Category:சிறுவர் கதைகள்
மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர், பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார்.
ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.
வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.
அப்போ அவரது மனைவியார் ‘உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க’ என்றார்.
ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊரு மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.
இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.
அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்ய முடியவில்லை வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப் பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார்.
அப்படி காட்டு வழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கடந்தது. அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்ற தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்துவிட்டு வந்தார்.
அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டுவிட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.
அப்போது ஊருக்குள் சென்ற போது அங்கு இருந்த கடையில் விசாரித்தபோது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.
உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்தப் பணப்பையை வாங்கிக் கொண்டார், அதேநேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்துவிட்டது, பணமும்சரியாக இருந்தது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும். சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்.
கெட்ட மனம் கொண்ட சோமன் பூபாலனைப் பார்த்து ‘நீ என்னை ஏமாற்றப் பார்க்கிறாய், நான் என்னுடைய பையில் வைர மோதிரம் ஒன்றையும் வைத்திருந்தேன், அது காணவில்லை. மரியாதையாக கொடுத்து விடு, உன்னை சும்மா விடமாட்டேன்’ என்று கத்தினான்.
பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை, ஒருவேளை இவர் சொன்னது போல் வைர மோதிரம் இருந்து தொலைந்து போயிருக்குமா, நாம் தான் எடுக்கவில்லையே இவரிடம் சன்மானம் வாங்குவதைவிட பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்று யோசித்தார்.
சோமனோ விடாமல் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார். பூபாலன் பணப்பை கொண்டு வந்த செய்தியை ஊராருக்கு சொன்ன கடைக்காரர், கஞ்சப்பயல் சோமன் அப்படி என்னத்தான் பரிசு கொடுக்கப் போறான் என்று பார்ப்போம் என்று அனைவரையும் அழைத்து வந்தார். வந்த இடத்தில் பூபாலன் குற்றவாளி போல நிற்பதை கண்ட ஊரார் சோமனை சும்மா விடக்கூடாது, இந்த பிரச்சினையை மரியாதை ராமனிடம் தான் கொண்டு சென்று தீர்ப்பு கேட்க வேண்டும் என்று சொன்னார்கள்.
சிறிது நேரத்தில் சோமன், பூபாலன், ஊர்மக்கள் அனைவரும் மரியாதை ராமன் முன்னால் போய் நின்றார்கள். சோமன் தான் பணப்பையையும், அதில் இருந்த வைர மோதிரம் தொலைத்த கதையையும, பூபாலன் தான் பணப்பை கண்டுபிடித்த கதையையும் சொன்னார்கள்.
ஏற்கனவே சோமன் அறிவித்த தண்டோரா பற்றி மரியாதை ராமனுக்கு தெரியும். அப்போ தண்டோரா போடும் போது வைரமோதிரம் பற்றி ஒன்றும் சொல்லாததும் தெரிந்தது தான்.
ஆக மொத்தம் சோமன் ஏமாற்றுகிறான் என்பதை புரிந்துகொண்ட மரியாதை ராமன், சோமனுக்கு சரியான தண்டனை கொடுக்க நினைத்து இவ்வாறாக தீர்ப்பு கூறினார் ‘சோமன் தொலைத்த பையில் பணமும், வைர மோதிரமும் இருந்தது என்று அவரே சொல்லியிருக்கிறார். இப்போது பூபாலன் கொண்டு வந்த பையில் பணம் மட்டுமே உள்ளது.
ஆக இது சோமனின் பையே இல்லை, வேறு யாரோ தொலைத்த பை. அப்படி தொலைத்தவர் இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை, அவ்வாறு யாரும் புகார் கொடுக்காதவரை நம்ம ஊரு வழக்குப்படி கிடைத்த பணத்தில் 10 பங்கு அம்மன்கோயிலுக்குக் கொடுத்துவிட்டு, மீதியை எடுத்தவரே வைத்துக்கொள்ளலாம்.
ஆக பூபாலன் அந்த பணத்தை தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்ளலாம், சோமனின் பணம் மற்றும் வைர மோதிரம் கொண்ட பையை கண்டுபிடித்தவுடன் சோமனே சன்மானம் கொடுப்பார், சபை கலையலாம்.’
மரியாதை ராமன் தீர்ப்பு சொன்னதும் சோமனுக்கு இதயமே நின்று போனது போல் ஆகிவிட்டது.
பூபாலன் கிடைத்த பணத்தில் 10 சதவீதம் அம்மன் கோயிலுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று தொழில் செய்து நலமாக வாழ்ந்து வந்தார்.
Category:மரியாதை இராமன் கதைகள்
பொருளடக்கம்
- 1 அறத்துப்பால்
- 1.1 பாயிரவியல்
- 1.2 இல்லறவியல்
- 1.2.1 இல்வாழ்க்கை
- 1.2.2 வாழ்க்கைத் துணைநலம்
- 1.2.3 புதல்வரைப் பெறுதல்
- 1.2.4 அன்புடைமை
- 1.2.5 விருந்தோம்பல்
- 1.2.6 இனியவைகூறல்
- 1.2.7 செய்ந்நன்றி அறிதல்
- 1.2.8 நடுவு நிலைமை
- 1.2.9 அடக்கமுடைமை
- 1.2.10 ஒழுக்கமுடைமை
- 1.2.11 பிறனில் விழையாமை
- 1.2.12 பொறையுடைமை
- 1.2.13 அழுக்காறாமை
- 1.2.14 வெஃகாமை
- 1.2.15 புறங்கூறாமை
- 1.2.16 பயனில சொல்லாமை
- 1.2.17 தீவினையச்சம்
- 1.2.18 ஒப்புரவறிதல்
- 1.2.19 ஈகை
- 1.2.20 புகழ்
- 1.3 துறவறவியல்
- 1.4 ஊழியல்
- 2 பொருட்பால்
- 2.1 அரசியல்
- 2.1.1 இறைமாட்சி
- 2.1.2 கல்வி
- 2.1.3 கல்லாமை
- 2.1.4 கேள்வி
- 2.1.5 அறிவுடைமை
- 2.1.6 குற்றங்கடிதல்
- 2.1.7 பெரியாரைத் துணைக்கோடல்
- 2.1.8 சிற்றினஞ்சேராமை
- 2.1.9 தெரிந்துசெயல்வகை
- 2.1.10 வலியறிதல்
- 2.1.11 காலமறிதல்
- 2.1.12 இடனறிதல்
- 2.1.13 தெரிந்துதெளிதல்
- 2.1.14 தெரிந்துவினையாடல்
- 2.1.15 சுற்றந்தழால்
- 2.1.16 பொச்சாவாமை
- 2.1.17 செங்கோன்மை
- 2.1.18 கொடுங்கோன்மை
- 2.1.19 வெருவந்தசெய்யாமை
- 2.1.20 கண்ணோட்டம்
- 2.1.21 ஒற்றாடல்
- 2.1.22 ஊக்கமுடைமை
- 2.1.23 மடியின்மை
- 2.1.24 ஆள்வினையுடைமை
- 2.1.25 இடுக்கணழியாமை
- 2.2 அமைச்சியல்
- 2.3 அங்கவியல்
- 2.3.1 நாடு
- 2.3.2 அரண்
- 2.3.3 பொருள்செயல்வகை
- 2.3.4 படைமாட்சி
- 2.3.5 படைச்செருக்கு
- 2.3.6 நட்பு
- 2.3.7 நட்பாராய்தல்
- 2.3.8 பழைமை
- 2.3.9 தீ நட்பு
- 2.3.10 கூடாநட்பு
- 2.3.11 பேதைமை
- 2.3.12 புல்லறிவாண்மை
- 2.3.13 இகல்
- 2.3.14 பகைமாட்சி
- 2.3.15 பகைத்திறந்தெரிதல்
- 2.3.16 உட்பகை
- 2.3.17 பெரியாரைப் பிழையாமை
- 2.3.18 பெண்வழிச்சேறல்
- 2.3.19 வரைவின்மகளிர்
- 2.3.20 கள்ளுண்ணாமை
- 2.3.21 சூது
- 2.3.22 மருந்து
- 2.4 ஒழிபியல்
- 2.1 அரசியல்
- 3 காமத்துப்பால்
- 3.1 களவியல்
- 3.2 கற்பியல்
- 3.2.1 பிரிவாற்றாமை
- 3.2.2 படர்மெலிந்திரங்கல்
- 3.2.3 கண்விதுப்பழிதல்
- 3.2.4 பசப்புறுபருவரல்
- 3.2.5 தனிப்படர்மிகுதி
- 3.2.6 நினைந்தவர்புலம்பல்
- 3.2.7 கனவுநிலையுரைத்தல்
- 3.2.8 பொழுதுகண்டிரங்கல்
- 3.2.9 உறுப்புநலனழிதல்
- 3.2.10 நெஞ்சொடுகிளத்தல்
- 3.2.11 நிறையழிதல்
- 3.2.12 அவர்வயின்விதும்பல்
- 3.2.13 குறிப்பறிவுறுத்தல்
- 3.2.14 புணர்ச்சிவிதும்பல்
- 3.2.15 நெஞ்சொடுபுலத்தல்
- 3.2.16 புலவி
- 3.2.17 புலவி நுணுக்கம்
- 3.2.18 ஊடலுவகை
- 4 இவற்றையும் பார்க்கவும்
அறத்துப்பால்
பாயிரவியல்
கடவுள் வாழ்த்து
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. | 1 |
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். | 2 |
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். | 3 |
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. | 4 |
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. | 5 |
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். | 6 |
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. | 7 |
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. | 8 |
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. | 9 |
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். | 10 |
வான்சிறப்பு
வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. | 11 |
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. | 12 |
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. | 13 |
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். | 14 |
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை. | 15 |
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது. | 16 |
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். | 17 |
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. | 18 |
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின். | 19 |
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு. | 20 |
நீத்தார் பெருமை
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. | 21 |
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. | 22 |
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு. | 23 |
உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. | 24 |
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி. | 25 |
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர் செயற்கரிய செய்கலா தார். | 26 |
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் வகைதெரிவான் கட்டே உலகு. | 27 |
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். | 28 |
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது. | 29 |
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான். | 30 |
அறன்வலியுறுத்தல்
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. | 31 |
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. | 32 |
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல். | 33 |
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற. | 34 |
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். | 35 |
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை. | 36 |
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. | 37 |
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். | 38 |
அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம் புறத்த புகழும் இல. | 39 |
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. | 40 |
இல்லறவியல்
இல்வாழ்க்கை
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. | 41 |
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. | 42 |
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. | 43 |
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். | 44 |
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. | 45 |
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன். | 46 |
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. | 47 |
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து. | 48 |
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. | 49 |
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும். | 50 |
வாழ்க்கைத் துணைநலம்
மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. | 51 |
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். | 52 |
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை. | 53 |
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின். | 54 |
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. | 55 |
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். | 56 |
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை. | 57 |
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. | 58 |
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. | 59 |
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கட் பேறு. | 60 |
புதல்வரைப் பெறுதல்
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற. | 61 |
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின். | 62 |
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும். | 63 |
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ். | 64 |
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. | 65 |
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். | 66 |
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். | 67 |
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது. | 68 |
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய். | 69 |
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல். | 70 |
அன்புடைமை
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும். | 71 |
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு. | 71 |
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. | 73 |
அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு. | 74 |
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு. | 75 |
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை. | 76 |
என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம். | 77 |
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று. | 78 |
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. | 79 |
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. | 80 |
விருந்தோம்பல்
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு. | 81 |
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டாற்பாற் றன்று. | 82 |
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. | 83 |
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். | 84 |
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம். | 85 |
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்வருந்து வானத் தவர்க்கு. | 86 |
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். | 87 |
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார். | 88 |
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு. | 89 |
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குநழ்யும் விருந்து. | 90 |
இனியவைகூறல்
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். | 91 |
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின். | 92 |
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம். | 93 |
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. | 94 |
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற. | 95 |
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் | 96 |
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல். | 97 |
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும். | 98 |
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது. | 99 |
இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. | 100 |
செய்ந்நன்றி அறிதல்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. | 101 |
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. | 102 |
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது. | 103 |
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார். | 104 |
உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து. | 105 |
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு. | 106 |
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு. | 107 |
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. | 108 |
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும். | 109 |
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு. | 110 |
நடுவு நிலைமை
தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின். | 111 |
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து. | 112 |
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே யொழிய விடல். | 113 |
தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப்ப படும். | 114 |
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி. | 115 |
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின். | 116 |
கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. | 117 |
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி. | 118 |
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின். | 119 |
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின். | 120 |
அடக்கமுடைமை
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். | 121 |
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு. | 122 |
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின். | 123 |
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது. | 124 |
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து. | 125 |
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து. | 126 |
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. | 127 |
ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும். | 128 |
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு. | 129 |
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. | 130 |
ஒழுக்கமுடைமை
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும். | 131 |
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை. | 132 |
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். | 133 |
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். | 134 |
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை ஒழுக்க மிலான்கண் உயர்வு. | 135 |
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து. | 136 |
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. | 137 |
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும். | 138 |
ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல். | 139 |
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் | 140 |
பிறனில் விழையாமை
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். | 141 |
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல். | 142 |
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில் தீமை புரிந்துஒழுகு வார். | 143 |
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் தேரான் பிறனில் புகல். | 144 |
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் விளியாது நிற்கும் பழி. | 145 |
பகைபாவம் அச்சம் பழியென நான்கும் இகவாவாம் இல்லிறப்பான் கண். | 146 |
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள் பெண்மை நயவா தவன். | 147 |
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறனொன்றோ ஆன்ற வொழுக்கு. | 148 |
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின் பிறர்க்குரியாள் தோள்தோயா தார். | 149 |
அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று. | 150 |
பொறையுடைமை
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. | 151 |
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை மறத்தல் அதனினும் நன்று. | 152 |
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை. | 153 |
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி யொழுகப் படும். | 154 |
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. | 155 |
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப் பொன்றுந் துணையும் புகழ். | 156 |
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று. | 157 |
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம் தகுதியான் வென்று விடல். | 158 |
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய் இன்னாச்சொல் நோற்கிற் பவர். | 159 |
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும் இன்னாச்சொல் நோற்பாரின் பின். | 160 |
அழுக்காறாமை
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு. | 161 |
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின். | 162 |
அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான். | 163 |
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து. | 164 |
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் வழுக்கியும் கேடீன் பது. | 165 |
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும். | 166 |
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும். | 167 |
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும். | 168 |
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். | 169 |
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். | 170 |
வெஃகாமை
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும். | 171 |
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் நடுவன்மை நாணு பவர். | 172 |
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர். | 173 |
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர். | 174 |
அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும் வெஃகி வெறிய செயின். | 175 |
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும். | 176 |
வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின் மாண்டற் கரிதாம் பயன். | 177 |
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள். | 178 |
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும் திறன்அறிந் தாங்கே திரு. | 179 |
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு. | 180 |
புறங்கூறாமை
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது. | 181 |
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை. | 182 |
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூறும் ஆக்கந் தரும். | 183 |
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்னின்று பின்நோக்காச் சொல். | 184 |
அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும். | 185 |
பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும். | 186 |
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். | 187 |
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் என்னைகொல் ஏதிலார் மாட்டு. | 188 |
அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை. | 189 |
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. | 190 |
பயனில சொல்லாமை
பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். | 191 |
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலிற் றீது. | 192 |
நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை. | 193 |
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து. | 194 |
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின். | 195 |
பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல். | 196 |
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர் பயனில சொல்லாமை நன்று. | 197 |
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல். | 198 |
பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர். | 199 |
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். | 200 |
தீவினையச்சம்
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் தீவினை என்னும் செருக்கு. | 201 |
தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். | 202 |
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல். | 203 |
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. | 204 |
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து. | 205 |
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான். | 206 |
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும். | 207 |
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயாது அடிஉறைந் தற்று. | 208 |
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால். | 209 |
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின். | 210 |
ஒப்புரவறிதல்
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு என்ஆற்றுங் கொல்லோ உலகு. | 211 |
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. | 212 |
புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற. | 213 |
ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். | 214 |
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு. | 215 |
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின். | 216 |
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின். | 217 |
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் கடனறி காட்சி யவர். | 218 |
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யாது அமைகலா வாறு. | 219 |
ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து. | 220 |
ஈகை
வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து. | 221 |
நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று. | 222 |
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே யுள. | 223 |
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகங் காணும் அளவு. | 224 |
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின். | 225 |
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி. | 226 |
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது. | 227 |
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர். | 228 |
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய தாமே தமியர் உணல். | 229 |
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் ஈதல் இயையாக் கடை. | 230 |
புகழ்
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு. | 231 |
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ். | 232 |
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில். | 233 |
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு. | 234 |
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது. | 235 |
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. | 236 |
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன். | 237 |
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின். | 238 |
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம். | 239 |
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர். | 240 |
இல்லறவியல் முற்றிற்று
துறவறவியல்
அருளுடைமை
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள. | 241 |
நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால் தேரினும் அஃதே துணை. | 242 |
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல். | 243 |
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை. | 244 |
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி. | 245 |
பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார். | 246 |
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு. | 247 |
பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது. | 248 |
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம். | 249 |
வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லு மிடத்து. | 250 |
புலான்மறுத்தல்
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள். | 251 |
பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. | 252 |
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம். | 253 |
அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல் பொருளல்லது அவ்வூன் தினல். | 254 |
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யாது அளறு. | 255 |
தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். | 256 |
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ணது உணர்வார்ப் பெறின். | 257 |
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன். | 258 |
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று. | 259 |
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும். | 260 |
தவம்
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு. | 261 |
தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை அஃதிலார் மேற்கொள் வது. | 262 |
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை யவர்கள் தவம். | 263 |
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும். | 264 |
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும். | 265 |
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. | 266 |
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. | 267 |
தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயி ரெல்லாந் தொழும். | 268 |
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. | 269 |
இலர்பல ராகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர். | 270 |
கூடாவொழுக்கம்
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். | 271 |
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் தான்அறி குற்றப் படின். | 272 |
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. | 273 |
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. | 274 |
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று ஏதம் பலவுந் தரும். | 275 |
நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல். | 276 |
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியார் உடைத்து. | 277 |
மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர். | 278 |
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன வினைபடு பாலால் கொளல். | 279 |
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். | 280 |
கள்ளாமை
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு. | 281 |
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல். | 282 |
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து ஆவது போலக் கெடும். | 283 |
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் வீயா விழுமம் தரும். | 284 |
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். | 285 |
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர். | 286 |
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல். | 287 |
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சில் கரவு. | 288 |
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர். | 289 |
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுளகு. | 290 |
வாய்மை
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல். | 291 |
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின். | 292 |
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். | 293 |
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன். | 294 |
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை. | 295 |
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை எல்லா அறமுந் தரும். | 296 |
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று. | 297 |
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும். | 298 |
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. | 299 |
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற. | 300 |
வெகுளாமை
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கின்என் காவாக்கால் என். | 301 |
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்அதனின் தீய பிற. | 302 |
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும். | 303 |
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற. | 304 |
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம். | 305 |
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும். | 306 |
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. | 307 |
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று. | 308 |
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். | 309 |
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை. | 310 |
இன்னாசெய்யாமை
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா செய்யாமை மாசற்றார் கோள். | 311 |
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள். | 312 |
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும். | 313 |
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல். | 314 |
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய்போல் போற்றாக் கடை. | 315 |
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை வேண்டும் பிறன்கண் செயல். | 316 |
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை. | 317 |
தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல். | 318 |
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா பிற்பகல் தாமே வரும். | 319 |
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். | 320 |
கொல்லாமை
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும். | 321 |
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. | 322 |
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று. | 323 |
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி. | 324 |
நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை. | 325 |
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லாது உயிருண்ணுங் கூற்று. | 326 |
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை. | 327 |
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கங் கடை. | 328 |
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து. | 329 |
உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர். | 330 |
நிலையாமை
நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை. | 331 |
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று. | 332 |
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல். | 333 |
நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின். | 334 |
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும் | 335 |
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு. | 336 |
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல. | 337 |
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு. | 338 |
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. | 339 |
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு. | 340 |
துறவு
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். | 341 |
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டுஇயற் பால பல. | 342 |
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு. | 343 |
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து. | 344 |
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை. | 345 |
யான்எனது என்னும்செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும். | 346 |
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு. | 347 |
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர். | 348 |
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும். | 349 |
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. | 350 |
மெய்யுணர்தல்
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு. | 351 |
இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சி யவர்க்கு. | 352 |
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து. | 353 |
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. | 354 |
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. | 355 |
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி. | 356 |
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. | 357 |
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு. | 358 |
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய். | 359 |
காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன் நாமம் கெடக்கெடும் நோய். | 360 |
அவாவறுத்தல்
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து. | 361 |
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும். | 362 |
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை ஆண்டும் அஃதொப்பது இல். | 363 |
தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும். | 364 |
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார் அற்றாக அற்றது இலர். | 365 |
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா. | 366 |
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை தான்வேண்டு மாற்றான் வரும். | 367 |
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும். | 368 |
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும் துன்பத்துள் துன்பங் கெடின். | 369 |
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும். | 370 |
துறவறவியல் முற்றிற்று.
ஊழியல்
ஊழ்
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி. | 371 |
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை. | 372 |
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும். | 373 |
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு. | 374 |
நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு. | 375 |
பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம. | 376 |
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. | 377 |
துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியு மெனின். | 378 |
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன். | 379 |
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். | 380 |
ஊழியல் முற்றிற்று
அறத்துப்பால் முற்றிற்று
பொருட்பால்
அரசியல்
இறைமாட்சி
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. | 381 |
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. | 382 |
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவர்க்கு. | 383 |
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு. | 384 |
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு. | 385 |
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் | 386 |
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு. | 387 |
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும். | 388 |
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. | 389 |
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி. | 390 |
கல்வி
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக. | 391 |
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு. | 392 |
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர். | 393 |
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில். | 394 |
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர். | 395 |
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு. | 396 |
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. | 397 |
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து. | 398 |
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். | 399 |
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை. | 400 |
கல்லாமை
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல். | 401 |
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் இல்லாதாள் பெண்காமுற் றற்று. | 402 |
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின். | 403 |
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் கொள்ளார் அறிவுடை யார். | 404 |
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து சொல்லாடச் சோர்வு படும். | 405 |
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர். | 406 |
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மாண் புனைபாவை யற்று. | 407 |
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே கல்லார்கண் பட்ட திரு. | 408 |
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு. | 409 |
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர். | 410 |
கேள்வி
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்து ளெல்லாந் தலை. | 411 |
செவுக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். | 412 |
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின் ஆன்றாரோ டொப்பர் நிலத்து. | 413 |
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. | 414 |
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல். | 415 |
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும். | 416 |
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர். | 417 |
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி. | 418 |
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராதல் அரிது. | 419 |
செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என். | 420 |
அறிவுடைமை
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா அரண். | 421 |
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ நன்றின்பால் உய்ப்ப தறிவு. | 422 |
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. | 423 |
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு. | 424 |
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு. | 425 |
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவ தறிவு. | 426 |
அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர். | 427 |
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். | 428 |
எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை அதிர வருவதோர் நோய். | 429 |
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர். | 430 |
குற்றங்கடிதல்
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார் பெருக்கம் பெருமித நீர்த்து. | 431 |
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா உவகையும் ஏதம் இறைக்கு. | 432 |
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார். | 433 |
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே அற்றந் த்ரூஉம் பகை. | 434 |
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். | 435 |
தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு. | 436 |
செயற்பால செய்யா திவறியான் செல்வம் உயற்பால தன்றிக் கெடும். | 437 |
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று. | 438 |
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை. | 439 |
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல். | 440 |
பெரியாரைத் துணைக்கோடல்
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். | 441 |
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல். | 442 |
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல். | 443 |
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை. | 444 |
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். | 445 |
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்த தில். | 446 |
இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே கெடுக்குந் தகைமை யவர். | 447 |
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானுங் கெடும். | 448 |
முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ் சார்பிலார்க் கில்லை நிலை. | 449 |
பல்லார் பகைகொளவிற் பத்தடுத்த தீமைத்தே நல்லார் தொடர்கை விடல். | 450 |
சிற்றினஞ்சேராமை
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். | 451 |
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்ப தாகும் அறிவு. | 452 |
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம் இன்னான் எனப்படுஞ் சொல். | 453 |
மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துள தாகும் அறிவு. | 454 |
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும். | 455 |
மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு இல்லைநன் றாகா வினை. | 456 |
மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம் எல்லாப் புகழும் தரும். | 457 |
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப் புடைத்து. | 458 |
மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து. | 459 |
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல். | 460 |
தெரிந்துசெயல்வகை
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். | 461 |
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல் | 462 |
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார். | 463 |
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர். | 464 |
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு. | 465 |
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானுங் கெடும். | 466 |
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. | 467 |
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும். | 468 |
நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை. | 469 |
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு கொள்ளாத கொள்ளாது உலகு. | 470 |
வலியறிதல்
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல். | 471 |
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல். | 472 |
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி இடைக்கண் முரிந்தார் பலர். | 473 |
அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும். | 474 |
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ் சால மிகுத்துப் பெயின். | 475 |
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின் உயிர்க்கிறுதி ஆகி விடும். | 476 |
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள் போற்றி வழங்கு நெறி. | 477 |
ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை போகாறு அகலாக் கடை. | 478 |
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும். | 479 |
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும். | 480 |
காலமறிதல்
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது. | 481 |
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் தீராமை ஆர்க்குங் கயிறு. | 482 |
அருவினை யென்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின். | 483 |
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின். | 484 |
காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர். | 485 |
ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து. | 486 |
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். | 487 |
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை காணின் கிழக்காம் தலை. | 488 |
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல். | 489 |
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து. | 490 |
இடனறிதல்
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்அல் லது. | 491 |
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவுந் தரும். | 492 |
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின். | 493 |
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து துன்னியார் துன்னிச் செயின். | 494 |
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற. | 495 |
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் நாவாயும் ஓடா நிலத்து. | 496 |
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை எண்ணி இடத்தால் செயின். | 497 |
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழிந்து விடும். | 498 |
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. | 499 |
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா வேலாள் முகத்த களிறு. | 500 |
தெரிந்துதெளிதல்
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும். | 501 |
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் சுட்டே தெளிவு. | 502 |
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு. | 503 |
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். | 504 |
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். | 505 |
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி. | 506 |
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாந் தரும். | 507 |
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும். | 508 |
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள். | 509 |
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும். | 510 |
தெரிந்துவினையாடல்
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும். | 511 |
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. | 512 |
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. | 513 |
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர். | 514 |
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. | 515 |
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். | 516 |
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். | 517 |
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குரிய னாகச் செயல். | 518 |
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு. | 519 |
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடா துலகு. | 520 |
சுற்றந்தழால்
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல் சுற்றத்தார் கண்ணே உள. | 521 |
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவும் தரும். | 522 |
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடின்றி நீர்நிறைந் தற்று. | 523 |
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான் பெற்றத்தால் பெற்ற பயன். | 524 |
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும். | 525 |
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின் மருங்குடையார் மாநிலத்து இல். | 526 |
காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள. | 527 |
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர். | 528 |
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக் காரணம் இன்றி வரும். | 529 |
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக் கொளல். | 530 |
பொச்சாவாமை
இறந்த வெகுளியின் தீதே சிறந்த உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. | 531 |
பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு. | 532 |
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு. | 533 |
அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு. | 534 |
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை பின்னூறு இரங்கி விடும். | 535 |
இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை வாயின் அதுவொப்பது இல். | 536 |
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக் கருவியால் போற்றிச் செயின். | 537 |
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். | 538 |
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. | 539 |
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளியது உள்ளப் பெறின். | 540 |
செங்கோன்மை
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்துசெய் வஃதே முறை. | 541 |
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி. | 542 |
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். | 543 |
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு. | 544 |
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு. | 545 |
வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉங் கோடா தெனின். | 546 |
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின். | 547 |
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும். | 548 |
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் வடுவன்று வேந்தன் தொழில். | 549 |
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர். | 550 |
கொடுங்கோன்மை
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து. | 551 |
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு. | 552 |
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும். | 553 |
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு. | 554 |
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை | 555 |
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி. | 556 |
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு. | 557 |
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின். | 558 |
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல். | 559 |
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். | 560 |
வெருவந்தசெய்யாமை
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. | 561 |
கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர். | 562 |
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின் ஒருவந்தம் ஒல்லைக் கெடும். | 563 |
இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன் உறைகடுகி ஒல்லைக் கெடும். | 564 |
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் பேஎய்கண் டன்னது உடைத்து. | 565 |
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம் நீடின்றி ஆங்கே கெடும். | 566 |
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம். | 567 |
இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறிற் சிறுகும் திரு. | 568 |
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும். | 569 |
கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது இல்லை நிலக்குப் பொறை. | 570 |
கண்ணோட்டம்
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு. | 571 |
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை. | 572 |
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண். | 573 |
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண். | 574 |
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும் | 575 |
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ டியைந்துகண் ணோடா தவர். | 576 |
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல். | 577 |
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு. | 578 |
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை. | 579 |
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர். | 580 |
ஒற்றாடல்
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண். | 581 |
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில். | 582 |
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றங் கொளக்கிடந்தது இல். | 583 |
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று. | 584 |
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று. | 585 |
துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து என்செயினும் சோர்விலது ஒற்று. | 586 |
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று. | 587 |
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல். | 588 |
ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர் சொற்றொக்க தேறப் படும். | 589 |
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை. | 590 |
ஊக்கமுடைமை
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று. | 591 |
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். | 592 |
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார். | 593 |
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை. | 594 |
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு. | 595 |
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. | 596 |
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு. | 597 |
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து வள்ளியம் என்னுஞ் செருக்கு. | 598 |
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை வெரூஉம் புலிதாக் குறின். | 599 |
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார் மரம்மக்க ளாதலே வேறு. | 600 |
மடியின்மை
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும். | 601 |
மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர். | 602 |
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்து. | 603 |
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு. | 604 |
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். | 605 |
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது. | 606 |
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர். | 607 |
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும். | 608 |
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும். | 609 |
மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு. | 610 |
ஆள்வினையுடைமை
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும். | 611 |
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. | 612 |
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு. | 613 |
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை வாளாண்மை போலக் கெடும். | 614 |
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண். | 615 |
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும். | 616 |
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளான் தாமரையி னாள். | 617 |
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி. | 618 |
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். | 619 |
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர். | 620 |
இடுக்கணழியாமை
இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்ப தில். | 621 |
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும். | 622 |
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர். | 623 |
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. | 624 |
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும். | 625 |
அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று ஓம்புதல் தேற்றா தவர். | 626 |
இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல். | 627 |
இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன். | 628 |
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். | 629 |
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு. | 630 |
அரசியல் முற்றிற்று
அமைச்சியல்
அமைச்சு
கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. | 631 |
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு. | 632 |
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்ல தமைச்சு. | 633 |
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு. | 634 |
அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந் திறனறிந்தான் தேர்ச்சித் துணை. | 635 |
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாவுள முன்நிற் பவை. | 636 |
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து இயற்கை அறிந்து செயல். | 637 |
அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழையிருந்தான் கூறல் கடன். | 638 |
பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர் எழுபது கோடி உறும். | 639 |
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர். | 640 |
சொல்வன்மை
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று. | 641 |
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. | 642 |
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். | 643 |
திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும் பொருளும் அதனினூஉங்கு இல். | 644 |
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. | 645 |
வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல் மாட்சியின் மாசற்றார் கோள். | 646 |
சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது. | 647 |
விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். | 648 |
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற சிலசொல்லல் தேற்றா தவர். | 649 |
இணர்ஊழ்த்தும் நாறா மலரனையர் கற்றது உணர விரித்துரையா தார். | 650 |
வினைத்தூய்மை
துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம் வேண்டிய எல்லாந் தரும். | 651 |
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு நன்றி பயவா வினை. | 652 |
ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர். | 653 |
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர். | 654 |
எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று. | 655 |
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. | 656 |
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல் குரவே தலை. | 657 |
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும். | 658 |
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பா லவை. | 659 |
சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று. | 660 |
வினைத்திட்பம்
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றைய எல்லாம் பிற. | 661 |
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். | 662 |
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின் எற்றா விழுமந் தரும். | 663 |
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். | 664 |
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும். | 665 |
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின். | 666 |
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து. | 667 |
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது தூக்கங் கடிந்து செயல். | 668 |
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி இன்பம் பயக்கும் வினை. | 669 |
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டாரை வேண்டாது உலகு. | 670 |
வினைசெயல்வகை
சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது. | 671 |
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை. | 672 |
ஙல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல். | 673 |
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும். | 674 |
பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல். | 675 |
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் படுபயனும் பார்த்துச் செயல். | 676 |
செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல். | 677 |
வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று. | 678 |
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல். | 679 |
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து. | 680 |
தூது
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. | 681 |
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று. | 682 |
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு. | 683 |
அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு. | 684 |
தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாந் தூது. | 685 |
கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் தக்கது அறிவதாம் தூது. | 686 |
கடனறிந்து காலங் கருதி இடனறிந்து எண்ணி உரைப்பான் தலை. | 687 |
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழியுரைப்பான் பண்பு. | 688 |
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் வாய்சேரா வன்க ணவன். | 689 |
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது. | 690 |
மன்னரைச் சேர்ந்தொழுதல்
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். | 691 |
மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கந் தரும். | 692 |
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது. | 693 |
செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் ஆன்ற பெரியா ரகத்து. | 694 |
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை விட்டக்கால் கேட்க மறை. | 695 |
குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில வேண்டுப வேட்பச் சொலல். | 696 |
வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும் கேட்பினும் சொல்லா விடல். | 697 |
இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும். | 698 |
கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் துளக்கற்ற காட்சி யவர். | 699 |
பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும். | 700 |
குறிப்பறிதல்
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி. | 701 |
ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத் தெய்வத்தோ டொப்பக் கொளல். | 702 |
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள் யாது கொடுத்தும் கொளல். | 703 |
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை உறுப்போ ரனையரால் வேறு. | 704 |
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள் என்ன பயத்தவோ கண். | 705 |
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம். | 706 |
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும் காயினும் தான்முந் துறும். | 707 |
முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி உற்ற துணர்வார்ப் பெறின். | 708 |
பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின். | 709 |
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற. | 710 |
அவையறிதல்
அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். | 711 |
இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின் நடைதெரிந்த நன்மை யவர். | 712 |
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின் வகையறியார் வல்லதூஉம் இல். | 713 |
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல். | 714 |
நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள் முந்து கிளவாச் செறிவு. | 715 |
ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. | 716 |
கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச் சொல்தெரிதல் வல்லார் அகத்து. | 717 |
உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன் பாத்தியுள் நீர்சொரிந் தற்று. | 718 |
புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள் நன்குசலச் சொல்லு வார். | 719 |
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் அல்லார்முன் கோட்டி கொளல். | 720 |
அவையஞ்சாமை
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். | 721 |
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் கற்ற செலச்சொல்லு வார். | 722 |
பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத்து அஞ்சா தவர். | 723 |
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற மிக்காருள் மிக்க கொளல். | 724 |
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு. | 725 |
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் நுண்ணவை அஞ்சு பவர்க்கு. | 726 |
பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல். | 727 |
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார். | 728 |
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லா ரவையஞ்சு வார். | 729 |
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் கற்ற செலச்சொல்லா தார். | 730 |
அமைச்சியல் முற்றிற்று
அங்கவியல்
நாடு
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு. | 731 |
பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு. | 732 |
பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு. | 733 |
உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு. | 734 |
பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும் கொல்குறும்பும் இல்லது நாடு. | 735 |
கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா நாடென்ப நாட்டின் தலை. | 736 |
இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. | 737 |
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து. | 738 |
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு. | 739 |
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே வேந்தமை வில்லாத நாடு. | 740 |
அரண்
ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள். | 741 |
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடைய தரண். | 742 |
உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின் அமைவரண் என்றுரைக்கும் நூல். | 743 |
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை ஊக்கம் அழிப்ப தரண். | 744 |
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீரது அரண். | 745 |
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் நல்லாள் உடையது அரண். | 746 |
முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும் பற்றற் கரியது அரண். | 747 |
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வது அரண். | 748 |
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்ட தரண். | 749 |
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண். | 750 |
பொருள்செயல்வகை
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள். | 751 |
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. | 752 |
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று. | 752 |
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள். | 754 |
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல். | 755 |
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். | 756 |
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் செல்வச் செவிலியால் உண்டு. | 757 |
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று உண்டாகச் செய்வான் வினை. | 758 |
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் எஃகதனிற் கூரிய தில். | 759 |
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு. | 760 |
படைமாட்சி
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையுள் எல்லாம் தலை. | 761 |
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் தொல்படைக் கல்லால் அரிது. | 762 |
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை நாகம் உயிர்ப்பக் கெடும். | 763 |
அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த வன்க ணதுவே படை. | 764 |
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்ற லதுவே படை. | 765 |
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு. | 766 |
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த போர்தாங்கும் தன்மை அறிந்து. | 767 |
அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை படைத்தகையால் பாடு பெறும். | 768 |
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின் வெல்லும் படை. | 769 |
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை தலைமக்கள் இல்வழி இல். | 770 |
படைச்செருக்கு
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை முன்நின்று கல்நின் றவர். | 771 |
கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. | 772 |
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு. | 773 |
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் மெய்வேல் பறியா நகும். | 774 |
விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின் ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. | 775 |
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள் வைக்கும்தன் நாளை எடுத்து. | 776 |
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார் கழல்யாப்புக் காரிகை நீர்த்து. | 777 |
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன் செறினும் சீர்குன்றல் இலர். | 778 |
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே பிழைத்தது ஒறுக்கிற் பவர். | 779 |
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு இரந்துகோள் தக்கது உடைத்து. | 780 |
நட்பு
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. | 781 |
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப் பின்னீர பேதையார் நட்பு. | 782 |
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு. | 783 |
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண் மேற்செனறு இடித்தற் பொருட்டு. | 784 |
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங் கிழமை தரும். | 785 |
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு. | 786 |
அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண் அல்லல் உழப்பதாம் நட்பு. | 787 |
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. | 788 |
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. | 789 |
இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று புனையினும் புல்லென்னும் நட்பு. | 790 |
நட்பாராய்தல்
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு. | 791 |
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும். | 792 |
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு. | 793 |
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. | 794 |
அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார்நடபு ஆய்ந்து கொளல். | 795 |
கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல். | 796 |
ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார் கேண்மை ஒரீஇ விடல். | 797 |
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. | 798 |
கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை உள்ளினும் உள்ளஞ் சுடும். | 799 |
மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும் ஒருவுக ஒப்பிலார் நட்பு. | 800 |
பழைமை
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. | 801 |
நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன். | 802 |
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை. | 803 |
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின். | 804 |
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின். | 805 |
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. | 806 |
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர். | 807 |
கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின். | 808 |
கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு. | 809 |
விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார். | 810 |
தீ நட்பு
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை பெருகலிற் குன்றல் இனிது. | 811 |
உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை பெறினும் இழப்பினும் என். | 812 |
உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர். | 813 |
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார் தமரின் தனிமை தலை. | 814 |
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை எய்தலின் எய்தாமை நன்று. | 815 |
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார் ஏதின்மை கோடி உறும். | 816 |
நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும். | 817 |
ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல்லாடார் சோர விடல். | 818 |
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு. | 819 |
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு. | 820 |
கூடாநட்பு
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு. | 821 |
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும். | 822 |
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது. | 823 |
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும். | 824 |
மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும் சொல்லினால் தேறற்பாற்று அன்று. | 825 |
நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல் ஒல்லை உணரப் படும். | 826 |
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். | 827 |
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார் அழுதகண் ணீரும் அனைத்து. | 828 |
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து நட்பினுள் சாப்புல்லற் பாற்று. | 829 |
பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு அகநட்பு ஒரீஇ விடல். | 830 |
பேதைமை
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு ஊதியம் போக விடல். | 831 |
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை கையல்ல தன்கட் செயல். | 832 |
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும் பேணாமை பேதை தொழில் | 833 |
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையின் பேதையார் இல். | 834 |
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அளறு. | 835 |
பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின். | 836 |
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை பெருஞ்செல்வம் உற்றக் கடை. | 837 |
மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன் கையொன்று உடைமை பெறின். | 838 |
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண் பீழை தருவதொன் றில். | 839 |
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல். | 840 |
புல்லறிவாண்மை
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு. | 841 |
அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும் இல்லை பெறுவான் தவம். | 842 |
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது. | 843 |
வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு. | 844 |
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும். | 845 |
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் குற்றம் மறையா வழி. | 846 |
அருமறை சோரும் அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு. | 847 |
ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய். | 848 |
காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு. | 849 |
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து அலகையா வைக்கப் படும். | 850 |
இகல்
இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய். | 851 |
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி இன்னாசெய் யாமை தலை. | 852 |
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத் தாவில் விளக்கம் தரும். | 853 |
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின். | 854 |
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே மிக்லூக்கும் தன்மை யவர். | 855 |
இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை தவலும் கெடலும் நணித்து. | 856 |
மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல் இன்னா அறிவி னவர். | 857 |
இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு. | 858 |
இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை மிகல்காணும் கேடு தரற்கு. | 859 |
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு. | 860 |
பகைமாட்சி
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா மெலியார்மேல் மேக பகை. | 861 |
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான் என்பரியும் ஏதிலான் துப்பு. | 862 |
அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான் தஞ்சம் எளியன் பகைக்கு. | 863 |
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது. | 864 |
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான் பண்பிலன் பற்றார்க்கு இனிது. | 865 |
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான் பேணாமை பேணப் படும். | 866 |
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து மாணாத செய்வான் பகை. | 867 |
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு இனனிலனாம் ஏமாப் புடைத்து. | 868 |
செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா அஞ்சும் பகைவர்ப் பெறின். | 869 |
கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும் ஒல்லானை ஒல்லா தொளி. | 870 |
பகைத்திறந்தெரிதல்
பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று. | 871 |
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை. | 872 |
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப் பல்லார் பகைகொள் பவன். | 873 |
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன் தகைமைக்கண் தங்கிற்று உலகு. | 874 |
தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன் இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. | 875 |
தேறினும் தேறா விடினும் அழிவின்கண் தேறான் பகாஅன் விடல். | 876 |
நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து. | 877 |
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு. | 878 |
இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து. | 879 |
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார். | 880 |
உட்பகை
நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின். | 881 |
வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு. | 882 |
உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும். | 883 |
மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா ஏதம் பலவும் தரும். | 884 |
உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவும் தரும். | 885 |
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும் பொன்றாமை ஒன்றல் அரிது. | 886 |
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி. | 887 |
அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி. | 888 |
எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும் உட்பகை உள்ளதாங் கேடு. | 889 |
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று. | 890 |
பெரியாரைப் பிழையாமை
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை. | 891 |
பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால் பேரா இடும்பை தரும். | 892 |
கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின் ஆற்று பவர்கண் இழுக்கு. | 893 |
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல். | 894 |
யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின் வேந்து செறப்பட் டவர். | 895 |
எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார் பெரியார்ப் பிழைத்தொழுகு வார். | 896 |
வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம் தகைமாண்ட தக்கார் செறின். | 897 |
குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு நின்றன்னார் மாய்வர் நிலத்து. | 898 |
ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும். | 899 |
இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார் சிறந்தமைந்த சீரார் செறின். | 900 |
பெண்வழிச்சேறல்
மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார் வேண்டாப் பொருளும் அது. | 901 |
பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர் நாணாக நாணுத் தரும். | 902 |
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் நல்லாருள் நாணுத் தரும். | 903 |
மனையாளை அஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று. | 904 |
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் நல்லார்க்கு நல்ல செயல். | 905 |
இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள் அமையார்தோள் அஞ்சு பவர். | 906 |
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப் பெண்ணே பெருமை உடைத்து. | 907 |
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் பெட்டாங்கு ஒழுகு பவர். | 908 |
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் பெண்ஏவல் செய்வார்கண் இல். | 909 |
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும் பெண்சேர்ந்தாம் பேதைமை இல். | 910 |
வரைவின்மகளிர்
அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார் இன்சொல் இழுக்குத் தரும். | 911 |
பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர் நயன்தூக்கி நள்ளா விடல். | 912 |
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் ஏதில் பிணந்தழீஇ அற்று. | 913 |
பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள் ஆயும் அறிவி னவர். | 914 |
பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின் மாண்ட அறிவி னவர். | 915 |
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப் புன்னலம் பாரிப்பார் தோள். | 916 |
நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற் பேணிப் புணர்பவர் தோள். | 917 |
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப மாய மகளிர் முயக்கு. | 918 |
வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு. | 919 |
இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும் திருநீக்கப் பட்டார் தொடர்பு. | 920 |
கள்ளுண்ணாமை
உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டொழுகு வார். | 921 |
உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார். | 922 |
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி. | 923 |
நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. | 924 |
கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல். | 925 |
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர். | 926 |
உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய் பவர் | 927 |
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். | 928 |
களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ அற்று. | 929 |
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. | 930 |
சூது
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. | 931 |
ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல் நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. | 932 |
உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் போஒய்ப் புறமே படும். | 933 |
சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின் வறுமை தருவதொன்று இல். | 934 |
கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார். | 935 |
அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும் முகடியான் மூடப்பட் டார். | 936 |
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின். | 937 |
பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது. | 938 |
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும் அடையாவாம் ஆயங் கொளின். | 939 |
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம் உழத்தொறூஉம் காதற்று உயிர். | 940 |
மருந்து
மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. | 941 |
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின். | 942 |
அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. | 943 |
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து. | 944 |
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு. | 945 |
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய். | 946 |
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும். | 947 |
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். | 948 |
உற்றான் அளவும் பிணியளவும் காலமும் கற்றான் கருதிச் செயல். | 949 |
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து. | 950 |
அங்கவியல் முற்றிற்று
ஒழிபியல்
குடிமை
இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச் செப்பமும் நாணும் ஒருங்கு. | 951 |
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார். | 952 |
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக் குடிக்கு. | 953 |
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார் குன்றுவ செய்தல் இலர். | 954 |
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி பண்பில் தலைப்பிரிதல் இன்று. | 955 |
சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற குலம்பற்றி வாழ்தும்என் பார். | 956 |
குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. | 957 |
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப் படும். | 958 |
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். | 959 |
நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு. | 960 |
மானம்
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும் குன்ற வருப விடல். | 961 |
சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு பேராண்மை வேண்டு பவர். | 962 |
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு. | 963 |
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை. | 964 |
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின். | 965 |
புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று இகழ்வார்பின் சென்று நிலை. | 966 |
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று. | 967 |
மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை பீடழிய வந்த இடத்து. | 968 |
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின். | 969 |
இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளிதொழுது ஏத்தும் உலகு. | 970 |
பெருமை
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு அஃதிறந்து வாழ்தும் எனல். | 971 |
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். | 972 |
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர். | 973 |
ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. | 974 |
பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின் அருமை உடைய செயல். | 975 |
சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு. | 976 |
இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான் சீரல் லவர்கண் படின். | 977 |
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. | 978 |
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல். | 979 |
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான் குற்றமே கூறி விடும். | 980 |
சான்றாண்மை
கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. | 981 |
குணநலம் சான்றோர் நலனே பிறநலம் எந்நலத்து உள்ளதூஉம் அன்று. | 982 |
அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு ஐந்துசால் ஊன்றிய தூண். | 983 |
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு. | 984 |
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர் மாற்றாரை மாற்றும் படை. | 985 |
சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல். | 986 |
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு. | 987 |
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின். | 988 |
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார். | 989 |
சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான் தாங்காது மன்னோ பொறை. | 990 |
பண்புடைமை
எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு. | 991 |
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு. | 992 |
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. | 993 |
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு. | 994 |
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு. | 995 |
பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன். | 996 |
அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர். | 997 |
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றார் ஆதல் கடை. | 998 |
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள். | 999 |
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யால்திரிந் தற்று. | 1000 |
நன்றியில்செல்வம்
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான் செத்தான் செயக்கிடந்தது இல். | 1001 |
பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும் மருளானாம் மாணாப் பிறப்பு | 1002 |
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை. | 1003 |
எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால் நச்சப் படாஅ தவன். | 1004 |
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய கோடியுண் டாயினும் இல். | 1005 |
ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று ஈதல் இயல்பிலா தான். | 1006 |
அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம் பெற்றாள் தமியள்மூத் தற்று. | 1007 |
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள் நச்சு மரம்பழுத் தற்று. | 1008 |
அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர். | 1009 |
சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்ந் தனையது உடைத்து. | 1010 |
நாணுடைமை
கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல் நல்லவர் நாணுப் பிற. | 1011 |
ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல நாணுடைமை மாந்தர் சிறப்பு. | 1012 |
ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும் நன்மை குறித்தது சால்பு. | 1013 |
அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல் பிணிஅன்றோ பீடு நடை. | 1014 |
பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு உறைபதி என்னும் உலகு. | 1015 |
நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம் பேணலர் மேலா யவர். | 1016 |
நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாணாள் பவர். | 1017 |
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் அறம்நாணத் தக்கது உடைத்து. | 1018 |
குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும் நாணின்மை நின்றக் கடை. | 1019 |
நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று. | 1020 |
குடிசெயல்வகை
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல். | 1021 |
ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின் நீள்வினையால் நீளும் குடி. | 1022 |
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும். | 1023 |
சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு. | 1024 |
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு. | 1025 |
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல். | 1026 |
அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை. | 1027 |
குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து மானங் கருதக் கெடும். | 1028 |
இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக் குற்ற மறைப்பான் உடம்பு. | 1029 |
இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும் நல்லாள் இலாத குடி. | 1030 |
உழவு
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. | 1031 |
உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து. | 1032 |
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். | 1033 |
பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர். | 1034 |
இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர். | 1035 |
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை. | 1036 |
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும். | 1037 |
ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு. | 1038 |
செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடி விடும். | 1039 |
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும். | 1040 |
நல்குரவு
இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது. | 1041 |
இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். | 1042 |
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக நல்குரவு என்னும் நசை. | 1043 |
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த சொற்பிறக்கும் சோர்வு தரும். | 1044 |
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் துன்பங்கள் சென்று படும். | 1045 |
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும். | 1046 |
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும் பிறன்போல நோக்கப் படும். | 1047 |
இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு. | 1048 |
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது. | 1049 |
துப்புர வில்லார் துவரத் துறவாமை உப்பிற்கும் காடிக்கும் கூற்று. | 1050 |
இரவு
இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று. | 1051 |
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின். | 1052 |
கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று இரப்புமோ ரேஎர் உடைத்து. | 1053 |
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு. | 1054 |
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று இரப்பவர் மேற்கொள் வது. | 1055 |
கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும். | 1056 |
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்பது உடைத்து. | 1057 |
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று. | 1058 |
ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை. | 1059 |
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி. | 1060 |
இரவச்சம்
கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும் இரவாமை கோடி உறும். | 1061 |
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான். | 1062 |
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும் வன்மையின் வன்பாட்ட தில். | 1063 |
இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக் காலும் இரவொல்லாச் சால்பு. | 1064 |
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது உண்ணலின் ஊங்கினிய தில். | 1065 |
ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்த தில். | 1066 |
இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று. | 1067 |
இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார்தாக்கப் பக்கு விடும். | 1068 |
இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும். | 1069 |
கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர். | 1070 |
கயமை
மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாங்கண்ட தில். | 1071 |
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர் நெஞ்சத்து அவலம் இலர். | 1072 |
தேவர் அனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான். | 1073 |
அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். | 1074 |
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் அவாவுண்டேல் உண்டாம் சிறிது. | 1075 |
அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். | 1076 |
ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும் கூன்கையர் அல்லா தவர்க்கு. | 1077 |
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ். | 1078 |
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல் வடுக்காண வற்றாகும் கீழ். | 1079 |
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் விற்றற்கு உரியர் விரைந்து. | 1080 |
ஒழிபியல் முற்றிற்று
பொருட்பால் முற்றிற்று
காமத்துப்பால்
களவியல்
3.1.1
தகையணங்குறுத்தல்
அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை மாதர்கொல் மாலும்என் நெஞ்சு. | 1081 |
நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு தானைக்கொண் டன்ன துடைத்து. | 1082 |
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு. | 1083 |
கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப் பேதைக்கு அமர்த்தன கண். | 1084 |
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கமிம் மூன்றும் உடைத்து. | 1085 |
கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர் செய்யல மன்இவள் கண். | 1086 |
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில். | 1087 |
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு. | 1088 |
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு அணியெவனோ ஏதில தந்து. | 1089 |
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று. | 1090 |
குறிப்பறிதல்
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. | 1091 |
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில் செம்பாகம் அன்று பெரிது. | 1092 |
நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள் யாப்பினுள் அட்டிய நீர். | 1093 |
யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும். | 1094 |
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும் | 1095 |
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும். | 1096 |
செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும் உறாஅர்போன்று உற்றார் குறிப்பு. | 1097 |
அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும். | 1098 |
ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள. | 1099 |
கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல. | 1100 |
புணர்ச்சிமகிழ்தல்
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள. | 1101 |
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து. | 1102 |
தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. | 1103 |
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள். | 1104 |
வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட் டார் கதுப்பினாள் தோள். | 1105 |
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள். | 1106 |
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு. | 1107 |
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு. | 1108 |
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன். | 1109 |
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு. | 1110 |
நலம்புனைந்துரைத்தல்
நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள். | 1111 |
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று. | 1112 |
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. | 1113 |
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று. | 1114 |
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு நல்ல படாஅ பறை. | 1115 |
மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன். | 1116 |
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து. | 1117 |
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி. | 1118 |
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி. | 1119 |
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம். | 1120 |
காதற்சிறப்புரைத்தல்
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர். | 1121 |
உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு. | 1122 |
கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம். | 1123 |
வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து. | 1124 |
உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம். | 1125 |
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா நுண்ணியர்எம் காத லவர். | 1126 |
கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து. | 1127 |
நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து. | 1128 |
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னும்இவ் வூர். | 1129 |
உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னும்இவ் வூர். | 1130 |
நாணுத்துறவுரைத்தல்
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி. | 1131 |
நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து. | 1132 |
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல். | 1133 |
காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு நல்லாண்மை என்னும் புணை. | 1134 |
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர். | 1135 |
மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்கென் கண். | 1136 |
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்க தில். | 1137 |
நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும். | 1138 |
அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு. | 1139 |
யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா ஆறு. | 1140 |
அலரறிவுறுத்தல்
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால். | 1141 |
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது அலரெமக்கு ஈந்ததிவ் வூர். | 1142 |
உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து. | 1143 |
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து. | 1144 |
களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது. | 1145 |
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று. | 1146 |
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய். | 1147 |
நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல். | 1148 |
அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை. | 1149 |
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கெளவை எடுக்கும்இவ் வூர். | 1150 |
களவியல் முற்றிற்று
கற்பியல்
பிரிவாற்றாமை
செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை. | 1151 |
இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு. | 1152 |
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவோ ரிடத்துண்மை யான். | 1153 |
அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு. | 1154 |
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு. | 1155 |
பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை. | 1156 |
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை. | 1157 |
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு. | 1158 |
தொடிற்சுடின் அல்லது காமநோய் போல விடிற்சுடல் ஆற்றுமோ தீ. | 1159 |
அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர். | 1160 |
படர்மெலிந்திரங்கல்
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும். | 1161 |
கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும். | 1162 |
காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் நோனா உடம்பின் அகத்து. | 1163 |
காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல். | 1164 |
துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர். | 1165 |
இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது. | 1166 |
காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன். | 1167 |
மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்லது இல்லை துணை. | 1168 |
<p style=”line-height: 150%”கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா. | 1169 |
உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண். | 1170 |
கண்விதுப்பழிதல்
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது. | 1171 |
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்பது எவன். | 1172 |
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து. | 1173 |
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து. | 1174 |
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் காமநோய் செய்தஎன் கண். | 1175 |
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது. | 1176 |
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து வேண்டி அவர்க்கண்ட கண். | 1177 |
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணாது அமைவில கண். | 1178 |
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண். | 1179 |
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து. | 1180 |
பசப்புறுபருவரல்
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க்கு உரைக்கோ பிற. | 1181 |
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் மேனிமேல் ஊரும் பசப்பு. | 1182 |
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து. | 1183 |
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் கள்ளம் பிறவோ பசப்பு. | 1184 |
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என் மேனி பசப்பூர் வது. | 1185 |
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. | 1186 |
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு. | 1187 |
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் துறந்தார் அவர்என்பார் இல். | 1188 |
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின். | 1189 |
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின். | 1190 |
தனிப்படர்மிகுதி
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி. | 1191 |
வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளிக்கும் அளி. | 1192 |
வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே வாழுநம் என்னும் செருக்கு. | 1193 |
வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின். | 1194 |
நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை. | 1195 |
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது. | 1196 |
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான். | 1197 |
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல். | 1198 |
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு. | 1199 |
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு. | 1200 |
நினைந்தவர்புலம்பல்
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது. | 1201 |
எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று ஏல். | 1202 |
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும். | 1203 |
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து ஓஒ உளரே அவர். | 1204 |
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல். | 1205 |
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன். | 1206 |
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும். | 1207 |
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு. | 1208 |
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து. | 1209 |
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி. | 1210 |
கனவுநிலையுரைத்தல்
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து. | 1211 |
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன் மன். | 1212 |
நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர். | 1213 |
கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு. | 1214 |
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது. | 1215 |
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் காதலர் நீங்கலர் மன். | 1216 |
நனவினால் நல்காக் கொடியார் கனவனால் என்எம்மைப் பீழிப் பது. | 1217 |
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. | 1218 |
நனவினால் நல்காரை நோவர் கனவினால் காதலர்க் காணா தவர். | 1219 |
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்வூ ரவர். | 1220 |
பொழுதுகண்டிரங்கல்
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது. | 1221 |
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை. | 1222 |
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் துன்பம் வளர வரும். | 1223 |
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும். | 1224 |
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை. | 1225 |
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்த திலேன். | 1226 |
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய். | 1227 |
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை. | 1228 |
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து. | 1229 |
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர். | 1230 |
உறுப்புநலனழிதல்
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண். | 1231 |
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண். | 1232 |
தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள். | 1233 |
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள். | 1234 |
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள். | 1235 |
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து. | 1236 |
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட் பூசல் உரைத்து. | 1237 |
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல். | 1238 |
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண். | 1239 |
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு. | 1240 |
நெஞ்சொடுகிளத்தல்
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து. | 1241 |
காதல் அவரிலர் ஆகநீ நோவது பேதைமை வாழியென் நெஞ்சு. | 1242 |
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல். | 1243 |
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று. | 1244 |
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர். | 1245 |
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. | 1246 |
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன்இவ் விரண்டு. | 1247 |
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. | 1248 |
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ யாருழைச் சேறியென் நெஞ்சு. | 1249 |
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின். | 1250 |
நிறையழிதல்
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு. | 1251 |
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில். | 1252 |
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும். | 1253 |
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் மறையிறந்து மன்று படும். | 1254 |
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று. | 1255 |
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர். | 1256 |
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் பேணியார் பெட்ப செயின். | 1257 |
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை. | 1258 |
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உறுவது கண்டு. | 1259 |
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல். | 1260 |
அவர்வயின்விதும்பல்
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல். | 1261 |
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து. | 1262 |
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன். | 1263 |
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறுமென் நெஞ்சு. | 1264 |
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்கும்என் மென்தோள் பசப்பு. | 1265 |
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட. | 1266 |
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்அன்ன கேளிர் விரன். | 1267 |
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து. | 1268 |
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. | 1269 |
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் உள்ளம் உடைந்துக்கக் கால். | 1270 |
குறிப்பறிவுறுத்தல்
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்டு. | 1271 |
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது. | 1272 |
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதொன்று உண்டு. | 1273 |
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு. | 1274 |
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்தொன்று உடைத்து. | 1275 |
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி அன்பின்மை சூழ்வ துடைத்து. | 1276 |
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை. | 1277 |
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து. | 1278 |
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃதாண் டவள்செய் தது. | 1279 |
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு. | 1280 |
புணர்ச்சிவிதும்பல்
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு. | 1281 |
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் காமம் நிறைய வரின். | 1282 |
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணா தமையல கண். | 1283 |
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு. | 1284 |
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து. | 1285 |
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை. | 1286 |
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென் புலந்து. | 1287 |
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு. | 1288 |
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார். | 1289 |
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று. | 1290 |
நெஞ்சொடுபுலத்தல்
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது. | 1291 |
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறியென் நெஞ்சு. | 1292 |
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங்கு அவர்பின் செலல். | 12983 |
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று. | 1294 |
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு. | 1295 |
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததென் நெஞ்சு. | 1296 |
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் மாணா மடநெஞ்சிற் பட்டு. | 1297 |
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. | 1298 |
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி. | 1299 |
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய நெஞ்சம் தமரல் வழி. | 1300 |
புலவி
புல்லா திராஅப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. | 1301 |
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல். | 1302 |
அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல். | 1303 |
ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று. | 1304 |
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை பூஅன்ன கண்ணார் அகத்து. | 1305 |
துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று. | 1306 |
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது நீடுவ தன்றுகொல் என்று. | 1307 |
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி. | 1308 |
நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது. | 1309 |
ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா. | 1310 |
புலவி நுணுக்கம்
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. | 1311 |
ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து. | 1312 |
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று. | 1313 |
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று. | 1314 |
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்நிறை நீர்கொண் டனள். | 1315 |
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள். | 1316 |
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று. | 1317 |
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று. | 1318 |
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர் இந்நீரர் ஆகுதிர் என்று. | 1319 |
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று. | 1320 |
ஊடலுவகை
இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் வல்லது அவர்அளிக்கு மாறு. | 1321 |
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும். | 1322 |
புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு நீரியைந் தன்னார் அகத்து. | 1323 |
புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென் உள்ளம் உடைக்கும் படை. | 1324 |
தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள் அகறலின் ஆங்கொன் றுடைத்து. | 1325 |
உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. | 1326 |
ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலிற் காணப் படும். | 1327 |
ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு. | 1328 |
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா. | 1329 |
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின். | 1330 |
கற்பியல் முற்றிற்று காமத்துப்பால் முற்றிற்று
திருக்குறள் முற்றிற்று
Category:Thirukural
Glossary
The glossary of this blog of Agaram-Thirukkural has been arranged in alphabetical order and shall be sorted ascending / descending order (columnwise) by clicking on the column header titles.
Click on the chapter number to view the Thirukkural meaning and explanations of the respective chapters.
in English | in Tamil | Chapter | ||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Absence of Terrorism | வெருவந்த செய்யாமை | 57 | ||||||||||||
Acting After Due Consideration | தெரிந்து செயல்வகை | 47 | ||||||||||||
Agriculture | உழவு | 104 | ||||||||||||
Assertion of the Strength of Virtue | அரண் வலியுறுத்தல் | 4 | ||||||||||||
Avoiding Mean Associations | சிற்றினம் சேராமை | 46 | ||||||||||||
Baseness | கயமை | 108 | ||||||||||||
Beauty’s Dart | தகையணங்குறுத்தல் | 109 | ||||||||||||
Being Led by Women | பெண்வழிச் சேரல் | 91 | ||||||||||||
Benignity | கண்ணோட்டம் | 58 | ||||||||||||
Cherishing Guests | விருந்தோம்பல் | 9 | ||||||||||||
Cherishing One’s Kindred | சுற்றந் தழால் | 53 | ||||||||||||
Complainings | படர்மெலிந் திரங்கல் | 117 | ||||||||||||
Conduct in the Presence of the King | மன்னரைச் சேர்ந்தொழுகல் | 70 | ||||||||||||
Courtesy | பண்புடைமை | 100 | ||||||||||||
Declaration of Love’s Special Excellence | காதற் சிறப்புரைத்தல் | 113 | ||||||||||||
Desire for Reunion | புணர்ச்சி விதும்பல் | 129 | ||||||||||||
Destiny | ஊழ் | 38 | ||||||||||||
Detectives | ஒற்றாடல் | 59 | ||||||||||||
Domestic Life | இல்வாழ்க்கை | 5 | ||||||||||||
Dread of Devil Deeds | தீவினையச்சம் | 21 | ||||||||||||
Energy | ஊக்கம் உடைமை | 60 | ||||||||||||
Enmity Within | உட்பகை | 89 | ||||||||||||
Evil Friendship | தீ நட்பு | 82 | ||||||||||||
Exploration with Oneself | நெஞ்சோடு புலத்தல் | 130 | ||||||||||||
Eyes Consumed with Grief | கண்விதுப்பழிதல் | 118 | ||||||||||||
Familiarity | பழைமை | 81 | ||||||||||||
Feigned Anger | புலவி நுணுக்கம் | 132 | ||||||||||||
Folly | பேதைமை | 84 | ||||||||||||
Friendship | நட்பு | 79 | ||||||||||||
Gaming (Gambling) | சூது | 94 | ||||||||||||
Giving | ஈகை | 23 | ||||||||||||
Greatness | பெருமை | 98 | ||||||||||||
Hearing | கேள்வி | 42 | ||||||||||||
Helpless in Trouble | இடுக்கண் அழியாமை | 63 | ||||||||||||
Honour | மானம் | 97 | ||||||||||||
Hostility | இகல் | 86 | ||||||||||||
Ignorance | கல்லாமை | 41 | ||||||||||||
Impartiality | நடுவு நிலைமை | 12 | ||||||||||||
Inconsistent Conduct | கூடா ஒழுக்கம் | 28 | ||||||||||||
Instability | நிலையாமை | 34 | ||||||||||||
Investigation in Forming Friendship | நட்பாராய்தல் | 80 | ||||||||||||
Knowing the Fitting Time | காலம் அறிதல் | 49 | ||||||||||||
Knowing the Place | இடன் அறிதல் | 50 | ||||||||||||
Knowing the Quality of Hate | பகைத்திறம் தெரிதல் | 88 | ||||||||||||
Knowledge of the True | மெய்யுணர்தல் | 36 | ||||||||||||
Lamentations at Eventide | பொழுதுகண்டு இரங்கல் | 123 | ||||||||||||
Learning | கல்வி | 40 | ||||||||||||
Manly Effort | ஆள்வினை உடைமை | 62 | ||||||||||||
Medicine | மருந்து | 95 | ||||||||||||
Mendicancy | இரவு | 106 | ||||||||||||
Military Spirit | படைச் செருக்கு | 78 | ||||||||||||
Modes of Action | வினைசெயல்வகை | 68 | ||||||||||||
Mutual Desire | அவர்வயின் விதும்பல் | 127 | ||||||||||||
Nobility | குடிமை | 96 | ||||||||||||
Not Backbiting | புறங்கூறாமை | 19 | ||||||||||||
Not Coveting | வெஃகாமை | 18 | ||||||||||||
Not Coveting Another’s Wife | பிறனில் விழையாமை | 15 | ||||||||||||
Not Doing Evil | இன்னா செய்யாமை | 32 | ||||||||||||
Not Drinking Palm-Wine | கள்ளுண்ணாமை | 93 | ||||||||||||
Not Envying | அழுக்காறாமை | 17 | ||||||||||||
Not Killing | கொல்லாமை | 33 | ||||||||||||
Not Offending the Great | பெரியாரைப் பிழையாமை | 90 | ||||||||||||
Not to Dread the Council | அவை அஞ்சாமை | 73 | ||||||||||||
Penance | தவம் | 27 | ||||||||||||
Perfectness | சான்றாண்மை | 99 | ||||||||||||
Petty Conceit | புல்லறிவாண்மை | 85 | ||||||||||||
Pouting | புலவி | 131 | ||||||||||||
Poverty | நல்குரவு | 105 | ||||||||||||
Power in Action | வினைத்திட்பம் | 67 | ||||||||||||
Power in Speech | சொல்வன்மை | 65 | ||||||||||||
Purity in Action | வினைத்தூய்மை | 66 | ||||||||||||
Recognition of the Signs (of Mutual Love) | குறிப்பறிதல் | 110 | ||||||||||||
Rejoicing in the Embrace | புணர்ச்சி மகிழ்தல் | 111 | ||||||||||||
Renown | புகழ் | 24 | ||||||||||||
Renunciation | துறவு | 35 | ||||||||||||
Reserve Overcome | நிறையழிதல் | 126 | ||||||||||||
Sad Memories | நினைந்தவர் புலம்பல் | 121 | ||||||||||||
Seeking the Aid of Great Men | பெரியாரைத் துணைக்கோடல் | 45 | ||||||||||||
Selection and Confidence | தெரிந்து தெளிதல் | 51 | ||||||||||||
Selection and Employment | தெரிந்து வினையாடல் | 52 | ||||||||||||
Separation Unendurable | பிரிவாற்றாமை | 116 | ||||||||||||
Shame | நாணுடைமை | 102 | ||||||||||||
Soliloquy | நெஞ்சோடு கிளத்தல் | 125 | ||||||||||||
The Abandonment of Reserve | நாணுத் துறவுரைத்தல் | 114 | ||||||||||||
The Absence of Fraud | கள்ளாமை | 29 | ||||||||||||
The Announcement of the Rumour | அலர் அறிவுறுத்தல் | 115 | ||||||||||||
The Correction of Faults | குற்றங்கடிதல் | 44 | ||||||||||||
The Cruel Sceptre | கொடுங்கோன்மை | 56 | ||||||||||||
The Dread of Mendicancy | இரவச்சம் | 107 | ||||||||||||
The Envoy | தூது | 69 | ||||||||||||
The Excellence of an Army | படைமாட்சி | 77 | ||||||||||||
The Excellence of Rain | வான் சிறப்பு | 2 | ||||||||||||
The Extirpation of Desire | அவா அறுத்தல் | 37 | ||||||||||||
The Fortification | அரண் | 75 | ||||||||||||
The Goodness of the help to Domestic Life | வாழ்க்கைத் துணைநலம் | 6 | ||||||||||||
The Greatness of a King | இறைமாட்சி | 39 | ||||||||||||
The Greatness of Ascetics | நீத்தார் பெருமை | 3 | ||||||||||||
The Knowledge of Benefits Conferred: Gratitude | செய்ந்நன்றி அறிதல் | 11 | ||||||||||||
The Knowledge of Indications | குறிப்பறிதல் | 71 | ||||||||||||
The Knowledge of Power | வலியறிதல் | 48 | ||||||||||||
The Knowledge of the Council Chamber | அவை அறிதல் | 72 | ||||||||||||
The Knowledge of What is Benefitting a Man’s Position | ஒப்புரவறிதல் | 22 | ||||||||||||
The Land | நாடு | 74 | ||||||||||||
The Might of Hatred | பகைமாட்சி | 87 | ||||||||||||
The Not Being Angry | வெகுளாமை | 31 | ||||||||||||
The Not Speaking Profitless Words | பயனில சொல்லாமை | 20 | ||||||||||||
The obtaining of Sons | மக்கட்பேறு | 7 | ||||||||||||
The Office of Minister of State | அமைச்சு | 64 | ||||||||||||
The Pallid Hue | பசப்புறு பருவரல் | 119 | ||||||||||||
The Pleasure of Temporary Variance | ஊடலுவகை | 133 | ||||||||||||
The Possession of Benevolence | அருளுடைமை | 25 | ||||||||||||
The Possession of Decorum | ஒழுக்கமுடைமை | 14 | ||||||||||||
The Possession of King | அறிவுடைமை | 43 | ||||||||||||
The Possession of Love | அன்புடைமை | 8 | ||||||||||||
The Possession of Patience: Forbearance | பொறையுடைமை | 16 | ||||||||||||
The Possession of Self-Restraint | அடக்கமுடைமை | 13 | ||||||||||||
The Praise of God | கடவுள் வாழ்த்து | 1 | ||||||||||||
The Praise of her Beauty | நலம் புனைந்துரைத்தல் | 112 | ||||||||||||
The Reading of the Signs | குறிப்பறிவுறுத்தல் | 128 | ||||||||||||
The Renunciation of Flesh | புலால் மறுத்தல் | 26 | ||||||||||||
The Right Sceptre | செங்கோன்மை | 55 | ||||||||||||
The Solitary Anguish | தனிப்படர் மிகுதி | 120 | ||||||||||||
The Utterance of Pleasant Words | இனியவை கூறல் | 10 | ||||||||||||
The Visions of the Night | கனவுநிலை உரைத்தல் | 122 | ||||||||||||
The Way of Maintaining the Family | குடிசெயல் வகை | 103 | ||||||||||||
Unforgetfulness | பொச்சாவாமை | 54 | ||||||||||||
Unreal Friendship | கூடா நட்பு | 83 | ||||||||||||
Unsluggishness | மடி இன்மை | 61 | ||||||||||||
Veracity | வாய்மை | 30 | Wanton Women | வரைவின் மகளிர் | 92 | Wasting Away | உறுப்புநலன் அழிதல் | 124 | Way of Accumulating Wealth | பொருள் செயல் வகை | 76 | Wealth Without Benefaction | நன்றியில் செல்வம் | 101 |
TAG CLOUD (in Alphabetical Order)
திருக்குறள் – ஒரு அறிமுகம்
தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள்.
இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப் பற்றி விளக்கும் நூல்.
இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதுவும் மேற்கொண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி, இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும், மயிலாப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது; இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார்.கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய முப்பால் நூலை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும், முடிவில் ஒளவையாரின் துணையோடு அரங்கேற்றியதாகவும் அச்செய்திகள் வாயிலாக அறிகிறோம்.
திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யில் புலவர் என்றும் சில சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.
பிற்காலத்தில் திருவள்ளுவர் பெயரால் வேறு சிலநூல்களை வேறு சிலர் இயற்றியுள்ளனர். அவை சித்தர் இலக்கியத்தைச் சேர்ந்தவை.
திருக்குறள் இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. கிருஸ்துவ சகாப்தத்தின் முன் பகுதியைச் சேர்ந்ததாகப் பலர் கருதுவர்.
பழந்தமிழ் நூல்களில் நான்கு பெரும் பகுப்புக்கள் உள்ளன.
1.எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகியவை அடங்கிய பதினென்மேல்கணக்கு
2.பதினென்கீழ்க்கணக்கு
3.ஐம்பெருங்காப்பியங்கள்
4.ஐஞ்சிறு காப்பியங்கள்
ஆகியவை அவை. அவற்றில் பதினென்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் வரிசையில் “முப்பால்” என்னும் பெயரோடு இந்நூல் விளங்குகின்றது.
“அறம், பொருள், இன்பம்”, ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் “முப்பால்” எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் “இயல்” என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்துபாடல்களைத் தன்னுள் அடக்கியது.
இப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை. இவ்வகை வெண்பாக்களால் ஆகிய அக்காலத்திய முதல் நூலும் ஒரே நூலும் இதுதான்.
குறள் வெண்பாக்களால் ஆனமையால் “குறள்’ என்றும் “திருக்குறள்” என்றும் இது பெயர் பெற்றது.
“பாயிரம்” என்னும் பகுதியுடன் முதலில் “அறத்துப்பால்” வருகிறது. அதிலும் முதலில் காணப்படுவது , “கடவுள் வாழ்த்து” என்னும் அதிகாரம். தொடர்ந்து, “வான் சிறப்பு”, “நீத்தார் பெருமை”, “அறன் வலியுறுத்தல்”, ஆகிய அதிகாரங்கள்.
அடுத்துவரும் “இல்லறவியல்” என்னும் இயலில் 25 அதிகாரங்கள்; அடுத்துள்ள துறவறவியலில் 13 அதிகாரங்களுடன் முதற்பாலாகிய அறத்துப்பால் பகுதி முடிவுறுகிறது.
அடுத்து வரும் “பொருட்பாலி”ல் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களும் உள்ளன.
கடைசிப்பாலாகிய “இன்பத்துப்பால்” அல்லது “காமத்துப்பாலி”ல் இரண்டு இயல்கள்; களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களும் உள்ளன. ஆகமொத்தம் 7 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள்.
திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் வள்ளுவர் பாடியுள்ளார். ஆனால் இவற்றில் ஐம்பதுக்கும் குறைவான வடசொற்களே உள்ளன.
“அகரம் முதல வெழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு….”
என்று தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாகிய “அ” வில் ஆரம்பித்து, 1330 ஆம் குறளாகிய,
“ஊடுதல் காமத்திற்கின்பம்; அதற்கின்பம்,
கூடி முயங்கப்பெறின்”
என்று தமிழ் மொழியின் கடைசி எழுத்தாகிய “ன்” னுடன் முடித்திருக்கிறார்.
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை.
பழங்காலத்தில் இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் தற்சமயம் சிறப்பாகக் கருதப் படுவது திருக்குறள் முனுசாமியின் உரை.
தனிமனிதனுக்கு உரிமையானது இன்பவாழ்வு; அதற்குத் துணையாக உள்ளது பொருளியல் வாழ்வு; அவற்றிற்கெல்லாம் அடிப்படையாக விளங்குவது அறவாழ்வு. மனதே எல்லாவற்றிற்கும் ஆதார நிலைக்கலன்; மனத்துக்கண் மாசிலன் ஆதலே அனைத்து அறம்; அறத்தால் வருவதே இன்பம். அறவழியில் நின்று பொருள் ஈட்டி, அதனைக்கொண்டு இன்பவாழ்வு வாழ வேண்டும். அவ்வாறு உலகமாந்தரும் இன்பமுறச் செய்யவேண்டும். பொருளியலாகிய பொதுவாழ்வுக்கும் இன்ப இயலாகிய தனிவாழ்வுக்கும் அடிப்படை அறம்தான் என்பது திருக்குறளின் மொத்தமான நோக்கு.
உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. இதுவரை 80 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
“இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”
A Short Introduction to Thirukural: Written by Dr.S.Jayabarathi for Project Madurai, Original in Inaimathi/Anjal font – Converted to Unicode
http://www.tamilnation.org/literature/kural/
0001. அகர முதல எழுத்தெல்லாம்
0001. Agara Mudhala Ezhuththellaam
- குறள் #0001
- பால்அறத்துப்பால் (Arathuppal) – Virtue
- இயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) – Introduction
- அதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of God
- குறள்அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. - விளக்கம்எழுத்துக்கள் எல்லாம் அகரம் என்னும் ஒலி எழுத்தை முதலாகக் கொண்டுள்ளன. அது போல, உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் ஆதியாகிய கடவுளை முதலாகக் கொண்டுள்ளன.
- Translation
in EnglishA, as its first of letters, every speech maintains;
The “Primal Deity” is first through all the world’s domains. - MeaningAs the letter A is the first of all letters, so the eternal God is first in the world.
மகா மாரியம்மன் கோயில் சிங்காப்பூரில் சைனா டவுன் என்னும் வட்டாரத்தில், சவுத் பிரிட்ச் சாலை என்னுமிடத்தில் அமைந்திருக்கும் ஓர் இந்துக் கோயில் ஆகும். இதுவே சிங்கப்பூரின் மிகப் பழமையான கோயில்.
மகா மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், கடலூர் போன்ற இடங்களில் இருந்து சிங்கப்பூரில் தமிழ் மக்களின் உறுதுணையோடு 1827ல் அமைக்கப்பட்டது. மாரியம்மனை முதற் தெய்வமாகவும், மூலஸ்தான தெய்வமாகவும் அமைத்துள்ளார்கள்.
1823ல் இப்போதுள்ள மாரியம்மன் கோவில் அமைந்துள்ள இடமான சவுத் பிரிட்ஜ் சாலையில் கோவில் கட்ட அனுமதி தரப்பட்டது. 1827ல் கோவிலின் அடித்தளப்பணி ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் நாட்டின் கடலூரைச் சேர்ந்த ஒருவர் தம்முடன் எடுத்து வந்த அம்மன் சிலையை மரப்பலகை, கூரையுடன் கூடிய சிறு குடில் அமைத்து சின்ன அம்மன் என்ற பெயரில் பிரஷ்டை செய்து வழிபாடு தொடங்கப்பட்டது.
அந்த அம்மனே இன்று மகா மாரியம்மன் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் இருக்கிறது. இக்கோயில் கோவில் சீனர்கள் அதிகம் வாழும் பகுதியில் அமைந்திருக்கும் காரணத்தால் சுற்றுபுறத்திலிருக்கும் சீனர்களும் மாரியம்மன் கோயிலுக்கு வந்து வழிபடுகிறார்கள்.
ஆண்டுதோறும் நடக்கும் தீமிதிப்பு விழாவில் சீனர்கள் பெரும்வாரியாக பங்கு பெறுகிறார்கள். கட்டுமானப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கினார்கள். அக்டோபர்- நவம்பரில் திரௌபதை அம்மனுக்கு தீமிதிப்பு விழா நடக்கிறது.
இத்திருவிழா 1842 முதல் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. நவராத்திரி, 1008 சங்காபிஷேகம், மகா சத சண்டி யாகம், நவசக்தி அர்ச்சனை, திரௌபதை உற்சவம் ஆகிய விழாக்கள் சிறப்பாக நடந்து வருகின்றன.
Category:சிறுவர் கதைகள்
சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் 28 கிலோ மீட்டர் தொலைவில் திருமழிசை உள்ளது. சென்னையில் மக்கள் நெருக்கடி அதிகரித்து வருவதால், திருமழிசையை “துணை நகரம்” ஆக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. எனவே இன்னும் சில ஆண்டுகளில் திருமழிசை எனும் பெயர் தினமும் மக்கள் உச்சரிக்கும் பெயராக மாற உள்ளது.
ஆனால் இந்த ஊர் ஆதி காலத்தில் வைணவமும், சைவமும் செழித்து வளர்ந்த புண்ணிய பூமியாக இருந்தது என்பது பலருக்கு தெரியாது. ஈசனும், மகா விஷ்ணுவும், அம்பிகையும் அருள்புரியும் தலங்கள் எத்தனையோ ஆயிரம் உள்ள போதிலும் உலகிலேயே தனி மகிமை பொருந்திய தலமாக, தன்னிரகற்றத் தலமாக திருமழிசை கருதப்படுகிறது.
இத்தலத்தில் ஜெகநாத பெருமாள் ஆலயம், ஒத்தாண்டேஸ்வரர் ஆலயம் உள்ளன. பன்னிரு ஆழ்வார்களில் 4-வது ஆழ்வாரான திருமழிசை ஆழ்வார் இத்தலத்தில்தான் தோன்றினார். துவார யுகத்தில் இத்தலம், “மகிசாரசேத்திரம்” என்றழைக்கப்பட்டது. 13-ம் நூற்றாண்டில் இது திருமழிசை சதுர்வேதி மங்கலம், என்றும் 13-ம் நூற்றாண்டில் திருமழிசை அகரம் என்றும் அழைக்கப்பட்டது.
அதன் பிறகு சுருங்கி திருமழிசை ஆகிவிட்டது. இந்த ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். மிகப் பழமையான இங்கு வழிபாடு செய்தால், 2 திவ்ய தேசங்களில் வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். 5 நிலை 7 கலசங்களுடன் உள்ள கோபுரத்தை பயபக்தியுடன் வணங்கி விட்டு உள்ளே சென்றால் 2 பிரகாரங்களுடன் கோவில் அமைந்திருப்பதை காணலாம்.
கருவறையில் ருக்மணி- சத்யபாமா சமேத ஜெகந்நாதன் பெருமாள் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். சமார் 7 அடி உயரத்தில் கம்பீரமாக இருக்கும் அவரது அழகு பக்தர்களை நிச்சயம் ஈர்க்கும். அவருக்கு ஆகாசன அடிப்படையில் பூஜைகள் நடத்தப்படுகிறது.
இத்தலத்தில்தான் மார்க்கண்டேய முனிவருக்கும், பிருகு முனிவருக்கும் பெருமாள் காட்சிக்கொடுத்து அருளினார். இதை பிரதிபலிக்கும் வகையில் மூலவர் அருகில் 2 முனிவர்களும் அமர்ந்து வணங்கியபடி உள்ளனர். உள் பிரகாரத்தின் ஒரு பகுதியில் திருமழிசை ஆழ்வார் சன்னதியும் பெரிய அளவில் உள்ளது.
இதன் காரணமாக இந்த தலத்தை திருமழிசை ஆழ்வார் கோவில் என்றும் சொல்வதுண்டு. இவரையடுத்து நவநீத கிருஷ்ணர் சன்னதி உள்ளது. வெளி பிரகாரத்தில் திருமங்கை வல்லித் தாயார், லட்சுமி நரசிம்மர், ஆண்டாள், மணவாள மாமுனிவர், விநாயகர், வைஷ்ணவி ஆகியோர் தனி தனி சன்னதிகளில் உள்ளனர்.
இத்தலத்தில் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் திருமங்கை வல்லித்தாயார், தம்மை நம்பிக்கையுடன் அணுகும் பக்தர்களுக்கு சகல சவுபாக்கியங்களையும் அள்ளி, அள்ளி கொடுப்பதாக கருதப்படுகிறது. இத்தாயாருக்கு உரிய முறையில் வழிபாடு செய்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் நிறைவான வாழ்க்கையை பெற முடியும்.
அது போல இத்தலத்தின் பிரகார தேவதையான ஸ்ரீவைஷ்ணவியும் பக்தர்களுக்கு வரங்களை வாரி, வாரி வழங்குகிறாள். திருமாலின் சங்கு, சக்கரத்தை ஏந்தியுள்ள அவள் கருணை வடிவாக நின்று சேவை சாதிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைஷணவிக்கு “பூ மாலை வழிபாடு” செய்தால் உடனே திருமணம் நடைபெறும்.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் வைஷ்ணவிக்கு திருமஞ்சனம் செய்து வணங்கினால், எவ்வளவு பெரிய திருமண தடையாக இருந்தாலும் நீங்கி திருமணம் நடைபெறும். இத்தல விநாயகரும் சிறப்பம்சம் கொண்டவர். இந்த விநாயகரின் வயிற்றில் ராகு-கேது இணைந்துள்ளனர்.
எனவே இந்த விநாயகரை வழிபட்டால், நாக தோஷம் நிவர்த்தியாகும். பிரார்த்தனை தலமான இங்கு நடத்தப்பட்டு வரும் 6 வார வழிபாடு தனித்துவம் பெற்றுத் திகழ்கிறது. அதாவது மக நட்சத்திரம் வரும் நாளில் 6 தடவை ஜெகந்நாதரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் பெறுவதோடு, சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
இத்தலத்தின் விருட்சமாக பாரிஜாத மரம் உள்ளது. அதை வழிபட்டால் சொர்க்கத்தில் இடம் உண்டு. ஆதிகாலத்தில் இப்புனித தலத்தை சுற்றி 7-க்கும் மேற்பட்ட புண்ணிய தீர்த்தங்கள் இருந்தன. அவை மறைந்த நிலையில் பிருகு தீர்த்தம் மட்டும் உள்ளது.
இத்தீர்த்தத்தில் நீராடினால் பாவம் விலகும் என்பது ஐதீகம். ஆண்டு தோறும் ஆனி மாதம் ஸ்ரீஜெகந்நாத பெருமாளுக்கு பிரம்மோற்சவமும், ஐப்பசி மாதம் வைணவர்களின் குருவான ஸ்ரீமணவாள மாமுனிவர்- உற்சவமும், தை மாதம் மகம் நட்சத்திரத்தில் திருமழிசை ஆழ்வாரின் அவதார மகோத்சவமும், மாசி மாதம் 3 நாட்கள் தெப்ப உற்சவமும் கொண்டாடப்படுகிறது.
முனிவர்கள் தவம் செய்த இடம்:
ஒரு தடவை அத்ரி, பிருகு, வசிஷ்டர், பார்க்கவ ஆகிய ரிஷிகள் பிரம்மாவை சந்தித்து, “நாங்கள் தவம் செய்ய உயர்வான ஒரு இடத்தை காட்டுங்கள்” என்றனர். உடனே பிரம்மா, தராசின் ஒரு தட்டில் திருமழிசை தலத்தையும் மற்றொரு தட்டில் உலகின் மற்ற எல்லா புனித தலங்களையும் வைத்தார்.
திருமழிசை இருந்த தட்டு தாழ்ந்து இருந்தது. இதையடுத்து உலகில் உள்ள எல்லாப் புண்ணியத் தலங்களையும் விட மகிமையும், பெருமையும் கொண்டது திருமழிசையே என்பதை ரிஷிகள் உணர்ந்தனர். இதனால் ஏராளமான முனிவர்கள் திருமழிசை வந்து தவம் இருந்தனர். எனவே இத்தல பெருமாளை வழிபட்டால் முக்தி கிடைக்கும். மறுபிறவி இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
ஞானக்கண் பெற்ற திருமழிசை ஆழ்வார்:
திருமழிசை ஆழ்வார் தை மாதம் மகம் நட்சத்திரத்தில் சக்கர அம்சமாக தோன்றியவர். 4-வது ஆழ்வாரான இவர் சைவம், வைணவம் இரண்டிலும் ஈடுபட்டு பாடல்கள் இயற்றினார். சைவத்தில் சிவவாக்கியர் ஆயிரம் என்ற பதிகத்தை இயற்றினார். இவரது சொல்லாற்றாலை கண்டு வியந்த சிவன் இவருக்கு “பக்திசாரர்” என்ற சிறப்பை அளித்தார்.
கால் கட்டை விரலில் இவர் ஞானக்கண் பெற்றிருந்தார். இவரது பாசுரங்களில் பெருமாள் மனம் லயித்ததாக பல சான்றுகள் உள்ளன. ஸ்ரீரங்கம், அன்பில், திருப்பேர்நகர், கும்பகோணம், கவித்தலம், திருக்கோட்டியூர், திருக்கூடல், திருக்குறுங்குடி, திருப்பாடகம், திருவூரகம், திருவெக்கா, திருவள்ளூர், திருப்பதி, திருபாற்கடல், துவாரகை, பரமபதம் ஆகியவை இவர் பாடல் பெற்ற தலங்களாகும்.
ஒரு தடவை இவர் தன் சீடர் கனி கண்ணனுடன் காஞ்சியில் தங்கி இருந்தார். அப்போது அந்நகரின் மன்னன் பல்லவராயன் தன்னை வாலிபனாக்கும்படி ஆழ்வாரிடம் கேட்டார். ஆழ்வார் மறுக்கவே அவரை நகரில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டார். உடனே திருமழிசை ஆழ்வார், “துணிவுடைய செந்நாப்புலவனும் போகின்றேன்.
நீயுமுன் கைநாகப்பாய் சுருட்டிக் கொள்” என்று பாடி விட்டு சென்றார். இதனால் காஞ்சியில் உள்ள சொன்ன வண்ணம் செய்த பெருமாள், ஆழ்வார் பின்னாடியே சென்று விட்டதாக வரலாறு உள்ளது.
திருமலையில் இருந்த பேயாழ்வார் கேட்டுக் கொண்டபடி இவர் தன் இறுதி காலத்தில் திருமழிசையில் தங்கி இருந்து 200 பாசுரங்கள் பாடினார். பிறகு கும்பகோணத்தில் முக்தியானார். திருமழிசை தலத்தில் இவரை வழிபட்டால் சைவ, வைணவ தலங்களில் பெறக்கூடிய பலன்களை பெறலாம்.
கிருஷ்ணர் வளர்ந்த பிருந்தாவனத்தின் பெருமை அளவிடற்கரியது, உத்திரப்பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில்
இத்திருத்தலம் அமைந்துள்ளது. பகவான் கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்திய இடம் இதுவே.
கண்ணனின் பால லீலைகளோடும், மற்றும் இளமைக் கால வாழ்க்கையோடும் தொடர்புடைய இடங்களின் பரப்பு மொத்தமாக `விரஜபூமி’ என்று அழைக்கப்படுகிறது. வட நாட்டில் உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் பெரும் பகுதி உள்ளது.
சில பகுதிகள் அதன் அண்டை மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலும் அமைந்துள்ளன. இந்த `விரஜ பூமி’ சுமாராக 285 கி.மீ. சுற்றளவு கொண்டது. இதை வலமாகக் சுற்றி வருவது, `விரஜ பரிக்ரமா’ எனப்படும். இதில் பெரிய சிறிய பாதைகள் உண்டு. இப்படி வலம் வர இயலாதவர்கள் கோவர்தன மலையை வலம் வந்து வணங்குவர்.
உடலளவில் அதற்கும் முடியாதவர்கள், மதுரா அல்லது பிருந்தாவனத்தை வலம் வருவதும் உண்டு. பக்தர்கள் அனைவரும் இதில் ஈடுபடுகிறார்கள் என்ற போதிலும், நிம்பார்க்கர் மற்றும் வல்லபர் மரபைச் சேர்ந்த வைணவ அடியார்கள், `பரிக்ரமா’வை முக்கியமாகக் கருதுகிறார்கள். கிருஷ்ண ஜன்மாஷ்டமியன்று பிருந்தாவனம் சென்று சேர இதைச் செய்கிறார்கள்.
பெரிய பாதை வழியாகச் சென்று இதை முடிக்கச் சுமார் இரண்டு மாதங்கள் வரை கூட ஆகலாம். கிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, ஆயர் பாடியான கோகுலம் எல்லாம் `விரஜ பூமி’யில் உள்ளன. `பிருந்தா’ என்பது துளசியைக் குறிக்கும் என்று கூறுவர்.
பிருந்தாவனத்தில் தான் கண்ணன், மாடு கன்றுகளை மேய்த்தான். பிருந்தாவனத்தில் 12 வனங்கள் உண்டு. இவற்றுள் யமுனைக்கு மேற்கில் ஏழும், கிழக்கில் ஐந்தும் உள்ளன. பிருந்தாவனத்தில் தான் கிருஷ்ண லீலைகள் எல்லாம் நிகழ்ந்தன.
கிருஷ்ணன் மேய்த்த மாடு, கன்றுகளையும், மற்ற கோபாலச் சிறுவர்களையும் ஓராண்டுக் காலம் பிரம்மன் ஒளித்துக் கொண்டு போன பொழுது அவை எல்லாமாகத் தானே இருந்து, பிரம்மனைக் கண்ணன் மயக்கிய இடமும் இதுவே! பிருந்தாவனத்தில் நூற்றுக் கணக்கான பழைய மற்றும் நவீன ஆலயங்களும், காண வேண்டிய இடங்களும் பல உள்ளன.
யமுனையில் நீராடிய பின் இந்த தலங்களை அவசியம் தரிசிக்க வேண்டும். கேசீகாட், காளிய மதன்காட், சீர்காட், ரமண்ரேதீ, வம்சீவட், சேவாகுஞ்ச், நிதிவனம், பாங்கே விஹாரி மந்திர், ராதா ரமண் மந்திர், கோவிந்தஜி மந்திரி. ரங்கஜி மந்திர் முதலானவை முக்கிய தலங்களாகும்.
இவற்றுள் பாங்கே விஹாரி கோவிலில் அடிக்கடி திரையால் மூலஸ்தானத்தை மறைப்பார்கள். தரிசிக்க வரும் பக்தர்கள் பின்னால் குறும்புக்கார கண்ணன் ஓடி விடுவான் என்ற பயம் தான் இதற்குக் காரணம். மதுராவிற்குச் சற்று வடமேற்கில் சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள பிருந்தாவனம், அவசியம் அன்பர்கள் தரிசித்து மகிழ வேண்டிய தலமாகும்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அது. ஒரு ஓலைக்குடிசையில் அன்னை அமர்ந்திருக்க அருகே பெரிய சூலத்தில் ஒரு மஞ்சள் துணி சாத்தப்பட்டுள்ளது. அருகே ஒரு மரப்பெட்டி. ஆலயத்தைச் சுற்றிலும் நான்கு புறமும் ஏராளமான குடிசை வீடுகள்.
ஒரு நாள் திடீரென்று ஒரு குடிசையில் தீப்பற்றிக் கொள்ள அந்தத் தீ மளமளவென அனைத்து குடிசைகளுக்கும் பரவுகிறது. தீயை அணைக்க போதுமான வசதி இல்லாததால் அனைத்து குடிசைகளும் தீயில் எரிந்து சாம்பலாகின்றன.
ஆனால் அந்த குடிசைகளுக்கு நடுவே இருந்த குடிசை கோவிலான அன்னை பரமேஸ்வரியின் ஆலயத்தை மட்டும் தீ அரக்கன் தீண்டவில்லை.
ஓரிடத்தில் கூட அந்த ஓலைக் குடிசையின் மீது அந்த அரக்கனின் விரல்கள் படவில்லை. சூலத்தின் மீது இருந்த மஞ்சள் துணிக்கோ, அருகே இருந்த மரப்பெட்டிக்கோ எவ்வித சேதாரமும் ஏற்படவில்லை.
மக்களின் பார்வை அன்னையின் ஆலயத்தின் மீது திரும்புகிறது. அவர்கள் இந்த அதிசயத்தைக் கண்டு வியந்து நிற்கின்றனர்.
அவர்கள் அன்னையின் அதீத சக்தியை உணரத் தொடங்குகின்றனர். சில நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. அதன் பின்- ஓலைக் குடிசை ஓட்டு கட்டிடமாக மாறியது.
பின்னர் அதுவும் மாறி அன்னையின் ஆலயம் புதிய கட்டிடமாக உருவெடுத்தது.
அன்னையின் கருவறையில் ஒரு மரப்பெட்டி உள்ளது. மார்கழி மாதம் முதல் நாள் இந்தப் பெட்டி திறக்கப்படும். பெட்டியில் இருக்கும் பவழ காளி, பச்சைக் காளி என்ற இரண்டு திருமேனிகளும் வெளியே எடுக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும்.
இந்த இரண்டு திருமேனிகளும் அத்தி மரத்தால் ஆனவை. பெட்டி திறக்கப்பட்ட நாள் முதல் 48 நாட்கள் இரண்டு காளி திருமேனிகளும் அலங்கார தேவதைகளாக மகா மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருக்கும்.
பின்னர் தை மாதம் குறிப்பிட்ட செவ்வாய்க்கிழமை காப்பு கட்டும் வைபவம் நடைபெறும்.
மறுவாரம் செவ்வாய் அன்று காலை 10 மணிக்கு அன்னையர் புறப்பட்டு காவிரி நதிக்கரை சென்று விட்டு இரவு 10 மணிக்கு காவிரி நதிக்கரையிலிருந்து அக்னி, ஸ்ரீ சக்தி கரம், அக்னி கொப்பறை, தீப்பந்தம் ஆகியவைகள் சூழ நடனமாடியபடி வீதி வலம் வந்து பின்னர் ஆலயம் வந்து சேருவர்.
இந்தத் திருவிழாவைக் காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் சுற்றிலும் உள்ள கிராமங்களில் இருந்து வருகை தந்து விழாவை கண்குளிரக் கண்டு மகிழ்வர்.
48 நாட்கள் நிறைவு பெற்றதும் பச்சைக் காளி, பவழ காளி திருமேனிகள் இரண்டும் பெட்டியில் வைத்து பூட்டப்பட்டு அன்னையின் கருவறையில் வைக்கப்படும்.
பின்னர் மறு ஆண்டுதான் அந்தப் பெட்டி திறக்கப்படும். அன்னை பரமேஸ்வரி தனது கருவறையின் படியை தாண்டாது அன்னையின் சார்பாக பச்சைக் காளி, பவழ காளி என இருவரும் திருவிழா நாயகிகளாய் இருந்து வீதி உலா வருவதால் அன்னைக்கு ‘படிதாண்டா பரமேஸ்வரி’ என்ற பெயர் வந்திருக்கலாம் என்பது செவி வழி தகவல்.
பூஜை முடிந்து ஆலயம் பூட்டப்பட்ட பின் உள்ளேயிருந்து சன்னமான சலங்கை ஒலி இன்றும் கேட்பதாக ஆலயம் அருகே விளையாடும் சிறுவர்களும் அருகே குடியிருக்கும் மக்களும் கூறுகின்றனர்.
தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
ஆடி அமாவாசை, மாத பவுர்ணமி நாட்களில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. திருவிழாவின் போது மணமாலை வேண்டும் கன்னியருக்கும், மகப்பேறு வேண்டும் மகளிருக்கும், அன்னைக்கு சாத்தப்படும் வளையல்களை பிரசாதமாக தருகின்றனர்.
ஓராண்டுக்குள் அந்தக் கன்னியர் மற்றும் மகளிர்களின் வேண்டுதல்கள் பலிப்பது கண்கூடான நிஜம் என்கின்றனர் பக்தர்கள். கந்த சஷ்டி அன்று முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
அன்று நடை பெறும் அன்னதானத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.
தேய்பிறை அஷ்டமியில் அன்னையின் முன் மகா மண்டபத்தில் அருள் பாலிக்கும் பைரவருக்கு தனிச் சிறப்புடன் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.
அன்னை படிதாண்டா பரமேஸ்வரி, தங்களது துயரைக் கூறும் பக்தர்களின் குறையை உடனுக்குடன் களைந்து அவர்களை மகிழ்வோடு வாழ வைப்பதில் அன்னைக்கு நிகரில்லை என்று பக்தர்கள் நம்புவது நிஜமே.
மகாராஷ்டிர மாநிலத்தில் முக்கிய பெருநகரான மும்பைக்கு புறநகராக விளங்கும் அம்பர்நாத் என்ற இடத்தில் பழங்கால சிவன் கோவில் ஒன்று உள்ளது. தலத்தின் பெயரும் அம்பர்நாத். அம்பர் என்றால் ஆகாயவெளி நாதர் என்றால் இறைவன்.
இங்கே மூலஸ்தானத்தில் சிவலிங்கமோ, நடராசர் சிலையோ காணப்படவில்லை. ஈசன் அணியும் புலித்தோல் போலத் தரையை அமைத்திருக்கிறார்கள். கோவிலைச் சுற்றிலும் மாமரங்கள், நான்கு வாயில்களில் மேற்கு வாயிலில் மட்டும் நந்தி தேவர் உள்ளார்.
இதன் வழியாக உள்ளே செல்லும் பக்தர்களுக்கு அர்ச்சகர் மஞ்சள் கயிறைக் கட்டி விடுகிறார். சுற்றிலும் சாம்பிராணி ஊதுபத்தி வாசனை வருகிறது. கருவறை என்று சொல்லப்படும் இடத்தில் சிறிய பள்ளம் காணப்படுகிறது. இந்த பள்ளத்தை தான் சிவபெருமான் என்று கூறுகின்றனர்.
கருவறை சுற்று தாழ்வான பகுதியில் உள்ளது. பள்ளத்திற்கு பூ ஜைகள் எதுவுமே கிடையாது. அருகில் உள்ள வெட்ட வெளிமேடையில் சிவபக்தர்கள் பாடிக் கொண்டே ஆலயத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
மகாராஷ்டிராவில் கொங்கன் என்ற பகுதியை ஆட்சி செய்த சில்காரா அரச பரம்பரையில் வந்த சித்தராஜன் கடம்பவன அரசர்களைப் போர் செய்து வெற்றி பெற்றான். அந்த வெற்றிக்குக் காணிக்கையாக இந்த ஆலயத்தை கி.பி. 1060 -ல் அமைத்ததாகக் கல்வெட்டு கூறுகிறது.
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கிற இக்கோவிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடக்கும். மும்பை வாசிகள் அனைவரும் இங்கே கூடுவார்கள். அம்பர்நாத் ரெயிலடியிலிருந்து மிக அருகில் உள்ளது. மும்பை செல்வோர் வணங்கி வர வேண்டிய அதிசய கல்வெட்டுக் கோயில் இது.
பல்லாயிரக்கணக்கான ல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்து உலகத்தின் மிகப்பழமையான திருத்தலங்களுள் ஒன்றாக விளங்ஞகும் சோமநாதத்திற்கு பிரபாசபட்டினம், சோமபுரி, சோமநாதபுரம், அரசநகரம், சிவநகரம், வில்வப்புரிப்பட்டினம், சூரப்பட்டினம் என்று காலந்தோறும் ஏற்பட்ட பலப்பல பெயர்கள் உள்ளன.
இங்கு எழுந்தருளிப் பாதுகாக்கும் பரப்பிரும்மத்திற்கு சோமநாதர், சோமேஸ்வரர் சந்திரசேகரர், சந்திர மவுலீஸ்வரர் என்று பெயர்கள் உள்ளன. சோமேஸ்வரர் என்றால் சந்திரனுக்கு இறைவன் என்று பெயர்.
சயரோகத்தால் பீடிக்கப்பட்ட சந்திரன் இத்தலத்தில் லிங்கப் பரம்பொருளை பிரதிட்டை செய்து வழிபட்டு நோய் நீங்கி நல்வாழ்வும் ஒளியும் பெற்றதால் இத்தலம் சோமநாதம், சோமேஸ்வரர் என்று பெயர் பெற்றது.
சந்திரனை பாதுகாத்து வாழ்வளித்து ஒளிவழங்கிய பரமேஸ்வரனுக்கு சோமேஸ்வரர் என்று பெயர் ஏற்பட்டது. பிரம்மதேவனின் புதல்வனான தட்சனுக்கு அசுவினி முதல் ரேவதி வரையிலான இருபத்தேழு மகள்களும் சந்திரதேவனை மணம் புரிந்து கொள்ள விரும்பினர்.
தட்சன் இருபத்தேழு புதல்விகளையும் சந்திரனுக்கு மணம் செய்து கொடுத்தான். இருபத்தேழு புதல்விகளும் சென்னையிலுள்ள திருவொற்றியூர் என்ற தலத்தில் தியாகேசர் கோயிலில் லிங்கப் பரம்பொருளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு நட்சத்திரங்களாகும் பேறு பெற்றனர்.
இந்திருக்கோயிலில் இருபத்தெழு நட்சத்திர லிங்க சந்நிதிகள் உள்ளன. இருபத்தேழு பெண்களையும் திருமணம் செய்து கொண்ட சந்திரன் ரோகினியுடன் மட்டும் அதிக ஆசையுடன் இருந்து மற்றவர்களை உதாசீனப் படுத்தினான். இருபத்தாறு பேர்களும் சந்திரனின் முறைகேடான நடவடிக்கை பற்றி தட்சனிடம் முறையிட்டனர்.
மனைவியர் களிடையே பாரபட்சம் காட்டி அவர்களை துன்பப்படுத்தியதற்காக தேய்ந்து தேய்ந்து அழிந்து போகுமாறு தட்சன் சாபமிட்டான். இதனால் சந்திரனைநோய் பற்றியது. அவன் ஒளி குறைந்து நாளுக்குநாள் தேய்ந்து வரலானான்.
தேவமருத்துவர் களான அசுவினி குமாரர்களும், தன்வந்திரியும் எவ்வளவு வைத்தியம் செய்தும் நோய் தீரவில்லை. தனது நிலை கண்டு வருத்தம் அடைந்த சந்திரன் பூவுலகை அடைந்தான். சவுராஷ்டிரத்தில் சரஸ்வதி நதி கடலில் கலக்கும் இடத்தில் லிங்கப் பரம்பொருளை பிரதிஷ்டை செய்து அர்ச்சனை ஆராதனை புரிந்து வழிபட்டான்.
கயிலைநாதனை நாள்தோறும் நீராடி விரதம் இருந்து பூஜை செய்தான். தேவர்களும் சந்திரனுக்காக சர்வேஸ்வரனைப் பூஜை செய்து சந்திரனை காப்பாற்ற வேண்டினர்.
பதினாறு கலைகளிலே பதினைந்து கலைகள் அழிந்து விட்ட சந்திரன் வைத்தியர்களுக்கெல்லாம் மிகப்பெரிய வைத்தியனான மருந்தீஸ்வரனை தொழுது போற்றி தன்னை பாதுகாத்து முக்தி அருள வேண்டினான்.
உடனே ஈசன், சந்திரனின் ஒரு கலையைத் தன் திருமுடியில் அணிந்து கொண்டு சந்திரனுக்கு அருள் புரிந்தார். பேரருள் பெற்ற சந்திரன் இழந்த ஒளியை மீண்டும் பெற்று நாளுக்கு நாள் வளர்ந்து முழுப்பிரகாசத்தை அடைந்தான்.
சந்திரனது தலையை திருச்சடையில் முடிந்து கொண்டு சந்திரனுக்கு வாழ்வு அளித்ததால் பரப்பிரும்மத்திற்கும் சந்திர கலாதரர், பிறைச்சடையன், பிறைமதியன், பிறைசூடி சோமசுந்தரர், மதியழகன், நிலவணிந்தோன் என்ற பலப்பல பெயர்கள் உண்டாயின.
லிங்கப்பரம் பொருளுக்கு சோமலிங்கம், சந்திரலிங்கம் என்று திருப்பெயர்கள் ஏற்பட்டன. இவ்வாறு தட்சனின் சாபத்தால் தேய்பிறையும் பரம் பொருளின் திருவருளாள் வளர்பிறையும் உலகில் மாறி மாறி ஏற்படுகின்றன.
சிவபூஜை புரிந்து உடல்நோய் குணமாகி நலம்பெற்ற சந்திரன் மிக்க மகிழ்ச்சியுடன் வேறு பல தலங்களிலும் பரம்பொருளை வழிபட்டு பூஜை செய்தான். அத்தகைய திருத்தலங்களில் ஒன்று தமிழ்நாட்டிலுள்ள திங்களூர்.
அப்பூதியடிகளின் இறந்த மகனைத் திருநாவுக்கரசர் மீண்டும் உயிரோடு எழுப்பிக் கொடுத்த தலமாகிய திங்களூரில் சிவபூஜை புரிந்த சந்திரனுக்கு தனி சந்நிதியுள்ளது. கும்பகோணத்தில் வியாழபகவானுகிய பிரகஸ்பதியும், சந்திரனும் வழிபட்டு பூஜை செய்த வியாழ சோமேஸ்வரர் ஆலயம் உள்ளது. கும்பேஸ்வரர் கோவிலுக்கு அருகே இத்திருக்கோயில் உள்ளது.
முக்கண்ணனது கண்களிலிருந்து ஒளியை பெறும் சூரிய பகவானுக்கும், சந்திர பகவானுக்கும் எல்லா சிவாலயங்களிலும் சுற்றுப் பிரகாரத்தில் சந்நிதி உள்ளது. எட்டு வகையான திருக்கோவில்களில் சோமநாதம் பெருங்கோவிலாகவும் மணிக்கோவிலாகவும் விளங்குகிறது.
இராவணன் சோமேஸ்வரர் ஆலயத்தைத் தங்கத்தால் அமைத்துப் பொன்மயமாக்கினான். கிருஷ்ணன் சோமநாதர் ஆலயத்தை வெள்ளியால் புதுப்பித்தான். வெள்ளித் தோரண வாயிலை அமைத்து திருப்பணி செய்தான்.
இத்திருக்கோவிலானது தங்கமணி, தங்க சங்கிலிகள், தங்க விக்கரங்கள், தங்க தாம்பாளங்கள், நவரத்தினக் கற்கள் ஆகியவற்றையெல்லாம் கொண்டு மாபெரும் பொன்மணி கோவிலாக திகழ்ந்தது. மிக்க புகழும் பெருமையும் கொண்ட சோமநாதர் ஆலயம் செந்நிறக் கற்களால் கட்டப்பட்டிருந்த ஆலயம் என்பதை கல்வெட்டு கூறுகின்றது.
புண்ணிய பாரதப் பண்பாட்டின் வடிவமாக விளங்கும் சோமநாதர் கோவிலில் எண்ணற்ற இசை நடனக் கலைஞர்கள் இருந்தனர். ஆயிரம் இசை கலைஞர்களும் இருநூற்று ஐம்பது நடனக் கலைஞர்களும் ஆயிரம் புரோகிதர்களும் இருந்தனர்.
நாள் தோறும் சோமலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்காக கங்கையிலிருந்து நீரும் காஷ்மீரிலிருந்து மலர்களும் கொண்டு வரப்பட்டன. இவ்வாறு அளவற்ற பெருமையும் புகழும் கொண்ட சோமநாதரை நாள்தோறும் ஒரு முறையாவது தரிசனம் செய்து வழிபடுதல், சோமவாரங்களில் பூஜை செய்தல், அமாவாசை இரவு அன்று சிவநாமம் ஒதி ஆராதனை செய்தல்,
விசேஷ நாட்களிலும் பிரதோஷம், சிவராத்திரி போன்ற தினங்களிலும் விரதம் இருத்தல், சரஸ்வதி சங்கமத்தில் நீராடுதல் ஆகிய ஐந்து வகை வழிபாடுகளையும் முறைப்படி செய்து வருபவர்களுக்கு எண்ணிய எண்ணமெல்லாம் ஈடேறுகின்றன என்று புராணங்கள் போற்றுகின்றன.
இவ்வாறு கோடிக்கணக்கான ஆண்டுகளாக சீரும் சிறப்பும் பெற்று பலப்பல மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டு பலப்பல நூல்களில் போற்றப்பட்டு வந்த சோமநாதர் திருக்கோவில் சென்ற ஆயிரத்து இருநூறு ஆண்டுகளாக முகம்மதிய மன்னர்களால் மீண்டும் மீண்டும் தாக்கப்பட்டது.
சோமநாதர் ஆலயம் இருந்த பழைய இடத்திலேயே கோவில் கட்டுவதற்கு அஸ்திவாரம் அமைக்கப்பட்டது. பின்னர் லிங்க பரம்பொருள் பிரதிட்டை செய்யப்பட்டது. கி.பி. 1965-ம் ஆண்டு கும்பாபி ஷேகம் நடத்தப்பட்டது. பாரதத் தாயைத் தலை நிமர்ந்து நிற்க செய்யும் புண்ணிய பூமியாக சோமநாதம் திகழ்கின்றது.
அகலமான மண்டபங்களையும் வானுயர்ந்த விமானங்களையும் அழகுமிக்க கூரைகளையும் தோரணவாயில் களையும் கொண்டுள்ள சோமநாதர் திருக்கோவில் இராமநாதர் திருக்கோவிலைப் போன்று கடலுக்கு அருகே அமைந்துள்ளது. கடலே புனிதத் தீர்த்தமாக விளங்குகின்றது.
உஜ்ஜைனி மோட்சத்தை அளிக்கும் சப்தபுரிகளில் ஒன்றாகும். காலத்தை வென்ற மகாகாலராக உஜ்ஜைனியில் ஜோதிர்லிங்கமாகத் சிவபெருமான் திகழ்கிறார். இந்த ஜோதிர்லிங்கம் பற்றி ஒரு வரலாறு கூறப்படுகிறது. புனித நதியாகக் கருதப்படும் சிப்ரா நதித்கரையில் அவந்திபுரி என்ற நகரம் இருந்தது.
இந்த நகரத்தில் வாழ்ந்த வேதப்ரியன் இரவும், பகலும் சிவபூஜையில் ஈடுபட்டிருந்தான். அவனுக்கு நான்கு புதல்வர்கள். தேவப்ரியன் மேதன், சுவிரதன், தருமவாதி என்ற பெயர்கள் கொண்ட அந்த நால்வரும் தந்தைக்கு அனுசரணையாக இருந்ததோடு அவர்களும் தீவிர சிவபக்தர்களாகத் திகழ்ந்தனர்.
அவந்திபுரி அருகில் ரத்தனமாலா என்ற பருவதம் உண்டு. அங்கு துஷணன் எனும் அரக்க அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்தான். அவன் பிரம்மனைக் நோக்கி கடும்தவம் செய்து அளவிலாப் பராக்கிரமத்தை அடைந்திருந்தான்.
இதனால் மிக்க கர்வம் அடைந்த அந்த அரக்கன், அப்பகுதியிலிருந்த அனைவரையும் இம்சை செய்தும், அடித்தும், துன்புறுத்தியும் வந்தான். கடவுளை வணங்குவோரை மிரட்டினான். பூஜைகளில் ஈடுபடுபவர்களை உடனே அவற்றை கைவிடுமாறு வற்புறுத்தினான்.
அந்த அரக்கனை அடியோடு ஒழிக்க சகோதரர்கள் நால்வரும் முன்வரவேண்டும் என்று மக்கள் கண்ணீர் மல்க கூறி வேண்டினர். பிறகு மக்கள் அந்த நால்வருடன் சேர்ந்து அனுதினமும், தவறாமல், தீவிரமாக சிவபூஜையில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களது செயல்களை அறிந்த தூஷணன், அவர்களைத் தாக்க தன் மந்திரிகளோடு அங்கு வந்து சேர்ந்தான். அவர்களை வெட்டிக் கொல்லுங்கள் என்று தன்னுடன் வந்தவர்களுக்கு கட்டளை இட்டான் அப்போது ஒரு அதிசயம் நடந்தது. பார்த்திவ சிவலிங்கங்கள் செய்ய மண் எடுத்த இடம் பெரியகுளமாக இருந்தது.
அக்குளத்தில் இருந்து கிளம்பிய கிடுகிடுக்கும் முழக்கம் ஈரேழு உலகங்களை அதிரச் செய்தது. பெரும் சப்தத்துடன் குளத்தின் மையத்தில் குபீரென்று ஒரு ஜோதி எழும்பி, பிழம்பாக மாறி படிப்படியாக பெரும் சிவலிங்கமாகத் தோன்றியது! இறுதியில் படாரென்ற விண்அதிரும் சப்தத்துடன் அச்சிவலிங்கம் இரு பிரிவாகப் பிளந்தது.
அந்த லிங்கத்தில் இருந்து ஜடாமகுட தாரியாக, புலித்தோல் போர்த்திய சூலாயுதபாணியாக பரமேஸ்வரன் கோபத்தோடு வெளிப்பட்டார். அரக்கன் தூஷணனையும், அவனோடு வந்த அனைவரையும் அவர் சம்காரம் செய்தார். இதனால் கண் இமைக்கும் நேரத்தில் அனைவரும் எரிந்து சாம்பலானார்கள். இந்த அபூர்வக் காட்சியை வானத்தில் இருந்து கண்டு களித்த தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.
அவந்தி மக்கள் பகவானை நோக்கி எங்களது இன்னல்களைத் தீர்த்த இறைவனே இங்கு வரும் பக்தர்களின் குறைகளையும் தீர்க்க தாங்கள் என்றென்றும் இங்கேயே இருக்க வேண்டும் என்று கூறி வீழ்ந்து வணங்கினர்.
அவர்களது ஆசையைப் பூர்த்தி செய்ய ஈசனும் மீண்டும் லிங்கத்தினுள் ஐக்கியமாகி மகாகாலர் என்ற நாமம் ஏற்று அவந்திபுரி எனும் உஜ்ஜைனி நகரத்தின் நடுவில் இன்றும் ஜோதிர்லிங்கமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார்.
அவந்தி நாட்டின் தலைநகரான உஜ்ஜைனியில் அரசு புரிந்த ராஜா விக்ரமாதித்யன் காலத்திலும், தார் நகரிலிருந்த போஜராஜன் புத்திரன் உதயாதித்யன் காலத்திலும் மகாகாலேஸ்வரர் ஆலயம் மிக உன்னத நிலையில் இருந்தது.
பொன்னும் மணியும், ஆலய சுவர்களைப் பலவாறு அலங்கரித்தன. ஆலயத்தின் சொத்து பல கோடிகளாக இருந்தது. ஆலயமணியும், அதனைச் சார்ந்த சங்லியும், கோபுர கலசங்களும் பொன்னால் செய்யப்பட்டு ஜொலித்தன.
அங்கிருந்த ஆள் உயர விக்ரமாதித்யன் சிலையும் தங்கத்தால் வடிக்கப்பட்டு, நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஈஸ்வரனுக்கு நவரத்தினங்களில் ஒவ்வொரு ரத்தினம் முழுமையாகப் பதிக்கப்பட்ட ஒன்பது கிரீடங்கள், பட்டுப் பீதாம்பரங்கள், வெள்ளிக்கதவுகள், வெள்ளி நிலைப்படிகள், தங்கமும் வெள்ளியும் கலந்த பூஜாபாத்திரங்கள் என்று கோவிலின் செல்வ நிலையைப் பாரெங்கும் பகிரங்கப்படுத்தின.
மகாகாலேஸ்வரர் ஆலயப் பொக்கிஷ விவரங்கள், தில்லி சுல்தான் இல்டுட்மிஷ் கவனத்திற்கு வரவே, அவன் கி.பி. 1235-ம் ஆண்டில் அவந்தி நாட்டின் மீது படையெடுத்து ஆலயத்தின் பொக்கிஷங்களைக் கொள்ளை அடித்ததோடு, ஆலயத்தை முழுவதும் இடித்து தரைமட்டமாக்கினான்.
ஜோதிர்லிங்கமான மகாகாலேஸ்வரரைப் பெயர்த்து ஆலயத்தினுள் இருந்த கோடி தீர்த்தம் என்ற புஷ்கரணியில் வீசி எறிந்து விட்டனர். அடிக்கடி அன்னிய மதத்தினரின் படையெடுப்புகளால் உஜ்ஜைனி நகர் பெருமளவில் பாழடைந்து விட்டது.
மகாகாலேஸ்வரர் ஆலயமே இருந்த இடம் தெரியாமல் போய்விட்டதால் சுமார் 500 ஆண்டுகள் வரை அவரைப் பற்றி எவரும் சிந்திக்கவில்லை. மிக்க கீர்த்தி பெற்ற மராட்டா சேனைத் தலைவன் ரானோனி சிந்தியா தன் புஜ பலத்தால் மாளவ நாட்டைக் கைப்பற்றி உஜ்ஜைனியைத் தலைநகராக்கி தானே ஆளத் தொடங்கினான்.
அவனது அவையில் திவானாக இருந்த ராமசந்திரராவ் ஷேண்பாய் என்பவர், ரானோனி சிந்தியா கட்டளைப்படி ஆலயம் இருந்த இடத்தைத் தேடிக் கண்டு பிடித்து புது ஆலயம் நிர்மாணித்தார். நகரின் பண்டித குடும்பங்களில் பரம்பரையாக பேசப்பட்டு வந்த வாய்ச் சொல்லை ஆதாரமாகக் கொண்டு குப்பைகளை அகற்றி, நன்கு சுத்தப்படுத்திய போது கோவில் புஷ்கரணியில் புதைந்திருந்த ஜோதிர்லிங்கம் கண்டு பிடிக்கப்பட்டது.
அதை வெளியில் எடுத்து மீண்டும் கோலாகத்துடன் பழைய இடத்திலேயே பிரதிஷ்டை செய்தனர். அதன் பயனாக ஒரு புது ஆலயம் தோற்றுவிக்கப்பட்டது. ருத்ரசாகர் எனும் ஏரியை ஒட்டி கம்பீரமாக விளங்கும் மகாகாலேஸ்வரர் ஆலயத்தின் பிரதான வாயில் கிழக்கில் உள்ளது.
ஐந்து தளங்களுக்கும், ஐந்து சபா மண்டபங்களும், கோபுரத்தில் பல கலசங்களைக் கொண்ட இவ்வாலயத்தின் உயரம் 88 அடிகளாகும். கோவிலைச் சுற்றி வலம் வர அகண்ட பிரகாரம் உள்ளது. மகாகாலேஸ்வரரைக் காண நம் மேற்கு வாயில் வழியாக நுழைந்தால், தெற்கு நோக்கியுள்ளள சன்னதியில் இரண்டு அடி உயரமுள்ள ஜோதிர்லிங்கமாக தரிசனம் தருகிறார்.
விசேஷ தினங்களில் பலப்பல அலங்காரங்களோடு கண் குளிரக் காட்சி அளிக்கிறார். இக் கருவறையில் 24 மணி நேரமும் இரண்டு நெய்விளக்குகள் எரிகின்றன. வட இந்திய பஞ்சாங்கத்தின்படி கார்த்திகை மாதம் கிருஷ்ண பட்ச சதுர்தசி காலையில் ஜோதிர்லிங்கத்திற்கு பாங் எனும் அபினை அரைத்து காப்பாக அமைத்திருப்பார்கள்.
இக்காப்பு காலை 10 மணி வரை சார்த்தப்பட்டிருக்கும். இதன் பின் லிங்கத்திற்கு வெந்நீரினால் அபிஷேகம் செய்யப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு நாள் தான் இவ்வித விசேஷ காப்பும் அபிஷேகமும் நடைபெறுகின்றன. அன்றுதான் நமக்கு நரக சதுர்த்தி எனும் தீபாவளிப் பண்டிகை.
ஆலயத்தினுள்ளே காணப்படும் புஷ்கரணிக்கு கோடி தீர்த்தம் என்று பெயர். நான்கு மூலைகளிலும் பெருங்கிணறுகள் கொண்ட இக்குளத்தின் நீரின் நிறம் காலத்துக்கு ஏற்ப மாறி மாறி வருகிறதாம். உஜ்ஜைனியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்ப மேளா எனும் பெருந்திருவிழா ஒரு மாதக் காலம் நடை பெறுகிறது.
அப்போது லட்சக் கணக்கான பக்தர்கள், உலகின் பல பாகங்களிலிருந்து உஜ்ஜைனிக்கு வருவார்கள். சிப்ராநதியில் புனித நீராடி, மகாகாலேஸ்வரரை வழிபடுகிறார்கள். இந்த ஆலயத்தில் மகாசிவராத்திரியும் கார்த்திகை பவுர்ணமியும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.
திரிம்பகேஸ்வரர் கோயில், திரிம்பாக் என்னும் நகரில் உள்ள தொன்மையான இந்துக் கோயில் ஆகும். இது மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் நாசிக் நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சிவனுக்காக அமைக்கப்பட்ட இக்கோயில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.
இது இந்தியாவின் மிக நீளமான ஆறான கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும். பிற ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன.
பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்த இக்கோயில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ளது. இது அழகிய சிற்பங்களுடன் கூடிய கவர்ச்சியான கட்டிடமாக உள்ளது. மும்மூர்த்திகள் வழிபட்டு பரப்பிரும்மத்தின் அருள்பெற்ற திரியம்பகேஸ்வரத்தில் கவுதம முனிவர் வசித்து வந்தார்.
நாள்தோறும் புனிதக்குளத்தில் நீராடி திரியம்பகேஸ்வரரைப் பூஜை செய்து வேள்விகள் புரிந்தும் தவம் செய்தும் தூய வாழ்க்கை வாழ்ந்தார். ஒருமுறை நாட்டில் வறட்சியும், பஞ்சமும் உண்டாயின. எல்லா இடங்களிலும் நீர் வற்றிப்போய் தண்ணீர் பஞ்சம் உண்டாயிற்று.
ஆனால் கங்காதரனை நினைந்து உள்ளன்போடு சிவசிவ என்றே வாழ்ந்த கவுதமரின் ஆசிரமத்தில் எந்தவிதமான பஞ்சமும் இல்லை. திரியம்பகேஸ்வரத்தில் இருந்த நீர்நிலைகளில் நீர்வளம் பெருகியிருந்தது. இதையறிந்து நாட்டின் பல பகுதிகளிலும் இருந்த முனிவர்கள் திரியம்பகேஸ்வரத்தில் குடியேறினர்.
உலகத்தை வலம் வருபவனுக்குத் தனது மகளை மணம் முடித்துக் கொடுப்பதாக அகல்யையின் தந்தை நிபந்தனை விதித்திருந்தார். கன்றுபோடும் நிலையில் உள்ள பசுவை அதாவது இரண்டு முகங்கள் கொண்ட பசுவை வலம் வந்தால் உலகத்தை வலம் வருவதற்கு ஒப்பாகும் என்று ஒழுக்க நூல்கள் உரைக்கின்றன.
இந்த சாத்திரப்படி கவுதம முனிவர் கன்று போடும் நிலையில் இருந்த தாய்ப்பசுவை வலம் வந்து வணங்கி அகல்யையைத் திருமணம் செய்து கொண்டார். அத்தகைய கவுதம முனிவரின் ஆசிரமத்தில் தாய்ப்பசு ஒன்று இறந்து கிடந்தது. அதைக் கண்ட கவுதம முனிவர் மனம் துடிதுடித்தார்.
இறந்த பசுவிற்கு எப்படியாவது உயிர் கொடுக்க வேண்டும் என்று முனிவர்கள் விரும்பினர். மற்ற உயிரினங்கள் எல்லாம் தமக்காக வாழ்கின்றன. ஆனால் மாடுகளோ உலக மக்கள் அனைவரையும் பாலூட்டி வளர்க்கின்றன. தேசத்தின் செல்வங்களாக இருந்து வருவாயைப் பெருக்குகின்றன.
உழுவதற்குப் பாடுபட்டும் பயிர்வளர் எருவைத் தந்தும் மனித இனத்திற்கு மகத்தான உதவி புரிந்து உண்டி கொடுத்து உயிர் காக்கின்றன. சிவபெருமானின் திருமுழுக்காட்டிற்காகப் பால், தயிர், வெண்ணை, நெய், திருநீறு ஆகிய பஞ்ச கவ்வியம் எனப்படும் ஐந்து அபிஷேகப் பொருட்களைக் கொடுக்கும் புனிதப் பிறவிகளாகப் பசு மாடுகள் உள்ளன.
இத்தகைய பசுமாடுகள் முனிவர்களும் தேவர்களும் தெய்வங்களும் வந்து வணங்கும் புண்ணியம் வாய்ந்தவை. இனிய குணங்கள் கொண்ட பாலைத் தரும் நல்ல பண்புள்ள சொந்தமான பசுக்கள் மெய்ப்பொருளின் வாகனமும் தரும தேவனுமான நந்தியின் குலத்தைச் சேர்ந்தவை.
அத்தகைய புண்ணிய ஆத்மாவான இந்தப் பசுவை எப்படியாவது உயிர்பிழைக்கச் செய்ய வேண்டும் என்று முனிவர்கள் முடிவெடுத்தனர். கோடிலிங்கார்ச்சனை செய்து பரம்பொருளை வழிபட்டுக் கங்கை நதியைப் பசுவின் உடலில் பாயச் செய்தால் கோமாதா மீண்டும் உயிர் பெற்று எழுவார் என்று மாதவ முனிவர் ஆலோசனை கூறினார்.
அவர் வண்ண மகாமுனிவரான கவுதமர் கோடி சிவநாமம் ஓம் லிங்கார்ச்சனை செய்தார். கோடி சிவராமங்களை உச்சரித்து லிங்கப் பரம்பொருளைப் பூஜை செய்தார். கங்காதரனிடமிருந்து கங்கை நீரைப் பெறுவதற்காகக் கடுமையாகத் தவம் புரிந்தார்.
கங்காதரனை நெஞ்சில் நிறுத்தி ஓம் நமச்சிவாயா மகா மந்திரத்தை உச்சரித்து திரியம்பகேஸ்வரரை தியானம் செய்து அன்ன ஆகாரம் இல்லாமல் தவம் புரிந்தார். நினைத்த காரியத்தை நினைத்தபடி முடித்து வைக்கின்ற தவத்தின் மகிமை உணர்ந்த தவ முனிவர்கள் எல்லோரும் கவுதம முனிவருக்கு உறுதுணையாக இருந்தனர்.
கடுகளவு புண்ணியம் செய்தாலும் மலையளவில் பலனை வாரி வழங்கும் அருள் வள்ளலாரை திரியம்பகேஸ்வரர் கவுதம முனிவருக்கு வெளிப்பட்டுத் திருக்காட்சி தந்தார். பலகாலங்கள் தேடித் திரிந்தாலும் பிரம்ம விஷ்ணுக்களால் காண முடியாமல் மறைந்து இருந்த பரஞ்சோதிப் பெருமானின் திருக்காட்சி கண்ட கவுதம முனிவர் அளவில்லா ஆனந்தம் அடைந்து விழுந்து எழுந்து போற்றித் துதி செய்து வணங்கினார்.
திருமுடியிலிருந்து கங்காதரன் கங்கை நீர்த்துளிகளைச் சந்தி அருளினார். அந்த நீர்த்துளிகள் நதியாகப் பெருக்கெடுத்து ஓட ஆரம்பித்தன. கங்கை நதி பசுவின் உடலில் பாய்ந்தபோது பசு உயிர்பெற்று எழுந்தது. கவுதம முனிவர் பசுபதீஸ்வரனின் மாப்பெருங்கருணைக்கு மனம் நெகிழ்ந்தார். கோமாதாவின் காரணமாக உற்பத்தியான நதி கோதாவரி என்று பெயர் பெற்றது.
கோதாவரி நதிக்கு கவுதமி என்ற பெயரும் உண்டு. பகீதரதனுக் காகப் பாய்ந்த கங்கை பாகீரதி என்று அழைக்கப்பட்டது போன்றே கவுதமருக்காகப் பாய்ந்த கங்கை கவுதமி என்று பெயர் பெற்றாள்.
இம்முறையில் தவம் செய்யும் முனிவர்களின் புனிதமான வாழ்க்கையானது அவர்கள் வாழ்ந்த காலத்தில் மட்டுமின்றி யுகம் யுகமாக மக்கள் எல்லோருக்கும் பயன்படும் மகத்தான தொண்டு செய்யும் பொதுநலம் காக்கும் வாழ்க்கையாக இருந்தது. சமுதாயம் முழுவதையும் சிறப்பாக்கும் சீரிய வாழ்க்கையாக விளங்கியது.
மும்மூர்த்திகள் உண்டாக்கிய குளத்தோடு கவுதம் முனிவர் ஏற்படுத்திய கோதாவரி நதியும் திரியம்பகேஸ்வரம் திருக்கோவிலின் புனிதத் தீர்த்தம் ஆயிற்று. கவுதமர் செய்த கோடியர்ச்சனைக்கும் தவத்திற்கும் கருணை கூர்ந்து ஒரு நதியையே புதியதாகப் படைத்து அருளி கவுதம முனிவருக்கு அளவற்ற ஆனந்தம் அளித்த பராபரனுக்கு கவுதமேஸ்வரர் என்று திருப்பெயர் உண்டாயிற்று.
உலகம் தோன்றிய காலத்திலிருந்து கோடிக்கணக்கான ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்புரியும் அருமை பெருமை மிக்க திரியம்பகம் திருத்தலத்தை சென்று தரிசனம் செய்து வழிபடுகின்றவர்களுக்கு அவர்கள் புரியும் தொழில் சிறப்புடன் விளங்குகின்றது. வாழ்க்கையில் தண்ணீர் பஞ்சம் உண்டாவது இல்லை. வாழ்வில் அளவில்லாத ஆனந்தம் உண்டாகும்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் எனும் ரெயில் நிலையத்தில் இறங்கி 28 கி.மீ. தூரத்தில் உள்ள திரயம் பகத்தை அடையப் பல வசதிகள் உள்ளன.
பேருந்து அடர்ந்த காடுகளிடையேயும் மலைப்பாதைகளைக் கடக்கும்போதும் இயற்கை அள்ளித்தரும், மனத்தை கொள்ளைக் கொள்ளும் ஈடில்லா காட்சிகள் நம்மைக்கிறங்க வைக்கும். படைக்கும் தெய்வம் பிரம்மன், காக்கும் தெய்வம் விஷ்ணு, அழிக்கும் தெய்வம் ருத்திரன் ஆகிய மூன்று மூர்த்திகளும் ஒன்றாக வந்து லிங்கப்பரம்பொருளைப் பிரதிஷ்டை செய்து பிரும்மத்தைப் பூஜை செய்தனர்.
இதனால் இத்தலம் திரியம்பகேஸ்வரம் என்று அழைக்கப்பட்டது. மூவருக்கும் அருள்புரிந்த பரமேஸ்வரனுக்குத் திரியம்பகேஸ்வரர் என்று பெயர். திரியம்பகேஸ்வரர் எழுந்தருளியுள்ள கர்ப்பக்கிரகம் தாழ்வாக உள்ளது. மேலேயுள்ள மண்டபத்திலிருந்து திரியம்பகேஸ்வரரை தரிசனம் செய்ய வேண்டும்.
மும்மூர்த்திகள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கப்பரம்பொருளுக்கு ஆவுடையார் மட்டுமே உள்ளது. ஆவுடையார் உரல் போன்று நடுவே பள்ளமாக உள்ளது. இந்தப் பள்ளத்தில் மும்மூர்த்திகள் அர்ச்சனை செய்த மூன்று தாமரை மொட்டுகளின் அடையாளம் உள்ளது.
மயிலாடுதுறை – சீர்காழி வழித் தடத்தில் அமைந்துள்ள நோய் தீர்க்கும் திருத்தலம் வைத்தீஸ்வரன் கோவில். செவ்வாய் தோஷம் நீக்கும் அங்காரகனுக்குரிய திருகோயிலான இது ஒரு பிரார்த்தனை திருத்தலம்.
வேண்டுபவரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் வைத்யநாதர், தையல் நாயகி சமேதராய் அருளும் திருக்கோயில் இது. இங்குதான் முத்துசாமி தீட்சிதர் பதிகம் பாடி கண்ணொளி பெற்றார். 18 சித்தர்களில் ஒருவரான, நோய்கள் தீர்க்கும் தன்வந்திரி இத்தலத்திற்கு உரியவர்.
அப்பர் பாடிய தேவாரத்திற்கு ஏற்ப, இத்தலத்தில் தரப்படும் மருந்து உருண்டையை உட்கொண்டு, இத்தல சித்தாமிர்த திருக்குளத்து நீரை பருகினால் தீராத வியாதிகள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். இங்குள்ள சடாயுகுண்டத்தில் உள்ள சாம்பலை பூசிக்கொள்ள நோய்கள் தீருகின்றன.
சென்னையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவத்தலங்களில் சிறப்பு வாய்ந்தது, வேளச்சேரி விஜய நகரில் உள்ள தண்டீஸ்வரர் ஆலயமாகும். சோழ மன்னர்கள் தொண்டை மண்டலத்தில் கட்டிய முதல் சிவாலயம் என்ற பெருமையும் இத்தலத்துக்கு உண்டு. சோமுகாசுரன் எனும் அரக்கன் 4 வேதங்களையும் பிரம்மாவிடம் இருந்து பறித்து கடலுக்கு அடியில் சென்று சேற்றில் மறைத்து வைத்தான்.
இதனால் பிரம்மா நடத்தி வந்த படைப்புத் தொழில் நின்று போனது. இது பற்றி மகா விஷ்ணுவிடம் பிரம்மா முறையிட்டார். உடனே விஷ்ணு, மச்சவதாரம் எடுத்து சென்று சோமுக சுரனை அழித்து 4 வேதங்களையும் மீட்டு வந்து பிரம்மாவிடம் ஒப்படைத்தார்.
சேற்றில் புதைந்திருந்ததால், 4 வேதங்களும், தங்கள் தோஷம் நீங்க என்ன பரிகாரம் செய்வது என்று பிரம்மனிடம் கேட்டன. அவர் கூறியபடி 4 வேதங்களும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வணங்கி தோஷம் நீங்கப் பெற்றன. அது முதல் வேதங்கள் வணங்கிய தலம் என்பதால் வேதச்சேரி என்றானது. நாளடைவில் அது வேளச்சேரி என மருவியது.
முனிவர்கள் வேள்வி நடத்தியதால் இத்தலம் வேளச்சேரி ஆனதாகவும் சொல்கிறார்கள். இத்தலத்து ஈசனுக்கு தண்டீஸ்வரர் என்ற பெயர் வந்ததற்கு ஒரு புராண நிகழ்வு காரணமாக கூறப்படுகிறது. துவாரபயுகத்தில் மார்க்கண்டேயனின் உயிரைப் பறிக்க எமன் வந்தான்.
உடனே மார்க்கண்டேயன் திருக்கடையூர் தலத்துக்குள் புகுந்து லிங்கத்தை கட்டிப்பிடித்துக் கொண்டார். என்றாலும் எமன் பாசக்கயிறை வீசினான். அந்த கயிறு லிங்கம் மீது பட்டது. உடனே ஈசன் வெளிப்பட்டு எமனை எட்டி உதைத்தார். அதோடு எமன் பதவியையும் அவன் வைத்திருந்த தண்டத்தையும் ஈசன் பறித்தார்.
இழந்த பதவியைப் பெற எமன் சிவத்தல யாத்திரை மேற்கொண்டான். இத்தலத்துக்கு வந்து எம தீர்த்தம் உருவாக்கி சிவனை வழிபட்டான். அவனுக்கு ஈசன் காட்சி கொடுத்து வாழ்த்தினார். பிறகு அவனது தண்டத்தையும் திருப்பிக் கொடுத்தார். அன்று முதல் எமன் கேட்டுக் கொண்டபடி இத்தலத்து ஈசன் தண்டீஸ்வரர் ஆனார்.
இத்தலத்துக்கு தண்டீசுவரம் என்ற பெயரும் உண்டு. ராஜராஜ சோழனின் தந்தையான சுந்தர சோழன் இங்கு 10-ம் நூற்றாண்டில் தண்டீஸ்வரருக்கு கோவில் கட்டினார். அதை உறுதிபடுத்தும் கல்வெட்டுக்கள் கருவறை சுவர்களில் உள்ளன. நன்கு திட்டமிட்டு கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம் 5 நிலை ராஜகோபுரத்துடன் தெற்கு நோக்கி உள்ளது.
கோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் இடது பக்கம் பெரிய மண்டபத்தில் விநாயகரை காணலாம். அவரை வணங்கிவிட்டு வழக்கம் போல கொடிமரம், பலி பீடம், சற்று தலை குனிந்த நந்தியை தரிசனம் செய்து கருவறை நோக்கி சென்றால் இரு புறமும் விநாயகர், வள்ளி- தெய்வயானை சமேத முருகரை காணலாம்.
கருவறையில் தண்டீஸ்வரர் கிழக்குப் பார்த்து இருக்கிறார். அவரை கண்குளிர தரிசனம் செய்துவிட்டு கோஷ்டத்தை சுற்றி வந்தால் முதலில் வேத விநாயகரைப் பார்க்கலாம். கையில் 4 வேதங்களுடன் இருப்பதால் இவரை வேதவிநாயகர் என்கிறார்கள். அடுத்து குபேர மூலையில் உள்ள தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.
இவரை குபேர தெட்சிணாமூர்த்தி என்றும், யோக தெட்சிணாமூர்த்தி என்றும் சொல்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து கோஷ்டத்தில் லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். அதற்கு முன்னதாக சண்டீகேஸ்வரர் அருகில் இருந்து பார்த்தால் மகாலட்சுமி, சரஸ்வதி, துர்க்கை ஆகிய முப்பெரும் தேவியரை ஒருசேர தரிசிக்கலாம்.
அதோடு மூலவர் மற்றும் அம்பாள் சன்னதிகளின் விமானங்களை கண்டு களிக்கலாம். வெளிப்பிரகாரத்தில் அறுபத்து மூவர், நால்வர் உள்ளனர். மூன்றாம் கோபுர வாசல் அருகே கணேசர், கார்த்திகேயன், நந்தியுடன் வைத்தீஸ்வரர், மீனாட்சி சோமசுந்தரர் ஆகியோரை தனித்தனி சன்னதிகளில் தரிசிக்கலாம்.
அங்குள்ள சொற் பொழிவு மண்டபம் அருகில் நவக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்கத்தில் நாகர் சிலைகள், நர்த்தன கண்ணன் காட்சி தருகிறார்கள். இவர்களை வழிபட்டால் மகப்பேறு உண்டாகும். 16-ம் நூற்றாண்டில் இத்தலத்தில் அப்பைய தீட்சிதர் தனி சன்னதி கட்டி தாயார் ஸ்ரீகருணாம்பிகையை நிறுவினார்.
அம்பாள் தெற்கு நோக்கி காட்சித் தருகிறாள். தாயார் சன்னதியில் திருவேற்காடு, மாங்காடு தலத்தில் பதிக்கப்பட்டிருப்பது போன்று ஸ்ரீசக்கரம் பதிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் கிழக்கு வாசல் மூடப்பட்டே இருக்கும். பிரதோஷம் போன்ற முக்கிய நாட்களில் மட்டும் திறக்கிறார்கள்.
மேற்கு பகுதியில் எமன் ஏற்படுத்திய தீர்த்தக்குளம் உள்ளது. ஒரு தடவை காஞ்சி பெரியவர் இத்தீர்த்த குளத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து தன் கனகாபிஷேகத்துக்கு பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. கோவிலுக்காக வேளச்சேரியை சுற்றிலும் ஏராளமான சொத்துக்களை சோழ மன்னர்கள் கொடுத்திருந்தனர்.
சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனி உத்திரம், நடராஜர் திருமஞ்சனம், ஆடிப்பூரம், நவராத்திரி, அன்னாபிஷேகம், சோமவார கார்த்திகை சங்காபிஷேகம், ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி என எல்லா பண்டிகைகளும் இங்கு சிறப்பாக நடக்கின்றன.
பங்குனி உத்திரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். வரும் திங்கட்கிழமை முதல் மார்கழி மாதம் 30 நாட்களும் தினமும் அதிகாலை 5 மணிக்கு சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. தை மாதம் முதல் தேதி இத்தலத்தில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி விழுவது குறிப்பிடத்தக்கது.
எமன் இத்தலத்தில் மீண்டும் தன் தண்டம் பெற்றதால், பதவி இழந்தவர்கள் இங்கு சிறப்பு வழிபாடு செய்தால், இழந்த பதவியை மீண்டும் பெறலாம். இத்தலத்தில் அறுபது, எண்பதாம் திருமணம் நடத்துவது அதிகரித்து வருகிறது. அதோடு ஆயுள் விருத்திக்கான ஹோமங்கள் உள்பட எல்லா வகை ஹோமங்களும் இங்கு செய்யப்படுகிறது.
வேண்டுதல் நிறைவேற தண்டீஸ்வரர், கருணாம் பிக்கை, வீரபத்திரருக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் அணிவித்து வழிபடலாம். வழிபாடு மற்றும் பலன்கள் தொடர்பான கூடுதல் தகவல்களை ஆலய குருக்கள் குமார சாமி சிவாச்சாரியாரை 9884402525 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம்.
சிதம்பரம் சுவாமிகள் ஜீவசமாதி:
சிதம்பரம் சுவாமிகள் என்ற மகான் 18-ம் நூற்றாண்டில் இத்தலத்தில் தங்கி இருந்து பல திருப்பணிகள் செய்து வந்தார். இந்த ஆலயத்தின் தேரை உருவாக்கியது இவர்தான். இவர் ஒரு தடவை மற்ற கோவில்களுக்கும் செல்லலாம் என்று தலயாத்திரை புறப்பட்டார்.
அப்போது மிகப் பெரிய பாம்பு ஒன்று தோன்றி அவரைத் தடுத்ததாம். இதனால் சிதம்பரம் சுவாமிகள் தன் கடைசி மூச்சுவரை இத்தலத்திலேயே சேவை செய்து இறந்து விட்டார். அவரது ஜீவசமாதி இத்தலத்தினுள் உள்ளது.
கன்னிபெண்களை காப்பற்ற அமர்ந்த நிலையில் வீரபத்திரர்:
எல்லா சிவாலயங்களிலும் வீரபத்திரர் நின்ற கோலத்தில் தான் காட்சி அளிப்பாளர். ஆனால் இத்தலத்தில் கைகளில் மான், மழு தாங்கி அமர்ந்த கோலத்தில் உள்ளார். இவர் கன்னிப் பெண்களை பாதுகாப்பவராக கருதப் படுகிறார். ஒரு தடவை சப்த கன்னியர்கள் அசுரனை அழிக்கச் சென்றனர்.
தவறுதலாக அவர்கள் ஒரு மகரிஷியை கொன்று விட்டனர். இதை அறிந்த அந்த அசுரன் சப்த கன்னியர்களை கொல்ல முயன்றான். அவர்களை காப்பாற்ற சிவபெருமான் வீரப்பத்திரரை அனுப்பினார். வீரபத்திரரும் அந்த அசுரனை அழித்து சப்த கன்னியர்களைக் காப்பற்றினார்.
அதை பிரதிதிபலிக்கும் வகையில் சப்த கன்னியர்கள் அருகில் வீரபத்திரர் அமர்ந்த நிலையில் உள்ளார். பீடத்தில் நந்தி உள்ளது. பெண்கள் தங்களுக்கு எதிராக தயார், எத்தகைய அநீதிதி இழைத்தாலும், இந்த வீரபத்திரருக்கு பாலாபிஷேகம் செய்து, வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால், தங்களுக்கு நேர்ந்த துயரம் தீரும் என்று நம்புகிறார்கள். ஆனால் ஏனோ தெரியவில்லை, சப்தகன்னியர் சன்னிதியை “செல்லியம்மன் சன்னதி” என்று பெண்கள் அழைக்கிறார்கள்.
நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, எடுத்துக்கட்டி என்ற கிராமத்தில் பாசிகுல விநாயகர் கோயில் அமைந்துள்ளது.
இந்த விநாயகருக்கு 4 கைகள் உள்ளது. இரண்டு கைகள் மறைந்து இருக்கும், இரண்டு கைகள் வெளியில் தெரியும், ஒரு லிங்க வடிவில் விநாயகர் அமர்ந்து காட்சியளிப்பார்.
பால் அபிஷேகம் செய்யும் போது சிறிய குட்டியானை எப்படி உட்க்கார்ந்து இருக்குமோ அப்படியே உட்கார்ந்து காட்சியளிக்கிறார். பாசிகுல விநாயகர். சாஸ்தா (ஐயனார்) என்பவர் பாசிகுல விநாயகரை பூஜை செய்ததால் சாத்தனூர் என பெயர் பெற்றது.
அதோடு மட்டுமில்லாமல் எமனை சிவபெருமான் திருக்கடையூரில் சம்ஹாரம் செய்தார். பூமாதேவி உடன் எழுந்து வந்து சிவபெருமானியிடம் உலகத்தை என்னால் தாங்கிக்கொள்ளமுடியாது, எனவே எமனுக்கு மீண்டும் உயிர் கொடுக்க சொல்லி மன்றாடியிருக்கிறார்.
அப்போது எமனுக்கு உயிர்கொடுத்த இடம்தான் எடுத்துக்கட்டி. தற்போது எடுத்துக்கட்டி சாத்தனூர் என்று அழைக்கப்படுகிறது. ஓவ்வொரு ஊரிலும் விநாகர் கோயில் தெரு நுழைவாயிலும், தெரு கடைசியிலும் இருப்பது வழக்கம், ஆனால் இந்த பாசிகுல விநாயகர் சன்னதி மட்டும் ஊருக்கு ஒதுக்குபுறமாக அமைந்துள்ளது.
பெரும்பாலும் விநாயகருக்கு தலைவிருச்சம் அரசமரம், அல்லது ஆலமரம் தான் ஏராளமாக கோயில்களில் அமைந்து இருக்கும். இந்த கோயிலுக்கு மட்டும் வன்னி மரம் தான் தலைவிருச்சம் மரமாக அமைந்துள்ளது. பாசிகுல விநாயகரை வழிபட்டால் வறுமை நீங்கும்.
ஒரு முறை இந்த கோவிலுக்கு சென்றால் அடுத்த கணமே பலன்கிடைக்கும். நவகிரக தோஷத்தால் ஏராளமானவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காணாமல் இருப்பார்கள். அவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து பூஜை செய்து வழிப்பட்டால் அவர்களுக்கு இருந்த அத்தனை தடைகளும் நீங்கும்.
மேலும் திருமண தடை, வேலை கிடைப்பதில் உள்ள தடை, எடுத்த காரியங்கள் வெற்றி பெறாமல் தோல்வியை தழுவது, குழந்தை பேறு இல்லாமல் இருப்பவர்கள் எல்லோரும் இந்த பாசிகுல விநாயகரை தரிசித்து சென்றால் போதும். அவர்கள் வாழ்க்கையில் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்து வாழ்வார்கள்.
‘உன் நண்பன் யாரென்று சொல். நீ யாரென்று சொல்கிறேன்’ என்று சொல்வார்கள். அதனால் உங்கள் குழந்தைகள் எப்படிப்பட்ட நண்பர்களுடன் பழகுகிறார்கள் என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். அவர்கள் போக்கு தவறாக இருந்தால் அவர்களுக்குப் புரியும் வகையில் பக்குவமான முறையில் எடுத்துச் சொல்லுங்கள்.
முக்கியமாக, தம் பிள்ளைகளை மற்றவர்கள் முன்னிலையில் குறை சொல்வதைத் தவிர்க்க வேண்டும். நமது குழந்தைகளை மேதைகளாக ஆக்க முடியாவிட்டாலும், குடிபோதை, போதைமருந்து, புகை, சிகரெட் போன்ற கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆகி விடாதவாறு பெற்றோர் கவனமாக குழந்தைகளை வளர்க்க வேண்டும்.
பெரும்பாலான வீடுகளில் பிள்ளைகள் பெற்றோர்களிடம் வெளிப்படையாக பேசுவதே இல்லை. பெற்றோர்களும் அவர்களிடம் எதையும் கேட்பதே இல்லை. இதனால் தான் அவர்களுக்குள் அடிக்கடி பிரச்சினைகள் உருவாகின்றன. இந்த வயதில் உள்ளவர்களை பெற்றோர்கள் தங்கள் நண்பர்களாக பாவித்து வளர்க்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்குள் ஒரு சுமூக உறவு ஏற்படும்.
‘மீன் கொடுப்பதை விட, மீன்பிடிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும்’ என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு அதுபோல் எந்த ஒரு விஷயத்தையும் அடிப்படையிலிருந்து தெளிவாக கற்றுக் கொடுங்கள். அவர்களுக்கு எந்த துறையில் அதிக ஆர்வம் உள்ளதோ, அந்த துறையில் அவர்கள் திறன் வளர ஊக்கப்படுத்துங்கள். படிப்பிலும் சரி, விளையாட்டுக்களிலும் சரி உங்கள் குழந்தைகளுக்கு அவ்வப்போது ‘உற்சாக டானிக்’கை கொடுத்துக் கொண்டே இருங்கள்.
தாய் என்பவள் அன்பு காட்டுபவராக மட்டும் இல்லாமல், அறிவூட்டுபவராகவும் இருக்க வேண்டும். டி.வி. பார்ப்பது, தோழிகளுடன் அரட்டை போன்ற பொழுதுபோக்குகளை கொஞ்சம் உங்கள் குழந்தைகளுக்காக தியாகம் பண்ணுங்கள். தாய்மையின் பெருமையை உணருங்கள்.
இயற்கை ஆணைவிட பெண்ணுக்கே அதிக பொறுப்பை கொடுத்திருக்கிறது. குடும்பத்தை பராமரிப்பதுதான் அந்த பொறுப்பு. அதனால்தான் மாதா, பிதா, குரு, தெய்வம் என்று அன்னைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘சொர்க்கம்’ எங்கே இருக்கிறது என்று தேடுபவனிடம் ‘உன்னைப் பெற்ற தாயின் காலடியில்’ என்று சொல்கிறது ஒரு பழமொழி. அதிக தவறுகளைத் தெரிந்தும், தெரியாமலும் செய்து விட்டு, அதற்கான பாவங்களை கழுவ கோவில், குளம் என்று செல்வதில் பயன் ஒன்றுமில்லை. ஒவ்வொருவரும் அவரவர் மனசாட்சிப் படி நேர்மையாக நடந்து கொண்டால் போதும்.
Category:குழந்தை வளர்ப்பு
பிறந்த நிமிடம் முதலே தாயின் வாசனையையும் தொடுதலையும் விரும்புகிறது குழந்தை. அம்மாவுடனே தூங்க விரும்புகிறது. அம்மா தன் அருகில் இல்லை என்பதை ஒரு சின்ன அசைவில் இருந்துகூட அது கண்டு கொண்டு விடுகிறது. அடுத்த கணம் அது அழுது தன் கண்டுபிடிப்பை உறுதி செய்து கொள்கிறது. அம்மாவின் குரலை கேட்டபிறகே அழுகையை நிறுத்துகிறது.
தொடக்கம் முதலே இப்படி அம்மாவுடன் தூங்க விரும்பும் குழந்தைகள் 16, 17 வயது வரையில் இதைத்தொடர விரும்பும்போதுதான் பிரச்சினையாகிறது. இப்படிப்பட்ட ‘வளர்ந்த பிள்ளைகள்’ எல்லா விஷயத்திலும் ‘அம்மா பிள்ளை’யாகவே இருந்து இளம்வயதுக்கே உரிய தங்கள் முடிவெடுக்கும் ஆற்றலை இழந்து விடுவார்கள்.
சில குழந்தைகள் தாய்ப்பால் குடித்து வயிறு நிரம்பியதும் தூங்கி விடுவார்கள். ஆனால் அப்படி தூங்கிய ஐந்து நிமிடத்திற்கெல்லாம் ஒரு விரலை எடுத்து வாயில் வைத்து சப்பிக் கொண்டிருப்பார்கள். இது அனிச்சையாக நடந்தாலும், உண்மையில் தாயிடம் பால் குடித்துக் கொண்டிருப்பதாக அவர்கள் நம்பும் அந்த நம்பிக்கைதான் இப்படி விரலை சப்பச் செய்கிறது. இது அவர்களை தாயின் பாதுகாப்பு வளையத்திற்குள் நிம்மதியாக இருப்பதை உணர வைக்கிறது. இதுவே அவர்களின் மனவளர்ச்சிக்கும் அறிவு விருத்திக்கும் ஏதுவாகிறது.
சின்னக் குழந்தைகளை பெற்றோர் தங்கள் இருவருக்கும் இடையே படுக்க வைப்பது நல்லது. பல பெற்றோர்கள் இருவருமே வேலைக்கு போகிறவர்களாக இருப்பார்கள். இவர்களின் பிள்ளைகள் பகல் நேரங்களில் தாத்தா பாட்டியின் பராமரிப்பிலோ, அல்லது வீட்டோடு இருக்கும் வேலைக்காரிகளின் நேரடிப்பார்வையிலோதான் இருப்பார்கள். அதேநேரம் இரவு முழுக்க பெற்றோரின் அரவணைப்புக்குள் இருக்கும் வாய்ப்பு கிடைப்பதால் தங்கள் தனிமை ஈடு செய்யப்பட்டு விட்டதாக திருப்திப்பட்டுக் கொள்வார்கள்.
சில பெற்றோர் தங்கள் கூடவே குழந்தையை படுக்கவைக்கும்போது குழந்தைகள் படுக்கையை ஈரப்படுத்துவதை விரும்புவதில்லை. அதனால் தங்களுக்கு எட்டும் தூரத்தில் குழந்தையை தொட்டிலிலோ, பெட்டிலோ படுக்கப் போட்டு விடுவார்கள். இம்மாதிரியான தள்ளி வைப்புக்குள்ளான குழந்தைகள் இரவில் பசித்து அழும்போது உடனடியாக தாயின் அனுசரணைக் குரல் (என்னடா செல்லம்…இதோ வரேன்டா!) கேட்டால் தனிமையை உணர மாட்டார்கள். ‘குரல் கொடுத்ததுமே நம்மை கவனிக்க இங்கே நமக்கானவர்கள் இருக்கிறார்கள்’ என்ற உணர்வு குழந்தைகள் மனதில் தங்கிப்போவதால், அவை அந்த குறைந்த பட்ச இடைவெளியை பொருட்படுத்துவதில்லை.
இதில்கூட பெற்றோருக்கு உணர்வுரீதியான ஒரு நெருக்கடி இருக்கிறது. குழந்தையை தங்கள் இருவருக்கும் இடையில் படுக்கவைப்பவர்கள் தங்கள் ‘இரவுநேர நெருக்கத்திற்கு’ இடையூறாக இருக்கிறது என்று கருதவும் இடமுண்டு. அந்த நேரத்தில் குழந்தை அழுது அவர்கள் தனிமையின் இனிமையை தகர்த்து விடுவதும் உண்டு. இதுபோக நடுநடுவே விழித்து அழும் குழந்தையால் அலுவலகம் போக வேண்டிய கணவரின் நிம்மதியான உறக்கம் தடைப்படுவதாக கவலைப்படும் சில தாய்மார்கள் குழந்தையை சற்றுத் தள்ளி படுக்கவைக்கும் எண்ணத்துக்குள் வந்து விடுகிறார்கள்.
இரண்டாவது குழந்தை பிறந்த நேரத்தில் முதல் குழந்தையை எங்கே படுக்கவைப்பது என்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. இதுவே கிராமங்களாக இருந்தால் விசாலமான வீட்டில் தாத்தா-பாட்டி வசம் முதல் குழந்தை ஒப்படைக்கப்படுகிறது. அதனால் முதல் குழந்தை தனிமை, இருட்டு, இட நெருக்கடி போன்ற சூழலுக்குத் தப்பி விடுகிறது.
அதேசமயம் ஒண்டுக்குடித்தன நகர வீடுகளில் முதல் குழந்தையின் நிலை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இந்த மாதிரியான நெருக்கடிக்கு உள்ளாகும் முதல் குழந்தைகள், பெற்றோரின் இரண்டாவது குழந்தையை தங்கள் எதிரியாக பார்க்கத் தொடங்கி விடுகின்றன.
இத்தகைய மனக்கசப்பு மூத்த குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடாதபடி பெற்றோர் கவனமாக இருக்கவேண்டும். முதல் குழந்தை தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக எண்ணாத அளவுக்கு அந்தக் குழந்தையையும் தங்கள்அன்பால் ஈர்த்துக் கொள்ளவேண்டும். தாய் அருகே ஒரு குழந்தை படுத்துக் கொண்டால் அடுத்த குழந்தை தந்தையின் அருகே படுக்க வைக்கப்பட வேண்டும். இப்படிச்செய்யும்போது தாயிடம் காட்டும் பாசத்துக்கு இணையாக தந்தையிடமும் குழந்தைகள் ஒட்டிக்கொள்ளும்.
நாலு, ஐந்துவயதுப் பிராயத்தில் தன்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும். இந்தக்குழந்தைகள் இரவில் விழிக்கும் நேரத்தில் பெற்றோரின் ‘நெருக்கத்தைக்’கூட பார்க்கும் சூழல் ஏற்படக்கூடும். அந்த நேரத்தில் குழந்தையை தனியாக தூங்கவைப்பதை விட, குழந்தை தூங்கியபிறகு இவர்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அபூர்வமாய் இந்தவயதில் தனியாக தூங்கப்பழகிக் கொள்ளும் குழந்தைகளும் உண்டு.
7-8 வயதாகும்போது குழந்தைகள் சிறுவர்கள் நிலைக்கு வருகிறார்கள். இந்த பருவத்தில் அவர்களுக்கு வீட்டைத்தாண்டி பள்ளி உள்ளிட்ட வெளி இடங்களில் இருந்தும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். இப்போது அவர்களாகவே தனியறையில் தூங்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒரு மாற்றம் நேர்கிறது. இந்த வயதிலும் பெற்றோருடன் ஒரே அறையில்தான் தூங்குவேன் என்று அடம் பிடிக்கும் சிறுவர்களை நல்லவிதமாய் பெற்றோரே எடுத்துச்சொல்லி அவர்கள் தனியறையில் தூங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும். அவர்களின் மனோரீதியான வளர்ச்சிக்கு இது நல்லது.
இதிலும் சிலர் டிவியில் பார்த்த திகில் படங்களுக்குப் பயந்து தனியறையில் படுக்க பயப்படலாம். பெற்றோரோ, நண்பர்களோ சொன்ன மாந்திரீக கதைகள் ராத்திரி நேரத்தில் பயம் ஏற்படுத்தலாம். இப்படி பயந்தவர்களை பெற்றோர் தூங்கும் அறையிலேயே தனி கட்டில் போட்டு தூங்க வைக்கலாம். இப்படி ஏற்பாடு செய்தும் தனியாக படுக்க பயப்படுகிறவர்களின் அருகில் பெற்றோரில் யாராவது ஒருவர் அவர்கள் தூங்கும்வரை படுத்திருக்கலாம். நாளடைவில் இந்த சிறுவர்கள் தனியாகத் தூங்க பழக்கப்பட்டு விடுவார்கள்.
சில குழந்தைகள் இருட்டு என்றாலே பயப்படுவார்கள். அவர்களை ‘இருட்டு என்பது ஒருநாளின் கொஞ்சப்பகுதி. அவ்வளவுதான்’ என்று தைரியமூட்டுவதோடு, முதலில் குறைந்த வெளிச்சத்தில் அவர்களை அழைத்து செல்லலாம். குறைந்த இருட்டுக்கு பழகிய நேரத்தில் நல்ல கும்மிருட்டில் அழைத்துச்செல்லலாம். அவ்வப்போது தைரியமான சரித்திர, புராணக்கதைகளை சொல்லலாம். தொடர்ந்து இப்படிச் செய்யும்போது இருட்டு பயம் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு விடும்.
Category:குழந்தை வளர்ப்பு
ஞாபகம் ஒரு வியாதி, மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள், ஆனால் நம் குழந்தை படித்தததை எல்லாம் மறக்கும் போது மறதி ஒரு சாபம் போல நமக்கு தோன்றும்.
ஞாபகம் குறித்து சில தகவல்கள்:
நாம் பார்க்கும், கேட்கும், உணரும், சுவைக்கும், முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும். இது முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி). உடனே மறந்து விடும்.
இந்த சென்சரி மெமரியில் நாம் முழு கவனத்தை செலுத்தி ஆழ்ந்து கவனித்தால் அது ஷார்ட் டெர்ம் மெமரி ஆக பதிவாகும். இதுவும் சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும்.
ஷார்ட் டெர்ம் மெமரி ஐ திரும்பத் திரும்ப செய்யும்போது அது நாள் பட்ட ஞாபக சக்தியாக மாறும். எனவே ஞாபக சக்திக்கு மிகவும் முக்கிமானது இரண்டு: ஆர்வம் மற்றும் கவனம், திரும்ப திரும்ப செய்தல்.
மேலும் நாள் பட்ட ஞாபகம்கூட மறக்க வாய்ப்பு உள்ளது, இதுவும் நல்லது தான். சில சமயம் வாழ் நாள் முழுதும் நினைவில் இருக்கும்.
நாள் பட்ட ஞாபகத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம்: explicit & implicit
explicit என்பது கொஞ்சம் யோசித்தால் நினைவுக்கு கொண்டுவர முடியும்.
implicit என்பது யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்கு கொண்டு வருதல்.
நினைவு திறனை சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம்:
மிதி வண்டி ஓட்ட பழகுதலை எடுத்துக் கொள்வோம்.
யாரோ ஓட்டுவதை நாம் பார்ப்பது – சென்சரி மெமர
முதன் முதல் ஓட்ட காற்று கொள்வது – ஷார்ட் டெர்ம் மெமர
தத்தி தத்தி ஓட்டுவது – லாங் டெர்ம் explicit மெமர
தயவே இல்லாமல் ஓட்டுவது – லாங் டெர்ம் implicit மெமரி (சாகும் வரை மறக்காது)
இனி நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்:
* எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சோ – உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்.
* புரியாமல் எதையும் படிக்க கூடாது. ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை.
* முழு கவனம் மிக அவசியம்.
* mnemonics வைத்து படிப்பது ஒரு கலை. அதை உங்கள் குழந்தைக்கு கற்று கொடுங்கள்.
உதாரணம்: news – north, east, west, south
* படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.
* படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்கச் சொல்லவேண்டும
* நல்ல உறக்கம் அவசியம். குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை.
* இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்லவேண்டும்.
* தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும். அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல்களை ஷார்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும்.
* மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும், எனவே புரதம் நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துகொள்வது நல்லது.
Category:குழந்தை வளர்ப்பு
பள்ளிக் குழந்தைகள் பெரும்பாலும் ஜீரணக் கோளாறுகளால் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கான காரணத்தையும் நிவாரணத்தையும் இங்கே தருகிறோம்.
காலை உணவு கட்டாயம்:
பள்ளி செல்லும் நிறைய குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். அல்லது அவசர அவசரமாக அள்ளி விழுங்கிவிட்டு ஓட்டம் பிடிக்கிறார்கள். இந்த இரண்டுமே அஜீரணத்திற்கு வழிவகுக்கும்.
காலை உணவுதான் அந்த நாள் முழுவதும் உடல் இயக்கத்துக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. மூளையும், உடலும் சிறப்பாக இயங்க உதவுகிறது. எனவே காலை உணவைத் தவிர்க்கக்கூடாது. காலை உணவு சாப்பிடாவிட்டால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும்.
பள்ளி செல்லும் குழந்தைகள் பெரும்பாலும் 6 முதல் 7 மணிக்குள்ளாக காலை உணவை சாப்பிட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அந்த நேரத்தில் வயிறு பசிப்பதில்லை என்று குழந்தைகள் சாப்பிடாமல் செல்கிறார்கள். பெற்றோரும் குழந்தை சாப்பிட மறுக்கிறது என்று நினைத்து அவர்கள் சாப்பிடாமல் சென்றாலும் கண்டுகொள்வதில்லை.
உண்மையில் உடலானது குறிப்பிட்ட நேரத்துக்கு பசிக்கத் தொடங்கும். அதேபோல குறிப்பிட்ட நேரத்தில் உணவு கொடுத்து பழக்கம் ஏற்படுத்திவிட்டால் சில நாட்களில் அதே நேரத்தில் பசிக்கத் தொடங்கிவிடும். எனவே குழந்தைகள் காலையில் சாப்பிட மறுத்தாலும் சில நாட்களுக்கு பழக்கம் வருவதற்காக கட்டாயமாக சாப்பிட வைத்தால் பிறகு தானாகவே காலை 7 மணிக்குள் வயிறு பசிக்கத் தொடங்கிவிடும். சாப்பிடத் தொடங்கி விடுவார்கள்.
நிதானமாக சாப்பிடுதல்:
காலையில் ஏதாவது ‘ஹார்ன்’ சத்தம் கேட்டாலே பள்ளி பஸ் வந்துவிட்டதோ என்று எண்ணும் குழந்தைகளும், பெற்றோரும் ஏராளம். அதனால் அவசரம் அவசரமாக சாப்பிட்டு விட்டு பள்ளி வாகனத்தைப் பிடிக்க கிளம்பிவிடுகிறார்கள்.
அவசர கோலத்தில் சாப்பிடுவது அஜீரணத்திற்கு காரணமாகிறது. உணவை நன்கு மென்று நிதானமாக சாப்பிடும்போதுதான் ஜீரணம் எளிதாக நடைபெறுகிறது. உணவானது உமிழ் நீருடன் சேர்க்கப்பட்டு பற்களால் அரைக்கப்படுவதுதான் ஜீரண பணியின் தொடக்கம். மீதி செரிமானம்தான் வயிற்றில் நடைபெறுகிறது. அப்படி இருக்கும்போது வேக வேகமாக சாப்பிடுவதால் எளிதில் அஜீரணம் தொற்றிக் கொள்கிறது.
செலியாக் நோய்:
அஜீரணத்தை உருவாக்கும் ஒரு நோய் செலியாக். கோதுமை மற்றும் கோதுமை உணவுகள், பால் மற்றும் பால் உணவுகளில் ‘குளூட்டன்’ என்ற புரதம் இருக்கிறது. இது ஜீரண பிரச்சினையை உருவாக்கும் புரதமாகும். இந்த புரதத்தால் உருவாகும் நோய் ‘செலியாக்’ எனப்படுகிறது.
இதன் அறிகுறிகளாக அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படும். மலம் கெட்டவாடை வீசும். வயிறு உப்புசம் உருவாகும். இவற்றை கவனிக்காமல் விட்டுவிட்டால் குழந்தைகளின் வளர்ச்சி தடைபடும். உடல் எடை குறையும். இந்தப் பிரச்சினையை தவிர்க்க அந்த புரதம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
வயிற்றுப்போக்கு:
அஜீரணத்தால் ஏற்படும் பாதிப்புகளில் ஒன்று வயிற்றுப்போக்கு. உணவு சாப்பிடும் பழக்கம் மற்றும் சீதோஷ்ண நிலை மாறுபாடு ஆகியவை வயிற்றுப்போக்கிற்கு காரணமாகிறது. கோடைகாலங்களில் அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. கோடையில் சுத்தம், சுகாதாரமற்ற பழச்சாறு, பானங்கள் பருகுவது, சுகாதாரமற்ற உணவுகளைச் சாப்பிடுவது போன்றவை வயிற்றுப்போக்கை உருவாக்குகிறது.
பால் மற்றும் பால் உணவுப் பொருட்கள் சில குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். பாரம்பரியமாகவே சில குழந்தைகளுக்கு பால் பிடிக்காது. அவர்கள் பசும்பால் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக அவர்களுக்கு சோயா பால் கொடுக்கலாம். இப்படி பால் ஒத்துக்கொள்ளாத பிரச்சினையை ‘லாக்டோஸ் இன்டாலரன்ஸ்’ என்று குறிப்பிடுவார்கள்.
வயிற்று வலி:
நாம் பொதுவாக வயிற்றில் எங்கு வலித்தாலும் வயிற்று வலி என்று சொல்கிறோம். ஆனால் வயிற்றின் ஒவ்வொரு பாகத்தில் ஏற்படும் வலிக்கும் வேறுவேறு காரணங்கள் உண்டு. அதிக பசியாலும், வயிற்று எரிச்சலாலும் தொப்புள் பகுதிக்கு மேல்புறமாக வலிக்கும். காலை உணவு சாப்பிடாவிட்டாலும், அதிக காரம் உள்ள உணவுகளை சாப்பிடுபவர்களுக்கும் மேற்கண்டதுபோலவே வலி ஏற்படும்.
அஜீரண கோளாறாலும் வயிற்று வலி ஏற்படும். பயறு, கோஸ், பீன்ஸ் போன்ற உணவுகள் நைட்ரஜன் சத்து அதிகம் கொண்டவை. இவை அஜீரணத்தை ஏற்படுத்தும். காரம் அதிகம் உள்ள உணவுகளை குறைத்துக் கொண்டு, வாயு தொந்தரவு தரும் உணவுகளை தவிர்த்தால் வயிற்று வலியை தவிர்க்கலாம். அஜீரணத்தை தடுக்கலாம்.
துரித உணவுகள்:
குழந்தைகளுக்கு பசியின்மை இப்போது அதிகமாக உள்ளது. காய்ச்சல் இருக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக பசிக்காது. அதேபோல ‘ஜங் புட்’ எனப்படும் உணவுகளை சாப்பிடும் குழந்தைகளுக்கும் அதிகம் பசி வராது. துரித உணவுகள் எளிதில் வயிற்றை நிரப்பிவிடும். எனவே வழக்கமாக சாப்பிடும் நேரத்தில் சாப்பிட முடியாது. மேலும் ஜீரணத்தை சிதைத்துவிடும். எனவே அஜீரணம் ஏற்படுகிறது.
குழந்தை பசியின்மையாக இருந்தால் பிரச்சினைக்கான காரணத்தை தெரிந்து சரி செய்யப் பாருங்கள். உங்களுக்கு காரணம் தெரியாவிட்டால் மருத்துவரை அணுகுங்கள்.
பெரும்பாலும் குழந்தைகளை அடிக்கடி ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிட்டு பழக்கப்படுத்தாதீர்கள். அவர்கள் அந்த உணவின் ருசிக்கு அடிமைப்பட்டுப் போய்விடுவார்கள். அதனால் வீட்டில் எவ்வளவு ருசியாக உணவு சமைத்தாலும் அதை விரும்பமாட்டார்கள். எனவே எப்போதாவது ஓட்டல் உணவு, எப்போதுமே வீட்டு உணவு என்று பழக்கப்படுத்துங்கள்.
தண்ணீ¬ர்:
தண்¬ணீர் பருகுவது பலவித பிரச்சினைகளை தடுக்கும். போதுமான தண்ணீ¬ர் பருகா விட்டால் ஜீரணம் பாதிக்கும். ஜீரணம் சரியாக இல்லாவிட்டால் மலச்சிக்கல் ஏற்படும். மலச்சிக்கல் அதிகரித்தால் மலத்தோடு கோடுபோல ரத்தம் வெளியேறும். இது மல துவாரத்தின் கீழ்ப்பகுதி கிழிவதால் ஏற்படுகிறது. இதனால் ‘ஆனல் பிஷர்’ நோய் உண்டாகும்.
தண்ணீ¬ர் அதிகம் குடிக்காமல் சாப்பிடுவது, பொரித்த உணவுகளை அதிகமாக சாப்பிடு வதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உள்ள குழந்தைகளை தினமும் குறிப்பிட்ட நேரத்தில் ‘டாய்லெட்’ செல்லப் பழக்க வேண்டும். பழங்கள், நார்ச்சத்து மிக்க உணவுகளை அதிகம் சாப்பிட வைக்க வேண்டும்.
அம்மாக்கள் கவனிக்க…
குழந்தைகளுக்கு அஜீரணம் ஏற்படாமல் இருக்க அம்மாக்கள் செய்ய வேண்டியவை:-
* குழந்தைகள் அவசர அவசரமாக உணவு சாப்பிடுவதை தவிர்க்க உதவுங்கள்.
* வாயு தொந்தரவு தரும் உணவுகளை குறைத்துக் கொடுங்கள்.
* குழந்தைகளை அடிக்கடி ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிட்டு பழக்கப்படுத்தாதீர்கள்.
* காரம் மிகுந்த உணவுகளை அதிகம் கொடுக்காதீர்கள்.
* சுத்தம், சுகாதாரம் இல்லாத இடங்களில் குழந்தைகளை சாப்பிட அனுமதிக்காதீர்கள்.
* குழந்தைகளை தினமும் சரியான நேரத்திற்கு சாப்பிட வையுங்கள்.
* நிறைய சத்து கிடைக்கும் என்று எண்ணி அதிகமாக பசும்பால் கொடுப்பது தவறானது என்பதை உணருங்கள்.
* நிறைய தண்ணீ¬ர் குடிக்க பழக்கப்படுத்துங்கள். குழந்தைகள் தினமும் நான்கு அல்லது ஐந்து தம்ளர் தண்¬ணீர் குடிக்க வேண்டும்.
* இரவு உணவை 9 மணிக்குள் சாப்பிட வையுங்கள். சாப்பிட்ட உடன் தூங்கிவிடாமல் கொஞ்ச தூரம் நடந்து செல்ல வைப்பது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
Category:குழந்தை வளர்ப்பு
உங்கள் குழந்தைகளுக்கு ஓய்வு மிக முக்கியம். குழந்தைகள் பல தொலைக்காட்சிகள் நல்லனவற்றை கொடுப்பதில்லை. குழந்தைகள் ஒருநாளைக்கு நான்கு மணி நேரம் தொலைக்காட்சி பார்க்கிறார்கள்.
குழந்தைகளின் மனவளர்ச்சி தொலைக்காட்சியை அதிக நேரம் பார்ப்பதால் குறையும். துணைக்கோள் தொலைக்காட்சி வழிகளும் குழந்தைகளை வீட்டில் சிறை வைத்து விடுகின்றன. அவர்கள் மாலையில் தொலைக்காட்சியைப் பார்க்கத் தொடங்கினால் இரவு வெகுநேரம் வரை கண்விழித்து தொடர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்து, பின்னர் தூங்கச் செல்கிறார்கள்.
அவர்கள் வெளியே சென்று விளையாடுவதுமில்லை. இதற்கு பதில் வீட்டில் உட்கார்ந்து வீடியோ விளையாட்டு விளையாடுகிறார்கள்.
சில குழந்தைகள் தொலைக்காட்சி பார்ப்பதையே பைத்தியமாகச் செய்வார்கள். மேலும் குறைந்த நேரம் பார்க்கும் குழந்தைகளின் ஞாபக சக்தி நிறைவாகவும், முன்சொன்ன குழந்தைகளுக்கு குறைந்து போய்விடுகிறது.
குழந்தைகள் நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் தங்கள் பள்ளிப் படிப்பைப் படிக்க நேரமின்றி விட்டு விடுகின்றனர். அவர்கள் வெளியே சென்று விளையாடுவதிலும் கவனம் செலுத்துவதில்லை. குழந்தைகள் கற்பனை சக்தி ஏதுமின்றி, மந்தமான மூளையுடனே வளர்வார்கள்.
பால் உணர்வு மற்றும் பயங்கரவாதக் காட்சிகள் நமது திரைப்படங்களில் அதிகமாக உள்ளன. இயற்கையிலேயே நம் குழந்தைகள் அதைப் பார்த்துவிட்டு குதிப்பதும் கீழே விழுவதையும் செய்ய ஆரம்பிக்கிறார்கள்.
தொலைக்காட்சிகள் யாவும் கேளிக்கைக்காகவே என்பதை மறந்துவிடக் கூடாது. தங்கள் குழந்தைகள் இக்காட்சிகளை உண்மையென நம்பிவிடக்கூடாது. தொலைக்காட்சியில் வரும் திரையுலக பிரபலங்களின் தனிப்பழக்கம் ஆகியவற்றை போலச் செய்து பழகுவார்கள். பாடப் புத்தக செய்யுளைப் பாடுவதற்கு பதில் சினிமா பாட்டை மட்டும் பாடுவார்கள். இவை யாவும் இவர்களின் உடல், மன, வளர்ச்சிக்கான செயல்களை மட்டந் தட்டிவிடும்.
எனவே பெற்றோர்கள் குழந்தைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். தொலைக்காட்சி பார்ப்பது பள்ளிப் படிப்பை எவ்வளவு பாதிக்கிறது என்றும் கண்களுக்கு எவ்வாறு கேடு விளைவிக்கிறது என்பதையும் அவர்கள் புரிந்துகொள்ளுமாறு விளக்க வேண்டும்.
குழந்தைகளின் ஆளுமை எல்லா துறைகளிலும் சிறப்பாக வளர்க்கப்பட வேண்டும்.
உங்கள் குழந்தைகள் புத்தகங்களைப் படிக்கட்டும். தொலைக்காட்சியை விட புத்தகங்களைப் படிப்பது என்பது மிகச் சிறப்பான செயலாகும். குறிப்பாக கற்பனையான கேலியான கதைகள் யாவும் குழந்தையின் மனதில் நீங்கா இடம்பெறும். தேவதைக் கதைகள் அவர்களின் கற்பனா சக்தியை மேம்படுத்தும்.
குழந்தைகள் தங்கள் மனங்கள் மற்றும் முறைகளுக்கு ஏற்ற பயிற்சிகளைப் பெறுவார்கள. குழந்தைகள் பின்னர் செயலாக்க சிந்தனையுடையவர்களாக மாறுவார்கள்.
புத்தகம் படித்தல் மனமகிழ்ச்சியைத் தரும். விளையாட்டுகள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகும்.
விளையாட்டு மைதானம் என்பது பரிசோதனைச்சாலை போன்றது. வெளியுலகத் தொடர்பினை இவை வளர்க்கும். விளையாடும்போது குழந்தைகள் அவ்வப்போது சண்டை போடும். ஆனால் சீக்கிரம் அதை மறந்து ஒன்றாகி விடுவார்கள். அங்கு ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்வார்கள்.
குழந்தைகளுக்கு பஞ்ச தந்திரக் கதைகள், கதா சரிட் சாகரா கதைகள், தெனாலிராமன் கதைகள் , அக்பர்-பீர்பால் கதைகள் , விக்ரம்-பீடல் , ஜடக்கா கதைகள், முல்லா நசுருதீன் கதைகள், இந்தியாவின் கிராமியக் கதைகள்
கிருஷ்ண லீலா, தேவதைக் கதைகள் , பாட்டி சொன்ன கதைகள் , தாத்தா சொன்ன கதைகள் , படுக்கை நேரக் கதைகள் , டால்ஸ்டாயின் குழந்தைகளுக்கான கதைகள் , ராமாயணக் கதைகள் ,மகாபாரதக் கதைகள், பைபிள் கதைகள், ஈசாப்பின் கட்டுக் கதைகள் போன்ற கதைகளை பெற்றோர்கள் கூறலாம்.
பெற்றோர்கள் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய முறைகள் :
குழந்தைகள் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறைக்கவும்.
குழந்தைகள் பள்ளிப் பாடத்தை படிக்கும்போது தொலைக்காட்சியை நிறுத்தி விடவும்.
Category:குழந்தை வளர்ப்பு
குழந்தைகள் அழுவதுதான் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பது பலரின் கருத்து. ஆனால் குழந்தைகள் தொடர்ந்து அழுவதால் அதன் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நீண்ட நேரம் குழந்தை அழும்போது பெற்றோர்களின் கவனிப்பு இல்லாமல் போகும் பட்சத்தில் குழந்தைகளின் கற்றுக்கொள்ளும் திறன் குறைந்து போவதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகள் அழுவது பசியை தாய்க்கு உணர்த்தவே என்பது எல்லோரும் அறிந்தது. உடலில் உள்ள நோய்களையும், தனக்கு ஏற்படும் பிரச்சினைகளையும், தாய்க்கு உணர்த்த குழந்தைகளுக்கு இருக்கும் ஒரே வழி அழுகை மட்டும்தான்.
குழந்தைகள் நீண்ட நேரம் அழும்போது மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசோல் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு மனநலம் பாதிக்கும் வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இருபது நிமிடங்கள் வரை குழந்தைகள் அழ அனுமதிக்கலாம். ஆனால் அதற்கு மேலும் யாருடைய கவனிப்பும் இன்றி அழுது ஓய்ந்து போகும் குழந்தைகள்தான் பாதிக்கப்படுகின்றனர்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நடவடிக்கைகள் மற்ற குழந்தைகளிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும். இதனால் அவர்களின் எதிர்காலம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
அவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகள் கல்வி, விளையாட்டு போன்றவற்றில் சிறந்து விளங்குவதில்லை. ஆளுமைத்திறன் குறைந்து மந்தத்தன்மையோடு காணப்படுவார்கள் என்று ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர். அழும் நேரத்தில் குழந்தைகளை அரவணைப்பதோடு, அதற்கான காரணத்தை உடனடியாக கண்டறிய வேண்டும்.
இரவு நேரத்தில் தொட்டிலில் உறங்கும் குழந்தைகள் அழும்போது பசிக்காகத்தான் அழுவதாக நினைக்கும் தாய்மார்கள், அவசரமாக பாலை புகட்டி உறங்க வைக்கின்றனர். இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டு சத்தமில்லாமல் குழந்தைகள் மரணமடைகின்றன. இதனை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற தொட்டில் மரணங்கள் குளிர்காலத்தில்தான் ஏற்படுகின்றன. எடைகுறைவான, ப்ரீமெச்சூர் குழந்தைளுக்கே இந்த ஆபத்து அதிகம். ஆண்குழந்தைகள் அதிக அளவில் தொட்டில்களில் மரணமடைவது கண்டறியப்பட்டுள்ளது.
அனீமியா என்ற இரத்தசோகை நோயால் தாய் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண் இருபதுக்கும் குறைவான வயதுடையவளாக இருந்தாலோ குழந்தைக்கு இந்த ஆபத்து நேரலாம்.
குழந்தைகளை குப்புறப் படுக்க வைத்து உறங்க வைப்பதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். குப்புறப் படுக்க வைக்கும்போது குழந்தையின் உடல் எடை அதன் மென்மையான மார்பு எலும்புகளை அழுத்துவதால் குழந்தைக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
குழந்தையை மல்லாக்கப் படுக்க வைத்தே பழக்க வேண்டும். இப்படிப் படுக்க வைப்பதால் குழந்தைகளுக்கு மேலே சொன்ன ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 30 முதல் 50 சதவீதம் வரைக்கும் குறைகிறது.
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 50 சதவீதம் குறைகிறது என்று கூறும் மருத்துவர்கள், கட்டாயப்படுத்தி குழந்தைக்கு பால் புகட்டக் கூடாது என்கின்றனர்.
மேலை நாடுகளோடு ஒப்பிட்டால் இந்தியாவில் இப்படிப்பட்ட குழந்தை மரணங்கள் குறைவுதான். காரணம், மேலை நாடுகளில் குழந்தைகளைப் பெற்றோர் தனியாகப் படுக்க வைப்பதுதான். தனியாக படுப்பதால் கதகதப்பையும் ஒரு பிடிமானத்தையும் தேடி, குழந்தை குப்புற கவிழ்ந்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம். இதைப் போன்ற சமயங்களில் திடீரென்று தொட்டில் மரணம் நிகழ்கிறது.
நம்நாட்டில் பெரும்பாலும் தாய்மார்களின் அணைப்பிலேயே குழந்தையை படுக்க வைத்து மென்மையாகத் தட்டிக் கொடுத்து தூங்க வைப்பதால், அந்த ஸ்பரிசமும், அணைப்பும் கிடைத்த நிம்மதியில் குழந்தை பெரும்பாலும் அப்படியே தூங்கிவிடுகிறது. அணைப்பும் ஆதரவும் எவ்வளவு முக்கியம் என்பதை இதிலிருந்து உணரலாம்.
Category:குழந்தை வளர்ப்பு
பொருளாதார தேவைக்காக இன்றைய பெற்றோர்கள் பணிக்கு செல்லவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு சரியான அன்பும், பராமரிப்பும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. பணம் சம்பாதித்தால் போதும் குழந்தைகளுக்கு தேவையானதை வாங்கி கொடுத்துவிடலாம் என்று பெற்றோர்கள் கருதுகின்றனர்.
இதுபோன்ற தவறுகளை அதிகமான பெற்றோர்கள் செய்கின்றனர். குழந்தை வளர்ப்பது குறித்து ஆலோசனை தெரிவிக்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள். அன்பே மூலதனம் ஒரு குழந்தைக்கு முதன் முதலில் கிடைக்க வேண்டியது முழுமையான அன்பு. குழந்தை கேட்கும் பொருளை வாங்கி கொடுத்தால்தான் அன்பு என்று கிடையாது. குழந்தையை மடியில் அமர வைத்து நல்ல கதைகள் சொல்வது முழுமையான அன்பை அதற்கு கிடைக்கச் செய்யும். இப்படிப்பட்ட பெற்றோரிடம் குழந்தைகள் மிக நெருக்கமாகி விடும். மூன்று வயது முதல் நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.
நகத்தை வெட்டுவது, தலையை சுத்தமாக பேணுவது, உள்ளாடைகள் மற்றும் உடல் அந்தரங்க உறுப்புகளை எப்படி ஆரோக்கியமாக பராமரிப்பது என்று அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். ஆரோக்கியமான சூழல் அடுத்ததாக குழந்தைக்கு நாம் கொடுக்க வேண்டியது நல்ல ஆரோக்கியம். குழந்தை பிறந்தது முதல் அதன் எடையை சரியாக மெய்ன்டெய்ன் செய்து வரவேண்டும்.
6 மாதத்திற்கு ஒருமுறை அதன் எடையை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தையை ஆரோக்கியமாக வளர்க்க வேண்டும் என்பதற்காக அதிக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பொருட்களை அதிக அளவில் திணித்து குண்டு குழந்தைகளாக மாற்றிவிடக் கூடாது. ஒரே மருத்துவரிடம் அழைத்துச் சென்று மருத்துவ ஆலோசனை பெறவேண்டும். தோல்வியை சந்திக்கும் பக்குவம் குழந்தையுடன் நேரத்தை செலவிடுவதும் முக்கியமானது.
குழந்தை என்ன பேசுகிறது என்பதை பெற்றோர் பொறுமையாக அமர்ந்து கேட்க வேண்டும். பள்ளி ஆசிரியர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் பற்றி குழந்தைகள் சொல்வதையும் ஆர்வமாக கேட்க வேண்டும். குழந்தைகள் முதன் முதலாக தோல்வியை சந்திக்கும்போது நாம் கவனமாக இருக்க வேண்டும்.
தோல்வி என்பது வெற்றியின் அடிப்படை என்பதை பக்குவமாக புரிய வைக்க வேண்டும். தோல்வியை கண்டு துவளாமல் இருந்தால் அடுத்து வெற்றிதான்” என்பதை உணர்த்த வேண்டும். முக்கியமாக, எதையும் டேக் இட் ஈஸி யாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை குழந்தையின் மனதில் பதிய வைக்க வேண்டும். பணத்தின் அவசியம் பணம் இன்றி இன்றைய வாழ்க்கை முறையே இல்லை. அதனால், பணத்தின் மதிப்பை சின்ன வயதிலேயே குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
நம் குழந்தையுடன் படிக்கும் சக பெரிய இடத்து பிள்ளைகளிடம் பணம் அதிக அளவில் புழங்குகிறது என்பதற்காக நம் குழந்தைக்கும் பணத்தை அள்ளி செலவிடக்கூடாது.
வீட்டின் சூழ்நிலையை பக்குவமாக புரிய வைத்து, தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. ‘பாக்கெட் மணி” கொடுத்தால், அந்த பணத்திலும் சேமிக்கும் பழக்கத்தை குழந்தையிடம் உருவாக்க வேண்டும். பிரச்சினைக்கு தயார்படுத்துங்கள்
பிரச்சினைகளை எதிர்கொள்ளும் பக்குவத்தோடு குழந்தைகளை வளர்க்க வேண்டும். உன்னால் எதுவும் முடியும் என்று சொல்லி சொல்லி வளர்த்தால் குழந்தையிடம் தன்னம்பிக்கை தானாக வளர்ந்துவிடும். பிரச்சினையின் மூலத்தையும் அதற்கான தீர்வினையும் குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். குழந்தை மற்றவர்களிடம் பழகும்போது, அவர்கள் எப்படி தன்னிடம் பழகுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ளும் பக்குவத்தை வளர்க்க வேண்டும்.
எதிர் பாலினர் தன்னிடம் பேசும்போது, அவர்களது பேச்சு, பார்வை, தொடுதல் போன்றவற்றை ஒரு குழந்தை புரிந்துகொள்ளும் பக்குவத்தை பெறுவதும் அவசியம். மற்றவர்கள் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்கள் என்பதை எப்படி கண்டறிவது என்பதை சொல்லிக்கொடுக்கவும் தவறிவிடக்கூடாது. ஒப்பிட்டு பேசவேண்டாம்
கண்டிப்பு என்பதை குழந்தையிடம் முற்றிலும் தவிர்த்து விட வேண்டும்.
ஒரு பெற்றோர் தங்களது குழந்தையை அதிகம் கண்டித்தால், அவர்கள் குழந்தையிடம் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஒரு குழந்தை அதன் சக்திக்கு தகுந்தவாறுதான் சிந்திக்கும். அதனால், எந்த சூழ்நிலையிலும் குழந்தையை கட்டாயப்படுத்தக் கூடாது. மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடவும் கூடாது. குழந்தை ஜெயித்தால் பாராட்டுங்கள். தோற்றால் தட்டிக்கொடுங்கள். அதுவே அவர்களின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.
Category:குழந்தை வளர்ப்பு
கேரள மாநிலம் திருவல்லாவை அடுத்து ஆலப்புழை, பத்தனம்திட்டை மாவட்டங்களின் எல்லையில் உள்ள நீரேற்றுபுரத்தில் உள்ளது சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நாரத முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த ஆலயம் பெண்களின் சபரிமலை என அழைக்கப்படுகிறது.
பம்பை ஆறும், மணிமலை ஆறும் மாலைபோல் இருபுறமும் ஓட, இயற்கை வளம் சூழ்ந்த பிரதேசத்தின் நடுவில் இந்தக் கோவில் அமைந்திருக்கிறது. எட்டு கரங்களுடன் கருணை மழை பொழியும் அருள் முகத்துடன் எழிலாக அருள்பாலிக்கிறாள் தேவி.
சர்வேஸ்வரியும், அன்னபூரணியும், அபயம் தேடி வருபவர்களுக்கு அருளை வாரி வழங்கும் கலியுகத்து தெய்வமுமான சக்குளத்துக்காவு பகவதியின் அருளைப் பெற பெண்கள் பலர் புண்ணிய சுமையாக இருமுடி கட்டி விரதம் இருந்து சக்குளத்து அம்மனை தரிசிக்க வருகிறார்கள்.
அதேபோல் சபரி மலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் பெரும்பாலானோர் இங்கு வந்து சக்குளத்து அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். சக்குளத்து அம்மனை தரிசனம் செய்து பிரச்சினைகள் தீர்ந்தவர்களும், நினைத்த காரியம் நடக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், தேவி சந்தோஷத்தோடு அருள் புரிகிற கார்த்திகை மாதம், திருக்கார்த்திகை தினத்தில் தேவியின் இஷ்ட நைவேத்தியமான பொங்கல் வைத்து தேவியின் அருளை பெறுகிறார்கள்.
இந்த நாளில் சுமார் 50 கிலோமீட்டர் தூரத்திற்கும் மேலாக லட்சக்கணக்கான பெண்கள் மைதானங்களிலும், சாலையின் இரு புறங்களிலும் புதிய மண்பானைகளில் ஒரே நேரத்தில் பொங்கலிடுவார்கள். கோவில் முன்புறம் வைக்கப்பட்டுள்ள அடுப்பில் முக்கிய காரிய தரிசி ராதா கிருஷ்ணன் நம்பூதிரி சுபமுகூர்த்த வேளையில் தீயை பற்ற வைத்து இந்த பொங்கல் விழாவை தொடங்கி வைப்பார்.
அப்போது பருந்து (கருடன்) கோவிலை வட்டமடித்து செல்வது முக்கிய அம்சமாகும். அதைத் தொடர்ந்து லட்சணக்கான பெண்கள் தாங்கள் அமைத்துள்ள அடுப்பில் தீயை மூட்டி பொங்கலிடுவார்கள். பின்னர் பூசாரிகள் 10 தட்டங்களை எடுத்துச்சென்று நைவேத்திய தீர்த்தம் தெளிப்பார்கள்.
இந்த பொங்கல் வழிபாடு கேரளாவில் மிகவும் பிரபலமானதாகும். தேவியின் அனுகிரகத்தால் நல்ல நிலையில் இருப்பவர்களும், வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருப்பவர்களும் பொங்கல் விழா நடைபெறும் நாளில் குடும்ப சகிதமாக இங்கு வந்து பொங்கல் வைத்து தேவியின் அருளைப் பெற்றுச் செல்கிறார்கள்.
இதனால் ஆண்டுதோறும் பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. இங்கு, கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தினத்தில் கார்த்திகை ஸ்தம்பம் (சொக்கப்பனை) கொளுத்தப்படுகிறது. திருக்கார்த்திகை தீபம் ஏற்றி தேவியை எழுந்தருளச் செய்வதன் மூலம் தீமைகள் அகன்று வாழ்வில் நன்மைகள் பல உண்டாகும் என்பது ஐதீகம்.
சிறப்புமிக்க சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவிலின் திருவிழா 16ந் தேதி (நேற்று) தொடங்கியது. இந்த விழா வருகிற 27ந் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. திருவிழா நடைபெறும் 12 நாட்களும் பக்தர்கள் விரதம் இருந்து தேவியை வழிபாடு செய்வார்கள்.
டிசம்பர் 26ந் தேதி மண்டல பூஜை நாளில் குழந்தைகளின் ஆயுள்ஆரோக்கியம் பெருகவும், நன்கு படிப்பதற்கு வித்யாகலசம், திருமண பாக்கியம் கிடைக்க மாங்கல்ய கலசம் ஆகிய பூஜைகள் உண்டு. அன்றைய தினம் ஒரு லட்சம் கலசங்களில் தேவிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. ஒரே நாளில் இவ்வளவு கலசங்களில் அபிஷேகம் செய்யப்படுவது, வேறு எங்கும் நடை பெறுவதில்லை.
அன்றைய தினத்தில் தங்கத் திருவாபரணங்கள், மேள தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, தேவிக்கு சார்த்தப்பட்டு சிறப்பு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடத்தப்படும். இங்கு தமிழ் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை மிக முக்கிய நாளாகும்.
நாவில் தேவியின் மந்திரமும், மனதில் தேவியின் ரூபமுமாய் இந்த நாளில் பக்தர்கள் கூட்டமாக வருகை தருகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் பல மூலிகைகள் கொண்டு தீர்த்தம் தயாரிக்கப்பட்டு தேவிக்கு அபிஷேகம் செய்து, அந்த தீர்த்தத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். அதை குடித்தால் பலவித நோய்கள் பறந்துவிடும் என்பது நம்பிக்கை.
முதல் வெள்ளிக்கிழமை அன்று தேவியை கோவிலுக்கு வெளியே எழுந்தருளச் செய்து ஜாதி மத பேதம் இன்றி சர்வமத பிரார்த்தனை நடைபெறும். இந்த வழிபாட்டினால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்க வழிகாட்டுகிறது. குடிகாரர்களும், போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களும் இந்த கோவிலுக்கு வெள்ளிக்கிழமைகளில் அழைத்து வரப்படுகிறார்கள்.
தலைமை பூசாரி சில மந்திரங்களை உச்சரிக்க வைத்து வெற்றிலை, மிளகு பிரசாதத்தை சாப்பிட வைத்து, தேவியின் வாளைத் தொட்டு சத்தியமும் வாங்கப்படுகிறது. அதன்பின் குடிகாரர்கள் குடியை நிறுத்தி விடுகிறார்கள் என்ற நம்பிக்கையில் இது இன்றும் நடந்து வருகிறது. சத்தியத்தை மீறுபவர்களுக்கு உடனடியாக அதற்குரிய தண்டனை கிடைக்கிறது.
இதனால் பல ஆயிரம் குடும்பங்கள் காப்பாற்றப்படுகிறது. தேவியின் அருள்பெற்ற இந்தக் கோவிலின் முக்கிய காரியதரிசியான ராதாகிருஷ்ணன் நம்பூதிரி 7 வெற்றிலையும், ஒரு பாக்கையும் கொண்டு மிக துல்லியமாக சொல்லும் வெற்றிலை ஜோதிட பிரசன்னம் மிகவும் பிரபலமானதாகும்.
கேரளாவில் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பிரமுகர்களும் தங்களது எதிர்காலத்தையும், பிரச்சினைகளையும் அறிந்து கொள்ள இங்கு வருகை தருகிறார்கள். ஜாதி, மத வேறுபாடின்றி ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பட்ட மக்களும் வந்து அம்மனை வழிபட்டு செல்லும் புண்ணிய தலமாக சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் திகழ்கிறது.
தனது சொந்த அனுபவங்களை ஒருவர் மற்றவரிடம் சொல்லி தகவல் பரவுவதால் இன்று தேவியின் புகழ் கேரளாவில் மட்டும் இன்றி பல மாநிலங்களிலும் பரவி வருகிறது. கேரளாவின் பல பகுதிகளில் இருந்து 40க்கும் மேற்பட்ட கேரள அரசு பஸ்கள் நேரடியாக இயக்கப்படுகிறது.
திருவல்லா ரெயில் நிலையத்தில் இருந்து தகழி சாலையில் 10 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கோட்டயம், சங்கனாச்சேரி, ஆலப்புழை, செங்கன்னூர் ஆகிய இடங்களில் இருந்து செல்வதற்கு சாலை வசதி உள்ளது.
தமிழ்நாட்டில் சித்ரகுப்தருக்கு என்று அமைந்துள்ள ஒரே கோவில் காஞ்சீபுரத்தில் தான் உள்ளது. இந்த தலத்தில் செல்வ விநாயகர் சன்னதி, இராமலிங்க அடிகள் சன்னதி, ஐயப்பன் சன்னதி, விஷ்ணு துர்க்கை சன்னதி, நவக்கிரகங்களின் தனிச்சன்னதி ஆகிய சன்னதிகள் கோவிலினுள் அமைந்துள்ளன.
காஞ்சீபுரம் பேருந்து நிலையத்திற்கு வடக்கில், நெல்லுக்காரத் தெருவின் மையத்தில் மெயின் ரோட்டோரத்திலேயே இத்தலம் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து 5 நிமிட நடைப்பயணத்தில் நடந்தே வந்தடைந்து விடலாம். மூலவர் சித்ரகுப்தர் தெற்கு பார்த்த வண்ணம் எழுந்தருளியுள்ளார்.
எமதர்மன் ஒரு சமயம் கயிலாயத்தில் சிவபெருமானைச் சந்தித்து, பிரம்மதேவனால் படைக்கப்படும் உயிர்களின் பாவ புண்ணியங்களை கணக்கிட்டுத் தண்டனை வழங்குவதில் சற்று சிரமமாக இருப்பதாகவும், அதற்கென்று தனக்கு ஒரு உதவியாளர் தேவை என்றும் கூறினார்.
உடனே சிவபெருமான், பிரம்மதேவனை வரச்செய்து எமதர்மனின் கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு கட்டளையிட்டார். ஒருநாள் சூரியன் ஆகாய மார்க்கமாகத் தன் பயணத்தை தொடரும்போது, ஒளிக் கதிர்கள் கடல் நீரில் விழுந்து பல வண்ண ஜாலங்களை ஏற்படுத்தின.
அப்போது கடல் நீர்ப்பரப்பில் நீலாதேவி என்னும் பெண் தோன்றி, சூரியனின் மீது ஆசைப்பட்டு சூரிய பகவானைத் தழுவினாள். இதனால் அவளுக்கு ஓர் ஆண்குழந்தைப் பிறந்தது. குழந்தைப் பிறந்தவுடன் நீலாதேவி அந்த கடல் நீர் பரப்பினுள் மறைந்தாள்.
அந்த குழந்தைப்பிறந்த நேரம்-சித்திரை மாதம் பவுணர்மி தினம் (சித்ரா பவுர்ணமி நன்னாள்) சித்திரை நட்சத்திரத்தில் தோன்றிய அக்குழந்தையே சித்திரகுப்தர் ஆவார். இவர் பிறக்கும் போதே அழகாகவும், இடக்கையில் ஓலைச்சுவடிகள், வலக்கையில் எழுத்தாணி கொண்டும் பிறந்தார். இவர் இமயமலை சாரலில் கடும் தவம் புரிந்து பல சக்திகளைப் பெற்றார்.
பிறகு தந்தை சூரியபகவானின் விருப்பப்படி எமனுக்கு உதவியாளராக பணியில் சேர்ந்து பணியாற்றுகிறார் என்று ஆன்மீக அறிஞர்கள் கூறியுள்ளனர். தென் இந்தியாவில் உள்ள ஒரே திருக்கோவில் என்று பெருமையைப் பெறுகிறது இத்திருக்கோவில்.
நவக்கிரகங்களில் கேது பகவானுக்கு உரிய அதிதேவதையாக சித்திரகுப்தர் விளங்குகிறார் என்று ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர். கேதுவை மோட்சம் அளிக்கும் கிரகம் என்பர். யார் யார் மோட்சம் செல்வர் என்று உயிர்களின் கணக்குகளை கையில் தயாராக வைத்துக்கொண்டிருப்பவர் தான் சித்ரகுப்தர் ஆவார்.
இத்தலம் மிகச்சிறந்த ராகு-கேது பரிகார தலமாக விளங்குகிறது. அந்த பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் தெரியுமா? கொள்ளு, உளுந்து (கொள்ளு-கேது, உளுந்து- ராகு), வண்ணத்துணி (அவரவர் சக்திக்கு ஏற்ப) தட்டில் வைத்து அர்ச்சனை செய்து, துணியை ஆலயத்தில் கொடுத்துவிட வேண்டும்.
அதன்பிறகு கொள்ளு, உளுந்தை பசுவிற்குத் தந்துவிடவேண்டும். இதனால் ராகு, கேது, தோஷம், அகலும். இத்திருக்கோவில் கருணீகர் மரபினர்களால் கணக்குப் பிள்ளைமார்களால் நிர்வகிக்கப்படுகிறது. காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
தலபெருமை:
இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சூரியனுக்கு இந்தியாவில் இரண்டே இரண்டு இடத்தில் மட்டுமே கோயில் உள்ளது. வடக்கே கோனார்க் கோயில்.தெற்கே இந்த சூரியனார் கோயில்.கோனார்க்கில் உருவ வழிபாடு இல்லை.
ஆனால் இந்த சூரியனார் கோயிலில் உருவ வழிபாடு உள்ளது. கருவறையில் சூர்ய பகவான் மேற்கு முகமாக பார்த்தபடி இடது புறத்தில் உஷா தேவியுடனும் வலது புறத்தில் பிரத்யுஷாதேவி எனும் சாயாதேவியுடனும் நின்றபடி திருமணக் கோலத்தில் காட்சி தருகின்றார்.
சூரியபகவான் தமது இரு கரங்களிலும் செந்தாமரை மலர்களை ஏந்திப் புன்முறுவலுடன் விளங்குகிறார். சூரிய பகவான் உக்கிரம் அதிகம்.அதன் வீச்சை யாராலும் தாங்க முடியாது. ஆகவே அவரைச் சாந்தப்படுத்தும் பொருட்டு குருபகவான் எதிரில் உள்ளார்.
அதனால்தான் சூரியபகவானை வழிபட முடிகிறது. மேலும் சூரியனை நோக்கியபடி சூரியனின் வாகனமான குதிரை (அசுவம்) இருக்கிறது. சிவலிங்கத்துக்கு முன்னே நந்தி இருப்பது போல இங்கு குதிரை இருக்கிறது.
* நவகிரகங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்க கூடியதும் நவகிரகமே மூலஸ்தானமாக அமைந்த கோயில் இது. மற்ற நவகிரக தலங்களில் பரிவார தேவதைகளாக மட்டுமே உள்ளனர்.
* இங்கு திருமணக்கோலத்தில் 2 மனைவியரோடு சூரியபகவான் உள்ளது சிறப்பு.
* உக்கிரமாக இல்லாமல் இங்கு சாந்த சொரூபமாக சூரியபகவான் காட்சி தருவது குறிப்படித்தக்கது.
* இத்தலத்தில் பிற கிரகங்கள் அனைத்துக்கும் தனி தனி சந்நிதி உள்ளது.
* இங்குள்ள நவகிரகங்கள் எல்லாமே அனுகிரகம் உள்ளதாக இருக்கிறது.
* இங்குள்ள நவகிரகங்கள் யாருக்கும் வாகனங்கள் இல்லை. வாகனங்கள் இல்லாது நவகிரக நாயகர்களாக மட்டுமே அருள்பாலிக்கின்றனர்.
திருவிழா:
ரதசப்தமி உற்சவம்: தை மாதம் – 10 நாட்கள் திருவிழா – இது இத்தலத்தின் மிக முக்கிய திருவிழா ஆகும்.
சிறப்பு வழிபாடு:
பிரதி தமிழ் மாதம் முதல் ஞாயிறன்று சிவசூர்ய பெருமானுக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மகா அபிசேகம் என்று அழைக்கப்படும் இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்வார்கள். சனிப்பெயர்ச்சி, குருபெயர்ச்சி ஆகியநாட்களில் இத்தலத்தில் மிக சிறப்பான முறையில் அபிசேக ஆராதனைகள் நடக்கும். பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்வர்.
பிரார்த்தனை :
நவகிரக தலங்களில் சூரிய தலம் முதன்மையானது என்பதால் இங்கு பக்தர்கள் பெருமளவில் வருகை புரிந்து தங்கள் பல்வேறு கஷ்டங்கள் நீங்க பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.
தோஷ நிவர்த்தி :
ஏழரை ஆண்டுச் சனி, அஷ்டமத்துச் சனி, ஜென்மச் சனியால் தொடரப்பட்டவர்களும் வேறு பிற நவகிரகதோஷமுள்ளவர்களும் சூரியனார் கோயிலுக்கு வந்து பன்னிரண்டு ஞாயிற்றுக் கிழமை காலம் வரை தலவாசம் செய்து வழிபட வேண்டும்.
அதாவது குறிப்பிட்ட ஒரு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலிருந்து தொடர்ந்து பன்னிரெண்டாவது ஞாயிற்றுகிழமை முடிகிற வரை சுமார் இரண்டரை மாத காலம் (78 நாட்கள்) இத்தலத்திலே தங்கியிருந்து நாடோறும் நவதீர்த்தங்களிலும் நீராடி உபவாசமிருந்து திருமங்கலகுடி பிராணநாதரையும் மங்கள நாயகியையும் இத்தலத்து நாயகர்களையும் முறைப்படி வழிபட்டு வரவேண்டும். தமது தோஷத்துக்கான பரிகாரங்களையும் செய்து வரவேண்டும். இப்படிச் செய்து வந்தால் மேற்படி தோஷங்கள் நிவர்த்தி ஆகும்.
* சூரிய திசை, சூரிய புத்தி, சூரிய பார்வை, சூரிய தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு வந்து ஞாயிறு தோறும் வழிபடுகின்றனர்.
* இத்தலத்தில் வழிபடுவதால் நவகிரக தோஷங்கள் நீங்கும். காரியத் தடை விலகும்.
போக்குவரத்து வசதி :
சென்னை கோயம்பேட்டில் இருந்து இந்த கோவிலுக்கு செல்ல நேரடி போக்குவரத்து வசதி உள்ளது. அல்லது சென்னை கோயம்பேட்டில் இருந்து பேருந்து மூலம் தஞ்சாவூர் சென்று அங்கிருந்து உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலுக்கு செல்லாம்.
கும்பகோணம் –அணைக்கரை-ஆடுதுறை –மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் இருந்தும் பேருந்து வசதி உண்டு.
கும்பகோணம் அருகே அமைந்துள்ளது சிவயோகிநாதர் திருக்கோவில். பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியபடி உள்ளது இந்தத் திருத்தலம். படைப்புக் கடவுளான பிரம்மதேவர், விஷ்ணுசர்மா என்பவருக்கு மகனாக பிறந்தார். விஷ்ணுசர்மாவுக்கு மேலும் ஆறு பேர் இருந்தனர். பிரம்மதேவர் தன்னுடன் பிறந்த ஆறுபேருடனும் சிவனை நோக்கி தவம் புரிந்தார்.
ஒரு சிவராத்திரி தினத்தில் தவம் புரிந்த 7 பேருக்கும் சிவபெருமான் தரிசனம் கொடுத்து அவர்களை 7 ஜோதியாக்கி தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். எனவே இத்தல இறைவன் சிவயோகிநாதர் என்று அழைக்கப்படுகிறார். இந்த வரலாற்றை விளக்கும் வகையில் இங்குள்ள சிவலிங்க திருமேனியில் ஏழு முடிக்கற்றைகள் இருக்கின்றன.
பொதுவாக சிவாலயங்களில் கொடிமரத்திற்கு முன்பாக நந்தி உருவம் இருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் கொடிமரத்திற்கு வெளியே நந்தி சிலை அமைந்துள்ளது. இதற்கு தல வரலாற்று கதை உள்ளது. ஒரு காலத்தில் பல பாவங்களைச் செய்த ஒருவன், தன் இறுதி காலத்தில் கோவிலுக்கு வந்து இத்தல இறைவனான சிவயோகிநாதரை நோக்கி அழைத்தான்.
இவ்வாறு பாவம் செய்தவன், இறைவனை அழைத்த தினம் பிரதோஷ தினமாகும். அப்போது சிவபெருமான் நந்தியிடம் ‘என்னை அழைப்பது யார்?’ என்று கேட்க, நந்தி திரும்பிப் பார்த்தது. நந்தியின் பார்வையால் அவனது பாவம் தொலைந்து போனது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த ஆலயத்தில் உள்ள நந்தி சிலை திரும்பிப் பார்த்த நிலையில் காணப்படுகிறது.
பாவம் செய்திருந்தாலும், இறைவனை நினைத்ததன் பலனாக அவனது பாவம் தொலைந்து அவன் சுகமாகிவிட்டான். ஆனால் அவனது விதி முடிய இருந்த காரணத்தால், எமன் அவனை கொண்டு செல்ல அங்கு வந்தான். எமனை நந்தி பகவான் தடுத்தார். அப்போது நந்தீஸ்வரருக்கும், எமதர்மனுக்கும் பயங்கரமான சண்டை நடந்தது.
இறுதியில் நந்தீஸ்வரர், எமனை வென்று கோவில் கொடிமரத்திற்கு வெளியே அனுப்பினார். இத்தலத்தில் கொடிமரத்தின் வெளியே நந்தி சிலை இருப்பதை இன்றும் காணலாம். இத்தல இறைவன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். சுயம்பு லிங்கமான சிவயோகிநாதரின் திருமேனியில் சித்திரை மாதம் 1, 2, 3 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி கதிர்கள் பட்டு ஒளிவீசும்.
கோவிலின் தென்புற மதில் சுவர் அருகே சுமார் 700 ஆண்டுகளுக்கு முந்தைய சூரிய ஒளி கடிகாரம் அமைந்துள்ளது. காலையில் சூரியன் உதிப்பதில் இருந்து மாலையில் சூரியன் மறையும் வரை சூரியன் செல்லும் பாதையைக் கணக்கிட்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்டுள்ளது. அரை வட்ட கோளம் அமைக்கப்பட்டு, அதைச் சுற்றிலும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை எண்கள் செதுக்கப்பட்டுள்ளன.
இதன் நடுவே பித்தளையால் ஆன ஆணி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. சூரியனின் ஒளி இந்த ஆணியில் பட்டு அதன் நிழல் எந்த எண்ணில் விழுகிறதோ அதுவே அப்போதையே நேரம் ஆகும். இத்தலத்தில் சவுந்திரநாயகி அம்மன் சன்னிதி தனியாக உள்ளது. தல விருட்சம் வில்வம் ஆகும்.
கோவிலை சுற்றிலும் 8 தீர்த்தங்கள் உள்ளன. அதில் ஜடாயு தீர்த்தம் முக்கியமானதாகும். காவிரி வடகரை தலங்களில் தேவாரப்பாடல் பெற்ற 43–வது தலம் இதுவாகும். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் தன் வீட்டில் திவசம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பசியால் வீட்டு வாசலில் யாசகம் கேட்டு ஒருவன் வந்தான்.
திவசம் முடியாமல் யாருக்கும் எதுவும் கொடுக்கக் கூடாது என்பது மரபு. இருந்தும் பசியுடன் வந்தவனுக்கு அந்த வீட்டு உரிமையாளர் உணவளித்தார். இதனால் அந்த ஊர் மக்கள் அவரை ஊரை விட்டு ஒதுக்கி விட்டனர். தண்டனைக்கான பரிகாரம் கேட்டபோது, கங்கையில் குளிக்க வேண்டும் என்று ஊர் மக்கள் கூறிவிட்டார்கள்.
இதையடுத்து அந்த நபர், சிவயோகிநாதரை நோக்கி வேண்டினார். பக்தனின் வேண்டுதலை நிறைவேற்றும்பொருட்டு, அவர் வீட்டு கிணற்றிலேயே கங்கையை பொங்க வைத்தார் ஈசன். இதனைக் கண்டு வாயடைத்து போய்விட்டனர் அந்த ஊர் மக்கள். மனிதநேயம் கொண்ட பக்தனுக்கு உதவ எப்போதும் இறைவன் உதவுவான் என்பதை இந்த கதை உணர்த்துகிறது.
கும்பகோணத்தில் இருந்து வேப்பத்தூர் வழியாக சூரியனார் கோவில் செல்லும் சாலையில் அமைந்துள்ளது திருவிசநல்லூர் சிவயோகிநாதர் திருக்கோவில். சென்னையில் இருந்து பேருந்து மூலம் கும்பகோணம் சென்று பின் உள்ளூர் பேருந்து மூலம் இந்த கோவிலை அடையலாம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கொப்புடை அம்மன் கோயில் உள்ளது. இத்தலத்தின் மூலவராகவும், உற்சவராகவும் கொப்புடை நாயகி அம்மன் அருள்பாலிக்கிறார். மேலும் இத்தலமானது பழமை வாய்ந்து திகழ்கிறது. கொப்புடை அம்மன் கோயில், தென்னிந்திய பக்தர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.
தல சிறப்பு:
சிவன் தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தான் மூலவரும் உற்சவரும் ஒன்றாக இருக்கும். அதேபோல் அம்மன் தலங்களில் மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனே உற்சவ மூர்த்தியாக இருப்பது காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயிலில் தான். காவல் தெய்வம் கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்தபடி இங்கு அருள்பாலிக்கிறார்.
பரிகாரம்:
சரும வியாதிகள், குழந்தைப் பேறு இல்லாமை போன்ற குறைபாடுகளினால் அவதிப்படுவோர், மற்றும் மண வாழ்வில் பல பிரச்சினைகளைச் சந்திப்போர் போன்றவர்கள் அனைவரும் வந்து வழிபட்டு அம்மனின் அருளை பெற்று தங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபடுகின்றனர்.
உடல்நலக் குறைவினால் அவதிப்படுவோர், இங்கு வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர். பூரண நம்பிக்கை கொண்டு இங்கு வருவோரின் குறைகள் யாவும் நிவர்த்தியடைகிறது என்பது நம்பிக்கை.
திருவிழா:
சித்திரை மாதம் கடைசி செவ்வாய் கிழமை செவ்வாய்ப் பெருந்திருவிழா தொடங்கி வைகாசி மாதம் முதல் வாரம் முடிய 10 நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதத்தில் நான்கு செவ்வாய் கிழமை வந்தால் அதில் இரண்டாவது செவ்வாய் கிழமையும், ஐந்து செவ்வாய் கிழமை வந்தால் அதில் மூன்றாவது செவ்வாய் கிழமையும் கொப்புடையம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெறும்.
சித்திரை வருடப்பிறப்பு, புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஆடிச் செவ்வாய், மார்கழி திருப்பள்ளி எழுச்சி, பங்குனி தாராபிஷேகம் ஆகியன இக்கோயிலின் சிறப்பான திருவிழா ஆகும். வாரத்தின் ஒவ்வொரு ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.
நடை திறக்கும் நேரம்:
இக்கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
வற்றாத காசித் தீர்த்தம் கொண்ட தலம், பிரம்மன் தோற்றுவித்த ஆரணி ஆற்றோரம் அமைந்த பஞ்ச பிரம்மத் தலம், ரோம மகரிஷி நிறுவிய சிவன், பாரிஜாத மரத்தின் சாபத்தால் கண்ணன் அரச மரமாகி நின்ற பூமி, மன்னன் மகளையே மணம் புரிந்த இறைவன் வாழும் கோவில்,
இந்திரனின் சாபம் நீக்கிய தலம் என பல பெருமைகளை தனக்குள் கொண்டு, ஆலயமாக உயர்ந்து நிற்கிறது, திருவள்ளூர் மாவட்டம் அருகே உள்ள அரியத்துறை வரமூர்த்தீஸ்வரர் கோவில். பிரம்மன் உருவாக்கிய ஆரணியாற்றில் ஐந்து ஆலயங்கள் தோன்றின.
அவற்றில் ரிஷிகளும், முனிவர்களும், மகான்களும் தவம் இயற்றினர். அவை பஞ்சபிரம்மத் தலங்கள் எனப் போற்றப்படும் ராமகிரி, சுருட்டப்பள்ளி, ஆரணி, அரியத்துறை மற்றும் பழவேற்காடு கோவிலடி ஆகியவை ஆகும். ரோம மகரிஷி, தான் தவமிருக்க தகுந்த இடத்தினைக் காட்டியருளுமாறு பிரம்மனை வேண்டி நின்றார்.
அதற்கு செவி சாய்த்த பிரம்மன் தன் கையிலிருந்த தர்ப்பையை ஒரு பந்து போல ஆக்கி, அதனை தூக்கி வீசினார். அது உருண்டோடி பிரிந்த இடமே நதியாக உருவாகி ஆரணி நதி என பெயர் பெற்றது. அதன் கரையோரம் ரோம மகரிஷி தவமியற்றிய இடமே அரியத்துறையாகும்.
பலநூறு ஆண்டுகள் தவமியற்றிய ரோம மகரிஷிக்கு, இறைவனும் இறைவியும் காட்சி தந்து வரமளித்தனர். அதன் பின் ரோம மகரிஷி அத்தலத்திலேயே லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபடலானார்.
அது முதல் இறைவன் வரமூர்த்தீஸ்ரர் என அழைக்கப்படுகிறார். அத்திரி முனிவர் – அனுசுயா தம்பதியரின் ஐந்து புதல்வர்களுள், இளையவர் முகுந்தன் ஆவார். இவர் சிவபெருமான் மீது பற்று கொண்டவர்.
காசிக்குச் சென்று கங்கையில் நீராடி, காசி விசுவநாதரைத் தரிசிக்க விரும்பினார். அப்போது அவர் ரோம மகரிஷியை சந்திக்க நேர்ந்தது. முகுந்தன் தனது ஆசையை முனிவரிடம் கூறினார்.
அதற்கு ரோம மகரிஷி, ‘கங்கைக்கு இணையான மகத்துவம் கொண்ட ஆரணி ஆற்றில் குளித்து, அருகேயுள்ள வரமூர்த்தீஸ்வரரை வணங்கினால் போதும். உனக்கு காசிக்கு இணையான புண்ணியம் கிட்டும்’ என்றார்.
முகுந்தனும் அதன்படியே செய்ய, அங்கே சிவபெருமான் காட்சி தந்தார். மேலும் பைரவரும் அவரின் பின்னே கங்கையும் தோன்றினர். அப்போது கங்கையிடம் இருந்து நீர் சுரந்து ஆரணியாற்றில் கலந்தது.
இந்த அதிசயத்தைக் கண்ட முகுந்தன் ‘அரியத்துறை! அரியத்துறை!’ என கூவி மகிழ்ந்தார். அதுமுதல் இவ்விடம் அரியத்துறை என்றே வழங்கப்படுகிறது. அரிய என்பதற்கு ‘அரிதான’ என்பதும், துறை என்பதற்கு ‘ஆற்றில் குளிக்கும் இடம்’ என்பதும் பொருளாகும்.
இதற்குச் சாட்சியாக இந்த கங்கையின் காசித் தீர்த்தம் இன்றளவும் சிவாலயத்தின் பின்புறம் காணப்படுகிறது. அதனைக் கவுரவிக்கும் வகையில் தற்போது தனி மண்டபமும் எழுப்பப்பட்டுள்ளது.
ஆற்றில் நீர் இல்லாத நிலையிலும், ஆற்றின் கரை மீதுள்ள இத்தீர்த்தம் தொடர்ந்து நீரை சுரந்து கொண்டே இருப்பது, அதிசயமான நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்த சித்திரசேனன் என்ற மன்னனுக்கு முதலில் ஐந்து குழந்தைகள் பிறந்து இறந்து விட்டன. பிறகு நான்கு குழந்தைகள் பிறந்து, அவைகளும் இறந்து விட்டன.
இதனால் மனம் வெறுத்த மன்னன் ஆட்சியை ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு தன் மனைவியுடன் வெளியேறினான். அப்போது அங்கே நந்தவனத்தில் கொடிகளின் மீது மரகத ஒளி வீசிய குழந்தை ஒன்று சிரித்த முகத்துடன் கைகால்களை உதைத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் விளையாடிக் கொண்டிருந்தது.
அதைக் கண்ட சித்திரசேனனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒளிவீசும் இக்குழந்தை வரமூர்த்தீஸ்வரரின் கொடையே என மகிழ்ந்தார். அக்குழந்தையை இரு கரங்களால் தாங்கி மன மகிழ்ச்சியுடன் தன் அரண்மனை திரும்பினான். நாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைந்து, அவனையும் குழந்தையையும் வரவேற்றனர்.
மீண்டும் மன்னர் நல்லாட்சி புரியத் தொடங்கினார். அப்பெண் குழந்தைக்கு மரகதவல்லி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான். மரகதவல்லி திருமண வயதை அடைந்தாள்.
சுயம்வரம் நடத்த அனைத்து மன்னர் களுக்கும் ஓலை அனுப்பினான். சுயம்வரம் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஒளிவீசும் அழகு பொருந்திய ஆண்மகன் ஒருவன் குதிரையில் வந்து மரகதவல்லியின் கரம் பற்றி தன் குதிரையில் ஏற்றி தப்பி ஓடினான்.
உடனே மன்னன் தன் படை வீரர்களை ஏவி அவனைப் பிடிக்க ஆணையிட்டான். ஆனால், எவரும் எவரையும் பிடித்ததாகத் தகவல் இல்லை. மனம் வருந்திய மன்னன் வரமூர்த்தீஸ்வரர் ஆலயம் சென்று மனமருகி வேண்டி நின்றான்.
மக்களும் அவன் பின்னே சென்றனர். அப்போது வானில் மரகதவல்லியோடு, வரமூர்த்தீஸ்வரர் வானில் காட்சி தந்தார். ‘உனக்கு மகப்பேறு தரவே யாம் எம் துணைவியை உனக்கு மகளாக அனுப்பி வைத்தோம்.
இப்போது இவளுக்கு நீ தந்தை என்ற நிலையை அடைந்து விட்டாய். இனி இவளை நான் துணையாக ஏற்கின்றேன்’ எனக் கூறினார். மன்னன் உட்பட அனைவரும் மனம் மகிழ்ந்தனர். அன்னை மரகதவல்லி யும் அத்தலத்தில் நிலைத்து நின்று அருள் வழங்கி வருகின்றார்.
பாரிஜாத மரத்தின் சாபத்தால், அரச மரமாக மாறிய கண்ணன், அரியத்துறையில் ஆயிரம் ஆண்டுகள் தவமிருந்து சாபம் நீங்கப் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது.
அதற்குச் சாட்சியாக பிரம்மாண்ட அரச மரமும், அதன் அடியில் ரோம மகரிஷியின் சன்னிதியும் ஆலயத்தின் அருகில் அமைந்துள்ளன. இதனை மூன்று முறை வலம் வருவோருக்கு தோஷமும், சாபமும் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
கிழக்கில் சிறிய வாசலும், தெற்கே பெரிய நுழைவு வாசலையும் கொண்டு ஆலயம் விளங்குகிறது. ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகர் சன்னிதி, தென்கிழக்கில் மடப்பள்ளி மற்றும் யாகசாலை, இதன் எதிரே கல்யாண மண்டபம் ஆகியன அமைந்துள்ளன.
பஞ்சகோட்டம் கொண்ட கருவறைச் சுவரில், நின்ற நிலையில் விநாயகர், நாகத்தின் தலை மீது முட்டியை வைத்துள்ள அபூர்வ தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, அதன் கீழ் சண்டிகேசுவரர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.
ஆலய அமைப்பு :
கருவறையின் பின்புறம் பாலசுப்பிரமணியரும், கிழக்கே கொடிமரம், பலிபீடம், எளிய வடிவில் நந்திதேவர் ஆகியோரும் காட்சி தருகின்றனர். இதன் வலதுபுறம் சுயம்பு பைரவர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்.
இதில் மண்ணால் ஆன சுயம்பு பைரவர் மற்றும் சிலா வடிவ பைரவர் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆலயத்தின் தென்புற வாசலில் நுழைந்ததும், எதிரே அன்னை மரகதவல்லி எளிய வடிவில் எழிலான கோலத்தில் அருளாட்சி செய்து வருகின்றாள்.
அதன் அருகே நடராஜர் சன்னிதி அமைந்துள்ளது. இதில் அன்னை சிவகாமியுடன் மாணிக்கவாசகர், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதர் வடிவங்கள் உற்சவமூர்த்திகளாகக் காட்சி தருகின்றன.
இதுதவிர, திருமணஞ்சேரியின் வடிவத்தை ஒத்த கல்யாண சுந்தரேஸ்வரர், சோமாஸ்கந்தர் ஆகிய உற்சவ மூர்த்திகளும் உள்ளன. கோவிலின் நாயகர் வரமூர்த்தீஸ்வரர், கிழக்கு முகமாய் எளிய வடிவில் சதுர வடிவ ஆவுடையாராக காட்சி தருகின்றார்.
அரியத்துறையில் எண்ணற்ற திருவிளையாடல்கள் நிகழ்த்திவிட்டு, எதுவும் அறியாதவர் போல இறைவன் அமர்ந்திருப்பது, நம்மை வியக்க வைக்கிறது. இந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் இந்த ஆலயம் காலை 7 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அமைவிடம் :
சிறப்புமிக்க அரியத்துறை, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுகாவில், கவரைப்பேட்டை என்ற இடத்திற்கு மேற்கு பகுதியில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
சென்னை சென்ட்ரல் – கும்மிடிப்பூண்டி ரெயில் வழித்தடத்தில் கவரைப்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கி, ஆட்டோ மூலம் அரியத்துறை செல்லலாம். பஸ் வசதி இல்லை என்பதால், கவரைப்பேட்டையில் இறங்கி ஆட்டோ மூலம் மட்டுமே செல்ல முடியும்.
சென்னையில் காமக் கோடி பரமாச்சாரியார் பேரருளோடு, அலைகடல் அன்னைக்கு மிக அற்புதமான ஆலயம் அலைகடல் ஓரம் கட்டப்பட்டுள்ளது. இந்தக்கோவில், திருவான்மியூருக்கு அருகிலுள்ள ஓடைக் குப்பம் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
இந்திருக்கோவிலில் அஷ்ட லட்சுமிகளும் அருளை வாஷிக்கும் ஆனந்த ரூபிணியர்களாக காட்சி தருகிறார்கள். கடலை நோக்கி மகாலட்சுமியும், ஸ்ரீமந் நாராயணனும் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ளார்கள்.
இவர்களைத் தரிசித்து விட்டு பிரதஷணமாக வந்தால், தெற்கே ஆதிலட்சுமி மேற்கில் தானிய லட்சுமி வடக்கில் தைரிய லட்சுமி மூவரையும் தரிசிக்கலாம். மீண்டும் மகாலட்சுமி சந்நிதிக்குள் சென்று இடது கைப்பிடிக்கட்டுகள் வழியாக இரண்டாவது தளத்துக்குச் செல்லலாம்.
இந்தத் தளத்தில் கிழக்கு நோக்கி கஜலட்சுமி, தெற்கு நோக்கி சந்தான லட்சுமி, மேற்கு நோக்கி விஜயலட்சுமி, வடக்கு நோக்கி வித்யா லட்சுமி காட்சி தருகிறார்கள். அங்கேயிருந்து மூன்றாவது தளத்திற்குச் செல்லலாம்.
அங்கே கிழக்கே பார்த்தபடி தனலட்சுமியைத் தரிசிக்கலாம். ஒன்றன் மேல் ஒன்றாக மூன்று தளங்கள் இருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு. இந்த ஆலயத்தில் சங்க நிதிக்கும், பதும நிதிக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மற்றொரு விசேஷம் இக்கோவிலில் குருவாயூரப்பனுக்கும், ஆஞ்சநேயருக்கும், கணபதிக்கும் தனித் தனியே சந்நதிகள் அமைந்துள்ளன.
நாச்சியார் கோவில் :
கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் மார்க்கத்தில் நாச்சியார் கோவில் என்னும் தலம் உள்ளது. அங்கு எம்பெருமான் இரண்டு திருக்கரங்களுடன் வஞ்சுளவல்லி தாயாருடன் அருட்காட்சி தருவது மிகவும் விசேஷமாகும்.
துறையூர் :
துறையூருக்குச் செல்லும் பாதையில் திருவெள்ளறை என்னும் திருத்தலம் அமைந்துள்ளது. தாயார் தவம் செய்து பெரும் பேறு பெற்ற திருத்தலம். பெருமானின் திருநாமம் புண்டரீகாஷன். இத்திருக்கோவிலில் தாயாருக்குத்தான் முதலில் பூஜை நடைபெறும். இக்கோவிலைச் சேர்ந்த சுவாமி புஷ்கரணி ஸ்வஸ்திகா வடிவில் அமைந்திருப்பது மிக்க சாந்நித்யம் உடையதாகும்.
தலச்சங்காடு (மாயவரம்) :
மாயவரம் தரங்கம்பாடி வழிதடத்தில் உள்ள தலைச்சங் காடு என்ற திருத்தலத்தில் தாயார் தலைச்சங்க நாச்சியார் செங்கமலவல்லி என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலத்துடன் காட்சி தருகிறாள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் :
பிராட்டியாரின் அவதாரமான கோதை நாச்சியார் ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் திருவிடத்தில் வடபத்திர சாயியான பெருமானுடன் ஆண்டாளாக இருந்து அருள்பாலிக்கிறாள்.
திருக்கண்ணமங்கை :
திருவாரூருக்கு அடுத்துள்ள கண்ண மங்கையில் தாயார் அபிஷேகவல்லி என்ற திருநாமத்துடன் கோவில் கொண்டுள்ளாள். இங்கு தாயார் சந்நிதிக்குள் ஒரு பெரிய தேன்கூடு இருப்பதைக் காணலாம். இக்கூடு பல்லாண்டு காலமாக இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
முனிவர்கள் தேனீ ரூபத்தில் இருந்து தாயாரையும் பெருமாளையும் சேவிப்பதாகக் கூறுகிறார்கள். திருவாரூரில் ஸ்ரீலட்சுமியின் மற்றொரு ஆலயம் உள்ளது. இக்கோவிலின் தலவிருஷமான புன்ன புரத்தடியில் தாயார் அவதாரம் செய்துள்ளார் என்பது ஐதிகம். புன்னைப் பிராட்டியார் என்பது திருநாமம்!
பிச்சாண்டார் கோவில் :
திருச்சிக்கு அருகே பிச்சாண்டார் கோவிலில் தாயாரைச் சேவிக்கலாம். இங்குள்ள தாயாருக்கு பூரணவல்லி என்று திருநாமம். இக்கோவிலுள்ள மும்மூர்த்திகளுக்கும் சந்நிதிகள் உண்டு.
சிவபெருமான் கபாலம் ஏந்தி பிசைக்கு வந்த போது முதலில் தாயார் பிசை இட்டார் என்றும் அதனால் அவரது கபாலம் நிரம்பி வழிந்தது என்பதும் இத்திருக்கோவிலின் சிறப்பைச் சொல்லும் புராண வரலாறாகும்.
லால்குடி :
தற்போது லால்குடி என்று அழைக்கப்படும் திருவத்துறை என்னும் இத்தலத்தில் தாயார் எம்பெருமானைத் தவமிருந்து கணவராகப் பெற்றார் என்பது புராணமாகும்.
நாமக்கல் :
நாமக்கல் என்னும் தலத்தில் தவமிருந்து விஷ்ணுவை அடைந்தார் தாயார்! இத்தலத்தில் தாயாருக்கு ஹரி என்று திருநாமம். இங்கு தாயாருக்கு, நாயகரான நரசிம்ம சுவாமியை விட சிறப்பு அதிகம்.
திருக்கண்ணபுரம் :
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திருக்கண்ணபுரத்தில் எம்பெருமாளுக்கு நான்கு தேவியர்கள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆண்டாள், பத்மினி என்பவர் ஆவர். பத்மினி தாயார், “வலைய நாச்சியார்” என்று அழைக்கப் படுகிறார்கள்.
கர்ப்பக் கிரகத்தில் எம்பெருமான் சௌரிராஜன் என்ற கோலத்துடன் எழுந்தருளுகிறார். நான்கு தேவியரும் இருவர்கள் ஒரு பக்கமாக எழுந்தருளி உள்ளனர்.
ஆனால், அந்த அம்மனே நேரில் வந்தால் எப்படி இருக்கும்? அப்படி நடந்த சம்பவம் தான் இது. சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அது.
கோவில் தல வரலாறு :
ஒரு பக்தர். அவருக்கு சகலமும் தையல் நாயகி அம்மன் தான். அந்த அம்மன் மேல் தீராத பக்தி கொண்டவர். தையல் நாயகி அம்மனை தரிசிக்க வாரம் தவறாமல் வைத்தீஸ்வரன் கோவில் சென்று வருவார்.
அவருக்கு ரெயில்வேயில் என்ஜின் டிரைவராகப் பணி. திருச்சியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவர் மனதில் எப்போதும் அன்னை தையல் நாயகியின் நினைவுதான். ஒருநாள் பணியில் இருந்த அவர் ரெயிலை ஓட்டிக் கொண்டிருந்தார்.
என்ஜின் ஓரம் அமர்ந்து, எதிரே உள்ள ரெயில் பாதையைப்பார்த்துக் கொண்டே ரெயிலை ஓட்டிக் கொண்டிருந்தார் அந்த பக்தர். ரெயில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.
அப்போது எதிரே சற்று தொலையில் தண்டவாளத்தின் அருகே, யாரோ நிற்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. ரெயிலின் வேகத்தைக் குறைத்தார். தண்டவாளத்தின் அருகே ஒரு சிறுமி, சிவப்பு துணி ஒன்றை கையில் வைத்து அசைத்தப்படி நின்று கொண்டிருந்தாள்.
பகீரென்றது அவருக்கு. அவசர அவசரமாக ரெயிலை நிறுத்தினார். அந்தச் சிறுமியின் அருகே வந்ததும் ரெயில் நின்றது. உடன் கீழே இறங்கினார் அவர். அந்தச் சிறுமி நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகே, தண்டவாளம் உடைந்து வளைந்து அலங்கோலமாகக் கிடந்தது.
ரெயில் நின்றதும் பயணிகள் பலரும் என்னவோ, ஏதோ என்று பதறியபடி இறங்கி ஓடிவந்தனர். நடக்க இருந்த விபரீதம் அனைவருக்கும் புரிந்தது. ரெயில் அந்த இடத்தை கடந்திருந்தால் பல பெட்டிகள் கவிழ்ந்திருக்கும்.
பல உயிர்கள் பலியாகியிருக்கும். கூட்டத்தினர் டிரைவரின் சாமர்த்தியத்தை பாராட்டினர். மனதாரப் புகழ்ந்தனர். டிரைவர் இந்த விபத்து தவிர்க்கப்பட காரணமான அந்தச் சிறுமியை கூட்டத்தில் தேடினார். ஆனால் அந்தச் சிறுமியை காணோம்.
கூடியிருந்த கூட்டத்தை விலக்கிக் கொண்டு, சுற்றிலும் தேடியும் காணவில்லை. டிரைவருக்கு ஏதும் புரியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது. ‘நான் வேறு யாருமில்லை. நீ வணங்கும் தையல் நாயகிதான்’ என்றாள். மனம் சிலிர்த்த அந்த டிரைவர் கண்ணீர் வடித்தார்.
கரங்கூப்பி அந்தச் சிறுமியை, இல்லை.. இல்லை.. தான் தினமும் வழிபடும் தையல் நாயகியை வணங்கினார். ‘தாயே நான் என்ன செய்ய வேண்டும் சொல்’ என்றார்.
‘எனக்கு இங்கே ஓர் ஆலயம் கட்டு’ என்றாள் சிறுமியின் உருவில் இருந்த அம்மன். ‘அப்படியே செய்கிறேன் தாயே. ஒரு சிலை செய்து உன்னை இங்கே பிரதிஷ்டை செய்து ஆலயம் கட்டுகிறேன்’ என்றார் அந்த பக்தர்.
அம்மன் பிரதிஷ்டை :
ஆனால் அம்மனோ, நீ சிலை செய்ய வேண்டாம் என்றாள். ‘எனக்காக, நீ சிலை செய்யவேண்டாம். நேராக மாட்டு வண்டியில் கொல்லிமலை செல். போகும் போது உன்னுடன் நெல் மூட்டையை எடுத்துச் செல்.
அங்குள்ள சித்தரிடம் பணத்திற்கு பதில் நெல் மூட்டையைக் கொடு. அவர் தரும் சிலையை உன்னுடன் வண்டியில் கொண்டு வா. வரும் வழியில் உன் மாட்டு வண்டியின் அச்சு முறியும்.
எந்த இடத்தில் அச்சு முறிகிறதோ, அதே இடத்தில் என்னை பிரதிஷ்டை செய்’ என்று சொன்ன சிறுமி மறைந்தாள். அவர் கனவு கலைந்தது. மறுநாளே கொல்லிமலைக்குப் புறப்பட்டார். அந்தச் சிறுமி சொன்னபடியே எல்லாம் நடந்தது.
வனப்பகுதியாக இருந்த ஒரு இடத்தில் அச்சு முறிந்தது. அந்த இடத்தில் அம்மனை பிரதிஷ்டை செய்து, தகரக் கொட்டகையில் ஆலயம் அமைத்தார். அந்த ஆலயமே, தற்போது அரியமங்கலத்தில் உள்ள அருள்மிகு தையல்நாயகி அம்மன் ஆலயம் ஆகும்.
ஆலய அமைப்பு :
ஆரம்பத்தில் தகரக் கொட்டகையாக இருந்த ஆலயம், தற்போது அழகான ஆலயமாக கட்டப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனைத்து வசதிகளுடன் காணப்படுகிறது. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது.
முகப்பைத் தாண்டியதும் மகாமண்டபம். அர்த்த மண்டபம் நுழை வாசலின் இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகப்பெருமான் வள்ளி– தெய்வானையுடனும் அருள்பாலிக்கின்றனர். மகாமண்டப தென் திசையில் துர்க்கை அருள்பாலிக்கிறாள்.
அடுத்துள்ள கருவறையில் அன்னை தையல்நாயகி நான்கு கரங்களுடன் புன்னகை தவழும் இன்முகத்துடன் காட்சி தருகிறாள். அன்னையின் மேல் இரு கரங்களில் தாமரை மலரைத் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் அருள்புரிகிறாள்.
அன்னையின் தேவக் கோட்டத்தின் வடபகுதியில் ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. ஆலயத்தின் வலதுபுறம் அருள்மிகு வைத்தீஸ்வரன் தனிக்கோவிலில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
இறைவனின் முன் மகாமண்டபத்தில் நந்தியும், பலி பீடமும் அமைந்துள்ளன. மகாமண்டபத்தின் கீழ் திசையில் கால பைரவரும், தெற்கில் சைவக் குறவர்கள் நால்வரும் அருள்பாலிக்க, தேவக் கோட்டத்தின் தெற்கில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கிறார்.
வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேசுவரருக்கு தனிச் சன்னிதி உள்ளது. கோவிலின் தென் திசையில் நாகம்மாவுக்கும், கருப்பண்ணசாமிக்கும் தனித்தனிச் சன்னிதிகள் இருக்கின்றன.
சிறப்பு பூஜைகள் :
நாகம்மாவுக்கு நாகபஞ்சமி மற்றும் ராகு பெயர்ச்சி நாட்களில், விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ராகு தோஷ பாதிப்பு உள்ளவர்கள் இந்த சன்னிதிக்கு வந்து அபிஷேக ஆராதனைகள் செய்து பலன் பெறுகின்றனர்.
தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. விநாயக பெருமானுக்கு, விநாயகர் சதுர்த்தி மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாட்களிலும், முருகப்பெருமானுக்கு சஷ்டியின் போதும் பக்தர்கள் திரளாக வந்து ஆராதனைகளில் பங்குபெறுகின்றனர்.
துர்க்கை அம்மனுக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், ராகு கால நேரத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. சித்ரா பவுர்ணமி அன்று ஆலயம் விழாக்கோலம் பூண்டிருக்கும்.
அன்று காவேரியில் இருந்து 100–க்கும் மேற்பட்டோர் பால் குடம், தீர்த்த குடம், காவடிகளுடன் அன்னையின் சன்னிதிக்கு வருவார்கள். இரவு அன்னைக்கு பால் அபிஷேகம் உள்பட பல அபிஷேக ஆராதனைகள் நடந்து, அன்னைக்கு வெள்ளி அங்கி சாத்துவார்கள். அன்று இரவு நடைபெறும் அன்னதானத்தில் சுமார் 1500 பேர் கலந்து கொள்வார்கள்.
பாதயாத்திரை :
ஆலயத்தின் வளாகம் மிகவும் விஸ்தாரமானது. சபரிமலை, வைத்தீஸ்வரன் கோவில், பழனி முதலிய புண்ணிய தலங்களுக்கு இந்த வழியாக பாத யாத்திரை செல்வோர், பகல் நேரங்களில் இங்கு வந்து தங்கி இளைப்பாறிச் செல்கின்றனர்.
காலை 7 முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும். தினசரி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கும் இந்த ஆலயத்தில் சூடம் பயன்படுத்துவது கிடையாது.
தீபம் மட்டுமே. நோய்களை குணமாக்கி தருவதிலும் சொத்துப் பிரச்சினைகள், தடைபட்ட திருமணம், குழந்தை பேறு போன்ற அனைத்து குறைகளையும் தீர்த்து வைப்பதில் அன்னை தையல்நாயகிக்கு நிகரில்லை என பக்தர்கள் உளமார நம்புவது உண்மையே!
ஆடி வெள்ளிக்கிழமைகளில் தையல்நாயகி அம்மனுக்கு நடக்கும் விசேஷ ஆராதனைகளில் நிறைய பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அன்னையை தினமும் விதம் விதமாக அலங்கரிப்பார்கள்.
இந்த அலங்காரத்தைக் காணவே ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மாத பவுர்ணமி நாட்களில் மாலையில் அன்னையின் சன்னிதியில் நடைபெறும் கும்ப பூஜை இங்கு மிகவும் பிரபலம். மூன்று கலசம் அமைத்து, அதில் மஞ்சள் கலந்த நீரை நிரப்பி பூஜை செய்வார்கள்.
பூஜை முடிந்தபின் அந்த கலச நீரை தீர்த்தமாக பக்தர்களுக்குத் தருவார்கள். அந்த தீர்த்த நீரைக் கொண்டு போய், வீட்டிலும், வியாபார நிலையங்களிலும் தெளித்தால் கண் திருஷ்டி, ஏவல் போன்றவை விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பிரார்த்தனைகள் :
உடல் சரும நோய்கள் நீங்க, ஆலயத்தின் மகாமண்டபத்தில் உள்ள தனி இடத்தில் பக்தர்கள் உப்பு, மிளகு காணிக்கை செலுத்துகின்றனர். உடம்பில் கட்டி ஏதாவது வந்தால், அன்னைக்கு வெல்லக் கட்டிகளை காணிக்கை செலுத்துகின்றனர்.
இவ்வாறு 5 செவ்வாய்க்கிழமைகள் பிரார்த்தனை செய்தால், பாதிக்கப்பட்டவர்கள் பூரண குணம் பெறுவது நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள். இந்த பிரார்த்தனைப் பொருட்களை நிர்வாகத்தினர் அவ்வப்போது காவிரிக்கு கொண்டுபோய் நீரில் கரைத்து விடுகின்றனர்.
குழந்தை பேறு வேண்டுவோர் நாகம்மா சன்னிதியில் இருக்கும், அரச மரத்தில் தொட்டில் கட்ட அவர்கள் பிரார்த்தனை நிறைவேறுகிறதாம். திருமணத்தடை உள்ளவர்கள் அன்னைக்கு அபிஷேகம் செய்து தாலி காணிக்கை செலுத்துகின்றனர். தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் அன்னைக்கு புடவை வாங்கி சாத்தி தங்கள் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.
போக்குவரத்து வசதி :
திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் தஞ்சை செல்லும் சாலையில் உள்ள அரியமங்கலத்தில் இத்திருத்தலம் அமைந்திருக்கிறது. தஞ்சாவூர், துவாக்குடி, பெல் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் இந்த ஆலயம் வழியே செல்லும். ஆட்டோ வசதியும் உண்டு.
நான் இங்கிலாந்தில் இருந்த இரண்டாம் ஆண்டின் இறுதியில் பிரம்மஞான சங்கத்தைச் சேர்ந்த சகோதரர்களுடன் எனக்குப் பழக்கம் உண்டாயிற்று. அவர்கள் இருவரும் மணம் ஆகாதவர்கள். அவர்கள் கீதையைக் குறித்து என்னிடம் பேசினர். ஸர் எட்வின் அர்னால்டு மொழி பெயர்த்திருந்த கீதையை அவர்கள் படித்துக் கொண்டிருந்தனர். அசல் நுலைத் தங்களுடன் சேர்ந்த படிக்க வருமாறு என்னை அழைத்தார்கள். அத்தெய்வீக நுலைச் சமஸ்கிருதத்திலோ, குஜராத்தியிலோ நான் படித்ததில்லையாகையால் எனக்கு வெட்கமாகி விட்டது. நான் கீதையைப் படித்ததேயில்லை. ஆனால், அவர்களோடு சேர்ந்து மகிழச்சியுடன் அதைப் படிப்பேன் என்பதை நான் அவர்களிடம் சொல்லியாக வேண்டியதாயிற்று. சமஸ்கிருதத்தில் எனக்கு இருந்த ஞானம் சொற்பமேயாயினும், மொழிபெயர்ப்பு எந்த இடத்தில் அதன் பொருளைச் சரியாகக் கொண்டுவரத் தவறியிருக்கிறது என்பதைக் கூறும் அளவுக்கு மூலநு}ல் எனக்கு விளங்கும் என்றும் அவர்களிடம் சொன்னேன். அவர்களோடு சேர்ந்து கீதையைப் படிக்க ஆரம்பித்தேன். அதன் இரண்டாவது அத்தியாத்தில் காணும் சில சுலோகங்களின் கருத்து இது.
இந்திரிய விசயங்களைத் தியானிக்கிற மனிதனுக்கு
அவற்றினிடம் பற்றுதல் உண்டாகிறது.
பற்றுதலிலிருந்து ஆசை உண்டாகிறது,
ஆசையிலிருந்து குரோதம் வளர்கிறது
குரோதத்திலிருந்து மனக்குழப்பம் உண்டாகிறது,
குழப்பத்திலிருந்த நினைவின்மையும்
நினைவின்மையிலிருந்து புத்தி நாசமும் உண்டாகின்றன
புத்தி நாசத்தினால் மனிதன் அழிந்துபோகிறான்.
இந்தச் சுலோகங்கள் என் மனத்தில் ஆழப் பதிந்தன. அவை இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. அந்நூல் விலை மதிப்பைக் கடந்த மாணிக்கமாக எனக்குத் தோன்றியது. அதிலிருந்து இந்தக் கருத்து எனக்கு வலுப்பட்டுக்கொண்டே வந்தது இதன் பலனாக, சத்தியமான ஞானத்தைப் போதிக்கம் மிகச் சிறந்த நூல் இது என்று நான் எண்ணி வருகிறேன். எனக்கு மனச் சஞ்சலங்கள் ஏறு;படும் சமயங்களில் இந்நூல் மதித்தற்கரிய உதவியாக இருந்திருக்கிறது. அநேகமாக கீதையின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் எல்லாவற்றையும் படித்திருக்கிறேன். அவற்றிற்கெல்லாம் ஸர் எட்வின் அர்னால்டின் மொழிபெயர்ப்பே மிகச் சிறந்து என்று நான் கருதுகிறேன். மூலத்தின் கருத்து ஒரு சிறிதும் மாறுபடாத வகையில் அவர் மொழி பெயர்த்திருக்கிறார். அது மொழிபெயர்ப்பாகவே தோன்றவில்லை. இந்த நண்பர்களடன் சேர்ந்து, அப்பொழுது கீதையை நான் படித்த போதிலும் அதைத் தீரக் கற்றேன் என்று நான் பாசாங்கு செய்வதற்கில்லை. சில ஆண்டுகள் சென்ற பின்னரே நான் தினந்தோறும் கீதையைப் படிக்கலானேன்.
ஸர் எட்வின் அர்னால்டு எழுதிய, ஆசியாவின் ஜோதி என்ற நூலையும் படிக்கும்படி அச்சகோதரர்கள் என்னிடம் கூறினார். பகவத் கீதையின் மொழிப்பெயர்ப்பாளர்கள் என்று மாத்திரமே ஸர் அர்னால்டை அதுவரையில் எனக்குத் தெரியும். பகவத் கீதையையும்விட இன்னும் அதிகக் கவனத்துடன் அந்நூலைப் படித்தேன். படிக்கக் கையில் எடுத்துவிட்டால் பிறகு அதைக் கீழே வைத்துவிட முடிவதில்லை. அச்சகோதரர்கள் ஒரு சமயம் என்னைப் பிளாட்வட்ஸ்கி விடுதிக்கு அழைத்து சென்று, பிளாவட்ஸ்கி அம்மையாரையும் ஸ்ரீமதி பெஸன்டையும் எனக்கு அறிமுகம் செய்து வைத்தனர். ஸ்ரீமதி பெஸன்ட் அப்பொழுதுதான் பிரம்மஞான சங்கத்தில் சேர்ந்திருந்தார். அவர் இவ்விதம் மாறிவிட்டதைக் குறித்த நடந்து வாதப் பிரதிவாதங்களைச் சிரத்தையுடன் கவனித்து வந்தேன். இச்சங்கத்தில் சேரும்படி நண்பர்கள் எனக்கும் யோசனை கூறினர். என் மதத்தைப் பற்றியே நான் இன்னும் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் இருக்கும்போது மத சம்பந்தமான எந்த ஒரு ஸ்தாபனத்திலும் சேர நான் விரும்பவில்லை என்று மரியாதையுடன் கூறி மறுத்துவிட்டேன். அந்தச் சகோதரர்கள் சொன்னதன் பேரில் பிளாவட்ஸ்கி அம்மையார் எழுதிய, பிரம்மஞானத் திறவு கோல் என்னும் நூலை நான் படித்தாகவும் எனக்கு நினைவு இருக்கிறது. ஹிந்து சமயத்தைப் பற்றிய நூல்களைப் படிக்கும் ஆர்வத்தை இந்நூல் எனக்கு ஊட்டியது ஹிந்து சமயத்தில் மூடநம்பிக்கைகளே மலிந்து கிடக்கின்றன என்று பாதிரிகள் செய்த பிரச்சாரத்தினால் எனக்கு உண்டாகியிருந்த தவறான எண்ணத்தையும் இந்நூல் போக்கியது.
அதே சமயத்தில் மான்செஸ்டரிலிருந்து வந்த ஓர் உத்தமமான கிறிஸ்தவரை சைவ உணவு விடுதி ஒன்றில் நான் சந்தித்தேன். கிறிஸ்தவத்தைப் பற்றி அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். ராஜ;கோட்டில் கிறிஸ்தவ் பாதிரிமார் நடத்தி வந்த பிரச்சாரத்தைக் குறித்த என்னுடைய பழைய நினைவுகளை அவரிடம் கூறினேன். அதைக் கேட்டு, அவர் மனவேதனை அடைந்தார் நான் சைவ உணவ மாத்திரமே சாப்பிடுபவன், மதுபானமும் அருந்துவதில்லை. கிறிஸ்தவர்கள்அநேகர் மாமிசம் சாப்பிடுகிறார்கள், குடிக்கிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் மது, மாமிசம் சாப்பிடும்படி எங்கள் வேதம் சொல்லவில்லை, தயவு செய்து பைபிளைப் படியுங்கள் என்றார். அவருடைய யோசனையை ஏற்றுக் கொண்டேன், அவர் எனக்குப் பைபிள் பிரதி ஒன்றும் வாங்கிக்கொடுத்தார். அவரே பைபிள் பிரதிகளை விற்று வந்ததாகவும், படங்கள், அரும்பத் அகராதி முதலிய விளக்கங்கள் அடங்கிய ஒரு பைபிள் பிரதியை அவரிடம் நான் வாங்கியதாகவும் எனக்குக் கொஞ்சம் நினைவிருக்கிறது அதைப் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் பழைய ஏற்பாட்டைப் படித்துக் புரிந்துகொள்ள என்னால் இயலவல்லை. ஆதி ஆகமத்தையும் அதையடுத்த அத்தியாயங்களையும் படிக்க ஆரம்பித்ததுமே எனக்குத் தூக்கம் வந்துவிடும். ஆனால், பைபிளைப் படித்திருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ள இயலவேண்டும் என்பதற்காகச் சிரமத்தோடேயே மற்றப் பகுதிகளையும் மேலெழுந்தவாரியாகப் படித்து முடித்தேன். அதில் எனக்கு கொஞ்சமும் சிரத்தை ஏற்படவில்லை, எனக்கு அது விளங்கவும் இல்லை. எண்ணாகமம் என்ற பகுதியைப் படிப்பதற்கே எனக்கு வெறுப்பாக இருந்தது.
ஆனால் புதிய ஏற்பாட்டைப் படித்தபோது எனக்கு முற்றும் மாறான உணர்ச்சி ஏற்பட்டது. முக்கியமாக மலைப்பிரசங்கம் நேரடியாகவே என் உள்ளத்தைக் கவர்ந்துவிட்டது. அதைக் கீதையுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். தீமைக்குப் பதிலாகத் தீமையைச் செய்யாதே என்று உங்களுக்குக் கூறுகிறேன். உன்னை வலது கன்னத்தில் யாராவது அறைந்தால் மற்றொரு கன்னத்தையும் திரப்பிக் காட்டு. எவனாவது உன் சட்டையை எடுத்துக் கொண்டுவிட்டானாயின் உன் போர்வையையும் அவனுக்குக் கொடு என்பன போன்ற உபதேசங்கள் எனக்கு அளவு கடந்த ஆனந்தத்தை அளித்தன. உண்ணும் நீர் தந்த ஒருவனுக்குத் கைம்மாறாய் விண்ணமுதத்தைப் போல் அன்னம் விரும்பிப் படைத்திடுவாய் என்ற ஷாமல்பட்டின் பாடல் உடனே என் நினைவுக்கு வந்தது கீதை, ஆசிய ஜோதி மலைப்பிரசங்கம் ஆகிய மூன்றும் ஒன்றே என்று கருத என் இளம் மனம் முயன்றது. துறவே, சமயத்தின் தலைசிறந்த அம்சம் என்பது என் மனத்தை மிகவும் கவர்ந்தது.
இவைகளைப் படித்ததனால் மற்றச் சமயாசாரியர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் படிக்கவேண்டும் என்ற பசி எனக்கு உண்டாக்கிவிட்டது. கார்லைல் எழுதிய, வீரர்களும் வீரர் வழிபாடும் என்ற நூலைப் படிக்குமாறு ஒரு நண்பர் கூறினார். வீரனைத் தீர்க்கதரிசியாகக் கூறும் அத்தியாயத்தைப் படித்து, முகமது நபியின் பெருமையையும் வீரத்தையும் எளிய வாழ்க்கையையும் பற்றித் தெரிந்துகொண்டேன்.
பரீட்சைக்குப் படிக்க வேண்டியிருந்தது. மற்ற வெளி விஷயங்களைக் குறித்துப் படிக்க நேரம் கிடைப்பதே இல்லை. ஆகையால் சமயங்களைப் பற்றி இன்னும் அதிகமாக நான் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், சமய நூல்களை இன்னும் அதிகமாகப் படிக்க வேண்டும் என்று என் மனத்திற்குள் முடிவு செய்து கொண்டேன்.
நாத்திக வாதத்தைக் குறித்து நான் ஒரு சிறிதும் தெரிந்து கொள்ளாமல் இருப்பது எப்படி ? பிராட்லாவின் பெயரையும் நாத்திகம் என்று கூறப்படும் அவர் வாதத்தையும் ஒவ்வோர் இந்தியரும் அறிவர் அதைக் குறித்து ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்தேன். அதன் பெயரை மறந்துவிட்டேன். அதற்கும் முன்னாலேயே நாத்திகம் என்ற பாலைவனத்தைக் கடந்து விட்டேனாகையால், அப்புத்தகம் என் மனத்தை மாற்றிவிடவில்லை. அச்சமயம் ஸ்ரீமதி பெஸண்டின் பெயர் எங்கும் பிரபலமாக இருந்தது. அவர் நாத்திகத்திலிருந்து ஆத்திகத்திற்குத் திரும்பிவிட்டார். நான் பிரம்மஞான சங்கத்தில் சேர்ந்தது ஏன் ? என்று அவர் எழுதியிருந்த நூலையும் படித்தேன்.
ஏறக்குறைய அந்தச் சமயத்தில்தான் பிராடலா காலமானார். அவர் சடலத்தை வோகிங் கல்லறையில் அடக்கம் செய்தனர். இச்சவ அடக்கச் சடங்கிற்கு நானும் போயிருந்தேன். லண்டனில் இருந்த இந்தியர் எல்லோருமே அதற்குச் சென்றிருந்தனர் என்று நம்புகிறேன். அவருக்குக் கடைசி மரியாதை செய்வதற்காகப் பாதிரிமார் சிலரும் வந்திருந்தனர். அச்சடங்கிலிருந்து திரும்பும்போது ரயிலுக்காக நிலையத்தில் நாங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அப்பொழுது அக்கூட்டத்தில் இருந்த ஒரு தீவிர நாத்திகர், பாதிரிகளில் ஒருவரைக் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்.
சரி கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்கள் அல்லவா ? என்று அவர் கேட்டார்.
ஆம் என்று அடக்கமான குரலில் அந்த நல்ல மனிதர் பதில் சொன்னார்.
இப்பூமியின் சுற்றளவு 28,000 மைல்கள் என்றும் நீங்கள் ஒப்புக் கொள்ளுகிறீர்கள் அல்லவா? என்று அந்த நாத்திகர் தன்னம்பிக்கையுடன் சிரித்துக்கொண்டே கேட்டார்.
ஆமாம் என்றார் பாதிரியார்.
அப்படியானால் உங்கள் கடவுளின் உருவம் என்ன, அவர் எங்கே இருப்பார் என்பதையும் தயவு செய்து சொல்லுங்கள்.
சரி நம்மால் அறிய மாத்திரம் முடிந்தால், அவர் நம் இருவர் உள்ளங்களிலும் வீற்றிருக்கிறார்.
இதோ பாருங்கள் என்னைக் குழந்தை என்று நினைத்துவிட வேண்டாம் என்றார், அத்தீவிரவாதி அதோடு வெற்றிப் பார்வையுடன் எங்களை நோக்கினார்.
பாதிரியாரோ, அடக்கத்துடன் மௌனமாக இருந்து விட்டார். இந்த வாக்குவாதம் நாத்திகத்திடம் எனக்கு இருந்த வெறுப்பை மேலும் அதிகமாக்கி விட்டது.
இக்காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் இங்கிலாந்தில் இந்திய மாணவர்கள் சொற்பமாகவே இருந்தனர். தங்களுக்கு மணமாகியிருந்தாலும் மணமாகதவர்கள்போல் நடித்து வருவது அவர்களிடம் இருந்த பழக்கம் படிப்புக்கு மண வாழ்க்கை ஏற்றதல்ல என்று அங்கே கருதப்படுகிறது ஆகையால், பள்ளிக்கூட அல்லது கல்லு}ரி மாணவர்கள் எல்லோரும் மணமாகாதவர்கள். நம் நாட்டில் சிறந்திருந்த பழங்காலத்திலும் இந்தப் பழக்கமே இருந்தது. அக்காலத்தில் மாணவர்கள் பிரம்மச்சாரிகள் என்றே சொல்லப்பட்டு வந்தனர். ஆனால் இன்றோ குழந்தைப் பருவத்திலேயே விவாகம் செய்து வைத்து விடும் வழக்கம் நம்மிடம் இருக்கிறது. இப்பழக்கம் இங்கிலாந்தில் இல்லவே இல்லை.
ஆகையால் தங்களுக்கு மணமாகிவிட்டது என்று ஒப்புக்கொள்ள இங்கிலாந்தில் இருந்த இந்திய இளைஞர்கள் வெட்கப்பட்டார்கள். இவ்விதம் இவர்கள் பாசாங்கு செய்து வந்ததற்கு மற்றொரு காரணமும் உண்டு. இவர்களுக்கு மணமாகிவிட்டது என்று தெரிந்துவிட்டால், இங்கிலாந்தில் இவர்கள் எந்தக் குடும்பத்தினருடனம் வசிக்கிறார்களோ அக்குடும்பங்களின் இளம்பெண்களுடன் வெளியே உலாவப் போவதும், சல்லாபம் செய்வதும் முடியாது போகும். சல்லாபம் அநேகமாகக் குற்றமற்றதேயாகும். பெற்றோர்களே இதற்கு ஆதரவளிக்கிறார்கள். அந்நாட்டில் ஒவ்வோர் இளைஞனும் தனது வாழ்க்கைத் துணைவியைத் தானே தேர்ந்துகொள்ள வேண்டியவனாகிறான். அப்படியிருப்பதால் வாலிபப் பையன்களும், வாலிபப் பெண்களும் அத்தகைய உறவு கொள்ளுவது அங்கே அவசியமாகக் கூட இருக்கலாம் ஆனால், ஆங்கில இளைஞர்களுக்கு முற்றும் இயற்கையானதாக இருக்கும் இத்தகைய உறவுகளில் இங்கிலாந்துக்கு வந்ததும் இந்திய இளைஞர்கள் ஈடுபட்டு விடுவார்களேயாயின், அதன் முடிவு ஆபத்தில் முடிந்துவிடக்கூடும். அப்படியே ஆகியும் விடுகிறது. நமது வாலிபர்கள், உணர்ச்சி வயப்பட்டுப் போய்ப் பெண்களுடன் தோழமை கொள்ளுவதற்காகக் பொய்யான வாழ்க்கை நடத்தி வருவதைக் கண்டேன்.
இத்தகைய தோழமை ஆங்கில இளைஞர்கள் விஷயத்தில் என்னதான் குற்ற மில்லாததாக இருந்தாலும், இவர்களுக்கு அது விரும்பத்தகாததே. இத்தொத்து நோய் என்னையும் பற்றிக் கொண்டது. எனக்கு மணமாகி, ஒரு குழந்தைக்கும் நான் தந்தையாக இருந்தபோதிலும், மணமாகாதவன் போல் நடித்து வர நானும் தயங்கவில்லை. ஆனால் பாசாங்கு செய்பவனாக இருந்தது எனக்கு இன்பமாயும் இல்லை. எனக்கு இருந்த கூச்சமும் அடக்கமுமே இவ்விஷயத்தில் இன்னும் அதிக தூரம் போய்விடாதவாறு என்னைத் தடுத்தன நான் வாய்திறந்து பேசவே இல்லை என்றால், என்னுடம் பேசவேண்டும் என்றோ, உலாவப் போகவேண்டும் என்றோ எந்தப் பெண்ணும் எண்ணுவதற்கில்லை.
கூச்சத்தோடு நான் ஒதுங்கியிருந்ததற்கு ஏற்றாற்போல் என்னிடம் கோழைத்தனம் இருந்தது. வெண்ட்னரில் ஒரு குடும்பத்தினருடன் நான் வசித்து வந்தேன். அத்தகைய குடும்பங்களில் வீட்டுக்கார அம்மாளின் மகள் விருந்தினரை உலாவ அழைத்துச் செல்லுவது வழக்கம். என் வீட்டு அம்மாளின் மகள், ஒரு நாள் என்னை வெண்ட்னரைச் சுற்றியுள்ளள அழகான மலைகளுக்கு அழைத்துச் சென்றாள். நானே வேகமாக நடப்பவன், அப்பெண்ணோ என்னையும்விட வேகமாக நடந்தாள். அவளுக்குப் பின்னால் என்னை இழுத்துக்கொண்டு போனாள் என்றே சொல்லலாம். வழியெல்லாம் ஏதோதோ பேசிக்கொண்டே போனாள். அவளுடைய ஓயாத பேச்சுக்குச் சில சமயம், ஆம் அல்லது இல்லை என்று மாத்திரம் மெல்லிய தொனியில் பதில் சொல்லுவேன். அதிகமாக நான் பேசினால், ஆம் எவ்வளவு அழகாயிருக்கிறது * என்பேன். அவள் பறவை போல் பறந்து கொண்டிருந்தாள். நானோ எப்பொழுது வீடு திரும்பப் போகிறோம் ? என்று திகைத்துக் கொண்டிருந்தேன்.
இவ்வாறு மலையின் உச்சிக்குப் போய்விட்டோம். திரும்ப எப்படிக் கீழே இறங்குவது என்பதே பிரச்சனை. குதி உயர்வான பூட்ஸ் போட்டிருந்தும், இருபத்தைந்து வயதுள்ள சுறுசுறுப்பான அப்பெண், அம்புபோலப் பாய்ந்து குன்றிலிருந்து இறங்கி விட்டாள். கீழே நின்றுகொண்டு சிரித்தாள், இறங்கி வரும்படி என்னை உற்சாகப்படுத்தினாள், வந்து இழுத்து வரட்டுமா ? என்றும் கேட்டாள். நான் அவ்வளவு கோழையாக இருப்பது எப்படி ? எவ்வளவோ கஷ்டத்துடன் சில சமயம் ஊர்ந்தும் கூட எப்படியோ கீழே போய்ச் சேர்ந்துவிட்டேன். சபாஷ் என்று அவள் உரக்கச் சிரித்தாள். அவளால் முடிந்தவரையில் நான் அதிக வெட்கப்படும்படி செய்துவிட்டாள்.
ஆனால் நான் தீங்குறாமல் எங்குமே தப்பிவிட முடியாது. ஏனெனில் புரையோடும் பொய்மைப் புண்ணிலிருந்து என்னைக் காக்க கடவுள் திருவுளம் கொண்டார். வெண்ட்னரைப் போல நீர் நிலையத்தை அடுத்த மற்றோர் ஊரான பிரைட்டனுக்குப் போயிருந்தேன். அது நான் வெண்ட்னருக்குப் போவதற்கு முன்னால் அங்கே ஒரு ஹோட்டலில் சாதாரண வசதிகளுடைய ஒரு கிழவிதவையைச் சந்தித்தேன். என் இங்கிலாந்து வாசத்தின் முதலாண்டில் நடந்தது இது. ஹோட்டலில் சாப்பாட்டுக்குப் பரிமாற இருக்கும் உணவு வகைகளைக் குறிக்கும் பட்டியல் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டிருந்ததால் எனக்குப் புரியவில்லை.
அக்கிழவி உட்கார்ந்திருந்த மேiஜயிலேயே நானும் உட்கார்ந்திருந்தேன். நான் அந்த இடத்திற்குப் புதியவன். ஆகையால் விழிக்கிறேன் என்பதை அம்மூதாட்டி கண்டு கொண்டார். எனக்கு உதவி செய்யவும் முன் வந்தார். நீர் இவ்விடத்திற்குப் புதியவர் என்று தோன்றுகிறது இன்னது வேண்டும் என்று ஏன் கேட்காமல் இருக்கிறீர் ? என்று கேட்டார். அப்பட்டியலை எழுத்துக் கூட்டிப் படித்த, அதில் கண்டவைகளில் என்னென்ன சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று பரிசாரகரைக் கேட்டுத் தெரிந்து கொள்ள நான் தயார் ஆகிக் கொண்டிருந்த சமயத்தில் அந்த நல்ல மூதாட்டி, மேற்கண்டவாறு குறுக்கிட்டார். நான் அவருக்கு நன்றி செலுத்தினேன். எனக்கு இருந்த கஷ்டத்தையும் விளக்கினேன். பிரெஞ்சு மொழி எனக்குத் தெரியாததனால் பரிமாறப் படுவதில் எது மாமிசக் கலப்பில்லாதது என்று எனக்கு விளங்கவில்லை என்றேன்.
தான் உமக்கு உதவி செய்கிறேன். அப்பட்டியலை உமக்கு விளக்கிக் கூறி, நீர் எதைச் சாப்பிடலாம் என்பதையும் காட்டுகிறேன் என்றார். அம்மூதாட்டி வந்தனத்துடன் அவர் உதவியைப் பயன்படுத்திக் கொண்டேன். எங்களுக்குள் ஏற்பட்ட பழக்கத்தின் ஆரம்பம் இது. பின்னர் இது நட்பாக வளர்ந்து. நான் இங்கிலாந்தில் இருந்த வரையிலும், அதற்குப் பிறகு நீண்டகாலமும் கூட, இந்த நட்பு தொடர்ந்து இருந்து வந்தது. அவர் தமது லண்டன் விலாசத்தை எனக்குக் கொடுத்ததோடு ஒவ்;வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவில் தம் வீட்டுக்கு சாப்பிட வருமாறும் அழைத்தார். விசேஷ சந்தர்ப்பங்களிலும் அவர் என்னை அழைப்பார். என் கூச்சத்தைப் போக்கிக் கொள்ள உதவி செய்வார். இளம் பெண்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்து, அவர்களுடன் நான் பேசும்படியும் செய்வார். இவ்விதம் பேசுவதில் ஈடுபட்ட பெண்களில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியவள், அம் மூதாட்டியின் வீட்டிலேயே வசித்து வந்த ஒருத்தியாவாள். அடிக்கடி நாங்கள் இருவர் மட்டும் தனியாக இருக்கும்படியும் விடப் படுவோம்.
இவையெல்லாம் முதலில் எனக்கும் பெரும் சங்கடமாகவே இருந்தன. பேச்சை முதலில் தொடங்க என்னால் முடியாது. விகடமாகப் பேசி, நகைப்பை உண்டாக்கவும் என்னால் ஆகாது. ஆனால், அப்பெண் எனக்குக் கற்றுக் கொடுத்தாள். நானும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். நாளாக ஆக, ஞாயிற்றுக்கிழமை எப்பொழுது வரும் ? என்று ஆவலுடன் எதிர் பார்க்கலானேன். அந்த இளம் பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்தையும் விரும்பத்தலைப் பட்டேன்.
அம்மூதாட்டி நாளுக்கு நாள் தமது வலையை விரிவாகப் பரப்பிக் கொண்டே போனார். எங்கள் சந்திப்பில் அவர் அதிகச் சிரத்தை கொள்ளலானார். எங்கள் இருவரைக் குறித்தும் அவருடைய சொந்தத் திட்டம் ஏதாவது இருந்திருக்க கூடும்.
என் நிலைமை அதிகச் சங்கடமானதாயிற்று. எனக்கு மணமாகி விட்டது என்பதை முன்னாலேயே அந்த நல்ல மூதாட்டிக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா ? என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அப்பொழுது அவர், எங்கள் இருவருக்கும் விவாக நிச்சயம் செய்ய எண்ணியிருக்க மாட்டார். என் பிழையைத் திருத்திக்கொள்ள இன்னும் காலம் கடந்து போய்விடவில்லை. உண்மையைச் சொன்னால் இனிமேலாவது துயர்திற்கு உள்ளாகாமல் நான் காப்பாற்றப் பட்டு விடுவேன். என் மனத்தில் இத்தகைய எண்ணங்களுடன் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். அக்கடிதம் ஏறக்குறைய பின்வருமாறு இருந்தது.
நாம் பிரைட்டனில் சந்தித்ததிலிருந்து நீங்கள் என்னிடம் அன்புடன் இருந்திருக்கிறீர்கள். தாய், தனது மகனை கவனிப்பதுபோல என்னைக் கவனித்தும் வந்திருக்கிறீர்கள். எனக்கு மணம் ஆகிவிட வேண்டும் என்றும் நீங்கள் எண்ணுகிறீர்கள். அந்த நோக்கத்துடன் இளம் பெண்களை எனக்கு அறிமுகம் செய்து வைத்தீர்கள். விஷயம் முற்றுவதற்கு முன்னால், உங்கள் அன்புக்குத் தகுதியற்றவனாக நான் இருந்திருக்கிறேன் எனப்தை நான் உங்களிடம் ஒப்புக் கொண்டுவிட வேண்டும். நான் உங்கள் வீடடுக்கு வர ஆரம்பித்தபோதே, எனக்கு மணம் ஆகிவிட்டது என்பதை நான் உங்களுக்குச் சொல்லியிருக்க வேண்டும். இங்கிலாந்தில் இருக்கும் இந்திய மாணவர்கள், தங்களுக்கு மணம் ஆகிவிட்டது என்ற உண்மையை மறைத்து விடுகிறார்கள் என்பதை நான் அறிவேன். நானும் அப்படியே செய்தேன்.
அப்படி நான் செய்திருக்கவே கூடாது என்பதை இப்பொழுது உணருகிறேன். இன்னும் ஒன்றையும் நான் கூறவேண்டும் சிறு பையனாக இருக்கும்போதே எனக்கு மணம் ஆகிவிட்டது. ஒரு பையனக்கு நான் தந்தை. இவ்வளவு காலமும் இதையெல்லாம் உங்களுக்குத் தெரியாமல் வைத்திருந்து விட்டதற்காக நான் மனம் நோகிறேன். ஆனால், உண்மையைச் சொல்லிவிடும் தைரியத்தை எனக்குக் கடவுள் இப்பொழுதாவது அளித்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். என்னை நீங்கள் மன்னிப்பீர்களா ? நீங்கள் அன்போடு எனக்கு அறிமுகம் செய்து வைத்த பெண்ணிடம் எந்தவிதமான தகாத வழியிலும் நான் நடந்து கொண்டதில்லை. என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன். நான் எவ்வளவு தூரம் போகலாம் என்பதை அறிவேன். நீங்களோ, எனக்கு மணம் ஆகிவிட்டது என்பதை அறியாமல் எங்களுக்குள் விவாகம் நிச்சயம் ஆவவேண்டும் என்று இயற்கையாகவே விரும்பினீர்கள். இப்பொழுதுள்ள கட்டத்திற்கு மேல் விஷயங்கள் போய்விடாமல் இருப்பதற்காக நான் உங்களிடம் உண்மையைக் சொல்லிவிட வேண்டும்.
இக்கடிதம் உங்களுக்குக் கிடைத்த பிறகு. நீங்கள் காட்டிய அன்புக்கு அருகதையற்றவனாக நான் இருந்திருக்கிறேன் என்று நீங்கள் உண்ர்ந்தால், அது தவறு என்று நான் எண்ண மாட்டேன் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன். உங்களுடைய அன்பினாலும் நீங்கள் என்னிடம் காட்டிய சிரத்தையினாலும் நிரந்தரமான நன்றியறிதலுக்குக் கடமைப்பட்டவனாக என்னைச் செய்திருக்கிறீர்கள். இக்கடிதத்திற்குப் பிறகும், நீங்கள் என்னை நிராகரித்து விடாமல், உங்களுடைய அன்பான வீட்டிற்கு வரத் தகுதியுடையவனாகவே என்னைக் கருதுகிறீர்கள் என்றால் அதற்கு உரியவனாவதற்குப் பாடுபட நான் தவறமாட்டேன், இயற்கையாகவே மகிழ்ச்சியடைவேன். அதை உங்கள் அன்பின் மற்றோர் அறிகுறியாகவும் கொள்ளுவேன்.
இத்தகைய கடிதத்தை ஒரே சமயத்தில் நான் எழுதியிருக்க முடியாது என்பதை வாசகர் அறியவேண்டும். அதை நான் நிச்சயமாகத் திரும்பத் திரும்பப் பன்முறை திருத்தி எழுதியிருக்க வேண்டும். ஆனால், அதை எழுதிய பிறகு, என் உள்ளத்தை அழுத்திக் கொண்டிருந்த பெருஞ்சுமை நீங்கியது. அநேகமாக அடுத்த தபாலிலேயே அம்மூதாட்டியிடமிருந்து எனக்குப் பதிலும் வந்தது.
அது ஏறக்குறையப் பின்வருமாறு.
ஏதையும் ஒளிக்காமல் நீங்கள் எழுதிய கடிதம் கிடைத்து. நாங்கள் இருவருமே மகிழ்ச்சியடைந்ததோடு சந்தோஷத்துடன் சிரித்து விட்டோம். நீங்கள் செய்துவிட்ட, உண்மையை மறைத்த குற்றம் என்று நீங்கள் கூறும் செயல், மன்னிகத்தக்கது. ஆனால் உண்மை நிலைமையை எங்களுக்கு நீங்கள் தெரிவித்துவிட்டது நல்லதே. என் அழைப்பு இன்னும் இருந்து வருகிறது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை உங்களை நிச்சயமாக எதிர் பார்க்கிறோம் அதோடு உங்கள் குழந்தைக் கல்யாணத்தைப் பற்றிய விவரங்களையெல்லாம் அறிந்து, உங்கள் சங்கடத்தில், நாங்கள் சிரித்து இன்புறுவதையும் எதிர் நோக்குகிறோம். இச்சம்பவத்தினால் நமது நட்பு, ஒரு சிறிதேனும் பாதிக்கப்படவில்லை என்று நான் உறுதி கூறவும் வேண்டுமா ?
இவ்வாறு நான் என்னிடமிருந்து, பொய்மையின் புரையோடிய புண்ணைப் போக்கிக்கொண்டேன். அதற்கு பிறகு, – அவசியமாகும் இடங்களிலெல்லாம் எனக்கு மணம் ஆகிவிட்டதைக் குறித்துப் பேச நான் தயங்கியதே இல்லை.
சைவ உணவாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுவிற்கு நான் தேர்ந்தெடுக்கப் பெற்றேன். இக்குழுவின் வட்டம் ஒவ்வொன்றுக்கும் நான் தவறாமல் போய்க்கொண்டிருந்தேன். ஆனால், கூட்டங்களில் நான் பேசுவது மாத்திரம் இல்லை. டாக்டர் ஓல்டுபீல்டு என்னிடம் ஒரு சமயம் நீங்கள் என்னிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருக்கிறீர்களே * அப்படியிருக்க, கமிட்டிக் கூட்டங்களில் மாத்திரம் நீங்கள் ஏன் வாய் திறப்பதே இல்லை ? தேனீக்களில் நீங்கள் ஆண் ஈ போன்றிருக்கிறீர்கள் என்றார். அவர் இவ்விதம் என்னைக் கேலி செய்ததைப் பாராட்டினேன். தேனீக்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கின்றன. ஆண் ஈயோ முற்றும் சோம்பேறியாக இருக்கிறது. இக்கூட்டங்களில் மற்றவர்களெல்லாம் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்லும்போது நான் மாத்திரம் பேசாமல் சும்மா உட்கார்ந்திருப்பது பெரிய விசித்திரமே. பேசுவதற்கு எனக்கு ஆசை இல்லாமல் இல்லை. ஆனால், பேசத் தெரியாத குறைதான். மற்ற உறுப்பினர்கள் எல்லோரும் என்னைவிட விஷயங்களை நன்கு அறிந்தவர்கள் என்று எனக்குத் தோன்றிற்று. பிறகு வேறு ஒன்றும் நிகழ்ந்துவிடுவது உண்டு. தைரியப்படுத்திக் அந்த விஷயம் போய், ஒரு புது விஷயம் ஆலோசனைக்கு வந்துவிடும் இப்படியே நீண்ட காலம் நடந்துகொண்டு வந்தது.
இதற்கு மத்தியில் ஒரு முக்கியமான விஷயம் விவாதத்திற்கு வந்தது. கூட்டத்திற்குப் போகாமல் இருந்துவிடுவது தவறு என்று நினைத்தேன். எதுவும் பேசாமல், வோட்டுப் போட்டுவிட்டு மாத்திரம் வந்துவிடுவது கோழைத்தனம் என்றும் தோன்றிற்று. பின்வரும் ரீதியில் அந்த விவாதம் எழுந்தது, சங்கத்திற்கு ஸ்ரீ ஹில்ஸ் தலைவராக இருந்தார். அவர் தேம்ஸ் இரும்புத் தொழிற்சாலையின் சொந்தக்காரர். நல்லொழுக்க விஷயத்தில் அவர் கண்டிப்பான கொள்கையுடையவர். அவருடைய பொருளுதவியைக் கொண்டே சங்கம் நடந்து வந்தது என்றும் சொல்லவேண்டும். கமிட்டியின் உறுப்பினர்களில் பலர் அவருடைய ஆதரவில் வாழ்ந்து வருபவர்கள். சைவ உணவு இயக்கத்தில் பிரசித்தி பெற்றவரான டாக்டர் அல்லின்ஸனும் இக்கமிட்டியில் ஓர் உறுப்பினார். அச்சமயம் புதிதாகக் கிளம்பிய கர்ப்பத்தடை இயக்கத்தை ஆதரிப்பவர் இவர். கர்ப்பத்தடை முறைகளை அவர் தொழிலாளரிடையே பிரச்சாரம் செய்துவந்தார். இம்முறைகள் ஒழுக்கத்தின் வேரையே அறுப்பவையாகும் என்று ஸ்ரீ ஹில்ஸ் கருதினார். உணவுச் சீர்திருத்தத்தோடு ஒழுக்கச் சீர்திருத்தமும் சைவ உணவாளர் சங்கத்தின் நோக்கம் என்பது அவருடைய அபிப்ராயம். டாக்டர் அல்லின்ஸன் போன்ற ஒழுக்கத்திற்கு விரோதமான கருத்துள்ளவர்களைச் சங்கத்தில் இருக்க அனுமதிக்கக்கூடாது என்றும் அவர் எண்ணினார்.
ஆகவே, அவரை நீக்கிவிட ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இவ்விஷயம் என் கவனத்தை அதிகமாக் கவர்ந்தது. கர்ப்பத்தடைக்குச் செயற்கை முறைகளை அனுசரிப்பதைப் பற்றி டாக்டர் அல்லின்ஸன் கொண்டிருந்த கருத்து ஆபத்தானது என்றே நானும் கருதினேன். ஒழுக்க நெறியைக் கடைப்பிடிப்வர் என்ற வகையில் டாக்டர் அல்லின்ஸனை எதிர்க்க ஸ்ரீ ஸில்ஸுக்கு உரிமை உண்டு என்று நானும் கருதினேன். அதோடு ஸ்ரீ ஹில்ஸிடமும், அவருடைய உதார குணத்தினிடமும் எனக்கு அதிக மதிப்பு இருந்தது. ஆனால் ஒழுக்கக் கொள்கைகளும், சைவ உணவாளர் சங்கத்தின் நோக்கங்களில் ஒன்று என்று ஒப்புக்கொள்ள ஒருவர் மறுக்கிறார். என்பதற்காக, அவரை அச்சங்கத்திலிருந்து நீக்கிவிடுவதென்பது சரியானதல்ல என்றும் நான் எண்ணினேன். ஒழுக்கக் கொள்கைக்கு ஸ்ரீ ஹில்ஸின் கருத்து, அவருடைய சொந்த அபிப்பிராயமே. சங்கத்தின் தெளிவான கொள்கைக்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. சங்கத்தின் நோக்கம் சைவ உணவுக் கொள்கையைப் பரப்புவதேயன்றி எந்த ஒழுக்க முறையையும் பரப்புவதன்று. ஆகையால், மற்ற ஒழுக்கங்களைப் பொறுத்தவரையில் ஒருவர் என்ன கருத்துக் கொண்டிருந்தாலும், சைவ உணவு மாத்திரமே சாப்பிடும் யாரும் இச்சங்கத்தில் அங்கத்தினராக இருக்கலாம் என்று நான் அபிப்ராயப்பட்டேன்.
என்னைப் போன்ற அபிப்பிராயம் கொண்ட மற்றும் சிலரும் கமிட்டியில் இருந்தனர். ஆயினும் என் சொந்த அபிப்பிராயத்தைக் கூறிவிட வேண்டியது என்னைப் பொறுத்தவரையில் என் கடமை என்று உணர்ந்தேன். அதை எப்படிச் செய்வது என்பதுதான் பிரச்சனை. கூட்டத்தில் பேசும் தைரியம் எனக்கு இல்லை. ஆகையால் என் எண்ணங்களையெல்லாம் எழுதிவிடுவது என்று முடிவு செய்தேன். அவ்வாறே எழுதி, என் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு படிக்கும் துணிவுகூட எனக்கு வரவில்லை என்றே எனக்கு ஞாபகம். தலைவர் வேறொருவரைக் கொண்டு அதைக் வட்டத்தில் படிக்கச் செய்தார். முடிவில் இது போன்ற முதல் போராட்டத்திலேயே தோற்கும் கட்சியில் சேர்ந்தவனாக நான் இருந்ததைக் கண்டேன். என்றாலும் என் கட்சி நியாயமானது என்ற திருப்தி எனக்கு இருந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு அந்தக் கமிட்டியிலிருந்து நான் ராஜிநாமாச் செய்துவிட்டதாகவே எனக்கு அரைகுறையாக ஞாபகம் இருக்கிறது.
நான் இங்கிலாந்தில் இருந்த காலம் முழுவதிலும் எனக்கு இந்தக் கூச்சம் இருந்து வந்தது. சாதாரணமாக, நண்பர்களைப் பார்த்துவரச் செல்லும் இடங்களில்கூட, அங்கே ஐந்தாறு பேரோ அதற்கு அதிகமானவர்களோ இருந்துவிட்டால், நான் ஊமையாகப் போய்விடுவேன்.
ஒருநாள் ஸ்ரீ மஜ்முதாருடன் வெண்ட்னருக்குச் சென்றேன். அங்கே சைவ உணவுக் குடும்பம் ஒன்றுடன் தங்கினோம் உணவு முறையின் தருமம் என்ற நு}லின் ஆசிரியரான ஸ்ரீ ஹோவார்டும் அதே கடலோர ஊரில் தங்கியிருந்தார். நாங்கள் அவரைச் சந்தித்தோம். சைவ உணவைப் பரப்புவதற்காக நடந்த ஒரு கூட்டத்தில் பேசுமாறு அவர் எங்களை அழைத்தார். ஒருவர், தாம் வட்டத்தில் பேச வேண்டியதை எழுதிப் படிப்பது தவறாகக் கருதப்பட மாட்டாது என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்டேன். தாங்கள் கூற வேண்டியதை, முன்பின் பொருத்தமாகவும் சுருக்கமாகவும் சொல்லுவதற்காகப் பலர் இவ்விதம் எழுதிப் படிப்பது உண்டு என்பதையும் நான் அறிவேன். நினைவில் இருந்தபடியே பேசுவது என்பது என்னால் முடியாத காரியம். ஆகையால் நான் செய்ய வேண்டிய பிரசங்கத்தை முதலில் எழுதி வைத்துக்கொண்டேன். கூட்டத்தில் அதைப் படிப்பதற்கு எழுந்தேன், என்னால் முடியவில்லை. நான் எழுதி வைத்திருந்த பிரசங்கம் ஒரே தாளில் முடிந்துவிட்டது. என்றாலும் கண் மங்கலாகிவிட்டது. உடம்பெல்லாம் நடுங்கியது. எனக்காக ஸ்ரீ மஜ்முதார் அப்பிரசங்கத்தைப் படிக்க வேண்டியதாயிற்று. அவர் சொந்தமாகப் பேசியதோ அற்புதமாக இருந்தது. கேட்டவர்கள் கரகோஷம் செய்து குதூகலமாக வரவேற்றனர். என்னுடைய திறமையின்மைக்காக மனம் வருந்தியதோடு என்னைக் குறித்து நானே வெட்கப்பட்டுக் கொண்டேன்.
இங்கிலாந்தில் பொதுக்கூட்டத்தில் பேச நான் கடைசியாக முயன்றது. அங்கிருந்து தாய்நாடு திரும்பிய சமயத்தில்தான். இத்தடவையும் நான் என்னைப் பிறரின் நகைப்புக்கு உரியவனாகச் செய்துகொள்ளுவதில்தான் வெற்றி பெற்றேன். எனது சைவ உணவு நண்பர்களை, முன்னால் நான் கூறியிருக்கும் ஹால்பாரன் ஹோட்டலுக்கு ஒரு விருந்துக்கு அழைத்தேன். சைவ உணவு விடுதிகளில் சைவ உணவு விருந்து வைக்க முடியும் என்பது சரி. ஆனால், மாமிசச் சாப்பாடு போடும் ஹோட்டலிலும் சைவ உணவு விருந்து ஏன் சாத்தியமாகாது போகும் ? என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். அதன் பேரில் ஹால்பார்ன் ஹோட்டலின் நிர்வாகியிடம் பேசி, சுத்த சைவ உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்வேன். இப்புதிய பரீட்சையை சைவக் சாப்பாட்டுக்காரர்கள் சந்தோஷமாகப் பாராட்டினார்கள். விருந்துகளெல்லாம் இன்பத்திற்காகவே வைக்கப்படுகின்றன. வளர்த்திருக்கிறார்கள். அங்கே விருந்துகள் ஆடம்பரமாகவும், சங்கீதம், பிரசங்கள் ஆகியவைகளுடைனும் நடத்தப்படுகின்றன. நான் நடத்திய அச்சிறிய விருந்திலும் இந்த ஆடம்பரங்கள் இல்லாதது போகவில்லை. ஆகையால், அதில் பிரசங்களும் இருந்தாக வேண்டியதாயிற்று. நான் பேசவேண்டிய சமயம் வந்தபோது பேசுவதற்கு எழுந்து நின்றேன். சில வாக்கியங்களை மாத்திரமே கொண்ட ஒரு சிறு பிரசங்கம் செய்வதென்று அதற்காக யோசித்தும் வைத்திருந்தேன். ஆனால், முதல் வாக்கியம் பேசிய பிறகு மேற்கொண்டு பேச்சு வரவே இல்லை. பார்லிமெண்டு காமன்ஸ் சபையில் அடிஸன் செய்ய முயன்ற முதல் பிரசங்கத்தைக் குறித்து நான் படித்திருக்கிறேன்.
நான் கருதுகிறேன் (I Conceive) என்று மும்முறை திரும்பத் திரும்ப அவர் சொன்னார். அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. அப்பொழுது ஒரு கேலிக்காரர் எழுந்து இக்கனவான் மும்முறை கருத்தரித்தார். ஆனால் எதுவுமே வெளியே வரவில்லை என்று சொன்னார். இந்த வரலாற்றை வைத்துக் கொண்டு தமாஷ் பிரசங்கம் ஒன்றைச் செய்துவிடுவது என்று யோசித்து வைத்திருந்தேன். ஆகையால், அக்கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். முதலியே தடைப்பட்டு என் பேச்சு நின்றுவிட்டது. எனக்கு ஞாபக சக்தி அடியோடு இல்லாது போய்விட்டது. தமாஷான பிரசங்கம் ஒன்று செய்ய முயன்று, என்னையே கேலிக்கு இடமாக ஆக்கிக்கொண்டேன். கனவான்களே என் அழைப்பிற்கு இணங்கி வந்ததற்காக உங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மாத்திரம் சொல்லிவிட்டு உட்கார்ந்து விட்டேன்.
தென்னாப்ரிக்காவில்தான் இந்தக் கூச்சம் என்னை விட்டுப் போயிற்று, என்றாலும் அங்கும் அது முற்றும் போய்விடவில்லை. முன்னால் தயார் செய்து கொள்ளாமல் பிரசங்கம் செய்வதென்பதும் என்னால் முடியாது. முன்பின் தெரியாத ஒரு கூட்டத்தின் முன்னால் பேசுவதற்கு நான் தயங்கினேன். முடிந்தால் பிரசங்கம் செய்யாமலும் தப்பித்துக் கொண்டு விடுவேன். இன்றுகூட நண்பர்களின் கூட்டத்தில் வெறும் பேச்சுப் பேசிக்கொண்டிருக்க என்னால் முடியும் என்று நான் நினைக்கவில்லை, அப்படிச் செய்யவும் மாட்டேன்.
ஆனால், இன்னும் ஒன்றையும் நான் சொல்லவே வேண்டும். என் உடம்புடன் ஒட்டியதாயிருந்த கூச்சத்தினால் சில சமயங்களில் என்னைக் குறித்துப் பிறர் நகைப்பதற்கு இடம் வைத்துக் கொண்டேன் என்பதைத் தவிர அதனால் எனக்கு எவ்விதத்திலும் கெடுதி உண்டாகவில்லை. அதற்கு மாறாக, உண்மையில் அது எனக்கு நன்மையே செய்திருக்கிறது என்பதைக் காண்கிறேன். பேச்சில் எனக்கு இருந்த தயக்கம், ஒரு சமயம் கவலை தருவதாக இருந்திருந்தாலும், இப்பொழுது அது இன்பமானதாக இருக்கிறது. சொற்களைச் சிக்கனமாக உபயோகிக்க எனக்குத் கற்றுக் கொடுத்ததே அதனால் ஏற்பட்ட மிகப் பெரிய நன்மை. என்னுடைய எண்ணங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் பழக்கமும் இயற்கையாகவே எனக்கு உண்டாயிற்று. சரியாகச் சிந்திக்காத சொல் எதுவும் என் நாவிலிருந்தோ, பேனாவிலிருந்தோ வெளிவருவதோ இல்லை, இந்த விஷயத்தில் இப்பொழுது நானே எனக்கு நற்சாட்சிப் பத்திரம் அளித்துக் கொள்ள முடியும். நான் பேசியது அல்லது எழுதியது எதற்காகவும் நான் பின்னால் வருத்தப்பட நேர்ந்ததாக எனக்கு நினைவில்லை. இவ்விதம் பல தவறுகளிலிருந்தும் நான் தப்பினேன். வீண் கால விரயமும் எனக்கு நேராதிருந்தது. சத்தியத்தை நாடுகிறவர் அனுசரிக்க வேண்டிய ஆன்மிகக் கட்டுத்திட்டங்களில் மௌனமும் ஒரு பகுதி என்பதை அனுபவம் எனக்குப் போதித்திருக்கிறது.
உண்மையை அறிந்தோ அறியாமலோ மிகைப்படுத்தியும் மறைத்தும் திரித்தும் கூறுவது, மனிதனுக்கு இயற்கையாகவே இருக்கும் ஒரு குறைபாடு. அதனின்றும் தப்புவதற்கு மௌனம் அவசியமானது. அதிகமாகப் பேசாதவர், யோசியாமல் பேச வாய்ப்பு இருக்காது. ஒவ்வொரு சொல்லையும் அவர் நிறுத்தியே பேசுவார். பேச வேண்டும் என்று பெருத்த ஆசையுடன் இருப்போர் பலரைப் பார்க்கிறோம். தம்மையும் பேச அனுமதிக்க வேண்டும் என்று வற்புறத்தி வரும் பல சீட்டுக்களைப் பெறாத எந்தக் கூட்டத் தலைவரையும் காண முடியாது. பேச அனுமதி கொடுத்துவிட்டாலோ, தங்களுக்கு அளித்த நேரத்தையும் தாண்டி, இன்னும் அதிக நேரம் வேண்டும் எனக் கேட்டு அனுமதியின்றியும் இவர்கள் பேசிக்கொண்டே போகிறார்கள். இத்தகைய பேச்சுக்களினாலெல்லாம் உலகிற்கு வீணாக்குவதுதான் அது. உண்மையில் எனக்கு இருந்த கூச்சமே, எனக்குக் கேடயமாகவும், கவசமாகவும் ஆயிற்று. நான் வளர்ச்சியடைய அது அனுமதித்தது. சத்திய ஆராய்ச்சியில் அது எனக்கு உதவியையும் செய்தது.
மேலும் மேலும் ஆழ்ந்து, நான் ஆன்ம பரிசோதனை செய்யச் செய்ய, எனது அகவாழ்விலும் புறவாழ்விலும் அதிக மாறுதல்களைச் செய்து கொள்ளச் வேண்டியது அவசியம் என்ற உணர்ச்சி என்னிடம் வளரலாயிற்று. என் செலவுகளிலும், வாழ்க்கை முறைகளிலும் மாறுதலைச் செய்ய ஆரம்பித்திருந்தேன். சைவ உணவின் முக்கியத்துவத்தை வெகு நுட்பமாகப் பரிசீலனை செய்திருந்ததைக் கண்டேன். இவ்விஷயத்தின் மத, விஞ்ஞான, அனுபவ, வைத்திய அம்சங்களையெல்லாம் அவர்கள் ஆராய்ந்திருந்தனர். தருமக் கோட்பாட்டின் ரீதியில் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். தாழ்வான உயிரினங்களிலும் மனிதன் உயிர் வாழ்வது என்பது அவ்வுயர்வின் நோக்கம் அல்ல. உயர்ந்த இனங்கள் தாழ்ந்த இனங்களைப் பாதுகாக்க வேண்டும். மனிதனுக்கு மனிதன் உதவிக் கொள்ளுவதைப் போல, அவ்விரு இனங்களும் தம்மிடையே பரஸ்பரம் உதவிக் கொள்ள வேண்டும் என்பது அந்நூலாசிரியர்கள் கண்ட முடிவு. மனிதன் உண்பது உயிர் வாழ்வதற்கேயன்றி, சுகானுபவத்திற்காக அல்ல என்பதையும் அவர்கள் தெளிவுபடுத்தியிருந்தார்கள். இதை அனுசரித்து அவர்களில் சிலர், புலால் உண்ணாமல் இருப்பதோடு முட்டை, பால் சாப்பிடுவதும் கூடாது என்று சொன்னார்கள். அதன் படி சாப்பிடாமலும் இருந்தார்கள். மற்றும் சிலர், விஞ்ஞான ரீதியில் வேறு ஒரு முடிவுக்கும் வந்தனர்.
மனிதனின் உடலமைப்பை ஆராய்ந்தால், அவன் உணவைச் சமைத்துத் தின்னப் படைக்கபட்டவன் அல்ல என்பதும் பச்சையாகத் தின்று வாழ வேண்டிய பிராணியே என்பதும் தெளிவாகின்றன என்றார்கள். மனிதன் ஆரம்பத்தில் தாய்ப்பாலை மட்டும் அருந்த வேண்டும், பிறகு பல் முளைத்ததும் கடினமான உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்றும் இவர்கள் கருதினர். வைத்திய சாத்திரத்தின்படி மசாலைகள், ஊறுகாய்களை விலக்கிவிட வேண்டும் என்றும் யோசனை கூறினர். அனுபவ, பொருளாதார விவாதத்தின் பிரகாரம் சைவ உணவு சாப்பிடுவதால் ஏற்படும் செலவே மிகக் குறைவு என்பதையும் அவர்கள் நிரூபித்திருந்தனர். இந்தக் காரணங்களையெல்லாம் என் மனத்தில் மாறுதலை உணவுவாதிகளையும் சைவ உணவு விடுதிகளில் சந்தித்தேன். இங்கிலாந்தில் சைவ உணவினர் சங்கமும் ஒன்று இருந்தது. அவர்கள் சொந்தமாக ஒரு வாரப் பத்திரிகையையும் நடத்தினார்கள். அப்பத்திரிகைக்கு நான் சந்தாதாரனானேன். அச்சங்கத்திலும் சேர்ந்து வெகு சீக்கிரத்திலேயே அதன் நிர்வாகக் குழுவிலும் உறுப்பினரானேன். சைவ உணவு பிரசார இயக்கத்தின் தூண்கள் என்று கருதப்பட்ட முக்கியஸ்தர்களுடன் இச்சங்கத்தில் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது. உணவில் என் சொந்தச் சோதனைகளையும் செய்ய முற்பட்டேன்.
வீட்டிலிருந்து தருவித்திருந்த மிட்டாய்களையும், ஊறுகாய்களையும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். மனம் வேறு வழியில் திரும்பி விட்டதால், மசாலை மீதிருந்த மோகம் போய்விட்டது. மசாலையின்றிச் சமைத்த கீரை, அப்பொழுது ரிச்மண்டு ஹோட்டலில் சப்பென்று ருசியற்றிருந்தது. இப்பொழுதோ, சும்மா வேக வைத்த கீரையே எனக்கு ருசியாக இருந்தது. ருசியெல்லாம் எண்ணத்தில் தான் இருக்கிறதேயன்றி நாவில் இல்லை என்பதை இதுபோன்ற பல பரீட்சைகள் எனக்குப் போதித்தன.
சிக்கனத்தைக் கவனிக்க வேண்டும் என்பதும் எப்பொழுதும் என் நினைவில் இருந்து வந்தது. தேயிலை, காப்பி போன்ற பானங்கள் தீமை விளைவிப்பவை என்றும், கோக்கோ குடிப்பது நல்லதென்றும் கருதியவர்கள் அக்காலத்தில் அநேகர் உண்டு. உடலுக்கு நன்மையானவைகளை மாத்திரமே ஒருவர் சாப்பிட வேண்டும் என்று திடமாக நான் நம்பியிருந்ததால் தேயிலை, காப்பி போன்ற பானங்களைச் சாப்பிடுவதை விட்டுவிட்டு, அவற்றிக்குப் பதிலாகக் கோக்கோ சாப்பிடலானேன்.
நான் சாப்பிடப்போன உணவு விடுதிகளில் இரண்டு பிரிவுகள் உண்டு. அவற்றில் ஒரு பிரிவில் பல வகையான உணவுகள் பரிமாறப்படும். ஒருவர், அவற்றில் தாம் விரும்புவதைச் சாப்பிட்டு விட்டு அதற்குரிய பணத்தைக் கொடுக்க வேண்டும். இத்தகைய இரவு சாப்பாட்டுக்கு ஒன்றிலிருந்து இரண்டு ஷில்லிங் வரை செலவாகும். சுமாராகப் பணக்காரராக இருப்போர் இப்பிரிவுக்கே போவார்கள். மற்றொரு பிரிவிலோ, ஆறு பென்ஸுக்குச் சாப்பாடு கொடுப்பார்கள். அதில் ஒரு ரொட்டித் துண்டுடன் மூன்றுவகைப் பண்டங்கள் பரிமாறுவர். நான் அதிகச் சிக்கனமான வாழ்க்கையை நடத்தி வந்தபோது, இந்த இரண்டாவது பிரிவில்தான் சாப்பிடுவது வழக்கம்.
பிரதானமான உணவுப் பரிசோதனையோடு பல சிறு சோதனைகளையும் நடத்தி வந்தேன். உதாரணமாக, மாவுப் பண்டங்கள் எல்லாவற்றையும் ஒரு சமயம் விலக்கியிருந்தேன். மற்றொரு சமயத்திலோ, ரொட்டியும் பழமும் மாத்திரமே சாப்பிட்டு வந்தேன். ஒரு சமயம் பால்கட்டி, பால், முட்டைகள் மாத்திரம் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். இந்தக் கடைசிச் சோதனையைக் குறித்துக் கொஞ்சம் கவனிப்பது முக்கியம். இச்சோதனை இரு வாரங்கள் வரையிலும் கூட நீடிக்கவில்லை. மாவு கலந்த பண்டங்களைத் தின்னக்கூடாது என்று சொன்ன சீர்திருத்தக்காரர். முட்டைகளின் மேன்மையைக் குறித்துப் பிரமாதமாகச் சொன்னதோடு அவை மாமிசமாகா என்றும் கூறினார். முட்டையைத் தின்பதால் உயிருள்ள எதற்கும் துன்பம் விளைவித்து விடவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இந்த வாதத்தில் மயங்கி என் விரதத்தையும் மறந்துவிட்டு, நான் முட்டை தின்ன ஆரம்பித்தேன். ஆனால், நான் இதில் செய்த தவறு தற்காலிகமானதே. நான் கொண்டிருந்த விரத்திற்குப் புதியதொரு வியாக்கி யானத்தையே நான் அனுசரிக்க வேண்டும். மாமிசம் என்பதைப் பற்றிய என் தாயாருடைய கருத்தில் முட்டையும் சேர்ந்ததே என்பதை நான் அறிவேன். இவ்விதம் விரதத்தின் உண்மை கருத்தை நான் கண்டு கொண்டதுமே, முட்டை சாப்பிடுவதையும், அப்பரீட்சையையும் ஒருமிக்க விட்டுவிட்டேன்.
இந்த வாதத்தில் அடங்கிய, கவனிக்கத்தக்க நுட்பமான விஷயம் ஒன்று உண்டு. இங்கிலாந்தில் புலால் என்பதற்கு மூன்று வகையான வியாக்கியானங்கள் கூறப்படுவதை அறியலானேன். இதில் முதல் வியாக்கினப்படி, மாமிசம் என்பது பறவைகள், மிருகங்களின் இறைச்சியே. இந்த வியாக்கியானத்தை ஒப்புக்கொள்ளும் சைவ உணவுவாதிகள், பட்சிகள், மிருகங்களின் மாமிசத்தை உண்ணமாட்டார்கள். ஆனால், மீன் சாப்பிடுவார்கள், முட்டைகளும் சாப்பிடுவார்கள் என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை. இரண்டாவது வியாக்கியானப்படி மாமிசம் என்றால், எலலா உயிர்ப் பிராணிகளின் புலாலுமேயாகும். ஆகையால், இக்கருத்துக் கொண்டவர்கள். மீன் சாப்பிட மாட்டார்களிடமிருந்து கிடைப்பவகைளும் மாமிசம் என்று முடிவு கட்டியிருந்தது. இதன்படி, பால், முட்டைகள் முதலியனவும் மாமிசம் ஆகிவிடுகின்றன. முதல் வியாக்கியானத்தை ஒப்புக் கொள்வதாயின், முட்டை சாப்பிடுவதோடு மட்டுமல்லாமல், மீனும் தின்னலாம். ஆனால், என் அன்னையாரின் வியாக்கியானம் ஒன்றே என்னைக் கட்டுப்படுத்தும் வியாக்கியானம் என்பதில் நான் நிச்சயமாயிருந்தேன். ஆகையால், நான் மேற்கொண்ட விரதத்தின்படி நான் முட்டைகள் தின்னலாகாது, அப்படியே செய்தேன். இதனால் ஒரு கஷ்டம் உண்டாயிற்று.
சைவ உணவு விடுதிகளில் கூடப் பல உணவு வகைகளிலும் முட்டை சேர்க்கிறார்கள் என்பது, விசாரித்ததில் தெரிய வந்ததுதான் அக்கஷ்டம். பலவகையான களிகள், கேக்குகள் ஆகியவைகளில் முட்டைக் கலப்பு உண்டு. எனவே இன்னதில் இன்னது இருக்கிறது. என்பது முன்னதாகவே தெரிந்திருந்தாலன்றி, ஒரு குறிப்பிட்ட உணவில் முட்டை கலந்திருக்கிறதா, இல்லையா என்பதைக் கேட்டுத் தெரிந்துக்கொள்ள வேண்டிய சங்கடமான முறையையும் நான் அனுசரிக்க வேண்டியதாயிற்று. என் கடமையை உணர்ந்ததன் காரணமாக எனக்கு இந்தச் சங்கடம் ஏற்பட்ட தெனினும், இது என் உணவை இன்னும் எளிதாக்கி விட்டது. இவ்விதம் எளிதானது எனக்கு இன்னுமொரு தொல்லையையும் உண்டாக்கியது. நான் ருசித்துச் சாப்பிடத் தொடங்கிய பல உணவு வகைகளையும் கைவிட நேர்ததே அத்தொல்லை. இந்தச் சங்கடங்களெல்லாம் சீக்கிரத்தில் மறைந்து விட்டன. ஏனெனில், விரதத்தைக் கண்டிப்பாக அனுசரித்து வருகிறோம். என்பது எனக்கு உள்ளூற ஒரு ருசியை உண்டாக்கியது. நாவின் ருசியைவிட உள்ளத்தின் இந்த ருசி, தெளிவாக அதிக இன்பத்தையும் சுகத்தையும் தந்ததோடு நிரந்தரமானதாகவும் இருந்தது. என்றாலும், உண்மையான அவதி இனிமேல்தான் எற்பட இருந்தது. மற்றொரு விரதத்தைப் பற்றியதே அது. கடவுளின் அருளைப் பெற்றோருக்கு யார்தான் தீங்கு இழைத்துவிட முடியும் ?
விரதங்கள் அல்லது பிரதிக்ஞைகளைக் குறித்து இங்கே சில விஷயங்களைக் கூறுவது பொருத்தமற்றதாகாது. பிரதிக்ஞைகளுக்கு வியாக்கியானம் கூறவதிலேயே உலகமெங்கும் சச்சரவுகள் உண்டாகின்றன். பிரதிக்ஞை என்னதான் தெளிவானதாக இருந்தாலும் சரி, தங்களுடைய காரியத்திற்கு ஏற்றவகையில் அதைப் புரட்டித்திரித்துக் கூறிவிடுகிறார்கள். அப்படிச் செய்கிறவர்களைப் பணக்காரர்களிலிருந்து ஏழைகள் வரையில், அரசர்களிலிருந்து உழவர் வரையில், சமூகத்தின் எல்லா வகுப்பினரிடையேயும் காணலாம். சுயநலம் அவர்களைக் குருடர்கள் ஆக்கிவிடுகிறது. தெளிவற்ற ஒரு மனோ பாவத்தினால் அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளுவதுடன் உலகத்தையும், கடவுளையும் கூட ஏமாற்றப் பார்க்கிறார்கள்.
ஒரு பிரதிக்ஞையை யோக்கியமாகக் கூறும் வியாக்கியானத்தை ஒப்புக்கொண்டு விடுவதுதான் இதில் சிறந்த வழியாகும். இரண்டு வகையான வியாக்கியானங்கள் சாத்தியமாகும் போது. பலவீனராயிருக்கும் கட்சியினர் கூறும் வியாக்கியானத்தை ஏற்றுக்கொள்ளுவது மற்றோர் சிறந்த வழி. இந்த இரண்டு விதிகளையும் நிராகரித்து விடும்போது அசத்தியத்தின் பலனாக சச்சரவுகளும் துன்பங்களும் எழுகின்றன. எவன் சத்தியத்தை நாடுகிறானோ அவன் ஒருவனே சரியான விதியைப் பின்பற்றுகிறான். வியாக்கியானத்திற்காக, அவன் படித்தவர்களின் ஆலோசனையை நாட வேண்டியதில்லை. மாமிசம் எது என்பதற்கு என் அன்னை கொண்ட வியாக்கியானமே சரியான வழியின் படி எனக்கு உண்மை வியாக்கியானம். இதுவன்றி, என்னுடைய அனுபவ முதிர்ச்சியோ, நான் அதிக அறிவு படைத்து விட்;டேன் என்ற அகம் பாவமோ, எனக்குப் போதித்திருக்க கூடிய வியாக்கியானம் உண்மையாகாது.
இங்கிலாந்தில் நான் செய்த உணவுச் சோதனைகளெல்லாம், சிக்கனத்தையும், தேகாரோக்கியத்தையுமே குறிக்கோளாகக் கொண்டு செய்யப்பட்டவை. உணவுப் பிரச்சினைக்கும் மதத்துக்கும் உள்ள சம்பந்தத்தைப்பற்றி நான் தென்னாப்பிரிக்காவுக்குப் போகும் வரையில் சிந்திக்கவே இல்லை. அங்கேதான் நான் கடுமையான சோதனைகளை மேற்கொண்டேன். அவற்றைக் குறித்துப் பின்னால் கூறுகிறேன். என்றாலும் இவைகளுக்கெல்லாம் இங்கிலாந்திலேயே விதை விதைக்கப்பட்டுவிட்டது.
ஒரு மதத்தில் பிறந்தவர்களைவிட அம்மதத்திற்குப் புதிதாக மாறியவர்களுக்கு அம்மதத்தினரிடம் அதிக அன்பு இருப்பது இயல்பு. சைவ உணவு என்பது அப்பொழுது இங்கிலாந்துக்கு ஒரு புதிய தருமம். எனக்கும் அப்படியே ஏனெனில் மாமிசம் சாப்பிட வேண்டியது அவசியம் என்பதில் திட நம்பிக்கையுள்ளவனாக நான் அங்கே சென்றேன். ஆனால், அறிவாராய்ச்சியின் மூலம் சைவ உணவே சிறந்தது என்ற கொள்கைக்குப் பிறகு மாறி விட்டேன் என்பதை முன்னால் கவனித்தோம். சைவ உணவு சம்பந்தமாகப் புதிதாக மதம் மாறியவனுக்கு இருக்கும் உற்சாகம் எனக்கும் இருந்ததால், நான் வசித்துவந்த பகுதியான பேஸ் வாட்டரில் ஒரு சைவ உணவு சங்கத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்தேன். ஸர் எட்வின் அர்னால்டு அங்கேதான் வசித்தார். சங்கத்திற்கு உபதலைவராக இருக்குமாறு அவரைக் கேட்டுக் கொண்டேன். வெஜிடேரியன் என்ற சைவ உணவுப் பத்திரிகைக்கு ஆசிரியரான டாக்டர் ஓல்டுபீல்டு சங்கத் தலைவரானார். நான் அதற்குச் செயலாளனானேன். கொஞ்ச காலம் சங்கம் சரிவர நடந்து வந்தது. ஆனால், சில மாதங்களில் எல்லாம் கலைந்து போய்விட்டது. அடிக்கடி ஓர் இடத்திலிருந்து வேறு ஒர் இடத்திற்கு மாறிவிடும் என் பழக்கப்படி அப்பகுதியிலிருந்து நான் குடி பெயர்ந்துவிட்டதே சங்கம் கலைந்து விட்டதற்குக் காரணம். என்றாலும் இந்தக் கொஞ்ச காலச் சாதாரணமான அனுபவமே, ஸ்தாபனங்களை உருவாக்கி நடத்துவதில் எனக்குச் சிறிது பயிற்சியை அளித்திருந்தது.
நாட்டியத்திலும், அது போன்றவைகளிலும் நான் செய்த சோதனை என் வாழ்க்கையில் நெறி தவறிப் போய்விட்ட ஒரு கட்டம் என்று யாரும் ஊகித்துக் கொண்டுவிட வேண்டாம் அச்சமயத்திலும்கூட நான் மதிமயங்கிப் போய்விடவில்லை. என்பதை வாசகர்கள் கவனித்திருப்பார்கள். ஆங்கிலக் கனவானாவதில் எனக்கு மோகம் இருந்த அந்தக் காலத்திலும் கூட, என் வரையில் ஓரளவுக்கு என்னுள் ஆன்ம சோதனையும் இல்லாது போகவில்லை. நான் செலவு செய்த ஒவ்வொரு பார்த்திங்(காலணா )குக்கும் கணக்கு வைத்திருந்தேன். செலவு செய்வதைத் தீர யோசித்தே செய்து வந்தேன். வண்டிச் சத்தம், தபால் செலவு, பத்திரிக்கை வாங்கச் செலவிட்ட சில காசுகள போன்ற சிறு செலவினங்களையும் கூடக் கணக்கில் எழுதுவேன்.
தினந்தோறும் படுக்கப் போவதற்கு முன்னால் கணக்கை கூட்டி இருப்புக் கட்டுவேன். அப்பொழுதிலிருந்தே இப்பழக்கம் என்னிடம் நிலைத்து விட்டது. இதன் பலனாக, பொதுப் பணத்தை லட்சக்கணக்கில் நான் கையாள நேர்ந்தபோது அதைச் செலவிடுவதில் கண்டிப்பான சிக்கனத்தை அனுசரிக்க என்னால் முடிந்ததோடு, நான் நடத்திய எல்லா இயக்கங்கள் சம்பந்தமாகவும் வெளிக்கடன் எதுவும் இல்லாமல் எப்பொழுதுமே கையில் மிச்சத் தொகையே இருந்திருக்கிறது என்பதை அறிவேன். என் வாழ்க்கையின் இந்த அனுபவத்தை ஒவ்வோர் இளைஞரும் பாடமாகக் கொண்டு, தம்மிடம் வரும் தொகை ஒவ்வொன்றுக்கும், தாம் செலவிடுவதற்கும் கணக்கு வைக்க வேண்டியதை ஒரு கடமையாகக் கொள்ளட்டும், அப்படிச் செய்தால் என்னைப் போல் முடிவில் நன்மையையே அடைவார்கள்.
என் வாழ்வு முறையை நானே கண்டிப்பாகக் கவனித்து வந்தால், செலவில் சிக்கனம் செய்ய வேண்டியதன் அவசியத்தை நான் அறிய முடிந்தது. ஆகையால், எனக்கு ஆகும் செலவைப் பாதியாகக் குறைத்துவிடுவது என்று தீர்மானித்தேன். போக்குவரத்துக்கு வண்டிச் சத்தம் கொடுப்பதிலேயே அதிகத் தொகை செலவாகிறது என்பது கணக்கிலிருந்து தெரிந்தது. அதோடு, ஒரு குடும்பத்தில் நான் வசித்து வந்ததால் வாரந்தோறும் தவறாமல் குறிப்பிட்ட தொகை அவர்களுக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. அத்துடன், அக்குடும்பத்தினரை மரியாதைக்காக ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வது, அவர்களுடன் விருந்துகளுக்குப் போவது போன்ற வகையிலும் செலவாகி வந்தது. முக்கியமாகக் கூடவரும் நண்பர்கள், பெண்மணியாக இருந்தால், எல்லாச் செலவுகளையும் ஆணே செய்ய வேண்டும் என்பது அவர்கள் வழக்கம். இதனாலெல்லாம் போக்குவரத்துச் செலவு மிக அதிகமாக இருந்தது. வெளியில் சாப்பிடுவதனால் – வீட்டில் சாப்பிடாமல் இருந்ததற்காக வாராந்திரக் கணக்கில் எதுவும் குறைத்துக் கொடுக்க முடியாதாகையால், அதிகப்படி செலவுகளையும் குறைத்துவிடலாம் என்று எனக்குள் தோன்றிற்று.
ஆகவே, இனி ஒரு குடும்பத்துடன் வசிப்பதற்குப் பதிலாகத் தனியாக அறைகளை வாடகைக்கு அமர்த்திக் கொள்ளுவது என்று முடிவு செய்தேன். எனக்கு இருக்கும் வேலையை அனுசரித்து, என் குடியிருப்பையும் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றிக்கொள்ளவும் அதே சமயத்தில் அதனால் அனுபவம் பெறவும் தீர்மானித்தேன். எனக்கு வேலையிருக்கும் இடத்திற்கு அரைமணி நேரத்தில் நடந்து போய்விடக் கூடியதாகவும், அதனாலும் செலவு குறைவதாகவும் இருக்கும் வகையிலும், அறைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு முன்னால் நான் எங்காவது வெளியில் போவதாயிருந்தால் ஏதாவது ஒரு வண்டியை அமர்த்திக் கொள்ளுவேன். இனி நடந்தே போவதென்றால் நடப்பதற்கு வேண்டிய அவகாசத்தையும் தேடிக்கொள்ள வேண்டும். புதிய ஏற்பாட்டில் நடையும் சிக்கனமும் சேர்ந்திருந்தன. அதன்படி வண்டி வாடகை கொடுத்து மிச்சமானதோடு தினம் எட்டு அல்லது பத்து மைல் நடையும் எனக்கு கிடைத்தது. முக்கியமாக நீண்ட தூரம் நடந்த இந்தப் பழக்கத்திநாலும், இங்கிலாந்தில் இருந்த வரையில் நான் நோயே இல்லாமல் இருந்தேன், என் உடலும் உரம் பெற்றது.
இவ்வாறு நான் இரண்டு அறைகளுள்ள ஓர் இடத்தை வாடகைக்கு அமர்த்திக்கொண்டேன். அதில் ஒர் அறை, உட்கார்ந்து வேலை செய்வதற்கு, மற்றொன்று படுக்கையறை எனது லண்டன் வாழ்க்கையில் இது இரண்டாவது கட்டம் இனிமேல்தான் வரவேண்டும்.
இந்த மாறுதல்களினால் என் செலவுகள் பாதியாகத் குறைந்தன. ஆனால், எனக்கிருந்த அவகாசத்தை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளுவது ? பாரிஸ்டர் பரீட்சைக்கு அதிகமாகப் படிக்க வேண்டியதில்லை. என்பது எனக்குத் தெரியும். ஆகையால் நேரத்திற்குப் பஞ்சம் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆங்கில மொழியில் எனக்குத் திறன் போதாமல் இருந்ததே எனக்கு தீராக் கவலையாக இருந்து வந்தது. முதலில் பி.ஏ. பட்டம் பெற்று, பிறகு என்னிடம் வா என்று ஸ்ரீ வேலி ( பிற்காலத்தில் ஸர் பிரடரிக்) சொன்ன சொற்கள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தன. பாரிஸ்டர் பரீட்சையில் தேறுவதோடு மாத்திரமின்றி இலக்கியக் கல்வியிலும் நான் ஏதாவது ஒரு பட்டத்தைப் பெறவேண்டும் என்று எண்ணினேன். ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் சர்வகலா சாலைகளின் படிப்பு முறைகளைப் பற்றி விசாரித்தேன் சில நண்பர்களையும் கலந்து ஆலோசித்தேன். இந்த இரு சர்வகலாசாலைகளில் ஒன்றில் சேருவது என்று நான் முடிவு செய்தால், அதனால் செலவு அதிகமாவதோடு, இங்கிலாந்தில் தங்குவதற்கு நான் தயாராயிருக்கும் காலத்தைவிட அதிக காலம் தங்கவும் நேரும் என்று கண்டேன்.
கஷ்டமான தொரு பரீட்சையில் தேறிவிட்டேன் என்று திருப்பதிப்பட நான் விரும்பினால், லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் நான் தேறிவிடலாம் என்று ஒரு நண்பர் யோசனை கூறினார். அப்படியானால் அதிகக் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியிருக்கும். பொது அறிவும் விருத்தியாகும். இதற்குச் செலவு அதிகப்படியாக ஒன்றும் ஆகிவிடாது என்பது தெரிந்தது., இந்த யோசனை எனக்குப் பிடித்திருந்தது. ஆனால், அப்பரீட்சைக்குப் படிக்க வேண்டியிருந்த பாடங்களோ என்னைப் பயமுறுத்தி விட்டன. லத்தீனையும், தற்கால ஐரோப்பிய மொழி ஒன்றையும் கட்டாயமாகப் படித்தாக வேண்டும் * லத்தீனைப் படிப்பது எப்படி ? ஆனால் அந்த நண்பரோ, அம்மொழியைப் படித்தாக வேண்டும் என்று பரிந்து பேசினார். வக்கீல்களுக்கு லத்தீன் மிகவும் பயனுள்ள மொழி சட்டப் புத்தகங்களைப் புரிந்துகொள்ள லத்தீன் தெரிந்திருப்பது உபயோகமாக இருக்கும். ரோமன் சட்டம் பற்றிய ஒரு பரீட்சை முழுவதையும் லத்தீன் மொழியில்தான் எழுதவேண்டியிருக்கும். லத்தீன் படித்துவிட்டால் ஆங்கில மொழியில்தான் எழுதவேண்டியிருக்கும். லத்தீன் படித்துவிட்டால் ஆங்கில மொழியிலும் நல்ல ஆற்றல் இருக்கும் என்றார். நண்பர் கூறியது நல்லது என்றே தோன்றியது. என்னதான் கஷ்டமாக இருந்தாலும் சரி, லத்தீன் படித்து விடுவது என்று தீர்மானித்தேன். இதற்கு முன்னாலேயே பிரெஞ்சு மொழி படிக்க ஆரம்பித்து விட்டேன்.
ஆகவே, நான் படித்தாக வேண்டிய இக்கால மொழியாக அதையே வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். மெட்ரிகுலேஷனுக்குத் தயார் செய்வதற்கென்று தனிப்பட்டவர் வைத்திருந்த, வகுப்பில் சேர்ந்தேன். பரீட்சைக்குப் போவதற்கு எனக்கு ஐந்து மாதங்களே இருந்தன. இது அசாத்தியமான வேலை என்று எனக்குத் தோன்றிற்று. ஆங்கிலக் கனவானைப் போல் ஆகிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருந்த நான், இப்பொழுது கருத்துள்ள மாணாக்கனாக என்னை மாற்றிக்கொண்டு விட்டேன். என் கால அட்டவணையை நிமிஷக் கணக்கு வரையில் துல்லியமாக வகுத்துக்கொண்டேன். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் மற்றப் பாடங்களுடன் லத்தீனையும், பிரெஞ்சு மொழியையும் நான் படித்துவிட முடியும் என்பதற்கு என் அறிவோ, திறமையோ துணை செய்வதாயில்லை. இதன் பலனாக லத்தீன் பரிட்சையில் தவறிவிட்டேன். இதற்காக வருத்தப் பட்டேனாயினும் மனம் தளர்ந்து விடவில்லை.
இதற்குள் லத்தீன் மொழியில் இன்னும் ஒரு பரீட்சைக்குப் போனால் நன்றாயிருக்கும் என்று எண்ணினேன். விஞ்ஞானத்தில் நான் படித்தது ரசாயனம். மிக மிகக் கவர்ச்சிகரமான படிப்பாக இருந்திருக்க வேண்டிய அது, எனக்கு ருசிக்காமல் போனதற்குக் காரணம், சோதனைகள் நடத்துவதற்கு இடமில்லாது போனதே. இந்தியாவில் அது கட்டாயப் பாடங்களில் ஒன்றாக இருந்தது. ஆகவே, லண்டன் மெட்ரிகுலேஷன் பரீட்சைக்கு அதைப் பாடமாக எடுத்துக்கொண்டேன். என்றாலும், இத்தடவை ரசாயனத்திற்குப் பதிலாக வெப்பம், வெளிச்சத்தைப் பற்றிப் படிப்பதென முடிவு செய்தேன். இதைப் படிப்பது சுலபம் என்றார்கள், எனக்கும் சுலபமாகவே இருந்தது.
மற்றொரு சோதனைக்கு நான் என்னைத் தயார் செய்துகொண்டதோடு மேற்கொண்டும் என் வாழ்க்கையை எளிமையானதாக்கிக் கொள்ளவும் முயன்றேன். அடக்கமான என் குடும்ப நிலைமைக்கு ஏற்றதாக என் வாழ்க்கை முறை இல்லை என்பதை உணர்ந்தேன். பண உதவி வேண்டும் என்று அடிக்கடி நான் தெரிவிக்கும் போதெல்லாம் என் சகோதரர் பெருந்தன்மையோடு பணம் அனுப்பிக்கொண்டே இருந்தார். இப்படிப் பணம் அனுப்புவதற்ககாக அவர் அனுபவிக்கும் அநேக கஷ்டங்களை எண்ணிப் பார்த்தேன். அது மனத்திற்குப் பெரும் வேதனையாக இருந்தது. மாதத்திற்கு எட்டு முதல் பதினைந்து பவுன் வரையில் செலவு செய்து கொண்டிருந்தவர்களில் அநேக மாணவர்களுக்கு உபகாரச் சம்பள வசதி இருந்தது என்பதை அறிந்தேன். மிக எளிய வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த மாணவர்களின் உதாரணமும் என் முன்னால் இருந்தது. என்னைவிட எளிய வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த பல ஏழை மாணவர்களையும் நான் பார்க்க நேர்ந்தது.
அவர்களில் ஒரு மாணவர், சேரிப் பகுதியில் வாரத்திற்கு இரண்டு ஷில்லிங்குக்கு ஓர் அறையை அமர்த்திக் கொண்டு. அதில் இருந்து வந்தார். லோகார்ட்டிலிருக்கும் மலிவான கோக்கோக் கடைகளில் வேளைக்கு இரண்டு பென்ஸ் செலவில் கோக்கோ குடித்து, ரொட்டி தின்று, தம் சாப்பாட்டை முடித்து விடுவார். அவரைப் பின்பற்றுவதென நினைப்பதே என்னால் முடியாது. ஆனால், இரண்டு இரண்டு அறைகளை வைத்துக் கொண்டிருப்பதற்குப் பதிலாக ஓர் அறையை அமர்த்திக் கொள்ளலாம் என்று நினைத்தேன். அப்படிச் செய்தால் மாதத்திற்கு நான்கிலிருந்து ஐந்து புவன் மிச்சப்படும். எளிய வாழ்க்கை நடத்துவதைப் பற்றிய புத்தகங்கள் சிலவற்றைப் படித்தேன். இரண்டு அறை ஜாகையை விட்டுவிட்டு, ஓர் அறையை அமர்த்திக்கொண்டேன்.
ஒரு ஸ்டவ் அடுப்பும் வாங்கினேன். காலை ஆகாரத்தை வீட்டிலேயே சமைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தேன். நான் சமைக்க வேண்டியிருந்ததெல்லாம் ஓட்ஸ் கஞ்சி வைப்பதும், கோக்கோவுக்கு நீர் கொதிக்க வைப்பதுமேயாகையால் அதற்கு இருபது நிமிடங்களுக்கு மேல் ஆகாது. மத்தியான ஆகாரத்தை வெளியில் சாப்பிட்டுக் கொள்ளுவேன். இரவில் வீட்டில் ரொட்டி தின்று. கோக்கோ குடிப்பேன். இவ்விதம் தினத்திற்கு ஒரு ஷில்லிங் மூன்று பென்ஸ் செலவில் என்னால் வாழ முடிந்தது. அது கடுமையாகப் படிக்க வேண்டியிருந்த சமயமும் கூட எளிய வாழ்க்கையை நான் மேற்கொண்டதால், படிப்பதற்கு எனக்கு நேரம் அதிகமாக இருந்ததோடு நான் பரீட்சையிலும் தேறினேன்.
இவ்விதம் வாழ்ந்து வந்ததால் என் வாழ்க்கை எந்த வகையிலும் இன்பமற்றதாயிற்று என்று வாசகர்கள் எண்ணிவிட வேண்டாம். இதற்கு மாறாக, இத்தகைய மாறுதல் என் அக வாழ்வையும், புற வாழ்வையும் ஒருமைப்படுத்தியது. அதோடு இந்த வாழ்க்கை, என் குடும்ப நிலைமைக்கும் ஒத்தாக இருந்தது, முன்பு இருந்ததைவிட அதிகமான உண்மையோடும் கூடியதாயிற்று, என் ஆன்மா அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.
சைவ உணவில் நான் கொண்ட நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. உணவு சம்பந்தமான ஆராய்ச்சி நூல்களைப் படிக்கவேண்டும் என்ற பசியை சால்ட்டின் புத்தகம் எனக்கு உண்டாக்கிற்று. சைவ உணவைப் பற்றிக் கிடைத்த புத்தகங்களையெல்லாம் வாங்கிப் படித்தேன் ஹோவார்டு வில்லியம்ஸ் எழுதியிருந்த உணவு முறையின் தருமம் (The Ethics of Diet) என்ற நூல், ஆதிகாலத்திலிருந்து இன்றைய வரையில் மனிதரின் உணவு வகையைப் பற்றி எழுதப் பெற்ற எல்லாப் புத்தகங்களின் வரலாற்றுச் சரித்திரத்தையும் கூறுகிறது. பித்தகோரஸ், ஏசுநாதரிலிருந்து தற்காலத்தில் வாழ்கிறவர்கள் வரை, எல்லாத் தத்துவஞானிகளும், தீர்க்கதரிசிகளும் சைவ உணவு உட்கொள்ளுபவர்களாகவே இருந்திருக்கிறார்கள். என்பதைக் காட்டவும் இந்த நூல் முயன்றிருக்கிறது.
டாக்டர் அன்னா கிங்க்ஸ் போர்டு எழுதிய உணவுமுறையில் சரியான வழி (The Perfect way in Diet) என்ற நூலும் கவர்ச்சிகரமானது. தேகாரோக்கியத்தையும், சுகாதாரத்தையும் குறித்து டாக்டர் அலின்சன் எழுதியிருந்தவையும் அதே போல உதவியாக இருந்தன. நோயாளியின் ஆகாரத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலமே நோயைக் குணமாக்கும் முறையை அந்த நூலில் அவர் எடுத்துக் கூறியிருந்தார். அவர் சைவ உணவு மாத்திரமே சாப்பிடுகிறவர். ஆகையால், தம்மிடம் வரும் நோயாளிகளுக்கும் கண்டிப்பான சைவ உணவு யோசனையைச் சொல்லி வந்தார். இந்த நூல்களையெல்லாம் படித்ததன் பலனாக, உணவாராய்ச்சி செய்வதும் என் வாழ்க்கையில் முக்கியமான இடம் பெற்றுவிட்டது. ஆரம்பத்தில் தேகசுகத்தை முக்கியமாகக் கருதியே பெரும்பாலும் இந்தச் சோதனைகளைச் செய்து வந்தேன். ஆனால், பிறகோ சமயப்பற்று, இச்சோதனைகளுக்குப் பிரதானமான நோக்கமாயிற்று.
இதன் நடுவில் என் நண்பர் என்னைப் பற்றிக் கவலைப்படுவதை விடவில்லை. மாமிசம் சாப்பிடுவதில் எனக்கு இருக்கும் ஆட்சேபங்களில் நான் பிடிவாதமாகவே இருந்து வந்தால், என் உடல் இளைத்து போவதோடு நான் மண்டுவாகவும் இருந்துவிடுவேன் என்று கருதினார். ஏனெனில், மாமிசம் சாப்பிடாதிருந்தால் ஆங்கிலேய சமூகத்தில் நான் சகஜமாகப் பழக முடியாது என்றும் அவர் நினைத்தார். என் மீது அவர் கொண்டிருந்த அன்பினாலேயே இப்படியெல்லாம் எண்ணினார். சைவ உணவின் பெருமையைப் பற்றி கூறும் நூல்களில் கவனம் செலுத்த நான் தலைப்பட்டு விட்டேன் என்பதை அறிந்ததும், அப் புத்தகங்கள் என் புத்தியைக் குழப்பி, விடுமே என்று பயந்தார். என் படிப்பை மறந்து விட்டு, அந்த ஆராய்ச்சிகளிலெல்லாம் இறங்கிப் பித்தனாகிவிடுவேன் என்றும் அஞ்சினார்.
ஆகையால், என்னைச் சீர்திருத்துவதற்காகச் கடைசி முயற்சி ஒன்றையும் செய்தார். ஒருநாள், நாடகம் பார்க்கப் போகலாம் என்று என்னை அழைத்தார். நாடகம் பார்க்கும் முன்பு இருவரும் ஹால்பர்ன் போஜன விடுதியில் சாப்பிடுவது என்றும் ஏற்பாடு செய்திருந்தார். அந்த போஜன விடுதியின் கட்டடம் அரண்மனை போன்றே எனக்குத் தோன்றியது. மேலும், விக்டோரியா, ஹோட்டலில் இருந்து வந்து விட்டப் பிறகு, நான் சாப்பிடப் போன முதல் பெரிய விடுதியும் இதுதான். அந்த ஹோட்டலில் இருந்த போது நான் திக்குத் திசை தெரியாதவனாகவே இருந்ததால் அங்கே ஏற்பட்ட அனுபவம் எதுவும் எனக்கு இங்கே உதவியாக இருந்துவிடவில்லை. சங்கோஜத்தினால் நான் கேள்வி எதுவும் கேட்கமாட்டேன் என்று எண்ணியே என் நண்பர் என்னை இந்த விடுதிக்கு அழைத்துவரத் திட்டமிட்டு இருந்தார் என்று தெரிந்தது. அநேகர் அங்கே சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் நானும் என் நண்பரும் ஒரு மேiஜயின் முன் சாப்பிட உட்கார்ந்தோம். முதலில் சூப் வந்தது. அது என்ன சூப் என்பது தெரியாமல் திகைத்தேன். ஆனால் அதைப் பற்றி நண்பரிடம் கேட்கும் தைரியம் எனக்கு வரவில்லை.
ஆகவே, பரிசாரகரைக் கூப்பிட்டேன், நண்பர் நிலைமையைக் கவனித்துக் கொண்டார். என்ன விஷயம் என்று என்னைக் கடுமையாகக் கேட்டார். சூப் சைவ சூப்தானா என்று விசாரிக்க விரும்பினேன். என்று அதிகத் தயக்கத்துடனேயே சொன்னேன். நாகரீகமான சமூகத்தில் பழகுவதற்கு நீர்க் கொஞ்சமும் தகுதியில்லாதவர் என்று அவர் ஆத்திரத்தோடு கூறினார். இங்கே சரியானபடி நடந்துகொள்ள உம்மால் முடியாது என்றால் வெளியே போய் விடும். வேறு ஏதாவது ஒரு சாப்பாட்டு விடுதியில் சாப்பிட்டுவிட்டு வந்து எனக்காக வெளியில் காத்திரும் என்றார் இதைக் கேட்டு நான் மகிழ்ச்சியடைந்தேன். வெளியிலும் போய்விட்டேன். பக்கத்திலேயே சைவ உணவு விடுதி ஒன்று இருந்தது. ஆனால் அது அப்பொழுது மூடப்பட்டுவிட்டது. ஆகையால், அன்றிரவு சாப்பாடே இல்லாமல் பட்டினி கிடந்தேன். அந்த நண்பருடன் நாடகத்திற்கு சென்றேன். ஆனால், செய்துவிட்ட அசந்தர்ப்பமான காரியத்தைக் குறித்து அவர் ஒரு வார்த்தைக் கூடப் பேசவில்லை. என்னைப் பொறுத்தவரையிலோ, நான் சொல்வதற்கு எதுவுமில்லை.
எங்களிடையே நட்புமுறையில் ஏற்பட்ட கடைசிப் பூசல் இதுவே. எங்களுக்குள் இருந்த உறவை இது கொஞ்சமும் பாதித்து விடவில்லை. என் நண்பர் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கெல்லாம் காரணம், அவர் என் மீது கொண்டிருந்த அன்பே என்பதை நான் அறியமுடிந்தது. அந்த அன்பைப் போற்றவும் போற்றினேன். எண்ணத்திலும், செயலிலும் எங்களுக்குள் வேற்றுமை இருந்தது. உண்மை என்றாலும் அவர் மீது நான் அதிக மதிப்புக் கொண்டேன்.
அதனால், எனக்காக அவர் கொண்டிருந்த கவலையைப் போக்கி விட வேண்டும் என்று தீர்மானித்தேன். இனி நாகரீகக் குறைவாக நடந்து கொள்ளமாட்டேன். சைவ உணவு விரதம் கொண்ருப்பதால் என்னிடம் இருந்த குறைக்கு ஈடு செய்ய நாகரீக சமூகத்திற்குத் தகுதியான மற்றக் காரியங்களையெல்லாம் அனுசரித்து நாகரீகமாக நடந்து கொள்பவன் ஆகிவிட்டேன் என்று அவருக்கு உறுதியளிக்க வேண்டும் என்பதே என் முடிவு இதற்காக ஆங்கிலக் கனவானாகவே ஆகிவிடுவதற்கு வேண்டிய அசாத்தியமான காரியங்களையெல்லாம் செய்ய முற்பட்டேன்.
பம்பாயில் தைத்த உடைகளையே தறித்துக் கொண்டிருந்தேன். அந்த உடை ஆங்கிலச் சமூகத்திற்குப் பொருத்தமானதன்று என்று எண்ணினேன். ராணுவக்கடற்படை ஸ்டோரில் புதிய உடை வாங்கினேன். பத்தொன்பது ஷில்லிங் விலையில் ஒரு சிம்னி – பாட் தொப்பி வாங்கினேன். அந்தக் காலத்தில் அது மிகவும் அதிகமான விலை. லண்டனில் நாகரீக வாழ்க்கைக்கு மத்திய இடமான பாண்ட் தெருவில், மாலையில் போட்டுக்கொள்ளும் உடுப்பு ஒன்று வாங்கி பத்துப் பவுனை பாழாக்கினேன். உத்தமரும் உயர் குணம் படைத்தவருமான என் சகோதரருக்கு எழுதி கடிகார இரட்டைவட தங்கச் சங்கிலி ஒன்றை அனுப்பி வைக்கும் படியும் செய்தேன். கடையில் கட்டி விற்கும் கழுத்து டை அணிவது நாகரீகத்திற்குச் சரியில்லவாகையால், டை-யை நானே கட்டிக் கொள்ளும் வித்தையயும் கற்றுக்கொண்டேன். இந்தியாவில் குடும்ப நாவிதர் எனக்கு க்ஷவரம் செய்து விடும்போது மாத்திரமே முகக் கண்ணாடியை பார்க்கும் ஆடம்பரம் எனக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.
இங்கோ, ஒரு பெரிய கண்ணாடி முன்னால் நின்று, என்னைப் பார்த்துக் கொள்வதிலும் டை-யைச் சரிபடுத்திக் கொள்வதிலும் நாகரீகத்திற்கு ஏற்றாற்போல் தலைவாரிக்கொள்வதிலும் தினம் 10 நிமிட நேரத்தை வீணாக்குவேன். என் தலை மயிர் மிருதுவானதன்று. ஆகவே, அதைச் சீவிச் ஒவ்வொரு முறையும் தலையில் தொப்பியை வைக்கும் போதும் எடுக்கும் போதும் தலை மயிரை சரிபார்க்க கை தானாகவே தலைக்குப் போய்விடும். நாகரீக சமூகத்தினரின் நடுவே உட்கார்ந்திருக்கும் போது, ஒவ்வொரு சமயமும் கை இதற்காகவே தலையில் வேலை செய்து கொண்டிருக்கும். மற்றொரு நாகரீகப் பழக்கத்தைப் பற்றியோ சொல்லவே வேண்டியதில்லை.
நாகரீகத்தோற்றம் அளிப்பதற்கு இவ்வளவும் போதாதென்று, ஆங்கிலக் கனவானாவதற்க்கு வேண்டியவை என கருதப்பட்ட மற்ற அம்சங்களிலும் கவனத்தை செலுத்தினேன். நடனம் ஆடக் கற்றக் கொள்ளுவதும், பிரெஞ்சு மொழி கற்பதும், பிரசங்கவன்மையும் ஓர் ஆங்கிலக் கனவானுக்கு அவசியம் என்றார்கள். பிரெஞ்சு, பக்கத்து நாடான பிரான்ஸின் மொழி என்பது மாத்திரம் அல்ல, ஐரோப்பா கண்டத்தில் ஒரு நாட்டினர் மற்றொரு நாட்டினருடன் பேசுவதற்குப் பொது மொழியாகவும் அது இருந்தது. எனக்கு அக் கண்டம் முழுவதையும் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஒரு நடனப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து நடனம் கற்றுக் கொள்ளுவதெனத் தீர்மானித்து, சில மாதங்களுக்கு மூன்று பவுன் கட்டணமும் செலுத்தினேன். மூன்று வாரங்களில் இதில் ஆறு பாடங்களைக் கற்றிருப்பேன். ஆனால், தாளகதிக்கு ஏற்ப நடனமாடுவது என்பது என்னால் ஆகவில்லை. பியானோ வாத்திய இசையைப் பின்பற்ற முடியாது போகவே தாளத்தை அனுசரிக்கவும் இயலவில்லை.
அப்படியாயின் பிறகு என்ன செய்வது ? ஒரு சன்னியாசி, எலி உபத்திரவத்தைப் போக்க ஒரு பூனை வளர்த்தார் என்றும் பூனைக்குப் பால் வேண்டுமே என்பதற்காகப் பிறகு ஒரு பசுவும் வளர்த்தார் என்றும், பசுவைக் கவனிக்க ஓர் ஆள் வைத்தார் என்றும், அப்புறம் சன்னியாசி ஒரு குடும்பஸ்தர் ஆகிவிட்டார் என்றும்; ஒரு கதை உண்டு. துறவியின் குடும்பம் வளர்ந்ததைப் போல என்னுடைய ஆசைகளும் வளர்ந்தன. மேனாட்டுச் சங்கீதத்தை ரசிக்கத் தெரிந்து கொள்ளுவதற்காக நான் பிடில் வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். ஆகவே, மூன்று பவுன் கொடுத்து பிடில் வாங்கினேன். அதைச் சொல்லிக் கொடுக்க அதைவிட அதிக தொகை கொடுத்தேன். பிரசங்கத் திறமை வர போதிப்பதற்காக மூன்றாவது ஆசிரியர் ஒருவரைப் பிடித்து அவருக்கு ஆரம்பக் கட்டணமாக ஒரு கினி (21 ஷில்லிங்) கொடுத்தேன் இதற்குப் பாடப் புத்தகமாக பெல் எழுதிய ஸ்டான்டார்டு எலக்யூஷனிஸ்ட் என்ற புத்தகத்தை அவர் சிபாரிசு செய்தார். அதையும் வாங்கினேன். பிட்டின் பிரசங்கம் ஒன்றைப் படிக்கத் தொடங்கினேன்.
ஆனால், ஸ்ரீ பெல் என் காதில் எச்சரிக்கை மணியை அடித்தார் நானும் விழித்துக் கொண்டு விட்டேன்.
வாழ் நாளெல்லாம் நான் இங்கிலாந்திலேயே இருக்கப் போவதில்லை என்பதை எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் அப்படியிருக்க, பேச்சுவன்மையைக் கற்றுக் கொள்ளுவதால் என்ன பயன் ? அதோடு நாட்டியமாடுவது என்னை எப்படி ஒரு கனவான் ஆக்கி விடும் ? பிடில் வாசிக்க நான் இந்தியாவிலும் கற்றுக் கொள்ளலாம். நானோ மாணவன், ஆகவே என் படிப்பையே நான் கவனித்துக் கொண்டு போக வேண்டும். பாரிஸ்டராவதற்கு வேண்டியத் தகுதியையே நான் அடைய வேண்டும். என்னுடைய ஒழுக்கம் என்னைக் கனவானாக்கினால் அதுவே போதும் இல்லையானால் அந்த ஆசையை நான் விட்டுவிட வேண்டியதே.
இவையும், இவை போன்ற எண்ணங்களும் என்னைப் பற்றிக் கொண்டன. பிரசங்கப் பயிற்சிக்காக நான் அமர்த்திக் கொண்டிருந்த ஆசிரியருக்கு இந்த என் எண்ணங்களையெல்லாம் ஒரு கடிதத்தில் எழுதினேன். மேற்கொண்டு பாடல் கற்றுக் கொள்ள வராததற்கு மன்னிக்குமாறும் கேட்டுக் கொண்டேன். நான் கற்றுக் கொண்டதெல்லாம் இரண்டு மூன்று பாடங்களே. இதே போல் நடன ஆசிரியருக்கும் எழுதி விட்டேன். பிடில் வாத்தியாரிடம் நேரில் போய், வந்த விலைக்குப் பிடிலை விற்றுவிடுமாறு கேட்டுக் கொண்டேன். அப்பெண்மணி என்னிடம் நட்புடன் பேசினாள். ஆகவே, நான் தவறான வழியில் போய்க் கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்த விதத்தை அவரிடம் கூறினேன். முற்றும் உருமாறுதல் அடைந்துவிட வேண்டும் என்பதில் நான் கொண்டிருந்த முடிவை ஏற்று அவர் உற்சாகப்படுத்தினார்.
ஆங்கிலக் கனவான் ஆகி விட வேண்டும் என்பதில் எனக்கு இருந்த மோகம் சுமார் மூன்று மாதங்கள் இருந்திருக்கும். அதற்குப் பின் மாணவனாகி விட்டேன். உடை, சம்பிரதாயப்பூர்வமாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது மாத்திரம் பல ஆண்டுகள் என்னிடம் இருந்து வந்தது.
விக்டோரியா ஹோட்டலில் என்னைப் பார்க்கலாம் என்று எதிர்பார்த்துத் திங்கட்கிழமையன்று டாக்டர் மேத்தா அங்கே சென்றார். அங்கிருந்து நாங்கள் போய்விட்டோம் என்பதை அறிந்தார். எங்கள் புதுவிலாசத்தைத் தெரிந்துகொண்டு, எங்கள் அறைகளுக்கு வந்து என்னைப் பார்த்தார். கப்பலில் நான் செய்துவிட்ட தவறினால் என் உடம்பில் படை வந்துவிட்டது. அலம்புவதற்கும் குளிப்பதற்கும் கப்பலில் கடல் நீரையே உபயோகிப்பது நாகரிகத்திற்கு அழகு என்று கருதி நான் சோப்பு உபயோகிப்பது நாகரிகத்திற்கு அழகு என்று கருதி நான் சோப்புத தேய்த்துக் கடல் நீரில் குளித்தேன்.
அதன் பலனாக உடம்பு சுத்தமாவதற்குப் பதிலாகப் பிசு பிசுப்பாயிற்று. இதனால் உடம்பில் படை வந்துவிட்டது. அதை டாக்டர் மேத்தாவுக்குக் காட்டினேன். அவர் காடித் திராவகத்தை போடச் சொன்னார். அதைப் போட்டதும் ஒரே எரிச்சலெடுத்து, நான் கதறி அழுதது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. டாக்டர் மேத்தா, என் அறையையும் அதில் நான் சாமான்கள் வைத்திருந்ததையும் பார்த்தார். அதில் தமக்குக் கொஞ்சமும் திருப்தியில்லை என்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தார். இந்த இடம் உதவாது என்றார். நாம் இங்கிலாந்துக்கு வருவது படிப்பிற்கு மாத்திரம் அல்ல. முக்கியமாக ஆங்கிலேயரின் வாழ்க்கையிம், பழக்க வழக்கங்களிலும் அனுபவம் பெறுவதற்காகவும் வருகிறோம். இதற்கு நீர் ஓர் ஆங்கிலக் குடும்பத்துடன் வசிப்பது நல்லது. ஆனால் நீர் அப்படி வசிப்பதற்கு முன்னால் .. . என்பவருடன் சிறிது காலம் இருந்து பயிற்சி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். அவரிடம் உம்மை அழைத்துப் போகிறேன் என்றும் கூறினார்.
அவருடைய யோசனையை நன்றியறிதலுடன் ஏற்றுக் கொண்டு, அந்த நண்பரின் அறைகளுக்கே குடிபோனேன். அவர் முழு அன்புடன் என்னைக் கவனித்துக் கொண்டார். தமது சொந்த சகோதரனைப்போலவே பாவித்து என்னை நடத்தினார். ஆங்கிலேயரின் நடை உடை பாவனைகளையெல்லாம் எனக்கு கற்றுக் கொடுத்தார். ஆங்கில மொழியில் பேசவும் கற்றுக் கொடுத்தார். என்றாலும், என் சாப்பாட்டு விஷயம்தான் சங்கடமான பிரச்சனையாயிற்று. உப்போ, மசாலையோ இல்லாமல் வேகவைத்த காய்கறிகள் எனக்கு பிடிக்கவே இல்லை. எனக்காக என்ன சமைப்பதென்று புரியாமல் எங்களுக்கு உணவளித்த வீட்டு அம்மாள் திகைத்தார். காலை ஆகாரத்திற்கு ஓட்ஸ் தானியக் கஞ்சி இருக்கும். அது கூடியவரை வயிற்றை நிரப்பும். ஆனால், மத்தியானச் சாப்பாட்டிலும் இரவுச் சாப்பாட்டிலும் எப்பொழுதும் எனக்குப் பட்டினிதான். அந்த நண்பர் மாமிசம் சாப்பிடும்படி ஓயாமல் எனக்கு எடுத்துக் கூறிக் கொண்டே இருந்தார்.
நானும் என் விரதத்தை அதற்குச் சமாதானமாகக் கூறிவிட்டுப் பேசாமல் இருந்துவிடுவேன். மத்தியானச் சாப்பாட்டிற்கும் இரவு உணவுக்கும் எங்களுக்குப் பசலைக் கீரையும் ரொட்டியும் ஜாமும் இருக்கும். நானோ நன்றாகச் சாப்பிடுகிறவன். பெருவயிறு படைத்தவன். ஆனால் இரண்டு மூன்று ரொட்டித் துண்டுகளுக்கு அதிகமாகக் கேட்பது சரியல்லவென்று தோன்றிதால் அதிகமாகக் கேட்கவும் எனக்கு வெட்கம். போதாதற்கு மத்தியானத்திலும், இரவிலும் சாப்பாட்டில் பாலும் கிடையாது. இந்த நிலையைக் கண்டு அந்த நண்பருக்கு வெறுத்துப் போய் விட்டது.
அவர் பின்வருமாறு சொன்னார். நீர் என் சொந்தச் சகோதரனாக இருந்தால் மூட்டை கட்டி ஊருக்கு அனுப்பியிருப்பேன். இங்குள்ள நிலையை அறியாமல், எழுத்து வாசனையே இல்லாத ஒரு தாயாரிடம் செய்து கொடுத்த சத்தியத்திற்கு என்ன மதிப்பு உண்டு ? அது ஒரு விரதமே அல்ல. சட்டப்படி அதை ஒரு விரதமாகவும் கருதுவதற்கில்லை. அத்தகைய ஒரு சத்தியத்தில் விடாப்பிடியாக இருப்பது மூடநம்பிக்கையைத் தவிர வேறொன்றுமில்லை. மேலும், இந்தப் பிடிவாதத்தினால் இங்கே உமக்கு எந்தவிதப் பயனும் உண்டாகாது என்பதையும் கூறுகிறேன். மாமிசத்தை முன்பு சாப்பிட்டதாகவும், அது உமக்குச் சுவையாக இருந்தது என்றும் ஒப்புக் கொள்ளுகிறீர், எங்கே முற்றும் அவசியமில்லையோ அங்கே நீர் அதைச் சாப்பிட்டிருக்கிறீர். அவசியமான இடத்தில் உண்ணமாட்டேன் என்கிறீர், இது என்ன பரிதாபம். *
ஆனால் நான் பிடிவாதமாக இருந்தேன். நாள் தவறாமல் அவர் இதைக் குறித்து என்னிடம் தர்க்கம் செய்துகொண்டே இருப்பார். முடியாது என்று எப்பொழுதும் அவருக்குப் பதில் சொல்லி விடுவேன். அவர் தர்க்கம் செய்யச் செய்ய நானும் அதிகப் பிடிவாதக்காரனாவேன். கடவுளின் பாதுகாப்பைக் கோரித் தினமும் பிரார்த்திப்பேன். அதை அடையவும் அடைவேன். கடவுளைப் பற்றிய ஞானம் அப்பொழுதே எனக்கு இருந்தது என்பதல்ல, நம்பிக்கை தான் அது. எனக்குச் செவிலித் தாயாக இருந்த அந்த நல்ல ரம்பா விதைத்த நம்பிக்கையின் விதையே வேலை செய்து வந்தது.
ஒரு நாள் அந்த நண்பர், பெந்தாம் எழுதிய பயன்படுவதன் தத்தவம் (Theory of Utility) என்ற நூலை எனக்குப் படித்துக் காட்டினார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதன் நடை நான் புரிந்துகொள்ள முடியாத அளவுக்குக் கடினமாக இருந்தது. அதன் பொருளை விளக்கவும் ஆரம்பித்தார். அப்பொழுது நான் சொன்னேன். தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள், இந்த நுட்பமான விஷயங்களெல்லாம் எனக்கு விளங்கமாட்டா. மாமிசம் சாப்பிடுவது அவசியம் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன். ஆனால் நான் கொண்ட விரதத்திற்குப் பங்கம் செய்ய முடியாது. இதைப் பற்றி என்னால் விவாதிக்கவும் முடியாது. அப்படியே உங்களோடு விவாதித்தாலும் வெற்றி பெற முடியாதென்பதும் நிச்சயம். நான் முட்டாள் பிடிவாதக்காரன் என்று என்னை விட்டு விடுங்கள். என் மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பை உணருகிறேன். என் நலத்தில் நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறீர்கள் என்பதையும் அறிகிறேன். எனக்காக நீங்கள் கவலைப்படுவதனாலேயே இதைப் பற்றி அடிக்கடி எனக்கு கூறி வருகிறீர்கள் என்பதையும் அறிவேன். ஆனால், நான் உங்கள் புத்திமதிப்படி நடக்க முடியாது. விரதம் விரதமே. அதற்குப் பங்கம் செய்ய என்னால் ஆகாது.
அந்த நண்பர் ஆச்சரியத்தோடு என்னை உற்றுப் பார்த்தார். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு, நல்லது. இனிமேல் உம்மிடம் வாதம் செய்யமாட்டேன் என்றார். நான் மகிழ்ச்சியடைந்தேன். பிறகு இது விஷயமாக என்னிடம் அவர் விவாதிக்கவே இல்லை. ஆனால், என் விஷயத்தில் கவலைப்படுவதை மாத்திரம் அவர் விட்டுவிட வில்லை.. அவர் புகை பிடிப்பார், குடிப்பார். ஆனால் அப்படி செய்யுமாறு என்னை அவர் கேட்டதே இல்லை. உண்மையில் இந்த இரண்டு பழக்கங்களும் எனக்குக் கூடாது என்றே சொல்லி வந்தார். மாமிசம் சாப்பிடாவிடில் நான் பலவீனமாகிவிடுவேன், அதனால், இங்கிலாந்தில் நான் சுகமாக வசிக்க முடியாது போகும் என்பது ஒன்றே அவருடைய கவலையெல்லாம்.
இப்படி ஒரு மாதம் நான் பயிற்சி பெற்றேன். நண்பரின் வீடு ரிச்மாண்டில் இருந்தது. வாரத்தில் இரண்டொரு முறைகளுக்கு மேல் லண்டனுக்குப் போவது சாத்தியமில்லை. ஆகவே, லண்டனுக்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு குடும்பத்தோடு என்னைத் தங்க வைக்க வேண்டும் என்று டாக்டர் மேத்தாவும் ஸ்ரீ தளபத் ராம் சுக்லாவும் முடிவு செய்தனர். மேற்குக் கென்சிங்கனில் ஓர் ஆங்கிலோ இந்தியரின் வீட்டைக் கண்டுபிடித்து, ஸ்ரீ சுக்லா என்னை அங்கே கொண்டு போய் விட்டார். அந்த வீட்டுக்கார அம்மாள் விதவை. என்னுடைய விரத்தைக் குறித்து அவரிடம் கூறினேன். என்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளுவதாக அம்மூதாட்டி வாக்களித்தார். அவர் வீட்டில் வசிக்கலானேன். அங்கும் கூட அநேகமாக நான் பட்டினி கிடக்கவே நேர்ந்தது.
மிட்டாயும் பலகாரங்களும் அனுப்புமாறு வீட்டுக்கு எழுதியிருந்தேன். ஆனால், எதுவும் இன்னும் வந்து சேரவில்லை. அங்கே கொடுத்த சாப்பாடெல்லாம் எனக்குச் சப்பென்று இருந்தது. சாப்பாடு பிடித்திருக்கிறதா என்று அம்மூதாட்டி தினமும் என்னைத் கேட்டார். ஆனால், அவர்தான் என்ன செய்வார் ? முன்பு இருந்தது போலவே இன்னும் எனக்கும் கூச்சம் இருந்தது. முதலில் பரிமாறியதை விட அதிகமாக எதையும் கேட்கும் துணிவு எனக்கு இல்லை. அந்த அம்மாளுக்கு இரு பெண்கள். அதிகப்படியாக இரண்டொரு ரொட்டித் துண்டுகளை அப்பெண்கள் வற்புறுத்தி எனக்கு வைப்பார்கள். ஆனால், ஒரு முழு ரொட்டிக்குக் குறைந்த எதனாலும் என் வயிறு நிரம்பாது என்பது அவர்களுக்குத் தெரியவே இல்லை *
ஆனால், இதற்குள் எனக்குக் கால் முளைத்துவிட்டது. இன்னும் என் பாடங்களை நான் படிக்க ஆரம்பிக்கவில்லை. ஸ்ரீ சுக்லா தூண்டியதன் பேரில் அப்பொழுதுதான் பத்திரிகைகளைப் படிக்க ஆரம்பித்தேன். இந்தியாவில் நான் செய்திப் பத்திரிகைகளைப் படித்ததே இல்லை. இங்கே தொடர்ந்து படித்து வந்தால் பத்திரிகைகளை, படிப்பதில் எனக்குச் சுவை ஏற்பட்டது. டெய்லி நியூஸ், டெய்லி டெலிகிராப் பால்மால் கெஜட் ஆகிய பத்திரிகைகளைப் எப்பொழுதும் மேலெழுத்வாரியாகப் படிப்பேன். இதற்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகாது. ஆகவே, அங்கும் இங்கும் சுற்ற ஆரம்பித்தேன். சைவச் சாப்பாடு விடுதி எங்காவது இருக்கிறதா என்று தேட முற்பட்டேன். அத்தகைய சாப்பாட்டு விடுதிகள் நகரில் இருக்கின்றன என்று நான் தங்கியிருந்த வீட்டுக்கார அம்மாள் கூறியிருந்தார். தினம் பத்துப் பன்னிரண்டு மைல் தூரம் சுற்றுவேன். முலிவான சாப்பாட்டு விடுதிக்குப் போய் அங்கே வயிறு நிறைய ரொட்டியைத் தின்பேன். என்றாலும், எனக்கு திருப்தி ஏற்படாது. இவ்வாறு சுற்றி அலைந்து வரும் போது ஒரு நாள் பாரிங்டன் தெருவில் ஒரு சைவச் சிற்றுண்டிச் சாலையைக் கண்டுபிடித்தேன். அதைக் கண்டதும், தன் மனத்துக்கு இனியதைக் கண்டதும் ஒரு குழந்தை என்ன குதூசலம் ஏற்படுமோ அவ்வளவு ஆனந்தம் எனக்கு உண்டாயிற்று. அதற்குள் போகும் முன்பு, கதவுக்கு அருகில் கண்ணாடி ஜன்னலில் விற்பனைக்காகப் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். அவற்றில் சால்ட் எழுதிய சைவ உணவின் முக்கியத்துவம் என்ற புத்தகமும் இருந்தது. ஒரு ஷில்லிங் கொடுத்து அதை வாங்கிக் கொண்டு நேரே சாப்பாட்டு அறைக்குச் சென்றேன். இங்கிலாந்துக்கு வந்த பிறகு நான் வயிறார உண்ட முதல் சாப்பாடு இதுதான். கடவுள் எனக்குத் துணை செய்துவிட்டார்.
சால்ட் எழுதிய அந்த நூலை ஒரு வரிவிடாமல் படித்து முடித்தேன். அது என் மனதைப் பெரிதும் கவர்ந்தது. அந்த புத்தகத்தைப் படித்த நாள் முதற்கொண்டே, என் இஷடத்தின் பேரில் நான் சைவ உணவு விரதம் பூண்டவனானேன் என்று நான் சொல்லிக் கொள்ள முடியும். என் தாயாரின் முன்பு நான் விரதம் எடுத்துக் கொண்ட நாளை வாழ்த்தினேன். சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும், நான் எடுத்துக் கொண்டிருந்த விரதத்திற்காகவுமே இதுவரை நான் புலால் உண்ணாமல் இருந்து வந்தேன் ஆனால், அதே சமயத்தில் ஒவ்வோர் இந்தியரும் மாமிசம் சாப்பிடுபவராக வேண்டும் என்ற விரும்பி வந்தேன். ஒரு நாள் நானும் தாராளமாகவும், பகிரங்கமாகவும் அப்படிச் சாப்பிடுபவன் ஆகவேண்டும் என்றும், மற்றவர்களையும் இதற்குத் திருப்ப வேண்டும் என்றும் கருதி, அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால், இப்பொழுது நான் சைவ உணவு விரதத்தை விரும்பி மேற்கொண்டுவிட்டதால், இதைப் பரப்புவதே என் வாழ்வின் லட்சியமாயிற்று.
கப்பல் பிரயாணத்தில் எனக்கு மயக்கம் எதுவும் வரவே இல்லை. ஆனால், நாளாக ஆக எனக்கு அலுப்புத்தான் அதிகமாக இருந்தது. பிரயாணிகளின் சாப்பாட்டு வசதிக்காரியஸ்தரிடம் பேசக்கூட எனக்குக் கூச்சமாக இருந்தது. ஆங்கிலத்தில் பேசி எனக்குப் பழக்கமே இல்லை. நாங்கள் இருந்த இரண்டாம் வகுப்பில் ஸ்ரீ மஜ்முதாரைத் தவிர மற்றெல்லோரும் ஆங்கிலேயர்கள். அவர்களுடன் என்னால் பேச முடியவில்லை. அவர்கள் என்னிடம் வந்து ஏதேனும் பேசினால், அவர்கள் சொல்லுவது என்ன என்பதைப் புரிந்துகொள்ளுவதும் கஷ்டமாக இருந்தது. புரிந்து கொண்டாலும் என்னால் பதில் சொல் முடியவில்லை. பேசுவதற்கு முன்னால் ஒவ்வொரு வாக்கியத்தையும் மனத்திற்குள் நான் சொல்லிப் பார்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. கத்தியையும் முள்ளையும் கொண்டு எடுத்துச் சாப்பிடவும் எனக்குத் தெரியாது. பரிமாறப் போகும் உணவு வகையைக் குறிப்பிடும் சீட்டில் கண்டவைகளில் மாமிசம் கலவாத பண்டம் எது என்று கேட்டுத் தெரிந்து கொள்ளவும் அப்பொழுது எனக்குத் தைரியமில்லை. ஆகையால், சாப்பாட்டு அறைக்குச் சென்று உட்கார்ந்து நான் சாப்பிடவே இல்லை. என் அறையிலேயே சாப்பிட்டு விடுவேன் நான் சாப்பிட்டதெல்லாம் பெரும்பாலும் நான் உடன்கொண்டு வந்திருந்த மிட்டாயும் பழங்களுமே. ஸ்ரீ மஜ்முதாருக்கு இத்தகைய சங்கடம் எதுவுமே தோன்றவில்லை. அவர் எல்லோருடனும் சகஜமாகப் பழகிக் கொண்டிருந்தார். நாளெல்லாம் நான் அறைக்குள்ளேயே அடைப்பட்டுக் கிடப்பேன். மேல் தளத்தில் அதிகம் பேர் இல்லாதபோதுதான் அங்கே போகத் துணிவேன். ஆனால் ஸ்ரீ மஜ்முதாரோ மேல் தளத்திற்கு அடிக்கடி போய் உலாவுவார். பிரயாணிகளுடன் கூடிப் பழகி, அவர்களுடன் தாராளமாகப் பேசும்படி அவர் எனக்கு அடிக்கடி சொல்லுவார். வக்கீல்களுக்குப் பேச்சுச் சாமர்த்தியம் இருக்க வேண்டும் என்பார், வக்கீல் தொழிலில் தமது அனுபவங்களையும் எடுத்துக் கூறுவார். ஓர் அந்நிய மொழியில் பேசும்போது தவறு ஏற்படுவது சகஜம் என்றும், ஆகையால் அதைப் பொருட்படுத்தாமல் சாத்தியமான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆங்கிலேயத்திலேயே பேசும்படியாகவும் எனக்கு அவர் புத்திமதி கூறினார். ஆனால், அவர் என்ன சொல்லியும் எனக்கு இருந்த கூச்சத்தை மாத்திரம் போக்கடிக்கவே முடியவில்லை.
ஆங்கிலப் பிராணி ஒருவர், என்மீது பிரியம் கொண்டு என்னைப் பேச்சுக்கு இழுத்தார். அவர் என்னைவிட் மூத்தவர். நான் என்ன சாப்பிட்டேன், நான் யார், நான் எங்கே போகிறேன். நான் இப்படிக் கூச்சப்படுவது ஏன் என்றெல்லாம் அவர் என்னை விசாரித்தார். சாப்பாட்டு அறைக்கு வந்து எல்லோருடனும் சாப்பிடும்படியும் சொன்னார். மாமிசம் சாப்பிடுவதில்லை என்று நான் பிடிவாதமாகக் கூறியதைக் கேட்டுச் சிரித்தார். நாங்கள் செங்கடலை அடைந்ததும் அவர் நட்பும் முறையில் பின்வருமாறு கூறினார். அதெல்லாம் இதுவரை மிகவும் சரி. ஆனால் பிஸ்கே குடாக்கடல் போய்ச் சேர்ந்ததும் உம்முடைய தீர்மானத்தையெல்லாம் மாற்றிக் கொண்டுவிட வேண்டியதுதான். இங்கிலாந்தில் குளிர் அதிகமாகையால் மாமிசம் சாப்பிடாமல் அங்கே யாருமே உயிர் வாழ முடியாது.
அங்கும் மாமிசம் சாப்பிடாமல் மனிதர் இருக்க முடியும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் என்றேன்.
அதெல்லாம் வெறும் கதை. இதை நிச்சயமாக நம்பும். புலால் உண்ணாமல் அங்கே இருப்பர் எனக்குத் தெரிந்த வரையில் யாருமே இல்லை. நான் குடிக்கிறேன். ஆனால் உம்மையும் குடிக்குமாறு நான் சொல்லவில்லையல்லவா ? மாமிசம் சாப்பிடாமல் அங்கே உயிர் வாழ முடியாதாகையால் நீர் புலால் உண்டே ஆக வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.
உங்கள் அன்பான புத்திமதிக்கு என் நன்றி, ஆனால், புலாலலைத் தீண்டுவதில்லை என்று என் அன்னைக்கு நான் சத்தியம் செய்து கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். ஆகையால் அதைத் தின்னுவது என்பதை நான் நினைப்பதற்கும் இல்லை. அதைத் தின்னாமல் இருப்பது சாத்தியமில்லை என்று கண்டால் நான் இந்தியாவுக்கு திரும்பி விடுவேனேயன்றி அங்கே இருக்க வேண்டும் என்பதற்காக மாமிசம் தின்னமாட்டேன் என்றேன்.
பிஸ்கே குடாக்கடலை அடைந்தோம். மாமிசம் திண்பதும் குடிப்பதும் அவசியம் என்ற உணர்ச்சி அப்பொழுதும் எனக்கு ஏற்படவில்லை. மாமிசமே சாப்பிடாமல் இருந்ததற்கு அத்தாட்சிப் பத்திரங்களைச் சேகரித்து வைத்துக் கொள்ளுமாறு சொல்லியிருந்தார்கள். ஆதலால், அத்தகைய அத்தாட்சி ஒன்று எழுதித் தருமாறு அந்த ஆங்கில நண்பரிடம் கேட்டேன். அவரும் மகிழ்ச்சியுடன் கொடுத்தார். அதைக் கொஞ்ச காலம் பத்திரமாக வைத்தும் இ,ருந்தேன். ஆனால் மாமிசம் சாப்பிடுகிறவர்களும் அத்தகயை அத்தாட்சியைப் பெற்றுவிட முடியும் என்பதை நான் பின்னால் கண்டது அத்தாட்சி பத்திர விஷயத்தில் எனக்கிருந்த மோகம் போய் விட்டது. என் வார்த்தையில் நம்பிக்கை இல்லையென்றால் இவ்விஷயத்தில் அத்தாட்சிப் பத்திரம் வைத்திருந்துதான் என்ன பயன் ?
முடிவாக, சௌத்தாம்டன் துறைமுகம் போய்ச் சேர்ந்தோம். அன்று சனிக்கிழமை என்றே எனக்கு ஞாபகம். கப்பலில் இருந்த போது கறுப்பு உடை தரித்திருந்தேன். என் நண்பர்கள் தயாரித்துக் கொடுத்த வெள்ளைக் கம்பளி உடையைக் கப்பலிருந்து இறங்கும்போது போட்டுக்கொள்ளுவது என்று வைத்திருந்தேன். இறங்கம்போது வெள்ளை உடை அணிந்தால் அழகாயிருக்கும் என்று நினைத்தேன்.
ஆகவே, வெள்ளை கம்பளி ஆடை உடுத்திக் கொண்டு இறங்கினேன். அப்பொழுது செப்டம்பர் மாதக் கடைசி, அத்தகைய உடை உடுத்தியவன் நான் ஒருவனே என்பதைக் கண்டேன். மற்றவர்களெல்லாம் கிரிண்ட்லே கம்பெனியின் ஏஜெண்டிடம் தங்கள் சாமான்களை எல்லாம் ஒப்படைத்து விட்டு இறங்கினார்கள். நானும் அப்படியே செய்ய வேண்டும் என்று என் சாமான்களை – சாவி உட்பட அந்த ஏஜெண்டிடம் ஒப்பித்தேன்.
என்னிடம் நான்கு அறிமுகக் கடிதங்கள் இருந்தன. டாக்டர் பி.ஜே. மேத்தா, ஸ்ரீ தளபத்ராம் சுக்லா, ராஜகுமாரர் ரஞ்சித் சிங் ஜி, தாதாபாய் ஆகிய நால்வருக்குமே அக்கடிதங்கள். லண்டனில் விக்டோரியா ஹோட்டலில் போய்த் தங்கும்படி கப்பலில் யாரோ ஒருவர் சொன்னார். அதன்படி நானும் ஸ்ரீ மஜ்முதாரும் அங்கே போனோம். நான் ஒருவனே வெள்ளையுடையுடன் இருப்பது எனக்குப் பெரிய அவமானமாக இருந்தது. மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. ஆகையால், என் சாமான்களைக் கிரிண்ட்லே கம்பெனியார் அதற்கு மறுநாளே கொண்டுவந்து சேர்பார்கள் என்று ஹோட்டலில் கூறியதும் எனக்கு ஆத்திரம் வந்துவிட்டது.
டாக்டர் மேத்தாவுக்கு சௌத்தாம்டனிலிருந்து தந்தி கொடுத்திருந்தேன். அன்றிரவு எட்டு மணிக்கு அவர் என்னைப் பார்க்க வந்தார். மிக்க அன்புடன் எனக்கு முகமன் கூறினார். நான் வெள்ளை கம்பளி உடை தரித்திருப்பதைப் பார்த்துச் சிரித்தார். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது அவருடைய உயரத் தொப்பியை எடுத்தேன். அது அவ்வளவு மிருதுவாக இருக்கிறது என்பதை அறிய அதைத் தடவி பார்த்தேன். தெரியாமல் எதிர்ப்புறமாகத் தடவி விட்டேன். அது ஒரு பிராணியின் மிருதுவான ரோமத்தால் ஆனது. எனவே, நான் தடவியதனால் அந்த ரோமமெல்லாம் கலைந்து விட்டது. நான் செய்ததையெல்லாம் ஒரு மாதிரி கோபத்துடன் டாக்டர் மேத்தா பார்த்துவிட்டு என்னைத் தடுத்தார். ஆனால் , விஷயம் நடந்தது நடந்துவிட்டது. இச்சம்பவம் வருங்காலத்திற்கு எனக்கு ஓர் எச்சரிக்கையாயிற்று. ஐரோப்பிய மரியாதைச் சம்பிரதாயங்களில் நான் கற்ற முதல் பாடம் இது அந்தச் சம்பிரதாய விவரங்களைப் பற்றி டாக்டர் மேத்தா வேடிக்கையாகவே எனக்குப் பாடம் கற்பித்தார். பிறருடைய சாமான்களைத் தொடரீர் என்றார். ஒருவர் முதன்முதலில் அறிமுகமானதும் இந்தியாவில் கேட்பதுபோல் அவரிடம் கேள்விகளெல்லாம் போடாதேயும், இரைந்து பேசக்கூடாது பேசிக்கொண்டிருக்கையில் இந்தியாவில் நானம் கூப்பிடுவதைப்போல் யாரையும், ஸார், என்று கூப்பிடக்கூடாது. வேலைக்காரர்களும் சீழிருப்பவர்களும் மாத்திரமே அப்படிக் கூப்பிடுவார்கள் என்றார். இப்படியெல்லாம் பல விஷயங்களை எனக்கு போதித்தார். ஹோட்டலில் தங்கினால் செலவு அதிகமாகும் என்றும், தனிப்பட்ட ஒரு குடும்பத்தினருடன் தங்கியிருப்பதே நல்லது என்றும் சொன்னார். அதைப் பற்றித் திங்கட்கிழமை யோசிப்பதென்று ஒத்திவைத்தோம்.
ஹோட்டல் வாசம் – எனக்கும் சரி, ஸ்ரீ மஜ்முதாருக்கும் சரி, சங்கடமானதாக இருந்தது. அதோடு, செலவும் அதிகமாயிற்று மால்டாவிலிருந்து எங்களுடன் கப்பலில் வந்த ஒரு சிந்திக்காரர் ஸ்ரீ மஜ்முதாருக்கு நண்பரானார். லண்டன் அவருக்குப் புதிதல்ல ஆகவே, நாங்கள் தங்குவதற்கு அறை பார்த்துத் தருவதாக அவர் சொன்னார். நாங்களும் ஒப்புக் கொண்டோம். திங்கட்கிழமை எங்கள் சாமான்கள் வந்த சேர்ந்ததும் ஹோட்டல் கணக்கைத் தீர்த்து விட்டு, சிந்தி நண்பர் எங்களுக்காக வாடகைக்கு அமர்த்திய அறைகளில் இருக்கப் போய்விட்டோம். ஹோட்டலுக்கு நான் 3 பவுன் கொடுக்கவேண்டி வந்தது * அந்தத் தொகையைக் கண்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன் என்பது எனக்கு நினைவிருக்கிறது. செலவு இவ்வளவு அதிகமாக இருந்ததே ஒழிய, அங்கே நான் எதுவும் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன் என்றே சொல்ல வேண்டும் * அங்கே கொடுத்த சாப்பாட்டில் எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை. ஓர் உணவு எனக்குப் பிடிக்கவில்லை என்று வேறொன்றைக் கொண்டுவரச் சொன்னால், இரண்டுக்கும் சேர்த்துப் பணம் கொடுக்க வேண்டி வந்தது. இதெல்லாம் இப்படி இருக்க உண்மை என்னவென்றால் பம்பாயிலிருந்து கொண்டு வந்த ஆகாரதிகளைக் கொண்டே நான் காலம் கழிக்கலானேன்.
புது அறையிலும் எனக்கு மன நிம்மதியே இல்லை. வீட்டு நினைவும், நாட்டு நினைவுமே எனக்கு இடைவிடாமல் இருந்து கொண்டிருந்தன. என் அன்னையின் அன்பு அடிக்கடி என் நினைவுக்கு வரும். இரவில் கண்ணீர் பெருகி, கன்னங்களில் அருவியாக வழியும். வீட்டைப் பற்றிய எல்லாவித நினைவுகளும் வந்துவிடவே தூங்கவே முடியவில்லை. என் துயரத்தை யாரிடமாவது சொல்லி ஆறுதல் அடையலாம் என்றால் அதற்கும் வழியில்லை. என் துயரத்தை யாரிடமாவது சொல்லிக்கொள்ள முடிந்திருந்தாலும் அதனாலும் ஒரு பயனும் இராது. ஏனெனில், அறிவேன் மக்கள் அவர்களுடைய பழக்க வழக்கங்கள் அவர்களுடைய வீடுகள் எல்லாமே விசித்திரமாக இருந்தன. ஆங்கில மரியாதை முறைகள் விஷயத்திலோ எனக்கு எதுவுமே தெரியாது. ஆகையால், எங்கே தவறு செய்துவிடுவேனோ என்பதற்காக உணவு விரதமோ அதிகப்படியானதோர் அசௌகரியம். நான் சாப்பிடக்கூடிய ஆகார வகைகளும் ருசியற்றவைகளாகவும் சப்பென்றும் இருந்தன. எனவே, இருதலைக் கொள்ளி எறும்பு போல் ஆனேன். இங்கிலாந்து வாசத்தை என்னால் சகிக்க முடியவில்லை ஆனால், இந்தியாவுக்கு திரும்பிவிடுவது என்பதையோ நினைக்கக்கூட முடியாது. வந்தது வந்துவிட்டேன், மூன்று ஆண்டுகள் இருந்து முடித்துவிட வேண்டும் என்று கூறியது, என் அந்தராத்மா.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் கம்சனை வதம் செய்துவிட்டு, கம்சனின் சகோதரர்கள் கொல்லப்பட்டதன் பின் கம்சனால் சிறைப்படுத்தப் பட்டிருந்த தம் தாய் தந்தையரான வசுதேவரையும் தேவகியையும் விடுவித்தார்கள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் அவர்களின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தார்கள்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களின் மகனாகப் பிறந்த காரணத்தால் அவர்கள் மிகுந்த தொல்லைகளுக்கு உள்ளாக நேரிட்டது. ஏனெனில் தேவகியின் எட்டாவது குழந்தை கம்சனைக் கொல்லும் என்று வசுதேவர், தேவகியின் திருமண ஊர்வலத்தன்று ஆகாயத்திலிருந்து அசரீரி கூறிற்று. அதன் காரணமாகவே கம்சன் அவர்களைத் துன்புறுத்தினான்.
தேவகியும் வசுதேவரும் கிருஷ்ணர் முழுமுதற் கடவுள் என்பதை நன்கு அறிந்திருந்தார்கள். எனவே கிருஷ்ணர் அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்கினாலும் அவர்கள் அவரைத் தழுவிக் கொள்ளாமல் முழுமுதற் கடவுள் சொல்வதைக் கேட்பதற்கு ஆவலாய் நின்றிருந்தார்கள். வசுதேவரும் தேவகியும் மிகுந்த மரியாதையுடன் நின்று கொண்டிருந்ததைக் கண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவர்கள் தம்மையும் பலராமரையும் குழந்தைகளாகக் காணும்படி தம் யோகமாயையை வியாபிக்கச் செய்தார். அதன்பின் வசுதேவர் மற்றும் தேவகியுடன் மிகுந்த மரியாதையுடன் பேசலானார்:
அன்புள்ள தந்தையே, தாயே எங்கள் உயிரைப் பற்றி நீங்கள் இருவரும் மிகவும் கவலைப்பட்டிருந்தாலும், எங்களை உங்கள் குழந்தைகளாக, வளர்ந்து வரும் சிறுவர்களாக, இளைஞர்களாக நீங்கள் காணும் இன்பம் உங்களுக்கு இல்லாமல் போய்விட்டது. என்று கூறினார்.
வசுதேவரும் தேவகியும் தம் மகன்களான கிருஷ்ணர் மற்றும் பலராமரின் பாதுகாப்பில் மிகுந்த கவலை கொண்டிருந்தார்கள். அதன் காரணமாகவே கிருஷ்ணர் தோன்றியவுடன் அவரை நந்தமகாராஜாவின் இல்லத்திற்கு இடம் மாற்றினார்கள். பலராரும் தேவகியின் கர்ப்பத்திலிருந்து ரோகிணியின் கர்ப்பத்துக்கு மாற்றப்பட்டார். கிருஷ்ணரும் பலராமரும் பத்திரமாக இருக்க வேண்டுமென்று வசுதேவரும் தேவகியும் எண்ணியதால் அவர்களின் குழந்தைப் பருவ லீலைகளை உடனிருந்து கண்டு மகிழ முடியாமற் போயிற்று.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் கூறினார்: துரதிஷ்ட வசமாக எங்கள் விதியின்படி, நாங்கள் எங்கள் பெற்றோர்களின் பார்வையில் பால்ய காலத்தை எங்கள் வீட்டில் கழித்து மகிழ முடியாமல் போயிற்று. அன்புள்ள தாய் தந்தையரே, பௌதிக இருப்பின் நன்மைகளைப் பெற்று அனுபவிக்கும் வாய்ப்பைத் தரும் இவ்வுடலை அளித்த பெற்றோர்களுக்கு ஒருவன் செலுத்த வேண்டிய நன்றிக் கடன் உண்டு. வேதக் கோட்பாட்டின்படி, மனித வாழ்வு ஒருவன் மதச் சடங்குகளை நிறைவேற்றவும், விருப்பங்களைப் பூர்த்தி செய்யவும், செல்வங்களைப் பெறவும் உதவுகிறது.
ஜட வாழ்விலிருந்து விடுதலை பெறுவதும் இம் மனித வாழ்வில் மட்டுமே சாத்தியமாகிறது. தாய் தந்தையரின் கூட்டுறவால் இவ்வுடல் உருப்பெறுகிறது. ஒவ்வொரு மனிதனும் தன் தாய் தந்தைக்குக் கடமைப்பட்டவன். அக்கடனை அவனால் தீர்க்க முடியாதென்பதையும் அவன் உணரவேண்டும். வளர்ந்த பின் தன் தாய் தந்தையருக்குத் திருப்தி தரும் வகையில் நடந்து கொள்ளாதவன், அல்லது அவர்களுக்குத் தேவையான பொருளுக்கு ஏற்பாடு செய்யாதவன் மரணத்துக்குப் பின் தன் சதையைத் தானே உண்ணும் தண்டனையைப் பெறுவது நிச்சயம்.
வயதான பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும், ஆன்மீக குருவுக்கும், பிராமணர்களுக்கும், தன்னைச் சார்ந்திருக்கும் பிறருக்கும் உதவக் கூடிய நிலையில் இருந்தும் உதவாமல் போனால் அவன் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாலும் மரித்தவனாகவே கருதப்படுகிறான். அன்புள்ள தாய் தந்தையரே, எங்கள் பாதுகாப்பில் எப்போதும் நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறீர்கள். ஆனால் துரதிஷ்ட வசமாக நாங்கள் உங்களுக்கு எவ்விதமான சேவையையும் செய்ய முடியாமற் போய்விட்டது. இன்றுவரை எங்கள் காலமெல்லாம் வீணாகிவிட்டது. எங்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் நாங்கள் உங்களுக்குச் சேவை செய்ய இயலவில்லை. எனவே இந்தத் தவறுக்கு நீங்கள் எங்களை மன்னிக்க வேண்டும்.
இவ்வாறு முழுமுதற் கடவுள் அறியாத ஒரு குழந்தையைப் போல் இனிய சொற்களில் பேசுவதைக் கேட்ட வசுதேவரும் தேவகியும் குழந்தைப் பாசத்தால் உந்தப்பட்டு மிகுந்த மகிழ்ச்சியுடன் கிருஷ்ணரையும் பலராமரையும் தழுவிக் கொண்டார்கள். கிருஷ்ணரின் சொற்களைக் கேட்டு ஆச்சரியத்தில் மூழ்கியவர்களாய் அவர்கள் பேசவோ, கிருஷ்ணருக்குப் பதில் கூறவோ இயலாமற் போனார்கள். அவர்கள் இருவரையும் அன்புடன் தழுவிக் கொண்டு இடைவிடாது கண்ணீர் விட்டபடி இருந்தார்கள்.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
கம்சனுக்கு எட்டு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களுள் மூத்தவர் கங்கர். எல்லோரும் கம்சனுக்கு இளையவர்கள். தம் மூத்த சகோதரனான கம்சன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கொல்லப் பட்டதை அறிந்ததும் அவர்கள் ஒன்று கூடிப் பெருங் கோபத்துடன் கிருஷ்ணரைத் தாக்கிக் கொல்ல விரைந்தார்கள். கம்சனும் அவனின் சகோதரர்களும் கிருஷ்ணரின் தாய் மாமன்மார் ஆவார்கள். அதாவது தேவகியின் சகோதரர்கள். எனவே கிருஷ்ணர் கொன்றது தனது தாய்மாமனான கம்சனை. இது வேதப் பண்பாடுகளுக்குப் புறம்பானது. கிருஷ்ணர் வேதக் கட்டளைகளுக்கு அப்பாற் பட்டவரென்றாலும், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டும் அவர் வேதக் கோட்பாடுகளை மீறுகிறார்.
கம்சனை வேறு யாராலும் கொல்ல முடியாதாகையால் கிருஷ்ணர் அவனைக் கொல்ல வேண்டியதாயிற்று. கம்சனின் எட்டு சகோதரர்களைப் பொறுத்தவரை பலராமர் அவர்களைக் கொன்றார். பலராமரின் தாயாகிய ரோகிணி வசுதேவரின் மனைவியானாலும் கம்சனின் சகோதரி அல்ல. பலராமர் கைக்கெட்டிய ஆயதத்தைக் கொண்டு, சிங்கம், மான் கூட்டத்தை கொல்வது போல் கம்சனின் சகோதரர்களை ஒருவர் பின் ஒருவராகக் கொன்றார். இவ்வாறு கிருஷ்ணரும் பலராமரும், பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷணர் உறுதி செய்ததுபோல், பக்தர்களைக் காத்து, தேவர்களின் பகைவர்களான துஷ்ட அரக்கர்களை அழித்து தர்மத்தை நிலை நிறுத்துவதற்காக முழுமுதற் கடவுள் அவதரிக்கிறார் என்பதை நிரூபித்துக் காட்டினார்கள்.
உயர் நிலைக் கிரகங்களில் இருந்த தேவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரையும் பலராமரையும் பாராட்டி மலர் மாரி பொழிந்தார்கள். கம்சன் மற்றும் அவனின் எட்டு சகோதரர்களின் மனைவியர் தம் கணவர்களின் திடீர் மரணத்தால் துக்கமடைந்து, கண்ணீர் வடித்தார்கள். தங்கள் கணவர்களின் உடல்களைக் கைகளில் அணைத்தபடி உரக்கக் கதறி அழுதார்கள். இறந்த சடலங்களுடன் அவர்கள் இவ்வாறு பேசினார்கள்:
அண்பார்ந்த கணவரே, நீங்கள் அன்பு மிகுந்து உங்களைச் சார்ந்தவர்களுக்கு ஆதரவாயிருந்தீர்கள். இப்போது உங்கள் மரணத்துக்குப் பின் நாங்களும் இறந்தவர்களாகி விட்டோம். எங்கள் மங்கலம் பறிக்கப்பட்டு விட்டது. உங்களது மரணத்தால் தனுர் யாகம் போன்ற மங்கள காரியங்களெல்லாம் தடைப்பட்டிருக்கின்றன. அன்புள்ள கணவர்களே, குற்றம் அற்றவர்களிடம் நீங்கள் அநியாயமாக நடந்து கொண்டீர்கள், அதனால் கொல்லப்பட்டீர்கள். நல்லவர்களுக்குத் தொல்லை தருபவர்கள் தண்டிக்கப்படுவது இயற்கை விதி.
கிருஷ்ணர் முழுமுதற் கடவுளென்பது தெரிந்ததே. அவரே எல்லாவற்றின் உன்னத அதிகாரி, உன்னத அனுபவிப்பாளர். எனவே அவரது அதிகாரத்துக்குப் பணியாத எவரும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அப்படிப்பட்டவனுக்கு உங்களுக்கு நேர்ந்தது போல் மரணம் சம்பவிக்கும். என்று புலம்பினார்கள். தன் மாமிகளிடம் அனுதாபம் கொண்ட கிருஷ்ணர் இயன்றவரை அவர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினார். இறந்த அரச குமாரர்களுக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சகோதரியின் மகனாகையால் ஈமச் சடங்குகளை அவரே நேரில் கவனித்தார்.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும்; மல்யுத்தக் களத்தினுள் மாபெரும் மல்லர்கள் யாவரையும் கொன்றபின் எஞ்சியிருந்த மல்லர்கள் உயிருக்குப் பயந்து கோதாவை விட்டு ஓடினார்கள். கிருஷ்ணரின் நண்பர்களான ஆயர் குலச் சிறுவர்கள் அவரையும் பலராமரையும் அணுகி மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களின் வெற்றியைப் பாராட்டினார்கள். அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சிப் பெருக்கால் கரவொலி எழுப்பினார்கள். அவர்களின் மகிழ்ச்சி கரை புரண்டோடியது. பிராமணர்கள் மனமுவந்து கிருஷ்ணரையும் பலராமரையும் புகழ்ந்து பேசினார்கள்.
கம்சன் மட்டும் வாளாவிருந்தான். அவன் கைதட்டவுமில்லை, கிருஷ்ணரையும் பலராமரையும் வாழ்த்தவுமில்லை. கிருஷ்ண பலராமரின் வெற்றியைப் பாராட்டும் வகையில் முரசுகள் ஒலித்ததை அவன் விரும்பவில்லை. மல்லர்கள் கொல்லப்பட்டதும் எஞ்சியவர்கள் உயிருக்குப் பயந்து ஓடியதும் அவனுக்கு மன வருத்த்தைத் தந்தது. அவன் உடனே முரசுகள் ஒலிக்கப் படுவதை நிறுத்தும்படி கட்டளையிட்டு, தன் நண்பர்களை நோக்கிப் பின் வருமாறு பேசினான்:
வசுதேவரின் இந்த இரு மகன்களும் உடனடியாக மதுராவிலிருந்து விரட்டப்பட வேண்டுமென்று நான் கட்டளையிடுகிறேன். அவர்களுடன் வந்திருக்கும் ஆயர்குலச் சிறுவர்களும் விரட்டப்பட்டு அவர்களின் உடமைகளெல்லாம் பறிக்கப்பட வேண்டும். நந்த மகராஜாவை அவரின் தந்திரமான நடத்தைக்காக உடனே கைது செய்து கொல்ல வேண்டும். அயோக்கியனான வசுதேவனும் உடனடியாகக் கொல்லப் படவேண்டும். என் விருப்பத்திற்கு எதிராக எப்போதும் என் எதிரிகளை ஆதரித்த என் தந்தையான உக்கிரசேனரும் உடனே கொல்லப்பட வேண்டும்.
இவ்வாறு கம்சன் பேசியதும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மிகவும் கோபமடைந்து, கணப்பொழுதில் கம்சனின் காவலர்களைக் கடந்து கம்சனை அணுகினார். இதை எதிர்பார்த்திருந்த கம்சன் தன் வாளை உறையிலிருந்து எடுத்துக் கிருஷ்ணரை தாக்க முற்பட்டான். அவன் அப்படியும் இப்படியுமாக வாள் வீசியபோது மிகுந்த பலத்துடன் கிருஷ்ணர் அவனைப் பிடித்துக் கொண்டார். சிருஷ்டி முழுவதற்கும் துணையானவரும், தம் தொப்புளிலிருந்து பிரபஞ்சத்தை உண்டுபண்ணியவருமான முழுமுதற் கடவுள் கம்சனின் கிரீடத்தைக் கீழே தள்ளித் தரையில் உருளச் செய்தார்.
அதன்பின் கம்சனின் நீண்ட தலைமுடியைத் தம் கையில் பிடித்துக் கொண்டு, அவனை ஆசனத்திலிருந்து இழுத்து வந்து மல்யுத்த மேடையின் மீது எறிந்தார். அதன்பின் கிருஷ்ணர் உடனடியாகக் கம்சனின் மார்பின் மேல் ஏறி அமர்ந்து கொண்டு அவனை மீண்டும் மீண்டும் ஓங்கி அடித்தார். அவரின் முஷ்டியிலிருந்து புறப்பட்ட அடிகளைத் தாங்க மாட்டாமல் கம்சன் உயிர் நீத்தான்.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் குவாலயபீட யானையைக் கொன்றபின் பலராமருடனும் நண்பர்களுடனும் மல்யுத்தக் களத்தினுள் பிரவேசித்தபோது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் செய்த செயல்கள் பற்றி மக்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது மல்யுத்தப் போட்டி தொடங்க இருப்பதை அறிவிக்கும் வாத்ய முழக்கங்கள் அவர்களின் செவிகளில் விழுந்தன. பிரசித்தி பெற்ற மல்யுத்த வீரனான சாணூரன் கிருஷ்ணரிடமும் பலராமரிடமும் பேசினான்:
அன்பான கிருஷ்ணா, பலராமா, உங்கள் முந்திய செயல்கள் பற்றி நாங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம். நீங்கள் பெரும் வீரர்கள். எனவே அரசர் உங்களை அழைத்துள்ளார். அரசரும் இங்கு கூடியுள்ளவர்களும் உங்களின் மல்யுத்த திறமைகளைக் கான ஆவலாயிருக்கிறார்கள். ஒரு குடிமகன் எப்போதும் அரசனின் மனதையறிந்து பணிவுடன் நடக்க வேண்டும்.
அவ்வாறு நடக்கும் குடிமகன் எல்லா நலன்களையும் பெறுவான். பணியாமல் நடப்பவன் அரசனின் கோபத்திற்கு ஆளாகித் துன்பம் அனுபவிக்கிறான். நீங்கள் ஆயர் குலச் சிறுவர்கள். பசுக்கள் மேய்க்கும்போது ஒருவரோடு ஒருவர் மல்யுத்தம் செய்து மகிழ்வதாகக் கேள்விப் பட்டிருக்கிறோம். எனவே எங்களுடன் நீங்கள் மல்யுத்தப் போட்டியயில் கலந்து கொண்டால் இங்குள்ள மக்களும் அரசனும் மகிழ்ச்சியடைவார்கள். என்று சாணூரன் கூறினான்.
சாணூரன் கூறியதன் நோக்கத்தைக் கிருஷ்ணர் புரிந்து கொண்டார். ஆனால் காலத்தையும் சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு கிருஷ்ணர் பேசினார்: நீ போஜராஜனின் பிரஜை, காட்டில் வாழும் நாங்களும் அவர்களின் பிரஜைகளே. இயன்றவரை அரசனைத் திருப்திப் படுத்த முயல்கிறோம். மல்யுத்தத்திற்கு அவர் எங்களுக்கு வாய்ப்பளித்தது அவர் எங்களிடம் காட்டும் கருணையாகும். ஆனால் நாங்கள் சிறுவர்கள். சில வேளைகளில் விருந்தாவனத்தில் எங்கள் வயதினரான நண்பர்களுடன் நாங்கள் விளையாடியதுண்டு. ஒரே வயதும் பலமும் கொண்டவர்களோடு போட்டியிடுவதில் நன்மையுண்டு. ஆனால் உங்களைப் போன்ற மாமல்லர்களோடு நாங்கள் போட்டியிடுவது பார்ப்பவர்களுக்கு நன்றாயிருக்காது. அவர்களின் தர்மத்துக்கும் அது முரண்படுவதாகும். என்று கூறினார்.
பிரசித்தி பெற்றவர்களும் பலவான்களுமான அந்த மல்லர்கள் சிறுவர்களான பலராமரையும் கிருஷ்ணரையும் போட்டிக்கு அழைப்பது முறையல்லவென்பதைக் கிருஷ்ணர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலாக சாணூரன் கூறினான்: அன்பான கிருஷ்ணா, நீர் குழந்தையோ இளைஞனே அல்லவென்பதை நாங்கள் அறிவோம். நீரும் உமது மூத்த சகோதரனான பலராமரும் எல்லோரையும் விட உயர்ந்தவர்கள். குவாலயபீட என்ற யானையைக் கொன்றிருக்கிறீர்கள். மற்ற யானைகளிடம் சண்டையிட்டு அவற்றைத் தோற்கடிக்கக் கூடிய யானையை அதிசயிக்கத் தக்க வகையில் நீர் கொன்றீர். இதிலிருந்து நீர் பலம் மிக்கவரென்பது தெரியவருகிறது.
எனவே எங்களில் பலம் மிகுந்தவர்களுடன் யுத்தம் செய்யும் தகுதி உமக்கும் உமது மூத்த சகோதரனான பலராமருக்கும் உண்டு. நான் உம்முடனும் பலராமர் முஷ்டிகனுடனும் சண்டையிடலாம். என்று சாணூரன் கூறினான். கம்சனின் மல்லர்கள் தம் விருப்பத்தைத் தெரிவித்ததும், மது என்ற அரக்கனைக் கொன்றவராகிய முழுமுதற் கடவுள் சாணூரனை எதிர்த்தும், ரோகிணியின் மகனான பலராமர் முஷ்டிகனை எதிர்த்தும் மல்யுத்தம் செய்தார்கள். கிருஷ்ணரும் சாணூரனும், அதேபோல் பலராமரும் முஷ்டிகனும், கையோடு கை, காலோடு கால் பின்னிக் கொண்டு, வெற்றி பெறும் நோக்கத்தோடு ஒருவரை மற்றவர் அழுத்த முயற்சித்தார்கள்.
உள்ளங் கைகளையும் கால்களையும், தலைகளையும், மர்ர்புகளையும் பிணைத்துக் கொண்டு, ஒருவரையொருவர் அடித்துத் தள்ளியபோது சண்டையின் வேகம் அதிகரித்தது. ஒருவர் மற்றவரைப் பிடித்துத் தரையின் மீது வீழ்த்தினால், மற்றவர் பின்னிருந்து பிடித்து அழுத்த முயற்சித்தனர். படிப்படியாக யுத்தத்தின் வேகம் அதிகரித்தது. பிடிப்பதும், இழுப்பதும், தள்ளுவதுமாக கைகளையும் கால்களையும் பிணைத்துக் கொண்டு சண்டையிட்டார்கள். ஒருவரையொருவர் தோற்கடிக்க முயன்றபோது மல்யுத்தக் கலையின் நுணுக்கங்கள் அத்தனையும் அங்கு வெளிப்படுத்தப்பட்டன.
ஆனால் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்குத் திருப்தியில்லை. ஏனெனில் கிருஷ்ணரையும் பலராமரையும் எதிர்த்து மலைபோன்ற உருவமும் பலமும் கொண்ட முஷ்டிகனும் சாணூரனும் போரிடுவது நியாயமல்லவென்று பலர் கருதினார்கள். கிருஷ்ணரிடமும் பலராமரிடமும் அனுதாபம் கொண்ட சிலர், இது அபாயகரமானது. அரசனின் முன்னிலையில் சமமில்லாதவர்களிடையே இப்படி ஒரு போட்டி நடக்கலாகாது, என்று பேசிக் கொண்டார்கள். பார்வையாளர்கள் உற்சாகமின்றி இருந்தார்கள். சபையிலிருந்தவர்கள் தமக்காக கவலைப் படுகிறார்கள் என்பதை அறிந்த பரமாத்மாவாகிய ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் யுத்தத்தைத் தொடராமல் உடனே மல்லர்களை கொல்வதென்று முடிவு செய்தார். கிருஷ்ணர் மற்றும் பலராமரின் பெற்றோர்களான நந்த மகாராஜா, யசோதை, வசுதேவர், தேவகி ஆகியோரும் தம் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படக் கூடாதென்று கவலையடைந்திருந்தார்கள்.
கிருஷ்ணர் மிகக் கடுமையாக சாணூரனை தன் முஷ்டியால் அடித்தார். சபையோர் ஆச்சரியப்படும் வகையில் அந்த மாபெரும் மல்லன் அதிர்ந்து போனான். கடைசி முறையாக சாணூரன் ஒரு பருந்து மற்றொன்றைத் தாக்குவது போல் கிருஷ்ணரைத் தாக்கினான். ஆனால் மலர்மாலையால் அடிபட்ட யானைபோல் கிருஷ்ணர் சிறிதும் பாதிக்கப் படாமல் இருந்தார். அவர் வேகமாகச் சாணூரனின் இரு கைகளையும் பற்றிக் கொண்டு அவனைச் சக்கரம் போல் சுழற்றியபோது, சாணூரன் உயிரிழந்தான். கிருஷ்ணர் அவனைத் தரையில் எறிந்தார். இந்திரனின் கொடியைப் போல் சாணூரன் வீழ்ந்தான்.
அவன் அணிந்திருந்த ஆபரணங்கள் எல்லாம் அங்குமிங்குமாகச் சிதறின. முஷ்டிகனும் பலராமரை அடித்தபோது அவர் மிகுந்த பலத்துடன் பதிலடி கொடுத்தார். முஷ்டிகன் நடுக்கம் கொண்டு இரத்தமாகக் கக்கினான். மிகவும் துன்பப் பட்டவனாய் அவன் உயிரிழந்து புயலில் சரியும் மரம் போலக் கீழே விழுந்தான். மேலும் இரு மல்லர்கள் சண்டையிட முன் வந்தார்கள். பலராமர் அவனை உடனடியாகத் தனது இடது கையால் பிடித்து அனாயாசமாகக் கொன்றார். சாலன் என்ற மல்லன் முன்வந்த போது கிருஷ்ணர் அவனை உதைத்து, அவனின் தலையை உடைத்தார். தோசாலா என்ற மல்லன் சண்டையிட வந்தபோது அவனும் அதே முறையில் கொல்லப் பட்டான்.
இவ்வாறு மாபெரும் மல்லர்கள் யாவரும் கிருஷ்ணர் மற்றும் பலராமரால் கொல்லப்பட்டார்கள். எஞ்சியிருந்த மல்லர்கள் உயிருக்குப் பயந்து கோதாவை விட்டு ஓடினார்கள். கிருஷ்ணரின் நண்பர்களான ஆயர் குலச் சிறுவர்கள் அவரையும் பலராமரையும் அணுகி மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களின் வெற்றியைப் பாராட்டினார்கள். அங்கு கூடியிருந்த மக்கள் மகிழ்ச்சிப் பெருக்கால் கரவொலி எழுப்பினார்கள். அவர்களின் மகிழ்ச்சி கரை புரண்டோடியது. பிராமணர்கள் மனமுவந்து கிருஷ்ணரையும் பலராமரையும் புகழ்ந்து பேசினார்கள்.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
கம்சன் தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தாலும் அதற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் பலராமரையும் கொல்வதுதான் கம்சனின் திட்டம். எனவே அவன் அடுத்தகட்ட நடவடிக்கையாக மல்யுத்தப் போட்டி ஒன்றிற்கான ஏற்பாட்டைச் செய்தான். மல்யுத்தக் களம் நேர்த்தியாகத் துப்பரவு செய்யப்பட்டு கொடிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. போட்டி நடக்கவிருந்ததைப் பறையடித்து அறிவித்தார்கள். அரசர்கள், பிராமணர்கள், சத்திரியர்கள் என்று பல் வேறான உயர் பிரிவினருக்குத் தனியான ஆசனங்கள் அமைக்கப் பட்டிருந்தன.
இறுதியில் கம்சன் வந்து சேர்ந்தான். அவனுடன் பல மந்திரிகளும், பிரதானிகளும், காரியஸ்தர்களும் வந்து அமர்ந்தார்கள். கம்சன் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்தான். எல்லா ஏற்பாடுகளும் நிறைவேறியபின் சபையின் முன் தம் திறமைகளைக் காட்ட வந்திருந்த மல்லர்கள் கோதாவுக்குள் இறங்கினார்கள். அவர்கள் பிரகாசமான ஆபரணங்களையும், ஆடைகளையும் அணிந்திருந்தார்கள். அவர்களுள் பிரசித்தி பெற்ற மல்லர்களான சாணூரன், முஷ்டிகன், சாலன், கூடன், தோசாலன் ஆகியவர்களும் இருந்தனர்.
நந்தரின் தலைமையில் வந்திருந்த ஆயர் குல மக்களையெல்லாம் கம்சன் வரவேற்றான். அவர்களும் தாங்கள் கொண்டு வந்திருந்த பால் பண்டங்களைக் கம்சனுக்குப் பரிசாக அளித்துத் தத்தம் ஆசனங்களில் அமர்ந்தார்கள். காலையில் நீராடி, மற்றக் காலைக் கடன்களை முடித்துவிட்டுக் கிருஷ்ணரும் பலராமரும் தயாராக இருந்தபோது மல்யுத்தக் களத்தில் ஒலித்த பறைகளின் ஓசை அவர்களின் காதில் விழுந்தது. உடனே வேடிக்கை பார்க்க அவ்விடத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
மல்யுத்தக் களத்தை அவர்கள் அடைந்தபோது அங்குள்ள வாயிலில் குவாலயபீட என்ற மாபெரும் யானையொன்று நிறுத்தப்பட்டிருந்ததைக் கண்டார்கள். பணியாட்கள் யானையைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். வழியை மறைக்கும்படியாக வேண்டுமென்றே காவலர்கள் யானையை நிறுத்தியிருந்ததைக் கிருஷ்ணர் கண்டார். காவலர்களின் நோக்கத்தை உணர்ந்த கிருஷ்ணர் யானையைத் தாக்குவதற்கு முன்பாகத் தம் உடைகளை இறுக்கிக் கொண்டார். பின், மேகம் போல் கர்ஜிக்கும் குரலில் யானையின் காவலனிடம் கிருஷ்ணர் பேசினார்: கயவனே, வழியை மறித்தால் உன்னையும் உன் யானையையும் யமலோகம் அனுப்புவேன்.
கிருஷ்ணரால் அவமதிக்கப்பட்ட காவலன் கோபமடைந்து ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி அவரைத் தாக்கும்படி யானையை ஏவினர். யானை கிருஷ்ணரை நோக்கி முன்னேறியது. அவரை நோக்கி விரைந்து வந்து துதிக்கையால் அவரைப் பிடிக்க முயற்சித்தது. ஆனால் கிருஷ்ணர் வெகு சாமர்த்தியமாக யானையின் பின்பக்கம் சென்று தப்பித்துக் கொண்டார். தன் துதிக்கைக்கு அப்பால் பார்க்க முடியாத யானையால் பின்பக்கம் ஒளிந்திருந்த கிருஷ்ணரைக் காணமுடியவில்லை. என்றாலும் அவரைப் பிடிக்கும் நோக்கத்துடன் துதிக்கையால் துளாவியது. மீண்டும் கிருஷ்ணர் விரைவாக இடம்மாறி யானையின் பிடியிலிருந்து தப்பினார். இம்முறை அவர் யானையின் வாலைப் பிடித்து இழுத்தார்.
மிகுந்த பலத்துடன் இழுத்ததால் கருடன் பாம்பை இழுத்துச் செல்வதுபோல் கிருஷ்ணர் யானையைச் சிறிது தூரம் இழுத்துச் சென்றார். கிருஷ்ணர் சிறு வயதில் கன்றுகளை வாலைப் பிடித்து இழுத்தது போல் யானையையும் வாலைப் பிடித்து அப்படியும் இப்படியுமாக இழுத்தார். அதன்பின் அவர் யானையின் முன்புறம் சென்று அதன் தாடையில் பலமாக அடித்தார். அடித்தபின் அவர் மீண்டும் யானையின் பார்வையிலிருந்து மறைந்து அதன் பின்புறமாகச் சென்று, கீழே குனிந்து, அதன் கால்களிடையே புகுந்து அதைத் தடுமாறி விழச் செய்தார்.
அவ்வாறு செய்துவிட்டுக் கிருஷ்ணர் உடனே விலகிக் கொண்டார். அவர் கீழேயே இருப்பதாக எண்ணிய யானை அவரைக் கொல்லும் நோக்கத்துடன் கொம்பை அவர்மீது பாய்ச்சியதாக எண்ணிக்கொண்டு தரையில் ஆழமாகச் செலுத்தியது. யானை மிகவும் அலைக்களிந்து கோபமுற்றிருந்தாலும் அதன் பாகன் அதை மேலும் விரட்டினான். யானை மதம் கொண்டு கிருஷ்ணரை நோக்கி ஆவேசத்துடன் பாய்ந்தது.
கிருஷ்ணர் யானையின் துதிக்கையைப் பிடித்து இழுத்தார். யானையும் பாகனும் கீழே விழுந்தபோது கிருஷ்ணர் யானையின் மீது தாவிக் குதித்து ஏறி, யானையையும் பாகனையும் கொன்றார். யானையைக் கொன்ற பின் கிருஷ்ணர் அதன் தந்தத்தை எடுத்துத் தன் தோளின் மேல் வைத்துக் கொண்டார். வியர்வைத் துளிகளும் யானையின் இரத்தத் துளிகளும் அவரின் மேனியை அழகு செய்ய, கிருஷ்ணர் ஆனந்த மயமாகக் காட்சியளித்தார். அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் கிருஷ்ணரைப் புகழ்ந்து பாராட்டினார்கள்.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
கம்சன் தனுர் யாகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான். இந்த யாகத்தின் நோக்கத்தைக் குறிப்பால் உணர்த்துவதற்காக கம்சன் யாக பீடத்தினருகில் மாபெரும் வில் ஒன்றை வைத்திருந்தான். அந்த வில் மிகப் பெரிதாகவும், அதிசயமாகவும், வானவில்லைப் போன்றதாகவும் இருந்தது. யாகப் பிரதேசத்தினுள் அந்த வில் கம்சனால் நியமிக்கப்பட்ட காவலர்களின் பாதுகாப்பில் இருந்தது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் வில்லின் அருகில் சென்றபோது, காவலர்கள் அவர்களை எச்சரித்தார்கள். ஆனால் கிருஷ்ணர் அதைச் சட்டை செய்யவில்லை. அவர் பலவந்தமாக உள்ளே சென்று வில்லைத் தனது இடது கையில் எடுத்தார். அங்கு குழுமியிருந்த மக்களின் முன்பு கிருஷ்ணர் வில்லில் நாணை ஏற்றி, வில்லை வழைத்து இரு பகுதிகளாக, யானை கரும்பை ஒடிப்பது போல் ஒடித்தார். கிருஷ்ணரின் சக்தியை மக்கள் வியந்து பாராட்டினார்கள்.
வில் ஒடிந்த போது எழுந்த ஒலி பூமியிலும் ஆகாயத்திலும் எங்கும் எதிரொலித்தது. அந்த ஒலியைக் கம்சனும் கேட்டான். நடந்ததை அறிந்தபோது அவன் தன் உயிருக்காக அஞ்சினான். வில்லைக் காவல் காத்தவன் மிகுந்த கோபமடைந்து, கிருஷ்ணரைப் பிடிக்குமாறு ஏவலர்களுக்குக் கட்டளையிட்டபடி தானும் அவரை நோக்கிப் பாய்ந்தான். பிடியுங்கள், கொல்லுங்கள் என்று கத்தினான்.
கிருஷ்ணரையும் பலராமரையும் அவர்கள் சூழ்ந்து கொண்டார்கள். காவலர்களின் அபாயகரமான எண்ணங்களை உணர்ந்ததும் கிருஷ்ணரும் பலராமரும் மிகுந்த கோபம் கொண்டு, ஒடிந்த வில்லின் இரு பகுதிகளையும் கையில் ஏந்தியபடி காவலர்களின் தாக்குதலைச் சமாளித்தார்கள்.
இந்தக் குழப்பம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது காவலர்களுக்கு உதவியாக கம்சன் மேலும் சில படைவீரர்களை அனுப்பி வைத்தான். கிருஷ்ணரும் பலராமரும் அவர்கள் எல்லோரையும் போரில் கொன்றார்கள். இதன் பின் கிருஷ்ணரும் பலராமரும் யாகப் பகுதிக்குள் மேலும் பிரவேசிக்காமல் வாயிலின் வழியாகத் தம் இருப்பிடத்துக்குத் திரும்பினார்கள்.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் பூ வியாபாரியின் இடத்தை விட்டுச் சென்றபின், கூனுடைய ஒரு இளம் பெண் சந்தனக் குழம்பு நிரம்பிய ஒரு கோப்பையைத் தெருவில் எடுத்துச் செல்வதைக் கண்டார்கள். ஆனந்தத்தின் இருப்பிடமான கிருஷ்ணர் அந்தக் கூனியிடம் ஹாஸ்யமாகப் பேசித் தம் நண்பர்களை மகிழ்விக்க விரும்பினார். கிருஷ்ணர் அவளிடம் கூறினார்: உயர்ந்த இளம் பெண்ணே நீ யார்? யாருக்காக இச் சந்தனத்தை எடுத்துச் செல்கிறாய்? இதை நீ எனக்குத் தருவது பொருந்துமென நான் எண்ணுகிறேன். அவ்வாறு செய்தால் நிச்சயமாக உனக்கு நண்மை உண்டாகும். எனக் கூறினார்.
முழுமுதற் கடவுளான கிருஷ்ணர் அக் கூனியைப் பற்றிய எல்லா விபரங்களையும் அறிந்திருந்தார். அவளை அவ்வாறு கேட்டபோது, ஒரு அசுரனுக்குச் சேவை செய்வதில் பயனில்லை என்பதைக் குறிப்பால் உணர்த்தினார். அதைவிட கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் சேவை செய்தால் பாவங்களெல்லாம் களையப் பெறலாம்.
அந்தப் பெண் கிருஷ்ணரிடம் கூறியதாவது: அன்புள்ள சியாம சுந்தரா, நான் கம்சனின் வேலைக்காரி. அவருக்கு நான் தினமும் சந்தனம் தயாரித்து அளித்து வருகிறேன். இவ்வளவு நேர்த்தியான சந்தனத்தை நான் கொடுப்பதால் கம்சன் என்னிடம் திருப்தி கொண்டிருக்கிறார். ஆனால் அந்தச் சந்தனத்தைப் பெறுவதற்கான தகுதியை உடையவர் சகோதரர்களான உங்களிருவரையும் தவிர வேறு யாரும் இருக்க முடியாதென்பதை நான் இப்போது உணர்கிறேன். என்று கூறினாள்.
கிருஷ்ணர் மற்றும் பலராமரின் அங்க லட்சணங்களாலும், புன்னகையாலும், கண் பார்வையாலும், மற்ற அம்சங்களாலும் கவரப்பட்ட அக்கூனிப் பெண் சந்தனக் குழம்பை எடுத்து அவர்களின் உடல்களின் மீது மிகுந்த பக்தியுடனும் திருப்தியுடனும் பூசத் தொடங்கினாள். கிருஷ்ணரும் பலராமரும் சந்தனம் பூசப்பட்டதும் மேலும் அழகாகக் காட்சியளித்தார்கள். இந்தத் தொண்டு கிருஷ்ணரை மிகவும் மகிழ்வித்தது. அவளுக்கு என்ன வெகுமதி அளிக்கலாமென்று கிருஷ்ணர் சிந்திக்கலானார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தன் கால் விரல்களால் கூனியின் பாதங்களை அழுத்தியபடி, கைவிரல்களால் அவளின் முகவாயைத் தாங்கிக் கொண்டு, ஒரே அசைவில் அவளின் கூனை நிமிர்த்தினார். அவள் கூன் நீங்கப் பெற்று நிமிர்ந்து நின்றபோது ஓர் அழகிய இளம் பெண்ணாகக் காட்சியளித்தாள். கூனியான அப்பெண்ணின் சேவையில் திருப்தியடைந்த கிருஷ்ணரின் கைகள் பட்ட உடனே அவள் பெண்களில் சிறந்த அழகியாக உருமாறினாள். அவளின் பக்தி கிருஷ்ணரைக் கவர்ந்தது. கிருஷ்ணருக்குச் சேவை செய்யும் பக்தன் உடனடியாக மிகவுயர்ந்த நிலையை அடைகிறானென்பதை இந்நிகழ்ச்சி நிரூபிக்கின்றது.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கம்சனின் வேலையாளைச் சிரச்சேதம் செய்தபின் பலராமருடனும் அவர்களது கோபால நண்பர்களுடனும் மதுராவின் வீதிகளில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தனான தையல்காரன் ஒருவன் சில அழகிய ஆடைகளைத் தைத்துக் கொண்டு வந்தான். இவ்வாறு அழகாக உடுத்துக் கொண்ட கிருஷ்ணரும் பலராமரும் அழகிய வண்ண ஆடைகளைத் தரித்த யானைகளைப் போல் காட்சியளித்தார்கள்.
தையல்காரனின் செயல் கிருஷ்ணருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவனுக்கு ஸாருப்ய முக்தி அளித்தார். அதாவது, அவன் உடலை நீத்தபின் வைகுண்டத்தில் நான்கு கைகளுடைய நாராயணரின் ரூபத்தைப் போன்ற வடிவத்தைப் பெற்றிருப்பான். அவன் வாழ்நாள் முழுவதும் புலனின்பங்களை நன்கு அனுபவிப்பதற்குத் தேவையான செல்வத்தைப் பெறுவானென்றும் கிருஷ்ணர் வரம் அருளினார்.
இந் நிகழ்ச்சியின் மூலம், கிருஷ்ண உணர்வுள்ள பக்தர்கள் இகவுலக இன்பங்களிலோ, புலன் திருப்தியிலோ குறைந்தவர்களாக மாட்டார்களென்பதைக் கிருஷ்ணர் நிரூபித்துக் காட்டினார். இவ்வுலகில் அவர்கள், இகவுலக வாழ்வை நீத்தபின் வைகுண்ட லோகம் அல்லது கிருஷ்ணலோகம், அல்லது கோலோக விருந்தாவனத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் மதுரா நகரின் வீதிகளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு சலவைத் தொழிலாளியைக் கண்டார்கள். அவன் உடுப்புகளுக்குச் சாயம் போடுபவன். கிருஷ்ணர் அவனிடம் சில நேர்த்தியாகச் சாயம் போடப்பட்ட உடுப்புகளைக் கொடுத்தால் அவனுக்கு எல்லா நலன்களும் பெருகுமென்று அவனிடம் கூறினார். கிருஷ்ணரிடம் உடுப்புக்கள் இல்லையென்று இல்லை. அவருக்கு உடுப்புக்கள் தேவைப்படவுமில்லை. ஆனால் அவர் வேண்டுவதைக் தர எல்லோரும் தயாராக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துவதற்காகவே அவ்வாறு கேட்டார். கிருஷ்ணர் வேண்டுவதைத் தர எல்லோரும் முன் வர வேண்டும். அதுவே கிருஷ்ண உணர்வு.
துரதிஷ்ட வசமாக அவன் கம்சனின் வேலையாளாக இருந்ததால் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரின் வேண்டுகோளை அவன் புரிந்து கொள்ளவில்லை. இது சகவாச தோஷத்தால் ஏற்படுவது. அவனுக்கு எல்லா நலன்களையும் தருவதாக வாக்களித்த முழுமுதற் கடவுளுக்கு அவன் உடனே உடுப்பைக் கொடுத்திருக்கலாம். பாவாத்மாவான அந்த அரக்கன் மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாக அவன் கோபம் கொண்டு அரசனுக்குரிய ஆடையை நீ எப்படிக் கேட்கலாம்? என்று கேட்டான். பின் அவன் கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் ஆலோசனை கூறினான்: சிறுவர்களே, இனி இவ்வாறு அரசனுக்குரிய ஆடையைக் கேட்கும் அகம்பாவச் செயலைச் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் அரசனின் ஆட்கள் உங்களைக் கைது செய்து தண்டனை வழங்குவார்கள். நீங்கள் மிகவும் துன்பப்பட நேரிடும். எனக்கு இந்த அனுபவம் உண்டு என்று கூறினான்.
இதைக் கேட்டதும் தேவகி நந்தனான கிருஷ்ணர், சலவையாளிடம் மிகுந்த கோபம் கொண்டு அவனைத் தம் கையால் ஓங்கி அடித்து, அவனைச் சிரச் சேதம் செய்தார். அவன் பூமியில் இறந்து விழுந்தான். கிருஷ்ணரின் ஒவ்வொரு அங்கமும் அவர் விரும்புவது போல் செயல் படக்கூடியதென்பதை இது நிரூபிக்கின்றது. வாளின் உதவியின்றி கையாலேயே அவனின் தலையை அவர் கொய்தார். அவர் எது செய்ய நினைத்தாலும் வெளிப் பொருட்களின் உதவியின்றிச் செய்யக் கூடியவர். இந்தக் கோர நிகழ்சி;சிக்குப் பின் அவனது நண்பர்கள் துணிகளைக் கீழே போட்டுவிட்டுக் கலைந்து சென்றார்கள். கிருஷ்ணரும் பலராமரும் அவற்றை எடுத்துத் தம் விருப்பம்போல் அணிந்து கொண்டு, மற்றவற்றைத் தம் கோபால நண்பர்களுக்கு வழங்கினார்கள். வேண்டாத உடுப்புக்களை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றார்கள்.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் மதுராவின் வீதிகளில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது சுதாமா என்ற பெயருடைய பூக்கடைக் காரரிடம் சென்றார்கள். அவர்கள் கடையை அணுகியதும் பூ வியாபாரி வெளியே வந்து மிகுந்த பக்தியுடன் அவர்களின் காலில் விழுந்து வணங்கினார். பின், கிருஷ்ணரையும் பலராமரையும் தகுந்த ஆசனங்களில் இருக்கச் செய்து, உதவியாளர்களைப் பூவும் தாம்பூலமும் கொண்டு வரும்படி பணித்தார். வியாபாரியின் வரவேற்பால் கிருஷ்ணர் மிகவும் திருப்தி அடைந்தார்.
மிகுந்த பணிவுடன் பூ வியாபாரி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரார்த்தித்தார்: அன்பான பிரபுவே, நீர் என் இருப்பிடத்துக்கு வந்திருப்பதால் என் மூதாதையர்களும், வணக்கத்துக்குரிய பெரியவர்களும் முக்தி அடைந்தவர்களாக வேண்டும். இப் பிரபஞ்சத்தில் காரணங்களுக் கெல்லாம் காரணமானவர் நீரே. ஆனால் உமது பக்தர்களைப் பாதுகாத்து, அசுரர்களை அழித்து, இவ்வுலக வாசிகளுக்கு நன்மையளிப்பதற்காக உமது சக்திகளுடன் நீர் வந்திருக்கிறீர்.
நண்பரென்ற முறையில் எல்லா உயிர் வாழிகளையும் சமமாக நோக்குகிறீர். நீர் பரமாத்மா. நண்பன் – பகைவன் என்ற வேறுபாடு உமக்கில்லை. என்றாலும் உமது பக்தர்களுக்குப் பக்தியில் சிறப்புப் பலன்களை நீர் வழங்குகிறீர். பிரபுவே, நான் என்ன செய்ய வேண்டும், கட்டளையிடும். நான் உமது நிரந்தர சேவகன். ஏதாவது செய்ய நீர் அனுமதித்தால் நான் தன்யனாவேன். இவ்வாறு சுதாமா பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பிரார்த்தித்தார்.
கிருஷ்ணரும் பலராமரும் தன் இருப்பிடத்தில் வரப்பெற்ற சுதாமா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அதனால் தனக்கு மிகவும் பிடித்தமான மலர்களைக் கொண்டு மிக அழகாக இரண்டு மாலைகளைத் தொடுத்து அவர்களுக்கு அர்ப்பித்தார். அவருடைய உண்மையான பக்தித் தொண்டை கிருஷ்ணரும் பலராமரும் மெச்சினார்கள்.
சரணடையும் ஆத்மாக்களுக்குத் தாம் எப்போதும் வழங்கும் ஆசிகளைக் கிருஷ்ணர் சுதாமாவுக்கு வழங்கினார். சுதாமா, தாம் எப்போதும் கிருஷ்ணரின் நிரந்தர சேவகராக இருக்க வேண்டுமென்றும், அப்படிப்பட்ட பக்தித் தொண்டின் மூலம் பிற உயிர்களுக்கும் சேவை செய்ய வேண்டுமென்றும் பிரார்த்தித்தார். பூ வியாபாரியிடம் திருப்தியடைந்த கிருஷ்ணர், அவர் வேண்டிய வரங்களுக்கான ஆசிகளை நல்கியது மட்டுமன்றி அதற்கும் மேலாக எல்லா சுக போகங்களையும், நீண்ட ஆயுளையும் வழங்கினார்.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
கம்சன் தனுர் யாகம் ஒன்றினைச் செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தான். அதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் பலராமரையும் மதுராவிற்கு அழைத்து வருமாறு அக்ரூரரை அனுப்பினான். கிருஷ்ணரும் பலராமரும் மதுராவிற்கு வந்தபின் அவர்களைக் கொல்வதென்று முடிவெடுத்தான். அக்ரூரர் கம்சனின் நம்பிக்கைக்குரிய நண்பனாக இருந்தார். அதேவேளை அவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மிக உயர்ந்த பக்தருமாவார். விருந்தாவனம் சென்ற அக்ரூரர் கிருஷ்ணரையும் பலராமரையும் மதுராவிற்கு கம்சனால் அழைக்கப்பட்டிருந்த செய்தியைக் கூறினார்.
கிருஷ்ணரும் பலராமரும் மதுராவிற்குச் செல்கிறார்கள் என்பதை அறிந்த கோபியர்கள் கவலையடைந்தார்கள். தம்மை விட்டுக் கிருஷ்ணர் பிரிவதை எண்ணி மிகவும் வருந்தினார்கள். கிருஷ்ண, பலராமர் ஆகியோருடன் மேலும் சில கோபாலர்களும் தனுர் யாகத்தைக் காண்பதற்காக மதுரா செல்லப் புறப்பட்டார்கள். சூரியன் உதயமானதும் அக்ரூரர் நீராடி முடித்து, தேரில் ஏறி, கிருஷ்ணருடனும் பலராமருடனும் மதுராவுக்குப் புறப்பட்டார். நந்த மகாராஜாவும் மற்ற ஆயர்களும் மாட்டு வண்டிகளில் தயிர், பால், நெய் போன்ற பால் பண்டங்களை ஏற்றிக்கொண்டு கிருஷ்ணர் மற்றும் பலராமர் சென்ற தேரைப் பின் தொடர்ந்து சென்றார்கள்.
கோபியர்களெல்லாம் கிருஷ்ணரும் பலராமரும் வீற்றிருந்த தேரைச் சூழ்ந்து கொண்டு வழியை மறைக்க வேண்டாமென்று அவர்கள் கேட்டுக் கொண்டதையும் பொருட்படுத்தாமல், கண்களில் பரிதாபத்துடன் கிருஷ்ணரையும் பலராமரையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கோபியரின் துயரம் கிருஷ்ணரை வெகுவாகப் பாதித்தது. ஆனால் மதுராவிற்குச் செல்வதை அவர் தன் முக்கிய கடமையாகக் கருதினார். ஏனெனில் கிருஷ்ணர் மதுரா சென்றால்தான் கம்சனை வதம் செய்ய முடியும். எனவே கிருஷ்ணர் கோபியருக்கு சமாதான வார்த்தைகள் கூறி, அவர்கள் வருந்தத் தேவையில்லை, தன் கடமையை முடித்துவிட்டு விரைவில் திரும்புவதாகவும் கூறினார். ஆனாலும் அவர்கள் வழியை விட்டு விலகுவதாகக் காணவில்லை.
என்றாலும் தேர் புறப்படத் தொடங்கி, மேற்கு நோக்கிச் சென்றது. தேரின் மேலிருந்த கொடி கண்ணுக்குத் தெரிந்த வரை அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அக்ரூரரும் பலராமரும் உடனிருக்க, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் யமுனை நதியின் கரையை நோக்கி மிகுந்த வேகத்துடன் தேரைச் செலுத்தினார். யமுனையில் நீராடிய மாத்திரத்தில் ஒருவன் தன் பாவச் சுமைகளைக் களையலாம்.
கிருஷ்ணரும் பலராமரும் நதியில் நீராடி முகம் கழுவிக் கொண்டார்கள். யமுனையின் பளிங்கு போன்ற தெளிவான நீரைச் சிறிது அருந்தி விட்டு, அவர்கள் இருவரும் மீண்டும் தேரில் அமர்ந்திருந்தார்கள். உயர்ந்த மரங்களின் நிழலில் தேர் நின்று கொண்டிருந்தது. பின்னர் அக்ரூரர் அவர்களிடம் அனுமதி பெற்று, யமுனையில் நீராடச் சென்றார். வேத முறையின் படி ஒருவன் நதியில் நீராடியபின் இடுப்பளவு தண்ணீரில் நின்றபடி காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.
அக்ரூரர் இவ்வாறு நதியில் நின்ற போது அவர் திடீரென்று கிருஷ்ணரும் பலராமரும் நீரில் நின்று கொண்டிருக்கக் கண்டார். இது அவருக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில் கிருஷ்ணரும் பலராமரும் தேரில் உட்கார்ந்திருப்பதை அவர் நன்கறிவார். எனவே அவர் குழப்படடைந்து, அவ்விரு சிறுவர்களும் எற்கிருந்தார்களென்பதைப் பார்க்க நீரிலிருந்து வெளியேறினார். அவர்களிருவரும் முன்பு போலவே தேரில் அமர்ந்திருக்கக் கண்டு அவர் மேலும் ஆச்சரியமடைந்தார். அவர்களைத் தேரின் மேல் பார்த்தபோது, நீரில் அவர்களைக் கண்டது உண்மைதானா என்று அவர் எண்ணமிடலானார்.
எனவே அவர் மீண்டும் நதிக்குச் சென்றார். இம்முறை அவர் நதியில் கிருஷ்ணரையும் பலராமரையும் தவிர பல்வேறான தேவர்களையும், சித்தர்களையும், சாரணர்களையும், கந்தவர்களையும் கண்டார். அவர்கள் எல்லோரும் பிரபுவின் முன் நின்றிருந்தார்கள். பிரபு நீரில் படுத்திருந்தார். ஆயிரம் தலைகளைக் கொண்ட சேஷ நாகரையும் அக்ரூரர் கண்டார். சேஷ நாகப் பிரபு நீல நிற ஆடைகளை அணிந்திருந்தார். அவரின் கழுத்துக்கள் பால் வண்ணமாகக் காட்சியளித்தன. சேஷ நாகரின் வெள்ளைக் கழுத்துக்கள் பனி மூடிய மலைச் சிகரங்களைப் போலவும் தோன்றின. சேஷ நாகரின் வளைவான மடியின் மேல் கிருஷ்ணர் நான்கு கைகளுடன் நிதானமாக அமர்ந்திருப்பதை அக்ரூரர் கண்டார்.
பலராமர் சேஷ நாகராவும் கிருஷ்ணர் மகா விஷ்ணுவாகவும் உரு மாறி அக்ரூரருக்குக் காட்சியளித்தார்கள். புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் நான்கு கைகளுடன் மிக அழகாகப் புன்னகைத்திருப்பதை அக்ரூரர் கண்டார். பிரபுவின் தரிசனத்தால் எல்லோரும் மகிழ்ந்திருந்தார்கள். அவரும் மிகுந்த பிரியத்துடன் எல்லேரையும் நோக்கிக் கொண்டிருந்தார். விஷ்ணு மூத்திக்குரிய விசேஷ சின்னங்களான சங்கு, சக்கரம், கதை, தாமரை, ஆகியவற்றை நான்கு கைகளிலும் ஏந்தி அவர் மிக அழகாகக் காட்சியளித்தார். விஷ்ணுவுக்கு உரித்தான குறிகள் அவரின் மார்பில் விளங்கின.
பிரபுவின் நெருங்கிய தோழர்களும், நான்கு குமாரர்களுமான, சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகியோரும், சுனந்தர், நந்தர் போன்ற மற்றத் தோழர்களும், பிரம்மா, சிவன் போன்ற தேவர்களும் பிரபுவைச் சூழ்ந்திருப்பதை அக்ரூரர் கண்டார். மகா பண்டிதர்களான ஒன்பது மகரிஷிகளும் அங்கிருந்தார்கள். பிரகலாதர், நாரதர் போன்ற பெரும் பக்தர்கள் திறந்த உள்ளங்களுடனும், புனிதமான சொற்களாலும் பிரபுவைத் துதித்துக் கொண்டிருந்தார்கள். புருஷோத்தமரான முழுமுதற் கடவுளின் பரமான ரூபத்தைக் கண்டவுடன் அக்ரூரர் மகிழ்ச்சியில் திளைத்தவராய் பக்தி மேலீட்டால் உடல் முழுவதும் பரமாhனந்தம் பரவுவதை உணர்ந்தார். அவர் கண நேரம் திகைப்படைந்தாலும், உணர்வைத் தெளிவாக்கிக் கொண்டு பகவானின் முன் தலை வணங்கிக், கைகளைக் கூப்பியபடி, நெகிழ்ந்த குரலில் பிரார்த்திக்கலானார்.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
பகவான் ஸ்ரீகிருஷ்ணரைக் கொல்வதற்காக கம்சன் தன் நண்பனான கேசி என்ற அரக்கனை விருந்தாவனம் செல்லுமாறு கட்டளையிட்டான். கம்சனின் கட்டளையைப் பெற்றதும் கேசி அசுரன் பயங்கரமான ஒரு குதிரையின் வடிவத்தை மேற்கொண்டு விருந்தவனப் பகுதிக்குள் நுழைந்தான். பிடரி மயிர் காற்றில் பறக்க, அவன் உரக்க கனைத்த ஒலி கேட்டு உலகமே நடுங்கியது. விருந்தாவன வாசிகள் பயந்து நடுங்கும்படி அவன் கனைத்து, வாலை ஆகாயத்தில் பெரும் மேகம் போல் சுழற்றியதைக் கிருஷ்ணர் கண்டார். குதிரை வடிவிலிருந்த அசுரன் தன்னை போருக்கு அழைக்கிறான் என்பதைக் கிருஷ்ணர் புரிந்து கொண்டார்.
அவர் அசுரனைப் போரிட அழைத்த போது அவன் சிங்கம் போல் கர்ஜித்தபடி அவரை நோக்கி முன்னேறினான். மிகுந்த வேகத்துடன் முன்னேறிய கேசி, தன் பலம் மிக்க, கற்களைப் போல் கடினமான கால்களால் கிருஷ்ணரை மிதித்துக் கொல்ல முயற்சித்தான். ஆனால் கிருஷ்ணர் உடனே அவனுடைய கால்களைப் பற்றிக் கொண்டு அவனைத் திகைக்கச் செய்தார். பின் கேசியினுடைய கால்களைப் பிடித்த படி அவனைச் சுழற்றினார். சில சுற்றுக்களக்குப் பின், கருடன் பெரிய பாம்பை எறிவது போல், கிருஷ்ணர் கேசியை நூறு கஜ தூரத்துக்கு அப்பால் எறிந்தார்.
அவ்வாறு எறியப்பட்டதும் குதிரை வடிவில் இருந்த கேசி நினைவிழந்தான். என்றாலும் சிறிது நேரத்தில் மீண்டும் உணர்வு பெற்று, மிகுந்த கோபத்துடன், வாயைப் பிழந்தபடி கிருஷ்ணரை நோக்கி வேகமாகச் சென்று தாக்க முற்பட்டான். அவன் அருகில் வந்ததும் கிருஷ்ணர் தம் இடது கையை கேசியான குதிரையின் வாயில் திணித்தார். கிருஷ்ணரின் கை, காய்ச்சிய இரும்பு போல் சுடுவதை உணர்ந்த கேசி, வலியால் துடித்தான். அவனின் பற்கள் வெளிவந்தன.
அவனின் வாயினுள் இருந்த கிருஷ்ணரின் கை உருவத்தில் பெரிதாகியதால் அவனுக்குத் தொண்டை அடைத்து, மூச்சுத் திணறி, உடம்பெல்லாம் வியர்த்தது. கால்களை அங்கும் இங்கும் உதைத்தான். இறுதி மூச்சு வெளிப்பட்ட போது அவனின் குதிரை விழிகள் பிதுங்கி அவனின் உயிர் மூச்சு வெளியேறியது. குதிரை இறந்ததும் அதன் வாய் தளர்ந்ததால் கிருஷ்ணர் தன் கையை எளிதாக விடுவித்துக் கொண்டார். கேசி இவ்வாறு விரைவில் மரணமடைந்தது கண்டு கிருஷ்ணர் வியப்படையவில்லை. ஆனால் தேவர்கள் ஆச்சரியப்பட்டு, அவரை பாராட்டும் வகையில் ஆகாயத்திலிருந்து பூக்களைத் தூவினார்கள்.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
ஒரு நாள் காலையில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் அவரது நண்பர்களும் கோவர்த்தன கிரியின் உச்சியில் விளையாடுவதற்காகச் சென்றார்கள். கள்வர்களும் காவலர்களுமாக அவர்கள் நடித்து விளையாடினார்கள். சிலர் கள்வர்களாகவும் சிலர் ஆட்டுக் குட்டிகளாகவும் பங்கேற்றார்கள். இவ்வாறு அவர்கள் குழந்தைகளாக விளையாடி மகிழ்கையில் வியோமாசுரன் என்ற பெயருடைய ஒரு அரக்கன் அங்கு தோன்றினான். வியோமாசுரன் என்றால் ஆகாயத்தில் பறக்கும் அசுரன் என்று பொருள். அவன் மற்றொரு மாபெரும் அசுரனான மாயா என்பவனின் மகன். இவ்வரக்கர்கள் பல மாயச் செயல்களைப் புரியக் கூடியவர்கள்.
வியோமாசுரன் இடைச் சிறுவனாக உருவம் தாங்கி விளையாட்டில் காவலர்களாக நடித்த சிறுவர்களோடு கலந்து கொண்டு, ஆட்டுக் குட்டிகளாக நடித்த பல சிறுவர்களைக் கவர்ந்து சென்றான். ஒருவர் பின் ஒருவராகப் பல சிறுவர்களை அசுரன் கடத்திச் சென்று, அவர்களை மலைக் குகைகளினுள் பதுக்கி வைத்து, கற்களால் குகைகளின் வாய்களை மூடிவிட்டான். அசுரனின் தந்திரத்தைக் கிருஷ்ணர் அறிந்து கொண்டார்.
உடனே அவர், சிங்கம் ஆட்டுக் குட்டியைப் பிடிப்பது போல் அசுரனைப் பிடித்து விட்டார். அவரின் பிடியிலிருந்து தப்புவதற்காக அசுரன் ஒரு பெரிய மலையின் அளவிற்குத் தன் உருவத்தைப் பெரிதாக்கினான். ஆனாலும் கிருஷ்ணர் தன் பிடியைத் தளர்த்தவில்லை. மிகுந்த பலத்துடன் அசுரனைத் தரையில் வீழ்த்திக் கொன்றார். வியோமாசுரனைக் கொன்ற பின் கிருஷ்ணர், தம் நண்பர்களையெல்லாம் குகைகளில் இருந்து விடுவித்தார். அவரது வியத்தகு செயல்களுக்காக அவரின் நண்பர்களும் தேவர்களும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பாராட்டினார்கள். அதன் பின் கிருஷ்ணர், தன் நண்பர்களுடனும் பசுக்களுடனும் விருந்தாவனத்துக்குத் திரும்பிச் சென்றார்.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
ஒரு நாள் அரிஷ்டாசுரன் என்ற அரக்கன் பெருத்த உடலும் கொம்புகளுமுடைய மிகப் பெரிய எருதின் வடிவில் விருந்தாவன கிராமத்தினுள் நுழைந்து, காலால் பூமியைக் கிளறியபடி குழப்பம் விளைவிக்கலானான். பெரும் பூகம்பம் ஏற்பட்டது போல் நிலம் அதிர்ந்தது. அவன் பயங்கரமாக உறுமிக் கொண்டு நதிக்கரையில் பூமியைக் கிளறிய பின் கிராமத்தினுள் நுழைந்தான். அவனின் உறுமல் மிகவும் பயங்கரமாக இருந்ததால் அதைக் கேட்ட கர்ப்பிணிப் பெண்கள் சிலருக்கும், சினையுற்றிருந்த பசுக்களுக்கும் கர்ப்ப சேதம் ஏற்பட்டது. எருதின் உடல் மிகப் பெரியதாகவும், பலமுள்ளதாகவும் இருந்ததால், மலையின் முகட்டில் மேகங்கள் சூழ்ந்திருப்பது போல் காணப்பட்டது. அரிஷ்டாசுரனின் பயங்கர உருவத்தைக் கண்டு ஆண், பெண், யாவரும் பெரும் அச்சம் கொண்டனர். பசுக்களும் மற்ற மிருகங்களும் கிராமத்தை விட்டு ஓடின.
நிலமை மிகவும் பயங்கரமாயிற்று. விருந்தாவன வாசிகள் எல்லோரும், கிருஷ்ணா, எங்களைக் காப்பாற்றும் என்று ஓலமிட்டனர். பசுக்களும் ஓடுவதைக் கண்ட கிருஷ்ணர், பயப்படாதீர்கள், என்று எல்லோருக்கும் அபயமளித்தார். அரிஷ்டாசுரனைக் கிருஷ்ணர் விளித்துக் கூறினார்: நீ மிகவும் இழிந்த பிராணி. கோகுல வாசிகளை ஏன் பயமுறுத்துகிறாய்? இதனால் உனக்கு ஏற்படும் நன்மை என்ன? என் அதிகாரத்திற்கு நீ சவால் விட எண்ணியிருந்தால் நான் உன்னோடு யுத்தம் செய்யத் தயார். இவ்வாறு கிருஷ்ணர் அசுரனுக்கு சவால் விட்டார்.
கிருஷ்ணரின் சொற்களைக் கேட்ட அசுரன் மிகவும் கோபமுற்றான். கிருஷ்ணர் ஒரு நண்பனின் தோளில் கை வைத்தபடி எருதின் முன் வந்து நின்றார். எருது மிகுந்த கோபத்துடன் கிருஷ்ணரை நோக்கி முன்னோறியது. நிலத்தைத் தன் கால்களால் கிளறியபடி அரிஷ்டாசுரன் வாலை உயர்த்தினான். வாலின் நுனியின் மேல், மேகம் ஒன்று சுற்றி வருவது போல் தோன்றியது. அவனின் கண்கள் சிவந்து கோபத்தால் சுழன்றன. கிருஷ்ணரை நோக்கி கொம்புகளைக் குறி வைத்தபடி இந்திரனின் வஜ்ராயுதம் போல் அசுரன் அவரைத் தாக்கினான். ஆனால் கிருஷ்ணர் உடனே அசுரனின் கொம்புளைப் பிடித்து, பெரிய யானை ஒன்று சிறிய எதிரி யானையைத் தாக்குவது போல், அசுரனைத் தூக்கி எறிந்தார்.
அசுரன் மிகவும் களைப்படைந்தான். அவனுக்கு வியர்த்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நிலத்திலிருந்து எழுந்து, மிகுந்த கோபத்துடனும் பலத்துடனும் மீண்டும் கிருஷ்ணரைத் தாக்கினான். கிருஷ்ணரைத் தாக்க விரைந்த போது அவனுக்கு கடுமையாக மூச்சு வாங்கியது. மீண்டும் கிருஷ்ணர் அவனின் கொம்புகளைப் பிடித்து அவனைத் தரையில் எறிந்த போது, கொம்புகள் உடைந்தன. ஈரத்துணியைத் தரையில் துவைப்பது போல் கிருஷ்ணர் அசுரனைக் காலால் உதைத்தார். உதை பட்ட அரிஷ்டாசுரன், புரண்டு விழுந்ததும் அவனின் உடலில் இருந்து ரத்தம் வெளி;யேறி, கண்கள் பிதுங்கி அவன் மரணமடைந்தான். கிருஷ்ணரின் வியத்தகு சாதனையைப் பாராட்டி தேவர்கள் மலர்மாரி பொழிந்தார்கள்.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையுடன் என் மனைவியை விட்டுவிட்டு, என் தாயாரின் அனுமதியையும் ஆசிர்வாதங்களையும் பெற்றுக்கொண்டு நான் குதூகலமாகப் பம்பாய்க்குப் புறப்பட்டேன். அங்கே போய்ச் சேர்ந்ததும், ஜூன், ஜூலை மாதங்களில் இந்து மகாசமுத்திரத்தில் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என்றும், நான் இப்பொழுதுதான் முதல் முறையாகக் கப்பல் பிரயாணம் செய்வதால் நவம்பர் மாதம் வரையில் நான் கப்பலேற அனுமதிக்கக் கூடாது என்றும் நண்பர்கள் என் சகோதரரிடம் கூறினர். இப்பொழுதுதான் புயல் காற்றினால் ஒரு கப்பல் மூழ்கி விட்டது என்றும் யாரோ சொன்னார்கள். இதனால் என் சகோதரருக்கு மனக்கலக்கம் உண்டாயிற்று. உடனே கப்பல் பிரயாணம் செய்ய என்னை அனுமதிக்கும் அபாயத்திற்கு உடன்பட அவர் மறுத்து விட்டார். என்னைப் பம்பாயில் ஒரு நண்பரிடம் விட்டுவிட்டுத் தம் வேலைகளைக் கவனிக்க அவர் ராஜ்கோட்டுக்குத் திரும்பினார். என் பிரயாணச் செலவுக்கென்று வைத்திருந்த பணத்தை ஒரு மைத்துனரிடம் கொடுத்து, வைத்திருக்கச் சொல்லிவிட்டு, எனக்குத் தேவையான உதவிகளையெல்லாம் செய்யுமாறு, சில நண்பர்களிடம் சொல்லிப் போனார்.
பம்பாயில் நாளை எண்ணிக்கொண்டே காலம் கழித்தேன். இங்கிலாந்துக்குப் போகப்போவதைப் பற்றி ஓயாமல் கனவு கண்டு கொண்டிருந்தேன்.
இதற்கு மத்தியில் நான் வெளிநாட்டுக்குப் போகப் போவதைக் குறித்து என் சாதியினர் பரபரப்படைந்தார்கள். மோத் வணிக சாதியைச் சேர்ந்த யாரும் இதுவரை இங்கிலாந்துக்குப் போனதில்லை; நான் போகத் துணிந்தால், எனக்குத் தக்க சிட்சை விதிக்க வேண்டும்! சாதியினரின் பொதுக்கூட்டம் ஒன்றைக் கூட்டினர். அதன் முன்னால் ஆஜராகுமாறு எனக்குக் கட்டளை அனுப்பினார். நானும் போனேன். திடீரென்று எனக்கு எப்படி அவ்வளவு தைரியம் வந்தது என்பது எனக்கே தெரியவில்லை. எதற்கும் அஞ்சாமல், கொஞ்சமும் தயக்கமின்றிக் கூட்டத்திற்கு முன்னால் போனேன். சாதி நாட்டாண்மைக்காரரான சேத் எனக்குத் தூர பந்து. என் தந்தையாருக்கு மிகவும் வேண்டியவராயிருந்தார். என்னைப் பார்த்து அவர் பின்வருமாறு கூறினார்:
“இங்கிலாந்துக்குப் போவதென்று நீ ஏற்பாடு செய்திருப்பது சரியல்ல என்பது நம் சாதியினரின் அபிப்பிராயம். வெளிநாடுகளுக்குக் கப்பல் பிரயாணம் செய்வதை நம் மதம் அனுமதிக்கவில்லை. நம் மத தருமங்களைக் கைவிடாமல் அங்கே வசிப்பதே சாத்தியமில்லை என்று நாங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம். ஐரோப்பியருடன் சேர்ந்து சாப்பிடவும் குடிக்கவும் வேண்டிவரும்!”
இதற்கு நான் சொன்ன பதிலாவது: “இங்கிலாந்துக்குச் செல்வது நம் மதத்திற்கு விரோதம் என்று நான் கருதவில்லை. மேற்கொண்டு படிப்பதற்காகவேதான் நான் அங்கே போக உத்தேசித்திருக்கிறேன். நீங்கள் எவற்றைக் குறித்து அதிகமாகப் பயப்படுகிறீர்களோ அந்த மூன்றையும் தீண்டுவதில்லை என்று என் தாயார் முன்னிலையில் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன். அந்தப் பிரதிக்ஞை என்னைப் பாதுகாக்கும் என்று நான் நிச்சயமாயிருக்கிறேன்.”
இதற்குச் சேத், “அங்கே நமது மதாசாரங்களைக் கடைப்பிடித்து நடப்பது சாத்தியமே அல்ல என்று நாங்கள் சொல்லுகிறோம். எனக்கும் உன் தந்தைக்கும் இருந்த உறவு, உனக்குத் தெரியும். ஆகவே, நான் கூறும் புத்திமதியை நீ கேட்க வேண்டும்” என்றார்.
“அந்த உறவுகளையெல்லாம் நான் அறிவேன். நீங்கள் எனக்குப் பிதாவைப் போன்றவர். ஆனால் இதில் நான் வேறு எதுவும் செய்வதற்கில்லை. இங்கிலாந்துக்குச் செல்வதென்று தீர்மானித்து விட்டதை நான் மாற்றுவதற்கில்லை. என் தந்தையின் நண்பரும் ஆலோசகரமான கற்றரிந்த ஒரு பிராமணர், நான் இங்கிலாந்து செல்வதில் எந்தவித ஆட்சேபமும் இருப்பதாகச் சொல்லவில்லை. என் தாயாரும், சகோதரரும் எனக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள்” என்றேன்.
“என்றாலும், சாதிக்கூட்டத்தின் கட்டளையை நீ மீறி நடக்கப் போகிறாயா?”
“எனக்கு வேறு வழியில்லை. இவ்விஷயத்தில் சாதி தலையிடக் கூடாது என்றே நான் நினைக்கிறேன்.”
இதைக் கேட்டதும் சேத்துக்குக் கோபம் வந்துவிட்டது. கடுமையாகப் பேசினார். அதற்கெல்லாம் அசையாமல் உட்கார்ந்திருந்தேன். எனவே, சேத் வருமாறு உத்தரவு பிறப்பித்தார். “இன்று முதல் இப்பையனை சாதிப் பிரஷ்டம் செய்யப்பட்டவனாக நடத்த வேண்டும். இவனுக்கு யார் உதவி செய்தாலும், இவனை வழியனுப்ப யார் துறைமுகத்திற்குச் சென்றாலும். அவர் ஒரு ரூபாய் நான்கணா அபராதம் விதிக்கப் படுவார்!”
இந்த உத்தரவைக் கேட்டு நான் கலங்கிடவில்லை. சேத்திடம் விடைபெற்றுக் கொண்டு திரும்பினேன். இதை என் சகோதரர் எப்படி ஏற்பாரோ என்றே பயந்திருந்தேன். அதிர்ஷ்டவசமாக, அவர் உறுதியுடன் இருந்தார். சேத்தின் கட்டளை எதுவானாலும் நான் போவதைத் தாம் அனுமதிப்பதாகக் கடிதம் எழுதி எனக்கு உறுதி கூறினார்.
என்றாலும், கப்பல் ஏறிவிடவேண்டும் என்ற என் ஆர்வத்தை இச்சம்பவம் அதிகமாக்கி விட்டது. என் சகோதரரைக் கட்டாயப்படுத்தி அவர் மனத்தை மாற்றிவிடுவதில் அவர்கள் வெற்றி பெற்று விட்டால் என்னவாகும்? எதிர்பாராதது ஏதோ நிகழ்ந்து விடுகிறதென்று வைத்துக் கொள்ளுவோம். அப்பொழுது? எனக்குள்ள சங்கடத்தைக் குறித்து இப்படியெல்லாம் எண்ணி நான் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்தபோது, பாரிஸ்டர் ஆவதற்காக ஜுனாகத் வக்கீல் ஒருவர், செப்டம்பர் 4-ஆம் தேதி புறப்படும் கப்பலில் இங்கிலாந்துக்குப் போகிறார் என்று கேள்வியுற்றேன். என்னைக் கவனித்துக் கொள்ளுமாறு என் சகோதரர் சொல்லிப் போயிருந்த நண்பர்களைச் சந்தித்து, விஷயத்தைக் கூறினேன். அத்தகைய துணையுடன் போவதற்கு வாய்த்த சந்தர்ப்பத்தை இழந்து விடக்கூடாது என்று அவர்களும் ஒப்புக் கொண்டார்கள். காலம் தாழ்த்துவதற்கே இல்லை. அனுமதியளிக்குமாறு என் சகோதரருக்குத் தந்தி கொடுத்தேன். அவரும் அனுமதித்தார். பணத்தைக் கொடுக்கும்படி என் மைத்துனனைக் கேட்டேன். ஆனால் , அவரோ, சேத்தின் உத்தரவைக் குறிப்பிட்டு, தாம் சாதிப் பிரஷ்டன் ஆக முடியாது என்று சொல்லிவிட்டார். பிறகு நான் குடும்ப நண்பர் ஒருவரை நாடினேன். கப்பல் கட்டணத்துக்கும் சில்லரைச் செலவுக்கும் வேண்டிய அளவுக்கு எனக்குப் பண உதவி செய்யுமாறும் அக்கடனை என் சகோதரரிடமிருந்து வாங்கிக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டேன். இந்த நண்பர் என் கோரிக்கைக்கு ஒப்புக் கொண்டதோடு என்னை உற்காசப்படுத்தியும் அனுப்பினார். அவரிடம் மிக்க நன்றியுடையவனானேன். அந்தப் பணத்தில் ஒரு பகுதியைக் கொண்டு உடனே கப்பல் டிக்கெட் வாங்கினேன். பின்பு பிரயாணத்திற்கு எனக்கு வேண்டியவைகளைத் தயாரிக்கலானேன். இவ்விஷயத்தில் அனுபவம் வாய்ந்த மற்றொரு நண்பர் இருந்தார். உடைகளையும், மற்றவைகளையும் அவர் தயாரித்துக் கொடுத்தார். உடைகளில் சில எனக்குப் பிடித்த மாயிருந்தன, சில எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. கழுத்தில் டை கட்டிக்கொள்ளுவதில் பின்னால் நான் பெருமகிழ்ச்சி அடைந்ததுண்டு. ஆனால், அப்பொழுது அது எனக்கு வெறுப்பாயிருந்தது. குட்டைச் சட்டை அணிவது, வெட்கத்தை விட்டும் செய்யும் காரியம் என்று கருதினேன். இங்கிலாந்துக்குப் போகவேண்டும் என்ற ஆர்வமே என்னிடம் மேலோங்கி நின்றதால், அதன் எதிரே இந்த வெறுப்பெல்லாம் மேலோங்கவில்லை. கப்பலில் ஜுனாகத் வக்கீல் ஸ்ரீ திரியம்பக்ராய் மஜ்முதார் செல்ல இருந்த அதே அறையிலேயே நண்பர்கள் எனக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். என்னைக் கவனித்துக் கொள்ளுமாறும் அவரிடம் கூறினர். அவர் அனுபவமுள்ளவர், நல்ல வயது வந்தவர், உலகமறிந்தவர், நானோ, உலக அனுபவமே இல்லாத பதினெட்டு வயதுச் சிறுவன். என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்று ஸ்ரீ மஜ்முதார் என் நண்பர்களுக்குக் கூறினார்.
கடைசியாகச் செப்டம்பர், 4-ஆம் தேதி பம்பாயிலிருந்து நான் கப்பலில் புறப்பட்டேன்.
1887-ல் நான் மெட்ரிகுலேஷன் பரீட்சையில் தேறினேன். அப்பொழுது அகமதாபாத், பம்பாய் ஆகிய இரு இடங்களில் அப்பரீட்சை நடப்பது வழக்கம். நாட்டின் பொதுவான வறுமை நிலை காரணமாக இயற்கையாகவே சமீபத்தில் இருக்கும், அதிகச் செலவில்லாத இடத்திற்கே கத்தியவார் மாணவர்கள் சென்றனர். என் குடும்பத்தின் வறுமையினால் நானும் அவ்விதமே செய்ய வேண்டியதாயிற்று. ராஜ்கோட்டிலிருந்து அகமதாபாத்துக்கு முதன் முதலாக, அதிலும் துணையின்றி, நான் பிரயாணம் செய்தது அப்பொழுதுதான்.
மெட்ரிகுலேஷன் பரீட்சையில் தேறிய பின் நான் கல்லு}ரியில் சேர்ந்து தொடர்ந்து படித்து வர வேண்டும் என்று வீட்டிலிருந்த பெரியவர்கள் விரும்பினர். பவநகரில் ஒரு கல்லூரி இருந்தது, பம்பாயிலும் இருந்தது. பவநகரில் படித்தால் செலவு அதிகமாகாதாகையால் அங்கே போய்ச் சாமளதாஸ் கல்லூரியில் சேருவதென முடிவு செய்தேன். அவ்வாறே சேர்ந்தும் விட்டேன். ஆனால், அங்கே எனக்குத் திக்குத் திசை புரியவில்லை. எல்லாமே எனக்குக் கஷ்டமாக இருந்தது. நான் சிரத்தை எடுத்துக் கொள்ளவில்லை என்பது இருக்கட்டும், முதலில் பேராசிரியர்களின் பிரசங்கங்களே எனக்குப் புரியவில்லை. இது அப்பேராசிரியர்களின் குற்றமன்று. அக்கல்லூரி பேராசிரியர்கள் முதல்தரமானவர்கள் என்று பெயர் பெற்றவர்கள். ஆனால், நான் தான் கல்லூரிப் படிப்புக்குப் பண்படுத்தப் படாதவனாய் இருந்தேன். ஆறு மாதமானதும் வீடு திரும்பினேன்.
மாவ்ஜி தவே என்ற கல்வியறிவுள்ள பிராமணர், எங்கள் குடும்பத்திற்கு நண்பரும் ஆலோசகருமாக இருந்தார். அவர் புத்திக் கூர்மையுள்ளவர். என் தந்தையார் இறந்த பிறகும் கூட அவர் எங்கள் குடும்பத்துடன் தொடர்பு வைத்திருந்தார். விடுமுறைக்கு நான் ஊர் போயிருந்த போது ஒரு முறை அவர் எங்கள் வீட்டுக்கு வந்தார். என் தாயாருடனும் என் தமையனாருடனும் பேசிக்கொண்டிருந்தபோது என் படிப்பைப் பற்றியும் விசாரித்தார். நான் சாமளதாஸ் கல்லூரியில் படிக்கிறேன் என்பதை அறிந்ததும் அவர் பின்வருமாறு கூறினார்: ‘இப்பொழுது காலம் மாறிப் போய்விட்டது. தக்க படிப்பு இல்லாமல் உங்களில் யாரும் உங்கள் தந்தையின் பதவிக்கு வர முடியாது. இப்பொழுது இப்பையன் இன்னும் தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பதால், அப்பதவிக்கு இவனைத் தயார் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். இவன் பி.ஏ. பட்டத்தைப் பெறுவதற்கு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளாகவது ஆகும். அப்படிப் பெறும் பட்டம், இவனை ஓர் அறுபது ரூபாய்ப் பதவிக்குத்தான் தகுதியுடையவனாக்குமேயின்றித் திவான் பதவிக்கு தகுதியுடையவானாக்காது. என் மகனைப் போல் இவனும் சட்டம் படித்துத் தேர்ச்சி பெறவும் அதிக காலமாகும். அதற்குள் திவான் பதவியைப் பெற முயலும் வக்கீல்கள் எராளமாகி விடுவார்கள். இதையெல்லாம்விட இவனை இங்கிலாந்துக்கு அனுப்புவது எவ்வளவோ மேல் என்று எனக்குத் தோன்றுகிறது. பாரிஸ்டராவது மிக எளிது என்று என் மகன் கேவல்ராம் கூறுகிறான். மூன்று வருடங்களில் இவன் திரும்பி விடலாம், செலவும் நான்கு முதல் ஐயாயிரத்திற்கு மேல் ஆகாது. இங்கிலாந்திலிருந்து இப்பொழுதுதான் வந்திருக்கும் அந்தப் பாரிஸ்டரைப் பாருங்கள், எவ்வளவு நாகரிகமாக அவன் வாழ்க்கை நடத்துகிறான்! கேட்டால் போதும், அவனுக்குத் திவான் பதவி கிடைத்துவிடும். இவ்வருடமே மோகன்தாஸை இங்கிலாந்துக்குக் கட்டாயம் நீங்கள் அனுப்பிவிடவேண்டும் என்றே நான் கூறுவேன். இங்கிலாந்தில் கேவல்ராமுக்கு அநேக நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் அவன் அறிமுகக் கடிதங்கள் கொடுப்பான். மோகன்தாஸ் அங்கே சுகமாக இருந்துவிட்டு வரலாம்!’
மாவ்ஜி தவேயை, ஜோஷிஜி என்று சொல்லுவது வழக்கம் அவர் என்னைத் திரும்பிப் பார்த்து, “இங்கே படிப்பதைவிட இங்கிலாந்துக்குப் போகவே நீ விரும்புகிறாயல்லவா?” என்று முழு நம்பிக்கையுடன் கேட்டார். இதைவிட எனக்கு மகிழ்ச்சி தரக்கூடியது வேறு எதுவும் இருக்க முடியாது. கஷ்டமான கல்லூரிப் படிப்புடன் நான் தொல்லைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆகையால், இந்த யோசனையை உடனே ஏற்றுக் கொண்டு, “என்னை எவ்வளவு சீக்கிரத்தில் அனுப்புகிறீர்களோ அவ்வளவுக்கு நல்லது” என்றேன். சீக்கிரத்தில் பரீட்சைகளில் தேறிவிடுவது என்பது எளிதான வேலையே அல்ல. எனவே, “என்னை வைத்தியத் தொழில் பயிற்சிக்கு அனுப்பக் கூடாதா?” என்று கேட்டேன்.
என் சகோதரர் உடனே குறுக்கிட்டு இவ்வாறு கூறினார்: “அது தந்தைக்குப் பிடிப்பதேயில்லை. அவர் உன்னை மனத்தில் வைத்துக் கொண்டே, ‘பிணங்களை அறுத்துச் சோதிப்பது வைஷ்ணவர்களாகிய நமக்குக் தகாது’ என்று சொன்னார். நீ வக்கீல் ஆக வேண்டும் என்றுதான் அவர் விரும்பினார்.”
ஜோஷிஜி இடைமறித்துத் கூறியதாவது: “காந்திஜியைப் போல் வைத்தியத் தொழில் கூடாது என்பவனல்ல நான். நமது சாத்திரங்களும் அதற்கு விரோதமாகக் கூறவில்லை. ஆனால், ஒரு வைத்தியப் பட்டம் உன்னைத் திவான் ஆக்கிவிடாது. நீ திவானாக வேண்டும்; சாத்தியமானால் இன்னும் பெரிய பதவியையும் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்படி ஆனால் தான் உன்னுடைய பெரிய குடும்பத்தை நீ காப்பாற்ற முடியும். காலம் வேகமாக மாறிக்கொண்டே போகிறது. நாளுக்கு நாள் கஷ்டமாகிக் கொண்டும் வருகிறது. ஆகையால், மிகப் புத்திசாலித்தனமான காரியம் பாரிஸ்டராகி விடுவதுதான்!” என் தாயாரைப் பார்த்து அவர் கூறியதாவது: “இப்பொழுது நான் புறப்பட வேண்டும். நான் கூறியதை நன்றாக யோசிக்கும்படி கேட்டுக்கொள்ளுகிறேன். நான் திரும்ப இங்கே வரும்போது, இங்கிலாந்துக்குப் புறப்படுவதற்கான ஏற்பாடுகளைக் குறித்து நான் அறியலாம் என்று எதிர் பார்க்கிறேன். ஏதாவது ஒருவகையில் நான் உதவி செய்ய முடியுமென்றால் நிச்சயமாக எனக்குத் தெரிவியுங்கள்.”
ஜோஷிஜி போய்விட்டார். நானும் மனக்கோட்டைகள் கட்டலானேன்.
என் மூத்த சகோதரரின் மனம் மிகப் பரபரப்படைத்து விட்டது. என்னை அனுப்புவதற்கு வேண்டிய பணத்திற்கெல்லாம் என்ன செய்வது? என்னைப் போன்ற ஓர் இளைஞனை நம்பித் தன்னந்தனியாக வெளிநாடுகளுக்கு அனுப்புவது சரியா?
என் தாயாருக்கும் ஒரே மனக்குழப்பம் ஆகிவிட்டது. என்னை விட்டுப் பிரிய அவர் விரும்பவில்லை. ஆகவே, எனக்குச் சாக்குப் போக்குச் சொல்லிவிட முயன்றார். “இப்பொழுது சிறிய தகப்பனார்தான் நம் குடும்பத்தில் பெரியவர். அவரை முதலில் கலந்து ஆலோசிக்க வேண்டும். அவர் ஒப்புக்கொண்டால் இவ்விஷயத்தைப் பற்றி யோசிப்போம்” என்றார்.
என் சகோதரருக்கு இன்னும் ஒரு யோசனை தேன்றிற்று. அவர் என்னிடம் பின்வருமாறு கூறினார்: “போர்பந்தர் சமஸ்தானத்தினிடம் உதவியை எதிர்பார்க்க நமக்கு உரிமை இருக்கிறது. ஸ்ரீ லேலி அதற்க நிர்வாக அதிகாரி. நம் குடும்பத்தினிடம் அவருக்கு நல்ல மதிப்பு உண்டு. நமது சிறிய தகப்பானாரிடம் அவர் பிரியமாக இருக்கிறார். இங்கிலாந்தில் நீ படிப்பதற்காக உனக்கு ஏதாவது சமஸ்தான உதவி அளிக்க அவர் சிபாரிசு செய்வது சாத்தியமாகலாம்.”
இந்த யோசனை எனக்கும் பிடித்தமானாதாக இருந்தது. போர்பந்தருக்கு உடனே புறப்படுவதற்கு தயாரானேன். அந்தக் காலத்தில் ரயில் கிடையாது. மாட்டு வண்டியில் ஐந்து நாட்கள் போகவேண்டும். நான் பயங்காளி என்பதை முன்னாலேயே கூறியிருக்கிறேன். இங்கிலாந்துக்குப் போகவேண்டும் என்ற ஆசையே என்னை முற்றும் அப்பொழுது ஆட்கொண்டிருந்ததால் அதன் முன்னால் என் பயங்காளித்தனமெல்லாம் ஓடி மறைந்துவிட்டது. தோராஜி வரைக்கும் ஒரு மாட்டு வண்டியை அமர்த்திக் கொண்டேன் போர்பந்தருக்கு ஒரு நாள் முன்னாடியே போய்விட வேண்டும் என்பதற்காகத் தோராஜியில் ஓர் ஒட்டகத்தை அமர்த்தினேன். ஒட்டகத்தில் நான் சவாரி செய்தது அதுதான் முதல் முறை.
கடைசியாகப் போர்பந்தர் போய்ச் சேர்ந்தேன். என் சிறிய தகப்பனாரை சாஷ்டாங்கமாய் வணங்கி எல்லாவற்றையும் அவரிடம் சொன்னேன். அதைப்பற்றி அவர் யோசித்துவிட்டுப் பின்வருமாறு கூறினார்: “மத தருமம் கெடாமல் ஒருவர் இங்கிலாந்தில் இருப்பது சாத்தியம் என்பது எனக்கு நிச்சயமில்லை. நான் கேள்விப்பட்டிருப்பவைகளைக் கொண்டு பார்த்தால் எனக்குச் சந்தேகமாகத்தான் இருக்கிறது. இந்தப் பெரிய பாரிஸ்டர்களை நான் பார்க்கும்போது இவர்கள் வாழ்க்கைக்கும் ஐரோப்பியர் வாழ்க்கைக்கும் எந்த வித்தியாசத்தையும் நான் காணவில்லை. இவர்கள் எந்த உணவையும் சாப்பிடுகிறார்கள். இவர்கள் வாயில் சுருட்டு இல்லாமல் இருப்பதே இல்லை. வெட்கமில்லாமல் ஆங்கிலேயரைப் போலவே உடை உடுத்துகிறார்கள். இவையெல்லாம் தம் குடும்ப பாரம்பரியத்திற்குப் பொருந்தாதவை. சீக்கிரத்தில் நான் க்ஷேத்திர யாத்திரைக்குப் புறப்படப் போகிறேன். இன்னும் பல வருடங்களுக்கு நான் உயிரோடிருக்கப் போவதில்லை. மரணத்தின் தருவாயில் இருக்கும் நான், இங்கிலாந்துக்குப் போகவும், கடல் கடக்கவும் உனக்கு அனுமதி கொடுக்க எப்படித் துணிவேன்? ஆனால், உன் வழியில் குறுக்கிடமாட்டேன். இதற்கு முக்கியமாக வேண்டியது உன் தாயாரின் அனுமதி. அவர் அனுமதி கொடுத்துவிட்டால், சுகமாகப் போய் வா. இதில் நான் குறுக்கிடமாட்டேன் என்று அவருக்குத் தெரிவி. என் ஆசி உனக்கு எப்பொழுதும் இருக்கும்.”
“இதைவிட அதிகமாக எதையும் நான் உங்களிடமிருந்து எதிர்பார்க்க முடியாது” என்றேன். “என் தாயாரின் சம்மதத்தைப் பெற முயல்கிறேன். ஸ்ரீ லேலிக்கு என்னைப் பற்றி நீங்கள் சிபாரிசு செய்கிறீர்களா?” என்று கேட்டேன்.
“அதை நான் எப்படிச் செய்ய முடியும்?” என்றார் அவர். “ஆனால் அவர் நல்லவர். உனது உறவு முறையைத் தெரிவித்து, அவரை நீ பார்க்க விரும்புவதாகக் கேள்; நிச்சயமாகப் பார்ப்பார். உனக்கு உதவி செய்யவும் கூடும்” என்றார்.
என் சிறிய தகப்பனார் எனக்கு ஏன் சிபாரிசுக் கடிதம் கொடுக்கவில்லை என்பதைப் பற்றி என்னால் கூறமுடியாது. நான் இங்கிலாந்துக்குப் போவது மத விரோதமான காரியம் என்ற கருத்து அவருக்கு இருந்ததால் நான் போவதில் நேரடியாக ஒத்துழைக்க அவர் தயங்கினார் என்று ஏதோ கொஞ்சம் எனக்கு ஞாபகம் இருக்கிறது.
ஸ்ரீ லேலிக்கு எழுதினேன். தமது வீட்டில் வந்து பார்க்கும்படி அவர் அறிவித்தார். மாடிப் படிக்கட்டு ஏறிக்கொண்டிருந்தபோதே அவர் என்னைப் பார்த்தார். “முதலில் நீ பி.ஏ. பாஸ் செய். பிறகு வந்து என்னைப் பார். இப்பொழுது உனக்கு எந்த உதவியும் செய்வதற்கில்லை” என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டு வேகமாகப் படியேறிப் போய்விட்டார். அவரைச் சந்திப்பதற்காக எவ்வளவோ விரிவான முன்னேற்பாடுகளை எல்லாம் செய்திருந்தேன். அவரிடம் பேசச் சில வாக்கியங்களைக் கவனமாகக் கற்று வைத்திருந்தேன். தாழ்ந்து தலை வணங்கி, இரு கரங்களாலும் சலாம் போட்டேன் ஆனால், அவையெல்லாம் ஒன்றுக்கும் பயன்படவில்லை.
பிறகு என் மனைவியின் நகைகளைப்பற்றி நினைத்தேன். என் மூத்த அண்ணன் நினைவும் வந்தது. அவரிடம் எனக்கு முழு நம்பிக்கையும் உண்டு. அவர் தாராளமான மனமுடையவர். என்னைத் தம் மகன் போலவே கருதி அன்பு கொண்டிருந்தார்.
போர்பந்தரிலிருந்து ராஜ்கோட்டுக்குத் திரும்பி, அங்கே நடந்ததையெல்லாம் தெரிவித்தேன். ஜோஷிஜியைக் கலந்து ஆலோசித்தேன். அவரோ, அவசியமானால் கடன் வாங்கும் படியும் யோசனை கூறினார். என் மனைவியின் நகைகளை விற்றால் இராண்டாயிரம் அல்லது மூவாயிரம் ரூபாய் கிடைக்கும். அவற்றை விற்றுவிடும் யோசனையையும் கூறினேன். எப்படியும் பணம் தேடிவிடுவதாக என் சகோதரர் வாக்களித்தார்.
என் தாயார் மாத்திரம் இன்னும் என்னை இங்கிலாந்துக்கு அனுப்ப விரும்பாமலேயே இருந்தார். நுட்பமாக எல்லா விவரங்களையும் விசாரித்துக் கொண்டிருந்தார். வாலிபர்கள் இங்கிலாந்துக்குப் போய்க் கெட்டு விடுகிறார்கள் என்று யாரோ ஒருவர் அவருக்குச் சொல்லிவிட்டார். இன்னும் யாரோ ஒருவர், ‘அவர்கள் மாமிசம் சாப்பிட ஆரம்பித்து விடுகிறார்கள்’ என்று சொல்லிவிட்டார். ‘குடிக்காமல் அங்கே அவர்களால் இருக்கவே முடியாது’ என்று இன்னும் ஒருவர் சொல்லியிருந்தார். “இவைகளுக்கெல்லாம் நீ என்ன சொல்லுகிறாய்?” என்று என் தாயார் என்னைக் கேட்டார். நான், “என்னை நீங்கள் நம்பமாட்டீர்களா? உங்களிடம் பொய் சொல்லமாட்டேன். ‘அவைகளில் எதையும் தீண்டுவதில்லை’ என்று உங்களுக்குச் சத்தியம் செய்து கொடுக்கிறேன். அங்கே அப்படிப்பட்ட அபாயம் ஏதாவது இருந்தால் ஜோஷிஜி என்னைப் போக விடுவாரா?” என்றேன்.
“உன்னை நானே நம்பலாம். ஆனால் நீ தொலைவான நாட்டில் இருக்கும்போது எப்படி நம்புவது? எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது. என்ன செய்வது என்பதே புரியவில்லை. பேச்சர்ஜி சுவாமியைக் கேட்கிறேன்” என்றார், அன்னை.
பேச்சர்ஜி சுவாமி முன்பு மோத் வணிகர். இப்பொழுது ஜைன சந்நியாசியாகி விட்டார். ஜோஷிஜியைப் போல் இவரும் குடும்பத்திற்கு வேண்டிய ஆலோசனைகளைக் கூறி வருவார். அவர் எனக்கு உதவினார். “மூன்று விரதங்களை அவன் அனுசரிப்பதாக அவனிடம் சத்தியம் வாங்கிக் கொள்ளுகிறேன். பிறகு அவனைப் போகச் செல்லலாம்” என்றார். அவர் என்னிடம் அப்படியே பிரமாணம் வாங்கினார். ‘மதுபானம், பெண், மாமிசம் ஆகியவைகளைத் தொடுவதில்லை’ என்று சத்தியம் செய்து கொடுத்தேன். உடனே என் அன்னை அனுமதி தந்தார்.
என்னைக் கௌரவிப்பதற்காக உயர்நிலைப் பள்ளியில் எனக்கு ஒரு பிரிவு உபசாரம் நடத்தினர். ராஜ்கோட்டைச் சேர்ந்த ஒரு வாலிபன், இங்கிலாந்துக்குப் போகிறான் என்றால் அது சாமானிய விசயமன்று! நன்றி தெரிவிப்பதற்கென்று சில வார்த்தைகள் எழுதி வைத்திருந்தேன். அதைப் படிக்க நான் எழுந்தபோது எனக்கு எவ்விதம் தலை சுற்றியது. உடம்பெல்லாம் எவ்விதம் நடுங்கியது என்பது இன்னும் நினைவிருக்கிறது.
எங்கள் வீட்டுப் பெரியவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற்று நான் பம்பாய்க்குப் புறப்பட்டேன். ராஜ்கோட்டிலிருந்து நான் பம்பாய்க்குச் சென்றது இதுவே முதல் முறை. என் சகோதரரும் என்னுடன் வந்தார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுவதற்குள் எத்தனையோ விபத்துக்களும், சமாளித்தாக வேண்டிய கஷ்டங்களும் பம்பாயில் காத்திருந்தன.
எனது ஆறு அல்லது ஏழாவது வயதிலிருந்து பதினாறாம் பிராயம் வரையில் நான் பள்ளிக்கூடத்தில் படித்து வந்தேன். மதத்தைத் தவிர மற்ற எல்லாவிதமான விஷயங்களைப்ப்பற்றியும் எனக்குப் போதித்தார்கள். உபாத்தியாயர்கள், தங்கள் அளவில் எவ்விதமான சிரமமுமின்றி எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கக் கூடியவை எனக்குக் கிடைக்கவில்லை என்றே கூறுவேன். என்றாலும், அக்கம் பக்கங்களிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக சமய ஞானம் பற்றி நான் அறிந்து வந்தேன். சமயம் என்பதை அதன் விரிவான கருத்தில் – தன்னைத் தானே அறிதல் அல்லது ஆன்ம ஞானம் என்ற பொருளிலேயே நான் உபயோகிக்கிறேன்.
வைஷ்னவக் குடும்பத்தில் பிறந்தவனாகையால் நான் அடிக்கடி விஷ்ணு கோயிலுக்குப் போகவேண்டியிருந்தது. ஆனால் அது என் மனதை ஒரு போதும் கவரவில்லை. அதன் பகட்டும் ஆடம்பரமும் எனக்குப் பிடிக்கவே வில்லை. அதோடு ஒழுக்கவீனமான காரியங்கள் பல அங்கே நடக்கின்றன என்ற வதந்திகளையும் கேள்விப்பட்டேன். ஆகவே, கோயிலுக்குப் போவதில் எனக்கு சிரத்தையில்லை. இதனால், விஷ்ணு கோயிலிலிருந்து நான் எதையும் பெறவில்லை.
ஆனால், கோயிலில் நான் பெற முடியாது போனதை, எங்கள் குடும்ப வேலைக்காரக் கிழவியான என் செவிலித் தாயிடமிருந்து பெற்றேன். ரம்பா என்பது அவள் பெயர். அவளுக்கு என் மீதிருந்த பிரியம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. எனக்குப் பேய், பிசாசுகளின் பயம் இருந்தது என்று முன்பே கூறியிருக்கிறேன். ராம நாமத்தைத் திரும்பத் திரும்ப உச்சரிப்பதே அந்தப் பயத்தைப் போக்குவதற்கான மருந்து என்று எனக்கு ரம்பா யோசனை கூறினாள். அவள் கூறிய பரிகாரத்தில் எனக்கு இருந்த நம்பிக்கையைவிட அவளிடம் எனக்கு அதிக நம்பிக்கையுண்டு ஆகையால், பேய் பிசாசுகளிடம் எனக்கு இருந்த பயத்தைப் போக்கிக் கொள்ளுவதற்கு இளம் பிராயத்திலிருந்தே ராம நாம ஜபம் செய்வேன். இது தொடர்ந்து நடக்கவில்லை. ஆனால் குழந்தைப் பருவத்தில் விதைக்கப்பட்ட அந்த நல்ல விதை வீணாகப் போய் விடவில்லை. அந்த நல்ல பெண்மணியான ரம்பா விதைத்த விதையினாலேயே ராம நாமம் இன்று எனக்குப் பொய்க்காத அருமருந்தாக இருந்து வருகிறது என்று நினைக்கிறேன்.
இந்தச் சமயத்தில் ராமாயண பக்தரான என் பெரியப்பா பிள்ளை ஒருவர், நானும் என் சின்ன அண்ணனும் ராமரட்சை கற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு செய்தார். அதை மனப்பாடம் செய்தோம். ஒவ்வொரு நாளும் காலையில் குளித்த பிறகு வழக்கமாக அதைப் பாராயணம் செய்து வந்தோம். நாங்கள் ராஜ்கோட்டை அடைந்ததும் அதை மறந்துவிட்டோம். ஏனெனில் அதில் எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. நான் அதைப் பாராயணம் செய்து வந்ததற்கு ஒரு காரணம், சுத்தமான உச்சரிப்புடன் ராமரட்சையை என்னால் பாராயணம் செய்ய முடிகிறது என்பதில் நான் கொண்டிருந்த பெருமையேயாகும்.
என்றாலும், என்னுள் ஆழ்ந்த கவர்ச்சியை உண்டாக்கியது, என் தந்தையார் எதிரில் ராமாயணம் படிக்கப்பட்டு வந்ததாகும். என் தந்தை நோயுற்றிருந்த சமயம் கொஞ்ச காலம் போர்பந்தரில் இருந்தார். அங்கே மாலை நேரத்தில் ராமயணத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்பார். அவ்விதம் ராமாயணம் வாசித்து வந்தவர் சிறந்த ராம பக்தர். அவர் பிலேஸ்வரைச் சேர்ந்த லதா மகராஜ் என்பவர். அவருக்கு குஷ்ட நோய் இருந்து குணமாகிவிட்டது. எந்த மருந்தினாலும் அவருக்குக் குணமாகிவிடவில்லை என்றும், பிலேஸ்வரர் கோயிலில் மகாதேவர் சிலைக்கு அர்ச்சனை செய்து, பிறகு தூரப் போடப்படும் வில்வ இலைகளைத் தமது உடலில், குஷ்டத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வைத்துக் கட்டியதாலும், விடாமல் ராமநாம ஜபம் செய்ததாலுமே அந்நோய் அவருக்குக் குணமாயிற்று என்றும் சொல்லுவார்கள். அவருடைய நம்பிக்கை அவர் நோயைப் போக்கியது என்பார்கள். நாங்கள் என்னவோ இக்கதையை நம்பினோம். லதா மகராஜ் எங்கள் வீட்டில் ராமாயணம் வாசிக்க ஆரம்பித்தபோது அவர் உடலில் குஷ்டநோய் என்பதே இல்லை என்பது உண்மை. அவருக்கு இனிமையான சாரீரம் இருந்தது. கண்ணிகளையும் விருத்தங்களையும் பாடுவார். அவற்றை விளக்கிப் பொருள் சொல்லுவார். சொல்லும்போதே மெய் மறந்து அவர் பரவசமாகிவிடுவதோடு கேட்போரையும் மெய் மறந்திருக்கச் செய்துவிடுவார். அப்பொழுது எனக்குப் பதின்மூன்று வயது இருக்கும். என்றாலும், அவர் வாசிப்பதைக் கேட்டு நான் பரவசமாகிவிட்டது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ராமாயணத்தினிடம் எனக்கு ஆழ்ந்த பக்தி ஏற்படுவதற்கு அடிகோலியதே அதுதான். பக்தி நூல்களிலெல்லாம் தலையாய நூல் துளசிதாஸரின் ராமாயணமே என்று நான் இன்று கருதுகிறேன்.
இதற்கு சில மாதங்கள் கழிந்து நாங்கள் ராஜ்கோட்டிற்கு வந்தோம். ராமாயண பாராயணம் எதுவும் இங்கே நடைபெறவில்லை. ஒவ்வொர் ஏகாதசி தினத்தன்றும் பாகவதம் படிப்பது வழக்கம். சில சமயங்களில் நான் கேட்கப் போவேன். ஆனால், அதைப் படித்தவரோ, கேட்போருக்கு உருக்கம் உண்டாக்கக் கூடியவர் அன்று. பாகவதம் சமய உணர்ச்சியை உண்டாக்க வல்ல நூல் என்பதை இன்று நான் காணுகிறேன். அதைத் தீவிரமான சிரத்தையுடன் குஜராத்தி மொழியில் படித்திருக்கிறேன். ஆனால், என்னுடைய இருபத்தொரு நாள் உண்ணாவிரத காலத்தில் பாகவதத்தின் மூலத்திலிருந்து சில பகுதிகளைப் பண்டித மதன் மோகன மாளவியா படிக்க நான் கேட்டேன். பண்டித மாளவியாவைப் போன்ற ஒரு பக்தர் அதைப் படிக்கச் சிறு வயதிலேயே நான் கேட்டிருந்தால் அப்போதிருந்தே அதன் மீது எனக்கு விருப்பு ஏற்பட்டிருக்கும் என்பது தெரிந்தது. அந்த வயதில் உருவாகும் அபிப்ராயங்கள் ஒருவருடைய சுபாவத்தில் ஆழ வேரூன்றி விடுகின்றன. அந்தக் காலத்தில் இதுபோன்ற மற்றும் பல நல்ல நூல்களைப் படிக்கக் கேட்கும் பாக்கியம் எனக்கு இல்லாது போயிற்றே என்ற வருத்தம் என்னைவிட்டு என்றும் நீங்காது.
என்றாலும் ஹிந்து சமயத்தின் எல்லா உட்பிரிவுகள் சம்பந்தமாகவும், மற்றச் சகோதர சமயங்கள் விஷயத்திலும் சகிப்புத் தன்மையுடன் இருக்கும் ஆரம்பப் பயிற்சியும் எனக்கு ராஜ்கோட்டிலேயே கிடைத்தது. ஏனெனில், என் தந்தையும் தாயாரும் விஷ்ணு கோயிலுக்குப் போவதோடு சிவன் கோயிலுக்கும், ராமர் கோயிலுக்கும் போவார்கள். அங்கெல்லாம் சிறுவர்களாகிய எங்களையும் அழைத்துப் போவார்கள்; அனுப்புவார்கள். ஜைன பிஷுசுக்கள் அடிக்கடி என் தந்தையைப் பார்க்க வருவார்கள். ஜைனர்கள் அல்லாத எங்கள் வீட்டில் சாப்பிடும் அளவுக்கும் அவர்கள் தாராளமாக நடந்து கொள்ளுவார்கள். சமய விஷயங்களைக் குறித்தும், உலக விவகாரங்களைக் குறித்தும் என் தந்தையுடன் அவர்கள் பேசுவார்கள்.
இதல்லாமல் அவருக்கு முஸ்லீம், பார்ஸி நண்பர்களும் உண்டு தங்கள் சமயங்களைப் பற்றி அவர்கள் இவரிடம் பேசுவார்கள். எப்பொழுதுமே அவர்கள் கூறுவனவற்றிற்கு மதிப்புக் கொடுத்தும், பெரும்பாலும் சிரத்தையுடனும் இவர் கேட்பார். என் தந்தையாருக்கு நான் பணிவிடை செய்து வந்ததால் அவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்கும் வாய்ப்பு எனக்கு அடிக்கடி கிட்டியது. மற்றச் சமயங்களிடம் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ளும் பண்பை இவைகளெல்லாம் சேர்ந்தே என்னுள் வளர்ந்தன.
அச்சமயம் கிறிஸ்தவ மதம் மாத்திரம் இதற்கு ஒரு விலக்காக இருந்தது அதனிடம் எனக்கு ஒருவகை வெறுப்பு இருந்தது. அதற்கு ஒரு காரணமும் உண்டு. அக்காலங்களில் கிறிஸ்தவப் பாதிரிமார்கள், உயர்நிலைப் பள்ளிக்கு அருகில் தெருத் திருப்பத்தில் நின்றுகொண்டு ஹிந்துக்களையும் அவர்களுடைய தெய்வங்களையும் தூஷித்துக் கொண்டிருப்பார்கள். இதை என்னால் சகிக்க முடிவதில்லை. அவர்கள் சொல்லுவதைக் கேட்க ஒரே ஒரு தடவை மாத்திரமே நான் அங்கே நின்றிருப்பேன். இந்தப் பரீட்சை இனி வேண்டாம் என்று நான் தீர்மானித்து விட்டதற்கு அது ஒன்றே போதுமானதாயிற்று. ஏறக்குறைய அதே சமயத்தில் பிரபலமான ஹிந்து ஒருவர் கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றப்பெற்றார் என அறிந்தேன். அவர் ‘ஞானஸ்நானம்’ செய்விக்கப் பெற்ற போது, மாட்டிறைச்சி தின்று, மதுபானமும் குடிக்க வேண்டியிருந்தது என்றும், தமது உடையையும் அவர் மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று என்றும் ஊரெங்கும் ஒரே பேச்சாக இருந்தது. அது முதல் அவர் ஐரோப்பிய உடையுடன் தொப்பியும் போட்டுக் கொண்டு அங்குமிங்கும் போக ஆரம்பித்தாராம். இவையெல்லாம் எனக்கு வெறுப்பை உண்டாக்கின. ‘மாட்டிறைச்சி தின்ன வேண்டும் என்றும், குடிக்கவேண்டும் என்றும், தமது சொந்த உடையை மாற்றிக் கொண்டுவிட வேண்டும் என்றும், ஒருவரைக் கட்டாயப் படுத்தும் ஒரு மதம், மதம் என்ற பெயருக்கே நிச்சயமாக அருகதையில்லாதது’ என்று நான் எண்ணினேன். புதிதாக மதம் மாறியவர், தமது மூதாதையாரின் மதத்தையும், பழக்க வழக்கங்களையும், நாட்டையும் தூஷித்துப் பேசவும் தலைப்பட்டு விட்டார் என்றும் கேள்விப்பட்டேன். இவைகளெல்லாம் கிறிஸ்தவத்தின் மீது எனக்கு வெறுப்பை உண்டாக்கின.
மற்றச் சமயங்களிடம் சகிப்புத் தன்மை கொள்ள நான் கற்றிருந்தேன் என்றால், உண்மையில் எனக்கு கடவுளிடம் திடமான நம்பிக்கை இருந்தது என்பது பொருளல்ல. அந்த சமயத்தில் மனுஸ்மிருதியையும் நான் படிக்க நேர்ந்தது. படைப்பைப் பற்றியும், அது போன்ற விஷயங்களைக் குறித்தும் அதில் கூறப்பட்டிருந்த கதை எனக்கு அவ்வளவாக நம்பிக்கை ஊட்டுவதாயில்லை. இதற்குமாறாக நாஸ்திகத்தை நோக்கி ஓரளவுக்கு என்னைச் சாயும்படியும் அது செய்தது.
என் பெரியப்பா பிள்ளை ஒருவர் உண்டு. அவர் இன்றும் இருக்கிறார். அவருடைய அறிவாற்றலில் எனக்கு அபார மதிப்பு உண்டு. எனக்கு இருந்த சந்தேகங்களையெல்லாம் குறித்து அவரிடம் கேட்டேன். ஆனால் அவற்றைத் தீர்த்துவிட அவரால் இயலவில்லை. “உனக்கு வயதானதும் இந்தச் சந்தேகங்களை எல்லாம் நீயே தீர்த்துக் கொண்டு விடுவாய். இந்த வயதில் இப்படிப்பட்ட சந்தேகங்கள் உனக்குத் தோன்றலாகாது” என்று பதில் சொல்லி, அவர் என்னை அனுப்பிவிட்டார். என் வாய் அடைப்பட்டுப் போயிற்று. ஆயினும், மனம் திருப்பதியடையவில்லை. மனுஹ்மிருதியில் உணவு பற்றியும் அது போன்றவை குறித்தும் கூறப் பட்டிருந்தவை, தினசரி வழக்கத்திற்கு மாறுப்பட்டவை என எனக்குத் தோன்றின. இதில் எனக்கு உண்டான சந்தேகத்திற்கும் அதே பதில்தான் கிடைத்தது. அறிவு வளர வளர, அதிகமாகப் படிக்க படிக்க, அதை நான் நன்றாகப் புரிந்து கொள்ளுவேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.
மனுஸ்மிருதி, அக்காலத்தில் அகிம்சாதருமத்தை எனக்கு போதிக்கவிலலை என்பது மாத்திரம் உண்மை. நான் புலால் உண்ட கதையைக் கூறியிருக்கிறேன். அதை மனுஸ்மிருதி ஆதரிப்பதாகத் தோன்றியது. பாம்புகள், மூட்டைப் பூச்சி முதலியவைகளைக் கொல்லுவது முற்றும் நியாயமானதே என்று கருதினேன். மூட்டைப் பூச்சிகள் போன்ற ஜந்துகளைக் கொல்லுவது ஒரு கடமை எனக் கருதி அந்த வயதில் அவற்றை நான் கொன்றது எனக்கு நினைவிருக்கிறது.
ஆனால், ஒன்று மாத்திரம் என்னுள் ஆழ வேரூன்றியது. ‘ஒழுக்கமே எல்லாவற்றிக்கும் அடிப்படை; சத்தியமே ஒழுக்கமெல்லாவற்றிற்கும் சாரமும்’ என்று நான் கொண்ட உறுதியே அது. சத்தியம் என் ஒரே லட்சியமாயிற்று. ஒவ்வொரு நாளும் அதன் மகிமை வளரலாயிற்று. அதற்கு நான் கொண்ட பொருளும் விரிவாகிக் கொண்டே வந்தது.
அதேபோல நன்னெறியைப் போதிக்கும் ஒரு குஜராத்திப் பாடலும் என் அறிவையும் உள்ளத்தையும் கொள்ளை கொண்டது. தீமை செய்தோருக்கும் நன்மையே செய் என்ற அப்பாடலின் போதனை, என் வாழ்க்கையில் வழிகாட்டும் தருமமாயிற்று. அதில் எனக்கு அதிக பிரேமை உண்டாகி விட்டதால் அதை மேற்கோளாகக் கொண்டு பற்பல சோதனைகளையும் செய்யத் தொடங்கினேன். மிக அற்புதமானவை என நான் எண்ணும் அப்பாடலின் வரிகள் இவை:
விண்ணமுதைப்போல் அன்னம் விரும்பிய படைத்திடுவாய்.
அன்போடு கும்பிட்டால் அடிபணிந்து நீ தொழுவாய்.
செம்பான காசுக்குச் செம்பொன்னைத் தந்திடுவாய்.
உயிர்காத்தோன் துன்பத்தை உயிர்கொடுத்து நீ துடைப்பாய்.
செயலாலும் சொல்லாலும் சிந்தையினாலும் பெரியோர்
சின்னஞ்சிறு உதவி செய்தவர்க்கு எந்நாளும்
ஒன்றுக்குப் பத்தாய் உவந்து செய்வர் பேருதவி,
வையத்தார் எல்லோரும் ஒன்றெனவே மாண்புடையோர்
ஐயப்பா டின்றி அறிந்திருக்கும் காரணத்தால்
இன்னாசெய்தாரை ஒறுக்க, அவர் நாண
நன்னயம் செய்து விடுவர் இந்நானிலத்தே.’
நான் இப்பொழுது கூறப்போகின்றவை என்னுடைய பதினாறாவது வயதில் நடந்தவை. பவுந்திர நோயினால் என் தந்தை படுத்த படுக்கையாக இருந்தார் என்பதை முன்பே கண்டோம். அவருக்கு வேண்டிய பணிவிடைகளை என் தாயாரும் வீட்டு வேலைக்காரரான ஒரு கிழவரும், நானும் செய்து வந்தோம். என்னுடையன ஒரு தாதிக்குரிய வேலைகள். முக்கியமாகப் புண்ணுக்கு மருந்து வைத்துக் கட்டுவது, என் தந்தைக்கு மருந்து கொடுப்பது, வீட்டிலேயே தயாரிக்க வேண்டியிருந்த மருந்துகளைச் சேர்த்துத் தயாரிப்பது ஆகியவை அவை. ஒவ்வொரு நாள் இரவும் அவருக்குக் கால் பிடித்துவிடுவேன். போகுமாறு அவர் சொன்னதுமோ, அல்லது அவர் தூங்கிய பிறகோதான் போய் படுத்துக் கொள்ளுவேன். இப்பணி செய்வதற்கு நான் பிரியப்பட்டேன். இதில் நான் எப்பொழுதேனும் அசட்டையாக இருந்து விட்டதாக எனக்கு நினைவில்லை. எனது அன்றாடக் கடமைகளை நிறைவேற்றியது போக பாக்கியிருக்கும் நேரத்தைப் பள்ளிக்கூடத்துக்குப் போவதிலும் என் தந்தையாருக்குப் பணிவிடை செய்வதிலும் கழிப்பேன். அவர் என்னை அனுமதிக்கும் போதோ, அவருக்கு உடம்பு கொஞ்சம் நன்றாக இருக்கும் போதோ மாத்திரம் மாலையில் உலாவிவிட்டு வரப்போவேன்.
அது, என் மனைவி பிள்ளைப்பேற்றை எதிர்பார்த்திருந்த சமயமும் ஆகும். அந்த ஒரு சந்தர்ப்பத்தை இன்று நான் எண்ணிப் பார்க்கும்போது, அது எனக்கு இரட்டை அவமானம் என்பதை உணருகிறேன். அச்சமயத்தில் நான் பள்ளி மாணவனாகையால் நான் புலனடக்கத்தைக் கைக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யாது போனது ஓர் அவமானம். படிப்பு விஷயத்தில் என் கடமையென நான் கருதியதையும், என் பெற்றோரிடம் பக்தியுடனிருப்பது அதையும்விட இன்னும் பெரிய கடமை என நான் கொண்டிருந்ததையும் மறக்கும்படி காமவெறி செய்துவிட்டது, இரண்டாவது அவமானமாகும். சிரவணன் போல இருக்க வேண்டும் என்பது குழந்தைப் பருவம் முதலே என் லட்சியமாக இருந்தது. ஒவ்வோர் இரவும், என் தந்தையாரின் பாதங்களை என் கைகள் பிடித்துவிட்டுக் கொண்டிருக்கும் போது என் மனம் மாத்திரம் என் படுக்கையறையை வட்டமிட்டுக் கொண்டிருக்கும். அதுவும், மதம், வைத்திய சாஸ்திரம், பகுத்தறிவு ஆகியவைகளெல்லாம் ஒருமித்து மனைவியுடன் உடல் சேர்க்கை கூடாது என்று தடுக்கும் ஒரு சமயத்தில் எனக்கு அந்த மனநிலை. என் வேலையிலிருந்து விடுபடும் போதெல்லாம் மிக்க மகிழ்ச்சியுறுவேன். தந்தைக்கு வணக்கம் செலுத்திவிட்டு நேரே படுக்கை அறைக்குப் போவேன்.
அதே சமயத்தில் என் தந்தையின் நிலையும் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வந்தது. ஆயுர்வேத வைத்தியர்கள் தங்கள் களிம்புகளையெல்லாம் போட்டுப் பார்த்துவிட்டனர். ஹக்கீம்கள் தங்கள் பிளாஸ்திரிகளையெல்லாம் போட்டுப் பார்த்துவிட்டார்கள். உள்ளூர் அரைகுறை வைத்தியர்களும் தங்கள் தனி உபாயங்களை எல்லாம் கையாண்டுவிட்டனர். ஓர் ஆங்கில சர்ஜனும் தமது திறமையைப் பிரயோகித்துப் பார்த்துவிட்டார். சத்திர சகிச்சை ஒன்றே கடைசியாகச் செய்யக்கூடிய ஒரே காரியம் என்று அவர் சிபாரிசு செய்தார். ஆனால், குடும்ப வைத்தியர் இதை ஆட்சேபித்தார். அவ்வளவு முதிர்ந்த வயதில் சத்திர சிகிச்சை செய்வதை அவர் ஓப்புக்கொள்ளவில்லை. அந்த வைத்தியர் திறமை வாய்ந்தவர்; பிரபலமானவர். ஆகையால், அவர் யோசனையே ஏற்றுக் கொள்ளப்பட்டது. சத்திர சிகிச்சை கைவிடப்பட்டது. அதற்காக வாங்கிய மருந்துகளுக்கு அளவே இல்லை. சத்திர சிகிச்சைக்கு வைத்தியர் அனுமதித்திருந்தால் புண் எளிதில் ஆறியிருக்கும் என்பது என் எண்ணம். இந்த சிகிச்சையும் பம்பாயில் அப்பொழுது பிரபலமாக இருந்த ஒரு சர்ஜன் செய்ய வேண்டும். ஆனால், கடவுள் சித்தம் வேறுவிதமாக இருந்து விட்டது. சாவு நிச்சயம் என்று இருக்கும்போது சரியான பரிகாரம் யாருக்குத் தோன்றும்? சத்திர சிகிச்சைக்குச் சேகரிக்கப்பட்டு, இப்பொழுது வீணாகப் போன பொருளுடன் என் தந்தை பம்பாயிலிருந்து திரும்பினார். இனி அதிக காலம் உயிரோடிருப்போம் என்ற நம்பிக்கை அவருக்கும் இல்லாமல் போயிற்று. மேலும் மேலும் பலவீனமாகிக் கொண்டு வந்தார். இதனால் மலஜலங்களைப் படுக்கையில் இருந்தவாறே கழிக்கும் படி அவருக்குச் சொல்ல வேண்டியதாயிற்று. ஆனால், கடைசி நேரம் வரையில் அவர் அப்படிச் செய்ய மறுத்து விட்டார். அதிக சிரமத்துடன் பிடிவாதமாகப் படுக்கையிலிருந்து எழுந்து போயே மலஜலம் கழித்து வந்தார். வைஷ்ணவ தருமத்தின் புறத் தூய்மையைப் பற்றிய விதிகள் அவ்வளவு கண்டிப்பானவை.
இத்தகைய சுத்தம் முற்றும் அவசியமே என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், சுத்தத்தைக் கண்டிப்பாக அனுசரிப்பதும், நோயாளிக்குக் கொஞ்சமேனும் அசௌகரியம் இல்லாமல், படுக்கையையும் கொஞ்சமும் அப்பழுக்கு இல்லாமல் வைத்துக் கொண்டு, குளிப்பது உட்பட எல்லாக் காரியங்களையும் படுக்கையிலேயே செய்யலாம் என்பதை மேனாட்டு வைத்திய சாத்திரம் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அத்தகைய சுத்தம் வைஷ்ணவ தருமத்திற்கு முற்றும் பொருத்தமானது என்றே நாம் கருத வேண்டும். ஆனால், படுக்கையைவிட்டு எழுந்து போயே ஆகவேண்டும் என்று என் தந்தையார் வற்புறுத்தியது அப்பொழுது எனக்கு ஆச்சரியத்தையே உண்டாக்கியது. அதை நான் வியந்தேனேயன்றி வேறுவிதமாகக் கருதவில்லை.
பயங்கரமான அந்த இரவும் வந்தது. என் சிறிய தகப்பனார் அப்பொழுது ராஜ்கோட்டில் இருந்தார். என் தந்தையின் தேக நிலை மோசமாகிக் கொண்டிருக்கிறதென்ற செய்தியறிந்து அவர் ராஜ்கோட்டுக்கு வந்ததாக எனக்குக் கொஞ்சம் ஞாபகம். இந்தச் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் பலமான அன்பு கொண்டவர்கள். என் சிற்றப்பா, நாளெல்லாம் என் தந்தையாரின் படுக்கைக்கு அருகிலேயே உட்கார்ந்திருப்பார். எங்களையெல்லாம் தூங்கப்போகச் சொல்லிவிட்டு, அவர் மட்டும் என் தந்தையாரின் படுக்கைக்குப் பக்கத்திலேயே பிடிவாதமாகப் படுத்துக் கொள்ளுவார். தந்தையாரின் நிலை என்னவோ ஆபத்தாகவே இருந்தது. ஆனால், அது எமனின் இரவாக இருக்கும் என்று யாரும் கனவுக்கூடக் காணவில்லை.
அப்பொழுது இரவு 10-30 அல்லது 11 மணி. நான் தந்தையாருக்குக் கால் பிடித்துக் கொண்டிருந்தேன். எனக்குப் பதிலாக அவ்வேலையைத் தாம் பார்த்துக் கொள்ளுவதாக என் சிறிய தகப்பனார் கூறினார். மகிழ்ச்சியுற்றேன். நேரே படுக்கையறைக்குப் போனேன். பாவம், என் மனைவி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். ஆனால், நான் அங்கே போன பிறகு அவள் எவ்வாறு தூங்க முடியும்? அவளை எழுப்பினேன். ஐந்து அல்லது ஆறு நிமிடங்களுக்கெல்லாம் வேலைக்காரன் கதவைத் தட்டினான். திகிலுடன் துடித்து எழுந்தேன். “கிளம்புங்கள்; அப்பாவுக்குக் கடுமையாக இருக்கிறது” என்றான். அவருடைய தேக நிலை மிகவும் மோசமாகவே இருந்தது என்பதை நான் அறிவேன். ஆகவே, அச்சமயத்தில் கடுமையாக இருக்கிறது என்றால் அதன் பொருள் இன்னதென்பதை ஊகித்துக் கொண்டேன். படுக்கையிலிருந்து குதித்தெழுந்தேன். “என்ன விஷயம், சொல்?” என்றேன். “தந்தை காலமாகி விட்டார்” என்றான்.
ஆகவே, எல்லாம் முடிந்து போயிற்று! என் கைகளைப் பிசைந்து கொண்டேன். அளவு கடந்த வெட்கத்தையும் வேதனையையும் அடைந்தேன். என் தந்தையார் இருந்த அறைக்கு ஓடினேன். காமவெறி மாத்திரம் என்னைக் குருடனாக்காமல் இருந்திருக்குமாயின் கடைசி நேரத்தில் தந்தையாரிடமிருந்து பிரிந்ததால் விளைந்த சித்திரவதை எனக்கு நேர்ந்திராது என்பதைக் கண்டேன். அவருடைய பாதங்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருப்பேன்; என் கரங்களிலேயே அவர் ஆவி பிரிந்திருக்கும். இப்பொழுதோ, அந்தப் பாக்கியம் என் சிறிய தகப்பனாருக்குக் கிடைத்தது. அண்ணனிடம் அவருக்கு அளவற்ற பக்தி இருந்ததனால், அவருக்குக் கடைசி சேவைகளைச் செய்யும் கௌரவத்தை அவர் தேடிக்கொண்டார்! மரணம் நெருங்கிவிட்டது என்பதை என் தந்தையார் அறிந்து கொண்டு, பேனாவும் காகிதமும் கொண்டு வருமாறு சமிக்ஞை செய்திருக்கிறார். இறுதிக் கிரியைகளுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று எழுதியிருக்கிறார். பிறகு தம் கையில் அணிந்திருந்த காப்பையும், தங்கத் துளசி மணிமாலையையும் கழற்றித் தூரத்தில் வீசிவிட்டு, ஒரு கண நேரத்தில் உயிரை நீத்திருக்கிறார்.
முந்திய ஓர் அத்தியாயத்தில் எனக்கு ஏற்பட்ட அவமானத்தைப் பற்றிக் கூறினேன். என் தந்தை சாகும் தறுவாயிலிருந்த நெருக்கடியான நேரத்தில் நான் விழித்திருந்து பணிவிடை செய்ய வேண்டியிருக்க, எனக்குக் காமவெறி ஏற்பட்டதைப் பற்றி அவமானமே அது. இது என் வாழ்க்கையில் ஏற்பட்ட கறை. இதை என்றுமே என்னால் அழிக்கவோ, மறக்கவோ முடிந்ததில்லை. என் பெற்றோரிடம் எனக்கு எல்லையற்ற பக்தி உண்டெனினும், அதற்காக எதையும் தியாகம் செய்திருப்பேனாயினும், சோதித்துப் பார்த்ததில், அந்தப் பக்தி மன்னிக்க முடியாத வகையில் குறைபாட்டுடனேயே இருந்தது. ஏனெனில், அதே சமயத்தில் என் மனம் காமத்தின் பலமான பிடிப்பில் இருந்து வந்தது. இதை எப்பொழுதும் நினைத்துப் பார்ப்பேன். ஆகையால் நான் விசுவாசமுள்ள கணவனாக இருந்தாலும் காமவெறியன் என்றே என்னை என்று கருதலானேன். காமத்தின் விலங்கிலிருந்து விடுபட எனக்கு அதிக காலமாயிற்று. அதை வெல்வதற்குள் நான் எத்தனையோ கடுஞ்சோதனைகளைக் கடக்க வேண்டியிருந்தது.
எனது இரு அவமானங்களைப் பற்றிய இந்த அத்தியாயத்தை முடிக்கும் முன்பு, என் மனைவியின் வயிற்றில் பிறந்த அந்தப் பரிதாபகரமான சிசு, மூன்று, நான்கு நாட்கள் கூட உயிரோடு இருக்கவில்லை என்பதையும் நான் கூற வேண்டும். இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்ப்பதற்கில்லை. மணமாகி இருப்பவர்களெல்லாம் என்னுடைய உதாரணத்தைக் கண்டு எச்சரிக்கை அடைவார்களாக.
புலால் உண்ட காலத்திலும், அதற்கு முன்னாலும், நான் செய்த வேறு சில தவறுகளையும் சொல்ல வேண்டியிருக்கிறது. இவை விவாகத்திற்கு முன்போ, விவாகமான உடனேயோ நடந்தவை. நானும் என் உறவினர் ஒருவரும் புகை பிடிப்பதில் விருப்பம் கொண்டோம். சிகரெட் பிடிப்பதில் நல்லது உண்டு என்று நாங்கள் கண்டதோ, சிகரெட் புகையின் வாசனை எங்களுக்கு பிரியமாக இருந்ததோ இதற்கு காரணம் அல்ல. எங்கள் வாய்களிலிருந்து ஏராளமாகப் புகை விடுவதில் ஒருவகையான இன்பம் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டோம். என் சிற்றப்பாவுக்குச் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. அவர் புகை பிடிப்பதைப் பார்த்தபோது நாங்களும் அவரைப்போல் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் எங்களிடம் காசு இல்லை. ஆகவே, என் சிற்றப்பா பிடித்துவிட்டுப் போடும் சிகரெட்டுத் துண்டுகளைத் திருடி உபயோகிக்க ஆரம்பித்தோம்.
ஆனால், சிகரெட்டுத் துண்டுகள் எப்பொழுதும் கிடைப்பதில்லை. கிடைத்தாலும் அதிலிருந்து அதிகப் புகை வருவதும் இல்லை. ஆகவே, பீடி வாங்க வேலைக்காரன் பணத்திலிருந்து காசு திருடக் கிளம்பினோம். ஆனால் பீடியை வாங்கி எங்கே வைப்பது என்று பிரச்சனை வந்தது. பெரியவர்கள் முன்னிலையில் நாங்கள் பீடி பிடிக்க முடியாது. சில வாரங்கள் வரையில் திருடிய காசுகளைக் கொண்டே ஒருவாறு சமாளித்துக் கொண்டோம். இதற்கு மத்தியில் ஏதோ ஒரு செடியின் தண்டு, துவரங்கள் உள்ளது என்றும், சிகரெட்டைப் போல அதைப் பிடிக்கலாம் என்றும் கேள்விப்பட்டோம். அதைத் தேடிப் பிடித்து இந்த வகையான புகை பிடிக்கலானோம்.
இவை போன்றவைகளினாலெல்லாம் எங்களுக்குத் திருப்தி உண்டாகவே இல்லை. எங்கள் இஷ்டம் போல் செய்ய எங்களுக்கு சுதந்திரம் இல்லையே என்ற உணர்ச்சி மனத்தில் எழுந்தது. பெரியவர்களின் அனுமதியில்லாமல் எதையும் நாங்கள் செய்ய முடியாதிருந்தது, பொறுக்க முடியாததாகத் தோன்றியது. கடைசியாக வாழ்வே முற்றும் வெறுத்துப் போய்த் தற்கொலை செய்து கொண்டு விடுவது என்ற முடிவுக்கு வந்து விட்டோம்!
ஆனால் தற்கொலை செய்து கொள்ளுவது எப்படி? விஷம் எங்கிருந்து எங்களுக்குக் கிடைக்கும்? ஊமத்தம் விதை சரியான விஷமுள்ளது என்று கேள்வியுற்றோம். அவ்விதையைத் தேடிக் கொண்டு காட்டுக்குப் போய் அதைக் கொண்டு வந்துவிட்டோம். மாலை நேரம் இதற்கு நல்லவேளை என்று முடிவாயிற்று. கேதார்ஜி கோயிலுக்கு போய் அங்கே விளக்குக்கு நெய் வார்த்தோம்; சுவாமி தரிசனம் செய்து கொண்டோம். பிறகு ஒதுக்குப் புறமான ஒரு மூலைக்குப் போனோம். ஆனால் எங்களுக்குத் துணிச்சல் வரவில்லை. உடனேயே செத்துப் போகாமல் இருந்து விட்டால்? அதோடு தற்கொலை செய்து கொள்ளுவதால் தான் என்ன நன்மை? சுதந்திரமின்மையைத்தான் ஏன் சகித்துக் கொள்ளக் கூடாது? என்றாலும் இரண்டு, மூன்று விதைகளை விழுங்கிவிட்டோம். இன்னும் அதிகமாகத் தின்னத் தைரியமில்லை. எங்கள் இருவருக்குமே சாவதற்குப் பயம். மனத்தைத் தேற்றிக் கொள்ள ராம்ஜி கோயிலுக்குப் போய் தற்கொலை எண்ணத்தையே விட்டுவிடுவது என்று முடிவு செய்தோம்.
தற்கொலை செய்துகொள்ள எண்ணுவதைப் போலத் தற்கொலை செய்து கொண்டு விடுவது அவ்வளவு எளிதானதே அல்ல என்பதைப் புரிந்துக் கொண்டேன். அதிலிருந்து, யாராவது தற்கொலை செய்துகொள்ளுவதாக மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் அறிந்தால், நான் கொஞ்சமும் பயப்படுவதே இல்லை. தற்கொலை எண்ணத்தினால் முடிவாக ஒரு நன்மையும் உண்டாயிற்று. துண்டுச் சிகரெட்டுகளைப் பொறுக்கிப் புகை பிடிக்கும் வழக்கத்தையும், புகை பிடிப்பதற்காக வேலைக்காரனின் காசைத் திருடுவதையும் நாங்கள் இருவரும் விட்டுவிட்டோம்.
நான் வயதடைந்துவிட்ட பின்பு, புகைப் பிடிக்கவேண்டும் என்று விரும்பியதே இல்லை. புகை பிடிக்கும் பழக்கம், காட்டு மிராண்டித்தனமானது, ஆபாசமானது, தீமையை விளைவிப்பது என்று நான் எப்பொழுதும் கருதி வந்திருக்கிறேன். உலகம் முழுவதிலும் புகை பிடிப்பதில் இவ்வளவு வெறி ஏன் இருக்கிறது என்பது விளங்கவே இல்லை. புகை பிடிப்பவர்கள் நிரம்பிய வண்டியில் பிரயாணம் செய்யவே எனக்குச் சகிப்பதில்லை. எனக்கு மூச்சுத் திணறி விடுகிறது.
இந்தத் திருட்டையும்விட மிக மோசமான ஒன்று, அதற்குச் கொஞ்சம் பின்னால் நான் செய்த குற்றமாகும். பன்னிரெண்டு அல்லது பதின்மூன்று வயதிருக்கும்போது காசுகள் திருடினேன்; வயது எனக்கு இன்னும் குறைவாகவே இருந்திருக்கலாம். நான் செய்த மற்றொரு திருட்டோ, எனக்குப் பதினைந்து வயதாக இருக்கும்போது, இச்சமயம், மாமிசம் தின்னும் என் அண்ணனின் கைக்காப்பிலிருந்து கொஞ்சம் தங்கத்தைத் திருடினேன். இந்த அண்னன் இருபத்தைந்து ரூபாய் கடன் பட்டிருந்தார். அவர் கையில் கெட்டித் தங்கக் காப்பு அணிந்திருந்தார். அதிலிருந்து கொஞ்சம் தங்கத்தை வெட்டி எடுத்துவிடுவது கஷ்டமன்று.
சரி, அப்படியே செய்யப்பட்டது, கடனும் தீர்ந்தது. ஆனால், இக்குற்றம் என்னால் பொறுக்க முடியாததாயிற்று. இனித் திருடுவதே இல்லை என்று முடிவு கட்டிக் கொண்டேன். இக்குற்றத்தை என் தந்தையாரிடம் ஒப்புக் கொண்டு விடுவது என்றும் தீர்மானித்தேன். ஆனால், சொல்லத் துணிவு வரவில்லை. என் தந்தையார் என்னை அடிப்பார் என்று நான் பயப்படவில்லை. எங்களில் யாரையுமே அவர் அடித்ததாக எனக்கு ஞாபகமில்லை. அவருக்கு நான் உண்டாக்கக்கூடிய மனவேதனையைக் குறித்தே அஞ்சினேன். அதற்கும் துணிந்துதான் ஆகவேண்டும் என்று தோன்றியது. எல்லாவற்றையும் அவரிடம் சொல்லி விட்டாலன்றிப் பாவம் தீராது என்று கருதினேன்.
என் குற்றத்தை ஒரு கடிதத்தில் எழுதி என் தந்தையிடம் கொடுத்து, மன்னிப்புக் கேட்பதென்று கடைசியாகத் தீர்மானித்தேன். ஒரு துண்டுக் காகிதத்தில் அதை எழுதி நானே என் தந்தையாரிடம் கொடுத்தேன். அக்குறிப்பில் நான் என் குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்ததோடு அதற்குக் தக்க தண்டனையை எனக்குக் கொடுக்குமாறும் கேட்டிருந்தேன். என் குற்றத்திற்காக அவர் தம்மையே தண்டித்துக் கொள்ள வேண்டாம் என்றும் முடிவில் அவரைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இனித் திருடுவது இல்லை என்றும் நான் பிரதிக்ஞை செய்து கொண்டேன்.
குற்றத்தை ஒப்புக்கொண்டு எழுதியிருந்த காகிதத்தை என் தந்தையாரிடம் நான் கொடுத்தபோது என் உடலெல்லாம் நடுங்கியது. அப்பொழுது அவர் பவுந்திர நோயினால் பீடிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாக இருந்தார். சாதாரண மரப்பலகையே அவர் படுக்கை. என் கடிதத்தை அவரிடம் கொடுத்துவிட்டு, அப்பலகைக்கு எதிரில் உட்கார்ந்தேன்.
அவர் முழுவதையும் படித்தார். முத்துத் துளிகள் போல் அவர் கன்னங்களில் கண்ணீர் வழிந்து காகிதத்தை நனைத்தது. ஒரு கணம் கண்ணை மூடிக்கொண்டு சிந்தித்தார். பிறகு கடிதத்தைக் கிழித்தெறிந்தார். அக்கடிதத்தைப் படிப்பதற்காக எழுந்து உட்கார்ந்தவர், திரும்பவும் படுத்துக் கொண்டார். நானும் கதறி அழுதேன். என் தந்தையார் அனுபவித்த வேதனையை நான் காண முடிந்தது. நான் ஓவியக்காரனாக இருந்தால் அக்காட்சி முழுவதையும் இன்று சித்திரமாக எழுதிவிட முடியும். அது இப்பொழுதும் மனத்தில் தெளிவாக இருந்து வருகிறது.
முத்துப்போன்ற அந்த அன்புத்துளிகள் என் உள்ளத்தைச் சுத்தப்படுத்தி, என் பாவத்தையும் அலம்பிவிட்டன. அத்தகைய அன்பை அனுபவித்தவர்கள் மட்டுமே, அது இன்னது என்பதை அறிய முடியும். அன்புக் கணைகளினால் எய்யப்பட்டவன் எவனோ, அவனே அறிவான் அதன் சக்தியை என்று ஒரு பாடலும் கூறுகிறது. அகிம்சா தருமத்தை அறிவதற்கு இது எனக்குச் சரியானதோர் பாடமாயிற்று. இதில் தந்தையின் அன்பைத் தவிர வேறு எதையும் நான் அப்பொழுது காணவில்லை. ஆனால், இன்றோ, அதுதான் சுத்தமான அகிம்சை என்று அறிகிறேன். அத்தகைய அகிம்சை எல்லாவற்றிலும் வியாபிப்பதாகி விடும்போது, அது தொட்டதையெல்லாம் தன்மயமாக்கி விடுகிறது. அதனுடைய சக்திக்கு ஓர் எல்லையே இல்லை.
இவ்விதமான உயர்வான மன்னிக்கும் குணம் என் தந்தைக்கு இயல்பானதன்று. கோபமடைவார், கடுஞ்சொற்களைக் கூறுவார், தலையில் அடித்துக் கொள்ளுவார் என்றெல்லாம் நான் நினைத்திருந்தேன். ஆனால், அவரோ அவ்வளவு அற்புதமாக அமைதியுடன் இருந்தார். மறைக்காமல் எல்லாவற்றையும் நான் ஒப்புக்கொண்டதே இதற்குக் காரணம் என்று நம்புகிறேன். மன்னிப்பு அளிப்பதற்கு உரிமை உள்ளவரிடம் குற்றத்தை ஒளியாது ஒப்புக்கொண்டு விடுவதோடு, இனி அத்தகைய பாவத்தைச் செய்வதில்லை என்றும் உறுதிமொழி கூறுவதே செய்த குற்றத்திற்காகச் சரியான வகையில் வருத்தப்படுவதாகும். என் குற்றத்தை நான் ஒப்புக் கொண்டுவிட்டது, என்னைப் பற்றிக் கவலையே இல்லை என்று என் தந்தையாரை உணரும்படி செய்தது என்பதை அறிவேன். என் மீதுள்ள அவரது அன்பையும் அளவு கடந்து அதிகரிக்கும்படி இது செய்தது.
முடிவில் அந்த நாள் வந்தது. அப்பொழுது நான் இருந்த நிலையை முழுவதும் விவரிப்பதென்பது கஷ்டம். ஒரு பக்கத்தில் சீர்திருத்த ஆர்வம்; வாழ்க்கையில் முக்கியமான மாறுதலைச் செய்யும் புதுமை. மறுபக்கத்தில் இந்தக் காரியத்தைத் திருடனைப் போல ஒளிந்து கொண்டு செய்ய வேண்டியிருக்கிறதே என்ற வெட்கம். இந்த இரண்டில் எது என்னிடம் மேலோங்கி இருந்தது என்பதை என்னால் சொல்லமுடியாது. ஆற்றங்கரையில் தன்னந்தனியான இடத்தைத் தேடி அங்கே சென்றோம். அங்கே என் வாழ்க்கையிலேயே முதல் தடவையாக மாமிசத்தைப் பார்த்தேன். கடை ரொட்டியும் அதோடு இருந்தது. அந்த இரண்டும் எனக்குப் பிடிக்கவில்லை. ஆட்டிறைச்சி, தின்பதற்குத் தோலைப்போல் கடினமாக இருந்தது. என்னால் அதைத் தின்னவே முடியவில்லை. எனக்கு அருவருப்பாக இருந்தது. தின்ன முடியாதென்று விட்டுவிட்டேன்.
அதன் பிறகு அன்றிரவெல்லாம் எனக்குத் தூக்கமே வரவில்லை. ஒரு பயங்கரம் எனக்குச் சதா இருந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கண் அயரும் போதெல்லாம், உயிரோடு ஓர் ஆடு என் வயிற்றுக்குள் இருந்து கொண்டு கத்துவதுபோல் தோன்றும். திடுக்கிட்டு எழுவேன். செய்து விட்ட காரியத்திற்காக மனம் உறுத்திக் கொண்டே இருக்கும். ஆனால் புலால் உண்பது ஒரு கடமை என்று எனக்கு நானே நினைவுபடுத்திக் கொள்வேன், உற்சாகத்தையும் அடைவேன்.
என் நண்பர் பிடித்த பிடியைச் சாமானியத்தில் விட்டுவிடக் கூடியவர் அல்ல. இறைச்சியை ருசியுள்ள பலகாரங்களாகத் தயார் செய்து, அவை கண்ணுக்கும் அழகாக இருக்கும்படி செய்ய ஆரம்பித்தார். அவற்றைச் சாப்பிடுவதற்கு இப்பொழுதெல்லாம் ஆற்றங்கரையில் தன்னந் தனியான இடத்தைத் தேடிப் போவதும் இல்லை. ராஜாங்க மாளிகை ஒன்று கிடைத்தது. மேஜை நாற்காலிகளெல்லாம் போடப்பட்டிருந்த அம்மாளிகையின் போஜன மண்டபத்தை, அங்கிருந்த சமையற்காரனுடன் பேசி, அந்த நண்பர் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்தக் தூண்டிலில் நான் விழுந்துவிட்டேன். கடை ரொட்டியிடம் எனக்கு இருந்த வெறுப்பையும், ஆடுகளிடம் கொண்டிருந்த இரக்கத்தையும் ஒருவாறு போக்கிக்கொண்டு விட்டேன். தனி மாமிசம் எனக்குப் பிடிக்கவில்லையென்றாலும் மாமிசப் பலகாரங்களை ருசித்துச் சாப்பிட்டு வந்தேன். இவ்விதம் சுமார் ஓராண்டு நடந்து வந்தது. ஆனால் ஆறு தடவைகளுக்கு மேல் இத்தகைய விருந்துகளை நாங்கள் சாப்பிட்டு விடவில்லை. ஏனெனில், தினந்தோறும் எங்களுக்கு ராஜாங்க மாளிகை கிடைக்கவில்லை. அத்துடன் மாமிசப் பலகாரங்களைத் தயாரிப்பது அதிக செலவுள்ளதாகையால் அடிக்கடி தயாரிப்பது என்பதிலும் கஷ்டங்கள் இருந்தன. இந்தச் சீர்திருத்தத்திற்குக் கொடுக்க என்னிடம் பணம் இல்லை. ஆகையால் இந்தச் செலவுக்கு வேண்டியதையெல்லாம் என் நண்பர் தான் தேடிக்கொள்ள வேண்டியிருந்தது. அவருக்கு எப்படிப் பணம் கிடைத்தது என்பதும் எனக்குத் தெரியாது. என்னை மாமிசம் தின்பவனாக்கி விடவேண்டும் என்பதில் அவர் உறுதியுடன் இருந்தால் இதற்கு அவர் எப்படியோ பணம் சம்பாதித்து வந்தார். ஆனால், இதில் அவருடைய சக்திக்கும் ஓர் அளவு இருந்திருக்கவே வேண்டும். எனவே, இந்த விருந்துகள் சுருக்கமாகவும், நீண்ட நாட்களுக்கு ஒரு முறையும்தானே நடைபெற முடியும்?
இந்த ரகசிய விருந்துகளைச் சாப்பிடும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இரவில் வீட்டில் சாப்பிடுவது என்பது இயலாத காரியம். வந்து சாப்பிடும்படி வழக்கம்போல என் தாயார் கூப்பிடுவார். வேண்டாம் என்று கூறுவதற்குக் காரணம் என்ன என்றும் கேட்பார். எனக்கு இன்று பசியே இல்லை. எதோ வயிற்றில் கோளாறு இருக்கிறது என்று சொல்லிவிடுவேன். இவ்விதம் நான் சாக்குப் போக்குச் சொல்லும் போது, என் மனம் வேதனைப்படாமல் இராது. நான் பொய் சொல்லுகிறேன், அதுவும் தாயாரிடம் பொய் சொல்லுகிறேன் என்பதை அறிவேன். அதோடு நான் மாமிசம் சாப்பிடுகிறேன் என்பது என் தாயாருக்கும் தந்தைக்கும் தெரிந்து விடுமாயின் அவர்கள் அதிர்ச்சியடைந்து வருந்துவார்கள் என்பதும் எனக்குத் தெரியும். இவற்றை நான் அறிந்திருந்தது, என் உள்ளத்தை அரித்துத் தின்று கொண்டே இருந்தது.
ஆகவே, எனக்கு நானே பின்வருமாறு சொல்லிக் கொண்டேன்: ‘மாமிசம் சாப்பிவேண்டியது முக்கியம்தான்; நாட்டின் சாப்பாட்டில் சீர்திருத்தம் செய்ய வேண்டியதும் அவசியமே என்றாலும், தாயிடமும் தந்தையிடமும் பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருப்பது மாமிசம் சாப்பிடாததைவிட அதிக மோசமானது. ஆகையால், அவர்கள் உயிரோடு இருக்கும் வரையில் நான் மாமிசம் சாப்பிடுவதற்கில்லை. அவர்களுக்குப் பிற்காலம் நான் சுதந்திரம் பெற்றுவிடுவேன். அப்பொழுது நான் மாமிசத்தைப் பகிரங்கமாகவே சாப்பிடுவேன். ஆனால், அச்சமயம் வரும் வரையில் நான் அதைச் சாப்பிடாமல் இருந்து விடுவேன்.’
நான் செய்துகொண்ட இந்த முடிவை என் நண்பருக்குத் தெரிவித்தேன். அதன் பின்னர் மாமிசத்தை நான் சாப்பிட்டதில்லை. தங்கள் குமாரர்களில் இருவர் மாமிசம் சாப்பிடுகிறவர்கள் ஆகிவிட்டனர் என்பது என் பெற்றோருக்குத் தெரியவே தெரியாது. பெற்றோரிடம் பொய் சொல்லக் கூடாது என்ற எனது புனிதமான ஆசையின் காரணமாகவே மாமிசம் சாப்பிடுவதை நான் விட்டேன். ஆனால், என் நண்பருடன் பழகுவதை மாத்திரம் விடவில்லை. அவரைச் சீர்திருத்த வேண்டுமென்று நான் கொண்ட ஆர்வம் எனக்கே பெருந்தீங்காக விளைந்தது. இந்த உண்மையை அப்பொழுதெல்லாம் நான் அறிந்து கொள்ளவே இல்லை.
இதே சிநேகம், என் மனைவிக்கே நான் துரோகம் செய்யும் படியும் செய்திருக்கும். ஆனால், ஏதோ ஒரு சிறு மயிரிழையில் தப்பிக் கொண்டேன். என் நண்பர் ஒரு நாள் என்னை ஒரு விபசாரி வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கே நான் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்து என்னை உள்ளே அனுப்பினார். எல்லாம் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொடுக்க வேண்டிய பணத்தையும் கொடுத்தாயிற்று. பாவத்தின் வாய்க்குள் போய்விட்டேன். ஆனால் கடவுள் தமது எல்லையில்லாக் கருணையினால் என்னைத் தடுத்துக் காத்தார். இந்தப் பாவக்குழிக்குள் போனதுமே பார்வையை இழந்தவன்போல் ஆகி விட்டேன். பேசவும் நா எழவில்லை. படுக்கையில் அப்பெண்ணின் பக்கத்தில் உட்கார்ந்தேன். ஆனால் ஒரு வார்த்தை கூட என்னால் பேச முடியவில்லை. ஆகவே, அவள் பொறுமையை இழந்து விட்டாள். என்னைத் திட்டி, அவமதித்து வெளியே போகச் சொல்லி விட்டாள். எனது ஆண்மைக்கே இதனால் இழுக்கு ஏற்பட்டு விட்டதாக அப்பொழுது நினைத்தேன். இந்த அவமானத்தினால் நான் பூமிக்குள் புதைந்துவிட வேண்டும் என்றும் விரும்பினேன். ஆனால் என்னைக் காத்தருளியதற்காக அப்பொழுதிலிருந்து நான் கடவுளுக்கு நன்றி தெரிவித்து வருகிறேன். என் வாழ்க்கையில் இதுபோலவே நடந்த மற்றும் நான்கு சம்பவங்களும் எனக்கு நினைவிருக்கின்றன. அநேகமாக இவற்றிலெல்லாம் என்னளவில் நான் செய்த முயற்சியைவிட எனது நல்லதிருஷ்டமே என்னைக் காத்தது. கண்டிப்பான அறநெறியைக் கொண்டு கவனித்தால், இந்தச் சம்பவங்களையெல்லாம் ஒழுக்கத் தவறுகள் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில், மனதில் சிற்றின்ப இச்சை இருந்தது. அது காரியத்தைச் செய்துவிட்டதற்குச் சமமே. ஆனால் சாதாரண நோக்கோடு கவனிப்பதாயின், உடலினால் ஒரு பாவ காரியத்தைச் செய்துவிடாதவன் காப்பாற்றப்பட்டவனே என்று கருதப்படுவான். நான் காப்பாற்றப்பட்டேன் என்பதும் இந்த அர்த்தத்திலேதான்.
சில செயல்களிலிருந்து தப்புவது, அப்படித் தப்புகிறவனுக்கும் அவனைச் சுற்றியிருப்போருக்கும் தெய்வாதீனமாக நிகழும் ஒரு காரியமாக இருக்கிறது. அவனுக்கு நல்லது இன்னதென்பதில் திரும்ப உணர்வு ஏற்படும்போது, அவ்விதம் தப்பிவிட்டதற்காக கடவுளின் கருணைக்கு நன்றியுள்ளவனாகிறான். மனிதன் என்னதான் முயன்றாலும் அது முடியாமல் அடிக்கடி ஆசையின் வலையில் சிக்கிக் கொண்டு விடுகிறான் என்பதை நாம் அறிவோம். அப்படி அவன் சிக்கிக்கொண்டாலும், கடவுள் குறுக்கிட்டு அவனைக் காத்து வருவதும் உண்டு என்பதையும் அறிவோம். இவையெல்லாம் எவ்விதம் நிகழ்சின்றன? மனிதன் எவ்வளவு தூரம் தன் இஷ்டம்போல் நடந்துகொள்ளக் கூடியவனாக இருக்கிறான்? எவ்வளவு தூரம் சந்தர்ப்பங்களுக்கு அவன் அடிமையாயிருக்கிறான்? விதி எங்கே வந்து புகுகிறது? என்பனவெல்லாம் நம்மால் அறிய இயலாத மர்மங்கள். அவை என்றும் மர்மங்களாகவே இருந்து வரும். இனிக் கதையைத் தொடர்ந்து கவனிப்போம். என் நண்பரின் சகவாசம் தீமையானது என்பதை அறிய, இந்த விபசாரி நிகழ்ச்சி கூட என் கண்களைத் திறந்து விடவில்லை. எனவே, நான் எதிர்பாராத வகையில் அவரிடம் இருக்கும் சில குறைகளை என் கண்ணாலேயே கண்ட பிறகுதான் என் கண் திறந்தது. அது வரையில் நான் மற்றும் பல கசப்பான மருந்துகளை விழுங்கியாக வேண்டியிருந்தது. நாம் காலவாரியாகப் போய்க் கொண்டிருக்கிறோமாகையால், அவற்றைக் குறித்துப் பின்னால் கூறுகிறேன்.
என்றாலும் ஒரு விஷயம் அதே சமயத்தில் நடந்ததாகையால் அதைப்பற்றி இப்பொழுது நான் கூறவே வேண்டும். என் மனைவிக்கும் எனக்கும் ஏற்பட்ட அபிப்பிராய பேதங்களுக்கு ஒரு காரணம், இந்த நண்பரோடு நான் சேர்ந்திருந்ததே என்பதில் சந்தேகமில்லை. மனைவியிடம் அளவற்ற அன்பும் சந்தேகமும் கொண்ட கணவன் நான். என் மனைவி மீது நான் கொண்டிருந்த சந்தேகத் தீயை இந்த நண்பர் ஊதி வளர்த்துவிட்டார். அவருடைய கூற்று உண்மைதானா என்று நான் சந்தேகிக்கவே இல்லை. அவர் கூறியவைகளைக் கேட்டுவிட்டு என் மனைவியை அடிக்கடி துன்புறுத்தி வந்தேன். இவ்வாறு இம்சை புரிந்த குற்றத்திற்காக என்னை நான் ஒருபோதும் மன்னித்துவிடவில்லை. அநேகமாக ஒரு ஹிந்து மனைவியே இத்தகைய கஷ்டங்களையெல்லாம் பொறுமையாக சகித்துக் கொள்ளக் கூடும். இதனாலேயே பெண்ணைப் பொறுமையின் அவதாரம் என்று போற்றுகிறேன். ஓரு வேலைக்காரனைத் தவறாகச் சந்தேகித்து விட்டால் அவன் வேலையைவிட்டுப் போய் விடுவான். அதேபோல, மகனைச் சந்தேகித்தால் தந்தையின் வீட்டைவிட்டே அவன் வெளியேறி விடுவான். நண்பனைத் தவறாகச் சந்தேகித்தால், நட்பை முறித்துக் கொள்ளுவான். மனைவி, தன் கணவன் பேரில் சந்தேகம் கொண்டால் சும்மா இருந்துவிடுவாள். ஆனால் அவள் மீது கணவன் சந்தேகம் கொண்டுவிட்டாலோ அவளுக்கு நாசமே. அவள் எங்கே போவது? ஒரு ஹிந்து மனைவி, கோர்ட் மூலம் விவாகரத்துப் பெற முடியாது. சட்டத்தில் அவளுக்குப் பரிகாரம் இல்லை. என் மனைவியையும் நான் இத்தகைய நிர்க்கதியான நிலைமைக்குக் கொண்டு போய்விட்டதை என்னால் மறக்கவே முடியாது; என்னை மன்னித்துவிடவும் முடியாது.
அகிம்சா தருமத்தை, அதன் எல்லா அம்சங்களிலும் நான் உணர்ந்த பின்னரே, சந்தேகத்தின் புரை என்னைவிட்டு ஒழிந்தது. அப்பொழுதுதான் பிரம்மச்சரியத்தின் மகிமையை உணர்ந்தேன். அப்பொழுதுதான் மனைவி, கணவனின் வாழ்க்கைத் துணைவியும், தோழியுமேயன்றி அவனுக்கு அவள் அடிமையல்ல என்பதையும், அவனுடைய சுக துக்கங்களில் எல்லாம் அவனோடு சமபங்கு வகிப்பவள் என்பதையும், கணவனைப்போலத் தன் வழியில் நடந்து கொள்ள அவளுக்குச் சுதந்திரம் உண்டு என்பதையும் தெரிந்து கொண்டேன். அவநம்பிக்கைகளும் சந்தேகங்களும் நிரம்பிய அந்த இருளான நாட்களைக் குறித்து எண்ணும் போதெல்லாம் என்னுடைய தவறுக்காகவும், காமக் குரூரத்துக்காகவும் என்னையே நான் வெறுத்துக் கொள்ளுகிறேன். என் நன்பரிடம் நான் கொண்டிருந்த குருட்டுத்தனமான ஈடுபாட்டுக்காகவும் வருந்துகிறேன்.
உயர்தரப் பள்ளியில் பல சமயங்களிலும் எனக்கு இருந்த நண்பர்கள் மிகச் சிலரே. அவர்களில் இருவர் நெருங்கிய நண்பர்கள் எனலாம். அவர்களில் ஒருவருடைய நட்பு வெகு காலம் நீடிக்கவில்லை. அவரை நான் கைவிடவில்லை. மற்றவர்களுடன் நான் நட்புக் கொண்டிருந்ததற்காக அவர் தான் என்னக் கைவிட்டு விட்டார். பின்னால் ஏற்பட்ட இந்த நட்பை, என் வாழ்க்கையில் நேர்ந்த ஒரு துக்கமான சம்பவமாகவே நான் கருதுகிறேன். இந்நட்பு நீண்ட காலம் நீடித்தது. சீர்திருத்த வேண்டும் என்ற உணர்ச்சியின் பேரிலேயே இவருடன் நட்புக் கொண்டேன்.
இந்த நண்பர், முதலில் என் அண்ணனின் நண்பர். இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். அவரிடமிருந்த குறைபாடுகளை நான் அறிவேன். ஆயினும், விசுவாசமுள்ள நண்பர் என்று அவரைக் கருதினேன். எனக்குக் கெட்ட சகவாசம் ஏற்பட்டிருக்கிறது என்று என் தாயார், என் மூத்த அண்ணன், என் மனைவி முதலியவர்கள் எல்லோரும் எனக்கு எச்சரிக்கை செய்தார்கள். என் மனைவியின் எச்சரிக்கையை நான் மதிக்கவில்லை. ஆனால், என் தாயார், மூத்த அண்ணன் ஆகியோருடைய கருத்துக்கு விரோதமாக நான் நடக்கத் துணியவில்லை. ஆகவே, அவர்களுக்குப் பின் வருமாறு சமாதானம் கூறினேன்: “நீங்கள் கூறும் குறைகளெல்லாம் அவரிடம் இருக்கின்றன என்பதை நான் அறிவேன். ஆனால் அவரிடம் இருக்கும் நற்குணங்கள் உங்களுக்குத் தெரியா. அவரைத் திருத்திவிட வேண்டும் என்பதற்காகவே, நான் அவருடன் பழகுவதால் அவர் என்னைக் கெடுத்துவிட முடியாது. அவர் தம்முடைய வழிகளை மாத்திரம் திருத்திக் கொண்டு விட்டால் மிகச் சிறந்தவராகி விடுவார் என்பது நிச்சயம். ஆகையால், எனக்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று உங்களை வேண்டிக் கொள்கிறேன்.”
நான் இவ்விதம் கூறியது அவர்களுக்குத் திருப்தியளித்திருக்கும் என்று நான் எண்ணவில்லை என்றாலும், அவர்கள் என் சமாதானத்தை ஏற்றுக்கொண்டு என் வழியே போக என்னை அனுமதித்து விட்டார்கள்.
நான் அப்பொழுது எண்ணியதெல்லாம் தவறு என்பதைப் பிறகு கண்டேன். சீர்திருத்த முற்படுகிறவர், யாரைச் சீர்திருத்த விரும்புகிறாரோ அவரிடம் நெருங்கிய சகவாசம் வைத்தக் கொள்ளலாகாது. ஆன்ம ஒருமைப்பாடே உண்மையான நட்பு. ஆனால், அத்தகைய நட்பை இவ்வுலகில் காண்பது அரிது. ஒரே வித சுபாவமுள்ளவர்களிடையே ஏற்படும் நட்பே முற்றும் சிறந்ததாகவும் நீடித்ததாகவும் இருக்கும். நண்பர்களில் ஒருவர் குணம் இன்னொருவருக்குப் படிகிறது. ஆகவே நட்பினால் சீர்திருத்துவது என்பதற்கு அதிக இடமே இல்லை. தனிப்பட்டு அன்னியோன்யமாக நெருங்கிப் பழகுவதையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதே என் அபிப்ராயம். ஏனெனில், மனிதனிடம் நற்குணங்களை விடத் தீயகுணங்களே எளிதில் படிந்து விடுகின்றன. கடவுளோடு தோழமை கொள்ள விரும்புவோர் தனியே விலகி இருக்க வேண்டும்; அல்லது உலகம் முழுவதையுமே தமது நண்பனாக்கிக் கொள்ள வேண்டும். நான் கூறுவது தவறாக இருக்கலாம். என்றாலும், ஒரு நெருங்கிய நட்பை வளர்த்துக் கொள்ள நான் செய்த முயற்சியில் தோல்வியே ஏற்பட்டது.
ராஜ்கோட் முழுவதிலும் சீர்திருத்தம் என்ற அலையின் வேகம் மிகுந்திருந்த சமயத்திலேயே இந்த நண்பரை முதன் முதலில் நான் சந்தித்தேன். எங்கள் ஆசிரியர்களில் பலர் ரகசியமாக மதுவும், மாமிசமும் சாப்பிடுகிறார்கள் என்று இந்த நண்பர் என்னிடம் கூறினார். ராஜ்கோட்டில் இருக்கும் பல பிரமுகர்களின் பெயர்களை சொல்லி அவர்களும் இந்த ரகத்தில் சேர்ந்தவர்களே என்றார். உயர்நிலைப்பள்ளி மாணவர்களில் சிலரும் இப்படிச் செய்கிறார்கள் என்றார்.
இதைக்கேட்டு நான் ஆச்சரியமும் மனவேதனையும் அடைந்தேன். அவர்கள் இவ்விதமானதற்குக் காரணம் என்ன என்று நான் கேட்டதற்குப் பின்வருமாறு அவர் சொன்னார்: “புலால் உண்ணாததால் நாம் பலமில்லாதவர்களாக இருக்கிறோம். புலால் உண்பவர்களாக இருப்பதனாலேயே ஆங்கிலேயரால் நம்மை ஆளமுடிகிறது. நான் எவ்வளவு திடகாத்திரத்துடன் இருக்கிறேன் என்பதை நீயே பார்க்கிறாய். ஓட்டப் பந்தயத்தில் நான் வல்லவன் என்பதும் உனக்குத் தெரியும். இதற்குக் காரணம் நான் புலால் உண்பதுதான். மாமிசம் உண்போருக்குக் கட்டிச் சிரங்குகள், கொப்பளங்கள் முதலியன வருவதில்லை. எப்பொழுதாவது அவர்களுக்கு வந்து விட்டாலும் சீக்கிரத்தில் குணமாகி விடுகின்றன. புலால் உண்ணும் நமது உபாத்தியாயர்களும் மற்ற முக்கியஸ்தர்களும் முட்டாள்கள் அல்ல. அதிலிருக்கும் நன்மை அவர்களுக்குத் தெரியும். நீயும் அவர்களைப் போல் சாப்பிட வேண்டும். சோதனை செய்து பார்ப்பதைப் போல நல்லது எதுவும் இல்லை. சாப்பிட்டு அது எவ்வளவு பலத்தைக்கொடுக்கிறது என்று பார்.”
புலால் உண்பதை வற்புறுத்திச் சொல்லப்பட்ட இவை யாவும் ஒரே சமயத்தில் கூறப்பட்டவை அல்ல. என் மனத்தில் படும்படி செய்வதற்காக என் நண்பர் பல சமயங்களில் நீண்ட விரிவான வாதம் புரிந்திருக்கிறார். அதன் சாரமே இது. என மூத்த சகோதரர் இதற்கு முன்னாலேயே அந்தப் படுகுழியில் விழுந்து விட்டார். ஆகையால் நண்பரின் வாதங்களை அவரும் ஆதரித்துப் பேசினார். என் அண்ணனோடும், இந்த நண்பரோடும் ஒப்பிடும் போது, நான் நிச்சயமாக நோஞ்சலாகவே இருந்தேன். அவர்கள் இருவரும் திடகாத்திரம் உடையவர்கள்; பலசாலிகள்; அதிக தைரியசாலிகள். இந்த நண்பரின் பராக்கிரமச் செயல்களைக் கண்டு மயங்கி விட்டேன். அவர் நீண்ட தூரம் ஓடுவார். உயரத்திலும், நீளத்திலும் தாவிக் குதிப்பதில் சமர்த்தர். எவ்வளவு அடி கொடுத்தாலும் சரி, தாங்கிக் கொள்ளுவார். இந்தப் பராக்கிரமச் செயல்களை யெல்லாம் அவர் என்னிடம் செய்து காட்டுவார். தமக்கு இல்லாத திறமையைப் பிறரிடம் காணும்போது யாரும் பிரமித்து விடுவது இயல்பு. அதே போல நண்பரின் பராக்கிரமச் செயல்களைப் பார்த்த நானும் பிரமித்துப் போனேன். அவரைப் போல் நானும் இருக்க வேண்டும் என்று ஆசை உண்டாயிற்று. என்னால் தாண்டவோ, ஓடவோ முடியாது. அவரைப் போன்றே நானும் ஏன் பலமுள்ளவனாக இருக்கக் கூடாது?
மேலும், அப்பொழுது நான் ஒரு கோழையாகவும் இருந்தேன். திருடர்கள் பயமும், பிசாசுகள், பாம்புகள் ஆகியவற்றின் பயமும் எனக்கு இருந்தன. இரவில் வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டேன். இருட்டு என்றாலே எனக்கு பயங்கரமாக இருக்கும். ஒரு பக்கத்திலிருந்து பிசாசுகளும், மற்றொரு பக்கத்திலிருந்து திருடர்களும், வேறொரு பக்கத்திலிருந்து பாம்புகளும் வருவது போலக் கற்பனை செய்து கொண்டிருக்கும் காரணத்தால், இருட்டில் தூங்குவதென்பது என்னால் முடியாத காரியம். எனவே, அறையில் விளக்கு இல்லாமல் என்னால் தூங்க முடியாது. என் மனைவி அப்பொழுது குழந்தையல்ல; வாலிபப் பருவத்தையடையும் தறுவாயில் இருந்தாள். அவள் என் பக்கத்தில் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பாள். எனக்கு இருந்த பயங்களையெல்லாம் அவளிடம் எப்படிச் சொல்லுவது ? என்னை விட அவள் தைரியசாலி என்பதை நான் அறிவேன். இதனால் என்னைக் குறித்து நானே வெட்கப் படுவேன். பாம்பு, பிசாசு என்ற பயம் அவளுக்கு இல்லை. இருட்டில் எங்கே வேண்டுமானாலும் போவாள். என்னிடமிருந்த இந்தப் பலவீனங்களை எல்லாம் என் நண்பர் அறிவார். உயிரோடு பாம்பைத் தம் கையில் பிடிக்க முடியும் என்றும், திருடர்களை எதிர்த்து விரட்டத் தம்மால் முடியும் என்றும், பிசாசுகள் உண்டு என்றே தாம் நம்புவதில்லை என்றும் அவர் என்னிடம் கூறுவார். இவ்வளவும் புலால் உண்பதன் பலன்கள் என்பார்.
குஜராத்திக் கவியான நர்மத்தின் சிந்துப் பாடல் ஒன்றைப் பள்ளிச் சிறுவர்கள் பாடுவார்கள். அது பின் வருமாறு,
சின்னஞ் சிறிய இந்தியனை அவன் ஆளுகிறான்.
காரணம் – புலால் உண்பதால்
அவன் ஐந்து முழ உயரம் இருப்பதே.
இவையெல்லாம் தமக்குரிய விளைவை என்னிடம் உண்டு பண்ணி விட்டன. நான் தோற்றுப் போனேன். புலால் உணவு நல்லது; அது என்னைப் பலமுள்ளவனாகவும் தைரியசாலியாகவும் மாற்றும்; நாடு முழுவதுமே புலால் உணவு கொள்ள ஆரம்பித்து விட்டால் ஆங்கிலேயரை வென்று விடலாம் என்ற எண்ணங்கள் என்னுள் வளர்ந்தன.
அதன்பேரில் பரிசோதனையைத் தொடங்குவதற்கு ஒரு நாளும் குறிக்கப்பட்டது. அது ரகசியமாக நடைபெற வேண்டும். காந்தி சமூகத்தினர் வைஷ்ணவர்கள். முக்கியமாக என் பெற்றோர்கள் தீவிர வைஷ்ணவர்கள். நாள் தவறாமல் அவர்கள் விஷ்ணு கோயிலுக்குப் போவார்கள். குடும்பத்திற்கு என்றே சொந்தமான கோயில்களும் உண்டு. ஜைன சமயம் குஜராத்தில் பலமாக பரவி இருந்தது. அதன் செல்வாக்கு எங்கும், எல்லா சமயங்களிலும் உணரப்பட்டது. குஜராத்தில் ஜைனர்களிடத்திலும், வைஷ்ணவர்களிடத்திலும் புலால் உணவுக்கு இருந்த அவ்வளவு பலமான எதிர்ப்பையும், அதன் மீது இருந்த கடுமையான வெறுப்பையும் போல் இந்தியாவிலோ, வெளிநாடுகளிலோ காண முடியாது. இத்தகைய சூழ்நிலையில் பிறந்து வளர்ந்தவன் நான். அதோடு என் பெற்றோரிடம் எனக்கு மிகுந்த பக்தியும் உண்டு. நான் புலால் உண்டேன் என்பதை அறிந்த கணத்திலேயே அவர்கள் அதிர்ச்சியினால் செத்து விடுவார்கள் என்பதையும் அறிவேன். மேலும் சத்தியத்தில் நான் கொண்டிருந்த பற்று, என்னை அதிகப்படியான எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் செய்தது. மாமிசம் சாப்பிட ஆரம்பித்து விடுவேனாயின், என் பெற்றோரை நான் ஏமாற்ற வேண்டியிருக்கும் என்பது எனக்கு அப்பொழுது தெரியாது என்று சொல்லுவதற்கில்லை. ஆனால் என் புத்தியெல்லாம் சீர்திருத்தத்தில் ஈடுபட்டிருந்தது. ருசிக்கு சாப்பிவது என்பதே அதில் இல்லை. அதற்கு தனிப்பட்ட ருசி இருப்பதாக எனக்குத் தெரியாது. பலசாலியாகவும் தைரியசாலியாகவும் ஆகவேண்டும் என்று விரும்பினேன். ஆங்கிலேயரை தோற்கடித்து இந்தியா சுதந்திரமடையும்படி செய்வதற்கு என் நாட்டினரும் அப்படி ஆகவேண்டும் என்று ஆசைப் பட்டேன். சுயராஜ்யம் என்ற சொல்லை அதுவரை நான் கேட்டதில்லை. ஆனால் சுதந்திரம் என்றால் என்ன என்பது எனக்குத் தெரியும். சீர்திருத்தத்தில் இருந்த உற்சாகம் என்னைக் குருடனாக்கி விட்டது. ரகசியமாகவே இருக்கப் போகிறது என்பது நிச்சயமாகிவிடவே, இக்காரியத்தை என் பெற்றோருக்குத் தெரியாதபடி மறைத்து வைப்பது சத்தியத்தினின்று தவறியதாகாது என்றும் என்னையே சமாதானப் படுத்திக் கொண்டேன்.
எனக்கு மணமான போது உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன் என்று முன்பே கூறியிருக்கிறேன். நாங்கள் அண்ணன் தம்பிமார் மூன்று பேரும் ஒரே பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தோம். மூத்த அண்ணன் மிகவும் மேல் வகுப்பில் படித்தார். என்னோடு விவாகமான அண்ணனோ எனக்கு ஒரு வகுப்பு மேலே படித்தார். விவாகத்தால் எங்கள் இருவருக்கும் ஓர் ஆண்டு வீணாயிற்று. இதன் பலன் தான் என் அண்ணனுக்கு பின்னும் மோசமானதாகவே இருந்தது. அவர் படிப்பையே முற்றும் விட்டு விட்டார். அவரைப் போல எத்தனை இளைஞர்கள் இதே கதிக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்பதைக் கடவுளே அறிவார். இன்றைய நமது ஹிந்து சமூகத்தில் மட்டுமே படிப்பும் கல்யாணமும் ஏக காலத்தில் நடைபெறுகின்றன.
நான் தொடர்ந்து படித்தேன். உயர்நிலைப் பள்ளியில் என்னை மந்தமானவன் என்று யாருமே எண்ணவில்லை. என் உபாத்தியாயர்கள் என்னிடம் எப்பொழுதும் அன்போடு இருந்தார்கள். என் படிப்பின் அபிவிருத்தி, நடத்தை ஆகியவை பற்றி ஆண்டுதோறும் பெற்றோருக்கு நற்சாட்சிப் பத்திரம் அனுப்பப்படும். கெடுதலான பத்திரம் என்னைக் குறித்து ஒரு தடவையேனும் வந்ததில்லை. உண்மையில் நான் இரண்டாம் வகுப்புத் தேறிய பிறகு பரிசுகளையும் பெற்றேன். ஐந்தாம், ஆறாம் வகுப்புகளில் முறையே நான்கு ரூபாயும் பத்து ரூபாயும் உபகாரச் சம்பளங்களாகப் பெற்றேன். இவைகளை நான் அடைந்ததற்கு என் திறமையை விட என்னுடைய நல்லதிர்ஷ்டமே காரணம். ஏனெனில் இந்த உபகாரச் சம்பளம் எல்லோருக்கும் உரியதன்று. கத்தியவாரில் சோராத் பகுதியிலிருந்து வரும் சிறந்த மாணவர்களுக்கு மாத்திரமே அது உண்டு. அந்த நாட்களில் நாப்பது முதல் ஐம்பது பேர் வரையில் கொண்ட ஒரு வகுப்பில் சோராத்திலிருந்து வரும் மாணவர்கள் பலர் இருப்பதில்லை.
என் திறமையில் எனக்குப் பிரமாதமான மதிப்பு இருந்ததில்லை என்பதே ஞாபகம். எனக்குப் பரிசுகளும் உபகாரச் சம்பளங்களும் கிடைக்கும் போதெல்லாம் நான் ஆச்சரியப்படுவது வழக்கம். ஆனால், எனது நன்னடத்தையை நான் சர்வ ஜாக்கிரதையாகக் காப்பாற்றி வந்தேன். இதில் ஒரு சிறிது குறை ஏற்பட்டாலும் கண்ணீர் விட்டு அழுது விடுவேன். கண்டிக்கப்பட்டாலோ, கண்டிக்கபட வேண்டியவன் என்று உபாத்தியாயர் கருதினாலோ என்னால் சகிக்க முடியாது. ஒரு தடவை அடிப்பட்டதாக எனக்கு நினைவிருக்கிறது. அடிப்பட்டதற்காக நான் வருத்தப்படவில்லை, நான் அடிபட வேண்டியவன் என்று கருதப்பட்டதே எனக்கு அதிக வருத்தத்தை அளித்தது. அதற்காகப் பரிதாபகரமாக அழுதேன். முதல் வகுப்பிலோ, இரண்டாம் வகுப்பிலோ படித்தபோது நடந்தது அது. நான் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது அத்தகைய மற்றொரு சம்பவம் நிகழ்ந்தது. அச்சமயம் தோராப்ஜி எதுல்ஜி ஜிமி தலைமையாசிரியராக இருந்தார். மாணவர்களுக்கெல்லாம் அவரிடம் அதிகப் பிரியம். அதே சமயத்தில் கட்டுத் திட்டங்களில் மிகக் கண்டிப்பானவர். குறிப்பிட்ட முறைப்படி காரியங்களைச் செய்பவர். நன்றாக போதிப்பவருங்கூட. அவர் மேல் வகுப்புப் பையன்களுக்குத் தேகாப்பியாசத்தையும், கிரிக்கெட்டையும் கட்டாயமாக்கி விட்டார். இந்த இரண்டும் எனக்குப் பிடிக்கவில்லை. இவை கட்டாயமாக்கப் படுவதற்கு முன்னால் நான் தேகாப்பியாசம் செய்ததோ, கிரிக்கெட் அல்லது கால்பந்து விளையாடியதோ இல்லை. ஒன்றிலும் சேராமல் நான் ஒதுங்கி இருந்து விட்டதற்கு எனக்கிருந்த கூச்சம் ஒரு காரணம். அப்படி இருந்து விட்டது தவறு என்பதை இப்பொழுது அறிகிறேன். படிப்புக்கும் தேகப்பயிற்சிக்கும் சம்பந்தமே இல்லை என்ற தவறான கருத்தும் அப்பொழுது எனக்கு இருந்தது. ஆனால், இன்று பாடத்திட்டத்தில் மனப்பயிற்சிக்கு எவ்வளவு இடம் அளிக்கப்படுகிறதோ, அவ்வளவு உடற்பயிற்சிக்கும் அளிக்கப்பட வேண்டும் என்பதை அறிவேன்.
என்றாலும் தேகப் பயிற்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டதனால் எனக்கு அதிகத் தீமை எதுவும் ஏற்பட்டு விடவில்லை என்றும் கூறுவேன். இதற்கு ஒரு காரணம் உண்டு. திறந்த வெளியில் நீண்ட தூரம் நடப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகளைக் குறித்துப் புத்தகங்களில் படித்திருந்தேன். இந்த யோசனை எனக்குப் பிடித்ததால் நீண்ட நேரம் நடக்கும் பழக்கம் எனக்கு ஏற்பட்டது. அப்பழக்கம் இன்னும் எனக்கு இருக்கிறது. இதன் பயனாக என் உடல் நன்கு வலுப்பெற்றது.
தேகாப்பியாச வகுப்புக்குப் போக நான் விரும்பாததற்குக் காரணம், என் தந்தைக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்று எனக்கு இருந்த ஆர்வமேயாகும். பள்ளிக்கூடம் விட்டதும், நேரே அவசரமாக வீட்டுக்குப் போய் அவருக்குப் பணிவிடை செய்வேன். இந்தச் சேவை செய்வதற்குக் கட்டாயத் தேகப்பயிற்சி இடையூறாக இருந்தது. என் தந்தைக்கு நான் பணிவிடை செய்ய வேண்டும் ஆகையால் தேகப்பயிற்சி வகுப்புக்குப் போகாதிருக்க அனுமதிக்குமாறு திரு. ஜிமிடம் கோரினேன். ஆனால் அவர் என் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார். ஒரு நாள் சனிக்கிழமை, அன்று காலையில் பள்ளிக்கூடத்திற்குப் போக வேண்டும். மாலை 4 மணிக்குத் தேகப் பயிற்சிக்காக நான் வீட்டிலிருந்து திரும்பவும் பள்ளிக்கூடம் போக வேண்டும் நான் பள்ளிக்கூடம் போய் சேருவதற்கு முன்னால் அங்கிருந்து பிள்ளைகளெல்லாம். போய்விட்டார்கள். வந்திருந்தோரின் கணக்கை திரு. ஜிமி மறுநாள் தணிக்கை செய்து பார்த்த போது நான் வரவில்லை என்ற குறித்திருந்ததைக் கண்டார். ஏன் வரவில்லை என்று என்னைக் கேட்டதற்கு நடந்ததைச் சொன்னேன். நான் கூறியதை நம்ப அவர் மறுத்து விட்டார். ஒரணாவோ அல்லது இரண்டணாவோ (எவ்வளவு என்று எனக்குச் சரியாக நினைவில்லை) அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
பொய் சொன்னதாக நான் தண்டிக்கப்பட்டேன்! இது எனக்கு மிகுந்த மன வேதனையாகி விட்டது. நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பது எப்படி? அதற்கு வழியே இல்லை. வேதனை தாங்காமல் கதறி அழுதேன். உண்மையுள்ளவன் எச்சரிக்கையுடன் இருப்பவனாகவும் இருக்க வேண்டியது முக்கியம் என்பதை உணர்ந்தேன். பள்ளிக்கூடத்தில் நான் அசட்டையாக நடந்து கொண்ட முதல் சந்தர்ப்பமும், கடைசிச் சந்தர்ப்பமும் இதுதான். முடிவில் அந்த அபராதம் ரத்துச் செய்யப்பட்டு விட்டதில் நான் வெற்றி அடைந்தேன் என்று இலேசாக ஞாபகம் இருக்கிறது. பள்ளிக்கூடம் விட்டதும் நேரே வீட்டுக்கு நான் வந்துவிட வேண்டும் என்று தாம் விரும்புவதாகத் தலைமையாசிரியருக்கு என் தந்தையே எழுதியதன் பேரில், தேகாப்பியாசத்திற்குப் போகவேண்டும் என்பதில் இருந்து விலக்குப் பெற்றேன்.
தேகாப்பியாசத்தில் அசட்டையாக இருந்து விட்டதனால் எனக்குத் தீமை ஏற்படாது போனாலும் மற்றொரு விஷயத்தில் நான் அசட்டையாக இருந்து விட்டதன் பலனை இப்பொழுதும் அனுபவித்துக் கொண்டு வருகிறேன். கையெழுத்து நன்றாக இருக்க வேண்டும் என்பது படிப்பில் ஒரு பகுதியல்ல என்ற கருத்து எனக்கு எங்கிருந்து உண்டாயிற்று என்று தெரியவில்லை. நான் இங்கிலாந்துக்குப் போகும் வரையில் இந்த அபிப்பிராயமே எனக்கு இருந்தது. பிறகு, முக்கியமாகத் தென்னாப்பிரிக்காவில், இளம் வக்கீல்களும், தென்னாப்பிரிக்காவில் பிறந்து, அங்கேயே படித்த இளைஞர்களும் மிக அழகாக எழுதுவதைக் கண்டபோது என்னைக் குறித்து நானே வெட்கப் பட்டதோடு ஆரம்பத்தில் அசிரத்தையுடன் இருந்து விட்டதற்காக வருந்தவும் செய்தேன். மோசமான கையெழுத்தை, அரைகுறையான படிப்புக்கு அறிகுறியாகக் கொள்ள வேண்டும் என்று கருதினேன். கையெழுத்து நன்றாக இருக்கும்படி செய்யப் பிறகு முயன்றேன். ஆனால் அதற்குக் காலம் கடந்து போய் விட்டது. இளமையில் அசட்டையாக இருந்து விட்டதனால் ஏற்பட்ட தீமையைப் பிறகு என்றுமே நிவர்த்தி செய்து கொள்ள இயலவில்லை. ஒவ்வொர் இளைஞரும் இளம்பெண்ணும், என்னுடைய உதாரணத்தைக் கண்டாவது எச்சரிக்கையுடன் இருக்கட்டும்; கையெழுத்து நன்றாக இருக்க வேண்டியதும் படிப்பின் ஒரு பகுதி என்பதை அறியட்டும். குழந்தைகளுக்கு எழுத்துக்களை எழுதுவதற்குக் கற்றுக் கொடுப்பதற்கு முன்னால் சித்திரம் வரையக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று இப்பொழுது கருதுகிறேன். பூக்கள், பறவைகள் போன்றவைகளைக் குழந்தை பார்த்தே தெரிந்து கொள்ளுவதைப் போல, எழுத்துக்களையும் அது பார்த்தே தெரிந்து கொள்ளட்டும். பொருள்களைப் பார்த்து அவற்றை வரையக் கற்றுக் கொண்ட பிறகு எழுத்துக்களை எழுதக் கற்கட்டும். அப்போது அக்குழந்தையின் கையெழுத்து அழகாக அமையும்.
என் பள்ளிக்கூட நினைவுகளில் குறிப்பிடத்தக்கவை மற்றும் இரண்டு உண்டு. என் விவாகத்தினால் எனக்கு ஒரு வருடப் படிப்பு வீணாகி விட்டது. ஒரு வகுப்புத் தாண்டி மேல் வகுப்பில் என்னைத் தூக்கிப்போட்டு எனக்கு அந்த நஷ்டத்தை ஈடு செய்துவிட ஆசிரியர் விரும்பினார். நன்றாக உழைத்துப் படிக்கும் பிள்ளைகளுக்கே இந்தச் சலுகையை அளிப்பது வழக்கம். நான் மூன்றாம் வகுப்பில் ஆறு மாதங்களே படித்தேன். கோடை விடுமுறைக்கு முன்னால் நடக்கும் பரீட்சைக்குப் பிறகு என்னை நான்காம் வகுப்புக்கு அனுப்பி விட்டார்கள். நான்காம் வகுப்பிலிருந்து பல பாடங்கள் ஆங்கிலத்திலேயே போதிக்கப்பட்டன. எனக்கோ திக்குத்திசை தெரியவில்லை. ஷேத்திர கணிதம் புதுப்பாடம். ஏற்கனவே அது எனக்கு அவ்வளவு நன்றாகத் தெரியாது. அதை ஆங்கிலத்திலும் போதிக்க ஆரம்பித்து விட்டதால் எனக்கு இன்னும் அதிகக் கஷ்டமாயிற்று. ஆசிரியர் இப்பாடத்தை மிக நன்றாகவே சொல்லிக் கொடுத்தார். ஆனால் என்னால் விளக்கிக் கொள்ள இயலவில்லை. பன்முறையும் மனச்சோர்வடைந்து விடுவேன். மூன்றாம் வகுப்புக்கே திரும்பிப் போய்விடலாம் என்றும் எண்ணுவேன். இரண்டு வருடப் படிப்பை ஒரே வருடத்தில் படித்துவிடலாம் என்பது அதிகப்படியான ஆசை என்றும் எனக்குத் தோன்றும். ஆனால், அப்படி மூன்றாம் வகுப்புக்கே போய்விடுவது எனக்கு மாத்திரமல்ல, ஆசிரியருக்கும் அவமானம். ஏனெனில் கஷ்டப்பட்டுப் படிக்கக்கூடியவன் நான் என்று நம்பியே என்னை மேல் வகுப்பில் சேர்க்க அவர் சிபாரிசு செய்தார். இந்த இரண்டு அவமானங்களையும் குறித்து எனக்கு ஏற்பட்ட பயத்தினால் விடாப்பிடியாகப் படிக்கலானேன். அதிக சிரமத்தின் பேரில் யூக்ளிட்டின் பதிமூன்றாவது பாடத்திற்கு வந்த பிறகு அந்தப் பாடம் மிக எளிதானது என்று திடீரென்று எனக்கு தோன்றியது. பகுத்தறிவின் சக்தியைக் கொண்டு மாத்திரமே கற்றுவிட முடியும். ஒரு பாடம் கஷ்டமானதாகவே இருக்க முடியாது. அச்சமயத்திலிருந்து ஷேத்திர கணிதம் எனக்குச் சுலபமானதாகவும் சுவையுள்ளதாகவும் ஆயிற்று.
என்றாலும், சமஸ்கிருத பாடம் அதிகக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஷேத்திர கணிதத்தில் மனப்பாடம் செய்ய வேண்டியது எதுவும் இல்லை. ஆனால், சமஸ்கிருதத்திலோ ஒவ்வொன்றையும் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று எண்ணினேன். இந்தப் பாடமும் நான்காம் வகுப்பிலிருந்தே சொல்லிக் கொடுக்கப்பட்டது. ஆனால் வகுப்புக்குப் போனதும் மனச்சோர்வு அடைந்து விட்டேன். அந்த ஆசிரியரோ கடுமையாக வேலை வாங்குகிறவர். பையன்களை நிர்ப்பந்தப் படுத்துவதில் அவருக்கு ஒரே ஆசை என்றும் நினைத்தேன். சமஸ்கிருத ஆசிரியருக்கும் பர்ஸிய ஆசிரியருக்கும் ஒருவகைப் போட்டியே இருந்து வந்தது. பர்ஸிய பாஷை போதித்த ஆசிரியர் மாணவர்களிடம் அப்படிக் கண்டிப்பில்லாதவர்; பர்ஸிய பாஷை இலகுவானது; அந்த ஆசிரியரும் நல்லவர்; மாணவர்களை வருத்துவதில்லை என்று பையன்கள் அடிக்கடி தங்களுக்குள் பேசிக் கொள்ளுவார்கள். சுலபம் என்பதில் மயங்கி விட்டேன்.
ஒருநாள் பர்ஸிய வகுப்பிலேயே போய் உட்கார்ந்து கொண்டேன். நான் இவ்விதம் செய்ததற்காகச் சமஸ்கிருத ஆசிரியர் வருத்தப்பட்டார். என்னை அழைத்துப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பினவருமாறு சொன்னார்: “நீ ஒரு வைஷ்ணவரின் மகன் என்பதை எப்படி மறந்து போனாய்? உன் மதத்தின் மொழியை நீ கற்க வேண்டாமா? இதில் உனக்கு ஏதேனும் கஷ்டமிருந்தால் என்னிடம் வந்து சொல்லுவதற்கென்ன? என்னால் ஆன வரையில் சிரமம்பட்டு மாணவர்களான உங்களுக்குச் சமஸ்கிருதம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம். மேலே போகப் போக மனத்தைக் கவரும் விஷயங்கள் இம்மொழியில் இருப்பதை நீ அறிவாய். நீ மனம் தளர்ந்து விடக்கூடாது. வா. திரும்பவும் சமஸ்கிருத வகுப்பிலேயே வந்து உட்கார்.”
அவர் காட்டிய அன்பினால் வெட்கிப் போனேன். ஆசிரியரின் அன்பை அலட்சியம் செய்து விட என்னால் முடியவில்லை. இந்த ஆசிரியரான கிருஷ்ண சங்கர பாண்டியாவை இன்று நான் நன்றியுடனேயே நினைக்கிறேன். ஏனெனில், அப்பொழுது நான் கற்றுக் கொண்ட கொஞ்ச சமஸ்கிருத ஞானமாவது எனக்கு இல்லாதிருக்குமாயின், நமது சமய நூல்களில் எனக்கு எந்த விதமான சிரத்தையும் இருந்திருப்பதற்கில்லை. அம்மொழியில் இன்னும் அதிக ஞானத்தை நான் அடையாது போனேனே என்பதற்காக இப்பொழுது மிகவும் வருந்துகிறேன். ஏனெனில், ஒவ்வொரு ஹிந்துப் பையனும் பெண்ணும், சமஸ்கிருதத்தை நன்றாக படித்திருப்பது அவசியம் என்பதை இப்பொழுது உணருகிறேன்.
இந்தியாவில் உள்ள எல்லா உயர்தரக் கல்வி முறையிலும் தாய்மொழியோடு ஹிந்தி, சமஸ்கிருதம், பர்ஸிய மொழி, அரபு, ஆங்கிலம் ஆகிய இத்தனை மொழிகளுக்கும் இடமிருக்க வேண்டும் என்பது இப்பொழுது என் அபிப்பிராயம். இந்தப் பெரிய ஜாபிதாவைப் பார்த்த யாரும் பயந்துவிட வேண்டியதில்லை. நமது கல்வி, சரியான முறையில் இருந்து, அந்நிய மொழியின் மூலமே எல்லாப் பாடங்களையும் கற்க வேண்டி இருக்கும் சுமையும் பிள்ளைகளுக்கும் இல்லாதிருப்பின், இத்தனை மொழிகளையும் கற்பது சங்கடமாயிராது. அதற்குப் பதிலாகப் பெரிதும் சந்தோஷம் அளிப்பதாகவே இருக்கும் என்பது நிச்சயம். ஒரு மொழியை முறைப்படி கற்றுக்கொண்டு விட்டவர்களுக்கு மற்ற மொழிகளையும் கற்றுக்கொண்டு விடுவது எளிதாகும்.
ஹிந்தி, குஜராத்தி, சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளையும் உண்மையில் ஒரு மொழி என்றே சொல்லலாம். பர்ஸியமும் அரபும் அதே போல ஒரு மொழியே. பர்ஸிய மொழி ஆரிய மொழி இனத்தைச் சேர்ந்தாயினும், பர்ஸிய மொழிக்கும், அரபு மொழிக்கும் நெருங்கிய உறவு உண்டு. ஏனெனில், இவ்விரு மொழிகளும் இஸ்லாத்தின் வளர்ச்சியோடு முழு வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. உருது ஒரு தனி மொழி என்று நான் கருதுவதில்லை. எனெனில், ஹிந்தி இலக்கணமே அதன் இலக்கணம்; பர்ஸிய, அரபுச் சொற்களே அதன் சொற்கள். நல்ல குஜராத்தி, நல்ல ஹிந்தி, நல்ல வங்காளி அல்லது நல்ல மராத்தி கற்க விரும்புவோர் சமஸ்கிருதத்தைக் கற்றாக வேண்டியது எப்படி முக்கியமோ, அப்படி நல்ல உருது கற்பதற்குப் பர்ஸிய, அரபு மொழிகளைப் படிப்பது அவசியம்.
எனக்கு விவாகமான அந்தக் காலத்தில், காலணா அல்லது ஒரு தம்படி விலையில் (எவ்வளவு விலை என்று இப்பொழுது எனக்குச் சரியாக நினைவில்லை) சிறு பிரசுரங்கள் வெளியாகி வந்தன. தாம்பத்தியக் காதல், சிக்கனம், குழந்தை மணங்கள் முதலிய விஷயங்களையெல்லாம் பற்றி அவைகளில் விவாதிக்கபட்டிருக்கும். அவை எனக்கு கிடைத்த போதெல்லாம் ஒரு வரி விடாமல் அவற்றைப் படிப்பேன். எனக்குப் பிடிக்காதவற்றை மறந்து விடுவதும், பிடித்தமானவற்றை அனுபவத்தில் நிறைவேற்றி வருவதும் என்னிடம் இருந்த பழக்கமாகும். மனைவியிடம் வாழ்நாள் முழுவதும் விசுவாசத்துடன் இருந்து வர வேண்டியது ஒரு கணவனின் கடமை என்று இப் பிரசுரங்களில் கூறப்பட்டிருந்தது. அத்துடன், சத்திய வேட்கையும் என்னுள் இருந்ததால் மனைவியிடம் உண்மைக்கு மாறாக நடந்து கொள்ளுவது என்பதற்கே இடமில்லை. மேலும், அந்தச் சிறு வயதில் மனைவிக்குத் துரோகம் செய்யச் சந்தர்ப்பமும் கிடையாது.
ஆனால் மனைவியிடம் உண்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என்ற பாடத்தினால் எதிரிடையான ஒரு விளைவு ஏற்பட்டது. நான் என் மனைவியிடம் உண்மையோடு நடந்து கொள்ளுவதென்றால், அவளும் என்னிடம் உண்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். இந்த வண்ணம் என்னைச் சந்தேகம் கொண்ட கணவனாக ஆக்கிவிட்டது. அவள் உண்மையோடு நடப்பவளாக இருக்கும்படி செய்வதற்கு, அவளுடைய கடமையை எளிதில் என் உரிமையாக ஆக்கிக் கொண்டேன். அந்த உரிமை விஷயத்தில் நான் விழிப்புடன் இருந்து வலியுறுத்துவது என்றும் தீர்மானித்தேன். அவளுடைய பக்தி விசுவாசத்தில் நான் சந்தேகம் கொள்ளுவதற்குக் காரணமே இல்லை. ஆனால், காரணங்களுக்காகச் சந்தேகம் காத்துக் கொண்டிருப்பதில்லை. ஆகவே, அவள் செய்வதையெல்லாம் எப்பொழுதுமே கவனித்து வரவேண்டியது அவசியம் அல்லவா? என் அனுமதியின்றி அவள் எங்குமே போகக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தேன். இது எங்களுக்குள் கடுமையான சச்சரவுக்கு விதை ஊன்றிவிட்டது. நான் விதித்திருந்த கட்டுப்பாடு உண்மையில் அவளுக்கு ஒரு வகையான சிறைத் தண்டனையே, இத்தகைய காரியத்திற்கு உடன்பட்டு விடக் கூடிய பெண்ணல்ல, கஸ்தூரிபாய். தான் விரும்பிய இடங்களுக்கு விரும்பிய போதெல்லாம் அவள் பிடிவாதமாகப் போய்க் கொண்டுதான் இருந்தாள். நான் கட்டுப்பாடுகளை அதிகமாக விதிக்க விதிக்க, அவள் தன் இஷ்டம்போல் நடப்பதும் அதிகமாகிக் கொண்டே வந்தது. அதனால் எனக்கு ஆத்திரமும் அதிகமாகிக் கொண்டே போயிற்று. குழந்தைத் தம்பதிகளான எங்களுக்குள், ஒருவரோடொருவர் பேசாமல் இருந்துவிடுவது என்பது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. என்னுடைய கட்டுத் திட்டங்களைக் கஸ்தூரிபாய் மீறியதில் யாதொரு தவறுமில்லை என்றே நான் இன்று எண்ணுகிறேன். கோயிலுக்குப் போகக் கூடாது என்றும், தன் தோழிகளைப் போய் பார்க்க கூடாது என்றும் தடைவிதித்தால், கபடமற்ற ஒரு பெண் அவற்றை எப்படிச் சகிப்பாள்? அவளுக்குக் கட்டுத் திட்டங்களை யெல்லாம் விதிக்க எனக்கு உரிமை இருக்கிறதென்றால், அதே போன்ற உரிமை அவளுக்கும் உண்டு அல்லவா? இவையெல்லாம் இன்று எனக்குத் தெளிவாகப் புரிகின்றன. ஆனால் அப்பொழுதோ கணவனுக்குரிய அதிகாரங்களைச் செலுத்தியாக வேண்டும் என்றே நினைத்து வந்தேன்!
என்றாலும், எங்களுடையே வாழ்க்கை மாறாத கசப்பு நிறைந்த வாழ்க்கையாகவே இருந்தது என்று வாசகர்கள் நினைத்து விட வேண்டாம். நான் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கெல்லாம் அன்பே காரணம். மனைவி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவள் உதாரணமாக விளங்கும்படி செய்யவே நான் விரும்பினேன். அவள் தூய வாழ்க்கை நடத்தி, நான் கற்றவைகளை அவளும் கற்பதன் மூலம் எங்கள் இருவருடைய வாழ்க்கையும் எண்ணங்களும் ஒன்றாக இருக்கும்படி செய்ய வேண்டும் என்பதே என் அபிலாஷை.
கஸ்தூரி பாய்க்கு அப்படிப்பட்ட அபிலாஷை ஏதாவது இருந்ததா என்பது எனக்குத் தெரியாது. அவள் எழுதப் படிக்கத் தெரியாதவள். சுபாவமாகவே அவள் கபடமற்ற தன்மையும், சுயேச்சை நோக்கும், விடாமுயற்சியும் உடையவள். குறைந்தபட்சம் என் விஷயத்தில் மாத்திரம் பேச வெட்கப்படுபவள். தன்னுடைய அறியாமையைக் குறித்து அவளுக்குக் கவலையே இல்லை. நான் படித்து வந்தது, தானும் அவ்வாறு படிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடும் உற்சாகத்தை அவளுக்கு அளித்ததாக எனக்கு ஞாபகமில்லை. ஆகையால் நான் கொண்டிருந்த அபிலாஷையெல்லாம் என்னோடு தான் நின்றது என்று எண்ணுகிறேன். அவள் ஒருத்தி மீதே நான் என் முழு ஆசையும் வைத்திருந்தது போல அவளும் என்மீது ஆசை வைக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அப்படி அவள் ஆசை வைக்காது போனாலும் வாழ்க்கை மீளாத் துன்பமாக இருந்திருக்க முடியாது. ஏனெனில், ஒரு பக்கத்திலாவது தீவிரமான அன்பு இருந்தது.
அவளிடம் எனக்கு அடங்காப் பிரேமை என்பதை நான் சொல்லவே வேண்டும். பள்ளிக்கூடத்தில்கூட எனக்கு அவள் நினைப்புத்தான். இரவானதும் அவளைச் சந்திக்கலாம் என்ற எண்ணம் எப்பொழுதும் மனத்தில் தோன்றிக் கொண்டே இருக்கும். பிரிந்திருப்பது என்பதோ சகிக்க முடியாததாகும். இரவில் நெடுநேரம் வரையில் ஏதேதோவெல்லாம் பேசி அவளைத் தூங்க விடமாட்டேன். இத்தகைய அடங்காத காமவெறிக்கு மாற்றாகக் கடமையில் தீவிரமான பற்று மட்டும் எனக்கில்லாதிருந்தால், நான் நோய்வாய்ப்பட்டு அகால மரணத்தை அடைந்திருப்பேன். இல்லையானால், பிறருக்குப் பாரமாக இருந்து வாழ வேண்டியவனாகியிருப்பேன். ஆனால், ஒவ்வொரு நாளும் காலையில் எனக்கென்றிருந்த வேலைகளை நான் செய்த தீர வேண்டியிருந்தது. யாரிடமும் பொய் சொல்லுவது என்பதோ என்னால் ஆகவே ஆகாது. கடைசியாகச் சொன்ன இந்தக் குணமே படுகுழியில் விழாமல் பல தடவைகளிலும் என்னைக் காத்தது.
கஸ்தூரிபாய் எழுத்து வாசனை இல்லாதவள் என்பதை முன்பே கூறியிருக்கிறேன். அவளுக்கு கல்வி அறிவு புகட்ட வேண்டும் என்று நான் மிகவும் ஆவலோடு இருந்தேன். ஆனால், காமமே மேலோங்கி நிற்கும் காதலினால் அதற்கு நேரமே இல்லாது போயிற்று. அவளுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுப்பதனால், அவளுடைய இஷடத்திற்கு மாறாக, அதுவும் இரவில்தான் சொல்லிக் கொடுக்க முடியும். பெரியவர்கள் இருக்கும்போது அவளைச் சந்திப்பதற்கே எனக்குத் துணிவு இல்லையென்றால், அவளுடன் பேசுவது எப்படி? கத்தியவாரில் அப்பொழுது ஒரு விசித்திரமான, உபயோகமற்ற, காட்டு மிராண்டித்தனமான பர்தா முறை (கோஷா முறை) இருந்தது. இப்பொழுதும்கூட அது ஒரளவுக்கு இருந்து வருகிறது. இவ்விதம் சந்தர்ப்பங்கள் சாதகமானவையாக இல்லை. ஆகையால் வாலிபப் பருவத்தில் கஸ்தூரி பாய்க்குக் கல்வி கற்பிக்க நான் செய்த முயற்சிகளெல்லாம் வெற்றி பெறவில்லை என்பதை நான் ஒப்புக் கொண்டே ஆகவேண்டும். காமத் தூக்கத்திலிருந்து நான் விழித்தெழுவதற்கு முன்பே பொது வாழ்க்கையில் இறங்கி விட்டேன். ஆகையால், எனக்குப் போதிய ஓய்வு நேரம் இல்லாமல் போய்விட்டது. தனிப்பட்ட உபாத்தியாயர்களைக் கொண்டு போதிக்கவும் தவறிவிட்டேன். இதன் பயனாக, இன்று கஸ்தூரிபாய் சிரமத்தின் பேரில் சாதாரணக் கடிதங்களை எழுதிக் கொள்ளவும், எளிய குஜராத்தி மொழியைப் புரிந்து கொள்ளவுமே முடியும். நான் அவளிடம் கொண்டிருந்த அன்பு, காமக் கலப்பே இல்லாததாக இருந்திருக்குமாயின், இன்று அவள் சிறந்த படிப்பாளியாக இருப்பாள். ஏனென்றால் படிப்பதில் அவளுக்கு இருந்த வெறுப்பையும் அப்பொழுது நான் போக்கியிருக்க முடியும். பரிசுத்தமான அன்பினால் ஆகாதது எதுவுமே இல்லை என்பதை நான் அறிவேன்.
காமம் மிகுந்த அன்பினால் ஏற்படும் நாசங்களிலிருந்து என்னை அநேகமாகக் காப்பாற்றிய ஒரு சந்தர்ப்பத்தை மட்டும் இங்கே சொன்னேன். குறிப்பிடத்தக்க மற்றொன்றும் உண்டு. நோக்கம் மாத்திரம் தூயதாக இருக்குமாயின் ஒருவனை இறுதியில் எப்படியும் கடவுள் காத்தருளுவார் என்பதை எத்தனையோ உதாரணங்கள் எனக்கு எடுத்துக்காட்டியிருக்கின்றன. ஹிந்து சமூகத்தில் குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்து வைத்துவிடும் கொடிய வழக்கம் இருந்தாலும், அதனால் ஏற்படக்கூடிய தீமைகளை ஒரளவுக்குக் குறைக்கக் கூடிய மற்றொரு வழக்கமும் அதனிடம் இருந்தது. இளம் தம்பதிகள் நீண்ட காலம் சேர்ந்து இருக்கப் பெற்றோர்கள் விடுவதில்லை. குழந்தைப் பருவ மனைவி, பாதிக் காலத்தைத் தன் பெற்றோரின் வீட்டிலேயே கழித்து விடுகிறாள். எங்கள் விஷயத்திலும் இப்படியே ஆயிற்று. அதாவது, எங்கள் மண வாழ்க்கையின் முதல் ஐந்து ஆண்டுகளில் (அதாவது 13-இலிருந்து 18-ஆம் வயது வரையில்) மொத்தம் மூன்று ஆண்டுகளுக்கு மேல் நாங்கள் சேர்ந்திருந்ததில்லை. ஆறு மாதகாலத்தை ஒன்றாக இருந்து கழித்திருப்போம். அதற்குள் என் மனைவியை அவளுடைய பெற்றோர்கள் அழைத்துப் போய் விடுவார்கள். அப்படி அழைத்துக் கொண்டு போய்விடுவது அந்தச் சமயத்தில் எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்காமல்தான் இருந்தது. ஆனால் அவ்விதம் அழைத்துச் சென்றதே எங்கள் இருவரையும் காப்பாற்றியது. பதினெட்டாவது வயதில் நான் இங்கிலாந்துக்குப் போனேன். இதனால் ஏற்பட்ட நீண்ட பிரிவு, எங்களுக்கு நன்மையாகவே முடிந்தது. இங்கிலாந்திருந்து நான் திரும்பி வந்த பிறகும் கூட ஆறு மாதங்களுக்கு மேல் நாங்கள் சேர்ந்து வாழ்ந்ததில்லை. ஏனெனில் ராஜ கோட்டுக்கும் பம்பாய்க்கும் நான் ஓடிக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. பிறகு நான் சிற்றின்ப இச்சையிலிருந்து பெரிதும் விடுபட்ட நிலையில் இருந்தேன்.
இந்த அத்தியாயத்தை நான் எழுத நேர்ந்திருக்கக்கூடாது என்றே விரும்புவேன். இந்த வரலாற்றைக் கூறி முடிப்பதற்குள் கசப்பானவை பலவற்றை நான் விழுங்கித்தான் ஆகவேண்டும் என்பதை அறிவேன். நான் சத்தியத்தை வழிபடுவனாக இருப்பதென்றால், வேறு விதமாக நடந்து கொள்ளுவதற்கில்லை. எனது பதிமூன்றாவது வயதில் எனக்கு மணமாயிற்று என்பதைத் கூறியாக வேண்டியது, வேதனையோடு கூடிய என் கடமையாகிறது. என்னை சுற்றிலும் என் பராமரிப்பில் இருக்கும் அதே வயதுடைய சிறுவர்களைப் பார்த்துவிட்டு என் விவாகத்தையும் எண்ணும் போது என்னைப் பற்றி நானே பரிதாபப்பட்டுக் கொள்ளத் தோன்றுகிறது. என் கதிக்கு ஆளாகிவிடாமல் தப்பி விட்ட அவர்களை ஆசீர்வதிக்கவும் தோன்றுகிறது. அப்படிப்பட்ட அக்கிரமமான குழந்தைக் கல்யாணம் சரி என்று கூறுவதற்கு ஒழுக்கரீதியான வாதம் எதுவும் இருப்பதாக நான் காணவில்லை.
எனக்கு ஆனது விவாகம் அன்றி நிச்சயதார்த்தம் அன்று என்பதை வாசகர்கள் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் கத்தியவாரில் நிச்சயதார்த்தம், விவாகம் என்ற இரண்டு வெவ்வேறு சடங்குகள் உண்டு. நிச்சயதார்த்தம் என்பது ஒரு பையனுக்கும் ஒரு பெண்ணுக்கும் விவாகம் செய்வதென்று அவ்விருவரின் பெற்றோர்களும் ஆரம்ப நிச்சயம் செய்து கொள்வது. அது மீறிவிட முடியாதது அல்ல. பையன் இறந்து விட்டால் பெண் விதவை ஆகிவிடுவதும் இல்லை. பெற்றோரைப் பொறுத்தவரை செய்து கொள்ளும் ஓர் ஒப்பந்தமே இது. குழந்தைகளுக்கு இதில் எந்தச் சம்பந்தமும் இல்லை. அப்படி நிச்சயதார்த்தம் ஆகியிருக்கிறது என்பதை அநேகமாக அக் குழந்தைகளுக்கு அறிவிப்பதும் இல்லை. எனக்குத் தெரியாமலேயே எனக்கு மும்முறை நிச்சயதார்த்தம் ஆகியிருந்தது என்று தெரிகிறது. எனக்கு என்று நிச்சயம் செய்திருந்த இரு பெண்கள் ஒருவர் பின் ஒருவராக இறந்துவிட்டனர் என்பதை அறிந்தேன். எனது ஏழாவது வயதில் மூன்றாவது நிச்சயதார்த்தம் நடந்ததாக இலேசாக நினைவிருக்கிறது. ஆனால், அதைப்பற்றி எனக்கு யாரும் தெரிவித்திருந்ததாக நினைவு இல்லை. இந்த அத்தியாயத்தில் என் விவாகத்தைப் பற்றியே நான் கூறுகிறேன். அதைப் பற்றிய ஞாபகம் எனக்குத் தெளிவாக இருக்கிறது.
நாங்கள் சகோதரர்கள் மூவர் என்பது நினைவிருக்கும். மூத்தவருக்கு முன்னாலேயே மணம் ஆகிவிட்டது. அடுத்த சகோதரர் எனக்கு இரண்டு அல்லது மூன்று வயது மூத்தவர். இந்த இரண்டாவது சகோதரருக்கும், எனக்கும், எனக்கு ஒரு வயது மூத்தவரான பெரியப்பா பிள்ளைக்கும் ஒரே சமயத்தில் மணம் முடித்து விடுவது என்று பெரியவர்கள் முடிவு செய்தனர். இப்படி முடிவு செய்ததில் எங்களுடைய நன்மையைக் குறித்தோ, எங்கள் விருப்பத்தைப் பற்றியோ அவர்களுக்குச் சிந்தனையே இல்லை. அவர்கள் சௌகரியத்தையும் சிக்கனத்தையும் மாத்திரம் பற்றிய விஷயம் அது.
ஹிந்துக்களின் கல்யாணம் என்றால் சாதாரண விஷயம் அன்று. பெரும்பாலான மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் விவாகத்தினாலேயே தங்களுக்கு நாசத்தைத் தேடிக் கொள்கின்றனர். அவர்கள் தங்கள் சொத்தையும் வீணாக்குகிறார்கள், காலத்தையும் வீணாக்குகிறார்கள். ஆடைகள் தயாரிப்பது, நகைகள் செய்வது, விருந்துகளுக்கு வேண்டிய திட்டங்கள் போடுவது என்ற வகையில் முன்னேற்பாடுகளுக்கே பல மாதங்கள் ஆகிவிடுகின்றன. விருந்துப் பட்சணங்கள் தயாரிப்பதில், அளவிலும் வகையிலும், ஒவ்வொருவரும் மற்றவரை மிஞ்சிவிட வேண்டும் என்று முயல்கிறார்கள். பெண்களுக்குக் குரல் நன்றாக இருக்கிறதோ இல்லையோ, ஏகக் கூப்பாடு போட்டுப் பாடுகிறார்கள். நோய் வாய்ப்படவும் செய்கிறார்கள். அண்டை வீட்டுக்காரர்கள் அமைதியோடு இருக்க முடியாத படியும் செய்து விடுகிறார்கள். இத்தகைய கூச்சல், குழப்பங்களையும் விருந்து இலைகளில் மிஞ்சியதையும், குப்பையையும், மற்றும் சகல ஆபாசங்களையும் பக்கத்து வீட்டுக்காரர்களும் சகித்துக் கொள்கிறார்கள். ஏனெனில், தாங்களும் அவ்வாறே நடந்து கொள்ளவேண்டிய ஒரு சமயம் வரும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
இந்தத் தொல்லைகளெல்லாம் ஒரே சமயத்தில் தீர்ந்து போவது எவ்வளவோ, நல்லது என்று என் பெரியோர்கள் எண்ணினர். இப்படிச் செய்தால் செலவும் குறைவாக இருக்கும் ஆடம்பரமும் அதிகமாயிருக்கும். மூன்று தடவைகளில் செலவழிப்பதற்குப் பதிலாக ஒரே தடவையில் செலவிடுவதனால் பணத்தையும் தாராளமாகச் செலவிடலாம். என் தந்தைக்கும் பெரியப்பாவுக்கும் வயதாகிவிட்டது. அவர்கள் விவாகம் செய்து வைக்க வேண்டியிருந்த கடைசிக் குழந்தைகள் நாங்கள். தங்கள் கடைசிக்காலத்தில் சந்தோஷமான காரியத்தைச் செய்துவிட்டுப் போவோமே என்றும் அவர்கள் எண்ணியிருக்கக் கூடும். இவற்றையெல்லாம் முன்னிட்டு மூன்று விவாகங்களையும் ஒரே சமயத்தில் முடித்துவிடுவது என்று முடிவு செய்தனர். நான் முன்பே கூறியிருப்பதைப்போல, இவற்றிற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து முடிப்பதற்கு மாதங்கள் பல ஆயின.
இத்தகைய முன்னேற்பாடுகளையெல்லாம் பார்த்த பிறகே, நடைபெற இருக்கும் சம்பவங்களைப்பற்றி நாங்கள் அறியலானோம். உடுத்துக்கொள்ள நல்ல ஆடைகள் கிடைக்கும், மேளதாளங்கள் இருக்கும். கல்யாண ஊர்வலங்கள் இருக்கும், பிரமாதமான விருந்து நடக்கும், இவற்றுடன், சேர்ந்து விளையாடுவதற்கு விசித்திரப் பெண் ஒருத்தியும் கிடைப்பாள் என்பதைத்தவிர, விவாகம் என்பதைப்பற்றி எனக்கு அப்பொழுது வேறோன்றுமே தெரியாது. சிற்றின்ப இச்சை பிறகுதான் ஏற்பட்டது. குறிப்பிடக்கூடிய சில விவகாரங்களைத் தவிர நான் வெட்கப்பட வேண்டிய பிறவற்றை மறைத்துவிடவே விரும்புகின்றேன். இந்த விவரங்களைப் பிற்பாடு சொல்லுகிறேன். ஆனால், இவற்றிற்கும், இந்தக்கதையை நான் எழுதுவதன் முக்கியமான நோக்கத்திற்கும் கொஞ்சமும் சம்பந்தமிலலை.
ஆகவே, என் அண்ணனையும் என்னையும் ராஜகோட்டிலிருந்து போர்பந்தருக்கு அழைத்துச் சென்றனர். முடிவான நாடகத்துக்குப் பூர்வாங்கமாக எங்கள உடம்பெல்லாம் அரைத்த மஞ்சளைப் பூசியது போன்ற சில வேடிக்கையான விவரங்களும் உண்டு. ஆனால், அவற்றையெல்லாம் நான் கூறாமல் விட்டுவிட வேண்டியதுதான்.
என் தந்தையார் ஒரு திவான். ஆனாலும் ஓர் ஊழியர்தான். அவரிடம் தாகூர் சாஹிப் விசேஷ அபிமானம் வைத்திருந்ததனால் அவர் கொஞ்சம் அதிகப்படியாகவே ஊழியம் புரிந்தார். தாகூர் சாஹிப் கடைசி நிமிஷம் வரையிலும் என் தந்தையாரைப் போக விடவில்லை. போக அனுமதித்தபோது பிரயாண காலத்தில் இரண்டு தினங்கள் குறைவதற்காக, விசேஷக் குதிரை வண்டிகளை என் தந்தைக்கு ஏற்பாடு செய்ய அவர் உத்தர விட்டார். ஆனால் விதி வேறுவிதமாக இருந்து விட்டது. ராஜகோட்டிலிருந்து போர் பந்தருக்கு 120 மைல்கள். சாதாரண வண்டியில் வந்தால் ஐந்து நாட்கள் ஆகும். என் தந்தையோ மூன்றே நாட்களில் வந்துவிட்டார். ஆனால் மூன்றாவது கட்டத்தில் வந்து கொண்டிருந்தபோது அவர் வந்த குதிரை வண்டி குடை சாய்ந்தது. அவர் பலத்த காயமடைந்தார். காயங்களுக்காக, உடம்பெல்லாம் கட்டுப் போட்டுக் கொண்டு வந்து சேர்ந்தார். நடைபெறவிருக்கும் வைபவத்தில் அவருக்கும் எங்களுக்கும் இருந்திருக்க வேண்டிய சிரத்தையில் பாதி இதனால் போய்விட்டது. ஆயினும் எப்படியும் வைபவம் நடந்தாக வேண்டும். முகூர்த்தத் தேதிகளை மாற்ற முடியுமா? குழந்தைகளுக்குக் கல்யாணத்தில் இயல்பாக ஏற்படும் சந்தோஷம் எனக்கும் ஏற்பட்டிருந்தது. அதில் மூழ்கியதன் காரணமாக, என் தந்தையின் காயங்களால் அடைந்த மனக்கிலேசத்தை மறந்திருந்தேன்.
என் பெற்றோரிடம் எனக்குப் பக்தியுண்டு. அதே அளவுக்குச் சதை உணர்ச்சிகளிலும் எனக்கு ஈடுபாடு உண்டு. என் பெற்றோருக்கு நான் ஆற்ற வேண்டிய பக்தியோடு கூடிய பணிக்காக எல்லாச் சுகங்களையும், இன்பங்களையும் நான் தியாகம் செய்துவிட வேண்டும் என்பதை அப்பொழுது நான் அறிந்திருக்கவில்லை. எனினும், இன்ப நுகர்ச்சியில் நான் கொண்டிருந்த ஆசைக்குத் தண்டனையாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அப்பொழுதிலிருந்து அந்தச் சம்பவம் என் மனத்தில் உறுத்திக்கொண்டே இருக்கிறது. அதைப்பற்றிப் பிறகு சொல்லுகிறேன். ஆசைகளைத் துறக்காமல் ஆசைக்குரிய பொருள்களைத் துறப்பதென்பது, நீ எவ்வளவு முயன்றாலும் அற்பாயுசில் முடிந்துவிடக் கூடியதே என்று நிஷ்குலானந்தர் பாடியிருக்கிறார். இப்பாடலை நான் பாடும்போதெல்லாம், பாடக் கேட்கும் போதெல்லாம், வெறுக்கத்தக்க கசப்பான அந்தச் சம்பவம் உடனே என நினைவுக்கு வந்து, வெட்கப்படும்படி செய்கிறது.
என் தந்தைக்குப் பலமான காயங்கள் ஏற்பட்டிருந்தும், சமாளித்துக் கொண்டு தைரியமாகவே காணப்பட்டார். மண வைபவங்களிலும் கலந்து கொண்டார். பல தரப்பட்ட சடங்குகளில் அவர் கலந்து கொண்டபோது, எந்த எந்த இடங்களில் உட்கார்ந்திருந்தார் என்பதைக்கூட இன்றும் என் மனக்கண் முன்பு கொண்டுவர முடியும். நான் குழந்தையா இருந்தபோதே எனக்கு விவாகம் செய்துவிட்டதற்காக என்றாவது ஒரு நாள் நான் என் தந்தையைக் கடுமையாகக் குறை கூறுவேன் என்று அப்பொழுது நான் கனவிலும் எண்ணவில்லை. அன்று நடைபெற்றவை யாவும் சரியானவை, நியாயமானவை, மகிழ்ச்சிகரமானவை என்றே அந்த நாளில் எனக்குத் தோன்றியது.
விவாகம் செய்துகொண்டுவிட வேண்டும் என்ற ஆர்வம் எனக்கே இருந்தது. என் தந்தை செய்வன எல்லாம் சரியான காரியமாகவே அப்பொழுது எனக்குத் தோன்றியதால் அவற்றைப் பற்றிய நினைவு என் ஞாபகத்தில் அப்படியே இருந்து வருகின்றது. மணவறையில் நாங்கள் எவ்விதம் அமர்ந்திருந்தோம், சப்தபதிச் சடங்குகளை எவ்விதம் நிறைவேற்றினோம், புதிதாக மணமான கணவனும் மனைவியும் இனிப்பு கன்ஸாரை எவ்விதம் ஒருவருக்கொருவர் வாயில் ஊட்டிக் கொண்டோம், நாங்கள் இருவரும் எவ்விதம் கூடி வாழத் தலைப்பட்டோம் என்பனவற்றையெல்லாம் இன்றுகூட என் உள்ளத்தில் நினைத்துப் பார்க்க முடியும்.
மேலும் அந்த முதல் இரவு! எதுவுமே அறியாத இரு குழந்தைகள், எந்தச் சிந்தனையும் இல்லாமல் வாழ்கைச் சாகரத்தில் தாமே குதித்தன. முதல் இரவில் நான் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி என் அண்ணன் மனைவி எனக்கு முழுப் போதனையும் செய்து வைத்திருந்தார். என் மனைவியைத் தயார் செய்திருந்தவர் யார் என்று எனக்குத் தெரியாது. அதைப்பற்றி அவளை நான் கேட்டதே இல்லை; இப்பொழுது கேட்கும் உத்தேசமும் இல்லை. ஒருவரையொருவர் சந்திப்பதில் எங்களுக்கு ஒரே நடுக்கந்தான். இதனைப்பற்றி வாசகர்களுக்குச் சந்தேகமே தேவையில்லை. உண்மையிலேயே எங்களுக்கு அளவு கடந்த கூச்சம். அவளுடன் நான் எப்படிப் பேசுவது? என்ன சொல்லுவது? சொல்லிக் கொடுத்திருந்த பாடம் அந்த அளவுக்கு உதவவில்லை. ஆனால், இத்தகைய காரியங்களில் உண்மையில் எந்தவிதமான போதனையுமே அவசியமில்லை. ஜன்மாந்தர வாசனைகளே எல்லாவிதமான போதனைகளும் அனாவசியமானவை என்று ஆக்கிவிடக்கூடியவை. நாளடைவில் ஒருவரையொருவர் அறிந்து கொண்டோம். ஆனால், கணவன் என்ற அதிகாரத்தை நான் உடனே மேற்கொண்டுவிட்டேன்.
எனக்குச் சுமார் ஏழு வயது இருக்கலாம். ராஜஸ்தானிக மன்றத்தில் உறுப்பினராவதற்காக என் தந்தையார், போர்பந்தரிலிருந்து ராஜகோட்டுக்குச் சென்றார். அங்கே என்னை ஓர் ஆரம்பப் பாடசாலையில் சேர்த்தார்கள். அந்த நாட்களில் எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த உபாத்தியாயர்களின் பெயர் உட்பட எல்லா விவரங்களுமே எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றன. போர்பந்தரில் இருந்ததைப் போன்றே இங்கும் என்னுடைய படிப்பைப்பற்றி முக்கியமாகக் குறிப்பிடக்கூடியது எதுவுமில்லை. சாதாரண நடுத்தர மாணவனாகவே நான் இருந்திருப்பேன். இந்தப் பள்ளிக்கூடத்திலிருந்து நகரை அடுத்திருந்த ஒரு பள்ளிக்கு என்னை அனுப்பினார்கள். பன்னிரெண்டு வயதாகிவிடவே பிறகு உயர்தரப் பள்ளியில் சேர்த்தனர். இந்தக் குறுகிய காலத்தில் என் ஆசிரியர்களிடத்திலோ, என் பள்ளித் தோழர்களிடத்திலோ ஒரு பொய்யேனும் எப்பொழுதும் நான் சொன்னதாக எனக்கு ஞாபகமில்லை. எனக்குக் கூச்சம் அதிகம், யாருடனும் சேரமாட்டேன். என் புத்தகங்களும் என் பாடங்களுமே எனக்கு உற்ற தோழர்கள். சரியான நேரத்தில் பள்ளிக்கூடத்துக்குப் போய்விடுவது, பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டுக்கு ஓடி வந்துவிடுவது – இதுவே எனது அன்றாடப் பழக்கம். யாருடனும் பேசவே பிடிக்காதாகையால் உண்மையில் ஓட்டமாகத்தான் வீடு வந்து சேருவேன். இல்லா விட்டால் வழியில் யாராவது என்னைக் கேலி செய்து விடுவார்களோ என்று பயம்.
உயர்தரப்பள்ளியில் நான் படித்த முதல் ஆண்டில் பரீட்சையின் போது நிகழ்ந்த சம்பவம் ஒன்று உண்டு. அது இங்கே குறிப்பிடத்தக்கது. கல்வி இலாகா இன்ஸ்பெக்டர் ஸ்ரீ கைல்ஸ் அப் பள்ளிக்கூடச் சோதனைக்காக வந்திருந்தார். எழுத்துக் கூட்டி எழுதும் பயிற்சிக்காக அவர் எங்களுக்கு ஐந்து சொற்களைக்கூறி அவற்றை எழுதச் சொன்னார். அதில் ஒரு சொல் “கெட்டில்” (Kettle) என்பது. அதை நான் தவறாக எழுதிவிட்டேன். உபாத்தியாயர் தம் கால் பூட்ஸ் முனையால் என் காலைச் சீண்டித் தூண்டினார். நான் புரிந்து கொள்ளவில்லை. நாங்கள் பக்கத்துப் பையனைப் பார்த்துக் காப்பி அடிக்காமல் பார்த்துக் கொள்ளுவதற்காகவே ஆசிரியர் அங்கே இருக்கிறார் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். ஆகையால், என் பக்கத்துப் பையனின் சிலேட்டைப் பார்த்து அப்பதத்தின் எழுத்துக்களைக் காப்பியடிக்க அவர் என்னைத் தூண்டுகிறார் என்பதை நான் அறியவில்லை. இதன் பலன் என்னவெனில், என்னைத் தவிர மற்ற எல்லாப் பிள்ளைகளும் அப்பதத்தைச் சரியாக எழுதியிருந்தனர். நான் ஒருவனே முட்டாளாக இருந்து விட்டேன். இந்த முட்டாள்தனத்தை நான் உணரும் படி செய்வதற்கு ஆசிரியர் பிறகும் முயற்சி செய்தார். ஆனால் அதனாலும் பயனில்லை. காப்பி அடிக்கும் வித்தையை நான் என்றுமே கற்றுக்கொள்ள முடியவில்லை.
என்றாலும் என் ஆசிரியரிடம் நான் கொண்டிருந்த மதிப்பை இச்சம்பவம் கொஞ்சமும் குறைத்து விடவில்லை. பெரியவர்களிடம் இருக்கும் குறைகளைக் காண்பதில் குருடனாகவே இருந்து விடுவது எனது சுபாவம். இதே ஆசிரியரிடம் வேறு பல குறைபாடுகளையும் பின்னால் அறியலானேன். என்றாலும், அவரிடம் நான் வைத்திருந்த மதிப்பு மாத்திரம் குறையவே இல்லை. ஏனெனில், பெரியவர்களின் கட்டளைகளை நிறைவேற்றிவிட்டு, அவர்களுடைய செய்கைகளைக் கவனிக்காமல் இருந்துவிட நான் கற்றுக் கொண்டிருந்தேன்.
அதே காலத்தில் நடந்த மற்றும் இரு சம்பவங்கள் என் நினைவில் என்றும் அப்படியே இருந்து வருகின்றன. என் பாடப் புத்தகங்களைத் தவிர வேறு எதையும் படிப்பதில் எனக்குப் பொதுவாக விருப்பம் இருந்ததில்லை. அன்றாடம் பாடங்களைச் சரிவரப் படித்து விட வேண்டும், ஏனெனில் , சரியாகப் படிக்காததற்காக ஆசிரியரின் கண்டன தண்டனைகளுக்கு ஆளாவது எனக்கு பிடிக்காது என்பதுடன் அவரை ஏமாற்றவும் நான் விரும்பவில்லை. ஆகையால், பாடங்களையே சரியாகப் படிக்காமல் இருக்கும்போது மேற்கொண்டு வேறு புத்தகங்களைப் படிப்பது என்பதற்கே இடமில்லை. ஆனால், என் தந்தையார் வாங்கியிருந்த சிரவணனின் பிதிர் பக்தி நாடகம் (இது சிரவணன் பெற்றோரிடம் கொண்டிருந்த பக்தியைப் பற்றிய நாடகம்) என்ற புத்தகம் என் கண்ணில் எப்படியோ பட்டது. தீவிரமான சிரத்தையுடன் அப்புத்தகத்தைப் படித்தேன். அந்த சமயத்தில் எங்கள் ஊருக்குப் படங்களைக் காட்டுவோரும் வந்திருந்தார்கள். நான் பார்த்த படங்களில் ஒன்று, கண்ணிழந்த தன்னுடைய தாய் தந்தையரைச் சிரவணன் கூடையில் வைத்துக் காவடியாகத் தோளில் சுமந்து கொண்டு போனதைக் காட்டுவது. அப்புத்தகமும் இப்படமும் என் மனத்தில் அழியாத முத்திரை போட்டுவிட்டன. நீ பின்பற்றுவதற்கு இது ஒரு சரியான உதாரணம் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். சிரவணன் இறந்ததால் புத்திர சோகத்தோடு பெற்றோர் வருந்திப் பிரலாபித்தது என் நினைவில் இன்னும் அப்படியே இருந்து வருகிறது. சோகம் மிகுந்த அந்தக் கீதம் என் உள்ளத்தை உருக்கிவிட்டது. என் தந்தை, எனக்காக வாங்கியிருந்த வாத்தியத்தில் அந்தக் கீதத்தை வாசித்தேன்.
மற்றொரு நாடக சம்பந்தமாகவும் இதே போன்ற ஒரு சம்பவம் உண்டு. ஏறக்குறைய அதே சமயத்தில், ஒரு, நாடகக் குழுவினர் நடத்தி வந்த ஒரு நாடகத்தைப் பார்க்க என் தந்தையாரின் அனுமதி பெற்றேன். அரிச்சந்திரன் என்ற இந்த நாடகம், என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. எத்தனை தரம் அதைப் பார்த்தாலும் எனக்குச் சலிப்பு ஏற்படாது. ஆனால் அதைப் போய் பார்க்க எத்தனை தடவைதான் என்னை அனுமதிப்பார்கள்? அது சதா என் நினைவில் இருந்து வந்தது. எண்ணற்ற சமயங்களில் எனக்குள் நானே அரிச்சந்திரனாக நடித்திருப்பேன். அரிச்சந்திரனைப் போல எல்லோரும் ஏன் சத்திய சீலர்கள் ஆகக்கூடாது? என்று அல்லும் பகலும் என்னை நானே கேட்டுக் கொள்ளுவேன். சத்தியத்தைக் கடைப்பிடிப்பதும், அதற்காக அரிச்சந்திரன் அனுபவித்த துன்பங்களையெல்லாம் அனுபவிப்பதுமாகிய லட்சியமே ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கியது. அரிச்சந்திரனின் கதை, உண்மையிலேயே நடந்த சமயங்களில் அழுதும் விடுவேன். அரிச்சந்திரன் சரித்திர புருஷனாக இருந்திருக்க முடியாது என்று என் பகுத்தறிவு இன்று எனக்குக் கூறுகிறது. என்றாலும், என்னைப் பொறுத்தவரையில் அரிச்சந்திரனும், சிரவணனும் வாழ்வின் உண்மைகள். அந்த நாடகங்களைத் திரும்ப, இன்று நான் படித்தாலும், முன்போலவே என் மனம் உருகிவிடும் என்பது நிச்சயம்.
காந்தி வம்சத்தினர் வைசிய குலத்தைச் சேர்ந்தவர்கள். ஆதியில் மளிகை வியாபாரிகளாக இருந்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. ஆனால் என் தாத்தா காலத்திலிருந்து மூன்று தலைமுறைகளாக கத்தியவாரிலுள்ள சுதேச சமஸ்தானங்கள் பலவற்றில் முதன் மந்திரியாக இருந்திருக்கின்றனர். ஓதா காந்தி என்ற உத்தம சந்திரகாந்தி, என்னுடைய பாட்டனார். தாம் கொண்ட கொள்கையில் மிக்க உறுதியுடையவராக அவர் இருந்திருக்க வேண்டும். அவர் போர்பந்தரில் திவானாக இருந்தார். ராஜாங்கச் சூழ்ச்சிகளினால் அவர் போர்பந்தரை விட்டுப்போய் ஜூனாகட்டில் அடைக்கலம் புக நேர்ந்தது. அங்கு அவர் நவாபுக்கு இடது கையினால் சலாம் செய்தார். மரியாதைக் குறைவான அச்செய்கையைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், அப்படிச் செய்ததற்குக் காரணம் கேட்டதற்கு என் வலக்கரம் முன்பே போர்பந்தருக்கும் அர்ப்பணம் செய்யப்பட்டுவிட்டது என்றார் உத்தம சந்திர காந்தி.
ஓதா காந்திக்கு மனைவி இறந்துவிடவே இரண்டாம் தாரம் மணந்து கொண்டார். மூத்த மனைவிக்கு நான்கு குழந்தைகள், இரண்டாம் மனைவிக்கு இரு பிள்ளைகள். ஓதா காந்தியின் இப்பிள்ளைகளெல்லாம் ஒரே தாய் வயிற்றுப் பிள்ளைகளல்ல என்று என் குழந்தைப் பிராயத்தில் நான் உணர்ந்ததுமில்லை, அறிந்ததுமில்லை. இந்த ஆறு சகோதரர்களில் ஐந்தாமவர் கரம்சந்திர காந்தி என்ற கபா காந்தி; ஆறாம் சகோதரர் துளசிதாஸ் காந்தி. இவ்விரு சகோதரர்களும் ஒருவர் பின் மற்றொருவராகப் போர்பந்தரில் பிரதம மந்திரிகளாக இருந்தனர். கபா காந்தியே என் தந்தை. ராஜஸ்தானிக மன்றத்தில் இவர் ஓர் உறுப்பினர். அந்த மன்றம் இப்பொழுது இல்லை. ஆனால், அந்தக் காலத்தில் சமஸ்தானாதிபதிகளுக்கும் அவர்களுடைய இனத்தினருக்கும் இடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்த்து வைப்பதில் இந்த மன்றம் அதிகச் செல்வாக்குள்ள ஸ்தாபனமாக விளங்கியது. என் தந்தை ராஜ்கோட்டில் கொஞ்ச காலமும் பிறகு வாங்கானேரிலும் பிரதம மந்திரியாக இருந்தார். இறக்கும் போது ராஜகோட் சமஸ்தானத்திலிருந்து உபகாரச் சம்பளம் பெற்று வந்தார்.
ஒவ்வொரு தரமும் மனைவி இறக்க, கபா காந்தி நான்கு தாரங்களை மணந்தார். அவருடைய முதல் இரண்டு மனைவிகளுக்கும் இரு பெண் குழந்தைகள் அவருடைய கடைசி மனைவியான புத்லிபாய், ஒரு பெண்ணையும் மூன்று ஆண் குழந்தைகளையும் பெற்றெடுத்தார். நானே அதில் கடைசிப் பையன். என் தந்தையார் தம் வம்சத்தாரிடம் அதிகப் பற்றுடையவர்; சத்திய சீலர்; தீரமானவர்; தயாளமுள்ளவர். ஆனால், கொஞ்சம் முன் கோபி. அவர் ஓர் அளவுக்கு சிற்றின்ப உணர்ச்சி மிகுந்தவராகவும் இருந்திருக்க கூடும். ஏனெனில், தமக்கு நாற்பது வயதுக்கு மேலான பிறகே அவர் நான்காம் தாரத்தை மணந்து கொண்டிருந்தார். ஆனால், எதனாலும் அவரை நெறிதவறி விடச் செய்துவிட முடியாது. தமது குடும்ப விஷயத்தில் மட்டுமின்றி வெளிக் காரியங்களிலும் பாரபட்சமின்றி நடந்து கொள்ளுவதில் கண்டிப்பானவர் என்று புகழ் பெற்றவர். சமஸ்தானத்தினிடம் அவருக்கு இருந்த அளவு கடந்த விசுவாசம் பிரபலமானது. தம் சமஸ்தானாதிபதியான ராஜகோட் தாகூர் சாஹிபை ஒரு சமயம் உதவி ராஜிய ஏஜெண்டு அவமதித்துப் பேசிவிடவே, அதைக் கபா காந்தி ஆட்சேபித்துக் கண்டித்தார். உடனே ஏஜெண்டுக்குக் கோபம் வந்துவிட்டது. மன்னிப்பு கேட்டுக் கொள்ளும்படி கபா காந்தியிடம் கேட்டார். அப்படி மன்னிப்புக் கேட்க மறுத்து விடவே அவரைச் சில மணி நேரம் காவலில் வைத்துவிட்டனர் என்றாலும் மன்னிப்புக் கேட்பதில்லை என்று கபா காந்தி உறுதியுடன் இருப்பதை ஏஜெண்டு கண்டதும் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
பணம் திரட்ட வேண்டும் என்ற ஆசை என் தந்தைக்கு என்றுமே இருந்ததில்லை. மிகக் கொஞ்சமான சொத்தையே எங்களுக்கு அவர் வைத்துவிட்டுப் போனார்.
அனுபவத்தைத் தவிர அவருக்குப் படிப்பு ஒன்றும் இல்லை. அதிகப்பட்சம் குஜராத்தி ஐந்தாம் வகுப்பு வரையில் படித்திருந்தார் என்றே சொல்லலாம். சரித்திரம், பூகோள சாத்திரம் ஆகியவை பற்றி அவருக்கு எதுவுமே தெரியாது. ஆனால், நடைமுறைக் காரியங்களில் அவருக்கு இருந்த சிறந்த அனுபவம், அதிகச் சிக்கலான பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும், நூற்றுக் கணக்கானவர்களை வைத்து நிர்வகிப்பதிலும், அவருக்குத் திறமையை அளித்தது. சமயத்துறையிலும் அவருக்கு இருந்த பயிற்சி மிகக் கொஞ்சம். ஆனால், அடிக்கடி கோயில்களுக்குப் போவதாலும், சமயப் பிரசங்கங்களைக் கேட்பதாலும் அநேக ஹிந்துக்களுக்குச் சாதாரணமாக என்ன சமய ஞானம் உண்டாகுமோ, அது அவருக்கும் இருந்தது. குடும்பத்தின் நண்பரான படித்த பிராமணர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் அவர் தமது கடைசிக் காலத்தில் கீதையைப் படிக்க ஆரம்பித்தார். தினந்தோறும் பூஜை செய்யும் போது கீதையிலிருந்து சில சுலோகங்களை அவர் வாய்விட்டுப் பாராயணம் செய்வதுண்டு.
என் தாயாரைப் பற்றி நான் நினைக்கும் போது முக்கியமாக அவருடைய தவ ஒழுக்கமே என நினைவுக்கு வருகிறது. அவர் மிகுந்த மதப்பற்றுக் கொண்டவர். தாம் செய்ய வேண்டிய அன்றாட பூஜையை முடிக்காமல் அவர் சாப்பிட மாட்டார். அவருடைய நித்தியக் கடமைகளில் ஒன்று, விஷ்ணு கோயிலுக்குப் போய்த் தரிசித்துவிட்டு வருவது. ஒரு தடவையேனும் சாதுர் மாச விரதத்தை அனுசரிக்க அவர் தவறியதாக எனக்கு ஞாபகம் இல்லை. அவர் கடுமையான விரதங்களையெல்லாம் மேற்கொள்ளுவார். அவற்றை நிறைவேற்றியும் தீருவார். நோயுற்றாலும் விரதத்தை மாத்திரம் விட்டுவிடமாட்டார். சாந்திராயண விரதமிருந்த போது அவர் நோயுற்றிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், விரதத்தை விடாமல் அவர் அனுஷ்டித்து முடித்தார். தொடர்ந்து இரண்டு மூன்று உபவாச விரதங்கள் இருப்பதென்பதும் அவருக்குப் பிரமாதம் அல்ல. சாதுர்மாச காலத்தில் ஒரு வேளை ஆகாரத்தோடு இருப்பதும் அவருக்குப் பழக்கம். அது போதாதென்று ஒரு சாதுர்மாசத்தின் போது ஒன்றுவிட்டு ஒரு நாள் உபவாசம் இருந்து வந்தார். மற்றொரு சாதுர்மாச விரதத்தின் போது சூரிய தரிசனம் செய்யாமல் சாப்பிடுவதில்லை என்று விரதம் கொண்டிருந்தார். அந்த நாட்களில் குழந்தைகளாகிய நாங்கள் வெளியில் போய் நின்றுகொண்டு, சூரியன் தெரிந்ததும் தாயாரிடம் போய்ச் சொல்லுவதற்காக ஆகாயத்தைப் பார்த்தபடியே இருப்போம். கடுமையான மழைக்காலத்தில் அடிக்கடி சூரியபகவான் தரிசனமளிக்கக் கருணை கொள்ளுவதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. சில நாட்களில் திடீரென்று சூரியன் தோன்றுவான், தாயாருக்கு இதைத் தெரிவிப்பதற்காக ஓடுவோம். தாமே தரிசிப்பதற்காக அவர் வெளியே ஓடி வந்து பார்ப்பார். ஆனால் சூரியன் அதற்குள் மறைந்து, அன்று அவர் சாப்பிட முடியாதபடி செய்துவிடுவான். “அதைப்பற்றிப் பரவாயில்லை” என்று மகிழ்ச்சியோடு தான் தாயார் கூறுவார். “நான் இன்று சாப்பிடுவதை பகவான் விரும்பவில்லை” என்பார். பின்னர் வீட்டுக்குள் போய்த் தம் அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருப்பார்.
என் தாயாருக்கு அனுபவ ஞானம் அதிகமாக உண்டு. சமஸ்தானத்தைப் பற்றிய விவகாரங்களெல்லாம் அவருக்கு நன்றாகத் தெரியும். அவருடைய புத்திக் கூர்மைக்காக ராஜ குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அவரிடம் அதிக மதிப்பு வைத்திருந்தார்கள். நான் குழந்தை என்ற சலுகையை வைத்துக் கொண்டு அடிக்கடி என் தாயாருடன் அரண்மனைக்குப் போயிருக்கிறேன். தாகூர் சாஹிபின் விதந்துவான தாயாருடன் என் தாயார் உற்சாகத்தோடு விவாதித்ததெல்லாம் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது.
இந்தப் பெற்றோருக்குச் சுதாமாபுரி என்று கூறப்படும் போர்ப்பந்தரில் 1869, அக்டோபர் 2-ஆம் தேதி நான் பிறந்தேன். குழந்தைப் பருவத்தில் போர்பந்தரிலேயே இருந்தேன. அங்கே என்னைப் பள்ளிக்கூடத்தில் வைத்தது எனக்கு நினைவிருக்கிறது. கொஞ்சம் சிரமத்தின் பேரில்தான் பெருக்கல் வாய்ப்பாட்டை நெட்டுருப் போட்டேன். மற்றச் சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு எங்கள் உபாத்தியாயரை ஏளனம் செய்து திட்டக் கற்றுக் கொண்டேன் என்பதைத் தவிர அந்த நாட்களைக் குறித்து வேறு எதுவுமே எனக்கு நினைவில்லை. இதிலிருந்து அப்பொழுது நான் மந்தபுத்தியுள்ளவனாக இருந்தேன் என்றும், எனக்கு ஞாபகசக்தி போதாமல் இருந்தது என்றும் யூகிக்க முடிகிறது.
வித்யாதரன் முக்திக்குப் பின் ஒரு நாள் இனிமையான இரவில் எண்ணற்ற பலசாலிகளான பலராமரும் கிருஷ்ணரும் விருந்தாவனக் காட்டிக்குச் சென்றார்கள். அவர்களுடன் விரஜ பூமியின் நங்கையரும் சென்றிருந்தார்கள். அந்நங்கையர் நேர்த்தியான ஆடைகளை அணிந்திருந்தார்கள். சந்தனம் பூசப் பெற்று, மலர்களால் தம்மை அலங்கரித்திருந்தார்கள். ஆகாயத்தில் சந்திரன், நட்சத்திரங்கள் புடை சூழப் பிரகாசித்துக் கொண்டிருந்தான். சூழலின் இனிமையில் கிருஷ்ணரும் பலராமரும் இனிமையாகப் பாடினார்கள்.
அப்போது குபேரனின் நண்பனான ஒரு அசுரன் அங்கு தோன்றினான். அவன் தலையில் சங்கு வடிவிலான விலை உயர்ந்த மணியைத் தரித்திருந்ததால் அவனுக்கு சங்காசுரன் என்ற பெயர் வழங்கியது. குபேரனின் இரு மகன்கள் செல்வத்தால் செருக்கடைந்து நாரத முனியை அசட்டை செய்தது போல் சங்காசுரனும் செல்வச் செருக்கு காரணமாக, கிருஷ்ணரையும் பலராமரையும் ஆயர்குலச் சிறுவர்களென எண்ணினான். சங்காசுரன், தான் செல்வம் மிகுந்தவனும், குபேரனின் நண்பனுமாகையால் அங்கிருந்த விரஜ நங்கையர்களை அனுபவிக்க எண்ணி அப்பெண்களைக் கைப்பற்ற விரும்பினான்.
அவர்களிடையே அவன் தோன்றி, அப்பெண்களை வடக்கு திசையை நோக்கி கடத்திச் செல்லலானான். கிருஷ்ணரும் பலராமரும் இருந்தும்கூட சங்காசுரன் தானே அவர்களின் கணவன், உடைமையாளன் என்பது போல் அதிகாரம் செய்தான். சங்காசுரனால் பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்ட பெண்கள், தம்மைக் காப்பாற்றும்படி கிருஷ்ணரையும் பலராமரையும் பெயர் சொல்லிக் கூவியழைத்தார்கள். சகோதரர்கள் இருவரும் பெரிய கட்டைகளைக் கைகளில் எடுத்துக் கொண்டு விரைவாக சங்காசுரனைப் பின் தொடர்ந்தார்கள்.
அவர்களின் பலத்தை எண்ணி அஞ்சிய சங்காசுரன், கோபியர்களை விட்டுவிட்டு உயிருக்குப் பயந்து ஓடினான். ஆனால் கிருஷ்ணர் அவனை விடவில்லை. கோபியர்களை பலராமரின் பாதுகாப்பில் விட்டுவிட்டு கிருஷ்ணர் அசுரன் சென்ற இடமெல்லாம் அவனைத் துரத்திப் பிடித்து, அவனின் தலையில் தன் முஸ்டியால் அடித்து, அவனைக் கொன்றார். பின்னர் அவனின் தலையில் இருந்த சங்கு வடிவிலான மணியை எடுத்துக் கொண்டு திரும்பினார். விரஜ பூமியின் நங்கையர்களின் முன்னிலையில் கிருஷ்ணர் அம்மணியைத் தம் சோதரனான பலராமருக்கு அளித்தார்.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
ஒரு சமயம் நந்தமகாராஜாவின் தலைமையிலான கோபாலர்கள் அம்பிகா வனம் சென்று சிவராத்திரி பூஜை செய்ய விரும்பினார்கள். அம்பிகா வனம் குஜராத் மாநிலத்தில் உள்ளது. அது சரஸ்வதி நதிக்கரையில் உள்ளதாகச் சொல்லப்படுவதுண்டு. சரஸ்வதி நதியின் கரையிலிருந்த அம்பிகா வனத்துக்கு நந்தமகாராஜாவும் ஆயர்களும் சென்றார்கள். அம்பிகா வனத்தை அடைந்ததும் விருந்தாவன ஆயர்கள் முதலில் சரஸ்வதி நதியில் நீராடினார்கள். புண்ணிய தலங்களுக்கு செல்பவர்கள் முதலில் அங்குள்ள தீர்த்தத்தில் நீராடுவார்கள். சில சமயங்களில் அவர்கள் முடியிறக்குவதும் உண்டு. நீராடுவது முதற் கடமை. நீராடிய பின் அவர்கள் அங்குள்ள தெய்வங்களை வணங்கித் தானங்கள் வழங்குவார்கள்.
விருந்தாவனத்திலிருந்து வந்திருந்த ஆயர்கள், தங்க ஆபரணங்களையும் அழகிய மாலைகளையும் அணிந்திருந்த பசுக்களை பிராமணர்களுக்குத் தானமாக வழங்கினார்கள். நந்தமகாராஜாவும் மற்றவர்களும் அன்றிரவை சரஸ்வதி நதியின் கரையில் கழித்தார்கள். அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது அருகிலிருந்த வனத்திலிருந்து வந்த ஒரு பெரிய பாம்பு நந்தரைப் பிடித்து விழுங்கத் தொடங்கியது. நந்தர் பரிதாபமாகக் கத்தலானார்: என் அருமை மகனே, கிருஷ்ணா, நீ உடனே வந்து என்னை இந்த அபாயத்திலிருந்து காப்பாற்ற வேண்டும். என்று நந்த மகாராஜா கூக்குரலிட்டதைக் கேட்ட ஆயர்கள் எழுந்து வந்து அங்கு நடந்ததைக் கண்டார்கள். அவர்கள் உடனே எரியும் நெருப்பு கொள்ளிகளைக் கொண்டு பாம்பை அடித்துக் கொல்ல முயற்சித்தார்கள். அப்படியும் பாம்பு நந்தரை விடுவதாயில்லை.
அப்போது கிருஷ்ணர் அங்கு தோன்றித் தனது பாத கமலங்களால் பாம்பைத் தொட்டார். கிருஷ்ணரின் திருப்பாதங்கள் பட்டதும் பாம்பு தன் சர்ப்ப உடலை நீக்கி மிகவும் அழகான, வித்யாதரன் என்ற பெயருடைய தேவனாக உருவெடுத்தது. உன்னத அழகுடன் அவன் காட்சி அளித்தான். அந்த தேவன் கிருஷ்ணருக்கு வணக்கத்தினைத் தெரிவித்து மிகுந்த பணிவுடன் நின்றிருந்தான். அப்போது அந்தத் தேவனைப் பார்த்து கிருஷ்ணர் கேட்டார்: நீ நல்ல தேவனாகத் தோன்றுகிhய். நீ இந்த வெறுக்கத் தக்க செயலைச் செய்ததெப்படி? பாம்பின் உடல் உனக்கு எப்படி வாய்த்தது? என்று கிருஷ்ணர் கேட்டபோது அந்தத் தேவன் தன் முந்திய வாழ்வின் கதையைக் கூறலானான்.
அன்பான பிரபுவே, முந்திய பிறவியில் என் பெயர் வித்யாதரன். உலகம் முழுவதும் என் பேரழகிற்காக நான் பிரசித்தி பெற்றிருந்தேன். புகழ் வாய்ந்தவன் என்பதால் நான் எங்கும் என் விமானத்தில் பறந்து செல்வது வழக்கம். அவ்வாறு பறந்து செல்லும்போது ஒருநாள் ஆங்கிரா என்ற மகா முனிவரைக் கண்டேன். அவர் அழகில்லாதவராக இருந்தார். நான் என் அழகில் மிகுந்த கர்வம் கொண்டிருந்ததால் அவரைக் கண்டதும் சிரித்து விட்டேன். அந்தப் பாவத்திற்காக முனிவர் என்னை பாம்பாகும்படி சாபமிட்டார், நான் பாம்பானேன். என்று கூறிய அந்தத் தேவன் மேலும் கூறினான்: முனிவர் எனக்கிட்ட சாபம் ஒரு சாபமேயல்ல என்பதை இப்போது நான் உணர்கிறேன். அவர் என்னைச் சபித்திருக்காவிடில் நான் பாம்பின் உடலைப் பெற்று, உமது பாத கமலங்களால் உதைக்கப் படாமலிருந்தால், நான் ஜட நிலையிலிருந்து விடுபட்டிருக்க மாட்டேன்.
இப்போது நான் பாவங்களின் விளைவுகளில் இருந்து விடுபட்டிருப்பதாக எண்ணுகிறேன். யோகிகளில் எல்லாம் சிறந்தவர், ஆதி புருஷனான முழுமுதற் கடவுள், பக்தர்களின் எஜமானர். நீர் பிரபஞ்சங்களைப் பரிபாலிப்பவர். உமது நாமத்தை எப்போதும் உச்சரித்துக் கொண்டிருப்பவர்கள் பாவச் செயல்களின் விளைவுகளிலிருந்து விடுதலை பெறுகிறார்கள் என்பதை நான் அறிவேன். நான் சுவர்க்கத்திலுள்ள என் இருப்பிடத்துக்குச் செல்ல உம் அனுமதியை வேண்டுகிறேன். என்று கூறி, வித்யாதரன் சுவர்க்கத்திற்குத் திரும்பச் செல்வதற்கான அனுமதியை கிருஷ்ணரிடமிருந்து பெற்று, கிருஷ்ணரை வலம் வந்து பணிவுடன் வணங்கி, சுவர்க்கத்திற்குத் திரும்பினான்.
நந்த மகாராஜாவும் பாம்பினால் விழுங்கப்பட இருந்த அபாயத்திலிருந்து தப்பினார். சிவபெருமானை வழிபடுவதற்காக அம்பிகா வனம் வந்திருந்த ஆயர்கள் தம் காரியத்தை முடித்துக் கொண்டு விருந்தாவனத்துக்குத் திரும்பிச் செல்லத் தயாரானார்கள். திரும்பும் வழியில் அவர்கள் கிருஷ்ணரின் லீலைகளை எண்ணியபடி சென்றார்கள்.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
கோவர்த்தன பூஜை அமாவாசையன்று நடைபெற்றது. அதன் பின் இந்திரன் ஏழு நாட்களுக்குப் பலத்த மழையும் புயலும் விழைவித்தான். சுக்ல பஷத்தின் ஒன்பது நாட்களுக்குப் பின் பத்தாவது நாள் தேவேந்திரன் கிருஷ்ணரை வழிபட்டபின் எல்லாம் திருப்தியாக முடிவடைந்தது. பின், பதினொன்றாம் நாள் ஏகாதசி வந்தது. அன்று முழுவதும் நந்தமகாராஜா உபவாசமிருந்து, மறுநாள் துவாதசியன்று அதிகாலை யமுனை நதியில் நீராடச் சென்றார். அவர் நதியின் ஆழமான இடத்துக்குச் சென்றபோது வருணதேவனின் ஆள் ஒருவன் அவரைத் தடுத்து, வருணதேவனின் முன்பு கொண்டு போய் நிறுத்தினான். தவறான நேரத்தில் நதியில் நீராடியதாக நந்தரின் மேல் குற்றம் சாட்டப்பட்டது. வான சாஸ்திரத்தின் படி அவர் நீராடியவேளை அசுர வேளையாகும். அதிகாலையில் சூரியோதயத்துக்கு முன்பு நதியில் நீராட வேண்டுமென்று விரும்பிய நந்தர் எப்படியோ, மேலும் முன்பாகவே வந்துவிட்டதால், அசுப வேளையில் நீராடி விட்டார். அதனால் அவர் வருணனின் சிறையில் அடைக்கப் பட்டார்.
வருணனின் ஆட்கள் நந்த மகாராஜாவைப் பிடித்துச் சென்றபோது அவரது நண்பர்கள், கிருஷ்ணரையும் பலராமரையும் கூவி அழைத்தார்கள். நந்த மகாராஜாவை வருணன் பிடித்துச் சென்றிருப்பதை கிருஷ்ணரும் பலராமரும் அறிந்து, உடனே வருணனின் இருப்பிடத்துக்குச் சென்றார்கள். வருணதேவன் கிருஷ்ணரையும் பலராமரையும் மிகுந்த மரியாதையுடன் வரவேற்று இவ்வாறு கூறினான்: அன்பான பிரபுவே, உமது வருகையால் நான் ஜட நிலையிலிருந்து விடுபட்டு நிற்கிறேன். நீருனுள் இருக்கும் எல்லாச் செல்வங்களுக்கும் நானே அதிகாரியென்றாலும் வாழ்வின் வெற்றி, அவற்றில் அடங்கி இருக்கவில்லை என்பதை நான் அறிவேன். ஆனால் உம்மைக் காணும் இந்நேரத்தில் என் வாழ்வு வெற்றியடைந்து விட்டதாக நான் உணர்கிறேன்.
ஏனெனில் உம்மைக் காணும் எவரும் மேற்கொண்டு ஜடப்பிறவியை அடைவதில்லை. எல்லா உயிர்களிலும் உள்ள பரமாத்மாவே, எனது பணிவான வணக்கங்கள் உமக்கு உரித்தாகுக. எனது மடமையால் எது செய்யலாம், எது செய்யக் கூடாதென்பதை அறியாமல், உமது தந்தையான நந்த மகாராஜாவை நான் சிறைப் பிடித்து விட்டேன். எனது ஏவலர்களின் தவறுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். இங்கு வந்து உமது கருணையை எனக்கு வழங்க வேண்டுமென்பதற்காக நீர் இதைத் திட்டமிட்டு செய்திருக்கிறீர் போலும். அன்பான கிருஷ்ணா, என் மீது கருணை காட்டும்- இதோ உம் தந்தை. அவரை நீர் உடனே அழைத்துச் செல்லலாம். என்று வருணதேவன் கிருஷ்ணரை வேண்டிக் கொண்டான்.
இவ்வாறு கிருஷ்ணர் தம் தந்தையை வருணனிடம் இருந்து விடுவித்து, அவரின் நண்பர்களிடம் கொண்டு வந்தார். எல்லோரும் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். செல்வச் சிறப்பு மிக்க வருணதேவன், கிருஷ்ணரிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொண்டது நந்த மகாராஜாவுக்கு வியப்பை அளித்தது. அவர் அந்நிகழ்ச்சியைத் தம் நண்பர்களிடம் ஆச்சரியத்துடன் விபரித்தார்.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
விருந்தாவனத்தின் ஆயர்கள் இந்திரனுக்காக ஏற்பாடு செய்திருந்த யாகத்தைக் கிருஷ்ணர் தடுத்து விட்டார் என்று அறிந்தபோது இந்திரன் மிகுந்த கோபம் கொண்டு, தன் கோபத்தை விருந்தாவன வாசிகளின் மீது காட்டினான். யாகம் நிறுத்தப்பட்டதற்கு கிருஷ்ணரே காரணம் என்பதை அறிந்திருந்த போதிலும், பழியை நந்தமகாராஜாவின் தலைமையிலான ஆயர்களின் மீது தீர்க்க முற்பட்டான். பலவகையான மேகங்களின் அதிபதியான இந்திரன், ஸாங்வர்த்தக என்ற மேகத்தை அழைத்தான். இந்த மேகம் பிரபஞ்சம் முழுவதையும் அழிப்பதற்கான தேவை ஏற்படும் போதுதான் அழைக்கப்படும்.
விருந்தாவனத்தின் மேல் படர்ந்து அப்பகுதி முழுவதையும் பெரும் வெள்ளத்தில் மூழ்கடிக்கும் படி இந்திரன் ஸாங்வர்த்தக மேகத்துக்கு கட்டளையிட்டபோது அப்பொறுப்பை ஏற்க அவை மிகவும் அஞ்சின. ஆனால் தேவேந்திரன், நீங்கள் முன்னேறிச் செல்லுங்கள் நானும் என் யானை மீது ஆரோகணித்து பெரும் புயல்கள் புடை சூழ உங்களுடன் வருகிறேன். விருந்தாவன வாசிகளைத் தண்டிப்பதில் என் சக்தி முழுவதையும் செலவிடத் தீர்மானித்திருக்கிறேன். என்று உறுதியளித்து மேகங்களை ஊக்குவித்தான்.
இந்திரனின் கட்டளைப்படி பலவகையான, மிகவும் அபாயகரமான மேகங்கள் விருந்தாவனத்தின் மேல் தோன்றி தம் பலம் முழுவதையும் பிரயோகித்து இடைவிடாது மழையைப் பொழிந்தன. தொடர்ந்து இடியிடித்தது. மின்னல் மின்னியது, பலமான காற்று வீசிற்று. கூரிய அம்புகள் போல் நீர் தாரைதாரையாக வர்ஷித்தது. சற்று நேரத்தில் விருந்தாவனத்தின் நிலப் பகுதிகள், மேடு பள்ளம் தெரியாத வண்ணம் நீரால் நிரம்பின. நிலமை மிக மோசமாயிற்று. குறிப்பாக மிருகங்கள் பெருத்த அவதிக்குள்ளாயின. மழையோடு கடும் காற்று வீசியதால் விருந்தாவனத்தின் ஒவ்வொரு ஜீவராசியும் குளிரில் நடுங்கின. அத் தொல்லைகளில் இருந்து விடுபட முடியாத மக்கள் கோவிந்தனின் பாத கமலங்களில் சரணடைந்தனர். அப்போது விருந்தாவன வாசிகள் எல்லோரும் கிருஷ்ணரை நோக்கி அன்புள்ள கிருஷ்ணா, நீர் மிகவும் சக்தி வாய்ந்தவர், பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர். இந்திரனின் கோபத்துக்கு ஆளாகித் தவிக்கும் எங்களைக் காப்பாற்றுவீராக. எனப் பிரார்த்தித்தார்கள்.
இந்தப் பிரார்த்தனையைக் கேட்ட கிருஷ்ணர், காலம் தவறிப் பெரும் மழை பெய்ததும், கடும் காற்று வீசியதும் தனக்குச் சேரவேண்டிய யாகம் நடைபெறாததால் கோபம் கொண்ட இந்திரனின் செயலால் ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொண்டார். இந்திரன் திட்டமிட்டு தன் கோபத்தை இவ்வாறு காட்டுகிறான். இந்த தேவன் தானே மிகப் பெரியவன் என்று எண்ணிக்கொண்டு தன் பலத்தைக் காட்டுகிறான். ஆகையால் என் தகுதியை நான் அவனுக்கு உணர்த்த வேண்டும். பிரபஞ்சக் காரியங்களை நடத்துவதில் அவன் தனியுரிமை பெற்றவனல்ல என்பதையும், நானே மேலாளரான உயரதிகாரி என்பதையும் உணர்த்தி, அவனது கர்வத்தை அடக்கி, விருந்தாவனத்திலுள்ள என் தூய பக்தர்களை நான் காப்பாற்ற வேண்டும். எனக் கிருஷ்ணர் நினைத்தார்.
பின்பு பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ஒரு குழந்தை தரையில் இருந்து குடைக் காளானைப் பிடுங்குவதுபோல், கோவர்த்தன கிரியைத் தன் ஒரு கையில் தூக்கிக் கொண்டார். இது கிருஷ்ணர் கோவர்த்தன கிரியைத் தூக்கிய பரமான லீலையாகும். மலையைக் கையில் ஏந்தியவாறு தம் பக்தர்களிடம் கிருஷ்ணர் கூறினார்: அன்புள்ள சகோதரர்களே, அன்புள்ள தந்தையே, எனதருமை விருந்தாவன வாசிகளே, இப்போது நீங்கள் பத்திரமாக இந்த கோவர்த்தன கிரியாகிய குடையின் கீழ் வரலாம். என் கையிலிருந்து மலை நழுவி விழுந்து விடலாமென்று நீங்கள் அஞ்ச வேண்டாம். பலத்த மழையாலும் சூறாவளிக் காற்றாலும் நீங்கள் பெருத்த அவதிக்குள்ளாகி இருக்கிறீர்கள். எனவே நான் இந்த மலையைத் தூக்கி அதை உங்களுக்காக குடையாகப் பிடித்திருக்கிறேன். இந்தக் குடையின் கீழ் உங்களின் பசுக்களுடன் இப்போது நின்மதியாக இருங்கள். என்று கிருஷ்ணர் கூறியதும் விருந்தாவன வாசிகள் அப்பெரிய மலையினடியில் ஒன்று கூடி, தங்கள் உடைமைகளுடனும் மிருகங்களுடனும் பத்திரமாக இருந்தார்கள்.
விருந்தாவன வாசிகளும் அவர்களது பசுக்களும் அம்மலையின் அடியில் ஒரு கிழமை பசி, தாகம் இன்றி, வேறு எவ்விதமான கவலையும் இல்லாமல் இருந்தார்கள். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் தமது இடது கையின் சுண்டு விரலின் நுனியில் அவ்வளவு பெரிய மலையை ஒரு வார காலம் நிறுத்தியிருந்ததைக் கண்டு ஆயர்கள் ஆச்சரியமடைந்தார்கள். அப்போது கிருஷ்ணருக்கு ஏழு வயதே நிரம்பியிருந்தது. கிருஷ்ணரின் அசாதாரணமான யோக சக்தியைக் கண்டு சுவர்க்கத்தின் அதிபதியான இந்திரன், இடியால் தாக்கப்பட்டவனைப் போல் திகைப்படைந்து உறுதி குலைந்தான். உடனே, அவன் மேகங்களையெல்லாம் விலகிச் செல்லும்படி கட்டளையிட்டான். மேகங்கள் எல்லாம் கலைந்து ஆகாயம் தெளிவு பெற்றதும் பலத்த காற்று வீசுவது நின்றது. அப்போது கோவர்த்தன கிரிதாரி என்ற பெயரைப் பெற்ற முழுமுதற் கடவுளான கிருஷ்ணர் கூறினார்: என்னருமை ஆயர்குல மக்களே, இப்போது நீங்கள் உங்கள் மனைவியரையும், குழந்தைகளையும், பசுக்களையும் அழைத்துக் கொண்டு உங்கள் உடமைகளுடன் வீட்டுக்குச் செல்லலாம். வெள்ளம் குறைந்து விட்டது. எனவே, நீங்கள் இங்கிருந்து செல்லலாம். என்று கூறினார். எல்லா மக்களும் தத்தம் உடைமைகளை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து சென்றார்கள். அவர்கள் அங்கிருந்து சென்றதும் பிரபுவாகிய கிருஷ்ணர் மெதுவாக கோவர்த்தன கிரியை கீழே இறக்கி அதன் உரிய இடத்தில் முன்பிருந்தபடி வைத்தார்.
எல்லாம் முடிந்த பின்பு விருந்தாவன வாசிகள் அனைவரும் கிருஷ்ணரை அணுகி அவரை மனமாரத் தழுவிப் பேருவகை அடைந்தார்கள். சுவர்க்கத்தில் ஸித்தலோகம், கந்தர்வ லோகம், சாரணலோகம் ஆகியவற்றைச் சேந்தவர்கள் தம் திருப்தியைத் தெரிவித்து பூமியின் மீது மலர் மாரி பொழிந்து பல வகையான சங்குகளையும் வாத்தியங்களையும் இசைத்தனர். இறுதியில் சுவர்க்க லோகத்தில் இருந்து தேவேந்திரன் வந்து, தான் இழைத்த குற்றத்தை உணர்ந்து, கிருஷ்ணரின் பாதகமலங்களில் விழுந்து வணங்கி, அவரைத் துதித்ததும் இந்தினின் கர்வம் அடங்கியது. பின் கிருஷ்ணரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு இந்திரன் சுவர்க்க லோகத்திற்கு திரும்பிச் சென்றான்.
இந்தியாவின் விருந்தாவனத்துக்குச் செல்பவர்கள், விருந்தாவனத்திலிருந்து ஏறக்குறைய 22 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும், பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இடது கையின் சுண்டுவிரலின் நுணியில் குடையாகத் தூக்கி வைத்திருந்த கோவர்த்தன கிரியைத் தரிசிக்கலாம்.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
மரியாதை ராமனுக்குப் பேரும் புகழும் சேரச் சேர, ராமன் அந்த ஊரில் மட்டும் அல்ல, அண்டை நாடுகளிலும் பிரபலம் ஆனான்.
வழக்கு என்றால், நீதிபதி முதல் கடைசி ஆள்வரை ஒரே கோணத்தில்தான் ஆராய்வார்கள். ஆனால், மரியாதை ராமன் யார் மீது கொஞ்சம்கூட சந்தேகம் இல்லையோ அவரைப் பிடிப்பான். கிடுக்கியில் மாட்டுவதுபோல் இரண்டு மூன்று கேள்விகளைப் போடுவான். கோணி மூட்டையில் இருக்கும் பூனைக் குட்டிகள் வெளியே வந்துவிடும். அதாவது ரகசியம் வெளியே வந்துவிடும்.
ராமன் ஒழுங்காக வேலைக்குச் செல்லாமல், வழக்கு, நீதி, வாதி, பிரதிவாதி என்று தன் பொன்னான இளைமையைப் பாழ் அடித்துக் கொள்கிறான் என்பது ராமனின் அப்பாவின் அசைக்க முடியாத நம்பிக்கை.
அவ்வப்போது ராமனுக்கும் அவன் அப்பாவுக்கும் இந்தப் பிரச்சினையாலேதான் சண்டைவரும். “ஏண்டா! நீ பாட்டுக்கு இன்னார்தான் குற்றவாளி என்று சமூக அந்தஸ்தில் பெரியவரைக் குறிப்பிடுவாய். காவலர்களும் கைது செய்து விடுவார்கள். ஆனால் அதன் பின்விளைவு என்ன தெரியுமா?
தண்டனை அனுபவிப்பவன் எதிராளியைப் பார்த்து “இந்த தடவை தப்பிச்சிட்டேன்னு நினைக்கிறியா? தண்டனைக்காலம் முடிவதற்குள், என் ஆட்கள் பழிவாங்கி விடுவார்கள். கண்டதுண்டமாக வெட்டி காக்கைக்கும், கழுகுக்கும் போடுவார்கள்!” என்று எச்சரிக்கை செய்வான். நமக்கு எதற்கு இந்த மாதிரி ஆபத்தான தொழில்?” என்னோடு வியாபாரத்தில் சேர்ந்து விடு! கொஞ்சம் வளர்ந்து வாலிபனானவுடன் உனக்குத் திருமணம் செய்கிறேன். எனக்கு உன்னை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்.?”
மரியாதைராமன் தகப்பனாரின் பேச்சைக் கேட்டான். “அப்பா! ஆபத்தில்லாத வேலை கிடையாது. நீதிமன்றத்துறையில் என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று நானா முறையிட்டேன்! அரசராகப் பார்த்து எனக்குக் கொடுத்த பதவியை, ‘எனக்கு இந்தப் பொம்மை வேண்டாம்’னு சொல்றாப்பல நானும் பதவியை வேண்டாம் என்று சொல்வதா?
பார்க்கப் போனால், இந்தப் பதவி எனக்கு கிடைத்தது எவ்வளவு பேர்களுக்கு ஏமாற்றமும் எரிச்சலும் தந்தது என்று தெரியுமா?
குற்றத்தைச் செய்தவன் தன்னை யாராவது பார்த்து விடுவார்கள்! என்று சுற்றும் முற்றும் பார்க்கிறான். பின்னாலே தைரியம் வந்து, தனக்கு விரோதிகளாக இருப்போரின் மீது பழி போடுவான்! அதனால் யாருமே அவனைச் சந்தேகப்பட மாட்டார்கள்.
சில சமயம் குற்றவாளியைக் கண்டு பிடிக்கமுடியாமல் இருக்கலாம். ஆனால், ஒரு நிரபராதி மீது பழி வந்து அவனுக்குத் தண்டனை கொடுத்துவிடக் கூடாது.
சட்டம் ஒரு இருட்டறை அதில் வழக்காடுபவர் எடுத்துரைக்கும் வாதம் விளக்கு போன்றது. ஆனால், அந்த விளக்கு ஏழைக்கு எட்டாதது என்று ஓர் அறிஞர் கூறினார். தாமதப்படுத்தும் நீதியின் தீர்ப்பு! உனக்கு நீதி மறுக்கப்படுகிறது என்றும் சொல்கிறார்கள்.
“அப்பா! இந்த மரியாதைராமன் உங்கள் நற்பெயரைக் கெடுக்க மாட்டான்.”
“சரி! ராமா நான் கோவில்களுக்குச் சென்று திரும்பிவர பல நாட்கள் ஆகும்! அதற்குள் உனது லட்சியம் மாறாதா என்று பார்க்கிறேன்.” என்று அப்பா சொல்லிவிட்டு ஊர்ப் பயணம் செல்ல ஆரம்பித்தார்.
இரண்டு மாதம் கழித்து வந்தார் அப்பா. அன்று ஒரு வழக்கு விசாரிக்கப்படுகிறது. வாதியும் பெண். பிரதிவாதியும் பெண். இரண்டு பெண்களும் ஒருவனுடைய மனைவிகள். அந்த இரண்டு பெண்களைப் பற்றி அப்பாவுக்கு நன்றாகத் தெரியும். அவர்களுடைய வீட்டுக் கெதிரில் உள்ள அவருடைய வீட்டுத் திண்ணையில் படுத்திருப்பது அவருக்குப் பழக்கம்.
இந்தப் பெண்கள் என்ன குற்றம் செய்தார்கள்! இந்தக் குற்றத்தின் தன்மை என்ன? பின்னணி என்ன?
வழக்கில் வாதி இரண்டாம் மனைவி. பிரதிவாதி முதல் மனைவி. குற்றம் – இளையவளின் குழந்தை இறந்து விட்டது. இயற்கையான மரணம் அல்ல என்று அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் தெரியும்.
ஆனால், குழந்தையைக் கொலை செய்தது யார்? கொலைக்கான உள் நோக்கம் என்ன? இதுதான் மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் கேள்வி.
இளைய மனைவியின் பெயர் காந்தா. முதல் மனைவியின் பெயர் சாந்தா. இவர்களின் புருஷன் அப்பாவி. ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான்.
“வழக்கை ஆரம்பிக்கலாமா?” என்று மரியாதைராமன் கேட்கவும் அரசர் “தாராளமாக” என்றார். மரியாதை ராமனின் அப்பா, மகனின் சாமர்த்தியத்தைக் காண ஆவலாய் கூட்டத்தில் ஒருவராக நின்று கொண்டிருந்தார்.
இளையவள் காந்தாவைப் பேச அழைத்தார் மரியாதை ராமன். “ஐயா! நீங்களும் சிறிசு, நானும் சிறிசு. எப்பவுமே சிறிசுகளைக் கண்டால் பெரிசுகளுக்குப் பொறாமை? பொச்சரிப்பு!
‘என் குழந்தையை யாரோ கொலை பண்ணிட்டாங்க! பெத்த வயிறு பத்தி எரியுது! துக்கம் தொண்டையை அடைக்குது” என்று சொல்லி சத்தம் போட்டு அழுகிறாள்.
மரியாதை ராமன் இளையவளைப் பார்த்து, “அழாதேம்மா! உன்னுடைய கஷ்டம் ஈடில்லாத கஷ்டம்! குழந்தையைக் கொன்னவங்க யாருன்னு தெரியல்லியே! உனக்கு யார் மேலே சந்தேகம்!
“அதை என் வாயாலே எப்படிச் சொல்வேன்? நீங்க கேட்டதாலே சொல்றேன்! எம் புருசன் ஒரு பூச்சி. எந்த விஷயத்தையும் காதிலே போட்டுக்க மாட்டார். என் சந்தேகம் சொல்லவே வெக்கமா இருக்கு…” என்று காந்தா இழுத்தாள்.
“சொல்லும்மா! இது நீதிமன்றம்.
“வேறே யாரு? இதோ எதிர்த்தாப்பலே குத்துக் கல்லாட்டம் நிற்கிறாளே அவதான் என் சக்காளத்தி. அவ மலடி! எனக்குக் குழந்தை பிறந்தது அவளுக்குப் பொறாமை! இந்த ஒரு காரணமே போதுமே! அவளுக்குத் தூக்குத்தண்டனை கொடுத்தா கூட என் ஆத்திரம் தீராது!”
மரியாதை ராமன் ஏட்டில் குறிப்பெடுத்தான். பிறகு மூத்தவள் சாந்தாவை கூண்டில் நிற்க வைத்து கேள்விக் கணைகளைத் தொடுத்தான்.
“நான் என் புருஷனுக்கு முதல் மனைவி. குழந்தை பிறக்காததாலே, நானே என் புருசனுக்குப் பெண் பார்த்தேன். கூடப் பிறக்கல்லன்னாலும் அவ என் தங்கச்சி. குழந்தை பிறக்கப்போவுதுன்னு செய்தி வந்ததும் அதிக சந்தோசம் பட்டவ நான்தான் ஐயா!”
“தாய் இல்லாத பெண்ணாச்சே! பிரசவத்தை நம்ம வீட்லேயே பார்த்துடலாம்னு இவளைப் பொறந்த ஊட்டுக்குக் கூட அனுப்பலே! நல்லபடியா குழந்தை பொறக்கணும்னு நான் வேண்டாத தெய்வம் இல்லே, முடிச்சுப் போடாத காணிக்கை இல்லே!” என்றாள் மூத்தவள் சாந்தா.
உடனே இளையவள் காந்தா, “குழந்தை திடீர்னு எழுந்துக்கும். போய் ஆசையா பெரியம்மாகிட்ட படுத்துக்கும். அப்படிப் படுத்த குழந்தையை கழுத்தை நெரிச்சுக் கொன்னுட்டு, ஒண்ணும் தெரியாத பாப்பா போல நடிக்கறதைப் பாரு!” என்று சீறினாள்.
மரியாதைராமன் இளையவள் – காந்தாவிடம் “குழந்தைக்குக் குளிப்பாட்டுவது யார்? மருந்து கொடுப்பது யார்? தூங்க வைப்பது யார்? அழகா உடுத்தி, கண்ணுக்கு மை தீட்டி, காற்றாட வெளியில் தூக்கிக்கிட்டு வேடிக்கைக் காட்றது யார்?” என்று கேட்டான்.
அதற்கு இளையவள், “என்னமோ தான் பெத்த புள்ளை மாதிரி குழந்தைக்கு எல்லாம் செய்றது எதுக்கு? புருசன் தன்னைத் தள்ளி வச்சிடுவாரோ என்ற பயம். பாக்கறவங்க தன்னைப் பாராட்டுவாங்கன்ற சுயநலம்தான்! தாய்ப்பால் குடிக்க மட்டும்தான் குழந்தையை என்னண்டை கொடுப்பா! ஏன்னா அது அவளால முடியாது!” என்று ஏளனமாக சாந்தாவைப் பார்த்துச் சொன்னாள்.
மரியாதை ராமன் வாக்கமூலத்தில் தெரிகின்ற கருத்துக்களைக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தான். குழந்தையின் தகப்பன் என்னை சொல்கிறான்? அவன் ரெண்டு பொண்டாட்டிக்காரன். அவனுடைய கருத்தைக் கேட்போம் என்று மரியாதைராமன் குழந்தையின் தகப்பனைக் கூண்டில் ஏற்றினான்.
“ஐயா! இந்தக் குழந்தையை யார் கொன்றது? தெரியவில்லை என்றால் யார் கொன்றிருப்பார்கள் என்ற ஊகத்தைச் சொல்லும்!” – மரியாதை ராமன்.
தகப்பன் அழுது கொண்டே “நான் ஊரில் இல்லாத சமயம் பார்த்து இந்தக் கொலை நடந்திருக்கிறது. பெத்தவள் செய்தாளா? மத்தவள் செய்தாளா? யார் செய்திருந்தாலும் கடுமையான தண்டனை கொடுங்க? எனக்கு ரெண்டாவது கல்யாணம் செய்து வச்சதே முதல்தாரம்தான். மனப்பூர்வமாகத்தான் ஒத்துக்கிட்டா! நமக்குக் குழந்தை வேணும்! என்னாலே முடியாதபோது எனக்கு வர ‘உடன்பிறவா சகோதரி’ மூலமாவது அந்தப் பாக்கியம் கிட்டட்டும்னு சொன்னவளே பெரியவள்தான்!
அடிக்கடி சின்னவ எங்கிட்ட பெரியவளைப் பத்தி தூபம் போடுவா! அவளை விரட்டுங்க. என் குழந்தையை எப்பவும் அவளே கவனிச்சுக்கறா. அப்புறம் குழந்தைக்கு எம்மேலே எப்படிங்க பாசம் வரும்! குழந்தையும் அவகிட்ட நல்லா ஒட்டிக்கிச்சு. அப்படிச் சொல்லும்போது நான் ‘ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்’னு புத்தி சொல்வேன்.
“இன்னொரு உண்மையை இந்தச் சபையில் சொல்றேன். சின்னவளுக்குக் குழந்தை பிறந்த ஆறுமாசம் கழிச்சு பெரியவள் என்னை வைத்தியர்கிட்ட அழைச்சிட்டுப் போனா! வாந்தி மயக்கம்னு சொன்னா! வைத்தியர் அவளைப் பரிசோதித்து ‘மகிழ்ச்சி’ என்று சொன்னார். ஆம்! பெரியவளும் தாயாகப் போகிற நிலையில் இருக்கிறாளாம்!
‘நான் சந்தோஷம் அடைஞ்சேன்! ஆனா, பெரியவ வைத்தியரிடம், கருவைக் கலைக்கும் மருந்தைக் கொடுங்க. எனக்கு குழந்தை. வேணாம்!’ என்றாள். நானும் வைத்தியரும் தடுத்தபோது ‘விஷம் குடிச்சிருவேன்’னு பயமுறுத்தினா. வேறு வழியில்லாம வைத்தியர், கருத்தடை மருந்தைக் கொடுத்து விட்டார். இந்த விஷயம் இதுவரை சின்னவளுக்குத் தெரியாது” என்று தேம்பினார்.
வழக்கு தனக்கு எதிராகப் போவதை அறிந்த இளையவள் காந்தா, “என் குழந்தையைக் கொலை செய்தவளை சும்மா விடக் கூடாது. இந்த நீலிக் கண்ணீர் விட்டாகுழந்தை பொழைச்சுடுமா? விஷத்தைக் கொடுத்தா குழந்தை உடல் நீலம் பாய்ஞ்சிருக்கும் கையால நெறிச்சிருந்தா கை ரேகை தெரிஞ்சிருக்கும்…” என்று அரற்றினாள்.
மரியாதை ராமன் அவள் சொல்வதைக் குறித்துக் கொண்டான். “சரி அம்மா, குழந்தையைப் பெத்தவங்க நீங்க! ஆகவே தண்டனையில் ஒரு பகுதி நீங்க குற்றம் சாட்டும் மூத்தவளைக் கட்டிப் போட்டு கசையடியை நீங்களே கொடுக்கலாம். கயிறால் கட்டினால் அறுந்து விடும். எதனால் கட்டினால் உடலை இறுக்கும்?” என்று யோசிப்பதுபோல் கேட்டான்.
இளையவள் மகிழ்ச்சி பொங்க ‘மரத்தைச் சுத்திப் படரும் பாடவரங்காய் கொடியை வெச்சுக் கட்டினால் கொடி அறுபடாது. உடலை இறுக்கி விடும்’ என்றாள். ‘என் வீட்டுத் தோட்டத்திலேயே அந்தக் கொடி படருது’ என்று மேலும் தகவல் தந்து மூத்தவள் கொஞ்ச நேரத்தில் கொடியால் கட்டப்படுவாள் என்று மகிழ்ச்சியுடன் இருந்தாள்.
சொன்னபடியே இளையவள் வீட்டிலிருந்த நீளமான பாடவரங்காய் கொடி அறுத்துக் கொண்டுவரப் பட்டது. சபையில் நிசப்தம்.
மரியாதை ராமன் அரசரிடம் ரகசியமாக ஏதோ சொன்னான். “அப்படியா!” என்பதுபோல் அரசர் ஆச்சரியத்தால் வாய் பிளந்தார். கூடியிருந்த மக்கள் முடிவு தெரிந்து கொள்ள முட்டி மோதிக் கொண்டு இருந்தனர்.
மரியாதைராமன் அந்தப் பாடவரங்காய்க் கொடியை சேவகனிடம் கொடுத்து அந்த அம்மாவைக் கொடியால் கட்டுங்கள்!” என்று உத்தரவிட்டான். ‘எந்த அம்மா’ என்பதை மக்கள் யோசனை செய்வதற்குள், சேவகன் இளையவளைக் கட்டத் துவங்கினான்.
இளைவள் பதறி “வேண்டாம்! என்னைக் கட்டாதீர்கள். நானே உண்மையைச் சொல்லி விடுகிறேன். குழந்தையைக் கொலை செய்ய கசாப்புக் கடைக்காரனின் உதவியை நாடினேன். அவன்தான் கத்தியால் குத்தமாட்டேன். கொடியால் கழுத்தை நெரித்து பெரியம்மா பக்கத்தில் போட்டுடறேன் என்று சொன்னான். என் வீட்டுக்காரர் இல்லாத நேரம் பார்த்துத் தகவல் சொன்னேன். அவனும் காரியத்தை முடித்தான்.
எனக்குக் குழந்தை போனாலும் பரவாயில்லை. பெரியவ மேலே எங்க வீட்டுக்காரர் வெச்சிருக்கிற பாசத்தை நாசப்படுத்தணும்கிறதான் என் ஒரே நோக்கமாய் இருந்தது. எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க!” என்று மண்டியிட்டு அழுதாள்.
மரியாதை ராமன், “குற்றவாளி வாயாலே குற்றத்தை ஒப்புக் கொள்ள” வைத்ததை, ராமனின் தந்தை மகிழ்ச்சி பொங்க பாராட்டினார். மக்களும் இளையவளின் அடாத செயலை இகழ்ந்தார்கள். இளையவளுக்குச் சிறைத் தண்டனை கிடைத்தது.
இளையவள் மூத்தவள் கால்களில் விழுந்து அழுதாள். “அக்கா! நம் குலத்தைத் தழைக்க வந்த செல்வளை அழித்து விட்டேனே! நான் ஒரு மகா பாவி! அந்தப் பழியை உன் மீது போட்டு ஒழித்து விட நினைத்தேனே! என்னை மாதிரி ஒரு துரோகியை, நீங்கள் உங்கள் வாழ்வில் பங்கு போட்டுக் கொள்ள வைத்தீர்களே! நான் நன்றி கெட்டவள்…” என்று புலம்பலுக்கிடையே சொல்லி காவலர்களுடன் சென்றாள். புருசனும், மூத்தவளும் கண்கலங்கி ‘சீக்கிரம் நாம் மூவரும் ஒன்றாகலாம்’ என்றார்கள்.
மரியாதைராமன் வீட்டில் அவனுடைய தந்தை, “பெற்ற குழந்தையைக் கொன்றாள் ஒருத்தி. நானோ பெற்ற மகனின் புகழைத் தடுக்க நினைத்தேன். அவள் பொறாமை கொண்டு குழந்தையைக் கொன்றாள். நான் அறியாமையால் என் மகனின் அறிவுத் திறனை மூடி மறைக்க நினைத்தேன்!” என்று மரியாதைராமனைக் கட்டிப் பிடித்து ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
Category:மரியாதை இராமன் கதைகள்
விருந்தாவன வாசிகள் இந்திரனைத் திருப்திப் படுத்துவதற்காக ஒரு யாகத்தை நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். இந்திரனைத் திருப்திப் படுத்தினால் மழை வருமென்று நம்பப்பட்டது. இதைப் பற்றிக் கேள்விப்பட்ட கிருஷ்ணர், தன் தந்தை நந்தமகாராஜாவிடம் அதுபற்றிப் பணிவுடன் கேட்டார். நந்தமகாராஜா சிறிது நேரம் மௌனமாக இருந்தார். யாகத்தின் நுணக்கங்களைச் சிறுவனான கிருஷ்ணரால் புரிந்துகொள்ள முடியாதென்று அவர் நினைத்தார். ஆனால் கிருஷ்ணர் விடவில்லை. அந்த விபரங்களை விரிவாகக் கூறுமாறு கேட்டுக் கொண்டார்.
அதற்கு நந்தமகாராஜா கூறினார்: “இச்சடங்கு பரம்பரை பரம்பரையாகச் செய்யப்பட்டு வருகிறது. மழை இந்திரனின் கருணையால் ஏற்படுவதாலும், மேகங்கள் அவரது பிரதிநிதிகள் ஆகையினாலும், தண்ணீர் நமது வாழ்வுக்கு மிக முக்கியமானதாலும், மழையில்லாமல் நாம் பயிரிடவோ, தானியங்களை விளைவிக்கவோ இயலாது. மழை பெய்யாவிட்டால் நாம் வாழ முடியாது. எனவேதான், இந்த யாகம் செய்யப்படுகிறது”, என்று நந்தமகாராஜா கூறினார். இதைக் கேட்டபின் கிருஷ்ணர் பேசிய விதம் இந்திரனை மிகுந்த கோபத்துக்கு உள்ளாக்கியது. யாகத்தை நடத்த வேண்டாமென கிருஷ்ணர் விவாதித்தார். அதற்காக அவர் கூறிய காரணங்கள் இரண்டு. முதலாவதாக பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது போல், இகவுலக நலன்களுக்காக தேவர்களை வழிபடத் தேவையில்லை. தேவர்களை வழிபட்டுப் பெறப்படும் நன்மைகள் தற்காலிகமானவை. இரண்டாவதாக, தேவர்களை வழிபடுவதால் கிடைக்கும் தற்காலிகமான நன்மைகளும் முழுமுதற்கடவுளால் வழங்கப்படுபவை. அவரின் அனுமதியின்றி யாரும் யாருக்கும் எந்த நன்மையும் வழங்க இயலாது.
கிருஷ்ணர் மேலும் கூறினார்: “சுவர்க்க லோகத்தின் ஆளுனர் பதவியில் இருப்பதால் கர்வம் கொண்டிருந்த இந்திரனுக்கு பாடம் கற்பிப்பதற்காக, இந்திரனுக்கு செய்யும் யாகத்தை நிறுத்தி, கோவர்த்தன கிரிக்கான பூஜையை மேற்கொள்ள வேண்டும். நாம் விருந்தாவனத்தில் வாழ்வதில் திருப்தி காண்கிறோம். நமது உறவு குறிப்பாக கோவர்த்தன கிரியுடனும் விருந்தாவனத்துடனும் ஏற்பட்டது. நமது ஊரிலுள்ள பிராமணர்களையும் கோவர்த்தன கிரியையும் திருப்திப் படுத்துவதற்கான யாகத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்”. எனப் பணிவாகக் கேட்டுக் கொண்டார். இறுதியில் நந்தமகாராஜா கிருஷ்ணரின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு யாகத்திற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்.
அன்று முதல் இன்றுவரை ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் கோவர்த்தன பூசை நடத்தப்பட்டு வருகிறது. விருந்தாவனத்திலும், மற்ற இடங்களிலும், உலகெங்கிலும் உள்ள இஸ்கான் ஆலயங்களிலும் உணவு பெருமளவில் தயாரிக்கப்பட்டு பிரசாதமாக மக்களுக்கு வினியோகிக்கப் படுகிறது. நந்தமகாராஜாவும் ஏனைய ஆயர்களும் கோவர்த்தன பூசையை நிறைவேற்றி, மலையை வலம் வந்தார்கள். இந்த மரபையொட்டி இப்போதும் விருந்தாவனத்தில் இந்தப் பூஜை தினத்தன்று நன்றாக உடையுடுத்து, தம் பசுக்களுடன் கோவர்த்தன மலைக்குச் சென்று, பூஜையை நிறைவேற்றி மலையை வலம் வருகிறார்கள். கிருஷ்ணரின் ஆலோசனைப்படி கற்றறிந்த அந்தணர்களை வரவழைத்து வேதம் ஓதச் செய்து, கோவர்த்தன பூசையை நடத்திப் பிரசாதம் வழங்கினார்கள். விருந்தாவன வாசிகள் ஒன்றுகூடி, பசுக்களை அலங்கரித்து, அவற்றிற்குப் புல் கொடுத்தார்கள். பசுக்களுடன் கோவர்த்தன கிரியை வலம் வந்தார்கள்.
கோவர்த்தன பூசையை நடத்தி வைத்த அந்தணர்கள், கோபாலர்களையும், கோபியரையும் ஆசிர்வதித்தார்கள். எல்லாம் சரிவர நடந்தேறிய பின், கிருஷ்ணர் மிகப் பிரமாண்டமான உருவத்தை மேற்கொண்டு, கோவர்த்தன கிரிக்கும் தமக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை, இரண்டும் ஒன்றே, என்பதை அங்கிருந்த மக்களுக்கு உணர்த்தினார். பின்னர், அங்கு அர்ப்பணிக்கப்பட்ட உணவு முழுவதையும்; கிருஷ்ணர் உண்டார். கோவர்த்தன கிரியும் கிருஷ்ணரும் ஒன்றே என்ற கருத்து இன்றும் மதிக்கப் படுகிறது. அம்மலையின் கற்களை எடுத்துச் சென்று வீடுகளில் வைத்து கிருஷ்ணராக அவற்றைப் பூஜிக்கிறார்கள். உணவு முழுவதையும் உண்ட கிருஷ்ண வடிவமும், கிருஷ்ணர் தாமும் வெவ்வேறாக விழங்கி நின்றதால் கிருஷ்ணர் தாமும் மற்ற விருந்தாவனவாசிகளும் அந்த மாபெரும் மூர்த்திக்கும் கோவர்த்தன மலைக்கும் ஒருங்கே வழிபாடு நடத்தினார்கள். இவ்வாறு கோவர்த்தன பூசையை நடத்திய விருந்தாவன வாசிகள், வசுதேவர் மைந்தனான கிருஷ்ணரின் கட்டளைகளை நிறைவேற்றிய பின் தத்தம் வீடுகளுக்குத் திரும்பினார்கள்.
(கிரி கோவர்த்தன ஷீலா)
வழக்கம்போல கிருஷ்ணரும் பலராமரும் அவர்களது நண்பர்களுடன் யமுனை நதிக் கரைக்குச் சென்றிருந்தபோது, ஆயர் சிறுவர்கள் காலை உணவு உண்டிராததால் மிகவும் பசியாக இருந்தார்கள். அவர்கள் கிருஷ்ணரையும் பலராமரையும் அணுகி இவ்வாறு கூறினார்கள்: “அன்பான கிருஷ்ணா, பலராமா, நாங்கள் இன்று பசியாக இருக்கிறோம். எங்கள் பசியைப் போக்குவதற்கான உபாயம் ஏதாவது கூறுங்கள்”. என்று கூறினார்கள்.
நண்பர்கள் இவ்வாறு வேண்டிக் கொண்டபோது கிருஷ்ணரும் பலராமரும் அச்சமயம் யாகங்கள் நடத்திக் கொண்டிருந்த சில பிராமணர்களின் மனைவியரின் மீது கருணை கொண்டார்கள். அம்மனைவியர்கள் பிரபுவின் சிறந்த பக்தைகள். இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக் கொண்டு, கிருஷ்ணர் அவர்களை ஆசீர்வதிக்க விரும்பினார். கிருஷ்ணர் நண்பர்களிடம் கூறினார்:அன்பான நண்பர்களே, பக்கத்திலுள்ள பிராமணர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களிடம் உணவு கேளுங்கள். இப்போது அவர்கள் வேத முறைப்படியானஆங்கிரஸ எனும் யாகங்களை நடத்துவதில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்தப் பிராமணர்கள் வேதப் பண்களை இசைப்பதில் மும்முரமாக இருக்கிறார்கள். ஆனால், வேத அறிவின் நோக்கம் என்னை அறிவது என்பதை அவர்கள் மறந்திருக்கிறார்கள். என்று கிருஷ்ணர் தம் நண்பர்களுக்குக் கூறினார்.
கிருஷ்ணரின் கட்டளையை ஏற்று சிறுவர்கள் பிராமணர்களிடம் சென்று,கிருஷ்ணரும் பலராமரும் அருகாமையில் பசுக்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்களுடன் வந்திருக்கிறோம். அந்தணராகிய நீங்கள் தர்மங்களை அறிந்தவர்கள். எங்களுக்கு உணவு தரலாமென நீங்கள் எண்ணினால், நீங்கள் தரும் உணவை நாங்கள், கிருஷ்ணருடனும் பலராமருடனும் பகிர்ந்து உண்கிறோம். என்று; கூறினார்கள். அவர்களைப் பற்றி அவ்வந்தனர்கள் கவலைப் படாமல் சிறுவர்களிடம் பேச மறுத்து விட்டார்கள். பிராமணர்கள் தங்களிடம் பேச மாட்டார்கள் என்பதை அறிந்த சிறுவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன்; திரும்பிச் சென்று கிருஷ்ணரிடமும் பலராமருடனும் நடந்ததை விவரித்தார்கள்.
அவர்கள் கூறியதைக் கேட்ட கிருஷ்ணர் கூறினார்: “பிராமணர்கள் தானம் தர மறுத்ததை எண்ணி வருந்தக் கூடாது. ஏனெனில் யாசகம் அப்படிப்பட்டது. யாசிப்பவன் செல்லும் இடங்களில் எல்லாம் ஏதாவது நிச்சயமாகக் கிடைக்குமென்று எதிர்பார்க்கக் கூடாது. சில இடங்களில் ஏமாற்றமடைய நேரிடலாம். அதற்காக மனம் வருந்தக் கூடாது. நீங்கள் மீண்டும் அந்தணர்களின் இருப்பிடத்துக்குச் சென்று அந்தணர்களின் மனைவியரைச் சந்தித்து, அவர்களிடம் என் பெயரையும் பலராமரின் பெயரையும் சொல்லி உணவு கேளுங்கள். உங்களுக்கு வேண்டிய அளவு உணவை அவர்கள் நிச்சயமாகத் தருவார்கள்.” என்று கிருஷ்ணர் கூறினார்.
கிருஷ்ணரின் கட்டளைப்படி சிறுவர்கள் உடனே அந்தணர்களின் மனைவியரிடம் சென்றார்கள். அவர்கள் தத்தம் வீடுகளில் இருந்தார்கள். சிறுவர்கள் அவர்களுக்கு வணக்கம் தெரிவித்துக் கூறினார்கள்:அன்பான அன்னையரே, கிருஷ்ணரும் பலராமரும் அருகாமையில் பசுக்களுடன் வந்திருக்கிறார்கள். அவர்களின் கட்டளைப்படி நாங்கள் உங்களிடம் வந்திருக்கிறோம். நாங்கள் எல்லோரும் மிகவும் பசியாக இருக்கிறோம்.
எனவே, உணவை வேண்டி உங்களிடம் வந்திருக்கிறோம். கிருஷ்ணரும், பலராமரும் நாங்களும் உண்பதற்கு ஏதாவது உணவு தாருங்கள். என்று கூறினார்கள். இதைக் கேட்ட அந்தண மனைவியர், கிருஷ்ணரையும் பலராமரையும் பற்றிக் கவலைப் பட்டார்கள். உடனே அவர்கள் பல பாத்திரங்களில் நேர்த்தியான உணவு வகைகளையும், யாகத்திற்காகத் தயாரிக்கப்பட்ட சுவையான உணவு வகைகளையும் எடுத்துக் கொண்டு கிருஷ்ணரையும் பலராமரையும் சந்திப்பதற்கு சென்றார்கள். கிருஷ்ணர் அவர்களைச் சந்தித்து, அவர்கள் அன்புடன் கொண்டுவந்த உணவுகளை ஏற்று, அவர்களுக்கு தன் நன்றியைத் தெரிவித்தபின் அந்தணர்களின் மனைவிமார் தங்களது வீடுகளுக்கு திரும்பிச் சென்றார்கள்.
எப்போதும் ஆனந்த நிலையிலிருக்கும் ஸ்ரீ கோவிந்தன், சாதாரணக் குழந்தையாக வந்து தன் லீலைகளைக் காட்டி, அந்தணர்களின் மனைவியர் கொடுத்த உணவை உண்டு மகிழ்ந்தார். கிருஷ்ணரிடமிருந்து மனைவியர் திரும்பிய பின், யாகங்களை நிறைவேற்றிய அந்தணர்கள் முழுமுதற் கடவுளுக்கு உணவளிக்க மறுத்த குற்றத்திற்காக மனம் வருந்தி, தமது தவறை உணர்ந்து கொண்டார்கள்.
அந்தப் பிராமணர்கள் கூறினார்கள்: “கிருஷ்ணரையும் பலராமரையும் பற்றி அந்த ஆயர் சிறுவர்கள் நமக்கு நினைவூட்டியும், அவர்களை நாம் அசட்டை செய்து விட்டோம். நமது நன்மைக்காக, நம்மிடம் கருணை கூர்ந்து முழுமுதற் கடவுள் தம் நண்பர்களின் மூலம் நம்மிடம் உணவு கேட்டு அணுப்பினார். இல்லாவிடில் அவர் அவர்களை அனுப்பி இருக்கத் தேவையில்லை. அவர் நினைத்த மாத்தித்தில் அவர்களின் பசியைத் தீர்த்திருக்க முடியும். ஆனால், நம்மைப் போல் குறுகிய நோக்கில்லாத நம் மனைவியர் கிருஷ்ணருக்கு புனிதமான பக்தித் தொண்டாற்றி இருப்பதால் நம்மைவிட உயர்ந்த நிலையிலிருக்கிறார்கள் என்பதை எண்ணி நாம் பெருமை அடைகிறோம். எனவே, நாமும் இப்போது அவரது பாத கமலங்களில் பணிவோமாக.” என்று அந்தப் பிராமணர்கள் கூறினார்கள். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவருக்கு அன்புடன் உணவளித்த அந்தணர்களின் மனைவியருக்கு முக்தி அளித்தார்.
ஒரு நாள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் பலராமரும் மற்றும் கோபாலச் சிறுவர்களும் விருந்தாவனத்தின் காட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பிரலம்பாசுரன் என்ற பெயருடைய அரக்கன் அவர்களிடையே புகுந்து பலராமரையும் கிருஷ்ணரையும் கொல்ல விளைந்தான். கிருஷ்ணர் அப்போது ஆயர்குலச் சிறுவனாக விளையாடிக் கொண்டிருந்தார் என்றாலும், முழுமுதற் கடவுளாகிய அவர் முக் காலங்களையும் உணர்ந்தவர் அல்லவா? எனவே, பிரலம்பாசுரன் அவர்களிடையே வந்து புகுந்ததும் அவனை எப்படிக் கொல்வதென்று முடிவெடுத்தார். வெளிப்படையாக, ஒரு நண்பனைப் போல் வரவேற்று,அன்பான நண்பனே, எங்களின் விளையாட்டில் கலந்து கொள்ள நீயும் வந்திருப்பது நல்லதாயிற்று என்று கூறி, நண்பர்களை அழைத்து,இப்போது நாம் ஜோடி ஜோடியாக விளையாடலாம், ஒருவருக்கொருவர் சவால் விடலாம் என்று கூறினார்.
சிறுவர்கள் ஒன்று கூடி சிலர் கிருஷ்ணரின் பக்கமும், சிலர் பலராமரின் பக்கமும் சேர்ந்து கொண்டார்கள். எதிர்க் கட்சிகள் ஜோடி ஜோடியாக யுத்தம் செய்ய வேண்டும். வென்றவர்களைத் தோற்றவர்கள் முதுகில் சுமக்க வேண்டும் என்பது நிபந்தனை. விளையாடியபடியே அவர்கள் பசுக்களையும் கவனித்துக் கொண்டார்கள். இவ்வாறு அவர்கள் பாண்டீர வனம் எனும் காட்டினூடே சென்றனர். ஸ்ரீ தாமனும் விருஷபனும் இருந்த பலராமனின் கட்சி வெற்றி பெற்றது. கிருஷ்ணரின் கட்சி அவர்களை சுமந்து கொண்டு பாண்டீர வனத்தில் நடக்க வேண்டியதாயிற்று. கிருஷ்ணர், ஸ்ரீ தாமனையும் பத்ரசேனர் விருஷபனையும் அங்கு ஆயர்குலச் சிறுவனின் தோற்றத்தில் வந்திருந்த பிரலம்பாசுரன் பலராமரையும் முதுகில் சுமக்க வேண்டியதாயிற்று.
பிரலம்பாசுரன் அசுரர்களுள் மிகப் பெரியவன். அங்கிருந்த ஆயர்குலச் சிறுவர்களுள் கிருஷ்ணர் மிகுந்த பலசாலியென்பதை அவன் யூகித்திருந்தான். கிருஷ்ணரின் அருகில் இருக்க விரும்பாமல் பிரலம்பாசுரன், பலராமரை வெகு தூரம் தூக்கிச் சென்றான். அந்த அசுரன் பலத்திலும் சக்தியிலும் மிகுந்தவன். ஆனால், ஒரு மலைக் குகைக்குச் சமமான பலராமரை அவன் தூக்கிச் சென்றான். எனவே அவன் களைப்புற்று பாரத்தைச் சுமக்க முடியாமல் போனதால் அவனது உருவம் மேக மண்டலம் வரை விரிந்து, கண்கள் அனலெனப் பளிச்சிட கூரிய பற்கள் வெளிப்பட அவன் தோன்றியதை பலராமர் கவனித்தார்.
அசுரனின் தோற்றத்தைக் கண்டு பலராமர் ஆச்சரியப் பட்டார். தன்னை அந்த அசுரன், தன் நண்பர்களிடமிருந்து தூரமாக எடுத்துச் சென்று கொல்ல நினைக்கிறான் என்பதை அறிந்தார். உடனே அவர், இந்திரன் தன் வஜ்ராயுதத்தால் ஒரு மலையைத் தாக்குவது போல் அசுரனின் தலையில் தன் முஷ்டியால் ஓங்கித் தாக்கினார். பலராமரின் தாக்குதலைத் தாங்க மாட்டாமல், தலை நசுக்கப்பட்ட பாம்பைப் போல், அசுரன் கீழே விழுந்து இறந்தான். அவனின் வாயிலிருந்து இரத்தம் கொட்டியது. சிறுவர்களெல்லாம் அந்த இடத்துக்கு விரைந்தார்கள். கோரமான காட்சியைக் கண்டதும் பலராமருக்குசபாஷ் என்று கூறிப் பாராட்டினார்கள். தேவர்கள் மனமுவந்து பலராமர் மீது பூக்களைத் தூவி, ஆசி வழங்கி, பிரலம்பாசுரனைக் கொன்றதற்காகப் பாராட்டினார்கள்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் காலிங்கன் மீது நடனமாடிவிட்டு யமுனை நதியில் இருந்து வெளி வந்தபோது இரவாகி விட்டதால் விருந்தாவன வாசிகளும், பசுக்களும், கன்றுகளும் மிகவும் களைப்படைந்து, யமுனை நதிக் கரையிலலேயே ஓய்வெடுத்துக் கொள்வதென்று தீர்மானித்தார்கள். இவ்வாறு அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, நள்ளிரவில் திடீரென்று காட்டில் நெருப்புப் பற்றிக் கொண்டது. விரைவில் விருந்தாவன வாசிகள் எல்லோரும் நெருப்புக்கு இரையாகி விடக்கூடுமென்ற அச்சம் ஏற்பட்டது.
நெருப்பின் உஷ்ணம் அவர்களைத் தகிக்கத் தொடங்கியதும் அவர்கள் முழுமுதற் கடவுளான கிருஷ்ணரிடம், அப்போது அவர் ஒரு குழந்தையாக விளையாடிக் கொண்டிருந்த போதும், சரணடைந்தார்கள். அவரிடம் அவர்கள் கூறினார்கள் அன்பான கிருஷ்ணா, முழுமுதற் கடவுளானவரே, பலத்தின் சிகரமான பலராமரே, கோரமான இந்த நெருப்பு எல்லாவற்றையும் அழிக்கக் கூடியது. அதிலிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள். உங்களைத் தவிர எங்களுக்கு வேறு புகலிடம் இல்லை. இந்த நாசகாரத் தீ எங்களை எல்லாம் விழுங்கி விடும். இவ்வாறு அவர்கள் கிருஷ்ணரின் பாதகமலங்களைத் தவிர வேறு புகலிடம் இல்லையென்று கூறி, அவரிடம் பிரார்த்தித்தார்கள்.
தம் ஊர்வாசிகளிடம் மிகுந்த கருணை கொண்ட கிருஷ்ணர், உடனே காட்டுத் தீ முழுவதையும் விழுங்கி, அவர்களைக் காப்பாற்றினார். இது கிருஷ்ணரால் முடியாத காரியமல்ல. ஏனெனில் அவர் வரம்பற்ற சக்தியை உடையவர். தாம் விரும்பிய எதையும் செய்ய வல்லவர். நாசகாரத் தீயை அணைத்த பின்னர் கிருஷ்ணர், நண்பர்களும், உறவினர்களும், பசுக்களும், எருதுகளும் புடைசூழ்ந்து அவரின் புகழ் பாடிவர, எப்போதும் பசுக்களால் நிறைந்திருந்த விருந்தாவனத்தை மீண்டும் அடைந்தார்.
யமுனை நதியின் அடியில் ஒரு பெரிய ஏரி இருந்தது. அந்த ஏரியில் காளிங்கன் என்ற மிகப் பெரிய விஷப் பாம்பு ஒன்று வசித்து வந்தது. அதன் விஷம் காரணமாக அந்தப் பகுதி முழுவதும் தூய்மை கெட்டு, நச்சுக் கலந்திருந்தது. அங்கு ஒரு பறவை பறந்தால் அது உடனே மடிந்து கீழே விழும். யமுனையில் இருந்து வெளிவந்த நச்சு வாயுவின் பாதிப்பால் யமுனைக் கரையிலிருந்த மரங்களும் புற்களும் பட்டுப் போய்விட்டது. அப்பெரிய பாம்பின் விஷத்தால் ஏற்பட்ட கேட்டைக் கிருஷ்ணர் கவனித்தார். விருந்தாவனத்தை அடுத்து ஓடிய நதி முழுவதும் உயிருக்கு அபாயம் விளைவிக்கக் கூடியதாக இருந்தது.
உலகில் கேடு விளைவிக்கும் சக்திகளைக் களைவதற்கென்றே அவதரித்துள்ள ஸ்ரீகிருஷ்ணர், யமுனை நதியின் கரையிலிருந்த ஒரு பெரிய கடம்ப மரத்தின் மீது ஏறினார். கடம்பம் எனும் வட்டமான மஞ்சள் நிற மலர், பொதுவாக விருந்தாவனப் பகுதியில் மட்டும் காணப்படும் ஒரு மலர் வகை. மரத்தின் உச்சியில் ஏறியபின் அவர் தன் அரைக் கச்சையை இறுக்கிக் கொண்டு, மல்யுத்தம் செய்பவனைப் போல் கைகளை ஆட்டிக் கொண்டு நச்சு மிகுந்த அந்த ஏரியினுள் குதித்தார். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஏறிய அந்தக் கடம்ப மரம் ஒன்று மட்டுமே அப்பகுதியில் பட்டுப் போகாமல் தப்பியிருக்கிறது. இந்தியாவின் விருந்தாவனத்துக்குச் செல்பவர்கள் அந்த கடம்ப மரம் 5000 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் இருப்பதைக் காணலாம். ஸ்ரீகிருஷ்ணரின் கால் பட்டதும் மரம் உடனே உயிர் பெற்றதென்று சில உரையாசிரியர்கள் கூறுகிறார்கள். சில புராணங்களில், இம்மரத்தில் கிருஷ்ணர் வருங்காலத்தில் ஏறுவாரென்று அறிந்திருந்த கருடர், அது பட்டுப் போகாமல் இருக்க அதன் மீது அமிர்தத்தைத் தெளித்திருந்தார் என்று கூறுகின்றன.
கிருஷ்ணர் நதியில் குதித்தபோது நீர் கரை புரண்டு ஓடியது. அதனால் எழுந்த பேரொலி, கரு நாகமான காளிங்கனின் காதில் விழுந்தது. தன் இருப்பிடத்தை யாரோ தாக்க வந்திருக்கிறார் என்பதை அது புரிந்து கொண்டு, கிருஷ்ணரின் முன் வந்தது. அழகிய முகத்தில் புன்னகையுடன், அவர் மிகுந்த பலத்துடன் யமுனை நதியில் விளையாடிக் கொண்டிருந்தார். அவரைக் கண்டதும் அதற்கு கோபம் வந்தது. தன் பலம் மிக்க உடம்பின் சுருள்களுக்கிடையே காளிங்கன், கிருஷ்ணரைப் பிடித்து அழுத்தியது. பாம்பின் பயங்கரமான பிடியில் தப்ப முடியாத வகையில் கிருஷ்ணர் அகப்பட்டுக் கொண்டிருந்ததை கண்டதும், அவரிடம் அன்பு கொண்டிருந்த ஆயர் குலச் சிறுவர்களும் மற்ற விருந்தாவன வாசிகளும் பயத்தால் அதிர்ந்து போனார்கள்.
அவர்களால் நதிக்கரையில் நின்று அழமுடிந்ததே தவிர, கிருஷ்ணருக்கு உதவும் வகையில் எதுவும் செய்ய முடியவில்லை. அன்னை யசோதை வந்தபோது, அவள் யமுனையில் குதிக்க விரும்பினாள். மற்றவர்கள் அவளைத் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அவள் மூர்ச்சையடைந்தாள். தம் உயிரைக் கிருஷ்ணருக்கு அர்ப்பணித்திருந்த நந்தகோபரும் மற்றவர்களும் நீரில் குதிக்க எண்ணினார்கள். ஆனால் பிரபு பலராமர் அவர்களைத் தடுத்தார். எவ்வித அபாயமும் இல்லையென்பது பலராமருக்குத் தெரியும்.
இரண்டு மணி நேரங்களுக்குக் கிருஷ்ணர் காளிங்கனின் பிடியில் ஒரு சாதாரணக் குழந்தையைப் போல் இருந்தார். ஆனால் தன் தாயும், தந்தையும் கோபியரும், சிறுவர்களும், பசுக்களும் கன்றுகளும் மற்ற கோகுல வாசிகளும் ~மரணத்தின்| தருவாயில் காப்பவரின்றி இருந்ததைக் கண்டதும் கிருஷ்ணர், தம்மை உடனே விடுவித்துக் கொண்டார். அவர் தம் உடலை விரிவடையச் செய்தார். பாம்பு அவரைக் கட்டிப் பிடிக்க சிரமப்பட்டது. அதனால் அதன் பிடி தளர்ந்து, கிருஷ்ணராகிய முழுமுதற் கடவுளைத் தன் பிடியிலிருந்து விடுவித்தது.
காளிங்கன் மிகுந்த கோபமடைந்து, தனது பெரிய படங்களை விரித்தது. மூக்குகளில் இருந்து நச்சுக் கலந்த மூச்சை வெளியிட்டது. அதன் கண்கள் நெருப்பாய் தகித்தது. வாயிலிருந்து அனல் வீசியது. கிருஷ்ணரைப் பார்த்தபடி அது சிறிது நேரம் அசையாமல் நின்றது. பிளவுபட்ட நாக்குகளால் உதடுகளை நக்கியபடி கண்களில் விஷம் பொங்க அவரைப் பார்த்தது. பாம்பின் மீது கருடன் பாய்வதுபோல, கிருஷ்ணர் அதன்மீது பாய்ந்தார். காளிங்கன் தன் விஷப் பற்களால் கிருஷ்ணரைக் கடிக்க முயன்றான். ஆனால் கிருஷ்ணர், அதன் தலைகளை அழுத்திப் பிடித்து அவற்றின் மேல் ஏறினார். பாம்பின் தலையில் இருந்த ரத்தினங்களின் ஒளியினால் பிரபுவின் பாதங்கள் சிவந்து காணப்பட்டன. பின்பு, கலைஞர்களுக்கு எல்லாம் ஆதி கலைஞரான ஸ்ரீகிருஷ்ணர், விஷப் பாம்பான காளிங்கனின் மீது நடனமாடினார். இதைக் கண்ட வாணவர்கள், பூச்சொரிந்து, மத்தளங்கள் முழக்கி, குழல்களை இசைத்து, துதிகளையும் பாடல்களையும் பாடினார்கள். இவ்வாறாக வானுலக வாசிகளான கந்தவர்கள், சித்தர்கள் மற்றும் தேவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.
கிருஷ்ணர் தன் தலைகளில் நடனமாடியபோது, காளிங்கன் அவரைத் தன் மற்ற தலைகளால் கீழே தள்ள முயற்சித்தான். காளிங்கனுக்கு நூறு தலைகள் இருந்தன. ஆனால் கிருஷ்ணர் அவற்றை எல்லாம் கட்டுப்படுத்தி, தன் காலால் அதன் தலைகளில் அடித்தபோது, காளிங்கனால் அந்த அடிகளைத் தாங்கி கொள்ள முடியவில்லை. அது உயிருக்குப் போராடும் நிலை ஏற்பட்டு, தன்னில் இருந்த விஷத்தைக் கக்கியபோது அதன் பாவங்கள் குறையத் தொடங்கின. பன்பு அது, விஷத்துக்குப் பதிலாக இரத்தத்தை கக்கத் தொடங்கியது.
அப்போது, காளிங்கனின் மனைவிகளான நாகபத்தினிகள், கிருஷ்ணர் தம் கணவனை உதைத்து அடக்குவதைக் கண்டனர். அவர்கள் கிருஷ்ணரைச் சரண் அடைந்து, தம் கணவனான காளிங்கனை தண்டனையில் இருந்து விடுவிக்குமாறு பிரார்த்தித்தனர். கிருஷ்ணர் அவர்களின் பிரார்த்தனையை ஏற்று, காளிங்கனை நோக்கி, உடனே அந்த இடத்தை விட்டு தாமதிக்காமல்; மனைவி பிள்ளைகளுடன் சமுத்திரத்திற்குப் போய்விடுமாறும், யமுனையின் நீரை அசுத்தப் படுத்த வேண்டாமெனவும், பசுக்களும் சிறுவர்களும் அந்நீரைப் பருகுவதில் தடை ஏற்படக்கூடாதெனவும் கட்டளை இட்டார். காளிங்கனும் அவனது மனைவி பிள்ளைகளும் அந்த இடத்தை விட்டு வேறு இடத்துக்குச் சென்றனர். அப்போது பகவான் ஸ்ரீகிருஷ்ணர் நானும் என் நண்பர்களும் நீராடிய காளிங்க ஏரியில் ஒருவர் நீராடினாலும், ஒரு நாள் உபவாசமிருந்து அந்நீரால் மூதாதையருக்கு சிரார்த்தம் கொடுத்தாலும் அவரின் பாவங்கள் எல்லாம் நீங்கும் என்று கூறினார்.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரினதும் பலராமரினதும் நண்பர்களான, ஸ்ரீ தாமா, ஸூபலா, ஸ்தோக கிருஷ்ணா ஆகியோர் கிருஷ்ணரையும் பலராமரையும் பார்த்துக் கூறினார்கள்:அன்பான பலராமரே, நீர் மிகுந்த சக்தி வாய்ந்தவர். உமது கைகள் மிகுந்த பலமுடையவை. அன்பான கிருஷ்ணா, தொல்லை தரும் பல வகையான அரக்கர்களைக் கொல்வதில் நீர் வல்லவர். விருந்தாவனத்திற்கு அருகில் தாளவனம் எனும் ஒரு பெரிய காடு உள்ளது. அந்தக் காட்டில் பல ஈச்ச மரங்கள் உள்ளன. அவற்றில் பழங்கள் மிகுதியாக உள்ளன. ஆனால் பெரிய அரக்கனான தேனுகாசுரன் அங்கு இருப்பதால் அங்கு போவது மிகவும் கடினம். அந்த அசுரனும் அவனது நண்பர்களும் கழுதையின் உருவத்தில் அங்கு இருக்கிறார்கள். அதனால் பழங்களை பறிக்க யாரும் அந்த மரங்களை அணுக முடியாது. உங்களைத் தவிர வேறுயாரும் பயமின்றி அங்கு செல்ல முடியாது. அந்த அசுரர்களைக் கொல்லக் கூடியவர்கள் உங்களைத் தவிர யாரும் இல்லை. அங்கு மிருகங்கள் கூடப் போவதில்லை. பறவைகள் அங்கு உறங்குவதில்லை. அவையெல்லாம் அங்கிருந்து சென்று விட்டன. அந்தப் பழங்களை பறித்து உண்டு அவற்றின் சுவையை அனுபவித்தவர்கள் யாரும் இல்லை. நாம் எல்லோரும் அங்கு சென்று பழங்களை உண்டு களிக்கலாம். என்று கிருஷ்ணரினதும் பலராமரினதும் நண்பர்கள் கூறினார்கள்.
தம் நெருங்கிய நண்பர்கள் புன்னகையுடன் இவ்வாறு வேண்டுகோள் விடுத்ததைக் கேட்ட பலராமரும் கிருஷ்ணரும் அவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக, எல்லோரும் காட்டை நோக்கிப் புறப்பட்டர்கள். தாளவனத்தில் நுளைந்ததும் பலராமர் யானையின் பலம் கொண்ட தம் கைகளால் மரங்களைப் பிடித்து உலுக்கினார். அவர் மரங்களை அசைத்த போது பழுத்த பழங்கள் கீழே விழுந்தன. அங்கு கழுதையின் உருவத்தில் இருந்த தேனுகாசுரன், பழங்கள் விழுந்த சத்தத்தைக் கேட்டு வெகு வேகமாக அங்கு வந்தான். அவன் அங்கு வந்த வேகத்தில் ஏற்பட்ட அதிர்வால் நிலம் முழுவதும் பூகம்பம் ஏற்பட்டது போல் நடுங்கி, மரங்களெல்லாம் ஆட்டம் கண்டன.
அசுரன் முதலில் பலராமரின் முன்பு வந்து அவரது மார்பில் தன் பின் கால்கள் படும்படியாக உதைத்தான். முதலில் பலராமர் எதுவும் கூறவில்லை. கோபம் கொண்ட அசுரன் மிகுந்த பலம் கொண்டு மேலும் வேகத்தோடு மோதினான். பலராமர் தன் ஒரு கையால் அவனின் பின் கால்களைப் பிடித்து, மூன்று முறை சுழற்றி, அக்கழுதையை ஈச்ச மர உச்சியின் மேல் எறிந்த போது அவன் உயிரிழந்தான். அவனின் பாரத்தைத் தாங்க முடியாமல் அந்த மரம் மற்ற மரங்களின் மேல் சரிந்து பல மரங்கள் கீழே விழுந்தன. கிரகங்களை எல்லாம் தம் கோடிக் கணக்கான தலைகளில் தாங்கி நிற்கும் பலசாலியான அனந்த சேஷன் எனப்படும் முழுமுதற் கடவுளாகிய பலராமர் இவ்வாறு பலப் பிரதர்சனம் செய்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. இரண்டு நூல் சரடுகள் நெய்யப்பட்ட துணியைத் தாங்கி நிற்பது போல் பிரபஞ்சத் தோற்றம் முழுவதையும் அவர் தாங்கி நிற்கிறார்.
அசுரன் மரங்களில் வீசி எறியப்பட்ட பின்பு, தேனுகாசுரனின் நண்பர்கள் ஒன்று கூடி பலராமரையும் கிருஷ்ணரையும் மிகுந்த பலத்துடன் தாக்கினார்கள். ஆனால் பலராமரும் கிருஷ்ணரும் முன்பு போலவே கழுதைகளின் பின் கால்களைப் பிடித்து சுழற்றி ஈச்ச மரங்களின் மேல் எறிந்து அவற்றைக் கொன்றார்கள். கழுதைகளின் சடலங்கள் ஆங்காங்கே விழுந்து கிடந்தது வினோதமாக காட்சியளித்தது. பல நிறங்களிலான மேகங்கள் மரங்களில் தங்கியிருப்பது போல் தோன்றியது. இந்த மகத்தான சம்பவத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட தேவர்கள், மேல் நிலைக் கிரகங்களில் இருந்து கிருஷ்ணரின் மீதும் பலராமரின் மீதும் மலர் மாரி பொழிந்து துதி பாடினார்கள். துந்துபிகள் முழங்கின. தேனுகாசுரன் கொல்லப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு மக்கள் தாளவனத்துக்கு வந்து பழங்களைச் சேகரிக்கத் தொடங்கினார்கள். மிருகங்கள் பயமின்றி வந்து அங்கிருந்த நேர்த்தியான புல்லை மேய்ந்தன.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அகாசுரனை வதம் செய்ததும் தேவர்கள் சந்தோசத்தால் எழுப்பிய மங்களகரமான இனிய ஒலி அதிர்வுகள், உயர்நிலை கிரகங்களை எட்டியபோது, அவற்றைக் கேட்ட பிரம்மா, என்ன நடந்தது என்று பார்ப்பதற்காக கீழே இறங்கி வந்தார். அசுரன் கொல்லப்பட்டு கிடப்பதைக் கண்டு, முழுமுதற் கடவுளின் அசாதாரண மற்றும் மகிமை மிக்க லீலைகளைக் கண்டு வியந்தார். அகாசுர வதம் நடைபெற்ற போது கிருஷ்ணரும் அவருடைய நண்பர்களும் ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்களாக இருந்தனர்.
யமுனை நதிக்கரையில் கன்றுகள் புல் மேய, கிருஷ்ணரும் அவரது நண்பர்களும் மதிய உணவை உண்பதற்காக, கிருஷ்ணர் நடுவில் அமர, அவரைச் சுற்றி மற்றவர்கள் உட்கார்ந்தனர். அனைவரும் உணவு உண்பதற்கு ஆரம்பிக்கும் போது அருகாமையில் புல் மேய்ந்து கொண்டிருந்த கன்றுகள் புதிய புல்லைத் தேடி காட்டுக்குள் வெகு தூரம் சென்று விட்டன. அப்போது கிருஷ்ணர், தன் நண்பர்கள் சாப்பிடுவதை விட்டு விட்டு கன்றுகளைத் தேடப் போவதை விரும்பவில்லை. எனவே அவர், தன் நண்பர்களைத் தொடர்ந்து சாப்பிடும் படியாகவும் தான் கன்றுகளைத் தேடிப் போவதாகவும் கூறிச் சென்றார்.
அகாசுரன் கொல்லப்பட்ட நிகழ்ச்சியை தேவர்கள் பெரும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தபோது விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து பிறந்தவரான பிரம்மாவும் அந்த சம்பவத்தை பார்க்க வந்திருந் பிரம்மா, கிருஷ்ணரின் மகிமை மிக்க லீலைகளை மேலும் காணும் விருப்பத்துடன் கன்றுகள் எல்லாவற்றையும் திருடி வேறு இடத்துக்கு எடுத்துச் சென்று விட்டார். கிருஷ்ணர் எவ்வளவு தேடியும் கன்றுகளைக் கண்டு பிடிக்க முடியவல்லை. அவர் நீண்ட தூரம் சென்றதால் அவரது நண்பாகளுடனான தொடர்பும் இல்லாமல் போய்விட்டது. ஆனால் அவர் முழுமுதற் கடவுளான படியால் சிறுவர்களையும் கன்றுகளையும் பிரம்மா திருடி இருந்ததை அறிந்தார். பிரம்மா, சிறுவர்களையும் கன்றுகளையும் கொண்டு போய் விட்டதால், தான் மட்டும் எப்படி விருந்தாவனம் செல்வது? தாய்மார்கள் கவலைப் படுவார்களே என கிருஷ்ணர் நினைத்தார்.
தன் நண்பர்களின் தாய்மார்களை திருப்திப் படுத்துவதற்காகவும் முழுமுதற் கடவுளின் சக்தியை பிரம்மா உணரும்படி செய்வதற்காகவும் கிருஷ்ணர், உடனடியாகத் தன்னை இடைச் சிறுவர்களாகவும் கன்றுகளாகவும் தன்னை விரிவு படுத்திக்கொண்டார். அந்த சிறுவர்களது தோற்றம், நடை, உடை, பாவனை போன்று மாற்றிக் கொண்டார். இந்த விஷயங்கள் கிராம வாசிகளுக்கு தெரியாது. விருந்தாவனத்தை அடைந்த பிறகு, கன்றுகள் எல்லாம் தத்தம் கொட்டிலை அடைந்தன. சுpறுவர்களும் தத்தமது தாய்மார்களிடம் வீட்டிற்குச் சென்றார்கள். சிறுவர்கள் எல்லோரும் தாய், தந்தையருடன் வழக்கம் போலவே பழகினார்கள். அவர்களிடம் எந்தவித வேறுபாடுகளும் காண முடியவில்லை. ஒரு வருடமாக கிருஷ்ணர் இவ்வாறு கன்றுகளாகவும் ஆயர்குலச் சிறுவர்களாகவும் வியாபித்திருந்து மேய்ச்சல் நிலங்களுக்குச் சென்று வந்தார்
பிரம்மாவின் ஒரு கணம், நமது கணக்குப்படி ஒரு வருடம். பிரம்மா தனது ஒரு கணத்தின் பின், தாம் சிறுவர்களையும், கன்றுகளையும் திருடியதால் ஏற்பட்ட குழப்பத்தை வேடிக்கை பார்ப்பதற்காக திரும்பி வந்தார். தான் முதலில் கண்ட படியே கன்றுகளும், சிறுவர்களும் கிருஷ்ணரோடு விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார். உண்மையில் அவர், அவைகளை எடுத்துக் கொண்டு போய், தன் மந்திர சக்தியால் உறங்க வைத்திருந்தார். பிரம்மாவுக்கு இது பெரிய குழப்பமாக இருந்தது.
அங்கிருந்த பசுக்களும் கன்றுகளும் சிறுவர்களும் உண்மையானவை அல்ல என்பதை பிரம்மாவுக்கு உணர்த்துவதற்காக கிருஷ்ணர், அவற்றை நீல நிற மேனியோடு சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகியவற்றை நான்கு கைகளில் வைத்திருக்கும் விஷ்ணு வடிவங்களாக மாறுபடச் செய்தார். பிரம்மா, முழுமுதற்கடவுளின் அற்புதமான சக்தியைக் கண்டு வியந்தார். உடனேயே பிரம்மா தம் வாகனமான ஹம்ஸத்தில் இருந்து இறங்கி வந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திருவடிகளில் விழுந்து வணங்கி, தனது பிரார்த்தனையை செலுத்தி விட்டு கிருஷ்ணரை மூன்று முறை வலம் வந்து, பிரம்மலோகம் சென்றார்.
பிரம்மா சென்றவுடன் ஸ்ரீ கிருஷ்ணர், கன்றுகளும் சிறுவர்களும் மறைந்த அன்று எப்படி இருந்தாரோ, அதே தோற்றத்தை உடன் மேற்கொண்டார். யமுனை நதிக்கரையில் உணவருந்திக் கொண்டிருந்த அவரது நண்பர்களை, அவர் விட்டுச் சென்று சரியாக ஒரு வருடத்தின் பின்பு அங்கு வந்த போதிலும் அவர் ஒரு நிமிடத்தில் திரும்பி விட்டதாக கிருஷ்ணரது நண்பர்கள் நினைத்தார்கள். பின்பு அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள்.
உணவை முடித்து விட்டு கிருஷ்ணரும் நண்பர்களும் கன்றுகளுடன் தம் வீடுகளுக்கு திரும்பினார்கள். போகும் வழியில் அகாசுரன் பெரும் பாம்பின் வடிவில் இறந்து கிடந்ததைப் பார்த்து மகிழ்ந்தார்கள். கிருஷ்ணரின் மகிமைகளைப் பாடினார்கள். சிறுவர்கள், தாம் பயங்கரமான பாம்பின் வாயிலிருந்து தப்பியதை விருந்தாவன வாசிகள் அனைவருக்கும் கூறினார்கள். உண்மையில் அகாசுரனை கிருஷ்ணர் வதம் செய்த நிகழ்வு, பிரம்மா, சிறுவர்களையும் கன்றுகளையும் திருடியதால் ஒரு வருடத்திற்குப் பின்பே அனைவருக்கும் தெரிய வந்தது.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தம் தோழர்களுடன் பால்ய லீலைகளில் திளைத்திருந்த போது, அகாசுரன் என்ற அரக்கன் மிகவும் பொறுமை அற்று இருந்தான். கிருஷ்ணர் விளையாடியதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, அந்தச் சிறுவர்கள் எல்லோரையும் கொல்லும் எண்ணத்துடன், அவன் அவர்களின் முன்பு தோன்றினான். வானுலகத்தினர் எல்லோரும் பயப்படும் அளவிற்கு அவன் பயங்கரமான தோற்றம் உடையவனாக இருந்தான். அகாசுரன் என்ற அந்த அரக்கன் பூதகி மற்றும் பகாசுரனின் சகோதரன் ஆவான். கிருஷ்ணர், தன் சகோதரனையும் சகோதரியையும் கொன்றதற்கு பழி வாங்குவற்காக, கிருஷ்ணரையும் அவரது நண்பர்களையும் கன்றுகளையும் கொல்ல வேண்டுமென்று வந்தான். அவன் கம்சனின் நண்பனும் ஆவான்.
உடனே அசுரன், மஹிமா எனும் யோக சக்தியின் உதவியால் தன் உருவத்தை எட்டு மைல் அளவுக்குப் பெரிதாக்கிக் கொண்டு, மிகவும் பெரிய உடலை உடைய பாம்பின் வடிவத்தை எடுத்தான். அந்த அதிசய உடலை எடுத்தவுடன், தனது வாயை ஒரு பெரிய மலைக்குகையின் அளவிற்குத் திறந்தான். ஒரே சமயத்தில் கிருஷ்ணரையும் பலராமரையும் மற்றைய சிறுவர்களையும் சேர்த்து விழுங்கத் திட்டமிட்டான். மிப்பெரிய பாம்பின் உருவத்தை மேற்கொண்டிருந்த அசுரன், தன் உதடுகளை தரையில் இருந்து ஆகாயம் வரை விரியும் படியாக வாயைப் பிளந்தான். அவனின் கீழ் உதடு தரையையும் மேல் உதடு வானத்தையும் தொட்டன. வாய் ஒரு பெரிய மலைக் குகையைப் போலவும் பற்கள் மலை உச்சியைப் போலவும், நாக்கு பெரியதொரு ரத வீதியைப் போலவும் காணப்பட்டன. புயல்காற்றைப் போல மூச்சு விட்டுக் கொண்டிருந்தான். கண்கள் நெருப்பைக் கக்கின. சிறுவர்கள், முதலில் அந்த அசுரனை பெரியதொரு சிலை என்று நினைத்தனர். நன்றாக கவனித்த போது, ஒரு பெரிய பாம்பு வாயைப் பிளந்து கொண்டு படுத்திருக்கிறது என முடிவெடுத்தார்கள்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தங்களை எப்பொழுதும் காப்பாற்றுவார் என்ற தைரியத்தில் கிருஷ்ணரின் நண்பர்கள் விளையாட்டாக அகாசுரன் என்னும் பாம்பு அரக்கனின் வாயில் பயமின்றி நுழைந்தனர். பின்னர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அசுரனைக் கொன்று கோபாலச் சிறுவர்களையும் கன்றுகளையும் காப்பாற்று வதற்காக தானும் அசுரனின் வாயில் புகுந்தார். அசுரன், கிருஷ்ணரையும் அவரது நண்பர்களையும் நொறுக்க முயற்சித்த போது, கிருஷ்ணர் உடனே அரக்கனின் தொண்டைக்குள் தன் உருவத்தைப் பெரிதாக்கினார்.அசுரன் மலை அளவிலான உடலைக் கொண்டிருந்த போதிலும் பெரிதாகி வரும் கிருஷ்னரின் உருவத்தால் அவனுக்கு மூச்சு அடைத்தது. கண்கள் பிதுங்கின. உயிர் மூச்சு எவ்வழியிலும் வெளி வரமுடியாமல் போனதால் அவனது தலை வெடித்து உயிர் மூச்சு வெளிப்பட்டது. அசுரன் இறந்து வீழ்ந்தான். ஸ்ரீ கிருஷ்ணர் தமது திவ்யமான பார்வையை செலுத்தியதும் அவரது நண்பர்களும் கன்றுகளும் உணர்வு பெற்று, அரக்கனின் வாயில் இருந்து வெளி வந்தனர். தேவர்கள் பேருவகை பூத்து முழுமுதற் கடவுளாகிய கிருஷ்ணரின் மேல் மலர்மாரி பொழிந்து அவரை வணங்கினார்கள். வானுலக வாசிகள் மகிழ்ச்சியால் நடனமாடினார்கள். பிராமணர்கள் வேதம் ஓதினார்கள்.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
ஆயர் குலச் சிறுவர்கள் எல்லோரும் தினமும் கன்றுகளுக்குத் தண்ணீர் காட்டுவதற்காக அவைகளை யமுனை நதிக்கரைக்கு அழைத்துச் செல்வது வழக்கம். கன்றுகள் யமுனை நதியில் தண்ணீர் குடிக்கும்போது சிறுவர்களும் நீர் அருந்துவார்கள். அவ்வாறு ஒரு நாள் நீர் அருந்திவிட்டு நதிக்கரையில் அவர்கள் அமர்ந்திருந்தபோது, உருவத்தில் வாத்தைப் போலவும், ஆனால் மலைபோல் பெரியதுமான ஒரு மிருகத்தைக் கண்டனர். அதன் அசாதாரன வடிவத்தைக் கண்டு அவர்கள் பயந்து போனார்கள். கம்சனின் நண்பனான அம்மிருகத்தின் பெயர் பகாசுரன் ஆகும்.
அவன் திடீரென்று கிருஷ்ணரைத் தன் கூரிய அலகுகளினால் தாக்கி, வேகமாக விழுங்கினான். கிருஷ்ணரை அரக்கன் விழுங்குவதைக் கண்ட பலராமரும் அவரது தோழர்களும் என்ன நடக்கப் போகிறதோ என்று பயந்துவிட்டார்கள். ஆனால் பகாசுர அரக்கன் ஸ்ரீ கிருஷ்ணரை விழுங்கியபோது தொண்டையில் ஏதோ எரிவது போல் உணர்ந்தான். பகவான் ஸ்ரீ கிருஷ்ஷரின் ஒளிமிகு சக்தியினாலேயே அரக்கனின் தொண்டையில் அவ்வாறு எரிச்சல் ஏற்பட்டது.
உடனே அரக்கன் கிருஷ்ணரை வெளியில் உமிழ்ந்துவிட்டு, தன் கூரிய அலகுகளால் அவரைக் குத்திக் கொல்ல முயன்றான். அப்போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அந்த மாபெரும் பறவையின் அலகுகளைப் பிடித்து, ஒரு குழந்தை புல்லைப் பிளப்பதுபோல், எளிதாக, தன் கோபால நண்பர்களின் முன்னிலையில் அரக்கனின் வாயைப் பிளந்தார். ஆகாயத்தில் இருந்து சுவர்க்க வாசிகளான கந்தர்வர்கள், சாமேலி போன்ற நறுமணம் மிக்க மலர்களைத் தூவி, குழந்தை கிருஷ்ணரைப் பாராட்டினார்கள். மலர் மாரியுடன் தாரைகளும் தப்பட்டைகளும், சங்கங்களும் ஒலித்தன.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
ஒரு நாள் ஒரு பழக்காரி நந்தகோபரின் வாயிலுக்கு வந்தாள். “பழம் வேண்டியவர்கள் வந்து வாங்கிக் கொள்ளலாம்” என்று அவள் கூவியதைக் கேட்ட குழந்தை கிருஷ்ணர், சிறிது தானியத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பழம் வாங்க சென்றார். அக்காலத்தில், கொடுக்கல் வாங்கல் பண்டமாற்று முறையில் நடைபெற்றது. அவரின் தாய் தந்தையர் அவ்வாறு பண்டமாற்றம் செய்ததைக் கவனித்திருந்து அவரும் அப்படியே செய்ய முற்பட்டார். ஆனால் அவரின் கைகள் மிகவும் சிறியவையாக இருந்ததால், தானியங்கள் கீழே சிதறின. இதைக் கண்ட பழக்காரி, குழந்தை கிருஷ்ணரின் அபார அழகில் மனதைப் பறிகொடுத்து, அவர் கையிலிருந்த தானியத்தின் அளவைப் பற்றிக் கவலைப்படாமல் பழங்களைக் கை நிறையக் குழந்தை கிருஷ்ணருக்கு கொடுத்தாள்.
அதே சமயத்தில் அப்பழக்காரியின் கூடை முழுவதும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அருளால், ஆபரணங்களாலும், பொன்னாலும் மணியாலும் நிறைந்து விட்டது. உண்மையான அன்பும் பாசமும் நிறைந்த, உள்ளத்தால் கொடுக்கப்பட்ட பழங்களுக்காக பகவான் அவளுக்கு செல்வம் கொடுத்து அனுக்கிரகித்தார்.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
வெண்ணெய் திருடி, தயிர் பானையை உடைத்த கண்ணனை, தாய் யசோதை உரலில் கட்டினாள். மகனைக் கட்டிப் போட்டுவிட்டு அன்னை யசோதை வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள். அவ்வாறு மர உரலில் கட்டப்பட்டிருந்த கிருஷ்ணர், தன் முன் இரண்டு அர்ஜுன மரங்கள் நிற்பதைக் கவனித்தார். இந்த இரண்டு அர்ஜுன மரங்களும் பிரபலமான தேவர்களான நளகூவரனும் மணிக்கிரீவனும், தேவர்களின் பொக்கிஷதாரனும் சிவபெருமானின் பெரும் பக்தனுமான குவேரனின் இரு மகன்கள் ஆவார்கள்.
குவேரனின் இவ்விரு மைந்தர்களும் மது, மாது விடயங்களில் நாடியிருந்தனர். ஒரு முறை நாரதர் முன் இவ்விருவரும் இழி நிலையிலிருந்ததால் அவர்கள் இருவர் மீதும் கருணை கொண்டு, அவர்கள் நற்கதி அடைய வேண்டும் என்பதற்காக அவ்விருவரும் மரங்களாக, தேவர்களின் காலக் கணக்கின்படி நூறு ஆண்டுகளுக்கு இருந்து, பின்னர் முழுமுதற் கடவுளை நேருக்கு நேர் கண்டு நற்பேறு அடைய வேண்டுமென்று நாரதரால் சபிக்கப்பட்டிருந்தார்கள்.
அந்த இரு தேவர்களும் இரட்டை அர்ஜுன மரங்கள் என்று பெயர் பெற்ற மரங்களாக மாறி, நந்த மகாராஜாவின் அரண்மனை முற்றத்தில் தோன்றி வளாந்து, ஸ்ரீ கிருஷ்ணரை நேரில் காணும் நல் வாய்ப்பைப் பெற்றார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் அவ்விரு மரங்களின் இடை வெளியில் புகுந்து சென்றபோது, மரங்களினிடையே உரல் சிக்கிக் கொண்டதும் அதை பலமாக இழுத்தார். அப்போது மரங்கள் வேரோடு சாய்ந்ததும் அவைகளில் இருந்து நளகூவரன், மணிக்கிரீவன் என்னும் அழகான தேவர்கள் தோன்றினார்கள். அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரை பலமுறை வலம் வந்து, சிரம் தாழ்த்தி வணங்கி துதித்து மறைந்தனர்.
சத்தத்தைக் கேட்டு நந்த மகாராஜாவும் கோகுலவாசிகளும் ஓடி வந்தனர். கிருஷ்ணர் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், தேவர்கள் தோன்றியதை கூறினார்கள். நந்தகோபர், கிருஷ்ணரை உரலில் இருந்து விடுவித்து மார்புடன் அணைத்துக் கொண்டார்.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
பலராமரும் கிருஷ்ணரும் குழந்தைகளாக இருந்தபோது, ஒருநாள் தம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, எல்லாச் சிறுவர்களும் ஒன்றுகூடி அன்னை யசோதையிடம் வந்து, கிருஷ்ணர் மண்ணைத் திண்றுவிட்டதாக புகார் செய்தனர். இதைக்கேட்ட யசோதை, கிருஷ்ணரது வாயைத் திறக்குமாறு கூறினாள். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், அவரின் அன்னையான யசோதை அவ்வாறு பணித்தவுடன், அவர் ஒரு சாதாரண சிறுவன் செய்வதுபோல் தன் திருவாயைத் திறந்தார்.
அப்போது அன்னை யசோதை, தன் மகனின் திருவாயினுள் படைப்பின் முழுச்சிறப்பையும் கண்டாள். எல்லா திசைகளிலும் விரிந்திருந்த விண்வெளி, மலைகள், தீவுகள், சமுத்திரங்கள், கிரகங்கள், காற்று, நெருப்பு, சந்திரன், நட்சத்திரங்கள், முழுப் படைப்பின் பல்வேறான வடிவங்கங்கள் மற்றும் பிரபஞ்சப் படைப்புக்குத் தேவையான எல்லாம் தன் குழந்தையின் வாயினுள் இருப்பதைக் கண்டாள். அத்துடன் யசோதை கிருஷ்ணரைத் தன் மடியில் வைத்துக்கொண்டு அவருக்குப் பாலூட்டுவதையும் அந்த வாயினுள் கண்டு வியந்தாள். பகவானுடைய கிருபையால் மீண்டும் பழைய நிலையை அடைந்து தன் அன்புக் குழந்தையை தழுவிக்கொண்டாள்.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
குழந்தை கிருஷ்ணர் சற்று வளர்ந்த பின், குப்பிறப்படுக்கத் துவங்கினார். மற்றொரு விழாவை யசோதாவும் நந்தமகாராஜாவும் கொண்டாடினார்கள், அது கிருஷ்ணரின் முதலாவது பிறந்தநாள் விழாவாகும். அவர்கள் கொண்டாடிய கிருஷ்ண ஜெயந்தி விழா, இன்றும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அவ்விழாவுக்கு பெருந்திரளானவர்கள் வந்து விழாவில் குதூகலமாக கலந்துகொண்டனர். நேர்த்தியான வாத்தியக்குழு ஒன்று இசை பொழிய, கூடியிருந்த மக்கள் அதை ரசித்தனர். கற்றறிந்த பண்டிதர்கள் எல்லோரும் விழாவுக்கு அழைக்கப் பட்டிருந்தனர். பிராமணர்களான அவர்கள், கிருஷ்ணரின் நன்மை கருதி வேத பாராயணம் செய்தார்கள். யசோதை, நீராட்டப்பட்டு, அழகிய ஆடைகளால் அலங்கரிக்கப் பட்டிருந்த குழந்தை கிருஷ்ணரை மடியில் வைத்துக் கொண்டிருக்கும்போது, குழந்தை தூங்குவதுபோல் தோன்றியதால், அன்னை யசோதை அவரைப் படுக்கையில் கிடத்தினாள்.
உறவினர்களையும் நண்பர்களையும் அந்த சுபவேளையில் வரவேற்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் யசோதை, குழந்தைக்கு பாலூட்ட மறந்து போனாள். எனவே, அவர் பசித்திருந்ததால் அழத் தொடங்கினார். அங்கே ஏற்பட்டிருந்த பற்பல ஓசைகளின் காரணமாக குழந்தை அழுதது, யசோதையின் காதில் விழவில்லை. பசியால் வருந்திய குழந்தை கோபமுற்று, எந்த சாதாரண குழந்தையும் செய்வதுபோல் கால்களைத் தூக்கி உதைக்கத் தொடங்கினார். குழந்தை கிருஷ்ணர் ஒரு சகட வண்டியின் கீழ் படுக்க வைக்கப்பட்டிருந்ததால், அவர் கால்களை உதைத்தபோது வண்டியின் சக்கரத்தில் பட்டு அது பல துண்டுகளாக நொறுங்கியது. அந்த சகடமானது ஒரு அரக்கன். கம்சனால் ஸ்ரீ கிருஷ்ணரைக் கொல்வதற்காக அனுப்பப்பட்டவன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சிறு கால்களால் உதைக்கப்பட்டதும் அரக்கன் மாண்டு விழுந்தான். ஓசை கேட்டு வந்த யசோதை, குழந்தை கிருஷ்ணரை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு பிராமணர்களை அழைத்து, கொடிய தேவதைகளால் குழந்தைக்கு தீங்கு ஏற்படாமலிருக்க, வேத மந்திரங்களை ஓதும்படி கேட்டுக்கொண்டாள்.
Category:பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்
கி.பி. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்லவர்களின் துறைமுக நகரமாம் மாமல்லபுர கடற்கரை, சூரியன் மேற்கே பழுத்த கோவைப்பழ வெளிச்சக்கீற்றை தன் அன்றைய நாளின் இறுதி மூச்சாய் விட்டுக் கொண்டிருந்தது. அந்திசாயும் இளம்மாலை நேரமானதால் பொருட்கள் கப்பலில் ஏற்றப்படுவதும் வந்த கப்பலில் இருந்து பொருட்கள் இறக்கப்படுவதுமாக துறைமுகம் மிகவும் சுறுசுறுப்பாக காணப்பட.. அயல் தேச வியாபாரிகள் தாங்கள் தங்கள் தேசத்திலிருந்து கொணர்ந்த வைரம், ரத்தினம், வைடூரியம், கோமேதகம், பவளம், மரகதம் மற்றும் விலை உயர்ந்த கற்களிலான அலங்கார அணிகலன்களையும் வாசனை திரவியங்களையும் பல வேலைப்பாடுகளுடன் கூடிய பாத்திரங்களையும், அரேபிய வியாபாரிகளோ உயர்ஜாதி புரவிகளையும், பேரீச்ச பழங்களையும் உள்ளூர் வியாபர்களிடம் பண்டமாற்று முறையில் அதற்கு ஈடாக ஏலக்காய், மிளகு, வசம்பு, இலவங்கம், மிளகாய் மற்றும் பல வாசனை பொருட்களையும் அழகிய சிற்பங்களையும் கற்சிலைகளையும் தங்கம், வெள்ளி, முத்து, பவழமாகவோ அணிகலனமாகவோ மாற்றிக்கொண்டிருந்தனர்.
மாமல்லபுரத்தில் செல்வம் கோலோச்சிக்கொண்டிருந்த காலம் அது.. மாலை நேரங்களில் அந்நகர மக்கள் தங்கள் குடும்பத்தாருடன் கூடி கடற்கரையில் சித்ரான்னம் சாப்பிடுவதும்… அலையில் அடித்து வரும் சோழிகளை சிறுவர்கள் சேகரித்து அதை அடுத்த குழந்தை மீது வீசி விளையாடுவதும்.. சிறுவர்களும் சிறுமிகளும் ஒருவருக்கொருவர் மணற்பரப்பில் சண்டை இட்டு உருளுவதை அவரவர் பெற்றோர்கள் வேடிக்கை பார்த்து மகிழ்வதும்… வாலிபவயது ஆண்களோ தங்கள் காதலியின் மீது கடற்கரை நண்டுகளை விட்டு அவர்கள் அலறும் சத்தத்தைக் கண்டு ரசிப்பதும்… பெண்கள் தாங்களும் ஆண்களுக்கு சற்றும் சலைத்தவரில்லை என்பதை நிரூபிப்பது போல ஆண்கள் மீது அலையின் நுரையை இரு கைகளிலும் அள்ளி அவர்களுக்கு தெரியாமல் தலை மீது ஊற்றச் செய்து உடலை நனைத்து கைகொட்டிச் சிரிப்பதும் அன்றாடம் நடக்கும் வேடிக்கை நிகழ்ச்சிகள்.
அன்று சித்ரா பௌணர்மி, நிலவுக் காதலி அலைக் காதலன் மீது தன் ஒளியை பாய்ச்சி அதனை வெள்ளிப் பாளங்களாய் கடலில் மிதக்க விட்டுக்கொண்டிருக்க, அந்த அலையோ சில்லென்று வீசும் காற்றை தன்னில் வாங்கி நிலவுக் காதலியை பிடிக்க முடியாத கோபத்தில் ‘ஹோ’வென்ற பேரிரைச்சலை பெருமூச்சாய் விட்டுக்கொண்டிருந்தது. அந்த அலையின் ஓசையையும் மீறி உளியின் ‘ணங்’, ‘ணங்’ ஓசை கேட்கிறதென்றால் சிற்பிகள் பாறையில் சிலையை செதுக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று கொள்ளலாம். ஆனால் அந்த இரவு வேலையில் எங்கெல்லாம் உளியின் ஓசை கேட்கிறதோ அங்கெல்லாம் கண்டிப்பாக அந்த பித்தன் இருக்க வேண்டும் அலையின் ஓசையும் சில்லென்று வீசும் உப்புக்காற்றையும் பொருட்படுத்தாமல் கற்சிலையை சிரத்தையாய் செதுக்கிக்கொண்டிருப்பான் அவன். கண்கள் பஞ்சடைந்து உடல் மெலிந்து தலை முழுவதும் கடல் நுரையை தலையில் கொட்டியபடி நரை படர்ந்து வியாபித்திருப்பதும் மோவாய் முதல் தொடை வரை நீண்ட தாடியும் பார்ப்பதற்கு பரதேசியாய் காணப்பட்டாலும் உடல் செதுக்கிய பாறையாய் உறுதியுடன் இருப்பது மட்டும் யாருக்கும் எளிதில் புரியாத அதிசியம். தள்ளாத வயதிலும் கையில் உளியுடன் தான் காணும் பாறையில் எல்லாம் தனக்கு தோன்றிய உருவங்களை நடு ஜாமம் வரை செதுக்கிக் கொண்டு… கிடைப்பதை உண்டு நகரமெல்லாம் சுற்றி வந்த போதிலும் அவன் உறங்குவதற்கு மட்டும் சரியாக இளவஞ்சியின் வீட்டிற்குச் சென்று விடுவான். அன்று அவனது கால்கள் மணலில் சிக்கி தள்ளாடுவதையும், சிக்கிய கால்களை பெரும் பிராயத்தனம் பட்டு வெளியே எடுத்து மெல்ல மெல்ல இளவஞ்சியின் குடிலை நோக்கி முன்னேறியபடி நடக்க… அவன் மனமோ பின்னோக்கி செல்ல ஆரம்பித்தது.
‘எத்தனை முறை கூறியிருக்கிறேன்… இந்த நடுசாமத்தில் வரவேண்டாம் என்று…’ ஊருக்கு ஒதுக்குபுறமாய் அமைந்த குடில் அது… வெண்ணிலவு தலைக்கு நேர் வரும் நள்ளிரவு வேளை.. உளி கொண்டு அடித்த உடம்பின் வலியை சோமபாணம் உண்டு மயங்கிய நிலையில் மணல்தரையில் கால்கள் கோலம் போட இளவஞ்சியின் குடிலை வந்தியசேனன் அடைந்தபொழுது அவள் கேட்ட முதல் கேள்வி அவனை மேலும் தடுமாற வைத்தது..
இளவஞ்சி… பேரரசு முதல் பெருந்தனக்காரர்கள் வரை விரும்பும் போகப்பொருள்.. அலைமகள் அள்ளித்தந்த விலைமகள்.. ஆம்… சில ஆண்டுகள் முன் கடலில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.. அந்தப் பெருமழையில் கடலில் சென்ற படகுகள் கவிழ்ந்து அதில் பயணித்த அனைவரும் மூழ்க… ஒரு பெட்டியில் பத்திரமாக அலையில் அடித்து கரை சேர்ந்த அந்த மழலையை ‘இளவஞ்சி’ என்று நாமம் சூட்டிய வளர்த்தவள் ஊரின் நாட்டியக்காரி. மழலையாய் வந்தவள் முலை வளரும் பருவம் வந்தவுடன் முறைப்படி கோவிலில் பொட்டு கட்டி விடப்பட.. அந்த ஊரின் தேவதாசியானவள்.
‘என்ன செய்வது… நீயும் அனாதை… நானும் அனாதை… பகல் முழுவதும் பாறையை செதுக்குவதும்.. மாலை வந்தால் வலியை மறக்க மதுவை அருந்துவதும் இரவு வந்தால் இன்பம் பெற உன்னை சந்திப்பதும் முறை மாறாமல் நடப்பதுதானே…’
‘அதற்குத்தான் கூறினேன்.. ஒரு நல்ல பெண்ணைப் பார்த்து திருமணம் செய்துகொள் என்று’
‘அது ஏன் நீயாக இருக்கக் கூடாதா…’
‘என்ன குடித்து விட்டு பிதற்றுகிறாய்… நீ வாழவேண்டியவன்… வாலிபன்… நானோ நாட்டியக்காரி… பகலில் நாட்டியமாடி இரவில் ஊருக்கே விருந்து படைப்பவள்… உனக்கு மட்டும் எப்பொழுதும் தனியாக விருந்து படைத்தல் என்பது நடவாத காரியம்… அதை ஊரும் ஏற்காது… அது மட்டுமல்ல நீயோ இளையவன்.. நானோ மூத்தவள்…‘
‘மெய்ப்பசிக்கு தெரிகிறதா வயதும் ஆசையும்…’
‘அப்படிச் சொல்லவில்லை….’
‘பின்னர் எப்படி…. பெருந்தனக்காரர்களை மட்டுமே விரும்பும் நீ.. என்னை மட்டும் எப்படி விரும்பினாய்.. உன்னுடன் சேர்த்துக்கொண்டாய்..’
‘அது வந்து….’
‘சொல்… ஏன் தடுமாறுகிறாய்..’
‘மற்றவர்களிடமிருந்து வேண்டிய பொருள் மட்டும்தான் கிடைக்கிறது… பாசம்… நேசம்.. ம்ம்ம்.. அது உன்னுடன் பழகுவதில் மட்டும் தான் கிடைக்கிறது… அன்பும் கனிவான பேச்சும் இனிமையான நட்பும் என்னை உன்னுடன் பகிர்வதில் மனதிருப்தியும் கிடைக்கிறது… இது தான் என்னை உன்னிடம் இணைத்தன் ரகசியம்.. புரிகிறதா.. அதற்கென்று இந்த உறவை அடிக்கடி தொடர்வது சரியென்று கூறமாட்டேன்.. உனக்கென்று ஒருத்தி கண்டிப்பாக பிறந்து இருப்பாள்… அவளை வாழ்க்கை துணையாக ஏற்று… இல்வாழ்வை நல்லறமாய் நடத்து…’ அந்த அறையில் உள்ளே காற்றில் அசைந்த நெய்விளக்கின் சுடரொளி அவளின் பேச்சை ஆமோத்திப்பதாய் தன் தலையை அசைக்க, சொன்னவளின் நெஞ்சில் தன் நெஞ்சம் பதித்து… மெய்மறந்து பஞ்சணையில் கள்ளை உண்ணும் வண்டாய் அவள் மேனியில் மேல் மேவும் வேளையில்… கண்கள் கூசும் காட்சியைக் கண்டு வீசிய காற்றில் நெய்விளக்கு தன் ஒளியை அணைத்துக் கொண்டது அவர்களைப் போல. முயக்க நிலை முடிந்து மயக்க நிலையில் ஒருவரை ஒருவர் தயக்கத்துடன் ஒட்டிக்கொண்டிருந்த அந்த கணப்பொழுதில்… வாசலின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.
அந்த குகையின் இருளை தீப்பந்தங்கள் விரட்டிக் கொண்டிருக்க… ஒரு உயர்ந்த பாறையில் அமர்ந்திருந்த தலைமைச் சிற்பி விக்கிரமவர்மர் தனக்கு அடுத்த நிலையுள்ள நான்கு தலைமை சிற்பிகளும் வந்து விட்டார்களா என்று அருகில் இருந்த தன் உதவியாளனைக் கேட்க..
‘வந்தியசேனன் மட்டும் வரவேண்டும்.. ஆள் அனுப்பி இருக்கிறேன் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவான்… நீங்கள் கூற வேண்டியதை கூற ஆரம்பியுங்கள்..’
‘அவனும் வரட்டும்.. எங்கே போய்விடப்போகிறான்.. அந்த தாசி வீட்டில் தான் இருப்பான்… பாவம்.. அனாதை.. மிகச் சிறந்த திறமைசாலி… எதற்கு இப்படி கள்ளுண்ணுவதிலும் காமகளியாட்டத்திலும் நேரத்தை வீணடிக்கிறானோ… அவனுக்கு ஒரு திருமணம் செய்து வைத்து விட்டால் திருந்தி விடுவான்…’
‘நீங்கள் தான் அப்படி கூறுகிறீர்கள்.. ஆனால் கள்ளுண்ணுவதும்… கன்னியை ஆள்வதும் போதுமென்று நினைத்து விட்டானோ என்னவோ…’ மூத்த சிற்பி உரைக்க…
‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்…’ மற்றொரு சிற்பி அவனுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்.
‘இவன் கல்லுடனே காலத்தை செலவழித்து உளியாய் மாறியவனாயிற்றே… இரும்பை கரைக்க ரசாவாதம் தெரிந்த சித்தரைத்தான் வரவழைக்க வேண்டும்’ தான் ஏதோ விகடமாய் கூறியதாக நினைத்து கலகலவென்று சிரிக்க ஆரம்பித்தார் மூத்த சிற்பி மறுபடியும்.
‘என்ன ஒரே சிரிப்பு… எனக்கும் சொன்னால் நானும் ரசிப்பேன் இல்லையா…’ கூறியவாரே உள்ளே நுழைந்தான் வந்தியசேனன்.
‘வா.. வந்தியசேனா… அப்படி அந்த பாறையில் அமர். உனக்காகத்தான் காத்திருந்தோம்.. இன்னும் ஆலோசனையை துவங்கவில்லை… ‘
‘சொல்லுங்கள் தலைமை சிற்பியாரே…. விடிவெள்ளி தோன்றும் வேலையில் பிடிகொண்டு அழைத்து வரக் காரணமென்ன…’
‘கூறுகிறேன்… அதற்கு முன் நாம் கட்டிக்கொண்டு வரும் கடற்கரைக்கோவில் வேலை எந்த நிலையில் இருக்கிறது…’
‘இன்னும் ஒரு மண்டலத்தில் முடிந்துவிடும்… சுற்று மதிற்சுவர் வேலை, கோபுர சிற்ப வேலை மற்றும் கோவிலின் கருவறையின் கடவுள் சிலை உருவாக்கம் மட்டும் முடித்தாக வேண்டியுள்ளது…’ மூத்த சிற்பி சொல்லச் சொல்ல ஆழ்ந்து கேட்ட விக்கிரமவர்மர்,
‘இன்று மாலை காஞ்சியிலிருந்து அரசர் ஒரு சேதி அனுப்பியிருந்தார்… வரும் சித்ரா பௌர்ணமியில் கோவிலின் குடமுழுக்கு நடத்த முடிவு செய்திருப்பதை.. அதற்கு இன்னும் சரியாக இரண்டு திங்கள் தான் உள்ளது.. எனினும் கடைசி நாள் வரை வேலையை தள்ளிச் செல்வது உசிதம் அல்ல… அதற்குள் எப்படியாவது முடித்து விடவேண்டும்.. என்ன புரிகிறதா…’
‘அதற்கு ஆட்கள் நிறைய தேவைப்படுமே…’
‘தேவையான ஆட்களை வெளி ஊர்களிலிருந்து வரவழைத்துக் கொள்வோம்… இப்பொழுது அதுவல்ல பிரச்சனை… எனக்கு ஒரு மற்றுமொரு ரகசிய செய்தி கிடைத்தது..’
‘என்ன…’ அனைவரும் ஆச்சிரிய முகத்துடன் அவரைப் பார்க்க…
வரும் அமாவாசையன்று அரசர் ரகசிய விஜயமாய் இங்கே வருவதாக செய்தி அறிந்தேன்.. எப்படியும் சில நாட்கள் இங்கே தங்க உத்தேசிட்டு இருப்பதாக கேள்விபட்டேன்..’
‘வரட்டுமே… அதற்கும் நாம் செய்யும் வேலைக்கும் என்ன சம்பந்தம்..’
‘சம்பந்தம் இல்லாமல் இதனை சொல்வேனா… அப்படி தங்கும் நாட்களில்… ஏதாவது ஒரு நாளாவது கடற்கரை கோவிலில் நடைபெறும் வேலையை பார்வை இட வராமலிருப்பாரா என்ன… அதனால் இன்னும் அரைத்திங்களில் அதாவது வர இருக்கும்.அமாவாசைக்குள்… நாம் முடிந்த அளவு வேலையில் தீவிரம் காட்ட வேண்டும்… அதற்கு இரவும் பகலும் பாராமல் உழைக்க வேண்டும்… இந்தச் செய்தியைக் கூறவே உங்களை அழைத்தேன்… ‘ என்ன நான் சொல்வது சரிதானே என்பது போல அவர் அனைவரையும் ஒரு பார்வை பார்க்க…
‘கண்டிப்பாக… வேலையை ஆளுக்கு சமமாக பிரித்து நேரம் காலம் இல்லாமல் உழைத்தால் போதும்… முடித்து விடலாம்..’ வந்தியசேனன் சொல்ல..
அவன் சொல்லை அனைவரும் ஆமோதித்து பிரிந்தனர்.
துள்ளி வரும் கடலலையை தள்ளி நின்று பார்ப்பதும்.. தூர நகர்ந்தபின் ஓடிப் போய் கால்களை நனைப்பதுமாய் அந்த இரண்டு கன்னிகள் கடற்கரையையில் விளையடிக்கொண்டிருந்தனர்.
‘எழுனி… போதும் ஓடியாடியது… கால்கள் வலிக்கின்றன… வா வீட்டுக்குச் செல்வோம்.. அலைகள் பெரிதாக வருகின்றன.. ஆபத்தை விலைக்கு வாங்காதே” அவளுடன் வந்த தோழி சொல்ல… எதையும் காதில் வாங்காமல் அவள் அலைகளை ரசித்தப்படி தண்டை அணிந்த கால்கள் மணலில் செருக கெண்டை மீன் கண்கள் சுழல ஈர மண்ணில் ஆசை தீர விளையாடி மகிழ்ந்தாள் அவள்.
எழுனி… காஞ்சியை ஆளும் இரண்டாம் நரசிம்மவர்மரின் கப்பல்படைத் தலைவன் தழும்பனின் ஒரே செல்ல மகள், முட்டி மோதி திமிரும் பெண்மையை மூடி மறைத்தும், கெட்டியாக கைவைத்து மறைத்தும், விட்டு விட்டு வீசும் கடற்காற்றில் தறிகெட்டு கலைகிறது அவள் கட்டியிருந்த சேலை. பருவம் வளர்ந்து பார்ப்பவர்களின் புருவம் உயர்த்தும்படி உச்சி முதல் உள்ளங்கால் வரை மெச்சும் அழகி.. சுருங்கச் சொன்னால் பேரழகி.
‘நான் சொல்வது எதுவும் காதில் விழவில்லையா… ‘
‘ஆமாம் விழத்தான் செய்கிறது.. இந்த இரவு வேளையில் எங்கிருந்தோ உளியின் ஓசை கேட்கிறதே… எங்கே என்று கவனித்தாயா..’
‘கேட்டேன்.. அந்த பாறை இடுக்கிலிருந்துதான் கேட்கிறது..’
‘இந்த வேலையில் யார் கல்லைச் செதுக்குவது..’
‘அது யாராகவேணும் இருந்துவிட்டு போகட்டும்.. நமக்கெதற்கு வா… வீட்டிற்குப் போய்விடலாம்..’
‘இரு… சென்றுதான் போய் பார்ப்போமே..’
‘வேண்டாம் இந்த விவரீதம் எழுனி.. சொல்வதைக் கேள்..’ அவள் சொல்லச் சொல்ல கேளாமல் அந்தப் பாறையின் அருகில் செல்ல..
அங்கு தீப்பந்த ஒளியில் வந்தியசேனன் கோவிலின் கருவறை சிலையை வடிக்க பாறையை வெட்டியபடி இருந்தான், அவனின் கருத்த உருவமும் கல்லில் உளி கொண்டு செதுக்கும் கைகளின் தசைச் திரளும் உடம்பில் வழியும் வேர்வையும் தீப ஓளியில் மின்ன.. அப்படி ஒரு இளைஞனை எழுனி தன் வாழ்நாளிலே காணாததைப் போல காண..
இருட்டில் எரியும் தீப்பந்த வாசனையும் மீறி அவர்களின் வளையோசையும் தலையில் சூடிய மலரின் வாசமும் உளியின் வேகத்தைக் குறைக்கச் செய்தது… தலையை திருப்பி சுற்றும் முற்றும் பார்த்தவன்..
‘யாரது… ‘ உரத்த குரலில் அதட்ட..
‘பார்த்து விட்டான்.. வா சென்று விடுவோம்…’ தோழி சொல்ல… ஓடும் வேளையில் பாறையின் விளிம்பில் எழுனியின் கைபட்டு கைவளைவி உடைந்து கையைக் கீற… அவளோ… ‘ஆ‘வென கத்த… அருகில் வந்த வந்தியசேனன் இரண்டு கன்னிகளை கண்டு திகைத்தான்.
‘நீங்கள்…’ தோழி வாய் திறக்க…. அவளின் வாயை மூடிய எழுனி…
‘நாங்கள் வெளியூரைச் சேர்ந்தவர்கள்…. உறவினர் வீட்டிற்கு வந்துள்ளோம்… கடற்கரையைப் பார்க்க வந்தோம்… இருட்டி விட்டது… உங்களின் உளி சத்தம் கேட்டு உதவி கேட்கத்தான் வந்தோம்..’
‘ஓ… இந்த இருட்டில் இனி தனியாக வரவேண்டாம்… இங்கு கயவர்கள் கள்ளுண்ண இரவில் வருவார்கள்.. சீக்கிரம் இடத்தை விட்டு நகருங்கள்..’
‘வழி தெரியவில்லை… தாங்கள் நல்லவர் போலத் தெரிகிறது… வழித்துணையாக வந்தால் நல்லது..’
‘ஆகட்டும்… முதலில் காயத்தைச் சுற்றி கட்டு போடுங்கள்… இரத்தம் வீணாகிறது…’
கிடைத்த பச்சிலைகளைக் கொண்டு காயத்துக்கு மருந்திட.. எழுனியோ அவனின் திடமான அங்கங்களின் அழகிலும், அடுத்தவர் நலம் காணும் சிரத்தையும் கண்டு மலைத்தாள்.. திளைத்தாள்… உணர்வை இழந்தாள்… உள்ளத்தை பறிகொடுத்தாள்.
அடி மேல் அடி வைத்தால் அம்மி நகருமோ இல்லையோ கற்பாறை மேல் படும் உளியின் அடி மேல் அடியால் அது தன் உருவமிழந்து சிலையின் வடிவைப் பெறும் என்பது சிற்பக் கலைஞர்களின் கூற்று. வந்தியசேனன் மிகவும் சிரத்தையாக அந்தச் சிலையை வடித்துக் கொண்டிருந்த மறு இரவில்…
‘என்ன சிற்பியாரே…. சிலை இன்னும் முழுமைபெற எத்தனை இரவுகள் தேவைப்படும்…’ எழுனி கேட்கவும்..
‘யார் அது…’
‘அதற்குள் மறந்து விட்டீர்களா…’
‘இல்லை இல்லை… நேற்று நடந்ததை இன்றே மறக்கும் அளவுக்கு வயதாகவில்லை… எங்கே உங்களின் வால் நட்சத்திரம்…’
‘என்னது…’
‘இரவில் தானே நட்சத்திரத்தைக் காண முடியும்… அதுவும் நீங்கள் நட்சத்திரம் என்றால் உங்கள் பின்னாடியே சுற்றித் திரியும் வால் அதான் உங்கள் தோழியைத்தான் அப்படி கேட்டேன்..எப்பொழுதும் உங்கள் அருகில் இருப்பார்களே… இன்று எங்கே என்று..’
‘ஓ… கல் உடைக்கும் சிற்பிக்கு கூட கொல் என்று சிரிக்க வைக்கும் சொல் பிறக்குமா என்ன..’
‘ஏன்… கல்லுடன் பழகுவதால் எங்கள் மனமும் கல்லாகி விட்டாதா என்ன… ‘
‘தங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா.. ‘
‘இல்லை..’
‘ஓ… அதுதான்.. பகல் இரவு பாரமல் சிலையையே கொத்திக் கொண்டிருக்றீர்களோ…. மனைவி என்று ஒருத்தி இருந்தால் இப்படி இருக்கமாட்டீர் இல்லையா..’
‘எப்படி…’
‘இரவில் அதுவும் குளிர் காற்றில் இப்படி வேலை செய்தால்… எந்த மனைவிதான் அமைதியாய் இருப்பாள்…’
முழு நிலவு தேய்பிறையாக, பிறை நிலவு காதலோ முழு நிலவாய் மாறத் தொடங்கியது தொடர்ந்த நாட்களில்.
ஒரு இளம் மாலைப் பொழுதில்..
‘எழுனி நான் சொல்வதைக் கேள்… உன் தகுதிக்கு அவன் உகந்தவன் அல்ல..’
‘ஏன்… ஏழையை மணந்தாள் பாழ் ஆகிவிடுமா வாழ்க்கை…‘
‘அவன் தாய் தந்தை அற்ற தனியாள்… நீ தரணி ஆளும் அரசனின் கப்பல்படைத்தளபதியின் மகள்… புரிந்து கொள்..’
‘ஓ….’
‘அது மட்டுமில்லை.. மற்றொரு காரணம் இருக்கிறது…’
‘என்ன…’
‘சொல்ல நா கூசுகிறது…’
‘தொண்டை வரை வந்துவிட்டது முழுங்கி விடாமல் முழுவதையும் கொட்டி விடு..’
‘அவன் ஊர் தாசியிடம் அடிக்கடி செல்வானாம்.. அதனால்..’
‘அதனால் அவன் கெட்டவன்.. அப்படித்தானே சொல்கிறாய்…’
‘ஆமாம்…’
‘அரசன் முதல் ஆண்டி வரை ஆண்கள் செய்வதுதானே… இதில் அதிசியம் என்ன இருக்கிறது… தாசியிடம் செல்பவனும் சோமபாணம் அருந்துபவனும் கெட்டவன் என்றால்… உலகில் இருக்கும் அனைத்துப் பெண்களும் கன்னியாகவே காலம் தள்ள வேண்டியதுதான்..’
‘தெரியாமல் நடந்தால் பராவாயில்லை… இங்கே தெரிந்து விட்டதே அவனின் அருகதை…’
‘ஓ.. தெரியாமல் தவறு செய்யலாம்… தெரிந்து தவறு செய்யக் கூடாதா… அப்படித்தானே சொல்கிறாய்.. ஒன்று சொல்கிறேன்.. நீ சொன்னது அனைத்தையும் வந்தியசேனன் கூறிவிட்டான்.. அது அறியாத வயதில் புரியாமல் செய்தது… அன்பு காட்டவும் ஆதரவு தரவும் ஆட்கள் இல்லை… அவனுக்கு ஒரே ஆறுதல் அந்த இளவஞ்சி தான்… இனி தவறு செய்ய மாட்டான் என்று உறுதி அளித்திருக்கிறான் என்னிடம்..’
‘காதல் அவ்வளவு தூரம் வளர்ந்துவிட்டதா…’ தோழி சொல்ல கன்னம் சிவந்தாள் எழுனி.
காஞ்சி மன்னனின் ரகசிய வருகை படைத்தளபதிகள் மட்டுமே அறிந்த ரகசியமாய் காக்கப்பட… அரசர் தங்ககுவதற்காக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார் மன்னரின் கிழக்கு கப்பல்படைத் தலைவனும் எழுனியின் தந்தையுமான தழும்பன்.
தேய்பிறை முடியும் நாளின் பின்னிரவில் மன்னன் தன் முக்கிய அரசு அதிகாரிகளுடன் ரகசிய வீட்டில் தங்கினான், படைத்தலைபதி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ரகசிய ஆலோசனை நடத்திவிட்டு ஓய்வாக தங்கி… பின்னர்… மாலையில் அரசு அதிகாரிகள் மற்றும் படைத்தளபதிகளின் குடும்பத்தாருடன் சற்று அளாவளாவிய பொழுதுதான் கவனித்தான் எழுனியை… அவளின் அழகில் மெய்மறந்தான்… மதி மயங்கினான்… தன்னை அவளிடம் பறிகொடுத்தான்… பின்னர் அவள் யார் எவர் என அறிந்து… தழும்பனை தனியாக அழைத்து வரச் சொன்னான்.. கட்டளைக்குப் பணிந்து அரசனின் அறைக்குச் சென்றான் தழும்பன்..
‘’வாரும் தளபதியாரே….’
‘மா மன்னர் வாழ்க… தாங்கள் அழைத்ததன் காரணம் அறிய விழைகிறேன்… வரவேற்பில் தவறா… பாதுகாப்பில் பிழையா…’
‘அமருங்கள்… உங்களிடம் தனியாக ஆலோசனை நிகழ்த்த வேண்டும்…’
‘கூறுங்கள் மன்னா…. செய்வதில் சித்தமாய் இருக்கிறேன்..’
‘எழுனி தங்கள் மகளா…’
‘ஆம் மன்னா…’ எழுனியின் அழகில் மயங்கினோம்… மதி இழந்தோம்… அவளை மணந்து கொள்ள விரும்புகிறோம்… என்ன கூறுகிறீர்கள்…‘
‘மன்னா….’ அதிர்ச்சி அடைந்த தழும்பன் தன்னை அறியாமல் அலறிட..
‘எழுனியை மணந்து காஞ்சிக்கு அழைத்துச் செல்கிறோம்… தங்களையும் போர்ப்படை அதிகாரியாக பதவி உயர்வு செய்கிறோம்‘
‘மன்னா… அதிர்ச்சியில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை… இது என் பாக்கியம்..’
‘நாளை அமாவாசை… நிச்சியம் செய்கிறோம்…. வரும் சித்ரா பௌர்ணமி அன்று திருமணம்‘
மன்னரிடம் விடைபெற்று மகளைப் பார்த்து மகிழ்ச்சியைப் பகிற சென்றான் எழும்பன்.
‘அப்புறம்.. என்ன முடிவெடுத்தாய் வந்தியசேனா…’
கண்ணோடு கண் பட்டு கலந்தது முதல் காதலில் விழுந்தது வரை எழுனியுடன் தனக்கு ஏற்பட்ட நெருக்கத்தையும் அனுபவத்தையும்…. கடந்த இரண்டு நாட்களாக அவள் வராதததையும் அதனால் தான் மன வேதனையில் விழுந்ததையும் கூறி முடித்தவன்… எப்படியோ அவளின் இருப்பிடத்தையும் பிறப்பையும் அறிந்தேன் அவள் தோழி மூலம்.
அவள் கப்பற்படைத்தலைவன் எழும்பனின் மகளாம்… அவளை அரசர் மணக்கப் போவதாகவும் அறிந்தேன்.. வாய் குழறியபடியே மனவேதனையில் சில நாட்களாக நிறுத்தி வைத்திருந்த மதுப்பழக்கத்தை எழுனியிடன் கொடுத்த உறுதியையும் மீறி அளவுக்கதிகாமாக குடித்துவிட்டு வந்து உளறியபொழுதுதான் இளவஞ்சி அவனைப் பார்த்து அப்படிக் கேட்டாள்.
‘சொல்.. அப்புறம் என்ன முடிவெடுத்தாய்…’
‘என்ன செய்வது… எழுனியும் கையறு நிலையில் அவதியுறுவதாகவும்… தன்னைச் சந்திக்க விரும்புவதாகவும்… பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தோழி மூலம் அறிந்தேன்..’
‘அதற்காகவா அளவுக்கதிமாக குடிப்பது…’
‘அவளை ஒரு முறையாவது சந்திக்க வேண்டும்… நீதான் ஒரு உபாயம் செய்ய வேண்டும்…’
‘இது அரசர் சம்பந்தப்பட்டது… ஆபத்து மிக்க அதிகம்…. அவசரப்படவேண்டாம்.. உரிய நேரத்தில் உதவுகிறேன்..’
‘இன்னும் இரண்டு நாட்களில் பௌர்ணமி.. அதற்குள்..’
‘புரிகிறது உந்தன் வேதனை… எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது…’
‘என்ன… சொல் இளவஞ்சி..’
‘ஒரு கட்டுமரத்தை மட்டும் ஏற்பாடு செய்துகொள்… அவளை எப்படியாவது அழைத்து வந்துவிடுகிறேன்… நீங்கள் இருவரும் தூர தேசத்திற்கு சென்றுவிடுங்கள்.. என்ன சரியா..’
‘இளவஞ்சி இதை மட்டும் நீ செய்தால்… உன்னை உயிர் இருக்கும் வரை நினைவில் கொள்வேன்..’
‘உந்தன் நட்புக்கும்… உன்னால் எனக்கு கிடைக்கும் அன்புக்கும் மகிழ்ச்சிக்கும் முன் இந்த உதவி எம்மாத்திரம்… கவலைப்படாமல் சொன்னதை மட்டும் ஏற்பாடு செய்… எல்லாம் நல்லபடியாக நடக்கும்..’
விடிந்தால் பௌர்ணமி, ஊரே விழாக்கோலம் பூத்திருந்தது… கோவிலின் குடமுழக்கு வேலைகள் வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது, மறுபுறம் எழினிக்கு மருதாணி இடவும்… மணக்கோல அலங்காரங்களைச் செய்யவும்… இளவஞ்சி அவள் அறைக்குச் சென்றவள்….
‘எழுனி எல்லாம் தெரியும் எனக்கு…. உனக்காக என் குடிலில் வந்தியசேனன் காத்துக் கொண்டிருக்கிறான்… உன் உடைகளை நான் அணிந்து கொள்கிறேன்… நான் எப்படியோ இங்கு சமாளித்துக் கொள்கிறேன்… உடனே அங்கு செல்’ உணர்ச்சிப் பெருக்கில் அவளை ஆரத்தழுவிய எழுனி…. அவள் சொற்படி கேட்டு… அங்கிருந்து நகர்ந்தாள்.
அந்த நடுசாம நேரத்தில் இளவஞ்சியின் குடிலில் எழுனியும், வந்தியசேன்னும் சந்திக்க… பிரிந்தவர்கள் கூடினால் பேச வார்த்தை வராமல் கண்களில் ஆனந்தக்கண்ணீர் சொரிய, உணர்ச்சி மேலீட்டால் இருவரும் தழவி உடுத்திருந்த ஆடை நழுவுவதை கூட கவனியாமல் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆடையாயினர், இருமனம் இணைந்தபின் திருமண நாடகம் எதற்கு என்பது போல அக்கணமே பிணைந்தனர், மீறிய உணர்ச்சிப் பெருக்கில் கூடிய இருவரும் களைப்பில் கண்ணயர… கோழி கூவுவதைக் கேட்டபிறகு தான் விழிப்பே வந்தது. இருவரும் களைந்த ஆடைகளை திருத்தி பிரயாணத்திற்கு கிளம்பத் தயாராயினர்.
பௌர்ணமி தினம் என்பதால் பனை மர உயர அலைகளை கடல் கடும் சீற்றத்துடன் வீசிக்கொண்டிருந்தது. விடியும் காலைப்பொழுதை விடிவெள்ளி கிழக்கில் தோன்றி அறிவித்தது…. அசுர பலத்துடன் அந்த கட்டுமரத்தை கடலில் செலுத்தினான் வந்தியசேனன்… அருகில் எழுனி கருநீலக் கடலின் சீற்றத்திலும் குளிர் காற்றிலும் படபடக்கும் நெஞ்சின் பயத்திலும் உறைந்துபோய் அமர்ந்திருந்தாள்.
மகளைக் காணாமல் எழும்பன் தவிக்க… மறுபுறமோ அரசனுக்கு பதிலுரையாய் என்ன உரைப்பது என்று மனம் பேதலிக்க… இளவஞ்சியை அழைத்து விசாரிக்க.. அவள் எதையும் சொல்லாமல் மறைக்க… அவளின் குடிலில் ஆராய.. அங்கு எழுனியின் ஆடைகளில் கோர்த்த விலையுயர்ந்த கற்கள் சிதறி கிடப்படதைக் கண்டு வெகுண்டவன்.
இளவஞ்சியை மிரட்டி, சித்திரவதை செய்து நடந்தவற்றை அறிந்து தானே முன்னின்று தனக்கு மிக நெருக்கமான படை வீரர்களுடன் படகில் ஏறி எழுனியைத் தேட முற்பட்டான் எழும்பன்.
அதறக்குள் எப்படியோ தகவல் அரசனின் காதுக்குச் செல்ல… சினந்தவன்…வந்தியசேனனை உயிருடன் பிடித்து வருமாறு படைவீரர்களுக்குக் கட்டளையிட்டான்.
சித்ரா பௌர்ணமி நாள்… சந்திரன் அன்று நடைப்பெறப்போகும் மிகப்பெரிய அழிவைக் காணவோ என்னவோ பயந்து மேகப்பொதிதியில் மறைந்தபடியே கடலிருந்து தன் முகத்தை மேலே கொண்டு வந்தது.
காலையில் மந்திரங்கள் ஒத, ஓமகுண்டம் வளர்த்து, மிக கோலாகமாக குடமுழுக்கு விழா நடந்தது பொழுது….
‘பிடித்து விட்டீர்களா… அவனை’ எழும்பனை பார்த்து மன்னன் விளம்ப..
‘ஆம் மன்னா… தனி அறையில் அடைந்து வைத்துள்ளேன்’
தன் இருப்பிடத்திற்கு அவனை அழைத்து வரச்செய்து விசாரனை செய்தார் அரசர். ‘அவர்கள் இருவருக்கும் உதவிய இளவஞ்சி பெண் என்பதாலும் ஊரின் நாட்டியக்காரி என்பதாலும் மன்னித்து விடுதலை செய்தார் அரசர். அடுத்து வந்தியசேனனைப் பார்த்து அமைச்சர்…
‘அரசருக்கு நிச்சியக்கபட்ட பெண்ணை கவர்ந்து சென்று இருக்கிறாய்.. இது ராஜ துரோகம்… என்ன துணிச்சல் உனக்கு…’
‘மன்னிக்க வேண்டும் அமைச்சரே.. நிச்சியப்படுவதற்கு முன்பே என்னால் உச்சரிக்கபட்டவள்..’
‘அமைச்சரே இவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்..’
‘வழக்கம்போல் இவனை கடலில் கல்லைக் கட்டி வீசி எறியுங்கள்… ‘ அமைச்சர் சொல்ல…
‘ஆம்.. அதுதான் சரியான தண்டனை.. கோவிலின் குடமுழுக்குக்கு உயிர்பலி செய்ததாக இருக்கட்டும்.. அதுவும் இன்றிரவே…. ‘ அரசர் கட்டளையிட்டார்…. அடுத்து…. எழுனியைக்காண் அவள் அறைக்குச் சென்றார்…
‘உன்னை மணந்துகொண்டு அரசியாக்க நினைத்தேன்… நீ செய்த காரியத்திற்கு… உன்னை என் அந்தப்புரத்தின் ஆசை நாயகியாக இருக்க உத்திரவிடுகிறேன்… … இன்றிரவு என் பசிக்கு இரை நீ தான்.. யாரங்கே.. அழைத்துச் செல்லுங்கள் இவளை அந்தப்புரத்திற்கு’
‘அது ஒருக்காலும் முடியாது… நான் எச்சில் பட்டவள்… உன் இச்சைக்கு அடிபணிய மாட்டேன்..’ அவள் திமிரத் திமிர… ‘அழைத்துச் செல்லுங்கள் பாதுகாப்பாக அவளை.’ உத்தவிரட்டார் அரசர், சிறகொடிந்த கிளியாய் தங்கக்கூண்டில் அடைபடப்போவதை உணந்த எழுனி…
‘மன்னா… எனக்கு ஓரு ஒரு ஆசை… அதை மட்டும் நிறைவேற்றுங்கள்.. நான் உங்கள் சொற்படி கேட்கிறேன்..’
‘என்ன சொல்..’
‘வந்தியசேனனை கடலில் வீசும் முன் கடைசியாக ஒருமுறை அவர் முகத்தை காண அனுமதி கொடுங்கள் அது போதும்..’ யோசித்த அரசர்…
‘சரி அனுப்பிவைக்கிறேன்….’
அரசன் தன் பரிவாரங்களுடன் மலையின் உச்சியிலிருந்து விளக்கொளியில் மின்னும் கடற்கரை கோவிலையும் அதன் ஊடே நடைபெறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளையும் ரசித்தப்படி இருக்க.. அவன் மனமோ இரவு எழுனியுடன் நடைபெறப் போகும் உறவை நினைத்து நினைத்து களித்தது.
சங்கலியால் கட்டி வைத்த பாறாங்கல்லில் கண்கள் சொருக வந்தியசேனன் தன் கடைசி பயணத்திற்கு பிரயாணமானான்… ஒரு பொழுது வாழ்க்கை வாழ்ந்து மறு பொழுது தன் கண் முன்னே காதலன் உயிர் பிரியப்போவதை தாங்கொணாமல் கன்னம் சிவக்க அழுது… கண்கள் வீங்கி… தலைமுடி கலைந்து… உயிரற்ற பிணமாய் வீற்றிருந்தாள் படகின் மறுபுறம் எழுனி.
‘நடுக்கடல் வந்தாயிற்று… வீசி எறியுங்கள் அவனை….’ படகை ஓட்டிய தலைமைக் காவலன் சொல்ல… படகில் இருந்த பாறையோடு கட்டிய அவனை தூக்கி வீசும் சமயம்… ஓ என்று கதறியவாறு எழுனி அவன் மார்பில் விழுந்து கதற… அவளை தனியே பிரித்து.. அவனை கடலில் தள்ளும் சமயம்…. ‘வந்தியசேனா…’ ஆவேசம் கொண்டு எழுந்த எழுனி…. ஒரு தாவாய் அவனை கட்டித் தழுவியபடி தானும் கடலில் விழுந்து மூழ்கினாள்.
‘எத்தனை முறை கூறியிருக்கிறேன்… இந்த நடுசாமத்தில் வராவேண்டாம் என்று…’
அந்தப் பெரியவர் இளவஞ்சியின் குடிலை அடைந்து கதவை தட்ட, திறந்த கதவில் ஊடே அந்த பெண் அவரைப் பார்த்து கூறவும் சரியாக இருந்தது.
‘பழகிவிட்டது…’
‘நேரத்தோடு வர வேண்டாமா… காத்திருந்து காத்திருந்து என் தூக்கம் தான் கலைகிறது.. மறுநாள் நான் நாட்டிய மாட சிறிது உறக்கம் அவசியம் இல்லையா…’
‘இனி எப்பொழுதும் இது மாதிரி நடவாமல் பார்த்துக்கொள்கிறேன்..’
‘இப்படி தாங்கள் கூறியதை கேட்டு கேட்டு எனக்கும் சலித்துவிட்டது..’
அவள் பொய்க்கோபத்துடன் அந்தப் பெரியவரை கைப்பிடித்து பஞ்சனையில் படுக்கவைத்து செல்ல… அவளின் தலையைக் கோதிய்வாறு….
‘இன்பவல்லி…. நாளை முதல் அந்தி சாயும் பொழுதே வந்து விடுகிறேன்… நிம்மதியாக படுத்துறங்கு…’
‘எந்த “நாளை” என்று சொல்ல மறந்து விட்டீரே.. அப்பா…’
அன்று வந்தியசேனன், எழுனியின் உடல்கள் மூழ்கிய பொழுது கடலில் ஏற்பட்ட மாற்றத்தால் வீசிய ஆழிப்பேரலை வந்தியசேனனை மட்டும் கடற்கறையில் ஒதுக்க… வந்தியசேனன், இளவஞ்சியால் காப்பற்றப்பட்டு இன்பவல்லியைப் பெற்றபின் இளவஞ்சி இறக்க… அந்தக் குழந்தையை வந்தியசேனனே வளர்த்து பெரியவளாக்கி குலத்தொழிலான நாட்டியத்தையே கற்கவைத்து இறுதி மூச்சு வரை அவளுடனே வாழ்ந்து மடிந்தான்.
அன்று அந்தக் கடற்கரை கோவிலை ஆழிப்பேரலை தன்னுள் உள்வாங்கிக்கொள்ள இன்றும் அந்தக் கோவில் கடலில் மூழ்கியபடி மாமல்லபுரத்தின் தற்போதைய கடற்கரைக் கோவிலுக்கு சற்று தொலைவில் மூழ்கியபடி காணப்படுகிறது.
Category:சரித்திர கதைகள்
காலம் கிபி.1300, சரியாக சொல்ல வேண்டும் என்றால் மூன்றாம் இராஜேந்திர சோழனுக்கு பிந்தைய காலம்.
வாசுகாறை என்னும் நாட்டை சுமவன் என்னும் அரசன் அறம் தவறாது ஆட்சி செய்து வந்தான்.சுமவன் மிக பெரும் சிவபக்தன், அதனால் நாட்டின் தென்பகுதியில் மிகப்பெரும் சிவாலயத்தை அமைக்கும் பணியில் ஈடு பட்டிருந்தான்.
நாட்டில் காலம் தவறாது மழை பொழிந்ததால் விவசாயமும் அதை சார்ந்த தொழில்களும் சிறப்பாக நடந்து வந்தன. நாட்டின் ஒரு பக்கம் கடல் நீர் பரப்பி இருந்ததால், வாசுகாறைக்கு இரண்டு நன்மைகள். ஒன்று வாணிபம் செலித்தது மற்றொன்று அந்த பகுதி வழியாக எதிரிகளின் அச்சுறுத்தல்கள் குறைவு.
நாட்டின் மக்கள் சுயதிருப்தியுடன் செலிப்பாக வாழ்ந்து வந்தனர் அதானல் நாட்டின் கஜானாவும் நிரம்பி இருந்தது. ஆலய பணிகளுக்காக செல்வத்தை கணக்கிடாமல் சுமவன் செலவழித்து கொண்டிருந்தான்.
வாசுகாறை-க்கு அவ்வப்போது எதிரிகளிடம் இருந்து அச்சுருத்தல்கள் இருந்து கொண்டே இருந்தது இதற்கு நாட்டின் இயற்கை வளம் முக்கிய காரணம். நாட்டின் நடுவே கோடு கிழித்தார் போல் வாவலாறு எனும் ஆறு ஓடி நாட்டை செலிப்பாக்கியது. இத்தகைய செலிப்பிற்கு சுமவனின் ஆட்சி கொள்கைகளும் முக்கிய காரணம்.
வெறும் ஏட்டு கல்வி மட்டும் உதவாது என்று எண்ணிய மன்னன், தொழில் சார்ந்த கல்வி முறையை பெரிதும் ஊக்குவித்தான் அதற்கு நல்ல பலனும் கிடைத்தது.
இது போக முக்கிய கொளகையாக, வாணிபத்தில் ஈடு படும் தன் நாட்டை சேர்ந்தவர்க்கு போதுமான சலுகைகளையும் அளித்து வந்தான். வெளி நாடு வணிகர்களை அவன் பெரிதும் ஊக்குவித்ததில்லை. இதனாலேயே வாசுகாறை செல்வ செலிப்பு மிக்க நாடாக மாறியது.
இது போக பகைவர் நாட்டம் கொள்ள மற்றொரு காரணமும் இருந்தது அது, நாட்டின் இளவரசி பவதனி. பவதனி ஓர் பேரழகி,மன்னனுக்கு வேறு ஆண் வாரிசு கிடையாது அதானால் பவதனியை மணந்து கொண்டால் நாட்டையும் கைப்பற்றி விடலாம் என்கிற எண்ணத்தில் பகைவர்கள் இருந்தனர்.
சுமவன் ஆன்மிக பணிகளில் ஈடு பட்டிருந்ததால் நாட்டை பாதுகாக்கும் பொறுப்பினை தனது சேனாதிபதி வம்திரனிடம் ஒப்படைத்திருந்தான்.
வீரத்திற்கும் , தீரத்திற்கும் அடையாளம் வம்திரன். தவறு செய்தவர்கள் மன்னனுக்கு பயப்படுகிறார்களோ இல்லையோ இவனுக்கு பயப்படுவார்கள் அவ்வளவு கண்டிப்பானவன்.
மன்னன் தவிர்த்து எவருக்கும் அடிபணிய மாட்டான், சரியென பட்டதை இடம் , பொருள் , ஏவல் பாராது சொல்லிவிடுவான். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தட்டி கேட்க்க தயங்கமாட்டான். இதெல்லாம் அவன் சிறு வயது முதல் கற்ற பாடம். இதானால் நிறைய எதிரிகளையும் சம்பாதித்திருந்தான். இவனது முதுகில் குத்த சமயம் பார்த்து காத்திருக்கிறார்கள் இதில் சில அமைச்சர்களும் அடக்கம்.
போர்தொழில் போக இவனுக்கு பல திறமைகள் உண்டு, அதில் பாடுவதும், இசைப்பதும் அவனுக்கு பிடித்தவை. வீணை எடுத்து மீட்ட ஆரம்பித்தால் இராவணனே தோற்று விடுவான் என்கிற அளவுக்கு எங்கும் ஒலிக்கும் இசை.
தனது நாடான வாசுகாறையை இரவு , பகல், குளிர், வெயில் பாராது, ஒரு நொடியும் தவறாது பாதுகாத்து வந்தான். நட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தனக்கு மிகவும் விசுவாசமானவர்களை ஒற்றர்களாக நியமித்திருந்தான்.
இதனால் ஏதேனும் பிரச்சனை தொடங்கும் முன்பே அதை வேறுடன் அழிக்க முடிந்தது.
எதிரிகளின் அச்சுறுத்தல்கள் அதிகம் இருப்பதால், பவதினி நகர்வலம் செல்லும் பட்சத்தில் பாதுகாப்பு மிகவும் சிரத்தையாக மேற்கொள்ளப்பட்டிருக்கும். வம்திரன் நிச்சயம் அங்கே இருப்பான் பவதனியின் மெய்காப்பாளனாக.
இவ்வாறு நட்கள் நகர்ந்து கொண்டிருந்தது, எதிரிகளின் சின்ன சின்ன சீண்டல்களை வம்திரன் வெற்றிகரமாக முறியடித்து வந்தான்.
***
வசும்பனுக்கு சில நாட்களாக சரியான் தூக்கமில்லை, மேலும் துர்சொப்பனங்கள் வேறு, இதற்கான காரணம் அறிய அரசகுல ஜோதிடர் அறகசியை வரவழைத்தான்.
கிரக நிலைகளை ஆராய்ந்த அவர் மவுனித்தார். மன்னனின் பதட்டம் அறிந்த வம்திரன் அறகசியின் மவுனம் கலைத்தான்.
அவரிடம், அறகசி அவர்களை , தாங்கள் கண்ட கிரக நிலைகளை பற்றி விழக்கி சொல்லுங்கள் என்றான்.
அவ்ர் பெருமூச்சை விட்டு விட்டு சொல்ல துவங்கினார்,
“மன்னா, தங்களின் கிரக நிலை சரியாக இல்லை, இதனால் நாட்டிற்கு பெரும் ஆபத்து வரவிருக்கிறது.”
இதை சரி செய்ய எதும் வழிகள் இருக்கிறதா, சற்றே பதட்டபட்டார் மன்னர்
இருக்கிறது மன்னா, நமது அண்டை நாடான வார்சுழியில் அமைந்துள்ள சிவாலயத்தில் தாங்கள் தொடர்ந்து பதினாறு நாட்கள் பூஜை செய்ய வேண்டும் என்றார்.
இப்போது வம்திரன் குறுக்கிட்டான், அவர்கள் எப்போது நம்முடன் போர் புரியலாம் என்று காத்திருக்கிறார்கள் அவர்களிடம் சென்று நாம் எப்படி உதவி கோர முடியும்.
மாற்று வழி ஒன்று இருக்கிறது மன்னா, அதை செல்லுங்கள் என்று அவசர படுத்தினான் வம்திரன்.
அது வேண்டாம் மன்னா.
பரவாயில்லை செல்லுங்கள் இங்கே நாம் மூவர் மட்டும் தானே இருக்கிறோம். சொல்லுங்கள் அறகசி.
நமது இளவரசிக்கு , மணமுடிதது அவளை மணப்பவனை வாசுகாறைக்கு மன்னனாக முடிசூட்ட வேண்டும்.
இவ்வளவு தானா இதை சொல்லவா தயங்கி நின்றீர்கள்.
இது மட்டும் இல்லை மன்னா, முடி சூட்டிய பின்னர் “நீங்கள், உங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் மன்னா” என்று திக்கி தினறி சொல்லி முடித்தார்.
அவர் வாக்கியத்தை முடித்த நொடி, வெகுண்டெழுந்த வம்திரன், தனது வாளை எடுத்து அறகசியின் கழுத்தில் வைத்தான்.
உத்தரவிடுங்கள் மன்னா… இப்போதே கொல்கிறேன் என்றான் கடும் சினத்துடன்.
அவனை அமைதியடைய சொல்லிவிட்டு தானும் மொளனம் ஆனார் மன்னர், இருவரிடமும் நான் சற்று தனிமையில் இருக்க விரும்புகிறேன். இங்கு நடந்தது நம்க்குள் இருக்கட்டும். நாளை நான் உங்களை சந்தித்து இது பற்றி பேசுகிறேன் நீங்கள் இப்போது நீங்கள் போகலாம் என்றார்.
வம்திரன் சற்று தயங்கினாலும் , சமவனின் வார்த்தைக்ககட்டு பட்டு அங்கிருந்து சென்றான். அவன் சென்றால் அவன் நினைவு முழுவதும் அறகசி சொன்ன விசயத்திலேயே நின்றது.
***
வம்திரன் நாட்டிற்கே சேனாதிவதியாக இருந்தாலும் அவனுக்கு மென்மையான மறுபக்கமும் இருந்தது. அவனுக்குள்ளும் ஒரு காதல் இருந்தது, காதலுக்கு காரணம் மத்தமிழ் பேருக்கேற்றார் போல் தமிழின் இனிமையும் அழகும் சரிவர கலந்த பெண்ணாக இருந்தால்.
இவளுடன் ஒப்பிட்டால் பவதனியும் தோற்று போவாள். இருவருக்குள்ளும் சரியான புரிதல் இருந்தது, இருவரும் பார்த்துக்கொள்வதே அறிது.
இன்று அவளை அவன் பார்க்க சென்றான், மாலை மங்கும் வேளையில், விழித்திருந்தது போதும் என்று சூரியன் வீட்டிற்கு செல்ல ஆயத்தமாகி கொண்டிருந்தது.
அவளுக்கு முன்பாகவே நந்தவனத்திர்க்கு சென்று அவளுக்காக காத்திருந்தான். அவளும் வந்தாள். மின்னல் ஒளியில் மட்டுமே மலரும் தாழம்பூ சூடி காற்றில் எங்கும் நறுமணம் கமழ, அடிமேல் அடிவைத்து இவனை நோக்கி வந்தாள்.
அப்போது நிலவிய சூழ் நிலையில் தொலைவில் இருந்து அவளை பார்த்தால் அவள் பூலோகத்தை சேர்ந்தவள் என்று சொன்னால் யாரும் நம்பமாட்டர்.
அவனும் ஒரு நொடி நிலைகுலைந்துதான் போனான், பின்பு அவளிடம் அரசவையில் நடந்த சிலவற்றை கூறினான். முன்னதாக மன்னனிடம் தனது காதல் பற்றி சொல்லி இவளை மனம் முடிக்க அனுமதி கேட்க்க போவதாக சொல்லியிருந்தான் அவள் அதை வினவினாள்.
இவன் இல்லை என்பது போல் தலையாட்டிவிட்டு, நமக்கும் வார்சுழிக்கு போர் மூளும் நிலை இருக்கிறது அந்த போரில் வெற்றி கண்டு மன்னனிடம் இது பற்றி பேசுகிறேன் என்றான்.
ஏன் திடீரெண போர் என மீண்டும் வினவினாள்??
அவன் பதில் கூறாது நேரம் ஆகிவிட்டது நீ உனது இல்லத்திற்கு செல், மீண்டும் உன்னை மற்றொரு நாள் சந்திக்கின்றேன் என்று வழியனுப்பினான்.
அவளை அனுப்பிவிட்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.
***
மறுநாள், சுமவனை காண இருவரும் சென்றனர். அப்போது தான் எடுத்த முடிவை அவர்களிடம் சொல்ல துவங்கினார்.
கூடிய விரைவில் பவதனிக்கு மணம் முடித்துவிட்டு , தவம் புரிய வனம் புக போவதாக சொல்லி நான் வனாந்திரத்தில் எனது உயிரை மாய்த்து கொள்ள முடிவு செய்திருக்கிறேன் என்றார்.
இப்போது குறுக்கிட்ட வம்திரன், நாட்டு மக்களுக்கு கேடு நேராமல் இருக்க தங்கள் உயிரை விடவும் துணிந்து விட்டீர்கள். வேண்டாம் மன்னா நான் இருக்கிறேன், வார்சுழியை போரில் வென்று காணிக்கை ஆக்குகிறேன். பின்பு நீங்கள் அங்கு சென்று பூஜை செய்யலாம்.
வேண்டாம் வம்திரா, அவர்களது படை பலம் , நம்மை காட்டிலும் அதிகம், அவர்களை வெல்வது கடினம்.
எண்ணிக்கை இருந்தால் என்ன? என்னிடம் வெற்றிபெற வேண்டும் என்கிற வேட்கை இருக்கிறது. எனது உயிர் போகும் முன்னர் அவர்களை வெல்வேன்,தங்களது ஆசிர்வாதத்துடன்.
வாழ்த்தி அனுப்புங்கள் மன்னா…
***
மன்னரும் வாழ்த்தி அனுப்பினார், அன்றே தனது சகாக்களுடன், தாக்குதல் திட்டத்தை வகுக்க துவங்கினான்.
வார்சுழி ஒரு பக்கம் மலை, அதன் பக்கவாட்டு பக்கத்தில் கடல் அதனால் இரு திசை தாக்குதலில் ஈடுபட்டால் போதுமானது என்றான் ஒருவன்.
பொதுவான இடத்தில் போர் நடைபெற இரு நாட்டு மன்னர்களின் ஒப்புதல் அவசியம். சுமவன் சம்மதித்து விட்டார், வார்சுழி இதற்கு உடன்படாத பட்ச்சத்தில் , இரு திசை தாக்குதல் நடத்துவோம் என்று முடிவு செய்தான்.
சங்ககால தமிழ் மரபுபடி எதிரி நாட்டிற்கு முரசறைந்து, போர் புரிய வருவதை தெரிவித்தான் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
அடுத்த கட்ட நடவடிக்கையாக, வம்திரன் மற்றும் பதினைந்து பேர் கொண்ட குழு வெட்சிப்பூ அணிந்து ஆநிரை கவர்தலில் ஈடு பட்டனர். இதற்கு அவர்கள் எதிர்பார்த்த பலன் கிடைத்தது.
அவர்கள், ஆநிரையை மீட்க்க கரந்தை பூ அணிந்து வந்தனர், வந்தவர்களை, தனது படை பலத்தால் தோற்கடித்து அனுப்பினான்.
பின்னர் , வார்சிழியின் தூதுவன் வந்தான், தங்கள் மன்னர் போர் புரிய நாட்டம் தெரிவித்திருப்பதையும், இடத்தை நீங்களே தேர்வு செய்யலாம் என்றான்.
வந்தவனிடம், பொதுவான சமவெளி பகுதியை தேர்வு செய்து அனுப்பிவைத்தான் வம்திரன்.
***
மறு நாள் விடிந்தது, சங்குகள் முழங்க போர்கலம் சென்றான் வம்திரன் தனது படை வீரர்களுடன்.
எதிரிகளின் படை இவர்களைவிட பெரிதாகவே இருந்தது. அவர்கள் சக்கரவியூகத்தில் படைகளை அணிவகுத்து களம் புகுந்தனர். அதை முறியடிக்க ஊசிமுனை வியூகத்தை வம்திரன் பயன்படுத்தின்.
இங்கே வியூகம் என்பது படை வீரர்கள், அணிவகுத்து போர்புரியும் தோற்றத்தை குறிக்கும்.
ஆரம்பத்தில் புழுதி பறந்த போர்களம், நேரம் ஆக ஆக இரத்த சகதியில் புழுதி அமுங்கியது. மதிய பழுது வரை நடைபெற்ற போரில் வார்சுழியின் பக்கமே இழப்பு அதிகமாக இருந்தது.
மதிய பொழுதுவரை நிலையாக போர் செய்த வம்திரனால், அதன் பிறகு நிலையாக போர் புரிய இயலவில்லை.
இதற்கு காரணம் , மெதுவாக கொல்லும் நஞ்சை எதிரி நாட்டு அரசன் இவனுக்கு குடுக்க சொல்லியிருக்கிறான் என்பதை தாமதமாகத் தான் அறிந்தார்கள் ஒற்றர்கள்.
விவரம் அறிந்ததும் உடனடியாக வைத்தியர் வரவழைக்கப்பட்டார். மாற்று மருந்து அளிக்கப்பட்டு மீண்டெழுந்தான் வம்திரன்.
இந்த நிலைமையில் அவனை போர் புரிய வேண்டாம் என்று தடுத்தனர் அவனது சகாக்கள், “வீழ்வது இழிவாக விழுந்து கிடப்பது இழிவே” என்று சொல்லி அவர்களிடம் ஒரு புன்னகையை உதி்ர்த்தான்.
நஞ்சிட்ட துரோகியை பிடிக்க தன் சகாக்களிடம் உததரவிட்டு, ஆவேசமாக போர்களம் புகுந்தான்.
அம்புகளை மழையென பொழிந்து முன்னேறினான், இந்த முயற்ச்சியில் வார்சுழி சேனாதிபதியை சொர்கத்திற்கு அனுப்பினான். பின்பு வார்சுழி மன்னனை நோக்கி தனது கவனத்தை திருப்பினான். அவனை ஆக்ரோஷமாக நெருங்கினான்.
இவனது வேகம் கண்டு சரணடைய முற்ச்சிப்பது போல் அவனிடம் மண்டியிட்டு வேண்டலானான். வம்திரன் யோசித்து நின்ற நேரத்தில் தன்னிடம் இருந்த நஞ்சில் தோய்ந்த கத்தியால் வம்திரனது வலது மார்பில் குத்தினான்.
இதை எதிர்பாரதபோதும் சுதாரித்து பின் தனது வாளைக்கொண்டு ஒரே வீச்சில் அவனது தலையய் கொய்தான்.
ஏற்கனவே உணவில் இருந்த நஞ்சுடன் இப்போது கத்தில் இருந்ததும் சேர்ந்து கொண்டதால் அவனால் நிலைகொள்ள முடியவில்லை.
இருந்தும் உயிர் போகும் முன் வெற்றியை காணிக்கை ஆக்குகிறேன் என்று வாக்கு குடுத்திருந்ததால் தனது புரவில் தாவி ஏறி வாசுகாறை நோக்கி விரையத் துவங்கினான்.
***
இரத்தம் வழியும் தேகத்துடன் அரசவைக்குள் நுழைந்தான், மன்னை கண்டு தான் வெற்றி கண்டதை சொன்னான். பின்பு தனது காதல் பற்றியும் கஷ்டப்பட்டு சொல்லி முடித்து மயங்கி விழுந்து விட்டான்.
உடனே அரண்மனை வைத்தியர் வரவழைக்கப்பட்டார், வம்திரனுக்கு வைத்தியம் பார்க்கப்பட்டது. அவன் கண்விழிக்க இரண்டு நாட்கள் ஆகும் என்றார் வைத்தியர்.
மன்னன் போரில் வெற்றி பெற்றாலும் வருத்தத்துடனே காணப்பட்டார். இதை கண்ட ஒரு அரசவை அமைச்சர் தனிமையில் காரணம் வினவினார்.
எல்லாம் , இளவரசியை பற்றியது தான் அவளை வம்திரனுக்கு மனம் முடித்து வைத்து விட்டால். நாடும் நன்றாக இருக்கும் , அவளும் சந்தோஷமாக இருப்பாள் என்று எண்ணியிருந்தேன். ஆனால், வம்திரனோ இன்னொருத்தியை காதலிப்பதாக சொல்கிறான்.
இதில் என்ன முடிவெடுக்க என்று எனக்கு தெரியவில்லை.
இதற்கு நான் வழி சொல்கிறேன். இந்த அமைச்சருக்கும் வம்திரனுக்கும் பனி போர் நடந்து கொண்டிருக்கிறது. என்பதை அறியாத மன்னன். அமைச்சரின் ஆலோசனைக்கு செவிசாய்த்தான்.
வம்திரனின் சந்தோஷத்தை கெடுக்க நினைத்த அமைச்சர், சுமவனிடம் அவன் காதல் கொள்ளும் பெண்ணை நாடு கடத்திவிடலாம் அல்லது அவளை கொலை செய்து விடலாம்.
ஒரு நாட்டின் வருங்காலத்திற்காக , ஒரு உயிரை கொல்வதில் எந்த பாவமும் இல்லை என்றார்.
முதலில் மறுத்த மன்னன் பின்னர் சமதித்தார். அதுவும் வம்திரன் கண்விழிப்பதர்க்குள் நிகழவேண்டும்.
இந்த முடிவின் படி மறு நாளே மத்தமிழ் வீட்டுடன் நெருப்பி்ன் நக்குகளுக்கு இரையாக்கப்பட்டாள்.அது கொலையாக இல்லாமல் விபத்தென ஆக்கப்பட்டது.
***
குணமடைந்த வம்திரன் கண்விழித்தான், தடு மாற்றத்துடன் நடந்து மன்னனை பார்க்க சென்றான்.
இவனிடம் மத்தமிழிக்கு ஏற்ப்பட்டதை எப்படி சொல்வது என்று குழப்பத்தில் இருந்தான். இவனது குழப்பத்தை உணர்ந்த வம்திரன் அவனே கேட்டான்.
என்ன மன்னா? இன்னும் என்ன வருத்தம்? என்றான்
தயங்கி தயங்கி துயரசெய்தியை சொன்னான்.
கேட்டவுடன் நொருங்கி போன் வம்திரன், தான் உடனடியா துறவரத்தில் ஈடுபடபோவதாக தனது போர் வாளை சுமவனின் பாதத்தில் வைத்தான்.
இதை சற்றும் எதிர் பாராத மன்னன் அவனது தோழ் தொட்டு “வம்திரா.. நட்டின் பாதுகாப்பே உனது கையில் தான் இருக்கிறது. இதை நிரந்தரமாக்கவும் நாட்டின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டும் நான் பவதனியை உனக்கு மணம் முடடித்து வைக்க முடிவு செய்திரு்க்கிறேன். இந்த நேரத்தில் நீ வனம் புக போவதாக செல்கிறாய். இத்தனை நாள் நீ கட்டி காத்த வாசுகாறையை இனி யார் பார்த்து கொள்வார்”
என்னை தடுக்காதீர்கள் மன்னா..
அப்படி சொல்லாதே வம்திரா உனக்காக இல்லாவிட்டாலும் எனக்காகவும் இந்த நாட்டிற்காகவும் நீ இதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
உடனே நீ மாற வேண்டாம் , நான் தெற்கே கட்டி வரும் ஆலயத்தின் திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது அது முடிந்து. ஆலயத்தில் கும்பாபிஷேகம் முடிந்த பிறகு உங்களது திருமணத்தை நடத்தலாம் என்றார்.
வம்திரனுக்கு இஷ்டம் இல்ல விட்டாலும், மன்னரின் வார்த்தையை தட்ட முடியாத காரணத்தால் சம்மதித்தான்.
***
நாட்கள், கடந்தன ஆலய திருப்பணிகள் முடிந்தன, ஆகம விதிகளின் படி பூஜைகள் மேற்கொள்ள, மிக பெரும் யாகங்களுக்கு ஏற்ப்பாடு செய்ய பட்டது.
இதற்கிடையில் மத்தமிழுக்கு இழைக்கப்பட்ட அநீதி வம்திரனின் செவிகளுக்கு வந்து சேர்ந்தது. கடும் கோபம் கொண்டான்.
என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான், மன்னரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்தான். மறு கணம் வேண்டாம் துறவு மேற்கொள்ளுவோம் என்று முடிவு செய்தான். இப்படி ஏகப்பட்ட சிந்தனைகள் அவனது மூளைக்குள் சுற்றி திரிந்தன.
இறுதியாக ஒரு முடிவெடுத்தான் , மன்னனுக்கு மடல் ஒன்றை எழுதினான், அவனுக்கு விசுவாசமான ஒருவனை அழைத்து மன்னரிம் சேர்க்க சொன்னான்.
பின்பு ஆலயம் நோக்கி சென்றான் , அங்கே எறிந்து கொண்டிருக்கும் யாக குண்டத்தில் விழுந்து இவனும் நெருப்புக்கு இரையானான்.
அந்த மடலில்,
மன்னா,
மத்தமிழுக்கு ஏற்ப்பட்ட உன்மை நிலையை நான் அறிவேன். அதானல், என்னுள் ஏகப்பட்ட குழப்பமான எண்ணங்கள் தோன்றின. இறுதியாக ஒரு முடிவை எடுத்திருக்கிறேன். என்னவளை தீண்டிய நெருப்பின் நாவில் நானும் விழ ஆசைப்படுகிறேன். இதற்கு மற்றுமொரு காரணம் இருக்கிறது. பஞ்ச பூதங்களில் நெருப்பிர்க்கு மட்டுமே நேரடியாக வானுலுகத்தில் சேர்க்கும் சக்தி உள்ளது. வையத்தில் சேராத எங்கள் காதல் வானத்திலாவது சேரவேண்டும் என்று இறைவனை பிரார்த்தியுங்கள்.முக்கியமாக, எனக்கு தெரிந்த அனைத்து ராஜ ரகசியுங்களும் என்னுடனே இருக்கிறது. நீங்கள் என்னை வஞ்சித்ததால் நானும் அப்படி செய்வேன் என்று நீங்கள் நினைத்து பயம் கொள்ள வேண்டாம்.
நீங்கள் இதை படிக்கும் நேரத்தில் நான் வையத்தை விட்டு சென்றிருப்பேன்.
இது ஒரு ராஜ விசுவாசியின் இறுதி மடல்.
படித்த மன்னர் தன்னையும் அறியாது கண்ணீர் வடித்து அழத்துவங்கினார்.
Category:சரித்திர கதைகள்
அர்ச்சுனன் இருளில் விற்பயிற்சி செய்துகொண்டிருக்கிறான். துரோணர் தீவட்டி வெளிச்சத்துடன் அவனை நோக்கி வருகிறார்.
துரோணர்: அர்ச்சுனா, வில்லின் நாண் உன் உள்ளங்கையில் உராய்ந்த ஒலி கேட்டு இங்கே வருகிறேன். இவ்விருளில் என்ன செய்துகொண்டிரு- க்கிறாய் வீரனே ?
அர்ச்சுனன்: வணக்கம் குருதேவா!விற் பயிற்சிதான் செய்து கொண்டிரு க்கிறேன். அன்றொரு நாள் இரவில் உணவருந்திக்கொண்டிருக்கும்போது
காற்றடித்ததில் விளக்குகள் அணைந்து போயின. ஆனால் நான் சாப்பிடுவதை நிறுத்தவில்லை. என் கை வாயைத்தவிர வேறிடத்தில் செல்லவில்லை. அதேபோல உணவை எடுத்த இடத்திலும் கை மாறவில்லை. இதற்கெல்லாம் காரணம் தினம் உண்டதால் ஏற்பட்ட கைப்பயிற்சிதானே என்று உணர்ந்தேன். அதே பயிற்சியை வில்லிலும் இரவில் தொடர எண்ணியே இங்கே வந்தேன். தங்களிடம் கூறாமல் வந்துவிட்டதை மன்னிக்க வேண்டுகிறேன்.
துரோணர்: ( அர்ச்சுனனைத் தழுவிக்கொண்டே) மகிழ்ச்சி, அர்ச்சுனா மெத்த மகிழ்ச்சி. உன்னைப்போன்ற சிறந்த பயிற்சி உடையவனைக் காணேன். இனி உலகில் உனக்குச் சமமான வில்லாளி இல்லை எனும் அளவுக்கு உனக்குப் பயிற்சி தரப்போகிறேன். இது உண்மை.
அர்ச்சுனன்: நன்றி குருதேவா! நான் பெரும் பாக்கியம் செய்தவன்! அதற்கான தகுதி எனக்குண்டாக ஆசீர்வதியுங்கள் பெருமானே!
துரோணர்: அங்ஙனமே ஆகுக, என் பிரிய சீடனே!
காட்சி:2
காலம்: ஒரு பகல்
களம் : துரோணர் இல்லம்
கதை மாந்தர் : ஏகலைவன், துரோணர்
ஏகலைவன்: வணக்கம் குருதேவா!
துரோணர்: யாரது மகனே, உன் தேடல் யாது ?
ஏகலைவன்: குருதேவரே, பக்கத்துக்காட்டில் வாழும் வேடர்களின் தலைவனான இரண்யதனுஸ் என்பவரின் மகன் நான். என் பெயர் ஏகலைவன். வில் வித்தையைச் சிறப்பாகக் கற்றுக்கொள்ளவிழைகிறேன். அவ்வித்தையைக் கற்பிப்பதில் தங்களைவிடச் சிறந்த ஆசிரியர் எவரும் இலர் என்று கேள்விப்பட்டு த் தங்களையே குருவாக வரிக்க வந்திருக்கிறேன். என்னையும் தங்கள் சீடர்களில் ஒருவனாக ஏற்றுக் கடாட்சிக்கவேண்டும் மகாகுருவே! (மீண்டும் வணங்குகிறான்)
துரோணர்: எழுந்திரு வேடன் மகனே! கல்வி தேடி குருவை நாடி வந்தவனை உதாசீனப்படுத்தக்கூடாது. ஆனால் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் பயிற்சி அளிப்பதற்கே எனக்கு நேரம் காணவில்லை. என்றாலும் உன்னையும் என் சீடனாகக் கருதுகின்றேன். எப்போதும் விற்பயிற்சி செய்பவனாய் இரு. அதில் மிக்க பலம் உள்ளவனாவாய். இப்போது வீட்டிற்குத் திரும்பச்செல். என் மனமார்ந்த ஆசிகள்.
ஏகலைவன்: தங்கள் கட்டளைப்படியே ஆகட்டும் குருதேவா! (வணங்கித் திரும்புகிறான்)(மனதுக்குள்): தங்களையே குருவாக வரித்து தங்கள் பதுமையின் முன் என் பயிற்சிகளை ஆரம்பிப்பேன், வழிகாட்டுவீராக!
காட்சி:3
காலம்: சில மாதங்கள் கழித்து ஒரு பகல்
களம் : துரோணர் இல்லம்
கதை மாந்தர்: துரோணர், அர்ச்சுனன்
அர்ச்சுனன்: (துரோணரைப் பார்த்து) வணக்கம் ஐயனே! ‘உனக்கு மேம்பட்ட சீடன் எனக்கில்லை ‘ என்று என்னைத் தழுவிக்கொண்டு ஒரு முறை அன்புடன் கூறி இருக்கிறீர்கள். அப்படியிருக்க தங்களுக்கு என்னைவிட மேம்பட்ட சீடன் ஒருவன் இருக்கிறானே, அதெப்படி குருவே ?
துரோணர்: என்ன கூறுகிறாய் அர்ச்சுனா, சற்று விளக்கமாய்ச் சொல்.
அர்ச்சுனன்: குருதேவா, நேற்று உங்களிடம் அனுமதி பெற்று நாங்களும் கெளரவர்களும் காட்டுக்கு வேட்டையாடச் சென்றோமில்லையா ? எங்கள் பின்னால் வந்துகொண்டிருந்த நாய் ஒன்று பலமாகக் குரைத்துக்கொண்டே ஒரு கரிய வேடுவச் சிறுவனை நோக்கி ஓடியது.ஆனால் சிறிதே நேரத்தில் ஏழு பாணங்களால் நிரப்பப்பட்ட வாயுடன்
குரைக்கமுடியாமல் அந்நாய் எங்களிடம் ஓடி வந்தது. யார் இவ்வளவு திறமையுடன் அம்புகளை எய்தார்கள் என்று அவ்வேடச்சிறுவனைத்தேடிக் கேட்டதில், ‘ வீரர்களே, நான் இரண்யதனுஸ் என்பவனுடைய மகன். என் பெயர் ஏகலைவன்.தனுர் வேதத்தில் பயிற்சி பெற்றுவருகிறேன். துரோணரின் மாணவன் நான் ‘ என்று அவன் பதில் கூறினான். இப்போது கூறுங்கள், குருதேவரே, அவன் எவ்வாறு உங்கள் சீடனானான், எப்போது விற்பயிற்சி பெற்றான், எங்களுக்கும் தெரியாத வித்தைகளை அவன் எப்படிக் கற்றான் ?
துரோணர்: வீரனே, அவசரப்பட வேண்டாம். என்னுடன் வந்து அவனைக் காட்டு. அவன் முன்னிலையிலேயே நீதான் என் அத்யந்த சீடன் என்பதை நிரூபிக்கிறேன். வா, செல்லலாம்.
காட்சி:4
காலம்:மாலை.
களம் :வனம்
கதை மாந்தர்: துரோணர், அர்ச்சுனன், ஏகலைவன்
ஏகலைவன் துரோணரைப் போன்று மண்ணால் செய்யப்பட்ட பதுமையின் முன் வணங்கிவிட்டு தொடர்ந்து அம்புகளை எய்தவண்ணம் விற்பயிற்சியில் இருக்கிறான். துரோணர் வருவதைக்கண்டவுடன் ஓடிவந்து அவர் பாதங்களில் விழுந்து வணங்குகிறான். ஏகலைவன்: வணக்கம் குருதேவரே, நான் தங்கள் சீடன் ஏகலைவன். தங்கள் கிருபையால் தனுர்வித்தை ஒரளவு கைவரப் பெற்றிருக்கிறேன். மேலும் பயிற்சியைத் தொடர்ந்து செய்து வருகிறேன்.அருள்பாலியுங்கள் குருநாதரே!
துரோணர்: மகிழ்ச்சி ஏகலைவனே, உன் திறமை கண்டு போற்றுகிறேன். அதிருக்கட்டும்; நீ என் சீடன் என்றால் எனக்கு குரு காணிக்கை கொடுக்கவேண்டுமல்லவாஅப்போதுதானே கற்ற வித்தைக்குப் பலன் உண்டாகும் ?
ஏகலைவன்: பெருமானே, நான் என்ன கொடுக்கவேண்டும் ?கட்டளை இடுங்கள்!
துரோணரின் முகம் நிறம் மாறுகிறது.தன் வஞ்சக எண்ணத்தை மறைத்து,
துரோணர்: என் பிரிய சீடனே, குரு காணிக்கையாக உன் வலக்கைக் கட்டை விரலைத் தருவாயா ?
ஏகலைவன்: குருதேவரே, என்னவோ என்று பயந்துபோய் விட்டேன். இதோ உங்கள் காணிக்கை, ஏற்றுக்கொள்வீர்களாக!(இவ்வாறு கூறிக்கொண்டே தன் வலக்கைக் கட்டை விரலை வெட்டி துரோணரிடம் தருகிறான் ஏகலைவன். துரோணரும் வாய்ப் பேச்சற்றவராக கைகளை உயர்த்தி ஏகலைவனை ஆசீர்வதித்தவண்ணம் அர்ச்சுனனைப் பார்க்கிறார், ‘உன் போட்டியை ஒழித்துவிட்டேன் பார்த்தாயா ‘ என்ற குறிப்பு தோன்ற)
அர்ச்சுனன்: ஏகலைவா, என்னே உன் குரு பக்தி! நீ நீடூழி வாழ்க! உன் வித்தையும் வாழ்க!
காட்சி: 5
காலம்:சில வாரங்கள் கழித்து ஒரு மாலை.
களம் :துரோணர் இல்லம்
கதை மாந்தர்:அர்ச்சுனன், துரோணர்.
அர்ச்சுனன் பதறிக்கொண்டே ஓடி வருகிறான். துரோணரைப் பார்த்து அர்ச்சுனன்: நாம் மோசம் போய்விட்டோம் குருதேவா! ஏகலைவன் உங்களை ஏமாற்றிவிட்டான்.
துரோணர்: என்ன பதட்டம் இது அர்ச்சுனா, எதைக் கண்டு இந்த முடிவு ?
அர்ச்சுனன்: ஆம் குருதேவரே, இன்னொரு முறையாக இப்போதுகூட ஏகலைவனின் வில் திறனை நான் பார்க்கநேர்ந்ததே காரணம். நேற்றிரவு ஏகலைவன் கானகத்தினோரம் ஒரு பசுவைக் கொல்ல வந்த புலியின் வாயை அம்புகளால் கட்டி விரட்டியடித்த விந்தையை நட்சத்திர ஒளிக்கிடையே நான் கண்டேன். இருளிலும் சப்தங்களைக்கேட்டே அம்பைக்குறி வைக்கும் திறனை அவனிடம் பார்த்தேன். ஆனால் அவனிடம் நேரில் எதுவும் பேசாமல் வந்து விட்டேன். இது எப்படி சாத்தியமாயிற்று அவனுக்கு ? அவன் எதோ ஏமாற்று வேலை செய்திருக்கிறான் என்றே நினைக்கிறேன் குருதேவா!
துரோணர்: இருக்காது வீரனே, என்னை நம்பு. என் சீடர்கள் எவரும் பொய்யர்கள் அல்லர். இன்னமும் நீதான் என் தலையாய சீடன். எனினும் நீ கூறியது என்னை சங்கடப்படுத்துகிறது. நாமிருவரும் நாளை ஏகலைவனைச் சந்தித்து உண்மையை அறிவோம்.அதுவரை பொறுமை காத்திரு.
அர்ச்சுனன்: குருதேவா, என்னைவிடச் சிறந்த வில்லாளி என்னிடம் ஏற்படுத்திய மன உளைச்சலில் தங்கள் மனதை சங்கடப்படுத்தியதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். என்னை மன்னியுங்கள் பெருமானே!
துரோணர்: சென்று வா வீரனே, வீரம் வெல்லட்டும்!
அர்ச்சுனன் வணங்கி விடை பெறுகிறான்.
காட்சி:6
காலம்: மறு நாள் காலை
களம் :கானகம்
கதை மாந்தர்: ஏகலைவன், துரோணர், அர்ச்சுனன்
ஏகலைவன் குருவின் பதுமையின் முன் வணங்கி கண்களை மூடித் தியானத்தில் இருக்கிறான். துரோணரும் அர்ச்சுனனும் வரும் சலசலப்பு சத்தம் கேட்க, கண் திறந்து துரோணரைப் பர்த்துவிட்டு அவரை வணங்குகிறான்.
துரோணர்(ஏகலைவனைப் பார்த்து): வாழ்க குழந்தாய்,ஒன்பது விரல்களைக் கொண்டு கைகூப்பி வணங்கும்படி உன்னைச் செய்துவிட்டேனே,என் விபரீதகோரிக்கையை பொறுத்துக்கொள்வாயாக! இன்னமும் உன் வில் வித்தை ஆசை போகவில்லைபோலிருக்கிறதே. நேற்று முன் தினம் இரவு நீ ஒரு புலியின் வாயைக்கட்டி விரட்டியதை அர்ச்சுனன் பார்த்தானாம். என்னிடம் சொன்னான். வலக்கை கட்டைவிரல் இழந்தும் இது எப்படி சாத்தியமாயிற்று என்று எனக்கே வியப்பாக இருக்கிறது!
ஏகலைவன்: குருதேவரே! உங்கள் பரிபூரண ஆசி இருக்கும்போது எதுதான் சாத்தியமாகாது ? மேலும் நீங்கள் வலக்கை கட்டை விரலைத் தானே பெற்றுப்போனீர்கள் ? நான் இடக்கைப் பழக்கம் உள்ளவனாயிற்றே! அதனால் என் வில் வித்தைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை; இனியும் இருக்காது.அது இருக்கட்டும், தாங்கள் இப்போது என்னைக் காண வந்த காரணம் நான் அறியலாமோ பெருமானே ?
எகலைவன் கூற்றைக் கேட்ட துரோணரும் அர்ச்சுனனும் திகைத்துப் போகிறார்கள்.முகத்தில் குற்ற உணர்வுடன், துரோணர்: என்னை மன்னித்துவிடு , என் பிரிய சீடனே, நான் முதலிலேயே உன்னிடம் உண்மையைக் கூறியிருக்கவேண்டும். அர்ச்சுனன்தான் என்றும் என் சிறந்த சீடன் என்று அவனிடம் வாக்களித்திருந்தேன். ஆனால் சத்திரியனான அவனைவிட வேடனான நீ வில் வித்தையில் சிறந்து விளங்குவதை அவனால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. என் வாக்கும் பொய்த்துப்போய் விடும்போலிருந்தது. எனவேதான் உன்னைச் செயலிழக்கச் செய்ய உன் வலக்கை கட்டைவிரலைக் காணிக்கையாகப் பெற்றேன். ஆனால் என் பொய் என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டது.உன் இடக்கைப் பழக்கம் உன் வித்தையைக் காப்பாற்றிவிட்டது. (அர்ச்சுனனைப் பார்த்தவாறே) அர்ச்சுனனும் என்னை மன்னிக்கட்டும்! நான் வருகிறேன்.(திரும்ப யத்தனிக்கிறார்)
ஏகலைவன் (அவரை இடைமறித்து) :குருசிரேஷ்டரே,அபசாரம்,அபசாரம். இவ்வார்த்தைகள் தங்கள் திருவாயிலிருந்து வரலாமா ? தாங்கள் என்னிடம்காணிக்கை கேட்டபோதே தங்கள் நோக்கத்தை நான் உணர்ந்திருக்கவேண்டும். அதற்கேற்ப என் இடக்கைக் கட்டை விரலை தங்களுக்குக் காணிக்கையாக தந்திருக்கவேண்டும். நான் வேட்டுவன்தானே, அரசாளும் சத்தியர்களுக்கும் அவ்ர்கள் பேணும் அந்தணர்களுக்கும் உள்ள சாமர்த்திய புத்தி எனக்கில்லையல்லவா ? இப்போதும் கேளுங்கள். இன்னொருமுறை காணிக்கையாக என் இடக்கை க் கட்டை விரலையும் தரத் தயார்!…….
துரோணர் இடை மறிக்கிறார்: வேண்டாம் குழந்தாய், வேண்டாம். நான் இழைத்த ஒரு குற்றமே போதும்!
அர்ச்சுனனும் இடைமறித்து:நண்பனே ஏகலைவா,போதும். உன் குரு பக்தியையும் விற்திறனையும் கண்டு நான் வெட்கப்படுகிறேன், பொறாமைப்படுகிறேன். என் தகுதி எனக்குத் தெரிந்துவிட்டது. நீ மேலும் உன்னை வருத்திக்கொள்ளவேண்டாம்.
ஏகலைவன்: மன்னிக்கவேண்டும் குருதேவரே! நான் இன்னொரு உண்மையையும் சொல்லவேண்டும். உங்களுக்கு என் இடக்கை கட்டைவிரலைக் காணிக்கையாக்கிவிட்டு நான் சும்மா இருக்கமாட்டேன். வில் வித்தையின் மேலுள்ள என் ஆர்வம் என்றுமே தீராதது.ஆகவே கை கட்டைவிரல்களை இழந்தாலும் கால் விரல்களால் பயிற்சி செய்ய ஆரம்பிப்பேன். குருவருளால் வெற்றியும் பெறுவேன். ஆனால் குருவின் எண்ணங்களை நிறைவேற்றாத பாவியாகிவிடுவேன். ஆகவே என் கை கால்களில் உள்ள எல்லா விரல்களையுமே உங்களுக்குக் காணிக்கையாக்கத் தயாராகயிருக்கிறேன்.கட்டளை இடுங்கள் குருநாதரே!
துரோணர்(திடுக்கிட்டு ஏகலைவா, என்ன விபரீதம் இது ? எங்களை மேலும் கொடூரர்களாக ஆக்க முயற்சிக்காதே. என் வாக்கு பொய்த்ததாகவே இருக்கட்டும்.அர்ச்சுனனை நான் வேறு வழிகளில் சமாதானப்படுத்துகிறேன். எல்லாம் விதிப்படிஅன்றோ நடக்கும் ? குழந்தாய், உன் குரு பக்தி இணயில்லாதது.எங்களை மீண்டும் மன்னித்துவிடு. நாங்கள் விடை பெறுகிறோம்.
ஏகலைவன்: குருதேவரே, உங்கள் பெரிய மனது எனக்குப் புரிகிறது. ஆனால் என்னைக் கடமை தவறியவனாக ஆக்கிவிடாதீர்கள். உங்கள் எண்ணத்தைப் பூர்த்தி செய்ய நான் கடமைப் பட்டுள்ளேன். அதை உங்கள் மீது பழியில்லாவண்ணம் என் விரல்களை வெட்டிக் கொள்ளாமலேயே நிறைவேற்றும் வழி உண்டு என்று நினைக்கையில் எனக்கு மகிழ்ச்சி மேலிடுகிறது. உங்கள் வாக்கு பொய்க்காதபடி இனி அர்ச்சுனனே உங்களின் தலை சிறந்த சீடனாக விளங்குவான். ஆம்,இக்கணம் முதல் நான் வில்லைத் தொடமாட்டேன். என் வேட்டுவத் தொழிலுக்காக ஈட்டி,கத்தி,கம்பு, கை போன்றவைகளையே பயன் படுத்துவேன். இது உறுதி, அந்தணரும் சத்திரியரும் அறிய, கானும் வானும் அறிய, என் வில்லும் அம்புகளும் அறிய உறுதி. இச் சபதம்தான் குருவுக்கான என் காணிக்கை. மன மகிழ்வுடன்ஏற்று என்னை வாழ்த்தி அருளுங்கள் முனிபுங்கவரே! (துரோணரின் கால்களில் விழுகிறான்)
துரோணர்(ஏகலைவனை தூக்கி நிறுத்தி மார்புடன் அணைத்து): குழந்தாய் ஏகலைவா! உன் சபதம் என்னை மெய் சிலிர்க்கவைக்கிறது. எவர் வேண்டுமானாலும் என் தலை சிறந்த சீடனாகயிருக்கலாம், ஆனால் குருபக்தியில் எந்தச்சீடனும் உன்னை மிஞ்சமுடியாது. இது சத்தியம். சத்திரியர்களையும், அந்தணர்களையும் இன்று வெட்கப்படச் செய்துவிட்ட வேட்டுவ வீரனே, வீரத்துக்கும் நற்பண்புகளுக்கும் குலம் தடையல்ல என்று நீ நிரூபித்துவிட்டாய்.பிதாமகர் பீஷ்மரும் பொறாமைப் படக்கூடிய இரண்டாவது பீஷ்மன் நீ! வாழ்க உன்னனையோர்! ஐயனே, எங்களுக்கு விடை கொடு!
துரோணரும் அர்ச்சுனனும் வெட்கம் சூழ வெளியேறுகின்றனர்.
Category:சரித்திர கதைகள்
புனித மரியாளின் மகனான ஈசா, விஷயங்களைஅறியத் துடிக்கும் ஆர்வக் குறுகுறுப்பை கட்டுக்குள் அடக்காத சில நபர்களுடன் ஜெருசலேம் அருகிலிருந்த பாலைவனப் பகுதியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்,
அம் மனிதர்கள், இறந்தோரை உயிர்ப்பிக்கும் அந்த ரககிய பெயரை தங்களுக்குச் சொல்லித் தருமாறு ஈசாவை நச்சரித்துக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம், ” நான் அதை உங்களுக்குச் சொன்னால், நீங்கள் அதை துஷ்பிரயோகம் பண்ணுவீர்கள் “, என்று ஈசா சொன்னார்.
“இல்லை, அது குறித்த அறிவைப் பெறுவதற்கான தகுதியுடன், நாங்கள் தயாராக இருக்கிறோம். மேலும் அதைத் தெரிந்து கொள்வது எங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தவே செய்யும்’ என்றனர் அந்நபர்கள் .
“நீங்கள் எதைக் கேட்கிறீர்கள் என்பது உங்க்ளுக்கு தெரியவில்லை’ என்று சொல்லி விட்டு, ஈசா நபி அதை அவர்களுக்குத் தெரிவித்து விட்டார்.
அதன் பிறகு அந் நபர்கள் பாலைவனத்தில் தொடர்ந்து சென்றார்கள். சற்று தூரத்தில் வெள்ளையாக எலும்புக் குவியல்கள் கிடந்ததை அவர்கள் கண்டனர்.
“நாம் கற்றுக் கொண்ட வார்த்தையை இப்போது பரீட்சித்துப் பார்ப்போம் என்று அவர்கள் பேசிக் கொண்டனர்.அதன் படி செய்யவும் செய்தனர்.
அந்த எலும்புக் குவியல்கள் ரத்தமும் சதையும் பெற்று, கோரமான,. வெறிபிடித்த மிருகமாகி, அந் நபர்களைக் கடித்து குதறி நார் நாராகக் கிழித்து விட்டது.
இதை அறிவுள்ள விவேகிகள் புரிந்து கொள்ளுவார்கள். குறைந்த அறிவுள்ளவர்கள் இக் கதையைப் படிப்பதன் வழி தன்னை நிறைப் படுத்திக் கொள்வார்கள்.
Category:சூஃபி ஞானி கதைகள்
சூஃபி ஞானி ஒருவர், ஆளரவமற்ற மலைப்பாங்கான பகுதியில் தனியாகப் பயணம் போய்க் கொண்டிருந்தார்.
அவர் முன் திடீரென ஒரு அரக்கன் தோன்றி “உன்னைக் கபளீகரம் பண்ணப் போகிறேன்” என்று அவரிடம் சொன்னான்.
“அப்படியா சரி. உன்னால் முடிந்தால் முயற்சி செய்து பார். ஆனால் நான் உன்னை எளிதாக வென்றுவிட முடியும். நீ நினைப்பது போலில்லாமல், நான் உன்னைவிட அதிக பலசாலி” என்று பதில் சொன்னார் அந்த சூஃபி.
“நீ சொல்வது முட்டாள்தனமான பேச்சு. நீ ஒரு சூஃபி. உனக்கு ஆன்மீக விஷயங்களில்தான் அக்கறை இருக்கும். நீ என்னை வெல்ல முடியாது. என்னிடம் அசுர மிருகபலம் இருக்கிறது. உன்னைவிட முப்பது மடங்கு பெரியவன்” என்று பதில் சொன்னான் அந்தப் பிணந்தின்னி அரக்கன்.
“உனக்கு பலப்பரீட்சை செய்து பார்க்கும் ஆசையிருந்தால் இந்தக் கல்லை எடுத்துச் சாறாகப் பிழி பார்ப்போம்” என்று சொல்லிவிட்டு ஒரு சிறு பாறாங்கல்லை எடுத்து அந்த அரக்கனிடம் கொடுத்தார் சூஃபி.
எவ்வளவு முயன்றும், சூஃபி சொன்னபடி, அந்த அரக்கனால் செய்ய முடியவில்லை.
“அது சாத்தியமில்லை. இந்தக் கல்லில் எந்த நீரும் கிடையாது. இருந்தால் அதை எனக்கு நீ காட்டும்” என்று சொன்னான் அரக்கன். சூஃபி அந்த அரையிருட்டு நேரத்தில் அந்தக் கல்லைத் திரும்ப வாங்கினார். தன் பையிலிருந்து ஒரு முட்டையை எடுத்து, கல்லையும் முட்டையையும் சேர்த்துப் பிழிந்தார் சூஃபி.
நீர் வழிவதைக்கண்ட அரக்கன் ஆச்சரியப்பட்டுப் போனான். மக்கள் புரியாத விஷயத்தினைக் கண்டு அசந்து போய் அதன்மேல் அளவுக்கதிகமாக மதிப்பு வைக்கத் தொடங்குவர்.
“நான் இதைப் பற்றி யோசிக்கவேண்டும். என்னுடைய விருந்தாளியாக இன்றிரவு என் குகையில் தங்குங்கள்” என்று சூஃபிக்கு உபச்சார வார்த்தைகள் சொன்னான் அரக்கன்.
சூஃபியும் அரக்கனுடன் போனார். அரக்கனின் குகை அவனால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான வழிப் பயணிகளின் வைர வைடூரியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாயக் கதைகளில் வரும் அலாவுதீனின் அற்புதக் குகை போலவே அது இருந்தது.
“என்னுடைய பக்கத்தில் படுத்துத் தூங்கு. காலையில் மற்ற விஷயங்களைப் பேசிக் கொள்வோம்” என்று சூஃபியிடம் சொல்லி விட்டு படுத்தவுடன் தூங்கிவிட்டான் அரக்கன்.
தான் ஏமாற்றப் படுவோம் என்பதை உள்ளுணர்வால் உணர்ந்த சூஃபி, தந்திரமாக தான் படுக்கையில் இருப்பது போன்ற ஏற்பாடுகளைப் பண்ணி விட்டுத் தூரப்போய் ஒளிந்து கொண்டார்.
அவர் போனதுதான் தாமதம், அரக்கன் படுக்கையிலிருந்து எழுந்தான். பெரிய மரக் கட்டையை எடுத்து சூஃபி படுத்திருந்த இடத்தைப் பார்த்து ஏழு விளாசு விளாசினான்.
அதன் பின் படுத்து மறுபடியும் உறங்க ஆரம்பித்தான். சிறிது நேரம் கழித்து சூஃபி தனது படுக்கைக்குத் திரும்பினார், அரக்கனைக் கூப்பிட்டார்,
“ஓ அரக்கனே! உனது குகை சௌகரியமாயிருக்கிறது. ஆனால் ஒரு சிறு கொசு மட்டும் என்னை ஏழு தடவை கடித்தது. அதை மட்டும் போக்குவதற்கு நீ எதாவது செய்தாக வேண்டும்” என்றார்.
பெரிய மரக்கட்டையால் அசுர பலத்தில் ஏழு தடவை அடி வாங்கிய பின்பும்.. சூஃபி பேசியது அரக்கனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது .
காலை புலர்ந்தவுடன், அரக்கன் எருமைத் தோலாலான பையை எடுத்து சூஃபியை நோக்கி எறிந்து “கொஞ்சம் தண்ணீர் எடுத்து வா. காலைச் சமையல் செய்யலாம்” என்றான்.
சூஃபி அந்தப் பையை எடுக்காமல் – உண்மையில் அந்தப் பையை அவரால் தூக்கி நடக்க முடியாது – பக்கத்திலிருந்த நீர்ச் சுனைக்குச் சென்றார். நீர்ச் சுனையிலிருந்து குகைக்கு ஒரு சிறிய கால்வாயைத் தோண்டினார்.
அரக்கன் தாகத்தால் துடித்தான்.
“ஏன் தண்ணீரை சுமந்து வரவில்லை?” என்று அரக்கன் கேட்டான்.
“பொறுமையோடிரு, நண்பனே! வசந்த கால நீருற்றின் தண்ணீர், உன் குகையின் முகத்துவாரத்துக்கே நிரந்தரமாக வர, கால்வாய் வெட்டியுள்ளேன். அதனால் உனக்கு தண்ணீரைச் சுமந்து வர வேண்டிய அவசியமிருக்காது” என்று பதில் சொன்னார் சூஃபி.
தாக விடாயினால் அரக்கனுக்குப் பொறுக்க முடியவில்லை. எருமைப் பையை எடுத்துக் கொண்டு ஆற்றுக்குப் போய் நீரைத் தானே நிரப்பிக் கொண்டான் அரக்கன்.
காலைத் தேனீர் தயாரிக்கப்பட்டவுடன், அதைப் பல பீப்பாய்கள் குடித்து முடித்தான் அரக்கன். தேனீர் குடித்தவுடன் அரக்கனுக்கு புத்தி லேசான தெளிவுடன் வேலை செய்ய ஆரம்பித்தது.
“நீங்கள் பலவானாக இருந்தால் – ஏற்கனவே அதை எனக்கு நிரூபித்துவிட்டீர்கள் – இருந்தும் ஏன் அந்தக் கால்வாயை அங்குலம் அங்குலமாக வெட்டுவதற்கு பதில் வேகமாக வெட்டக்கூடாது?” என்று சூஃபியிடம் கேட்டது அரக்கன்.
“உண்மையில் செய்ய வேண்டிய அர்த்தமிக்க வேலைகளை அதற்குரிய உழைப்பைப் போடாமல் செய்து முடிக்க முடியாது. எல்லாவற்றுக்கும் அதனளவுக்கு ஏற்றவாறு முயற்சிகள் தேவை. நான் கால்வாயைத் தோண்ட எவ்வளவு அத்தியாவசியமான முயற்சி தேவைப்படுமோ அதை மட்டும் செலவிடுகிறேன். ஆனால், பழக்கத்திற்கு அடிமையாகிவிட்ட ஜந்துவான நீ , அந்த எருமைத் தோல் பையைத்தான் எப்போதும் பயன்படுத்துவாய் என்பதும் எனக்குத் தெரியும்” என்றார் சூஃபி.
Category:சூஃபி ஞானி கதைகள்
ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.
“”யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?” என்றான்.
“”தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!” என்றார்.
“”இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை!” என்று அந்த அரக்கன் கூறினான்.
அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் தின்று வந்தார்.
அவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.
“”குரங்கை வெளியே அனுப்புங்கள்; கொன்றுவிடுங்கள்!” என்று கத்தினர்.
கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார்.
“”வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்!”
அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். “”இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!” என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.
அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.
“”எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?” என்றனர்.
அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.
அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.
நீதி: அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்.
Category:நீதிக் கதைகள்
அரசனுக்கே ஆசானாக இருந்தார் ஒரு குரு. ராஜகுருவாகவே இருந்தாலும், அரசபோகத்தை அனுபவிக்க விரும்பாத அவர், ஒரு தேசாந்திரியாக பயணித்து, மக்கள் தருவதைப் பெற்றுக் கொள்வது வழக்கம்.
ஒரு நாள் அந்த நாட்டின் தலைநகரை விட்டு, மற்றொரு நகரை நோக்கி நடந்தார்.
மாலை நேரமாகிவிட்டது. மழை வேறு. ஒரு கிராமம் எதிர்ப்பட்டது. முற்றாக நனைந்துவிட்ட குரு, விவசாய பண்ணைக்கு நடுவில் இருந்த ஒரு வீட்டை அணுகினார். வீட்டுக்கு வெளியே நிறைய ஷூக்கள், நனையாமல் இருந்தன.
சரி, ஆட்கள் நிறைய இருக்கிறார்கள்… நனையாத உடை, ஒரு ஜோடி ஷூ வாங்கி அணிந்து கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு உள்ளே நுழைந்தார்.
உள்ளேயிருந்து வந்த ஒரு பெண்மணி, குருவுக்கு ஒரு ஜோடி ஷூக்களை தந்தார். அவர் உடை நனைந்திருப்பதைப் பார்த்து, வேறு உடை மாற்றிக் கொள்ளுமாறும், இரவை அங்கேயே கழிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
வீட்டு முகப்பில் ஒரு சிறு கோயில். அங்கு சிறிது நேரம் கண்மூடி நின்ற குருவுக்கு,
பின்னர் உள்ளே இருந்த தனது அம்மா மற்றும் குழந்தைகளை அந்தப் பெண்மணி அறிமுகப்படுத்தினார்.
ஆனால் அவர்கள் முகத்தில் ஏதோ ஒரு வாட்டத்தை அவர் கண்டார். ஏதோ சரியில்லை என்பது புரிந்ததும், “என்ன அம்மா உங்கள் பிரச்சினை?” என்று கேட்டார்.
“அய்யா… என் கணவர் ஒரு சூதாடி, குடிகாரர்.. எப்போதெல்லாம் சூதாட்டத்தில் ஜெயிக்கிறாரோ, அப்போது இருக்கும் பணத்தையெல்லாம் குடித்துவிடுவார். தோற்கும்போது, வீட்டிலிருப்பதை எடுத்துப்போய் விடுவார். அல்லது கடன் மேல் கடன் வாங்குகிறார். சமயத்தில் குடித்துவிட்டு எங்கேயோ விழுந்துகிடந்து பின் வருகிறார்… என்ன செய்வதென்றே புரியவில்லை,” என்றார்.
கவலை வேண்டாம்… நான் உதவுகிறேன்… இதோ என்னிடம் இவ்வளவு பணம் உள்ளது. நல்ல ஒயினையும், சாப்பிட உணவும் வாங்கி வாருங்கள். அதன் பிறகு நீங்கள் படுக்கப் போங்கள்… நான் அந்தக் கோயிலில் சற்று நேரம் தியானம் செய்கிறேன்”, என்று அந்தப் பெண்ணிடம் பணம் கொடுத்து அனுப்பினார்.
சிறிது நேரத்தில் அப்பெண்ணின் கணவன் வந்துவிட்டான். மித மிஞ்சிய போதையில் இருந்தான். கால்கள் தரையில் நிற்கவில்லை…
“ஏய்… இங்க வாடி… நான் வந்துட்டேன்டி… என்ன பண்ற.. சாப்பாடு கொண்டா” என்று சத்தமாகக் கேட்டான்.
உடனே அவனிடம் வந்த குரு, “இதோ நான் தருகிறேன், நீ கேட்டதை,” என்றார்.
பின்னர், “மழையில் மாட்டிக் கொண்டேன். உன் மனைவிதான் இங்கு தங்க அன்போடு அனுமதித்தார். அதற்கு பிரதியுபகாரமாக நல்ல ஒயினும் சாப்பிட மீனும் கொண்டு வந்துள்ளேன்,” என்றார் குரு.
குடிகார கணவனுக்கு ஒரே சந்தோஷம். மொத்த ஒயினையும் குடித்தான். சாப்பிட்டான். அப்படியே தரையில் சரிந்து விழுந்து தூங்கிவிட்டான்.
குருவோ, அவனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டார்.
விடிந்தது.
கணவன் எழுந்து பார்த்தான். முந்தைய இரவு நடந்தது எதுவும் அவனுக்கு நினைவிலில்லை.
குருவைப் பார்த்தான். “யார் நீ.. எங்கிருந்து வருகிறாய்? என் வீட்டில் என்ன வேலை?” என்று கேள்விகளை வீசினான்.
புன்னகை மாறாத முகத்துடன் அவனது கேள்விகளை எதிர்கொண்ட குரு, “நான் இந்த நாட்டு மன்னனின் குரு. பக்கத்து நகருக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்,” என்றார்.
ராஜகுரு என்றதும், அந்த குடிகார கணவன் திடுக்கிட்டான். தான் நடந்து கொண்டதை நினைத்து வெட்கமடைந்தான். தனது செயல் மற்றும் பேச்சுக்காக மன்னிப்பு கோரினான்.
குருவின் முகத்தில் புன்னகை மாறவில்லை. “வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. வாழ்க்கை குறுகியது. அந்த குறுகிய காலத்தில், குடி, சூதாட்டம் என இருந்தால், உடனிருக்கும் நல்ல உறவுகளை இழந்துவிடுவாய்.. குடும்பமே இல்லாமல் போய்விடும் என்பது தெரியவில்லையா?”, என்றார்.
ஏதோ ஒரு ஆழ்ந்த கனவிலிருந்து விழித்துக் கொண்டவனைப் போல திடுக்கிட்டு எழுந்தான் குடிகார கணவன்.
“ஆம்.. நீங்கள் சொல்வது சரிதான் குருவே…”, என்றவன், ” உங்களின் இந்த அற்புதமான அறிவுரைக்கு நான் என்ன திருப்பித் தரப் போகிறேன்,” என உருகினான்.
“கொஞ்ச தூரம் உங்களின் பொருள்களைத் தூக்கிக் கொண்டு உடன் வருகிறேன். ஒரு சிறிய சேவகம் செய்த திருப்தியாவது கிடைக்கும்,” என்றான் திருந்திய அந்த குடிகாரன்.
“சரி… உன் விருப்பம்,” என்றார் குரு.
இருவரும் நடக்க ஆரம்பித்தனர். மூன்று மைல்கள் தாண்டியாயிற்று. அவனை திரும்பிப் போகச் சொன்னார் குரு. இன்னும் 5 மைல்கள் உடன் வருவதாய் அவன் தெரிவித்தான்.
ஐந்து மைல்கள் கடந்தது. ‘சரி.. நீ போகலாம்’ என்றார் குரு.
“இன்னும் ஒரு பத்து மைல்கள் வருகிறேனே…” என்று மன்றாடினான்.
பத்து மைல்கள் கடந்ததும், கொஞ்சம் கண்டிப்பான குரலில், “நீ இப்போது வீட்டுக்குத் திரும்பலாம்,” என்றார் குரு.
“குருவே, இனி நான் பழைய பாதைக்கு திரும்புவதாக இல்லை. மிச்சமிருக்கும் நாளெல்லாம் தங்கள் வழியைப் பின்பற்றி நடப்பேன்!,” என்றான் உறுதியான குரலில்…
Category:ஜென் கதைகள்
இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது.
எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர்.
என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களில்லாம் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்?
கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள்.
உடனே தளபதி வீரர்களை அழைத்து, “சரி வீரர்களே… நாம் ஒரு முடிவுக்கு வருவோம். இதோ இந்தக் கோயிலுக்கு முன் ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுகிறேன். அதில் தலை விழுந்தால் வெற்றி நமக்கே. பூ விழுந்தால் நாம் தோற்பதாக அர்த்தம். இப்படியே திரும்பிவிடுவோம்…வெற்றியா தோல்வியா.. நமக்கு மேல் உள்ள சக்தி தீர்மானிக்கட்டும்… சரியா?”
“ஆ.. நல்ல யோசனை… அப்படியே செய்வோம்…”
நாணயத்தைச் சுண்டினான் தளபதி. காற்றில் மிதந்து, விர்ரென்று சுழன்று தரையில் விழுந்தது நாணயம்.
தலை…!
வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். வெற்றி வெற்றி என்று எக்காளமிட்டபடி போர்க்களம் நோக்கி ஓடினர். வெகு வேகமாக சண்டையிட்டனர் எதிரி நாட்டவர்களோடு.
அட.. என்ன ஆச்சர்யம். அந்த சிறிய படை, எதிரி நாட்டின் பெரும் படையை வீழ்த்திவிட்டது!
துணைத் தளபதி வந்தான். ‘நாம் வென்றுவிட்டோம்… கடவுள் தீர்ப்பை மாற்ற முடியாதல்லவா…” என்றான் உற்சாகத்துடன்.
“ஆமாம்… உண்மைதான்” என்படி அந்த நாணயத்தை துணைத் தளபதியிடம் கொடுத்தான் தளபதி.
நாணயத்தின் இரு பக்கங்களிலும் தலை!
Category:ஜென் கதைகள்
மாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில் என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம்!
இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.
அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது. உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது முடி துறவியின் காலில் பட்டது.
ஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு ஒரே சங்கடம்.
‘எத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் அதிபதி… உலகமே வியக்கும் ஒரு பேரரசன் போயும் போயும் இந்த பரதேசியின் காலில் விழுந்து, முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே!’ என்ற நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் அடைந்தார்.
அரண்மனை சென்றதுமே அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார். ஆனால் அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அவரிடமிருந்து ஒரு விசித்திர உத்தரவு வந்தது அமைச்சருக்கு.
“மந்திரியாரே… ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் மன்னர்.
நாம் சொன்னதென்ன…. இவர் உத்தரவென்ன…. என்ற திகைப்புடன் கட்டளையை சிரமேற்கொண்டு ஏவலாட்களை நாடெங்கும் அனுப்பினார்.
ஆட்டுத் தலைக்கு அதிகம் கஷ்டப்படவில்லை. கறிக்கடையில் கிடைத்துவிட்டது.
புலித்தலைக்கு ரொம்பவே அலைய வேண்டி வந்தது. கடைசியில் ஒரு வேட்டைக்காரனிடம் அது கிடைத்தது.
ஆனால் மனிதத் தலை? உயிரோடிருப்பவனை வெட்டி தலையை எடுத்தால் அது கொலை… என்ன செய்யலாம் என யோசித்தபோது, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக் கொண்டுவந்த ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டனர்.
மன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், “சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்று பொருளாக்கி வாருங்கள்,” என்றார்.
மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது.
புலியின் தலையை வாங்க யாரும் முன் வரவில்லை. பலரும் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். கடைசியில் ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார்.
இப்போது மனிதத் தலைதான் மிச்சமிருந்தது. அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர் ஏவலாட்கள்.
மன்னரிடம் போய், விவரத்தைச் சொன்னார் அமைச்சர்.
“அப்படியா… சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்”, என்றார் மன்னர்.
ஒரு நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக் கொள்ள யாருமே முன் வரவில்லை.
விஷயத்தைக் கேட்ட அசோக மன்னர் புன்சிரிப்புடன் இப்படிக் கூறினார்:
“மந்திரியாரே… நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?” என்றார்.
அமைச்சர் மவுனம் காத்தார்.
“மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது? சக மனிதன்தானே… வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா… ஆனால் நடை முறையில் இலவசமாகக் கொடுத்தாலும் அருவருத்து ஓடுகிறார்கள்… இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.
இருந்தும் இந்த உடம்பு உயிரும் துடிப்புமாக உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி..!” என்றார்.
அமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்!
Category:ஜென் கதைகள்
ஒரு குருவும் அவருடைய சீடர்களுடம் ஆற்றங்கரையோரம் கலகலப்பாகப் பேசிக்கொண்டே சென்றனர்.
ஒரு சீடன் கேட்டான், ‘குருவே, பூர்வாசிரமத்தில் நீங்கள் ஒரு பெரிய போர் வீரராக இருந்ததாகவும், பல நாடுகளுக்குப் பயணம் செய்து வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்ததாகவும் மூத்த சீடர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்… நிஜம்தானா?’
‘நிஜம்தான்.. ஆனால் அதெல்லாம் அந்தக் காலம். இப்போது நான் ஆயுதங்களைக் கைவிட்டுவிட்டேன்…!’ என்றார் குரு.
‘ஏன் குருவே? போர் தவறா… ஆயுதங்களே வேண்டாமா?’
‘சரி தவறு என்பதல்ல என் வாதம்… ஒரு கட்டத்துக்குமேல் புத்திக் கூர்மையும் அமைதியையும் விட சிறந்த ஆயுதம் எதுவும் இல்லை என்று புரிந்துவிட்டது எனக்கு!”
குருவின் வார்த்தைகளில் சீடர்களுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. அவரை சோதித்துப் பார்த்துவிட முடிவு செய்து, ஒரு திட்டம் போட்டனர்.
‘நாளை குரு தியானத்தில் இருக்கும்போது, நாம் இருவரும் மறைந்திருந்து அவரைத் தாக்குவோம். அப்போது அவர் ஆயுதங்களை எடுக்காமல் நம்மை எப்படிச் சமாளிக்கிறார் என்று பார்ப்போம்,’ என்று முடிவு செய்தனர்.
மறுநாள் வகுப்புகள் முடிந்ததும், குரு வழக்கம்போல தியானத்தில் ஆழந்துவிட, இந்த இரு சீடர்கள் மட்டும் ஓலை தட்டிகளுக்கு அப்பால் மறைந்து கொண்டனர்.
சில நிமிடங்கள் கழித்து இருவரும் மெல்ல வெளியில் வந்தனர். பேசி வைத்தபடி இருவரும் குருவின் மீது ஏக காலத்தில் இரு பக்கமிருந்தும் பாய்ந்தனர்.
குரு முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவர்கள் பக்கத்தில் நெருங்கும்வரை கண்மூடி அமைதியாக இருந்த குரு, கடைசி விநாடியில் சற்று முன்னே வந்து குனிந்துகொண்டார். சீடர்கள் இருவரும் மடேர் என்று மோதிக் கொண்டு தரையில் விழுந்து உருண்டனர்.
எதுவும் நடக்காததுபோல் தியானத்தைத் தொடர்ந்தார் குரு!
குழப்பம் குருவே குழப்பம்!
புகழ்பெற்ற துறவி அவர்.
அவருக்கு ஏராளமான மாணவர்கள். ஒருநாள், அந்த துறவியின் பழைய மாணவர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார்.
பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பிறகு, ‘குருவே, எனக்கு ஒரு குழப்பம்,’ என்று ஆரம்பித்தார் மாணவர்.
‘என்ன?’
‘நான் உங்களிடம் படித்த தியானத்தை முறையாகத்தான் பின்பற்றுகிறேன். கவனமாகத்தான் செய்கிறேன். அவை எனக்கு மிகுந்த மன அமைதியையும் புத்திக்கூர்மையையும் தருகின்றன. அதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்!’
‘மகிழ்ச்சி. மகிழ்ச்சி… இதில் என்ன குழப்பம்?’
‘நான் தியானத்தில் இல்லாத வேளைகளில் முழுமையான நல்லவனாக இருக்கிறேனா என்ற சந்தேகம் இருக்கிறது. அது எனக்கே சில நேரங்களில் தெரிகிறது. சில நாள்களில் நானும் ஒன்றிரண்டு தவறுகளைச் செய்கிறேன். தியானம் பழகிய ஒருவன் இப்படிச் செய்வது சரிதானா? இதை யோசிக்கும்போது என் உள்ளம் குன்றிச் சிறுத்துவிடுகிறது!”
குருநாதர் சிரித்தார். ‘ஆக… நீ தியானமும் செய்கிறாய், தவறுகளும் செய்கிறாய், அப்படித்தானே…?’
‘ஆமாம் குருவே. அது தவறில்லையா?’
‘இல்லை. நீ தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், தினமும் தியானம் செய், தினமும் தவறு செய், கொஞ்ச நாளில் இதில் ஏதேனும் ஒன்று நின்றுவிடும்!’
‘அய்யோ.. ஒருவேளை தவறு நிற்பதற்குப் பதில் தியானம் நின்றுவிட்டால்?’
‘அதுவும் நல்லதுதான். உன்னுடைய இயல்பு எது என்று புரிந்துவிடும் இல்லையா?!”
Category:ஜென் கதைகள்
இரு நண்பர்கள்…
பாலை மணல் வெளியில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் ஒரு விஷயம் குறித்து வாதம் ஆரம்பித்தது. அது வாய்ச்சண்டையாக மாறியது. நண்பனின் கன்னத்தில் அறைந்துவிட்டான் மற்றொருவன்.
அறை வாங்கியன் கோபிக்கவில்லை. அமைதியாக ஒதுங்கிப் போய் மணலில் அமர்ந்தான்.
விரல்களால் இப்படி எழுதினான்:
“இன்று என் உயிர் நண்பன் என் கன்னத்தில் அறைந்துவிட்டான்!”
மற்றவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருவரும் நடையைத் தொடர்ந்தார்கள்.
வழியில் ஒரு பாலைவன ஊற்றைக் கண்டார்கள்.
நடந்ததை மறந்து, அந்த ஊற்றில் வெக்கை தீர குளிக்க ஆரம்பித்தார்கள்.
கன்னத்தில் அறை வாங்கியவன் காலை திடீரென்று யாரோ இழுப்பது போன்ற உணர்வு. ஆஹா.. புதைகுழியில் சிக்கிக் கொண்டான் அவன்.
நண்பன் நிலை கண்டதும், பெரும் பிரயத்தனப்பட்டு காப்பாற்றி கரை ஏற்றினான் அவனை அறைந்தவன்.
உயிர் பிழைத்த நண்பன் ஊற்றை விட்டு வெளியில் வந்ததும், அருகில் இருந்த ஒரு கல்லின் மீதமர்ந்தான். ஒரு கல்லை எடுத்து தட்டித் தட்டி எழுத ஆரம்பித்தான்.
“இன்று என் உயிர் நண்பன் என் உயிரைக் காப்பாற்றினான்”
இதையெல்லாம் பார்த்த மற்றவன் கேட்டான்..
“நான் உன்னை அறைந்தபோது, மணலில் எழுதினாய். இப்போது காப்பாற்றியிருக்கிறேன். கல்லில் எழுதுகிறார். ஏனிப்படி? இதற்கு என்ன அர்த்தம் நண்பா?”
நண்பனின் பதில்…
“யாராவது நம்மை காயப்படுத்தினால், அதை மணலில் எழுதிவிடு. மன்னிப்பு எனும் காற்று அதை அழித்துவிட்டுப் போய்விடும். ஆனால் யாராவது நல்லது செய்தால் அதை கல்லில் எழுது… காலத்தைத் தாண்டி அது நிலைத்திருக்க வேண்டும்!”
Category:ஜென் கதைகள்
ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு.
“உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?”
“ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” -இது அவன்.
கடவுள் சிரித்தார்.
“என் நேரம் முடிவற்றது… எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?”
“மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது?”
கடவுள் சொன்னார்…
“மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்… ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான்.
பணத்துக்காக உடல்நலனை இழக்கிறான்… பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான்…
எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பதில், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான்… நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு இல்லாமலே போகிறது!
சாகாமல் இருக்க வாழ்கிறான்… ஆனால் வாழாமலே சாகிறான்…”
கடவுளின் கைகள் லேசாக அசைந்தன.. சில நொடிகள் மவுனம்.
“ஒரு தந்தையாக, இந்த பூமியில் உள்ள உங்களின் பிள்ளைகளுக்கு சொல்ல விரும்பும் வாழ்க்கைப் பாடம் என்ன?”
-மீண்டும் கேட்டான்.
கடவுளிடமிருந்து ஒரு புன்னகை…
“கண்ணா… யாரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று வலுவில் முயற்சிக்காதே… நேசிக்கப்படும் அளவு நடந்து கொள்.
வாழ்க்கையில் ஒருத்தன் சம்பாதிச்சது மதிப்புள்ளதல்ல… அதை எப்படிச் சம்பாதிச்சான் என்பதில்தான் அந்த மதிப்பிருக்கு…
ஒண்ணைவிட ஒண்ணு சிறந்ததுன்னு ஒப்பிடுவதே கூடாது.
எல்லாம் இருக்கிறவன் பணக்காரன்னு நினைக்காதே… உண்மையில் யாருக்கு தேவை குறைவோ அவன்தான் பணக்காரன்!
நாம் நேசிக்கும் ஒருத்தரை புண்படுத்த சில நொடிகள் போதும்… ஆனால் அதை ஆற்ற பல ஆண்டுகள் ஆகும்…
நம்மை நேசிக்கும் பலருக்கு அதை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் இருப்பதுதான் நிஜம்…
பணம் இருந்தா எல்லாத்தையும் வாங்க முடியும்னு நினைக்கிறது தப்பு. சந்தோஷத்தை ஒருபோதும் வாங்க முடியாது.
இரண்டு பேர் ஒரே விஷயத்தைப் பார்த்தாலும், அவர்கள் பார்க்கும் விதம் வேறு வேறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்.
ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம், சக நண்பனைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும்.. எந்த சூழலிலும் அவனை விரும்புவதுமே!
அடுத்தவனை மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, தன்னைத் தானே மன்னித்துக் கொள்ளும் தன்மை வேண்டும்…
நீ சொன்னதை மற்றவர் மறக்கலாம்… நீ செய்தததையும் மறந்து போகலாம்.. ஆனால், உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!”
-பேட்டி முடிந்தது என்று சொல்லும் விதமாக கண்களால் சிரித்தார் கடவுள். அவரது கதவுகள் மூடின…
தேவையானது கிடைத்த சந்தோஷத்துடன்… விழித்தெழுந்தான் அவன்!
Category:ஜென் கதைகள்
ஒர் ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் இல்லாத விஷயங்களே இல்லை. அத்தனையும் அளவுக்கு அதிகமாக கொட்டிக் கிடந்தன. ஆனால் சந்தோஷமும் நிம்மதியும்தான் இல்ல.
சரி, உள்ளூர்லதான் சந்தோஷம் கிடைக்கல. வெளியூர், விதவிதமான நாடுகளுக்குப் போனா கிடைக்குமான்னு, தேடித் தேடிப் போனான்… ம்ஹூம் நிம்மதி கிடைச்சபாடில்ல. மனசுக்குள்ள எப்பவும் பரபரப்பு… எந்த ஊருக்குப் போனாலும் அடுத்த நாளே, வீட்டுல என்ன ஆச்சோங்கிற கவலை. தண்டவாளப் பெட்டி பத்திரமா இருக்குமாங்கிற பயம்… சொந்தக்காரங்களே அமுக்கிடுவாங்களோங்கிற சந்தேகம்!
சரி, இதை மறந்தாவது தொலைக்கலாம்னு சரக்கு, பொண்ணு, போதைப் பொருள்னு சகலத்திலும் இறங்கிட்டான். ஆனா அதிலும் நிம்மதி கிடைக்கல…
சீ போதும் இந்த வாழ்க்கை… இனி துறவறத்தில் இறங்கி சந்நியாசியா போயிடலாம். அமைதி கிடைக்கும்னு யாரோ சொல்ல, அவனும் துறவறத்தில் இறங்கினான்.
உடனே அவன் தன் வீட்டில இருந்த தங்கம், வைரம், வைடூரியம், எக்கச்சக்க பணம் எல்லாத்தையும் ஒரு மூட்டையா கட்டி எடுத்துக்கிட்டு ஒரு துறவியைப் பார்க்கப் போனான்.
அப்போது துறவி ஒருத்தரு மரத்தடியில உட்கார்ந்துட்டிருந்தார். அதைப் பார்த்த அந்த கோடீஸ்வரன், அந்த மூட்டையை துறவியின் காலடில வச்சிட்டு, “குருவே! இதோ என்னோட மொத்த சொத்தும் இதுல இருக்கு. இனி இவை எதுவும் எனக்கு வேணாம். எனக்கு அமைதியும், சந்தோஷமும்தான் வேணும்… அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க…,” சொல்லி கும்பிட்டான்.
எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட துறவி, உடனே அந்த மூட்டையை வேகமா பிரிச்சுப் பாத்தார்.
அதில் கண்ணை தங்கமும் வைர வைடூரியங்களும் கட்டுக்கட்டா பணமும்… துறவி சடார்னு, அந்த மூட்டையை கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சார்.
அதைப் பாத்ததும் கோடீஸ்வரனுக்கு இன்னும் பேரதிர்ச்சி. ‘அடடா.. இவன் பஞ்சத்துக்காக காவி கட்டிய போலி சாமியார் போலருக்கே’ன்னு பதறிட்டான். கோபம் கோபமாக வந்தது. உடனே துறவியை துறத்த ஆரம்பிச்சிட்டான் நம்மாளு!
துறவியின் ஓட்டத்துக்கு செல்வந்தனால் ஈடு கொடுக்க முடியல. துறவி சந்து பொந்தெல்லால் சர்வ சாதாரணமா ஓடறார். தாவிக் குதிக்கிறார்… ம்ஹூம்.. பணக்காரனால ஒண்ணுமே பண்ண முடியல. ஆனா துறவி எல்லா தெருக்களையும் ஓடி முடித்து கடைசியில் அதே மரத்தடிக்கு வந்து நின்னுட்டார்!
அந்த கோடீஸ்வரனைப் பாத்தார். “என்ன கண்ணா பயந்துட்டியா… இந்தா உன் சொத்து மூட்டை… நீயே வச்சுக்க…” என்று திருப்பிக் கொடுத்தார்.
சொத்து மூட்டை கையில் வந்ததும் கோடீஸ்வரன் அடைஞ்ச சந்தோஷத்துக்கு அளவே இல்ல. ஒரே குதூகலமாயிட்டான். முகமெல்லாம் சிரிப்பு தாண்டவமாடுது.
இப்போது அந்த துறவி கேட்டார்…
“என்னப்பா… புதுசா சிரிக்கிற… இதுக்கு முன்னாடி இந்த செல்வமெல்லாம் எங்கே இருந்துச்சி… உங்கிட்டதானே… ஆனால் அப்ப உன்கிட்ட மகிழ்ச்சி இல்ல… இப்பவும் நீ வச்சிருக்கிறது அதே சொத்துதான். ஆனா சந்தோஷமும் நிம்மதியும் உன் முகத்தில் தெரியுது…!” என்று கூறிவிட்டு, சட்டென்று திரும்பிப் பார்க்காமல் நடந்தார்!
எல்லாம் புரிந்த தெளிவோடு வீடு திரும்பினான் செல்வந்தன்!
Category:ஜென் கதைகள்
அது ஒரு மிகப் பெரிய மடாலயம். ஒரு காலத்தில் அங்கு பேச்சுரிமை தடை செய்யப்பட்டிருந்தது. தடை என்றால் உங்க வீட்டுத் தடை எங்க வீட்டுத் தடை அல்ல… மாபெரும் தடை.
யாரும் பேசக் கூடாது. பேசவே கூடாது. ஒரே ஒரு விதிலக்கு… பத்தாண்டுகளுக்கு ஒரு முறை புத்த பிட்சுகள் மட்டும் பேசலாம்… அதுவும் இரண்டே இரண்டு வார்த்தைகள் மட்டும்!
அந்த புத்தமடத்தில் தலைமைப் பிஷு இருந்தார். அவரது சீடர் ஒருவர் அந்த மடத்தில் 10 ஆண்டுகளை ஒரு வார்த்தைகூடப் பேசாமல் கழித்தார். பின்னர் தலைமைப் பிஷுவிடம் வந்தார்.
‘சொல்லு… நீ பேச விரும்பும் இரு வார்த்தைகள் என்ன?’
‘படுக்கை… கடினம்’
‘ஓ… அப்படியா…’ என்று பதிலளித்தார் தலைமை குரு.
பத்தாண்டுகள் கழித்து, அந்த பிஷு திரும்பி தலைமை குருவிடம் வந்தார்.
‘ஓ அதற்குள் பத்தாண்டுகள் போய்விட்டதா…’ – கேட்டார் தலைமை குரு.
‘சரி… இந்த முறை நீ பேச விரும்பும் இரு வார்த்தைகள் என்ன?’
‘சாப்பாடு… நாத்தம்..’
‘ஓ… அப்படியா’ என்று கேட்டுக் கொண்டார் தலைமை குரு.
மேலும் பத்தாண்டுகள் கழிந்தன. பிஷு வந்தார்.
தலைமை பிஷூ, “ம்.. பத்துவருடங்கள் ஓடிவிட்டன… இப்போது நீ பேச விரும்பும் இரு வார்த்தைகள் என்ன?’ என்றார்.
‘நான்… போகிறேன்’
‘நல்லது…’ என்றார் குரு.
பின்னர், ‘கண்ணா… இது நான் எதிர்ப்பார்த்த ஒண்ணுதான்…’, என்ற தலைமை குரு, ‘இந்த முப்பது வருடங்களும் நீ ஒன்றை மட்டும்தான் சொல்லிக் கொண்டிருந்தாய்… அது புகார்.. கிளம்பு!’ என்றார்.
Category:ஜென் கதைகள்
அந்தப் புதிய இளம் மாணவனின் பெயர் மக்தூம். அறிவிலும், பயபக்தியிலும் (தக்வா), அடக்கத்திலும் சிறந்து விளங்கிய அவனை சூஃபி மகான் பெரிதும் நேசித்தார்.
இதனால் மூத்த மாணவர்கள் பொறாமைப்பட்டனர். எப்பொழுது பார்த்தாலும் மக்தூமைப் பற்றி சூஃபி மகானிடம் ஏதேனும் புகார் சொல்லி, கோள் மூட்டிக்கொண்டே இருந்தனர். மக்தூமை விரட்டியடிக்க பல சூழ்ச்சிகள் செய்தனர்.
மூத்த மாணவர்களுக்கு சரியான பாடம் புகட்ட முடிவு செய்த மகான், ஒருநாள் எல்லா மாணவர்களையும் அழைத்தார். “அன்புச் செல்வங்களே! உங்கள் அறிவாற்றலுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன். அதில் வெற்றி பெறுபவர் என் வாரிசாவார்” என்றார்.
எல்லா மாணவர்களும் போட்டிக்குத் தயார் ஆயினர்.
அவர்களுக்கு எதிரே, ஒரே வடிவத்தில், ஒரே வண்ணத்தில், ஒரே அளவில் மூன்று மனித பொம்மைகள் வைக்கப்பட்டன. அந்த மூன்றில் சிறந்தது எது என்பதைக் கண்டறிந்து சொல்லும்படி மகான் ஆணையிட்டார்.
மூத்த மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து பொம்மைகளைப் பல கோணங்களில் பார்த்தனர்; யாருக்கும் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. நீண்ட நேரம் ஆய்வு செய்த பின்னரும் சிறந்த பொம்மையைக் கண்டறிய முடியவில்லை. அவர்கள் குருவிடம் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.
இப்பொழுது மக்தூமின் முறை! அவன் மெல்லிய, நீண்டதொரு கம்பியைக் கொண்டு வந்து முதல் பொம்மையின் காதில் நுழைத்தான். கம்பி, பொம்மையின் மறு காது வழியே வெளியானது. இரண்டாவது பொம்மையின் காதில் நுழைத்தபோது வாய் வழியே கம்பி வெளியானது. மூன்றாவது பொம்மையின் காதில் நுழைத்தபோது கம்பி வயிற்றுக்குள் சென்றது.
மூன்றாவது பொம்மையே சிறந்த பொம்மை என அறிவித்து, அதற்கான காரணத்தையும் மக்தூம் சொன்னான்!
“முதல் பொம்மை எந்த அறிவுரையைக் கேட்டாலும் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டு விடும். இரண்டாவது பொம்மை, அறிவுரையைப் பிரச்சாரம் செய்யுமே தவிர, அதை உள்வாங்கி தன்னைத் திருத்திக் கொள்ள முயலாது. மூன்றாவது பொம்மையோ, அறிவுரையை ஜீரணித்து தன் வாழ்வை சீர் செய்துகொள்ளும் சீர்மை மிக்கது. ஆகவே மூன்றாவது பொம்மையே சிறந்தது.”
மாணவன் மக்தூமின் விளக்கத்தைக் கேட்டு சூஃபி மகான் பெரிதும் மகிழ்ந்து பாராட்டினார்.
பொறாமைப்பட்ட மூத்த மாணவர்கள் வாயடைத்துப் போயினர்.
Category:சூஃபி ஞானி கதைகள்