மரியாதை இராமன் கதைகள் – நீயா கொலைகாரி?

4.2/5 - (33 votes)

மரியாதை ராமனுக்குப் பேரும் புகழும் சேரச் சேர, ராமன் அந்த ஊரில் மட்டும் அல்ல, அண்டை நாடுகளிலும் பிரபலம் ஆனான்.

வழக்கு என்றால், நீதிபதி முதல் கடைசி ஆள்வரை ஒரே கோணத்தில்தான் ஆராய்வார்கள். ஆனால், மரியாதை ராமன் யார் மீது கொஞ்சம்கூட சந்தேகம் இல்லையோ அவரைப் பிடிப்பான். கிடுக்கியில் மாட்டுவதுபோல் இரண்டு மூன்று கேள்விகளைப் போடுவான். கோணி மூட்டையில் இருக்கும் பூனைக் குட்டிகள் வெளியே வந்துவிடும். அதாவது ரகசியம் வெளியே வந்துவிடும்.

 

ராமன் ஒழுங்காக வேலைக்குச் செல்லாமல், வழக்கு, நீதி, வாதி, பிரதிவாதி என்று தன் பொன்னான இளைமையைப் பாழ் அடித்துக் கொள்கிறான் என்பது ராமனின் அப்பாவின் அசைக்க முடியாத நம்பிக்கை.

அவ்வப்போது ராமனுக்கும் அவன் அப்பாவுக்கும் இந்தப் பிரச்சினையாலேதான் சண்டைவரும். “ஏண்டா! நீ பாட்டுக்கு இன்னார்தான் குற்றவாளி என்று சமூக அந்தஸ்தில் பெரியவரைக் குறிப்பிடுவாய். காவலர்களும் கைது செய்து விடுவார்கள். ஆனால் அதன் பின்விளைவு என்ன தெரியுமா?

தண்டனை அனுபவிப்பவன் எதிராளியைப் பார்த்து “இந்த தடவை தப்பிச்சிட்டேன்னு நினைக்கிறியா? தண்டனைக்காலம் முடிவதற்குள், என் ஆட்கள் பழிவாங்கி விடுவார்கள். கண்டதுண்டமாக வெட்டி காக்கைக்கும், கழுகுக்கும் போடுவார்கள்!” என்று எச்சரிக்கை செய்வான். நமக்கு எதற்கு இந்த மாதிரி ஆபத்தான தொழில்?” என்னோடு வியாபாரத்தில் சேர்ந்து விடு! கொஞ்சம் வளர்ந்து வாலிபனானவுடன் உனக்குத் திருமணம் செய்கிறேன். எனக்கு உன்னை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்.?”

மரியாதைராமன் தகப்பனாரின் பேச்சைக் கேட்டான். “அப்பா! ஆபத்தில்லாத வேலை கிடையாது. நீதிமன்றத்துறையில் என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று நானா முறையிட்டேன்! அரசராகப் பார்த்து எனக்குக் கொடுத்த பதவியை, ‘எனக்கு இந்தப் பொம்மை வேண்டாம்’னு சொல்றாப்பல நானும் பதவியை வேண்டாம் என்று சொல்வதா?

பார்க்கப் போனால், இந்தப் பதவி எனக்கு கிடைத்தது எவ்வளவு பேர்களுக்கு ஏமாற்றமும் எரிச்சலும் தந்தது என்று தெரியுமா?

குற்றத்தைச் செய்தவன் தன்னை யாராவது பார்த்து விடுவார்கள்! என்று சுற்றும் முற்றும் பார்க்கிறான். பின்னாலே தைரியம் வந்து, தனக்கு விரோதிகளாக இருப்போரின் மீது பழி போடுவான்! அதனால் யாருமே அவனைச் சந்தேகப்பட மாட்டார்கள்.

சில சமயம் குற்றவாளியைக் கண்டு பிடிக்கமுடியாமல் இருக்கலாம். ஆனால், ஒரு நிரபராதி மீது பழி வந்து அவனுக்குத் தண்டனை கொடுத்துவிடக் கூடாது.

சட்டம் ஒரு இருட்டறை அதில் வழக்காடுபவர் எடுத்துரைக்கும் வாதம் விளக்கு போன்றது. ஆனால், அந்த விளக்கு ஏழைக்கு எட்டாதது என்று ஓர் அறிஞர் கூறினார். தாமதப்படுத்தும் நீதியின் தீர்ப்பு! உனக்கு நீதி மறுக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.

“அப்பா! இந்த மரியாதைராமன் உங்கள் நற்பெயரைக் கெடுக்க மாட்டான்.”

“சரி! ராமா நான் கோவில்களுக்குச் சென்று திரும்பிவர பல நாட்கள் ஆகும்! அதற்குள் உனது லட்சியம் மாறாதா என்று பார்க்கிறேன்.” என்று அப்பா சொல்லிவிட்டு ஊர்ப் பயணம் செல்ல ஆரம்பித்தார்.

இரண்டு மாதம் கழித்து வந்தார் அப்பா. அன்று ஒரு வழக்கு விசாரிக்கப்படுகிறது. வாதியும் பெண். பிரதிவாதியும் பெண். இரண்டு பெண்களும் ஒருவனுடைய மனைவிகள். அந்த இரண்டு பெண்களைப் பற்றி அப்பாவுக்கு நன்றாகத் தெரியும். அவர்களுடைய வீட்டுக் கெதிரில் உள்ள அவருடைய வீட்டுத் திண்ணையில் படுத்திருப்பது அவருக்குப் பழக்கம்.

இந்தப் பெண்கள் என்ன குற்றம் செய்தார்கள்! இந்தக் குற்றத்தின் தன்மை என்ன? பின்னணி என்ன?

வழக்கில் வாதி இரண்டாம் மனைவி. பிரதிவாதி முதல் மனைவி. குற்றம் – இளையவளின் குழந்தை இறந்து விட்டது. இயற்கையான மரணம் அல்ல என்று அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் தெரியும்.

ஆனால், குழந்தையைக் கொலை செய்தது யார்? கொலைக்கான உள் நோக்கம் என்ன? இதுதான் மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் கேள்வி.

இளைய மனைவியின் பெயர் காந்தா. முதல் மனைவியின் பெயர் சாந்தா. இவர்களின் புருஷன் அப்பாவி. ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான்.

“வழக்கை ஆரம்பிக்கலாமா?” என்று மரியாதைராமன் கேட்கவும் அரசர் “தாராளமாக” என்றார். மரியாதை ராமனின் அப்பா, மகனின் சாமர்த்தியத்தைக் காண ஆவலாய் கூட்டத்தில் ஒருவராக நின்று கொண்டிருந்தார்.

இளையவள் காந்தாவைப் பேச அழைத்தார் மரியாதை ராமன். “ஐயா! நீங்களும் சிறிசு, நானும் சிறிசு. எப்பவுமே சிறிசுகளைக் கண்டால் பெரிசுகளுக்குப் பொறாமை? பொச்சரிப்பு!

‘என் குழந்தையை யாரோ கொலை பண்ணிட்டாங்க! பெத்த வயிறு பத்தி எரியுது! துக்கம் தொண்டையை அடைக்குது” என்று சொல்லி சத்தம் போட்டு அழுகிறாள்.

மரியாதை ராமன் இளையவளைப் பார்த்து, “அழாதேம்மா! உன்னுடைய கஷ்டம் ஈடில்லாத கஷ்டம்! குழந்தையைக் கொன்னவங்க யாருன்னு தெரியல்லியே! உனக்கு யார் மேலே சந்தேகம்!

“அதை என் வாயாலே எப்படிச் சொல்வேன்? நீங்க கேட்டதாலே சொல்றேன்! எம் புருசன் ஒரு பூச்சி. எந்த விஷயத்தையும் காதிலே போட்டுக்க மாட்டார். என் சந்தேகம் சொல்லவே வெக்கமா இருக்கு…” என்று காந்தா இழுத்தாள்.

“சொல்லும்மா! இது நீதிமன்றம்.

“வேறே யாரு? இதோ எதிர்த்தாப்பலே குத்துக் கல்லாட்டம் நிற்கிறாளே அவதான் என் சக்காளத்தி. அவ மலடி! எனக்குக் குழந்தை பிறந்தது அவளுக்குப் பொறாமை! இந்த ஒரு காரணமே போதுமே! அவளுக்குத் தூக்குத்தண்டனை கொடுத்தா கூட என் ஆத்திரம் தீராது!”

மரியாதை ராமன் ஏட்டில் குறிப்பெடுத்தான். பிறகு மூத்தவள் சாந்தாவை கூண்டில் நிற்க வைத்து கேள்விக் கணைகளைத் தொடுத்தான்.

“நான் என் புருஷனுக்கு முதல் மனைவி. குழந்தை பிறக்காததாலே, நானே என் புருசனுக்குப் பெண் பார்த்தேன். கூடப் பிறக்கல்லன்னாலும் அவ என் தங்கச்சி. குழந்தை பிறக்கப்போவுதுன்னு செய்தி வந்ததும் அதிக சந்தோசம் பட்டவ நான்தான் ஐயா!”

“தாய் இல்லாத பெண்ணாச்சே! பிரசவத்தை நம்ம வீட்லேயே பார்த்துடலாம்னு இவளைப் பொறந்த ஊட்டுக்குக் கூட அனுப்பலே! நல்லபடியா குழந்தை பொறக்கணும்னு நான் வேண்டாத தெய்வம் இல்லே, முடிச்சுப் போடாத காணிக்கை இல்லே!” என்றாள் மூத்தவள் சாந்தா.

உடனே இளையவள் காந்தா, “குழந்தை திடீர்னு எழுந்துக்கும். போய் ஆசையா பெரியம்மாகிட்ட படுத்துக்கும். அப்படிப் படுத்த குழந்தையை கழுத்தை நெரிச்சுக் கொன்னுட்டு, ஒண்ணும் தெரியாத பாப்பா போல நடிக்கறதைப் பாரு!” என்று சீறினாள்.

மரியாதைராமன் இளையவள் – காந்தாவிடம் “குழந்தைக்குக் குளிப்பாட்டுவது யார்? மருந்து கொடுப்பது யார்? தூங்க வைப்பது யார்? அழகா உடுத்தி, கண்ணுக்கு மை தீட்டி, காற்றாட வெளியில் தூக்கிக்கிட்டு வேடிக்கைக் காட்றது யார்?” என்று கேட்டான்.

அதற்கு இளையவள், “என்னமோ தான் பெத்த புள்ளை மாதிரி குழந்தைக்கு எல்லாம் செய்றது எதுக்கு? புருசன் தன்னைத் தள்ளி வச்சிடுவாரோ என்ற பயம். பாக்கறவங்க தன்னைப் பாராட்டுவாங்கன்ற சுயநலம்தான்! தாய்ப்பால் குடிக்க மட்டும்தான் குழந்தையை என்னண்டை கொடுப்பா! ஏன்னா அது அவளால முடியாது!” என்று ஏளனமாக சாந்தாவைப் பார்த்துச் சொன்னாள்.

மரியாதை ராமன் வாக்கமூலத்தில் தெரிகின்ற கருத்துக்களைக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான். குழந்தையின் தகப்பன் என்னை சொல்கிறான்? அவன் ரெண்டு பொண்டாட்டிக்காரன். அவனுடைய கருத்தைக் கேட்போம் என்று மரியாதைராமன் குழந்தையின் தகப்பனைக் கூண்டில் ஏற்றினான்.

“ஐயா! இந்தக் குழந்தையை யார் கொன்றது? தெரியவில்லை என்றால் யார் கொன்றிருப்பார்கள் என்ற ஊகத்தைச் சொல்லும்!” – மரியாதை ராமன்.

தகப்பன் அழுது கொண்டே “நான் ஊரில் இல்லாத சமயம் பார்த்து இந்தக் கொலை நடந்திருக்கிறது. பெத்தவள் செய்தாளா? மத்தவள் செய்தாளா? யார் செய்திருந்தாலும் கடுமையான தண்டனை கொடுங்க? எனக்கு ரெண்டாவது கல்யாணம் செய்து வச்சதே முதல்தாரம்தான். மனப்பூர்வமாகத்தான் ஒத்துக்கிட்டா! நமக்குக் குழந்தை வேணும்! என்னாலே முடியாதபோது எனக்கு வர ‘உடன்பிறவா சகோதரி’ மூலமாவது அந்தப் பாக்கியம் கிட்டட்டும்னு சொன்னவளே பெரியவள்தான்!

அடிக்கடி சின்னவ எங்கிட்ட பெரியவளைப் பத்தி தூபம் போடுவா! அவளை விரட்டுங்க. என் குழந்தையை எப்பவும் அவளே கவனிச்சுக்கறா. அப்புறம் குழந்தைக்கு எம்மேலே எப்படிங்க பாசம் வரும்! குழந்தையும் அவகிட்ட நல்லா ஒட்டிக்கிச்சு. அப்படிச் சொல்லும்போது நான் ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’னு புத்தி சொல்வேன்.

 

 

 

 

“இன்னொரு உண்மையை இந்தச் சபையில் சொல்றேன். சின்னவளுக்குக் குழந்தை பிறந்த ஆறுமாசம் கழிச்சு பெரியவள் என்னை வைத்தியர்கிட்ட அழைச்சிட்டுப் போனா! வாந்தி மயக்கம்னு சொன்னா! வைத்தியர் அவளைப் பரிசோதித்து ‘மகிழ்ச்சி’ என்று சொன்னார். ஆம்! பெரியவளும் தாயாகப் போகிற நிலையில் இருக்கிறாளாம்!

‘நான் சந்தோஷம் அடைஞ்சேன்! ஆனா, பெரியவ வைத்தியரிடம், கருவைக் கலைக்கும் மருந்தைக் கொடுங்க. எனக்கு குழந்தை. வேணாம்!’ என்றாள். நானும் வைத்தியரும் தடுத்தபோது ‘விஷம் குடிச்சிருவேன்’னு பயமுறுத்தினா. வேறு வழியில்லாம வைத்தியர், கருத்தடை மருந்தைக் கொடுத்து விட்டார். இந்த விஷயம் இதுவரை சின்னவளுக்குத் தெரியாது” என்று தேம்பினார்.

வழக்கு தனக்கு எதிராகப் போவதை அறிந்த இளையவள் காந்தா, “என் குழந்தையைக் கொலை செய்தவளை சும்மா விடக் கூடாது. இந்த நீலிக் கண்ணீர் விட்டாகுழந்தை பொழைச்சுடுமா? விஷத்தைக் கொடுத்தா குழந்தை உடல் நீலம் பாய்ஞ்சிருக்கும் கையால நெறிச்சிருந்தா கை ரேகை தெரிஞ்சிருக்கும்…” என்று அரற்றினாள்.

மரியாதை ராமன் அவள் சொல்வதைக் குறித்துக் கொண்டான். “சரி அம்மா, குழந்தையைப் பெத்தவங்க நீங்க! ஆகவே தண்டனையில் ஒரு பகுதி நீங்க குற்றம் சாட்டும் மூத்தவளைக் கட்டிப் போட்டு கசையடியை நீங்களே கொடுக்கலாம். கயிறால் கட்டினால் அறுந்து விடும். எதனால் கட்டினால் உடலை இறுக்கும்?” என்று யோசிப்பதுபோல் கேட்டான்.

இளையவள் மகிழ்ச்சி பொங்க ‘மரத்தைச் சுத்திப் படரும் பாடவரங்காய் கொடியை வெச்சுக் கட்டினால் கொடி அறுபடாது. உடலை இறுக்கி விடும்’ என்றாள். ‘என் வீட்டுத் தோட்டத்திலேயே அந்தக் கொடி படருது’ என்று மேலும் தகவல் தந்து மூத்தவள் கொஞ்ச நேரத்தில் கொடியால் கட்டப்படுவாள் என்று மகிழ்ச்சியுடன் இருந்தாள்.

சொன்னபடியே இளையவள் வீட்டிலிருந்த நீளமான பாடவரங்காய் கொடி அறுத்துக் கொண்டுவரப் பட்டது. சபையில் நிசப்தம்.

மரியாதை ராமன் அரசரிடம் ரகசியமாக ஏதோ சொன்னான். “அப்படியா!” என்பதுபோல் அரசர் ஆச்சரியத்தால் வாய் பிளந்தார். கூடியிருந்த மக்கள் முடிவு தெரிந்து கொள்ள முட்டி மோதிக் கொண்டு இருந்தனர்.

மரியாதைராமன் அந்தப் பாடவரங்காய்க் கொடியை சேவகனிடம் கொடுத்து அந்த அம்மாவைக் கொடியால் கட்டுங்கள்!” என்று உத்தரவிட்டான். ‘எந்த அம்மா’ என்பதை மக்கள் யோசனை செய்வதற்குள், சேவகன் இளையவளைக் கட்டத் துவங்கினான்.

இளைவள் பதறி “வேண்டாம்! என்னைக் கட்டாதீர்கள். நானே உண்மையைச் சொல்லி விடுகிறேன். குழந்தையைக் கொலை செய்ய கசாப்புக் கடைக்காரனின் உதவியை நாடினேன். அவன்தான் கத்தியால் குத்தமாட்டேன். கொடியால் கழுத்தை நெரித்து பெரியம்மா பக்கத்தில் போட்டுடறேன் என்று சொன்னான். என் வீட்டுக்காரர் இல்லாத நேரம் பார்த்துத் தகவல் சொன்னேன். அவனும் காரியத்தை முடித்தான்.

எனக்குக் குழந்தை போனாலும் பரவாயில்லை. பெரியவ மேலே எங்க வீட்டுக்காரர் வெச்சிருக்கிற பாசத்தை நாசப்படுத்தணும்கிறதான் என் ஒரே நோக்கமாய் இருந்தது. எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க!” என்று மண்டியிட்டு அழுதாள்.

மரியாதை ராமன், “குற்றவாளி வாயாலே குற்றத்தை ஒப்புக் கொள்ள” வைத்ததை, ராமனின் தந்தை மகிழ்ச்சி பொங்க பாராட்டினார். மக்களும் இளையவளின் அடாத செயலை இகழ்ந்தார்கள். இளையவளுக்குச் சிறைத் தண்டனை கிடைத்தது.

இளையவள் மூத்தவள் கால்களில் விழுந்து அழுதாள். “அக்கா! நம் குலத்தைத் தழைக்க வந்த செல்வளை அழித்து விட்டேனே! நான் ஒரு மகா பாவி! அந்தப் பழியை உன் மீது போட்டு ஒழித்து விட நினைத்தேனே! என்னை மாதிரி ஒரு துரோகியை, நீங்கள் உங்கள் வாழ்வில் பங்கு போட்டுக் கொள்ள வைத்தீர்களே! நான் நன்றி கெட்டவள்…” என்று புலம்பலுக்கிடையே சொல்லி காவலர்களுடன் சென்றாள். புருசனும், மூத்தவளும் கண்கலங்கி ‘சீக்கிரம் நாம் மூவரும் ஒன்றாகலாம்’ என்றார்கள்.

மரியாதைராமன் வீட்டில் அவனுடைய தந்தை, “பெற்ற குழந்தையைக் கொன்றாள் ஒருத்தி. நானோ பெற்ற மகனின் புகழைத் தடுக்க நினைத்தேன். அவள் பொறாமை கொண்டு குழந்தையைக் கொன்றாள். நான் அறியாமையால் என் மகனின் அறிவுத் திறனை மூடி மறைக்க நினைத்தேன்!” என்று மரியாதைராமனைக் கட்டிப் பிடித்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்.

One Comment

  1. devika
    its amazing
    Reply June 10, 2020 at 7:07 pm

Leave a comment