முல்லாவின் கதைகள் – நாத்திகன் பட்ட அவஸ்த்தை

4.3/5 - (6 votes)

முல்லா வசித்துவந்த ஊரில் ஒரு நாத்திகன் வசித்து வந்தான்.

கொஞ்சமும் தெய்வ நம்பிக்கை இல்லாதவன். தெய்வ நம்பிக்கை உடைய முல்லா போன்றவர்களை எப்பொழுது பார்த்தாலும் கேலியும் கிண்டலும் செய்து பரிகசித்துக்கொண்டிருப்பான்.

ஓரு நாள் சந்தைக் திடலில் அந்த நாத்திகன் நின்று கொண்டிருந்தான்.

அந்தப் பக்கமாக முல்லா நடந்து வந்து கொண்டிருந்தார். அங்கே திரளாகக் கூடியிருந்த மக்களுக்கு மத்தியிலே முல்லாவை அவமானப்படுத்த வேண்டும் என்று எண்ணினான்.

முல்லா அருகே வந்ததும், ” முல்லா அவர்களே உலகத்திலேயே நீங்கள்தான் முற்றம் துறந்த துறவி என்று மக்கள் பேசிக்கொள்கிறார்களே? அப்படி எதை நீர் துறந்து ஞானியானீர் ” என்று நாத்திகன் கேலியாகக் கேட்டான்.

” எந்த முட்டாள் அந்த மாதிரி சொன்னான் என்னைவிட மிகவும் மகத்துவம் வாய்ந்த துறவி ஒருவர் இருக்கிறாரே!” என்றார் முல்லா.

நாத்திகனுக்கு மட்டுமல்ல அங்கு நடமாடிக் கொண்டிருந்த மக்களகட்க்கும் முல்லா சொன்ன தகவல் ஆச்சரியத்தை விளைவித்தது.

முல்லாவையும்விட மேலான தறவி இந்த ஊரில் யார் இருக்க முடியும் என்று அவர்களுக்கு விளங்கவில்லை.

நாத்திகனும் அந்தத் தகவலைக் கேட்டு வியப்படைந்து ” முல்லா இந்த ஊரில் உள்ள அந்த மகத்துவம் வாயந்த துறவி யார்?” என்ற கேட்டான்.

” அந்தத் துறவி நீர் தான் ” என்று முல்லா கூறியதைக் கேட்ட நாத்திகன் அதிர்ச்சியடைந்து விட்டான்.

” நானா அந்தத் துறவி அது எப்படி?” என்று கேட்டான்.

” என்னைப் போன்ற சாதாரணத் துறவிகள் கேவலம் உலகத்தில் இருக்கும் பொருட்களைத் தான் துறப்பது வழக்கம் நீரோ கடவுளையே துறந்து விட்ட துறவியாயிற்றே உம்மை மிஞ்சக் கூடிய துறவி உலகத்தில் ஏது?” என்று முல்லா பதிலளித்தார். அங்கே சூழ்ந்திருந்த மக்கள் நாத்திகனைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்க ஆரம்பித்தனர். நாத்திகன் தலைகுனிந்தவாறு அந்த இடத்தை விட்டு வேகமாக அகன்று விட்டான்.

Leave a comment