல்லாவை சந்திக்கும் போதெல்லாம், ” என்னால் ஒரு நிமிஷங்கூட மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை. எப்பொழுது பார்த்தாலும் கவலையாகவும், கலக்கமாகவும் அல்லவா இருக்கிறது. நான் கொஞ்ச நேரமாவது மகிழ்ச்சியுடன் இருக்க முல்லா அவர்களே எனக்கு ஒரு யோசனை கூறக் கூடாதா?” என்று பரிதாபமாகக் கேட்டார்.

செல்வந்தன் ஒரு பெரிய பேழையில் தன்னுடைய பணத்தையெல்லாம் சிறுசிறு மூட்டைகளாகக் கட்டிப் போட்டு வைத்திருந்தான்.

சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவன் அந்தப் பணப் பைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துப் பார்த்து வைப்பான்.

முல்லா அவன் வீட்டுக்கு அடிக்கடி சென்று அவனுடன் பொழுது போக்காகப் பேசிக் கொண்டிருந்து விட்டு வருவது வழக்கம்.

அன்றும் அவர் வழக்கம்போல செல்வந்தன் வீட்டுக்கு வந்தார்.

அந்தச் சமயத்தில் செல்வந்தர் பணப் பெட்டியைத் திறந்து பணமூட்டைகளை எடுத்துப் பார்த்து விட்டு வைத்துக் கொண்டிருந்தார்.

” என்ன ஐயா செய்து கொண்டிருக்கிறீர்கள் ” என்று கேட்டவாறு பணப்பெட்டி இருக்குமிடத்தை நோக்கி நடந்தார் முல்லா.

முல்லா வீட்டுக்குள் வருவதைக் கண்ட செல்வந்தன் அவசர அவசரமாகப் பணப் பைகளைப் பெட்டியில் வைத்துப் பூட்டத் தொடங்கினான்.

அப்போது அவனுடைய பணப் பைகளில் ஒன்று செல்வந்தன் அறியாமலே பணப் பெட்டிக்கு அருகாமையில் விழுந்து விட்டது.

செல்வந்தன் அதைக் கவனிக்கவில்லை ஆனால் முல்லா கவனித்தார்.

உடனே அவர் பாய்ந்து சென்று பணப் பையைத் தூக்கிக் கொண்டு வெளியே ஒடினார்.

” ஐயோ என் பணப்பை போய் விட்டதே” என்று கூக்குரலிட்டவாறு முல்லாவைத் துரத்திக் கொண்டு செல்வந்தன் ஒடினான்.

முல்லா இரண்டொரு தெருக்கள் வழியாக வேண்டுமென்றே ஒடினார்.

செல்வந்தன் பணம் போய் விட்டதே என்று கூக்குரலிட்ட வண்ணம் முல்லாவைப் பின்
தொடர்ந்து ஒடினான்.

முல்லா கடைசியாக செல்வந்தன் வீட்டுக்கே ஒடி வந்தார். பணப்பையை அவனுடைய பணப் பெட்டியின் மீது தொப்பெனப் போட்டார்.

செல்வந்தன் ஒடி வந்து பணப் பையைத் தூக்கிக் கொண்டு அப்பாடி இப்பொழுது தான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்ற மலர்ந்த முகத்துடன் கூறினான்.

பிறகு ” முல்லா அவர்களே எதற்காக என் பணத்தைத் தூக்கிக் கொண்டு ஒடினீர். இந்தப் பணம் கிடைக்காவிட்டால் என் உயிரே போயிருக்கும் ” என்றார்.

” இப்பொழுது உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறதா?” என்று முல்லா கேட்டார்.

” மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை முல்லா பறிபோய் விட்டது என்று நான் நினைத்த பணம் திரும்பக் கிடைத்து விட்டதே! என் மகிழ்ச்சிக்குச் சொல்லவும் வேண்டுமா?” என்று கூறினான் செல்வந்தன்.

” எதற்காகப் பணத்தைத் தூக்கிக் கொண்டு ஒடினேன் என்று கேட்டீரல்லவா? உமக்கு கொஞ்ச நேரமாவது மகிழ்ச்சியை ஊட்டலாமே என்பதற்காகத் தான் பணத்தைத் தூக்கிக் கொண்டு ஒடினேன் உம்மால் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை என்று கூறினீர் அல்லவா
? அதற்காகத்தான் உமக்கு மகிழச்சியை ஏற்படுத்த வேண்டுமே என்று பணத்தைத் தூக்கிக் கொண்டு ஒடினேன் ” என்றார் முல்லா.

முல்லாவின் கதைகள் – பிரார்த்தனை

ஒரு தடவை முல்லா கப்பல் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்.

கப்பல் திசைமாறி தாறுமாறாக அலையத் தொடங்கியது. கரையே பல நாட்கள் கண்களில் தென்படவே இல்லை.

உணவும் குடிநீரும் முற்றிலும் தீர்ந்து விட்டன.

கப்பலின் பயணம் செய்தவர்களுக்குத் தாங்கள் உயிர்பிழைக்க மாட்டோம் என்ற அச்சம் ஏற்பட்டு விட்டது.

அதனால் பிரயாணிகள் அனைவரும் தரையில் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்.

தான் உயிர்பிழைத்தால் தன்னுடைய வீடு வாசல்களை எல்லாம் ஏழை எளிய மக்களுக்குத் தருமம் செய்து விடுவதாக ஒருவர் சொன்னார்.

மற்றொரு பிரயாணி தாம் உயிர் பிழைத்தால் ஆயிரம் ஏழை மக்களுக்கு நாள் தவறாமல் உணவளிப்பதாக வாக்குறுதி கொடுத்தார்.

இவ்வாறு ஒவ்வொரு பிரயாணியும் தம்மிடமிருக்கம் விலைமதிப்புள்ள பொருட்களையெல்லாம் தானம் செய்து விடுவதாக வாக்குறுதிகள் தந்தனர்.

இந்தக் காட்சிகளையெல்லாம் ஒருபக்கமாக நின்றவாறு வேடிக்கை பார்த்துக் கொண்டிருருந்தார் முல்லா.

திடீரென்று அவர் அதோ கரை தெரிகிறது நாமெல்லாம் உயிர் பிழைத்து விட்டோம் என்று கூவினார்.

பிரயாணிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எல்லோரும் சேர்ந்து ஆனந்தக் கூத்தாடினார்கள்.

முல்லா உடனே உரத்த குரலில் அன்பர்களே நமக்கு உயிர்ப்பிச்சை அளித்த கடவுளுக்கு நன்றி செலுத்தம் வித்தத்தில் நாம் எல்லோரும் சேர்ந்து பிரார்த்தனை செய்வோம் என்றார்.

அவர் பேச்சுக்கு யாரும் செவிசாய்க்கவே இல்லை. உயிர்பிழைப்பது உறுதியாகி விட்டதால் இனி கடவுளின் தயவு தங்களுக்குத் தேவையில்லை என்று அவர்கள் கருதினார்கள்.

சற்றுமுன் அவர்கள் செய்த வாக்குறுதிகளையெல்லாம் மற்ந்து விட்டார்கள்.

அந்த நேரத்தில் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு கடவுளுக்கு வாக்குறுதி கொடுத்து விட்டோம். ஓரேயடியாக சொத்து சுகங்களைத் தியாகம் செய்துவிட முடியுமா? என்றெல்லாம் பேசத் தலைப்பட்டார்கள்.

முல்லா அட்டகாசமாக் கலகலவென நகைத்தார்.

” ஏன் சிரிக்கிறீர்?” என்று பிரயாணிகள் வினவினார்கள்.

” கரை கண்களுக்குத் தெரிவதாக நான் சொன்னது உண்மையல்ல ஒரு விளையாட்டுக்காக அவ்வாறு சொன்னேன் ” என்றார் முல்லா.

பிரயாணிகள் நாலாபுறமம் கடலில் கண்களை ஒட்டினர். முல்லா சொன்னது உண்மைதான் கரை எந்தப் பக்கமும் கண்களுக்கத் தெரியவே இல்லை.

உடனே பிரயாணிகள் அனைவரும் அழுகுரல் எழுப்பியவாறு கடவுளைப் பிரார்த்தனை செய்வதற்காக மண்டியிட்டு அமர்ந்தனர்.

முல்லாவின் கதைகள் – பிரார்த்தனை

ஒரு தடவை முல்லா கப்பல் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்.

கப்பல் திசைமாறி தாறுமாறாக அலையத் தொடங்கியது. கரையே பல நாட்கள் கண்களில் தென்படவே இல்லை.

உணவும் குடிநீரும் முற்றிலும் தீர்ந்து விட்டன.

கப்பலின் பயணம் செய்தவர்களுக்குத் தாங்கள் உயிர்பிழைக்க மாட்டோம் என்ற அச்சம் ஏற்பட்டு விட்டது.

அதனால் பிரயாணிகள் அனைவரும் தரையில் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்.

தான் உயிர்பிழைத்தால் தன்னுடைய வீடு வாசல்களை எல்லாம் ஏழை எளிய மக்களுக்குத் தருமம் செய்து விடுவதாக ஒருவர் சொன்னார்.

மற்றொரு பிரயாணி தாம் உயிர் பிழைத்தால் ஆயிரம் ஏழை மக்களுக்கு நாள் தவறாமல் உணவளிப்பதாக வாக்குறுதி கொடுத்தார்.

இவ்வாறு ஒவ்வொரு பிரயாணியும் தம்மிடமிருக்கம் விலைமதிப்புள்ள பொருட்களையெல்லாம் தானம் செய்து விடுவதாக வாக்குறுதிகள் தந்தனர்.

இந்தக் காட்சிகளையெல்லாம் ஒருபக்கமாக நின்றவாறு வேடிக்கை பார்த்துக் கொண்டிருருந்தார் முல்லா.

திடீரென்று அவர் அதோ கரை தெரிகிறது நாமெல்லாம் உயிர் பிழைத்து விட்டோம் என்று கூவினார்.

பிரயாணிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எல்லோரும் சேர்ந்து ஆனந்தக் கூத்தாடினார்கள்.

முல்லா உடனே உரத்த குரலில் அன்பர்களே நமக்கு உயிர்ப்பிச்சை அளித்த கடவுளுக்கு நன்றி செலுத்தம் வித்தத்தில் நாம் எல்லோரும் சேர்ந்து பிரார்த்தனை செய்வோம் என்றார்.

அவர் பேச்சுக்கு யாரும் செவிசாய்க்கவே இல்லை. உயிர்பிழைப்பது உறுதியாகி விட்டதால் இனி கடவுளின் தயவு தங்களுக்குத் தேவையில்லை என்று அவர்கள் கருதினார்கள்.

சற்றுமுன் அவர்கள் செய்த வாக்குறுதிகளையெல்லாம் மற்ந்து விட்டார்கள்.

அந்த நேரத்தில் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு கடவுளுக்கு வாக்குறுதி கொடுத்து விட்டோம். ஓரேயடியாக சொத்து சுகங்களைத் தியாகம் செய்துவிட முடியுமா? என்றெல்லாம் பேசத் தலைப்பட்டார்கள்.

முல்லா அட்டகாசமாக் கலகலவென நகைத்தார்.

” ஏன் சிரிக்கிறீர்?” என்று பிரயாணிகள் வினவினார்கள்.

” கரை கண்களுக்குத் தெரிவதாக நான் சொன்னது உண்மையல்ல ஒரு விளையாட்டுக்காக அவ்வாறு சொன்னேன் ” என்றார் முல்லா.

பிரயாணிகள் நாலாபுறமம் கடலில் கண்களை ஒட்டினர். முல்லா சொன்னது உண்மைதான் கரை எந்தப் பக்கமும் கண்களுக்கத் தெரியவே இல்லை.

உடனே பிரயாணிகள் அனைவரும் அழுகுரல் எழுப்பியவாறு கடவுளைப் பிரார்த்தனை செய்வதற்காக மண்டியிட்டு அமர்ந்தனர்.

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:

பிரார்த்தனை – முல்லாவின் கதைகள் – Moral Stories – நீதிக் கதைகள் – முல்லா, பிரயாணிகள், பிரார்த்தனை, செய்து

முல்லாவின் கதைகள் – எல்லோரும் சோம்பேறிகள்!

சந்தை கூடும் இடத்தில் ஒரு உயர்ந்த இடத்தில் முல்லா நின்று கொண்டார்.

மக்கள் சந்தையை நோக்கிப் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தனர்.

” அன்பார்ந்த நண்பர்களே? உங்களுக்கு உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற அருமையான சில யோசனைகள் என்னிடம் இருக்கின்றன. இவற்றை காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அருள் கூர்ந்து சற்று நில்லுங்கள் ” என்று முல்லா உரத்த குரலில் கூறினார். முல்லா என்ன சொல்லப் போகிறார் என்று அறிந்து கொள்வதற்காக ஒரு பெருங்கூட்டம் அங்கே கூடிற்று.

” நண்பர்களே! கொஞ்சங்கூட உடல் உழைக்காமல் வீட்டில் இருந்தவாறே ஆயிரக்கணக்கில் சம்பாதித்து சுகபோக வாழ்வு வாழ உங்களில் எத்தனை பேருக்கு விருப்பம்? நான் அதற்கு வழி சொல்லுகிறேன் என்னுடைய யோசனைகளைக் கேட்கத் தயாராக இருப்பவர்கள் எத்தனைபேர்? அவர்கள் மட்டும் கைதூக்குங்கள் ” என்றார் முல்லா.

அநேகமாக அங்கே இருந்த அத்தனைபேரும் கை தூக்கினார்கள்.

” முல்லா உழைக்காமல் சுகபோக வாழ்வு வாழ என்ன வழி? தயவு செய்து கூறுங்கள்?” என்று மக்கள் கூச்சலிட்டனர்.

முல்லா தாம் நின்றிருந்த இடத்தை விட்டுக் கீழிறங்கி நடக்கத் தொடங்கினார்.

” என்ன முல்லா அவர்களே, ஒன்றும் சொல்லாமல் செல்லுகிறீர்களே?” என்று மக்கள் கேட்டனர்.

” நண்பர்களே நமது ஊரிலே எத்தனை சோம்பேறிகள் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்பினேன் என்னையும் சேர்த்து இந்த ஊரில் உள்ள எல்லோருமே சோம்பேறிகள்தான் என்ற உண்மை எனக்கு விளங்கி விட்டது. இனி எனக்கு இங்கே என்ன வேலை? போய் வருகிறேன்
” என்று கூறியவாறே முல்லா செல்லத் தொடங்கினார்.

அங்கிருந்த மக்கள் திகைப்படைந்தவர்களாக முல்லா சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

முல்லாவின் கதைகள் – முல்லாவின் புத்திசாலித்தனம்!

ஒரு பெரிய செல்வந்தனிடம் கொஞ்ச காலம் முல்லா வேலை பார்த்து வந்தார்.

ஒரு நாள் முல்லா தொடர்ந்து மூன்று தடவை கடைத் தெருவுக்குச் சென்று வந்ததை அவருடைய முதாளி கண்டு அவரைக் கூப்பிட்டு விசாரித்தார்.

” நீர் ஏன் மூன்று தடவை கடைக்குச் சென்றீர்?” என்று கேட்டார் அவர்.

” கோதுமை வாங்குவதற்காக ஒரு தடவை கடைக்குப் போனேன். அடுத்த தடவை நான் போனது முட்டை வாங்குவதற்காக மூன்றாவது தடவையாக எண்ணெய் வாங்கச் சென்றேன் ” என்றார் முல்லா.

அதைக் கேட்டு முதலாளி கோபம் அடைந்தார்.

” கடைக்குச் செல்லுவதற்கு முன்னால் என்னென்ன தேவை என்பதைப் பற்றி முன்னதாகவே தீர்மானித்துக் கொள்வது அல்லவா புத்திசாலித்தனம்? ஒவ்வொரு பொருளையும் வாங்க ஒவ்வொரு தடவை கடைக்குச் செல்வது எவ்வளவு பெரிய மடத்தனம். இனி இந்த மாதிரித் தவறைச் செய்யாதே” என்று முல்லாவை எச்சரித்து அனுப்பினார்.

ஒரு தடவை முல்லாவின் முதலாளியான செல்வந்தருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு விட்டது. அவர் முல்லாவை அழைத்து உடனே சென்று மருத்துவரை அழைத்து வா என்று உத்தரவிட்டார்.

முல்லா விரைந்து சென்றார்.

சற்று நேரங்கழித்து முல்லா வீடு திரும்பிய போது அவருடன் மூன்று மனிதர்கள் வந்திருந்தனர்.

” இவர்கள் எல்லாம் யார்? எதற்காக வந்திருக்கிறார்கள்?” என முதலாளி ஆச்சரியத்துடன் கேட்டார்.

” இதோ இவர் மருத்துவர் அதோ அந்த மனிதர் மதகுரு – அந்த மூன்றாவது ஆள் சமாதிக் குழி தோண்டுபவர் ” என்றார் முல்லா.

” நான் மருத்துவரை மட்டுந்தானே அழைத்து வரச் சொன்னேன் ” என்றார் முதலாளி.

” நீங்கள் சொன்னது போலத்தானுங்க செய்தேன். ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒவ்வொரு தடவை போகக் கூடாது. ஒரே தடவை திட்டம் போட்டு எல்லா காரியங்களையும் செய்துவிட வேண்டும் என்று சொன்னீர்களே” என்று கேட்டார் முல்லா.

” ஆமாம், அப்படித்தான் சொன்னேன் ” . அதற்கும் இதற்கு என்ன தொடர்பு? என்று ஆச்சரியம் தோன்ற கேட்டார் முதலாளி.

” ஐயா, உங்களுக்கு உடல்நலம் சரியாக இல்லை. நோய் முற்றி இறந்து விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இறுதிப் பிரார்த்தனை செய்வதற்காக மதகுருவை ஒரு தடவை அழைக்கப் போக வேண்டும். பிறகு உங்கள் உடலைச் சமாதியில் வைப்பதற்காக புதைகுழி தோண்டுபவனை

அழைக்க ஒரு தடவை போக வேண்டும். இவ்வாறு மூன்று தடவை மூன்று காரியங்களுக்காக நடப்பதற்கு பதில் ஒரே நேரத்தில் மூன்று ஆட்களையும் அழைத்து வந்து விட்டேன்” என்றார் முல்லா.

முதலாளியின் முகத்தில் ஈயாடவில்லை.

முல்லாவின் கதைகள் – உலகத்தில் சிறந்தது

முல்லா மன்னரிடம் சில காலம் அமைச்சராக இருந்தார். முல்லாவின் மீது மன்னருக்கு அதிக அபிமானம் இருந்தது. அதனால் அவரை எப்போதுமே தன்னுடன் வைத்துக் கொண்டு அவருடன் உரையாடி மகிழ்ந்தார்.

மன்னர் உணவருந்தும் சமயத்திலெல்லாம் முல்லாவையும் தம்முடன் அமர்ந்து உணவருந்தச் சொல்வார்.

ஒருநாள் மன்னரும் முல்லாவும் வழக்கம்போல அருகருகே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.

அன்று பீன்ஸ் கறி சமைக்கப்பட்டிருந்தது.

மன்னருக்கு அன்று அதிகமான பசியாக இருந்ததால் பீன்ஸ் கறியை மிகவும் விரும்பிச் சாப்பிட்டார்.

சாப்பாட்டின் இடையே மன்னர் முல்லாவை நோக்கி, ” முல்லா உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது நீர் என்ன நினைக்கிறீர்?” என்று கேட்டார்.

” சந்தேகமே வேண்டாம். பீன்ஸ் காய்க்கு நிகராக வேறு காயைச் சொல்லவே முடியாது” என்று முல்லா ஆமாம் போட்டார்.

மன்னர் உடனே சமையற்காரனை அழைத்து ” இனி சமையலில் பீன்ஸ் கறிக்குத் தான் முதலிடம் தர வேண்டும். அன்றாடம் ஏதாவது ஒரு உருவத்தில் பீன்ஸை உணவுடன் சேர்ந்து விடு”  என்று உத்திரவிட்டார்.

நாள் தவறாமல் உணவில் பீன்ஸை சேர்த்துக் கொண்டதால் மன்னருக்கு அந்த காயின் மீது சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டது.

அன்று சாப்பாட்டின் போது பீன்ஸ் பரிமாறப்பட்டபோது மன்னர் முல்லாவை நோக்கி ” உலகத்திலேயே மிகவும் மோசமான காய் பீன்ஸ் என்றுதான் நினைக்கிறேன். நீர்; என்ன நினைக்கிறீர்?” என்று கேட்டார்.

” ஆமாம் மன்னர் அவர்களே, எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நான் அறிந்த மட்டில் இவ்வளவு மோசமான சுவையே இல்லாத பீன்ஸைப் போன்ற காயைக் கண்டதே இல்லை”  என்றார் முல்லா

” என்ன முல்லா! பத்து நாட்களுக்கு முன்னால் நான் கேட்டபோது உலகத்;திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்று சொன்னீர். இப்பொழுது தலை கீழாக மாற்றிப் பேசுகிறீரே” என்று மன்னர் கேட்டார்.

முல்லா சிரித்துக் கொண்டே ” மன்னர் அவர்களே! என்ன செய்வது? நான் தங்களிடம் அல்லவா வேலை பார்க்கிறேன். பீன்ஸிடமல்லவே” என்றார்.

முல்லாவின் கதைகள் – வெற்றியின் ரகசியம்

முல்லாவின் நண்பர் ஒருவர் முல்லாவிடம் வந்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார,; அவர் முல்லாவிடம் விடைபெற்றுக் கொண்டு எழுந்தபோது அவரை நோக்கி ” முல்லா அவர்களே தாங்கள் பலவிதத்திலும் மக்களிடம் புகழ் பெற்றவராகத் திகழுகிறீர். மன்னரிடம் உங்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருக்கிறது. இவ்வாறெல்லாம் நீங்கள் புகழும் பெருமையும் பெறுவதற்கு ஏதோ ஒரு ரகசியம் இருக்க வேண்டும். அந்த ரசகசியம் என்னவென்று தயவு செய்து எனக்குக் கூறுவீர்களா?” என்று கேட்டார்.

” உண்மையிலே என் வெற்றிக்கு அடிப்படையான ரகசியம் ஒன்று இருக்கிறது, ஆனால் அது ரகசியமாயிற்றே. அதை ஒருவரிடம் சொன்னால் அது அப்படியே பரவிக் கொண்டே போகுமே” என்று முல்லா சொன்னார்.

” முல்லா அவர்களே, என்னிடம் எந்த ரசகசியத்தைச் சொன்னாலும் உண்மையிலே அது என்னை விட்டுத் தாண்டாது தயவு செய்து அந்த ரகசியத்தை எனக்கு மட்டும் கூறுங்கள் ” என்று நண்பர் வேண்டிக் கொண்டார்.

” நான் என் வெற்றியின் ரகசியத்தை உங்களிடம் கூறினால் யாரிடமும் கூற மாட்டீர்களே”  என்றார் முல்லா.

” என்னை நம்பலாம் என்னிடமிருந்து ரகசியம் ஒரு போதும் வெளியே போகாது” என்று உறுதியாகக் கூறினார் நண்பர்.

” யாராவது உம்மிடம் வந்து ஏராளமான பணம் தருகிறேன் என்று ஆசை காட்டினால்?” என்று கேட்டார் முல்லா.

” கோடிப் பொன் தருவதாக ஆசை காட்டினால் கூட யாரிடமும் கூற மாட்டேன்” என்று திடமாகக் கூறினார் நண்பர்.

” அப்படியானால் நம்பி உங்களிடம் ரகசியத்தைக் கூறலாம். மறந்துகூட இதைப் பிறரிடம் சொல்ல மாட்டீர்கள் என்று நம்பலாம் இல்லையா?” என்று முல்லா கேட்டார்.

” என்னை முழு அளவுக்கு நம்பலாம்” என்று வாக்குறுதி கொடுக்கும் விதத்தில் நண்பர் சொன்னார்.

” உண்மையிலேயே நீர் ரகசியத்தைக் காப்பாற்றக் கூடியவர்தான், என் வெற்றிக்கான ரகசியத்தைக் கூறினால் நான் ரகசியத்தைக் காப்பாற்றத் தெரியாத முட்டாள் ஆகிவிடுவேன். அதனால் அன்பு நண்பரே என் ரகசியத்தை உமக்குக் கூறத் தயாராக இல்லை. நானும் என் ரகசியத்தைக்
காப்பாற்ற வேண்டுமல்லவா?” எனக் கூறியவாறு முல்லா அந்த இடத்தை விட்டு அகன்றார்.

முல்லாவின் கதைகள் – தளபதியின் சமரசம்!

மன்னர் முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார்.
அந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு
அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.

மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள். அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும். மாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும்.

முல்லா இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்கு மாறு அவர் மனைவிக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். படைத் தளபதிக்கோ கோபம் வந்து விட்டது.

” இது மன்னர் எனக்காக அளித்த வீடு. ஆகவே இது எனக்குச் சொந்தமானது. என் வீட்டில் என் மனைவி எப்படி வேண்டுமானாலும் மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார்?” என்று முல்லாவை அதட்டி அனுப்பி விட்டார்.

மறுநாள் முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியில் கடப்பாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்தார்.

” கீழே என்ன செய்கிறாய்?” என்று படைத் தளபதி மாடியில் இருந்து அதட்டினார்.

” கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளிவிட்டுப் புதிதாக கட்டத் தீர்மானித்திருக்கிறேன் ” என்றார் முல்லா.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த படைத் தளபதி ” என்னைய்யா முட்டாளாக இருக்கிறீரே, கீழ்வீடு முழுவதையும் இடித்தால் மேல் வீடு என்ன ஆகும் என்று யோசித்தீரா?” என்று கோபத்தோடு கேட்டார்.

” மேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை” என்று கூறி விட்டு முல்லா சுவரை இடிக்கத் தொடங்கினார்.

பதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார்.

” நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரை யொருவர் அனுசரித்தச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம்” என்றார் தளபதி.

” நான் எப்போதுமே யாருக்கும் நண்பன்தான் ” என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்.

முல்லாவின் கதைகள் – உண்மை என்பது என்ன?

ஒரு தடவை முல்லா சில பொருட்கள் வாங்குவதற்காக சந்தைக்குச் சென்றார்.

அங்கே ஒரிடத்தில் பத்துப் பதினைந்து பேர் கும்பலாகக் கூடி எதைப்பற்றியோ விவாதித்துக் கொண்டிருந்தனர்.

” இங்கே என்ன நடக்கிறது?” என்று முல்லா விசாரித்தார்.

” நல்ல சமயத்தில் வந்தீர் முல்லா அவர்களே.. நாங்கள் ஒரு விஷயத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம், ஆனால் எங்களில் யாருக்குமே எங்கள் ஆராய்ச்சி பற்றி ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. எங்கள் சந்தேகத்தைத் தீர்த்து வைக்கிறீரா?” என்று கூட்டத்திலிருந்த ஒருவர் கேட்டார்.

” உங்கள் சந்தேகம் என்ன?” என்று முல்லா கேட்டார்.

” உண்மை .. .. .. உண்மை என்ற எல்லோரும் பிரமாதமாகப் பேசுகிறார்களே, அந்த உண்மை என்பது என்ன?” என்று கூட்டத்திலிருந்த ஒருவர் வினா எழுப்பினார்.

முல்லா பெரிதாகச் சிரித்தார், ” இந்தச் சின்ன விஷயம் உங்களுக்கு விளங்கவில்லையா? உலகத்தில் எந்த ஒரு மனிதனும் சிந்திக்கவோ – பேசவோ – செயற்படவோ விரும்பாத ஒரு வரட்டுத் தத்துவந்தான் உண்மை” என்று கூறிவிட்டு முல்லா அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

முல்லாவின் கதைகள் – செயற்கரிய சாதனை

ஒருநாள் முல்லா ஒரு காட்டு வழியாக வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு முரடனிடம் அவர் சிக்கிக் கொண்டு விட்டார்.

அந்த முரடனுக்கு முல்லாவைப் பற்றியும், அவருக்கு இருக்கும் புகழைப் பற்றியும் நன்றாகத் தெரியும்.

அவரை அவமானப்படுத்த எண்ணிய முரடன் தன் கைவாளை உருவிக் கொண்டு ” முல்லா அவர்களே உம்மைப் பெரிய மேதாவி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் உம்முடைய அறிவினாலேயே தப்பிப் பிழைப்பீர் என்றும் பேசிக் கொள்கிறார்களே அது உண்மைதானா?” என்று கேட்டான்.

” மக்களுக்குப் பொய்பேசத் தெரியாது.. அவர்கள் உண்மையைத்தான் பேசுகிறார்கள்” என்றார் முல்லா.

” அப்படியானால் உமது அறிவுச் சாதுரியத்தை நிரூபித்துக் காண்பியும் பார்க்கலாம். இதோ இந்த உடை வாளால் உமது கழுத்தை வெட்டப் போகிறேன், உம்மால் தப்பிப் பிழைக்க முடியுமா ?” என்று முரடன் கேட்டான்.

” உம்முடைய கைவாளுக்குத் தப்பிப் பிழைக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை” என்று கூறிய முல்லா திடீரென வானத்தைப்பார்த்து விட்டு மகிழச்சியுடன் சிரித்தார்.

” என்ன சிரிக்கிறீர் ” என்று முரடன் கேட்டான்.

” அன்பரே, உமது கைவாள் எனது தலையைத் துண்டிக்கும் முன்பு அதோ வானத்திலே கண்களைப் பறிக்கும் அழகுடன் சிறகுகளை அசைத்துப் பறக்கும் அந்த வினோதமான தங்கப் பறவையை ஆசை தீரப் பார்த்து விடுகிறேன். அதற்குப் பிறகு நீர் எனது தலையை வெட்டி விடலாம் ” என்றார் முல்லா.

” தங்கப் பறவையா வானத்தில் பறக்கிறது?” என்ற முரடன் வியப்புடன் ஆகாயத்தை அண்ணாந்து நோக்கினான்.

முல்லா குபீரெனப் பாய்ந்து முரடன் கையிலிருந்த வாளைத் தட்டிப் பறித்து விட்டார்.

” நண்பனே, உம்முடைய உயிர் என் கையில் இருக்கிறது. நான் நினைத்தால் உமது தலையை வெட்டி வீழ்த்திவிட முடியும் ” என்றார் முல்லா.

” முல்லா அவர்களே நீர் வெற்றி பெற்றுவிட்டீர் என்னை மன்னிக்க வேண்டும்” என்று முரடன் தாழ்ந்து அவரை வணங்கினான்.

” அன்பனே, கடவுள் சித்தமில்லாமல் எந்த உயிரையும், யாரும் அழித்துவிட முடியாது என்பதை உணர்ந்து கொள்ளும் ” என்று கூறி வாளை முரடனிடம் கொடுத்து விட்டு முல்லா தன்வழி நடந்தார்.

முல்லாவின் கதைகள் – முல்லாவின் உடைவாள்!

முல்லா ஒரு தடவை அயல்நாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது.

அந்தக் காலத்தில் எவ்வளவு தொலைதூரமாக இருந்தாலும் கழுதையின் மீது சவாரி செய்துதான் செல்ல வேண்டும்.

முல்லா செல்ல வேண்டியிருந்ததோ பயங்கரமான காட்டு வழி. அங்கு கள்வர் பயமும் உண்டு. முல்லா நீண்ட தொலைவு பணயம் புறப்பட்ட செய்தியை அண்டை வீட்டுக்காரர் அறிந்து மிகவும் கவலைப்பட்டார்.

அவர் முல்லாவை நோக்கி முல்லா அவ்வளவு நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்களே. வழியில் கள்வர் பயம் அதிகமாயிற்றே. நீர் பாதுகாப்பாகச் செல்ல ஏதாவது ஏற்பாடு செய்து கொண்டீரா? என்று கேட்டார்.

” கள்வன் என்னை என்ன செய்வான்? என்னிடம் அப்படியொன்றும் பணம் காசு கிடையாதே ?” என்றார் முல்லா.

” கள்வனுக்கு அதெல்லாம் கணக்கில்லை. உம்மிடம் காசு இல்லை என்றால் உமது கழுதையைப் பிடுங்கிக் கொள்வான். கழுதை இல்லாமல் உங்களால் தொடர்ந்து எவ்வாறு பயணம் செய்ய முடியும்?” என்று அண்டை வீட்டுக்காரர் கேட்டார்.

அவர் சொன்னதில் இருந்த உண்மையை முல்லா உணர்ந்து கொண்டார்.

” நீங்கள் சொல்வது சரிதான் நான் என்ன செய்வது? பிரயாணத்தைத் தவிர்க்க முடியாதே?” எனக் கவலையுடன் கூறினார் முல்லா.

” கவலைப்படாதீர்கள் என்னிடம் நல்ல உடைவாள் ஒன்று இருக்கிறது. அதைக் கையோடு எடுத்துச் செல்லுங்கள். திருடன் எதிர்ப்பட்டால் இந்த உடைவாளைப் பயன்படுத்தி அவனை விரட்டிவிட்டுக் கழுதையைக் காப்பாற்றுங்கள் ” என்ற கூறி உடைவாளையும் அவரிடன் அளித்தார்.

முல்லாவுக்கு வாள் எடுத்துச் சண்டை போட்டுப் பழக்கம் இல்லை என்றாலும் அண்டை வீட்டுக்காரர் அன்போடு தருவதை மறுக்கக் கூடாதே என்று அவருடைய உடைவாளை வாங்கி இடுப்பில் கட்டிக் கொண்டார்.

பிறகு அவர் பிரயாணத்தைத் தொடர்ந்தார்.

ஒரு காட்டு வழியாக முல்லா கழுதைமீது அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.

நான்கு திருடர்கள் அவரை வழிமறித்துக் கொண்டனர்.

” கிழவனாரே, உம்மிடம் உள்ள விலை உயர்ந்த பொருளைக் கொடுத்துவிடும். உம்மை உயிரோடு அனுப்பி விடுகிறோம் ” என்று திருடர்கள் கேட்டனர்.

” என்னிடம் காசு பணமெல்லாம் ஏதுவும் கிடையாதே நான் ஒரு பரம ஏழை” என்றார் முல்லா.

” அப்படியானால் உம்முடைய கழுதையை எங்களிடம் ஒப்படைத்து விட்டு நடந்து செல்லும் ”  என்ற கள்வர்கள் மிரட்டினர்.

” கழுதை இல்லாமல் இந்த வயதான காலத்திலே என்னால் நடந்து செல்ல முடியுமா?” என்று கூறிச் சிறிது யோசனை செய்தார் முல்லா.

” ஒரு ஏற்பாடு செய்யலாம் என்று இருக்கிறேன். உங்களுக்கு திருப்பதியாக இருக்கும் என்று தோன்றுகிறது” என்றார் முல்லா.

” என்ன யோசனை?” என்று கள்வர்கள் கேட்டனர்.

” என்னிடம் ஒரு உடைவாள் இருக்கிறது கழுதைக்குப் பதிலாக அதைப் பெற்றுக் கொண்டு என்னை விட்டு விடுகிறீர்களா?” என்றார் முல்லா.

கள்வர்கள் உடைவாளை வாங்கிப் பார்த்தனர் விலை மதிப்புள்ள அருமையான வாள் அது. கள்வர்களின் தொழிலுக்கும் அது பயன்படும். அதனால் அவர்கள் மகிழ்ச்சியோடு உடை வாளைப் பெற்றுக் கொண்டு முல்லாவை கழுதையுடன் தொடர்ந்து போக அனுமதித்தனர். பிரயாணத்தை முடித்துக் கொண்டு முல்லா ஊர் திரும்பினார்.

வீட்டுக்கு வந்த முல்லாவை அண்டை வீட்டுக்காரர் மகிழ்ச்சியுடன் வரவேற்று ” பிராயணம் எவ்வாறு இருந்தது” என விசாரித்தார்.

” எதிர்பார்த்ததைவிட நன்றாக இருந்தது” என்றார் முல்லா.

” வழியில் கள்வர் தொல்லை ஏதாவது ஏற்ப்பட்டதா?” என அண்டை வீட்டுக்காரர் கேட்டார்.

” அதை ஏன் கேட்கிறீர்கள். நான்கு திருடர்கள் வந்து என்னை வளைத்துக் கொண்டார்கள். நல்ல வேளையாக நீங்கள் கொடுத்த உடைவாள் இருந்தது. அதை உபயோகித்து நிலமையைச் சமாளித்து விட்டேன் ” என்றார் முல்லா.

” உடைவாளைப் பயன்படுத்தி அந்தக் கள்வர்களை விரட்டி அடித்திருப்பீர் என்று நினைக்கிறேன் ” என்றார் அண்டை வீட்டுக்காரர்.

” உங்கள் உடைவாள் தான் என் உயிரைக் காப்பாற்றி கழுதையை மீட்டுத் தந்தது. உங்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் ” என்று முல்லா அண்டை வீட்டுக்காரருக்கு நன்றி கூறினார்.

” உடைவாள் உங்களிடம் பத்திரமா இருக்கிறதல்லவா? இனி உமக்கு உடைவாள் தேவைப்படாது. கொடுத்து விடுங்கள் ” என்றார் அண்டை வீட்டுக்காரர்.

” உடைவாள் என்னிடம் ஏது?” அதைத்தான் அவர்களிடம் கொடுத்துவிட்டேனே என்றார் முல்லா.

” கள்வனிடம் கொடுத்து விட்டீரா? அவர்களிடம் ஏன் உடைவாளைக் கொடுக்க வேண்டும். உடைவாளைக் கொண்டு சண்டைபோட்டு கள்வர்களை விரட்டியிருப்பீர் என்றல்லவா நான் நினைத்தேன்” என்று வியப்பும் திகைப்பும் தோன்றக் கேட்டார் அண்டை வீட்டுக்காரர். காட்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியை முல்லா விரிவாக் எடுத்துச் சொன்னார்.

அண்டை வீட்டுக்காரருக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

முல்லாவின் கதைகள் – ஒரு நல்ல செய்தி!

அந்த ஊரில் ஒரு வழக்கம் உண்டு யாராவது ஒருவர் நல்ல செய்தியொன்றைச் சொன்னால் அதற்காக அவர்களுக்கு பணம் வசூலித்து அன்பளிப்பாகக் கொடுப்பார்கள்.

அந்த வழக்கம் ஒருவிதமான மூடநம்பிக்கை என்பது முல்லாவின் கருத்து. அந்த மக்களுக்குப் புத்தி கற்பிக்க வேண்டும் என்று முல்லா கருதினார்,

ஒருநாள் அவர் சந்தை கூடும் இடத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த ஒர் இடத்தில் நின்று கொண்டு ” அன்பார்ந்த பொதுமக்களே உங்களுக்குச் சொல்வதற்காக அருமையான நல்ல செய்தி ஒன்றை வைத்திருக்கிறேன் எனக்குப் பரிசு தருவதற்காக உடனே பணம் வசூலியுங்கள் ” என்று கூச்சல் போட்டார்.

முல்லா ஒரு செய்தியினைச் சொல்லுகிறாார் என்றால் உண்மையிலேயே அது நல்ல செய்தியாகத் தான் இருக்கும் என்ற நம்பிய மக்கள் அவசர அவசரமாக பணம் வசூலித்து ஒரு கணிசமான தொகையை முல்லாவிடம் கொடுத்தனர்.

அந்த அன்பளிப்புத் தொகையை வாங்கி எண்ணி சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்ட முல்லா மக்களை நோக்கி அன்பார்ந்த பொதுக்களே நான் கூற இருக்கும் நல்ல செய்தி இதுதான் இந்த முல்லா ஒரு மகனுக்குத் தந்தையாகியிருக்கிறார் என்று கூறிவிட்டு வீட்டை நோக்கி நடக்க
ஆரம்பித்தார்..

முல்லாவின் கதைகள் – இருட்டிலும் ஒலி கேட்கும்

முல்லா ஒரு மாலை நேரத்தில் தன் நண்பர் ஒருவர் வீட்டிற்குச் சென்று அவருடன் நேரம் போனது தெரியாமல் பேசிக் கொண்டிருந்தார்.

இருட்டாகி விட்டது நண்பருக்கு மெழுகுவர்த்தியை எங்கு வைத்தேன் என்று தெரியவில்லை. இருட்டில் அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தார்.

” என்ன சமாச்சாரம் ” என்று கேட்டார் முல்லா.

” மெழுகுவர்த்தியை எங்கோ வைத்து விட்டேன், இருட்டில் உட்கார்ந்தா நாம் பேசிக் கொண்டிருப்பது?” என்று நண்பர் வருத்தத்தோடு கூறினார்.

” இதற்காகவா, கவலைப்படுகிறீர்கள் நமது பேச்சு ஒலி இருட்டில் கூட நம் இருவர் காதுகளில் விழும் என்பதை மறந்து விட்டீரா?” என்றார்.

முல்லாவின் சந்தர்ப்பத்துக்கு ஏற்ற சாதுரியமான நகைச்சுவையை அனுபவித்து ரசித்த நண்பர் மகிழ்ச்சியோடு சிரித்துக் கொண்டார்.

முல்லாவின் கதைகள் – மன்னின் மதிப்பு

ஒரு நாள் துருக்கி மன்னனும் முல்லாவும் அரண்மனைப் பழத்தோட்டதில் உலாவிக்கொண்டிருந்தனர்.

துருக்கி மன்னன் முல்லாவை நோக்கி ” முல்லா அவர்களே உங்களைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுகிறார்கள்! ஒரு மனிதனைப் பார்த்த மாத்திரத்திலேயே அவனை மனத்திற்குள் எடை போட்டுப் பார்த்து அவடைய மதிப்பு என்ன என்ற கூறி விடுவீர்களாமே!
” என்று கேட்டார்.

” அல்லாவின் அருளால் எனக்கு அப்படிப் பட்ட ஒரு ஆற்றல் இருக்கிறது என்று தான் நான் நினைக்கிறேன் ” என்று முல்லா அடக்கமாகப் பதில் சொன்னார்

” சரி, இப்போது நீர் என்னை உமது மனத்தில் எடைபோட்டுப் பார்த்து என்னுடைய உண்மையான மதிப்பு என்ன என்று கூறும் பார்க்கலாம் ” என்று மன்னர் கேட்டுக் கொண்டார்.

” முல்லா மன்னரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்தார், பிறகு அடக்கமான குரலில் மன்னர் பெருமான் அவர்களே தங்களுடைய உண்மையான மதிப்பு பத்துப் பொற்காசுகள்தான் ” என்றார்

” மன்னருக்குத். தூக்கிவாரிப் போட்டது. முல்லா தன்னை வேண்டுமென்றே அவமரியாதை செய்கிறார் ” என்று ஆத்திரப்பட்டார்.

” என்னை நீர் எவ்வளவு கேவலப்படுத்தி விட்டீர் தெரியுமா? என் இடுப்பில் அணிந்திருக்கும் கச்சையின் மதிப்பே பத்துப் பொற்காசுகள் இருக்குமே” என்ற சீற்றத்துடன் கேட்டார்.

முல்லா சீற்றம் அடையாமல் ” மன்னர் பிரான் அவர்களே நான் சொன்னது தங்களது கச்சையின் மதிப்பைப் பற்றித்தான். தனிப்பட்ட உங்கள் உடலுக்கு ஒரு காசுகூட மதிப்புப் போட முடியாது இது உங்களைப் பற்றி மட்டும் கூறப்படுவது அல்லா. இந்த உடல் எத்தனை காலம் இந்த உலகில் நடமாட முடியும். உடலிருந்து உயிர் அகன்ற விட்டல் மன்னர் என்ற முறையில் இன்று உங்களுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் தொடர்ந்த நீடிக்குமா? அப்படிப்பட்ட அழிவும் ஒரு பொருளான உடம்புக்கு என்ன மதிப்பு இருக்க முடியுமா?” என்று முல்லா பதில் அளித்தார்.

முல்லாவின் அந்தச் சாதுரியமான பதில் துருக்கி மன்னரின் ஆத்திரத்தை அடக்கி அவரைச் சிந்திக்க வைத்தது.

முல்லாவின் கதைகள் – பிரார்த்தனையும் மனிதனும்!

பள்ளிவாசலில் தொழுகை நேரம். முஸ்லீம்கள் பலர் ஒன்று சேர்ந்து தொழுகையில் பங்கு கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார்.

தொழுது கொண்டிருந்த ஒருவன் திடீரென்று தனக்கு அருகே தொழுகையில் ஈடுபட்டிருப்பனைப் பார்த்து ” அடடா நினைவு மறதியினால் என் வீட்டுக் கதவை மூடாமல் வந்து விட்டேன் ” என்றான்.

” தொழுகை நேரத்தில் நீ பேசியதானல் என் பிரார்த்தனையைக் கலைத்து விட்டாய். அதனால் நீ மறுபடியும் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும் ” என்றான் அவன்.

” நீயுந்தான் இப்போது என்னுடன் பேசி பிரார்த்தனையைக் கலைத்துக் கொண்டாய். நீயுந்தான் மீண்டும் தொழுகையில் ஈடுபட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் ” என்றான் மற்றவன். அவர்கள் உரையாடலைக் கேட்டு முல்லா மெல்லச் சிரித்தார்.

” ஏன் சிரிக்கிறீர் ” என அந்த இருவரும் கேட்டனர்.

” பொதுவாக மனித சுபாவத்தை நினைத்துப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது. மனிதன் தான் ஒழுங்காக முறையாகப் பிரார்த்தனையில் ஈடுபடுவதைவிட மற்றவன் ஒழுங்காகப் பிரார்த்தனை செய்கிறானா என்பதைக் கவனிப்பதில் அதிக அக்கறை செலுத்துகிறான் ” என்றார் முல்லா. அந்த இரண்டு பேரும் வெட்கமடைந்து தலைகுனிந்து கொண்டார்கள்.

முல்லாவின் கதைகள் – பக்கத்து வீட்டுக்காரியின் மோப்பம்

முல்லாவின் வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு பெண்மணி வசித்து வந்தாள். முல்லா வீட்டில் என்ன சமையல் செய்தாலும் அவள் அதை மோப்பம் பிடித்து தனது சிறிய மகளை அனுப்பி சமைத்த பொருளை கொஞ்சம் கேட்டு வாங்கி வரச் சொல்வாள். அவளுடைய அந்த விரும்பத்தகாத வழக்கம் முல்லாவுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதை எப்படித் தடுப்பது என்றும் விளங்கவில்லை. ஒருநாள் முல்லாவுக்கு ஞகோழிக்குஞ்சு சூப் தயாரிக்கச் செய்து சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருந்தது. ஞசப் ஞதயார் செய்யச் சொல்லலாம் என மனைவியை அழைத்தார். மனைவி அவர் முன்னால் வந்து நின்றபோது முல்லாவுக்கு அண்டை வீட்டுகாரியின் நினைவு வந்தது. வீட்டில் சூப் செய்யத் தொடங்கினால் அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்துக் கொண்டு சூப் வாங்க ஆள் அனுப்பி விடுவாளே என்ற எண்ணம் அவருக்கு ஏற்ப்பட்டது. சூப் இப்போது தயார் செய்ய வேண்டாம் என்று கூறி மனைவியை அனுப்பி விட்டார். சற்று நேரத்திற்கெல்லாம் கதவு தட்டப்படும் ஒசை கேட்டது. முல்லா எழுந்து சென்று கதவைத் திறந்தார். அண்டை வீட்டுக்காரியின் சின்னப் பெண் கையில் ஒரு கிண்ணத்துடன் வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்தாள். என்ன ? என முல்லா விசாரித்தார். உங்கள் வீட்டில் கோழி சூப் தயாரித்தீர்களாமே? அம்மா கொஞ்சம் வாங்கிக் கொண்டு வரச்சொன்னாள் என்று சிறுமி கூறினாள். முல்லா உரத்த குரலில் ஹே ஹே என்று சிரித்தார். உள்ளேயிருந்த மனைவி ஒடிவந்து உங்களுக்கு என்ன வந்துவிட்டது? ஏன் இப்படிச் சிரிக்கிறீர்கள் ? என்று கேட்டாள்.
ஞஇந்த வினோதத்தைப் பார் ? இத்தனை காலமாக நாம் சமையல் செய்யும்போதுதான் அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்து நாம் சமைக்கும் பொருளில் கொஞ்சம் வாங்கி வரச் சொல்லுவாள். இப்போது நான் சூப் செய்யச் சொல்ல வேண்டும் என்று மனத்திலேதான் நினைத்தேன். இதைக்கூட அண்டை வீட்டுக்காரி மோப்பம் பிடித்து சூப் வாங்கி வரச் சொல்லி மகளை
அனுப்பியிருக்கிறட்ள் பார் என்று கூறிவிட்டு முல்லா சிரிக்கலானார்.

முல்லாவின் கதைகள் – நம்பிக்கை

முல்லாவிற்கு அன்றுதான் திருமணம் முடிந்திருந்தது.புதுமனைவி மற்றும் உறவினர்களுடன் தனது ஊருக்கு புறப்பட்டார்.வழியில் பெரிய ஆற்றை கடந்து செல்லவேண்டும்!ஒரு பெரிய் படகில் மனைவி மற்றும் உறவினர்களுடன் ஆற்றை கடந்துசெல்ல புறப்பட்டார்கள்.படகு நடுஆற்றை கடக்கும் போது பெரிய சுழல்க்காற்று வீசி படகு அங்கும் இங்குமாக் தள்ளாடியது.முல்லாவை தவிர அனைவரும் பயத்தால் அலறி கொண்டிருந்தனர். முல்லா மட்டும் அமைதியாக இருந்தார்.இதை பார்த்த முல்லா மனைவிக்கு மிகவும் ஆச்சரியம்!முல்லாவிடமே கேட்டுவிட்டாள்.முல்லா பதில் ஏதும் பேசாமல் மனைவி அருகில் சென்று தன் இடுப்பில் இருந்த கூரிய கத்தியை எடுத்து தன் மனைவியின் கழுத்தில் வைத்தார்.மனைவி எவ்வித சலனுமுமின்றி இருந்ததை கண்ட முல்லா மனைவியை பார்த்து இந்த அபயகரமான கத்தியை பார்த்து உனக்கு பயமில்லையா? என கேட்டார்.அவரது மனைவி,”கத்தி வேண்டுமானால் அபயகரமானதாக இருக்கலாம்.ஆனால் அதை கையில் ஏந்தி இருப்பவர் எனது அன்பான கணவர்” என்றாள்.உடனே முல்லா பதிலளித்தார்,”அதுபோலத்தான் ஆற்றில் உருவான சூறாவளி அபயகரமானதாக இருக்கலாம்.ஆனால் அதை உருவாக்கிய அல்லா என் மீது அன்பு கொண்டவர் நமக்கு எந்த தீங்கும் நேரிடாது என்றாராம்!! ந்ம்பிக்கையே வாழ்க்கை!

முல்லாவின் கதைகள் – தளபதியின் சமரசம்

மன்னர் முல்லாவுக்கு ஒரு வீட்டுப் பகுதியை அன்பளிப்பாகக் கொடுத்தார்.
அந்த வீட்டுக்கு மாடி உண்டு. அந்த மாடிப்பகுதியை மன்னர் ஒரு படைத் தளபதிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார்.

மாடியில் இருக்கும் படைத் தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பாள்.
அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்.

மாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும்.

முல்லா இரண்டு மூன்று தடவை படைத் தளபதியைச் சந்தித்து கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்கு மாறு அவர் மனைவிக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். படைத் தளபதிக்கோ கோபம் வந்து விட்டது.

இது மன்னர் எனக்காக அளித்த வீடு. ஆகவே இது எனக்குச் சொந்தமானது. என் வீட்டில் என் மனைவி எப்படி வேண்டுமானாலும் மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார் ? என்று முல்லாவை அதட்டி அனுப்பி விட்டார்.

மறுநாள் முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியில் கடப்பாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்தார்.

கீழே என்ன செய்கிறாய் ? என்று படைத் தளபதி மாடியில் இருந்து அதட்டினார்.

கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளிவிட்டுப் புதிதாக கட்டத் தீர்மானித்திருக்கிறேன் என்றார் முல்லா.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த படைத் தளபதி என்னைய்யா முட்டாளாக இருக்கிறீரே, கீழ்வீடு முழுவதையும் இடித்தால் மேல் வீடு என்ன ஆகும் என்று யோசித்தீரா ? என்று கோபத்தோடு கேட்டார்.

மேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி விட்டு முல்லா சுவரை இடிக்கத் தொடங்கினார்.

பதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார்.

நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரை யொருவர் அனுசரித்தச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என்றார் தளபதி.

நான் எப்போதுமே யாருக்கும் நண்பன்தான்! என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்

முல்லாவின் கதைகள் – எண்ணங்களை பூட்ட வேண்டாம்

முல்லா ஒரு புதிய சுவர் கடிகாரம் வாங்கி வந்தார்.அதை சுவரில் மாட்ட ஆணி அடிக்க அவரிடம் சுத்தியல் இல்லை! பக்கத்து வீட்டுக்காரரிடம் கேட்க வேண்டும்.நேரம் இரவாகிவிட்டது.இந்நேரம் போய் கேட்பது சரியல்ல ம்றுநாள் காலையில் கேட்க்கலாம் என் நினைத்து தூங்க சென்றார்.மறுநாள் காலை எழுந்ததும் கடிகாரம் நினைவுக்கு வந்தது.பக்கத்து வீட்டுக்காரரிடம் சுத்தியல் கேட்க எண்ணியபோது அன்று வெள்ளிக்கிழமை என்பது நினைவுக்கு வந்தது! இன்று போய் கேட்டால் ஏதாவது நினைத்துக்கொள்வாரோ? என எண்ணி அன்றும் சுத்தியல் வாங்கவில்லை!.மறுநாள் போய்கேட்க முடிவு செய்து பக்கத்து வீட்டை நெருங்கினார்.பக்கத்து வீட்டில் நிறைய விருந்தினர்கள் வந்திருப்பதை பார்த்து கேட்காமலே திரும்பினார்.இப்படி பல காரணங்களினால் ஒரு வாரமாகியும் முல்லாவால் கடிகாரத்தை மாட்ட முடியவில்லை! அன்று வாங்கி வந்த கடிகாரம் அவரை பார்த்து சிரிப்பது போல இருந்த்து.உடனே விடுவிடு என பக்கத்து வீட்டுக்கு சென்றார்.பக்கத்து வீட்டுக்காரரைப் பார்த்து”உன் சுத்தியலை நீயே வைத்துக்கொள்! எனக்கு தேவையில்லை”பொல்லாத சுத்தியல்!நீ மட்டும் தான் சுத்தியல் வைத்திருக்கின்றாயா?” என கோபமாக பேசினார்.பக்கத்துவீட்டுக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை!பரிதாபமாக முல்லாவை பார்த்தார். ந்ம்மில் பலரும் இப்படித்தான் மனதில் உள்ளதை தெளிவாக பேசாமல் மனதில் ஒன்றை வைத்து பேசி பிரச்சினைகளுக்கு காரணமாகின்றோம் என்பதே இக்கதையின் நீதி!!

முல்லாவின் கதைகள் – மாற்றும் மனிதன்

முல்லாவுக்கு ஒரு பால்கன் பறவை கிடைத்தது. அது புறாவைப் போல இருக்கும். முல்லா இதற்கு முன் இப்பறவையைப் பார்த்ததில்லை. அவருக்கு இப்பறவையின் அகண்ட தாடையும், வளைந்த அலகும் அதிக அளவில் இருக்கும் சிறகும் ரசிக்கத் தக்கதாக இல்லை.

”என்ன இருந்தாலும் புறாவின் அழகு வருமா? ஏ பறவையே,உன்னையும் புறா போல அழகாக ஆக்குகிறேன்,”

என்று கூறிக்கொண்டே, அதிகமாகவுள்ள இறகுகளைப் பிய்த்தெடுத்தார். வளைந்த அலகை ஒரு சிறு உளி கொண்டு செதுக்கி வளைவைக் குறைத்தார்.
ஒரு கத்திரியை எடுத்து அதன் அகண்ட தடையின் அளவைக் குறைக்க முயன்றார்.
பின் திருப்தியாக,’ ‘இப்போதுதான் நீ புறா போல அழகாக இருக்கிறாய்,” என்றார்.

மனிதர்கள் அனைவரும் இப்படித்தான் இருக்கிறோம். நம்மிடம் இருந்து யாரேனும் ஏதாவது விசயத்தில் மாறுபட்டு இருந்தால், அது சரியா, தவறா என்று பார்க்காமல் நம்முடைய கருத்துக்கு ஏற்றார்போல அவர்களையும் மாற்ற முயற்சி செய்கிறோம்.

பால்கன் பறவையின் அழகை ரசிக்கத்தவறிய முல்லா போல, நாமும் மற்றவர்களிடம் உள்ள நல்ல விசயங்களை ரசிக்கத் தவறி விடுகிறோம். நம்மிடமிருந்து வித்தியாசமாக இருந்தால் அதை ஒரு தவறாகவே கருதுகிறோம்; அதை நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. நம் வழிக்கு அனைவரும் வரவேண்டும் என எதிர்பார்க்கிறோம். இதனால் தான் பிரச்சினைகளே!.

நம் பால்கன் பறவையை பால்கனாகவே பார்க்க வேண்டும்! |-)

முல்லாவின் கதைகள் – முல்லாவின் காதலி

முல்லா நஸ்ருதீன் ஒரு பெண்ணைக் காதலித்தார். முல்லாவுக்கு எல்லாம் நல்லபடி அமைந்திருந்தது. ஆனால் அவருடைய கண்பார்வை மங்கலானது.

ஆகவே அவர் கண் டாகடரிடம் கேட்டார் : “ கண்ணுக்கு சோடாபுட்டி போட்டுக் கொண்டிருந்தால் அந்தப் பெண் எப்படி என்னைக் காதலிப்பாள் ? அவளுடைய முகம் கூட எனக்கு சரியாகத் தெர்யவில்லையே! நான் கண்ணாடி போட்டபடி அவள் எதிரில் போகக் கூடாது : உடனே என்னை நிராகரித்து விடுவாள் . என்ன செய்யலாம் ? “

டாக்டர் ஆலோசனை கூறினார் : “ ஒன்று செய்யலாமே! வெகு தொலைவு வரை உம்மால் பார்க்க முடிவது போல் நடியும் . இப்படி அவள் நம்பும்படி ஏதாவது செய்து பாரும் ! “

முல்லா இதை செய்து பார்த்துவிடுவது என்று முடிவு செய்தார். ஒரு நாள் பூங்காவில் உட்கார்ந்திருந்தபோது அவருக்கு ஒரு யுக்தி தோன்றியது . தூரத்தில் இருந்த ஒரு மரத்தில் ஒரு தையல் ஊசியைக் குத்திவிட்டு வந்தார்.நல்ல கண்பார்வை இருந்தால் கூட அவ்வளவு தொலைவில் உள்ள ஊசியை யாராலும் பார்க்க முடியாது.

முல்லா விண்மீ ன்கள் பளிச்ச்சிடும் இரவில் அன்று அந்த மரத்திலிருந்து 100 அடி தொலைவில் தன் காதலியுடன் உட்கார்ந்திருந்தார், திடிமென அவளிடம் “ அதோ அந்த மரத்தில் பொருப்பில்லாமல் யாரோ ஒரு தையல் ஊசியை குத்தி வைத்திருக்கிறார்களே ! “ என்று கூறினார்.

அப்பெண் முல்லாவின் கண்பார்வையின் மேல் ஏற்க்னவே சந்தேகம் கொண்டிருந்தாள். அப்படி இருக்க இவ்வளவு தொலைவில் ஒரு ஊசி இருப்பதை அவரால் எப்படி காண முடிந்தது என்று ஐயம் கொண்டாள். மேலும் அவளாலும் அதை பார்க்க முடியவில்லை ; அந்த மரத்தையும் கூட சரியாகப் பார்க்கவில்லை . “ நஸ்ருதீன் , எனக்கு ஊசி ஒன்றும் தெரியவில்லையே,” என்று கூறினாள்.

முல்லா பந்தாவாக எழுந்து , “ நான் போய் அதை எடுத்து வருகிறேன் “, என்று கூறியபடி நடக்கலானார். ஓன்றிரண்டு அடி வைத்ததுமே தொப்பென்று தரையில் விழுந்தார். ஏனேன்றால் எதிரில் ஒரு எருமை மாடு நின்று கொண்டிருந்தது. இது அவர் கண்ணுக்குத் தெரியவில்லை.

ஓஷோ : எந்த வேஷமும் நெடு நேரம் நிலைத்திருக்காது! உங்கள் வேஷத்தை மக்கள் கண்டுபிடிக்க வெகுனநேரமாகாது. ஆனாலும் மரியாதைக்காக நீங்கள் வேஷம் போடுகிறீர்கள் என்று உங்களிடம் அவர்கள் சொல்லுவதில்லை. ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொள்வது நாகரீகமாகிவிட்டது

முல்லாவின் கதைகள் – கற்பனை காதலி

ஒரு தடவை முல்லா நசுருதீனிடம் அவருடைய நன்பன் கிண்டலாக , “ நசுருதீன், உன்னுடைய மனைவி இரவில் தன்னுடைய காதலனுடன் உன்னுடைய மாந்தோப்பில் காதல் புரிந்து கொண்டிருக்கிறாள் “ என்று சொன்னான்.

முல்லா கம்பீரமானார். “ எப்போது அவள் வ்ருகிறாள் ? “ என்று கேட்டார்.

“ இங்கு ஏறத்தாழ இரவு ஒருமணிக்கு” என்றான் அவன்

அந்த நாள் நசுருதீனின் பொழுது மன அமைதியற்றுக் கழிந்தது. இரவு உணவுகூட சாப்பிடவில்லை.இரவு பத்து மணி அடித்தது. தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்று ஒரு மரத்தின் மறைவில் உட்கார்ந்து கொண்டார். “ இன்று அவர்கள் இருவரையும் தீர்த்துக் கட்டுவது “ என்று முடிவு செய்திருந்தார்.

நேரம் போய் கொண்டே இருந்தது.

அவரது மனைவியும் வரவில்லை. அவளது காதலனும் வரவில்லை.

இரவின் அமைதியில் ஒரு மணி அடித்தது.

அப்போதுதான் அவருக்கு நினைவு வந்தது. “ தனக்கு திருமணம் ஆகவில்லை “ என்பது

முல்லாவின் கதைகள் – நாய் வால்

முல்லா அவசரமாக ஒரு விலங்கு வைத்தியரிடம் வந்தார்.
அவருடன் அவருடைய நாயும் இருந்தது.
வைத்தியர் முல்லாவிடம் நலம் விசாரித்து விட்டு நாய்க்கு உடல் நலம் இல்லையா எனக் கேட்டார்.
முல்லா, ”நாய் நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால் அதன் வாலை முழுமையாக நறுக்கி விட வேண்டும்,” என்றார்.
மருத்துவருக்கு ஒன்றும் புரியவில்லை,’  ‘முல்லா, உன் நாய் அழகாக இருக்கிறது.
அதன் வாலை அறுத்தால் மிக அசிங்கமாக இருக்கும். ஏன் அதன் வாலை நறுக்க வேண்டும் என்கிறாய்?
தயவு செய்து அதன் வாலை நறுக்க வேண்டாம்,” என்றார்.
முல்லா வைத்தியரின் காதருகே குனிந்து, ”நமக்குள் இந்த ரகசியம் இருக்கட்டும், யாரிடமும் சொல்ல வேண்டாம்.
நாளை என் வீட்டிற்கு என் மாமியார் வருகிறார்.
எனக்கு அவரைக் கொஞ்சமும் பிடிக்காது.
எனவே அவர் வரும்போது அவரை வரவேற்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாதபடி ஏற்பாடு செய்து விட்டேன்.
ஆனால் இந்த நாய் மாட்டும் அவர் வரும்போது வாலை ஆட்டி வரவேற்பு தெரிவித்து விடும்.
அதற்காகத்தான் இந்த ஏற்பாடு,” என்றார்.