அக்பர் பீர்பால் கதைகள் – செப்புக் காசாக மாறிய தங்கக் காசுகள்

4.3/5 - (30 votes)

சக்கரவர்த்தி அக்பர் பொது மக்களைத் தன் சபையில் நேரடியாக சந்தித்துக் குறைகளை விசாரிப்பார் என்ற செய்தி கேட்டு அந்தக் கிழவி பரபரப்படைந்தாள். சமூகத்தில் மிக செல்வாக்குடைய குல்ஷா என்ற பணக்கார பிரபுவின் முகத்திரையைக் கிழிக்க அவள் துடித்தாள். ஆனால், தான் அந்தப் பிரபுக்கெதிராக கூறப்போகும் புகாரை அக்பர் நம்புவாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. எதற்கும் அவரை சந்திப்பது என்ற முடிவுக்கு வந்தாள்.

 

மறுநாள் கிழவி தயங்காமல் தர்பாருக்கே சென்று விட்டாள். வாயிற்காவலர்கள் அவளைத் தடுத்தி நிறுத்தி என்ன வேண்டும் என்று வினவியபோது, தான் சக்கரவர்த்தியை நேரில் சந்திக்க விரும்புவதாக அவள் கூறினாள். உடனே, ஒரு காவலன் அவள் கையைப் பிடித்து அழைத்துச் சென்று தர்பாருக்குள் நுழைந்தான்.

 

சிம்மாசனத்தில் வீற்றிருந்த அக்பரைக் கண்டு தரையைத் தொட்டு சலாம் செய்ய அவள் முயன்றபோது, அவளை கவனித்த அக்பர் அவளுடைய முதிர்ந்த வயதை மனத்தில்கொண்டு அவளை சிரமப்படாமல் இருக்க சைகை செய்தார். பிறகு, “அம்மா! உனக்கு என்ன வேண்டும்?” என்றார். அதற்கு அவள் அக்பரை நோக்கி, “பிரபு! நான் சுந்தரி பாய்! மிக ஏழையானவள்! என்றாள்.

 

அதற்கு அக்பர், “ஏழையாயினும், பணக்காரராயினும் என் முன் சமநீதி கிடைக்கும். உன் குறையென்ன சொல். தாயே!” என்றார்.

 

“பிரபு! ஓராண்டு முன் நான் பத்ரிநாத் யாத்திரை செல்ல விரும்பினேன். என்னிடமுள்ள பணத்தையெல்லாம் அதுவரை யாரிடமாவது பத்திரமாக விட்டுச் செல்ல வேண்டுமே என்று திட்டமிட்டேன். என்னுடைய உடைமைகளைப் பொற்காசுகளாக மாற்றி ஒரு பையில் போட்டு, வாயை இறுகக் கயிற்றினால் கட்டி விட்டேன்.

பிறகு, கயிற்றின் முடிச்சின் மேல் மெழுகை உருக்கி ஊற்றினேன். புறாச்சின்னம் உள்ள என் மோதிரத்தை உருகிய மெழுகில் அழுத்தி, முடிச்சை சீல் செய்தேன். சீலில் என் மோதிரத்தின் புறாச்சின்னம் தெளிவாகக் காணப்பட்டது” என்று மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டே போனவளை அக்பர், “அம்மா! நீ மிகவும் முன் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டு இருக்கிறாயே! சபாஷ்!” என்று பாராட்டினார்.

 

“என்ன பயன், பிரபு? அந்தப் பையை மிக கௌரவமான மனிதர் என்று கருதப்படும் குல்ஷாவிடம் நேரில் சென்று கொடுத்தேன். நான் பத்ரிநாத் சென்று வரும் வரை பத்திரமாகப் பாதுகாக்கும்படி வேண்டினேன். அந்தசமயம் கூட யாருமில்லை. என்னுடைய பையை அவர் தன் கையினால் தொடக்கூட இல்லை.

 

என்னை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றவர், அங்கு ஒரு குழியைத் தோண்டி, அதனுள் அந்தப் பையைப் போடும்படி சொன்னார். நானும் அப்படியே செய்ய, பிறகு அதை மண்ணைப் போட்டு மூடி விட்டார். பிறகு என்னிடம் பிரயாணம் முடிந்து வந்த பிறகு நானே குழியைத் தோண்டி எடுத்துக் கொள்ளலாம் என்றார்.

 

“மிக உத்தமமான மனிதர் என்று மனத்தில் அவளுக்கு மரியாதை செலுத்திவிட்டு, நேரில் அவருக்கு நன்றி கூறித் திரும்பினேன். பிறகு பத்ரிநாத் யாத்திரை முடிந்தபின், நான் அவரிடம் செல்ல அதே இடத்திற்கு அவர் என்னை அழைத்துச் சென்றார். நான் குழியைத் தோண்டி, புதைத்து வைத்திருந்த என் பையை எடுத்துக் கொண்டேன். குலுக்கினால் உள்ளே நாணயங்கள் குலுங்கும் ஒலிகேட்டு திருப்தி அடைந்து வீட்டுக்குத் திரும்பினேன். பையின் கயிற்றின் முடிச்சும், அதில் நான் வைத்திருந்த சீலும் அப்படியே இருந்தது.

 

“ஆனால், என்னவென்று சொல்வது! வீட்டுக்கு வந்து, பையைத் திறந்து பார்த்தால் உள்ளே தங்க நாணயங்களுக்கு பதிலாக செப்பு நாணயங்கள் இருந்தன. குல்ஷா போன்ற கௌரவமான மனிதர் இப்படி ஓர் ஏழைக்கிழவியை மோசம் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை” என்று கண்ணீர் வடித்தாள்.

பையிலுள்ள கயிற்றின் முடிச்சை அவிழ்க்காமல் உள்ளிருக்கும் பொற்காசுகளை எப்படி வெளியே எடுத்து செப்புக்காசுகளை நிரப்ப முடிந்தது என்று அக்பருக்குப் புரியவில்லை. அதேசமயம் கிழவி பொய் சொல்கிறாளோ என்று சந்தேகமும் எழ,அக்பர் பதில் சொல்ல முடியாமல் குழம்பிப் போய் பீர்பாலை நோக்க, பீர்பால் “பிரபு! இதை நான் தீர்த்து வைக்கிறேன்” என்றார். அக்பர் நிம்மதியுடன் ஒரு பெருமூச்சு விட்டார்.

 

அடுத்து பீர்பால், “பிரபு! பொற்காசுகள் இருந்ததாகக் கூறப்படும் அந்தப் பையினை நான் பார்க்க விரும்புகிறேன்!” என்று கூறி, அதைக் கிழவியிடமிருந்து வாங்கிக் கொண்டார். அதை மேலுங் கீழுமாகப் புரட்டி உற்று கவனித்த பீர்பாலின் புருவங்கள் நெரிந்தன. அதில் ஏதோ மர்மம் இருப்பதாகப் புரிந்தது.

 

3 Comments

  1. Praba
    update balance story pls
    Reply November 2, 2016 at 3:10 pm
  2. PL NARRATE COMPLETE STORY.. ONLY HALF STORY AVAILABLE IN செப்புக் காசாக மாறிய தங்கக் காசுகள்
    Reply May 9, 2020 at 4:47 pm
  3. Kalpana
    balance story is the next one...பொற்காசுகளை திருடிய செல்வந்தர்
    Reply July 26, 2023 at 10:37 pm

Leave a comment