அக்பர் பீர்பால் கதைகள் – சத்திரம்

3.9/5 - (16 votes)

ஒருமுறை பீர்பால் தன் சொந்த வேலை காரணமாக அயல்தேசம் செல்ல நேரிட்டது. செல்லும் வழியில் அரண்மனை ஒன்று தென்பட்டது. மிகவும் அசதியாக இருந்த பீர்பால் அதில் சிறிது நேரம் தங்கிச் செல்லலாம் என முடிவு எடுத்தார். அது அயல்நாட்டு மன்னனின் அரண்மனையாகும். அந்த விஷயம் பீர்பாலுக்கு தெரியாது. அக்பரின் ஆளுகைக்குட்பட்ட மண்ணில் இருக்கும் அரண்மனை என்றே அவர் நினைத்தார்.
அந்த அரண்மனையின் பின்புறம் சென்று குதிரையைக் கட்டிவிட்டு பார்த்தார். ஆள் அரவமே இல்லை. அரண்மனைக்குள் புகுந்ததும் அடுக்களை தென்பட்டது. தமக்கிருந்த பசியில் சிறிதும் யோசிக்காமல் உணவினை எடுத்து உண்டார். பின்னர் அடுத்த அறைக்குச் சென்றார். அழகான பஞ்சு மெத்தையுடன் கூடிய படுக்கையறை. உண்ட மயக்கத்தில் அந்த படுக்கையில் படுத்து உறங்கியும் விட்டார்.
வேட்டையாடச் சென்றிருந்த மன்னர் சற்று நேரத்திற்கெல்லாம் வந்து விட்டார். தன் உணவை உண்டு விட்டு தன்னுடைய படுக்கையில் படுத்திருப்பவனைப் பார்த்ததும் சினம்கொண்டு பீர்பாலைத் தட்டி எழுப்பினார்.
“என் அரண்மனைக்குள் புகுந்து என் உணவினை உண்டு, என் படுக்கை அறையில் படுத்திருக்கிறாயே?” என்று அதட்டினார்.
“ஓஹோ… இது அரண்மனையா? காவலர் யாருமே இல்லாததால் இதனை சத்திரம் என்று நினைத்தேன்!” என்றார் பீர்பால் அலட்ச்சிக் கொள்ளாமல்.
தன்னை மன்னர் என்று அறிமுகம் செய்தும் சற்றும் அஞ்சாமல் தன்னுடைய அரண்மனையை தர்ம சத்திரம் என்கிறானே இவன் என கோபமுற்றார் அந்த மன்னர்.
“உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கிறதா? அரண்மனைக்கும் தர்ம சத்திரத்திற்கும்கூட உனக்கு வித்தியாசம் தெரியவில்லையே!” என்று கடிந்தார் மன்னர்.
“மன்னர் அவர்களே.. இது அரண்மனையாகவே இருந்தாலும் இதனையும் தர்ம சத்திரம் என்று அழைப்பதில் தவறில்லை!” என்றார் பீர்பால்.
“ஓர் அரண்மனை எப்படி சத்திரமாக முடியும்? சத்திரம் என்றால் இன்று ஒருவர் வருவார் நாளை போய்விடுவார்… மறுநாள் வேறொருவர் வருவார்.. பிறகு சென்று விடுவார்.. இங்கேயே தங்க மாட்டார்கள். அரண்மனை அப்படி அல்ல. நான் நிரந்தரமாக தங்கி இருக்கிறேனே!” என்றார் மன்னர்.
“மன்னர் அவர்களே உங்கள் பாட்டனார் எங்கே தங்கி இருந்தார்?”
“இதே அரண்மனையில்தான்!”
“உமது தந்தையார்?”
“இதே அரண்மனையில்தான்!”
“நாளை உங்களுக்குப் பின் யார் தங்குவார்கள்?”
“இதென்ன கேள்வி? எனது மகன் தங்குவான்!”
“ஆக இந்த அரண்மனையில் யாருமே நிரந்தரமாக தங்கி இருக்கவில்லை! தங்கள் முன்னோர் சில காலம் தங்கி இருந்துவிட்டு சென்று விட்டனர். இப்போது நீங்கள். உங்களுக்குப் பின் உங்கள் மகன். எனவே சத்திரத்துக்கும் அரண்மனைக்கும் எந்த வேறுபாடும் இல்லை!” என்றார் பீர்பால்.
பீர்பால் சொல்வதில் உள்ள உண்மை மன்னருக்கு விளங்கியது. வந்திருப்பவர் சாமான்யர் இல்லை என்பது விளங்கியது அவருக்கு!
“தாங்கள் யார்?” என்று மரியாதையுடன் வினவினார் அரசர்.
“என்னைப் பீர்பால் என்று அழைப்பார்கள்!’ என்று பதில் சொன்னார் பீர்பால்.
“அந்த மாமேதை நீங்கள்தானா? தங்களின் புகழை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். இதுவரை பார்த்தது இல்லை. நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். வருத்தம் வேண்டாம். என்னை மன்னித்து விடுங்கள்!” என்றார் அரசர்.
அந்த மன்னனின் அன்புக் கட்டளையை ஏற்று பீர்பால் மேலும் சில நாட்கள் அவரின் விருந்தினராகத் தங்கி இருந்து விட்டு பிறகு தான் செல்ல வேண்டிய இடத்துக்கு புறப்பட்டார்

2 Comments

  1. Ahuja
    ????very nice
    Reply November 29, 2016 at 6:12 am
  2. அருமை !
    Reply July 22, 2020 at 9:34 am

Leave a comment